நாங்குநேரி வாசஸ்ரீ

132. புலவி நுணுக்கம்

குறள் 1311

பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

பொம்பளைங்க எல்லாரும் தங்களோட கண்ணால பொதுப்பொருளா நெனச்சி உன் மார்ப நுகருதாங்க. அதனால நான் உன் மார்பச் சேரமாட்டேன்.

குறள் 1312

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

நான் பிணங்கி இருக்கையில அவுக தும்மினாக, ஆயுசோட நெறைய நாள் வாழணும்னு நான் வாழ்த்துவேனோன்னு நெனைச்சு.

குறள் 1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

கிளைகள்ல பூத்துக்கெடக்குத பூவக்கட்டி நான் சூடிக்கிட்டாலும் யாருக்கோ காணிக்கதுக்காவத்தான் சூடி இருக்கேம்னு கோவப்பட்டு நிக்கா.

குறள் 1314

யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

யாரையும்விட அதிகமா நேசம் வச்சிருக்கேம்னு சொன்னேம். யார விட? யார விட? னு தொளைச்சு எடுத்து பிணங்கி நின்னுக்கிட்டா.

குறள் 1315

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்

இந்தப் பொறப்புல நான் பிரிஞ்சுபோவமாட்டேம்னு சொன்னேன். இனி வரப்போவுத பொறப்புல பிரிஞ்சுபோடுவேம்னு கண்ணீர் உட்டுக்கிட்டு நிக்கா.

குறள் 1316

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

நான் உன்னய நெனச்சேம்னு சொன்னேன். அம்புட்டுதான் அப்பம் என்னய மறந்து இருந்தீயளான்னு ஏசி தழுவாம பிணங்கி நின்னுட்டா.

குறள் 1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

நான் தும்மினேன். வழக்கம்போல வாழ்த்தினவ எவ உம்மபத்தி நெனச்சா இப்பம் தும்முததுக்குன்னு கேட்டு அழுக ஆரம்பிச்சிட்டா.

குறள் 1318

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

அவ பிணங்குவான்னு பயந்து தும்மல அடக்கிக்கிட்டேன். அப்பமும் உமக்கு வேண்டப்பட்டவுக நெனைக்கத தெரிஞ்சுக்கிடக்கூடாதுனு  மறைக்கீயனு கேட்டு அழுதா.

குறள் 1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று

நான் பணிஞ்சுபோய் அவ பிணக்கப் போக்கி சந்தோசப்படுத்தினாலும் நீர் மத்த பிள்ளைங்ககிட்டயும் இப்டித்தான் நடந்துக்கிடுவீயளானு கேட்டு ஏசுவா.

குறள் 1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று

அவ அழக நெனைச்சு நான் அமைதிய ஒக்காந்து பாத்துக்கிட்டே இருந்தாலும் யார் கூட ஒப்பிட்டுப் பாக்கீறுனு கோவப்படுதா.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.