அந்தந்த நேர ஞாயம்
-சேஷாத்ரி பாஸ்கர்
குளத்து பக்கமுள்ள
அரச மரத்தின் கீழ் தான்
என் காதலை சொன்னேன்!
என்னையும் எறும்பையும்
ஒரு சேர பார்த்து நகர்ந்தவள் தான் .
முப்பது வருஷத்தில்
மரம் மாறவில்லை.
குளம் தான் வற்றி போயிருக்கிறது.
பின்னாளில் நீர் வரலாம்
இந்த பெருவானம் சாட்சி என்பது சமாதானம்!
நானோ, அவளோ
எதுவும் பொருட்டல்ல
இருவரும் கரைந்து போவோம் ..
மரம் வீழ்ந்து வீடு வரும்
குளம் தேய்ந்து கோபுரம் வரும் .
எல்லாம் காலத்திற்குள் அடக்கம்–
நீரற்ற குளத்தில்
பந்தாடி கொண்டிருக்கும் அவனுக்கு
இது புரியாது .
புரியவும் கூடாது….