நான் அறிந்த சிலம்பு – 114 (31.03.14)
மலர் சபா
மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை
மாங்காட்டு மறையோன் தென்னனை வாழ்த்திய வண்ணம் இளமரக் காவில் புகுதல்
அம்மண்டபத்தில் ஒரு மறையோனும் இருந்தான்.
அவன் பாண்டியர்களின் பெருமைகளை
இங்ஙனம் பேசினான்.
“வாழ்க எம் மன்னன்!
மன்னர் பெருந்தகையாளன்!
பல்லாண்டு காலம் இவ்வுலகை
அவனே காத்து நிற்பானாக!
அவன், தன் பெருமை
பிற மன்னர்களுக்குப் புலப்படும்படி
அவர்களைத் தம் காலடியில்
பணிந்திட வைத்தவன்.
அவன் தன் வடிவேலைக் கடல்மீது எய்திட
அதனைத் தாங்காத கடலானது
பஃறுளி ஆற்றோடு சேர்த்துக்
குமரிமலை அடுக்குகளையும் விழுங்கியது.
வடக்குத் திசையிலுள்ள
கங்கையையும் இமயத்தையும்
கைப்பற்றிய அம்மன்னன்,
தென் திசை முழுவதையும்
ஒரு குடையின் கீழ் ஆண்டவனுமாவான்.
அவன் வாழ்வாங்கு வாழ்வானாக!
சந்திரகுலத் தோன்றலாகிய
பாண்டியர் மரபு சிறக்க
ஆயிரம் சிவந்த கண்களையுடைய
இந்திரன் பூட்டிய
வலிமைமிக்க ஆரத்தைத்
தன் மார்பில் அணிந்து வாழ்ந்து வந்தான்.
அப்பாண்டிய மன்னன் வாழ்வானாக!
முதல்வனாகிய இந்திரன்
தன் தலையில் சூடிய முடியில் இருந்த
கிம்புரியை உடைத்தவன்..
அவனது நாட்டில் சிலகாலம்
இடி கொண்ட மேகங்கள்
மழை பொழிவிக்காது பொய்த்தன.
அவ்வேளையில்,
மேகக்கூட்டத்தை விலங்கிட்டு அழைத்துவந்து
பெருமழை பொழியச்செய்து
விளைநிலங்களை விளையச் செய்தவன் அவன்.
உக்கிரகுமாரபாண்டியன்..
அவனது புகழ் வாழ்வதாக!”
இங்ஙனம்
குற்றமற்ற பெருமை வாய்ந்த
பாண்டியர் மரபினை
வாழ்த்திக் கொண்டிருந்தனன் மறையோன்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 31
http://www.chennailibrary.com/
