Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 122

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

    கவுந்தி அடிகளின் கட்டுரை

    மிக்க பெருமைவாய்ந்தmalar
    மாமறையோன் கூறிய வழியின் இயல்புகள்
    கேட்டறிந்த கவுந்தியடிகள் தாமும்
    அர்த்தம் நிறைந்த கட்டுரை ஒன்றை உரைக்கலானார்.

    ”நல்லொழுக்கம் விரும்புகின்ற
    நான் மறையாளனே!

    நீ குறிப்பிட்ட குகையினுள் புகுகின்ற தன்மை
    நாங்கள் பெற்றிருக்கவில்லை.
    ஏனெனில்,
    நீண்ட கோடி ஆயுளையுடைய
    இந்திரன் இயற்றிய நூலினை
    எம்முடைய அருகதேவன் அருளிய
    ஆகமத்தில் நீ காணவில்லையா?

    அதன் மூலமே மெய்ப்பாட்டினை உணரும் அறிவு
    எங்களுக்கு உள்ளதால்,
    நீ குறிப்பிட்ட புண்ணிய சரவணத்தில்
    நாங்கள் நீராடவும் வேண்டியதில்லை.

    முற்பிறப்பில் செய்த எல்லாவற்றையும்
    இப்பிறப்பில் நீ காணவில்லையா?
    ஆதலால் யாம் பவகாரிணியில் படிதல் வேண்டாம்.

    உண்மை நெறியில் தவறாது,
    பிற உயிர்களைக் காத்து நிற்பவர்க்கு
    எய்துவதற்கு அரிய பொருள் என்று
    எதுவும் உளதோ?
    அதனால் நாங்கள் இட்டசித்தியை
    அடைய வேண்டியதில்லை.

    நீ விரும்பும் தெய்வமாகிய
    திருமாலைக் கண்டு அவர்தம்
    திருவடிகள் தொழுதிட நீ சென்றிடுவாயாக.
    நாங்களும் எங்கள்
    நீண்ட நெடிய வழியில் செல்வோம்”

    இங்ஙனம்அந்த மறையோனுக்குப் பொருந்தும்
    மொழிகளை உரைத்தார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  150 –  162
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்திற்கு நன்றி: http://www.dhool.com/sotd2/743.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 121

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 11: காடுகாண்காதை

    இடைப்பட்ட வழி

    ”முன்பு கூறிய இரு வழிகளிலும்
    நீவிர் செல்லவில்லையென்றால்                                                                திரௌபதி for kaadukaan kaathai
    இடைப்பட்ட செவ்விய வழியொன்று காணப்படும்.
    அவ்வழி செல்லுங்கள்.

    அவ்வழிதனில்
    தேன் வடியும் பூக்களையுடைய சோலைகளும்,
    ஊர்களும், காடுகளும்
    இடையிடையே காணப்படும்.
    அவற்றைக் கடந்து சென்றால்
    ஆங்கே அரிய வழியொன்று தென்படும்.

    அங்கே துன்பம் துடைக்கும்
    தெய்வம் ஒன்று உள்ளது.
    அவ்வழியில் செல்பவர்களை
    அச்சுறுத்தாது அத்தெய்வம்;
    என்றாலும்,
    கண்டவர் நடுங்காத வண்ணம்
    அழகான தோற்றம் கொண்டு
    அவர்களை மயக்கிப்
    பயணம் தொடரவிடாமல் தடுத்திடும்.

    அதற்கு மயங்கிவிடாமல்
    நீங்கள் தொடர்ந்து சென்றால்,
    பல கிளைவழிகளைத் தன்னுள் அடக்கியிருக்கும்
    ஒன்றியிருக்கும் இடைப்பட்ட வழியான
    மதுரைப் பெருவழி காண்பீர்கள்.
    அவ்வழியை மேற்கொண்டு செல்லுங்கள்.

    இந்நிலவுலகையளந்த நெடுமுடி கொண்ட
    எம் தலைவனாம் திருமாலின் அடிகளைக்
    கண்டுதொழ நானும் போக வேண்டும்”
    என்றான் மாங்காட்டு மறையோன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  141 – 149

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:

    http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section30a.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 118

     

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை
    இடப்பக்கத்துச் செல்லும் வழி

     

    அந்த வலப்பக்கம் செல்லாதுunnamed
    இடப்பக்கம் செல்வீராயின் அங்கே
    செவ்வழிப் பண் இசைத்துச் சத்தமிடும்
    சிறகுள்ள வண்டுகள் திரிகின்ற
    குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலை,
    தாழ்ந்த வயல்கள், குளங்கள்
    இவற்றைக் கடந்து,
    கடப்பதற்கு அரியனவாக இருக்கும்
    வழிகளையுடைய காட்டுப் பகுதியைக் கடந்து
    அழகர் மலை சென்று சேர்வீர்கள்.

    அங்கு, பொதுவாக மனிதர்களுக்கு ஏற்படும்
    மயக்கத்தைப் போக்க வல்ல குகை ஒன்றுண்டு.
    அங்கு, தேவர்களால் புகழ்ந்து போற்றப்படும்
    மிக்க வியப்பை ஏற்படுத்தக்கூடிய
    மூன்று பொய்கைகள் காணப்படும்.
    பொய்யாத சிறப்புடைய
    புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி
    இம்மூன்று பொய்கைகளும் அருகருகே காணப்படும்.

    புண்ணிய சரவணப் பொய்கையில் நீராடுவீராயின்
    விண்ணவர் தலைவனாம் இந்திரனால்
    அருளிச் செய்யப்பட்ட
    ஐந்திரம் என்னும் இலக்கண நூலறிவு பெறுவீர்கள்.
    பவகாரணிப் பொய்கையில் மூழ்கி நீராடுவீராயின்
    இந்தப் பிறவிக்குக் காரணமாயுள்ள
    உங்கள் முற்பிறப்பினைப் பற்றி அறிவீர்கள்.
    இட்டசித்திப் பொய்கையில் நீராடுவீராயின்
    உங்களுக்கு விருப்பமானதை எல்லாம்
    அடையப் பெறுவீர்கள்.
    அங்கே காணப்படும்
    குகைக்குள் நுழைய முற்பட்டால்,
    ஓங்கி உயர்ந்த மலையில் எழுந்தருளியுள்ள
    மேலான இறைவனை வணங்கி,
    மனதில் அவன் அடிகளை எண்ணித் துதித்து,
    அம்மலையை மூன்று முறை வலம் வரவேண்டும்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  87 –  107

     

     

    Share
  • மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

     

    மலர் சபா

     
    கொடும்பாளூரை அடுத்த நெடுங் குளக்கரையில் வழி முப் பிரிவாகப் பிரிதல்

    அங்கே இருக்கின்றmalar
    கொடும்பாளூர் நெடுங்குளம் என்ற
    இரு ஊர்களுக்கு இடையே உள்ள
    கோட்டகத்துக்குள் புகுந்து சென்றால்
    அந்த அரிய வழி
    பிறை நிலவதனைத் தன் தலையில் சூடிய
    பெருமை வாய்ந்த இறைவன் சிவபெருமான்
    கையில் ஏந்தியுள்ள
    மூன்று தலை கொண்ட திரிசூலம் போல்
    மூன்றாகப் பிரிந்து செல்லும்.

    வலப் பக்கம் செல்லும் வழி

    அங்ஙனம் காணப்படும் மூன்று வழிகளுள்
    நீங்கள் வலப்புறம் உள்ள வழியில் செல்ல விரும்புவீராயின்
    விரிந்து அகன்ற தலையை உடைய வெண்கடம்ப மரமும்
    காய்ந்து உலர்ந்த தலையை உடைய ஓமை மரமும்
    அடைப்பகுதியாகிய தாள்கள் பொரிந்து காணப்படும் வாகை மரமும்
    காய்ந்த தண்டுடன் விளங்கிடும் மூங்கில் மரமும்
    நீர் வற்றியதால் சுருங்கி வரிகளுடன் விளங்கிடும்
    சப்பாத்திக் கள்ளிகள் கரிந்து கிடக்கும் இடங்களையும்..

    நீர் பருக விரும்பி வேட்கையாலே
    மான்கள் அலைந்து திரிந்து சத்தமிடும்
    காட்டினையும் இடையிடையே
    பாலைவாழ் மக்களாகிய எயினர் வசிக்கும்
    பாலை நிலங்களைக் காண்பீர்கள்.

    அவற்றைக் கடந்து சென்றபின்,
    ஐவனம் என்னும் நெற்பயிர்கள் விளையும் கழனி,
    இலையற்ற கணுக்களையுடைய கரும்புச்சோலை,
    கொய்யும் பருவம் அடைந்திட்ட அழகிய திணைப்புனம்,
    கொழுவிய கொல்லையில் விளைந்திட்ட வரகு,
    வெள்ளுள்ளி மஞ்சள்
    அழகிய கொடியுடைய கவலைக் கிழங்கு,

    வாழை கமுகு,
    தாழ்ந்த குலையாகத் தொங்குகின்ற தென்னை,
    மா பலா இவை யாவும்
    அடுத்தடுத்துச் சூழ வளர்ந்திருக்கும்
    பாண்டிய மன்னனுடைய
    ‘சிறுமலை’ எனும் ஊரைக் காணலாம்.

    அம்மலை உங்கள் வலது புறமாக வரும்படி
    நீங்கள் சென்றால்
    அகன்ற நகரான மதுரை மாநகரை அடையலாம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 71 – 86

    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 116 (21.04.14)

    மலர் சபாmaraiyon

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    மறையோன் தனது ஊரையும் , தான் தென்னனை வாழ்த்திய காரணத்தையும் உரைத்தல்

    பாண்டிய நாட்டின் சிறப்பினையும்
    அம்மன்னரின் கொடை முதிலிய செய்கையையும்
    என் கண்கள் குளிரக் கண்டேன்;
    அதனால் அம்மன்னரை வாழ்த்தி வந்திருந்தேன்;
    அதனால் வருகை புரிந்தேன்.
    முத்தீயில் வேள்வி எடுக்கும் மறையோன்
    இங்ஙனம் கூறக் கேட்டு..

    மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி மறையவனிடம் கோவலன் வினாவுதல்

    மதுரைக்குச் சென்றிடும் செவ்விய வழி யாது
    என நீவிர் கூறுவீராக..
    என்று வேதம் ஓதும் மறையோனிடம்
    கேட்டனன் கோவலன்.

    மாங்காட்டு மறையோன் கூறிய மதுரை வழி கால நிலைமையையும் வழியின் அருமையையும் உணர்த்தல்

    அரசியலைத் தொழிலாகக் கொண்ட
    அமைச்சரோடு சேர்ந்து
    தன் செங்கோல் வளையும் வண்ணம்
    அரசனும் நெறி தவறி நடக்க,
    அதனால் நல்லாட்சி இழந்த நாட்டைப் போல..

    வேனில் காலமெனும் அமைச்சனோடு
    கொடுங்கதிர் சூரியன் சேர்ந்து
    தன் நெறிகளில் தவறித்
    தான் உருவாக்கிய நலன்களைத்
    தானே அழித்தனன்.

    முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும்
    தன் இயல்பது மாறி அழிந்து
    தமது நன்மைகளில் குன்றி
    நம்பிய மக்களுக்கு
    நடுநடுங்கக்கூடிய துயர் விளைவித்தது.

    தம் இயல்புநிலை மாறிப்
    பாலையென வடிவம் மாறி விளங்கிய
    இக்காலம் தன்னில்
    நீயும் இக்காரிகை தன்னுடன்
    பயணம் வந்துள்ளாய்..

    கற்பாறைகளும் சிறுமலைகளும்
    அரிதான வழிகளும் நிறைந்த,
    காண்போரைக் குழப்பமடைய வைக்கும்
    இக்கானல் நீர்த்தோற்றமும் உடைய
    இந்நெடிய பாலைவழியைக் கடந்து சென்றால்..

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  54 – 70

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:

    http://www.inbaminge.com/t/slokas/Vedic%20Chanting/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 115

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    கோவலன் மறையோனுடைய வருகை பற்றி வினாவுதல்

    கோவலன் மறையோனிடம்,images (6)
    “உம் ஊர் யாது?
    நீவிர் இங்கு வருகை புரிந்ததற்குக்
    காரணம் என்ன?” எனக் கேட்க..

    மறையோன் தன் வரவின் நோக்கத்தை எடுத்துரைத்தல்

    குறையாத சிறப்புடைய
    அம்மறையோன் தானும்
    தான் வந்ததன் காரணத்தை
    எடுத்துச் சொன்னான் இங்ஙனம்.

    திருவரங்கத்தில் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணம்

    நெடிதுயர்ந்த பொன்மலைமேல்
    நீல நிற மேகம்
    பரந்து விரிந்து
    அகலாது படிந்ததுபோலவே,
    அகன்று எழுந்த ஆயிரம் தலையுடைய
    அரிய வலிமை பெற்ற
    ஆதிசேடன் பாம்பணை மீது
    பலரும் தொழுது வணங்கிடும்,

    விரிந்த அலைகளையுடைய
    காவிரியாற்றின் திருவரங்கத்தில்,
    திருமகள் அவள் விரும்பித் தங்கிடும்
    திருமார்பினையுடைய திருமால்
    பள்ளி கொண்ட கோலமதனையும்..

    திருவேங்கடத்தில் நெடியோன் நின்ற வண்ணம்

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  32 – 53
    படத்துக்கு நன்றி:

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 114 (31.03.14)

    மலர் சபா
    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்திய வண்ணம் இளமரக் காவில் புகுதல்

    அம்மண்டபத்தில் ஒரு மறையோனும் இருந்தான்.
    அவன் பாண்டியர்களின் பெருமைகளை
    இங்ஙனம் பேசினான்.

    “வாழ்க எம் மன்னன்!
    மன்னர் பெருந்தகையாளன்!
    பல்லாண்டு காலம் இவ்வுலகை
    அவனே காத்து நிற்பானாக!
    அவன், தன் பெருமை
    பிற மன்னர்களுக்குப் புலப்படும்படி
    அவர்களைத் தம் காலடியில்
    பணிந்திட வைத்தவன்.
    அவன் தன் வடிவேலைக் கடல்மீது எய்திட
    அதனைத் தாங்காத கடலானது
    பஃறுளி ஆற்றோடு சேர்த்துக்
    குமரிமலை அடுக்குகளையும் விழுங்கியது.

    வடக்குத் திசையிலுள்ள
    கங்கையையும் இமயத்தையும்
    கைப்பற்றிய அம்மன்னன்,
    தென் திசை முழுவதையும்
    ஒரு குடையின் கீழ் ஆண்டவனுமாவான்.
    அவன் வாழ்வாங்கு வாழ்வானாக!

    சந்திரகுலத் தோன்றலாகிய
    பாண்டியர் மரபு சிறக்க
    ஆயிரம் சிவந்த கண்களையுடைய
    இந்திரன் பூட்டிய
    வலிமைமிக்க ஆரத்தைத்
    தன் மார்பில் அணிந்து வாழ்ந்து வந்தான்.
    அப்பாண்டிய மன்னன் வாழ்வானாக!

    முதல்வனாகிய இந்திரன்
    தன் தலையில் சூடிய முடியில் இருந்த
    கிம்புரியை உடைத்தவன்..
    அவனது நாட்டில் சிலகாலம்
    இடி கொண்ட மேகங்கள்
    மழை பொழிவிக்காது பொய்த்தன.
    அவ்வேளையில்,
    மேகக்கூட்டத்தை விலங்கிட்டு அழைத்துவந்து
    பெருமழை பொழியச்செய்து
    விளைநிலங்களை விளையச் செய்தவன் அவன்.
    உக்கிரகுமாரபாண்டியன்..
    அவனது புகழ் வாழ்வதாக!”

    இங்ஙனம்
    குற்றமற்ற பெருமை வாய்ந்த
    பாண்டியர் மரபினை
    வாழ்த்திக் கொண்டிருந்தனன் மறையோன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 31
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 113 (24.03.14)

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    உறையூரில் தங்கிய கவுந்தி முதலிய மூவரும் வைகறையில் புறப்பட்டுத் தென் திசை நோக்கிச் செல்லுகின்ற வழியில் உதயகாலத்தில் ஓர் இள மரக் காவில் புகுதல்

    rose-garden-3-bo-li

    மூன்று திங்களை அடுக்கி வைத்தது போல் விளங்கிய
    முப்பெரும் குடையின் கீழ்
    மாலையாக மலர்ந்து தொங்கும்
    அசோக மரத்தின் அடர்ந்த நிழலின்கண்
    சிவந்த கதிர்களையுடைய
    கதிரவனின் ஒளி போல் விளங்கும்
    அருகதேவன் எழுந்திருளியிருக்கிறான்.
    அவன் தனக்கென்று ஓர் ஆதி இல்லாதவன்.

    அவனை அம்மூவரும் வணங்கித் தொழுதனர்.
    பின் அங்கே தவப்பள்ளியில் தங்கியிருந்த
    முனிவர் அனைவர்க்கும்
    முன்னர் ஆற்றிடைக் குறையாகிய
    திருவரங்கத்துச் சோலையில்
    சாரணர் தமக்கு அருளி உரைத்த
    அற மொழிகளைக் கவுந்தியடிகள் எடுத்துரைத்தார்.

    அன்றிரவு அருகதேவன் தங்கியிருந்த
    அந்த இடத்தில் தங்கியிருந்து,
    பின் வைகைறையில் தென் திசை செல்ல விரும்பி
    உறையூரை விட்டு நீங்கி நடக்கலாயினர்.

    ஞாயிறு கிழக்குத்திசையில் இருந்து
    ஒளி பர்ப்பி எழுகின்ற வேளை;
    நீர்நிறைந்த வளம் பொருந்திய
    வயல்களும் குளங்களும்
    பொலிவுற்று விளங்கும்
    அழகு பெற்ற பூஞ்சோலை வழியே சென்றனர்.
    வழிப்போக்கர்கள் தங்கும் மண்டபத்தை அடைந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 – 14

     
    படத்திற்கு நன்றி:
    http://www.mumsema.com/misafir-sorulari/154161-bahar-mevsimi-gul-bahcesi.html
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 112 (17.03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    உறையூர் சென்று சேர்தல்

    சாப விமோசனம் தந்தபின்
    தவத்தில் சிறந்த கவுந்தியடிகளும்
    கோவலனும் கண்ணகியும்
    அச்சோலையை விட்டுப் புறப்பட்டனர்.

    முன்பு ஒரு முறை
    முறம் போன்ற காதையுடைய யானை ஒன்றைப்
    போரிட்டு வென்ற கோழியின் பெயரைத் தாங்கி,
    கோழியூர் எனவும் அழைக்கப்பட்ட
    உறையூருக்குள் சென்றனர்.

    கட்டுரை

    முடியுடை வேந்தர் மூவருள்
    வீரவளை அணிந்த பெரிய கைகளையுடைய
    சோழமரபில் பிறந்தவர்கள்,
    அறம், மறம், ஆற்றல் மற்றும்
    அவர் பழம் பெரும் புகாரின் பண்பு,
    இந்திரவிழாச் சிறப்பு, விண்ணவர் வரவு,
    குடிமக்களின் மாண்பு, உணவுப்பொருள் பெருக்கம்,
    தெய்வத்தை ஒத்த காவிரி நீரின் சிறப்பு,

    பொய்க்காத வானம், புனல் பொழியும் சிறப்பு,
    ஆடலரங்கின் அமைப்பு,
    தூக்கு, வரி, பதினோரு வகை ஆடல்கள்,
    திணைநிலை வரி, இணைநிலை வரி..இவற்றின் தன்மை
    இவை எல்லாம் பொருந்த அமைந்த யாழின் இயல்பு,
    அவற்றுள் சிறந்த பதினான்கு வகை
    இசைக்கோவையாகிய யாழின் சிறப்பு,
    இடைநிலைப் பாலைப்பண்ணின் சிறப்பு,
    அதன் வழித் தோன்றிய இசையின் ஆக்கம்,
    புகாரின் பொலிவு, ஒளியுடைப்பாணி

    மேலும் இங்கு சொல்லப்படாத
    இன்னும் பல சிறப்புகளுடன்
    ஒருமித்துப் பொருந்தி விளங்கும்
    புகார்க் காண்டம் முற்றிற்று.

    வெண்பா

    கடலை வேலியெனக் கொண்டமைந்ததும்
    இப்பூமிமகள் தன் நெஞ்சில் அணிந்த
    முத்துமாலை போன்றதுமான
    புகழ்பெற்ற காவிரிப்பூம்பட்டினம்…

    காலை நேரம் உதித்து ஒளிபரப்பும் சூரியன் போலவும்
    மாலை நேரம் உதித்து வளரும் இயல்புடைய திங்கள் போலவும்
    வாழ்வாங்கு வாழ்வதாக!

    புகார்க் காண்டம் முற்றிற்று.
    அடுத்து வருவது  மதுரைக் காண்டம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  245 – 271

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 111 (10.03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை
    கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளை வணங்கி, சாபத்தை நீக்கியருள வேண்டுதல்

    கவுந்தியடிகள் இட்ட சாபம்
    தவத்தின் பயனாய் விளைந்த சாபம் என்பதால்
    சபிக்கப்பட்ட இருவரும்
    என்ன என்று உணரும் முன்னே
    அச்சாபம் பலித்து விட்டது.
    அவ்விருவரும் உடனே
    நரி உருவம் கொண்டு
    ஊளையிட்ட படி ஓடினர்.

    அந்தச் சத்தம் கேட்டு
    நறுமலர் அணிந்த கண்ணகியும் கோவலனும்
    “அறநெறியிலிருந்து விலகிச் சென்ற
    இவர்கள் இங்ஙனம் பேசுவது
    அவர்களின் அறியாமையால்தான்..
    சிறந்த தவம் செய்தவரே!
    இக்கயவர்கள் இச்சாபம் நீங்கி வாழும்
    கால எல்லையையும்
    நிங்கள் தயவுசெய்து கூறவேண்டும்”
    என்று கவுந்தியடிகளிடம் வேண்டினர்.

    கவுந்தியடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதல்

    “தமது அறியாமையால் இழிபிறப்பு பெற்ற இவர்கள்
    உறையூர் மதிற்புறத்தில் காவற்காட்டில்
    பன்னிரு மாதங்கள் அலைந்து திரிந்து
    தம் நிலையை நினைத்து வருந்திய பின்
    இவர்கள் தங்களுடைய
    பழைய உருவம் பெறுவார்களாக” என்று
    கவுந்தியடிகள் சாபவிமோசனம் தந்தார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  233 – 244

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 110 (03..03.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     
    கவுந்தியின் மறுமொழி

    கவுந்தியடிகளும் இங்ஙனம் மறுமொழி பகன்றார்:
    “இவர்கள் எம்முடைய மக்கள்;
    நீங்கள் கூறியது போல்
    மன்மதனோ ரதியோ அல்லர்.
    நீண்ட வழி நடந்து வந்து
    மிகவும் களைப்புற்று இருக்கின்றனர்.
    தொந்தரவு செய்யாமல்
    இவர்களை விட்டு விலகிச் செல்லுங்கள்.”

    காமுகர்கள் பழிப்புரை

    அதற்கு பதில்கூறுமுகமாய்,
    “ஒரு தாய் வயிற்றில் பிறந்த இருவர்
    கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்வது என்பது
    நீர் கற்ற எந்த நூலிலும் உள்ளதோ?”
    என்று கேலி பேசினர் அந்தக் காமுகர்கள்.

    கவுந்தியடிகள் சாபம்

    இத்தீய மொழிகளைக் கேட்ட கண்ணகி
    தன் செவிகள் மூடிக் கொண்டு
    தன் கணவன் முன்னே நடுநடுங்கி நின்றாள்.

    “பூமாலை போன்ற என் கண்ணகியை
    இவர்கள் கேலி பேசுகிறார்களே…
    இவர்கள் முள் நிறைந்த காட்டில்
    முதுநரிகளாகத் திரிந்து அலைவார்களாக”
    எனச் சாபமிட்டார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  225 – 232

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 109

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    சாரணர் மறைதல்

     

    கவுந்தியின் புகழ் வார்த்தைகள் கேட்ட

    சாரணர்கள் மனமொன்றி மகிழ்ந்து

    நிலமட்டத்தினின்று ஒரு முழம்

    உயர்ந்த நிலையில் நின்று,

    “கவுந்தியே! பிறவி தருகின்ற பற்று

    உனக்கு இல்லாமல் போவதாக” எனக்கூறி

    நீள் நிலம் வழி செல்லாமல்

    வான்வழியே பறந்து சென்றனர்.

     

    அவர் சென்ற திசை நோக்கி

    கோவலனும் கண்ணகியும்

    அடிகளுடன் பணிந்து வேண்டினர்.

    “எம் பிறவிப் பந்தம் அறுக” என்று.

     

    காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து மூவரும் ஒரு சோலையில் இருத்தல்

     

    மேகங்கள் சூழ நின்ற சோலைகளில் இருந்த

    காவிரியாற்றங்கரையில் நீர் நிறைந்த நெடுந்துறையில்

    கண்ணகியும், கோவலனும், தவத்திரு கவுந்தியடிகளும்

    ஓடம் ஒன்றில் ஏறி அமர்ந்து

    குற்றம் தீர்க்கவல்ல கோயில்கள் இருந்த

    தென்கரையை அடைந்தனர்.

     

    அங்கே மலர்கள் சூழ நின்றிருந்த

    பூஞ்சோலைகளில் அமர்ந்து இளைப்பாறினர்.

     

    வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்

     

    ஆங்கே,

    பரத்தைத் தொழிலைப் புதிதாக மேற்கொண்ட

    பரத்தைமகள் ஒருத்தியும்

    அவள்மீது காமம் கொண்டு அவளுடன் சென்ற

    பயனற்ற சொற்கள் பேசித்திரியும் காமுகன் ஒருவனும்

    நறுமணச் சோலையில் புகுந்து

    அம்மூவரின் அருகில் வந்தனர்.

     

    கோவலனையும் கண்ணகியையும் பார்த்த அவர்கள்,

    “மன்மதனும் இரதியும் போல இருக்கும் இவர்கள் யார்?”

    என்றுணர்ந்திடும் வண்ணம் அவர்களை நெருங்கி,

    கவுந்தியடிகளிடம் கேட்டனர்..

    “நோன்புகள் நோற்றுப் பட்டினி கிடந்ததால்

    உடல்மெலிந்த தவத்தீரே!

    உம்முடன் வந்துள்ள இவர்கள் யார்?” எனக் கேட்டனர்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  208 – 224

     

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 108 (10.02.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    சாரணரது அறிவுறையைக் கேட்டு, கவுந்தி கூறிய புகழ்மாலை

    சாரணர் மொழி கேட்ட
    தவத்தில் சிறந்த கவுந்தி
    தன் தலை மேல் கைவைத்து வணங்கி,

    “காமம், வெகுளி, மயக்கம்
    இம்மூன்றையும் அடக்கி வென்ற அருகதேவன்
    தம் அருளால் உரைத்த திருமொழி மட்டுமேயல்லாது
    பிறமொழிகளை எம் செவிகள் ஏற்காது….

    காமனை வென்ற அருகதேவனது
    ஆயிரத்தெட்டு நாமங்களைப் போற்றுவதேயல்லாது
    வேறொரு நாமத்தை என் நா நவிலாது…

    ஐம்புலன்களையும் அடக்கி வென்ற
    அருகதேவனின் திருவடிகளை மட்டுமேயல்லாது….
    வேறு தேவர்களின் திருவடிகள்
    மிக அருகில் இருந்தாலும்
    எம் கண்கள் அவற்றைப் பார்க்காது…

    அருளும் அறனும் பூண்டு ஒழுகும்
    அருகதேவனுக்கேயல்லாது
    வேறு எவருக்காகவும்
    என் பயனற்ற இவ்வுடல்
    பூமியில் பொருந்தி வணங்கிடாது…

    அறங்கூறும் அருகதேவனை வணங்குவதற்கேயல்லாது
    வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதற்கு
    என் கைகள் குவிந்திடாது…

    அருகனின் மலரடிகளை அணிந்திடுமேயல்லாது
    வேறு எந்தத் திருவடிகளையும்
    என் உச்சியானது அணிந்திடாது…

    என்றும் முடிவில்லா இன்பத்தையுடைய
    இறைவன் ஓதிய வேதத்தையல்லாது
    வேறு எந்த மொழியையும்
    என் உள்ளம் ஓதாது..”

    இங்ஙனம் அருகதேவனைப்
    போற்றித் துதித்தார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  192 – 207

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 107 (03.02.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    அனைத்தும் அறிந்த அறிவுடையவன்,
    அறநெறியைக் கடைப்பிடிப்பவன்,
    அறிவின் எல்லையைக் கடந்து நிற்பவன்,
    உயிர்களுக்கு இன்பம் தருபவன்,
    வினைகள எல்லாம் வென்றவன்,
    தகுந்ததைச் செய்யும் சித்தமுடையவன்,
    செயல்களுக்கு மூலமானவன்,
    தருமத்துக்கு முதலானவன்;

    தேவர்களின் தலைவன்,
    புனிதமானவன் பழமையானவன்,
    புலவன் ஆனவன் சினத்தைக் கடந்தவன்,
    தேவர்களுள் முதல்வன், இவ்வுலகின் தலைவன்,
    பரமன் சிறந்த குணம் உடையவன்,
    இவ்வுலகிற்கு விளக்கானவன்;

    தத்துவங்களை அறிந்தவன்,
    ஐம்புலன்களையும் அடக்கியாள்பவன்,
    விண்ணிலிருந்து இயங்குபவன்,
    அனைத்துக்கும் மூல காரணமானவன்,
    சித்திகள் அறிந்த சித்தன்,
    பெரியவன் தலைமைப்பண்பில் சிறந்தவன்,
    ஒளியாக விளங்குபவன்,
    இறைவன் ஆசிரியன் இயல்பான நற்குணத்தினன்,
    எம்முடைய அரசன் குறைவில்லாப் புகழை உடையவன்.

    குணத்தில் சிறந்த கோமான்,
    எல்லார்க்கும் நன்மை செய்பவன்,
    எல்லாச் செல்வமும் உடையவன்,
    சுயமாகத் தோன்றியவன்,
    நான்கு முகங்களைக் கொண்டவன்,
    அங்கம் பயந்தோன், அருகன்,
    அருள் தரும் முனிவன்;

    பண்ணவன், எண்வகைக் குணங்களையுடைவன்,
    விளங்குவதற்கரிய பழம்பொருளானவன்,
    விண்ணவன், வேதத்தின் முதல்வன்,
    அறியாமை இருளை நீக்குகின்ற ஒளியானவன்.

    இத்தகைய சிறப்புப்பெயர்களையும் குணங்களையும்
    வேதத்தின் ஒளியாக விளங்குபவனுமாகிய
    அருகதேவனைச் சார்ந்து இருந்தால் அன்றி
    பிறவி எனும் மூடிய அறையில் இருந்து
    வெளியேற முடியாது…

    இங்ஙனம் சாரணன் அவனும்
    அருகனின் புகழதனை எடுத்தியம்பினன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  176 – 191

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 106

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை


    அவர்கள் பழவினை குறித்து
    சாரணன் அறிந்தபோதும்
    விருப்பு வெறுப்பு கடந்தவன்
    தவம் செய்தவன் என்பதால்
    தன்னை வணங்கி நின்ற அவர்களின்
    துன்பம் அறிந்திட்ட போதும்
    கலக்கம் கொள்ளவில்லை.

    குறிப்பால் அவர்களுக்கு உணர்த்த எண்ணியே
    கவுந்தியடிகளிடம் பேசலானான்;
    “மிக்க பெருஞ்சிறப்பினையுடைய கவுந்தியே!
    ஒழிக என்றாலும் யாராலும் ஒழிக்க முடியாத
    தீவினையைக் காண்பாயாக!
    விளைநிலத்தில் இட்ட வித்து
    விளைந்து தகுந்த பயன் தருவதுபோலவே
    இவர்களின் பழவினையும் வந்து
    அதன் பயனை இவர்கள் அனுபவிக்க நேரும்போது
    அதைத் தவிர்க்க முடியாது..
    இதனை இவர்கள் மூலமாக அறிந்து கொள்வாய்.

    கடுமையாகக் காற்று வீசுகின்ற
    திறந்த வெளியிடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட
    விளக்கின் சுடரானது
    காற்றில் அழிந்து மறைவதைப்போல
    பழவினைப் பயன் வந்து தக்கும்போது
    உடலைவிட்டு உயிர் பிரிவது உறுதி” என்று கூறினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  168 – 175
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share