Tag: கணியன்பாலன்

  • அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

    கணியன்பாலன்

            அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்

    பாரதியும் தமிழும்:

         “வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி ” என்றும்

         “வானம் அறிந்தது அனைத்தும் அறிந்த வளர்மொழி” என்றும்

                தமிழ் மொழி குறித்து நமது எட்டயபுரத்து முண்டாசுக் கவிஞன் பெருமிதத்தோடு பாடுகிறான். அவன் தமிழின் மகாகவிகளில் ஒருவன். பல மொழிகளைக் கற்றவன். நமது தமிழகத்தின் தேசியக் கல்வி குறித்து மிக நீண்டகால நோக்கோடு அந்த மகாகவி பாரதி சொல்லிய சொற்கள் காலத்துக்கும் அழியாதவை. ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியவை.

            “தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாசையை பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித உப பாசையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசீயம்’ என்ற பதத்தின் பொருளுக்கு விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாசையே பிரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை; இதை மறந்து விடக் கூடாது”. (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், பக்:365)

          கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் பாரதி சொல்லிய சொற்கள் இவை. இங்கு தேசம் என்பது தமிழகமே. அன்றே தமிழ் தேசியக் கல்விக் கொள்கை குறித்துப் பாரதி பேசியுள்ளார். தமிழ் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையாகத் தமிழ் மொழிதான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் இருக்கக் கூடாது என்றும் தெளிவாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் அவர்,“தேச பாசையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப் படவேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாசை மூலமாக பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக்கல்வி என்று பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ?” என்கிறார்(அதே நூல், பக்;368). ஆக தமிழகத்தின் தேசிய மொழி தமிழ் என்பதையும், அதன் மூலம்தான் அனைத்துப் பாடங்களும் சொல்லித்தரப்பட வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

            மேலும் அவர்,“தமிழ்நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் பாசையில் நடத்த வேண்டும் என்பது பொருள். நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாக கற்பிக்கப்படுவதுமின்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். சிலேட், பென்சில் என்று சொல்லக்கூடாது” என்கிறார்(அதே நூல்,பக்:395). இறுதியாக அவர் சொல்வதைக் கேளுங்கள்,“தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக்கல்வி இன்றியமையாதது. தேசியக்  கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்”(அதே நூல், பக்:384). என்கிறார்.

              பாரதி மிகக் கடுமையான வார்த்தைகளால் தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தைச் சாடுகிறார். கவிஞனுக்கே உரிய ஆவேசத்தோடு தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தைப் பிசாசுகள் வாழும் சுடுகாட்டுக்கு ஒப்பிடுகிறார். அதனால் தான் அவர் மகாகவி ஆகிறார். தமிழகத்தில் தேசியக் கல்வி என்பது தமிழ்வழிக் கல்விதான் என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறார். அவர் சொல்லிச் சென்று 100 ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகியபின் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டுள்ளது? அந்நிய மொழி மோகம் தலை விரித்தாடுகிறது. ஏன் இந்த நிலை? விஜய நகரப் பேரரசின் நாயக்கர் ஆட்சிகாலம் முதல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை 700 வருடங்களாகத்  தமிழகம் அந்நியர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், தொடர்ந்து இன்று வரை தமது தவறான சிந்தனைகளின் மூலம் தமிழர்களின் சுய சிந்தனையை மழுங்கடித்து வருவதும் இந்நிலைக்குக் காரணம் எனலாம். அதனால் “அடிமையின் தாகம் அந்நிய மொழி மோகம்” என்பது நமக்குப் பொருந்துகிறது.

    மொழியே நமது அடையாளம்:

                 நமது மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக  வாழ்ந்து வந்த நமது தாய் தந்தையர்களின், நமது முன்னோர்களின் பரந்து விரிந்த அறிவும், நீண்ட நெடிய அனுபவமும், ஆழ்ந்த கருத்துக்களும், உயர்ந்த தத்துவங்களும், சிறந்த பழக்க வழக்கங்களும், விழுமிய பண்பாடும், போற்றத்தக்க அறிவியலும், தொழில்நுட்பமும், புகழ்மிக்க அவர்களின் வரலாறும் இன்னபிறவும் நமது மொழியில் தான் காலங்காலமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டன. நமது மொழியில் தான் தொடர்ந்து அவைகளைப் பாதுகாத்து வைத்தும் வருகிறோம். உலகெங்கும் உள்ள அனைத்து மனித இனங்களும் அதனதன் மொழிகளில்தான் இவைகளைப் பாதுகாத்து வந்தன, தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. மொழி இல்லாது போகும்பொழுது அது பாதுகாத்து வந்த அனைத்தும் இல்லாது போய் விடும். அப்பொழுது அந்தச் சமுதாயமும் இல்லாது போய்விடும். எனவே மொழி என்பது வெறும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் கருவி மட்டுமல்ல. ஒரு மொழி பேசும் சமுதாயத்தின் உயிர் அதன் மொழி தான். அம்மொழியே அச்சமுதாயத்தின் ஆன்மா. அதுவே அதன் ஆளுமையும் ஆகும்.

                அதனால் தான் மொழியை இழந்த சமுதாயம் எளிதில் அடிமையாகி விடுகிறது. அழிந்தும் போய் விடுகிறது. ஒரு சமுதாயத்தை அடிமைப்படுத்த விரும்பும் அந்நிய சக்திகள் முதலில் அதன் மொழியைச் சிதைத்து அழிக்க விரும்புகின்றன. வரலாற்றில் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. பண்டைய எகிப்திய சமுதாயம் இன்று இல்லை. அதன் பிரமிடுகள் மட்டுமே இன்று சாட்சிகளாக நிற்கின்றன. அன்றைய எகிப்திய மக்கள் முழுமையாகக் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு விடவில்லை. அவர்கள் தங்கள் பண்டைய மொழி அறிவை இழந்து, தங்கள் மொழியை மறந்து அந்நியர்கள் திணித்த அந்நிய மொழியைத் தங்கள் மொழியாக மாற்றிக் கொண்டதால், நாளடைவில் பழைய மொழி குறித்த எந்தவிதத் தடையமும் அவர்களிடம் இல்லாதுபோய் அவர்களின் பண்டைய சமுதாயமே இல்லாது போய் விட்டது. இன்று எகிப்து ஒரு அரேபிய மொழி பேசும் அரேபிய நாடாக ஆகியுள்ளது.

             800 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் தமிழ்தான் இருந்தது. அன்று அவர்கள் தமிழர்களாக இருந்தனர். இன்று அவர்கள் மழையாளிகளாக மாறிவிட்டனர். சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரையான உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட மிகப்பெரிய இலக்கியச் செல்வத்தை அவர்கள் இழந்துவிட்டனர். தாங்கள் ஒருகாலத்தில் தமிழர்களாக இருந்தோம் என்பதையும் மறந்து விட்டனர். அவர்களின் 3000 ஆண்டுகால வரலாறு என்பது 800 ஆண்டுகால வரலாறாகச்  சுருங்கிவிட்டது. தமிழகமும் வேறு ஏதாவது மொழிக்கு மாற்றப்பட்டிருந்தால் தமிழ்மொழியின் பண்டைய இலக்கியச் செல்வம் அனைத்தும் இல்லாது போயிருக்கும் என்பதோடு, தமிழர்கள் என்ற இனமே இல்லாது போயிருக்கும். உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியத்தை உலக சமுதாயம் இழந்திருக்கும். ஒருவர் தன் தாய் மூலமே, தான் யார் என்பதை அறிய முடியும். அது போலவே ஒரு சமுதாயம் அதன் மொழி மூலமே தாங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆகவே மொழி என்பது ஒரு தாய் போன்றது. ஒரு சமுதாயம் அதன் மொழியை இழந்தால் அதன் வரலாறு, பண்பாடு, இலக்கியம், இசை, அதன் தொழில்நுட்பம், அறிவியல் என அனைத்தையும் அது இழந்து விடும். நாளடைவில் தான் யார் என்பது அதற்குத் தெரியாதுபோய் அடிமைகளாக, கீழ் மக்களாக ஆகவேண்டிய நிலை ஏற்படலாம். வரலாற்றில் இந்நிலை பல சமுதாயங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

               நாம் யார் என்பதை நமது வருங்காலப் பரம்பரை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நமது மொழியை நாம் பாதுகாப்பது அவசியம். ஒவ்வொருவரும் தனது பெயரைச் சொல்ல வாரிசு வேண்டும் என விரும்புகின்றனர். தனது வாரிசுகளைப் பாதுகாக்கவும் விரும்புகின்றனர். அதற்காகத் தனது காலம் முழுவதையும் செலவழித்துப் பாடுபடுகின்றனர். ஆனால் தனது சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற விருப்பம் அவர்களுக்கு இருப்பதில்லை. தனது சமுதாயத்தைப் பாதுகாப்பதன் மூலமே தனது பரம்பரையைப் பாதுகாக்க முடியும் என்பதை அவர்கள் அறியவில்லை. சமுதாயத்தைப் பாதுகாக்க மொழியைப் பாதுகாப்பது அவசியம் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. ஆனால் வளர்ந்த நாடுகளில் தங்கள் சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற விருப்பம் அவர்களிடம் இருக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் மொழியைப் பாதுகாக்கிறார்கள்.

         இந்தியாவில், தமிழகத்தில் அது சாதியை, மதத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது. மதமோ சாதியோ சமுதாயத்தைப் பாதுகாக்க முடியாது என்பதோடு அவை மனிதனைப் பிளவுபடுத்தி மனிதமாண்புகளைச் சிதைத்து, சமுதாயத்தை முடமாக்கி அழித்து விடுகிறது. மேலும் அதனால் சமுதாயத்தின் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, தொழில்நுட்பம், அறிவியல் முதலியனவற்றை பாதுகாக்க முடியாது. மொழி மட்டுமே சமுதாயத்தை மேம்படுத்தி, இவைகளைப் பாதுகாக்கவல்லது. ஒரு மொழியின் இலக்கியம் (கவிதை, காப்பியம், உரைநடை, கதை போன்றவை) தனி மனிதனைப் பண்படுத்தி,  அவனை ஒரு பொறுப்புள்ள சமுதாய  உறுப்பினனாக மாற்றித்தருகிறது. அவன் நாளடைவில் அச்சமுதாயத்தின், உலக சமூகத்தின் ஒரு சிறந்த பாதுகாவலனாக மாறுகிறான். உலகளாவிய விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உலக மனிதனை உருவாக்கும் தன்மை வாய்ந்தவை. எனவே ஒரு சிறந்த மொழியை, செவ்வியல் இலக்கியங்களை உடைய மொழியைப் பாதுகாப்பது என்பது அந்த மொழிச் சமுதாயத்தை மட்டுமல்ல, உலகத்தை உலக மனிதனைப் பாதுகாப்பதும் ஆகும்.

    வளர்ந்த நாடுகளில் மொழி:

            ஒரு சமுதாய மக்களின் மொழி அதன் ஆட்சி மொழியாக, அதன் கல்வி மொழியாக, அச்சமுதாயத்தின் அனைத்துமாக இருக்க வேண்டும். அதன் மூலமே அச்சமுதாயத்தின் வளர்ச்சியை, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். சொந்த மொழியை ஆட்சி மொழியாகக் கல்வி மொழியாகக் கொண்டிராத எந்த நாடும் வளர்ச்சி பெற்றதாக வரலாற்றில் காண முடியாது. ஆசியாவில் நன்கு வளர்ச்சிபெற்ற சீனா, ஜப்பான், கொரியா ஆகிய மூன்று நாடுகளையும், ஐரோப்பாவில் நன்கு வளர்ச்சிபெற்ற ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளையும் எடுத்துக் கொள்வோம். இவைகளின் மொழிகள் முறையே சீனமொழி, ஜப்பான்மொழி, கொரியமொழி, ஜெர்மன்மொழி, பிரெஞ்சுமொழி, இத்தாலிமொழி என்பன ஆகும். இன்னாடுகளில் இம்மொழிகளே ஆட்சி மொழிகளாக, கல்விமொழிகளாக உள்ளன. ஆரம்பக்கல்வியில்   வேறுமொழிகள் சொல்லித்தரப் படுவதில்லை. சில வருடங்களாக உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆங்கிலம்  ஒரு மொழியாகச் சொல்லித் தரப்படுகிறது. கல்லூரிகளில் பிற மொழிகள் மொழி ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் மேலே சொல்லப்பட்ட அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாட்டு மொழிவழிக் கல்வியே ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை உள்ளது.

              ஆக இந்த வளர்ந்த நாடுகள் அனைத்தும் தம் சொந்த மொழிகளிலேயே அனைத்துப் பாடங்களையும் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகம்வரை சொல்லித் தருகின்றன. அதனால் தான் அவை வளர்ந்த நாடுகளாக உள்ளன. இன்றாவது அவை உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கட்டாயம் சொல்லித் தருகின்றன. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது பிற மொழிகளில் எதையாவது ஒன்றைக் கற்க வாய்ப்பு இருந்ததே ஒழிய ஆங்கிலம் ஒரு கட்டாய மொழிப் பாடமாக அன்று இல்லை. ஆனால் உலகமயமாக்கல் என்பதன் காரணமாகவும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் ஆங்கிலம் இருப்பதாலும், வணிக நோக்கிலும், ஏதாவது ஒரு பிற மொழி அறிவு மனித ஆளுமைக்கு நல்லது என்பதாலும் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் அவை கற்றுத்தருகின்றன. அதே சமயம் அவர்களின் மொழியே அனைத்துமாக அங்கு இருந்து வருகிறது.

        சீனா உட்பட பல வளர்ந்த நாடுகள் அனைத்துமே கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியிலும் உலகின் முன்னணி நாடுகளாக இருந்து வருகின்றன. இந்நாடுகளில் சொந்த மொழியே அனைத்துமாக இருக்கிறது. மிக அதிக அளவில் அவை ஏற்றுமதி செய்த போதிலும் எந்த ஒரு பிற மொழியும் ஒரு கட்டாய பாடமாகக் கூட இருக்கவில்லை. பிற மொழிவழிக்கல்வி என்பது அறவே அன்றும் இல்லை, இன்றும் இல்லை. அந்த நாட்டின் சொந்த மொழியில் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை படிப்பு இருக்கிறது. அதுதான் படிப்பில் தெளிவைத் தந்தது; ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தது; திறமையானவர்களை மட்டுமல்ல பண்பாளர்களையும் உருவாக்கியது; தன்னம்பிக்கையையும், சுயசார்பினையையும் அதிகப்படுத்தியது; ஒட்டு மொத்தமாக அந்நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு அவை வழிகோழியது. சொந்த மொழிதான் சுய சிந்தனையை, சுய அறிவை வளர்க்கும் என்பதற்கு இந்த வளர்ந்த நாடுகள் சான்றாதாரங்களாக இருக்கின்றன. தமிழகம் சுய சிந்தனையோடும், சுய அறிவோடும் இருக்கவேண்டுமானால் வளர்ந்த நாடுகளைப்போன்று நமது சொந்த மொழியான தமிழில்தான் அனைத்தும் இருக்க வேண்டும். ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை படிப்பு அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு கட்டாய மொழிப்பாடமாக வைத்துக் கொள்ளலாம். தமிழே அரசு மொழியாக, கல்வி மொழியாக, வணிக மொழியாக, ஆலய மொழியாக இருக்க வேண்டும். அதுவே தமிழகத்தின் வளர்ச்சியை, வளத்தை உறுதி செய்யும்.

     ஆங்கில மொழிக் கல்வி:

                            தமிழகத்தின் ஒவ்வொரு பள்ளி மாணவ மாணவியரும் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆங்கிலவழிக் கல்வி அதற்கு மாற்றாகாது. தன்னம்பிக்கையும், சுயசிந்தனையும், சிறந்த பண்பு நலன்களும் கொண்ட ஒரு தமிழ் தேசக் குடிமகனை உருவாக்கத் தமிழ்வழிக் கல்வி தான் தேவை. தமிழை நன்கு அறிந்திருந்தால்தான் ஆங்கிலத்தை படிக்க முடியும். முதலில் தெரிந்ததை சொல்லித்தந்த பின் தெரியாததை சொல்லித்தருவதே பயன்தரும். குழந்தைகளுக்கு தமிழ் தெரியும். அதனை சொல்லித்தந்த பின் அதன் மூலம் ஆங்கிலத்தைச் சொல்லித்தருவதே ஆங்கில மொழி அறிவை வளர்க்கும். மேலும். ஆங்கிலவழிக் கல்வி தன்னம்பிக்கையை, சுயசிந்தனையை, சிறந்த பண்பு நலன்களைக் கண்டிப்பாக உருவாக்காது. அது திறமையும் அறிவும் சுயநலமும் உடைய மனித இயந்திரங்களைத் தான் உருவாக்கும். அதனைத்தான் இன்றைய ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் செய்து கொண்டுள்ளன. ஆனால் தமிழ்வழிக்கல்வி சிறந்த மனிதனை உருவாக்கும்.

             அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. கல்வியில் தரம் இன்மை, போதிய வசதிகள் இன்மை, ஆங்கில மோகம், வறட்டுப் பெருமை முதலியன அதன் சில காரணங்களாகும். அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு இடங்கள் முதலியவற்றின் தரத்தை ஆங்கிலவழிப் பள்ளிகளுக்குச் சமமாக  உயர்த்த வேண்டும். முக்கியமாக ஆரம்பப் பள்ளிகளுக்கு அதிக வசதிகள் செய்து தர வேண்டும். தனியார்களின் உதவியோடு அரசு அதனைச் செய்யலாம். ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள்-மாணவர்கள் விகிதத்தை 1:25 ஆகக் குறைக்க வேண்டும். கற்றுத் தருவதைத் தவிர வேறு பணிகள் அந்த ஆசிரியர்களுக்கு இருக்கக் கூடாது. ஆரம்பப் பள்ளிகளில் துப்புரவு பணிகளுக்காகவும், பிற அலுவலகப் பணிகளுக்காகவும் தேவையான உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆரம்பப்பள்ளிகள் தான் கல்வியின் அடிப்படை என்பதை உணர்ந்து அங்கு அதிக வசதிகள் செய்து தரப்படவேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் அனைத்துப் பாடங்களிலும் முறையானத் தரமான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப் பட வேண்டும்.

             ஆங்கில மொழி படிப்புக்கு அதிக வகுப்புகளையும் அதிக நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது. இங்கு ஆசிரியர்களுக்கு பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு முதல் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை ஐந்து வருடமும்  குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் எடுக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர் தனது பணியைச் சரியாகச் செய்தாரா என்பதை எளிதில் அறிய முடியும். இதனால் கண்டிப்பாகத் தரம் உயரும். குறிப்பிட்ட 25 மாணவர்களுக்கும் முதல் வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை ஒரு குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் சொல்லித் தந்தும் அந்தக் குறிப்பிட்ட 25  மாணவர்களுக்கும் எழுதப் படிக்கக்கூடத் தெரியவில்லை எனில் அந்த ஆசிரியரிடம் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். உரிய பயிற்சிகள் வழங்கியும், முறையாகக் கண்காணித்தும் அது போன்ற தவறுகள் நடக்காது பார்த்துக் கொள்ள வேண்டும்.

             தற்போதைய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு இல்லை என்றே சொல்லலாம். எனவே ஆங்கிலத்தில் நன்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஆரம்பப் பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு நியமிக்க வேண்டும். பிற நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் உள்ள ஆங்கில ஆசிரியர்களுக்கும் மிகத் தரமான இலக்கண அறிவுடன் கூடிய ஆங்கிலப் பயிற்சியை வழங்க வேண்டும். இதன்பின் அனைத்துப் பள்ளிகளின் கல்வித்தரத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுக்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் தரத்தை உயர்த்துபவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கலாம். அரசுப் பள்ளிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி ஆங்கிலப் பாடம் சொல்லித்தரப்பட்டு மாணவர்கள் ஆங்கிலத்தை நன்கு படிக்க, எழுத, பேசக் கற்றுக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

        மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டு வருவது என்பது செருப்புக்காகக் காலை வெட்டுவது போன்றது. பாரதி சொல்வது போன்று அப்பொழுது நாடு பிசாசுகள் வாழும் சுடுகாடாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிகள் பணத்துக்காக பாரதி கூறியபடி பிசாசுகள் வாழும் சுடுகாடுகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. அதனை அரசும் தொடர்ந்தால் என்ன ஆவது? அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்ச ஆங்கில அறிவுகூட இல்லை. அந்த மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவும் இல்லை. தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பாடங்களைப் படிக்கக் கடுமையாக வேலை செய்ய வேண்டியதுள்ளது. மாணவர்களுக்காக பெற்றோர்களும் சேர்ந்து பாடுபடுகிறார்கள். ஆனால் இறுதியில் மாணவனுக்குத் தமிழும் தெரிவதில்லை, ஆங்கிலமும் தெரிவதில்லை. புரிந்து படிப்பது என்பது இல்லவே இல்லை. எல்லாம் மனப்பாடம் தான். ஆங்கில மோகம் அனைவரையும் பைத்தியமாக்கியுள்ளது. ஆகவே அரசு ஆங்கிலப் பாட நேரங்களை அதிகப்படுத்தி சிறந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க  வேண்டும். இந்த சிறந்த ஆங்கில ஆசிரியர்களைக் கொண்டு, பள்ளிகளில் முன்பே இருக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல தரமான ஆங்கில இலக்கணப் பயிற்சியை வழங்க வேண்டும். இவைகளின் மூலம் மாணவர்களின் ஆங்கில அறிவை அதிகப்படுத்த முடியும்.

    சங்ககாலம்:

           சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் மொழியே அனைத்துமாக இருந்தது. அதனால் மிகப் பரவலான கல்வி அறிவு தமிழகத்தில் அன்று இருந்தது என்பதைத் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. சங்க காலத்தில் தொழில்நுட்பமும், உற்பத்தித் திறனும் பெருகி உலகளாவிய அளவில் வாணிகம் நடைபெற்றது. மேற்கே எகிப்து முதல் இரோம் வரையிலும், கிழ்க்கே தாய்லாந்து முதல் சீனா வரையிலும், இடையில் அரேபியா முதலான வளைகுடா நாடுகளிலும் தமிழர்கள் அன்று வணிகம் புரிந்து வந்தனர். எகிப்திலும், தாய்லாந்திலும், வளைகுடா நாடுகளிலும் சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. ஆகவே தமிழர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல தாங்கள் வணிகம் புரிந்த அயல்நாடுகளிலும் தமிழையே பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. பிற மொழி அறிவையும் தேவையானவர்கள் பெற்றிருந்தனர். தமிழகத்து க்கு பல மொழி பேசும் வணிகர்கள் வந்து வணிகம் புரிந்தனர். அதனை கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டாம் கரிகாலனைப் பாடிய பட்டினப்பாலை,

                “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

                புலம்பெயர் மாக்கள் கலந்துஇனி துறையும்”  என்கிறது.

    புகார்த்துறைக்கு பல நாட்டு வணிகர்கள் வந்து வணிகம் புரிந்தனர் என்பதை இப்பாடல் சொல்கிறது. அன்றைய தமிழகத்தில் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, வணிக மொழியாக, கோயில் மொழியாக, மக்கள் மொழியாக என அனைத்துமாக தமிழே இருந்தது. எனினும் உலகளவில் அவர்கள் அன்று வணிகம் செய்தனர். எனவே வணிகம் புரிவதற்காகவோ அல்லது பிறவற்றிற்காகவோ பிற மொழிகளை பள்ளிகளிலேயே சொல்லித்தர வேண்டும் என்பது தேவையற்றது என்பதைப் பண்டைய தமிழகம் நமக்கு உணர்த்துகிறது. ஆங்கிலம் இன்று உலகு தழுவிய மொழியாக உள்ளது. அதனை ஒரு பாட மொழியாக நாம் கற்றுக் கொள்ளலாம். அது போதுமானது. ஆனால் ஆங்கிலவழிக் கல்வி என்பது வேண்டவே வேண்டாம். கல்வி அனைத்தும் தமிழ்வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே கல்வி மொழியாக இருக்க வேண்டும். அதனைப் படிப்படியாக செயல்படுத்தலாம். முதலில் மேல்நிலைப் பள்ளி வரை(+2 வரை) தமிழ் வழிக் கல்வியை உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் செயல் படுத்துவது மிகமிக அவசியம்.

    ஜீவானந்தம் – மொழி;

                            இந்தி ஒரு தொடர்பு மொழிதான், ஆட்சிமொழி அல்ல. தொடர்பு மொழி என்றால் மாநிலங்களுக்கிடையேயும் மத்திய அரசிடமும் தொடர்பு கொள்ளவே ஒழிய மக்களிடம் தொடர்பு கொள்ள அல்ல. மக்களிடம் மக்கள் மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் அப்பொழுது தான் ஒரு மக்கள் குடியரசு என இந்தியாவைச் சொல்ல முடியும். அந்நிய மொழியில் தான் மக்களோடு தொடர்பு கொள்வேன் என்பது சர்வதிகாரத்தின் அடையாளம். நம்மைப் பொருத்த வரையில் இந்தி அந்நியமொழி தான். நமக்குத் தெரியாத, நமக்குப் புரியாத, நாம் பேசாத மொழி தான் அந்நிய மொழி ஆகும். இந்தியை நமக்குத் தெரியாது, அது நமக்குப் புரியாது, நாம் அதைப் பேசுவதும் இல்லை. எனவே இந்தி அந்நிய மொழி தான். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

         மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப் பட்டுள்ளது. இங்கு தனி ஆட்சியும் உள்ளது. 7 கோடி மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்களிடம் மத்திய அரசு தமிழ் மொழியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனத்தும் தமிழில் தான் தமிழ் மக்களோடு தொடர்பு கொள்ளவேண்டும். அதுவே அடிப்படை ஜனநாயகம். இதைக்கூட பின்பற்றாத ஒரு அரசை நமது குடியரசாக நாம் எப்படிக் கருதமுடியும்? இது குறித்து எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாக இருந்த தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

        “ராஜ்யத்தின் சகல துறைகளிலும் சட்ட சபைகளிலும், கல்லூரிகளிலும், தமிழே ஆட்சி மொழியாக விளங்க வேண்டும்; மக்கள் சபையில்(பாராளுமன்றத்தில்) தமிழகப் பிரதிநிதிகள்- இதைப்போன்று ஒவ்வொரு ராஜ்யப்பிரதிநிதிகளும் பிரதேச மொழியில் தங்கு தடையின்றிப் பேச அனுமதிக்க வேண்டும். மக்கள் சபை தஜ்தாவேஜுகளிலும், சுப்ரீம்கோர்ட் தீர்ப்புகள், மத்திய அரசாங்கத்தின் கெஜட்டுகள், மசோதாக்கள், சட்டங்கள் ஆகியவைகளும் சரி ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமின்றி பிரதேச மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும். தமிழகத்திலுள்ள மத்திய அரசாங்கக் காரியலாயங்கள் பொது மக்களுடன் தொடர்புகொள்ளும் தொடர்புகளும் ஆங்கிலம் இந்தி ஆகியவற்றுடன் தமிழிலும் இருக்கவேண்டும்.” என்கிறார் அவர்.(ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா – பக்: 30). சோவியத் இரசியாவில் பின்பற்றப்பட்ட தொடர்பு மொழி குறித்து அவர்,’ஒரு அங்கத்தினர் எந்த தேசிய இனத்தவராயினும் அவருக்கு அவரது சொந்த மொழியில் சுப்ரீம் சோவியத் உட்பட சகல மக்கள் பிரதிநிதித்துவ சபைகளிலும் சகல நீதி மன்றங்களிலும் பேசவும், எந்த அதிகாரியோடும் கடிதப் போக்குவரத்து நடத்தவும் உரிமையுண்டு. சோவியத் யூனியனின் சுப்ரீம் சோவியத் நிறைவேற்றுகிற சட்டங்கள் அனைத்தும் யூனியனிலுள்ள முக்கியமான 16 மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. சுப்ரீம் சோவியத்தின் கெஜட்டும் மேற்படி 16 மொழிகளிலும் வெளியிடப் படுகின்றது’. என்கிறார்.( ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா – பக்: 26). எனவே இந்தியாவிலும் இம்முறை பின்பற்றப்பட வேண்டும்.

    தமிழ்வழிக் கல்வி – தோழர் ஜீவா.

            நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களும், இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற, வங்காள மகா கவி தாகூர் அவர்களும், உலகப் புகழ்பெற்ற கல்வியாளர்களும், அறிஞர்களும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது எனச் சொல்லி உள்ளனர். ஐ. நா. சபை போன்ற உலக நிறுவனங்களும் அதனையே அறிவித்துள்ளன. உலகம் நாடுகள் முழுவதும் தாய்மொழிக் கல்வி மூலமே ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்துப் பாடங்களும் சொல்லித்தரப்படுகின்றன. 1960 வாக்கில் இரசியாவில் உள்ள பின்தங்கிய ஆசிய ஐரோப்பிய தேசிய இன மக்களுக்கு அவரவர்களின் தேசிய மொழியில் தான்  ஆரம்பம் முதல் பல்கலைக்கழகம் வரை கற்றுத்தரப் பட்டது என்கிறார் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்.

         “இரசியாவில், கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் பிரதேச மொழியில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வியின் ஒவ்வொரு மட்டத்திலும் பொருத்தமான வகையில் பிரதேச மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஜியார்ஜியக் குடியரசில் உள்ள பள்ளிக்கூடங்கள், கலைக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய யாவற்றிலும் ஜியார்ஜிய மொழியிலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. கசாக் குடியரசில் கசாக் மொழியே போதனா மொழியாக உள்ளது”. என்பது அவரது கூற்று.( ஆதாரம்: மொழியைப் பற்றி ஜீவா-ப. ஜீவானந்தம், பக்: 25, 26)

        நான் முன்பு கூறிய வளர்ச்சிபெற்ற ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகி ஆறு நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் மொழிகளான, ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, சீனம், கொரியன், ஜப்பான் ஆகிய மொழிகளில் தான் ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்விவரை கற்றுத்தரப் படுகிறது. இந்த ஆறு நாடுகளில், தென்கொரியா இரண்டாம் உலகப்போர் வரை ஜப்பானுக்கு அடிமையாக இருந்த நாடு; அதற்குப் பின்னரும் வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் நீண்டகாலம் போர் ந்டந்தது. உண்மையில் 1965க்குப் பின் தான் அதன் வளர்ச்சி தொடங்கியது. 25 வருடங்களிலேயே அது ஒரு வளர்ச்சிபெற்ற நாடாக மாறியது. ஒரு பொருளாதார வல்லரசாக தற்பொழுது உள்ளது.

              அதன் வளர்ச்சிக்கான பல காரணங்களில் அதன் கல்வி முறையும், அக்கல்விமுறையில் அதன் சொந்த மொழியான கொரியன் மொழிக்குத் தரப்பட்ட முக்கியத்துவமும் ஒரு மிக முக்கிய காரணமாகும். எனவே சொந்த மொழியைக் கல்வி மொழியாகக் கொண்டிராத ஒரு நாடு வேகமான முழுமையான வளர்ச்சியைப் பெறுவது என்பது இயலாது என்ற உண்மையை நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியம். சங்ககாலத்தில் நமது சொந்த மொழியான தமிழில் அனைவரும் கல்வி கற்றதும், கல்வி தமிழகமெங்கும் பரவலாக இருந்ததும் தான் பண்டைய தமிழகத்தின் அபரிதமான வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாகும். சொந்தமொழிக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதற்கு நமது சங்ககாலத்தின் வளர்ச்சியே ஒரு உதாரணமாகும். இஸ்ரேலில் இப்ரு மொழி உள்ளது. அது நவீன மொழி அல்ல. பண்டைய மொழி என்பதோடு, நீண்டகாலமாக மக்களால் பேசப்படாத மொழி. யூத மதத்தின் மொழி. அதில் நவீனச் சொற்கள் இல்லை. எனினும் அது தான் இன்று இஸ்ரேலின் தேசிய மொழியாகவும், கல்வி மொழியாகவும் அனைத்துமாகவும் இருக்கிறது. 1950 வாக்கில் தான் இஸ்ரேலும் இப்ருமொழியும் திரும்ப உருவாக்கப்பட்டது. இன்று இப்ரு ஒரு நன்கு வளர்ந்த நவீன மொழியாக உள்ளது.

              கி.பி 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் முகம்மதிய மதம் பல நாடுகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அப்பகுதிகளில் பழமையும் புகழும் உடைய கிரேக்கமும், பாரசீகமும் ஆட்சி மொழிகளாக இருந்தன. ஆனால் ஆட்சியாளர்களின் மொழியான அரேபியமொழி, ஒரு பின்தங்கிய மொழியாகவும் நாடோடிகளின் மொழியாகவும் இருந்தது. ஆனால் அரேபிய மொழி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்ட 25 வருடங்களில் அது ஒரு வளர்ந்த மொழியாக மாறியது. ஆகவே 1200 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு பின்தங்கிய மொழியாகவும் நாடோடிகளின் மொழியாகவும் இருந்த ஒரு மொழி, ஆட்சி மொழியாக மாற்றப்பட்ட பின், ஒரு வளர்ந்த மொழியாக ஆக முடிந்தது என்பதை வரலாறு நமக்குப் போதிக்கிறது. எனவே ஒரு மொழியால் ஆகாது எனச் சொல்வது அறியாமை. அதுவும் தமிழ் போன்ற செம்மொழியாகவும், நவீன மொழியாகவும் உள்ள ஒன்றால் ஆகாது எனச் சொல்வது என்பது அறியாமை மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

            ஆகவே சொந்த தேசிய மொழியைக் கல்விமொழியாகக் கொள்ளாத எந்த ஒரு நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் அதனது தேசிய மொழியும், செவ்வியல் மொழியும் ஆன தமிழில் கல்வி கற்பது  என்பது இல்லாது போய்க் கொண்டிருப்பது ஏன்? ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக்கல்வி வரை தமிழில் சொல்லித் தருவது என்பது இல்லாமல் ஆரம்பக் கல்வியில் கூட தமிழ்வழிக் கல்வி இல்லை என்ற நிலை ஏன்? பெரும்பாலான மக்கள் அந்நிய மொழியான ஆங்கிலவழிக் கல்வியை விரும்புவது ஏன்? தமிழ், தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களாலேயே தமிழ்வழிக்கல்வி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏன்? இதற்கெல்லாம் காரணத்தைத் தேட வேண்டுமானால் நமது 700 ஆண்டுகால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கவேண்டும். இந்த 700 வருட கால அடிமை வாழ்வும், 70 வருட கால சுதந்திர இந்தியாவின் தமிழக அரசியல் வாதிகளும்தான்  நமது ஆங்கில மொழி மோகத்துக்கான அடிப்படைக் காரணமாகும்.   இவைகளை உணர்ந்து தமிழ் மொழியை அரசு மொழியாக, கல்வி மொழியாக, ஆலய மொழியாக அனைத்துமாக ஆக்க முயல்வோமாக.

                                              கணியன்பாலன், ஈரோடு.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 16

     

     

    இ.பாண்டிய வேந்தர்கள்

    முதல் கரிகாலனின் ஆசிரியராக இருந்த, கரிகாலனைவிட இருதலைமுறைகள் மூத்த இரும்பிடர்த்தலையார், கருங்கை ஒள்வாள் பெரும்பெயெர்வழுதி என்கிற பாண்டிய வேந்தன் குறித்துப்பாடியுள்ளார். இவன் சேரன் உதியன், சோழன் பெரும்பூட்சென்னி ஆகியவர்களின் காலத்தவன். இவனது ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 350-கி.மு.320 வரையாகும். இவனுக்குப்பின் வந்தவன் இரண்டாம் காலகட்ட முதுகுடுமிப் பெருவழுதி. இவன் குறித்து மூன்று சங்கப்புலவர்கள் ஐந்து பாடல்களைப் பாடியுள்ளனர். அதுபோக ஏழாம் காலகட்டத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடவந்த மாங்குடிமருதனார் அவனை, முதுகுடுமிப் பெரு வழுதி போன்று புகழ்பெற வாழ்த்துகிறார். முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட ‘பெருவழுதி’ நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆகவே மேற்குறிப்பிட்ட காரணங்களைக் கொண்டும், இவன் மிக நீண்டகாலம் ஆண்டவன் எனக்கொண்டும் இவனது ஆட்சிக் காலம் கி.மு.320-கி.மு.290 எனக் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவன் இளைஞனாக இருந்தபோது பாண்டியர்படைக்கு தலைமை தாங்கி மௌரியப்படையின் ஒரு பகுதியை எதிர்த்துப் போரிட்டு(கி.மு.290) வெற்றிபெற்று இப்பெயர் பெற்றான். இவன்தான் சிலப்பதிகாரப் பாண்டிய வேந்தனும் ஆவான். இவன் சேரன் செங்குட்டுவனைவிட மூத்தவன். மூன்றாம் காலகட்டத்தைச்சேர்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் காலம் சுமார் கி.மு. 250-கி.மு. 220 வரையாகும். கி.மு. 270 வாக்கில் வேந்தன் ஆன இவன் சேரன் செங்குட்டுவன் காலத்திலும் சிறிதுகாலம் ஆண்டான். இவனுக்குமுன் நம்பி நெடுஞ்செழியன் என்பவன் ஆண்டான். அவனைப் பேரெயின் முறுவலாரும், பரணரும் பாடியுள்ளனர். பரணர் அவனை இறந்த காலத்தில் பாடியுள்ளார். இவைகளை வைத்து நம்பி நெடுஞ்செழியன் சுமார் கி.மு.290-கி.மு.270 வரை 20 ஆண்டுகள் ஆண்டான் எனவும் அதன்பின் ஆட்சியேற்ற ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், சுமார் கி.மு.270-கி.மு.245 வரை 25 ஆண்டுகள் ஆண்டதாகவும் கணிக்கப்பட்டது.

    ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனுக்குப்பின் ஆட்சிக்குவந்த, கொற்கையை ஆண்டுவந்த வெற்றிவேற் செழியன் சேரன்செங்குட்டுவன் காலத்தைச் சேர்ந்தவன். அவனது ஆட்சிக்காலம் என்பது சுமார் கி.மு.245-கி.மு.235 வரையான 10 ஆண்டுகள் ஆகும். தினமலர் ஆசிரியரும், நாணயவியலாளரும் ஆன இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொற்கையில் தனிப் பாண்டிய அரசு இருந்ததாகவும் அவர்கள் செழியன் என்கிற பெயரில் நாணயங்களை வெளியிட்டனர் எனவும் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் கூறியுள்ளார். கொற்கையில் மட்டு மல்ல ஈழத்தின் தம்பப்பண்ணி, மோகூர், ஒல்லையூர் போன்ற பல இடங்களில் பாண்டியர்கள் தனி ஆட்சி செய்து வந்துள்ளனர். இந்த கொற்கை, மோகூர், தம்பப்பண்ணி போன்ற இடங்களில் இருந்தவர்கள் பாண்டியர்களின் கிளை அரசர்களாவர். அவர்கள் தான் பின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆண்டனர். வெற்றிவேற்செழியன் கொற்கையில் இருந்தும் பழையன் மாறன் மோகூரிலிருந்தும் வந்து மதுரையை ஆண்டனர் என்பதைச் சங்க இலக்கியம் தெரிவிக்கிறது.

    சுமார் கி.மு.290-கி.மு.235 வரை 55 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நம்பி நெடுஞ்செழியன், ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் ஆகிய இவர்கள் மூவரும் கொற்கையை அரசர்களாக இருந்து ஆண்டபின்னர் மதுரையில் வேந்தர்களாக ஆனார்கள். இந்த மூன்றுபேரும் கொற்கையில் அரசர்களாக இருந்தபோது வெளியிட்ட நாணயங்கள்தான் இந்த ‘செழிய’ நாணயங்கள் ஆகும். இவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இந்த நாணயங்களின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதாலும் இவர்கள்தான் இந்த செழிய நாணயங்களை வெளியிட்டனர் எனலாம். இந்த நாணயங்களில் ஒருபக்கம் ‘செழிய’ என்கிற பெயரும் மறுபக்கம் யானைச்சின்னமும் இருக்கின்றன. இவை வெள்ளீய வெண்கல நாணயங்கள் ஆகும். இவைகளுக்கான வெள்ளீயம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து கடல்மூலம் வந்ததாக இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவிக்கிறார்1 வெற்றி வேற்செழியனுக்குப்பின் வந்த பசும்பூண் பாண்டியன், ஐந்தாம் காலகட்டம் ஆவான். நான்காம் காலகட்டப் பரணரும் ஏழாம் காலகட்ட நக்கீரரும் இவனைப் பாடியுள்ளனர். நக்கீரரின் தந்தை மதுரைக்கணக்காயர் இவனைப்பாடியுள்ளார். அதில் கொல்லிமலையைச் சேரர்களுடையதாகக் குறிப்பிட்டுள்ளார். ஓரியிட மிருந்து காரியினால் பறிக்கப்பட்டு கி.மு. 220க்குப்பின் அது சேரர்களிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அது சில காலம் கழித்துத்தான் சேரர்களுடையதாகப் புலவர்களால் கருதப்பட்டது. ஆதலால் அப்பாடல் கி.மு. 220க்குப்பின் சில காலம் கழித்துப் பாடப்பட்டிருக்கவேண்டும். மதுரைக்கணக்காயர் மகன் நக்கீரரின் காலம் என்பது சுமார் கி.மு. 240-160 வரையாகும். நக்கீரர் பசும்பூண் பாண்டியனை தனது 25 வயதில் பாடியதாகக் கொண்டால், கி.மு. 215 வாக்கில் அவர் அவனைப்பாடியிருக்க வேண்டும். அதன்பின்னர் 5 வருடம் கழித்து அவன் இறந்தான் எனக் கொண்டால் அவனது வேந்தர் ஆட்சிக்காலம், என்பது கிட்டத் தட்ட கி.மு.235-கி.மு.210 வரை எனலாம்.

    பசும்பூண் பாண்டியனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் ஆறாம் காலகட்டப் பாண்டியன் அறிவுடை நம்பி ஆவான். இவன் பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் காலத்தவன். இவர்களின் இறுதிக் காலத்தில் இருந்தவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறை ஆவான். அறிவுடை நம்பி காலத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை ஆள்கிறான். நம்பி சுமார் 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொண்டு இவனது காலத்தைத் கிட்டத்தட்ட கி.மு.210-கி.மு.200 வரை எனலாம். இவனுக்குப்பின் வந்தவன் பழையன் மாறன் ஆவான். இந்தப் பழையன் மாறனை கிள்ளிவளவன் கி.மு. 193வாக்கில் தோற்கடித்து மதுரையைக் கைப்பற்றுகிறான். இந்தப்பழையன் மாறன் காலத்தில் வாழ்ந்த இளஞ்சேரல் இரும்பொறை இளம்பழையன் மாறனையும், கோப்பெருஞ் சோழனின் புதல்வர்களையும் தோற்கடிக்கிறான். பழையன் மாறன் சுமார் 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான் எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலத்தை சுமார் கி.மு.200-கி.மு.185 வரை எனக் கணிக்கலாம்.

    மாங்குடிமருதனார் தனது மதுரைக்காஞ்சியில் பழையன் மாறனை இரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆதலால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குமுன் ஆட்சியில் இருந்தவன் பழையன் மாறன் ஆவான்.  பாண்டியர் களில் மிகவும் புகழ்பெற்ற நெடுஞ்செழியனது தலையாலங்கானப் போர் கி.மு. 183வாக்கில் நடக்கிறது. இப்போர் மூலம் பாண்டியர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக ஆகின்றனர். இப்போரால் தமிழகமே தலைமயங்கியது என்கிறார் குடபுலவியனார். இப்பாண்டியனால் கி.மு. 182வாக்கில் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்டுப் பின் அதிலிருந்து தப்பி வந்து வேந்தனாக ஆகிறான்.

    அதன்பின் கி.மு. 175 வாக்கில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் முசிறி முற்றுகையிடப்படுகிறது. சுமார் 20 வருடங்கள் ஆண்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு.185-கி.மு.165 வரை எனலாம். சோழன் இரண்டாம் கரிகாலனும், சேரன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் இவனது சமகால வேந்தர்கள் ஆவர். இரண்டாம் தூமகேது தோன்றிய கி.மு. 163 என்கிற காலவரையறையும், கலிங்கமன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுக் காலமும்(கி.மு. 165) இவர்கள் மூவருக்கும் இறுதிக்காலமாக ஆகிறது எனலாம். இவர்களது காலத்தில் வடக்கே சாதவாகனர்களின் சதகர்ணியும் (கி.மு.180-கி.மு.124), கலிங்க மன்னன் காரவேலனும்(கி.மு.180-கி.மு.165) ஆண்டனர். கி.மு.187இல் மௌரியர்கள் வீழ்ந்து, மகதம் சுங்கவம்சத்து(கி.மு.187-கி.மு.75) புசுய மித்திரனால் ஆளப்படுகிறது.

    தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனையும் நக்கீரர் பாடியுள்ளார். ஆதலால் இந்த நெடுஞ்செழியனுக்குப்பின்(கி.மு.165) பாண்டிய வேந்தனாக ஆட்சிக்கு வந்தவன் இந்த நன்மாறனே ஆவான். இவன் எட்டாம் காலகட்டம் ஆவான். இதேகாலத்தில் உக்கிரப்பெருவழுதி அரசனாக ஆகிறான், வேந்தனாக அல்ல. உக்கிரப்பெருவழுதி வெளியிட்ட தலைவடிவ நாணயங்கள் கிடைத்துள்ளன. அவைகளின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி, அதாவது கி.மு. 135-கி.மு.100 ஆகும். இந்த நன்மாறனை ஏழாம் காலகட்ட நக்கீரர், எட்டாம் காலகட்ட மதுரை இளநாகனார், ஒன்பதாம் காலகட்ட ஆவூர் மூலங்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். ஆகவே இவன் கிட்டத்தட்ட கி.மு.165-கி.மு.145 வரை, சுமார் 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்தான் எனலாம்.

    இவனுக்குப் பின் உக்கிரப்பெருவழுதி கிட்டத்தட்ட கி.மு.145-கி.மு.130 வரை சுமார் 15 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அக்காலத்தில்தான் இந்தத் தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவன் அகநானூற்றைத் தொகுத்தவன். அதன் காரணமாகவே இவனுக்குப்பின் வந்த புலவர்கள் அகநானூற்றில் பாடவில்லை என்பதோடு 9ஆம், 10ஆம் காலகட்ட வேந்தர்கள், அரசர்கள் இதர ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் அகநானூற்றில் பாடப்பட வில்லை. 9ஆம், 10ஆம் காலகட்ட ஆட்சியாளர்கள் பெரும்பாலும் புறநானூற்றில் தான் பாடப்பட்டுள்ளனர். இவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆவான். அவன் சுமார் கி.மு.130-கி.மு.120 வரை 10 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். இவன் 9ஆம் காலகட்டம் ஆவான். இவனை சீத்தலைச் சாத்தனார் என்கிற புலவர் மட்டுமே பாடியுள்ளார். இவனுக்குப்பின் வந்தவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி ஆவான். இவனும் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனும் நண்பர்களாக இருந்துள்ளனர். இவன் சுமார் கி.மு.120-கி.மு.105 வரை 15 வருடங்கள் வேந்தனாக இருந்தான். இவனும் தலைவடிவப் பெருவழுதி நாணயங்களை வெளியிட்டவன் ஆவான். இவனும் 9ஆம் காலகட்டமே ஆவான். உக்கிரப்பெருவழுதியும், இவனும் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது ஒரு மிகமுக்கியமான கால வரையறையாகும்.

    இவனுக்குப்பின் வந்த கூடகாரத்துஞ்சிய மாறன் வழுதிதான் சங்ககாலத்தின் கடைசிப்பாண்டியவேந்தன் ஆவான். இவன் முத்தொள்ளாயிரப் பாடலில் இடம் பெற்றவன். சோழன் நலங்கிள்ளி, குட்டுவன் கோதை ஆகியவர்களின் சமகாலத்தவன். ஆதலால் இவன் காலம் 10ஆம் காலகட்டம் ஆகும். முத்தொள்ளாயிரம் கி.மு. 75வாக்கில் எழுதப்பட்டதாகும். அதன்பின் இவன் 5ஆண்டுகள் இருந்தான் எனக் கொண்டும், இவன் எட்டாம் காலகட்ட மதுரை மருதன் இளநாகனாராலும், 9ஆம் காலகட்ட ஐயூர் முடவனாராலும் பாடப்பட்டவன் என்பதாலும் இவன் காலத்தை சுமார் கி.மு.105-கி.மு.70 எனக்கொள்ளலாம். இவனுக்கு முந்தைய பெருவழுதி நாணயங்களின் காலமும், இவனது சமகாலச் சோழன் நலங்கிள்ளியின் வடநாட்டுப் படையெடுப்புக்காலமும், குட்டுவன் கோதையின் நாணயங்களின் காலமும் இவனது காலத்தை உறுதிப்படுத்துகின்றன.

    தமிழகத்தின் மீதான மௌரியப்படையெடுப்புக்கு முன்பின் ஆண்ட பாண்டியன் முதுகுடுமிப்பெருவழுதியின் ஆட்சி தொடங்கும் கி.மு. 320 முதல், உச்சயினியை வென்ற சோழன் நலங்கிள்ளியின் காலத்தில் பாண்டியநாட்டை ஆண்ட மாறன் வழுதியின் ஆட்சிமுடியும் சுமார் கி.மு. 70 வரையான 250 ஆண்டுகளில் 13 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியையும்(கி.மு.350-கி.மு.320) சேர்த்து மொத்தம் 14 பாண்டிய வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதுகுடுமியின் பெருவழுதி நாணயங்கள், கொற்கைப்பாண்டியர்கள் வெளியிட்ட செழியன் நாணயங்கள், இறுதிக்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், இலக்கியக் கணிப்புகள், சமகால சேர, சோழ வேந்தர்களின் உறுதிப்படுத்தப்பட்ட காலவரையறை ஆகியவைகள் இந்த கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகளில் ஆண்ட 14 பாண்டிய வேந்தர்களின் காலத்துக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆகவே தனிப்பட்ட வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் பாண்டிய வேந்தன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி முதல் இறுதிப்பாண்டியன் மாறன் வழுதி வரையான 14 பாண்டிய வேந்தர்களின் காலம் என்பது சுமார் கி.மு.350-கி.மு.70 வரையான 280 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

    பார்வை:

    1.செழிய, செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பப்ளிசர்ஸ், ஏப்ரல்-2014, பக்: 54-57.

    Share
  • பழந்தமிழக மூவேந்தர்களின் காலவரையறை – 14

    கணியன்பாலன்

     

    அ.சேர வேந்தர்கள்:

    மாமூலனார் பாடல்கள்தான் நமது கால நிர்ணயிப்புக்கான முதல் அடிப்படை ஆதாரங்களை வழங்குகின்றன. பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களில் மாமூலனாருக்கு முன் ஒரு தலைமுறையும், அவரது தலைமுறைக்குப்பின் 8 தலை முறைகளையும் நம்மால் இனங்காண முடிந்தது. முதல் காலகட்ட முதன்மைப் புலவராக குடவாயிற்கீரத்தனாரும் பத்தாம் காலகட்ட முதன்மைப்புலவராக கோவூர்கிழாரும் இருக்கின்றனர். மாமூலனார் இரண்டாம் காலகட்ட முதன்மைப் புலவராகிறார். நமக்குக் கிடைத்துள்ள பண்டைய ஆதார சங்க இலக்கிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பத்து வரலாற்றுக் கால கட்டங்களும் கி.மு. 350 முதல் கி.மு 50 வரையான 300 வருட காலத்தைக் கொண்டதாகும். கிரேக்கவீரன் அலெக்சாந்தர் இந்தியாவை விட்டு வெளியேறிய கி.மு. 325க்கு ஒரு தலைமுறை முந்தைய காலம்(கி.மு. 350) முதல், சோழமன்னன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்த காலத்திற்கு(கி.மு.75) பிந்தைய ஒரு தலைமுறை(கி.மு. 50) வரையான பத்து வரலாற்றுக் காலகட்டங்களே நமது சங்ககால வரலாற்றுக் காலகட்டங்கள்(கி.மு.350-50) ஆகும்.

    சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள்தான் முதலில் நிர்ணயம் செய்யப்பட்டன. இரண்டாம் காலகட்ட மாமூலனார் காலம் என்பது கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. அதாவது கி.மு. 325- கி.மு. 275 ஆகும். ஆதலால் முதல் காலகட்டம் என்பது கி.மு. 350 இல் இருந்தும், இரண்டாம் காலகட்டம் என்பது கி.மு. 320 இல் இருந்தும் தொடங்குகிறது. இமயவரம்பன் இரண்டாம் காலகட்டம் ஆவான். வின்சென்ட் சுமித் அவர்கள் கி.மு. 325-322 வரை வட இந்தியாவில் கலவரம் நடந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வட இந்தியாவில் கலவரம் நடந்தது என்பது நந்தர்கள் மௌரியர்களுக் கிடையேயான போர்போக, சேரலாதன் இமயவரம்பனின் படையெடுப்பாலும் இருக்கலாம் எனக்கொண்டு அவன் கி.மு. 325வாக்கில் முதல் காலகட்டத்தின் இறுதியில் வடநாடு படையெடுத்ததாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் அதற்கு இரு வருடங்களுக்கு முன் கி.மு. 327வாக்கில் அவனது தந்தை உதியன் சேரலாதன் இறந்து இமயவரம்பன் வேந்தனாக ஆனான் எனக் கணிக்கப்பட்டது. கி.மு. 163 என்பது வரலாற்றில் இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டாகும். அந்த வருடத்தில்தான் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்துபோகிறான். இது ஒரு முக்கிய காலவரையறையாகும்.. ஆதலால் பதிற்றுப்பத்தில் உள்ள சேரலாதன் இமயவரம்பன் முதல் பத்தாம் பதிற்றுப்பத்தின் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் வரையான வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் என்பது சுமார் கி.மு. 327இல் தொடங்கி கி.மு. 163இல் முடிகிறது என கணிக்கப்பட்டது.

    உதியன் முதல் தொடங்கும் குட்டுவர்களின்  இறுதி ஆட்சி ஆண்டு என்பது, சேரன் செங்குட்டுவன், சம்பைக் கல்வெட்டு வெட்டிய ஆண்டில்(கி.மு.220) இறந்தான் எனக்கொண்டும், அதன்பின் 8 ஆண்டுகள் மட்டுமே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சியில் இருந்தான் எனக்கொண்டும் சுமார் கி.மு. 212 என நிர்ணயிக்கப்பட்டது. கி.மு. 212 முதல் கி.மு. 163வரை 4 பொறையர்குலச் சேர வேந்தர்களும் அதன் பின் இறுதியாக 13 ஆண்டுகள் கணைக்கால் இரும்பொறையின் ஆட்சியும், ஆக மொத்தம் ஐந்து பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி சுமார் 62 ஆண்டுகள் இருந்ததாகக் கொண்டு, பொறையர்குலச் சேரர்களின் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 212வாக்கில் தொடங்கி, கி.மு. 150வாக்கில் முடிந்ததாகக் கொள்ளப்பட்டது.

    உதியனின் மகன் இமயவரம்பன் முதல் ஐந்து குட்டுவர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கி.மு.327-கி.மு.212 வரை எனவும். ஐந்து பொறையர்களின் ஆட்சி யாண்டுகள் என்பது கி.மு.212-கி.மு.150 வரை எனவும் கணிக்கப்பட்டது. இந்தக் கி.மு. 150வாக்கில் தான் கணைக்கால் இரும்பொறை சிறையிலிடப்பட்டு இறந்து போகிறான். மாக்கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதாலும், குட்டுவன் கோதையின் நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என்பதாலும், குட்டுவன் கோதை முத்தொள்ளாயிரம் நூலின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், இவன் உச்சயினியை வென்ற சோழன் நலங் கிள்ளியின் சமகாலத்தவன் என்பதாலும், இவனது ஆட்சிக்காலம் கி.மு.70வாக்கில் முடிவதாகக் கொள்ளப்பட்டது. ஆதலால் இறுதி மூன்று கோதை வேந்தர்களின் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 150-கி.மு. 70 வரையான சுமார் 80 ஆண்டுகள் எனக்கணிக்கப்பட்டது.

    குட்டுவகுலச்சேர வேந்தர்கள்:

    கி.மு. 327வாக்கில், இமயவரம்பனின் வேந்தர் ஆட்சி தொடங்குவதாகக் கொள்ளப் பட்டது. அவன் மொத்தம் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகப் பதிற்றுப்பத்து குறிப்பிட்டுள்ளது. அவனது ஆட்சி மௌரியப் படையெடுப்புக்குப்பின், முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் முடிகிறது. அதன் காலம் கி.மு. 275 ஆகும். ஆகவே அவனது மொத்த ஆட்சிக்காலம் கி.மு. 333-275 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பன் சுமார் 6 ஆண்டுகள் அரசனாகவும் 52 ஆண்டுகள் வேந்தனாகவும்(கி.மு.327-கி.மு.275) இருந்தான் என ஆகிறது. இவனுக்குமுன் இவனின் தந்தை உதியன் சேரலாதன் சேர வேந்தனாக சுமார் 20 ஆண்டுகள் ஆண்டான். ஆகவே அவனது வேந்தர் ஆட்சிக்காலம் கி.மு.347-கி.மு.327 ஆகும். இமயவரம்பனுக்குப் பின் அவனது தம்பி சுமார் 10 ஆண்டுகளும், மூத்த மகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு செங்குட்டுவனின் வேந்தர் ஆட்சி கிட்டத்தட்ட கி.மு. 250-220 வரை எனக் கணிக்கப்பட்டது. செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் கூறுகிறது. அசோகர் இறந்த ஆண்டு கி.மு. 232 என்பதால், செங்குட்டுவன் கி.மு. 232-228வாக்கில் தனது வடநாட்டுப்படையெடுப்பை நடத்துகிறான். அதன்பின் கிள்ளிவளவனுக்காக கி.மு. 225வாக்கில் நேரிவாயில் போரை நடத்துகிறான். அதன்பின் 5ஆண்டுகள் கழித்து கி.மு. 220வாக்கில் இறந்து விடுகிறான்.

    செங்குட்டுவன் மொத்தம் 55 ஆண்டுகள் ஆண்டதால் அவன் கி.மு. 275இல் இமயவரம்பன் இறந்தபோது அரசனாக ஆகிறான். அதேகாலத்தில் தான் அவனது தமையன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் அரசனாகிறான். இமயவரம் பனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும், மூத்த மகன் களங்காய்க்கண்ணி நார் முடிச்சேரலும் மூன்றாவது காலகட்டம் என்பதாலும் அவர்களது மொத்த ஆட்சிகள் பதிற்றுப்பத்துப்படி தலா 25 ஆண்டுகள் என்பதாலும் தம்பி 10 ஆண்டுகளும் மூத்தமகன் 15 ஆண்டுகளும் வேந்தர்களாக ஆண்டதாகக் கொண்டு அவர்களது ஆட்சிகள் கி.மு. 250க்குள் முடியமாறு கணிக்கப்பட்டது. களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் பெண்கொலைபுரிந்த நன்னனை, நன்னனூர் நன்னனை வெற்றி கொள்கிறான் என்பதும், இவன் பாலைபாடிய பெருங்கடுங்கோ இடம்பெற்றுள்ள புகளூர்க் கல்வெட்டுக்கு(கி.மு.295) ஒரு தலைமுறை பிந்தையவன் என்பதும் கணக்கில் கொள்ளப்பட்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 265-250 எனக் கணிக்கப்பட்டது. ஆதலால் இமயவரம்பனுக்கும் இவனுக்கும் இடையே இருந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வேந்தர் ஆட்சிக்காலம், கிட்டத்தட்ட கி.மு. 275-265 எனக் கணிக்கப்பட்டது.

    அதன்பின் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 8 ஆண்டுகளும், செல்வக் கடுங்கோ வாழியாதன் 7 ஆண்டுகளும் ஆண்டதாகக் கொள்ளப்பட்டது. இவை வேந்தர் ஆண்டுகள் தானே ஒழிய மொத்த ஆட்சி ஆண்டுகள் அல்ல. இலக்கியக் கணிப்புப் படி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும், செல்வக் கடுங்கோவாழியாதனும் 5ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 5ஆம் காலகட்ட நள்ளி என்கிற கடையேழு வள்ளல்களில் ஒருவரைப்பாடிய காக்கை பாடினியார் நச்செள்ளையார்தான் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை 6ஆம் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார். பேகன், ஓரி, பாரி போன்ற வள்ளல்களின் சமகாலத்தவன் இவன். பதிற்றுப்பத்துப் பதிகப்படி இவனது மொத்தஆட்சி ஆண்டுகள் 38 ஆகும். இவன் சேரன் செங்குட்டுவன் வேந்தன் ஆனபோது (கி.மு.250) அரசனாக ஆக்கப்பட்டான். இவை அனைத் தையும் கணக்கில் கொண்டுதான் இவனது வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 220-212 எனக்கணிக்கப்பட்டது. ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 347-212 வரை, மொத்தம் ஆறு குட்டுவகுலச்சேரவேந்தர்கள் 135 ஆண்டுகள் ஆண்டனர் எனலாம்.

    பொறையர்குலச்சேர வேந்தர்கள்:

    செல்வக் கடுங்கோவாழியாதனை 7ஆம் பதிற்றுப்பத்தில் கபிலர் பாடியுள்ளார். அவர் 5ஆம் காலகட்டத்தின் முதன்மைப்புலவர் ஆவர். அவர் பாரியின் பறம்புப் போருக்குப்(கி.மு.215) பின் சில வருடங்கள் கழித்துத்தான் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் சேர்ந்துதான் பாரியை அழித் தனர். ஆதலால் பறம்புப்போரின்போது செல்வக்கடுங்கோ வாழியாதன் சேர வேந்தனாக இருந்திருக்க இயலாது. குட்டுவன் குலத்தில் வாரிசுகள் இல்லாததால் செல்வக்கடுங்கோவாழியாதன் கி.மு. 212வாக்கில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின் வேந்தன் ஆகிறான். இவன் கிமு. 230வாக்கில் அந்துவன் சேரலுக்குப்பின் கரூரில் பொறையர்குல சேர அரசன் ஆவதாலும், இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் என்பது பதிற்றுப்பத்துப்பதிகப்படி 25 ஆண்டுகள் என்பதாலும் இவன் 205வரை வேந்தனாக இருந்தான் எனலாம். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டுதான், இவனது வேந்தர்ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 212-205 எனக் கணிக்கப்பட்டது.

    அதன்பின் கி.மு. 205வாக்கில் இருந்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் ஆட்சி தொடங்குகிறது. அதியமானின் திருக்கோவிலூர் போருக்குப் பல ஆண்டுகள் கழித்துத்தான் தகடூர் போர் நடக்கிறது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஆட்சியேற்றபின் தான் இப்போர் தொடங்குகிறது. அவன் ஆட்சியேற்ற இரு வருடங்களில் தொடங்கிய இப்போர் சுமார் 3 வருடம் நடக்கிறது(கி.மு.203-கி.மு.200). அதன்பின் புகார்ப் போர் (கி.மு. 199)நடக்கிறது. இலக்கியக்கணிப்புப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும், இளஞ்சேரல் இரும்பொறையும் 6ஆம் காலகட்டம் ஆவர். பதிற்றுப்பத்துப்பதிகப்படி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மொத்த ஆட்சிக்காலம் 15 ஆண்டுகள் என்பதாலும், செல்வக்கடுங்கோ வாழியாதன் வேந்தன் ஆன சுமார் இரு ஆண்டுகள் கழித்து(கி.மு. 210) பெருஞ்சேரல் இரும்பொறையை அரசனாக்கினான் என்பதாலும் அவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது ஏறக்குறைய கி.மு. 205-கி.மு. 195 என ஆகிறது. அதன்பின் ஆட்சிக்கு வந்த 6ஆம் காலகட்ட இளஞ்சேரல் இரும்பொறை கி.மு. 200வாக்கில் தகடூர் போருக்குப்பின் அரசனாக்கப்படுகிறான். சுமார் கி.மு. 195வாக்கில் வேந்தன் ஆகிறான். பதிகப்படி இவனது மொத்த ஆட்சி ஆண்டுகள் 16 என்பதால் இவனது வேந்தர் ஆட்சி கி.மு. 184வாக்கில் முடிவடைகிறது. ஆகவே இவனது வேந்தர் ஆட்சிக்காலம் என்பது கி.மு.195 – 184 ஆகும்.

    கி.மு. 184 முதல் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி இவன் 7ஆம் காலகட்டம் ஆகிறான். இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டு(கி.மு.163), இவன் இறக்கிறான். ஆதலால், இவனது வேந்தர் ஆட்சிக் காலம் என்பது கி.மு. 184 முதல் கி.பி. 163 வரை ஆகும். இவனைத் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் கி.மு. 182வாக்கில் தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைக்கிறான். இவன் தப்பித்து வந்து மீண்டும் சேர வேந்தன் ஆகிறான். இவன் காலத்தில்தான் முசிறியைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் முற்றுகையிடுகிறான். இவன் இரண்டாம் கரிகாலன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன் போன்றவர்களின் சமகாலத்தவன் ஆவான்.இவனுக்குப்பின் எட்டாம் காலகட்டக் கணைக்கால் இரும்பொறை கி.மு. 163 முதல் சுமார் 13 ஆண்டுகள் ஆட்சி செய்கிறான். கி.மு. 150வாக்கில் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியிடம் போரில் தோற்று, அவனால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்து போகிறான். இவனைப் பொய்கையார் பாடியுள்ளார். இவன் கிட்டத்தட்ட கி.மு. 163-150வரை சேரவேந்தனாக இருந்தான். இவனே கடைசிப் பொறையர்குலச் சேரவேந்தன் ஆவான். ஆகவே கிட்டத்தட்ட கி.மு. 212-கி.மு. 150வரை 62 ஆண்டுகள், 5 பொறையர்குலச் சேரவேந்தர்கள் ஆண்டனர் எனலாம்.

    கோதைகுலச் சேர வேந்தர்கள்:

    அதன்பின் கோதைகுலச் சேரர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இலக்கியக் கணிப்புப்படி கோக்கோதை மார்பன், மாக்கோதை, குட்டுவன் கோதை ஆகிய மூவரும் சுமார் கி.மு. 150-கி.மு. 70வரை ஆள்கின்றனர். கோட்டம்பலத்துஞ்சிய மாக்கோதை வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. அதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்கிறார் நடன. காசிநாதன் அவர்கள். ஒரு நூற்றாண்டை தொடக்கப்பகுதி, இடைப்பகுதி, இறுதிப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30-35 ஆண்டுகள் எனக்கொள்ளலாம். அதன்படி கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பது கி.மு. 135-கி.மு. 100 வரையான காலம் ஆகும். அதுதான் மாக்கோதையின் ஆட்சிக்காலம் ஆகும். இவனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே இருந்தவன் தான் கோக்கோதை மார்பன் ஆவான். கணைக்கால் இரும்பொறையின் ஆட்சி கி.மு. 150வாக்கில் முடிந்து, மாக்கோதையின் ஆட்சி கி.மு. 135வாக்கில் தொடங்குவதால் இடைப்பட்ட கோக்கோதை மார்பனின் ஆட்சி என்பது கி.மு. 150-கி.மு. 135 ஆகும். கடைசி வேந்தன் குட்டுவன் கோதையின் நாணயங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அதன்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் முதல்பகுதி எனக் கருதப்படுகிறது. மேலும் அவன் முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றவன். சோழன் நலங்கிள்ளிக்குச் சமகாலத்தவன். மேலும் பிட்டனின் மகன் பிட்டன் கொற்றன் இவனுக்குப் படைத்தலைவனாக இருந்தவன். இவனது காலத்தைச் சேர்ந்த பிட்டனின் மகள் வெட்டிய கல்வெட்டுக்காலம் சுமார் கி.மு. 85 ஆகும். ஆகவே இவைகளைக் கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக் காலம் கிட்டத்தட்ட கி.மு. 100-கி.மு. 70 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்விதமாகக் கோதைகுலச் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன.

       சேரவேந்தன் இமயவரம்பனின் வேந்தர் ஆண்டு என்பது அவன் வடநாடு படையெடுத்துச்செல்வதற்கு(கி.மு.325) 2 ஆண்டுகள் முன்பு கி.மு. 327வாக்கில் தொடங்குகிறது. அதன் கடைசிச் சேரவேந்தன் குட்டுவன் கோதையின் ஆட்சி யாண்டு கி.மு. 70வாக்கில் முடிகிறது. இந்த இடைப்பட்ட சுமார் 257 ஆண்டு களில் 13 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். முதல் சேர வேந்தன் உதியனையும் சேர்த்து மொத்தம் 14 சேர வேந்தர்கள் ஆண்டுள்ளனர். ஆகவே தனிப்பட்ட சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒருசில ஆண்டுகள் முன்பின் இருந்தாலும், முதல் வேந்தனான சேரன் உதியன் முதல் இறுதி வேந்தனான குட்டுவன் கோதை வரையான 14 சேர வேந்தர்களின் வேந்தர் ஆண்டுகள் என்பது சுமார் கி.மு.347-கி.மு.70 வரையான 277 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்று சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையது எனலாம்.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 13

    பதிற்றுப்பத்தும், பதிகமும், சேர வேந்தர் ஆண்டுகளும்

          பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அரசனாக இருந்த ஆண்டுகள், வேந்தனாக இருந்த ஆண்டுகள் என இரு பகுதிகளாகக் கணிக்கப்பட்டன. இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மகன்கள் களங்காய் கண்ணி நார்முடிச் சேரல், சேரன்செங்குட்டுவன் ஆகியோர் முறையே 25, 25, 55 ஆண்டுகள் ஆண்டதாகப் பதிகம் குறிப்பிடுகிறது. இவை அவர்கள் அரசனாகவும் வேந்தனாகவும் இருந்த மொத்த ஆட்சி ஆண்டுகள் ஆகும். இமயவரம்பன் கிட்டத்தட்ட கி.மு. 275வாக்கில் இறக்கிறான். இமயவரம்பனுக்குப் பின் கி.மு. 275இல் வேந்தனாக ஆன அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன்  10 ஆண்டுகள் வேந்தனாகவும், 15 ஆண்டுகள் அரசனாகவும்(கி.மு.290 முதல்) இருந்தான் எனக் கணிக்கப்பட்டது. இமயவரம்பன் இறந்த போது கி.மு. 275வாக்கில், அவனது மகன்கள் களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் அரசனாக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து, அவனது தம்பி இறந்தபின் இமயவரம்பனின் மூத்த மகன் கி.மு. 250 வரை, 15 ஆண்டுகள் வேந்தனாக இருக்கிறான். அதன்பின் இமயவரம்பன் இறந்து 25 ஆண்டுகள் கழித்து கி.மு. 250இல் சேரன் செங்குட்டுவன் வேந்தனாக ஆகி 30 ஆண்டுகள் வேந்தனாக ஆண்டான். அதன்பின் அவனது கடைசிமகன் ஆடுகோட்பாட்டு சேரலாதன் 8 ஆண்டுகள் மட்டுமே வேந்தனாக இருந்தான். பதிகம் குறிப்பிடும் மொத்த ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்ட, அரசர், வேந்தர் ஆட்சி ஆண்டுகள் குறித்த கீழ்க்கண்ட அட்டவணை, இக்கணிப்பு குறித்த ஒரு தெளிவைத்தரும்.

     

    வேந்தன்பெயர்        மொத்தஆண்டு   அரசர்ஆண்டு    வேந்தர்ஆண்டு

    1.இமயவரம்பன்       333-275=58       333-327=6        327-275=52

    2.அவனதுதம்பி        290-265=25       290-275=15       275-265=10

    3.மூத்தமகன்          275-250=25       275-265=10       265-250=15

    4.செங்குட்டுவன்       275-220=55       275-250=25       250-220=30

    5.கடைசிமகன்         250-212=38       250-220=30       220-212=8

    மொத்த ஆண்டுகள்    201             86              115

    பொறையர் குலச்சேர வேந்தர்கள்:

    1.செல்வக்  வாழி.           230-205=25       230-212=18       212-205=7

    2.பெருஞ்   பொறை    210-195=15       210-205=5        205-195=10

    3.இளஞ்    பொறை    200-184=16       200-195=5        195-184=11

    மொத்த ஆண்டுகள்    56              28              28

         உதியனின் மகன்கள் இருவரும்(இமயவரம்பனும் அவனது தம்பியும்), அவனது பேரன்கள் மூவரும்(இமயவரம்பனின் மகன்கள்) சேர்ந்து பதிற்றுப்பத்துப்படி மொத்தம் 201 ஆட்சி ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இதில் ஒருவன் வேந்தனாக இருந்த போது மற்றவர்கள் அரசர்களாக இருந்துள்ளனர். இவர்களது வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட 115 ஆண்டுகள் ஆகும். இந்த வேந்தர் ஆட்சி ஆண்டுகளைத்தான் காலக் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளமுடியும். இமயவரம்பன் சோழன் மகள் மணக்கிள்ளியை இரண்டாவது மனைவியாக மணந்தபின்,  அவனது 50ஆவது வயதில் சேரன் செங்குட்டுவன் அவனுக்கு மகனாகப் பிறக்கிறான். அதன் பின் ஆடுகோட்பாட்டு சேரலாதன் பிறக்கிறான்.

            கி.மு. 232 வாக்கில் அசோகர் இறந்தார் என்பதாலும், கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவினர் என்பதாலும் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பு என்பது கி.மு. 232-228 வாக்கில்தான் நடந்தது எனலாம். சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப்படையெடுப்பு, சாதவாகனர்கள் தனி ஆட்சியை நிறுவக் காரணமாக அமைந்தது. பரணரால் சேரன் செங்குட்டுவன் பாடப்பட்டவன்; அதியமான் காலத்தில் வாழ்ந்தவன்;  வடநாட்டுப் படையெடுப்புக்குப் பின்னரே சோழன் கிள்ளிவளவனுக்கு உதவ நேரிவாயில் போர் இவனால் நடத்தப்பட்டது; அவன் இறந்த ஆண்டும், சம்பை கல்வெட்டின் ஆண்டும் கிட்டத்தட்ட கிமு. 220 ஆகும். கொல்லிமலை கைப்பற்றப் படுவதற்கும் திருக்கோவிலூர்போர் நடப்பதற்கும் சிறிது காலத்துக்குமுன் அவன் இறந்துவிடுகிறான்.

           7ஆம் காலகட்டம் வரையான சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப்பதில் பதிற்றுப்பத்தின் மொத்த ஆட்சி ஆண்டுகளும், சங்கப்பாடல்களும் போக, நந்தர்கள்-மௌரியர்கள் ஆட்சிமாற்றம் கி.மு. 323 வாக்கில் நடந்தது; இந்தியாவின் வடபகுதியில் கி.மு. 325-322 வரை கலவரங்கள் நடந்தன; கி.மு. 272 வாக்கில் பிந்துசாரன் இறந்தான்; அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து அசோகன் கி.மு. 268 வாக்கில் முடி சூடினான்; கி.மு. 256 வாக்கில் அசோகன் கல்வெட்டுகள் வெட்டப்பட்டன; கிமு. 232 வாக்கில் அசோகர் இறந்தார்; கி.மு. 230 வாக்கில் சாதவாகனர்கள் தனி அரசை அமைத்தனர்; கி.மு. 220 வாக்கில் சம்பைக்கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 165 வாக்கில் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு வெட்டப்பட்டது; கி.மு. 163 வாக்கில் இரண்டாவது தூமகேது தோன்றியபோது யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இறந்தான் என்பன போன்ற வரலாற்றுச் செய்திகள், கி.மு. 327 முதல் கி.மு. 163 வரையான 2ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையிலான சேரஆட்சியாளர்களின் ஆண்டுகளை வரையறை செய்து அவைகளை நிர்ணயிப்பதில் மிக முக்கியப் பங்கை வகித்தன.

          சிலப்பதிகாரக் காப்பியம் மூலம் சாதவாகனர்களுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் தொடர்பு இருந்ததை,  அதில் சேரன் செங்குட்டுவன் பெரு வேந்தனாகவும், சாதவாகனர்கள் அவனுக்குக் கட்டுப்பட்டு, அவன் சொல்படி செயல்படுபவர்களாகவும் காட்டப்பட்டிருப்பதை அறியமுடிகிறது. மேலும் சேரன் செங்குட்டுவன் தனது இறுதிக்காலத்தில்தான் வடநாடு படையெடுத்தான் என்பதையும் அறிய முடிந்தது. இமயவரம்பன் தனது வேந்தர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே வடநாடு படையெடுத்தான் என்பதை 2ஆம் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. இந்த ஒவ்வொரு செய்தியும் காலக்கணிப்பிற்கு பயனுள்ளதாக இருந்தது எனலாம்.

    தொடருவோம்

    Share
  • பழந்தமிழக வரலாறு – 12

    கணியன்பாலன்

            தமிழக வரலாற்றுக்கான காலவரையறைகள்

             நமது பழந்தமிழக வரலாறு இங்கு தரப்பட்டுள்ள இருபத்தொரு காலவரையறைகளைத் தனது வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வரலாற்று ஆதாரங்களையும், நமது சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து, இவை இரண்டின் அடிப்படையில்  பல புதிய கணிப்புகள் கண்டுணரப்பட்டு, நமது முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆண்டுகளும், காலகட்டங்களும்  கணிக்கப்பட்டன.

    1.கிரேக்கவீரன் அலெக்சாந்தர் கி.மு. 326 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்து, 19 மாதம் கழித்து கி.மு 325 வாக்கில் வெளியேறுகிறான்-(1).

    2.அலெக்சாந்தர் காலத்திலும் அவனுக்கு முன்னும் மகதத்தை நந்தர்கள் ஆண்டு வந்தனர். நந்தர்களில் மகாபத்ம நந்தன் இந்திய அளவில் புகழ்பெற்றவனாக இருந்தான்-(2).

    3.கி.மு.325-322 வரையான காலங்களில் வட இந்தியாவில் கலவரங்களும் குழப்பங்களும் நடைபெற்றது என்கிறார் வின்சென்ட் சுமித்-(3).

    4.மௌரியர்கள் சுமார் கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். வட இந்தியாவில் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் கி.மு. 300 வாக்கில் தக்காணத்தின் மீது படையெடுக்கின்றனர்-(4).

    5.கி.மு. 297இல், பிந்துசாரன் பதவியேற்றபின் தக்காணத்தின்மீதான படையெடுப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. கடலுக்கு இருபகுதிகளிலும் இருந்த தக்காணப்பகுதிகளைக் கைப்பற்றியவனாக அவன் கருதப்படுகிறான்-(5).

    6.சங்கப்பாடல்கள், வடுகர்கள், கோசர்கள் துணையோடு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்தும், வல்லம்போர், செருப்பாழிப்போர் ஆகியவற்றில் வடவடுகர், வம்பவடுகர், ஆரியர் எனப்படுகிற மௌரியர்கள் இளஞ்செட்சென்னியால் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் பேசுகின்றன-(6).

    7.இப்படையெடுப்புக்குப்பின் மௌரியர்களின் தெற்கெல்லை, மேற்கே கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கே வடபெண்ணை நதியின் முகத்துவாரத்தில் இருந்த நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததாக வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார்-(7).

    8.வின்சென்ட் சுமித் தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன எனவும் ஆனால் மௌரியப்பேரரசில் கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்-(8).

    9.மாமூலனார் தமிழ் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டில் மொழிபெயர்தேயம் எனப்படும் தாக்காணப்பகுதி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்(9).

    10.முதுகுடுமிப்பெருவழுதி வெளியிட்ட நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கருத்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிற பிரித்தானிய-ஜெர்மன் குழுவினர்,  ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்பு-(10).

    11.புகளுர்கல்வெட்டின் காலம் பட்டிப்பொருளு கல்வெட்டுக்கு(கி.மு.290-270) முந்தைய கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கணிப்பு-(11).

    12.சேரலாதன் இமயவரம்பன் குறித்தப் பதிற்றுப்பத்துப்பாடல்கள், அதன் பதிகம், அவன்குறித்த மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்கள் ஆகியன, அவன் 58 ஆண்டுகள் ஆட்சியாண்டதையும்,  வேந்தன் ஆனவுடன் இமயம்வரை அவன் படையெடுத்துச் சென்று வென்றதையும், கடம்பர்களையும், யவனர்களையும் வென்றதையும் தெரிவிக்கின்றன-(12)

    13.கி.மு. 256ஆம் ஆண்டைய அசோகன் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேரளபுத்ர அரசுகள் இடம்பெற்றுள்ளனர். சோழர்கள் முதன்மை பெற்றுள்ளார்கள். அதியன்கள் இடம் பெற்றுள்ளார்கள்-(13).

    14.கி.மு. 232இல் அசோகர் இறந்துபோகிறார். சாதவாகனர்கள் கி.மு.230இல் தனி அரசாக ஆகின்றனர்-(14).

    15.சம்பை கல்வெட்டின் காலம் கி.மு.270-230; அதில் இடம்பெற்ற ‘சதியபுதோ’ என்பதில் உள்ள எழுத்துக்கள் பண்டைய எழுத்தியல்-கல்வெட்டியல் (palaeography-orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருப்பது போன்றே இருப்பது-(15).

    16.காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டின்படி, கி.மு. 165க்கு முன்  1300 வருடங்களாக தமிழரசுகளின் ஐக்கியகூட்டணி இருந்து வந்துள்ளது. தமிழரசுகளின் காவல் அரணாக இருந்த, புத்துண்டா என்கிற கலிங்கநாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக நகரம் காரவேலனால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஆண்டு பாண்டிய வேந்தன் பரிசுப்பொருட்களை காரவேலனுக்கு அனுப்பியுள்ளான்-(16).

    17.பதிற்றுப்பத்துப் பாடல்களின் தரவுகளும், அதன்பதிகங்கள்தரும் வேந்தர்களின் ஆட்சியாண்டுகளும்-(17).

    18.வரலாற்றுக்கால இரண்டாம் தூமகேதுவின் ஆண்டும்(கி.மு.163), யானைக் கண்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்தஆண்டும் ஒன்றாக இருப்பது. பத்தாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இவனே என்கிற தமிழறிஞர்களின் கணிப்பு-(18).

    19.தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம்-கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(சுமார்கி.மு.130-100) என்கிற தினமலர் ஆசிரியர், நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கணிப்பு-(19).

    20.மாக்கோதை வெளியிட்ட தலைவடிவ நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு சிறிது முந்தைய காலப்பகுதி(130-100)  என்கிற அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன், ஆர். கிருஷ்ணமூர்த்தி  ஆகியவர்களின் கணிப்புக்கள்-(20).

    21.கி.மு. முதல் நூற்றண்டில், சுங்க வம்ச ஆட்சியாளர்களின் இறுதிக் காலத்தில்(கி.மு.75), அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த உச்சயினி மீது  தெற்கத்திய சாதவாகனர்களின் படையெடுப்பு நடந்தது என்கிற கோசாம்பி அவர்களின் கருத்து. சோழன் நலங்கிள்ளி உச்சயினி மீது படையெடுத்தான் என சங்ககால இறுதிக்கால “முத்தொள்ளாயரம்” நூல் கூறும் செய்தி-(21).

           வரலாற்றுக் காலவரையறைக்கான ஆதாரங்கள்

    1.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா, தமிழில் மாஜினி,    வெளியீடு, ஜூன்-2004, பக்: 187.

    2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 101.

    3.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 56.

    4, 5. பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 111, 112.

    6.மாமூலனார் – அகம்: 251, 265, 281; பாவைக்கொட்டிலார் – அகம் 336; இடையன் சேந்தன் கொற்றனார் – அகம்: 375;   ஊன்பொதிபசுங்கொடையார்- புறம்: 370, 378; கள்ளில் ஆத்திரையனார்-புறம்: 175; உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்- அகம்: 69.

    7.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 64.

    1. “     “    பக்: 79

    9.மாமூலனாரின் அகநானூற்றுப்பாடல்: 31.

    10.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45;  தமிழகக் கடல்சார் வரலாறு, பதிப்பாசிரியர்கள்-ந.அதியமான் & பா.ஜெயக்குமார்,   தமிழ்ப்பல்கலைக்கழகம்,   ஐப்பசி-நவம்பர்:2006,     பக்:24;     ஆர். கிருஷ்ணமூர்த்தி,  செழிய செழியன் நாணயங்கள், பக்: 125-128.

    11.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 25.

    12.இரண்டாம் பதிற்றுப்பத்துப்பாடல்கள் & பதிகம் – குமட்டூர் கண்ணனார்; மாமூலனாரின் அகப்பாடல்கள்: 127, 347.

    13.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, அசோகர் ஆணைகள், பக்: 123, 124, 139, 140.

    14.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 310, 311.

    15.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 26-28.

    16.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

    17.சங்ககால பதிற்றுப்பத்தும் அதன் பதிகமும்.

    18.க.ப. அறவாணன், “தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்” டிசம்பர் 2009, பக்: 54-61 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 580-582.

    19.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், பக்: 81-91.

    20.சங்ககால சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு, சில வரலாற்றுச்செய்திகள், ஆர். கிருஷ்ணமூர்த்தி, 2009, பக்: 31, 32. & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45.

    21.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, செப்டம்பர்-2006, பக்: 388. & கவிஞர் தெசிணி அவர்கள், ‘கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்’, டிசம்பர் 2004, பக்; 180;

    Share
  • பழந்தமிழக வரலாறு – 11

    கணியன்பாலன்

    இ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

    மோகூர்த்தலைவன்:

     

        இறுதியில் மோகூர்த் தலைவனும் அதியன்மரபினரும், திதியனும் எல்லையோர அனைத்துப்பிற தமிழ் அரசுகளும் ஒன்றிணைந்து மோரியர்களைப் போரில் தோற்கடித்துத் தங்களது எல்லையைவிட்டு துரத்திவிடுகின்றனர். மோரியர்படை பின்வாங்கி துளுவநாட்டை அடைந்து பாழிநகரில் நிலைகொள்ளுகிறது. துளுவநாட்டு வெற்றிக்குப்பின் மௌரியரது எல்லைப் பகுதிப் படைத்தலைவர்களே வடுகர்களின் துணையோடு போரிட்டு வந்தனர். ஆனால் அவர்களால் தமிழக எல்லையில் உள்ள குறுநில மன்னர்களை, வேளிர்களை வெல்ல இயலவில்லை. தமிழகத்தின் எல்லையில் மௌரியப்படைகளின் தோல்வி மௌரியப்பேரரசைத் தட்டி எழுப்பியது. மௌரியப்பேரரசின் பெரும்படை திரட்டப்பட்டது. பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றன. துளுவ நட்டையும், எருமை நாட்டையும் கடந்துவரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப்பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது. இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதைகள் அமைக்கும் பணி குறித்தும் வடுகர்கள் வழிகாட்டியாக இருந்து மௌரியர்களுக்கு உதவியது குறித்தும் மோகூர்த்தலைவன் மேல் பகைகொண்டு மௌரியர் படையெடுத்து வந்தது குறித்தும் மாமூலனாரும், பிற சங்கப்புலவர்களும் தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்தப்பெரும்போருக்கான ஆயத்தப்பணிகள் முடிந்தவுடன் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி தமிழகத்தின் மீது படையெடுக்கத்தயாராகியது.

    சோழர்களின் முதன்மை:

         தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, அப்பொழுது சோழ வேந்தனாக இருந்த சோழன் இளஞ்சேட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத்தலைவர்களை, வேளிர்களை, சிற்றரசர்களை மட்டும் இப்பெரும்போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை ஒன்றுதிரட்டி தனது தலைமையில் பெரும்படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப்போராக தமிழகக் கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி, சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி சேர பாண்டியவர்களை விட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர். அசோகன் கல்வெட்டுகளிலும் அதன் காரணமாகவே பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெறுகின்றனர். ஆகவே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கும் தமிழரசுகளின் வெற்றிக்கும் அசோகன் கல்வெட்டுகள் ஒருவிதத்தில் மறைமுக சான்றாதாரங்கள் ஆகின்றன எனலாம்.

    வல்லம்போர்:

         தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வட பகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப்பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடந்த பெரும் போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெரும் தோல்வி அடையச் செய்து துரத்தி அடித்தான். வல்லம் போர் குறித்து அகம் 336இல் பாடிய பாவைக் கொட்டிலார் என்கிற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர் தங்களை ஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர்.  கி.மு.3ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்ட இப்பாடலில் குடும்ப மகளிர்கள் ‘கள்’ அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது.

    ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

         வல்லம் போருக்குப் பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக்கொண்டேயிருந்தனர். ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நிலையில் தான் பாண்டியர் படைகளுக்குத்தலைமை தாங்கிய, இளைஞனாக இருந்த நெடுஞ்செழியன் மௌரியர்களின்பெரும்படை ஒன்றைத் தோற்கடித்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என பெயர் பெற்றான். முதல் கரிகாலனுக்குச் சம காலத்தவனாகவும், சேரன் செங்குட்டுவனுக்கு முந்தையவனாகவும் அவன் இருந்தான். ‘தமிழகம் ஒன்றாக இருந்து பார்க்கும் வகையில் வட ஆரியப்படையை எதிர்த்து வெற்றி பெற்ற நெடுஞ்செழியன்’  என்கிறது சிலப்பதிகாரம்-(17). ஆகச் சோழன் தலைமையில் பாண்டியர்களும், சேரர்களும் மௌரியப்படையை பலமுறை தோற்கடித்தனர். இறுதியில் தொடர்ந்து பலமுறை நடந்த தோல்விகளால் தாக்குப் பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு மௌரியப்படை பாழி நகருக்குப் பின் வாங்கியது.

    செருப்பாழிப் பெரும்போர்:

        இளஞ்சேட் சென்னி போரைத் தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரைப் படையெடுத்துச் சென்று, அதனைத் தாக்கி, இறுதியில் பெரும் வெற்றியை தமிழகத்திற்கு வாங்கித் தந்தான். இளஞ்சேட்சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375இல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்பவடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கே வாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருகிற புதியவடுகர்கள என்பதால், அவர்களை வம்ப வடுகர் என்கிறார். பாழி நகரில் நடந்த இறுதிப் பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படை கொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்துகொண்டு நிரந்தரமாகப் பின் வாங்கினர். தமிழகத்தைக்கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.297இல் பிந்துசாரரின் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப்பெரும்போர் கி.மு.288 வாக்கில் முடிந்ததாகக் கணிக்கப் பட்டது. இந்தப் பெரும் போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் பாண்டியர்களைவிட சோழர்களை முதன்மைப் படுத்தியுள்ளான்.

    மாமூலனாரும் வேந்தர்களின் காலமும்:

         பழமொழி நானூற்றின் ஆசிரியர் மூன்றுரையரையனார், புலவரும் தனது மாமனுமாகிய இரும்பிடர்த் தலையாரிடம் கல்வி கற்று, முதல் கரிகாலன் சிறப்புப் பெற்றான்  எனக் குறிப்பிடுகிறார்(18). முதல் கரிகாலன் சிறுவனாக இருந்த பொழுது அவனைவிட இரு தலைமுறைகள் மூத்த முதியவராக இருந்தவர் அவனது ஆசிரியர் இரும்பிடர்த் தலையார். அன்று அரச குடும்பச் சிறுவர்களுக்கு அறிவும் அனுபவமும் உடைய வயதானவர்களைத்தான் ஆசிரியராக நியமிப்பர். இரும்பிடர்த் தலையார் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியை புறம் 3இல் பாடியுள்ளார். இந்தப் பாண்டியன் பெரும்பெயர் வழுதியை, குடவாயிற் கீரத்தனார் அகம் 315ஆம் பாடலில் பாடியுள்ளார். ஆதலால் குடவாயிற் கீரத்தனாரும் இரும்பிடர்த் தலையாரும் சம காலத்தவர் ஆகின்றனர். இந்த குடவாயிற் கீரத்தனார் அகம் 44ஆம் பாடலில் பெரும்பூட்சென்னி என்கிற சோழ வேந்தனைப் பாடியுள்ளார். குடவாயிற்கீரத்தனாரும், இரும்பிடர்த் தலையாரும் சமகாலத்தவர் என்பதால் குடவாயிற்கீரத்தனாரால் பாடப்பெற்ற சோழன் பெரும்பூட்சென்னியும், பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் சமகாலத்தவர் என்பதோடு முதல்கரிகாலனை விட இருதலைமுறைகள் மூத்தவர்களும் ஆவர். அதாவது முதல்கரிகாலன் மூன்றாம் தலைமுறை எனில், குடவாயிற்கீரத்தனார், இரும்பிடர்த் தலையார், சோழன் பெரும்பூட் சென்னி, பாண்டியன் கருங்கைஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆகிய நால்வரும் முதல்கரிகாலனை விட இரு தலைமுறைகள் மூத்த முதல் தலைமுறை எனலாம்(தலைமுறை என்பதை நமது இலக்கியக் கணிப்புப்படி காலகட்டம் எனவும் கருதலாம்).

                மாமூலனார், இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், அவனது தந்தை உதியன் சேரலாதனையும் பாடியுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் போரில் வென்ற முதல் கரிகாலனையும் அவர் பாடியுள்ளார். மாமூலனாரை விட இளையவரான பரணர் முதல் கரிகாலனையும், இமயவரம்பன் மகன் சேரன் செங்குட்டுவனையும் பாடியுள்ளார். ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை அவர் பாடவில்லை. ஆகவே முதல் கரிகாலனுடன் போரிட்ட இமயவரம்பன், முதல் கரிகாலனைவிட மூத்தவன் எனவும், இமயவரம்பனின் மகன் சேரன் செங்குட்டுவன் முதல் கரிகாலனைவிட இளையவன் எனவும்  அறியலாம்.

                            பெரும்பூட்சென்னி முதல் தலைமுறை என்பதாலும், முதல் கரிகாலன் மூன்றாம் தலைமுறை என்பதாலும், பெரும்பூட் சென்னியின் மகனும், முதல் கரிகாலனின் தந்தையும் ஆன செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை ஆகிறான். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி  இரண்டாம் தலைமுறை என்பதால் மாமூலனாரும், இமயவரம்பனும் அவர் காலத்தவர் ஆகின்றனர். மௌரியப் படையை கி. மு. 297முதல் கி.மு.288 வரை போராடி வென்ற இளஞ்சேட் சென்னியின் காலத்தவர் மாமூலனார் என்பதால், அவர் இந்தக் காலத்துக்குச் சிலகாலம் முன்பும் சிலகாலம் பின்பும் வாழ்ந்தவர் எனலாம். அதாவது கி.மு. 3ஆம் 4ஆம் நூற்றாண்டு எனலாம்.  முதல் தலைமுறையைச் சேர்ந்த சோழன் பெரும்பூட் சென்னி, உதியன் சேரலாதன் போன்றவர்கள் கி.மு. 4ஆம் நூற்றாண்டு ஆவர். அதே சமயம் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாமூலனார் போன்றவர்கள் கி.மு. 3ஆம்,  4ஆம் நூற்றாண்டு ஆவர். முதல் கரிகாலன் போன்ற மூன்றாம் தலைமுறையையும், அவனைவிட இளையவனான சேரன் செங்குட்டுவன் போன்ற நான்காம் தலைமுறையையும் சேர்ந்தவர்களின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம்.

    மாமூலனாரின் இறுதிக் காலம்:

         செருப்பாழிப்போர் நடைபெற்ற இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பின், இளஞ்சேட் சென்னியின் புகழ் பரவியதைப் பொறுக்க மாட்டாத சிலர் அவனைச் சூழ்ச்சி செய்து கி.மு. 285 வாக்கில் கொன்று விடுகின்றனர். அதன்பின் அவனது மகன் முதல் கரிகாலன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள நடத்திய போர் தான் முதல் வெண்ணிப்பறந்தலைப் போர் ஆகும். இப்போர் செருப்பாழிப் போருக்குப்பின் ஒருசில வருடங்கள் கழித்து நடந்தது என்பதால் அதன் காலம் கி.மு. 283 எனக்கொள்ளலாம். அதன்பின் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்குப்பின் கி.மு.275 வாக்கில் முதல் கரிகாலனுக்கும், சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இடையே நடந்த போர் தான் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போராகும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இப்போரில் தோல்வியடைந்து, முதுகில் விழுப்புண் பெற்று, நாணி, வடக்கிருந்து உயிர் துறந்து பெரும் புகழடைந்தான். சேரனாடு பெரும் இழப்பைச் சந்தித்தது. முதல் கரிகாலன் தமிழகத்தின் பேரரசனாக உயர்ந்தான். இப்போர் குறித்தும், சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தது குறித்தும் வெண்ணிக் குயத்தியார் என்ற பெண்பாற் புலவரும், கழார்த் தலையாரும், மாமூலனாரும் பாடியுள்ளனர்-(19).

         கி.மு. 275 வாக்கில் நடைபெற்ற, மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போர் குறித்துப் பாடிய பாடலே மாமூலனாரின் இறுதிப்பாடலாகும். ஆகவே மாமூலனாரது இறுதிக்காலம் என்பதை முதல் கரிகாலனின் இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப் போருக்குப்பின்  5 வருடங்கள் கழித்து கி.மு. 270 வாக்கில் எனக் கொள்ளலாம். மாமூலனாரின் தொடக்க காலம் கி.மு.360 என முன்பே கணிக்கப்பட்டுள்ளது. எனவே மாமூலனார் அவர்கள் வாழ்ந்த காலம் என்பது கிட்டத்தட்ட  கி.மு. 360 முதல் கி.மு. 270 வரையான சுமார் 90 வருடங்கள் எனலாம். கி.மு.4ஆம் நூற்றாண்டின் இடையில் பிறந்த மாமூலனார் தனது இளவயதில் நந்தர்களையும், முதல் தலைமுறையைச் சேர்ந்த  உதியஞ் சேரலாதனையும், கி.மு. 270க்கு முன் தனது இறுதிக் காலத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சோழன் முதல் கரிகாலனையும் இடையில் மௌரியர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார். ஆகவே பல்வேறு தரவுகளையும், ஏரணக்கண்ணோட்டம்-பொதுஅறிவு  அடிப்படையிலும் கணிக்கப்பட்ட காலமே மாமூலனாரின் காலமாகும்.

         புகளூர் கல்வெட்டு, அசோகன் கல்வெட்டுகள், சம்பைக் கல்வெட்டு முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், மாக்கோதை, குட்டுவன் கோதை  நாணயங்கள், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள், மாமூலனாரும் பிற சங்கப் புலவர்களும் நந்தர்கள் குறித்தும், மௌரியர்கள் குறித்தும், பாடிய பாடல்கள், செருப்பாழிப் போர், வல்லம் போர் குறித்தச் சங்கப் புலவர்களின் பாடல்கள், மொழிபெயர் தேயம் எனப்படும் தக்காணப் பகுதி தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்கிற மாமூலனாரின் குறிப்பு போன்ற சங்க இலக்கியச் சான்றுகள் ஆகிய மேலே தரப்பட்டுள்ள பல்வேறு வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டதுதான் மாமூலனாரின் காலமும்(கி.மு. 360-270), செருப்பாழிப்போரின் காலமும்(கி.மு. 288), சேரன் செங்குட்டுவனின் காலமும்(கி.மு. 3ஆம் நூற்றாண்டு), ஆகும். இக்காலங்கள் பழந்தமிழக வரலாற்றுக்கான ஆண்டுகளையும், காலகட்டங்களையும் கணித்து, அவைகளை உறுதிப்படுத்துவதில் மிகமிக முக்கியப் பங்காற்றியுள்ளன எனலாம்.

    பார்வை:

    17.சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், 23-கட்டுரைக்காதை: கட்டுரை வரி; 14, 15.

    18.ஔவை.சு.துரைசாமிபிள்ளை, புறநானூறு-1, ஜூலை-2009, பக்:31.

    19.வெண்ணிக்குயத்தியார் என்ற பெண்பாற் புலவரின் புறநானூற்றுப்பாடல்: 66; கழார்த்தலையார் அவர்களின் புறநானூற்றுப்பாடல்: 65; மாமூலனார் அவர்களின் அகநானூற்றுப்பாடல்: 55.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 10 ஆ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

    கணியன்பாலன்

    மாமூலனார் பாடல்கள்:

         மாமூலனார், பரணர், கபிலர் ஆகியவர்கள் குறித்து அப்பாதுரையார் தனது தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில், “பரணர் சங்ககாலப் புலவர்களிலேயே மிக முற்பட்டவர், மிக நீண்ட நாள் வாழ்ந்தவர், அவர் முதுமைக்காலத்திலே கபிலர் இளையவராக இருந்தார், மாமூலனாரோ பரணரிலும் பழமையானவர். அவர் மௌரியருக்கு முற்பட்டு கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்” எனக்கூறுகிறார்(11). ஓரளவு பொருத்தமான காலத்தையே அப்பாதுரையார் கூறியுள்ளார் எனலாம். ஆகவே முதலில் ஓரளவு துல்லியமான காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட மாமூலனாரின் ஒருசில சங்கப் பாடல்களைக் காண்போம். இவர் பாடல்கள் மொத்தம் 30 ஆகும். அகநானூற்றில் 27 பாடல்களும், நற்றிணையில் இரு பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் பாடியுள்ளார். புறநானூற்றில் இவர் பாடல் எதுவும் இடம்  பெறவில்லை.

                  மாமூலனார் தனது பாடல் ஒன்றில்(அகம்-265) மகதத்தை ஆண்ட  நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும்  இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார்.  நந்தர்கள் காலம் கி.மு.4 ஆம் நூற்றாண்டு ஆகும்.  நந்தர்கள் குறித்துப் பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில்(அகம்-251, 281),  நந்தர்களுக்குப் பின், மகத ஆட்சிக்கு வந்த  மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்து, வடதமிழகம் மௌரியப் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த போது, சிற்றரசர்களான மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின்  எல்லைக் காவல் படைத் தலைவர்கள், அதனைத்தடுத்து நிறுத்தி, மௌரியப்படைக்குப்  பணியாது எதிர்த்து நின்றனர். அதனால் மோகூர் பழையன் போன்ற தமிழக எல்லைக்காவல் படைத் தலைவர்களின் எதிர்ப்பை முறியடித்து வெற்றிபெற,  வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது  மௌரியர் என்பதன் பிராகிருதச்  சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள  பாறைக் குன்றுகளை வெட்டித் தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு  தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார்.

           அகம் 251ஆம் பாடலில் மாமூலனார், நந்தர்களின் செல்வ வளம் குறித்து, “நந்தன் வெறுக்கை எய்தினும்”(நந்தர்களின் செல்வத்தைப் பெறினும்), எனக் குறிப்பிட்டுவிட்டு,  மௌரியர்களைப் பற்றிய அம்முதல் பாடலில் அவர்களை “வம்பமோரியர்” எனக்குறிப்பிடுகிறார். இப்பாடல் மௌரியர்கள் தமிழகத்தை நோக்கி  படையெடுத்து வந்தபோது பாடிய முதல் பாடல் ஆகும். நந்தர்கள் வீழ்ச்சியடைந்து விட்டார்கள் என்பதை மாமூலனார் முன்பே அறிந்திருப்பார் எனினும், அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த புதியவர்கள் யார் என்பதை, மௌரியர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தபோது தான் அவர் அறிந்திருப்பார் போல் தெரிகிறது. அதனால் தான் பழையவர்களான நந்தர்களுக்குப் பின் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களைக் குறிப்பிடும் போது அவர்களைப் புதியவர்கள் என்கிற பொருளில் வம்பமோரியர் என்கிறார். அதேசமயம் மௌரியர்கள் குறித்த இரண்டாவது  பாடலான அகம் 281ல் வம்ப என்பதை விடுத்து மோரியர் என்றே மாமூலனார் குறிப்பிடுகிறார்.  மாமூலனார் தவிர வேறுசில சங்கப்புலவர்களும், மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.  வேங்கட மலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாடவந்த  கள்ளில் ஆத்திரையனாரும்(புறம்-175), தனது அகப்பாடலில் காதலன் கடந்து சென்ற பாதை குறித்துப் பாடிய உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனாரும்(அகம்-69) மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு  குறித்துப் பாடியுள்ளனர்.

    மௌரியர்களின்  தமிழகப் படையெடுப்பு :

           நந்தர்களை அகற்றிய பின், மகதத்தில் ஆட்சி ஏற்ற  மௌரியர்கள் வட இந்தியாவின்  பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின்  தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய கர்நாடகம் வரை  அவர்கள் தங்கள் படையெடுப்பை  நடத்தியதும் குறித்து  வரலாறு பேசுகிறது.  ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு  தமிழகத்தைத்  தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள்  தரும்  நிகழ்வுகள் குறித்து வரலாற்றில் செய்திகள் எதுவும் இல்லை. இப்படை எடுப்பு நடந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனின் தலைமையில் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளால் முறியடிக்கப்பட்டது.  இவன் குறித்தும் இப்போர் குறித்தும் ஊன்பொதி பசுங்குடையாரும், இடையன்சேந்தன் கொற்றனாரும், பாவைக் கொட்டிலாரும் பாடியுள்ளனர்-(12).

    கே. ஏ. நீலகண்ட சாத்திரி &  டி.டி. கோசாம்பி:

             மாமூலனாரின் சங்கப்பாடல்கள் குறித்து கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், “மாமூலனார் கூறும் நிகழ்ச்சிகள் அசோகன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைபெற்றிருக்கக் கூடும் என்று நாம் கூறலாம்” எனவும் ‘வம்ப’ என்ற சொல்லுக்குரிய ‘புதிய’ என்பதன்படி, “மாமூலனார் தமது பாடலை இயற்றிய காலத்தில் மௌரியர்கள் தென்னாட்டிற்கு வந்தது அண்மையில் நடந்த நிகழ்ச்சியாய் இருந்திருக்கலாம்” எனவும் மாமூலனாரின் கூற்று நம்பத்தகுந்தவை எனவும் குறிப்பிடுகிறார்-(13). வரலாற்று ஆய்வாளர் ஆர். எஸ். சர்மா அவர்கள், “நந்தர்கள் மிகவும் செல்வச் செழிப்பில் செழித்தனர். மிகவும் வலிமை வாய்ந்தவர்களாய் விளங்கினர்” என்கிறார்-(14). இக்கூற்று மாமூலனார் 2300 வருடங்களுக்கு முன்பு கூறியதோடு ஒத்துப்போகிறது.

         மௌரியர்களின் தமிழகப்படையெடுப்பு குறித்து டி.டி. கோசாம்பி அவர்கள், “அசோகரோ, அவரது தந்தையோ போர் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமலேயே மைசூர் அவர்கள் வசமானது. பண்டைத்தமிழ்க் கவிதை இலக்கியம் குறிப்பிடும் வம்பமோரியர் என்பது, திருப்பித் துரத்தியடிக்கப்படும் முன்போ அல்லது தம் தேர்களால் கடக்க முடியாத ஒரு மலையால் தடுத்து நிறுத்தப்படும் முன்போ உள்ளபடியே மதுரையையே அடைந்திருந்த ஒரு மௌரியப்படையையே குறிப்பிடுவதாகலாம்” என்கிறார்-(15). மேலே தந்த சங்கப்பாடல்கள், மௌரியர்களின் தேர் முதலான பெரும் படையைக் கொண்டு செல்வதற்குத்தான் மலையை வெட்டி மௌரியர்கள் பாதை அமைத்தனர் என்கின்றன. ஆதலால் மௌரியப்படை மலையால் தடுத்து நிறுத்தப்படவில்லை, அவை தமிழர்களால் துரத்தியடிக்கப்பட்டது. ஆதலால், மௌரியர்கள் தமிழகம்வரை படையெடுத்தனர் என்பதையும் ஆனால் அவர்கள் தமிழரசுகளால் துரத்தியடிக்கப்பட்டனர் என்பதையும் டி.டி. கோசாம்பி அவர்களின் மேற்கண்ட சொற்களும் உறுதிப்படுத்துகின்றன.

    மகத அரசில் ஆட்சி மாற்றம்:

         ஆகவே மாமூலனாரின் பாடல்கள் மகதஅரசில் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் நடந்த ஆட்சி மாற்றங்கள் குறித்தும், நந்தர்களுக்குப் பின்வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்தும் பேசுகிறது. மாமூலனார் நந்தர்களைப் பற்றி அறிந்திருப்பதும், மௌரியர்களைப் புதியவர்கள் எனக் குறிப்பிடுவதும் அதே காலகட்டத்தில் அவர் வாழ்ந்து வந்தவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. கே. ஏ. நீலகண்ட சாத்திரி, டி.டி. கோசாம்பி ஆகியவர்களின் கூற்றும் இதனை வலியுறுத்துகிறது. ஆகவே மகத அரசில் நடந்த இந்த ஆட்சி மாற்றங்களின் ஆண்டுகள் மாமூலனாரின் காலத்தை நிர்ணயிக்கப் பயன்படும் எனலாம். கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்தான். அவன் கி.மு. 325 வாக்கில் இந்தியாவிலிருந்து திரும்பினான். கி.மு. 323இல் பாபிலோனியாவில்  இறந்தான். அதன்பின் சந்தரகுப்த மௌரியன் நந்தர்களின் மகத ஆட்சியை வீழ்த்தி விட்டு கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றினான். இந்த ஆண்டுகள் ஆதார பூர்வமான உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட ஆண்டுகள். முறையானதும் சரியானதுமான இந்த ஆண்டுகளைக் கொண்டு தமிழக வரலாற்றுக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாமூலனார் காலம்:

         நந்தர்கள் சுமார் கி.மு. 365 முதல் கி.மு. 321 வரை சுமார் 44 ஆண்டுகள் மட்டுமே ஆண்டனர். அவர்களில் மகாபத்ம நந்தன் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவனாக இருந்தான். நந்தர்களின் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது தான் மாமூலனாரின் அகம் 265ஆம் பாடலாகும். கி.மு. 321இல் நந்தர்கள் வீழ்ச்சி அடைந்தனர்  என்பதால், அவர்களின் புகழும் அத்தோடு வீழ்ச்சி அடைந்தது. நந்தர்களுக்குப்பின் மௌரியர் ஆட்சியேற்ற பின்னரும், அவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த போதும் மாமூலனார் வாழ்ந்து வந்தவர். ஆகவே நந்தர்கள் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் சுமார் கி.மு. 330 வாக்கில் தனது இளைய வயதில் மாமூலனார் நந்தர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்தான் அகம் 265ஆம் பாடலாகும். ஆகவே அப்பாடலைப் பாடியபோது அவரது வயது 30 எனக் கொண்டு, அவர் கி.மு. 360 வாக்கில் பிறந்தார் எனக் கணிக்கப்பட்டது..

    சோழர்களின் முதன்மை:

         மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்த மாமூலனார் குறிப்புகளுக்கு, அசோகன் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன. கி.மு. 325 முதல் கி.மு. 300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மெகத்தனிசு, சாணக்கியர் போன்றவர்களால் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாகவும் ஒரே அரசாகவும் குறிக்கப்படுவது பாண்டிய அரசு தான். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொறிக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசு தான். பாண்டிய அரசு அசோகனின் இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்குள் மௌரிய அரசியலில் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட நிகழ்வே மௌரியர்களின் தமிழகப் படையெடுப்புக்கான ஆதாரமாகும். இதனை விரிவாகக் காண்போம்.

    பெரும்தோல்வி:

         சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலம் கி.மு. 321 முதல் கி.மு. 297 வரையான 24 வருடங்கள் ஆகும். அவர் மகன் பிந்துசாரரின் ஆட்சிக்காலம் கி.மு. 297 முதல் கி.மு. 272 வரையான 25 வருடங்கள் ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்திலேயே, கி.மு. 300க்குப்பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கிவிடுகிறது. ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.மு. 297க்குப்பிறகு அது தீவிரப்படுத்தப் படுகிறது. இதுகுறித்து கா. அப்பாதுரை அவர்கள் முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்கஇலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்-(16).

                    தக்காணத்தையும் தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கிட்டத்தட்ட கி.மு. 297 முதல் கி.மு. 288 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப்பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பலபகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனல் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவேயாகும். பாரசீகப்பேரரசு கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது போன்ற நிலையே மௌரியப்பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிந்துசாரரின் கடைசி ஆண்டுகளில் தமிழரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

    மௌரியப் படையெடுப்பு:

         கி.மு. 297 வாக்கில் பிம்பிசாரன் மகத ஆட்சியில் அமர்ந்தவுடன் தக்காணப் படையெடுப்பைத் தீவிரப்படுத்தினான். மௌரியப்படை தக்காணத்தின்மீது படையெடுத்து வந்த போது அவர்களுக்கு வடுகர்கள் துணையாக இருந்து ஆதரவு தந்தனர். மௌரியப்படையில் சேர்ந்துகொண்ட கோசர்களும், வடுகர்களும் தென்பகுதியில் இருந்த அனைத்து அரசுகளோடும் போர் செய்து வென்று வரலாயினர்.  மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணைகொண்டு துளுவ நாட்டைத்தாக்கி அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியைக் கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினரையும், சோழநாட்டின் எல்லையிலுள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர் பழையனையும் படிப்படியாகத் தாக்கத்தொடங்கினர்.

    சதிய புத்திரர்கள்:

         அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து, தொடர்ந்து இறுதிவரை தாக்குதல் நடத்தினர். தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் மேற்குக் கடற்கரையில் உள்ள குதிரை மலை முதல் கொங்குநாடு வரை அதியன்கள் மரபினர் ஆண்டு வந்ததால் அவ்வழியே படையெடுத்து வந்த மௌரியப் படைகளை அவர்கள் கடுமையாக  எதிர்த்துப் போரிட்டனர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில் அவர்களுடைய அரசகுடி வடமொழிப்(பிராகிருதம்) பெயரில், சதிய புத்திரர்கள் என மூவேந்தர்களுக்கு இணையாக இடம்பெற்றனர். இந்த அதியன் மரபினரும், சோழ நாட்டெல்லையில் உள்ள அழுந்தூர்வேள் திதியனும், பாண்டிய நாட்டின் எல்லையிலுள்ள மோகூர்ப்பழையனும் மௌரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

    பார்வை:

    11.அப்பாதுரையார், தென்னாட்டுப் போர்க்களங்கள், பக்: 81.

    12.ஊன்பொதி பசுங்குடையார் பாடிய புறநானூற்றுப்பாடல்: 378; இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 375; பாவைக்கொட்டிலார் பாடிய அகநானூற்றுப்பாடல்: 336.

    13.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 28, 37.

    14.பண்டைக்கால இந்திய, ஆர். எஸ். சர்மா, தமிழில் மாஜினி, NCBH  வெளியீடு, ஜூன்-2004, பக்:180.

    1. டி.டி. கோசாம்பி, ‘இந்திய வரலாறு ஓர் அறிமுகம்’ தமிழில் சிங்கராயர், அக்டோபர்- 2011, விடியல் பதிப்பகம், பக்: 271.

    16.தென்னாட்டுப் போர்க்களங்கள், கா. அப்பாதுரை, ஜூலை-2003, பக்: 57-63.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 9

    கனியன்பாலன்

    அ.மாமூலனாரும் செருப்பாழிப்போரும் செங்குட்டுவனும்

         .

           தென்னிந்தியக் கல்வெட்டுகள்(South Indian Inscription) என்கிற நூல்  தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச்(Hultzsch)  என்பவர், முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை(1). மேலும் மகாவம்சம் குறிப்பிடும் கயவாகுவின் காலம், அந்தக் கயவாகு சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக நடத்திய விழாவில் கலந்து கொண்டான் என்கிற செய்தி ஆகிய இரண்டுமே அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் அற்றவை. அவை வரலாற்றுக்கு பொருந்தாதவை. ஆகவே, அவைகளைக் கொண்டு தமிழக வரலாற்றின் காலங்களைக் கணிப்பது முறையான காலக்கணிப்பாக இருக்காது. ஆகவே இந்தியாவின் மேல் அலெக்சாந்தர் படையெடுப்பு நடத்திய காலத்தையும், மாமூலனார் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மகதத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், அதன்பின் தமிழகத்தின்மேல் மேற்கொள்ளப்பட்ட மௌரியப் படையெடுப்புக்காலத்தையும், அசோகன் கல்வெட்டையும் கணக்கில்கொண்டு, நமது தமிழக வரலாற்றுக்கான காலம் கணிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படவேண்டும்.  இவைகளின் மூலம் மட்டுமே  நமது தமிழக வரலாறு உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்பட்டு, ஒரு முறையான, நிலையான, உறுதியான காலவரையறையைக் கொண்ட வரலாறாக ஆகும்.

    பழந்தமிழக வரலாற்றில் அசோகன் கல்வெட்டும் சம்பைக் கல்வெட்டும்:

           அதியமான் திருக்கோவிலூர்ப் போரில் மலையமான் காரியை வென்ற போது, பரணர் அதியமானைப் பாடியுள்ளதாக ஔவையார் குறிப்பிடுகிறார். ஆகவே, பரணர் அதியமான் காலத்தவர் ஆகிறார். பரணர் சேரன் செங்குட்டுவனை, 5ஆம் பதிற்றுப்பத்திலும், புறம்-212, 369;  அகம்-376 ஆகிய மூன்று பாடல்களிலும் பாடியுள்ளார். ஆகவே, சேரன் செங்குட்டுவன் பரணர் காலத்தவனாகிறான். இவைகளின் காரணமாக சேரன் செங்குட்டுவன், அதியமான், பரணர் ஆகியோர் சம காலத்தவர் ஆகின்றனர்.

         அதியமானின் சம்பைக் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் அசோகர் கல்வெட்டில் உள்ள “சதியபுதோ” என்கிற சொல்லும் ஒரே மாதிரி எழுதப்பட்டு, இரண்டும் அதியமான்களை அவர்களது பரம்பரையைத் தான் குறிப்பிடுகிறது. பண்டைய எழுத்தியல்- கல்வெட்டியல்(palaeography – orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் போன்றே சம்பை கல்வெட்டிலும் இருப்பது என்பது இரண்டும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதி செய்கிறது.  அசோகர் கல்வெட்டின் காலம் கி.மு.256 ஆகும். ஆகவே சம்பைக் கல்வெட்டின் காலம் தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்களின் கருத்துப்படி கி.மு. 270-230 ஆகும். அதாவது அசோகன் கல்வெட்டுக்குச் சில வருடங்கள் முன்பின் என்பதே அதன் கருத்தாகும்(2). நாம் அதனை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனலாம். அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியவற்றின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதால் சம்பைக் கல்வெட்டை வெட்டிய அதியமான், அதியமானைப்பாடிய பரணர், பரணர் பாடிய சேரன் செங்குட்டுவன் ஆகிய மூவரின் காலமும் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என உறுதிப்படுத்தலாம்.

         ‘பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்’ என்ற எனது நூலில் அசோகன் கல்வெட்டு, சம்பை கல்வெட்டு ஆகியன போக, புகளூர் கல்வெட்டு; மாமூலனாரின் நந்தர்கள், மௌரியர்கள், சேர, சோழ வேந்தர்கள் குறித்த பாடல்கள்; அதியமான், சேரன் செங்குட்டுவன் குறித்த பரணரின் பாடல்கள்; பாலைபாடிய பெருங்கடுங்கோ, மாமூலனார் ஆகியவர்களின் நன்னன் குறித்த பாடல்கள்; தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்; மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள்; ஆகியவைகளைக் கொண்டு செங்குட்டுவனின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்பது பல தளங்களில், பல கோணங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது(3).

    மகாவம்ச நூலும் செங்குட்டுவனின் காலமும்:

         வில்கெம் கெய்கர் அவர்களின் மகாவம்ச நூலின்படி புத்தர் இறந்தபின் 248 ஆண்டுகள் கழித்து அசோகர் முடிசூட்டிக்கொண்டார்(4). மகாவம்ச நூலின் ஆண்டுப்பட்டியல் கி.மு. 483இல் இருந்து தொடங்குகிறது. ஆனால் கி.மு. 483 என்பது எந்தவிதத்தில் இந்திய அல்லது உலக வரலாற்றுக் காலவரையரையோடு இணைக்கப்பட்டது என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் எதுவும் அந்த நூலில் தரப்படவில்லை. அந்த நூல் தந்துள்ள மன்னர்களுடைய ஆட்சி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கயவாகுவின் காலம் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 483இல் தொடங்கும் பட்டியல் கி.பி. 352இல் முடிகிறது. அநுராதபுரத்தில் கிட்டத்தட்ட சுமார் 835 ஆண்டுகள் ஆட்சி செய்த 61 மன்னர்களை அது குறிப்பிடுகிறது. இந்த ஆண்டுகள் ஆரம்பம் முதல் இடையில் கூட உலக, இந்திய காலவரையரைகளோடு இணைக்கப்படவில்லை-(5).

         புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் அவர்கள் கி.மு. 483 முதல் கி.பி. 124 வரையான, 607 வருடகால மகாவம்ச நூலின் வரலாற்றை,  அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்துள்ளார்.  தேவநாம்பியதீச என்கிற மன்னன் சார்ந்த 10 அத்தியாயங்களை “அபத்தங்களால் முடையப்பட்ட வேலைப்பாடு” என்கிறார் அவர்-(6). அதனால்தான் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கூல்ட்ச்(Hultzsch) அவர்கள் சேரன் செங்குட்டுவன், கயவாகுவின் காலத்தைச் சேர்ந்தவன் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நூல், எந்த வெளிநாடும் செல்லாத புத்தர் மூன்றுமுறை இலங்கை வந்ததாகக் கதை சொல்லுகிறது. தனது 99 சகோதரர்களைக்கொன்றபின் அசோகர் ஆட்சிக்கு வந்தார் என்கிறது-(7). புத்தசமயத்துக்கு மாறுவதற்கு முன் அசோகர் தீயவராக, கொடூரமானவராக இருந்தார் என அந்நூல் சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்கிறார் வின்சுடன் சுமித்(8).

         பல அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் இலங்கை பற்றித் தனது கல்வெட்டில் எதுவும் சொல்லவில்லை. அசோகருக்கு மகிந்த, சங்கமித்ர என்கிற மகனோ, மகளோ இருக்கவில்லை. அவர்கள் இலங்கை போகவும் இல்லை. மகிந்த அவருடைய தம்பி ஆவார். அவர்தான்  தமிழகம் வந்தார். இலங்கை போனார். தமிழ்நாட்டில் இருந்துதான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின. இவை வின்சுடன் சுமித் அவர்கள் தனது அசோகர் என்கிற நூலில் தரும் தரவுகளாகும்-(9). மகாவம்ச நூல் என்பது பௌத்தமத நம்பிக்கையாளர்கள் ஓதுவதற்கும், நினைவில் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு இன்பமும், பரவசமும் ஊட்டவும் எழுதப்பட்டது என்கிறார் அதனை கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘மகாநாம’ என்கிற புத்த பிக்கு. அந்நூல் புத்த மடாலங்களின் அத்தகதா கதைகளையும், புத்தமத மடாலயங்களுக்கு உதவிய மன்னர்கள், அவர்களின் உதவிகள் பற்றிய தரவுகள்  முதலியனவற்றையும் கொண்ட  கி.பி. 3ஆம் நூற்றாண்டு தீபவம்ச நூலைப் புதுப்பித்து எழுதப்பட்டதாகும்-(10).

             ஆகவே எந்தவித அடிப்படைச் சான்றுகளும் இல்லாத, கி.பி. 6ஆம் நூற்றாண்டு வாக்கில், மதக் காரணங்களுக்காக எழுதப்பட்ட, இலங்கையின் பௌத்தமத நூலான மகாவம்சம், இடைச் செருகல்கள் நிறைந்த சிலப்பதிகாரக் காப்பியப் பதிகம் ஆகியவைகளைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட, சேரன் செங்குட்டுவனின்காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதைவிட, சங்க இலக்கியங்கள் தரும் அடிப்படைச் சான்றுகளைக் கொண்டும் உலக வரலாற்றுக்காலத்தோடு இணைக்கப்பட்ட, அசோகன் கல்வெட்டு, புகளூர் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு, தலைவடிவப்பெருவழுதி நாணயங்கள், மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் காலத்தைக் கொண்டும் கணிக்கப்பட்ட சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே பல கோணங்களிலும் பொருந்திப்போகிறது. இரண்டு காலங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது என்பதையும், சங்க இலக்கியம் இயற்கையானது, நம்பத்தகுந்தது என்பதையும், பதிற்றுப்பத்து கூறும் சேர வேந்தர்களும், பிற சங்க இலக்கியங்கள் கூறும் பல தமிழக வேந்தர்களும் வரலாற்றில் இருந்தவர்கள் என்பதையும் அகழாய்வுகளும், கல்வெட்டுகளும், நாணயங்களும் இன்ன பிற தரவுகளும் உறுதி செய்துள்ளன என்பதையும் கருத்தில்கொண்டு சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்பதே முறையானதாகும்.

    மாமூலனாரும் செருப்பாழிப்போரும்:

         சங்ககாலப் புலவர்களும், பாணர்களும் வேந்தன் இருக்குமிடம் சென்று, அவனை நேரடியாகப் புகழ்ந்து பாடி பரிசுகள் பெற்று வருவதே சங்ககால வழக்கமாக இருந்து வந்துள்ளது. இதனால் தங்கள் காலகட்டத்துக்கு முந்தைய புரவலர்களைப் பாடும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. புறப் பாடல்களில் மட்டுமின்றி அகப்பாடல்களிலும் இதே நிலை தான் இருந்து வந்துள்ளது. முந்தைய காலகட்டப் புரவலர்களை மட்டுமல்ல, முந்தைய காலகட்ட நிகழ்வுகளையும் அவர்கள் பெரும்பாலும் பாடுவதில்லை. புரவலர்களை நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களிடம் நேரடியாகத் தங்கள் புகழ்ந்துரைகளைப் பாடல்களாகப் பாடிப் பரிசில்பெறுவது என்பது பாணர், புலவர்களின் மிகப் பழமையான, தொன்று தொட்டு இருந்து வருகிற ஒரு மரபாகும். அதனால் தங்கள் காலத்துக்கு  முந்தையவர்களை, இறந்து மறைந்து போன பழைய தலைமுறைப் புரவலர்களை அல்லது தலைவர்களைப் பாடும் பழக்கம் என்பது சங்ககாலப் புலவர்களிடம் இருக்கவில்லை.

            சான்றாகக் கபிலர் பாரியிடமும், ஔவையார் அதியமானிடமும், பரணர் செங்குட்டுவனிடமும், அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடமும், நக்கீரர் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனிடமும் நேரடியாகச் சென்று தான் பாடிப் பரிசில் பெற்றார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்துகின்றன. பொதுவாகச் சங்க காலப் புலவர்கள் பழைய தலைமுறைப் புரவலர்களைப் பாடவில்லை என்பதற்குச் சில சான்றுகளைக் கீழே காண்போம்.

    மாமூலனார்:

          மாமூலனார் தனது இளவயதில் உதியஞ் சேரலாதனைப் பாடினார். பின் அவனது மகனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடினார். பின், இந்த நெடுஞ்சேரலாதனுடன் போரிட்ட சோழன் முதல் கரிகாலனைப் பாடினார். ஆனால் இவர் சேர வேந்தர்களில் உதியஞ்சேரலாதனுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த யாரையும் பாடவில்லை. தனது காலத்திய மகத நாட்டு நந்தர்களின் செல்வ வளம் குறித்துப் பாடியுள்ளார். நந்தர்களுக்குப் பின் மகத ஆட்சிக்கு வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்துப் பாடியுள்ளார். மாமூலனார் காலத்தில் நடந்த நிகழ்வுகள்தான், இவர் பாடல்களின் பாடுபொருளாக இருந்தன. தனக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பண்டைய நிகழ்வுகள் குறித்து இவர் எதுவும் பாடவில்லை.

    பரணர்:

         மாமூலனார் முதியவராக இருந்த போது இளையவராக இருந்த, மிக நீண்ட காலம் வாழ்ந்த பரணர், மிக அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்தவர். இவர் தனது இளவயதில் மாமூலனார் பாடிய முதல் கரிகாலனைப் பாடியுள்ளார். பின் அவனது மகனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார். முதல் கரிகாலனுக்குப் பிந்தைய சேரன் செங்குட்டுவனைப் பாடியுள்ளார். ஆனால் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தைய மாமூலனரால் பாடப்பட்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையோ, உதியஞ்சேரலாதனையோ அவர் பாடவில்லை. அதுபோன்றே, முதல் கரிகாலனுக்கு முந்தைய சோழ வேந்தர்களான செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியையோ அல்லது பெரும்பூட்சென்னியையோ அவர் பாடவில்லை.

         பாண்டியர்களில் நம்பி நெடுஞ்செழியனையும் அவனுக்குப் பின் வந்த பசும்பொன் பாண்டியனையும் பாடினாரே ஒழிய அவர்களுக்கு முந்தைய  முது குடுமிப் பெருவழுதி மற்றும் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி போன்ற பாண்டிய வேந்தர்களைப் பரணர் பாடவில்லை. இவர்களைப் போன்று தான் பெரும்பாலான புலவர்கள் தங்கள் கால கட்ட நிகழ்காலப் புரவலர்களை, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே பாடியுள்ளனர். பரணர் தமது காலத்துக்குச் சற்று முன்பு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்துக் கூடப் பாடவில்லை. ஆகவே பொதுவாக நிகழ்கால நிகழ்வுகளை, நிகழ்காலப் புரவலர்களை மட்டுமே சங்க காலப் புலவர்கள் பாடி உள்ளார்கள் என்பது வரலாற்றுக்கு மிகப்பெரிய அளவில் துணை செய்கிறது எனலாம். புலவர்கள் மற்றும் புரவலர்களின் காலத்தை உறுதிசெய்வதற்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    பார்வை:

    1.நீலகண்ட சாத்திரி, சோழர்கள், தமிழில் கே.வி. இராமன், புத்தகம்-1, நவம்பர்-2009, பக்: 4, 69.

    2.. TAMILS HERITAGE – NATANA KASINATHAN, APRIL-2006, PAGE: 25-30.

    3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 317-329

    4.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009, பக்:36.

    5.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், அக்டோபர்-2009 பின்னிணைப்பு-அ.

    6.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள், முன்னுரைப்பக்:28, அக்டோபர்-2009.

    1. “ “     பக்:36.

    8.வின்சுடன் சுமித், அசோகர், இந்தியாவின் பௌத்தப்பேரரசர், 2009, பக்:21.

    1. “ “       பக்; 38-40.

    10.மகாவம்ச-சிங்களர்கதை, வில்கெம் கெய்கர், தமிழில் எசு.பொ. அவர்கள்,  பக்:1; & முன்னுரைப்பக்: 20, 21,   அக்டோபர்-2009.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 8

    கணியன்பாலன்

                 பண்டைய வடஇந்திய அரசுகள்

         கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியக் காலகட்டமே சங்ககால வரலாற்றுக் காலகட்டமாகும். பழங்காலத்தமிழக வரலாற்றை முழுமையாகக் கட்டமைக்க, அக்காலகட்ட தக்காண, வடஇந்திய அரசுகளின் வரலாறு குறித்தப் புரிதல் தேவை என்பதால் அவை இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.மு. 8ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 ஜனபதங்கள் எனப்படுகிற 16 நகர்மைய அரசுகள் வட இந்தியாவில் இருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில்  அவைகளுக்கிடையே நடந்த போட்டிகளில் மகத அரசு வெற்றி பெற்று ஒரு பேரரசாக வளர்ச்சிபெற்றது. அரியங்கா(கி.மு. 600-413) வம்சத்தைச்சேர்ந்த பிம்பிசாரனும்(கி.மு. 543-493), அவனது மகன் அசாத்சத்ருவும்(கி.மு. 493-461) மகதத்தைப் பேரரசாக ஆக்குகின்றனர். அரியங்கா வம்சத்திற்குப்பின் கி.மு. 413இல் சிசுநாகர் வம்சம்(கி.மு. 413-345) தோன்றுகிறது. அதன் அழிவில் நந்த வம்சம்(கி.மு. 345-323) உருவாகிறது. நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தன் மகத அரசை இந்தியாவெங்கும் புகழ்பெற்ற ஒரு பேரரசாக ஆக்குகிறான். அதன்பின் அந்த நந்த வம்சத்தின் அழிவில்தான் மௌரிய வம்சம் உருவாகிறது.

         இந்த ஆட்சிமாற்றத்தின் போதுதான் மாமூலனார் என்கிற பெரும் வரலாற்றுப்புலவர் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். மௌரிய வம்சம் கி.மு. 323-187 வரை இருந்தது. அலெக்சாந்தர் கி.மு. 327இல் வடஇந்தியா மீது படையெடுக்கிறான். கி.மு. 325இல் வடஇந்தியாவைவிட்டு வெளியேறி கி.மு. 323இல் இறந்து விடுகிறான். அவன் வடஇந்தியாவை விட்டு வெளியேறிய உடன் சந்திரகுப்த மௌரியன் நந்தர்களைத் தாக்கி வென்று கி.மு. 321 வாக்கில் மகத அரசின் அரியனையில் அமருகிறான். 24 ஆண்டுகள் அவன் அரசாள்கிறான். அதன் பின் கி.மு. 297இல் அவனது மகன் பிந்துசாரன் அரசனாகிறான். அவனது ஆட்சிக்காலம் என்பது கி.மு. 297-272 வரையான  25 வருடங்கள் ஆகும். அதன்பின் அவனது மகன் அசோகர் கி.மு. 268இல்தான் முடிசூடுகிறார். அவரது ஆட்சிக்காலம் கி.மு. 268-232 வரையான சுமார் 34 வருடங்கள் ஆகும். அசோகருக்குப்பின் வந்தவர்கள் பலவீனமானவர்களாக இருந்தனர். அதன் கடைசி அரசனை, புசுயமித்திரன் என்கிற பிராமணத்தளபதி  கொன்றுவிட்டு  சுங்க வம்சத்தைத் தொடங்குகிறான். சுங்க வம்சத்தின் காலம் கி.மு. 187-75 ஆகும். அதன்பின் கன்வ வம்சம் கி.மு. 75-30 வரை 45 வருடம் ஆள்கிறது. சுங்கவம்சம், கன்வவம்சம் இரண்டும் பிராமண வம்சங்கள் ஆகும். அதன்பின் மகத அரசு இல்லாதுபோகிறது. மகதத்தைச்சுற்றி பல சிறு சிறு இனக்குழு அரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்கின்றன.

         மௌரியர்களுக்குப்பின் சுங்க வம்ச ஆட்சிக் காலத்தில் வட மேற்கிலிருந்து கிரேக்கர்கள் மகத அரசைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களுள் மினான்டர்(கி.மு. 150-135) என்பவன் பாடலிபுத்திரம் வரை படையெடுத்து வந்தான் எனப்படுகிறது. இந்தோகிரேக்க மன்னர்களில் இவனே புகழ்பெற்றவன் ஆவான். இந்தோ கிரேக்கர் ஆட்சி நீண்டகாலம் நீடிக்க வில்லை. சைத்தியர்கள் எனப்படும் சாகர்கள் இவர்களை கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர். அவர்கள் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளை வென்றனர். சாகர்கள்  கிரேக்கர்களைவிட பலபகுதிகளை இந்தியாவில் ஆண்டனர். சாகர்களில் ஐந்து பிரிவினர், ஆப்கானிஸ்தான், தட்சசீலம், மதுரா, மேற்கு இந்தியா, மேல்தக்காணம் ஆகிய ஐந்து இடங்களில் ஆண்டனர். இதே காலகட்டத்திலும் கி.பி. முதல் நூற்றாண்டிலும் பல இனக்குழுக்கள் வடக்கிலிருந்து இந்தியாவைத் தாக்கின. மதுராவைத் தலைநகராகக் கொண்ட சாகர்கள் 200 ஆண்டுகள் ஆண்டனர்.  மேற்கு இந்தியாவில் இருந்த மேற்கு சத்ரப் எனப்படும் சாகர்களின் ஆட்சிதான் கி.பி. 400 வரை நீடித்தது. இவர்களில் புகழ்பெற்றவன் இருத்ரதாமன்(கி.பி. 130-150) ஆவான். அந்நிய அரசனான இவன்தான் முதன் முதலாக சமற்கிருதத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுப் பொறிப்பை உருவாக்கினான். மேற்கு சத்ரப் அல்லது சாகர்களின் ஆட்சி என்பது கி.பி. 35 முதல் கி.பி. 405 வரை நீடித்தது.

         சாகர்கள் மேற்கு இந்தியாவில் ஆட்சியைத் தொடங்கிய போது குசானர்கள் இந்தியாவின் வடக்கே தங்கள் ஆட்சியைத் தொடங்கினர். அவர்களது ஆட்சி கி.பி. 30 முதல் கி.பி. 230வரை இருந்தது. இதில் புகழ்பெற்றவர் கி.பி. 78இல் ஆட்சியைத் தொடங்கிய கனிசுகர் ஆவார். இவர்தான் கி.பி. 78இல் தொடங்கிய,  சக சகாப்தம் என்பதைத் தொடங்கியவர் ஆவார். இவர் கிழக்கில் பாடலிபுத்திரம் வரை படையெடுத்தார். கனிசுகர் ஆட்சிக்காலம் என்பது கி.பி. 78-101 வரையாகும். சுங்க, கன்வ மகத அரச வம்சங்கள், சாதவாகனர்கள், சாகர்கள், குசானர்கள் ஆகிய ஐந்து அரச வம்சங்கள் தான் இக்காலத்தில் வடக்கிலும் தக்காணத்திலும் ஆண்டவர்கள் ஆவர். சாதவாகனர்கள் குறித்து முன்பே சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் கி.மு. 230இல் இருந்து கி.பி 220 முடிய 450 வருடம் சாதவாகனர்கள் தக்காணத்தில் ஆண்டனர். இடையே கலிங்கமன்னன் காரவேலன் போன்றவர்கள் ஆண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் அரசுகளின் வட படையெடுப்புகள் இருந்தது. ஆகவே வட அரசுகளின் காலத்தை அறிதல் ஒரு தெளிவை வழங்கும்.

                    வட இந்திய அரசுகள்(கால அட்டவணை)

    வம்சம்               அரசன்          காலம்               ஆண்டுகள்

    அரியங்கா வம்சம்                     கி.மு. 600-413         187

    அரியங்கா வம்சம்     பிம்பிசாரன்      கி.மு. 543-493         50

    அரியங்கா வம்சம்     அசாத்சத்ரு      கி.மு. 493-461         32

    சிசுநாகர் வம்சம்                      கி.மு. 413-345         68

    நந்த வம்சம்                          கி.மு. 345-325         20

    கலவரங்களும், குழப்பங்களும்          கி.மு. 325-322         04

    இமயவரம்பனின் வடபடையெடுப்பு       கி.மு 325-323           03*

    மௌரிய வம்சம்                      கி.மு. 322-187         135

    சந்திரகுப்த மௌரியன்                 கி.மு. 321-297         24

    பிந்துசாரன்                           கி.மு. 297-272         25

    மௌரியப்படையின் தோல்வி                கி.மு 297-288          11*

    அசோகர்  ஆட்சிக்காலம்               கி.மு. 268-232         36

    செங்குட்டுவனின் வடபடையெடுப்பு      கி.மு. 232-230           03*

    சாதவாகன வம்சம்                    கி.மு. 230-கி.பி. 220    450

    சாதவாகன வம்சம்    சிமுகா          கி.மு. 230-207         23

    இந்தோகிரேக்கர்       டெமிட்ரியசு-1    கி.மு. 200-180         34

    சுங்க வம்சம்(மகதம்)                  கி.மு. 187-75                112

    கலிங்கம்             காரவேலன்      கி.மு. 180-165         15

    சாதவாகன வம்சம்    சதகர்னி         கி.மு. 180-124         56

    இந்தோகிரேக்கர்       மினான்டர்      கி.மு. 150-135         15

    நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு கி.மு.  82-80            03*

    சுங்க வம்சத்தின் இறுதி ஆண்டு        கி.மு.  75               –

    கன்வ வம்சம்(மகதம்)                 கி.மு. 75-30           45

    சாதவாகன வம்சம்    புலுமாயி        கி.மு. 30-6            24

    குசான வம்சம்                        கி.பி. 30-230           200

    மேற்குசத்ரப்,சாகா வம்சம்              கி.பி. 35-405           370

    குசான வம்சம்        கனிஷ்கர்        கி.பி. 78-101           23

    சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு       கி.பி. 78                –

    சாதவாகன      கௌதமிபுத்ர சதகர்னி கி.பி. 106-130                24

    சாதவாகன      வசிட்திபுத்ர புலுமாயி  கி.பி. 130-160                30

    மேற்கு சத்ரப்         உருத்ரதாமன்    கி.பி. 130-150                20

    சாதவாகன      யாஜன சதகர்னி       கி.பி. 170-199                29

    குறிப்பு: * இக்குறியிட்டவை தமிழகம் சார்ந்த தகவல்கள் ஆகும்.

         “மௌரியர்களுக்குப்பின் வந்த வடஇந்திய அரச வம்சங்களின் காலவரிசை ஒரு பொழுதும் சரியானவாறு வரையறுக்கப்படவில்லை எனவும் கி.மு.327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்புதான் முதன்முதலாக ஒரு வரலாற்றுக் காலத்தை(வடஇந்தியாவுக்கு) உறுதி செய்தது எனவும்” கூறுகிறார் டி.டி. கோசாம்பி(1). “கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய அரசியல் வரலாறு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் இனக்குழுக்கள், மன்னர்கள், வீரமிக்க ஆக்ரமிப்பாளர்கள் ஆகியோரைப்பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தைதான் அளிக்கின்றன” என்கிறார் டி. என். ஜா(2). ஆகவே கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஒரு குழப்பமான நிலைதான் இருந்து வந்தது எனலாம்..

    பார்வை & ஆதார நூல்கள்:

    1.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH வெளியீடு, செப்டம்பர்-2006. பக்:386; பக்; 286

    2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011, பக்: 150.

    பிறஆதார நூல்கள்: 3.இந்திய வரலாறு ஒரு அறிமுகம், டி.டி. கோசாம்பி அவர்கள், தமிழில் சிங்கராயர், விடியல் பதிப்பகம், அக்டோபர்-2011,.

    4.அசோகர், விசென்ட்.சுமித், தமிழில் சிவமுருகேசன், 2009.

    5.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே.கே. பிள்ளை, எட்டாம் பதிப்பு-2011.

    6.சாதவாகனர்கள், குசானர்கள், சாகர்கள், மகத அரசுகள், இந்தோ கிரேக்கர்கள், மன்னன் காரவேலன் ஆகியோர் பற்றிய விக்கிபீடியா, இணைய தள தரவுகள்.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 6

     

     

             மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு

     

                                          கணியன்பாலன்

    பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் சாங்கியம்(எண்ணியம்), உலகாயதம், பூதவாதம், வைசேடிகம்(சிறப்பியம்), ஆசிவகம், நியாயவாதம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும்  பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் உறுதியாக நிலை கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாகச் சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு. 1000-கி.பி. 200), இந்தப் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தன.

    முனைவர். கா. இராசன் அவர்கள் தான் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில்புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற  அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் என்கிறார்-(1).   தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி-(2). ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப் பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி குறிப்பிடுகிறார்-(3).  ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து, பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றது எனலாம். இந்த மிகப்பெரிய தொழிநுட்பப் பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியதுதான் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட  ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ ஆகும்.

    பண்டையத் தமிழ்ச் சமூகம்:

    தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்திலிருந்து மெய்யியல்,  அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக்கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பிருந்து நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணத் திரவியங்களின் உலகத்தேவையும் அதன் வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தன.  இவையெல்லாம் கி.மு. 1000 க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழக வணிகம் தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது. தமிழகத்தில் தனித்தனி வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள்,  சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட அரசுகளின் கீழ் நிறைய சுதந்திரமான  நகர்மைய அரசுகள் இருந்தன. அவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமான வணிக நகர்மைய அரசுகளாகவும் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும் வணிகமும் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இந்தச் சிறு குறு நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தன. ஆதலால் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப்(தொல்கபிலரின் எண்ணியம்)  பெற்றுக்கொண்டது.

    திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(4). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது  பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது.  மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு போன்ற நகரங்களில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகரங்கள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்கப் பொருள் முதல்வாத மெய்யியலை அழித்து அவ்விடத்தில் கருத்துமுதல்வாத மெய்யியலைக் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதச்சிந்தனையை  ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைபள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத்துவங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத்தடுத்துவிடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைபள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000 க்கு முன்பிருந்து நகர்மைய அரசுகள் தோன்றி வளர்ந்து, கி.மு. முடிய, 1000 வருடங்களுக்கும் மேலாக கிரேக்க, உரோம நகர அரசுகளைப்போன்ற வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாகப் பண்டைய தமிழக நகர்மைய அரசுகள் இருந்து கொண்டிருந்தன. அதனால்தான் சாங்கியம், போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின. எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர் ஆகிய இருவர் குறித்து, இந்திய மெய்யியல் வள₹₹ர்ச்சியடைவதற்குக் கபிலரும், கணாதரும் முன்னொடிகளாக இருந்தனர் எனவும், இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இந்த இரண்டு மாமனிதர்களும் தோன்றினார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(5). தமிழ்ச்சிந்தனை மரபின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர், நரிவெரூத்தலையார் போன்றவர்கள் தமிழர்கள்தான் என உறுதிப்படுத்தியதில் க.நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.

     

    தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய நகர அரசுகளின் அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை மருதன் இளநாகனாரின் பாடல்(அகம்-77) தெரிவிக்கிறது.  இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் என்பதும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகவே தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய, மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபானது, பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையைத் தனது அடித்தளமாகக் கொண்டு, வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டிருந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தில், 1000 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கி வந்துள்ளது.

    பார்வை:

    1. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.

    2.அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.

    1. “ “    பக்: 52-64.

    4.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’  இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.

    5.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில் கே.சுப்ரமனையன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்:131.

    6.சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.

    ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 777-818.

     

     

     

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 5

     

     

             தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள்

     

                                         -கணியன்பாலன்

    மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. நமது பழந்தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு சங்க காலத்திலிருந்து(கி.மு.750-50). தொடங்குகிறது. சங்ககால இலக்கியங்கள், மதச் சார்பான பல பாடல்களைக் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலான பாடல்களில் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் உள்ளன. சங்ககாலத்திலும், சங்க காலத்திற்கு முன்பும் பாடப்பட்ட பல பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் இருந்த வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன், உலகளாவிய வணிகம், தமிழர்கள் வணிகத்துக்காகப் பிறநாடுகளில் சென்று தங்கியது, அவர்களிடம் இருந்த மிகப்பரவலான கல்வியறிவு, எழுத்தறிவு போன்ற பல தரவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல், மனித இனவியல் போன்றவற்றில் நடைபெற்று வரும் தற்போதைய ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

    அரசு உருவாக்கமும் நகர உருவாக்கமும்:

    ஆரம்பகால அரசு உருவாக்கம் என்பது நகர உருவாக்கத்தோடு தொடர்பு உடையதாகும். வேளாண்மையை அறிந்தபின் மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினான். வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும், பேரூர்களையும் தோற்றுவித்தது. வேளாண்மையில் கிடைத்த உபரி உற்பத்தியோ, கைத்தொழில், பட்டறைத்தொழில், வணிகம் முதலியவற்றை வளர்த்தெடுத்தது. சொத்துடமை வர்க்கம் உருவாகி வளரத் தொடங்கியது. சொத்துடமை ஆணாதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆணாதிக்கம் இன்றையக் குடும்ப முறையைக் கொண்டு வந்தது. குடும்பத்தில் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள். பெண்ணின் கற்பு புனிதமாக மாற்றப்பட்டது. கைத்தொழில்களிலும், பட்டறைத்தொழில்களிலும், வணிகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும் பேரூர்களையும் சிறு நகரங்களாகவும், பெரு நகரங்களாகவும் மாற்றத்தொடங்கின. நாளடைவில் நகரத்தில் இருந்த சொத்துடமை வர்க்கம் ஒன்றினைந்து தன்னையும், தனது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒட்டுமொத்த நகரத்தையே பாதுகாப்பவனாகவும் பராமரிப்பவனாகவும் தன்னை நியமித்துக் கொள்கிறது. இதன் காரணமாக நகர மக்களுக்கு மேம்பட்ட ஒன்று உருவாக்கப்பட்டு, அது அரசாக வடிவமெடுக்க வழிவகை செய்யப்படுகிறது. இவ்விதமாக நகர அரசுகள் உருவாகி நிலைபெறத்தொடங்கின எனலாம்.

    தொடக்கத்தில் உலகெங்கும் அரசு உருவாக்கம் நகரங்களில்தான் தொடங்கியது. உலக வரைபடத்தில் ஆரம்பத்தில் உருவான அனைத்து நாகரிகங்களிலும் முதலில் நகர அரசுகள் உருவாவதை நாம் காண முடிகிறது. கிரேக்கத்தில், உரோமில், கார்த்தேஜில் முதலில் நகர அரசுகளே தோன்றின. மெசபடோமியாப் பகுதியில் உருவான சுமேரியா நாகரிகமும், பிற நாகரிகங்களும் முதலில் நகர அரசுகளையே தோற்றுவித்தன. சுமேரியா நாகரிகம் என்பது உண்மையில் நகர அரசுகளின் நாகரிகமே. அங்கு இன்றைக்கு கி.மு 3500 வாக்கில் ‘ஊர்’ என்ற நகர அரசு உருவாகியிருந்தது. அது ஒரு மிகப் புகழ்பெற்ற நகர அரசாக இருந்தது. சுமேரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் பாபிலோனிய நகர அரசு அங்கு முக்கியத்துவம் பெற்றது.  பின் இந்த நகர அரசு பிற நகர அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவாகியது. எகிப்திலும் கி.மு. 3000 வாக்கில் சிறு சிறு நகர அரசுகளே தோன்றின-(1). பின் அவை ஒன்று சேர்ந்து எகிப்தியப் பேரரசு உருவாகியது.

    நமது சிந்துவெளி நாகரிகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. அந்நாகரிகம் பல நகர அரசுகளின் நாகரிகமே. ஆரிய வருகைக்குப் பின் உருவான வட இந்திய நாகரிகத்தில் கூட முதலில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகளே தோன்றின. இந்த நகர்மைய அரசுகளிடையே ஏற்பட்ட போட்டிகளாலும், போர்களாலும் கி.மு. 6ம் 5ம் நூற்றாண்டு வாக்கில் மகத அரசு பிற நகர்மைய அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவெடுத்தது. எனவே உலகெங்கும் ஆரம்பகால நகர உருவாக்கம் என்பது அரசு உருவாக்கத்தின் தொடக்கமாக இருந்துள்ளது. அதன்பின் இந்த நகர அரசுகள் பிற நகர அரசுகளை வென்று பெரிய அரசுகளாக, பேரரசுகளாக உருவாகின.

    சங்ககாலத்தில் அரசு உருவாக்கம்:

    பழந்தமிழகத்தில் கி.மு. 1500 வாக்கிலேயே சிறு சிறு நகரங்களும், நகர்மையங்களும் உருவாகத்துவங்கி, பின் அவை நாளடைவில் நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் சேர, சோழ, பாண்டிய நகர அரசுகள் வலிமை பெற்று இந்த நகர்மைய அரசுகள் பலவற்றை வென்று ஒன்று சேர்ந்துப் பெரிய அரசுகளாக உருவெடுத்தன. அதன் பின்னரும் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உறவினர்களால் இந்த நகர்மைய அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. “ஐந்து பாண்டியர்களால் ஆளப்பட்ட ஐந்து பாண்டிய அரசுகள் இருந்தன” என்பது ஒரு தொன்மக்கருத்தாகும். பாண்டியர்கள் பலர் பல நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர் என்பதை இக்கருத்து உறுதிப்படுத்துகிறது. பாண்டியர்களைப் போன்றே சேர சோழ அரசுகளும் பல நகர்மைய அரசுகளைக் கொண்டிருந்தன.

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் போக பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் பல சிறு சிறு நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர். அவர்கள் அந்தந்தச் சிறு சிறு நகர்மைய அரசுகளின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தனர். பாழிநகர் நன்னன், வியலூர் நன்னன், போஓர் பழையன், மோகூர் பழையன், எயில் ஊர் ஆந்தை, நீடூர்த் தலைவன் எவ்வி, உறையூர் தித்தன், காமூர்த் தலைவன் கழுவுள், இருப்பையூர் வீரான், ஊனூர் தழும்பன், ஆர்க்காட்டு அழிசி எனப் பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் அவரவர்களின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.          சேர, சோழ, பாண்டியர்கள் கூட தொண்டி அரசன், கொற்கைப் பாண்டியன், புகார்த்தலைவன் என நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆக நகரங்கள் அன்று அரசின் மிக மிக முக்கிய அங்கமாக இருந்தன என்பதை இவை தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் தவிர அதியன், நன்னன் போன்ற அரச பரம்பரைகளும் ஒருசில நகர்மைய அரசுகளை வென்று, பெரிய அரசுகளாக ஆக முயன்றுள்ளன. ஆனால் அம்முயற்சி மூவேந்தர்களால் முறியடிக்கப்பட்டது. மூவேந்தர்கள் உருவாகிய பின்னரும், நகர்மைய அரசுகள் முழுச் சுதந்திரத்தோடு தனி அரசுகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. வேந்தன் ஒரு பெரிய நகர்மைய அரசை ஆண்டான் எனில், அவனது கிளை உறவினர்கள் பிற நகர்மைய அரசுகளை ஆண்டனர். இவைபோக குறுநில மன்னர்களும், வேளிர்களும் இருந்தனர். எனவே தமிழகமெங்கும் நகரங்கள் பல ஊர்களைக் கொண்ட தனித்தனி அரசுகளாக இயங்கி, தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டன.

    அரசும் எழுத்தும் :

    கி.மு. 6ஆம் நூற்றாண்டில் உரோம் நகர அரசு உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் இலத்தின் மொழிக்கு எழுத்து உருவானது. எகிப்து, சுமேரியா போன்ற இடங்களிலும் நகர அரசுகள் உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின. சீனாவில் அரசு உருவாகியபின் கி.மு 15ஆம் நூற்றண்டு வாக்கில் எழுத்து உருவானது. இந்தியாவில்  அசோகர் ஆட்சியில்தான் அசோகன் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டது(2). எனவே எழுத்து உருவாகிவிட்டது எனில் அங்கு அரசு உருவாகி நிலைபெற்றுவிட்டது என்பதுதான் உலகெங்கும் இருந்த நிலையாகும். கிரீட்(CRETE) தீவின் மினோன்(MMIMINOAN) எழுத்துக்களைக் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் (MMYCENAEANS) நகர அரசுகள் கி.மு. 13ஆம்  நூற்றண்டு வரை பயன்படுத்தினர். அதன் பின் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் நகர நாகரிகம் அழிந்து போனதால் அவர்கள் எழுத்தும் இல்லாது போயிற்று. அதன் பிந்தைய மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கிரேக்க வரலாற்றில் இருண்ட காலமாகும். கி.மு. 8ஆம் நூற்றாண்டில், மீண்டும் கிரேக்க நகர அரசுகள் உருவாகி நிலைபெற்ற பொழுதுதான் பொனிசியன்(PHOENICIAN) எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க எழுத்து முறை உருவாகியது(3).

    ஆகவே அரசுகள் உருவாகி நிலைபெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின்றன என்பதற்கு கிரேக்க வரலாறே ஒரு சான்றாகத் திகழ்கிறது எனலாம். தமிழகத்தில் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தினர். ஆதலால் கி.மு.1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் சிறு சிறு நகர அரசுகள் உருவாகி இருந்தன. சங்ககாலத்திற்கு முன், கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் அவை வளர்ந்து, நிலைபெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    தமிழகத்தின் வளர்ச்சி:

    தமிழகச் சேர சோழ பாண்டிய அரசுகளின் ஆட்சிக்கும், வட இந்திய மகதப் பேரரசின் ஆட்சிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. மிகப்பெரிய, பரந்து விரிந்த பேரரசுகளின் நகரங்களை பேரரசின் மண்டல அதிகாரிகளே ஆட்சி செய்து வந்தனர். பேரரசுகளில் படிப்படியான அதிகாரவர்க்க நிர்வாகமுறை இருந்து வந்தது. அதனால் பேரரசின் நகரங்களும் பிற பிரதேசங்களும் போதிய சுதந்திரம் இல்லாதவைகளாக இருந்தன. பேரரசரால் மண்டல அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படவும் வாய்ப்பிருந்தது. இந்நிலைமை பாரசீகப் பேரரசிலும், இந்தியாவில் மகதப் பேரரசிலும் இருந்தது. ஆனால் தமிழக நகர்மைய அரசுகள் பெரும்பாலும் மூவேந்தர்களின் கிளை அரசர்களால் ஆளப்பட்டன. அல்லது குறுநில மன்னர்களாலும், வேளிர்களாலும் ஆளப்பட்டன. அவை அனைத்துமே தங்கள் நகர்மைய அரசுகளை நிர்வகிப்பதில் முழு சுதந்திரம் உடையவைகளாகவும், தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டவைகளாகவும் இருந்தன. மிக நீண்ட காலமாக ஆளப்பட்டு வந்தன. மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்பட்டன. இவைகளின் காரணமாக தமிழகத்தின் பண்டைய நகர அரசுகள் பலவிதங்களிலும் நன்கு வளர்ச்சி அடைந்தவனாக உருவாகின.

    தமிழ் அரசுகள் மக்களின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப் பட்டவைகளாக இருந்தன என கிரேக்கப்பயணி மெகத்தனிசு அவர்கள் கூறியுள்ளார் என்கிறார் சவகர்லால் நேரு அவர்கள். “அரசியல் துறையில் தென்னாட்டு சனப்பிரதிநிதி சபைகள் அரசர்களின் அதிகாரத்தை ஒரு கட்டுக்கு உட்படுத்தி வைத்திருந்தன என கிரேக்க யாத்திரிகரான மெகத்தனிசு கூறுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்(4). ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற வேளிர்கள் அல்லது பிரபுக்கள் குழுக்களும் இன்னபிற மக்கள் பிரதிநிதிக்குழுக்களும் அரசை கட்டுப்படுத்தி வந்திருக்கவேண்டும். அதன் காரணமாக அரசனின் அதிகாரம் வரம்பற்றதாக இல்லாமல் கட்டுப்படுத்தப் பட்டதாக இருந்தது. அதனைத்தான் மெகத்தனிசு தனது குறிப்பில் கொடுத்துள்ளார். இவை தமிழக நகரங்களின் வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது எனலாம்.

    சங்ககாலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வடஇந்தியாவில் இருக்கவில்லை. பிற தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும்கூட பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. பழந்தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் பெரிய அளவில் வணிகம் நடைபெற்றது. இவ்வளர்ச்சிகளால்தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் பேரரசைத் தோற்கடிக்க முடிந்தது. சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களை உருவாக்க முடிந்தது. மகதப் பேரரசு காலத்தில் வட இந்தியாவில் செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் பெருமளவு தமிழகம் வழியேதான் நடந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் இன்று உறுதி செய்துள்ளன. சங்ககாலத் தமிழ் மக்கள் மிக அதிக அளவில் எழுத்தறிவு கொண்டிருந்தனர் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். ஆகவே மிக நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நகர அரசுகள் உருவாகி அவை ஒப்பீட்டளவில் பண்டைய கிரேக்க, உரோம நகர அரசுகளைப் போன்ற வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    பார்வை:

    1. The World Book Encyclopedia, 1988 USA. vol-4, pages : 578-580

    2.விக்கிபீடியா: Greek_alphabet,  Latin_alphabet  & ’இன்றைய இந்திய இலக்கியம்’ சாகித்திய அக்காதெமி வெளியீடு, பக்; 87, 185;

    3.The World Book Encyclopedia, 1988 USA.  vol-8, pages : 396

    4.சவகர்லால் நேரு,  ‘உலக சரித்திரம்’  தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153.

    ஆதார நூல்:

    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 261-269

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • பழந்தமிழக வரலாறு -4

     

     

                 தமிழக அரசகுடி மரபின் சிறப்பு

                                        கணியன்பாலன்

    பண்டைய தமிழக அரசகுடிகளான சேர, சோழ, பாண்டிய அரச குடிகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் எந்த அரச குடியும் 1000 ஆண்டுகள் கூட இருந்ததில்லை. கி.மு. 8ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 12ஆம் நூற்றாண்டு முடியம்வரை தமிழக அரச குடிகள் இருந்தன. பெரும்பாலும் சேர, சோழ, பாண்டிய அரச குடிகளால் தமிழகம் ஆளப்பட்டபோது மட்டுமே தமிழ் மக்களின் ஆட்சியாக அது இருந்தது, இல்லையெனில் அது அந்நிய ஆட்சியாகவே பிறமொழி ஆட்சியாளர்களின் ஆட்சியாகவே அது இருந்தது. தமிழக அரசகுடும்பங்களில் அரச பதவிக்காக ஒருவரை ஒருவர் கொல்வது என்பது இருக்கவில்லை. வேறுபல மேன்மைகளும் இருந்தன. அதற்குப் பண்டைய தமிழக அரசகுடிகள் பின்பற்றிய மரபுவழி சிறப்பு அரசுரிமைமுறைதான் காரணமாகும். பாண்டியர்களை முதுகுடிகள் என்கிறது சங்க இலக்கியம்.

    பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுகளில் சோழர்கள், பாண்டியர்கள், சதிய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் எனப் பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். சங்ககாலத்தில் மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர் இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும், பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும், சோழர்களில் மூன்று நான்கு பேரும் இருந்து ஆண்டு வந்துள்ளனர். சேரர்கள் வஞ்சி, கரூர், போன்ற இடங்களிலும், பாண்டியர்கள் கொற்கை, மதுரை, போன்ற  இடங்களிலும், சோழர்கள் உறையூர், பூம்புகார், போன்ற  இடங்களிலும் மூன்று நான்கு சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஆண்டு வந்துள்ளனர்.

    சான்றாகச் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கிருந்தபோது,  அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மூத்த மகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல், அவனது நடு மகன் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன், அவனது தாயாதித்தம்பி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், அவனது கிளை வம்சத்தை சேர்ந்த பொறையர் குல அரசர்களான பாலைபாடிய பெருங்கடுங்கோவும், மாந்தரன் பொறையன்  கடுங்கோவும் என ஆறு பேர் ஆண்டு வந்துள்ளனர். ஆனால் பல்யானைச் செல்குழுகுட்டுவன் மட்டுமே வேந்தனாக இருந்துள்ளான். சேரன் செங்குட்டுவன் 9 சோழக்கிளை அரசர்களை வென்றான் என பதிற்றுப்பத்து பதிகம் கூறுகிறது. இதே போன்றுதான் பாண்டிய அரசும் இருந்தது. அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக அரசுகளைப் பன்மையில் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தர் அரசகுலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் பல அரசர்கள் இருந்த போதிலும், ஒவ்வொரு குலத்திலும் ஒரு சமயத்தில் ஒரு வேந்தர் மட்டுமே இருந்தார். ஆனால் அனைத்துச் சேர, சோழ, பாண்டிய அரசர்களையும் சங்க இலக்கியம் வேந்தர்கள் என்றே அழைத்தது. ஆனால் நாம் வேந்தர்களையும் அரசர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது. இவைகளைப் புரிந்து கொள்ள அன்றைய சேர, சோழ, பாண்டிய அரசுகள் எப்படித் தனது அரசர்களையும், வேந்தர்களையும் உருவாக்கிக் கொண்டன என்பதை அறிவது முக்கியமாகும்.

    தந்தைக்குப் பின் அவனுடைய மூத்த மகன், அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகன் என வரும் அரசியல் தாயமுறை(Primogenituro) தமிழ் நாட்டில் இருக்கவில்லை. அதற்குப் பதில் வேறு விதமான ஒரு சிறப்பு முறையைத் தமிழக அரசகுலங்கள் பின்பற்றின. ஒரு அரசனுக்கு இரண்டு மூன்று புதல்வர்கள் இருந்தாலும், அவனுக்குத் தம்பிகள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே உரிய வயது வந்தபொழுது அரசர்களாக ஆக்கப்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர்மைய அரசை ஆள அனுமதிக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் அவனுகுக்குக் கீழ்ப்பட்ட அரசர்களாக இருந்தனர். அவன் இறந்தபின் இருக்கும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். பெரும்பாலும் அவனது தம்பி வேந்தன் ஆவான். பின் அவன் இறந்தபின் மீண்டும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். தமிழரச குலங்களில் இம்முறையே இருந்து வந்தது. ஆனால் அனைவரும் வேந்தர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

    வேந்தர்களின் மகன்களும், அரசர்களின் மகன்களும் உரிய வயதில் அரசர்களாக்கப்பட்டு ஏதாவது ஒரு நகர்மைய அரசை ஆட்சிசெய்து வந்தனர். இதன் விளைவாக அரசின் ஒவ்வொரு நகர்மைய அரசும் வேந்தனின் ஏதாவது ஒரு  கிளைஅரசனால் ஆளப்பட்டது. எல்லாருக்கும் மூத்தவன் வேந்தனாக இருந்தான். சான்றாக உதியஞ்சேரலாதன் வேந்தனாக இருந்த பொழுது அவனது இரு மகன்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்குழு குட்டுவனும் அரசர்களாக இருந்தனர். பின் உதியன் இறந்த பிறகு மூத்தவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வேந்தன் ஆனான். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் அரசனாக ஆனான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு அரசர்களில் மூத்தவனும் இவனது தம்பியுமான பல்யானைச் செல்குழு குட்டுவன் வேந்தன் ஆனான். இமயவரம்பனின் மகன்களான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும், செங்குட்டுவனும் அரசர்களானார்கள். அதன் பின் நார்முடிச் சேரலும், பின் செங்குட்டுவனும், அதன்பின் ஆடுகோட்பாட்டு சேரலாதனும் முறையே ஒருவர் பின் ஒருவராக வேந்தர்களாகினர். இம்முறை  இனக்குழு நிலவிய காலத்தில் இருந்து உருவான ஒரு இரத்த உறவுமுறை வடிவமாகும்.

    இதே முறைதான் பிற சோழ, பாண்டிய அரச குடிகளிலும் பின்பற்றப்பட்டது. பிற்காலச் சோழர்களும் இதே முறையைத்தான் பின்பற்றினர். சான்றாக முதற்பராந்தகனுக்கு  இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள்  இராசாதித்தன், பராந்தகன் இருக்கும்போதே இறந்தான். அதனால் பராந்தகனுக்குப்பின் கண்டராதித்தன் சோழ வேந்தனாய் முடிசூட்டிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தனானான். அவனுக்கு முன்பே உத்தமசீலி இறந்து போனான். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும் அரிஞ்சயனுக்குச் சுந்தர சோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழன் மூத்தவனாதலால் முதலில் அவனும், அவனுக்குப் பின் உத்தம சோழனும் முடி வேந்தராயினர். உத்தம சோழனுக்குப்பின் சுந்தர சோழனின் மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும்போதே இறந்ததால், இளையோனான முதல் இராசராச சோழன் முடிவேந்தனாய் ஆனான்.

    இந்த முறைதான் பண்டைய தமிழக மூவேந்தர்கள் மரபு வழியாக பின்பற்றிய அரசுரிமை முறையாகும். இம்முறை அரச குடிகளில் இருந்த பல சிக்கல்களைத் தீர்த்தது. ஒரு அரசனின் இழப்பு அல்லது ஏன் ஒரு வேந்தனின் இழப்பு கூட மிக எளிதாகச் சமாளிக்கப்பட்டது. நகர்மைய அரசுகள் இந்த வேந்தர் வழி வந்த அரசர்களால் ஆளப்பட்டதால் அவை சுதந்திரமான தன்னரசுகளாக இருந்ததோடு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலை உருவானது. இம்முறையினால் அதிகாரவர்க்கப் படிமுறை என்பது தமிழகத்தில் தடுக்கப்பட்டு அதன் தீமைகள் தவிர்க்கப்பட்டன. இம்முறையின் காரணமாக, பிறநாட்டு அரச குடும்பங்களில் இருந்த கொலைகளும் சூழ்ச்சிகளும் தமிழக அரச குடும்பங்களில் இல்லாது போயின.

    முசிறி, தொண்டி, வஞ்சி, கரூர், நறவு, மாந்தை என்பன சேர வேந்தர்கள் பொறுப்பில் இருந்த சில முக்கிய நகர்மைய அரசுகள் ஆகும்.  இவை ஒவ்வொன்றையும் தனித்தனி சேர அரசர்கள் ஆண்டனர். இந்த அரசமுறையைப் பின்பற்றி தமிழக நகர்மைய அரசுகளும், வேந்தர்களும் இருந்ததால், போர்கள் பல நடந்தாலும், இழப்புகள் பல ஏற்பட்டாலும் சேர, சோழ, பாண்டிய அரச குலம் நீடித்து நிலைத்து இருந்து வந்தது. இந்த அரசமரபு பல தடவை மீறப்பட்டதும் உண்டு. இம்முறையை முழுமையாக கடை பிடிக்காததும்கூட சங்ககால மூவேந்தராட்சி வீழ்ச்சி அடைய ஒரு காரணமாகும். இந்த அரசுரிமை முறையைப் பின்பற்றாததால் வீழ்ந்து போனதற்கு பிற்காலப் பாண்டியராட்சி ஒரு சிறந்த சான்றாகும்.

    ஆதார நூல்:    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 270-273..

     

    Share
  • தமிழ் எழுத்தின் பழமை-2

    கணியன்பாலன்

     

    கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழி-கா.இராசன்:

    20 வருடங்களாக ஏழு தடவை கொடுமணலில் அகழாய்வு நடந்துள்ளது என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள். அந்த 20 வருட அகழாய்வுகளில் கிடைத்த 500க்கும் மேற்பட்ட தமிழி(தமிழ் பிராமி) எழுத்துப்பொறிப்புகளை விரிவாக ஆய்வு செய்த கா.இராசன் அவர்கள் அவற்றின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டு  வரை எனவும் அவை மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால் அதன் தொடக்க காலம் இதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கலாம் எனவும்  தனது ‘பண்டைய எழுத்துமுறை, குறியீடுகளில் இருந்து பிராமிக்கு ஒரு பயணம்’(EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi) என்ற ஆங்கில நூலில் தெரிவித்துள்ளார். அந்த நூலில் கொடுமணலில் கிடைத்த 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புகள் குறித்தும், கிட்டத்தட்ட 600 குறியீடுகள் குறித்தும் விரிவான விளக்கங்களும், வரைபடங்களும், புகைப்படங்களும், தரப்பட்டுள்ளன. இவைகளைப்பற்றிய ஆய்வுகளில் இருந்து, கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருக்கலாம் என முனைவர் கா.இராசன் அவர்கள் கூறுகிறார்(17). ஆகவே தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு.8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக்கூறலாம். கொடுமணலில் நடந்த இவ்வாய்வு குறித்தச் சிறுவிளக்கத்தைக்காண்போம்.

    கொடுமணலில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் 5 அகழாய்வுகள் முறையே 15செ.மீ, 60செ.மீ, 65செ.மீ, 85செ.மீ, 120செ.மீ ஆகிய ஆழங்களில் நடத்தப்பட்டன. அந்த ஆழங்களில் கிடைத்தத் தமிழி எழுத்துப்பொறிப்புகளைக்கொண்ட பண்பாட்டு பொருட்களின் பழையமுறையிலான ஆண்டுகளும்(UNCALIBRATED), முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளும்(CALIBRATED) கண்டறியப்பட்டன. அவை முறையே கி.மு.200-408 வரையிலும், கி.மு.200-480 வரையிலும் இருந்தன. அதாவது 120செ.மீ ஆழத்தில் இருந்த எழுத்துப்பொறிப்புகளின் பழைய முறையிலான ஆண்டு கி.மு.408 ஆகவும், கணிக்கப்பட்ட ஆண்டு கி.மு. 480 ஆகவும் இருந்தது. ஆனால் அதற்குப்பின்னரும் 65செ.மீ ஆழம்வரை, அதாவது 185செ.மீ ஆழம் வரையில் மொத்தம் 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்த தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்களுக்கு சராசரியாக ஒரு செ.மீ ஆழத்திற்கு 2ஆண்டுகள் கணக்கிடலாம் எனக்கொண்டு 65செ.மீ ஆழத்திற்கு 130 ஆண்டுகள் எனக்கணக்கிடப்பட்டது. அதன்படி, 120செ.மீ ஆழத்திற்கு கி.மு.408 ஆண்டுகள் எனில், 185 செ.மீ ஆழத்திற்கு கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் எனக்கணக்கிடலாம் எனக்குறிப்பிட்டுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள். முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளை(CALIBRATED) அவர் கணக்கில் கொள்ளவில்லை. அதனைக்கணக்கில்கொண்டால் கி.மு. 480 என்பது கி.மு.610 என ஆகி 7ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம்வரை என இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் கணிக்கலாம். எனினும் இவை அனைத்தையும் கொண்டு இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என உறுதிபடக்கூறலாம். இந்த 6ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துக்கள் மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால், தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கவேண்டும் எனவும் கா.இராசன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழி எழுத்தின் தொடக்ககாலம் குறைந்தபட்சம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது.

    கொடுமணலில் இவைபோக 1456 குறியீடு(GRAFFITI) பொறித்தப் பொருட்களும் கிடைத்துள்ளன. இதில் 858 குறியீடு பொறித்த பொருட்களில் உள்ள குறியீடுகள் முழுமையற்றுப் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருக்கிறது. ஆகவே 598 குறியீடு பொறித்தப் பொருட்களை மட்டுமே கணக்கில் கொள்ளமுடியும். ஆக 500க்கும்மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும், கிட்டத்தட்ட 600 குறியீடு பொறிப்புகளும் கொடுமணலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காட்டு ஆய்வில் கிடைத்துள்ளன(18). “தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என முனைவர் கா.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை முன்பே சொல்லியுள்ளோம். இக்குறியீடுகள் அக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன எனலாம்

    கொடுமணல் பகுதியில் உள்ள தமிழி எழுத்துக்களில் பிராகிருதச் சொற்களும் இருக்கின்றன என கா. இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை பெயர்சொற்கள் மட்டுமே எனவும், அதுவும் அவைகள் தமிழாக்கம் செய்யப்பட்டவை எனவும், இப்பெயர்ச் சொற்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரண்டும் இணைந்து உருவான புதுமுறையிலான சொற்களாக(HYBRID FORM) உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்(19). அவைகளைக்கொண்டு பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழ் மொழியில் இருந்தது என்று கூற முடியாது. ஒரு மொழியின் இலக்கணத்தில் பிறமொழியின் செல்வாக்கால் ஏற்படும் மாற்றத்தைத்தான் அம்மொழியின் செல்வாக்கு எனலாம். பெயர்சொற்கள் இருப்பதைக்கொண்டு அதைப் பிற மொழியின் செல்வாக்கால் ஏற்பட்டது எனக்கூற முடியாது. ‘இது போன்ற பெயர்சொற்கள், நிறுவனப்பெயர்கள், மதச்சொற்கள் முதலியன இருப்பதைக்கொண்டு அவை ஒரு மொழியின் எழுத்தை முடிவு செய்யும் எனக்கொள்ள முடியாது” என திரு இரங்கன் என்பவர் 2004இல் சொல்லியிருப்பதை இராசன் அவர்கள் குறிப்பிட்டதோடு, குகைக் கல்வெட்டுகளில்கூட தமிழி எழுத்துக்கள் வினைச்சொற்கள், பண்புப்பெயர்கள்  முதலியனவற்றைக் கடன் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்(20). அங்கும் வடபெயர்சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழியில் இருக்கவில்லை எனலாம். முக்கியமாகக் கொடுமணல் தமிழி எழுத்துக்களில் பிராகிருதத்தின் செல்வாக்கு இருக்கவில்லை என்பதே இவைகளில் இருந்து நாம் பெரும் முடிவாகும். இருந்த போதிலும் இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தே கொடுமணல் தமிழி எழுத்துக்களில் இருப்பதற்கான காரணத்தை நாம் கண்டறிந்தாக வேண்டும்.

    வட இந்திய வணிகர்கள் வணிகத்துக்காகக் கொடுமணலில் வந்து பல ஆண்டுகள் தங்கி வணிகம் செய்து வந்ததன் விளவாகவும், அவர்களின்பெயர்கள் பிராகிருதத்தில் இருப்பதாலும் அவர்களைக்குறிப்பிட இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் தமிழி எழுத்துக்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனலாம். கி.மு. ஆறாம் நூற்றாண்டுகாலத் தமிழி எழுத்திலேயே பிராகிருதச்சொற்கள் இருப்பதால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வட வணிகர்கள் தமிழகத்தில் வந்து தங்கி வணிகம் செய்து வந்திருக்கவேண்டும் எனலாம். இவை குறித்துத் தொடர்ந்து செய்யப்படும் ஆய்வுகளே இவ்விடயங்கள் குறித்தத் தெளிவை வழங்கும். அதேசமயம் வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மிக நீண்டகாலமாக வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதை இச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

    தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள், வட இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான அகழாய்வுகள் பல நடந்த பின்னரும் கூட, இன்றைய பாக்கிசுத்தானின் வடமேற்குப்பகுதியில் இருந்த அராமிக்(ARAMAIC) எழுத்துக்களைத்தவிர வேறு எந்த எழுத்துக்களும் அசோகன்பிராமிக்கு முன்பு வட இந்தியாவில் இருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்(21). அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிராமி எழுத்து வட இந்தியாவில் இருக்கவில்லை என்பதை அவர் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார். ஆனால் தமிழகத்தில் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலேயே தமிழி எழுத்து(தமிழ் பிராமி) இருந்துள்ளது என்பதும் இதன் தொடக்ககாலம் அதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையது என்பதும் முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

    இவ்விரண்டு செய்திகளின் மூலம் அசோகன் பிராமியில் இருந்து தமிழி எழுத்து உருவாகவில்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம் தமிழியில் இருந்து அசோகன் பிராமி உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்துக்கள், தமிழகத்தில், தமிழி எழுத்தில் இருந்துதான் உருவாகியது. இவ்விடயத்தை பெஞ்சமின் கை பாயிங்டன் என்பவர் கி.பி. 1830வாக்கிலேயே சொல்லியுள்ளார்(22). ஆதலால் அசோகன் பிராமியும்(பிராகிருத பிராமி) தமிழியில் இருந்து உருவாகியிருக்க வாய்ப்புள்ளது எனலாம். முதலில் பிராகிருதப் பெயர் சொற்களுக்கு தமிழி எழுத்து கொண்டு எழுதப்பட்டது. அதன் பின் அந்நிலை வளர்ந்து சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்து தமிழி எழுத்தில் இருந்து உருவாகியது போல, பிராகிருத மொழிக்குத் தமிழியில் இருந்து அசோகன் பிராமி எழுத்து உருவாகியது எனலாம்.

     

    மயிலாடுதுறை கைக்கோடாலி :

    மயிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் (SEMBIAN KANDIYUR)  என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடாலி ஒன்று கிடைத்துள்ளது. அதில் நான்கு குறியீடுகள் உள்ளன. அந்த நான்கு குறியீடுகளும் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒப்புமை உடையனவாக உள்ளன. தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், அக்குறியீடுகளை நன்கு ஆய்வு செய்து ‘முருகன்’ எனப் படித்தறிந்துள்ளார். மேலும் அவர், இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீட்டு எண்கள் 48, 342, 367, 301 ஆகியவற்றோடு முழுமையாக ஒப்புமை கொண்டுள்ளன எனவும், இதன் காலம் கி.மு.1500 முதல் கி.மு.2000 எனவும் நிர்ணயித்துள்ளார். இந்தக் கல்கோடாலி தமிழகப் பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது எனவும், அதனால் இந்தக் கல்கோடாலி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும் குறிப்பிடுகிறார். மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன் படுத்தியவர்களே எனச் சொல்லும் அவர், இதனை இந்த நூற்றாண்டுக்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்கிறார்-(23).

    மயிலாடுதுறை கைக்கோடாலி குறித்த ஐராவதம் மகாதேவன் அவர்களின் கருத்தையும், கா.இராசன், பவுன்துரை ஆகியவர்களின் குறியீடுகள் குறித்த கருத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது கீழ்கண்ட முடிவுக்கு நாம் வந்து சேரமுடியும். அதாவது, கி.மு.1500 வாக்கில், தமிழர்கள், குறியீடுகளைக் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வகை வரிவடிவமாக, ஒரு வகை எழுத்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர்  எனவும், சில நூற்றாண்டு களுக்குப் பின், கி.மு.1000 வாக்கில் அக்குறியீடுகளைப் பயன்படுத்தும் நிலை, பரவலாகத் தமிழகமெங்கும் பரவியிருந்துள்ளது எனவும் கருதலாம். தமிழர்கள் குறியீடுகளை ஒரு எழுத்து வடிவமாகக் கி.மு. 1000 வாக்கில்  பரவலாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால், தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750இல் தொடங்கிவிட்டது எனலாம். சங்ககால மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் குறியீடுகள் கிடைப்பதால், ஆய்வாளர்கள் இவைகளைச் சேகரித்துப் பதிவு செய்வதும், அவைகளைப் படித்தறிந்து பொருள் காண்பதும் அவசியமாகிறது. அதன்மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கையை மேலும் நன்கு புரிந்து  கொள்ள முடியும் என்பதோடு, தமிழர்களின் வரலாற்றைப் பல நூற்றாண்டுகள் மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியும். குறைந்தபட்சம் கி.மு. 1000 வரை  கொண்டுசெல்ல முடியும் எனலாம்.

    தமிழகமும் அகழாய்வும்:

    சங்ககால நூலான பதிற்றுப்பத்துக் குறிப்பிடும் கொடுமணல் குறித்துப் பல தரவுகள் வெளிவந்துள்ளது.   கொடுமணம்(கொடுமணல்) அகழாய்வில் இருநூற்றிற்கும் மேற்பட்ட எழுத்துப்பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும், வெள்ளி முத்திரை நாணயங்களும், இரும்பு, எஃகு செய்வதற்கான உலைக்கலங்களும், இரும்பு ஆயுதங்களும், வைடூரியம், சூதுபவளம், பளிங்கு, நீலக்கல், பச்சைக்கல் போன்ற அரியமணிக்கற்களில் செய்யப்பட்ட ஏராளமான மணிகளும், குறியீடுகளும், நெய்யப்பட்ட துணியும், அவை நெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தக்களிகளும் என ஏராளமானத் தரவுகள் வெளிக்கொணரப் பட்டுள்ளன. கொடுமணலில் உள்ள 70 ஏக்கர் பரப்பில் ஒரு ஏக்கருக்கும் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான பெருங்கற்படைச் சின்னங்களில் 13 மட்டுமே தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையால் அகழ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த அகழாய்வின்அளவு என்பது ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானது.

    ஒரு விழுக்காட்டு அகழாய்வில் மேலே குறிப்பிட்ட பல்வேறு வகையான தரவுகள் அதிக அளவில் கிடைக்கின்றன எனில் மீதமுள்ள 99 விழுக்காட்டுப் பகுதிகளை அகழாய்வு செய்யும்பொழுது மேலும் பன்மடங்கு செய்திகள் அல்லது தொல்பொருட்கள் வெளிவரும் என்பது உறுதி.  சங்ககாலப் புலவர்களால் பெரிதும் பேசப்படாத சங்ககால ஊரான கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காடு அகழாய்வில் மட்டுமே இவ்வளவு தொல்பொருட்கள் கிடைக்கின்றன எனில் சங்க இலக்கியங்களில் வியந்து பேசப்படுகின்ற மதுரை, கொற்கை, பூம்புகார், முசிறி,  கரூர், உறையூர் போன்ற இடங்களில் அகழாய்வு செய்யப்படும் பொழுது மிக அதிக அளவு தொல்பொருட்களும் தரவுகளும் வெளிவரும் என்பதை நினைக்கும் பொழுது அது  பெருவியப்பைத் தோற்றுவிக்கிறது எனலாம்.

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மேற்கொண்ட கள ஆய்வில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட சங்ககால எச்சங்கள் கொண்ட ஊர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீதமுள்ள மாவட்டங்களில் கள ஆய்வு செய்யப்படும்பொழுது இந்த எண்ணிக்கை அதிகளவு பெருகும் எனவும், இந்த ஊர்கள் அனைத்தையும் முழுமையாக அகழாய்வு செய்யப்படும்பொழுது மட்டுமே சங்ககாலத் தமிழர்களின் பண்பாட்டை முழுமையாக அறியவும், அவர்கள் குறித்த ஒரு தெளிவான  முடிவுக்கு வரவும் முடியும் என்கிறார் முனைவர் கா.இராசன்-(24).

    மனிதனின் கடந்த காலத்தைப்பற்றி எழுதப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது வரலாறு. ஆனால் தொல்லியல் என்பது எழுதப்பட்ட ஆவணங்களின் தரவுகளை உறுதிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் பயன்படும் என்பதோடு, எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்தையும் தாண்டி, வரலாற்றிற்கு முந்தைய காலத்தைப் பற்றியும் இருப்பதை இருப்பது போலவே அறிவிப்பதாகும். இவை பற்றி கார்டன் சைல்டு(Gordon Childe) என்கிற அறிஞர், “புவியின் வரலாற்றில் எழுதப்பட்ட ஆவணங்களால் நிரப்பப்படும் வரலாற்றைவிட தொல்லியல் சான்றுகளால் நிரப்பப்படும் வரலாறு நூறு மடங்கு அதிகமாகும்” என்கிறார். இன்னொரு அறிஞரோ, “வரலாற்றில் ஒரு சதவிகிதத்தைபற்றி மட்டுமே எழுதப்பட்ட ஆவணங்களின் மூலம் அறிய இயலும். ஆனால் மீதமுள்ள தொன்னூற்று ஒன்பது சதவிகித வரலாற்றை அறிய தொல்லியல் மட்டுமே உதவுகிறது” என்கிறார்-(25). ஆகவே நமது அகழாய்வுகளை அதிகப்படுத்தி, விரைவுபடுத்தி செயல்படுத்துவதன் மூலமும், வெளிக்கொண்டுவரப்படும் தரவுகளை முறையாக ஆவணப் படுத்துவதன் மூலமும் மட்டுமே நமது வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள இயலும். 99 விழுக்காட்டு வரலாற்றை அகழாய்வின் மூலம் மட்டுமே அறிய முடியும் என்பது தமிழகத்தின் வரலாற்றுக்கு மிகமிக பொருந்தும் எனலாம்.

    தம்பப்பண்ணி:

    தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில், தமிழகத்திலிருந்து ஆதிகால இரும்புப் பண்பாடு இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பரவத்தொடங்கி, அங்கு தம்பப்பண்ணி  என்ற இரும்புக்காலப் பண்பாட்டுக் குடியிருப்பு உருவாகியது. அதன் இடத்தில்தான் இன்றைய பொம்பரிப்பு என்கிற அகழ்வாராய்ச்சி இடம் உள்ளது. பொம்பரிப்புப் பகுதியில் இருந்து தான் இந்த இரும்புக்காலப் பண்பாடு அநுராதபுரத்திற்கு பரவியது. ஆதலால் பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் அநுராதபுரக் குடியிருப்புக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முந்தியது எனக் கணிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரக் குடியிருப்பின் காலம் முதலில் கி.மு.900 என கரிமப் பகுப்பாய்வுப்படி கணிக்கப்பட்டது. அதனைப் பிரித்தானியத் தொல்லியல் குழுவும் உறுதிப்படுத்தியது. அதற்குப் பிந்தைய கணிப்புகளின் படி அதன் காலம் ஏறத்தாழ கி.மு.1000 என இலங்கைத் தொல்லியல் ஆய்வாளர் சிரான் தரணியகல(DERANIYAGALA) கருதுகிறார்(26).

    ஆகவே பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் கி.மு. 1200 வரை இருக்கலாம் எனலாம். தம்பப்பண்ணி கி.மு. 500 வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக  இருந்தது எனவும் தமிழகத்துப் பாண்டியர்(பண்டு) வழி வந்தவர்கள் அதை ஆண்டனர் எனவும் பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. கி.மு. 500க்குப் பின் ஆதி இரும்புக்காலம் முடிவடைந்த கட்டத்தில் தம்பப்பண்ணியில் இருந்த அதிகார பீடம் உள்நாட்டில் உள்ள அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் எழுச்சி பெற்ற அநுராதபுர நகரம், கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக ஆகியது. பாலி நூல்களின் மரபுக் கதைகளின்படி அநுராதபுரம் எழுச்சி பெறுவதற்குமுன் தம்பப்பண்ணி ஒரு துறைமுக நகராகவும் ஓர் ஆட்சிபீடமாகவும் இருந்துள்ளது. இந்தத் தம்பப்பண்ணியின் சமற்கிருதப் பெயர் தாம்ரபர்ணி ஆகும். ஆகவே தமிழகத்தில் உள்ள (இலங்கையின் எதிர்க்கரையில் அமைந்துள்ள) தாமிரபரணி ஆற்றின் பெயரால் தான் இந்நருக்கு இப்பெயர் வந்தது எனலாம்.  ஆகவே அன்று தம்பப்பண்ணி நகரம் தமிழர்களின் நகராகவும், வட இலங்கையின் ஆட்சிப் பகுதியாகவும் இருந்துள்ளது-(27).

    தமிழகத்தில் ஓடும் தாமிரபரணி ஆறுதான், தம்பப்பண்ணி என்கிற பெயர் இலங்கையின் வடமேற்கு நகரத்துக்கு வரக் காரணம் என முன்பே குறிப்பிட்டோம். பொம்பரிப்பு என்கிற இந்தத் தம்பப்பண்ணி நகருக்கு அருகிலுள்ள அகழாய்வு இடம் தாமிரபரணி ஆற்றின் எதிர்பக்கத்தில்தான் அமைந்துள்ளது. இந்தப் பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு குறித்துத் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் ஆய்வுகளை மேற்கொண்ட சுதர்சன் செனவிரத்னே (SENEVIRATNE) அதன் முக்கியக் கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார், “அடிப்படை உலோகத்தொழில்நுட்பம், இரும்பின் உபயோகம், மட்பாண்டச்செய்கை உபகரணங்கள், நெற்பயிர்ச்செய்கை உபகரணங்கள், நீர்ப்பாசன முறைகள், சிறுகைத்தொழில், புதிய நிலையான குடியிருப்புகள், பண்டமாற்று வர்த்தகமையங்கள், குறுநிலஅரசுகளின் தோற்றம், குதிரையின் அறிமுகம், புதிய சவஅடக்க முறை என்பனவாகும்” -(28). இந்த பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு என்பது தமிழகத்தில் இருந்து பரவிய தமிழர்களின் பெருங்கற்காலப் பண்பாடாகும்.

    இந்தப் பொம்பரிப்புக் குடியிருப்புத் தோன்றுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டுக் குடியிருப்புகள் தோன்றி இருக்கவேண்டும். ஆதிச்சநல்லூர் அத்தகைய குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அதன் காலத்தை கி.மு. 2000 வரை என உறுதிப்படுத்தியுள்ளது-(29). இலங்கையில் நடைபெற்ற அகழாய்வு கி.மு 1200க்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் இரும்புக்காலப்பண்பாடு வேரூன்றி விட்டது என்பதை உறுதிப் படுத்துகிறது. முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வு முடிவை இந்திரபாலா, சுதர்சன செனவரத்னே ஆகியவர்கள் தரும் தகவல்கள் மேலும் வலுப்படுத்துகின்றன. மேலும் தமிழகத்தில் இருந்த மதுரை, கொற்கை, உறையூர், புகார், வஞ்சி, முசிறி போன்ற நகரங்களும், இலங்கையில் இருந்த தம்பப்பண்ணி என்ற நகரமும் கி.மு 5ஆம் நூற்றாண்டு அளவில் பண்டையத் தமிழர்களின் நன்கு வளர்ச்சி பெற்ற பெருநகரங்களாக இருந்திருக்க வேண்டும் எனலாம்.

    தமிழ் மொழியின் ஆரம்பகால எழுத்தானத் தமிழியின்(தமிழ் பிராமி) தொடக்க காலம் சுமார் கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனவும், தமிழகத்தில் சுமார் கி.மு. 1500 வாக்கிலேயே இரும்புப் பண்பாடு தொடங்கிவிட்டது எனவும், தமிழி எழுத்துக்கு முன்பு தமிழர்கள் குறியீடுகளை ஒருவகை எழுத்து வடிவமாக கி.மு. 1500 வாக்கிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் எனவும், கி.மு. 1000 வாக்கில் தமிழர்கள் குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கான எழுத்து வடிவமாகப் பரவலாகப் பயன் படுத்தினர் எனவும், தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலம் கி.மு. 750 எனவும், தமிழகத்தில் அகழாய்வுகள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே நடந்துள்ளது எனவும், தமிழகத்தில் இருந்துதான் இலங்கைக்கு இரும்புப் பண்பாடு பரவியது எனவும், அது தமிழர்களின் பண்பாடாகவே இருந்தது எனவும் இதுவரை பார்த்தோம். தமிழ் சமுதாயத்தின் பழமை கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை இவைகள் உறுதிப்படுத்துகின்றன.

    குமரி நிலப்பரப்பு: மதிரை நகர்:    

    இறையனார் அகப்பொருள் உரையிலும், இலங்கையின் பாலி வரலாற்று நூலாகிய மகாவம்சத்திலும் மதுரை நகரம் குறித்த சில தகவல்கள் உள்ளன. அதன்படி பாண்டியருடைய ஆட்சிபீடமான மதிரை நகரம் கடலருகே இருந்ததாகவும், கடல்கோளால் அந்நகரம் அழிந்து போனதால், அதன்பின் கபாடபுரம்(பெருவாயில் உடைய நகரம்) என்ற சமற்கிருத பெயர் பெற்ற கடலருகே இருந்த இன்னொரு நகரத்திற்கு தங்கள் ஆட்சிபீடத்தை பாண்டியர்கள் மாற்றிக்கொண்டனர் எனவும் தகவல்கள் உள்ளன. சமற்கிருத நூல்களாகிய மகாபாரதமும், அர்த்த சாத்திரமும் இக்கபாடபுரம் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டாவது நகரமும் கடல் கோளால் அழிந்துபோன பின், பாண்டியர்கள் உள்நாட்டில் வைகை நதியில் உள்ள மதிரை என்ற நகரத்தைத் தங்கள் தலைநகராக ஆக்கிக்கொண்டனர். மறைந்துபோன முதலாவது மதிரை நகரை அவர்கள் “தென்மதிரை” என அழைத்தனர். பாலி மரபுக் கதைகளில் இந்நகர் ‘தக்கிண மதுரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது-(30)

    குமரி நிலம்:

    வால்மீகி இராமாயணத்தில் பாண்டியர்களின் தலைநகர் கபாடபுரம் எனவும், வியாசரின் மகாபாரதத்தில் கபாடா எனவும் சொல்லப்பட்டுள்ளது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஆகமங்கள் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகின்றன. கிரான ஆகமம் ஞானபாதத்தில் எட்டாம் இயலில், 69-74 வரையிலுள்ள பாடல் அடிகளும், சுப்ரபேத ஆகமம் ஞானபாதத்தில் மூன்றாம் இயலில் 125-135 வரையிலுள்ள பாடல் அடிகளும், மிருகேந்திர ஆகமம் ஞானபாதத்தில் பதிமூன்றாம் இயலில் 93-97 வரையிலுள்ள பாடல் அடிகளும் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன. ஆனால் சந்திர ஞான ஆகமம் தனது 14ஆவது இயலில், 165-272 வரையிலுள்ள பாடல் அடிகளில் புவனத்துவ பாலா என்கிற தலைப்பில் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகிறது. 28 முதன்மை ஆகமங்களில் சந்திர ஞான ஆகமம் 19ஆவது ஆகமம் ஆகும். அதன் 14ஆவது இயல் மொத்தம் 298 பாடல் அடிகளைக்கொண்டது ஆகும். அதில் 108 பாடல் அடிகள் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன.

    குமரி நிலம், குப்சா, கேதா, கார்வதா, பட்டணா என்கிற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குப்சா பகுதியின் தெற்கே குமரி ஆறும், வடக்கே பஃறுளி ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. தென்கிழக்கே குமரிக்கடலின் அலைகள் குமரி மலை அடிவாரத்தைத் தழுவிச் செல்லும் இடத்தில் தலைநகர் கபாடபுரம் அமைந்திருந்தது. அங்கே ஒரு துறைமுகமும் மறைவான போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்த நீர்க்கோட்டையும் இருந்தன. விண்ணைத்தொடும் குமரிமலையின் உச்சியில் சிகரக்கோட்டையும், பள்ளத்தாக்கில் துரோனிக்கோட்டையும், தெற்குச்சரிவில் கடகக் கோட்டையும் இருந்தன. கேதாப்பிரிவில், சப்த நாளிகா, சப்த தளா, சப்த கைரிகா, சப்த மதுரா, சப்த பூர்வசாலா, சப்த அபாரசாலா, சப்த பிரசித்திரா  ஆகிய ஏழு நகரங்கள் இருந்தன. குப்சா பிரிவின் மேற்கில் கார்வதா பிரிவும், குமரி நிலப்பரப்பின் வடக்கில் பட்டணா பிரிவும் இருந்தன. கேதாப்பிரிவின் நடுவில் மேற்கு நோக்கிக் கந்தன் கோயிலும், கார்வதாப் பிரிவின் நடுவில் கிழக்கு நோக்கித் திருமால் கோயிலும் கட்டப்பட்டிருந்தது. இவை அனைத்தும் சந்திர ஞான ஆகமத்தில் சொல்லப்பட்ட தகவல்களாகும். இக்குமரி நிலத்தில் இருந்த நகர அமைப்புகள் குறித்தும் இந்த ஆகமம் விரிவாகப் பேசுகிறது-(31).

    சங்க இலக்கியத்தில் முதுகுடுமிப் பெருவழுதி குறித்துப்பாடிய நெட்டிமையார், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்கிற நெடியோன் குறித்தும் அவனது நாட்டில் இருந்த பஃறுளி ஆறு குறித்தும் பாடியுள்ளார்(புறம்-9). இந்தப் பாண்டியன் நெடியோன் குறித்து 2ஆம் பதிற்றுப்பத்தில் குமட்டூர் கண்ணனாரும், மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும் பாடியுள்ளனர். சங்ககால ஆதார இலக்கிய நூல்களில் இவைகளைத்தவிர வேறு தரவுகள் இல்லை. பஃறுளி ஆறும், குமரி மலைத்தொடரும் கடலில் மூழ்கியது குறித்துச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது.

    சா. குருமூர்த்தி அவர்கள் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்துப்படி கி.மு. 9500, கி.மு. 3000, கி.மு. 1500 ஆகிய மூன்று காலகட்டங்களில் கடற்கோள் பேரழிவுகள் நடந்துள்ளன என்கிறார். இடோப்பா(ETOPO) செயற்கைக்கோள், குமரி நிலப்பரப்பானது தமிழகத்தின் தென் பகுதியில் கி.மு. 15000 வாக்கில் சுமார் 25000 ச.கி.மீ பரப்பும், கி.மு. 8000 வாக்கில் சுமார் 5000 ச.கி.மீ பரப்பும் கி.மு. 2000 வாக்கில் சுமார் 1000 ச.கி.மீ பரப்பும் கொண்டதாக இருந்துள்ளது எனக்காட்டுகிறது. ஆதலால் சா.குருமூர்த்தி அவர்களின் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்தையும், நவீன இடோப்பா(ETOPO) செயற்கைக்கோள் கணக்கீட்டையும், இறையனார் அகப்பொருள் உரையையும் ஒருங்கிணைத்து, கி.மு. 3000 வாக்கில் தென்மதுரையும், அதன்பின் கி.மு. 1500 வாக்கில் கபாடபுரமும் கடற்கோள்களால் அழிந்து போயின எனக் கருதலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்(32).

    இன்றைய தமிழகத்தின் பரப்பு 1,30,000 ச.கி.மீ, பண்டைய தமிழகத்தின் பரப்போ இதைவிட மூன்று மடங்கு அதிகம்(4,00,000 ச.கி.மீ). ஆனால் தென்மதுரை கடற்கோளால் அழியும்முன் கி.மு. 3000 வரை, 5000 ச.கி.மீ. பரப்பு குமரி நிலப்பரப்பாக இருந்துள்ளது. கி.மு. 3000க்குப்பின் அது 1000 ச.கி.மீ. பரப்பாகக் குறைந்து போயுள்ளது. கிரீசு வாழ்ந்த வரலாறு என்கிற தனது நூலில், பண்டைய ஏதென்சு நகர அரசின் பரப்பளவு என்பது சுமார் 1000 ச,கி.மீ. தான் என்கிறார் வெ. சாமிநாத சர்மா அவர்கள். ஆதலால் கடல்கோள்களால் அழிந்துபோன பகுதி மிகச்சிறிய பரப்புதான் எனினும் அங்கு தென்மதுரை, கபாடபுரம் போன்ற தலைநகரங்களும், பிற முக்கிய நகரங்களும் இருந்து நாகரிக வளர்ச்சியும் அங்கு அதிகமாக இருந்ததால் அவைகளின் இழப்பு பெரிதுபடுத்தப் பட்டிருக்கவேண்டும். கடற்கோள்களால் பாண்டிய வேந்தன் தென்மதுரையில் இருந்து கபாடபுரத்திற்கும், கபாடபுரத்திலிருந்து மதுரைக்கும் தனது வேந்தர் ஆட்சியை மாற்றிகொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே மதுரை, கொற்கை முதலியன பிற பாண்டியக் கிளை அரசுகளால் ஆளப்பட்டு வந்திருக்க வேண்டும். இவை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

    தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமை குறித்து இறுதியாகச் சங்கப்பாடல்களில் இருந்து இரு சான்றினை வழங்க விரும்புகிறேன். கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த ஒல்லையூர் தந்தப் பூதப்பாண்டியன் ஒரு பாண்டியக் கிளை அரசன் ஆவான். அவன் தனது புறம் 71ஆம் பாடலில் தனது பாண்டியர்குடியை நீண்டகாலமாக இருந்துவரும் குடி என்று பாடுகிறான். அது போன்றே  கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலச் சோழர்பகுதிப் புலவனான காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பவர் தனது புறம் 58ஆம் பாடலில் சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒன்றாக இருந்த அவையில் பாண்டியர் குடியை “நல்லிசை முதுகுடி”  எனப் பாடியுள்ளார். ஆகவே 2000 வருடங்களுக்கு முந்தைய சங்க காலத்திலேயே பாண்டியர் குடி ஒரு முதுகுடியாக, ஒரு மிகப்பழமையான புகழ்பெற்ற குடியாகத் தமிழ் மக்களால் கருதப்பட்டு வந்துள்ளது. பாண்டியர்குடியின் பழமை என்பது தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமையைச் சுட்டிக்காட்டுகிறது.

     

    பார்வை:

    17.EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi, K.RAJAN, PANDYA NADU CENTRE FOR HISTORICAL RESEARCH,  MADURAI-10,  2015.   PAGE: 405.

    1. “                              “             PAGE: 87.
    2.  “                                                                               “                                    PAGE: 421
    3. “                                                                             “                                      PAGE: 422
    4. “                                                                             “                                      PAGE: FOREWORD, VI.
    5. Benjamin Guy Baprngton(1830),An account of the sculptures and inscriptions at Mahamalaipur. TRANSACTIONS OF THE ROYAL ASIATIC SOCIETY. VOL 2.(paper  read on 12.07.1828) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன். பக்: 8, 9.
    6. “Significance of Mayilaaduthurai Find” and “Discovery of a century” in Tamil Nadu, THE HINDU    Newspaper Dated 1.5.2006 and 21.5.2008 24.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 16, 17.

    25.தொல்லியல், முனைவர் நா. மாரிசாமி, ஜூன்-2010, பக்: 43.

    26.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:113

    1. “ “ பக்:121, 126, 127.

    28.இலங்கையில் தமிழர்-ஒரு முழுமையான வரலாறு(கி.மு. 300-கி.பி. 2000), கலாநிதி முருகர் குணசிங்கம், எம்.வி வெளியீடு, 2008, பக்: 34.

    29.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62.

    30.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:120.

    31, 32.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்:11-22.

     

     

    Share
  • தமிழ் எழுத்தின் பழமை-1

    கணியன்பாலன்

     

    தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் மிகப் பழமையானது என்பதற்கு அதன் ‘தமிழி’ எழுத்துத் தோன்றிய காலத்தை அறிதலே போதுமானது. தமிழகத்தில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வின்போது  கிடைத்த மட்பாண்டங்களில் இருந்த இருநெல் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass  Spectrometry  by the Beta Analytic Lab , USA ), அவைகளின் காலம் கி.மு.490, கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

    இந்த மட்பண்டங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் கா.இராசன் அவர்கள், இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின்(தமிழி) காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்கிறார். மேலும் தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி(தமிழி) உருவாக வில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார்(1).

    பொருந்தலும், ஆதிச்சநல்லூ ரும்:

    இந்த 5ஆம் நூற்றாண்டுப் பொருந்தல் எழுத்துக்கள் குறித்து டாக்டர் சுப்பராயலு அவர்கள் 29-8-2011 இந்து நாளிதழுக்குக் கொடுத்த தகவலில், இந்த எழுத்துக்கள் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி இரண்டாம் நிலைத் தமிழி எழுத்துக்கள் ஆகும் எனவும், ஆகவே அதன் காலத்தை கி.மு 490 க்குக் கொண்டுபோக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் குறிப்பிட்ட பொழுது ஒரு மட்பாண்ட நெல் மாதிரி மட்டுமே அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் காலம் கி.மு 490 என கண்டறியப்பட்டிருந்தது.  அதன்பின் இரண்டாவது நெல் மாதிரியும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அதன் காலம் கி.மு. 450 என கண்டறியப்பட்டது.  ஆகவே பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கிமு. 5ஆம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டு மாதிரிகளின் அறிவியல் ஆய்வு மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தமிழி(தமிழ் பிராமி) எழுத்துக்களை அதன் எழுத்தமைதி, வடிவம், எழுதும்விதம் ஆகிய பல காரணிகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் அவர்கள் மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் இடையே சில நூற்றாண்டுகள் இடைவெளிகள் இருந்துள்ளன என்கிறார் அவர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிரித்த மூன்று நிலை தமிழி எழுத்துகளில், பொருந்தல் தமிழி எழுத்துக்கள் இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்கள் என்கிறார் டாக்டர் சுப்பராயலு அவர்கள்(2). ஆதலால் முதல் நிலை தமிழி எழுத்துக்கள் இந்த இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களான பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பதால் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் அதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். அதன் அடிப்படையில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் எனில் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலத்தை கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

    கொற்கையில் தமிழி எழுத்துக்கள்:

    1970ல் நடந்த கொற்கை அகழாய்வில் மௌரியர் காலத்து மட்பாண்டங்கள் கிடைத்தன. அத்துடன் தமிழி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அவைகளின் காலம் கி.மு. 3ஆம் 2ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர் திரு ஆர். நாகசுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கை அத்துடன் அதன் அடியாழத்தில் அதாவது 2.69 மீட்டர் ஆழத்தில் ‘கேஆர்கே-4’ என்கிற குழியில் கரித்துண்டு மாதிரிகள் கிடைத்தன எனவும் அதனை கார்பன்-14 ஆய்வுக்கு உட்படுத்தி அதன் காலம் கி.மு. 850க்கும் 660க்கும் இடையே கி.மு. 755 என கண்டறியப் பட்டது எனவும் தெரிவிக்கிறது. மேலும் அதே குழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. ஆதலால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட கரித்துண்டின் காலம்தான் இந்த எழுத்துப் பொறிப்பின் காலம் என்பதால், கொற்கை அகழாய்வின் அடியாழத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 755, அதாவது கி.மு.8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது-(3).

    ஆதிச்சநல்லூர்-தமிழிஎழுத்து:

     

    ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வின் இயக்குநர்                                                    சத்தியமூர்த்தி அவர்கள், அங்கு கிடைத்தத் தமிழி  எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின் படி (PRELIMINARY  THERMO  LUMINESCENCE  DATING), கி.மு.1500 முதல் கி.மு.500 வரை எனவும், குறைந்த பட்சம் கி.மு.500 க்கும் முற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்-(4). அதே   ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழாய்விlல் கி.மு 800ஆம் ஆண்டு தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்ததாக 26.5.2004 இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது-(5).  ஆகவே இந்த ஆதிச்சநல்லூர் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு.800 எனக் கொள்ளலாம். ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான ஆய்வுகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்பொழுது தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் கி.மு. 800 அல்லது அதற்கும் முன் கொண்டு செல்லப்படும் என்பது உறுதி.

    ஆதிச்சநல்லூர் – காலம்:

     

    பண்டைய ஆதிச்ச நல்லூரின் காலத்தை அறிய மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள முனைவர் இராசு கிசோர் கார்சியாவின் தலைமையில் இருந்த அறிவியலாளர்கள், புதிய அறிவியல் தொழிநுட்ப முறைப்படி(OPTICALLY STIMULATED THERMO  LUMINESCENCE  TEST) ஆதிச்ச நல்லூர் மட்பாண்டங்களின் பாகங்களை ஆய்வு செய்து, அதன் காலத்தை கண்டறிந்தனர். அதன்படி தாழி எண் 10இன் காலம் 3400+700 (அல்) 3400-700 எனவும், தாழி எண் 29இன் காலம் 1920+350 (அல்) 1920-350 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆதிச்சநல்லூரின் காலம் கி.மு. 1750 முதல் கி.மு. 270 வரை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த மிகப் பழமையான மட்பாண்டங்களின் காலம் கி.மு. 4000 என எசு. பத்ரி நாராயணன்(S.BADRINARAYANAN) அவர்கள் தெரிவிக்கிறார். ஆதிச்ச நல்லூரில் இருந்த சுரங்கத் தொழிற்சாலையின் காலம் கி.மு 1500 என பி. சசிசேகரனும் (B.SASISEKARAN et al.) அவருடன் ஆய்வு செய்தவர்களும் தெரிவிக்கின்றனர். ஆகவே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் காலம் கி.மு. 2000 அளவில் என உறுதியாக முடிவு செய்யலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்-(6).

    ‘தமிழி’ அசோகர் பிராமிக்கும் முற்பட்டது: 

    1.நடன காசிநாதன்:

    பொருந்தல் அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு போன்ற ஆய்வுகளுக்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். “தமிழ்பிராமி பற்றி அண்மைக்காலம்வரை வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழுக்கே உரியவை என்றும் இவ்வெழுத்து அசோகன் பிராமியிலிருந்து கடனாகப் பெறப்பட்டது அல்ல என்றும், இது கி.மு. 6ஆம், 5ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியது என்றும் 2004ஆம் ஆண்டிலேயே முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்-(7).

    2டாக்டர் கிப்ட் சிரோமணி:

    டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் 1983 வாக்கிலேயே தமிழி எழுத்து அசோகன் எழுத்துக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வெளியிட்டுள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழி(தமிழ் பிராமி) எழுத்தை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார் எனவும் பட்டிப்பொருளு என்பது இன்னொரு வகை எனவும் இந்த நான்கும் இல்லாத வேறொரு வகைதான் அசோகன்பிராமி எனவும் அவர் குறிப்பிடுகிறார். அசோகன் பிராமியில் ஒரேநிலைதான் இருக்கிறது எனவும், தமிழியில் பலநிலைகள் இருக்கிறது எனவும் ஆதலால் தமிழி எழுத்து தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் எனவும் முதல்நிலை தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று புதிதாகத் தோன்றுகிற போது பல நிலைகளை கடந்த பின்னரே புதியதாக உருவாகும். தமிழி தமிழகத்தில் தோன்றியதால்தான் இங்கு தமிழியில் பல நிலை எழுத்து வகைகள் இருக்கின்றன. அசோகன் பிராமி புதியதாகத் தோன்றியதல்ல. அது மற்றதைப் பார்த்து உருவாக்கப்பட்டது என்பதால் அங்கு பல நிலைகள் இல்லை என்பதே டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்களின் அடிப்படை வாதமாகும். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சரியானதுமாகும்.

    சம்பை கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் அசோகன் கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒரே மாதிரி உள்ளன என்கிறார் அவர். ஆதலால் சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்கள் அசோகனின் சமகாலத்தவர்களா அல்லது 400வருடங்களுக்குப் பிறகு வந்தவர்களா என்கிற அடிப்படையான கேள்வியை 1983 வாக்கிலேயே  டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் எழுப்பியுள்ளார். சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்களின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என தற்போதைய வரலாற்று மாணவன் கருதுகிறான். அது உண்மையானால் சம்பை கல்வெட்டின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என ஆகிறது. ஆனால் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சாதவ கன்ன அரசன் சதகர்ணியின் நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துகளுக்கும் சம்பை கல்வெட்டு எழுத்துகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

    தற்பொழுது தமிழி எழுத்தின் அடிப்படையில் தரப்படும் காலத்திற்கு வலிமையான அடிப்படை எதுவும் இல்லை. ஆதலால் மாங்குளம், சம்பை ஆகிய கல்வெட்டுகளிலுள்ள தமிழி எழுத்தின் அடிப்படையில் பாண்டியன் நெடுஞ்செழியன், அதியமான் ஆகியவர்களுக்கு தற்போது தரப்பட்டிருக்கும் காலத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்கிறார் அவர். அவருடைய கருத்துப்படி அசோகனும், அதியமானும், சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர்கள். தற்போது அவர்களிடையே இருக்கும் 400 ஆண்டுகள் இடைவெளி நீக்கப்படவேண்டும் என 1983 லேயே அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்-(8). நமது ஆய்வு அதனைத்தான் செய்துள்ளது. அதியமானும் சேரன் செங்குட்டுவனும் நமது கணிப்புப்படி கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், அதாவது அசோகன் காலத்தைச் சேர்ந்தவர்கள்.

    தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் போன்ற பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோகன் பிராமிக்கு சுமார் 500 ஆண்டுகள் முந்தைய தமிழி எழுத்தை அசோகன் பிராமியில் இருந்து உருவானது என இன்றும் சில அறிஞர்கள் சொல்லி வருகின்றனர். இது குறித்து “தமிழகத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கில் இருந்த ஒரு வரிவடிவம் அசோகர் காலத்திற்குப் பின்பு, சமணர்களால் அல்லது சமண வணிகர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்டது போன்ற கருதுகோள்களை உரசிப்பார்க்க வேண்டியதுள்ளது” என்கிறார் முனைவர் கா. இராசன்-(9)

    இறுதியாக தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் தரவுகளின் அடிப்படையிலும், மண்ணடுக்கு ஆய்வின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக்கூறுகளின் தோற்றம், வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறியீடுகளின் அமைப்பு, எழுதும்முறை, எண்ணிக்கை, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திற்கும் பிற பகுதிகளுக்கும் இடையே காணப்படுகின்ற பண்பாட்டு உறவுகளின் அடிப்படையிலும் தமிழகத்தில் கிடைக்கும் பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்கிறார் முனைவர் க.இராசன் அவர்கள்-(10).

    சங்கச் செவ்வியல் இலக்கியம்:

    சங்ககாலச் செவ்விலக்கியம் கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரை(கி.மு. 550-50) படைக்கப்பட்டு வந்துள்ளது எனத் தற்போதைய நமது கணிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சங்ககாலச் செவ்விலக்கிய படைப்பாக்க காலத்திற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் தமிழி எழுத்தின் தொடக்ககாலத்தை கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். பொருந்தல் அகழாய்வு, கொற்கை அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆகிய மூன்று அகழாய்வு இடங்களிலும் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் அறிவியல் ஆய்வு முடிவுகளின்படி கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

    சங்ககால செவ்வியல் இலக்கியப் படைப்பாக்க காலத்தின் அடிப்படையிலும் தமிழி எழுத்தின் காலம் கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மேற்கண்ட பல்வேறு தரவுகளின் படி, தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக் கூறலாம்.  தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750 என முன்பே கண்டறிந்துள்ளோம். ஆதலால் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். தமிழகத்தில் கி.மு. 1000 வக்கில் குறியீடுகள் ஒரு எழுத்து வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. ஆதலால் தமிழகக் குறியீடுகள் குறித்து அறிதல் அவசியமாகிறது.

     

    குறியீடுகள்(GARAFFITI SYMBOLS):

     

    தமிழகத்தின் புதிய கற்கால கட்டத்திலும் அதற்குப் பிந்தைய முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்படை காலகட்டத்திலும் உருவான ஓவிய வரைவுகளில், மட்பாண்டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாகத் தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, யப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாகச் சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. அவைகளின் தரவுகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன-(11).

    1.சுமேரியன், அக்கேடியன், இட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்:237).

    2.சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B)  எழுத்துமுறை கலந்திருக்கிறது. இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள். அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக் குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்: 248).

    3.தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும்  தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை  அறிய முடிகிறது(பக்:252). மேலும் சிந்துவெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல்குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்துவெளிக்குறியீடுகளின் ஒப்புமையையும் காணமுடிகிறது (பக்:253).

    4.தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 – கி.பி. 200 ஆம் காலத்திய யப்பானிய யாயோய்(Yayoi)  பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது(பக்:230).

    5.சீனம், எகிப்து, இலங்கை, யப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன(பக்:239-244). அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், யப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

    6.பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

    மேலே தரப்பட்ட தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை. இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, யப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை-(12). பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையைத் தற்செயலானவை எனக் கருத இயலாது.  பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு பண்டையகாலம் முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

    குறியீடுகள்-எழுத்து வரி வடிவம்:

     

    அகழாய்வுகளின், கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு குறியீடுகளும், குறைந்த அளவு தமிழி எழுத்துக்களும் உள்ளன. அதே சமயம் மேல் அடுக்குகளில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு தமிழி எழுத்துகளும் குறைந்த அளவு குறியீடுகளும் உள்ளன. அதாவது அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது எனலாம். இதன் காரணமாகவும், தமிழி எழுத்துகள் இடையே இக்குறியீடுகள் இடம்பெறும் தன்மை காரணமாகவும், தமிழி எழுத்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கருத்துப் பரிமாற்றத்திற்கான வரி வடிவமாக, தமிழர்களால் இக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன எனலாம். “தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இக்குறியீடுகள் கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளிப் பண்பாடு தொட்டு, சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்து வந்துள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்-(13).

    தனது ‘பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்’ என்கிற நூலில் “குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்புக் குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்புக் குறைந்தும் அமைகின்றன என்பது இந்த ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வு முடிவினைக் காணும் பொழுது குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் இராசு.பவுன்துரை அவர்கள்-(14)

    மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்பு தான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற் காலத்து மட்பாண்டக் குறியீடுகள், தமிழி அல்லது பிராமி எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாகவும் உள்ளன என்கிறார் அவர். இறுதியாக “தமிழ் மொழியின் வளர்ச்சியில், குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும், குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் திரு. பவுன்துரை அவர்கள்-(15). திரு. இராசன் மற்றும் திரு. பவுன்துரை ஆகியவர்களின் கருத்துப்படி தமிழி எழுத்துக்கு முன்பு, தமிழகத்தில் இக்குறியீடுகள் மிக நீண்ட காலமாக கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது உறுதியாகிறது. மேற்கண்ட இருவரும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தமிழக குறியீடுகளுக்கும் இடையே நல்ல ஒப்புமை உள்ளது என்பதையும் தங்கள் நூல்களில் தெரிவித்துள்ளனர். பண்டைய தமிழ் மக்கள் கி.மு.1000 ஆண்டு வாக்கிலேயே ஒருவகையான எழுத்துப்பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர். தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்கவேண்டும் என்கிறார் முனைவர் கா. இராசன் அவர்கள்-(16).

    பார்வை:

    1. Porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert , News paper Dated 15.10.2011,

    2.PALANI EXCAVATION  TRIGGERS  FRESH DEPATE- THE HINDU  News paper Dated  29-8-2011.

    3.முன்னாள் அகழாய்வுத் துறை இயக்குநர் நடனகாசிநாதன் அவர்கள், ஏப்ரல்-2006, Tamils Heritage, Page:31.

    4.Rudimentary Tamil-Brahmi Script  unearthed at adichanallur, THE HINDU Newspaper Dated 17.2.2005

    5.Three of them(human skeletons), which may be 2,800 years old, bear inscriptions that resemble the early Tamil Brahmi script: , THE HINDU  Newspaper Dated 26.5.2004.

    6.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62;    D. VENKAT RAO  et al.,  RECENT  SCIENTIFIC  STUDIES  AT  ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE  IN  SANGAM:  NUMISMATICS  AND CULTURAL  HISTORAY  CHENNAI- 2006,    PP.  150-151;         .S.BADRINARAYANAN, OP.CIT., P-38;     B.SASISEKARAN et al. ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE IN INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3, 2010,  P-383. &  adichanallur: a prehistoric mining site – Indian National … http://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf

    7.தொகை இயல்-பேராசிரியர் அ. பாண்டுரங்கன், பக்: 193; Date of early Tamil Epigraphs: Journal of Tamil Studies No. 65, June, 2004.

    8.கிப்ட் சிரோமணி அவர்களின் இணையதளப் பக்கம். “WWWDR. GIFT SIROMONEY’S HOME PAGE”.

    9, 10.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 77.

    11.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 237, 248, 252, 253, 230, 239-244, 262.

    1. “ “ பக்:263.

    13.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 55, 56.

    14.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 257.

    1. “ “ பக்: 263.

    16.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 56.

     

    Share
  • பழந்தமிழக வரலாறு -3

     

     

               காலகட்டக் கணிப்பும், துல்லியமும்

     கணியன்பாலன்

                  வரலாறு என்பது தற்செயலான நிகழ்வுகளால் ஆனது போல் தோன்றினாலும் அது தனக்கென வகுத்தளிக்கப்பட்ட விதிப்படிதான் இயங்கி வருகிறது. சமூகத்தின் பொருளாதார உற்பத்தி முறைதான் வரலாற்றின் திசைவழியை நிர்ணயிக்கிறது.  மனித வரலாற்றில் ஆண்-பெண் உறவு நிலையை எடுத்துக்கொண்டால், காட்டுமிராண்டி காலத்தில் குழு மணமும், அநாகரிக காலத்தில் இணை மணமும் இருந்தது. நாகரிக காலத்தில் குடும்பமும், ஒருதார மணமும் உருவாகியது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த கூட்டுக்குடும்பம் முதலாளித்துவம் வளர்ந்தபின் தனிக்குடும்பம் என ஆனது. நவீன முதலாளித்துவத்தின் அதீதத் தொழில்நுட்ப வளர்ச்சி, தனிக்குடும்பத்தைக் கேள்விக்குள்ளாகி உள்ளது.

    வேளாண்மை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ காலத்தில் நிலவிய அரசர்களின் ஆட்சி என்பது தொழில் புரட்சிக்குப்பின் ஏற்பட்ட முதலாளித்துவ காலத்தில் இல்லாதுபோய், மக்கள் ஆட்சி என்கிற சனநாயக ஆட்சி உருவானது. ஆனால் நவீன முதலாளித்துவத்தில் உருவான பன்னாட்டுக்குழுமங்களின் வளர்ச்சி, சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் நிறுவனங்களைச் சீரழித்து, பணநாயகத்தை கொண்டுவந்துள்ளது. ஆகவே ஒவ்வொரு காலகட்டமும் அதற்கேயுரிய, பொருளாதார உற்பத்தி முறை, சமூக நிறுவனங்கள், சமூகச் சிந்தனைகள் முதலியனவற்றை ஒன்றிணைத்து அந்தந்த காலகட்டத்துக்குரிய வரலாற்றைப் படைக்கின்றன. ஆகவே அறிவியல் அடிப்படையில், தனக்கான விதிகளுக்குட்பட்டு வரலாறு இயங்குகிறது, என்பதுதான் இங்கு கவனம் பெறவேண்டிய மிகமுக்கிய விடயமாகும். நமது பழந்தமிழக வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலப் பாடல்களில், கி.மு. 350க்கு முந்தைய சங்ககாலப் பாடல்கள் மிகக் குறைவு என்பதோடு அதில் ஆட்சியாளர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகையால் கி.மு. 350க்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்க இயலவில்லை.

    சங்க இலக்கிய நூல்களான குறுந்தொகை(401), நற்றிணை(399), அகநானூறூ(400), ஐங்குறுநூறு(500), புறநானூறு(398), பதிற்றுப்பத்து(80), பரிபாடல்(22+11=33), கலித்தொகை(150) ஆகிய எட்டுத் தொகையின் 2361 பாடல்களும் பத்துப்பாட்டின் 10 பாடல்களும் சேர்ந்து மொத்தம் 2371 பாடல்கள் ஆகின்றன. இதனை 473 புலவர்கள் பாடியுள்ளனர். இவற்றில் பரிபாடல் (22+11=33), கலித்தொகை(150), பத்துப்பாட்டில் 2 பாடல்கள் என 185 பாடல்கள் போக, சங்ககாலகட்டத்தைச் சேர்ந்த தகடூர் யாத்திரை(48), முத்தொள்ளாயிரம் (108+22=130) ஆகியவற்றின் 178 பாடல்களைச் சேர்த்து மொத்தம் 2364 பாடல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வின்படி 450க்கும் மேற்பட்ட புலவர்களில், கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 126(109+14=3) புலவர்கள் மட்டுமே வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இதில் 109 பேர் மட்டுமே புலவர்கள் ஆவர். மீதியுள்ள 17 பேரும் அரச குலத்தைச்சேர்ந்த கவிஞர்கள் ஆவர். அந்த 17 பேரில் பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர், தொண்டைமான் இளந்திரையன் ஆகிய மூவர் அரசர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் உள்ள தரவுகளின் அடிப்படையில் காலகட்டம் வாரியாக இந்த 126 புலவர்கள், அவர்களது பாடல்கள் குறித்த எண்ணிக்கை அட்டவணை தயாரிக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படி 126 புலவர்கள் மொத்தம் 1517 பாடல்களைப் பாடியுள்ளனர். தகடூர் யாத்திரையில் பாடியவர்கள் இந்த 126 புலவர்களில் அடங்குவர். கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த இந்த 126 புலவர்கள் போக வேறு புலவர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இல்லாததால் அவர்களின் காலத்தைக் கண்டறிய இயலவில்லை. எனினும் சுமார் மொத்தமுள்ள 473 புலவர்களில் நான்கில் ஒரு பங்கு புலவர்களின்(126) காலமும், சங்ககால மொத்தப் பாடல்களில்(2364) மூன்றில் இருபங்கு(1517) பாடல்களின் காலமும் காலகட்டம் வாரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. “தகடூர் யாத்திரை” நூலின் 48 பாடல்கள் 6ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். முத்தொள்ளாயிரத்தின் 130 பாடல்கள் பத்தாம் கால கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

    புலவர்கள், கவிஞர்கள், பாடல்கள் குறித்த அட்டவணை.:

    காலகட்டம்    புலவர்கள்     கவிஞர்கள்     மொத்தம்      பாடல்கள்

    முதல்            5               –             5              28

    இரண்டாம்       11               2            13              95

    மூன்றாம்        8                1            9              238

    நான்காம்        7                2            9               56

    ஐந்தாம்         14               1            15              255

    ஆறாம்          16              2             18             293

    ஏழாம்           16              2             18             113

    எட்டாம்         16              3             19              170

    ஒன்பதாம்        7              2             9               37

    பத்தாம்          9              2             11              184

    தகடூர் யாத்திரை (ஆறாம் காலகட்டம்)           –              48

    மொத்தம்       109             17             126            1517.

     

    ஆகவே இந்த 126 புலவர்களின் 1517 பாடல்கள் மட்டுமே நமது காலகட்டக் கணிப்பு குறித்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட சங்ககாலப் பாடல்களில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்டியல் வரைபட முறையின் மூலம் கணிக்கப்பட்ட காலகட்ட ஆண்டுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, சிவப்பிந்திய, கிரேக்க, இரோம், ஆரிய இனக்குழு வரலாறுகள் போன்ற பிற வரலாற்று ஆய்வுகளின் காலக்கணிப்புகளோடு பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, காலகட்ட அடிப்படையில் கணிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், புலவர்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றின் ஆண்டுகள் ஓரளவு துல்லியமானவை எனலாம். இவ்வாறு கணிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டோம். பெரும்பாலான சங்ககாலப் பாடல்களின் காலகட்ட ஆண்டுகள் நமக்குக் கிடைத்துள்ளது என்பதால் எதிர்காலத்தில் அவைகளைக் காலகட்ட அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

    பொதுவாக ஒரு தலைமுறை  என்பது சராசரியாக 25 ஆண்டுகள் ஆகும். ஒரு புலவர் சாதாரணமாகத் தனது தலைமுறை போகத் தனக்கு முந்தைய ஒரு தலைமுறை, தனக்கு பிந்தைய ஒரு தலைமுறை என மூன்று தலைமுறைப் புரவலர்களைப் பாட முடியும். அதற்கு மேல் பாடுவது என்பது சாதாரணமாக இயலாது. ஆகவே ஒரு காலகட்டத்துக்கான காலத்தை மூன்று தலைமுறைகள் எனக் கொண்டு 70 முதல் 80 ஆண்டுகளை, அதாவது சராசரியாக 75 ஆண்டுகளை ஒருகாலகட்டம் எனக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு காலகட்டத்துக்கும் இன்னொரு காலகட்டத்துக்கும் இடையே உள்ள இடைவெளி என்பது  20-30 ஆண்டுகள்தான் இருக்கும். சான்றாக முதல் மூன்று காலகட்டங்கள் வருமாறு 1.கி.மு. 350-270; 2.கி.மு. 330-250; 3.கி.மு. 300-230. இவ்விதமாக 10 காலகட்டங்களுக்கான காலங்களும் கணிக்கப்பட்டன.

    ஒவ்வொரு காலகட்டமும் ஒரு தலைமுறைக் காலத்தை(25 ஆண்டுகள்) மட்டுமே கொண்டது எனினும், இக்காலகட்டங்களிடையே குறிப்பிடத்தக்கச் சில சிறப்பு விடயங்கள் இருப்பதை நாம் காண முடிகிறது.

    1.முதல் காலகட்டத்தில் உதியன் சேரலாதனுடைய தலைமையில் கருவூரேரிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரைக் கைப்பற்றி அங்கு பொறையர்களின் சேர ஆட்சியை நிறுவினான். இதன் விளைவாக கரூரையும் அதைச்சுற்றியுமுள்ள கொங்குப் பகுதிகளையும் கொண்ட ஒரு புதிய சேர அரசு உருவாகி இருந்தது. கரூர் சோழர்களின் மேற்கு எல்லையில் இருக்கும் ஒரு முக்கிய ஊர் ஆகும். அங்கு ஒரு புதிய சேரகுல அரசு உருவாகி இருப்பது சோழர்களுக்குச் சேரர்களின் மேல் அச்சத்தையும் பகைமையையும் உருவாக்கி இருந்தது. இதன் விளைவாக முதல் காலகட்டத்தில் சோழன் பெரும்பூட் சென்னி நடத்திய கழுமலப்போர் தொடங்கி 9ஆம் காலகட்டத்தில் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் நடத்திய கரூர்ப் போர் வரை சேரர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பகைமையும் போரும் தொடர்ந்து நடந்து வந்தது. இதற்குக் கொங்குப்பகுதியில் சேரர்கள் உருவாக்கிய பொறையர்களின் சேர அரசுதான் முக்கியக் காரணமாகும். 9ஆம் காலகட்டக் கரூர்ப் போருக்குப்பின் சேரமான் மாக்கோதை கிள்ளிவளவனோடு சமாதானம் செய்து கொண்டான். அதன் பிறகு அப்பகைமை முடிந்து சேர, சோழர்கள் 10ஆம் காலகட்டம் வரை நட்போடு இருந்தனர்.

    2.சேரர்கள் முதல் காலகட்டம் தொடங்கி 6ஆம் காலகட்டம்வரை சோழ பாண்டியர்களைவிட வலிமையோடும் பெரும்புகழோடும் இருந்தனர். 3ஆம் காலகட்டத்தில் முதல் கரிகாலன் காலத்தில் மட்டும் அவர்களின் வலிமை ஓரளவு குன்றியிருந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்தில் நடந்த தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போர் இந்நிலையை அடியோடு மாற்றியமைத்தது. தலையாலங்கானத்துப்போரும், அதன்பின் நடந்த முசிறிப்படையெடுப்பும் சேரர்களை 10ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக ஆக்கியது.  முதல் காலகட்டம் முதல் 6ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக இருந்த பாண்டியர்கள் இப்போருக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை ஓரளவு வலிமை மிக்கவர்களாக ஆனார்கள்.

    3.சென்னிகுலச்சோழர்களும், பாண்டியர்களும் முதல் காலகட்டம் முதல் 10ஆம் காலகட்டம் வரை நட்பு கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கிள்ளிகுலச் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மட்டுமே அவ்வப்பொழுது பகைமை இருந்து வந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்துக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை இரு குலச்சோழர்களும் பாண்டியர்களோடு நட்பு கொண்டவர்களாக ஆனார்கள். இதற்கு 7ஆம் காலகட்டத்தின் மாபெரும் வேந்தர்களாக இருந்த இரண்டாம் கரிகாலனுக்கும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் இடையே நிலவிய நட்புதான் காரணம் ஆகும். இரண்டாம் கரிகாலன் சென்னிகுலச் சோழன் எனினும் கிள்ளிகுலச் சோழர்களையும் தம் மக்களாக அரவணைத்து ஆதரித்ததும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். இவன் கிள்ளிகுலச்சொழர்களின் பாழடைந்து போயிருந்த உறையூரைப் புகார் நகர் அளவுக்குப் புதுப்பித்து ஒரு பெரு நகராக ஆக்கினான். அதன் காரணமாக அதன்பின் வந்த சோழ வேந்தர்கள் உறையூரை சோழவேந்தர்களின் தலைநகரமாக ஆக்கினார்கள். இரண்டாம்கரிகாலனின் நடவடிக்கையால் இவனுக்குப்பின் சென்னி குலமும் கிள்ளி குலமும் இரண்டறக்கலந்துவிட்டது எனலாம்.

    4.சிறு, குறு அரசுகளும் வேளிர்குல அரசுகளும் அழிக்கப்பட்டு அவைகளை வேந்தர் ஆட்சியில் இணைத்துக்கொள்ளும் பேரரசுக்கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் 5ஆம் காலகட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக தமிழகத்தில் இடம்பெறத் தொடங்கின. அதன் விளைவாக முதலில் ஓரியின் கொல்லிமலை சேரர்களின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பின் பாரி, அதியமான் போன்றவர்களின் ஆட்சிப்பகுதிகளும் மூவேந்தர் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன. 10ஆம் காலகட்டத்துக்குள் பெரும்பாலான சிறுகுறு அரசுகள் அழிக்கப்பட்டு மூவேந்தர் ஆட்சியில் இணைக்கப்பட்டன. பேரரசுக்கொள்கையின் காரணமாக சேர, சோழ, பாண்டியர்களின் கிளை அரசர்களும் நீக்கப்பட்டனர். வேந்தர்களின் வேறு வேறு குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு 10ஆம் காலகட்டத்தில் ஒருகுலம், ஒருவேந்தர் ஆட்சி உருவாகியது. சோழர்களின் சென்னி குலமும், கிள்ளி குலமும் ஒன்றாக ஆக்கப்பட்டு நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சோழ வேந்தனாக ஆனான். அதுபோன்றே குட்டுவன், கோதை ஆகிய சேர குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு சேரமான் குட்டுவன் கோதை என்பவன் சேர வேந்தனாகவும், மாறன், வழுதி ஆகிய பாண்டிய குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி என்பவன் பாண்டிய வேந்தனாகவும் ஆனான். இவர்கள் மூவரும் 10ஆம் காலகட்ட இறுதிச் சங்ககால வேந்தர்கள் ஆவர்.

    5.ஓரியைக்கொன்று கொல்லிமலையைச் சேரர்களுக்கு 5ஆம் காலகட்டத்தில் வழங்கிய மலையமான்  காரியும் அவனது வாரிசுகளும் ஆறுமுதல் 8ஆம் காலகட்டம்வரை சோழர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் எனினும் 9ஆம் காலகட்டச் சோழ வேந்தன், பேரரசுக்கொள்கையின் காரணமாக மலையமான்  காரியினுடைய வாரிசுகளின் குறுநில அரசை அழித்து அதைத் தனது வேந்தர் ஆட்சியோடு சேர்த்துக்கொண்டான்.

    6.பாரி, ஓரி, காரி, நள்ளி, ஆய் அண்டிரன், எழினி, பேகன் ஆகிய ஏழு வள்ளல்களும் 5ஆம், 6ஆம் காலகட்டத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களைப் பாடிய பெருஞ்சித்திரனார் 7ஆம் காலகட்டம். ஏழாம் காலகட்டக் குமணன், 10ஆம் காலகட்ட நல்லியக்கோடன் ஆகிய இருவரையும் சேர்த்து மொத்தம் 9 வள்ளல்கள் எனலாம்.

    7.மூன்றாம் காலகட்டக் கழார்த்தலையார் 5ஆம் காலகட்டக் கபிலராலும், 4ஆம் காலகட்டப் பரணர் 6ஆம் காலகட்ட ஔவையாராலும், 5ஆம் காலகட்டக் கபிலர் 7ஆம் காலகட்ட நக்கீரராலும் பாடப்பட்டுள்ளனர். ஆகவே இத்தரவுகள்  3ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையான ஒரு வரலாற்றுத்தொடர்ச்சியை உறுதி செய்கிறது எனலாம். இவர்கள் போக 9ஆம் காலகட்ட கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை என்ற சேர வேந்தன் முதல் காலகட்ட உதியஞ்சேரலாதனையும், 10ஆம் காலகட்ட இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் 6ஆம் காலகட்ட ஔவையாரையும் பாடியுள்ளார்.

    8.புராணக் கதைகளை பாடலில் பாடுவதும், கடவுளோடு வேந்தனை ஒப்பிடுவதும், அவனை தெய்வநிலைக்கு உயர்த்துவதும் ஆகிய பேரரசுக் கொள்கை சார்ந்த பாடல்கள் எட்டாம் காலகட்டத்தில் இருந்து அதிகமாகின எனலாம். வேந்தனை தெய்வநிலைக்கு உயர்த்தும் இந்தச் சிந்தனை பத்தாம் காலகட்டத்தில் உச்சநிலையை அடைந்து. முத்தொள்ளாயிரம் போன்ற பாடல்கள் உருவாகி வேந்தனை நகர மகளிர் அனைவரும் ஒருதலைக் காதல்கொள்வது போன்ற கைக்கிளைப் பாடல்களும் அதிகமாகின. எட்டாம் காலகட்டப் பாண்டியன் நன்மாறனை, நக்கீரர், மருதன் இளநாகனார் போன்ற பெரும்புலவர்கள் கடவுள்களோடு ஒப்பிட்டார்கள். முதல் காலகட்டத்தில் இருந்து ஏழாம் காலகட்டம்வரை இதுபோன்ற பாடல்கள் சங்க இலக்கியங்களில் மிகமிகக் குறைவு எனலாம்.

    9.பாண்டியர்களின் மதுரை என்கிற கூடல் நகரம் தமிழுடன் தொடர்பு கொண்டதாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறத்தொடங்கியது. ஏழாம் காலகட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின்  பாண்டிய அரசில் இருந்த “புலவர்கள் அவை“ யின் தலைவராக பெரும்புகழும் சிறந்த அறிவும் உடைய மாங்குடி மருதனார் என்கிற புலவர் இருந்தார். அதுமுதல் பாண்டிய நாட்டில் தமிழ் புலவர்களுக்கு மிக அதிக மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்தது என்பதோடு மிக அதிகமான புலவர்கள் பாண்டிய நாட்டையும் மதுரை நகரையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவைகளின் காரணமாக ஏழாம் காலகட்டம் முதல் மதுரை நகரானது தமிழ் மதுரையாகக் கருதப்பட்டது. எட்டாம் காலகட்டப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அகநானூறைத் தொகுப்பித்தான். பத்தாம் காலகட்டப் பாண்டியன் கூடகாரத் துஞ்சிய மாறன் வழுதி நற்றிணையைத் தொகுப்பித்தான். இப்படி மதுரையானது தமிழ் வளர்த்த மதுரையாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறிப்போனதால் மதுரையைத் ‘தமிழ்மதுரை’ என்று அழைக்கும் வழக்கம் உருவானது. அதனால்தான் பத்தாம் காலகட்ட நல்லூர் நத்தத்தனார் மதுரையைக் குறித்துப் பாடும் பொழுது “தமிழ் நிலைபெற்ற மதுரை” என்கிறார். ஆறாம் காலகட்டம்வரை தமிழை மதுரையோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.

    10.தமிழரசுகளிடம் ஐக்கியக் கூட்டணி மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதை காரவேலன் கல்வெட்டும், மாமூலனாரின் அகம் 31ஆம் பாடலும் உறுதி செய்துள்ளன. மூவேந்தர்களிடையே பகைமையும், போரும் இருந்து வந்தாலும் தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்பதும் தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது என்பதும் ஒரு மீறப்படாத உடன்படிக்கையாகும். சங்ககாலத்துவக்கம் முதல் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தபோதிலும் அவைகள், கடம்பர், பரதவர் போன்றவர்களை அடக்கவும், தமிழர் அல்லாத பிரதேசங்களின் கடற்கரை நகரங்களைக் கொள்ளையடிக்கவும், அவைகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கவும், தமிழர்களின் கடல்வணிகத்தைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டதே ஒழிய தமிழரசுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.

    இம்மரபு 7ஆம் காலகட்டத்தில் கி.மு. 175-170 வாக்கில் முதல் முறையாக மீறப்பட்டு, சேரர்களின் முசிறித் துறைமுகத்தை பாண்டியர்களின் கடற்படை தாக்கிக் கொள்ளையடித்துச் சென்றது. இதன் விளைவாக கலிங்க மன்னன் காரவேலன் தமிழர்களின் காவல் அரணாகக் கலிங்கத்தில் இருந்த பித்துண்டா நகரத்தைத் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டதாகவும் 1300 ஆண்டுகாலமாக இருந்துவந்த தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை உடைத்து விட்டதாகவும் தனது அத்திக்கும்பா கல்வெட்டில்(கி.மு. 165) பொறித்து வைத்தான். முதல் காலகட்டம் முதல் பத்தாவது காலகட்டம் வரை, இந்த ஒருமுறை மட்டுமே கடற்படை கொண்டு மூவேந்தருக்குள் தாக்கிக்கொள்ளக்கூடாது என்ற மரபு  மீறப்பட்டு முசிறி தாக்கப்பட்டது. அதன்பின் அந்த மரபு மீறப்படவில்லை.

    11.வடநாட்டுப்படையெடுப்பு, வடதிசைப் படையெடுப்பு ஆகியவற்றின்போது தமிழரசுகளிடையே ஒற்றுமை இருந்து வந்துள்ளது. அது சில சமயங்களில் வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமையாகவும் இருந்தது. சான்றாக முதல் கரிகாலன், சேரன்செங்குட்டுவன் ஆகியவர்காலத்தில் ஏற்பட்ட ஒற்றுமை வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமை எனலாம். ஆனால் இப்படையெடுப்புகள் அனைத்துத் தமிழ் அரசுகளுக்கும் நன்மை தருவதாக இருந்ததால் அவை இப்படையெடுப்புகளை ஆதரித்தன என்பதோடு விருப்பத்தோடு அதில் அவை பங்குகொண்டன எனலாம். பத்து காலகட்டங்களில் 6, 8 ஆகிய இரு காலகட்டங்களைத்தவிர பிற காலகட்டங்களில் இப்படையெடுப்புகள் நடந்தன. இமயவரம்பன், சேரன்செங்குட்டுவன், நலங்கிள்ளி ஆகிய மூவரும் வடநாட்டுப் படையெடுப்புக்களை நடத்தினர். இதர ஐந்துபேர் வடதிசைப் படையெடுப்புகளை நடத்தினர். தமிழரசுகளிடையே இருந்த ஐக்கிய கூட்டணியும், தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்; தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது போன்ற மரபுகளும் தான் தமிழரசுகள் மௌரியப்பேரரசை தோற்கடித்ததற்கும், வடநாட்டு, வடதிசைப் படையெடுப்புகளை வெற்றிகரமாக நடத்தியதற்கும் காரணம் எனலாம்.

    12.பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும் ஏழாம் காலகட்டச் சேரன் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையால் தொகுப்பிக்கப்பட்டது. அகநானூறு எட்டாம் காலகட்டப் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியால் தொகுப்பிக்கப்பட்டது. ஆதலால் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகியவற்றைப் பாடிய புலவர்கள், அவர்களால் பாடப்பட்ட வேந்தர்கள், அரசர்கள், இதர ஆட்சியாளர்கள் முதலானோர் 8 முதல் 10 வரையான காலகட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அது போன்றே அகநானூறு எட்டாம் காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதால் அதில் பாடிய புலவர்களும், பாடப்பட்ட புரவலர்களும் 9ஆம், 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அகநானூறு எட்டாம் காலகட்டம் என்பதால் ஒரு சில 9ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் கண்டிப்பாக 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற மாட்டார்கள்.

    தமிழக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வு அடுத்த காலகட்டங்களில் ஏற்படுத்திய விளைவுகள், ஒரு சில காலகட்டங்களில் இருந்த தொடர்ச்சி வேறு சில காலகட்டங்களில் இல்லாது போனது, தமிழக அரசுகளிடம் இருந்த ஐக்கியக் கூட்டணி, வேந்தர் குலங்களிடையே இருந்த நட்பும், பகைமையும் ஒரு சில காலகட்டங்களுக்குத் தொடர்ந்து இருந்து வந்திருப்பது முதலியன குறித்து மேலே தரப்பட்ட விடயங்கள் பேசுகின்றன. இவ்விடயங்கள் சில முடிவுகளைத் தருகின்றன. சான்றாக 1.ஏழாம் காலகட்டத்திலிருந்து பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாகவும், சேரர்கள் வலிமை குன்றியவர்களாகவும் ஆனார்கள். 2.வேந்தனைக் கடவுளோடு ஒப்பிடும் பாடல்கள் முதல் ஏழு காலகட்டப் பாடல்களில் அதிகளவு இருக்காது. 3.பதிற்றுப்பத்துப் பாடல்களில் பாடப்பட்ட வேந்தர்கள் 8 முதல் 10ஆம் காலகட்டத்தைச்சேர்ந்த வேந்தர்களாக இருக்க மாட்டார்கள்.  4.அகநானூற்றில் 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்த புலவர்களோ, புரவலர்களோ இருக்கமாட்டார்கள். 5.பத்து காலகட்டங்களிலும் சென்னிகுலச்சோழ வேந்தர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே போர் நடந்திருக்காது போன்றவை சில முடிவுகளாகும். ஆகவே இதுபோன்ற பல முடிவுகளை எடுக்கக் கூடிய அளவு நமது காலகட்டங்களும் அதில் நடந்த நிகழ்வுகளும் அவைகளுக்கான ஆண்டுகளும் ஓரளவு துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன எனக்கருதலாம்.

    ஆதார நூல்:    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பகுதி – 4, பக்: 381–681.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share