Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-132

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-132

    நாங்குநேரி வாசஸ்ரீ

    132. புலவி நுணுக்கம்

    குறள் 1311

    பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு

    பொம்பளைங்க எல்லாரும் தங்களோட கண்ணால பொதுப்பொருளா நெனச்சி உன் மார்ப நுகருதாங்க. அதனால நான் உன் மார்பச் சேரமாட்டேன்.

    குறள் 1312

    ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து

    நான் பிணங்கி இருக்கையில அவுக தும்மினாக, ஆயுசோட நெறைய நாள் வாழணும்னு நான் வாழ்த்துவேனோன்னு நெனைச்சு.

    குறள் 1313

    கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று

    கிளைகள்ல பூத்துக்கெடக்குத பூவக்கட்டி நான் சூடிக்கிட்டாலும் யாருக்கோ காணிக்கதுக்காவத்தான் சூடி இருக்கேம்னு கோவப்பட்டு நிக்கா.

    குறள் 1314

    யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று

    யாரையும்விட அதிகமா நேசம் வச்சிருக்கேம்னு சொன்னேம். யார விட? யார விட? னு தொளைச்சு எடுத்து பிணங்கி நின்னுக்கிட்டா.

    குறள் 1315

    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்

    இந்தப் பொறப்புல நான் பிரிஞ்சுபோவமாட்டேம்னு சொன்னேன். இனி வரப்போவுத பொறப்புல பிரிஞ்சுபோடுவேம்னு கண்ணீர் உட்டுக்கிட்டு நிக்கா.

    குறள் 1316

    உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்

    நான் உன்னய நெனச்சேம்னு சொன்னேன். அம்புட்டுதான் அப்பம் என்னய மறந்து இருந்தீயளான்னு ஏசி தழுவாம பிணங்கி நின்னுட்டா.

    குறள் 1317

    வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று

    நான் தும்மினேன். வழக்கம்போல வாழ்த்தினவ எவ உம்மபத்தி நெனச்சா இப்பம் தும்முததுக்குன்னு கேட்டு அழுக ஆரம்பிச்சிட்டா.

    குறள் 1318

    தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று

    அவ பிணங்குவான்னு பயந்து தும்மல அடக்கிக்கிட்டேன். அப்பமும் உமக்கு வேண்டப்பட்டவுக நெனைக்கத தெரிஞ்சுக்கிடக்கூடாதுனு  மறைக்கீயனு கேட்டு அழுதா.

    குறள் 1319

    தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று

    நான் பணிஞ்சுபோய் அவ பிணக்கப் போக்கி சந்தோசப்படுத்தினாலும் நீர் மத்த பிள்ளைங்ககிட்டயும் இப்டித்தான் நடந்துக்கிடுவீயளானு கேட்டு ஏசுவா.

    குறள் 1320

    நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று

    அவ அழக நெனைச்சு நான் அமைதிய ஒக்காந்து பாத்துக்கிட்டே இருந்தாலும் யார் கூட ஒப்பிட்டுப் பாக்கீறுனு கோவப்படுதா.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-131

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-131

    நாங்குநேரி வாசஸ்ரீ

    131. புலவி

    குறள் 1301

    புல்லா திராஅப் புலத்தை அவருறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது

    பிணங்குத நேரம் அவுக அடையுத சங்கடத்த காணுததுக்காவ அவுகளத் தழுவாம செத்த பிணங்கி நில்லு.

    குறள் 1302

    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்

    பிணங்கி நிக்கதுக்கும் சேந்து சந்தோசப்படுததுக்கும் இடையில இருக்க நேரம் சாப்பாட்டுல சரிஉப்பு சேத்துக்கிடது கணக்கா ஆவும். அந்த நேரம் சாஸ்தி ஆவுதது உப்புகரிச்ச சாப்பாடு கணக்காதான்.

    குறள் 1303

    அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்

    பிணங்கி நிக்குதவுகளோட பிணக்க வெலக்கி தழுவாம இருக்கது ஏற்கனவே சங்கடத்துல இருக்கவங்களுக்கு மேல சங்கடத்த உண்டாக்குதது கணக்கா ஆவும்.

    குறள் 1304

    ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று

    பிணங்கி இருக்கவுகளுக்கு புத்தி சொல்லி நேசம் வைக்காம விடுதது முன்னம் வாடி கெடக்க கொடிய அடிப்பாகத்துல அத்துப் போடுதது கணக்கா ஆவும்.

    குறள் 1305

    நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
    பூவன்ன கண்ணார் அகத்து

    நல்ல கொணத்தால ஒசந்தவுகளுக்கு அழகுதருதது பூ கணக்கா கண் இருக்க பெண்பிள்ளைங்க மனசுக்குள்ளார நடக்குத பிணக்கு ஆவும்.

    குறள் 1306

    துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று

    பெரும்பிணக்கும் சிறு பிணக்கும் இல்லையினா பழுத்துக்கொழுத்து ஓஞ்ச பழம் கணக்காவும், ஒண்ணுத்துக்கும் ஒதவாத பிஞ்சுகணக்காவும் காதல் பிரயோசனமில்லாமப் போவும்.

    குறள் 1307

    ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொல் என்று

    சேந்துஇருக்க சந்தோசம் நீட்டிக்குமோ இல்லையோன்னு ஏங்கி ரோசன பண்ணுததால பிணக்குலையும்  ஒருவகையான சங்கடம் இருக்கு.

    குறள் 1308

    நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
    காதலர் இல்லா வழி

    நம்மள நெனச்சுதான் வெசனப்படுதான்னு (வருத்தப்படுதான்னு)  உணந்துக்கிடதுக்கு காதலர் இல்லாத சமயம் வெசனப்படுததால என்ன பிரயோசனம்?

    குறள் 1309

    நீரும் நிழல தினிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது

    தண்ணிகூட வெயில்ல இல்லாம நிழலில இருந்தாத்தான் குளுந்து இனிமையா இருக்கும். அதுகணக்கா பிணக்கும் நேசம் இருக்கவுககிட்ட காட்டுனாதான் இனிமை.

    குறள் 1310

    ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
    கூடுவேம் என்ப தவா

    பிணங்குத நேரம் எனக்கு உணர்த்தி தெளிவிக்காம மனச வாட விடுதவுககிட்ட கிட்ட கூடிஇருக்கணும்னு எம்மனசு மொனையுததுக்குக் காரணம் அதோட ஆசதான்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-130

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-130

    நாங்குநேரி வாசஸ்ரீ

     130. நெஞ்சோடு புலத்தல்

    குறள் 1291

    அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீயெமக் காகா தது

    ஏ நெஞ்சே! அவுகளோட நெஞ்சம் அவுகளுக்கு தொணையா நிக்குதப்போ நீ மட்டும் எனக்குத் தொணையாகாம அவுகள நெனச்சு உருகுதது ஏன்?

    குறள் 1292

    உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

    நெஞ்சே நம்ம மேல நேசம் வைக்காதவர்னு தெரிஞ்ச பொறவும் வெறுக்க மாட்டாகனு நம்பி அவுக பொறத்தால போவுதுயே.

    குறள் 1293

    கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங் கவர்பின் செலல்

    நெஞ்சே! நீ என்னய உட்டுப்போட்டு அவுக பொறத்தால போவுதது சங்கடத்தால வெசனப்படுதவங்களுக்கு சேக்காளி இருக்க மாட்டாக ங்குத நெனப்புலயோ.

    குறள் 1294

    இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று

    நெஞ்சே! நீ சண்டபோட்டு பொறவு கூடிச் சேந்து அனுவிக்கலாம்னு நெனக்க மாட்ட. அதனால அதப்பத்தி உங்கிட்ட யார் பேசப்போவுதாங்க. நான் பேச மண்டேன்.

    குறள் 1295

    பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

    என் நெஞ்சம் காதலரக் காங்கலன்னு சங்கடப்படும் வந்த பொறவு உட்டுப்போட்டுப் போயிடுவாகளோன்னு சங்கடப்படும்.

    குறள் 1296

    தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு

    காதலரப் பிரிஞ்சு ஒத்தேல கெடந்து ரோசன பண்ணுதப்போ எம்மனசே என்னயத் தின்னுபோடுதது கணக்கா சங்கடமா இருந்திச்சு.

    குறள் 1297

    நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
    மாணா மடநெஞ்சிற் பட்டு

    அவுகள அயத்துப்போவ முடியாம திணருத என் கூறுகெட்ட மனசோட சேந்து நான் என் வெக்கத்தையும் அயத்துக் கெடக்கேன்.

    குறள் 1298

    எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

    பிரிஞ்சுபோன அவுகள எளக்காரமா நெனச்சா தனக்கும் தாழ்ச்சினு நெனச்சு எம் மனசு அவுகளோட ஒசந்தகொணத்தையோ நெனப்புல வச்சிக்கிட்டிருக்கும்.

    குறள் 1299

    துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி

    சங்கடம் வருத நேரம் உரிம உள்ள நெஞ்சமே தொணையா நிக்கலன்னா வேற யாரு வருவாக?

    குறள் 1300

    தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி

    நம்மளோட நெஞ்சமே நம்மகிட்ட ஒட்டுஒறவா இல்லாதநேரம் அல்லசல் ஒட்டாம இருக்கது சுளுவு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

    நாங்குநேரி வாசஸ்ரீ

     129. புணர்ச்சி விதும்பல்

    குறள் 1281

    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு

    மனசால நெனக்கையில கெடைக்க சந்தோசமும், ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிடுதப்போ கெடைக்க சந்தோசமும் சாராயம் குடிக்கவங்களுக்கு கெடைக்காது. காதலிக்கவங்களுக்கு உண்டு.

    குறள் 1282

    தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்

    பனையளவு காதல் பெருகிவருதப்போ தினையளவு கூட பிணக்கு வச்சிக்கிடக்கூடாது.

    குறள் 1283

    பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணா தமையல கண்

    என்னைய அரவணைச்சுப் போவாம தனக்குப் பிடிச்சதையே செஞ்சிக்கிட்டிருந்தாலும் என் கண்ணுங்க காதலரக் காணாம பொருந்தமாட்டேக்கு.

    குறள் 1284

    ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றதென் னெஞ்சு

    ஏ சேக்காளீ! நான் அவுகளக் கண்டு சண்டபிடிக்கணும்னு தான் போனேன். கண்டுகிட்ட பொறவு எம் மனசு அந்த நோக்கத்த மறந்து இணங்கி சேந்துக்கிடப் போயிடுச்சு.

    குறள் 1285

    எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
    பழிகாணேன் கண்ட இடத்து

    மைபூசுத நேரம் மை தீட்டும் கோலக் காணமுடியாத  கண்ணுங்க கணக்கா என் காதலரக் காணுத நேரம் அவுக என்னய உட்டுப்போட்டு போன குத்தத்த அயத்துப் போயிடுதேன்.

    குறள் 1286

    காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை

    அவுகளப் பாக்குத நேரம் குத்தங்கொறைய நான் கண்டுக்கிட மாட்டேன். பாக்காத நேரம் குத்தங்கொறையத் தவித்து நன்மய நான் காணுததே கெடையாது.

    குறள் 1287

    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து

    வெள்ளம் இழுத்துக்கிட்டுப் போயிடும்னு தெரிஞ்சும் அதுல குதிக்கது கணக்கா பிரயோசனம் இல்லன்னு தெரிஞ்சும் சண்டபிடிக்கதனால ஆவது என்ன?

    குறள் 1288

    இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு

    எம் மனசக் களவாண்ட களவாணியே! தாழ்ச்சி தருத சங்கடத்த நீ தந்தாலும் ,கெடுதலத் தருதுனு தெரிஞ்சும் கள்ளு குடிக்கவங்க ஆசப்பட்டு அதக் குடிக்கது கணக்கா என்னய மயக்குது உன் மார்பு.

    குறள் 1289

    மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்

    காதல் தருத சந்தோசம் பூவ விட மென்மை. அத உணந்து அனுவிக்கவுக ஒரு சில பேர் தான்.

    குறள் 1290

    கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று

    கண்ணால பிணக்கத் தெரியப்படுத்தி பொறவு என்னயக் காட்டிலும் வெரசலாத் தழுவி சேந்துக்கிட்டா.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-128

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-128

    நாங்குநேரி வாசஸ்ரீ

    128. குறிப்பறிவுறுத்தல்

    குறள் 1271

    கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவதொன் றுண்டு

    நீ சொல்லாம மறைச்சாலும் உன்னையக் கடந்து உன்னோட கண்ணுங்க எனக்கு சொல்லுத சேதி ஒண்ணு இருக்கு.

    குறள் 1272

    கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
    பெண்நிறைந்த நீர்மை பெரிது

    கண்ணுகொள்ளாத அழகும் மூங்கில் கணக்கா இருக்க தோளும் இருக்க என் காதலிக்கு பெண்மைத் தன்மை நெறஞ்சு கெடக்கது இன்னும் அழகு கொடுக்குது.

    குறள் 1273

    மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன் றுண்டு

    கோத்து வச்ச மணிக்குள்ளார கெடக்க நூல் தெரியுதது கணக்கா இவளொட அழகுக்குள்ளார கெடந்து வெளிய தெரியுத குறிப்பு ஒண்ணு கெடக்கு.

    குறள் 1274

    முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

    பூவரும்புக்குள்ளார அடங்கிக் கெடக்குத வாசம் கணக்கா பொம்பளப்புள்ளையோட புன்முறுவலுக்குள்ளார அவ காதலனோட நெனப்பு அடங்கிக் கெடக்கு.

    குறள் 1275

    செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன் றுடைத்து

    நெருக்கமா வளவி போட்டிருக்க என் காதலி கள்ளத்தனமா காட்டுத குறிப்புல என் பெருஞ்சங்கடத்த தீக்குத மருந்து ஒண்ணு இருக்கு.

    குறள் 1276

    பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து

    பெரிசா நேசத்தக் காட்டி கூடி இருக்கது பொறவு நேசமத்து பிரிஞ்சு போவுத குறிப்பக் காணிக்கதா இருக்கு.

    குறள் 1277

    தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
    முன்னம் உணர்ந்த வளை

    குளுந்த துறையை உடைய தலைவன் ஒடம்பால சேந்து இருந்து மனசால வெலகி இருக்குத எனக்குமுன்னமே என் வளவி அறிஞ்சுக்கிட்டு கழண்டு விழுதுபோல.

    குறள் 1278

    நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து

    நேத்தைக்குத்தான் என் காதலர் பிரிஞ்சு போனாவ. அதுக்குள்ளார ஏழு நாள் கழிஞ்சமாரி பசலை எம்மேனியில பத்திக்கிட்டுக் கெடக்கு.

    குறள் 1279

    தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
    அஃதாண் டவள்செய் தது

    பிரிவுனால கழண்டு விழப்போவுத வளவியையும், மெலிஞ்சுபோவப் போகுத தோளையும் பாத்த பொறவு பொறத்தால நானும் வாரேம்னு குறிப்பு சொல்லுததுகணக்கா தன் பாதத்தையும் பாத்தா அவ.

    குறள் 1280

    பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு

    காதல் நோயக் கண்ணால காணிச்சு பிரிஞ்சுபோவாதனு கெஞ்சுதது பெண்மைக்கு மேலும் பெண்மை சேத்தது கணக்கா ஆவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-127

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-127

    நாங்குநேரி வாசஸ்ரீ

    127. அவர் வயின் விதும்பல்

    குறள் 1261

    வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்

    அவுக வருத வழிய எதிர்பாத்து என் கண்ணுங்க ஒளி மங்கிப் போச்சுது. பிரிஞ்சுபோன நாட்கள சுவத்துல குறிச்சுவச்சு எண்ணினதுல விரல்கள் தேஞ்சுபோச்சுது.

    குறள் 1262

    இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
    கலங்கழியும் காரிகை நீத்து

    நேசம் வச்சிருக்க அவுகள நான் இன்னிக்கு மறந்தேம்னா என் அழகு கெட்டு தோள் மேல பூட்டியிருக்க வளவி கழண்டு விழுதது நிச்சயம்.

    குறள் 1263

    உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
    வரல்நசைஇ இன்னும் உளேன்

    உற்சாகத்தயே தொணையா வச்சிக்கிட்டு செயிக்கதுக்காவ என்னைய விட்டுட்டுப் போன என் காதலரு திரும்பி வருவாகங்குத நெனப்புலதான் நான் இன்னமும் உசிரோட இருக்கேன்.

    குறள் 1264

    கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு

    நேசம் வச்சி கூடி இருந்து பொறவு உட்டுப்போட்டு போன என் காதலரு எப்பம் வருவாகனு எதிர்பாத்து எம் மனசு மரத்தோட உச்சாணிக் கொம்புலநின்னு பாக்குது.

    குறள் 1265

    காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
    நீங்குமென் மென்தோள் பசப்பு

    கண்ணார எம் புருசன காணோணும். கண்ட பொறவுதான் என் மெல்லிசான தோள்ல படந்து கெடக்க பசலை நீங்கும்.

    குறள் 1266

    வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட

    என்னயப் பிரிஞ்சுபோன காதலன் எப்பமும் வந்துதானே ஆவணும். அப்பம் என் சங்கடமெல்லாம் அத்துப் போவுதமாரி சந்தோசத்த அனுவிப்பேன்.

    குறள் 1267

    புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
    கண்ணன்ன கேளிர் வரின்

    என் கண்ணு கணக்கா இருக்க காதலரு வந்த பொறவு பிரிஞ்சதுக்காவ கொஞ்சம் சண்டபோடுவேனா? கட்டித் தழுவிக்கிடுவேனா? அல்லது ரெண்டையும் சேத்து செஞ்சிபோடுவேனா?

    குறள் 1268

    வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து

    ராசா செய்யுத காரியத்துல செயிக்கட்டும். அவுக செயிச்சாகன்னா எனக்கு  எம் பொஞ்சாதியோட சாயங்காலம் சந்தோசமான விருந்துதான்.

    குறள் 1269

    ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

    தூர தொலைவு போயிருக்குத காதலர் திரும்ப வார நாளை நெனச்சி சங்கடப்படுத பெண்பிள்ளைங்களுக்கு ஒரு நாள் கழிக்கது ஏழுநாளக் கழிச்சது கணக்கா நீளமாத் தோணும்.

    குறள் 1270

    பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
    உள்ளம் உடைந்துக்கக் கால்

    பிரிஞ்ச சங்கடத்தப்பொறுத்துக்கிட முடியாம மனசு நொறுங்கிப் போச்சுதுன்னா திரும்ப ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிட்டாதான் என்ன? கூடிச் சேந்தாதான் என்ன? அதனால என்ன பிரயோசனம்?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-126

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-126

    நாங்குநேரி வாசஸ்ரீ

    126. நிறையழிதல்

    குறள் 1251

    காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு

    வெக்கம் ங்குத தாப்பாளக் கொண்டிருக்க அடக்கம் ங்குத கதவ காதல்நோய் ங்குத கோடாலி பொளந்து போடுது.

    குறள் 1252

    காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்

    நேசம் ங்குத நோய் இரக்கங்கெட்டது. ஏம்னா அது நடுச்சாமத்துலயும் என் நெஞ்சத்த தண்டிச்சு வேல வாங்குது.

    குறள் 1253

    மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்

    என் நேசத்த நான் ஒளிச்சுக்கிட நெனப்பேன். ஆனா அது எனக்குத் தெரியாம தும்மல் கணக்கா தன்பாட்டுல வெளிய வந்துக்கிடும்.

    குறள் 1254

    நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்
    மறையிறந்து மன்று படும்

    நான் இப்பம்வரை மன அடக்கம் உள்ளவனு நெனைப்பு வச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என் நேசம் நான் ஒளிக்கதயும் மீறி சபையில வெளிப்பட்டு நிக்கு.

    குறள் 1255

    செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன் றன்று

    தன்னயப் பிரிஞ்சு போனவுக பொறத்தால போவாம நிக்குத மன அடக்கம் நேசம் வச்சவுகளுக்கு இல்ல.

    குறள் 1256

    செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்

    வெறுத்து ஒதுங்கிப் போனவுக பொறத்தால போவவைக்குத நிலைய உண்டாக்குத இந்த காதல் நோயோட தன்ம தான் என்ன?

    குறள் 1257

    நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்

    நேசம் வச்சவுக காதல்நோயால நாம ஆசப்படுததச் செய்யுத நேரம் வெக்கம் ங்குத கொணத்த அறிஞ்சிக்கிடாமலே இருப்போம்.

    குறள் 1258

    பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை

    நம்மளோட பெண்மைங்குத மனக்கோட்டைய நொறுக்குத ஆயுதமா இருக்குதது மனசத் களவாண்டு பல மாயம் செய்யுததுல தெறமையா இருக்க காதலர் பம்மிக்கிட்டுபேசுத பேச்சுதானே? .

    குறள் 1259

    புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு

    பிணங்கணும்னு நெனச்சிதான் போனேன். ஆனா எம் மனசு என்னய உட்டுப்போட்டு அவுககிட்ட போனபொறவு இனி ஏலாது ங்குத நெனப்புல தழுவிக்கிட்டேன்.

    குறள் 1260

    நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல்

    கொழுப்ப தீக்குள்ளார இட்டா அது உருகிப்போவுததுகணக்கா மனசக் கொண்டவுகளுக்கு சேந்து இருந்த பொறவு பிணங்கி நிக்கணும்ங்குத உறுதி இருக்குமா?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-125

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-125

    நாங்குநேரி வாசஸ்ரீ

    125. நெஞ்சோடு கிளத்தல்

    குறள் 1241

    நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கு மருந்து

    மனசே! நேசத்தால வளந்த இந்த நோயப் போக்குத மருந்து எதையாச்சும் ரோசன பண்ணி சொல்ல மாட்டியோ?

    குறள் 1242

    காத லவரிலர் ஆகநீ நோவது
    பேதமை வாழியென் நெஞ்சு

    அவுக நம்ம நேசத்த மதிச்சு வராதப்போ மனசே! நீ மட்டும் அவுகள நெனச்சு சங்கடப்படுதது உன் புத்திகெட்டதனம்.

    குறள் 1243

    இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்

    பிரிஞ்சிபோயி இரக்கமில்லாம இருக்க அவுகளப்பத்தி மனசே! நீ இங்ஙன இருந்துக்கிட்டு வெசனப்படுததால பிரயோசனம் ஒண்ணுமில்ல.

    குறள் 1244

    கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று

    மனசே! நீ அவுகளக் காணப் போவுதப்போ கண்ணையும் கூட்டிக்கிட்டுப்போ. ஏம்னா அவுகளக் காணிக்கச்சொல்லி என்னயப் புடுங்கித் தின்னுதுவ.

    குறள் 1245

    செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்

    மனசே! நான் ஆசப்பட்டு இருந்தாலும் என்னய நேசிக்காத அவுகள என்னய வெறுக்காகனு நெனச்சி கைவுட ஏலுமா?

    குறள் 1246

    கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு

    கோவப்படுத சமயம் கூடிஇருந்து சமாதானம் செய்யுத காதலரக் கண்டா ஒருதடவைக்கூட பிணங்காம இருக்க நீ இப்பம் அவுக மேல காட்டுத கோவம் பொய்தானே?

    குறள் 1247

    காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேனிவ் விரண்டு

    நல்ல மனசே! ஒண்ணு நேசிக்கத உட்டுப்போடு. இல்லன்னா சொல்லக் கூசுத வெக்கத்த உட்டுப்போடு. ரெண்டையும் ஒரேசமயத்துல சமாளிக்க என்னால ஏலல.

    குறள் 1248

    பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதையென் நெஞ்சு

    இரக்கமில்லாம உட்டுப்போட்டு போயிட்டகளேனு நெனைக்க நேரம் அவுக பின்னாலயேயும் போவுத எம்மனசு கூறுகெட்டது.

    குறள் 1249

    உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு

    மனசே! நேசிக்கவரு உனக்குள்ளார இருக்கையில வெளியில யார்கிட்டத் தேடிக்கிட்டு சுத்திக்கிட்டுக் கெடக்க.

    குறள் 1250

    துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
    இன்னும் இழத்தும் கவின்

    சேராம பிரிஞ்சு போன நேசிக்கவர மனசுல வச்சிருக்கதால மேல மேல மேனி நொந்து மெலிஞ்சு அழகு கொறஞ்சுக்கிட்டே வருது. ..

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-124

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-124

    நாங்குநேரி வாசஸ்ரீ

    124. உறுப்புநலன் அழிதல்

    குறள் 1231

    சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
    நறுமலர் நாணின கண்

    இங்ஙன நம்மள உட்டுப்போட்டு தூரதொலைவு போயிட்டாகளேன்னு நேசம் வச்சவர நெனச்சி அழுதவளோட கண்ணு அழகுகெட்டு பூக்களுக்கு முன்ன வெக்கப்பட்டு கெடக்கதுங்க.

    குறள் 1232

    நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
    பசந்து பனிவாரும் கண்

    பசல படந்து கண்ணீரு உட்டு இருக்க கண்ணுங்க நேசம்வச்சவரு எங்கிட்ட பாசமா இல்லங்கத சொல்லிக்காட்டிப் போடும்.

    குறள் 1233

    தணந்தமை சால அறிவிப்ப போலும்
    மணந்தநாள் வீங்கிய தோள்

    கூடி இருந்த நேரம் சந்தோசத்துல பெருத்த என் தோளுங்க இப்பம் எளச்சி அவரு பிரிஞ்சதக் காட்டிக்குடுக்குதுங்க.

    குறள் 1234

    பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்

    அவுக என்னயவுட்டு பிரிஞ்சதால பழைய அழகு கெட்டு வாடி இருக்க என் தோளுங்க இப்பம் வளவி கழண்டு விழுத அளவு மெலிஞ்சு போச்சுது.

    குறள் 1235

    கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்

    வளவி கழண்டு பழைய அழகு கெட்டுநிக்க என் தோளுங்க அவரு என்னயப் பிரிஞ்ச கொடுமய ஊருக்கு சொல்லுதுங்க.

    குறள் 1236

    தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
    கொடியார் எனக்கூறல் நொந்து

    என் தோள் மெலிஞ்சு வளவி கழண்டு விழுததக் கண்ட பொறத்தியார் அவரக் கொடியவருனு சொல்லுததக் கேக்க சங்கடமா இருக்கு.

    குறள் 1237

    பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
    வாடுதோட் பூசல் உரைத்து

    மனசே! வாடி வதங்கி இருக்க என் தோள் மெலிஞ்சு நான் படுத சங்கடத்த அவுகளுக்கு சொல்லி பெரும பட்டுக்கிடுவயோ?

    குறள் 1238

    முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்

    இறுக அணைச்சிக்கிட்டிருக்க என் கைய பைய வெலக்குததுக்குள்ளார தங்க வளவி போட்டிருக்க அவ நெத்தியில பசலை வண்ணம் படர்ந்துபோச்சு.

    குறள் 1239

    முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்

    இறுக அணைச்சு இருக்கையில இடையில குளுந்த காத்து(காற்று) உள்ளார நுழைஞ்சுச்சு. அதக்கூட பொறுக்க ஏலாம அவ கண்ணு பசல பூத்துப் போச்சு.

    குறள் 1240

    கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
    ஒண்ணுதல் செய்தது கண்டு

    பிரிஞ்ச சங்கடத்துல நெத்தியில பசலை பூத்ததப் பாத்து அவ கண்ணோட பசலையும் சங்கடப்பட்டுப் போச்சு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-123

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-123

    நாங்குநேரி வாசஸ்ரீ

    123. பொழுதுகண்டு இரங்கல்

    குறள் 1221

    மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது

    பொழுதே! நீ சாயங்காலமா (மாலைப்பொழுது)  இல்ல. நேசம் வச்சிருக்க பொம்பளப்பிள்ளைங்க உசிரக்குடிக்குத அந்திக் காலமா இருக்க.

    குறள் 1222

    புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை

    மயங்கி நிக்க சாயங்காலமே (மாலைப் பொழுதே). நீயும் என்னயப் போல சங்கடப்படுதியோ. உன் தொணையும் என்னைய நேசிக்கவரு கணக்கா ஈவுஇரக்கங்கெட்டதோ.

    குறள் 1223

    பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
    துன்பம் வளர வரும்

    மொத(முன்பு) அவுக என் பக்கத்துல இருக்கையில பசல படர்ந்து இருந்த இந்த சாயங்காலப் பொழுது இப்பம் நான் வெசனப்பட்டு உசிர வெறுக்கது கணக்கா சங்கடத்த அதிகமா கொண்டுவருது.

    குறள் 1224

    காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
    தேதிலர் போல வரும்

    என்னைய நேசிக்கவுக இல்லாத இந்நேரத்துல கொன்னுபோடுததுக்காவ வருத பகையாளி கணக்கா சாயங்காலப் பொழுது வருது.

    குறள் 1225

    காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
    மாலைக்குச் செய்த பகை

    காலப் பொழுதுக்கு நான் செஞ்ச நன்மதான் என்ன? சாயங்காலத்துக்கு நான் செஞ்ச கெடுதி தான் என்ன?

    குறள் 1226

    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்

    சாயங்கால நேரம் இத்தன செரையக் குடுக்கும்னு என்னைய நேசிக்கவரு என்னையப் பிரிஞ்சுபோவுமுன்ன பக்கத்துல இருக்கையில நான் அறிஞ்சுக்கிடல.

    குறள் 1227

    காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலருமிந் நோய்

    நேசம் ங்குத இந்த நோய் காலையில மொட்டுவச்சி பகலில வளந்து சாயங்காலம் பூவா பூத்து நிக்கும்.

    குறள் 1228

    அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை

    இடையன் ஊதுத புல்லாங்குழல், தணலா சுடுத இந்த சாயங்கால நேரத்துக்கு தூதா மட்டும் இல்லாம என்னையக் கொல்ல வந்த படைக்கருவியோட  ஓச கணக்காவும் ஒலிக்குது.

    குறள் 1229

    பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
    மாலை படர்தரும் போழ்து

    புத்திய மழுங்கடிக்க சாயங்காலப் பொழுது வருதப்போ இந்த ஊரும் புத்திகெட்டு என்னையப் பொல சங்கடத்தால வெசனப்படும்.

    குறள் 1230

    பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயுமென் மாயா உயிர்

    பொருள் சம்பாரிக்க அவுக போனப்போ சாவாம நின்ன என் உசிரு மயக்குத இந்த சாயங்காலப் பொழுதுல மடிஞ்சு போவுது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-122

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-122

    நாங்குநேரி வாசஸ்ரீ

    122. கனவுநிலை உரைத்தல்

    குறள் 1211

    காதலர் தூதொடு வந்த கனவினுக்
    கியாதுசெய் வேன்கொல் விருந்து

    சங்கடத்தோட ஒறங்கையில என்மேல நேசம் வச்சவரு அனுப்பிவச்ச தூதா எங்கிட்ட வந்த கனவுக்கு நான் என்னமாரி விருந்துவச்சி அனுப்புவேன்?

    குறள் 1212

    கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
    குயலுண்மை சாற்றுவேன் மன்

    என்பேச்சக் கேட்டு என்கண்ணு ஒறங்கிச்சின்னா அப்பம் கனவுல வருத காதலர்கிட்ட நான் உசிரு தப்பிப் பொழைச்சு இருக்கதச் சொல்லுவேன்.

    குறள் 1213

    நனவினான் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்

    நெசத்துல வந்து நேசத்தக் காட்டாதவுகள கனவுல காங்க (பார்க்க) முடியறதாலதான் இன்னும் என் உசிரு போவாம இருக்கு.

    குறள் 1214

    கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
    நல்காரை நாடித் தரற்கு

    நெசத்துல வந்து நேசம் காணிக்காதவுகள தேடிக் கண்டுபிடிச்சு காணிக்கதால கனவுல காதல் சந்தோசத்தக் குடுக்குது.

    குறள் 1215

    நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது

    நெசத்துல பாக்கையில கெடச்ச சந்தோசம் கணக்காவே இப்பம் கனவுல அவுகளப் பாக்கையிலயும் சந்தோசம் கெடைக்குது

    குறள் 1216

    நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
    காதலர் நீங்கலர் மன்

    நெசம் னு ஒண்ணு இல்லாமப் போச்சுதுன்னா கனவுல வந்த காதலர் என்னயவுட்டு போவாம இருந்திருப்பாக.

    குறள் 1217

    நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
    என்னெம்மைப் பீழிப் பது

    நெசத்துல வந்து நேசம் காட்டாத அவுக கனவுல வந்து சங்கடத்தக் கொடுக்குது எதனாலயோ?

    குறள் 1218

    துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
    நெஞ்சத்தார் ஆவர் விரைந்து

    நான் ஒறங்குதப்போ என் தோள்மேல கெடந்துபோட்டு கண்ணுமுழிப்பு வந்த பொறவு வெரசலா என் நெஞ்சுக்குள்ளார புகுந்துக்கிடுதாக.

    குறள் 1219

    நனவினான் நல்காரை நோவர் கனவினான்
    காதலர்க் காணா தவர்

    என் கனவுல வருத என் காதலரப் பாக்கமுடியாதவுக அவரு நேர்ல வரலையேன்னு ஏசுதாங்க.

    குறள் 1220

    நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
    காணார்கொல் இவ்வூ ரவர்

    நெசத்துல என்னைய நேசிக்கவரு உட்டுப்போட்டு போயிட்டாகன்னு ஏசுதாங்களே இந்த ஊர்க்காரவுக, அவுகளுக்கு கனவுல நெதைக்கும் (தினமும்) அவரு வாரது தெரியாதோ?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-121

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-121

    நாங்குநேரி வாசஸ்ரீ

    121. நினைந்தவர் புலம்பல்

    குறள் 1201

    உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது

    குடிக்குத நேரம் மட்டும் போத தருத கள்ள விட நெஞ்சுக்குள்ளார நெனைக்க நேரமெல்லாம் போத தருத காதல் சந்தோசமானது.

    குறள் 1202

    எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
    நினைப்ப வருவதொன் றில்

    பிரிஞ்சி இருக்க நேரம் நேசிக்கவர நெனச்சுப்பாத்தா அந்த சங்கடம் உருத்தெரியாமப் போவுததால எப்டிபாத்தாலும் நேசம் எப்பமும் இனிம தான்.

    குறள் 1203

    நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்

    தும்மல் வருததுகணக்கா இருக்கு. ஆனா வார மாட்டேக்கு. ஒருக்கா அவரு என்னையப் பத்தி ரோசன பண்ண ஆரம்பிச்சி பொறவு உட்டுப்போடுதாரோ?

    குறள் 1204

    யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
    தோஒ உளரே அவர்

    என் நெஞ்சுக்குழிக்குள்ளார நான் நேசிக்குத அவரு எப்பமும்  இருக்காரு.. அங்ஙன அவரு நெஞ்சுக்குள்ளார நான் இருக்கேனா?

    குறள் 1205

    தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
    எம்நெஞ்சத் தோவா வரல்

    அவுக நெஞ்சுக்குள்ளார என்னைய வரவுட்டாம பண்ணிப்போட்டு என் நெஞ்சுக்குள்ளார ஓயாம வருததுக்கு அவுக வெக்கப்படமாட்டாவளோ?

    குறள் 1206

    மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
    உற்றநாள் உள்ள உளேன்

    அவுகளோடசேந்து கழிச்ச நாள்கள நெனப்புல வச்சிக்கிட்டதாலதான் நான் உசிரோட இருக்கேன். வேற எதுக்காவ நான் உசிரோட இருக்கணும்?

    குறள் 1207

    மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்

    அயத்துப்போவாம ஓர்மயோட இருக்கையிலயே பிரிஞ்ச சங்கடத்தால நெஞ்சு சுடுதே அங்ஙன இருக்கையில நெசத்துக்கும் அயத்தா(மறந்தால்) என்ன ஆவுமோ.

    குறள் 1208

    எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
    காதலர் செய்யும் சிறப்பு

    நேசிக்கவர எம்புட்டு அதிகமா நெனச்சாலும் அவுக கோவப்படமாட்டாக. அவுக செய்யுத பெரும் ஒதவி அதுதானே.

    குறள் 1209

    விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து

    நாம ரெண்டுபேரும் ஒண்ணுதான் வேற வேற இல்லன்னு அடிக்கடி சொல்லுதவுக இப்பம் நேசமில்லாம இருக்கத நெனச்சி என் உசிரு அடங்கிக்கிட்டே வருது.

    குறள் 1210

    விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி

    நிலாவே! என்கூட ஒண்ணுமண்ணுமா இருந்தவுக இப்பம் என்னய உட்டுப்போட்டு போனதால அவுகள என் கண்ணால தேடிக் காணுதவரைக்கும் நீ மறைஞ்சு போவாம தொணையா நிக்கணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

    நாங்குநேரி வாசஸ்ரீ

      120. தனிப்படர் மிகுதி

    குறள் 1191

    தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
    காமத்துக் காழில் கனி

    தான் நேசிக்கவரே தன்னைய நேசிக்குத பேறு பெத்தவுக தான் காதல் வாழ்க்கயோட பயன் ங்குத விதையில்லாத பழத்த அடைஞ்சவுக.

    குறள் 1192

    வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
    வீழ்வார் அளிக்கும் அளி

    நேசிக்குத ரெண்டு பேரும் ஒருத்தருகொருத்தர் அன்பா இருக்கது வானம் தேவைப்படுத நேரம் மழையப் பெய்ய வச்சி உசிருகளக் காப்பாத்துததுக்கு சமானம்.

    குறள் 1193

    வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு

    நேசத்தால பிணைஞ்சு கெடக்கவுகளுக்குத்தான் (பிரிவுத் துயர்) திரும்ப வந்த பொறவு வாழலாம் ங்குத அகராதி இருக்கும்.

    குறள் 1194

    வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
    வீழப் படாஅர் எனின்

    தான் காதலிக்கவரோட நேசம் தனக்குக் கெடைக்காமப் போவுதவுக தீவினை வசப்பட்டவுகதான்.

    குறள் 1195

    நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
    தாம்காதல் கொள்ளாக் கடை

    நான் ஆசையா நேசிக்கவரு என்னய ஆசையா நேசிக்கலன்னா அவரால எனக்கு என்ன சந்தோசம் கெடைக்கப் போவுது?

    குறள் 1196

    ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
    இருதலை யானும் இனிது

    ஒருதலக் காதல் கொடும. காவடியோட பாரம் கணக்கா ரெண்டு பேர்க்கிட்டயும் காதல் இருக்கணும்.

    குறள் 1197

    பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
    ஒருவர்கண் நின்றொழுகு வான்

    மன்மதன் ரெண்டுபேர் பக்கமும் வாராம ஒருத்தர் பக்கமா நிக்கதால எம் மேனி முழுக்க காதல் நோயால பசலை படருதத புரிஞ்சிக்கிடல போல.

    குறள் 1198

    வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்

    தான் நேசிக்கவரு சொல்லுத நல்ல சொல்லக் கேக்காம பிரிஞ்ச சங்கடத்துல வாழுதவங்களப்போல கல்நெஞ்சக்காரரு வேற யாரும் இருக்க ஏலாது.

    குறள் 1199

    நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
    டிசையும் இனிய செவிக்கு

    நான் நேசிக்கவரு எம்மேல அன்பா இல்லாங்காட்டியும் அவரப் பத்தி சொல்லுத புகழ்ச்சி என் காதுக்கு சந்தோசத்தக் குடுக்குது.

    குறள் 1200

    உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு

    நெஞ்சே நீ நல்லாயிரு! உன்கிட்ட நேசமில்லாதவுககிட்ட உன் சங்கடத்தச் சொல்லுத. அதுக்குப் பதில சுளுவா கடல தூர் எடுத்துவுட்டுப் போ.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-119

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-119

    நாங்குநேரி வாசஸ்ரீ

    119. பசப்புறு பருவரல்

    குறள் 1181

    நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க் குரைக்கோ பிற

    என்னைய நேசிச்சவரு பிரிஞ்சி போவுததுக்கு சம்மதிச்சிட்டேன். இப்பம் தாங்கமாட்டாம எம் மேனி பசலை படந்து கெடக்கத யார் கிட்ட போய் சொல்லுவேன்?

    குறள் 1182

    அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு

    நேசிச்சவரு உண்டாக்கி உட்டதுங்குத தலகனத்துல பசலை வண்ணம்  எம் மேனி முழுக்க ஊர்ந்து பரவுது.

    குறள் 1183

    சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து

    நேசங்குத நோயையும் பசலை வண்ணத்தையும் தந்துபோட்டு என் அழகையும் வெக்கத்தையும் எடுத்துக்கிட்டு போயிட்டாக.

    குறள் 1184

    உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு

    நான் நெனைக்கதும், சொல்லுததும் அவரோட நல்ல தன்மயத்தான். அங்ஙன இருக்கையில பசலை நோய் வந்தது வஞ்சகமோ. வேறு ஏதாமோ?

    குறள் 1185

    உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
    மேனி பசப்பூர் வது

    என் காதலர் அங்ஙனகூடி பிரிஞ்சு போவுததுக்குள்ளார இங்ஙன பசலை வண்ணம் எம் மேனியில வந்து அப்பிக்கிடுது.

    குறள் 1186

    விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

    விளக்கு ஒளி சொல்பமா மங்குத சமயம்பாத்து இருட்டு பரவுதது கணக்கா நேசிக்கவரு தழுவுதத எப்பம்  தளத்துவாருனு காத்துக்கெடக்கு  பசலை படருததுக்காவ.

    குறள் 1187

    புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு

    அணைச்சுக்கிட்டுக் கெடந்தேன். பொறவு செத்த வெலகினேன். அங்ஙனக்குள்ளார பசலை வண்ணம் என்னய அள்ளிக்கிட்டுப் போயிடுச்சு.

    குறள் 1188

    பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
    துறந்தார் அவரென்பார் இல்

    இவ மேனியில பசலை படர்ந்து கெடக்குனு பழிக்குதாகளே ஒழிய நேசிச்சவரு பிரிஞ்சு போனதப் பத்தி பேச்சேயில்ல.

    குறள் 1189

    பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்

    பிரிஞ்சுபோவுததுக்கு என்னயச் சம்மதிக்க வச்சவுக நல்லா இருப்பாகன்னா எம் மேனி பசலை படர்ந்துக்கிட்டுக் கெடக்கட்டும்.

    குறள் 1190

    பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்

    பிரிவுக்கு சம்மதிக்க வச்ச என் காதலர நேசங்கெட்டவருனு தூத்த மாட்டாகன்னா நான் பசலை படர்ந்தவனு பேர் எடுக்கதும் நல்லதுதான்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-118

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-118

    நாங்குநேரி வாசஸ்ரீ

    118. கண் விதுப்பழிதல்

    குறள் 1171

    கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
    தாங்காட்ட யாங்கண் டது

    கண்ணால அவரப் பாத்ததுங்காட்டி எனக்கு நேசம் உண்டாச்சு. அங்ஙன காட்டின கண்ணு இன்னிக்கு வெசனப்பட்டு அவரக் காட்டச்சொல்லி அழுவுதது ஏன்?

    குறள் 1172

    தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்ப தெவன்

    நடக்கப்போவுதத அறிஞ்சிக்கிடாம அன்னிக்கு நேசம் வச்ச கண்ணுங்க இன்னிக்கு பிரிஞ்சுபோன சங்கடத்துக்குக் காரணமும் தாங்கதாம்னு உணந்துகிடாம கெடந்து தவிக்குதது ஏன்? .

    குறள் 1173

    கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து

    அன்னிக்கு நேசம் வச்சவர வெரசலா போய்ப் பாத்து சந்தோசப்பட்ட கண்ணுங்க இன்னிக்கு தாங்களே அழுவுதது பாக்க சிரிப்பாணியா இருக்கு.

    குறள் 1174

    பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து

    என் ரெண்டு கண்ணும் தப்பிப் பொழச்சுக்க ஏலாத நேசங்குத நோய எனக்குத் தந்துபோட்டு இப்பம் தாங்களும் அழுவ ஏலாம தண்ணி வத்திக் கெடக்கு.

    குறள் 1175

    படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
    காமநோய் செய்தவென் கண்

    அன்னிக்கு கடல் கூட பொறுத்துக்கிட ஏலாத அளவு நேசங்குத நோய உண்டாக்கின என் கண்ணுங்க இப்பம் ஒறங்க ஏலாம சங்கடத்தால வாடுதுவ..

    குறள் 1176

    ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது

    எனக்கு இந்த நேசங்குத நோய உண்டாக்கின கண்ணுங்க தானும் கெடந்து சங்கடப்படுதது எனக்கு சந்தோசம் தான்.

    குறள் 1177

    உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்

    அன்னிக்கு ஆசையால இழைஞ்சு நேசம் வச்சிருக்கவரப் பாத்த கண்ணுங்க இன்னைக்கு அவரு பிரிஞ்சு போனதுக்காவ ஒறங்காம சங்கடப்பட்டு சங்கடப்பட்டு கண்ணீர் அத்து போவட்டும்.

    குறள் 1178

    பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
    காணா தமைவில கண்

    நெஞ்சுக்குழியில நேசமில்லாம மேல்டாப்ல இனிக்கப் பேசுத ஒருத்தர் இருக்காரு, அவரப் பாக்காம என் ரெண்டு கண்ணுக்கும் அமைதியான ஒறக்கம் இல்ல.

    குறள் 1179

    வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்

    நேசம் வச்சவரு வாராம போனாகன்னா ஒறக்கமில்ல. வந்த பொறவும் ஒறக்கமில்ல. இந்த ரெண்டு வழியிலயும் என் கண்ணுக்கு ஒறக்கம் இல்லாம இருக்கது சங்கடந்தான்.

    குறள் 1180

    மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து

    பறை அடிக்கது கணக்கா மனசுக்குள்ளார இருக்கத வெளிய காணிச்சிக்குடுக்குத  கண்ணு இருக்க என்னய ஒத்தவுககிட்ட இரகசியம் தெரிஞ்சுக்கிடது ஒண்ணும் ஊர்க்காரவுகளுக்கு சங்கடமில்ல.

    Share