Tag: திருச்சி  புலவர் இராமமூர்த்தி

  • சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

    சேக்கிழார் பாடல் நயம் – 110 (சிந்தை)

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

    பாடல் :

    சிந்தை  செய்வது  சிவன்கழ   லல்லதொன்   றில்லார்
    அந்தி   வண்ணர்தம்   மடியவர்க்   கமுதுசெய்  வித்துக்
    கந்தை   கீளுடை   கோவணம் கருத்தறிந் துதவி
    வந்த   செல்வத்தின்   வளத்தினால்  வரும்பயன்  கொள்வார்,

    அருஞ்சொற்பொருள்:

    சிந்தை = மனத்தால்நினைப்பது, அல்லது = அன்றிவேறொன்று, அந்தி வண்ணர் = செவ்வான நிறம்படைத்தசிவன், கந்தை = கிழிந்தஆடை, கீளுடை = கோவணம். வரும்பயன் = நற்பயன்.

    பொருள்:

    அமர்நீதி நாயனார், தமது மனத்தினுள் எஞ்ஞான்றும் வைத்துத் தியானிப்பது சிவபெருமான் திருவடியேயன்றி வேறொன்றையும்  எண்ணாதவர்; அந்தி மாலையின் செவ்வான வண்ணராகிய சிவபெருமானுக்கே உரியவர்களாம் அடியார்களைத் திருவமுது செய்வித்து, அவர்கள் கருத்தறிந்து அதற்கேற்பக் கந்தையுங் கீளும் உடையும் உதவி, (அதன் பயனாகத்) தம்பால் வந்த செல்வத்தினது வளங்களினாலே தாம் இவ்வுலகிற் பிறவி பெற்று வருதலாலுளதாகிய உறுதிப் பயனைக் கொள்வாராய்(விளங்கினார்)

    விளக்கவுரை:

    இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு படுத்திப் பொருள்கொள்ளத்தக்கன. சிந்தை செய்வது – எப்போதும் எண்ணுவது.

    கழல் அல்லதொன்றில்லார் – என்றதொடரில் அல்லது ஒன்றுஇல்லார்  என்ற இரண்டு எதிர்மறைகள் தேற்றப் பொருளில் உறுதி பெற்றதோர் உடன்பாட்டுப் பொருள் குறித்தன. “அதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு“  என்ற குறளில் அல்லது  இல்லை என்றாற்போற் கழலினையல்லாது வேறொன்றினையும் இல்லாதவர்.

    அந்தி வண்ணர் – என்றதொடர் அந்தி – மாலை. அது அக்காலத்தில்தோன்றும் செவ்வான வொளிக்காயிற்று. ஆகுபெயர். “செவ்வான வண்ணர்“ – தேவாரம். தீ என்பது தி எனக் குறுகிநின்ற தென்று கொண்டு அம் தீ அழகிய தீ – நிறம் என உரைத்தாலும்  பொருந்தும் “அழல் வண்ண வண்ணர்“, எரிபோன் மேனிப்பிரான்“, “செந்தீ வண்ணர்“, “தீவண்ணர் திறம்“ முதலிய திருவாக்குக்கள் காண்க. தீ என்பது தன்னுட்பட்ட பொருள்களை எரித்துத் தீயனபோக்கித் தூயதாக்கும். இறைவன்திறம் அத்தகையது!

    கந்தை – பொந்தை. நாலைந்து ஒன்றன்மேலொன்றாக வைத்து நூலிழைகளோட்டப்பட்டிருக்கும் போர்வையாடை. கீள் – அரைநாணுக்குப் பதிலாகத் துறவிகள் கட்டிக் கொள்வது என்பார் காஞ்சிபுரம் வித்வான் சபாபதி முதலியார். கந்தை – கிழிந்த ஆடை என்றலுமாம்.

    “கந்தை மிகையாங் கருத்தும்“

    “சாம்பற் பூச்சுங்கீ ளுடையுங் கொண்ட வுருவம்“  என்பன தேவாரப்பாடல்கள்  உடை – இடையில் உடுக்கும் துகில். ஐகாரம் – செயப்படுபொருளில் வந்த விகுதி; உடுக்கப்படுவது.

    கோவணம் – அற்றத்தை மறைக்கக் கீளுடன் இணைத்துக் கட்டுவது. இது நால்விரல் அகலத்தும், ஐவிரல் அகலத்தும் கொள்ளப்படும். “நால்விரற் கோவணவாடை, “ “ஐவிரற் கோவணம்“ என்பன தேவாரம். இச்சரிதம் கோவணத்தினின்று விளைவதாகலின், பலவகை உடைகளிலும், இதனைத் தேற்றம்பெற இறுதியில் வைத்தார்.

    கருத்தறிந்து உதவி – அடியார்கள் எதையும் பெற விரும்பமாட்டார் ஆதலால், அவர்களது கருத்தைத் தாமே அறிந்து என்க. ஆதலால் அவர்தம் தேவையறிந்து, அதனை நிறைவேற்றுவது சிவனடியார்களின் நற்பண்பாகும்.

    வந்த செல்வம்  என்ற தொடர், இருந்த செல்வங்களுடன் வாணிகத்தால் ஈட்டிய செல்வத்தையும் குறித்தது  “எந்நிலத்தினும் உள்ளன வருவளம்“ என்றபடி பல நிலங்களினின்றும் வந்த செல்வங்கள். முன்னம் இறைவனைப் பூசித்ததன் பயனாய்த் தம்மிடம் வந்த செல்வம் என்றலுமாம்.

    வளத்தினால் – அவற்றின் வாணிபத்தினால்  ஈட்டிய   வளங்களைக் கொண்டு.

    வரும்பயன் – இவ்வுலகில் வருதலால்  உளதாகிய உறுதிப்பயன். பயனை வளத்தினாற் கொள்வார் என்க, கொள்வார் – கொள்வாராகி – அடைவாராகி; முற்றெச்சம். இப்பாடலை, கொள்வார் – அமுது செய்வித்து – வணங்கிச் – சமைத்தார் எனக் கூட்டி முடிக்க.

    இப்பாடலில் அமர்நீதி நாயனார், அடியார்களுக்கு மிகச்சிறிய தேவையாகிய கீளுடை கொடுத்தார் என்பதிலிருந்து, அடியாரின் மிகப்பெரிய தேவைகளாகிய உணவையும், மற்றும் வாழ்க்கைக்குரிய  பெரும் பொருள்களையும் இறையருளால்  பெற்றுக் கொடுக்கும்  பண்புநலம்  பெற்றவர் என்பதும்,  கீளுடை  என்பது இறைவன் திருவருளின்  பெருமையைக்  குறிக்கும் என்பதும்,  அதன்  வலிமையும்  தகுதியும்  மிகவும்  பெரியவை என்பதும்   இறைவனைச் சார்ந்த எப்பொருளும்  பெருமை மிக்கது என்பதும்,  செல்வமும்  கொடையும்  இறைவன் திருவருளால்  அமைவதாகும்  என்பதும்  குறிக்கப் பெற்றன,

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 105 (வாரி)

    சேக்கிழார் பாடல் நயம் – 105 (வாரி)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    வாரி   சொரியும்  கடல்முத்தும்  வயல்மென்  கரும்பிற்  படுமுத்தும்
    வேரால் விளையும்  குளிர்முத்தும்  வேழ  மருப்பின்  ஒளிர்முத்தும்
    மூரல்  எனச்சொல்  வெண்முத்த  நகையார்  தெரிந்து  முறைகோக்கும்
    சேரர்  திருநாட்  டூர்களின்முன்   சிறந்த  மூதூர்  செங்குன்றூர்.

    பொருள் :

    கடலில் மிகவும்  எடுத்தெறியம்  வண்ணம்   விளைகின்ற ஒளி வீசும் முத்துக்களையும், வயலில்  விளைகின்ற கரும்பிலே படுகின்ற முத்துக்களையும், மூங்கில்களில் விளைகின்ற குளிர்ச்சியுடைய முத்துக்களையும், யானைத்  தந்தங்களில் களிற் பிறக்கும் விளக்கமுடைய முத்துக்களையும் இம்முத்துக்களே இவர்களது பல்வரிசைகள் என்று சொல்லத்தக்க வெண்முத்துப் போன்ற நகையினை யுடைய பெண்கள், வகை தெரிந்து முறைப்படக் கோக்கின்ற சிறப்புடைய, சேரர்களது திருநாட்டிலே உள்ள பல ஊர்களிலும் முன்வைத்து எண்ணும்படி சிறந்த பழமையான ஊரே    திருச்செங்குன்றூர்.

    விளக்கம்:

    முன்பாட்டிற் சொல்லிய கடல், நிலம் ,மலை  வளங்களிலே சிறந்த வளத்தினை அவ்வந்நிலங்களில் முறைப்பட  வைத்து வளப்படுத்திக் காட்டுகிற  அழகைக்  காண்க. முத்துக்கள் பற்பல இடங்களிற் பிறக்கு மென்பது நூல் துணிபு. முன்குறித்த இம் மூன்றிடங்களினும் வரும் ஏனைய வளங்கள் தவிர, முத்து என்பதொருவளனே இங்கு இம் மூன்றிடங்களினும் விளையவும்,  அவை ஊர்களின் வந்து உடன் பெருகிமல்கவும் உள்ள சிறப்புக் கூறுகின்றது காண்க. திரைசெய் கடலின் வளனுக்கு இங்கு வாரி சொரியும் கதிர்முத்தும் என்றும், திருந்து நிலனின் செழுவளனுக்கு வயல்மென் கரும்பிற் படுமுத்தும் என்றும், வரையின் வளனுக்கு வேரல் விளையுங் குளிர்முத்தும் வேழமருப்பின் ஒளிர்முத்தும் என்றும் முறையே வகுத்துக் காட்டினார்.

    முத்து என்றதொரு வளனை  மட்டுமே  காட்ட.  இதுபோலவே பிறவும் காண்க எனக் கூறியதாயிற்று. மலை நாடாதலின் அச்சிறப்பு நோக்கி அதற்கு வேரல்  முத்தும் வேழ முத்தும் என இரட்டிப்பு வளன் கூறினார். வேரல் – மூங்கில். வேழம் – யானை. இவ்விரண்டும் குறிஞ்சிநிலக் கருப்பொருள்கள். இவற்றின் வரும் முத்துக்கள் அப்பொருள்களில்  உண்டாகும்  வளன்களாம்.

    வாரி சொரியும் கதிர் முத்தும் – சொரியும் – மிகுதி காட்டிற்று. திருமறைக்காடு, கொற்கை முதலிய  முத்துக் குளிக்கும் கடற்றுறைகளில் அவ்வப்பருவக்  காலங்களில் இவை மிகுதியாய்ச் சொரியும் காட்சி காணத்தக்கது.

    “உப்பளத்தின், முன்றில் தோறுஞ் சிறுமடவார் முத்தங் கொழிக்கு மறைக்காட்டு“   முதலியவை காண்க.

    வயல் மென் கரும்பிற் படும் முத்து – திருந்து நிலனின் செழுவளன் என்றதற்கேற்ப, அவ்வாறு திருந்திய வயல்களில்  விளைவித்த கரும்பு திருந்த விளைந்து மனிதர் கைப்படும் முத்து. படுதல் – விளைதல், கைப்படுதல் என இருபொருளுங்கொள்ள நின்றது. வயலின் விளைகின்ற கரும்புகள்  அத்தனையிலும் காண்பரிதாகிக் குறித்த சிலவற்றில் மட்டும் விளைவதாம். அவைதானும் மனிதர் கைப்படுதல் மிக அரிதாம். ஆதலிற் படும் என்றார்.

    வேரல் விளையும் குளிர் முத்தும் வேழமருப்பின் ஒளிர் முத்தும் – ஒரோர் காலத்தன்றி இவை மனிதர் கையில் அங்கங்குக் கிடைப்பரிதாய் மலைகளில் உதிர்க்கப்பட்டு மழை வெள்ளத்தின் வழி, ஆறுகளில் அடித்துக்கொண்டுவரப் பெறும் நாட்டு வளன்கள். கதிர் முத்து, படு முத்து, குளிர் முத்து, ஒளிர் முத்து என்ற நால்வகை அடைமொழிகளின் வேறுபாடு அவ்வம் முத்துக்களுக்குரிய சிறப்பியல்புகள் குறித்து நின்றது. கடன் முத்தம் சலசம் எனப்படும். நீரிற் பிறப்பதால் நீரோட்டம் என்ற கதிர்ப் பரப்பு உடையது. இவை இப்பி சங்குகளிற் பிறப்பன. கரும்பிற்படும் முத்தம் இறுகிக் கடினமானது.

    “கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய வகம்பாயுங்\ கழுமலமே“ என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க. மூங்கின் முத்துக் குளிர்ந்த கிரணங்களும், யானை முத்துத் தொகுதியாய்க் கூடிய ஒளியும் உடையன என்பர். இவற்றின் விரிவுகள் திருவிளையாடற் புராணம் மாணிக்கம் விற்ற படலத்துள்ளும் பின்னும் இவைகட்குரிய கலைஞான நூல்களுள்ளும் கண்டு கொள்க.

    முன்பாட்டினும் இப்பாட்டினும் கடலினின்றும் நாடு சென்று, அங்கு நின்று மலையேறிச் செல்லும் பொருள் வைப்பு முறையும் காண்க. உயிர்களை, அவை வீழ்ந்து நின்ற கடலாழத்தினின்றும் ஏற்றி மலையுச்சியிற் சேர்த்தி வைக்கும் நாடு என்பது உட்குறிப்புப் போலும். இது பற்றியே வரும்பாட்டில்

    “உலகேறும் பெறுமை யுடையதுதான்“என்றதும் காண்க. “திருத்தொண்டத் தொகையாலுலகு விளங்க வரும், பேறு தனக்குக் காரணராம்“ (501) என முடித்துக் காட்டியபடி, இந்நாயனார் உலகிற்கு  உதவிய பேறு இந்நாட்டின் நன்மைக்குப் பொருத்தமுடைத்து எனப் பொருந்தக் காட்டிய குறிப்பும் காண்க. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனக் கூறும் வைப்பு முறையை  மாற்றி நெய்தலை முதலாக வைத்துக் கூறியதற்கும் இதுவே கருத்துப் போலும்.திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும் பிற இடங்களிலும் காண்க.  அன்றியும், இந்நாடு மழுவீசியதாற், கடலினின்றும் போந்துபெற்ற நாடாதலின் அப்பிறப்பிடத்தின் சிறப்பும் பண்பும் தோன்ற நெய்தலை முதலிற் கூறினார் என்றலுமாம். சிருட்டி முறையிலும் நீரினின்றே நிலனுண்டாவதா மென்பர்.

    தீதிலாத் திருத்தொண்டத் தொகை (35) என்ற இடத்துப்பார்க்க. வளன் பலவற்றுள்ளும் முத்துக்களை எடுத்துக் கூறிச் சிறப்புரைத்ததும் அக்குறிப்பினைப் பற்றியதேயாம். என்னை? முத்து – விடுபடுவது என்ற பொருள் தருதலானும், முத்தியும் அக்காரணம்பற்றியே அப்பெயர் பெறுதலானும், இங்கு இந்நாடு நெய்தல் நிலம், மருதநிலம், குறிஞ்சி நிலம்,   எங்கணும் உயிர்களுக்கு வீடுபேற்றினையே காட்டும் முத்திப்பொருள் தருவதாம் எனப் பொருத்திக் கூறியபடி. திருமணம் காண வந்தார்க்கெல்லாம் முத்திப் பேறளித்த எமது ஆளுடைய பிள்ளையாருக்குத் திருமண அணிகலன் முற்றும் முத்துக்களாற் செய்து குறியிட்டுக் காட்டிய ஆசிரியர் திறமுங் காண்க.. அச்சிறப்பினை இங்கு வைத்து இதன் உள்ளுறை

    சிறப்பையும் அணிநலனையுங் கண்டு களிக்க. உயிர்களின் நால்வகைத் தோற்றமும், அவை பெறும் நால்வகைப்பேறும் குறிக்க நால்வகை முத்துக் கூறினார் என்றலுமாம்,முல்லையும் உடன் கொள்ளப்படுமென்று முன்னர்க்குறித்தற் கேற்பக் குறிஞ்சிக்கு இரண்டு முத்துக்கள் கூறிய பொருத்தமுங்காண்க.

    மூரல் எனச்சொல் வெண்முத்த நகையார் – இம்முத்துக்கள் இவர்களின் மூரலேயாம் என்று உவமிக்கப் பெறுகின்ற பல்வரிசையினையுடைய பெண்கள். மூரல் – புன்முறுவல். பற்கள் முத்துப்போல்வன என்றுவமிப்பது வழக்கு. முத்துக்கள் பல்போல்வன என்ற  சிறப்பும் காண்க. நகை -ஆகுபெயராய்ப் பல்வரிசையை உணர்திற்று.

    அறிவில்லாத பொருள்கள் ஆகிய கடல், கரும்பு, மூங்கில், யானைக் கோடு இவை தாமும் அந்நாட்டில் முத்துடையனவாயின், அறிவும் உயிரும் உள்ள பெண்களும் முத்துடையவர்களேயாம் என்றார். அம்முத்துக்கள் எவையும் எமது மூரலுக்கு ஒப்பாகா என அவைகளைக் கண்டு அவர் நகைக்கின்றனர் என்ற நயமுங் காண்க.

    தெரிந்து முறைகோக்கும் – ஒளி – வடிவு – கனம் – கதிர் என்பனவற்றின் வேற்றுமை ஒற்றுமைகளைத் தெரிந்து எம்முறையில் முறைப்படுத்திக் கோத்தால் அழகும், அதிக மதிப்பும் பெறுமோ அம்முறையிற் கோக்கின்ற, இப்பாட்டாலே அந்நாட்டுக் கருப்பொருள் உரிப்பொருள்களின்சிறப்பும், நீர்வளம், நிலவளம், பொருள்வளம், மக்கட்சிறப்பு, தொழில் முதலிய பலவும் அழகுபெற ஆசிரியர் முறைகோத்து அமைத்தது கண்டு மகிழ்க.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 104 (விரைசெய்)

    சேக்கிழார் பாடல் நயம் – 104 (விரைசெய்)

    திருச்சி புலவர்  இராமமூர்த்தி

     7. விறன்மிண்ட நாயனார் புராணம்

    பாடல் 1

    விரைசெய்   நறும்பூந்  தொடை  யிதழி வேணி யார்தங் கழல்பரசிப்    
    பரசு    பெறுமா    தவமுனிவன்     பரசி     ராமன்     பெறுநாடு
    திரைசெய் கடலின் பெருவளனுந் திருந்து நிலனின் செழுவளனும்
    வரையின் வளனு முடன்பெருகி மல்கு நாடு மலைநாடு.

    பொருள் 

    வாசனையுடைய கொன்றை  மாலை தரித்த சடையினையுடைய சிவ பெருமானது திருவடிகளைப் பூசித்துப் பெருந்தவஞ் செய்து, பரசு பெற்ற காரணத்தால் பரசிராமன் எனப் பேர்பெற்ற முனிவன் பெற்ற நாடு;  அலைகளை யுடைய கடலிலே படும் பெருவளங்களும், திருந்து நிலங்களின் செழித்த வளங்களும், மலைகளினுடைய இனிய வளங்களும் ஒரு சேரப் பெருகி மிகுகின்ற நாடாகிய மலை நாடாகும். நெய்தல் ,மருதம், குறிஞ்சி ஆகிய மூவகை நிலவளமும் உடைய  நாடு!

    விளக்கம்

    விரைசெய் – சுற்றிலும் வாசங் கமழும்படி செய்கின்ற  இதனை நறும் விரை செய் இதழி என மாற்றிக் கூட்டுக. நறும் விரை – மிக்க மணம் – நன்மணம், நறும்-அழகிய என்றுரைப்பாரும், பிரணவம் போன்றிருத்தலால் மந்திரமணம் என்பாருமுண்டு. தொடை இதழி – தொடுத்ததுபோலச் சரமாகப் பூக்குங் கொன்றை. இதழித்தொடை – என மாற்றி மாலையாகத் தொடுத்த கொன்றை என்றுரைப்பினுமாம். இதழி வேணியார் – சிவபெருமான். வேணி – சடை. கொன்றையும் வேணியும் சிவபெருமானுக்கே சிறப்பாயுரிய அடையாளங்கள்.

    கழல்பரசிப் பரசுபெறும் மாதவ முனிவன் பரசிராமன் – பரசி – துதித்து – முனிவனது பேர்க்காரணமும், சரிதமும், அவன் பெருமையுங் குறித்தது.பரசு – மழுவாயுதம். பரசிராமன் – பரசும் இராமன் எனவும், பரசுபெற்ற இராமன் எனவும் இருவழியும் சரிதக்குறிப்புப் பெற நின்ற இப்பெயரின் அழகிய ஆட்சியைக் காண்க. தசரதராமனி னின்றும் வேறு பிரித்துணர இம்முனிவனைப் பரசி ராமன் என அடைகொடுத்தே வழங்குவர்.

    இவன் பரசுபெற்ற சரிதம்

    இம்முனிவன், தனது தந்தையாகிய சமதக்கினி முனிவனைக் கார்த்தவீரியன் கொன்றதற்காகப் பழிவாங்கும் பொருட்டு அவனையும் அவன் மரபினரையும் கொல்வேன் என்று சூள்கொண்டு, சிவபிரானைக் குறித்து மாதவஞ் செய்தான்; சிவனருளினாலே பரசாயுதம் பெற்றான்; அதன் துணையாலே, தான் எண்ணியபடியே அவனைக் கொன்று பழி வாங்கிய மன்னர்களின் இரத்தத்தைக் கொண்டு பிதிர்தருப்பணஞ் செய்து தன் மூதாதைகளை மகிழ்வித்தான் என்பது. இதன் விரிவு காஞ்சிப் புராணம் பரசிரா மீசப்படலத்திற்  காண்க.

    பெறு நாடு – இம்முனிவன் வருணனிடமிருந்து பெற்ற நாடு மலை நாடு. இதுவும் ஒரு சரிதங்குறித்தது. புராணங்களுட் காண்க. முன்கண்டவாறு பலரையுங் கொன்றதனால் முனிவனைப் பழிசூழ்ந்தது. அது நீங்குமாறு முனிவன் ஒரு நாடு கண்டு அதனை வேதியர்க்குத் தர எண்ணி மழுவைத் தென்றிசைக் கடலில் வீசினான். வீசவே வருணன் விலக இந்நாடு உண்டாயிற்று; அதனையே மறையவர்க்குத் தந்தனன் என்பது வரலாறு. முனிவன், அரசர்களைக் கொன்று தானே நாடாண்டிருந்து அந்நாடுகளைத் தானம்செய்து, பின் இந்நாடு கண்டு, அதனில் ஆட்சி புரிந்து வேதியர்க்கீந்தனன் என்பதும் வரலாறு.

    இவ்வரலாறுகளைப் புராணக்  கதை என்று இலேசாகக் கூறி ஒதுக்கு வாருமுண்டு. இராமாயணமும் பரசிராமனது சரிதமும் பெருமையும் கூறும்.

    “ஊழிக் கடை முடிவிற்றனி யுமைகேள்வனை யொப்ப“ என்பது முதலாகப் பலவாற்றானும் இராமாயணத்தில் பாராட்டப்பெற்றது காண்க.

    இம்மலை நாடு இன்றைக்கும் பரசிராம க்ஷேத்திரம் என வழங்கி வருவதும், அது (மழைவளம்), நீர்வளம், நில வளம், குடிவளம், மக்கள் ஒழுக்கம் முதலிய பலவாற்றானுஞ், சூழ உள்ள ஏனை நாடுகளினின்று வேறாகத் தனித்தன்மை பெற்று விளங்குவதும், அதனில் வேதியரும், அவரது வைதிக ஒழுக்கமும் நின்று நிலவித் தெளிவாக விளங்குவதும், பிறவும் ஊன்றிக் காண்போர் இச்சரித உண்மையை  உணர்ந்து கொள்வர்.

    பரசுபெறு மாதவ முனிவன் பரசிராமன் பெறு நாடு வேணியார் கழல் பரசிப் பரசு பெற்றான் அப்பரசு கொண்டு நாடு பெற்றான். ஆதலின் இன்ன வகையால் நாடு பெற்றான் எனக் குறியாது பெறுநாடு என வாளா கூறினார். அதனாற் பெறும் என வருவிக்க.

    திரை செய்கடலின் பெருவளன்- கடல்படு பொருள்களாகிய முத்து முதலிய மணிகளும், உப்பு முதலிய விளை பொருள்களும், மீன் முதலிய உணவுப்பண்டங்களும் பிறவுமாம். இவை மனிதர் விளைவிக்காது தாமாய்க் கடலிலும், கடற் புறத்தும் விளைந்து பெருந் தொகுதியாகப் பெற நிற்பது பற்றிப் பெருவளன் என்றார். திரை செய்கடல் – அலைகளுடைமை கடலுக்குச் சிறப்பிலக்கணமாம்.

    “திரைகடலோடியுந் திரவியந்தேடு“ என்றது நீதி நூல். “படுதிரைப்பரவை மீது படர் கலங் கொண்டு போகி“ என்றது காரைக்காலம்மையார் புராணம்.

    திருந்து நிலவின் செழுவளன் – இவை மருதநிலத்து விளைபொருள்களாகிய நெல் – வாழை – மா – பலா – தென்னை – முதலிய பெரும்பலன்களைக் குறித்தன. நிலச் செழிப்புடையதும், இப்பலன்கள் மிகுதியும் செழிப்புடன் பெருக உண்டாவதும் மலைநாடு என்பது இன்றைக்கும் தேற்றமாம். வானம் பிறங்கக் காலந் தவறாது பெய்ய, அதுகொண்டே விளைதரும் நாடு இந்நாடேயாம் எனின் அதுவுஞ்சரியே!, இங்கு மலைச்சரிவுகளிலும் நன்செய்விளைவு காண்பது வேறெங்கும் காணாத காட்சியாம். மனிதரால் வயல், ஏரி, வாய்க்கால், அணை முதலிய பலவகையானும் சாதனம்பெற்று அது காரணமாகப் பெறும் விளைவு போலல்லாது, இங்கு நிலமும் மழையும் தாமாகவே திருந்தப் பொருந்திச் செழித்த வளந்தருவன என்பார் திருந்து என்றும், செழு என்றும் கூறினார்.

    வரைஇன் வளம் – வரை – மலை. இன் – இனிய, மலைபடுபொருள்களாகிய அகில், சந்தனம், தேன், மணி முதலியன. இவை, மலைகளில் இயல்பின் உண்டாகி இனிமைதருவன ஆதலின் அடைமொழியில்லாது வாளா வரை என்றார். அதனோடு வரைக்குச் சாரியையுமாகிய வளத்திற்கு அடைமொழியுமாகிய இன் என்ற சொல் அமைத்த அழகு காண்க. நாடு, மலைநாடு, ஆதலின் அந்த முதன்மை கருதி வரைக்கு அடையில்லாது கூறினார் எனினுமாம்.

    உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு – மலைநாடு எனப் பேர் பெறுதலின் குறிஞ்சித் திணையின் பண்பு ஒன்றே இங்குப்பெருகும் எனவும், நானிலப் பகுதியில் ஏனைத் திணைகளின் பண்பு இன்றாம் எனவும் ஐயம் வருமாதலின், அதனை எதிர்நோக்கி இங்கு ஏனைத் திணைவளமும் பெருகி மிகும் என்றார். மலைகள் மிகுதலால், மிகுதிபற்றி மலைநாடு எனப் பேர் பெறினும், மருதம், நெய்தல் என்ற திணைப் பகுதி வளங்களுமுடைய தென்றார். வரையும் திருந்து நிலனும் பொருந்தக் கூறியதனால் இடைப்பட்ட முல்லையும் உடன்கொள்ளப் பெறுமென்பர்.

    திரைசெய்கடல் எனவும், வரையின் எனவும் கூறிய பகுதிகள்போலாது, திருந்து நிலனின் செழு – வளன் என்ற அடைச்சிறப்பால் இவற்றுள்ளே நிலத்து வளமே மிகுந்தது என்ற குறிப்புமாம். இது விரிபொழில்சூழ் என்ற முதனூற்பொருளையும்,

    “மனைக்கே புகநீடு தென்றல் வீசும் பொழில்“

    என்ற வகைநூற் கருத்தையும் விரித்ததாம். பின்னர்க் கூறும் நகரச் சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்ததுமாம். கடற்கரையுடையதாய், மலைகள் விரவிய செழிய நிலப்பரப்புடைய நாடு என அதன் அமைப்பும் குறித்தபடி காண்க. மனைகள்தோறும் பொழிலிருத்தலும் இந்நாட்டுக் காட்சியாம்.

    பெருகி மல்கும் – ஒவ்வொன்றும் தனித்தனிப் பெருகியும் ஒன்று சேர்ந்து மிக மல்கியும் உள்ளன. கழறிற்றறிவார் நாயனாரும் ஆளுடைய நம்பிகளும் இந்நாட்டினின்றபடி திருக்கயிலைக் கெழுந்தருளினார்களாதலானும், அவர்கள் அங்கெழுந்தருளியதை உபமன்னிய முனிவர் கண்டு முனிவர்களுக்குச் சொல்லிய வரலாற்றில் இப்புராணம் தொடங்குவ தாதலானும, இந்நாட்டைப் பற்றி முதன் முறையாகக் கூற வந்த இந்த இடத்துக் கேற்பச் சுருக்கியும் விரித்தும் நாட்டு வளங்கூறியபடி கண்டுகொள்க. மலை நாட்டுச் சிறப்பின் விரிவு கழறிற்றறிவார் நாயனார் புராணம். வெள்ளானைச் சருக்கம் முதலிய இடங்களிற் காண்க. இவ்வளங்கள் தனித்தனிப் பெருகும் அவ்வவ்விடங்களில் வைத்து இப்பாட்டாற் கூறிய ஆசிரியர், அவை உடன் பெருகி மல்கும் வகையை நகரச் சிறப்பு முடன்கொண்டு வைத்து வரும்பாட்டாற் கூறிய திறமும் காண்க.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 101 (சென்றடி)

    சேக்கிழார் பாடல் நயம் – 101 (சென்றடி)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    சென்றடி  வணங்கி  நின்று  ‘’செய்தவ  வேடங்   கொண்டு
    வென்றவற்   கிடையூ   றின்றி  விட்டனன் ‘’ என்று  கூற ,
    ‘’இன்றெனக்  கையன்  செய்த தியார்   செய்ய  வல்லர்’’ என்று
    நின்றவன்  தன்னை  நோக்கி   நிறைபெருங்   கருணை   கூர்ந்தார்!

    பொருள்

    சென்று அரசரை அடிவணங்கி நின்று கொண்டு, “செய்த தவவேடங் கொண்டதனாலே வென்றவனைக்  காப்பாற்றிக்   கட்டளைப் படி கொண்டுபோய் விட்டனன்“ என்று (தத்தன்) சொல்ல, “இன்று எனக்கு ஐயனாகிய நீ செய்ததுபோல யாவர் செய்யவல்லவர்?“ என்று (அவனுக்கு நன்றி கூறுமுகத்தால) நன்மொழி கூறி, (வணங்கி) நின்றானாகிய அவனை நோக்கி, நிறைந்த பெருங்கருணை கூர்ந்தார் (அரசர்).

    விளக்கம்

    செய்தவ வேடத்தான் , என்ற தொடர் , இயல்பாகத்  திருநீறு  அணியாமல் வஞ்சனையாகச்  செய்து கொண்ட  வேடம்  என்பதையும் , சிவபக்தி மேலிட்ட நாயனாரைப் பொய்தவ வேடத்தினை துணையாகப் போர்த்திக்கொண்டு வென்றவனாகத் தன்னை வியந்து கொண்டவன் முத்தனாதன். பசுத்தோல் போர்த்த  நரி  என்று கருதலாம்; செய்தவ வேடங்கொண்டு வென்றவன் என்ற தொடர், முத்தநாதன் படைகொண்டு  பகைத்திறத்தால்  வெல்ல இயலாமல் , சூழ்ச்சியால் வெல்ல எண்ணி, அவ்வாறே  தான்  நினைந்தசெயலைச்செய்து, வென்றுவிட்டதாகக் கருதிய அவன், உண்மையில்  அரசன்கட்டளையால் அறிந்துகொண்டதைத் தத்தன் இங்கே குறிப்பிட்டான் என்ற பொருள்கொண்டது. அதனால்  வேடத்தால் கருதியது முடித்த முத்தநாதனை  அவ்வேடத்தால் தப்பிப்போக உதவியதாகத் தத்தன் கருதியதால் அரசரிடமும் வென்றவன் என்ற சொல்லையே கூறினான் என்ற   பொருளையும்   குறித்தது.

    இன்று எனக்கு  ஐயன்  செய்தது  யார் செய்ய வல்லார் ?- என்ற தொடர்    

    இன்று – எனக்கு – ஐயன் – செய்தது யார் – செய வல்லார்?

    இதுபோழ்து அரசர் கூறிய இந்த நன்மொழியில் ஒவ்வொரு சொல்லும் மிகப்பொருத்தமும் பொருளாழமும் உடைமை குறித்தது!. இன்று எனக்கு – நான் வன்மையனாய் அரசியலில் வீற்றிருக்கும் போது அச்சம் – தன்னலம் முதலிய பல காரணங்களால் யாவரும் என் மொழிவழி நிற்பர்; நான் வலியிழந்து குருதி சோர வீழ்ந்து சிறிது போதில் ஆவியும் சோர நின்ற இன்று இச்சமயத்தில் என் மொழிவழி நிற்றல் அரிது; ஐயன் பகைவன் என்று வாளால் எறியலுற்ற உன் கருத்துக்கு மாறான இப்பணியை இன்று சொற்கடவாது இயற்றலினால் நீ பெரியனாயினை; ஐயன் – முன்னிலை குறித்த படர்க்கைச் சொல். பெருமையும் அருமையுங் குறித்தது; தாதனாகிய தத்தனை ஐயன் – என்றது அவன் தம்பாற் செய்து நிறை வேற்றின கடமையின் நன்மைக்காகவும், வேடம் போற்றிய முறையைக் கடைபோகக் காத்த வுதவிக்காகவும் நன்றி பாராட்டிய அருமைப்பாடும் குறித்தது; செய்தது – (சிலர் செய்வேன் என்று சொல்லுவர்; ஆயின் செய்யார்;) நீ சொல்லியபடியே செய்து முடித்தனை; யார்செய வல்லார்? என்ற வினா எதிர்மறை குறித்தது. நீயே செய்ய வல்லாய் என்ற உடன்பாட்டினும், வேறு எவரும் செய்கலார் எனும் எதிர்மறைக்கூற்று உறுதிப்பாடுடையது; யார் வல்லார்? என்ற வினா அதனினும் மிகவும் உறுதி உணர்த்தும் வழக்கு.

    இங்கே  ஷேக்ஸ்பியரின்,  ‘’அந்தோனியும்  கிளியோபாத்ராவும்’’ என்ற நாடகத்தில் போர்க்களத்தில்  தோற்று விடுவோம் என்ற எண்ணத்தில் அந்தோனி  தன் மெய்க்காவலன்  ஈராஸிடம், ‘’அந்நியர் கைவாளால்  சாவதை விடத்  தன்  நாட்டு வீரனால்  கொல்லப் படுவதே நன்று! ஆதலால் ஈராஸ்,   நீ    உடனே வாளை உருவி, என்னைக் கொன்று விடு!’’ என்று ஆணை இடுகிறான். தயங்கிய  ஈராஸ் ஒரு முடிவுடன்  தன்  வாளை  எடுத்து , ‘’என் அரசனின் இறப்பை எப்படித் தாங்குவேன்!’’ என்று மனத்துள் எண்ணி இதோ கொல்கிறேன்! என்று தன்னையே  மாய்த்துக் கொள்கிறான். அந்தோனி  அவன் வீழ்வதைக் கண்டு,  ‘’ஆ!  என்னினும் மும்மடங்கு நேர்மை கொண்ட வீரனே! நீ எனக்கு அறிவுறுத்தும் ஆசான் ஆகி விட்டாய்!’’  என்று போற்றுகிறான் !

    ‘’EROS

    Farewell, great chief. Shall I strike now?

    MARK ANTONY

    Now, Eros.

    EROS

    Why, there then: thus I do escape the sorrow

    Of Antony’s death.

    Kills himself

    MARK ANTONY

    Thrice-nobler than myself!
    Thou teachest me, O valiant Eros!’’

    என்று  போற்றும் உணர்ச்சிகரமான காட்சி,  நம்  நினைவுக்கு வருகிறது!

    என்று – என்று தம் திருவாக்கினாலே அருண்மொழி கூறி; நோக்கி – கண்ணினாலே அருட்பார்வை செய்து; நிறை பெருங் கருணை கூர்ந்தார் – தம்  திருவுள்ள நிறைந்த பெரிய தண்ணருளை அவனிடத்துச் செய்தார்.  இவைமுறையே மொழி, மெய், மனம் என்னும் மூன்று கரணங்களாலும் தத்தனை நாயனார் ஆசீர்வதித்து அருளிய தன்மை குறித்தன. தத்தன் பெற்றது பெரும் பேறன்றோ?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 89 (செல்வம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 89 (செல்வம்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    செல்வம்  மேவிய நாளில்  இச்செயல்  செய்வ  தன்றியும்  மெய்யினால்
    அல்லல்   நல்குரவு  ஆன போதிலும்  வல்லர் என்றுஅறி   விக்கவே
    மல்லல்   நீடிய   செல்வம்  மெல்ல   மறைந்து நாள்தொறும்  மாறிவந்து
    ஒல்லையில்வறு   மைப்ப   தம்புக   உன்னினார்  தில்லை  மன்னினார்!

    உரை :

    செல்வங்கள் மிகுந்திருக்கும் காலத்திலே இச்செய்கைகள் செய்வதன்றியும், மெய்யினாலே துன்பம் தரும் தரித்திரம் வந்த காலத்திலும் இச்செயல் செய்ய இவர் வல்லராவர் என்ற உண்மையை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டாகவே; செழித்து நீடிவந்த  அச்செல்வங்கள் மெல்ல மறைந்துபோய் நாடோறும் மாறி வந்து, பின்  விரைவிலே வறுமையாகிய நிலை வந்து சேருமாறு தில்லையில் மன்னிய இறைவனார் திருவுளஞ்செய்தனர்.

    விளக்கம்

    அடியார் பூசையின் நன்மையாற் செல்வம் வந்து பொருந்திய. அது காரணமாக (அருள் காரணமாக) வறுமை வந்து பொருந்திய காலத்திலும் செல்வமும் வறுமையும் திருவருளினாலே வந்ததென்துவன; இவற்றுள்  எது வந்தெய்தினும் தமது நிலையினின்றும் பிறழாது உண்மைக் கொள்கையில் நிற்றல் உணர்ந்தோர் கடன் என்பது நூல்   துணிபு.

    செல்வம் வந்த காலத்து அடியார் பூசை செய்வதற்கு  அடியார் திறத்து நிறைந்து திருந்திய சிந்தை வேண்டும்; நல்குரவு  வந்தபோது அது செய்தற்கு அதனினும் பெரியதோர் வன்மைவேண்டும் என்பார்,  ‘வல்லர்’ என்றார்.

    அடுத்து இப்பாடலில்  ‘’அறிவிக்கவே’’  என்ற சொல்லின் விளக்கம்

    அடியார்களுக்கு வரும் வறுமை முதலிய துன்பம்போலக் காண்பனவெல்லாம் இறைவனருளால் இவ்வாறு ஒவ்வொரு  நற்காரணம் பற்றி வருவனவேயன்றி வேறன்று.  பிராரத்த முதலியவற்றை அனுபவிப்பித்துக் கழிக்குமுகத்தானும் அல்லது அன்பினை வலிமையுடையதாக்கு முகத்தானும், இன்ன பிறவாற்றானும் வருவன. இவ்வாறு வரும் இன்னல் போன்ற  தோற்றங்களைக் கண்டு மயங்கி அடிமைத்திறத்திலே அபசாரப் படாதிருத்தல் அறிவோர் கடன் என்று குறிக்க இங்கு ‘’அறிவிக்கவே’’ என்றறிவித்தார் ஆசிரியர்.

    மல்லல் நீடிய  என்ற தொடர், வளம் பெருகி நிலைத்த என்ற பொருள் தந்தது.

    அடுத்து ‘மெல்ல மறைந்து’

    மெல்ல மறைந்து – நாடொறும் மாறி வந்து; மெல்ல மறைதலாவது மறைந்துபோம் தன்மை அறிய இயலாதபடி ஒவ்வொன்றாக மறைதல்; நாள்தோறும் மாறி – மறைந்த செல்வம் திரும்பிவருதல் என்பதின்றி நாள்தோறும் செல்வம் போய் வறுமையாய் மாற்றப்பெற்று என்பது குறித்தது. வந்து – அங்ஙனம் மாறுதல் தொடர்பாய் நிகழ்ந்தது என்றதாம்.

    ஒல்லையில் – விரைவிலே. இஃது மெல்ல என்பது முதலாகக் குறித்தவற்றோடு முரணாமோ வெனின் முரணாது; என்னை?; விரைவில் வருவது வறுமைப் பதமே யன்றி வறுமை யன்று; செல்வம்
    மறைந்த செயலுடனே சார்ந்து வறுமைப்பதமும் விரைவில் ஒட்டியே நிகழ இறைவன் நினைத்தமையே இங்குக் கூறினார். வறுமை வந்த நிலை வரும் பாட்டிற் கூறினார். வறுமைப்பதம் – செல்வஞ் சுருங்குநிலை.

    உன்னினார் தில்லை மன்னினார் – பிரபுவின் சிருட்டி காரியம் அவனது நினைப்பு யாத்திரையானே நிகழும் என்பது வேதம். ஆதலின், உன்னினார் என்றார். தில்லை மன்னினார் – அம்பலத்தில் அருளாகிய ஐந்தொழிற் கூத்தியற்றுபவர். மன்னினார் – நிலைத்துள்ளார். படைத்தல் முதல் அருளல் வரை இவ்வைந் தொழிலுமுடையானாதலின் முதலிற் செல்வம் மேவச் செய்த அவனே அச்செல்வத்தை மாறவும் செய்தனன் என்பது குறிப்பு.

    ஆரம் – என்பு புனைந்த – (442) என்ற இடத்தும் தழைத்தலாகிய ஆத்தியும் வறட்சியாகிய எலும்பும் உடன் கூறிய குறிப்பும் காண்க.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 84 (வானவர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 84 (வானவர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்ப
    ஞானமா முனிவர் போற்ற நலமிகு சிவலோ கத்தில்
    ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடனுறை பெருமை பெற்றார்
    ஏனைய சுற்றத் தாரும் வானிடை இன்பம் பெற்றார்

    சிவவேதியர் அழைத்தது பேரோசையாகக் கேட்டமையால் உடனே இயற்பகையார் திரும்பி வந்தார். ‘’யாரேனும் தடுத்தால் என் வாளுக்கு இரையாவார்’’ என்று கூறியபடியே ஓடி வந்தார். அங்கே தம்மை அருட்சக்திக் கோலமாக மாற்றிக் கொள்வதற்காகச் சிவவேதியர் மறைந்தார்; அங்கே  இயற்பகையார்  மனைவியார் நின்றார்.

    அப்போது இறைவன் வானில் இடப வாகனத்தின் மேல் தோன்றினார்; அவரைக் கண்ட அடியார் வீழ்ந்து வணங்கினார். அங்கேயே இறைவனைப் பலவாறு துதித்தார். இறைவன். சிவபிரான் ‘’அருள் விளையும் இந்த  உலகில் , இவ்வாறு செயற்கரிய அன்பைக் காட்டிய நீ, உன் பக்திக்குத் துணை புரிந்த மனைவியோடே எம்முடன் வருக!’’ என்று கூறி, இருவருக்கும் வீடு பேறளித்துத் தம் பொன்னம்பலத்தில் புகுந்தார் ஆதலால் இவ்வுலகமே இறைவன் திருவருளுக்கு ஏற்ற இடம் என்பதும் புலனாகின்றது.

    அப்போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்; வேதங்கள் வாழ்த்தின; ஞானியர்கள் வணங்கிப் போற்றினர்; எக்குறையும் இல்லாத தொண்டராகிய இயற்பகை நாயனார் தம்மைப் பிரியாத மனைவியாரோடும் இறைவனருகில் நீங்காது உறையும் பெருமை பெற்றார்; அப்போது அங்கே போரிட்டு மாண்ட  உறவினர்கள் அனைவரும் வீரசுவர்க்கம் அடைந்தனர்!

    இயற்பகையாரின் தொண்டினால் எல்லார்க்கும் விளைந்த நன்மைகள் இப்பாடலில் கூறப் பெற்றன. அவ்வப்போது  தவறுகள் புரியும் தேவர்கள் இறைவனருள்  பெறப்  பூமாரி பொழிந்தனர்!  அதற்கும் மேலாக, என்றும் ஒரே நிலையில் துதித்துப் பிறர்க்கும் உரைக்கும் வேதங்கள் சொல்வோர் இல்லாமலேயே வாழ்த்தின; இவ்வேதவொலி சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளின் போதுதான்  நிகழும், இதனை

    ‘’ ஓதும் மறையோர் பிறிது  உரைத்திடினும்  ஓவா
    வேதமொழி  யால் ஒலி விளங்கி  எழும்  எங்கும்‘’ என்றும்,

    ‘’எங்கணும் இயற்றுபவர்  இன்றியும் இயம்பும்
    மங்கல   முழக்கொலி  மலிந்த மறுகெல்லாம்’’  என்றும்,

    திருஞான சம்பந்தர் தோன்றிய  பெருநிகழ்வின் போது  நிகழ்ந்ததாக  இக்கவிஞரே  கூறுவார்.

    அடுத்து  இப்பாட்டில், ‘’ஊனமில் தொண்டர்’’ என்ற தொடர், உலகில் உயிருணர்வு (பசுபோதம்) மட்டுமே பெற்ற தொண்டர்களை விட மேலான இறையுணர்வு (பதி போதம்) பெற்றவர் இயற்பகையார் என்பதைக் குறித்தது. இதனைச்  சிவஞான போதம்  ஒன்பதாம்  சூத்திரம்.

    ‘’ ஊனக்கண் பாசம்  உணராப் பதியை
    ஞானக்  கண்ணினில்  சிந்தை நாடி‘’ என்று கூறும்.

    அடுத்து, ‘’நலமிகு  சிவலோகத்தில்‘’ என்ற தொடர் முத்திக்கும் மேற்பட்ட அபரமுத்தித்  தானம் என்ற சுத்த புவனமாகிய சிவலோகத்தில், அதாவது நலமே விளையும் பூமியில் என்ற பொருளை விளக்குகிறது.

    அடுத்து ‘’கும்பிட்டு உடனுறை   இன்பம் பெற்றார்’’ என்ற தொடரால், ‘’உணர்வுகள் ஒன்றி வணங்கி, இறைவனுடன் அத்துவிதமாக நிற்கும் பேரின்பம்  பெற்றார்’’   என்பது புலனாகும். அப்பேரின்பம் ,

    “பேரா வொழியாப் பிரிவில்லா மறவா நினையா வளவிலா மாளா வின்பம் ‘’

    என்று திருவாசகத்தில் கூறப் பெற்றது.

    அடுத்து  ‘’ஏனைய  சுற்றத்தாரம் வானிடை  இன்பம் பெற்றார்‘’ என்ற அடி, அவர்கள் அடைந்த வீர சுவர்க்க இன்பத்தைக் குறித்தது. அவர்களும்  உலகியல்  அறத்தை மேற்கொண்டமையாலும், இயற்பகையார், அவர் மனைவியார் மற்றும் தமக்கும்   குலப்பழி  வாராமல்  காக்க  மிகுந்த பாசம் கொண்டு விளங்கியமையாலும், அதற்காகப் போரிட்டு உயிரை இழக்கவும் சித்தமாக இருந்தமையாலும், நாயனாரின் கரங்களாலேயே தண்டிக்கப் பெற்றமையாலும் வானிடை இன்பம் பெற்றார்.

    ஆகவே இப்பாடல், இயற்பகை நாயனாரின் செயலும், தொடர்பும் யாருக்கெல்லாம், எவ்வாறெல்லாம் இறைவன் திருவருளை வழங்கின என்பதை  விளக்குகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 72 (தன்னை)

    சேக்கிழார் பாடல் நயம் – 72 (தன்னை)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
    துன்னிய யாவையும் தூய்மை செய்வது
    பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
    இன்ன தன்மையது இது வாங்கு நீ என

    திருநீலகண்டராகிய குயவரிடம் இறைவன் ஒரு சிவயோகியாக வந்தார். அவரை அடியார் வரவேற்று இல்லத்தில் உபசரித்தார். அவரிடம் ‘’யாது காரியமாக வந்தீர்கள்! உங்களுக்கு யான் செய்யத்தக்கது யாது?’’ என்று கேட்டார். சிவயோகியார் தாம் கொண்டு வந்த பிச்சைப் பாத்திரமாகிய திருவோட்டைக்  கொடுத்து, ‘’நம்பியே,  நின்பால் தந்த இவ்வோட்டை உரியவாறு பாதுகாத்து யாம் வேண்டும்போது திருப்பித் தருக’’ என்றார்.

    அப்போது தாம் தந்த திருவோட்டின் சிறப்பைச்  சிவயோகியார் கூறினார். இறைவன் தம் திருக்கரத்தில் ஏந்தியிருந்த ஓடு, பிரமனின் ஐந்தாம் தலையைக்  கிள்ளி எடுத்த போது, அவர் கரத்தில் ஒட்டிக் கொண்ட ஓடு என்று புராணம் கூறுகிறது. இறைவனைப் போலத் தாமும் ஐந்து தலையைக் கொண்டவன் ஆகவே சிவனுக்கு இணையானவன் என்று தற்பெருமை கொண்ட பிரமனின் ஐந்தாம் சிரத்தை, இறைவன் கொய்தார். அப்போது அவர் கரத்தில் அத்தலை திருவோடாக விளங்கியது. படைப்புக் கடவுளின் பெருமை மிக்க சிரம் தனிச் சிறப்புக் கொண்டது. அதனை ஏந்திய சிவபெருமானின் திருவுருவம் கண்டியூரிலும், ஈர ஓடு எனப் பெற்ற  ஈரோட்டிலும் கோயில் கொண்டது. கபாலத்தைக் கையில் ஏந்திய சிவபிரான் திருமயிலைக் கபாலீச்சுரத்திலும்  கோயில் கொண்டுள்ளார். அந்தத்  திருவோட்டையே   திருநீல கண்டரிடம்  இறைவன் கொடுத்தார். அப்போது அத்திருவோட்டின் சிறப்பை, ‘’தனக்கு ஒப்பாக வேறொன்றுமில்லாதது; தனதிடத்தினுள்ளே பொருந்திய பொருள்கள்எல்லாவற்றையும் சுத்தமாக்குவது; பொன்னையும் மணியையும்விட மிகக் காக்க வேண்டுவது; இத்தகைய தன்மையுடையது; இதனை வாங்குவாயாக!’’  என்று கூறினார்.

    தனக்குவமை  இல்லாதானாகிய சிவபிரானைச் சேர்ந்த பொருள்கள் யாவும் இணையற்றவை! ஆதலால் அத்திருவோடும் இணையற்றது, இதனைச் சேக்கிழார், ‘’தன்னை  ஒப்பு அரியது!’’ என்று பாடுகிறார். இந்தத் திருவோட்டின் உட்பரப்பு இறைவனின்  அதிகார எல்லையாகி எங்கும் விரிந்தது. தலம் – இப்பாத்திரத்தில் பலியை இடும் இயைபு உள்ள பரப்பு. அதிகார எல்லை என்பர் இக்காலத்தார். அந்தப் பரப்பு இவ்வுலகமேயன்றி எல்லா வுலகமுஞ் சென்று விரிந்தது என்பது இதன் தத்துவமாம். ‘’இதன் தலத்துள் துன்னிய எதனையும் தூய்மை செய்வது‘’ என்று அதனைப் புகழ்ந்தார். துன்னிய பொருள்கள் தூய்மையற்றவையேயாயினும் அவற்றை யெல்லாம் சுத்தமாக்குவது. யாவையும் – எல்லாவற்றையும். உயிர்கள் தமது கன்மங்களை எல்லாம் தன்வசமாக ஒப்புவித்துத் தனக்கே அர்ப்பணம் செய்தபோது இறைவன் அவற்றைப் புனிதமாக்கி அவ்வுயிர்களை ஈடேற்றுவன் என்பது சாத்திரம். இதனையே திருக்கோயில் தோறும் உள்ள பலிபீடங்கள் உணர்த்துகின்றன. உயிர்கள் இறைவன் பரமாகச் செய்யும் எல்லாம் ஏற்றுக்கொள்ளும் தன்மையே அவனது பலிப்பாத்திரம் எனப்படும். ஆகவே உயிர்களின் பாசமலங்களைப் போக்கி அவற்றைத் தூய்மை செய்வதே பலிபீடம்! அப்பலிகளை ஈர்க்கும் பாத்திரமே திருவோடு.

    இதனைப் பொன்னையும் மணியையும் பார்க்கிலும் அதிகமாகப் பாராட்டிக் காக்க வேண்டும்.“ ஓடும் செம்பொனு மொக்கவே நோக்குவார்“களும், “புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு மணியோடுஞ் சொல்லோடும் வேறுபாடிலாநிலைமை துணிந்திருந்த நல்லோர்“களும் ஆகிய அடியார்கள் விரும்பிக் கையிற் கொள்வது இவ்வோடேயாம்.

    “ஓடும் கவந்தியுமே உறவு என்றிட்டு உள் கசிந்து
    தேடும் பொருளும் சிவன் கழலே என தெளிந்து”

    என்ற திருவாசகமும்  காண்க. போற்றுதலை  வழிபடுதல் எனக் கொண்டு பொன்னும் மணியும் கொண்டு இதனைப் பூசிக்க வேண்டுவது என்றுரைப்பாருமுண்டு. இதனைக் கேட்ட நாயனார் இவ்வோட்டினைப் பெற்று “மனையில் ஓர் மருங்கு காப்புறும் எல்லையில் வைத்து“ வந்தனர் (376) என்றதால், போற்றல் என்பதற்குக் காப்பாற்றல் என்றுபொருள் கொள்ளுதலே சிறந்ததாம். துன்னிய  எதனையும் தூய்மை செய்வது; ஆதலின் ஒப்பரியது; ஆதலின் போற்ற வேண்டுவது எனக் காரண காரியமாகத் தொடர்ந்து பொருள் கொள்க. இவையனைத்தையும் தொகுத்து, ‘’இன்ன தன்மையது! இது வாங்குக‘’ என்று திருவோட்டை வழங்கினார். இங்கே வாங்கி வைத்துத் திருப்பித் தருக  என்று முன்பு சொன்னதைச் சுருக்கி.’’வாங்குக’’ என்று சொன்னதன் விரிவு, உன்னால் வாங்க மட்டுமே முடியும், மீண்டும் திருப்பித்தர இயலாது என்ற எதிர்கால நிகழ்ச்சியைப் புலப்படுத்துகிறது!

    “பிச்சைய தேற்றான் பிரமன் றலைதன்னிற்
    பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்யப்
    பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
    பிச்சைய தேற்றான் பிரமன்பர மாகவே“

    என்ற திருமந்திரச் செய்யுள் திருவோட்டின் சிறப்பை உணர்த்துகிறது. திருவோடு என்ற சொல்லுக்கு  வேறு பொருளும் உண்டு. நம் உடம்பு ஒரு குடம் போன்றது என்று சித்தர்பாடல் கூறுகிறது.

    ‘’நந்தவ  னத்திலோர்  ஆண்டி – அவன்
     நாலாறு  மாதமாய்க்  குயவனை வேண்டி!
    கொண்டுவந்   தானொரு  தோண்டி – அதைக்
    கூத்தாடிக்  கூத்தாடிப்  போட்டுடைத்   தாண்டி!’’

    என்ற இந்தப் பாடல் நாலாறு (அதாவது 4+6 = 10)  மாதத்தில் பிரமனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி, அதாவது உடம்பைப் பெற்றான் மனிதன்! ஆனால் அதைப் பல்வேறு கூத்துக்கள் ஆடி இறுதியில் போட்டு உடைத்தான்! வீணான ஆட்டம் ஆடி. உயிருடன் உள்ள  உடம்பை இழந்தான். இதிலும் ‘ஓடு’ மதிப்பு மிக்கது என்பதைப் புரிந்து கொள்கிறோம்!

    இறைவனே தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது; பொன்னினும்  பொருளினும் உயர்ந்தது; போற்றப் பட வேண்டியது. இவ்வாறு இறைவன் சிவயோகியாய் வந்து கூறிய பின்னரும் அதனைத் தொலைத்தார்   என்பது,  இப்பாடல் காட்டும் பொருள்.நம் வாழ்க்கையில் பொருள் மிகுந்து விட்டால், தேவையான நற்பொருளை அதாவது வாழ்க்கையைத் திருநீலகண்டர் போல்  தொலைத்து விடுவோம் என்று பாடிய சேக்கிழாரின் பாடல் நயம் போற்றுதற்குரியது!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 66 (கற்பனை)

    சேக்கிழார் பா நயம் – 66 (கற்பனை)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி,
    அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம்
    சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று,
    பொற்பு உடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி! போற்றி்

    திருவாரூர் இறைவனின் திருவருளால் சுந்தரேசர் பாடிய திருத்தொண்டத் தொகையின் முதலடியில் போற்றப்பெற்ற தில்லைவாழ் அந்தணர் புராணத்தின் தொடக்கத்தில் தில்லை யம்பலவாணரின் சிறப்புக்களை சேக்கிழார் பாடினார். முதற்பாடல் இறைவனின் நிட்களத் திருமேனியாகும். இனி அடுத்தபாடலில் இறைவனின் சகளத் திருமேனியின் சிறப்பையும், திருவடிப்  பெருமையையும் கூறுகிறார்.

    இப்பாடலின் சொற்பொருள்

    கற்பனை என்பதே சற்று சொல்லைக் கடந்த நிலையாகும். அத்தகைய கற்பனைகளைப் பற்பலவாறு  செய்தாலும், அவற்றுக்கு  முதற்காரணமாகிய மாயையைக்  கடந்த வடிவமும், ஒளியும் கலந்த உருவமுடையவரே இறைவன். அந்த ஒளியும் தானே தோன்றிய ஒளியாகும். இதனைக் ‘’கற்பனை கடந்த சோதி‘’ என்ற தொடரால் சேக்கிழார் குறிக்கிறார். தேவாரத்தில் இதனை,

    ‘’இப்படியன் இந்நிறத்தன்  இவ்வண்ணத்தன்
    இவனிறைவன்  என்றெழுதிக்   காட்டொணாதே‘’  என்று அப்பர் பெருமானும் ,

    ‘’துணையென்று  நான்தொழப்  பட்டஒண்  சுடரை,
    முத்தியும்  ஞானமும்  வானவர் அறியா
    முறைமுறை பலபல  நெறிகளும் காட்டிக்
    கற்பனை கற்பித்த  கடவுளை ‘’ என்று சுந்தரரும் பாடினர். மேலும் திருமூலர் திருமந்திரத்தில் ,

    ‘’கதுமெனப்  பாழைக்  கடந்தந்தக் கற்பனை
    உதறிய  பாழில்  ஒடுங்குகின்றேனே!’’ என்று பாடுகின்றார். உமாபதி சிவாச்சாரியார்,

    ‘’ஆரணங்கள்   முடிந்த பதத்து ஆனந்த  ஒளியுலகில்
    காரணம்  கற்பனை கடந்த கருணைத்திரு  உருவாகி‘’ என்றுபாடுகிறார். உயிர்கள் பால் வைத்த கருணையால், அக்கருணையையே திருவுருவம் ஆக்கிக் கொண்டு, தோன்றுகிறார். இதனை சிவஞான சித்தியார்,

    உருமேனி, அருமேனி, அருவுருவான திருமேனி ஆகிய மூன்றும், ‘’நந்தம்கருமே னி கழிக்க வந்த கருணையின் வடிவுதானே’’ என்று கூறும்.

    இறைவனின் அழகிய கோலம் இன்னதென்று உணரவும் கூறவும் இயலாத இன்பம் தரும்  திருவுருவம் ஆகும். இதனைத் திருவிசைப்பா ,

    பத்தியாய்  உணர்வோர்  அருளை வாய்மடுத்துப்
    பருகுதோறு  அமுதம் ஒத்து அவர்க்கே
    சித்தியா   விருக்கும்  தேவர்காள் இவர்தம்
    திருவுரு  இருந்தவா  பாரீர்!’’ என்று போற்றுகிறது. மேலும் திருவுந்தியார் என்ற சாத்திரம் ,

    “அகளமாய் யாரும் அறிவறிது  அப்பொருள்
    சகளமாய்  வந்ததென்று உந்தீ,  பற!
    தானாகத் தந்தது என்று  உந்தீ, பற! இப்பாடலில் களம் உருவத்தைக் குறித்தது. அகளம் என்பது உருவமற்றதைக் குறித்தது.    சகளம்  என்பது தெளிவான உருவத்தைக் குறித்தது.

    இறைவன் நடனமிடும் இடம் வேதத்தின் சிரமாகிய உபநிடதம் ஆகும்; அதனையே ஞானாகாசம் என்பர். சொல்லக் கடந்து நிற்கும் ‘’சிற்பரவியோமம்‘’ என்ற வாக்கு அதனை உணர்த்தும். இதுவே சிற்றம்பலம்!

    மேலும் மேற்பாட்டில் நடம் போற்றி என்று திருவடியைப்  போற்றியவர்  இப்பாடலில்  பூங்கழலைப் போற்றுகிறார். இக்கழலைச் சிவஞானபோதம், ‘’அயரா அன்பின் அரன்கழல் செலுமே’’ என்று போற்றுகிறது. ஆகவே இப்பாடல்களில் போற்றப்பெற்ற இறைவன் தில்லை மூவாயிரவருள் முதன்மை பெற்ற ஒருவர் என்னும் உண்மை கூறப் பெறுகிறது! தம்மைத் தில்லை வாழ் அந்தணருள்  முதன்மையானவர் என்று கருத வைத்து, அவர்தம் அடியார்க்கும் அடியவராக  சுந்தர மூர்த்தி சுவாமிகளைக் கருதச் செய்தார்.

    Share
  • சேக்கிழார் பா  நயம் -50

    சேக்கிழார் பா  நயம் -50

    -திருச்சி   புலவர்  இராமமூர்த்தி

    தம் முன்னே தோன்றிய இவர் யார்? என்று சுந்தரர் அருகில் இருந்தாரை வினவினார். ‘’அவர் பரவை என்னும் நங்கை! வானுலகில் காணப்படும் தேவர்களுக்கும்  சேர்வதற்கு அரியார்!’  என  விடைகூறினர் . அதாவது, பெரிய தேவர் சபையும்  விரும்புகின்ற இடையை உடைய திலோத்தமை, உருப்பசி, ரம்பை, மேனகை ஆகிய பேரழகியரும்  விரும்பி  வணங்கும்  தெய்வம்    போன்றவள்!’’ இதனை,

    “பேர்பரவை!    பெரும்பரவை     விரும்பல்கு     லார்பரவை!”என்ற அடி விளக்குகிறது அதாவது- ‘’பெரு உம்பர் அவை விரும்பும் அல்குலார் பரவு  ஐ’’   என்பதாம். மேலே  தொங்கிய மூக்கின்  அணியாகிய  முத்துப் புல்லாக்கின் கீழே  இதழ்களின்  இடையில் திகழும்  அழகிய  பல் வரிசையோ, முல்லை அரும்புகளே!

    என்பதை ‘‘அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை’’ என்ற தொடர்  குறிக்கிறது. மற்றும் இலக்குமியும்  விரும்பும் பேரழகுடையார் – அதாவது  சீர் = திருமகளும் , பரவு = விரும்பும்  ஐ = அழகு   ஆயினாள் என்ற விளக்கத்தை  உடைய ‘’சீர் பரவு  ஐ  ஆயினாள்‘’  அதாவது சீர்பரவை   ஆயினாள்! என்ற தொடர்  குறிக்கிறது.  இவர் உருவம் இனிய , மென்மையான  சாயலைப்  பெற்றுள்ளது.  கண்டாரால் விரும்பப்படும்  காட்சியழகின்  இடையில் அகப்பட்ட என்  விருப்பமானது  எழுகடல்களைப்   போன்று பெருகுகின்றது. இதனை, திருவுருவு இன்  மென் சாயல்  ஏர்பரவை   இடைப்பட்ட என் ஆசை  எழு பரவை  என்ற தொடர்  குறிக்கின்றது. இனி  முழுப்பாடலையும்  பயில்வோம் .

    “பேர்பரவை   பெண்மையினிற்   பெரும்ரவை  விரும்பல்குல்
    ஆர்பரவை  அணிதிகழும்  மணிமுறுவல்     அரும்பரவை
    சீர்பரவை     ஆயினாள்     திருவுருவின்      மென்சாயல்
    ஏர்பரவை    என்னாசை     இடைப்பட்ட      எழுபரவை”

    இதற்கு  மேலும் சில விளக்கங்கள்  உள்ளன. அவை:

    – பெண்மையிற் சிறந்தாரை நங்கை என்பது மரபு..    நங்கை பரவை  என்பதே இவரை அழைத்த மரபு போலும். தஞ்சை இராசராசச் சக்கரவர்த்தியார் தமது இராசராசேச்சுரத்திலே தாபித்துள்ள இவரது செப்புப் படிமத்தில் “நங்கை பரவை“ என்று பெயர்  தீட்டப்பெற்றிருத்தலும் அறிக.

    -யார்? என்று கேட்டார்க்குப் பேரோடு, தன்மையும் உரைத்தல் மரபாதலின் அரியார் என்று அறிவித்தனர் என்க. உம்பர் தரத்தும் யார்க்கும் சேர்வரியார் என்க. மக்கள் தேவர் நரகர் என்ற மூவகை உயர்திணையிலும் தேவர் உயர்ந்தோர்; அவர் தரத்திலே உள்ளார்க்கும் என உம்மை உயர்வு சிறப்பு. உயர்திணை எல்லாம் அடங்கும்பொருட்டுத் தேவரே – அன்றி அவர் தரத்தாரே -யாவரே யாயினும் என்பார்,  தரத்தும் ஆர்க்கும் என்றார். உம்மை தொக்கது.உம்பரின் மேலாயினவர் விட்டுணுமூர்த்தி; அவருக்குக் கிருட்டிணாவதாரத்திற் சிவதீக்கை செய்து அவர்முடிமேல் அடிவைத்தவர் உபமன்னிய முனிவர்; அவரால் துதிக்கப் பெறுபவர் நம்பிகள். இவர்

    அவர்க்கே உரியவர் அல்லது உம்பர் தரத்தார்க்கும் சேர்வரியார் என்றபடி

    தலைவனுக்குத் தலைவியினது பெயர் கேட்டலும் அதில் ஓர் விருப்பம் நிகழ்வதும்  ஓர்  அகப்பொருள் உண்மை. பெயர் வினாதல் என்ற துறையில் வரும் பாட்டுக்களைக் காண்க. அவ்வாறே பரவையார் என்ற பெயர் கேட்டலும் நம்பிகள் நாவலர் காவலராதலின் அப்பெயரிற் சென்ற விருப்பத்தை இவ்வாறு அறிவிக்கின்றார். ஒரு பாட்டில் எழுபரவை அடக்கிய நாவலர் என்று சேக்கிழார் பெருமானை மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

    “முறையினொரு சிறுதூக்கின்  எழுபரவை  யும்புக
    முடித்துற   நிறுத்தா   னிவன்
    மொழியெங்கள்   தம்பிரான் வல்லபம்  உணர்ந்திலைகொல்“

    என்பது  அவரியற்றிய  சேக்கிழார் பெருமான் பிள்ளைத் தமிழ். இதில் உள்ள பரவை எழு என்பதை ஆசிரியர் “என் ஆசை எழுபரவை“ என்று முடித்து இரட்டுற மொழிந்து காட்டியதும் ஒரு அழகாம்!. கடல்கள் ஏழென்பர்.

    இவள் பேர் பரவை. இவளது பெண்மைக் குணங்களைப் பற்றிப் பேசின் இவர் திலோத்தமை முதலிய தேவப் பெண்களும் தொழக்கூடிய தெய்வம்போன்றார். முல்லையரும்புபோன்ற முறுவலுடையார். இலக்குமி விரும்பும் அழகும் பெற்றார். இவரது சாயலாகிய பரப்பிலே பட்ட எனது ஆசை எழுகடலினும் பெரிதாய் வளர்கின்றது என்பது திரண்ட பொருள்.

    விரும்பும் நிதம்பம் பொருந்திய வளர்ச்சியிலே பரம்பின் அரசு போலும் என்று கூறுதலும் ஒன்று. ‘அல்குல் அரவுலகை வென்ற துணிவு கொண்டார்ப்ப’ என்று முன்னர்க் கூறியதும் (284) காண்க. அரவுலகு என்பது வடிவத்திற்கும், உடன்பட்டார் படும் விடத்தன்மைக்கும் ஆம். இது வெளிக் காணப்படா உறுப்பாயினும் பெண்மைக்குரிய அவயமாய் நோய்செய்தல் பொருந்திய சிறப்பு இயல்பு பற்றியே எடுத்துக் கூறப்படுவது தமிழ்க் கவியியல்களில் ஒன்று.

    அணிதிகழும்  – அணியிற்றிகழ் என ஐந்தனுருபு விரித்துரைக்கப்பட்டது. முத்து மூக்கணியிற் றொங்குவதன் அழகைச் சிவப்பிரகாசர்,

    “தன்னை நிந்தைசெய் வெண்ணகை  மேற்பழி சார
     மன்னி   யங்கது   நிகரற   வாழ்மனை    வாய்தன்
    முன்னி றந்திடு வேனென ஞான்றுகொள் முறைமை          யென்ன வெண்மணி மூக்கணி யொருத்திநின் றிட்டாள்“                          

    என்று பிரபுலிங்கலீலையில், ‘’பல்லின்  வெண்மைக்கும்  வடிவிற்கும்  நிகராக வில்லையே  என்ற ஏக்கத்தால்  மூக்கின் கீழே  தூக்கில்  தொங்கியது  மூக்கணி  என்ற அழகிய கற்பனையின் மூலம் அறிவித்திருத்தல் காண்க. அணி திகழும் – அழகு விளங்கும் என்றலுமாம்.

    பரவையார் உருத்திர கணிகையராய் வீதி விடங்கப் பெருமானது திருவோலக்கத்தில் பாடல் ஆடல்களுக்கே உரியவர் என்பது பின்னர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 271-வது பாட்டில் காண்க. வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகராசர் தேவருலகில் அரசு வீற்றிருந்தார். இவர்பால் அங்கு ஆடற்குரிய பெண்கள் தேவமாதர்கள். அம்மையாரது சேடியராய் அருளின்வழி இங்கு அவதரித்து இவர்முன் ஆடல் புரியும் பரவையாரை அவர்கள் பரவுதல் இயல்பு என்பார் உம்பர் அவை பரவு ஐ (ஐ – தெய்வம்) என்றார். இங்குத் தேவர்கள் வந்து தொழக் காத்திருப்பதும் காண்க.

    இவ்வாறு  சீர்தோறும்  புதிய புதிய  பொருள்களைக்    காட்டும்  சேக்கிழாரின்  கவிதைத் திறம்  பயின்று  போற்றுதற்கு  உரியதாகும்.

    Share
  • சேக்கிழார்  பா நயம் -49

    சேக்கிழார்  பா நயம் -49

    திருச்சி   புலவர்  இராமமூர்த்தி

    திருவாரூரில்  திருக்கோயில்  வழிபாட்டுக்குத்  தோழியருடன் சென்ற  பரவை  நாச்சியாரைச்   சுந்தரர் கண்டார். பரவை நாச்சியாரின் அழகிய கோலம்  சுந்தரர் உள்ளத்தை மிகவும் ஈர்த்தது. புற்றிடங்  கொண்டாரை வழிபட்டு  மீளும் பொழுது, அவ்வழிபாட்டின்   உடனடிப்  பயனாய்த்  தம்முன்தோன்றிய பேரழகு வாய்ந்த பரவையாரைக் கண்டுமகிழ்ந்தார். அவரைப் போலவே பரவையாரும் கண்டார் , இந்நிகழ்ச்சி,  காண்டல்  என்ற  அகப்பொருள்   துறையைச்  சார்ந்த நிகழ்ச்சியாகும். சுந்தரரின் ஒளிபொருந்திய தோற்றம் பரவையாரை  வியக்கச் செய்தது . இவர்கள்   இருவருக்கும்   இடையில் காதலுணர்வைத்  தூண்டக் காமக்  கடவுளாகிய மன்மதன் நின்றான், என்கிறார்     சேக்கிழார்!

    இறைவன்  திருவருளை   மட்டுமே பெரிதும்   விழைந்து   வழிபட்ட பரவையார் கண்முன்னே  சுந்தரர்   தோன்றிய   காட்சி கண்கொள்ளாத  ஒளியாக விளங்கிப் பரவையாரின்  இயல்பான  அடக்கத்தை மீறி,   அச்சம்,  மடம் , நாணம் , பயிர்ப்பு  என்ற நால்வகை குணங்களையும்   அடக்கி விட்டன!

    தன்முன்னே வியப்பளிக்கும் பேரொளியுடன் தோன்றிய சுந்தரரின்  தோற்றத்தைக்   கண்ட   பரவையார்,  இவர்   செவ்வேள் எனப்படும்முருகனோ? என்று  ஐயுற்றாள்!  பின்னர், தனக்கு   நிகரில்லாத மன்மதவேளோ?  என்றும், வாடாமாலை  அணிந்த விஞ்சையருள் ஒருவனோ? என்றும், மின்னு   செஞ்சடைப்  பெருமானின் அருள்பெற்றவனோ? என்றும்  கருதினாள். இவ்வா றெல்லாம்  என் மனத்தை  ஊசலிடவைத்த இவர்யாரோ?  என நினைத்தாள்

    பரவையாரின்  மனவோட்டங்களை நமக்கு அறிவிக்கும் சேக்கிழார் பாடல்,

    “முன்னேவந்   தெதிர்தோன்றும்  முருகனோ?   பெருகொளியால்
    தன்னேரில்   மாரனோ?  தார்மார்பின்   விஞ்சையனோ?
    மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?
    என்னேஎன்    மனந்திரித்த  இவர்யாரோ ?  எனநினைத்தார்!

    என்பதாகும்.  அவ்வாறு அவர்  எண்ணிய போது,  முதலில் ஒளிபொருந்திய முருகப்பிரானோ, என்றுஎண்ணினாள். முன்பே இருவரை மணந்துகொண்ட முருகப் பிரான்  தன்    பெண்மை நலம் கவரக் காரணம்   இல்லையே!  ஆதலால் , தம்மைக்கவரும்  பொருட்டுத் தனக்கு நிகரில்லாத மன்மதனே  வந்தானோ? என்று எண்ணினாள்.

    இந்திர ஞாலம்போல வந்தருளி, யெவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்துத், தானேயாகிய தயாபர னெம்மிறை“ என்பது விஞ்சையின் இயல்பு. உருத்திரகணிகையராய் அடியவர்க்கு ஆளாம் தன்மையராயினும் இதுவரை எந்த அடியார்பாலும் எய்தாத வேட்கை விளைவித்தமையின் இந்தச்

    சைவவிடங்கு விஞ்சையனோ? என்ற குறிப்பாம். மேலே கண்டவாற்றால் முருகனுமல்லன், மாரனுமல்லன் ; என்னவே இவன் வேறு விஞ்சை வல்லவனோ  என்று அடுத்து நினைந்தார். இதனைத்

    ‘’தன்னேரில்   மாரனோ ?  தார்மார்பின்   விஞ்சையனோ?”

    என்ற அடி   புலப்படுத்துகிறது.

    முன்பே  திருக்கயிலையில்  தான் கொண்ட  பத்தித்திறன்  நினைவுக்கு  வந்தது. அத்தகைய  பக்தியுடைய  என்னையும்  கவர்ந்த இவன் உண்மையில்  மிகுந்த சிவனருள்  பெற்றவன்தானோ   என எண்ணினாள்.  அதனால் என்னை இந்நிலை செய்தலின் அவனருள் பெற்றவனே யாதல்வேண்டும்!  இதனை

    “ மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?”

    என்ற அடி  விளக்குகின்றது.

    இதுவரை திரியாது, நாண் முதலியவற்றை மண் கொள்ளாவகை காத்து, இறைவனிடத்தே செலுத்திய எனது மனத்தையும் கவர்ந்ததே!  இது என்னே ?’’  என்கிறாள் .

    “முருகன் இச்செயலுக் கிசையான். மாரனும் விஞ்சையனுமோ அடியாரிடத்துச் செயல் செய வலியிலர். ஆதலின் அருள் பெற்றுடையார் ஒருவரேயாதல்வேண்டும். ஆயின் இவர் இன்னார் என்ற

    துணிவு பெறமாட்டாமையின் யாரோ? என்றார். ஒரு நாயகனைப் பலர் மணத்தல் இந்நாட்டுத் தொன்றுதொட்டு வந்த நெறியாதலின இத்தலைவி, முன்னே ஒவ்வொரு தலைவியரை மணந்த முருகன் மாரன் முதலிய ஒருவரோ என நினைத்தல் இழுக்காகாது.” என்பது சி.கே . எஸ்  கருத்து

    ‘கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று நம்பிகள் நினைத்தமைக்கேற்பவே, பூத்தல் ஒழிந்து பாழ்பட்டுக் கிடந்த அதனைப் பூக்கச்செய்தவன் விண் குடியேற்றிய முருகனே யாதலால் முருகனோ என்ற நினைவு பரவையார் மனத்து எதிர் உருவமாய்க் கிளம்பியது. “காமன் பெருவாழ்வு“ எனும்  நம்பிகளின் நினைவு மாரனைப் பரவையார் மனத்திற் புகுத்தியது. நம்பிகள் “பொற்பின் புண்ணியமோ“ என்றமை (சிற்றின்பத்தைப் பேரின்பமாக்கும் புண்ணியமுடையார் விஞ்சையராதலின்) விஞ்சையனோ என்ற கருத்தை விளைத்தது.சிவனருளே என்று நம்பிகள் முடித்தமையே அவர் மெய்யருள் பெற்றுடையவனோ எனுந் தன்மையைப் பரவையார் உள்ளப் பளிங்கிற் பதித்தது. இந்நினைவுகள் முன் இல்லாது, இப்போது பளிங்கிற் பவளம் பதித்ததுபோல மனத்திற் பதித்தமையால் மனந்திரித்த எனப் பெற்றதாம்.அவர் அறியேன் என்றபடி இவர் யாரோ என்றார். ஆயினும் அருள் பெற்றவனே என்ற துணிபுபற்றி இதனை ஐயத்தின் முடிபாக இறுதியிற் குறித்தார்.” என்பதும் அவர்   உரைத்திறன் ஆகும்.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 39

    சேக்கிழார் பா நயம் – 39

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    தில்லையின் எல்லையிலே நின்ற சுந்தரர் , திருக்கோயிலுக்குள் நுழையத் தலைப்பட்டார்.அங்கேவந்தவருக்குஅன்னம்பாலிப்பும்,குடிக்கத்தக்க குளிர்நீரும் வழங்கும் சாலைகள் மிகுந்த, உலகின் அழகெல்லாம் திரண்ட திருவீதிக்குள் புகுந்தார். அங்கே திருமால் ,அயன். மறறும்தேவர்கள், முனிவர்கள் திரண்டு நெருங்கி உட்புக முயன்றனர். அவர்களுள் பக்தி வயப்பட்ட, தகுந்த சிவனடியார் மட்டுமே அனுமதிக்கப்பெற்றார்கள். கணநாதர் போன்றோர் வணங்கிஉள்ளேபுகுந்தனர்! பொன்னால் வேயப்பட்ட ஒளிமிகுந்த பேரம்பலத்தைக் கடந்து , சிற்றம்பலத்தின் அணுக்கன் திருவாயிலை அடைந்தார். அவ்வாயில் அடியார்கள் சிந்தையில் வேதத்தின் பெருமையைப் அவர்கள் கூறும் பிரணவத்தால் உணர்த்தி நிற்கிறது.

    சிந்தை என்பதற்குச் சீவனென்றும், சீவனுக்குச் சிந்தை என்றும் வந்திடும். சிந்தை – சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவு என்க. அவ்வறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். அவ்வானந்தக் கூத்தை அவ்வியல்பிற் கும்பிட்டுச் சிவபோதத்தாலே அருளிய தமிழ் மறைகளின் முத லிடை கடைகளிலே பிரண வத்தினுட்பொருளாகிய ‘திருச்சிற்றம்பலம்’ என்பதைக் கூறித் தொடங்குதலும் முடித்தலும் அமைவுடைத்து என்பது பெரியோர் துணிபு. திருச்சிற்றம்பலம் – சிறுமை – அம்பலம் என்ற இருசொற் புணர்ந்த தொடர்மொழி. சிறுமை – இங்கு நுண்மை – (சூக்குமம்). சிவசத்தியை நோக்க மற்ற இருவகை மாயா காரியப் பொருளுந் தூலப் பொருள்களேயாம். தடையிலா ஞானமாகிய சிவசத்தி சொரூபமே அம்பலமாகலின் அது சிற்றம்பலம் எனப்பெறும். இச்சிறுமையை வடநூலார் தகரம் என்ப. – திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம்பலம்முன் அணுக்கன் திருவாயில் புகுந்தார் என்பதாம். சுழுமுனையைக் கடந்து அதன்மேல் விளங்குவது சிவஞான ஒளியாதலின் மேருவலங் கொண்டு சிற்றம்பல வாயில் புகுந்தார் என்று கூறியவாறு.

    மறையின் முதல் – நடு – கடைகளில் அலர்ந்த – திருச்சிற்றம்பலம் பிரணவ உருவமாய் விளங்குதலாலும், அது சமட்டி – சேர்ந்தநிலை – ஓம், வியட்டி – பிரிந்தநிலை – அ – உ – ம் என்ற இரண்டு நிலையிலும் வேதங்களில் முதல் நடு முடிவுகளில் அமைந்து உச்சரிக்கப்படுதலாலும் இவ்வாறு கூறினார். வியட்டி நிலையில் – அகாரம் இருக்கு வேதத்தின் முதலிலும் (அக்நி மீளே), உகாரம் எசுர்வேதத்தின் நடுவிலும் (யோநிஸ் சமுத்திரோபிந்து), மகாரம் சாமவேதத்தின் முடிபிலும்….(சமாநம்வரம்) விளங்குவதென்று பெரியோர் கூறுவர். தகராகாயத்தைக் குறிக்கும் தகரத்தோடு ஓ என்ற உயிர் கூடிய தோ – (தோடு உடைய) என்று தொடங்கிய தெய்வத்தமிழ்த் திருமுறை, உலகெலாம் என்றதில் ம் என்றதுடன் முடிபு பெற்றிருத்தலும் இங்கு உணரத்தக்கது.

    திருவணுக்கள் திருவாயில் – இறைவன் ஆடுமிடத்திற் கருகில் உள்ளது. இதற்கப்புறம் வேறு வாயில்கள் இல்லை. அகத்தும் புறத்தும் இறைவனைக் காணக் கடந்துசெல்ல வேண்டிய எண்ணிறந்த வாயில்களிலே உள்ளிருந்து கணக்கிடும்போது முதற் றிருவாயில். அணுக்கத் தொண்டர்களே உட்புகக் கூடியதாதலின் இப்பெயர் பெற்ற தென்றலுமாம். இது அம்பலஞ் சூழ்ந்த மாளிகைப் பத்தியிற் கிழக்குத் திருவாயில் போலும். என்றெல்லாம் உரைகாரர்கள் விளக்குவர்!
    இப்பாடலில் சிவபெருமான் ஆடும் திருக்கூத்தின் வகைகளை முதலில் விளக்குகிறார்!

    உயிர்களை ஆட்டுவிக்கும் இறைவன் தாமே ஆடுகின்றார்! அவ்வாறு ஆடும் ஆட்டம் சில வகைப்படும். மாலும் அயனும் தேட அண்ணாமலையாய் ஆடிய ஆட்டம், அண்டத்தில் வையகம் பொலிய ஆடும்ஆட்டம், சிலம்பொலிக்க ஆடும்ஆட்டம், தில்லைமன்றினுள்ளே ஆடிய ஆட்டம், சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். இத்திருக்கூத்து இதயத்துள்நிகழும்! இதனைத் திருவள்ளுவர், ‘’மலர்மிசை ஏகினான் ‘’ என்ற திருக்குறளில்கூறுவார். பரிமேலழகர், ‘அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்தவடிவோடு விரைந்து சேறலின்’ என்ற உரை கூறியது காண்க, அப்பரடிகள்,

    நாடி நாரண னான்முக னென்றிவர்,
    தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ,
    மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்,
    தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே“

    என்று பிரித்துக் காட்டுவார். திருச்சிற்றம்பலம் இதயத் தானமாவதும் உணர்க.. இதனையே சைவசித்தாந்தம் ஞான நாடகம், ஊனநாடகம் என்றுகூறும் .

    ‘’வையகம் பொலிய’’ என்றதொடர் இன்பத் துன்பங்களாகிய போகங்களை மட்டும் நுகர்தற்கிடமாகிய சுவர்க்க , நரக உலகங்கள் போலாது, சிவகருமஞ் செய்து முத்தி யடைதற்குரிய இடமாகிய வையகம் பொலிய எனப்பொருள் படும் . தேவர்கள் இதைக்காணவேபூமியில் பிறக்க விரும்புவர் இதனை,

    ‘’புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
    போக்குகின்றோம் அவமே, இந்தப்பூமி
    சிவன் உய்யக் கொள்கின்றவாறு’’

    என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்!

    இனி, ‘’மறைச் சிலம்பு அரற்ற ‘’ என்ற தொடரால், உலகத்தோற்றத்துக்கு உரிய காரணத்தைச் சேக்கிழார் கூறுகிறார்.

    – நாதமாகிய சிலம்பு ஒலிக்க. வேதம் நாத சொரூபமானது. அதுவே இறைவன் காற்சிலம்பாம். நாதத்திலிருந்து விருத்தியாய் வேதம் தோன்றும். குடிலையின் வழியே புவனங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றிய புவனங்களிற் பிறந்த உயிர்களுக்கு வேதமே வழிகாட்டும். இறைவன் வேதாந்தத்து விளங்குபவன்; ஆதலின் அவன் காலில் நிற்பது நாதமாகிய சிலம்பு என்க.’’ என்பது உரை.

    வையகம் பொலிய ஆடும் இத்தகைய நடனத்தை உள்ளே அகக்கண்களாலும் கண்டுணர்ந்த சிவனடியாராகிய சுந்தரர் , முதலில் கைகளைக் கூப்பி அஞ்சலிசெய்தார். அடுத்து புறக்கண்களால் அம்பலத்தில் ஆடும்நடனத்தைக் கண்டுமகிழ்ந்தார். பின்னர் அகக்கரணங்களால் அன்பு கலந்து கண்டுணர்ந்தார்! இவ்வாறு கைகளைக் கூப்பி, அகக்கண்ணால் கண்டு, அந்தக்கரணங்களில் கலந்து நிற்கக் கண்டார். இந்த மூவகைகளில் கண்டுமகிழ்ந்த காட்சிகளுள் , எதுமுன், எதுபின் எனப்புலப் படாதவாறு ஒன்றினுள் ஓன்று கலந்து விட்டனவாம்! இதனை,

    ‘’ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
    யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
    கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
    கரணமோ கலந்த அன்பு’’

    என்கிறார். ‘’முன் குவித்த கைகளோ – கண்களோ – அந்தக்கரணமோ அன்பு உந்த – அன்பு தூண்டுதலினாலே மனம் முதலிய உட்கரணங்கள் தொழில் செய்யும் – பின்னர் அவைஏவுதலினால் கண் காணும் – கண்டதனால் அதன்பின் கைகுவியும்; ஆனால் இவை இங்கே தவயோக முயற்சியி னாலே ஒருங்கே நிகழ்ந்தமையாலே, அம்முறையிற் கூறாது மாற்றிக் கூறினார். ஒன்றன்பின் ஒன்றாய்ப் பின்னே நிகழ வேண்டியவை அவ்வாறன்றி முன்னே நிகழ்ந்தன என்பார் முன் என்றார். நிருவி கற்பம் சவிகற்பம் என்ற காட்சி யிரண்டனுள்ளே முதலிற் கண்டபோது பொது நோக்காகிய நிருவிகற்பக் காட்சி நிகழும். பின் மனதோடு கலந்து உற்றறிதல் உண்டாகும். அதன்பின் இன்னது செய்தல் வேண்டுமென்பது தோன்றும். பின்னரே அச்செயல் நிகழும். இந்த நான்கு வகை நிகழ்ச்சிகளும் கர்ப்பூரத்திலே தீப்பற்றுதல்போல் தீவிர தர பத்தி யுடையார்க்கு எது முன்னர் நிகழ்ந்ததென்றறியமுடியாதபடி விரைவிலே நிகழும்’’ என்பார் உரையாசிரியர். – உட்கரணங்கள் நான்கு. சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பன. உயிர் – சித்தமாய் நின்று இது யாதாகற்பாலது எனச் சிந்திக்கும்; அதன்பின் மனமாய் நின்று இஃது இன்னதாகற்பாலது எனப் பற்றும்; அதன்பின் அகங்காரம் இது ஆமோ? அன்றோ? இதனை இன்னதெனத் தெளிவேன் யானெனத் தெளிவு பிறவாதெழும்; அதன் பின்னர்ப் புத்தியாய் நின்று இஃது இன்னதெனத் தெளியும்; இவ்வகை வெவ்வேறாய் முற்றுப்பெறாத செய்கையுடையன வல்லாதபடி முன்பயிற்சியாலே ஒருங்கே முற்றிய செய்கையுடையன ஆயின என்க

    அத்தகைய கலந்த அன்புடன் சுந்தரர் தில்லையம்பலத்தின் அணுக்கன் திருவாயிலில் புகுந்தார்! இதனையே ,

    வையகம் பொலிய மறைச்சிலம் பரற்ற
    மன்றுளே மாலயன் தேட
    ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
    யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
    கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
    கரணமோ கலந்தவன் பந்தச்
    செய்தவப் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
    திருக்களிற் றுப்படி மருங்கு

    என்று பாடுகிறார் . இப்பாடலில்உள்ள திருக்களிற்றுப்படி என்பது – யானைத் துதிக்கை வடிவுடையனவாகிய திரணைகள் இரண்டுபுறமும் அமைந்துள்ள ஐந்து படிகள். இவ்வைந்தையும் ஏறிக் கடந்து சென்றால் அருட் பெருங் கூத்தனைக் காணலாம். களிற்றுக்கை சூழ்ந்தமையால் இது இப்பெயர்பெற்றது. களிற்றுக்கை பிரணவத்தையும், ஐந்து படிகள் திருவைந்தெழுத்தையும் குறிக்கும். ஐந்தெழுத்தால் அறியப்பெறுபவன் அவை குறிக்கும் ஐந்தொழில் ஆனந்தக் கூத்தனாதலை அவற்றின்மேற் காணும் இறைவனது திருவுருவம் இயம்பும். இக் களிற்றுக்கை எடுத்து நடராசர் திருப்பாதத்தே வைத்தமையால் காரணப் பேர் பெற்றது திருக்களிற்றுப்படியார் என்ற சைவசித்தாந்த சாத்திரம்..

    Share
  • சேக்கிழார் பா நயம் – 37

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
    ————————————————————-

    திருவதிகை வீரட்டானத்தில் முதிய அந்தணராக வந்த இறைவன் திருவடி சூட்டுவது போல் செய்த திருவிளையாடலால், சுந்தரருக்குத் தில்லைசென்று கூத்தனின் தூக்கிய திருவடியை வணங்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது அதனால் தில்லை நோக்கி சுந்தரர் விரைந்தார். தில்லையின் எல்லையிலே பத்துக் கல் தொலைவில் கடல் உள்ளது. கடல் கரைமீறிச் செல்ல முயல்வதால் அதன் அலைகள் கரையை மோதுகின்றன. விசேடத் திருநாள்களில் சிவபெருமான் கடற்கரைத் தீர்த்தம் நோக்கி எழுந்தருள்வார் ; அப்போதெல்லாம் அவரைச் சூழ்ந்து அடியார்கள் செல்வர். அக்கடல் அலைகள் இறைவன் திருவடியைத் தொட்டும் , அடியார்களின் திருமேனியைச் சூழ்ந்து வழிபடும். அவ்வப் போது, வழிபடும் பேறு மட்டும் போதாது எனப்பொங்கி எழும் அலைகள், மணலூடே சென்று தில்லைத் திருக்கோயிலைச் சூழ்ந்து அகழியாகி நாள்தோறும் எப்போதும் வணங்கும் ஆவலில் அலைமோதும்!

    தில்லையில் தூக்கிய பாதத்தில் அணிந்த சிலம்பு நடஞ்செய்தலால் ஓசை செய்யும்!. இவ்வோசையே சிருட்டித் தொடக்கம்! நாதத்தாற் சிருட்டி தொடங்குதலின் அது சிலம்பொலி எனப்பெறும், நாதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயை தனக்குத்தாரகமாகிய அத்தன் தாள்களாகிய ஞானக்கிரியா சத்திகளினடங்கிநின்று தன் காரியமாகிய நாதத்தைத் தோற்றுவிக்கும். ஆதலின் சுத்தமாயை சிலம்பும், நாதம் சிலம்பொலியுமாமென வழங்கப்பெறும். நல் வினையொலி என்பதும் அது. “திருச்சிலம்போசை யொலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற“ (திருவுந்தியார்.)

    இவ்வாறு கடல்நீர் அகழியாகித் தில்லைக் கோயிலைச் சூழ்ந்து முழுவதும் தழுவி அணைக்கும் அழகைச் சேக்கிழார் கற்பனை செய்கிறார்.

    தில்லை மன்றுள் நடனமாடும் பிரானின் திருவடி மலர்கள், திருவருள் தேனைப் பிலிற்றுகின்றன! அகழியைச் சூழ்ந்து மலர்ந்த தாழம்பூக்களில் தேனுண்ட வண்டுகள் , திருவடி மலரின் தேனை உண்டு வாழ்க்கைப் பயனைத் துய்த்து மகிழ முயன்று எழுந்து பறக்கின்றன! அவை முரலும் ஓசை வேதங்களை இசைப்பது போல் உள்ளதாம்! இதனைச் சேக்கிழார்,

    ‘’ மன்றுளாடும் மதுவின் நசையாலே மறைச்சுரும்பறை புறத்தின் மருங்கே ‘’

    என்றுபாடுகின்றார்

    இறைவன் திருக்கோயில் மதில் குன்று போல உயர்ந்து விளங்குகின்றது. அதனைக் கைலை மலை என எண்ணிக் கடல்நீர் அகழியாகி அரவணைக் கின்றதாம்! சிவபிரானாகிய அருள்மணி, மதிலாகிய மலையுச்சியில் ஒளி வீசுகின்றதாம்! இதனைச் சேக்கிழார் , ‘’ குன்றுபோலும் மணி மாமதில் சூழும் குண்டகழி !’’ என்று குறிப்பிடுகிறார்.

    அந்த அகழியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களில் மொய்த்த வண்டுகள் , தேனின் வண்ணத்தில் இருந்தன! அவை, கரையில் வளர்ந்திருக்கும் தாழம் பூக்களில் புகுந்து திளைக்கின்றன! உடனே அவை முழுநீறு பூசிய கோலம் கொள்கின்றன! அவை அதனால் தில்லை நாதன் திருவடியை என்றும் எண்ணிச் செல்லும் சிவனடியார்களாக மாறி, மேனியில் திருநீறு சண்ணித்த வேடம் கொண்டு சென்று சென்று ஐந்தெழுத்தை ஒதுவதுபோல் முரல்கின்றன!

    “தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே
    நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும்
    அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங்
    குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ“

    என்று ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் உபதேசித்தருளிய சுரும்பரின் வழிவழி மரபில் வந்தவை இந்த வண்டுகள். ஆதலின் உள்ளே மன்றினில் நிறைந்த மதுவை அளவுபடாது உண்ணும் மறைச்சுரும்பர் எடுத்துப்பாட, அதுபோலவே புறத்தே உள்ள நாமும் செய்வோம் என்று கமலவண்டு அச்செயலுக்குத் தக்க வேடமாகிய நீறுபூண்டு அடியார் கோலத்துடன் சென்று சென்று முரல்கின்றன என்பது குறிப்பு.

    இதனை அங்கு வரும் சுந்தரர் காணுகின்றார்! அதனால் அவர் சிந்தை சிவபிரான் மேல் பேரன்பு கொண்டு பக்தியில் திளைக்கின்றது. அவ்வாறே அவர் தில்லை நோக்கிச் சென்றார்! இதனைச் சேக்கிழார்,

    ‘’கமல வண்டு, அலர் கைதைத்
    துன்று நீறுபுனை மேனிய வாகித்
    தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
    சென்று சென்றுமுரல் கின்றனகண்டு
    சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார்.’’

    என்று பாடுகின்றார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் ,

    “மன்றுளாடு மதுவின் நசையாலே
    மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
    குன்று போலுமணி மாமதில் சூழுங்
    குண்ட கழிக்கமல வண்டலர் கைதைத்
    துன்று நீறுபுனை மேனிய வாகித்
    தூய நீறு புனை தொண்டர்கள் என்னச்
    சென்று சென்று முரல்கின்றன கண்டு
    சிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்!”

    இப்பாடலில் ‘துன்றுநீறு’ என்பது வண்டுகள் பரபரப்புடன் தாழம்பூவில்புகுந்து முழுவதும் மூழ்கியதால் உண்டான வேடத்தைக் குறிக்கும். அடுத்து ‘தூய நீறு’ என்ற தொடர் சிவனடியார்கள் உளத்தூய்மையுடன் பக்தி மேலிட முறையாக அணிந்து கொண்ட திருநீற்றை உணர்த்தியது. இதனை மேலும்,

    ‘’கைதை துன்று நீறுபுனை மேனிய ஆகி தூய நீறுபுனை தொண்டர்கள் என்ன – வண்டுகள் தாழைப் பூவினுட் போந்து வெளிவரும்போது அதனுட் பொருந்திய மகரந்தம் தமது உடம்பிற் றோய்ந்து வரும். அப்போது காண்போர்க்கு முழுநீறு பூசிய அடியவர்களைப் போன்று தோன்றும்.

    கைதையில் துன்றுநீறு – உண்மையும் தூய்மையுமில்லாத மாயா காரியப் பொருள். ஆனால் உண்மையான தூய திருநீற்றின் தோற்றம்மட்டும் பொருந்தியது. ஆதலின் இதனைத் துன்று நீறு எனவும், அதனைத் தூய நீறு எனவும் கூறினார். பொருள்கள் காண்போரின் மனப்பான்மைக் கேற்றவாறு நினைவுண்டாக்குதல் இயல்பு.’’ என்று சி.கே.எஸ் அய்யா விளக்குவார்

    மதுவின் நசையாலே என்றதொடர் தரும் நயம்எண்ணிமகிழத்தக்கது. சிறுசிறு துளியாய்ப் பல பூக்களிற், போய் உண்டும் நிரம்பாது நாவிற்கு மட்டும் சிறிதுகாலம் இனிமை தருவதும், அதிக முண்டால் நோய் தருவதுமான, எளிய மலர்த்தேனைத் தேடி அலையாது, பொருந்திரளாக ஒரே இடத்தில் நுகரத்தக்கதாய் எல்லா இந்திரியங்களுக்கும் உயிருக்கும் எப்போதும் இனிமை தருவதாய் உள்ள பெருந்தேனை உண்ணுவோம் என்ற நசையைக் குறிக்கும். சமய ஈடுபாடும் , இலக்கியச்சுவையும் ஒருங்கே அமைந்த இப்பாடல் சேக்கிழாரின் புலமைக்குத் தக்க எடுத்துக் காட்டாகும் .

    Share
  • சேக்கிழார் பா நயம் – 36

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருவதிகைப் புறத்தே, இறைவன் திருவடி பதித்து விளையாடல் செய்தமையால், சுந்தரருக்கு விரைந்து தில்லைக்குச் சென்று திருவடியை வழிபடும் ஆவல் மிகுந்தது! கெடிலநதியில் நீராடித் தில்லை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார். அடுத்துத் திருமாணிகுழி என்ற தலத்தை அடைந்தார். திருவதிகைக்குள் புகாமல் ஊருக்கு வெளியே ஓடும் கெடில நதியில் நீராடி, இறைவனை நேரில் கண்டு போற்றாமல் புறத்தே நின்று அடியை மட்டும்போற்றினார் என்பதைச் சேக்கிழார்,இப்பாடலில், அங்கணரைப் போற்றி எனக் கூறாமல் அடிபோற்றி என்று கூறியதன் நயம் உணரத்தக்கது. அதனால் அந்நதியின் தென்கரை வழியே சென்றார். திருக்கோயில் அந்நதியின் வடகரையில் உள்ளது! அங்குசென்று வணங்காமைக்கு அவர் அப்பர் வழிபட்ட தலத்தை மிதியாமையே காரணம். அங்கிருந்து புறப்பட்டுத் திருமாணிகுழி என்ற தலத்தை அடைந்தார். இதனைச் சேக்கிழார் ‘’மற்றந்த பொங்குநதித் தென்கரைபோய்’’ என்று பாடினார். ‘திருமாணிகுழி’ என்ற ஊரின் சிறப்பை இங்கே சேக்கிழார் கூறுகிறார்! திருமால், மகாபலிச் சக்ரவர்த்தியிடம் ஓர் அந்தணச் சிறுவனாகச் சென்றார். அவன் தன்னைப் பெற்றவரும் இகழும் குட்டை வடிவினராய்ச் சென்றார். அவனது வாமன வடிவத்தைக் கம்பர் ‘’பயந்தவர்களும் இகழ்குறளன்’’ என்பார்.

    கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்
    பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர்
    வியந்தவர் வெரு கொள விசும்பின் ஓங்கினான்
    உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே

    என்பது கம்பர்பாட்டு! அவ்வாறு சென்ற திருமால் மாவலியின் கொடைப் பண்பைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றடி மண்ணை தானமாகக் கேட்டார். அவனும் சிறுவடிவினன் தானே என்றெண்ணி ‘’மூன்றடி நிலத்தைத் தந்தேன்!’’ என்று கூறியஅளவில், சிறிய வாமனன் பெரிய விஸ்வரூபம் எடுத்து மூவுலகையும் ஈரடியால் அளந்தார், மூன்றாம் அடிக்கு இடம் இல்லாமையால், மாவலியின் தலையிலேயே மூன்றாம்அடியை வைத்து மண்ணுக்குள் தள்ளினார்! இதனையே திருவள்ளுவர் தம்குறட்பாவில்,

    ‘’ மடியிலா மன்னவன் எய்தும்அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு!’’

    என்றுபாடுகிறார். வாமனனாய் மூன்றடி மண்கேட்டபோது, குறளனாய்நின்று வஞ்சனையால் வளர்ந்து திருமால் அடைந்த மூவுலகையும், வஞ்சனையற்ற, சோம்பல் இல்லாத மன்னவன், ஒருங்கே அடைவான்’’ என்பது அதன்பொருள். இதனையே சிலப்பதிகாரத்தில் இளங்கோ,

    ‘’மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி’’

    என்பார் . அதில்உள்ள வஞ்சனையை அவர் ‘’முறைநிரம்பா வகை’’ என்று கூறுவார்.மேலும் திருக்குறள்,

    ‘’உதவி வரைத்தன்று உதவி உதவி
    செயப்பட்டார் சால்பின் வரைத்து!’’

    இங்கே செய்யப்பட்டார் சால்பு என்பது தாழ்ந்தவர்களைக் குறித்தும் சிந்திக்கிறது. இதனை

    ‘’பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று!’’

    என்றுகூறுகிறது. இக்குறளில் ‘’பெற்ற ‘’ என்ற சொல் ஈட்டிய என்பதை நுடபமாக விலக்கு கிறது! அத்தகைய வஞ்சகச் செயலால்வந்த பாவத்தைப் போக்கிக் கொள்ள, திருமால் சிறிய மாணியாய் அதாவது பிரம்மச்சாரியாய், சிவபிரானை வழிபட்ட தலம் , ‘’திருமாணி குழி’’ ஆகும். இதனைச்சேக்கிழார்,

    ‘’போர்வலித்தோள் மாவலிதன்
    மங்கலவேள் வியில்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
    செங்கணவன் வழிபட்ட திருமாணி குழி யணைந்தார் ‘’

    என்று பாடுகிறார். இப்பாடலில் உலகெலாம் தம் உடைமையாகக் கொண்ட திருமால், அற்பப் பொருளைக் கேட்டு வஞ்சனை செய்த தம் பிழையுணர்ந்து வழிபட்ட தலம் என்று குறிப்பாகப் பாடுவதன் நயத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம். இனி இப்பாடல் முழுவதையும் பயில்வோம்.

    ‘’அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்த
    பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
    மங்கலவேள் வியில்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
    செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.’’

    இப்பாடல், சுந்தரரும் உலக வாழ்க்கை இன்பத்தை நாடி இறைவனையே இகழ்ந்த தம்பிழையை மெல்ல மெல்ல உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையை விளக்குகிறது!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 29

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருக்கைலாயத்தில்  அருளிய வாக்கின் வண்ணம் , சுந்தரமூர்த்தி  ஸ்வாமிகளை  உரிய காலத்தில் தடுத்தாட் கொள்ளவே , அவர் திருமணநாளில்  சிவபிரான்  முதிய  அந்தணராக எழுந்தருளினார்! அங்கே சுந்தரர்  தம் வழிவழி  அடிமை  என்ற பழைய மூல ஓலை ஒன்றைக் காட்டி  அவையோரிடம்  வாதிட்டு வென்றார்! அவர்,  ‘’சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆரூர்ப்பித்தனாகிய தமக்கு வழிவழிஅடிமை!’’ என்று  எழுதப்பெற்ற மூலஓலையைக்   காட்டி வழக்கில்  வென்றார். அவ்வாறு தம்  அகடிதகடனா சாமர்த்தியத்தால்    காட்டிய  மூலஓலை,

    முன்னோர்  எழுத்துடன்  ஒப்பிட்டுப்பார்க்கப்    பெற்றது. எதையும்  சாதித்  தருளும் இறைவன்  செயலை  மீண்டும்   சோதிக்க  எண்ணிய  அவையினர், ‘’அப்படியானால் இங்கே  நெடுங்காலம்  வாழ்ந்திருந்த உங்கள்  பழமையான இல்லத்தைக் காட்டுங்கள்’’ என்றனர். அப்போதும்  தம்  இறைமைத்  தன்மையை உணராத சுந்தரரையும் அந்தணர்களையும் நோக்கி, ‘’இன்னும் என்னை அறிந்துகொள்ளவில்லை   என்றால்,  என்னுடன்   வாருங்கள்!’’ என்று  கூறி,. அவர்களை அவ்வூரின்    திருக்கோயிலாகிய  ‘’ திருவருட்டுறை’’ யினுள்சென்றார்!

    அவரைப்பின் தொடர்ந்து வந்த சுந்தரரும் அந்தணர்களும் அங்கேயே  அந்தமுதிய அந்தணர்  மறைந்து  விட்டதை அறிந்து  திகைத்தனர்.

    அப்போதும் பிறப்புவாசனையால்  பீடிக்கப் பெற்றிருந்த சுந்தரர் நல்லறிவை இழந்து, ‘’ அந்தணரே!  நீங்கள் எங்கள்சிவன்   கோயிலுக்குள்  ஏன்    நுழைந்து  மறைந்தீர்கள்?’’  என்று கேட்டார். மலமாயையின் பிணிப்பு எளிதில் விலகாது என்பதை இங்கேநாம் உணர்ந்து  கொள்கிறோம். உடனேஅனைவர்  முன்னும் இறைவன் இடப வாகனத்தில் பார்வதியுடன் காட்சி யளித்தார்! அப்போதுதான் வந்த அந்தணர் இறைவனே என்பதை  அனைவரும்  உணர்ந்து  கொண்டனர். இவ்வாறு தம்மை மறைத்துக் கொள்ளுதல் இறைவனின் ஐந்தொழில்களுள் ஒன்றாகும்!  அனைவரின் அறிவையும்  உணர்வையும் நினைவையும் மறைத்துத் தம்மையும் மறைத்துக் கொண்ட நிலையை இங்கே  நமக்குச் சேக்கிழார் உணர்த்துகிறார்!

    அப்போதுதான்  சுந்தரர் மையல் மானுடமாகி  மயங்கியதை ஆண்டவன் உணர்த்தினார். ‘’சுந்தரா, நீ முன்பு கைலையில் எமக்கு அணுக்கத் தொண்டனாகி, அடிமைத் தொண்டு செய்தாய்! உன்னுடைய வேட்கை உன்னை இங்கே மானிடனாய்ப்   பிறக்கச்    செய்தது!  என் ஏவலால் இங்கே பிறந்தாய். இந்த நிலவுகில் உன்னைத் தொடர்ந்து வந்த  துன்ப வாழ்க்கையின்   தொடர்ச்சி விலகி,  நீ உய்தி பெறும்  பொருட்டு , உன்னைத்  தொடர்ந்து இங்கு   வந்தேன்!   நீ அன்று அங்கே  என்னை வேண்டிக் கொண்டமையால்,  நல்லறிவு  மிக்க,  நான்மறை  உணர்ந்த , அந்தணர் முன்னே  நாமே உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! ‘’  என்று அருளிச் செய்தார்!

    இதனையே,

    ‘’முன்பு நீ நமக்குத் தொண்டன்!  முன்னிய வேட்கை கூரப்
    பின்பு நம் ஏவலாலே பிறந்தனை,  மண்ணின் மீது
    துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து
    நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோ ம்” என்றார்’’

    என்ற   பாடல்  குறிக்கிறது!  இந்தப் பாடல் குறிக்கும் உள்ளுறைப் பொருளை    இங்கே

    நாம் உணர்ந்து கொள்ள  வேண்டும்!  சுந்தரர்  அந்தணர் இல்லத்தில்  பிறந்தது, அவர் வேதம் பயின்றது,  அரசரின்  செல்வத்  திருமகனாய்  வளர்ந்தது, திருமணம்  செய்து கொள்ளவிருந்தது    ஆகிய அனைத்தும்  அவர்  இப்பிறவியில்  தொகுத்துக்  கொண்ட  பெருஞ்செல்வமாகும்! அவர்  அறம், பொருள், இன்பம்  ஆகிய மூவகை உறுதிப்  பொருள்களையும் பெற்றார்! ஆனாலும்,  இப் பெரும்பொருட்  செல்வங்களை  அனுபவித்து மகிழ்வதை விட, இறைவன் அருட்செல்வத்தை  அடைவதே  சிறப்பு. இதனைத்  திருக்குறள்,

    ‘’வகுத்தான்  வகுத்த   வகையல்லால்   கோடி
     தொகுத்தார்க்கும்   துய்த்தல்  அரிது!’’   

    ‘’ அருட்செல்வம்   செல்வத்துட்   செல்வம்   பொருட்செல்வம்
     பூரியார்   கண்ணும்   உள!’’

    என்று   கூறுகின்றது! ஆதலால்  இந்த நல்லறிவை  நமக்கும் வழங்கி  மகிழ்கிறார்  இறைவன்! இறைவன்  எங்கும்  என்றும்  எப்போதும் நம்மைத் தொடர்ந்து வருவான்  என்பதையும்  நாம் உணர்கிறோம்! இப்படியே  நம் சிந்தனையைத்  தூண்டி  நல்லறிவை  ஊட்டும் நயத்தை  சேக்கிழார்  பெருமானின் பாடலில் நாமும்  உணர்ந்து  கொள்கிறோம்!

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 28

    திருச்சி  புலவர் இராஇராமமூர்த்தி

     சுந்தரரைத்  தடுத்தாட்  கொள்ள இறைவன் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி, பொது மன்றில்  ஆவணம் எதையும் சரியான வகையில் பணிந்திடுதல்  வேண்டும் என்ற வழக்கு மன்ற நடைமுறையை  உறுதி படுத்துகிறது. வழக்கில் ஈடுபட்ட வாதியாக சிவபெருமான், வழக்கின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரதிவாதியாக  சுந்தரர், வழக்கை நடத்தும் ஊர்ச்சபையோராக வெண்ணைநல்லூர் அந்தணர்  என்ற மூவகையினருக்குள் இந்த வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில், சேக்கிழார் வழங்கும்  இப்பெரிய புராணத்தைப் படிப்போர் அனைவரும்  மறைமுகமாகப் பங்கேற்றுள்ளனர்!

    இந்த வழக்கைக் கொண்டுவந்த சிவபெருமான் தம்மை மறைத்துக் கொண்டு  ஒரு முதிய அந்தணனாக உள்ளே  நுழைகிறார்! அவர் செய்வது வியப்புக்கு உரிய மாயச்  செயல் என்பதை,  வாசகராகிய நாம் மௌனசாட்சியாக அமைந்து  உணர்ந்து கொள்ளத்  தலைப்படுகிறோம். சுந்தரரைத்  தடுத்து ஆட்கொள்ளவே  இறைவன் இதனைச் செய்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் நாம், இந்த வழக்கு  நிகழ்ச்சியைத்  தொடர்ந்து ஆழமாக கவனிக்கிறோம்!

    சுந்தரர் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த நல்லூர் அரங்கில் நுழைந்த முதியஅந்தணர் ‘’முதலில்  இந்த மொழியைக்  கேளுங்கள்’’ என்று கூறுகிறார்! அவர் அந்தணனாகவும்  முதியவராகவும்   இருந்தமையால்,  அனைவரும்வணங்கி வரவேற்கின்றனர்.   அப்போது  சுந்தரரைநோக்கி , ‘’நுமக்கும்  நமக்கும்  இடையில் உள்ள   இசைவினால் அமைந்த வழக்குஓன்றுஉண்டு! அதனை முடித்தபின் திருமண வேள்வியைத்    தொடங்குக! ‘’ என்றார். சுந்தரரும் அந்தவழக்கை  முடிக்காமல் வதுவை  செய்யேன்’’ என்று உறுதியளிக்கிறார்! உடனே , ‘’இந்நந்நாவலூரன் எனக்குஅடிமை!’’ என்கிறார். ‘’உலகியலில் அந்தணர் மற்றவர்க்கு அடிமையாதல் இல்லை !   ஆதலால்  உங்கள்   செயல்  நகைப்புக்கு உரியது! ‘’ என்றார். அந்த நேரத்தில், ‘’அக்காலத்தில் உன்  தந்தையின்  தந்தைக்கும் எனக்கும் இடையில் அமைந்த அடிமை ஓலை ,  என்கையில்  இருக்கிறது! எதற்குச்   சிரிக்கிறாய்? ‘’ என்கிறார் அந்தணர் !  ‘’அந்தணர்  மற்றோர் அந்தணருக்கு அடிமை !  என்று பேசும்நீ பித்தனோ? ‘’ என்றனர்.  அதனைக் கேட்ட அந்தணர், ‘’பித்தன் என்றாலும்  பேயன் என்றாலும்,  யான்  கலங்கேன் ! அறிவாற்றலுடன்   பேசாமல்  அடிமைத் தொழில்      புரிக!’’ என்றார்.   சுந்தரர் ஓலையைக் காட்டுக    என்று கூறி,  அந்த அந்தணரிடம்  பிடிவாதமாக  நெருக்கி அவர்கையில்இருந்த ஓலையைப் பிடுங்கிக்   கிழித்து எறிகிறார்!  இவ்வாறு சாதி  ஆணவத்தால்  சாட்சியத்தைக்  கலைத்த குற்றத்தைப் புரிந்த சுந்தரரின்  செயலை  மன்றத்தினரிடம் கூறி,  அந்தணர்  முறையிடுகிறார்!  அதுகேட்ட  அவையினர், ‘’வியப்புக்குரிய  இந்த  வழக்கினை இங்கு   வைத்த  நீங்கள் எந்த  ஊரினர்? ‘’என்றுகேட்கின்றனர் அப்போதுஅந்தணர், ‘’எம்மூர்  திருவெண்ணெய் நல்லூர்!’’ என்று  கூறி, ‘’இங்கே முறைமாறி நடந்து   கொண்டு  , ஓலையைக் கிழித்த  இந்தச் சுந்தரர் என்அடிமையே! ‘’ என்கிறார். அவையினர் ‘’ அப்படியானால்  வழக்கினைக்  கேட்பதற்கு உரிய  நிலப்பகுதி ( JURISDICTION)  அதுவே  எனக்கூறி  அனைவரும் அவ்வூருக்குச்  செல்கின்றனர்!

    ‘’அந்த  ஊரிலும்  நீயே என்அடிமை  என்பதை  நிறுவுவேன்’’ என்றஅந்தணர் ,  அனைவரையும் அழைத்துச்  சென்று முறையிட்டார்!  அவையினர்  ‘ உலகில் இல்லாத புதுவழக்கினைக் கொண்டுவந்த நீரே இதனை ஆட்சி  ஆவணம்,  அயலார் காட்சி  என்ற வகைகளில் நிறுவவேண்டும்!’’ என்றனர்.   அந்தணர், , ‘’ அவர்கிழித்தது படிஓலை! என்னிடம்   ‘மூலஓலை’  உள்ளது!’’ என்றார்.  இக்காலத்தின்  duplicate , original ஆகியவற்றை அதுகுறிக்கும்.  எதற்கும் ஒர்  ஒளிப்படம் (xerox)  எடுத்து வைத்துக்  கொள்வது நல்லது என்பதை இறைவனே அன்று  காட்டிய   நிகழ்ச்சி  அது !  ‘’அப்போதும்  இந்த சுந்தரர்,  வல்லடி வழக்காக  அந்த மூலஓலையையும்  சிதைக்காமல்  பார்த்துக்கொள்ள வேண்டும்!  ‘’ என்கிறார்.  தம் மிடற்றில் வைத்த இருள்நிற நஞ்சை மறைத்துக் கொண்டு , வேடமிட்டு வந்த சிவபிரான் திருக்கரத்தில் இருந்த  ஓலையை அறமன்றத்தின்  ‘கரணத்தான்’ பணிவுடன்  வாங்கிப் படித்தான்!  ஓலையில் அக்கால ஆவணம் எழுதும்   முறைப்படி  வாசகம் அமைந்திருந்தது!

    ‘’விச்ச  தின்றியே  விளைவுசெய்குவாய் ,
            விண்ணும்  மண்ணகம்  முழுதும்  யாவையும்
    வச்சு  வாங்குவாய் !’’

     என்பார்  மணிவாசகர்.   இதனையே  கம்பர்,

    . ‘’உலகம் யாவையும்  தாம்  உளவாக்கலும்
          நிலை பெறுத்தலும்  நீக்கலும்   நீங்கலா
    அலகிலா   விளையாட்டு  உடையார் ‘’

    என்கிறார்! தம்  சங்கற்பத்தால் புதிதாக  எதையுமே  தோற்றுவிக்கும்  ஆற்றல் பெற்றவர் இறைவன்! ஆகவே சிவபெருமான்  சுந்தரரைத்  தடுத்தாட் கொள்ளும் போது , அடிமைச் சாசனம்  ஒன்றை அவராக உருவாக்குகிறார்! அந்தச் சாசனம்  முறையாக எழுதப்பட்ட சாசனம் போல் தோன்ற , மிகப் பழையதாய் காட்சி யளிக்கச் செய்கிறார்! அதனை ஆராய்ந்த அவையின் கரணத்தான் (கணக்குப்பிள்ளை) அதன்பழமையுடன், பழங்கால எழுத்தின் ஒப்புமையையும் ஆராய்ந்து அந்தஓலை  மூலஓலையே  என்பதை  உறுதி செய்கிறான்!  அந்த ஓலையின் மேலெழுத்துஇட்ட பெரியோர்களின் எழுத்துடன் ,   அரண்தரு காப்பிலிருந்து எடுத்த பழைய ஓலை எழுத்தினை ஒப்பு  நோக்கி , ‘’இரண்டும்ஒத்திருந்தது, என்னே இனிச்செயல்! ‘’ என்று  கூறினான்.

    இனி அந்த  மூலஓலை வாசகத்தைப் படிப்போம் . ‘’அரிய  மறைகளைக் கற்ற, நாவலந்தீவின்  ஆதிசைவக்குலத்தைச்  சார்ந்த ஆரூரனாகிய  யான் எழுதிக் கொடுத்த  அடிமையோ ஓலை இது! பெருமுனிவனாகிய   பித்தனுக்கு,  யானும்  என்பால்  தொடர்ந்து வரும் முறையான  மரபினோரும்  வழித்தொண்டு  செய்வோம். என்று உறுதியளித்து,  இந்த ஓலையை  இருமையாலும் (மனத்தாலும்  வாசகத்தாலும்)  இதற்கு  இசைந்து சுய நினைவோடும்எழுதிக் கொடுத்தேன்.   இவை என் எழுத்து! ‘’  என்பதாகும்.  இந்த ஓலையில் ‘இருமையால்  எழுதி நேர்ந்தேன்  இதற்கு  இவை என் எழுத்து ‘ என்பவை,  இன்றும் பத்திரம் எழுதுவோர்  கடைப்பிடிக்கும்  மரபாகும்.

    சோழ நாட்டின்  முதலமைச்சராக  விளங்கிய சேக்கிழார் பெருமான்  அக்கால நடைமுறைகளை  நீதி மன்றத்துக்கே  உரிய   வாசகங்களுடன்  அமைத்து இந்தப் பகுதியை எழுதியருளி  உள்ளார்.    இனி  இப்பாடலைப் படிப்போம்.

    அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
    பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானும் என்பால்
    வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை
    இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து.

    இப்பாடலில், ஆன்மவியலின்படி பித்தனாகிய இறைவனுக்கு சுந்தரரும் அவர்வழி வந்த  நாமும்  அன்றும்  இன்றும்  என்றும் வழி வழியாகத் தொண்டு  செய்வோம்  என்று எழுதிச் சான்றளிக்க வேண்டுமா  என்ன?  என்றும்  உள்ள உண்மையையே கற்பனைச்   சிறப்புடன்   ஆவணப் படுத்திய   சேக்கிழார் பெருந்தகையின்  புலமைத் திறம் போற்றுதற்கு உரியதல்லவா?

    Share