இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-23
மீனாட்சி பாலகணேஷ்
உண்ணாமுலைக்கு எந்தமலை ஒப்பாகும்?
பிள்ளைத்தமிழ் இலக்கியங்களின் அழகே ஒவ்வொரு பருவத்துப் பாடல்களிலும் புலவர்களால் புனைந்து கூறப்படும் ரசமான சிறுசிறு நிகழ்ச்சிகளும் நயம்மிகுந்த அணிகளும்தான். சொற்பின்வரு நிலையணியைக் கையாண்டு சுவைபடக் கவிபுனைவதில் உண்ணாமலையம்மை பிள்ளைத்தமிழினைப் படைத்த சோணாசல பாரதியார் முதன்மையிடம் வகிக்கிறார் எனலாம். ஒவ்வொரு பருவத்திலும் மலை, மான், புலி, பாணி, முத்து, போன்ற சொற்களை அழகுறப் பொருத்தமாகத் திரும்பத்திரும்பக் கையாண்டு புலவனார் படைத்துள்ள பாடல்கள் பயில்வோர் உள்ளங்களை மிகுந்த உவகையில் ஆழ்த்துகின்றன. இக்கட்டுரையில் அத்தகைய அழகிய இரு பாடல்களைக் காணலாமே!
*****
சிறுகுழந்தை செங்கீரையாடியபடி வருகிறாள். பார்ப்பவர்கள் உள்ளம் பரவசத்திலாழ்கிறது. ஒருகாலை மடக்கியும், மறுகாலை நீட்டியும் நகரும்போது, காலிலணிந்த சிறுசதங்கை ஒலியெழுப்புகிறது. கழுத்திலணிந்த முத்துமாலைகளும் மற்றும் இடையிலணிந்த மேகலையும் தழைந்தாடுகின்றன. தலைமயிரை அன்னை உச்சிக்குடுமியாக முடிந்து அதிலும் அணிகலன்களை அணிவித்திருக்கிறாள். இவையனைத்துடனும் இப்பெண்மகவு தவழ்ந்து செங்கீரையாடி வருவதைக் காண்பதே கண்கொள்ளாக்காட்சி!
காணும் செவிலித்தாய்க்கு இக்குழந்தை பராசக்தி அன்னையெனவே கண்ணில் தெரிகிறாள். பெருமை பெற்றுத்திகழும் அருணைநகர் எனும் ஊரில் பொருந்தி, நிலைபெற்று மகிழ்ச்சியாக வாழும் இந்தக்கன்னியே உண்ணாமுலை அம்மையெனக் கண்டுகொண்ட அச்செவிலித்தாய் தெய்வ அருள் பெற்றவள் எனலாம். தாதியர் புடைசூழ நின்று தனது செல்வமகளின் பெருமைகளைப் பட்டியலிடுகிறாள்.
“மஞ்சரி! கேள்! விந்தியமலை, முனிவரான அகத்தியர் கையால் பாதாளத்தில் வீழ்ந்த மலையாகும்;
“பொதிகைமலை, முனிவரான அகத்தியரால் அடியால் மிதிக்கப்பட்டமலை- (சிவ-பார்வதி திருமணத்தின்போது அனைவரும் இமயமலையில் கூடிவிட்டதால், இமயமலை தாழத்துவங்கவே, சிவனார் அகத்தியக் குறுமுனியிடம் பொதிகைமலைக்குச் சென்று காலால் அழுத்தி அதனை நேர் செய்ய அருளினார். ஆகவே அது அகத்தியரால் மிதிகொள்மலை ஆயிற்று);
“வாருணி, உனக்குத் தெரியுமா? வெள்ளிமலை எனும் இமயமலையில் அமர்ந்தவனும், பிரமனின் ஒரு தலையைக் கிள்ளியவனுமான சிவபிரான் உறையும் மலை இன்னொருமலை;
“அரக்கனான இராவணன் வெடுக்கென்று தனது இருபது கரங்களாலும் எடுத்த (தூக்கிய) மலையும் மற்றொருமலை;
“கமலம்! திருமால் முன்பொருநாள் அழகிய அலைகடலைக் கடைவதற்காக எடுத்த மந்தரமலை என்னும் பருத்ததொருமலை; மத்தாகிய மலை என்பதை நீ அறிந்தாயோ?
“உக்கிரகுமார பாண்டியனால் (பொன்முடி வழுதி) செண்டால் அடிக்கப்பட்ட மலையும் உண்டு கண்டாயோ?
“காற்றினால் தாக்கப்பட்டு இடியுண்டு மூன்று சிகரங்களை இழந்தமலை,
“இவையனைத்து மலைகளில் எந்தமலை நமது அம்மையின் உண்ணாமுலைக்கு நிகராகும்? ஒப்பாகும்? யாரால் இதற்கு விடைபகர இயலும்?” எனக் கேட்கின்றாள் செவிலித்தாய்.
மதிநுட்பம் நிறைந்தவளான மஞ்சரி கூறுகிறாள்: “எங்கள் இறைவனார் உறையும் அண்ணாமலையே அதற்கு ஒப்பாகும்; உண்ணாமுலைக்கு நிகராகும்,” என்று. செவிலித்தாயின் முகத்தில் முறுவல் பூக்கின்றது; மற்ற பெண்கள் கரங்களைக் கொட்டி மகிழ்கின்றனர்.
அவள் மட்டுமா அதனைக் கூறினாள்? இல்லையில்லை. “வெண்கமல மலரான வெள்ளைத்தாமரையில் உறையும் வாணியும், சிவந்த தாமரை மலரில் உறையும் திருமகளும், தேவலோகத்தின் அரசியான இந்திராணியும், மன்மதனின் துணைவியான இரதிதேவியும் கூட இவ்வாறேகூறி தமது உள்ளங்கள் மாறுபடாது பணிகின்ற மலைமகள் இவள்; உமையாகிய அமலை- தூயவள்,” என்கின்றனர் அனைவரும் ஒருமித்த குரலில்.
“அத்தகைய அன்னையே! செங்கீரை ஆடியருளுக: அருணைநகரில் வாழ்பவளே! செங்கீரையாடியருளூக!” என அனைவரும் வேண்டி நிற்கின்றனர்.
அன்னையின் உண்ணாமுலைக்கு ஒப்பிடப்பட்டுத் தோற்றுப்போனாலும், மலைக்குக் கிடைத்த பெருமை சொல்ல முடியுமா? ஒப்பற்ற ஒருத்தியுடன் ஒப்பிடப்பட்டு விட்டதல்லவா?
விந்தமலை பாதலம் விழுந்தமலை பொதியமலை
மிதிகொண் மலை முனிகையடியான்
வெள்ளிமலை யமர்த லைகிள்ளிமலை நிருதன்
வெடுக்கென் றெடுத்தமலைமான்
முந்தமலை கடையைநிமிர் மந்தர மெனும்பெரிய
மொத்துமலை மத்துமலைபொன்
முடிவழுதி யடியுண்ட மலைகாலி னிடியுண்டு
முடிமூன்று போனமலைபின்
எந்தமலை நின்றிரு வுணாமுலைக் கொப்பாகு
இறைவரண் ணாமலையதே
என்றென்று துதிசெய்து வெண்கமலை செங்கமலை
இந்திரா ணியுமிரதியும்
சித்தமலை யாதுபணி யுமயமலை யுமையமலை
செங்கீரை யாடியருளே
திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
செங்கீரை யாடியருளே
(உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- சோணாசல பாரதியார்)
*****
இன்னொரு சுவையான உரையாடல்; அன்னைக்கும் அத்தனுக்குமிடையே நிகழ்வது; நாமும் கேட்போமே!
“உமையே! உன்னை உலகம் முழுமையும் பெற்ற கருணை நிறைந்த தாய் என்று வேதங்கள் புகழ்ந்து கொண்டாடுகின்றன; ஆனால் உனக்கோ உண்ணாமுலை என்று பெயர்! நீ பால் தராவிட்டால் உலகத்திலுள்ள உனது குழந்தைகள் எவ்வாறு பயனடைவார்கள்?” என எல்லாம் அறிந்த இறைவனான அண்ணாமலைப்பிரான் அவளிடம் மென்மையாகக் கேட்கிறான்.
உண்ணாமுலையம்மை இதனைக்கேட்டுச் சிறுமுறுவல் கொள்கிறாள். கேள்விக்கு மறுமொழியாகத் தானும் ஒரு கேள்வியை முன்வைக்கிறாள்!
“ஐயனே! அடிகள், எல்லா உயிர்களுக்கும் தந்தை அன்றோ? தங்கள் வீடான இது அண்ணாமலை; அதாவது அணுக இயலாத மலையல்லவோ? அப்படியானால் உயிர்கள் எவ்வாறு உம்மால் பயனடைய முடியும்? நினைத்துப் பார்த்தீர்களா?” எனக்கேட்கிறாள்.
“எம்மை நினைத்தாலே போதும்! அணுகிவரக்கூட வேண்டாம். கலகவினை நீக்கி உயர்கதியை அடையச் செய்வோம்,” என்கிறான் அண்ணாமலையான்.
“அதுபோன்றே உள்ளன்போடு என்னையும் நினைத்திட்டால் போதும்! மிகுந்த ஞானத்தை அளிக்கும் அமுதினைக் கொடுத்து உயிர்களை நானும் காப்பேன்,” என விடையிறுக்கிறாள் அன்னை.

“இவ்வாறு எந்தையாகிய சிவபிரான் களிப்பெய்துமாறு கூறிடும் அன்னையே! வாள்போன்ற நெற்றியும், மைதீட்டிய விழிகளும்கொண்டு, வெண்மையான முறுவல் பூப்பவளே! கிள்ளை மொழியாளே! நீ செங்கீரையாடியருளுக,” எனத் தாதியர் வேண்டுவதாகப் புலவர் பாடுகின்றார்.
உலகமுழு தும்பெற்ற கருணைமா தாவென்
றுவந்துமறை முரசறையநீ
யுண்ணா முலைப்பெயர் புனைந்தனை யுயிர்ச்சிறா
ருய்யும்வண மெவ்வணமெனா
விலகவிள முரலொடு மண்ணா மலைப்பிரா
னின்பவுரை யாடவடிக
ளெவ்வுயிர்க் கும்பிதா வன்றுகொ னும்பெயரின்
யாதுபய னென்னநினையிற்
கலகவினை நீக்கியுயர் கதியருளு வோமெனக்
காதலுட னெனையுநினையிற்
கனஞான வமுதீந்து காப்பலென வெந்தையுங்
களிகூர விளையாடுநற்
றிலகவா ணுதன்மைக்கண் வெண்ணகைப் பைங்கிள்ளை
செங்கீரை யாடியருளே
திகழருணை நகர்மன்னி மகிழ்வினோடு வளர்கன்னி
செங்கீரை யாடியருளே.
(உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்- சோணாசல பாரதியார்)
இதுபோன்ற இன்னும் எத்தனையெத்தனை கவின்மிகு பாடல்கள்? சுவைக்கச் சுவைக்கக் குறையாத தேனூறும் தமிழ்ச் செல்வங்கள்- இவற்றைத் தம்முள் இருத்திக்கொண்டு மிளிரும் இலக்கியச் சித்திரங்கள். தொடர்ந்து வரைவோம்; காண்போம்; களிப்போம்.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
*************

