திருச்சி   புலவர்  இராமமூர்த்தி

திருவாரூரில்  திருக்கோயில்  வழிபாட்டுக்குத்  தோழியருடன் சென்ற  பரவை  நாச்சியாரைச்   சுந்தரர் கண்டார். பரவை நாச்சியாரின் அழகிய கோலம்  சுந்தரர் உள்ளத்தை மிகவும் ஈர்த்தது. புற்றிடங்  கொண்டாரை வழிபட்டு  மீளும் பொழுது, அவ்வழிபாட்டின்   உடனடிப்  பயனாய்த்  தம்முன்தோன்றிய பேரழகு வாய்ந்த பரவையாரைக் கண்டுமகிழ்ந்தார். அவரைப் போலவே பரவையாரும் கண்டார் , இந்நிகழ்ச்சி,  காண்டல்  என்ற  அகப்பொருள்   துறையைச்  சார்ந்த நிகழ்ச்சியாகும். சுந்தரரின் ஒளிபொருந்திய தோற்றம் பரவையாரை  வியக்கச் செய்தது . இவர்கள்   இருவருக்கும்   இடையில் காதலுணர்வைத்  தூண்டக் காமக்  கடவுளாகிய மன்மதன் நின்றான், என்கிறார்     சேக்கிழார்!

இறைவன்  திருவருளை   மட்டுமே பெரிதும்   விழைந்து   வழிபட்ட பரவையார் கண்முன்னே  சுந்தரர்   தோன்றிய   காட்சி கண்கொள்ளாத  ஒளியாக விளங்கிப் பரவையாரின்  இயல்பான  அடக்கத்தை மீறி,   அச்சம்,  மடம் , நாணம் , பயிர்ப்பு  என்ற நால்வகை குணங்களையும்   அடக்கி விட்டன!

தன்முன்னே வியப்பளிக்கும் பேரொளியுடன் தோன்றிய சுந்தரரின்  தோற்றத்தைக்   கண்ட   பரவையார்,  இவர்   செவ்வேள் எனப்படும்முருகனோ? என்று  ஐயுற்றாள்!  பின்னர், தனக்கு   நிகரில்லாத மன்மதவேளோ?  என்றும், வாடாமாலை  அணிந்த விஞ்சையருள் ஒருவனோ? என்றும், மின்னு   செஞ்சடைப்  பெருமானின் அருள்பெற்றவனோ? என்றும்  கருதினாள். இவ்வா றெல்லாம்  என் மனத்தை  ஊசலிடவைத்த இவர்யாரோ?  என நினைத்தாள்

பரவையாரின்  மனவோட்டங்களை நமக்கு அறிவிக்கும் சேக்கிழார் பாடல்,

“முன்னேவந்   தெதிர்தோன்றும்  முருகனோ?   பெருகொளியால்
தன்னேரில்   மாரனோ?  தார்மார்பின்   விஞ்சையனோ?
மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?
என்னேஎன்    மனந்திரித்த  இவர்யாரோ ?  எனநினைத்தார்!

என்பதாகும்.  அவ்வாறு அவர்  எண்ணிய போது,  முதலில் ஒளிபொருந்திய முருகப்பிரானோ, என்றுஎண்ணினாள். முன்பே இருவரை மணந்துகொண்ட முருகப் பிரான்  தன்    பெண்மை நலம் கவரக் காரணம்   இல்லையே!  ஆதலால் , தம்மைக்கவரும்  பொருட்டுத் தனக்கு நிகரில்லாத மன்மதனே  வந்தானோ? என்று எண்ணினாள்.

இந்திர ஞாலம்போல வந்தருளி, யெவ்வெவர் தன்மையும் தன்வயிற்படுத்துத், தானேயாகிய தயாபர னெம்மிறை“ என்பது விஞ்சையின் இயல்பு. உருத்திரகணிகையராய் அடியவர்க்கு ஆளாம் தன்மையராயினும் இதுவரை எந்த அடியார்பாலும் எய்தாத வேட்கை விளைவித்தமையின் இந்தச்

சைவவிடங்கு விஞ்சையனோ? என்ற குறிப்பாம். மேலே கண்டவாற்றால் முருகனுமல்லன், மாரனுமல்லன் ; என்னவே இவன் வேறு விஞ்சை வல்லவனோ  என்று அடுத்து நினைந்தார். இதனைத்

‘’தன்னேரில்   மாரனோ ?  தார்மார்பின்   விஞ்சையனோ?”

என்ற அடி   புலப்படுத்துகிறது.

முன்பே  திருக்கயிலையில்  தான் கொண்ட  பத்தித்திறன்  நினைவுக்கு  வந்தது. அத்தகைய  பக்தியுடைய  என்னையும்  கவர்ந்த இவன் உண்மையில்  மிகுந்த சிவனருள்  பெற்றவன்தானோ   என எண்ணினாள்.  அதனால் என்னை இந்நிலை செய்தலின் அவனருள் பெற்றவனே யாதல்வேண்டும்!  இதனை

“ மின்னேர்செஞ்   சடையண்ணல்  மெய்யருள்பெற்   றுடையவனோ?”

என்ற அடி  விளக்குகின்றது.

இதுவரை திரியாது, நாண் முதலியவற்றை மண் கொள்ளாவகை காத்து, இறைவனிடத்தே செலுத்திய எனது மனத்தையும் கவர்ந்ததே!  இது என்னே ?’’  என்கிறாள் .

“முருகன் இச்செயலுக் கிசையான். மாரனும் விஞ்சையனுமோ அடியாரிடத்துச் செயல் செய வலியிலர். ஆதலின் அருள் பெற்றுடையார் ஒருவரேயாதல்வேண்டும். ஆயின் இவர் இன்னார் என்ற

துணிவு பெறமாட்டாமையின் யாரோ? என்றார். ஒரு நாயகனைப் பலர் மணத்தல் இந்நாட்டுத் தொன்றுதொட்டு வந்த நெறியாதலின இத்தலைவி, முன்னே ஒவ்வொரு தலைவியரை மணந்த முருகன் மாரன் முதலிய ஒருவரோ என நினைத்தல் இழுக்காகாது.” என்பது சி.கே . எஸ்  கருத்து

‘கற்பகத்தின் பூங்கொம்போ’ என்று நம்பிகள் நினைத்தமைக்கேற்பவே, பூத்தல் ஒழிந்து பாழ்பட்டுக் கிடந்த அதனைப் பூக்கச்செய்தவன் விண் குடியேற்றிய முருகனே யாதலால் முருகனோ என்ற நினைவு பரவையார் மனத்து எதிர் உருவமாய்க் கிளம்பியது. “காமன் பெருவாழ்வு“ எனும்  நம்பிகளின் நினைவு மாரனைப் பரவையார் மனத்திற் புகுத்தியது. நம்பிகள் “பொற்பின் புண்ணியமோ“ என்றமை (சிற்றின்பத்தைப் பேரின்பமாக்கும் புண்ணியமுடையார் விஞ்சையராதலின்) விஞ்சையனோ என்ற கருத்தை விளைத்தது.சிவனருளே என்று நம்பிகள் முடித்தமையே அவர் மெய்யருள் பெற்றுடையவனோ எனுந் தன்மையைப் பரவையார் உள்ளப் பளிங்கிற் பதித்தது. இந்நினைவுகள் முன் இல்லாது, இப்போது பளிங்கிற் பவளம் பதித்ததுபோல மனத்திற் பதித்தமையால் மனந்திரித்த எனப் பெற்றதாம்.அவர் அறியேன் என்றபடி இவர் யாரோ என்றார். ஆயினும் அருள் பெற்றவனே என்ற துணிபுபற்றி இதனை ஐயத்தின் முடிபாக இறுதியிற் குறித்தார்.” என்பதும் அவர்   உரைத்திறன் ஆகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *