அழகான அபத்தங்கள்

Picture courtesy - star2.com
-சேஷாத்ரி பாஸ்கர்

இருவரும் வாள் வீச ஆரம்பித்து
முப்பது வருடங்கள் ஓடிவிட்டன!
உன் அகந்தை உனக்குக் கேடயம்,
என் பொய் எனக்கு!
ஓர் நாள்
என் வாளும் துருப்பிடித்து உடைந்தது!
ஆனாலும் சண்டை நிற்கவில்லை!
ஆதாரம் என்னவென
இருவரும் யோசிக்கவில்லை
இளமை எஃகுக் கோட்டை
சட்டெனச் சரிந்தது!
துரத்தும் சிந்தனை
மரணமாய்ப் போனது
உதிரும் முடியெல்லாம்
வெள்ளையாய் ஆனது
சுயம்
இன்றும் சுழற்றிப் போட்ட
பம்பரமாய்ப் போனது!
காலமும் கரைந்து,
கால்களும் தளர்ந்தன!
காதலொன்று கனியவில்லை,
கைப்பிடியும் இறுகவில்லை,
நாம் அமர்ந்த மரம்,
இன்றும் நிழல் தருகிறது!
நீர் அருந்திய சுனையில்,
இன்றும் நம் தடம் உண்டு!
அன்றைய தென்றலே
இன்றும் சுற்றிச் சுற்றி வருகின்றது
மூளை இடுக்கில் அமர்ந்தன
தெரியா நினைவுகள்!
வண்டுகள்தாம் மறைந்துவிட்டன
ஆனாலும் ரீங்காரம் இன்னும் செவிகளில்…..