Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 37

    மீனாட்சி பாலகணேஷ்

    இராமேசுவரத் தீர்த்த மகிமைகள்!

    பிள்ளைத்தமிழ் நூல்கள் குழந்தையின் வளர்ச்சியை மற்றுமின்றி, அந்நூல் சிறப்பிக்கும் பாட்டுடைத் தலைவி / தலைவன் உறையும் தலத்தின் பலவிதமான செய்திகளையும், சிறப்புகளையும் நமக்குத் தெரிவிக்கின்றன. நம் இந்திய / இந்துப் பண்பாட்டின் பலவிதமான தொன்மங்கள், புராணக்கதைகள், குழந்தைகளைப் போற்றும் நிகழ்ச்சிகள், தலவரலாறுகள், அந்தந்தத்தலத்தில் அக்கடவுளைத் தொழுவதன் பயன்பாடுகள், ஆகியனவற்றையும் அழகுற விளக்குகின்றன.

    தமிழிலக்கிய வளர்ச்சியை நோக்கினோமானால், இடைக்கால கட்டத்தில் சமய இலக்கியங்களின் வளர்ச்சிக்காலத்தின் பிற்பகுதியில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் கடவுளைக் குழந்தையாகக் கண்டுதொழும் பிள்ளைத்தமிழ் இலக்கியமே முதன்மை இடம் வகிப்பதனைக் காணலாம். இவை மேற்காணும் பலவிதமான சிறப்புகளும் கொண்டமைந்தமையால்தான் இவ்வாறுள்ளனவோ எனவும் கருதத்தோன்றுகிறது.

    இப்போது நாம் காணப்போகும் பாடல்கள் இராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள இராமநாதசுவாமியாம் சிவனின் இணையான சேதுபர்வதவர்த்தனியின் மீதானது. நயமிகுந்த பலபாடல்களிலிருந்து நாம் தேர்ந்துள்ளவை நீராடல் பருவத்தில் உள்ள இரு அழகிய பாடல்களாகும்.

    ame1
    இப்பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை இயற்றியவர் தமிழ் வல்லுனராகிய சேற்றூர்ச் சமஸ்தானத்து வித்துவான் மு. ரா. அருணாசலக் கவிராயரவர்கள் என அறிகிறோம். இப்பிள்ளைத்தமிழ் எழுந்தது பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு: தேவை என்னும் இராமேசுவரத்தில் எழுந்தருளும் இராமநாதமூர்த்தி- பர்வதவர்த்தனியின் மகிமையை உலகத்தோர் அறிவர். வள்ளன்மைமிக்க தேவிகோட்டை ஜமீந்தாருக்கு ஒரு ஆண்மகவு பிறப்பதற்காக செய்துகொண்ட வேண்டுதலின் மீதே இப்பிள்ளைத்தமிழ் நூலை இயற்றும்படி வேண்டிக்கொண்டனர்! ஆசிரியர் இந்நூலைப்பாடி முடித்தகாலை ஜமீந்தாருக்கு ஒரு ஆண்மகவு பிறந்ததாம். பிள்ளைப்பேற்றுக்காக இத்தலத்து ஐயனையும் அம்மையையும் வேண்டிக்கொள்வது மிகுந்த காலமாக இருந்துவரும் வழக்கு.

    இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளனவாம்.

    ame
    சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!

    செய்ந்நன்றி கொன்ற பாவத்தினைத் தீர்ப்பது சங்க தீர்த்தமாகும். வத்சநாபர் எனும் முனிவர் தனது அத்தகையதொரு பாவத்தை இத்தீர்த்தத்தில் நீராடிப் போக்கிக்கொண்டதாக வரலாறு.

    ame2
    அக்கினி தீர்த்தம் மற்றொன்று; இந்த அக்கினியே சீதையவளின் கற்பின் திறத்தை உலகிற்கு உணர்த்தியமையால் உயர்வாகப் பேசப்படுகின்றது.

    (கம்பராமாயணத்தில், இராமன் இராவணனை அழித்தபின்பு தன்னிடம் வந்த சீதையிடம், தான் அவள் கற்பைச் சந்தேகிப்பதாகக் கூறவே, அவள் மிகுந்த துயருற்று, தீயை மூட்டச்செய்து அதில் புகுகிறாள். ஆனால், அவளுடைய கற்பெனும் தீ அந்த அக்கினிதேவனையே சுடுகின்றது. அவன் நெருப்பினின்றும் வெளிப்போந்து சீதையை இராமனிடமளித்துக் கூறுவதாகக் கம்பரின் கவிநயம்:

    அங்கி யான்; என்னை இவ் அன்னை கற்பு எனும்
    பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்
    இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்
    சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய்.
    (கம்பராமாயணம்- யுத்த காண்டம்)

    “எல்லாருக்கும் சாட்சியாக உள்ள பரம்பொருளே! நான் அக்னி பகவான் (யான் அங்கி). இந்த அன்னையாம் (சீதையின்) கற்பு என்ற கொழுந்து விட்டு எரியும் கனல் என்னைச் சுட்டெரிக்கவே, அதைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை இல்லாததால், இங்கு எழுந்து வந்தேன். எனக்கு உண்டானதனைப் பார்த்த பின்பும் நீ (சீதாப் பிராட்டியிடம்) ஐயம் கொண்டு நிற்கலாமா? ‘ எனக்கேட்பதாக அருமையாகப் பாடியுள்ளார். ஆகவே சீதையின் கற்புத்திறத்தை அறிவுறுத்தும் அக்கினி- அவனுடைய தீர்த்தம் என்றார் இங்கு பிள்ளைத்தமிழ்ப்புலவர்.)

    இங்கு இராமேசுவரத்துக் கடலே அக்கினிதீர்த்தமாகும். சீதையின் கற்பின் கனல் எரித்ததாலும், தான் சீதையை தொட்டெடுத்து இராமனிடம் அளித்ததால் உண்டான பாவம் தொலைவதற்காகவும் அக்கினிதேவன், கடலில் மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது.

    அடுத்துப் பாடப்படுவது முனிதீர்த்தம்- இது அறுபட்ட செங்கையும் காலும் திரும்ப வளர உதவியது என்கிறார்.

    அடுத்தது இலக்குமி தீர்த்தம்- இது சிவார்ச்சனைக்கும் உபயோகப்படும்; வறுமைப்பிணியையும் அகற்றியருளும்.

    அடுத்து காலபயிரவருக்கு கருணைசெய்து அவருடைய பிரம்மஹத்தி தோஷத்தை (செருக்குற்ற பிரமனின் ஒரு சிரத்தைக் கிள்ளியதால் வந்தது!) நீக்கிய சிவ தீர்த்தமாம். மேலும் இராமபிரான் இராவணன் முதலான சிவபக்தர்களைக் கொன்ற பிரம்மஹத்திப் பாவம் நீங்கவும் இங்கு பூசை செய்து இத்தீர்த்தத்தில் முழுகி எழுந்தாராம்.

    இத்தகைய பெயரும் புகழும்பெற்று இராமேசுவரத்தில் இருக்கும் தீர்த்தங்களைப் பற்றியும் அவ்விடத்தின் நாயகியாகத் திகழும் உன் அருட்திறத்தையும் பற்றிப் பேசினால் கூட, அவ்வாறு பேசுவோரின் குறைகள் (மாசு) நீங்குமாறு செய்விப்பவள் நீ! அத்தகைய தாய் பொதியமலையினின்றெழும் பொருநை நதியின் நீரில் ஆடியருளுவாயாக!

    உண்மையாய் உள்ளத்தில் உனை நினைந்து தவம் செய்வோர் தொழும் பர்வதவர்த்தனி அம்மையே! பொங்கிவரும் புதுவெள்ளநீரில் ஆடியருளே! என அடியார் வேண்டுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

    செய்ந்நன்றி கொன்றபா வந்தவிர்த் திடுசங்க
    தீர்த்தநற் சீதைகற்பின்
    திறமறி வுறுத்துமக் கினிதீர்த்த மறுபட்ட
    செங்கையுங் காலும்வளர
    உய்ந்நன்றி செய்தமுனி தீர்த்தஞ் சிவார்ச்சனைக்
    குபயோக மாவுஞற்ற
    லுற்றுவறு மைப்பிணி யகற்றுலக் குமிதீர்த்த
    முயர்கால வயிரவர்க்குப்
    பெய்ந்நன்று தவிர்பிரம கத்தியகல் வித்தவொரு
    பெரியசிவ தீர்த்தமென்றும்
    பெயராவி ராமே சுரத்துன தருட்டிறம்
    பேசுவார் மாசுபிரிய
    மெய்ந்நன்றி யருளுநீ பொதியைநின் றெழுபொருநை
    வெள்ளநீ ராடியருளே
    மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
    வெள்ளநீ ராடியருளே.
    (சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்- நீராடல் பருவம்)

    மற்றொரு பாடலில் இராமேசுவரம் பற்றிய சில புராணச் செய்திகளையும் (இராமாயணத்தில் காண்பவை) காணலாம்:

    ame3
    முற்காலத்தில் மலைகள் இறகுகள் கொண்டு பறக்கும் சக்தி அமையப்பெற்று இருந்தன. தேவர்கள் அரசனான இந்திரன் மலைகளின் இறகுகளைத் தனது வச்சிராயுதத்தினால் வெட்டி வீழ்த்திவிட்டான். மைந்நாக பர்வதம் எனும் மலை மட்டுமே வாயுபகவானின் அருளால் கடலினடியே சென்று இறகுகள் வெட்டப்படுவதினின்றும் பிழைத்தது. அந்த நன்றியுணர்ச்சியின் காரணமாகவே, வாயிவின் மைந்தனான அநுமன் இலங்கைக்குச் செல்லும் வழியில் கடலிலிருந்து அந்த மலை வெளிப்பட்டு அநுமன் தன்மீது தங்கி இளைப்பாறிச்செல்ல உதவியதாம். இந்திரன் தனது பிரம்மஹத்திப் பாவத்திலிருந்து விடுபட மூழ்கியெழுந்தது இராமேசுவரத்திலுள்ள சீதைகுண்டம் எனப்படும் தீர்த்தம் கொண்ட வாவியாகும்.

    கோடிவேதப் பிராமணர்களைக் கொன்றதற்கு ஈடாகச் செய்யும் பாவத்தைக் குறைத்திடும் தீர்த்தம் பிரமகுண்டம் என்பது.

    அடுத்தது அநுமகுண்டம் எனப்படும் சிறந்ததொரு வாவியாகும். இராவணனை வென்று இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் இராமேசுவரத்தில் பூசை செய்ய எண்ணி இராமன் அநுமனிடம் ஒரு இலிங்கத்தைக் கொண்டுவரக் கூறினார். அநுமன் வரத் தாமதமானதால் சீதை மணலினால் செய்த ஒரு இலிங்கத்தை வைத்துப் பூசைசெய்தார் இராமன். இலிங்கத்துடன் வந்த அநுமன் இதைக்கண்டு மனம்வாடித் தன் வாலினால் அந்த இலிங்கத்தைப் பெயர்க்க முயற்சிசெய்ய அவனது வால் அறுந்துவிழுந்ததாம். பின்பு இராமன் அநுமனைச் சமாதானம் செய்து அந்த இலிங்கத்தையே பூசை செய்தார் என்பது ஒரு வரலாறு. இன்றும் அந்த மணல் இலிங்கத்தைக் காணலாம்; முதல்பூசை அதற்கே! இவ்விடத்தேயுள்ள மற்றொரு தீர்த்தம் அநுமகுண்டம் என்பதாம். இதில் ஊற்றெடுக்கும் நீரிலாடுவோர் மகப்பேறு வாய்க்கப்பெறுவர் என்பது கண்கூடு.

    இவ்வாறு இத்தகைய தீர்த்தங்களில் ஆடுபவர்களின் உள்ளங்களில் வேண்டியவற்றையெல்லாம் தரும் இராமேசுவரத்தில் இராமநாதப் பெருமானருகில் இருந்தருளும் இளமைவாய்ந்த பெண்மயிலே! வெற்றிபெறும் தமிழ்முனிவனான அகத்தியன் வாழும் மலையான பொதியமலையினின்று இழிதரு பொருநைநதி வெள்ளத்தில் நீராடியருளுவாயாக! உண்மையாய் உள்ளத்தில் உனை நினைந்து தவம் செய்வோர் தொழும் பர்வதவர்த்தனி அம்மையே! பொங்கிவரும் புதுவெள்ளநீரில் ஆடியருளே! என வேண்டுகிறார்.

    குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவங்
    குறைசெய்த சீதைகுண்டம்
    கோடிவே தப்பிரா மணர்தமைக் கொல்கொலை
    குறைத்திடும் பிரமகுண்டம்
    அன்றிரா மன்பணி யிலிங்கத்தை ஈர்த்துவா
    லற்றுவிழ அநுமன்விழு
    மவ்விடத் தூற்றெடுத் தாடுவர் மகப்பெறுத
    லடைவிக்கு மநுமகுண்டம்
    என்றினைய தீர்த்தங்க ளாடுவா ரெண்ணியாங்
    கெப்பலனு மென்றுநல்கும்
    இராமே சுரத்தினி லிராமாநா தர்க்கரு
    கிருந்தரு ளிளம்பெண்மயிலே
    வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
    வெள்ளநீ ராடியருளே
    மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
    வெள்ளநீ ராடியருளே.
    (சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்- நீராடல் பருவம்)

    நீராடற்பருவப் பாடல்களாகிய இவை, இராமேசுவரத்துள்ள பலவிதமான தீர்த்தங்களில் நீராடுவோருக்கு உண்டாகும் பலவிதமான நன்மைகளைப் பொருத்தமாக எடுத்துரைப்பதாம். இது இராமேசுவரத்துக்கே உரிய ஒரு சிறப்பாகும். அதனைப் பொருத்தமாக நீராடற்பருவத்தில் புலவர் எடுத்துரைத்தமை மிக அருமையானதாகும்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    _

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி……….. (1)

     மீனாட்சி பாலகணேஷ்

                       ‘காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன்

    காதலை எண்ணிக் களிக்கின்றேன்’….

              சாலையின் இருமருங்கிலும் கொன்றை மரங்கள் சரமாரியாகப் பூத்துச் சொரிந்திருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும் போது கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்கள் போல அவை காட்சியளித்தன. நீண்ட அச்சாலையின் முடிவில் வானளாவ உயர்ந்து நின்றது கோவில் கோபுரம்.  புலர்ந்து கொண்டிருந்த காலை நேரத்தில் புள்ளினங்களின் இனிமையான ஒலியும், உடலை இதமாகத் தழுவிச் சென்ற பூங்காற்றும், தொலைவில் தெரிந்த விண்ணுயர் கோபுரமும், உதயமாகிக் கொண்டிருந்த கதிரவனும் காண்போர் மனங்களில் விவரிக்க இயலாத உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும், இன்னொரு நாளின் களிப்பு கலந்த எதிர்பார்ப்பையும் நிரப்பித் ததும்பி வழியச் செய்து கொண்டிருந்தன.

              ஜட்கா என்றழைக்கப்பட்ட குதிரை வண்டிக்குள் அமர்ந்திருந்தது வெங்கடேசனின் குடும்பம். பன்னிரண்டு வயது சைலஜா  குதூகலமாகத் தந்தையின் முகத்தை ஏறிட்டாள். “எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடித்திருக்கு அப்பா,” மனத்தின் நிறைவு வார்த்தைகளில் பொங்கியது. “அடி சக்கை! அப்படியென்றால் பாதிக் காரியம் ஆச்சேடா,” வாஞ்சையுடன் மகளின் முதுகைத் தட்டினார் வெங்கடேசன்.

              குதிரை வண்டியின் பின்னாலேயே சைக்கிளில் வந்து கொண்டிருந்த பியூன் லட்சுமணன், “சார்! அது ஈச்வரன் கோவில், இதோ தெரியுதில்ல இது கவர்மெண்டு பெரியாஸ்பத்திரி….”. சைலஜா சரேலென உடலை வளைத்து லட்சுமணன் காட்டிய கட்டிடத்தைப் பார்க்க  எத்தனித்தாள். “என்னடி சைலா, சரியா உட்காரேன். என்ன ஆத்திரம் உனக்கு, அந்த கண்ணராவி ஆஸ்பத்திரியப் பார்க்க…” சினந்து கொண்டாள் அம்மா அலமேலு.

              “குழந்தையை ஏன் கரித்துக் கொட்டறே அலமேலு? இதில் என்ன கண்ணராவி? நாளைக்கு நம்ப சைலஜா படிச்சு பெரிய டாக்டரா வந்து அத்தனை பேருக்கும் வைத்தியம் பார்க்கப் போறா. நீயும் தான் டாக்டரோட அம்மான்னு பூரிச்சுப் போகப் போறே..” என்ற தந்தையைப் பெருமிதத்துடன் ஏறிட்டாள் சைலஜா.

              இதற்குள் குதிரை வண்டி கிழக்காலும் மேற்காலும் புகுந்து புறப்பட்டு, பி. டபிள்யூ.டி. குவார்ட்டர்சில் நுழைந்து ஆபீஸர்களுக்கான வீடுகள் இருந்த தெருவில் நாலாம் நம்பர் வீட்டு வாசலில் நின்றது.

              எல்லா வீட்டு வாசல்களிலும் ஜன்னல்களிலும் தலைகள் நீண்டன. லட்சுமணன், “இது தானுங்க வீடு,” என்றபடி தன் கனமான சரீரத்தை சைக்கிளிலிருந்து இறக்கினான்.

              முதலில் வெங்கடேசன் இறங்கினார். காற்சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த வைக்கோல் துணுக்குகளை நாசுக்காகத் தட்டிவிட்டுக் கொண்டவர், வண்டியினுள் பார்த்து, “உம், இறங்குங்கள் எல்லாரும்,” என்று உற்சாகமாகக் கூவினார். பாட்டி மடிசாரின் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டு, “இந்த கூஜாவைக் கொஞ்சம் பிடியேன் வெங்கு,” என்றபடி நிதானமாகப் படியைத் தேடிக் காலை வைத்து பத்திரமாக இறங்கினாள். வைரபேசரியும் தோடும் பளபளக்கத் தொடர்ந்து இறங்கிய அலமேலு, வண்டியின் உட்பக்கம் திரும்பிப் பார்த்து, “சைலு, வேடிக்கை பார்க்காமல் மளமளவென்று அந்தக் கூடையை இங்கே நகர்த்தித் தந்து விட்டு இறங்குடீ! பாக்கியை எல்லாம் அப்பாவும் அந்த மாமாவுமா பார்த்துப்பா,” என்றதும் ஜோடிப்புறாக்களைப் போன்ற பாதங்களைப் படியில் வைத்து இறங்கிய சைலஜா தரையில் குதித்தாள்.

    நீண்ட சாட்டை போன்ற இரு பின்னல்கள். ‘துறு துறு’வென அலை பாயும் கண்கள். அவள் வண்டியிலிருந்து குதித்து இறங்கியதில் உள்ளே சாய்வாக வைக்கப் பட்டிருந்த பெரிய தெர்மாஸ் பிளாஸ்க் உருண்டு பக்கவாட்டில் விழுந்தது. “பாத்தும்மா, பிளாஸ்க் உடைஞ்சுடாதா?” என்று வாஞ்சையுடன் மகளைப் பார்த்துக் கூறிய வெங்கடேசன், மனைவியின் பக்கம் திரும்பி, “மசமச’ன்னு நிக்கறியே, பிளாஸ்கை முதல்ல கையோட எடுத்துக்கக் கூடாதா?” எனச் சிடுசிடுத்தார்.

              “இது தான் எங்க வீடா மாமா?” என்று உரிமையுடன் லட்சுமணனைக் கேட்டபடி ஆர்வமாக ஓடினாள் சைலஜா. அடர்ந்து படர்ந்திருந்த முல்லைக்கொடியில் பூக்கள் பொங்கி மலர்ந்து ஒரு தேவானுபவமான வாசம் கமழ்ந்தது. பெரிய மாமரம் ஒன்று, கொஞ்சம் பிஞ்சுகளும் காய்களுமாய்- காலி வீடு தானே என்று வருபவர்களும் போகிறவர்களும் அடித்துத் தின்றது போக- கிட்டத்தட்ட மொட்டையாக நின்றது. கொய்யா, சில தென்னை மரங்களைத் தவிரத் தோட்டம் காலியாகவே இருந்தது.

              “அடேயப்பா, பெரீய்ய தோட்டம் போடலாமே இங்கே; லட்சுமணன் மாமா, நீங்க ஒத்தசை பண்ணுவீங்களா?” ஆவல் பொங்கக் கேட்டாள் சைலா. “சைலு, நீ முதலில் உள்ளே வா. அப்புறம் எல்லாம் செய்யலாம். கையைக் காலை அலம்பிண்டு, ஸ்டவ்வைப் பற்ற வைத்துப் பாலைக் காய்ச்சிடு அலமேலு. ஸ்வாமி படத்தையும் வைத்து விளக்கையும் ஏற்று,” என்றாள் கூஜாவுடன் உள்ளே நுழைந்த பாட்டி.

              “சமையக்கார ஐயர் வீட்டுலயிருந்து உப்புமாவும் இட்டிலியும் காபியும் குடுத்து விடுவாங்க சார்- சொல்லி வெச்சிருக்கேன்- மதியம் சாப்பாடும் அவுங்களே காரியர்லே அனுப்பிடுவாங்க,”- என்றான் லட்சுமணன்.

              இதற்குள் ஓட்டமாக ஓடி வீட்டை ஒரு ‘ரவுண்டு’ பார்த்து விட்டு வந்திருந்த சைலஜா, வாசற்பக்கம் திரும்ப வந்து திண்ணையில் அமர்ந்தாள். இரண்டிரண்டாக வீடுகள். நடுவே ஒரு சுவர் தான் இரட்டை வீடுகளைத் தனித்தனியாகப் பிரித்தது. ஐந்தாம் நம்பரில் இருந்து நெற்றியில் பூசிய அடர்ந்த திருநீறும் அதன் நடுவே காலணா சைஸ் குங்குமப் பொட்டுமாக ஒரு அம்மாள் சிரித்த முகத்துடன் வந்தாள். கையில் தொடுத்த முல்லைச் சரம். கூடவே பின்னால் வந்த தன் பன்னிரண்டு வயது மகளிடம், “திலகா, இதை அந்தப் பாப்பா கிட்டக் குடு,” என்றதும் திலகா கூச்சத்துடன் அதைச் சைலாவிடம் நீட்டினாள்.

              “எல்லாமே எனக்கா?,” நான்கைந்து முழங்கள் இருந்த பூவை ஆசையுடன் வாங்கிக் கொண்ட சைலாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து பெரிதாக மலர்ந்தன. திலகா தாயின் பின்னால் ஒளிந்தபடி ஒரு சங்கோசப் புன்னகை புரிந்தாள்.

              “என் பேர் சைலஜா. நான் ஏழாவது சேரணும். நீ எந்த ஸ்கூல்லே படிக்கிறே? அங்கேயே நானும் சேரலாமா? உங்க டீச்சர் சேத்துப்பாங்களா என்னை?” சரமாரியாகக் கேள்விகளைத் திலகாவிடம் தொடுத்தாள்.

              “சரஸ்வதி நிலையத்திலே தான் இவ படிக்கிறா. நீயும் அங்கேயே சேரலாம் சைலஜா. இவளும் ஏழாவது தான். நல்லாப் படிப்பியா நீ? வக்கணையாப் பேசறியே,” என்றபடி அவளை நெட்டி வழித்து திருஷ்டி கழித்துக் கொண்ட திலகாவின் அம்மா, புதிதாகக் குடித்தனம் வந்திருப்பவர்களின் விருத்தாந்தங்களை அறிந்து கொண்டு அவர்களைப் பரிச்சயம் செய்து கொள்ளும் ஆவலில் வீட்டினுள் நுழைந்து எட்டிப் பார்த்தாள்.

              “வணக்கம் சார்! மிஸ்டர் வெங்கடேசன், நான் தான் சம்பந்தம். ஜே. ஈ. உங்க பக்கத்து வீடு,” என்றபடி வந்தார் திலகாவின் பெரிய அண்ணன்.

              “வணக்கம்! நானே வந்து உங்களைப் பார்க்கலாம்னு தன் கிளம்பிண்டிருக்கேன். இது என் பெண் சைலஜா- ஒரே பெண். ரொம்ப நல்லாப் படிப்பா. இங்கே ஸ்கூலில் சேர்க்க உங்க உதவி வேணும்,” பேச்சு திண்ணையிலேயே நீண்டு கொண்டு போயிற்று.

    ****************

              இது பழைய கதை. இப்போது திலகவதியும் சைலஜாவும் ஏழாவது ‘பி’ செக்ஷனில் சக மாணவிகள். புத்திசாலியான சைலஜா தன் உற்ற தோழி என்பதில் சுமாரான  புத்திக்கூர்மையே படைத்த திலகாவிற்கு மகா பெருமை.

              திலகாவின் பெரியண்ணன் சம்பந்தத்தின் மனைவி வசந்தாவும் அலமேலுவும் சமையலெல்லாம் ஆன பிறகு தையல், எம்ப்ராய்டரி என்று தங்கள் திறமையை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு நல்ல நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

              இவர்களின் நடுவில் ஒட்டமுடியாமல் தவித்து ஓரமாக ஒதுங்கி நின்று அவஸ்தைப்பட்டவன் ஆடலரசு ஒருவன் தான். திலகாவின் சின்ன அண்ணன். எஸ். எஸ். எல். சி. படித்துக் கொண்டிருந்தான். பெரியவர்களின் சம்பாஷணையில் கலந்து கொள்ள முடியாமலும், திலகா, சைலஜாவின் தாயக்கட்டம், பாண்டி, பல்லாங்குழி விளையாட்டுகளில் சேர முடியாமலும் ஒதுங்கி நின்று மறுகிக் கொண்டிருந்தான். சைலுவின் ‘வெடுக்’கென்ற மாவடுவைக் கடித்தது போன்ற பேச்சும், துறுதுறுத்து அலையும் விழிகளும், பாண்டி விளையாட்டில் முன்னே வந்து குதிக்கும் ஜடையை அவள் லாகவமாகப் பின்னுக்குத் தள்ளி விடும் அழகும், எல்லாரையும் போல  அவனையும் வசீகரித்ததில் வியப்பில்லை தான்.

              உணர்வுகள் முகையவிழும் பருவம் அவனுடையது. ஏதாவது ஒன்றைச் சாக்காக வைத்துக் கொண்டு திலகாவும் சைலாவும் விளையாடிக் கொண்டோ, அரட்டையடித்துக் கொண்டோ இருக்குமிடத்திற்கு ஓரிருமுறை செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான் அவன்.

              அன்றும் அப்படித்தான்- சைலாவும் திலகாவும் வாசல் புறத்தில் திண்ணையை ஒட்டியிருந்த சிறிய அறையில் கதவை ஒருக்களித்துச் சார்த்தி வைத்து விட்டு ஒரு பாட்டுக்கு நடனத்தை ‘ப்ராக்டீஸ்’ செய்து கொண்டிருந்தனர். சைலாவுக்குப் பாட்டும் நடனமும் அவள் வீட்டில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘டான்ஸ்’ கிளாசில் இருந்து அப்போது தான் வந்திருந்தாள். புதிதாகக் கற்றுக் கொண்ட ‘நடனமாடினார்’ என்ற பாட்டுக்கு  டீச்சர் சொல்லித் தந்திருந்ததைப் போலப் பாடிய வண்ணம் சைலா ஆடிக் காட்டிக் கொண்டிருந்தாள்.

              படிப்பதாகப் பாவனை செய்தபடி லேசாகத் திறந்திருந்த கதவின் வழியாகப் பார்த்த வண்ணம் இருந்தான் ஆடலரசு.

              ‘தாம் தகிட தகஜம்’ என்ற ஜதியோடு அவள் ஆடிய லயத்திலும் அழகிலும் கிறங்கிப் போய், இருந்த இடத்தை விட்டு எழுந்தவன் கதவருகே வந்து ஆவலாக இடுக்கு வழியாக உற்றுப் பார்த்தான். ஆர்வத்தில் சற்று அதிகமாகவே சாய்ந்து விட்டதால் கதவு விரியத் திறந்து கொண்டது.

              ‘வெகு நாகரீகமாக’ ஆடிய நடனம், பார்வையாளர்கள் இருப்பதைக் கண்டும் காணாதது போல் பலமடங்கு உற்சாகத்துடன் மேலும் அழகாக ஆனந்தமாகத் தொடர்ந்தது.

                       *************************

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 36

    மீனாட்சி பாலகணேஷ்

     

    அடியவரின் ஆவலான கேள்விகள்!

    குழந்தை செங்கீரையாடுதலுக்கு இருவிதமாகப் பொருள் கூறப்படுகின்றது. முதலாவது, தவழும்பருவத்துக் குழந்தை, ஒருகாலை மடித்தும், மறுகாலை நீட்டியும் தலையை உயர்த்திப் பார்த்தும் தன் பவளவாயிலிருந்து அமுதத்திற்கு ஒப்பான உமிழ்நீர் ஒழுகத் தவழும் அழகினை விளக்குவது; மற்றொன்று, பொருளற்ற ஓசைகளை எழுப்பித் தாய்தந்தையரை மகிழ்விப்பது. கீர் என்றால் சொல் என்பது பொருள். நக்கீரர் என்பது நல்ல சொற்களைக் கூறுபவர் எனப் பொருள்படும். திருத்தமான பொருளற்ற மழலையொலி குழந்தை எழுப்புவதாம். இத்தகைய மொழியைக் கூறுதல் என்பது மங்கல வழக்காகச் செங்கீரை ஆடுதல் எனப்பட்டது. இந்த ஒலியை எழுப்பும் பருவமே செங்கீரையாடும் பருவம் எனவும் கூறலாம்.

    amee
    ‘ங்க்கா’ ‘ங்க்கு’ என நீரொழுகும் வாயைத்திறந்தும், பேசுவதனைப்போல் தலையை ஆட்டியபடியும், உற்சாகத்தில் குழந்தை தவழ்ந்தாடும். இதனைக் கண்ட தாயும் மற்றவர்களும் அக்குழந்தை எதனையோ பேச முயல்வதாகக் கருதி மகிழ்வார்கள். தாய் தலையசைத்துப் பேசுவதனைப்போலத் தானும் செய்ய முனையும்; முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் இதனைப் ‘போலச்செய்தல்,’ எனக் குறிப்பிடுவார்கள் என்கிறார்.

    தாய் குழந்தையிடம் உரையாடுவது போன்றுஅடியார்கள் குழந்தை வடிவாகத் தாம் காணும் அன்னை தெய்வத்திடம் வரம் கேட்கிறார்கள். இதனைத் தாய் உளவியல் அல்லது அடியார்களாகிய மானிடர்களின் உளவியல் எனலாம். எப்போதுமே சிறுகுழந்தையை தெய்வவடிவாகக் காண்பது இந்தியப் பாரம்பரிய எண்ணம். அதிலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் தெய்வத்தைக் குழந்தையாக்கிப் பாடும்போது, தமது எல்லையற்ற அன்பை அக்குழந்தைமீது சொரிந்தும், தமது துன்பங்களைத் துடைக்கும் பரம்பொருளாக அத்தெய்வக்குழந்தையைக் கண்டு வேண்டுவதாகவும் பாடுவார்கள். தெய்வம் ஒன்றே நமது பிறவித்துயரைத் துடைக்கவல்லது என்பது இந்துக்கள் தீவிரமாக நம்பும் ஒரு கருத்து. அத்தெய்வத்தைக் குழந்தையாக்கி வழிபடும்போதிலும் பிறவித்துயரைத் துடைக்கவேண்டுவார்கள். இந்த உளவியல் கோட்பாட்டினை ஒற்றியே பிள்ளைத்தமிழ் நூல்களில் சில பருவங்களில் பாடல்கள் அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கது.

    கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் எழுதியுள்ள சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இக்கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள செங்கீரைப்பருவப் பாடல்கள் இரண்டினை நாம் இங்கு காணப்போகிறோம்.

    பெண்மகவு தனது வாயில் தேன்போலும் உமிழ்நீர் ஒழுக, தவழ்ந்தாடி வருகிறாள். “என்னிடம் ஓடிவா தாயே!” என அன்புமீதூர அழைக்கும் தாயினிடம் ஓடோடிச் செல்கின்றாள். நிமிர்ந்து தாயை நோக்கும் தலை; ஆசையும் அன்பும் பாசமும் பெருகத் தாய் (அடியார்) தனது குழந்தையை நோக்குகிறாள். அன்னை பராசக்தியே அங்கு அவள் கண்களுக்கு குழந்தையாகத் தென்படுகிறாள். பக்தியினால் புளகாங்கிதமுற்ற (அடியாரெனும்) அன்னை கேட்கிறாள்:

    “நான் உனது அடியவள்; நீயே எனக்கு எல்லாம் என இருப்பவள்; ஆகவே, என்னை இனிமேலும் அன்னையர் வயிறாகிய பிறவிச்சேற்றினில் (அளறு- சேறு) திரும்பத் திரும்பப் பிறக்குமாறு செய்வாயா? எண்ணுதற்கு அரிய துயரங்களை எமக்களித்து பிறப்பு எனும் தண்டனையை எமக்குக் கொடுப்பாயா? எம் உடலில் பொருந்தியிருந்து மாறிமாறி எம்மை மயக்கும் ஐம்பொறிகள் காட்டும் வழியில் உழலுமாறு எம்மைச் செய்து விடுவாயா? பெண், பொன், மண் எனும் மூவாசைகள் (வேடணைகள்) எம்மை விடாமல் தொடர்ந்து வந்து துயர்செய்ய விடுவாயோ? உன்னுடைய மலரடிகளைப் பணிகின்ற அன்பில்லாதவர்களின் குழுவில் நாங்களும் சேர்ந்துநின்று உன்னையே மறந்துவிடச் செய்குவையோ?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்(ள்). ‘இவ்வாறெல்லாம் எம்மைச் செய்துவிடாதே,’ எனும் ஆதங்கம் இவ்வடிகளில் தொனிப்பதனைக் காணலாம்.

    ஒரு ஆதங்கத்தில், பக்திப்பெருக்கில், இவ்வாறு வினவிய தாய், பின்னர் இது வாய்திறந்து மறுமொழி உரைக்க இயலாத சிறுகுழந்தை என (ஒரு தாயின் போக்கில்) உணர்ந்து குழந்தையின் தலையசைப்பையே தனக்கு அது கூறும் மறுமொழியாகக் கருதுகிறாள். அதற்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறாள்.

    “நான் கேட்கும் இந்த வினாக்களுக்கெல்லாம் நீ தயை புரிந்து எதிர்மறையாக விடைதருவது போல (அதாவது ‘இல்லை இல்லை! இவ்வாறெல்லாம் செய்ய மாட்டேன்’ எனக்கூறுவது போல) உனது தலையை (சென்னியை) இருபுறமும் அசைத்து, எனதன்னையே! நீ செங்கீரையாடி வருவாயாக!” என வேண்டி உள்ளம் கசிந்து பாடுகிறார். கேட்கவே இனிமையாக இல்லையா? உள்ளம் உருகவில்லையா?
    குழந்தையும் தாய் தன்னிடம் ஏதோ கேட்பதைக் கண்டு தலையை இப்படியும் அப்படியும் அசைக்கிறது. தாயின் உடலும் உள்ளமும் மறுமொழி கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியில் சிலிர்க்கிறன.

    இன்னுமுன் அடியரெமை அன்னையர் வயிற்றளறில்
    இருமென்று புகவிடுவையோ?
    எண்ணுதற் கரியதுயர் பண்ணிவெளி வருபிறப்
    பென்றதண் டனையிடுவையோ!
    மன்னிநின் றெமைமாறி மாறிமயல் செய்பொறிகள்
    வழியிலே உழல்விப்பையோ?
    மாதர்பொன் மண்ணென்ற வேடணைகள் வீடாது
    வந்துதுயர் செயவிடுவையோ?
    நின்மலர்த் தாள்பரவு மன்னுமன் பிலர்குழுவில்
    நின்றுனை மறப்பிப்பையோ?
    நீதயை புரிந்துமொழி கெனும்வினா வுக்கெதிர்
    நிகழ்த்திமறை விடைவிடுதல்போற்
    சென்னியிரு புறமசைத் தென்னவென் னன்னையொரு
    செங்கீரை யாடியருளே!
    சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
    செங்கீரை யாடியருளே!

    (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)

    ame2
    இதற்கு சைவசித்தாந்த அருளாளர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஒரு அருமையான விளக்கம் அளித்துள்ளார்: அவருடைய சொற்களிலேயே அதனைக் காண்போமே! :: சிவசக்தியாகிய அருட்சத்திதான் உயிர்களின் சீவத்துவத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்காக மாயையிலிருந்து உடல், கருவி, உலகு, போகங்கள் ஆகியவற்றை அளித்துப் பிறப்பு- இறப்பில் செலுத்துகின்றது எனச் சைவசித்தாந்தம் கூறுகின்றது. உயிரறிவை விளக்கும்பொருட்டுக் கூட்டப்பட்ட மாயை, உயிரின் ஆணவமல சம்பந்தத்தால் அறிவை மயக்கம் செய்கின்றது. அந்த மயக்கம் தீர, திருவருளாகிய சிவசத்தியின் துணைவேண்டும். அடியான் தன் அச்சத்தைக் கூறி இத்தகைய துன்பத்தில் யான் புக என்னை விடுவையோ என வினா நிகழ்த்தி, குழந்தையாகிய சிவசத்தியிடம், ‘நான் அப்படிச் செய்யமாட்டேன்’ என்ற எதிர்மறை விடையைத் தலையை இருபுறம் அசைப்பதிலிருந்து பெற விழைகின்றான். சிவபக்தி நிறைந்த ஒருவர், தம்முடைய மானுடக்குழந்தையிடம் இவ்வினாக்களைக் கேட்டு, அக்குழந்தை எதிர்மறை விடையாகத் தலையசைக்க சிவசத்தியே தம்மைத் தெளிவிப்பதாகக் கருதி இன்பம் அடைவார்.

    ஆசையுடன் அருமையாகப் பெற்றெடுத்த தன் குழந்தையே தாய்க்குப் பெரும் செல்வம். அக்குழந்தையைத் தனது தவப்பயனாகவும், குலதெய்வமாகவும், தன்னை வாழவைக்க வந்த பரம்பொருளாகவும், தனது உயிர் என்றும், கண் என்றும், கண்ணின் ஒளி எனவும், தான் பெற்ற பெருஞ்செல்வம் என்றும், தன்னைப்பெற்ற தாயாகவும் போற்றிக் கொண்டாடுவாள் அன்னை.

    இந்த உளக்கருத்தில் இவ்வுத்தியை தாயின் நிலையில் நின்று கவிஞர் கையாண்டு அழகுறப்பாடுகிறார்:

    “முன்பு ஒரு காலத்தில் தேவர்கள் குழு தம்மில் யார் பெரியவர் என்று வாதமிட்டுக் கொண்டிருந்தது; அப்போது அங்குசென்று அவர்களிடையே ஒரு துரும்பை நட்டு அவர்களுடைய அகந்தையை அழித்தானே அந்தச் சிவபிரான்தான் உனது மேனியின் ஒரு பாகத்தைக் கொண்டவனோ தாயே? அவனுடைய அருள் என விளங்கும் குணமும் நீயேதானோ?*

    (* ‘ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்,’ எனும் திருமந்திர வரிகள் ஈண்டு நினைவுகூரத் தக்கன. ஒன்றேயான பரம்பொரும் உயிர்களுக்கு அருள்செய்யும்பொருட்டு இரண்டாகி, அவனது அருளாகி, சக்தி எனும் பெயரும் வடிவும் கொண்டு நிற்கின்றதாம்)

    “என்றென்றுமே, பிறப்பு, இறப்பு, இவை தொடர்பான மலங்கள் முதலியன இல்லாமலிருத்தல் என்பதுதான் உமது இயல்போ? எண்ணிறந்த சராசரங்களாகிய உலகங்களை ஈன்றெடுத்து அவற்றில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நீ இனிய நற்கதியைத் தருவீர் அல்லவோ?

    ame
    “உனது திருக்கோவிலில் நின்று கண்ணில் காணும் காட்சியாக உன்னைத்தொழுது வணங்கும் எளிய அடியாருக்கும் நீ அருளுவது உன்னுடைய வழக்கம் அல்லவா? இங்ஙனம் எல்லாம் அருளி எம்மை நீ எப்போதும் வாழ்விப்பாயா என நாங்கள் விருப்பமுற்றுக் கேட்டு நிற்கிறோம். ‘ஆம்’ எனும் விடை வழங்கும் முகமாக நீ உனது திருமுகத்தினை அசைத்து எங்களுக்குக் குறிப்புணர்த்தியபடி செங்கீரையாடியருள்வாயாக! (சென்ற பாடலில் எதிர்மறை விடையினை வேண்டித் தலையசைப்பை எதிர்பார்த்த தாய் இப்பாடலில் ‘ஆம்’ எனும் குறிப்பைத் தலையசைப்பினால் உணர்த்த வேண்டி நிற்கிறாள்).

    “சீகாழியில் மேவும் திருநிலைநாயகியாகிய சுந்தரவல்லியே, செங்கீரையாடி அருளுவாயாக,” என வேண்டுகிறார் கவிஞர். இவ்வாறு குழந்தையின் தலையசைவுகளுக்கேற்ப மறுமொழிகளைக் கொண்டு மகிழ்ச்சியடையும் தாயின் இயல்பு அடியவராகிய கவிஞருக்கு அந்தப் பரம்பொருளின் பெருமைகளைப்பாடி மகிழும் உத்தியாக அமைகிறது.

    இப்பாடல்கள் தாயினுடையவும், அவள் நிலையில் தம்மை இருத்திப் பரம்பொருளைக் குழந்தையாகக் கண்டு வணங்கும் பக்தனுடையவும் ஆகிய இருவருடைய மனநிலைகளையும் அவற்றில் எழும் சிந்தனைகளையும் மிக அழகாக விளக்குகின்றன. பாடப்படும் இப்பாட்டுடைத்தலைவி, குழந்தையா தெய்வமா எனும் சந்தேகத்திற்கே இடமில்லை. இருவரும் ஒன்றே- குழந்தையும் தெய்வமும் போற்றப்படவேண்டியவர்களே என்பது நன்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றமர் குழுவினிடை சென்றொரு துரும்புநட்
    டவரகந் தையையழித்த
    ஆற்றல்மிகு மாண்டகையு னொருபுறத் தான்கொலோ
    அவனருட் குணமுநீயோ!
    என்றுமுதி யாமைமரி யாமைமல மில்லாமை
    என்பனவும் மியல்கொலோ?
    எண்ணில சராசரந் தம்மையீன் றுயிர்களுக்
    கினியகதி தருவீர்கொல்லோ?
    மன்றினிடை நின்றுவெளி கண்டுதொழு வார்க்கருள்
    வழங்குவது முண்டுகொல்லோ?
    வாழ்விப்பி ரோவென வினாவினோம் விதிவிடை
    வழங்குதிரு முகமசைத்தே
    தென்றலி லிளம்பசிய கொடியென்ன அம்மையொரு
    செங்கீரை யாடியருளே!
    சீகாழி மேவுதிரு நிலையசுந் தரவல்லி
    செங்கீரை யாடியருளே!!

    (வெளி- மேற்பார்வைக்குக் காணும் காட்சி)

    (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- நடேச கவுண்டர்)

    ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் பெரும்பாலானவை கடவுள்கள் மீதானவையே! இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் ஒவ்வொரு பருவத்தினையும் புலவர்கள் பாடும்போது அப்பருவத்திற்கான பத்துப்பாடல்களில் சில, அழகான கதைகளையும் தொன்மங்களையும் இணைத்தும், வேறு சில, சந்தநயம் மிகுந்தும், இன்னும் சில பாட்டுடைத்தலைவனின்/ தலைவியின் கடவுட்தன்மையைப் போற்றியும் பாடப்படும். இத்தகைய பாடல்களில், அவை அன்னையைப் பற்றிய பிள்ளைத்தமிழ் நூலாக இருப்பின், சைவசித்தாந்தக் கருத்துக்கள் பொதிந்து பொலிவனவாகப் பாடுவது பெரும்புலவோரின் தனிச்சிறப்பு. அவ்விதத்தில் கவியரசு நடேச கவுண்டர் அவர்கள் தமது சைவசித்தாந்தப் புலமையையும் பற்றையும் இலைமறைகாயாக இப்பாடல்களில் மிகவும் எளிமையாக ஆயினும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியவையாகக் காட்டியுள்ளது வியக்கத்தக்கதாம்.

    இவை போலும் சிறப்புகளை வெவ்வேறு பிள்ளைத்தமிழ் நூல்களில் இனிவரும் அத்தியாயங்களில் தொடர்ந்து காண்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 35

    மீனாட்சி பாலகணேஷ்

    திருநீறும் திருவைந்தெழுத்தும்

    சென்ற அத்தியாயம் வரை பெரும்பாலும் புலவர்கள் கற்பனை செய்து எழுதிய கதைகளையும், தொன்மங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்தோம்.

    வித்தியாசமாக இப்போது, பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் எடுத்தாளும் மற்ற செய்திகளையும் காணலாமே!

    பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்தினை எடுத்துக்கொண்டோமானால், குழந்தையைக் காப்பதற்காக முறைப்படி திருமாலிடம் துவங்கி, விநாயகர், சிவபெருமான், பார்வதி, அலைமகள், கலைமகள், பிரம்மா, இந்திரன், சப்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப் பலப்பல தெய்வங்களை விளிப்பதனைக் காணலாம். இவை பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தின் பொதுவான அமைப்பாகும்.

    am
    முருகன் மீதான சில பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறப்பாகச் சைவசமயச் சின்னங்களாகிய திருநீற்றையும், ‘நமசிவாய,’ எனும் ஐந்தெழுத்தினையும், உருத்திராக்கத்தினையும் விளித்துக் குமரனாகிய குழந்தையைக் காக்கவேண்டுவர் புலவர்கள். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றிய சிதம்பர அடிகளார் இவ்வாறு பாடியுள்ள இரு பாடல்களை இவ்வத்தியாயத்தில் காணலாமா?
    கந்தசாமி எனப்போற்றப்படும் முருகப்பிரான் உறையும் திருப்போரூர் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகிய ஊராகும். இவ்விடம் சென்னையிலிருந்து 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரணவ மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. முருகன் அசுரர்களுடன் நிகழ்த்தியபோரில் கடற்போரானது திருச்செந்தூரிலும், தரைப்போரானது திருப்பரங்குன்றத்திலும், ஆகாயப்போரானது திருப்போரூரிலும் நிகழ்ந்தது எனப் புராணங்கள் கூறும். தற்காலத்தைப்போலவே புராணகாலத்திலும் முப்படைகளைக் கொண்டு போரிட்டனர் என்பது அறியத்தக்கது. சிதம்பர அடிகளார் திருப்போரூர் சந்நிதிமுறை எனும் நூலை இயற்றியுள்ளார். இதனுள் பிள்ளைத்தமிழ் முதலாக 36 தலைப்புகளில் பாடல்கள் இயற்றியுள்ளார். அன்னை மீனாட்சியின் மீதும் மீனாட்சியம்மை கலிவெண்பா எனும் நூலைப் பாடியுள்ளார்.

    சைவர்களுக்கு, திருநீறு இன்றியமையாத ஒரு சமயச் சின்னமாகும். இதன் பெருமைகளும் கொஞ்சநஞ்சமல்ல. பாடலின் அமைப்பும் அதியற்புதமாகவுள்ளது. முதலிரு பகுதிகள் முருகனின் சிறப்பினையும், கடையிரு பகுதிகள் திருநீற்றின் சிறப்பினையும் அழகுற விளக்குகின்றன.

    முதற்கண் திருநீற்றின் சிறப்புகளைக் காணலாம்: ஆதிபகவன் எனப்படும் இறைவனின் மெய்யறிவு வடிவாகிய நெருப்பில் தோன்றியது திருநீறு. அதுவும் இறைவனைப்போன்றே என்றுமுள்ளது; நித்தியமானது. திருநீறு சிவபெருமானின் திருவுருவாகக் கொள்ளப்படும்; அச்சிவபெருமானே மகாபற்பமாவார்- ஆகவே ‘ஞானவடி அழலிற் பூத்து,’ எனப்பட்டதாம். அதுமட்டுமின்றி, சிவபிரான் என்றுமுள்ளவராதலால் அவரைப்போன்று அவருடைய திருவடிவம் ஆகிய திருநீறும் என்றும் (நித்தியமாய்) உள்ளது. தன்னை அணிந்தவர்களுக்கு வேண்டியதனைத்தையும் தருவது. இறைவன் திருவருளால் பாற்கடற்கண் தோன்றிய தேவாமிர்தமானது தன்னை உண்டவர்களுக்கு, நரை, திரை, மூப்பு ஆகியவற்றை நீக்குவதனைப்போல, திருநீறும் தன்னைச் சிறிது வாயிலிட்டு உண்பவர்களுக்கு நோய்தீர்க்கும் அமுதமென விளங்குவது. ஆகவே ‘அருந்தினோர்கட்கு ஆரமுதாய்’ எனக்கூறப்பட்டது. இன்றும் பல இடங்களில் திருநீறு மருந்தாக உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது. விதிவழியே செல்லுகின்ற ஆன்மாக்களுடன் ஒன்றிணைந்த ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கியருளும் தன்மைகொண்டது. திருநீற்றினைக் குழைத்து மீன்று பட்டைகளாக நெற்றி, மார்பு, வயிறு, கைகள் முதலானவற்றில் அணிவது வழக்கம். இது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கலையும் நீக்கியருளும் தன்மை கொண்டதாகையால் ‘நீதியறியும் பசுமலத்தை நீக்கும் ஒரு நற்குறி’ எனப்போற்றப்படுகிறது.

    ஆதி பகவன் ஞானவடி
    அழலிற் பூத்து நித்தியமாய்
    அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
    அருந்தி னோர்கட் காரமுதாய்
    நீதி யறியும் பசுமலத்தை
    நீக்கு மொருநற் குறிகாட்டி
    நிகழ்பே ரின்பக் கடலூட்டி
    நின்ற புகழ்வெண் திருநீறே.

    இந்தத் திருநீற்றினை அணிந்த குழந்தை முருகனை அது காக்க வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார். அவன் சாமானியக் குழந்தையா என்ன?

    ‘ஒளிபொருந்திய மகரக்குண்டலங்களை அணிந்த அழகான தோள்கள் பன்னிரண்டினை உடையவன் அவன். சுருதி எனப்படுவதான வேதநூல்கள் (மறைகள்) முழங்கும் தண்டைகளை அணிந்த தனது இரு திருவடிகளையும் எனது தலையில் சூட்டியவன்; ‘மாது’ எனும் சிறப்பு அடைமொழி பெற்ற திருமகள் உறைகின்ற திருப்போரூரின் வாழ்வு அவனே!’ என்றும் கூறுகிறார். செல்வவளம் தழைத்து விளங்குவதால் திருமகளாகிய ‘மாது உறையும் சமரபுரி’ எனப்பட்டது. தேவர்களின் சிறந்த மணியாக விளங்குபவன் அவன். அழகான வேலினை ஏந்திய கையன்; மயிலில் ஏறி வருபவன். இவனை இத்திருநீறு ஈண்டுவந்து காத்தருள வேண்டும்.

    முழுமையான பாடல் இதோ:

    சோதி மகரக் குழைசெறிசுந்
    தரத்தோ ளீரா றுடையானைச்
    சுருதி யிரைக்குந் தண்டையந்தாள்
    துணையென் முடியிற் பொறித்தானை
    மாது வளருஞ் சமரபுரி
    வாழ்வை வானோர் சிகாமணியை
    வடிவே லரசை மயிலரசை
    வந்து புறங்காத் தளித்திடுமால்
    ஆதி பகவன் ஞானவடி
    அழலிற் பூத்து நித்தியமாய்
    அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
    அருந்தி னோர்கட் காரமுதாய்
    நீதி யறியும் பசுமலத்தை
    நீக்கு மொருநற் குறிகாட்டி
    நிகழ்பே ரின்பக் கடலூட்டி
    நின்ற புகழ்வெண் திருநீறே.

    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- திருநீறு- சிதம்பர அடிகளார்)

    *****

    அடுத்து சிதம்பர அடிகளார் திரு ஐந்தெழுத்தின் பெருமையினைப் போற்றுகிறார். மணிமந்திர ஔடதங்கள் என்பன சிவகண்மணி எனப்படும் உருத்திராட்சம், ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து, திருநீறு ஆகியனவேயாகும். இவற்றுள் திருவைந்தெழுத்தின் பெருமை கூறப்படுகின்றது.

    am1
    வாசம்கமழும் குராமலர்களையணிந்த வள்ளியம்மையின் நாயகன் குமரன்; கார்த்திகைப் பெண்டிரின் குடம்போலும் கொங்கைகளிலிருந்து பெருகிய பாற்கடலை உண்டு வயிறு நிரம்பியவன். அருணன் போல்பவன் இந்தக் குமரப்பெருமான்; இனிமையான சோலைகள் நிறைந்து பொலியும் சமரபுரி (போர் + ஊர்= போரூர்) எனும் திருப்போரூரில் நின்றுலவும் குமரனைக் காக்க வேண்டும்.

    யார் காக்க வேண்டும்? திருவைந்தெழுத்து காக்கவேண்டும்! அது இக்குமரனின் தகப்பனாகிய சிவபெருமானின் பெருமைமிகு பெயராகும். தனயனை அதுவே காக்கும். அந்தத் திருவைந்தெழுத்தின் பெருமைகளைக் கூறப்புகுகிறார் அடிகளார்.

    எண்ணுவதற்கு அரியதான பல உயிர்களும் (பாசம்) பந்தம் எனும் கரிய கடலைக்கடந்து கரையேற உதவும் மரக்கலமாகத் திகழுவதே இந்த ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து. திருவைந்தெழுத்தைக் கூறி பிறவிக்கடலை எளிதாகக் கடந்துவிடலாம் என்பது இதனால் பெறப்பட்டது. அன்பர்களாகிய அடியார்கள் தமது உள்ளங்களில் இவ்வைந்தெழுத்தை இருத்தி அதனையே ஐயன் திருவடிவாகக்கண்டு தியானம் செய்வார்கள். ‘உண்மைவிளக்கம்’ எனும் நூல் இதனை மிக நுட்பமாகக் கூறியருளும். இதனையே ‘அன்பர் உட்காட்சி’ என்கிறார். அரியமறைகளாகிய வேதங்களும் அறிவிக்க இயலாத அழகான பரமசுகப் பேற்றாயமைந்ததும் இவ்வைந்தெழுத்து ஒன்றே! அருமையான இறைவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் இதுவே! சிவனுடைய பல பெயர்களில் மிகச்சிறப்பு வாய்ந்தது இப்பெயரே! அதனால் திருவைந்தெழுத்தாகிய ‘நமசிவாய’ என்பது ‘அரிய சிவன் உரிய பெயர்’ எனப்படுகிறது.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவைந்தெழுத்தினைப்போற்றுவோமாக: ஏனெனில் இது நமது குமரனைக் காப்பதற்காகவே.

    கருதரி பலவுயிர்கள் பந்தனைக் கார்க்கடற்
    கரையிவர வருகலனை அன்பருட் காட்சியை
    அருமறையும் அறிவரிய அஞ்சுகப் பேற்றினை
    அரியசிவ நுரியபெயர் ஐந்தினைப் போற்றுதும்
    குரவுகமழ் குறவனிதை கொண்கனைக் கார்த்திகை
    குடமுலையின் அமுதகடல் உண்டகத் தேக்கனைத்
    தருணகும ரனையினிய தண்டலைச் சீர்ப்பொலி
    சமரபுரி தனில்நிலவு கந்தனைக் காக்கவே.

    (இவர- ஏற; தேக்கம்- நிறைவு)
    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- திருவைந்தெழுத்து- சிதம்பர அடிகளார்)

    இதுபோலும் சமயச் சின்னங்களையும் சிறப்பான தொண்டர்கள், மற்றும் தெய்வங்களையும் காப்புப்பருவத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் போற்றியுள்ளன. தொடர்ந்து சிலவற்றை வரும் அத்தியாயங்களில் வெவ்வேறு நூல்களினின்றும் கண்டு மகிழ்வோம்.

    பிள்ளைத்தமிழ் நூல்கள், பிள்ளைப்பருவத்தின் இனிமையை மட்டுமே பாடாமல், அப்பிள்ளையைச் சார்ந்த சமய ஒழுக்கங்களையும், வழக்குகளையும் போற்றி உரைப்பது இயற்றிய புலவர்களின் பக்திநிலைக்கும், புலமைக்கும் சான்றான பதிவுகளாகவும் அமைந்துள்ளன.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 34

    மீனாட்சி பாலகணேஷ்

    பதம் கண்ணிலெடுத்தணைக்க வருக!

    am
    ஒரு பிஞ்சான செல்லக்குழந்தை நம்மோடு இருந்துவிட்டால் போதும்; வாழ்வின் மகத்தான பேரின்பம் அதுவேதான். அதற்கு அலங்காரம் செய்வதும், அழகு பார்ப்பதும், விளையாடுவதும், உணவு ஊட்டுவதும், கொஞ்சுவதுமாக, நேரம் போவதே தெரியாது. நேரம் போதவும் போதாது!

    ‘மக்கள் மெய்தீண்டல் உடற்கு இன்பம்,’ ‘குழலினிது யாழினிது என்பார் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர்,’ எனவெல்லாம் மக்கட்செல்வத்தைப் பெருமைப்படுத்திப் பேசினார் வள்ளுவர். இந்தக்கருத்தை மிக அழகாக விளக்கும் பிள்ளைத்தமிழ்ப் பாடல் ஒன்று- இதில் திருமலைக்குமரனை, குழந்தை முருகனை செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா எனும் அடியார், (பக்தர், புலவர்) தாயாகமாறிப் போற்றி மகிழ்கிறார். மெய்தீண்டும் இன்பத்தை மிக நுட்பமாக அனுபவித்து, விவரித்து மகிழ்கிறார்.

    “குழந்தாய், உனக்குப் புத்தம் புதுப்பட்டாடை அணிவிப்பேன்,”- புலவர் பெருமான் தோயாத துகில் என்கிறார். அதாவது நீரில் தோய்த்து நனைத்து பழையதாக்காத- தோயாத புதுத்துகில்; தாய்க்கு அதில் ஒரு பெருமகிழ்ச்சி; புத்தாடையைத் தன் கண்போலும் போற்றும் குழந்தைக்கு அணிவிப்பதில் அவளுக்குப் பேரானந்தம் பிறக்கின்றது.

    “தோயாத் துகிலும் அரைவடமும் சுற்ற வருக வருகவே.”

    “அரையில், அதாவது இடையில் பொன்னரைஞாண் அணிவிப்பேன்.” சின்னஞ்சிறு குழந்தையல்லவா? வாயிலிருந்து எச்சில்நீர் ஒழுகுகின்றது. அதனைத் துடைக்க அன்னையின் கைகள் பரபரக்கின்றன. “கண்ணே, இங்கேவா, உன் வாயைத் துடைத்து விடுகிறேன்,” என ஆசையாக அழைக்கிறாள்.

    “சுரந்து வடியும் கடைவாய்நீர் துடைக்க வருக வருகவே.” இங்கு அருவருப்பிற்கே இடமில்லை. இந்த எச்சில்நீர் அவளுக்கு அமுதம் போன்றதல்லவா?

    முருகனைத் தாயாக ஈன்றவள் கங்கை; சிவபிரானின் முகத்தின் ஆறுபொறிகளினின்றும் தோன்றிய அறுமுகனை, அக்கினிதேவன் கொண்டுசேர்க்க, அவற்றின் உக்கிரத்தைத் தாயாகப் பொறுத்து, சரவணப் பொய்கையில் ஆறு குழவிகளைக் கொண்டு சேர்த்த முதல் அன்னை கங்கையல்லவா? அதனால்தான், “தாயாய் ஈன்ற கங்கையின் நல்ல நீரில் நீராட்டுகிறேன், வா அப்பா,” என அழைக்கிறாளாம் இந்தத்தாய்.

    “ஆயாய் ஈன்ற கங்கைநன்னீர் ஆட்ட வருக வருகவே.”

    am1
    சிறுகுழந்தைகளின் கையொரு அழகு, கண்ணொரு அழகு, முகமோர் அழகு, பாதமும் ஒரு அழகு அல்லவோ? குழந்தையை உடலோடு அணைத்துப் புல்கும்போது, அந்தப்பூப்போன்ற தாமரைப்பிஞ்சுப் பட்டுப் பாதத்தினை மட்டுமாவது கண்ணோடு எடுத்து அணைத்துக் கொள்ளவேண்டும் (கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும்) எனும் ஆசை பிறக்கும் அல்லவா? அதைத்தான் சொற்களில் வடிக்கிறார் இங்கு!

    “அருமைப் பதம்என் கண்ணிலெடுத் தணைக்க வருக வருகவே.”

     அடுத்து முலைப்பால் அருத்துவிப்பதனைக் கூறுகிறார். “தடைப்படாது பெருகும் முலைப்பாலை அருந்த வருக,” எனும்போது, அது எப்போதும் தங்குதடையின்றி மகவிற்குக் கிடைக்கும் அமுதம் என்று பொருள் கொள்ளவேண்டும்.

    “வீயாதொழுகும் திருமுலைப்பால் மிசைய வருக வருகவே.” அருமைக்குழந்தையை நினைக்கும்போதே அவளிடம் பால் பெருகி வழியுமே!

    “வீணையின் நாதம் தெவிட்டும்; நீ கூறும் மழலைமொழி கேட்கக்கேட்கத் திகட்டாது; ஆகவே அதனைத் தொடர்ந்து என்னிடம் பேசவேண்டி ஓடோடி வருவாயாக. மேலும் அந்த மழலைபேசும் வாயால் எனக்கு அழுத்தமான ஒரு முத்தத்தினைத்தர வேண்டும் (ஆணிமுத்தம்);

    “வீணை தெவிட்ட மழலைமொழி விள்ள வருக வருகவே.
    வாயால் எனக்கோர் ஆணிமுத்தம் வழங்க வருக வருகவே.”

    “இதற்காகவெல்லாம் நீ என்னிடம் வரவேண்டும் அப்பா! அருள்தருவதும், நிலையானதுமான திருமலை மீது உறையும் முருகனல்லவோ நீ! குழந்தாய்! வருவாயாக,” என அன்னைபோன்று வேண்டி நிற்கிறார்.

    தோயாத் துகிலும் அரைவடமும்
    சுற்ற வருக வருகவே
    சுரந்து வடியும் கடைவாய்நீர்
    துடைக்க வருக வருகவே
    ஆயாய் ஈன்ற கங்கைநன்னீர்
    ஆட்ட வருக வருகவே
    அருமைப் பதம்என் கண்ணிலெடுத்
    தணைக்க வருக வருகவே.
    வீயாதொழுகும் திருமுலைப்பால்
    மிசைய வருக வருகவே
    வீணை தெவிட்ட மழலைமொழி
    விள்ள வருக வருகவே.
    வாயால் எனக்கோ ராணிமுத்தம்
    வழங்க வருக வருகவே
    வரதச் சரதத் திருமலையின்
    மழலைக் குழவி வருகவே.

    (திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்- வாரானைப்பருவம்- செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா)

    am2
    தளர்நடை பயிலும் குழந்தையை இன்னும் ஓடியாடுமாறு ஊக்குவிக்க அழகான சிறுதேர் ஒன்றினைச் செய்வித்து, அலங்கரித்து, பட்டுக் கயிற்றினை அதில்கட்டி, அதனை இழுத்தோடச் செய்வார்கள் அன்னைமார். குழந்தை முருகனின் அன்னையரும் இதற்கு விலக்கல்லவே! அன்னைகொடுத்த அழகுச் சிறுதேரை உருட்டிவருகிறான் அக்குமரன். பார்க்கும் கண்கள் பரவசத்தில் களிக்க, உள்ளம் பூரிக்க, வாயிலிருந்து வாழ்த்துக்கள் பிறந்து சொரிகின்றன.

    ‘மங்கலம் நிறைந்த மடமைபொருந்திய பிடியாகிய தெய்வயானை இடப்புறமும், குறவர்மகளான கொடிபோன்ற வள்ளியம்மை மற்றொரு பக்கத்திலும் இருந்து சீர்பெற்று வாழ்க!’

    ‘மங்கல மடப்பிடி குறக்கொடி இடத்தினும்
    வலத்தினும் இருந்துவாழ்க.’

    ‘நீ ஊர்ந்துசெல்லும் மாமயிலானது வாழ்க!’ அதன் மேல் முருகன் அமர்ந்துள்ளான். அவனது நூபுரமணிந்த திருவடிகள் அழகுற இலங்க அவையும் வாழ்க!’

    ‘மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம்

    வனைந்தசே வடியும்வாழ்க.’

    ‘அற்புதமான ஒளிபொங்கிடும்வண்ணம் விளங்கும் திருவாபரணமான முப்புரிநூலினைப் புனைந்து சிறக்கின்ற உனது திருமார்பு வாழ்க!’

    ‘பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல்
    புனைந்திடுபொன் மார்பும்வாழ்க.’

    ‘எப்போதும் அன்பர்களைக் காப்பதற்காகப் போர்செய்யத் தயாராக இருக்கும் கூர்வேலும் உந்தன் ஈராறு பன்னிரண்டு திருக்கைகளும் பன்னிரண்டு திரண்ட அழகான தோள்களும் வாழ்க!’

    ‘போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு
    புயங்கள்சுந் தரமும்வாழ்க.’

    ‘கருணைபொழிகின்ற கண்கள் ஆறிரண்டு பனிரெண்டும் அழகான ஆறு திருமுகங்களின் அருளும் வாழ்க.’ இங்கு ஒன்றினை நோக்க வேண்டும். ஆறுமுகத்தழகு எனாமல் அருள் என்கின்றார். முகத்தின் அழகு பொலிவது அது பொழியும் அருளினால்தான். ஆகவேதான் அருள் வாழ்க என வாழ்த்தினார்.

    ‘தங்குகரு ணைக்கண்கள் ஆறிரண் டுந்திருச்
    சண்முகத் தருளும்வாழ்க.’

    ‘காதுகளில் தொங்கித் தாழ்ந்தாடும் குழைகள் முந்நான்கு பன்னிரண்டாம்! அவற்றுடன் பவளவாய் ஆறும் சேர, சிரத்தில் பொருந்தும் திருமகுடமும் இனிது வாழ்க,’ என்கிறார். இங்கு ‘மகுடம் வாழ்க’ எனில் அம்மகுடத்தைப் புனைந்த தலைவன் எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்!

    ‘தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன்
    நடமகுட மினிதுவாழ்க.’

    ‘நீ ஆளும் திருநாட்டில் மாதந்தோறும் மும்மாரி பொழிந்து பயிர்கள் செழித்து உயிர்கள் மகிழட்டும். உனது கொடியில் பொலியும் சேவல் வாழ்க! இவ்வாறு அனைத்தும் வாழ நீ சிறுதேரினை உருட்டுவாயாக! சிவஞானம் எனும் முத்தியைத் தருபவன் நீயே! ஆறுமுகன் சிவனின் வடிவமேயல்லவா? அதனால் சிவபிரானைப்போன்றே முத்தியையும் அளிக்க வல்லவன் என்கிறார். திருமாமலையில் உறையும் குமரனே நீ சிறுதேரினை உருட்டியருளுக!’

    ‘திங்கண்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ
    சிறுதேர் உருட்டியருளே.
    சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
    சிறுதேர் உருட்டியருளே.’

    இவ்வாறெல்லாம் வாழ்த்தி தாயின் நிலையில் நின்று திருமலை முருகனைச் சிறுதேருருட்ட வேண்டுகிறார் புலவர்.

    மங்கல மடப்பிடி குறக்கொடி இடத்தினும்
    வலத்தினும் இருந்துவாழ்க
    மாமயிலும் வாழ்கஅதன் மேலிலகு நூபுரம்
    வனைந்தசே வடியும்வாழ்க
    பொங்கொளி தயங்குதிரு ஆபரண முந்நூல்
    புனைந்திடுபொன் மார்பும்வாழ்க
    போர்வேலும் ஈராறு செங்கையும் பன்னிரு
    புயங்கள்சுந் தரமும்வாழ்க
    தங்குகரு ணைக்கண்கள் ஆறிரண் டுந்திருச்
    சண்முகத் தருளும்வாழ்க
    தாழ்குழைமுந் நான்கினொடு பவளவா யாறுடன்
    நடமகுட மினிதுவாழ்க
    திங்கண்மும் மாரிபொழி யச்சேவல் வாழ்கநீ
    சிறுதேர் உருட்டியருளே.
    சிவஞான முத்திதரு திருமா மலைக்கடவுள்
    சிறுதேர் உருட்டியருளே.

    (திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- செங்கோட்டை கவிராச பண்டாரத்தையா)

    ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் பாடிய புலவரின் கற்பனை, கண்ணோட்டத்திற்கேற்பவும், அவருடைய பக்திப்பெருக்கின் விளக்கமாகவும், அன்பின் வெளிப்பாடாகவும் அமைந்து பயில்வோருக்கு பேரானந்தத்தினை விளைவிக்கின்றது. அதனால்தானோ என்னவோ, முருகன் மேலும் பார்வதி அன்னைமீதும் பலப்பல பிள்ளைத்தமிழ்கள் (வெவ்வேறு தலங்களுக்கானவை) இயற்றப்பட்டபோதும், அவை சொற்சுவை, பொருட்சுவை, கற்பனைவளம் சிறந்து விளங்குவதனால் புதுமைகுன்றாது விளங்குகின்றன. இதுவும் இறையருள் வெளிப்பாடே எனலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 33

    மீனாட்சி பாலகணேஷ்

    நந்தின் கடமும் உடையாதோ!

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களின் பாட்டுடைத்தலைவர்களாக விளங்கும் சிறு குழந்தைகளான முருகன், திருமால் ஆகியோரிடம் சிறுபெண்கள் தாம் கட்டும் மணல் வீட்டினைக் காலால் உதைத்து அழிக்கவேண்டா என முறையிடுவர். அவ்வாறு முறையிடுங்கால் அச்சிற்றிலை எப்பாடுபட்டு என்னவெல்லாம் வைத்துக் கட்டினோம் என்று நயம்படக்கூறும் ஒருபாடல் சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் சிற்றில் பருவத்தில் காணப்படுகிறது.

    ba
    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் எனும் இவ்வருமையான நூல் பொற்களந்தை எனும் ஊரினரான அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பவரால் இயற்றப்பட்டது. இதைத்தவிர இந்த முருகன் பேரில் இவர் ஒரு கலம்பகமும் பாடியுள்ளார். இவர் பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவராக இருந்தாலும், கல்வியில் மிகச்சிறந்து விளங்கினார் என அறிகிறோம். அருமையான இப்பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்திலிருந்து நாம் காணப்போகும் இரு பாடல்களே இதற்குச் சாட்சியாகும்.

    தமது சிறுவீட்டினைக் காலால் எற்றி உதைத்து அழிக்கவரும் முருகப்பெருமானிடம் நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும் “எம் சிற்றிலைச் சிதைக்காதே,” எனும் பாடலிதுவாம்.

    தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தைக்குப் பால்கொடுத்து நீராட்டி, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே!

    சிறுமியர் ஒளிபொருந்திய குளிர்ச்சியான அழகான முத்துக்களை அரிசியாக வைத்துக்கொண்டு, அதில் இனிமையான தேனையும் வார்த்து உலையில் இட்டுப் பொய்தல் விளையாட்டு விளையாடுகிறார்கள்; அதாவது சோறு சமைப்பது போலப் பாவனை செய்து விளையாடுகிறார்கள். இது உண்மைச் சோறு இல்லையானதால் பொய்தல் விளையாட்டு எனப்படும். “இந்த உலையைக் கவிழ்த்து விடாதே முருகா!” எங்கின்றாள் மங்கையர்க்கரசி எனும் சிறுமி.

    சங்கினைச் சோறு சமைக்கும் பாத்திரமாக வைத்துக் கொண்டுள்ளனர்; நெருப்பின் நிறம் கொண்ட மாதுளை மலர்களை, அடுப்பில் தீ எரிவது போலப் போட்டுவைத்துள்ளார்கள். குளிர்ச்சி பொருந்திய பவளக்கொடிகளை தாம் கட்டியுள்ள சிறுவீட்டினுக்கு விளக்குகளாகப் பொருத்தி உள்ளனராம். “இந்த சங்குக்கடத்தை உடைத்து விடாதே! மாதுளைத்தீயை அவித்துவிடாதே! பவளவிளக்கை அணைத்து விடாதே!” எனவெல்லாம் கமலம் முருகனை வேண்டுகிறாள்!

    அதுவுமின்றி, பாவைகளுக்குத் திருமணம் நிகழ்த்துகிறோம் என்று கூறித் தாய்மார்களிடமிருந்து பலவிதமான தின்பண்டங்களையும் வாங்கிவந்திருக்கிறார்கள்; திருமண விருந்து படைக்க வேண்டுமல்லவா? “அந்த விருந்தெல்லாம் வீணாகிப் போய்விடாதோ முருகா?”எனக்கேட்கிறாள் குமுதம்!

    சிறுபெண்களின் குழந்தைத்தனமான பெரியமனித விளையாட்டில் இன்னொன்று! கேட்பவர்களுக்கு நகைப்பை விளைவிக்கும்! தாமரை மொட்டுகளை முலைகள்போல தமது இளம் மார்பில் வைத்துக் கட்டிக்கொண்டு அன்னைமார் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டுவதுபோலத் தாமும் தமது (மண்ணால் செய்த) பொம்மைகளுக்கு விளையாட்டாகப் பாலூட்டி உறங்க வைத்துள்ளார்கள். “அந்தக் குழந்தை தனது தாமரைபோன்ற கண்ணை விழித்துத் திகைத்துத் தேம்பி அழும் அல்லவோ முருகா?” என்று கேட்கிறாள் சுந்தரி.

    bal

    “ஆகவே குழந்தாய் முருகா! எங்கள் சிறிய இல்லமாகிய இச்சிற்றிலை நீ சிதைக்காதே,” என எல்லாருமாகத் தொழுது வேண்டுகிறார்கள் போல் உள்ளது.

    நமக்குமொரு இனிமையான பாடல் படிக்கக் கிடைத்ததல்லவோ?

    நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ”
    நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
    தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
    சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
    முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
    மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
    திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

    (சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்)

    *****

    பிள்ளைத்தமிழ்ப்பாடல்கள் அனைத்துமே தொன்மங்களும் கதைகளும் குறைவில்லாத இரத்தினச் சுரங்கள்கள்! தத்துவ வேதாந்த விளக்கங்களின் தொகுப்புகள்! கூறிய கதைகளையே திரும்பக் கூறிடினும் கூறும்விதத்தை வேறுபடுத்துவதனால் ஒவ்வொரு பாடலும் புதுமை மாறாமல் இலங்குகிறது.

    சிறுபெண்கள் இழைக்கும் சிற்றில்; அதனை உதைத்துச் சிதைக்க வரும் பாட்டுடைத் தலைவனான சேயூர் முருகன். முறையிடும் பெண்கள்; தொடரும் சுவையான, புதுமையான வாக்குவாதங்கள்.

    என்னவென்றுதான் பார்ப்போமே! சிறுபெண்கள் தங்கள் சிற்றிலைச் சிதைக்க முயலும் முருகனிடம் சண்டையிடுகிறார்கள் போலுள்ளதே!

    “பண்டு உன் மாமன்- அவன் பெரிய வித்தகன் அல்லவோ?- சூரியன் எரிக்கும் பகல்பொழுதினை பாண்டவர்களுக்காக இரவாக்கித் தந்திரம் செய்ய வல்லவன்- அவன் எல்லார் வீட்டிலும் விருப்பப்படி புகுந்து வெண்மையான பாலையும் தயிரையும் உறியிலிருந்து எடுத்து உண்டுவிட்டான்; அவர்கள், அதுதான் அவ்வீட்டார், அந்த ஆய்ச்சியர் அவனைப் பிடித்து இரு கைகளையும் கட்டிப்போடவில்லையோ?அந்த இடையர்குலப் பெண்கள் ‘உலகினைக் காக்கும் பரந்தாமன் இவன்’ என பயபக்தியினால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்களா என்ன? விடவில்லையே?

    “கேட்டுக்கொள் முருகா! நீ நாங்கள் பாடுபட்டுக் கட்டிய இந்தச் சிறிய வீட்டினைச் சிதைத்துவிட்டால் நாங்கள் ‘ஐயோ’ என அழுது புலம்பி உன்னுடைய அன்னைமார்களிடமும் செவிலித்தாய்மார்களிடமும் சென்று முறையிடுவோம் தெரியுமா? அப்போது உன்னிடம் அவர்கள் சீறிச் சினம் கொள்ள மாட்டார்களோ? (கட்டாயம் சினம் கொள்வார்கள்) அனைத்துப் பொருட்களும் சுட்டும் பெரும் தலைவனாகி நிற்கும் எம் அண்ணல் சிவபிரானின் செல்வச் சிறுமகன் நீ என்று பயத்தினால் உன்னைத் தண்டிக்காமல் அஞ்சி நிற்பார்களா என்ன? மாட்டவே மாட்டார்கள்!

    “ஆகவே எங்கள் சிற்றிலாகிய இந்தச் சிறிய மணல்வீட்டினை அழிக்கும் தொழிலைச் செய்யாதே முருகா! சிறு குழந்தையே! சேயூரில் உறையும் பெருமானே! சிறுபெண்களாகிய எங்கள் சிறியவீடுகளைச் சிதைத்து அழிக்காதே!” என வேண்டுகின்றனராம்.
    அருமையான சுவை நிரம்பிய பாடல்கள்.

    வெய்யோன் பகலை யிரவாக்கும் விரகிற் பெரிய நின்மாமன்
    மேனாட் பொதுவ ரகம்புகுந்து *வெண்பா லுறியி னடுக்குழிப்பக்
    கையோ ரிரண்டும் பிணித்திலரோ குடவர் மடவார் சகங்காக்குங்
    கடவு ளெனத்தான் பயந்தனரோ கட்டா தகல விட்டனரோ
    வையோ புலந்து தமியேமு மன்னை மார்க்குஞ் செவிலியர்க்கு
    மழுது மொழிந்தாற் சீறாரோ வனைத்து மொருவ னாகிநிற்குஞ்
    செய்யோன் மகனென் றஞ்சுவரோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    (சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்)

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 30

    மீனாட்சி பாலகணேஷ்

    கானின் வாழைக்கனியும் மாவின் கனியும்!

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அழகியல் பார்வையில் பல தொன்மங்களையும், புராணக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டு திகழ்ந்தாலும் பல பாடல்கள் அவற்றினை இயற்றிய புலவோரின் திறமையில் அணிநயம், சந்தநயம் கொண்டு மிளிர்வதுஅவற்றினைப் பயில்வோருக்கு மிக்க இன்பம் பயப்பதாகும்.

    அவ்விதத்தில் இன்று நாம் காணப்போவது புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலில் எழுந்தருளி இருக்கும் குமரக்கடவுள் மீது வீரபத்திரக்கவிராயர் அவர்கள் இயற்றியுள்ள குமரமலைப் பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள் ஆகும். இவை சிறுபறைப் பருவத்திற்கானவை.

    முற்றும் கற்றுணர்ந்த பெரியோர், சந்தநயம் தோன்றி விளங்கப் பாடுவதில் அருணகிரியாரை விஞ்சியவர் கிடையாதென்பர். அதற்கொப்ப இப்பாடல் ‘முத்தைத்தரு,’ என்ற திருப்புகழை நினைவு படுத்துகின்றது. இத்திருப்புகழில் தகப்பனாகிய சிவபிரானுக்கு முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளுரைத்த செய்தி கூறப்படுகிறது.

    ame1
    இப்பிள்ளைத்தமிழ்ப்பாடல், சந்தநயம் மட்டுமின்றி அருணகிரியாரின் திருப்புகழ் போன்றே அதே தொன்மத்தைப் பொதிந்து அமைந்துள்ளது மிக்க வியப்பைத் தருகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தத் தாக்கத்தினை இப்பாடல்களில் உணரலாம். முதற்கண், முதல்பாடலை அதே சந்தநயத்திலேயே பாடிப்பார்த்துக் கொள்ளலாமே!

    முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
    முதற்படு பிரணவ மா
    முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
    முகத்தருள் விழியுடை யாய்
    இச்சக மற்றுள வெச்சக முற்றினு
    மிச்சக மொடுபுகழ் வோய்
    இக்குவி லிக்குயர் மைத்துன செச்சை
    யியக்குறு மழகளி றே
    கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
    கட்கய லகலிகை யாய்க்
    கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
    கருத்தெழ வருசுதை யாங்
    கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
    கொட்டுக சிறுபறை யே
    கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
    கொட்டுக சிறுபறை யே.

    (குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)

    அருமையான சந்தநயம்! கருத்துச்செறிவு! பொருள்நயத்தையும் காணலாமா?

    சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கும் முதற்கடவுள் சிவபிரான்! அவனுக்கு, அந்த முழுமுதற்பொருளுக்கு, பிரணவ மாமந்திரத்தின் பொருளை உணர்த்தியருளிய குருநாதன் குமரப்பெருமான்! இதனைத்தான் அருணகிரிநாதரும், ‘முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து,’ எனப்பாடினார்.

    தனது ஆறுமுகங்களிலும் இலங்கும் அருள்பொழியும் விழிகளை உடையவன் அக்குமரன். இந்த உலகம் (இச்சகம்) மற்றும் இருக்கின்ற எல்லா உலகங்களிலும் (எச்சகம்) இவனைக்காணும் அனைவரும் ஆசையுடன் (இச்சகம், இச்சை) புகழ்ந்து போற்றுகின்றனர். இடுக்கண் (இக்கு) வருங்காலத்து உடன்வந்து காப்பவன் அவனே! ‘மைத்துன!’ என்பதனை விளியாகக் கொள்ளலாம்.

    செச்சை எனப்படும் சந்தனக்குழம்பினைப் பூசிய இளமையான யானைக்கன்று போன்றவன் இச்சிறுகுமரன்.

    ame2
    தனது திருவடி பட்டதனால் ஒரு கற்சிலையை (கருங்கல்லை) அகலிகையாய் உருக்கொள்ளச்செய்த ‘பதத்தவர்’ எனத் திருமாலை, இராமனைப் புலவர் போற்றுகிறார். அகலிகையை, ‘ஆமைபோலும் (கச்சபம் ஒத்த) புறங்கால்களைக் கொண்டவள், மைபோலும் கருங்குழலினள், கயல்விழியாள்,’ எனவெல்லாம் வருணிக்கிறார். அவள் செய்த தாழ்ந்த செயலுக்குப்பின்பும் இத்தகைய உயரிய வருணனைக்கு எவ்வாறு உரியவளாயினாள் எனும் வியப்பெழுகின்றது! தவறையுணர்ந்து அதன்பலனை கற்சிலையாய்க்கிடந்து அனுபவித்தவள்; இராமன் திருவடிபட்டுத் தன் சுய உருவான அகலிகையாய் மாறி அவனுடைய திருவருளுக்கும் உரிமையானவள்; ஆகவே இந்த வருணனைக்கும் அருகதை உடையவள் எனத் தெரிவிக்கிறார் போலும்!

    அவ்வாறு செய்த இராமனாகிய திருமாலின் மனம் மகிழுமாறு வள்ளிக்குறமகளை மணந்துகொண்டவன் இக்குமரன். அக்குறவள்ளியோ மழலைமொழி பேசும் குயில் போன்றவள்.

    ‘இத்தகு செயல்களைச் செய்த உத்தமனாகிய குமரனே, உனது சிறியபறையை முழக்குவாயாக! கொற்றவனே! வில்லேந்திய குமரனே! சிறுபறையை முழக்குவாயாக!’ எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிலை என்பதற்கு மலை எனவும் அகராதியில் ஒரு பொருள் உண்டு. ஆகவே, ‘கிரௌஞ்ச மலையைப்பொடி செய்த முருகனே,’ எனவும் பொருள் கொள்ளலாம். முருகனை நாம் வேலேந்திய வடிவத்தில் மட்டுமே அறிந்தவர்களாதலின் வில்லேந்திய வடிவம் சிறிது ஆச்சரியத்தினை விளைவிக்கும்!

    (திருவையாற்றில் ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில், முருகப்பெருமானின் ஒரு சிலைவடிவம் வில்லேந்திய நிலையில் காணப்படுகிறது.)

    *****

    காணப்போகும் அடுத்தபாடல் சந்தநயத்துடன் அருமையான சொல்நயமும் செறிந்தமைந்து படிப்போரைக் களிப்பெய்த வைக்கின்றது. முதல்பாடலைப் போலவே இதனையும் சிறிது பாடிப்பார்த்துவிட்டுப் பின் பொருளைக் காணலாம்.

    கானின் வாழைக் கனியொடு மாவின்
    கனியும்வி ருப்பமு றுங்
    காமரு மேனிக் கோமள செல்வக்
    கடவுளர் நாய கமே
    மானின் மானக் கயல்விழி கூரும்
    மடவியர் நட்புற மெய்
    வாடியு நேடித் தீநர கெய்தும்
    வகையற வேநினை யே
    கோனென் பாரைப் பரகதி சேர்மின்
    குறைக டவிர்ப்பி ரெனக்
    கூரிய ஞானப் பேறருள் சைவக்
    குலமொளிர் தீப கமே
    தேனின் னீபப் புயசயி லேச
    சிறுபறை கொட்டுக வே
    திருவ மிகுத்திடு குமரம லைக்கிறை
    சிறுபறை கொட்டு கவே.

    (குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)

    ‘கானகத்தில் விளையும் வாழைக்கனியொடு மாமரத்தின் கனியும் விருப்பமுறும் அழகான திருவடிவம் கொண்டு கடவுளர்கட்கெல்லாம் நாயகன் போலும் விளங்குபவனே!’ என விளிக்கிறார். புரியவில்லையே! சிறிது குழப்பம் தான் நமக்கு. புலவரின் சொல்லாடல் அத்துணை அழகான உட்பொருள்செறிந்தது!

    இங்கு ‘கானின் வாழைக்கனி’ என அவர் குறிப்பிடுவது வள்ளிநாயகியைத்தான். (கானின் வாழ் ஐ கன்னி- வள்ளி). பிரமிப்பாக இல்லை? கானகத்தில் வாழும் அழகிய குறமகளான வள்ளி எனும் கன்னி! அடுத்து மா எனும் யானையின் மகளான கன்னி- தெய்வயானை எனும் தேவகுஞ்சரி! (மா இன் கன்னி- தேவகுஞ்சரி) கன்னி என்பது பாடலுக்காகக் கனி எனப்பட்டது. ஆகவே வள்ளியும் தேவகுஞ்சரியும் விரும்பும் திருமேனி அழகன் குமரன் என இப்போது தெளிகிறோம்.

    ‘மானினுடையதைப் போன்றதும், அழகான மகரமீனைப் போன்றதும், கயலைப்போன்றதுமான விழிகளால் தமது விருப்பத்தைத் தெரிவிக்கும் பெண்களின் நட்பைக்கொண்டு, உடல்மிக வாடிடும் வண்ணம் தேடிச்சென்று தீயாகிய பாழ்நரகத்தை எய்துகின்ற செயலை ஒழிக்க வழியின்றி, உன்னிடம் வந்துற்று, உன்னையே ‘அரசே, கோவே, காக்க,’ என வேண்டுபவர்களை மேலான பரகதிக்குச் செலுத்துபவன் நீ! குறைகளைப் போக்குபவன் நீ! உயர்ந்த ஞானப்பேற்றினையும் அருளுபவன் நீ! சைவநெறி தழைக்கவந்து ஒளிரும் தீபம் போன்றவனும் நீயே!

    ‘தேன் சொரியும் கடம்பமலர்மாலைகளை அணிந்த தோள்களை உடையவனே! மலைவாழ் முருகனே! சிறுபறை கொட்டுவாயாக! செல்வவளம் கொழிக்கும் குமரமலைக்கிறைவனே சிறுபறை முழக்குவாயாக!’ என வேண்டுகிறார்.

    இப்பாடலின் கருத்தும் அருணகிரிநாதரின் பாடலில் காணும் கருத்துக்களைப்போலவே உள்ளது ஆச்சரியத்தை விளைவிக்கின்றது. ‘மங்கையரின் மையலில் மயங்கி உழலும் மானிடப்பிறவியாகிய என்னை மீட்டு உன் திருவடியில் சேர்த்துக்கொள்வாய்,’ என வேண்டும் பாங்கு அருணகிரிநாதரின் பாடல்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றது.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-29

    மீனாட்சி பாலகணேஷ்

    தென்திருப்பேரை முகில்

    கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தை உருண்டு புரண்டெழுந்து அழகாகக் குத்துவிளக்கு போல எழுந்தமர்ந்து கொள்ளும்போது அதனைக்காணும் தாயின் மகிழ்ச்சி அளவிட இயலாதது. குழந்தையிடம், ‘கை வீசம்மா கைவீசு,’ என்றும், கைகளைக்கொட்டிச் சப்தமெழுப்பிச் சப்பாணி ( சஹ+ பாணி= சப்பாணி) கொட்டவும் கற்றுக் கொடுக்க முயல்வாள் அன்னை.

    சந்தன மரங்கள் அடர்ந்து செறிந்த சோலைகளைக்கொண்ட ஊர் திருப்பேரை எனும் திருமாலின் தலமாகும். இங்கு சின்னஞ்சிறுவனான, கருமுகில்வண்ணனான ஒரு குழந்தை உள்ளான். தெய்வக்குழந்தையான திருப்பேரை நாதனவன். பெயரும் மகரக்குழைக்காதன்! அவனைச் சப்பாணி கொட்டுமாறு வேண்டும்போது அக்கரங்களால் அவன்செய்த செயல்களைக் கூறுவது தானே முறைமை? அதற்கு நம் புலவரின் கற்பனை வளம் ஊற்றாகப் பெருகுகிறது!

    தன் சிவந்த கரங்கள் இன்னும் சிவக்கச் சப்பாணி கொட்டி விளையாடுகிறான் அந்தக்குட்டன்! யாரவன்? அவன் செய்த அரும்பெரும் செயல்களைப் பெருமையுடன் அடியாரான புலவர் விளக்குவதனைப் பார்க்கலாமா?

    am
    விசுவாமித்திரர் ஆகிய பெருந்தவ முனிவர்களின் தவத்தினை நாசம் செய்து பெரும் குற்றம்புரிந்து வந்த கருமை நிறங்கொண்ட தாடகை எனும் ஒரு அரக்கியை வதைத்தான். அவளுடைய கொடிய உயிரினைக் குடிக்கும் வண்ணம் வில்லினில் கணைகளைத் தொடுத்தான்; அவளை மிக எளிதாகக் கொன்றும் விட்டான். அவனே ஸ்ரீராமன் எனும் தசரதன் குலக்கொழுந்து. ‘இராமன் கணைகளைத் தொடுத்துத் தாடகையை அழித்தான்,’ என மட்டும் கூறாது, அதனை இன்னுமே விளக்கி, அக்கொடியவளின் உயிர் எவ்வாறு போயிற்றென விளக்குவதும் இன்னொரு புலமைநயம்: அம்பினால் அடிபட்டவளின் உடலிலிருந்து கொழுங்குருதி பெருக்கெடுக்கின்றது. நரிகள் அவளைச் சுற்றிச் சூழ்ந்து தசையினைப் பிடுங்கி உண்கின்றன. இயமன் இவ்வண்ணம் அவளது உயிரைக் குடிக்குமாறு செய்தான் ‘இராமன் எனும் இந்தத் தென்திருப்பேரையூர் உறையும் சிறுவன்’ என அவன் மேலேற்றிக் கூறுவார் புலவர்.

    தாடகை வதத்தைப்பற்றிக் கம்பர் கூறுகிறார்:

    am1

    ‘மார்பில் தைத்த அம்பினால் உண்டான புண்ணிலிருந்து பெருகிய இரத்தம் மாலையின் செவ்வானப் பரப்பு தரையில் வீழ்ந்ததுபோல, பாலைவனம் முழுதும் கடலாக மாறும்படி விழுந்து பரவியது,’ என்றும், ‘தாமரைமலரில் வாழும் பிரமனுக்கு ஒப்பான மாமுனி விசுவாமித்திரனின் கட்டளையை மறுக்காதவன் இராமன்; அவன் செய்யும் முதல்போர் (கன்னிப்போர்) இது. எமன் ஒருபக்கம் இந்த அரக்கர்குலத்தின் உயிரை உண்ணவேண்டும் எனும் ஆசையால் திரிந்து கொண்டிருக்கிறான்; ஆனாலும் வாளேந்திய அரக்கர்களைக் கண்டு அவனுக்கு ஒரு தயக்கம்; அச்சம். இன்று அவனுடைய ஆசையும் கொஞ்சம் நிறைவேறியது!’ எனவும் கவிதைநயம் மிளிரக் கூறுகிறார்.

    வாச நாள்மலரோன் அன்ன மாமுனி பணி மறாத
    காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் கன்னிப்போரில்
    கூசிவாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர்குடிக்க அஞ்சி
    ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே.
    (தாடகை வதைப்படலம்)

    கம்பரின் சொல்லாற்றலின் தாக்கத்தை இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் உணர முடிகின்றது. இவன் இவ்வாறு தாடகையினை அழித்ததனால் கௌசிகன் எனும் விசுவாமித்திர முனிவனின் வேள்வி வேதமுறையினின்று வழுவாமல் நடைபெறுமாறு முடித்தும் தந்தான்.

    am2

    பின்பு மிதிலைநகரினை அடைந்து சொல்லுதற்கரிய புகழ்படைத்த சனக மாமன்னன் வசமிருந்த வில்லினை (சிவதனுசை) முறிக்கிறான் அச்சிறுவன். எவ்வாறு? சும்மா முறிக்கவில்லை; கண்டதுண்டமாக ஒடித்துவிட்டான் எம்முடைய இந்தக்கோமகன் என்கிறார் புலவர்.

    கம்பர், ‘கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்,’ என்றார். கணப்பொழுதினில் வில்லை உடைத்து விட்டானாம் இராமன். இப்புலவர் இன்னும் ஒருபடி மேல்போய், ‘பலதுண்டங்களாக உடைத்து விட்டான்,’ என்கிறார்! ‘ஆகா’ எனத் தலையசைத்து இரசிக்கிறோம்!

    இவனுடைய இச்செயல் சிவசங்கரக்கடவுளின் கண்களைக் குளிர்வித்ததாம்.

    இந்தத் தென்திருப்பேரை முகில் வண்ணக் குழந்தையை புகழ்வாய்ந்த செயல்களைச் செய்த தனது கைகளைக்கொண்டு சப்பாணி கொட்டி அருளுமாறு வேண்டுகிறார் புலவர்.

    கம்பரைப்போல இவனது கைவண்ணத்தை அழகுறக் காட்டியருளுகிறார்.

    அருமையான கற்பனை! கம்பர் வழியிலேயே சென்று தமது பிள்ளைத்தமிழ் நூலை வடிவமைத்துள்ள புலமைநயம் புதுமை!

    கக்கக் கொழுங் குருதி நரிபிடுங்கத்தசை
    கவர்ந்துயிர் குடிப்ப மறலி
    கருநிறத் தாடகையை வதை படுத்தசிலைக்
    கடை குழைத்தடிகணை தொடுந்
    தொக்கிற் பெருந்தவக் கௌசிகன் வேள்வியும்
    சுருதிநூல் முறை முடித்துச்
    சொல்லரிய மிதிலாபுரிச் சனகன்வில்
    கண்டதுண்டப் படுத்து மெங்கோன்
    செக்கச் சிவக்குங் கொழும்பவள வார்க்கதிர்ச்
    செஞ்சுடாவி மணிமுடிச்
    சிவசங்கரக் கடவுள் கண்கள்களி கூரச்
    சிறந்தருள் புரிந்து சங்கு
    சக்கரத்துணை செங்கை யொக்கச் சிவப்பவொரு
    சப்பாணி கொட்டி யருளே,
    சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில்
    சப்பாணி கொட்டி யருளே
    (ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத் தமிழ்- சப்பாணிப்பருவம்)

     

    இந்நூலின் பாட்டுடைத்தலைவனை இராமனாகக்கொண்டு அவன் சிவதனுசை முறித்து, சானகியை மணந்ததையும், தாடகை முதலான அரக்கர்களையும் அழித்த வீரச்செயல்களையும், இன்னும் பலவற்றையும் புலவர் பாடியுள்ளார். இந்நூலை இயற்றியவர் இன்னாரென அறிய இயலவில்லை. இனிய எளிய சொற்களைக்கொண்டு மிக அருமையாக இப்பிள்ளைத்தமிழ் நூல் அமைந்துள்ளது.

    அடுத்து சிற்றில் பருவத்திலிருந்து ஒரு மாறுபட்ட கற்பனைகொண்ட பாடலைக் காணலாமா?

    சிறுவன் திருப்பேரைநாதன் சிறுமிகள் இழைத்து விளையாடும் சிற்றிலைக் காலால் எற்றி உதைத்து அழிக்க முற்படுகிறான். அச்சிறுமிகள் மிகுந்த வாக்குசாதுரியத்துடன் அவனுடன் வார்த்தையாடுவது நமக்கு வியப்பினைத் தருகின்றது!

    இவர்கள் பாடுபட்டு வண்டல் மண்ணைக்கொழித்து, பதமாக நீர்சேர்த்துப் பிசைந்து, சிற்றில் இழைத்திருக்கிறார்கள். சிற்றில் இழைத்து விளையாடும்போது தாய் தந்தையாராகத் தம்மைக் கருதிக்கொண்டு பாவைகளை வைத்தும் விளையாடுவார்கள் சிறுபெண்கள். சிற்றிலை அழிக்க இச்சிறுவன் ஓடோடி வருகிறான். இவனோ அரசகுமாரன்; அவனிடம் ஒரு சிறுபெண், பெரிய பெண்மணி போல நீட்டி முழக்கிக் கூறுகிறாள்: “ஆசையாக, அன்பாக இந்தக் குழந்தையை நான் மார்போடு அணைத்துக்கொண்டு முலைப்பால் கொடுக்கிறேன். பின்பு அமுதம்போலும் புனல்நீரில் நீராட்டி, அதன் அழகான கடைக்கண்களுக்கு மையும் தீற்றியுள்ளேன். கழுத்தில் பொன்னாரத்தைத் திருத்தமாக அணிவித்து, பட்டாடையும் உடுத்தியுள்ள எனது குழந்தைக்கு புகழ்வாய்ந்த பெரியோனான உனது பெயரையே நான் இடுவேன். எப்போது? நாங்கள் பாடுபட்டுக் கட்டியுள்ள மாளிகை, மாடங்கள், அரங்கங்கள், வேதிகை கொண்ட இச்சிற்றிலை நீ அழிக்க ஓடோடி வரலாகாது காண்பாய்! எங்கள் சிற்றிலை அழிக்கமாட்டேன் எனக்கூறினால் நானும் கூறியபடி என் குழந்தைக்கு உன் பெயரை இடுவேன். நாங்கள் சின்னஞ்சிறு பேதைப்பெண்கள்; காலால் எங்கள் சிற்றிலை நீ எற்றினால் உன் மென்மையான (அடியார் தொழும்) திருவடியில் வண்டல் துகள்கள் ஒட்டிக்கொண்டு உறுத்துமே ஐயா!

    “ஆகவே அலைகள் வீசும் பொருநை நதிக்கரையிலமைந்த திருப்பேரையின் நாதனே! சிற்றில் சிதையேலே!” என வேண்டுவதாகப் பாடியுள்ளார். ஒப்பற்ற கற்பனை நயம்கொண்டு, சிறுமித்தன்மையின் பேதைமையையும் விளக்கிக்காட்டும் இனிய பாடல்.

    அன்போ டணைத்து முலைகொடுத்தின்
    அமுதூற்றறிருக்கும் புனலாட்டி
    அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
    ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
    உன்பே ரிடுவே னென் குழவிக்
    குள்ள தயவாற் றனிசமைத்த
    உயர்மா ளிகையு மாடரங்கும்
    ஒளிர்வே திகையு நீயழிக்க
    வன்பா லோடி வரவுனக்கு
    வழக்கன் றுலகிற் சிறுபேதை
    மகளி ருந்து விளையாடும்
    வண்டற் றுகள்சே வடிபடுமே
    தென்பே ரையினங் குலநாத
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
    திரையார் பொருநைத் தடந்துறைவா
    சிறியேஞ் சிற்றி்ல் சிதையேலே
    (ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத் தமிழ்- சிற்றிற்பருவம்)

    மேலும் காட்சிகளைக்கண்டு மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-28

    -மீனாட்சி பாலகணேஷ்

    வடிவுடைப்பெண்ணுக்குப் பலவிதத் தொட்டில்கள்!

    pillai1குழந்தையை உறங்கவைக்கத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகின்றாள் அன்னை; உடன் நிற்கும் தோழியரும் தாதியரும் பல இன்னிசைப்பாடல்களை இசைக்கின்றனர். மிகவும் உயர்வான தெய்வக்குழந்தை இவள். செல்வந்தர் வீட்டுக் குழந்தை என்றால் கேட்கவா வேண்டும்? அவரவர்கள் தங்கள் பங்கிற்கு ஒரு அழகான தொட்டிலைக் குழந்தை உறங்கப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்! தாதியரும் செவிலியரும் பொன்னாலான ஒருதொட்டிலில் அன்னத்தூவியின் மெத்தையிட்டு, இனிய ஓலியெழுப்பும் சிறுமணிகளையும் அதில்கட்டி குழந்தையைக் கண்வளர்த்துகின்றனர். குழந்தை உறக்கம் கொள்ளாமல் நெளிகிறாள்; புரளுகிறாள்; கண்களைக் கொட்டக்கொட்ட விழித்து நோக்குகிறாள். இவர்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுகிறது. குழ்ந்தைக்கு இந்தத் தொட்டில் விருப்பமில்லையோ என்னவோ, வேறு தொட்டில் வேண்டுமோ என்று இவர்கள் குழந்தையிடம் (சின்னஞ்சிறிய மதலை- அவளுக்கென்ன தெரியும்?) கேட்கிறார்களாம்:

    “சரியை (முறையான ஒழுக்கம்கொண்ட உயர்ந்தோர்), கிரியை (செய்வன திருந்தச்செய்யும் பெரியோர்) இவற்றினைக் கடைப்பிடிப்பவர்களின் இதயம் என்பது உனக்கு ஒரு தொட்டிலாகும்.” அவர்கள் இதயத்தில் நீக்கமற நிறைந்து வாழ்பவள் அன்னை பராசக்தி எனப்பொருள் கொள்ளவேண்டும்.

    “யோகம் பயில்வோரின் ஆறாதாரம் எனும் மலர்ப்பூந்தொட்டிலிலும் (ஆறு ஆதாரங்கள்- மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பனவாம்) கண்வளர்பவளல்லவோ நீ?”

    “பெருகும் அறிவினை  முறையாகப் பெற்றுயர்ந்தவர்கள், ‘உள்ளும் புறமும்’ வேறு வேறல்ல என மனவமைதி கொண்டு, குழப்பமடையாது தெளிவான சுத்தத்தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுவார்கள் உன்னை!” ‘பரம்பொருளை இன்னதென்று அறிவினால் முயன்று உணர்ந்து கொண்டவர்கள் அது உள்ளிலோ, வெளியிலோ எங்கும் உண்டென்று தெளிந்து, அவ்வண்ணம் வேற்றுமை பாராட்டிக் குழப்பமடையாது உள்ள தமது அறிவில் உன்னை இருத்தித் தொழுதேத்துவார்கள்,’ என்பது பொருள்.

    “இவர்கள் அனைவருக்குமே உரிமைபூண்ட மகளே! குழந்தாய்! இத்தனை உயர்வான தொட்டில்கள் பல உனக்கு உள்ளன. இருப்பினும் நாங்கள் உன்மீது கொண்ட தாயன்பால், இந்தப் பொற்தொட்டிலை மணிகளால் அலங்கரித்து உனக்காக வைத்துள்ளோம். இதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு விளையாடியபடியே கண்ணுறங்குவாய், கிளிபோன்ற மகளே! கருடன் மீது வரும் திருமாலின் சகோதரியே!” என்று ஆசைததும்பப் பாடுகின்றனர்.

    யாரிந்தக்குழந்தைப்பெண்? இவள் அரிய பெரிய pillai3பொருள்கள் பலவும் நிறைந்த திருவொற்றியூர் எனும் நகரின் அரசியானவள். அவளுக்கே இத்தாலாட்டு!

    இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் பிறப்பித்தவள்; வடிவுடையம்மை எனப்படும் திரிபுரசுந்தரி இவளே! ‘பெண்ணமுதே தாலோ தாலேலோ’ என அன்புபெருகப் பாடுகின்றனர்.

    நீலாம்பரி

    சரியை கிரியை இயற்றுனர்க டத்த மிதயத்
    தொட்டிலினும்
    தண்டா யோகத்தவராறா தார மலர்ப்பூந் தொட்டிலினும்
    விரியு மறிவை யறிந்தவர்கள் வெளியே யகமே யெனும்விகற்பம்
    விரவாச் சுத்தத் தொட்டிலினு மேவித் தினிது தாலாட்டு
    முரிய மகளே யாங்களிடு மொளிமா மணிப்பொற் றொட்டிலினு
    முவந்து விளையாட் டயர்கிளியே யுவண முயர்த்தோன் சகோதரியே
    அரிய பொருள்சே ரொற்றிநக ரரசே தாலோ தாலேலோ
    அகில முயிர்த்த வடிவுடைப் பெண்ணமுதே தாலோ தாலேலோ

    (ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்)

    *********

    இந்த அருமையான பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றிய புலவர் வித்துவான் கனகசபைத் தம்பிரான் ஆவார். இது 19-ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆதிபுரி, திருவொற்றியூர் எனவழைக்கப்படும் திருத்தலத்தில் உறைந்துவிளங்கும் திரிபுரசுந்தரி அம்மையின்மீது பாடப்பெற்றது. இவ்வம்மை வடிவுடையம்மை, வட்டப்பாறை அம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். சிவபிரானின் திருநாமங்கள் இங்கு படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், தியாகேசர், ஆனந்தத்தியாகர் எனப்பலவாம். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில்தான் சங்கிலி நாச்சியாரை மகிழமரத்தடியில் மணந்துகொண்டார்.

    *********

    pillai2அழகான சிறுமி; பராசக்தி அன்னையே இச்சிறுமியாக அவதரித்துள்ளாள்; இவளை நீராட வேண்டியபடி செவிலித்தாயும் தோழியரும் சேடியரும் ஆடையணிமணிகள், வாசனைச் சுண்ணப்பொடி, மலர்மாலைகள் என அனைத்தையும் ஏந்திநிற்கின்றனர். சிறுகுழந்தைகள் அவ்வளவு எளிதில் நீராட வரமாட்டார்கள். ஏதாவது ஒன்று அவர்கள் சிந்தையைக் கவர்ந்திழுக்க, அதிலேயே முனைப்பாக இருப்பார்கள். தாயார்தான் பார்த்துப்பார்த்து அவர்களுக்கு உணவு அளிப்பதோ, நீராட்டுவதோ, உறங்க வைப்பதையோ செய்வாள்.

    இங்கு இவர்கள் விதம்விதமாக நீராடலுக்கு உகந்த பொருட்களை வைத்துக்கொண்டு, சிறுமியான வடிவுடையம்மையை நீராட ஊக்குவிக்கிறார்கள்: என்னவெல்லாம் கொண்டுவந்துள்ளனர் எனப் பட்டியலைப் பார்ப்போமா?

    தேன்சொரியும் பலவிதமான வாசமலர்கள்; அவற்றினை அவ்வாறே எடுத்து மலரிதழ்களைத் தேனோடு உதிர்த்துச் சுண்ணமாக்கியுள்ளனர். பொன்போலும் அன்னையின் மென்மையான மேனியில் தேய்த்து நீராட்டத்தான்! பலவிதமான வாசனைப்பொருட்களைச் சேர்த்துச் செய்த களபம் (கஸ்தூரி, சந்தனம், இன்னும்பல) எனும் சுண்ணமும் ஒருத்தி கையில் காத்துக்கிடக்கிறது! கருப்பூரங்கலந்த சுண்ணம் இன்னொருத்தியிடம்; பொன்துகள்களையும் சேர்த்துச் சுண்ணமிடிப்பார்கள் எனவும் அறிகிறோம். இவ்வாறு பலவிதமான வாசனைப்பொடிகளாகிய சுண்ணக்கலவைகளும்- அவரவர்கள் அன்னைக்கென்று தங்கள் எண்ணப்படியெல்லாம் வாசனைப்பொருட்களைச் சேர்த்துக் குழப்பிக் கலவையாக்கிச் சுண்ணங்களாக்கிக் கொண்டுவந்துள்ளனர். மலர்போலும் மங்கையர் சிலர் மலர்மாலைகளை ஏந்தி நிற்கின்றனர்- வண்டுகள் அம்மலர்களிலுள்ள தேனையுண்டு பாடி ரீங்காரமிடுகின்ற மலர்மாலைகள் அவையாம்! ‘புள்ளோடி ஆடி முரலும் செழுந்தொங்கல்’– அழகான சொற்பிரயோகம்! புள் எனில் வண்டு எனவும் ஒருபொருளாகும்.

    ‘இவையனைத்தையும் இவர்கள் உனக்காக ஏந்தி நிற்கின்றனர். நீ வா அம்மா! வந்து நீராடுக!’ எனும்போது எவ்வாறு நீராட வேண்டுமெனவும் அன்புடன் விவரிக்கின்றாள் தாய்.

    “அழகான உனது கைகளால் நீரினை அளைந்து, வாரிவீசி, விழிகள் சிவக்கும் வண்ணம் நீராடுக! மார்பினில் அணிந்துள்ள குங்குமச்சாந்து நீரில் கரைந்து அழியுமாறு நீராடுவாயாக! உனது கரிய கூந்தல் நீரில் அவிழ்ந்து தளரும்வண்ணம் நீராடுக! உடல் பூரிக்கும்படி நீராடுவாய்! பலவிதமாக இழைத்துச் செய்யப்பட்ட பொன் அணிகலன்கள் தொங்கி அசைந்தாடுமாறு நீராடுக!

    “இவ்வாறெல்லாம் நீ நீராடும்போது உனது நாயகனான சிவபெருமானின் மற்றொரு வடிவம் இந்த நீர்நிலை என்றெண்ணி அதனுடன் (அவனுடன்) கலந்தாட வேண்டும் தாயே! (சிவப்பரம்பொருளானது எங்கும் எல்லாமாகவும் இருக்கும் திறம்படைத்தது என்பதனை உணர்த்தவே இவ்வாறு கூறினார் போலும்!)

    “இருபுறங்களிலும் வெண்மைநிற அன்னங்கள் திரளாக ஒலிசெய்தபடி வரும் பாலாற்றின் (பாலிநதியின்) வெள்ளத்தில் நீராடியருளுவாயாக!” பாலாறு ஒருகாலத்தில் பால்போன்ற நீர்ப்பெருக்கில் சிறந்து அன்னங்கள் ஆடிவிளையாடும் ஆறாகவும் இருந்ததென அறிந்து ஆச்சரியத்திலும், ஆற்றாமையிலும் (அதன் தற்போதைய நிலை கண்டு ஆற்றாமை) மூழ்குகிறோம்.

    “வெற்றிநெரியன்  பணிகின்ற திருஒற்றியூரில் வாழும் வடிவுடையம்மையே! நீ நீராடி அருளுவாயாக!” என த் தாதியரும் தாயும் அம்மையை வேண்டுவதாகப் புலவனார் பாடியுள்ளார்.

    புன்னாகவராளி

    கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும் களபப் பசுஞ்சுண்ணமும்
    கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும் கமழ்கின்ற பலசாந்தமும்
    புள்ளோடி யாடிமுர லுஞ்செழுந் தொங்கலும் பூவையர்க ளேந்திநிற்பப்
    பொற்பநின் கையா லெறிந்துவிழி சேப்பமென் பூண்முலைச் சாந்தமழிய
    நள்ளோதி சோரவுடல் பூரிப்ப நகைசெயிழை நான்றாட ஆடுந்தொறும்
    நாயகற் கிதுவுமொரு வடிவென்று கலவிநீ நண்ணுவது மானவிருபால்
    வெள்ளோதி மத்திர டழங்கவரு பாலிநதி வெள்ளநீ ராடியருளே
    வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை வெள்ளநீ ராடியருளே.

    (பொற்பு- அழகு; நள்- இரவு; இங்கு இரவுபோலும் கருமை எனப்பொருள்கொள்ள வேண்டும்; ஓதி- கூந்தல்; தழங்கல்- ஒலிசெய்தல்)

    (ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- நீராடற்பருவம்)

    எண்ணற்ற வண்ணச் சொற்சித்திரங்கள்; சிந்தைகளிகூரக் கண்டு மகிழலாம்.

    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக்கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

     

     

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-26

    மீனாட்சி பாலகணேஷ்

     

    சகலலோகமும் பின்வரும் தெய்வமாக்கொடி

    சிறுமகள் தளர்நடை நடக்கிறாள். தாயும் சேடியரும் கண்கள் பெற்றபேறு என்று மகிழ்வெய்துகின்றனர். “வா குழந்தாய், எம் கண்மணியே, முத்தே,” என்றெல்லாம் அவளை அழைத்து குறுநடை பயின்றுவர வேண்டுகின்றனர். அடியவர் ஒருவர், இந்த தெய்வக்குழந்தை நடந்து வரும்போது இன்னும் பல பொருட்கள் உடன்வரக் காண்கிறார். பக்திப் பரவசத்தில் பாடல் பெருகுகிறது.

    குழந்தை, பெண்குழந்தையல்லவா? தாயார் தலைவாரிப் பூச்சூடி விட்டிருக்கிறாள். கரிய மேகம் போன்ற தண்மையான குழல், அக்குழலில் அணிந்துள்ள பூமாலையில் உல்லாசமாக மொய்க்கின்ற வண்டுகளுடன், குழந்தை அசைந்தாடி நடைபயிலும்போது தானும் அசைந்தாடி வருகின்றதாம்! நறுமண எண்ணெயைத் தேய்த்து, வாசனைப்பொடியிட்டு நீராட்டி, அகில்புகை ஊட்டிய கூந்தல் குளிர்ச்சியாக இருக்குமல்லவா? அதனால்தான் ‘தண்குழல்’ என்றார் போலும்! தேன் நிறைந்த மலர்களாலான பூமாலைகள், கண்ணிகள், இவற்றில் வண்டுகள் ரீங்காரமிட்டு மூழ்கியெழுகின்றன.

    வானில் கருமேகங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இருப்பினும் அவற்றினுள் சென்று மறைந்துவிடாத ஒளிநிறைந்த கதிரவன்போலப் பிரகாசிக்கும் கற்கள் இழைத்துச்செய்த நெற்றிச்சுட்டியை குழந்தைக்கு அணிவித்துள்ளனர். அது சுடர்வீசி மின்னியபடி உடன்வருகின்றது! கருங்குழல் கற்றையினுள் மறைந்துவிடாமல் சுடர்வீசும் நெற்றிச்சுட்டி எனவும் கொள்ளலாம்.

    ab1முகமாகிய மதி அழகுற விளங்குகிறது; அதற்குள் இன்னொரு மதி என்பதுபோலக் குமுதமலர் காணப்படுகிறது. இது என்ன முரண்?முரணாவது ஒன்றாவது? புலவர் பெருமக்களின் சொன்னயம். ‘குஸுமே குஸுமோத்பத்தி’ – ‘மலரினுள் மலர்ந்த மலர்’- எனக் காளிதாசன் பாடவில்லையா? முகமாகிய தாமரை மலரில் கண்களாகிய குவளைமலர்கள் பூத்துள்ளன,’ என்று உவமித்தான்; அதுபோல, இங்கும் அம்பிகையின் முகமாகிய மதியினைக் கண்டு மகிழ்ச்சியால் குமுதம் – அல்லிமலர் ஆகிய சிறுமுறுவல் அரும்பி உடன்வருகின்றதாம். ‘ஆகா, அருமை,’ எனத் தலையாட்டத் தோன்றுகிறதல்லவா?

    இன்னும் அந்த ஆகாயத்து முழுமதி, அம்பிகை அணிந்துள்ள முத்துப்புல்லாக்கினால் (பெண்கள் நாசியிலணியும் அணி) அவள் திருமுகத்தில் திகழும் வெண்முறுவலின் ஒளியைக் கவர்ந்து செல்லும் பொருட்டு, ஓரிடத்தில் நிற்காமல், அலைந்தபடி அவள்பின்னே வருகின்றதாம்.

    மென்மையான மல்லிகை, முல்லை மலர்மாலைகளை குழந்தைக்கு அணிவித்திருக்கிறாள் தாய். பசிய, ஒளிமிகுந்த தோள்கள் அவளுடையவை; ஆயினும் சிறுகுழந்தையல்லவா? சிறிய தோள்களல்லவா? தோள்வளை என்னும் அணிகலன் வேறு அணிவிக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் அம்மையுடன் வருகின்றன.
    அடுத்து வரும் வரிகளும் அவற்றின் பொருளும் எல்லையற்ற அழகு வாய்ந்தவை. அன்னையே அத்தனை அண்டகோடிகளையும் படைத்து அருளுபவள். அவளை ‘உலகனைத்தையும் கருப்பெறாதீன்ற கன்னி,’ என்பர். குழந்தையின் சிறுவயிறு அதன் தளர்நடையினால் குலுங்குவது அத்துணை அண்டங்களும் அவள் திருவயிற்றில் அடங்கியதால் குலுங்கிவருவது போலுள்ளதாம். இடையிலணிந்த மேகலையும் மகிழ்ச்சியால் ஒலிக்கிறது.

    இவ்வாறெல்லாம் அம்பிகை குழந்தையாய் நடந்து சென்றால் அகில உலகங்கள் சும்மா இருக்கத்தகுமா? அவையும் அவள்பின் தொடர்ந்து செல்கின்றனவாம். ‘பராசக்தியின் ஆணைப்படி இவ்வுலகம் நடைபெறும், பெறவேண்டும்,’ அல்லவா? அதுவே இதன் கருத்து.

    இங்ஙனம் அனைத்தும் உடன் வருமாறு பெருமை நிறைந்த திருச்சுழியல் எனும் ஊரில் வாழும் கருணைமிகுந்தவளும், மைதீட்டப்பெற்ற விழிகளை உடையவளும் ஆகிய மயில் போல்பவளே! திருமேனியை உடைய நாயகனான சிவபிரான் உனக்குத் தன் திருமேனியின் பாதியைத் தந்தானல்லவோ? அந்தத் தெய்வக்கொடியே வருக,’ என அடியவர்பங்கில் வேண்டிநிற்கிறார் புலவர்.

    கார்கொண்ட தண்குழற் களிவண் டினங்குழற்
    கண்ணியோ டசைந்துவர வான்
    கருமுகிற் குள்ளெழுந் தொளியாத மின்னிறக்
    கதிர்சுட்டி மின்னிவரநன்
    னீர்கொண்ட முகமதிக் குண்மதி யெனக்குமுத
    நிகழ்நகை யரும்பிவரவெண்
    ணின்றுமொரு தண்டரள மூரலொளி யைக்கவர
    நில்லா தலைந்துவரமென்
    தார்கொண்ட பைஞ்சுடர்த் தோள்வளைக் கடைவரத்
    தருமண்ட கோடியுதரா
    தன்னிற் குலுங்கிவர மேகலை குலாய்வர
    சகலலோ கமும்பின்வரச்
    சீர்கொண்ட சுழியற் பெருங்கருணை மைவிழிச்
    செல்வமா மயில்வருகவே
    திருமேனி நாயகற் திருமேனி தந்தமெய்த்
    தெய்வமாக் கொடிவருகவே.

    (திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்)

    *****

    ab2
    திருச்சுழியல் துணைமாலை அம்மை பிள்ளைத்தமிழ் பழமையானது. இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை; கிடைக்கவில்லை. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம் ஆகிய முதல் ஐந்து பருவங்களுக்குரிய பாடல்களும் வருகைப்பருவத்தில் முதல் ஆறு பாடல்களுமே கிடைத்துள்ளனவாம். மேற்கண்ட பாடல் அவற்றுள் ஒன்று.
    அவ்வாறெனில் முழுநூல் எவ்வாறு கிடைத்தது எனும் வினா எழலாம். அறுபதுகளில், இந்த முடிக்கப்பெறாத நூலை ஏனைய பருவத்துப் பாடல்களையும் இயற்றி முடித்துத்தருமாறு கோவை கவியரசு கு. நடேச கவுண்டர் அவர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. டி. எச். விவேகானந்தம் கேட்டுக்கொண்டாராம். கவியரசு அவர்களால் முழுமை செய்யப்பட்டு இந்நூல் முதன்முறையாக 1964-ல் பதிப்பிக்கப்பட்டது. சொற்சுவையும், பொருட்சுவையும், பக்தி, தமிழ்ச்சுவையும் சிறிதும் குன்றாது கவியரசு பாடிய பாடல்கள் இவை. அவற்றிலிருந்து வருகைப்பருவத்துக்குண்டான பாடல் ஒன்றினையே காண்போமே!

    *****

    இங்கு குழந்தையை வருமாறு வேண்டுவது தாயின் கூற்றாகக் காணப்படவில்லை; அடியவர் கூற்றாக அமைந்துள்ளது. அழகான தெய்வக்குழந்தையைப் பாட, தாய், செவிலி, தோழி, தந்தை மட்டுமல்ல; அடியவர்களும் அனைவருமே விரும்புவார்களல்லவா? இப்பாடலும் அந்தக்குறிப்பிலேயே அமைந்துள்ளது!

    ‘உனக்கு ஒன்றுமே அரியதல்ல; பெரும் செயலல்ல; அனைத்தையும் விளையாட்டாகச் செய்து விடுபவளல்லவோ நீ தாயே!’ என்கிறார் புலவர் பெருமகனார். இது பராசக்தியாம் அம்பிகையின் அருள்பெற்றவர்கள் யாண்டும் கூறும் திருவாக்காகும். ‘அனேககோடி ப்ரஹ்மாண்ட ஜனனி,’ ‘லீலாக்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா,’ என ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அவள் புகழ்பேசும். அதாவது ‘அத்தனை உலகங்களையும் அநாயாசமாக / விளையாட்டாகப் படைத்து விட்டவள்,’ என்பது பொருள்.

    இன்னுமிவள் என்னவெல்லாம் செய்தாள்?

    “ஊமையான ஒரு அடியவர் வடமொழியான சமஸ்கிருதத்தில் ஐந்நூறு கவிதைகளை உன்மீது இயற்றும்வண்ணம் அருள்புரிந்தாய்.” (இவரே மூககவி; இவர் இயற்றியது மூக பஞ்சசதி எனப்படும் அற்புதமான ஐந்நூறு ஸ்லோகங்கள் கொண்ட நூல்).

    ab4
    “பக்தி உணர்வு கொப்பளிக்கும் வகையில் ஆதிசங்கரர் எனும் மகான் பலநூல்களை (உன்மீதும் மற்ற தெய்வங்களின்மீதும்) புனைந்து இயற்றுமாறு அவருடைய மணிநாவில் நீயே கலைவாணியாக அமர்ந்தாய்.” (சௌந்தர்யலஹரி, கணேச, பவானி, சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரங்கள், இன்னும் பல)

    “மிகுந்த புகழ்வாய்ந்த கவிஞனான காளிதாசன் இனிமைநிறைந்த கவிதைகளை மழையெனப் பொழிந்து பல காவியங்களைப் படைக்குமாறு அருளினவளும் நீயே தாயே!”

    “பிரமாபுரம் எனும் திருவூரில் ஒரு சிறுவனுக்கு அமுதினை ஊட்டி பெரும்நெறிகள் வாய்ந்த தமிழ்நூல்களை இயற்ற வைத்தாய்!” (திருஞான சம்பந்தருக்கு, உமையன்னை முலைப்பாலை அருந்துவித்து, அவரைச் சிறுவயதிலேயே பெரிய புகழ்வாய்ந்த தமிழ்ப்பாடல்களாம் தேவாரத்தினைப் பாடியருள அருள்புரிந்தாள். அவரும் ‘தோடுடைய செவியன்’ முதலாக ஆயிரக்கணக்கான தேவாரப்பதிகங்களைப் பாடியருளினார்).

    ab3
    “இவையெல்லாம் உன் கருணைக்கு மிகச்சில உதாரணங்களே! உன் மனம் உருகி, இன்னும் எத்தனையெத்தனையோ அடியார்களுக்கு உனது அருளாகிய பெரும்செல்வம் எளிதில் கிடைத்தருளுமாறு செய்து உதவினாய்! அத்தகைய பெரும் அடியார்களின் மரபில் வழிவழியாக வந்துள்ள நான் மிக எளியவன் தாயே! நானும்கூட உய்யும்வண்ணம் ஒருமுறை எந்தன்முன், என் கண்கள்முன்பு வந்தருளி காட்சி கொடுப்பாய்! எத்தனையோவிதமாக மற்ற அடியார்களுக்கு அருள்புரிந்த உனக்கு இதென்ன பெரிய கடினமான செயலோ? அல்லவே! வந்தருள் புரிவாய்! திருச்சுழியலில் கோயில் கொண்டுள்ள மாணிக்கமாலையே வந்தருள்வாய்!” என வேண்டி நிற்கிறார் புலவர்பிரான்.

    அன்னை வாராதிருப்பாளா என்ன?

    ஒருமூக னரியவட மொழியிலைந் நூறுகவி
    உனையோத அருள்புரிந்தாய்
    உணர்வின்மிகு சங்கரா சாரியன் பலநூல்
    உரைக்கமணி நாவமர்ந்தாய்
    பெருமைமிகு காளிதா சன்மதுர கவிமாரி
    பெய்யுமாற ருள்சுரந்தாய்
    பிரமா புரத்துவரு மொருசிறுவன் அமுதுண்டு
    பெருநெறித்தமிழ் செய்வித்தாய்
    உருகமனம் இன்னுமெத் தனையடிய ருக்கெளிதில்
    உற்றுனருள் வைத்துதவினாய்
    உனதுவழி வழியடியர் மரபில்வரு மெளியேமு
    முய்யவொருகால் விழிமுனர்
    வருகவருள் புரிகஇதென் அரிதோ மலைச்செல்வி
    வந்தருள்க வந்தருள்கவே
    வளமருவு சுழியலமர் மாணிக்க மாலையே
    வந்தருள்க வந்தருள்கவே.

    (திருச்சுழியல் துணைமாலையம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- கவியரசு நடேச கவுண்டர்)

    ஒருவரால் பாதி இயற்றப்பட்ட நூலை அதே கருத்துக்களைப் பிரதிபலித்து, அதே மனோபாவங்களை உள்ளேற்றி மீதிப்பாடல்களையும் இயற்றி முழுமைசெய்ய மிகுந்த புலமை வேண்டும். மேலான தெய்வ அருள் வேண்டும். கவியரசு அவர்களின் புலமை இதில் அழகுற நயம்பட வெளியாகின்றது. இதனை நமது நல்வினைப்பயன் என்றே கொள்ளவேண்டும்.

    இன்னும் காண்போம்; கண்டு மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    _

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-24

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆராரெனத் தாலாட்டுகின்ற அரசே!

    வாழ்வின் மிகப்பெரிய அதிசயம் குழந்தைகள்தாம். ஒரு சிறுகுழந்தை நம்முடன் இருந்துவிட்டால் போதும், நேரம்போவதே தெரிவதில்லை. அதன் குறும்புகளும், மழலையும், விளையாட்டுகளும் சொல்லொணா இன்பத்தை வாரிவாரி வழங்க, அதனையெல்லாம் நாமும் மாந்திமாந்திக் களித்திருப்போம். எப்படி ஒவ்வொரு சிறுகுழந்தையும் ஒவ்வொருவிதமான அழகில் திகழ்கின்றதோ, அதே போன்று ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் புதுப்புதுக் கருத்துக்களில், நயத்தில், சொல்லாடலில் ஒளிர்கின்றது எனலாம். கீழே நாம் காணப்போகும் முருகப்பெருமான் மீதான பழனிப்பிள்ளைத்தமிழும் இவற்றுள் ஒன்றாகும்.

    *****

    amu

    நடைபழகக் கற்றுக் கொண்டுவிட்ட முருகன் எனும் சிறுகுழந்தையை, “வா ஐயா, வருக வருகவே!” எனத் தாயரும் செவிலியரும் அழைக்கும் அழகான காட்சி. பக்தியிலும் அன்பிலும் தோய்ந்து வெளிப்படும் ஆசைநிறைந்த சொற்கள்:

    “முருகையா, வளங்களும் நலங்களும் நிறைந்த இந்தப்பூவுலகில் தேவர்கள், அசுரர்கள் மற்ற எல்லோரும் தினந்தோறும் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கும் உந்தன் கொலுவைக் காணச் செல்லாதவர்கள் யார் உளர்? செல்லாதார் ஆர்?(எவரும் இல்லை எனப் பொருள் கொள்ள வேண்டும்)

    “காணிக்கையாக உந்தனுக்கு அரிய பொருட்களைத் தராதவர்கள் எவர் உளர்? தாராதார் ஆர்? (இல்லை)

    “உனது பாதங்களை வணங்கித் தொழவேண்டி அவற்றினைத் தழுவிக் கிடக்காதவர்கள் யார் தான் இல்லை? தழுவாதார் ஆர்?

    “உன்னைக்காண எப்போது சமயம் கிட்டுமோவென மனதில் எண்ணிக்கொண்டு வராதவர்கள் தான் யார்? வாராதார் ஆர்? ( யாருமில்லை; எல்லோரும் வந்துள்ளனர் எனப்பொருள்)

    “அடியார்களை என்றும் காத்தருளும் உனது தகைமையை வாழ்த்திப் புகழ்ந்து பரவித் துதிக்குமாறு தமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரும் உண்டோ? வசியாதார் ஆர்?

    “உனக்குண்டான பூசை முதலானவற்றை (வரிசைப்படி), முறைப்படி நடத்திவைக்க அனைவரும் காத்துக்கொண்டுள்ளனரே! வரிசைப்படியே நடத்தாதார் ஆர் உளர்?”

    இவ்வாறெல்லாம் ‘ஆரார்’- ஆர் ஆர்? யார் யார்? (எவர் எவர் எனப்பொருள் கொள்ள வேண்டும்) எனச் செவிலியர் கேட்டு, ‘ஆராரோ ஆரிரரோ’ எனப் பாடித் தொட்டிலில் இட்டு உன்னைத் தாலாட்டுகின்றனர். அவ்வாறு தாலாட்டப்படும் அரசே வருவாயாக! பழனிமலை எனும் சிவகிரியில் வாழும் ஐயனே வருக வருகவே!

    ‘ஆராரோ ஆரிராரோ’, என்பது அன்னையர் குழந்தைகளுக்கு வழக்கமாக இசைக்கும் தாலாட்டாகும். அதன் முக்கியச் சொல்லான ‘ஆரார்’ என்பதனையே பலவிதமான வினாக்களில் ‘யார் யார்?’ எனத்தொகுத்திசைத்திருப்பது மிக்க அருமையாக உள்ளது. பாடிக்கேட்போர் செவிக்கு இன்பமாகவும் உள்ளது.

    சீரார் நலஞ்சேர் பூவுலகிற் றேவா சுரரின் மற்றையரிற்
    றினமு முனது கொலுக்காணச் செல்லா தாரார் திறைவளங்கள்
    தாரா தாரா ருனது பதந் தனையே வணங்கித் தொழவேண்டித்
    தழுவா தாரா ரெவ்வேளை சமயங் கிடைக்கு மெனநினைந்து
    வாரா தாரா ருனதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம்
    வசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார்
    ஆரா ரெனத்தா லாட்டுகின்ற வரசே வருக வருகவே
    அருள்சேர் பழனிச் சிவகிரிவா ழையா வருக வருகவே.

    (பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

    திரு ஆவினன்குடி, சிவகிரி எனப்போற்றப்படும் பழனிமலையிலுறை முருகப்பெருமான் மீது சின்னப்ப நாயக்கர் என்பவரால் இயற்றப்பட்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.

    பிள்ளைத்தமிழ் நூல்களில் பாடப்படும் பருவங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இரண்டு அல்லது மூன்று பருவத்து நிகழ்வுகள் கலந்துவரும். எடுத்துக்காட்டாக, இப்பாடலையே எடுத்துக் கொள்ளலாம். வருகைப்பருவத்துப் பாடல்- இதில், இந்த வருகைப்பருவப் பாடலில் அன்னையர் தாலாட்டு இசைப்பது அழகுற, நயமுற, சந்தத்துடன் புனையப்பட்டுள்ளது பயிலுவோருக்கு இனிமை பயக்கின்றது.

    *****

    சின்னஞ்சிறு குழந்தை முருகன்; செவிலியரும் தாயாரும் கைநிறைய, தட்டு நிறைய அணிமணிகளை ஏந்திக்கொண்டு, குழந்தையை அலங்கரித்து அழகுபார்க்கக் காத்து நிற்கின்றனர். ‘ஐயனே வா,’ எனக் கைகளை நீட்டி அழைக்கின்றனர்.

    “பொன் போன்றவனே வா, உனக்குப் பொன்னாலான அரைஞாணினைப்பூட்டுகிறேன், வா,” என்கிறாள் செவிலித்தாய்.

    “சிறிய அழகான பொற்சதங்கையை உன் கால்களில் அணிவிக்க வேண்டாமோ?” என்கிறாள் அன்னை பார்வதி!

    “மணிகளாலானதும், ஓம் எனும் வடிவிலமைந்ததுமான பதக்கத்தினை பூட்டிவிடுகிறேன், வா ஐயா,” என்பாள் இன்னொருத்தி.

    குழந்தை, அழைப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சிகொண்டு தவழ்ந்தோடி அவர்களிடம் செல்கின்றதாம். அந்தப் பூவனைய மகவினை வாரியணைத்து உச்சிமுகர்ந்து, அவனை முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சி முத்தமிடுகிறார்கள். “அம்மா, அத்தா,” என மழலைச்சொல் பேச்சினைச் செவிமடுத்து உள்ளம் பூரிக்கின்றனராம்.

    எதற்குமே ஒப்பாகாத (தன்னேரில்லா) அவனுடைய அழகான நெற்றியில் திருநீற்றினைப்பூசி, அழகான திலகத்தினையும் இடுகின்றனர். இன்னொருத்தி அவன் விழிகளுக்கு மைதீட்டுகிறாள்.

    “சுவர்க்கத்தில் வாழ்பவனே! மேலாகத்தானே! (சுவர்க்கத்தை அளிப்பவனே எனவும் பொருள் கொள்ளலாம்)! தேவர்கள் தொழுதேத்தும் தேவசேனாபதியே வருவாய்! பெருமை பொருந்திய திருமாலின் மருமகனே வருவாயாக!” என்றெல்லாம் முருகனைக் கொஞ்சி அழைக்கின்றனர்.

    தெய்வத்தைக் குழந்தையாக்கிக் கொஞ்சி அழைத்து அலங்காரமும் செய்து கண்டு களிக்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நாம் பாடலிலாவது அந்த உணர்வினைப் பெற்று மகிழலாமல்லவா?

    பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக தவழ்ந்தோடி
    முன்னே வருக செவிலியர்கண் முகத்தோ டணைத்துச் சீராட்டி
    முத்த மிடற்கு வருகவெதிர் மொழிகண் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினின்மை
    சாத்த வருக மேலாகத் தானே வருக தேவர்தொழு
    மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே.

    (பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

    முந்தைய பாடலைப்போலவே இதிலும் வருகைப்பருவத்தில், முத்தமிடும் நிகழ்வும் போற்றியுரைக்கப்படுகின்றது. ‘தவழ்ந்தோடி வருக,’ எனுங்கால், செங்கீரையாடும் பருவமும் சுட்டப்படுகின்றதல்லவா? மிகவும் இனிமையான பாடல். சீர்காழி திரு. கோவிந்தராஜன் அவர்கள் பக்தி பெருகும் குரலில் மிக இனிமையாகப் பாடியுள்ளார்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-23

    மீனாட்சி பாலகணேஷ்

    உண்ணாமுலைக்கு எந்தமலை ஒப்பாகும்?

    4b817202-4ed1-4e21-93d7-91b9137e56f7

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்களின் அழகே ஒவ்வொரு பருவத்துப் பாடல்களிலும் புலவர்களால் புனைந்து கூறப்படும் ரசமான சிறுசிறு நிகழ்ச்சிகளும் நயம்மிகுந்த அணிகளும்தான். சொற்பின்வரு நிலையணியைக் கையாண்டு சுவைபடக் கவிபுனைவதில் உண்ணாமலையம்மை பிள்ளைத்தமிழினைப் படைத்த சோணாசல பாரதியார் முதன்மையிடம் வகிக்கிறார் எனலாம். ஒவ்வொரு பருவத்திலும் மலை, மான், புலி, பாணி, முத்து, போன்ற சொற்களை அழகுறப் பொருத்தமாகத் திரும்பத்திரும்பக் கையாண்டு புலவனார் படைத்துள்ள பாடல்கள் பயில்வோர் உள்ளங்களை மிகுந்த உவகையில் ஆழ்த்துகின்றன. இக்கட்டுரையில் அத்தகைய அழகிய இரு பாடல்களைக் காணலாமே!
    *****
    சிறுகுழந்தை செங்கீரையாடியபடி வருகிறாள். பார்ப்பவர்கள் உள்ளம் பரவசத்திலாழ்கிறது. ஒருகாலை மடக்கியும், மறுகாலை நீட்டியும் நகரும்போது, காலிலணிந்த சிறுசதங்கை ஒலியெழுப்புகிறது. கழுத்திலணிந்த முத்துமாலைகளும் மற்றும் இடையிலணிந்த மேகலையும் தழைந்தாடுகின்றன. தலைமயிரை அன்னை உச்சிக்குடுமியாக முடிந்து அதிலும் அணிகலன்களை அணிவித்திருக்கிறாள். இவையனைத்துடனும் இப்பெண்மகவு தவழ்ந்து செங்கீரையாடி வருவதைக் காண்பதே கண்கொள்ளாக்காட்சி!

    காணும் செவிலித்தாய்க்கு இக்குழந்தை பராசக்தி அன்னையெனவே கண்ணில் தெரிகிறாள். பெருமை பெற்றுத்திகழும் அருணைநகர் எனும் ஊரில் பொருந்தி, நிலைபெற்று மகிழ்ச்சியாக வாழும் இந்தக்கன்னியே உண்ணாமுலை அம்மையெனக் கண்டுகொண்ட அச்செவிலித்தாய் தெய்வ அருள் பெற்றவள் எனலாம். தாதியர் புடைசூழ நின்று தனது செல்வமகளின் பெருமைகளைப் பட்டியலிடுகிறாள்.
    “மஞ்சரி! கேள்! விந்தியமலை, முனிவரான அகத்தியர் கையால் பாதாளத்தில் வீழ்ந்த மலையாகும்;

    “பொதிகைமலை, முனிவரான அகத்தியரால் அடியால் மிதிக்கப்பட்டமலை- (சிவ-பார்வதி திருமணத்தின்போது அனைவரும் இமயமலையில் கூடிவிட்டதால், இமயமலை தாழத்துவங்கவே, சிவனார் அகத்தியக் குறுமுனியிடம் பொதிகைமலைக்குச் சென்று காலால் அழுத்தி அதனை நேர் செய்ய அருளினார். ஆகவே அது அகத்தியரால் மிதிகொள்மலை ஆயிற்று);

    “வாருணி, உனக்குத் தெரியுமா? வெள்ளிமலை எனும் இமயமலையில் அமர்ந்தவனும், பிரமனின் ஒரு தலையைக் கிள்ளியவனுமான சிவபிரான் உறையும் மலை இன்னொருமலை;

    “அரக்கனான இராவணன் வெடுக்கென்று தனது இருபது கரங்களாலும் எடுத்த (தூக்கிய) மலையும் மற்றொருமலை;

    “கமலம்! திருமால் முன்பொருநாள் அழகிய அலைகடலைக் கடைவதற்காக எடுத்த மந்தரமலை என்னும் பருத்ததொருமலை; மத்தாகிய மலை என்பதை நீ அறிந்தாயோ?
    “உக்கிரகுமார பாண்டியனால் (பொன்முடி வழுதி) செண்டால் அடிக்கப்பட்ட மலையும் உண்டு கண்டாயோ?

    “காற்றினால் தாக்கப்பட்டு இடியுண்டு மூன்று சிகரங்களை இழந்தமலை,
    “இவையனைத்து மலைகளில் எந்தமலை நமது அம்மையின் உண்ணாமுலைக்கு நிகராகும்? ஒப்பாகும்? யாரால் இதற்கு விடைபகர இயலும்?” எனக் கேட்கின்றாள் செவிலித்தாய்.

    மதிநுட்பம் நிறைந்தவளான மஞ்சரி கூறுகிறாள்: “எங்கள் இறைவனார் உறையும் அண்ணாமலையே அதற்கு ஒப்பாகும்; உண்ணாமுலைக்கு நிகராகும்,” என்று. செவிலித்தாயின் முகத்தில் முறுவல் பூக்கின்றது; மற்ற பெண்கள் கரங்களைக் கொட்டி மகிழ்கின்றனர்.

    அவள் மட்டுமா அதனைக் கூறினாள்? இல்லையில்லை. “வெண்கமல மலரான வெள்ளைத்தாமரையில் உறையும் வாணியும், சிவந்த தாமரை மலரில் உறையும் திருமகளும், தேவலோகத்தின் அரசியான இந்திராணியும், மன்மதனின் துணைவியான இரதிதேவியும் கூட இவ்வாறேகூறி தமது உள்ளங்கள் மாறுபடாது பணிகின்ற மலைமகள் இவள்; உமையாகிய அமலை- தூயவள்,” என்கின்றனர் அனைவரும் ஒருமித்த குரலில்.

    “அத்தகைய அன்னையே! செங்கீரை ஆடியருளுக: அருணைநகரில் வாழ்பவளே! செங்கீரையாடியருளூக!” என அனைவரும் வேண்டி நிற்கின்றனர்.
    அன்னையின் உண்ணாமுலைக்கு ஒப்பிடப்பட்டுத் தோற்றுப்போனாலும், மலைக்குக் கிடைத்த பெருமை சொல்ல முடியுமா? ஒப்பற்ற ஒருத்தியுடன் ஒப்பிடப்பட்டு விட்டதல்லவா?

    விந்தமலை பாதலம் விழுந்தமலை பொதியமலை
    மிதிகொண் மலை முனிகையடியான்
    வெள்ளிமலை யமர்த லைகிள்ளிமலை நிருதன்
    வெடுக்கென் றெடுத்தமலைமான்
    முந்தமலை கடையைநிமிர் மந்தர மெனும்பெரிய
    மொத்துமலை மத்துமலைபொன்
    முடிவழுதி யடியுண்ட மலைகாலி னிடியுண்டு
    முடிமூன்று போனமலைபின்
    எந்தமலை நின்றிரு வுணாமுலைக் கொப்பாகு
    இறைவரண் ணாமலையதே
    என்றென்று துதிசெய்து வெண்கமலை செங்கமலை
    இந்திரா ணியுமிரதியும்
    சித்தமலை யாதுபணி யுமயமலை யுமையமலை
    செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
    செங்கீரை யாடியருளே

    (உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- சோணாசல பாரதியார்)
    *****

    இன்னொரு சுவையான உரையாடல்; அன்னைக்கும் அத்தனுக்குமிடையே நிகழ்வது; நாமும் கேட்போமே!

    “உமையே! உன்னை உலகம் முழுமையும் பெற்ற கருணை நிறைந்த தாய் என்று வேதங்கள் புகழ்ந்து கொண்டாடுகின்றன; ஆனால் உனக்கோ உண்ணாமுலை என்று பெயர்! நீ பால் தராவிட்டால் உலகத்திலுள்ள உனது குழந்தைகள் எவ்வாறு பயனடைவார்கள்?” என எல்லாம் அறிந்த இறைவனான அண்ணாமலைப்பிரான் அவளிடம் மென்மையாகக் கேட்கிறான்.

    உண்ணாமுலையம்மை இதனைக்கேட்டுச் சிறுமுறுவல் கொள்கிறாள். கேள்விக்கு மறுமொழியாகத் தானும் ஒரு கேள்வியை முன்வைக்கிறாள்!

    “ஐயனே! அடிகள், எல்லா உயிர்களுக்கும் தந்தை அன்றோ? தங்கள் வீடான இது அண்ணாமலை; அதாவது அணுக இயலாத மலையல்லவோ? அப்படியானால் உயிர்கள் எவ்வாறு உம்மால் பயனடைய முடியும்? நினைத்துப் பார்த்தீர்களா?” எனக்கேட்கிறாள்.

    “எம்மை நினைத்தாலே போதும்! அணுகிவரக்கூட வேண்டாம். கலகவினை நீக்கி உயர்கதியை அடையச் செய்வோம்,” என்கிறான் அண்ணாமலையான்.

    “அதுபோன்றே உள்ளன்போடு என்னையும் நினைத்திட்டால் போதும்! மிகுந்த ஞானத்தை அளிக்கும் அமுதினைக் கொடுத்து உயிர்களை நானும் காப்பேன்,” என விடையிறுக்கிறாள் அன்னை.

    080ade59-557d-4573-a977-05f675ba96bf
    “இவ்வாறு எந்தையாகிய சிவபிரான் களிப்பெய்துமாறு கூறிடும் அன்னையே! வாள்போன்ற நெற்றியும், மைதீட்டிய விழிகளும்கொண்டு, வெண்மையான முறுவல் பூப்பவளே! கிள்ளை மொழியாளே! நீ செங்கீரையாடியருளுக,” எனத் தாதியர் வேண்டுவதாகப் புலவர் பாடுகின்றார்.

    உலகமுழு தும்பெற்ற கருணைமா தாவென்
    றுவந்துமறை முரசறையநீ
    யுண்ணா முலைப்பெயர் புனைந்தனை யுயிர்ச்சிறா
    ருய்யும்வண மெவ்வணமெனா
    விலகவிள முரலொடு மண்ணா மலைப்பிரா
    னின்பவுரை யாடவடிக
    ளெவ்வுயிர்க் கும்பிதா வன்றுகொ னும்பெயரின்
    யாதுபய னென்னநினையிற்
    கலகவினை நீக்கியுயர் கதியருளு வோமெனக்
    காதலுட னெனையுநினையிற்
    கனஞான வமுதீந்து காப்பலென வெந்தையுங்
    களிகூர விளையாடுநற்
    றிலகவா ணுதன்மைக்கண் வெண்ணகைப் பைங்கிள்ளை
    செங்கீரை யாடியருளே
    திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
    செங்கீரை யாடியருளே.

    (உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- சோணாசல பாரதியார்)
    இதுபோன்ற இன்னும் எத்தனையெத்தனை கவின்மிகு பாடல்கள்? சுவைக்கச் சுவைக்கக் குறையாத தேனூறும் தமிழ்ச் செல்வங்கள்- இவற்றைத் தம்முள் இருத்திக்கொண்டு மிளிரும் இலக்கியச் சித்திரங்கள். தொடர்ந்து வரைவோம்; காண்போம்; களிப்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *************

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-22

    மீனாட்சி பாலகணேஷ்

    சிறுதேர் உருட்டும் செந்தில்வாழ் கந்தவேள்

    bb481341-ca9a-48b2-bbb6-3648bf4b87c8
    தத்தித் தத்தித் தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு; நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட சில புதிய விளையாட்டுப்பொருள்களைக் கொடுத்திருக்கிறாள். அவற்றுள் ஒன்று நேற்றுதான் தச்சனிடம் செய்துவாங்கிய ஒரு அழகான சிறுதேர்; இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு (பின், குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொண்டால் என்ன செய்வதாம்? அதற்கான முன்னெச்சரிக்கை இது!) செய்விக்கப்பட்ட தேர். சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.

    இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் செல்கிறான்.

    இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி (பதாகை) கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.
    ‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி, வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன் முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.

    தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி
    தரிக்குஞ் சதக்கிருதுசெந்
    தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்
    தமனியத் தேருருட்டப்
    பண்டே பழம்பகை நிசாசரர்கள் உட்கப்
    பரப்புநிலை கெட்டதென்று
    பரவுங்கு பேரன்வட பூதரம் பொருபுட்
    பகத்தேர் உருட்டவீறு
    கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
    குண்டலந் திருவில்வீசக்
    கோலப்ர பாமண் டலச்சுடர் துலக்கமுட்
    கோலெடுத் தருண அருணன்
    திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
    சிறுதேர் உருட்டி யருளே
    சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
    சிறுதேர் உருட்டி யருளே.
    (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- பகழிக்கூத்தர்)

    புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயம். எழில்மிகு தமிழ்நயம்!

    வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் அந்த வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமேதெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு முறைமைகூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அவற்றைப்புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத / வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.

    ‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.

    வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்
    மனைக்குட் புகுந்து மெல்ல
    வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக
    வாரிவெண் ணெயை யுருட்டிப்
    பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்
    பருஞ்சகடு தன்னையன்று
    பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு
    பச்சைமால் மருக பத்தி
    ஆராமை கூருமடி யவர்பழ வினைக்குறும்
    பறவே உருட்டி மேலை
    அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்
    ஆணையா ழியையு ருட்டிச்
    சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ
    சிறுதேர் உருட்டி யருளே
    சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
    சிறுதேர் உருட்டி யருளே.
    (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- பகழிக்கூத்தர்)

    முருகனின் சிறுதேர் உருட்டி விளையாடும்போது மாதலி உருட்டும் தேரில் இந்திரனும், குபேரன் தனது புட்பகத்தேரை உருட்டியும், அருணன் உருட்டும் தேரில் சூரியனும் பெருமையுடன் வலம் வருகின்றனராம். பால் தயிர்க்குடத்தையுருட்டி, அவற்றிலிருந்து வெண்ணையை உருட்டாது வாயிலிட்டுக் கொண்டு, சகடத்தையும் உருட்டிச் சிதைத்த பச்சைமாலின் மருகனான் முருகன் அடியார்களது பழவினைகளை எல்லாம் உருட்டிவிட்டு, உலகெங்கும் தன் ஆணையாழியை உருட்டி, கொடியோர் சிரங்களைக் கொய்துருட்டிக் காக்கிறான். பலவிதமான தேர்களும் பொருட்களும் உருட்டப்படுவதைப் புலவர் நம்கண்முன்பு சொற்சித்திரங்களாகப் புனைந்து நிறுத்துவது இனிய இலக்கிய விருந்தாகின்றது.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    _
    *************

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-21

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்தபெண்!

    இத்தனை நாட்கள் நாம் சிறுமிகள் சிற்றிலிழைத்தும், சிறுவீடு கட்டியும் விளையாடியதனையும், சிறுவர்கள் அவற்றை அழித்துச் சிதைத்ததனையும் கண்டோம். இப்போது காணும் காட்சி கண்ணுக்குப் புதுமையாகவும் இனிமையாகவும் உள்ளதே! பாண்டியமன்னனின் மாபெரும் அரண்மனை. பளிங்குக்கற்கள் பதித்த பெரிய பரந்த முற்றம். வண்ணமலர்கள் போன்ற சிறுமிகள் அரசிளங்குமரியுடன் கூடி அம்மானை ஆடுகிறார்கள். அந்த அரசிளங்குமரியோ தெய்வத்தன்மை படைத்தவள். அவளுடைய ஆட்டம் விந்தைகள் நிறைந்து அனைவர் கருத்தினையும் கவர்கின்றது. வாருங்களேன்! நாமும் சென்று பார்க்கலாம்.

    f4dfebad-fae1-4d89-addc-cc55ff9afc7f
    எவராலும் தடுத்து நிறுத்த இயலாத ஆற்றல் படைத்தவள் எனும் பொருள்கொண்ட பெயர்படைத்த தடாதகையே இவ்விளவரசி. வட்டமிட்டு அமர்ந்துள்ளனர் சிறுமியர். முத்தாலாகிய அம்மானைக்காய்களை எதிர்எதிராக வீசிவீசியெறிந்து விரைந்து ஆடுகின்றார்கள் அவள் தோழியர். அவற்றைப்பற்றி தடாதகை மேலே திரும்பவும் வீசுகிறாள். மற்ற பெண்கள்அவற்றை இடப்பக்கமும் வலப்பக்கமும் மாறிமாறித்தாவிப் பிடிக்கின்றனர்; பிடித்தவண்ணமே இருக்கின்றனர்; பிடித்துக் களைக்கின்றனர். அவர்கள் அவற்றைப்பிடித்து நிமிர்ந்து பார்க்கும்முன்பே தடாதகை இன்னொரு ஆயிரம் அம்மனைக்காய்களை எடுத்து உயரே வீசுகின்றாள். “அம்மாடி! இவற்றை எவ்வாறு பிடிப்பது?” என அவர்கள் அயர்ச்சியுறுகின்றார்கள். “என்னடி தடாதகை! ஏன் எங்களை இவ்வாறு அலைக்கழிக்கிறாயோ?” எனச் செல்லமாக வேறு கடிந்துகொள்கின்றனர்!

    தடாதகை உயரே எறிந்த ஓராயிரம் அம்மனைக்காய்கள் வரிசையாக அழகுற அணிவகுத்து நிற்கின்றன. இதனை இப்போது உறைந்துவிட்ட ஒருகாட்சியாகக் காண்போம். சிறுமிகளிடமிருந்து விலகிச் சென்று, குமரகுருபரனாரைக் காணுவோம்! தடாதகைப்பிராட்டியுடன் அவள் தோழிகள் விளையாடும் இந்த அம்மானை விளையாட்டு அவருடைய ஞானக்கண்களில் வேறுவிதமாகத் தென்படுகிறது.

    அகிலாண்ட கோடியீன்ற அன்னையிவள். அவள் ஈன்ற அத்தனை கோடி அண்டங்களையும் ஆகாயத்தில் வரிசையாக நிறுத்தி வைத்து அழகுபார்ப்பது போல இந்த வண்ணவண்ணமான அம்மானைக்காய்கள் வரிசையாக நிற்கின்றனவாம். பார்க்கப்பார்க்கப் பரவசமூட்டும் கண்கொள்ளாக் காட்சியிது! அம்மாடி! ‘இத்துணை அண்டங்களையும் நீ படைத்து எம்மையும் காத்தருளுகின்றனையோ அன்னையே!’ என உளம் நெகிழ்கின்றதல்லவா?

    இவர்கள் அம்மானையாடும் பளிங்கு முற்றத்தைச்சுற்றிலும் வண்ணமும் நறுமணமும் தாங்கிய செடிகொடிகள். அவற்றில் வரிகளையுடைய வண்டுகள் மூழ்கித் தேனுண்டு, ரீங்காரம் செய்தபடி, பைந்தாது எனப்படும் மகரந்தப்பொடிகளை குழப்பிக் கலக்கி எழுப்புகின்றன. இச்சிறுமிகள் ஆடும் விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு அவற்றையும் உற்சாகக்கடலில் மூழ்கச்செய்துவிட்டதோ என்னவோ! அவ்வாறு குழப்பியதனால் எழும் மகரந்தப்பொடியின் அடர்த்தியால் உலகமே இருண்டு போனதுபோலத் தெரிகிறதாம்.

    அளகாபுரி, அமராவதி ஆகிய உலகங்களில் வாழும் வானவர்கள், “தடாதகை திரும்பவும் போருக்குப் புறப்பட்டு விட்டனளோ? அவளது பெரிய சேனையும் உடன்வருவதால்தான் இந்தப்புழுதி மண்டலம் எழும்பியுள்ளது போலும்!” எனத்துணுக்குறுகின்றனராம்.

    ‘மதுராபுரித்தலைவியான நீ இவ்வாறு அழகுற அம்மானையாடியருளுக!’ என்பவர் தடாதகையின் தனித்தன்மையை அடுத்தவரிகளில் கண்முன் நிறுத்துகிறார். ‘அண்ணலாகிய சிவபிரானின் உணர்வில் இணைந்து உள்ளங்கலந்து பின் அவருடலில் ஒரு பாகத்தைத் தனதாக்கிக்கொண்ட பெண்ணரசி இவள். ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்தபெண்,’ எனக்கூறிப் புளகிக்கிறார். இவள் ஒருத்தியே இந்த அடைமொழிக்கு உரியவள் அல்லவா? இதனாலேயே இறைவனும் மாதொருபாகன் எனும் சிறப்புப்பெயர் பெற்றானன்றோ?

    “யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” எனும் கூற்றின்படி, குமரகுருபரர் தாம்கண்ட இவ்வற்புதக்காட்சியை இலக்கியச்சித்திரமாக நாம் பயின்றுமகிழ வடித்துத்தந்துள்ளார்.

    https://soundcloud.com/thiru-arasu-10/ilakkiyam-21

    தமரான நின்துணைச் சேடியரில்ஒருசிலர்
    தடக்கையின் எடுத்தாடுநின்
    தரளவம் மனைபிடித் தெதிர்வீசிவீசியிட
    சாரிவல சாரிதிரியா
    நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய
    நிரைநிரைய வாய்க்ககனமேல்
    நிற்கின்ற தம்மைநீ பெற்ற அகிலாண்டமும்
    நிரைத்துவைத் ததுகடுப்ப
    இமிரா வரிச்சுரும் பார்த்தெழப்பொழிலூ
    டெழுந்தபைந் தாதுலகெலாம்
    இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்
    ஏக்கமள காபுரிக்கும்
    அமரா வதிக்குஞ்செய் மதுராபுரித்தலைவி
    அம்மானை ஆடியருளே
    ஆகங் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்
    அம்மானை ஆடியருளே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- அம்மானைப்பருவம்)

    ********

    புலவர் வடிக்கும் இன்னொரு அழகிய நயம்பொருந்திய சித்திரம்! விதவிதமான அம்மானைக்காய்களைக்கொண்டு தடாதகை விளையாடுகின்றாள். அம்மானை விளையாடும்போது உண்டாகும் பலவிதமான மெய்ப்பாடுகள்! அவை தொடர்பான புலவரின் அழகிய உருவகக்கற்பனைகள்! பயில்வோருக்கு இனிய தமிழமுதம்!

    முத்துக்களை அழுத்திவைத்துச் செய்யப்பட்ட அம்மானைக்காய்கள் அன்னைமீனாட்சியின் தாமரைமலர் போன்ற திருக்கைகளால் பிடிக்கப்பட்டதால் அவ்வம்மானைக்காய்களிலிருந்து அம்மலருக்கே உண்டான இனிய நறுமணம் (முளரிமணம்) கமழ்கின்றது. அம்மானைக்காய்கள் மேலும் கீழுமாக வீசப்படுவதால் விளையாடுவோர் அதனைத் தம்கண்களால் விரைந்து தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும். தடாதகையும் அதனைச் செய்கின்றாள். அவள் விழிகள் மைதீட்டப்பெற்றுக் கருநிறம்கொண்டு இருப்பதால் வண்டுவிழிகளாகக் காணப்படுகின்றன. அவள் கூந்தலில் அணிந்துள்ள இனிய மணம்பொருந்திய மலர்களில் தேனருந்த மொய்க்கும் வண்டினங்கள் கண்களாகிய வண்டுகளைக் கண்டு, அவையும் தம்மினம் எனக்கருதி மயக்கமுறுகின்றனவாம். அவற்றுடன் தாமும்கூடி (முயங்கி) மயங்குகின்றன.

    கொத்தான மாணிக்கக்கூட்டத்தால் செய்யப்பட்டுள்ள மற்றொருவகை அம்மானைகளைக்கொண்டு அவள் விளையாடுகிறாள். அம்மானையாடும்போது பாடல்களைப்பாடியபடி ஆடுவது சிறுமியர், மகளிர் வழக்கம். இவை விடுகதைகள் வடிவில் இருக்கலாம்1. சிறுமி மீனாட்சியும் தனது குயிலைப்போல் மிழற்றும் இனியகுரலில் குழலிசைபோன்று பாடியவண்ணம் ஆடுகிறாளாம். (என்ன பாடலை அன்னை பாடினாள் எனப்புலவர் கற்பனைசெய்து கூறியிருக்கலாம்- நமக்கு மேலுமொரு அருமையான இலக்கிய விருந்து கிட்டியிருக்கும்!!) அவளுடைய இனிய குரலின் இனிமைக்கு அந்த மாணிக்கங்கள் உருகி, பனிபோன்ற சிறுதிவலைகளைச் சிந்துகின்றனவாம்.

    (இங்கு ஆதிசங்கரர் இயற்றிய ஒரு பாடலை இதனுடன் ஒப்புநோக்கலாம். ‘அழகின் அலைகள்’ எனும் அம்மையின் அழகினைக் கூறும் சௌந்தர்யலஹரியில் கூறுகிறார்: ‘வீணையில் இனிய நாதத்தினை எழுப்பி இசைத்தவண்ணம் இருந்த கலைமகள் ‘நன்றாக உள்ளது’ என தேவிகூறத் துவங்கியதும், அவளுடைய குரலினிமையின் முன்பு தன் வீணையின்நாதம் மங்கிவிட்டதனை உணர்ந்து வீணையை உறையிலிடுகிறாள்,’ என்பதே அப்பாடலின் பொருள். இசைக்கும், கலைகள் அனைத்துக்கும் இருப்பிடமும் பிறப்பிடமும் அவளே! அவள் குரலினிமையில் அசையும், அசையாப்பொருட்கள் அனைத்துமே உருகத்தானே வேண்டும்?

    ‘நாதப்ரஹ்மமயீம்’ என்பது மீனாட்சியை வழிபடும் பெயர்களில் ஒன்று. கூறிக்கொண்டே போகலாம்…..)

    பவளத்தால் (வித்துருமம்) செய்யப்பட்ட அம்மானைகளைக்கொண்டு அவள் விளையாடும்போது அவளுடைய கைவிரல்களின் அழகிய பவளநிறத்தினை அவை திருடிக்கொள்வதற்காக மேலும் கீழும் போய்வருவதாகக் காணப்படுகின்றனவாம்.

    அடுத்துக் கூறுவது அருமையிலும் அருமை! ‘எம்பெருமானின் உள்ளத்தில் உயிரோவியமாகத் தீட்டப்பட்டு விளங்கும் அம்மையே! நீ அம்மானை ஆடுவாயாக!
    அழகு பொங்கிப்பெருகும் கல்யாண சவுந்தரியே! அம்மானை ஆடுக!’ என்கிறார். கல்யாண குணங்கள் எனப்படும் உயர்வான நலங்களின் இருப்பிடமாகத்திகழும் அழகிய வடிவம் கொண்டவள் என்பது பொருள்.

    ‘ஆகம்கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்,’ என்பதும், ‘அத்தன் மனத்தெழுதிய உயிரோவியம்,’ ஆகிய வருணனைகள் அம்மையும் அப்பனும் உலகத்தோருக்கு உணர்த்தும் கருத்தொருமித்த உயர்வான இல்லறத்தின் அழகான காட்சிகளாவன.

    முத்தம் அழுத்திய அம்மனைகைம்மலர்
    முளரிம ணங்கமழ
    மொய்குழல் வண்டுநின் மைவிழிவண்டின்
    முயங்கி மயங்கியிடக்
    கொத்து மணித்திர ளிற்செயும்அம்மனை
    குயிலின்மி ழற்றியநின்
    குழலினி சைக்குருகிப்பனி தூங்கு
    குறுந்துளி சிந்தியிட
    வித்துரு மத்தில் இழைத்தவு நின்கை
    விரற்பவ ளத்தளிரின்
    விளைதரும் ஒள்ளொளி திருடப்போவதும்
    மீள்வது மாய்த்திரிய
    அத்தன் மனத்தெழு தியவுயிர்ஓவியம்
    ஆடுக அம்மனையே
    அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
    ஆடுக அம்மனையே
    (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- அம்மானைப்பருவம்)

    **************

    1 அம்மானை எனப்படும் சிறு பெண்கள் அல்லது மகளிர் விளையாட்டு மூவர் அம்மானை என அறியப்படும். விடுகதை போலப்பாடல்களை சமயத்திற்கேற்ப இயற்றிப் பாடியவண்ணம் ஆடுவது பெண்களின் வழக்கம் போலும். இவ்வாறு பாடல்களை அவர்கள் இயற்றி ( ) பாடுவதாகப் புலவர்கள் எழுதி வைத்துள்ளனர். குமரகுருபரனாரே தமது மதுரை, காசிக் கலம்பகங்களில் இவ்வாறு அம்மானைப் பாடல்களை இயற்றியுள்ளார். இது அழகான சிறுமியர் விளையாட்டின் அருமையான பதிவாகும். மதுரைக் கலம்பகத்துப் பாடலைக் காணலாமே!

    மூன்று பெண்கள் அம்மானை ஆடிக் கொண்டு, புதிர் போடுவது போன்ற வினாக்களையும் விடைகளையும் கூறுகின்றனர்.

    முதல் பெண் கூறுகிறாள்: “பிரமன், திருமால் ஆகிய இருவருக்கும் தன் அடிமுடிகள் காண்பதற்கு அரியதானவரும், மதுரையின் ஈசனும் ஆகிய சிவபெருமான், தன் வெற்றியைக் காட்டும் மொழிகளைப் பேசி, ஒரு சித்தனின் உடம்பில் உறுப்புகளைத் தனித் தனியாக வெட்டி வென்று விட்டார்,” என்கிறாள். இது திருவிளையாடல் புராணத்தின் ஒரு கதை.

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர் காண் அம்மானை’
    (விருது கட்டி- வெற்றிக்குரிய சின்னங்களை அணிந்து கொண்டு; சித்தன் என்பவன் தனக்கு ஆயுதக் கலை பயிற்றுவித்த ஆசிரியரிடம் பொறாமை கொண்டு, தானும் சிலருக்குக் கற்பித்து வந்தான்; இதனால் ஆசிரியரின் வருவாய் குறைந்தது; ஆதனால் சிவபெருமான், சித்தனின் ஆசிரியர் வடிவு கொண்டு சென்று அவனைப் போருக்கு அழைத்து, அங்கத்தை வெட்டிக் கொன்றார் என்பது புராணக் கதை)

    இரண்டாமவள் கூற்று: “அவ்வாறு வெற்றி மொழி பேசி சித்தனின் உடலைத் துணித்து வென்றார் என்றால், அருமையான அவருடைய ஒரு உடம்பு இரண்டு கூறாக ஆவது ஏன்?” எனக் கேள்வி கேட்டுத் தனதுஅம்மானையை வீசுகிறாள்.

    ‘விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரேயாம் ஆகில்
    அருமை உடம்பு ஒன்று இருகூறு ஆவது ஏன் அம்மானை’
    (உட்பொருள்: இருகூறாக ஆவது என்பது ஈசனின் பாதியும் அன்னையின் பாதியும் என்பனவாகும்)
    மூன்றாமவள் பகரும் விடை: “அவருக்கு உடம்பு இரண்டு கூறாக ஆயினும், தழும்பு (காயம்) ஏதும் இல்லை!” என உரைப்பாள்.

    ‘ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’
    (ஆனாலும் அவருக்கு எனத் தனியாகத் திருமேனி இல்லையே என்பது உட்பொருள். காயம்- உடம்பு; புண் அல்லது தழும்பு)

    முழுப்பாடல் இதோ:

    ‘இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர்காண் அம்மானை
    விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனரே யாமாகில்
    அருமையுடம் பொன்றிருகூ றாவதேன் அம்மானை
    ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.’

    இப்பெண்களை சமர்த்திகளாகவும், ஒருவருக்கொருவர் சளைக்காமல் வினாக்களும் விடைகளும் கற்பிப்பவராகவும் காட்டியுள்ளனர் புலவர் பெருமக்கள். வீணே பொழுதினைப்போக்காமல் புத்திசாலித்தனமாக விளையாடுபவர்களாக உள்ளனரே!

    *************

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-20

    உன்னைக்குறைகூறல் நேர்மையாமோ?

    மீனாட்சி பாலகணேஷ்

    ஏழெட்டுச் சிறுமியர்; தமது வழக்கமான சிற்றில் விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அழகான சிறிய வீட்டைக்கட்டுகிறாள் ஒருத்தி. மலர்களாலும் கிளிஞ்சல்களாலும் சோடனைசெய்கிறாள் இன்னொரு சிறுமி. பக்கத்தில் அழகான பள்ளம் ஒன்றினைத் தோண்டி, அதில் நீரைநிரப்பித் தாமரைக்குளம் அமைத்துவிட்டாள் வேறொருத்தி. தாமரை எனும் பெண் ஓடோடிச்சென்று பக்கத்துக்குளத்திலிருந்து மலர்ந்த தாமரைமலர்கள் இரண்டினைப் பறித்துவந்து அதில் மிதக்கவும் விட்டுக்களிக்கிறாள். எல்லாரும் தாமிழைத்த இச்சிறு வீட்டைச் சுற்றிநின்று பாடிக்களிக்கிறார்கள்: கைகொட்டி ஆடுகிறார்கள்!

    ‘ஆத்தோரம் வீடுகட்டி, அழகான தோட்டம் வைத்து
    பாத்திருந்தோம் கண்ணாலே பரவசமா இந்நாளே!
    தாமரைப் பூங்குளமாம் அதிலேதுள்ளும் மீன்களுமாம்
    நாமெல்லாம் ஆடிடுவோம் நன்றாகப் பாடிடுவோம்’

    திடீரென்று ஓடோடி வருகிறான் ஒரு குறும்புக்காரச்சிறுவன். உயர்ந்து எழும்பி இவர்கள் சிற்றிலைச்சிதைக்கக் காலைத்தூக்கியபடி தாவுகிறான். எல்லாரிலும் பெரியவளான மங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை அவ்வப்பொழுது எதிர்பார்த்தே பழக்கம். தக்கசமயத்தில் சென்று அந்தச்சிறுவனை- அவன் பெயர் குமரன்- பின்புறத்திலிருந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தாவுவதைத் தடுத்துவிடுகிறாள்.
    மற்ற சிறுமிகளுக்கெல்லாம் ஒரே ஆத்திரம். அவனை அடிக்காதகுறைதான். அவனோ பெரிய இடத்துக்குழந்தை. வயதிலும் மிகச்சிறியவன். ஐந்தேபிராயம் நிரம்பியவன். அதனால்தான் யோசிக்கிறார்கள். சிவகாமிக்கு அழுகையே வந்துவிட்டது. சிலகணங்களில் அவர்கள் அழகான சிற்றில் சிதைந்திருக்குமே! காலையிலிருந்து முதுகெல்லாம் நோகும்படி, மணலைக்கொழித்துப் பார்த்துப்பார்த்து அமைத்த சிற்றிலல்லவோ?

    தன்முயற்சி தடைப்பட்டு விட்டதால், கைகால்களை உதைத்துக்கொண்டு, மங்கையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் குமரனை அவள் இப்போது தன் இடுப்பில் எடுத்துக்கொண்டு, நல்லவார்த்தைகள் சொல்லி, கையில் ஒரு கொய்யாக்கனியைக் கொடுத்து, மரத்துக்கிளியைப் பிடித்துத்தருகிறேன் என ஆசைகாட்டி சமாதானம் செய்கிறாள். மற்ற சிறுமியர் கேட்கின்றனர்: ஐந்துபிராயத்துக் குழந்தைக்குப் புரியுமோ புரியாதோ அவர்கள் சொல்வது; ஆனால் அவன் சிவனின் குமரனல்லவா? பராசக்தி அன்னையின் மைந்தனல்லவா? தகப்பன் சாமியல்லவா? ஏன் புரியாது? அவர்கள் கேட்பதனை நாமும் செவிமடுப்போமா?



    “உன்தாய் பெரும் தவம்செய்து உன்னைப் பெற்றெடுத்தாள் குமரா! எல்லாக்கடவுள்களையும் அழைத்துக்காப்பிட்டு உன்னைத் தொட்டிலில் கண்வளர்த்தினாள். நீ தவழ்ந்து உன் திருமுகத்தை நிமிர்த்திச் செங்கீரை மொழிவதனைக்கேட்டும், ஆடுவதனைக்கண்டும் இன்புற்றாள். தாலாட்டுப்பாடி உறங்கவைத்தாள். பின் நீ எழுந்து உட்கார்ந்த பருவத்தில் உன்னை இருகரங்களையும் குவித்துச் சப்பாணி கொட்டவைத்தாள் அல்லவோ? உன் கொழுவிய சிவந்த கன்னங்களில் முத்தமிட்டும் மகிழ்ந்தாள். நீ நடைபழகும் காலத்தில், “அப்பா வா,” என உன்னை அழைத்து, கொஞ்சிக்குலாவி மகிழ்ந்து எடுத்து அணைத்துக்கொண்டாள். உனக்கென்ன குறைவைத்தாள்? ஒன்றும் இல்லை.

    “பின்னர் அந்திப்பொழுதில் வானில் உலாவரும் அம்புலியைக் காட்டிச் சோறும் ஊட்டினாள். நீ சிறிது வளர்ந்ததும், வெளியே வீதியில்போய் விளையாடி வா அப்பா என்று உன்னை அனுப்பிவைத்தும் விட்டாள். உன் குறும்புப்புத்தியை அவளறியாது இருப்பாளா என்ன? இவ்வாறு எங்கள் சிற்றிலைச் சிதைக்க நீ முயன்றதனால் உன்னை எதற்காகக் குறைகூறுவது? இவ்வாறு உன்னை வளர்த்த தாயையல்லவோ நாங்கள் நொந்துகொள்ள வேண்டும்? இப்போதாவது கூறுகிறோம். அவள் அன்னை பராசக்தி; அவளை ‘பிள்ளையை வளர்த்த அழகைப்பார்,’ என்று குறைகூறுதல் நன்றாகவா இருக்கும்? குறுக்குத்துறை எனும் இவ்வூரில் வாழும் நிமலனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என வேண்டுகின்றனர்.

    குறுநகைபுரியும் இளங்குமரன் இவர்கள் வேண்டுதலுக்கு இரங்கமாட்டானா என்ன?

    முந்தித் தவமே புரிந்துன்னை
    முயன்று பெற்றுக் காப்பாற்றி
    முகமே தூக்கிச் செங்கீரை
    மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
    குந்திக் கரத்தால் சப்பாணி
    கொட்டச் செய்து முத்தமிட்டுக்
    கூவியழைத்து வருகவெனக்
    கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
    அந்திப் பொழுதைக் கடந்துவரும்
    அம்பு லிகாட்டிப் பின்னருனை
    ஆடி நீவா எனமறுகில்
    அனுப்புந் தாயர் தமைவிடுத்து
    நொந்திங் குன்னைக் குறைகூறல்
    நேர்மை யாமோ உணர்ந்திதனை
    நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
    நிமலா சிற்றில் சிதையேலே
    (குந்தி- அமர்ந்து; மறுகில்- வீதியில்)

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

    ~~~~~~~~~~

    சரி; கதையிலிருந்து இலக்கியத்துக்குள் சிறிது புகுவோம். பெண்கள் கூற்றாக, சிற்றில்பருவத்துப் பிள்ளைத்தமிழ்ப்பாடலை இயற்றிய புலவர் வித்துவான் தி. சு. ஆறுமுகம் சிவதாசன் ஆவார். இது குறுக்குத்துறையில் வாழும் முருகப்பிரான்மேல் இயற்றப்பட்டது. இப்பாடலின் இலக்கியநயம் யாதெனில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் எட்டாவது பருவமாக அமையும் சிற்றில்பருவத்திற்கு முன்பு ‘சிற்றிலை அழிக்காதே’ எனச்சிறுபெண்கள் வேண்டும் பாடலில், இயல்பாகவே வரும்விதத்தில் பிள்ளைத்தமிழின் மற்ற முதல் ஏழுபருவங்களையும் (காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழுபருவங்கள்) வரிசைப்படுத்திக் கூறியிருப்பதுதான். பாடலின் பொருளோடு இவை இயைந்து வருவது அருமையிலும் அருமை. இவ்விலக்கிய நயங்களுக்காகவே பிள்ளைத்தமிழ் நூல்களை ஊன்றிப்படிக்கவேண்டும்!

    ~~~~~~~~~

    இளங்குமரனைக் கண்ணுற்ற சிறுமியருக்கு அவன்பால் தாய்ப்பாசம்தான் மிகுகிறது! “ஏதோ அறியாப்பிள்ளை! சிற்றிலை அழிக்க முற்பட்டான். போனால் போகட்டும். நம்முடன் விளையாடச் சேர்த்துக்கொள்வோம்,” என்கிறாள் சிவகாமி.

    “வா குமரா! எங்களுடன் அமர்ந்து நாங்கள் சமைத்த இந்தச் சிறுசோற்றை உண்டு மகிழ்வாய்.” என்று பெருந்தன்மையுடன் விருந்தோம்புகிறாள் செங்கமலம். அவள், தன்அன்னை இவர்கள் சிற்றில் விளையாட்டிற்காகவெனப் புதியதாகச் செய்தளித்த வெல்லப்பணியாரம், கடலைச்சுண்டல் முதலானவற்றை, வட்டிலில் கொண்டுவந்திருக்கிறாள். மங்கை புளியஞ்சோறு கொண்டுவந்திருக்கிறாள். விளையாட வரும்வழியில் தகப்பன்மார்களைக்கேட்டு, தோட்டத்திலிருந்து சில மாங்கனிகளையும், இளம் நுங்குகளையும் கூடக்கொணர்ந்துள்ளனர் இச்சிறுமியர். திட்டமிடுவதில் தம் தாய்மார்களையும் விஞ்சிவிட்டனர்போலும்! இலைகள் போடப்பட்டு பரிமாறப்பட்ட உணவு சிறுவர்கள் வாயில் நீர் ஊறச்செய்கிறது! ஆனந்தத்தை உண்டுபண்ணி, பகையை மறக்கச்செய்து, கூடியிருந்து உண்ணச் செய்கிறது.

    “ஆமாமடா குமரா, சிற்றிலை அழிப்பதனைமட்டும் செய்யவேண்டா! உண்டு களிப்பாயாக. நாங்கள் செய்த பலவிதமான தின்பண்டங்களை முதன்முதலில் உனக்குத்தான் படைக்கிறோம் தெரியுமா? நாங்களே இன்னும் தின்றுபார்க்கவில்லை. எங்களுக்கு உன்மீது எத்துணை அன்பு (பக்தி) பார்த்தாயா? எங்கள் சிறுவீட்டினை அழிக்காதேயப்பா,” என்கிறாள் தாமரை.

    சிவகாமி குறும்பு கொப்பளிக்க, “ஒருமுறை இந்தப் பண்டங்களை நீ உண்டுவிட்டாயானால் போதும்; பின்பு, நாங்கள் எப்போது திரும்பச் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்து உண்போம் என மறுபடியும் மறுபடியும் நீயே கேட்பாய் முருகா! அத்துணை சுவைமிகுந்தவை இவையாம்,” எனக்கூறி நகைக்கிறாள்.

    “அவனைப் பக்கத்தில் இருத்திக்கொண்ட மங்கை சொல்வாள்: “உனக்கன்றி வேறு எவருக்கு இவற்றையெல்லாம் நாங்கள் ஆசையாகக் கொடுப்போம். வா, வந்து உண்டுமகிழ்வாயாக! மாறுபடாத வளங்கள் நிறைந்த தண்மையான துறைகள் கொண்ட குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் செல்வனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே! குழந்தைச்சிறுமிகளாகிய எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே!”

    ஆவலுடன் சிறுமியர் குமரனுடன் சிறுசோறு உண்டுகளிக்கின்றனர். நமக்குக்கூட அவர்களிடம் சிறிது பொறாமையும், அச்சிறுமிகள் சமைத்திருக்கும் உணவுக்காகச் சிறிது ஆசையும், இதைப் படிப்பதனால் உள்ளத்தில் பெரும்உவகையும் எழுகின்றன.

    உருகா யோநீ உளம்விரும்பின்
    உவப்பா யெம்பா லுடனமர்ந்தே
    உண்டு மகிழ்வாய் சிற்றிலிதை
    உலையா தருள்செய் தேகிடுவாய்
    முருகா சிறியர் யாம்பெரிதும்
    முயன்று செய்த பலபண்டம்
    முன்னா லுனக்கே படைக்கின்றோம்
    முயலாதேயெம் மில்சிதைக்க
    ஒருகா லுண்ணின் மறுகாலும்
    உண்டா வுண்டா எனக்கேட்பாய்
    உனக்கல் லாது யார்க்கிவைதாம்
    உவந்தே யளிப்போம் ஏற்றிடுவாய்
    திருகா வளஞ்சேர் ஆவடுதண்
    துறையார் குறுக்குத் துறைவாழும்
    செல்வா சிற்றில் சிதையேலே
    சேயேம் சிற்றில் சிதையேலே.
    (திருகா- மாறுபடா)

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

    இது ஓர் அருமையான பிள்ளைத்தமிழ் நூல். சமீபகாலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். குறுக்குத்துறை எனும் இடத்தைப்பற்றி, நூலின் தொடக்கத்திலுள்ள ,
    ‘அகழ்சேர் பொருநை யணிகரைபால்
    அழகார் பதியாம் நெல்வேலி
    அணித்தாம் குறுக்குத் துறைதங்கி
    அன்பர்க் கருளுந் திருக்குமரன்’ எனும் பாடலால் இது திருநெல்வேலியருகில் அமைந்தவிடம் என அறிகிறோம். ஆசிரியர் பெயரும் கடைசிப் பாடலில் கிட்டுகிறது.
    வேறு அதிகமாகச் செய்திகள் கிடைக்கவில்லை.
    ஆயினும் தமிழ்ச்சுவை நிரம்பிய அழகான நூல்.
    ~~~~~~~~
    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ~~~~~~~~~~~~~~~~~

    Share