இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-22
மீனாட்சி பாலகணேஷ்
சிறுதேர் உருட்டும் செந்தில்வாழ் கந்தவேள்
தத்தித் தத்தித் தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு; நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட சில புதிய விளையாட்டுப்பொருள்களைக் கொடுத்திருக்கிறாள். அவற்றுள் ஒன்று நேற்றுதான் தச்சனிடம் செய்துவாங்கிய ஒரு அழகான சிறுதேர்; இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு (பின், குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொண்டால் என்ன செய்வதாம்? அதற்கான முன்னெச்சரிக்கை இது!) செய்விக்கப்பட்ட தேர். சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.
இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் செல்கிறான்.
இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி (பதாகை) கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.
‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி, வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன் முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.
தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி
தரிக்குஞ் சதக்கிருதுசெந்
தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்
தமனியத் தேருருட்டப்
பண்டே பழம்பகை நிசாசரர்கள் உட்கப்
பரப்புநிலை கெட்டதென்று
பரவுங்கு பேரன்வட பூதரம் பொருபுட்
பகத்தேர் உருட்டவீறு
கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
குண்டலந் திருவில்வீசக்
கோலப்ர பாமண் டலச்சுடர் துலக்கமுட்
கோலெடுத் தருண அருணன்
திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே.
(திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- பகழிக்கூத்தர்)
புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயம். எழில்மிகு தமிழ்நயம்!
வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் அந்த வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமேதெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு முறைமைகூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அவற்றைப்புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத / வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.
‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.
வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்
மனைக்குட் புகுந்து மெல்ல
வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக
வாரிவெண் ணெயை யுருட்டிப்
பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்
பருஞ்சகடு தன்னையன்று
பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு
பச்சைமால் மருக பத்தி
ஆராமை கூருமடி யவர்பழ வினைக்குறும்
பறவே உருட்டி மேலை
அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்
ஆணையா ழியையு ருட்டிச்
சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே.
(திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்- சிறுதேர்ப்பருவம்- பகழிக்கூத்தர்)
முருகனின் சிறுதேர் உருட்டி விளையாடும்போது மாதலி உருட்டும் தேரில் இந்திரனும், குபேரன் தனது புட்பகத்தேரை உருட்டியும், அருணன் உருட்டும் தேரில் சூரியனும் பெருமையுடன் வலம் வருகின்றனராம். பால் தயிர்க்குடத்தையுருட்டி, அவற்றிலிருந்து வெண்ணையை உருட்டாது வாயிலிட்டுக் கொண்டு, சகடத்தையும் உருட்டிச் சிதைத்த பச்சைமாலின் மருகனான் முருகன் அடியார்களது பழவினைகளை எல்லாம் உருட்டிவிட்டு, உலகெங்கும் தன் ஆணையாழியை உருட்டி, கொடியோர் சிரங்களைக் கொய்துருட்டிக் காக்கிறான். பலவிதமான தேர்களும் பொருட்களும் உருட்டப்படுவதைப் புலவர் நம்கண்முன்பு சொற்சித்திரங்களாகப் புனைந்து நிறுத்துவது இனிய இலக்கிய விருந்தாகின்றது.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
_
*************