Tag: சேஷாத்ரி பாஸ்கர்

  • எம்.ஜி.ஆர். – நிஜத்திலும் மன்னாதி மன்னன்

    எம்.ஜி.ஆர். – நிஜத்திலும் மன்னாதி மன்னன்

    சேஷாத்ரி பாஸ்கர்

    (எம்ஜியாரின் நூற்று எட்டாம் வருடப் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)

    பிம்பங்கள் இயல்பிலே உருவாவது மிக அபூர்வம். எனக்கு தெரிந்து அது மகாத்மாவுக்கும், கர்ம வீரருக்கும் நிகழ்ந்தது. பிம்பங்களை உருவாக்குவதில் பெரிதும் முயன்று அதில் பெரும் வெற்றி கண்டவர் எனக்கு தெரிந்து இந்தியாவில் ஒருவர் தான். அது எம் ஜி ராமச்சந்தர் தான். முதன் முதலில் நடிக்க வந்த போது அவருக்கு பொருளாதாரம் மட்டுமே பிரச்சனை. புகழ் அடைய வேண்டும், பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சிறிது கூட இல்லை. ஆனால் வாழ்க்கைப் போராட்டம் அவரை வெறி கொள்ளச் செய்தது. ஒரு உத்வேகம் வந்தது, அவர் நிராகரிக்கப்பட்ட போது தான். இந்த ஒதுக்குதல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. கிடைத்த துணைப் பாத்திரங்களில் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை.

    ஒரே ஒரு காட்சியில் நடித்தால் என்ன பெயர் சம்பாதிக்க முடியும்? அவருக்கு முக்கியமாகப் பின்னாளில் கை கொடுத்தது அவரின் கட்டுடலும் அழகிய முகமும் தான் .போராட்டம் தொடர ஒரு கட்டத்தில் மெதுவாகச் சோபிக்க ஆரம்பித்தார். அவர் கண்டியைச் சேர்ந்தவர் தான். ஆயினும் அவருடைய தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பு. கணேசன், ராஜேந்திரன் அளவுக்கு ஈடு செய்யக் கூடியவர். நாடோடி மன்னன் வசனம் ஒன்றே சாட்சி.

    அவர் மனோகரியிடம் பேசும் கட்டம் இன்றும் ரசிக்கப்படுகிறது. அவரின் திட்டமிடல் இங்கு தான் தொடங்குகிறது. மனோகரியாக நடித்த ராஜம் சொல்வார்.

    ” நான் மட்டும் இல்லை அண்ணா, இந்த நாடே உங்களைத் தான் நம்பி இருக்கிறது (வசனம் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர்). அவருக்குப் புகலிடம், அண்ணாதுரையால் கிடைத்தது. நண்பராய் இருந்த கருணாநிதி அவருக்கு எதிரி ஆனார். காரணம் அவரின் அபரித வளர்ச்சி.

    ஒரு பக்கம் கணேசனிடம் திரை உலகப் போட்டி. இன்னொரு பக்கம் அரசியலில் கருணாநிதியிடம் போட்டி. இரண்டையும் ஜெயித்தார். பிம்பம் உருவாகி, பிம்பம் பெரிதானது. அதனைக் காப்பாற்றிக்கொள்ள அவர் மிகவும் பிரயத்தனம் செய்தார். இது அசாதாரணம். எல்லோரும் நினைப்பது போல அவருக்கு அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. அவர் பெரியாய் இடத்திற்கு வருவதற்குப் போட்ட கணக்கு தான் எழுபத்து இரண்டாம் ஆண்டு வெடித்தது. அது இயல்பில்லை. அதன் பின்னால் பெரிய திட்டம் இருந்தது. எம் ஜி யார் நினைத்தபடி அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அவர் எதிர்பார்த்ததும் அதனைத் தான். அதிமுக தோன்றியது. அந்தப் பெரும்புயலில் திமுக சாய்ந்தது. அந்த அலை, தமிழகத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆண்டது.

    இதற்கு முன் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் நடிக்க இருந்தார . அண்ணாதுரையின் தொண்ணூறு பக்க வசனத்தை அவரால் குறுகிய காலத்தில் மனனம் செய்ய முடியவில்லை. பேரறிஞரின் தமிழ் அப்படி. நாடகத்தை விட்டு அவர் விலக, அந்த இடத்தில் அமர்ந்தவர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். பின்னாளில் அவர் தான் நடிகர் திலகம். பட்டம் கொடுத்தவர் பெரியார். எம்ஜியார் நடித்து இருந்தால் அவர் நடிகர் திலகமாக மாறியிருப்பார். காலம் போடும் கோலம் என்பார்களே, அது இது தான் போலும்.

    எம்ஜியாரைப் போல பிம்பம் உருவாக்கியவர்கள் வேறு எங்கும் இல்லை. அவரின் வறுமை, போராட்டம், தந்தையற்ற சூழல் எனப் பல காரணிகள் இருந்தாலும் அவரின் வெற்றிக்குக் காரணம், அவருடைய நல்ல குணவான் தன்மை. அவரிடம் குறைகள் இருக்கலாம். அது கடந்து போகக் கூடியவை. ஒரு சின்ன இல்லத்தில் எல்லோரின் அன்புக்குப் பாத்திரமாவதே பெரிய கஷ்டம் எனும் போது கோடிக்கணக்கான மக்கள் அவரைக் கொண்டாடுவது என்பது என்பது என்ன லேசுப்பட்ட காரியமா? எம்ஜியார் அதனை லாகவமாகச் செய்தார்.

    அவரின் ஈகைக் குணம், வசீகர முகம், நல்ல விஷயங்களைக் கொண்டாடும் மக்கள் எனத் தமிழ்நாடு இருந்ததனால் தான் அது சாத்தியம் ஆயிற்று. அவர் நிஜத்திலும் மன்னாதி மன்னன் தான். அவர் ஒரு சரித்திரம் என்ற விளிப்பு, எம் ஜி யார் முன்பு ஒரு சாதாரண பிரயோகம். அவரே அவரை ஜெயித்துவிட்டார். நல்ல உள்ளங்களைக் கொண்டாடுவதில் தமிழ் மக்களுக்கு ஈடு இணை இல்லை. அவர் உதாரண புருஷர்.

    Share
  • யாராத்தா குட்டை

    யாராத்தா குட்டை

    சேஷாத்ரி பாஸ்கர்

    நாகேஸ்வர ராவ் பூங்கா அதன் பெயரை பெறுவதற்கு முன் உள்ளூர் மக்கள் அதற்கு வைத்த பெயர் யாராத்தா குட்டை. இன்று அப்படி சொன்னால் அது கெட்ட பேச்சு என்பார்கள்.

    அங்கு எப்படி குட்டை உருவானது என தெரியவில்லை.

    ஒரு வேளை இரண்டு வருடங்கள் முன்பு இங்கு பெய்தது போல அம்பது வருடங்கள் முன்பு மழை வந்திருக்கலாம். ஒரே குட்டை பிரதேசம். காட்டு வெளி நிலம். எதிரே உள்ள தேவாலயம் அப்போது காட்டு கோயில் என அழைக்கப்பட்டது. ஆறு மணிக்கே வெளியே போக பயப்படும்படியான ஊர்.

    காரணம் திருடர்கள் இல்லை. இருட்டு. பேய் பிசாசு பயம். சங்கிலியை பறித்து கொண்டு ஓட இரண்டு சக்கர வாகனம் பெரிதாய் இல்லை. மிஞ்சி போனால் ஒரு வாடகை மிதி வண்டி. மன்னிக்கவும். அவர் சைக்கிள். வியாதி இல்லை.

    காற்று மிதம். மழை சுகம் கொஞ்சம் கஷ்டம். மாசு இல்லை. பெரிய வெளிச்ச விளக்குகள் இல்லை. தெருவின் குப்பைகள் வியாதி பரப்புவதாய் இல்லை. முக்கியமாய் பிளாஸ்டிக் இல்லை. இன்றுள்ள மருத்துவமும், கைபேசியும் அன்று உண்டா என்று விவாதம் செய்தால் என்னிடம் பதில் இல்லை.

    நான் சொல்ல வந்தது ஒப்பீடு இல்லை. வாழ்வு சுமை பற்றிய என் கவலை. எட்டு குழந்தைகள் பெற்ற தாய் எல்லோருக்கும் கல்யாணம் செய்து விட்டு சென்ற வருடம் இறந்ததை நான் அறிவேன். ஏன், சில வீட்டில் அம்மாவும் பெண்ணும் ஒரே நாளில் விலக்காகி இருந்த கதை கூட உண்டு. இன்று ஒரு குழந்தை பிரசவத்திற்கு பாடு படுத்தும் ஸோ கால்ட் மாட்டு பெண் எங்கே? எட்டு பெற்றவள் எங்கே? ஆரோக்ய ரீதியில் இதை பேசுகிறேன். சின்ன அடி பட்ட என் அம்மாவுக்கு ஹார்லிக்ஸ் வாங்கி வருவதற்குள் பாத்திரம் தேய்த்து விட்டு செல்வி பார்க்க ஆரம்பித்து விட்டாள். சின்ன அடி கூட எனக்கு பட்டால் அதை எல்லோர்க்கும் சொல்லி மாஞ்சு போய் நிற்கும் நான் அவர்கள முன் தூசி தான்.

    நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எத்தனை கோடி பாட்டு தான் ஞாபகம் வருகிறது. இன்று அரை டிராயர் போட்டு கொண்டு எகனாமிக்ஸ் பேசி கொண்டு நடக்கும் யுவன், யுவதிகளுக்கு இது தெரியாது.

    இந்த பூங்கா மூன்று பேரின் சொத்து. ஒன்று தர்மாம்பாள் முதலியார். இன்னொருவர் நாகேஸ்வரர். அவருக்கு அம்ருதாஞ்சன் கட்டிடமும் அப்போது சொந்தம். மெட்ராஸ் பிரெசிடென்சியில் அப்போது போட்ட தர்மம். இன்று சுந்தரம் பைனான்ஸ் வரை வந்து இருக்கிறது.

    நிஜ தர்மவான்கள் இருந்த ஊர் அது. நமக்கு தெரியாது. ஒரு வேளை அங்கிருந்த, இருக்கும் மரங்கள் அறியும். அன்று ராமாயி அம்மாளும், நைனியப்ப முதலியாரும், குமாரசாமி ராஜாவும், அரவாமுதன் அய்யங்காரும் இந்த நிலத்தை தரவில்லையெனில் நமக்கு நகரில் ஒரு நாலு ஏக்கர் பசுமை தோட்டம் கிடைத்திருக்குமா என்ன? சரித்திரம் மறக்கப்படகூடாது.

    இது திறக்கப்பட்ட எண்பதாவது வருடம் இது. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.

    Share
  • வாழ்க்கை எப்படிப் போகிறது?

    வாழ்க்கை எப்படிப் போகிறது?

    சேஷாத்ரி பாஸ்கர்

    போன வருஷம் போட்ட சட்டை கொஞ்சம் கூடக் கிழியவில்லை
    ஒரு முறைதான் காலணியைத் தைத்தேன்
    பழைய பகை ஒன்றைச் சரி செய்தேன்
    புதிதாய் இரண்டு கிளம்பிவிட்டது
    வெற்று முகம் என்றாலும் கொஞ்சம் சிரிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
    உரத்துப் பேசினால் எனக்கே தலை வலிக்கிறது
    பிச்சை கேட்பவனிடம் போதனை சொல்வதில்லை .
    இரண்டு முறை சோப்பு மாற்றியாகிவிட்டது
    கவிதை முனைப்பு திருகுவலி
    கடன் சுமை கொஞ்சம் பரவாயில்லை
    போன வருடம் புரியவில்லை
    இந்த வருடம் ஒன்னுமே புரியவில்லை
    முன்பு கோபம் உடனே வரும்
    இப்போது மெல்ல வருகிறது.

    Share
  • சட்டை

    சட்டை

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ”இப்ப இந்த செலவு தேவையா?”
    மகன் பதில் சொல்லவில்லை

    ”இரண்டாயிரம் பெரிய தொகை என்பதே உனக்கு உறைக்கவில்லையா?”

    ”அப்பா ப்ளீஸ்! சில சுதந்திரம் எனக்கும் வேண்டும்”

    ”நான் தப்பு சொல்லலே. ஆனாலும் கொஞ்சம் யோசி ஒரு சொக்காய் இரண்டாயிரமா? என் கடைசி மாச சம்பளம் இதை விட கம்மி.”

    ”அதைத்தான் சொல்றேன்! அது அந்தக் காலம்! இப்ப என்ன மாதிரி யோசி. இது மொத மாச சம்பளம். நான் ஆசையாய் வாங்கினேன்.”

    ”சாரி. யூ ஆர் லாவிஷ்”

    ”அம்மா இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பா”

    ”ஒரு தகப்பன் மனசை நீ புரிஞ்சுக்கல. அப்புறம் உன் இஷ்டம்.”

    ”தப்பு! நீ தான் மகனோட மனசை தெரிஞ்சிக்கல.”

    ”கோபப்படாமல் இதை ஒரு தப்பாய் பார்த்து விட்டு மன்னித்து விடு. ஆனால் என் செயலில் இருக்கும் மனசைப் பார்.”

    ”உன் அகலக்கால் எனக்கு பயமாய் இருக்கு”

    ”தப்பாய் சொல்றப்பா! விசாலமா யோசிச்சு பாரு”

    ”நீ லட்ச ரூபாய் சம்பாதிச்சா கூட, இதைத்தான் சொல்வேன்”

    தலைக்கவசம் அணிந்து கொண்டே சொன்னான்.
    ”அப்பா! இன்னும் ஒன்னு சொல்றேன். உன் கோபம் அதிகமாகும்.”

    ”சொல்லு. என்ன பேண்ட் மூவாயிரமா?”

    ”இல்ல! இந்தச் சட்டை உனக்கு தாம்பா!”

    Share
  • டல்லாஸ்

    டல்லாஸ்

    -சேஷாத்ரி பாஸ்கர் 
    =========

    டேய் .. நீ முகுந்து தம்பியா ?

    ஆமாம் சார் .உங்க பேரு

    அம்பின்னு சொல்லு எங்கிருக்கான் அவன்?

    தாம்பரம் சார் .பட் ரிடயர்ட் .

    என்னை விட ரெண்டு வயசு சின்னவன்

    நீ என்ன பண்ற?

    சொன்னேன் .

    பட் ஐ ஹேட் திஸ் கன்ட்ரி! எங்க போனாலும் துட்டு புடுங்கிறான் . ஏன் இங்க ஆறு மாசம் கழிச்சு வந்தேன்னு இருக்கு

    என்ன சார் ஆச்சு ?

    ஒண்ணா ரெண்டா .பர்க்ளர்ஸ்

    டெல்லாஸ் இப்படி இல்லை. நோ பொல்யூஷன். நோ டர்ட்டி ட்ராபிக் . மூணு மாசம் பெண் வீட்ல இருந்தேன். இட் வாஸ் ஹெவென்! அப்புறம் அங்கேந்து சிகாகோ . -காட் . அது தாண்டா ஊர்! குப்பா ஒரு கவுளி வெத்தலை . சுண்ணாம்பு போடாதே எப்பவும் போல தண்ணிலேந்து அங்கே பருப்பு வரைக்கும் ஹை கிளாஸ் ஸ்டப். முன்னை மாதிரி ஊறுகாய் , காபிபொடி தூக்கிண்டு போக வேணாம் . சீரங்கம் அய்யங்கார் மாப்ள கடையை போட்ருக்கான் .ஒரே மலிவு . என்ன மெட்ராஸ் மண்ணாங்கட்டி! நேத்து தானே வந்தேன் . இன்னும் ஜெட் லாக் போகலை .சித்த இரு .

    குதப்பிய வெத்தலையை அப்படியே பாதையோரம் துப்பி விட்டு நேஷனல் சீவல் பாய்கிட்ட குப்பன் பிச்சை வாங்கனும் .இவன் தர்றது ஒரே கமாற வெத்தலை புகையிலையில் ஒரே பச்சை கற்பூரம் பன்னீர் கொடுரா? எதுக்கு சொல்ல வந்தேன்னா .. இங்க உக்காந்துண்டு குண்டு சட்டில குதிரை ஒட்டக்கூடாது

    டல்லாஸ்ல இது போல துப்பலாமா மாமா என நானும் கேட்கவில்லை .

    Share
  • சிவாஜி – ஒரு சுயம்பு

    -சேஷாத்ரி பாஸ்கர்

    ஒரு படத்தின் இறுதிக் காட்சி. படப்பிடிப்புக் குழு தயார். இதற்காக அந்த நாயகர் மூன்று நாட்கள் தூக்கத்தைத் தொலைத்து ஒரு வாடிய முகத்தை ஏற்படுத்திக் கொண்டார். அந்தச் சில நாட்கள் அவர் பேசுவதைக் குறைத்து, அந்தப் பாத்திரத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு, அதில் லயித்து எப்படிச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார். தூக்கம் இழந்த முகம் கொஞ்சம் உப்பியது. கண்கள் கொஞ்சம் பெரிதாகின. பெரும் களைப்பு முகத்தில் தெரிந்தது

    இரவு வீட்டுக்குச் சென்ற போதும், அவர் சகஜமாகவில்லை. பின்னர் போட்டுக் கொண்ட ஒப்பனை அந்த பாத்திரத்துக்கு வலு சேர்க்க, பாசமலர் ராஜசேகரன் தயார். கிழிந்து போன கைச் சட்டை , கால் சட்டை, கையில் குழந்தை, பார்வை இழந்த கண்கள், பாசம் பொங்கும் முகம்,  தெறிக்கும் குரல், கூர்மையான ஆரூர்தாஸ் வசனம், பலம் சேர்க்க சாவித்திரி, தொந்தரவு செய்யாத பின்னணி இசை? நகர்ந்து கொண்ட பீம்சிங், நேரிடையான கழுத்தைச் சுளுக்காத கோணம். What More is Needed? எனக்குத் தெரிந்து இவரைப் போல ஒரு நடிகர் வேறெங்கும் இல்லை. நாடக நடிப்பு, ஸ்த்ரீபார்ட் வேஷம் தாண்டி இப்படி யோசித்துப் புனைந்து ஒரு நடிகன் இப்படித் தன்னை வளர்த்து ஒரு பெரிய பரிமாணத்தைத் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியது பெரும் சாதனை.

    சரஸ்வதி சபதம் படத்தில் ராஜசபையில் நடந்து வரும் காட்சிக்குப் பத்து வகையான நடை நடந்து ஏ.பி. நாகராஜனுக்குத் திகைப்பூட்டினார்.

    ஆண்டவன் கட்டளையில் விவேகானந்தர் வேஷம். ஒப்பனை போட்டு, படத்தளம் வந்தபோது அரங்கமே எழுந்து நின்றது. அது போன்ற முகவாகு. கண்களை உருட்டிக் கொண்டு ஜப்பான்காரன் குண்டு போட போகிறான் என்று ஒரு எதிரி நாட்டினர்கூட சொல்ல முடியாத முக பாவம். இது அந்த நாள்.

    இவர் ஒரு சுயம்பு. எல்லாவற்றையும் உள்வாங்கி அதை எந்த நேரத்தில் எப்படிக் கொண்டு வர வேண்டும் என்று தெரிந்த கலைஞன், அன்னையின் ஆணை பற்றியும் ராஜாராணி பற்றியும் அவரிடம் பேசியவர்கள் மிகக் குறைவு. அவர் படத்தில் எல்லோருக்கும் ஒரு கனம் இருக்கும். பாடல்கள் இருக்கும். வசனம் இருக்கும். சினிமாவை சினிமாவாகப் பார்த்தவர். பந்துலு இயக்கத்தில் சபாஷ் மீனா படம் ஆரம்ப நிலையில் கணேசனை அணுகிய போது அவர் மெட்ராஸ் பாஷை பேசும் வேடத்திற்குச் சந்திரபாபுவைச் சொன்னாராம். பாபுவுக்கு மகிழ்ச்சி. பதிலுக்குப் பாபு தனக்கு சிவாஜியை விடக் கூடுதலாக ஒரு ருபாய் ஊதியம் வேண்டும் என்றாராம். சிவாஜியிடம் இது பற்றிக் கேட்டபோது அவர் சொன்னார். கிறுக்கன். விஷயம் உள்ளவன். அவனையே ஒப்பந்தம் செய்யுங்கள் என்றாராம். இது, பிம்பம் பார்க்கும் கலைஞனுக்கு வராது.

    அவரைப் பார்த்து ஒருவர் உங்கள் நடிப்பு முதல் மரியாதையில் சூப்பர் என்றாராம். குரல் வந்த திசையில் அவர் முறைத்துக்கொண்டு திரும்ப, கேட்டவன் ஓடியே போய் விட்டான். எனக்குத் தெரிந்து உலகில் இவரைப் போல ஒரு பெரும் நடிகர் இல்லை. அவர் நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர்.

    Share
  • ஹெல்மெட்

    ஹெல்மெட்

    -சேஷாத்ரி பாஸ்கர் 

    இந்தா மா , வண்டியை நிறுத்து

    ஏன் சார் இப்படி நடு ரோட்டில நின்னா எப்படி சார்

    நீங்க சொன்ன மரியாதைக்கு நிறுத்தினா நாங்க ஏம்மா அப்படி பண்ணறோம்.

    சார் . ஏதோ அவசரம் ஹெல்மெட் போட்டுக்கல.

    பெரிய அவசரம் . நான் வந்து ஸ்டஷேன்ல எல்லா தகவல்களையும் காட்டறேன் .

    சாரி . வண்டிய ஓரத்துல நிறுத்துங்க

    ஏன் சார் . திஸ் இஸ் அட்ராசியஸ்

    சாரி மேடம் ப்ளீஸ் கோஆபரேட்.

    நத்திங் டூயிங்

    ஐ வில் ரைட் டு யுவர் கமிஷனர்.

    என்ன வேணா செய்ங்க

    இப்ப இறங்கி அபராதம் கட்டுங்க

    சார் ஐ ஆம் அ ஜர்ணலசிம் ஸ்டூடன்ட் .

    மேடம் – சாரி . உங்களுக்கு எல்லாம் அடிபட்டா
    வலிக்காதா , உயிர் போகாதா

    இப்ப எங்க கிட்ட பணம் இல்லை .

    பரவாயில்லை . உங்க அப்பா , அம்மா யாரயணா கூப்பிடுங்க.

    சார் .தே ஆர் பிட் ஓல்ட்
    .
    சரி தமிழ்ல சொல்றேன்

    மேடம் .. சார் . ஸ்டஷேன் ரைட்டராய் இருந்தவரு

    ஒரு பெண் காவலர் இடையே புகுந்தார் .அவருக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு நினைச்சிங்களா.

    மேடம் . நீங்களே சொல்லுங்க ..

    உங்க தப்புக்கு நான் உடந்தையா? .

    இப்ப நான் என்ன கொலையா பண்ணிட்டேன் .

    டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க .போய் பணத்தை ரெடி பண்ணுங்க.

    சார் . நீங்களும் பாமிலி ஆள் தானே சார் .எங்கப்பா மாதிரி நீங்களும் ஒரு பெரியவர் . இப்படி பண்ணலாமா ?

    அதனால தான் .

    வண்டியை நிறுத்தி விட்டு சாவியை அவரடிம் கொடுத்து விட்டு ஹெல வித் யு என்றாள்.

    அவர் அமைதியாக அவளை பார்த்து பிரிங் யுவர் பாதர் என்றார்

    மேடம் . நீங்க படிச்ச பொண்ணுதானே.இப்படியா ஒரு பெரியவரை பார்த்து , அதுவும் ஒரு அதிகாரியை பார்த்து சொல்வது .ஒரு செக்க்ஷன்ல கேஸ் போட்டா இரண்டு நாள் உங்களை ரிமாண்ட் பண்ணலாம்

    ஸ்டாப் இட் . யு ஆர் இன்சல்டிங் அ சிடிசன் .

    மேடம் – இங்க வாங்க .போன மாசம் வரை இவர் கண்டிச்சு பல பேரை புரிய வச்சுருக்கார் . ஏன் ஒரு பையனுக்கு ஒரு ஹெல்மெட்டே வாங்கி கொடுத்தாரு . இன்னிக்கு இப்படி பண்றாருன்னா

    கொஞ்சம் நிறுத்தி . “போன மாசம் இவர் பொண்ணு ஒரு அக்ரி ஸ்டுடென்ட் . குக்க்ஸ் ரோட்ல அடிபட்டு . ஸ்பாட்ல”. அதுக்கும் உன் வயசு தான் .

    சீ சீ என்ன பெரிசா குதிக்கிறீங்க .

    சார் சாவியை கொடுங்க அதுகிட்ட .. நீ போய் சாவு.இந்தா உன் டாகுமென்ட்ஸ் .

    வேணாம் மேடம் . நான் ஆட்டோல போய் பணம் எடுத்துட்டு வரேன்.

    ஏன் உங்கப்பாவை கூட்டிட்டு வாயேன் . உன் பவுஷை சொல்றேன் .

    வேணாம் மேடம் . இவரே எங்க அப்பா மாதிரி தான்

    Share
  • சிதம்பரம் (சிறுகதை)

    சிதம்பரம் (சிறுகதை)

    -பாஸ்கர் சேஷாத்ரி
    —————

    அவன் அந்த இடத்தைக் காட்டிய போது எந்த சுவாரஸ்யமும் இல்லை. அகற்றப்படாத குப்பை, மலம் என, நெருங்க முடியாத அளவுக்கு ஒரே துர்நாற்றம்.

    டேய், அந்தப் பக்கம் போகாதே என்றதை அவன் சட்டை செய்யவில்லை.

    வாடா என்றான். போய் நின்றேன். அழுக்குக் கலவையாய் ஓடும் நீரோட்டம். சுற்றிலும் பாசி. எக்கச்சக்க செடிகள். மிதக்கும் டயர், சேற்றுப் படுகை.

    பாசு, நம்புவியா… இங்கிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் கட்டு மர சவாரி. டப்பா கட்டு கட்டி கையில் தள்ளு குச்சியை வைத்துக்கொண்டு அவர்கள் தள்ளும் வேகம் நீரைக் கிழிக்கும். இரண்டு பேர். இரண்டு பக்கம். உள்ளே நாலு பேருக்கு மேல் இடமில்லை. குழந்தைகளை அனுமதிக்க மாட்டார்கள்.. எதிர்ப் பக்கம் உப்பு மூட்டை. இந்தப் பக்கம் சுள்ளிக் குச்சி.. ஓரத்தில குடம் தண்ணி. நடுவுல காய்கறி மூட்டை.. பெண்டிர் ஒரு பக்கம், பேச்சு பெரிதாய் இருக்காது. பூ தொடுத்துக்கொண்டு ஒரு அணி. இன்னொரு அணி மந்தார இலைகளைப் பின்னிக்கொண்டு. நாட்டமாய் எல்லோரும் அவரவர் வேலை செய்வார்.

    நீ போயிருக்கியா?

    என்னெல்லாம் உள்ள விடலை. நீச்சல் தெரியும்னு அப்பா சொன்னார்.

    ஆனா பட்டாமணியம் ரொம்ப கண்டிப்பு. அவர் பேத்தியைக் கூட ஏத்தல.

    எவ்வளவு ரூபாடா

    ரூபாவா? ரெண்டணா…. நினைச்சா இறங்க முடியாது. விசில் எல்லாம் கிடையாது. தோ இங்க இந்தக் கட்டடம் முன்னால காய்கறிச் சந்தை. அதுக்குப் பேரே தண்ணித்துறை மார்கெட். பாஷ்யம் அய்யங்கார் கட்டினது. நூத்திப் பத்து வருஷம் ஆச்சு. எட்டரை கிரௌண்ட். அவர் ஜட்ஜ். நேர்மைக்குப் பேர் போனவர்.

    காய்கறி வணிகம், கணக்குல கெட்டியாய் இருந்தா தான் சமாளிக்க முடியும். ஆளும் மாறும், விலையும் மாறும். புதினாவை உடம்பில் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்தால் அசதி தெரியாது. வாணிபம் அவர்கள் உடம்பில் ஓடும் ரத்தம். நேர்மைக்குப் பேர் போனவர்கள். அம்பதுக்கு அப்புறம் வந்த தலைமுறை பணத்தைப் பெரிசாகப் பார்த்தது. அதுதான் வீழ்ச்சி. கண்ணியம் போச்சு. மேல் விலைக்கு வித்தவன் முடக்கு வாதம் வந்து செத்துப் போனான். ஆனாலும் யாரும் மாறல. சாவு மனுஷனை மாத்தும்னா இன்னிக்கு ஊர்ல பாலும் தேனும் ஓடும். அதெல்லாம் தாவார பேச்சு .

    எப்படிடா இதெல்லாம் உனக்குத் தெரியும்? என் வயசுதான்டா உனக்கு?

    எல்லாம் எங்க தாத்தன் சொன்னதுரா. கண்கள் கலங்கின.

    சிதம்பரம் அழுது, நான் அப்போது தான் பார்க்கிறேன். தோள்கள் கொஞ்சம் நடுங்கின.  இது நிஜ அழுகை. அறுபது வயதில் பாசாங்கு செய்ய முடியாது.

    டேய், ஆர் யு ஓகே?

    நல்ல நினைவாற்றல் உனக்கு .

    அது வலிடா என்றான்.

    ஏன்?

    அந்தப் பரிசிலை ஓட்டியது என் தாத்தன். முடக்கு வந்து செத்தவன் என் அப்பன்.

    என் உடலும் உள்ளமும் மொத்தமுமாய் சிதம்பரமாய் இருந்தது…

    Share
  • மணி சார்

    சேஷாத்ரி பாஸ்கர் 
    —————

    கே ஜே எஸ் மணி பற்றி சொல்ல வேண்டும் . எல்லோர்க்கும் அவர் மணி சார் . நான் பணி புரிந்த காலத்தில் ஏற்பட்ட சிநேகம்.முதல் நாள் வேலை விஷயமாய் பார்க்க போன போது அவர் தான் என்னை அழைத்து உட்கார சொன்னார் . முதல் நாள் ஒரு அலுவலகத்தில் உட்காரும்போது மிக பூரிப்பாகா இருந்தது .அவர் நெற்றியில் பெரிதாய் பழனி சித்தநாதன் விபூதி . அவர் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து அவர் கருப்பு ப்ரேம் கண்ணாடியில் விழுந்தது .அவ்வப்போது துடைத்து பேச வாசனை அந்த அறை முழுதம் வியாபித்தது .

    எங்கேந்து வர ?
    மயிலாப்பூர் சார்
    இங்க என்ன வேலைன்னு சொன்னாங்களா ?
    இல்லை சார்
    இந்த டிப் டாப் டிரஸ்லாம் கொஞ்சம் இந்த வேலைக்கு அதிகம் . அதென்ன பெல்ட்ல கழுகு?
    ஜுக்னு சார் .
    அப்படினா ?
    சினிமா சார் .
    என்ன கருமமோ .
    கார்த்தால ஒன்பது மணிக்கு டாண்ணு வரணும்
    சைக்கிள் ஓட்டுவியா ?
    ம் தெரியும் சார்
    முதல்ல எல்லார்க்கும் காப்பி கொடுக்கணும்.உனக்கும் உண்டு
    பத்து மணிக்கு மேல லாரி ஆபிசுக்கு போகணும்
    ஏதான சரக்கு இருந்தா கொண்டு வரணும்
    கமிஷன் ஏதும் அடிக்க கூடாது .
    சரி சார்
    நடுவில் பேங்க் வேலை பாக்கணும்
    பேரு என்ன சொன்ன ?
    பாஸ்கர்
    முதல்ல கௌரவம் பாக்க கூடாது .சாயந்திரம் நான் சொன்னபுறம் தான் போகணும்
    கையில என்ன .
    சர்டிபிகேட் சார் .
    பேப்பர் மாதிரி இருக்கு
    ஆமா சார் . எக்ஸ்பிரஸ் பேப்பர் .அதுவுள்ள வச்சிருக்கேன் .
    பேப்பர்லாம் படிப்பியா ?
    ஆமா சார். எக்ஸ்பிரஸ் ..நான் வாங்கிடுவேன் .
    சம்பளம் என்ன தெரியுமா , இரு நூத்தி எழுபத்தி அஞ்சு .
    சரி சார் .
    அப்புறம் பாகிங் பண்ணனும்.செக்போஸ்ட்ல ஏதான பிரச்சனைனா போகனும் .இன்னொன்னு இங்க கட்டை வண்டி இருக்கு . வண்டிக்காரனுக்கும் ஹெல்ப் பண்ணனும் . கூட மாட தள்ளனும் .
    செய்வேன் சார் .
    உன் வயசு என்ன
    இருப்பத்தி அஞ்சு .
    வீட்ல போன் இருக்கா ?
    இல்ல சார் .எப்ப சார் சேரனும்
    இன்னிக்கே ?
    சார் நாளைக்கு தீபாவளி .
    ஏன் வெடிக்கனுமா ?
    இல்ல சார் . வெடிக்கரத பாக்கணும் .
    சரி .அப்ப்ளிகஷேனை எழுதி கொடு.
    தோ சார்
    .கச்சேரி ரோட்ல சாரதா ப்ளாஸ்க் தெரியுமா ? .
    தெரியும் சார் . பழைய போஸ்ட் ஆபிஸ் பக்கத்துக்கு அடுத்த பில்டிங்.
    சரி போய் உட்கார் .
    சரியாக ஒரு மணி கழித்து அவர் திரும்ப வந்தார் .
    இந்தா . இந்த பிளாஸ்கை அங்கு கொடுத்துட்டு ரிப்பேர் பில் வாங்கிக்கோ
    அஞ்சு ரூபாய் வச்சுக்கோ .ஏதான பப்பிர்மின்ட் வாங்கி சாப்பிடு .நாளான்னைக்கு வா .
    வெளியே வந்து சைக்கிளை எடுத்து பிளாஸ்கை தோளில் மாட்டிய பிறகு எனக்கு எந்த வெடி சப்தமும் கேட்கவில்லை .

    Share
  • அப்பாவின் வாசனை

    அப்பாவின் வாசனை

    -பாஸ்கர் சேஷாத்ரி 

    கொஞ்ச நாட்களாக என் தந்தையின் நினைவு என்னை வாட்டுகிறது. அவர் அமர்ந்த இடம், ஒட்டிய சைக்கிள், வெற்றிலை பாக்கு பெட்டி, அதில் பொறிக்கப்பட்ட ”சேஷாத்ரிநாதன்” என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

    அவர் ஃபோனை எடுத்துச் சொல்லும் குட் மார்னிங்கில் அவ்வளவு கனிவு. உறவுகள் தொலைவதற்கு இடைவெளி வருவதற்கும் முக்கிய காரணம் தன்னைத் தனிமைபடுத்திக் கொள்ளல். தனி உலகமாகப் போதல்தான். தன்னைச் சுற்றி உலகத்தை வைத்துக் கொண்டு தான் பார்ப்பதுதான் உலகம் என்றால் எந்த உறவு நிற்கும்?

    பரபரவென இருந்த வாழ்க்கையில் பத்து நிமிடங்கள் அமர்ந்து பேசியிருக்கலாம். அல்லது ஏதாவது நிகழ்வைப் பற்றி சம்பாஷனை செய்து இருக்கலாம். ஓடி போய், தன் உலகம் காண விழைந்த எனக்குப் பின்னர்தான் இழப்பு புரிந்தது. கெட்ட பின்பு ஞானி என்பது போல.

    அவர் விரல் பிடித்து அழைத்து போன பள்ளிக்கூடங்கள் அப்படியே இருக்கின்றன. அட்டை போட்டு ஒட்டித் தரும் லாகவம், அந்தப் புத்தக வாசனை, அந்தக் கோந்தின் பிடிப்பு. அதில் லேபிளை ஒட்டிக் கூர்ப்பாய் எழுதித் தந்த ஸ்டைலான ஆங்கிலம். அடடா. எந்தப் பையனும் என் புத்தகத்தை மட்டும் கிழிக்க மாட்டான்.

    ஒரு கடையில் இன்று மாலை சென்ட் ரப்பர் கேட்ட ஒரு பையனைப் பார்த்தபோது, நான் அழிப்பதற்காகவே தப்பாய் எழுதி அந்த மணத்தை முகர்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அந்த ரப்பரைப் போல என் அப்பாவும் தேய்ந்து கரைந்து போனார். சென்ட் வாசனை போய்விட்டது. என் அப்பாவின் வாசனை என் சொத்து. என் மனம் நினைத்தால் அதனைக் கொண்டுவரும் லாகவம் தெரிந்து வைத்து இருக்கிறது.

    இப்போது என் முகமும் மாறிக்கொண்டு இருக்கிறது. பாதி அப்பா முகம். குரலும் அப்படி அந்த கோரோஜனை சக்தி. நான் அவராகி விட்டேன். இது எரிமலை போல. என்று வெடிக்கும் எனத் தெரியாது. ஆனால் இந்த உணர்வு தூண்டி வாழச் செய்கிறது ஆயுள் நேரத்தை மொத்தமாய் இழுத்துக் கரைத்துக்கொள்ள முடியுமா….?.

    ஒரு வேண்டுகோள்- . அப்பாவின் சுண்டு விரலை விட்டுவிடாதீர்கள்.

    Share
  • செல்வி

    செல்வி

    பாஸ்கர் சேஷாத்ரி

    அவரின் மீசையைப் பார்த்தவுடன் அவளுக்குப் பயமாகிவிட்டது .

    “என்ன, உம்பேரு என்ன?”

    “செல்வி.”

    உடம்பு கொஞ்சம் நடுங்கியது

    “வேலையை பத்தி சுந்தரி சொன்னாளா?”

    “சொன்னாங்க சார்.”

    “காலைல எட்டரைக்கு வந்துடணும் .
    ஒம்போது மணிக்கு டீ கொடுப்ப்போம் .
    நாலு பிஸ்கட் கூட பொறையும் உண்டு .
    வேலைல கௌரவம் பாக்க கூடாது .
    முதல்ல இரண்டு கல்ல தூக்கணும் .
    அப்புறம் ஒரு வாரம் கழிச்சு நாலு கல்லு.
    மொத்தம் மூணு மாடி .
    முதல்ல தலைல.
    ஷோக்கெல்லாம் பாக்க கூடாது
    செல்போன்ல பாட்டெல்லாம் கேட்க கூடாது.”

    “எங்கிட்ட போனே இல்ல…..”

    “சிம்மோடு கட்டி விடுவாங்க .
    தலை கட்டு. துணில
    முதல்ல நடு மண்டை வலிக்காது.
    ஈர துணியோட ரெண்டு நாள் இருக்க பழகு .
    ரப்பர் செருப்பு தான் போடணும் .
    புடவை மேல ஒரு சட்டை போடணும்.”

    “சரிங்க சார்.”

    “அய்யான்னு கூப்பிடு – சுந்தரி”

    “சரிங்க அய்யா.”

    “நீ என்ன நடுல …
    உம் பேரு விலாசமெல்லாம் எழுதி
    அந்த வாட்சமேன்ட்ட கொடு.
    என்ன பண்றான் உன் அப்பன்?
    சம்பளம் பணத்தை சனிக்கிழமை சாயந்தரம் கொடுப்போம் .
    எந்த பொருளையும் நீ இங்கேந்து கொண்டு போக கூடாது.”

    “சரிங்க சார்.”

    “மணி என்ன ஒம்போது தானே.”

    “வாட்ச் இல்ல சார்.”

    “சரி சரி ராகு காலத்துக்கு முன்னாடி சேர்ந்துக்கோ.”

    “அய்யா. நான் நாளைலேந்து வரேன்யா.”

    “ஏன் …நாளைக்கு மட்டும் என்ன முஹூர்த்தம்?”

    “இன்னிக்கு பன்னெண்டு மணிக்கு பத்தாம் கிளாஸ் ரிசல்ட்யா.”

    மேஸ்திரி எழுந்துவிட்டார்!! .

    Share
  • அழகான அபத்தங்கள்

    அழகான அபத்தங்கள்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    Picture courtesy – star2.com

    இருவரும் வாள் வீச ஆரம்பித்து
    முப்பது வருடங்கள் ஓடிவிட்டன!
    உன் அகந்தை உனக்குக் கேடயம்,
    என் பொய் எனக்கு!

    ஓர் நாள்
    என் வாளும் துருப்பிடித்து உடைந்தது!
    ஆனாலும் சண்டை நிற்கவில்லை!
    ஆதாரம் என்னவென
    இருவரும் யோசிக்கவில்லை
    இளமை எஃகுக் கோட்டை
    சட்டெனச் சரிந்தது!

    துரத்தும் சிந்தனை
    மரணமாய்ப் போனது
    உதிரும் முடியெல்லாம்
    வெள்ளையாய் ஆனது
    சுயம்
    இன்றும் சுழற்றிப் போட்ட
    பம்பரமாய்ப் போனது!
    காலமும் கரைந்து,
    கால்களும் தளர்ந்தன!

    காதலொன்று கனியவில்லை,
    கைப்பிடியும் இறுகவில்லை,
    நாம் அமர்ந்த மரம்,
    இன்றும் நிழல் தருகிறது!
    நீர் அருந்திய சுனையில்,
    இன்றும் நம் தடம் உண்டு!
    அன்றைய தென்றலே
    இன்றும் சுற்றிச் சுற்றி வருகின்றது
    மூளை இடுக்கில் அமர்ந்தன
    தெரியா நினைவுகள்!

    வண்டுகள்தாம் மறைந்துவிட்டன
    ஆனாலும் ரீங்காரம் இன்னும் செவிகளில்…..

    Share
  • ஓர் சமயம்

    -பாஸ்கர் சேஷாத்ரி

    ஓர் சமயம் நெளிவது கண்டு
    பெண்ணொன்று உதிக்கும்
    மறு முறை நீளக் கூந்தல் பரப்பின் 
    கடலலை புரளும்
    அழுது புரளும் மழலையாய் சடக்கெனப் புரியும்
    மலை உச்சி பனிபொழிவு புகை போல பரவும்
    எரிமலை கருவெள்ளை படராக திரியும் .
    வாசம் வந்து தாங்கும் வரை
    ஊதுபத்தி மறக்கும்!
    Share
  • அந்தந்த நேர ஞாயம்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    குளத்து பக்கமுள்ள
    அரச மரத்தின் கீழ் தான்
    என் காதலை சொன்னேன்!

    என்னையும் எறும்பையும்
    ஒரு சேர பார்த்து நகர்ந்தவள் தான் .
    முப்பது வருஷத்தில்
    மரம் மாறவில்லை.

    குளம் தான் வற்றி போயிருக்கிறது.
    பின்னாளில் நீர் வரலாம்
    இந்த பெருவானம் சாட்சி என்பது சமாதானம்!
    நானோ, அவளோ
    எதுவும் பொருட்டல்ல
    இருவரும் கரைந்து போவோம் ..

    மரம் வீழ்ந்து வீடு வரும்
    குளம் தேய்ந்து கோபுரம் வரும் .
    எல்லாம் காலத்திற்குள் அடக்கம்–
    நீரற்ற குளத்தில்
    பந்தாடி கொண்டிருக்கும் அவனுக்கு
    இது புரியாது .
    புரியவும் கூடாது….

    Share
  • எப்போதும் போல்….

    -சேஷாத்ரி பாஸ்கர்

    இன்றைய நாளிதழ் அபிட்சுரி வயிற்றை கலக்கவில்லை
    கடன்காரர்கள் யாரும் அழைப்பு மணி அமிழ்த்தவில்லை
    வெயில் இன்று கம்மி என்று யாரோ சொல்ல காதில் விழுந்தது
    விடுமுறையில் பசங்களும் பறவைகளும் போடும் கூச்சல் ரம்மியமாகத்தான் இருக்கின்றன
    எந்த மாத்திரையும் இப்போது தேவைப்படவில்லை
    இருக்கும் இருநூறில் உலகம் தெரிகிறது
    வேலைகள் யாவும் நானின்றி நடக்கின்றன
    கடக்கும் காலங்கள் கரையேறி சிரிக்கின்றன
    எப்போதும் போல் இரவு தூக்கத்திற்காக காத்திருக்கிறேன்!

    Share