நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

நாங்குநேரி வாசஸ்ரீ
129. புணர்ச்சி விதும்பல்
குறள் 1281
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
மனசால நெனக்கையில கெடைக்க சந்தோசமும், ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிடுதப்போ கெடைக்க சந்தோசமும் சாராயம் குடிக்கவங்களுக்கு கெடைக்காது. காதலிக்கவங்களுக்கு உண்டு.
குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
பனையளவு காதல் பெருகிவருதப்போ தினையளவு கூட பிணக்கு வச்சிக்கிடக்கூடாது.
குறள் 1283
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
என்னைய அரவணைச்சுப் போவாம தனக்குப் பிடிச்சதையே செஞ்சிக்கிட்டிருந்தாலும் என் கண்ணுங்க காதலரக் காணாம பொருந்தமாட்டேக்கு.
குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு
ஏ சேக்காளீ! நான் அவுகளக் கண்டு சண்டபிடிக்கணும்னு தான் போனேன். கண்டுகிட்ட பொறவு எம் மனசு அந்த நோக்கத்த மறந்து இணங்கி சேந்துக்கிடப் போயிடுச்சு.
குறள் 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து
மைபூசுத நேரம் மை தீட்டும் கோலக் காணமுடியாத கண்ணுங்க கணக்கா என் காதலரக் காணுத நேரம் அவுக என்னய உட்டுப்போட்டு போன குத்தத்த அயத்துப் போயிடுதேன்.
குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
அவுகளப் பாக்குத நேரம் குத்தங்கொறைய நான் கண்டுக்கிட மாட்டேன். பாக்காத நேரம் குத்தங்கொறையத் தவித்து நன்மய நான் காணுததே கெடையாது.
குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
வெள்ளம் இழுத்துக்கிட்டுப் போயிடும்னு தெரிஞ்சும் அதுல குதிக்கது கணக்கா பிரயோசனம் இல்லன்னு தெரிஞ்சும் சண்டபிடிக்கதனால ஆவது என்ன?
குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
எம் மனசக் களவாண்ட களவாணியே! தாழ்ச்சி தருத சங்கடத்த நீ தந்தாலும் ,கெடுதலத் தருதுனு தெரிஞ்சும் கள்ளு குடிக்கவங்க ஆசப்பட்டு அதக் குடிக்கது கணக்கா என்னய மயக்குது உன் மார்பு.
குறள் 1289
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்
காதல் தருத சந்தோசம் பூவ விட மென்மை. அத உணந்து அனுவிக்கவுக ஒரு சில பேர் தான்.
குறள் 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று
கண்ணால பிணக்கத் தெரியப்படுத்தி பொறவு என்னயக் காட்டிலும் வெரசலாத் தழுவி சேந்துக்கிட்டா.