நெல்லைத் தமிழில் திருக்குறள்-120

நாங்குநேரி வாசஸ்ரீ
120. தனிப்படர் மிகுதி
குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
தான் நேசிக்கவரே தன்னைய நேசிக்குத பேறு பெத்தவுக தான் காதல் வாழ்க்கயோட பயன் ங்குத விதையில்லாத பழத்த அடைஞ்சவுக.
குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
நேசிக்குத ரெண்டு பேரும் ஒருத்தருகொருத்தர் அன்பா இருக்கது வானம் தேவைப்படுத நேரம் மழையப் பெய்ய வச்சி உசிருகளக் காப்பாத்துததுக்கு சமானம்.
குறள் 1193
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு
நேசத்தால பிணைஞ்சு கெடக்கவுகளுக்குத்தான் (பிரிவுத் துயர்) திரும்ப வந்த பொறவு வாழலாம் ங்குத அகராதி இருக்கும்.
குறள் 1194
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்
தான் காதலிக்கவரோட நேசம் தனக்குக் கெடைக்காமப் போவுதவுக தீவினை வசப்பட்டவுகதான்.
குறள் 1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை
நான் ஆசையா நேசிக்கவரு என்னய ஆசையா நேசிக்கலன்னா அவரால எனக்கு என்ன சந்தோசம் கெடைக்கப் போவுது?
குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமங்காப் போல
இருதலை யானும் இனிது
ஒருதலக் காதல் கொடும. காவடியோட பாரம் கணக்கா ரெண்டு பேர்க்கிட்டயும் காதல் இருக்கணும்.
குறள் 1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்
மன்மதன் ரெண்டுபேர் பக்கமும் வாராம ஒருத்தர் பக்கமா நிக்கதால எம் மேனி முழுக்க காதல் நோயால பசலை படருதத புரிஞ்சிக்கிடல போல.
குறள் 1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்
தான் நேசிக்கவரு சொல்லுத நல்ல சொல்லக் கேக்காம பிரிஞ்ச சங்கடத்துல வாழுதவங்களப்போல கல்நெஞ்சக்காரரு வேற யாரும் இருக்க ஏலாது.
குறள் 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு
நான் நேசிக்கவரு எம்மேல அன்பா இல்லாங்காட்டியும் அவரப் பத்தி சொல்லுத புகழ்ச்சி என் காதுக்கு சந்தோசத்தக் குடுக்குது.
குறள் 1200
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு
நெஞ்சே நீ நல்லாயிரு! உன்கிட்ட நேசமில்லாதவுககிட்ட உன் சங்கடத்தச் சொல்லுத. அதுக்குப் பதில சுளுவா கடல தூர் எடுத்துவுட்டுப் போ.