Tag: திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

  • சேக்கிழார் பாடல் நயம் – 90 (மாரி)

    சேக்கிழார் பாடல் நயம் – 90 (மாரி)

    திருச்சி புலவர்  இரா. இராமமூர்த்தி

    மாரிக் காலத் திரவினில் வைகியோர்
    தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
    பாரித் தில்ல மடைத்தபின் பண்புற
    வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.

    (அவ்வாறு நண்ணிய காலமாகிய) மாரி … இரவினில்- மழைக்காலத்தில் ஒரு நாள் இரவிலே; வைகி – (உறக்கமின்றி) விழித்திருந்து; ஒர் தாரிப்பின்றி – வேறு ஓர் ஆதரவு மில்லாமையினாலே; பசி … பாரித்து – மீதூர்வதாகிய பசி மேலும் அதிகரிக்கப் பெற்று; இல்லமடைத்தபின் – வீட்டுக் கதவினைத் தாழிட்டு அடைத்த பின்னர்; பண்புற – உற்ற பண்பினாலே; வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன் – தேன் பொருந்திய மாலையணிந்த மாறனார் (நண்ணிய நற்றவராகிய) விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மாரிக்காலத்து இரவினில் – மழைக்கால நாட்களில் இரவு மிக்க இருள் கொண்டிருக்கும். மழையும் இருளும் கூடி, மக்கள் வெளிச் செல்லக் கூடாதபடி தடுக்கும் என்பது குறிப்பு. நாயனார் பேறடைந்த திருநாள் ஆவணி மாதத்து மக நாளாதலும் காண்க.

    வைகி – இரவினிற் படுத்துறங்க வேண்டுவோர் அவ்வாறுறங்காமல் விழித்திருந்தனர் என்பது. பட்டினி யிருந்து என்பாருமுண்டு. வைகித் தாரிப்பின்மையால் பாரிக்கப்பெற்று அடைத்தபின் – எனக் கூட்டுக. ஓர்தாரிப்பு இன்றி -ஓர் ஆதரவு மில்லாமையினாலே. இன்றி இன்மையால். தாரிப்பு – தரிப்பு – என்றது முதல் நீண்டது. தரிக்கும் ஆதரவு உதவி. தம்மைத் தாங்கக் கூடியவர் யாவருமின்றி என்க. விருந்துபசரிக்க எவ்வகையானும் உதவி பெறாமை குறித்தது. இதனைப் பசி என்றதனுடன் கூட்டி அடக்க முடியாத – தாங்க முடியாத பசி என்பாரு முண்டு. இப்பொருட்கு இன்றி – இன்றிய – இல்லாத – முடியாத என்று பெயரெச்சமாக்கிக் கொள்வர். பசிதலைக் கொள்வது பாரித்து  பாரித்து – பாரிக்க – அதிகரிக்க என்க. பசிமீதூரும் நிலை மேன்மேலும் அதிகரிக்க. செய்ய என்பது செய்து எனத் திரிந்து நின்றது. பெற்று – என ஒரு சொல் வருவித்துரைக்க.

    பாரித்தல் – அதிகரித்தல். “சைவ நெறி பாரித்தன்றி“ -இதனைப் பரித்து என்பதன் முதனீண்ட விகாரமாகக் கொண்டு, தாங்கிக் கொண்டு என்றுரைப்பாரு முண்டு. இஃது தாமே பசிமீதூரப் பெற்றார் தம்மையடைந்த விருந்தினரை ஊட்டல் அமையாதென்பது குறித்தது.

    இல்லம் அடைந்த பின் – இது நாயனார் விருந்தெதிர் கொண்ட நேரங் குறித்தது. இரவு முதிர்ந்து நள்ளிரவாகிய மிக்க அகாலத்தில் வேறு எவரும் விருந்து புறந்தரார் என்பது குறித்தது. தமது இல்லமேயன்றி ஊர் அடங்கிய நிலையும் குறிப்பிட்டபடியாம். இல்லம் அடைத்தபின் நண்ணினார் என மேற்பாட்டுடன் கூட்டியுரைப்பர் இராமநாதச் செட்டியார்.

    வேரித்தாரான் – வேரி – தேன்; தார் – இங்கு வேளாளர்க்குரிய குவளை மலராலாகிய அடையாளமாலை குறித்தது. காகிதம் முதலிய இயற்கைமண மில்லாத போலியான பொய்ம் மாலைகளை அணிந்து மகிழும் இந்நாட் போலிமாக்கள் வேரித்தாரான் என்ற இதனைக் குறிக்கொண்டு திருந்துவார்களாக. இதில் மேலும் ஒருநுட்பம் உள்ளது! தமக்கு வந்த சோதனையைத்தாங்கி வெற்றியடைந்த காட்சியைச் சேக்கிழார் பெருமான் மனக்கண்ணிற் காண்கிறார்! இவ்வாறு இளையான்குடிமாறனார்  வேரித்தாரானாய்த்  தேன் பிலிற்றும் வெற்றி மாலையை அணிந்து நிற்பதாகக் கற்பனை செய்வது கவிஞர்களின் உரிமை! கம்பராமாயணத்தில் வீடணனைத் ‘’தார்க்கோல மேனிமைந்த’’ என்துயர் தவிர்த்தியாயின் கார்க்கோல   மேனியானைக் கூடுதி’’  என்று கும்பகர்ணன் வேண்டும்போது,  வீடணன் இறுதியில் வெற்றி மாலையுடன்  காட்சியளிப்பதாகக்  கற்பனைசெய்தான் என்பர்!

    விருந்து எதிர் கொண்டனன் – இல்லக்கதவுதாழிட்டு அடைத்த பின் நண்ணிய நற்றவர், ‘பசித்து விருந்துவந்தேம்’ எனக் கதவைத் தட்டினார் எனவும், நாயனார். இத்தனை இன்னல்களுக்கு மிடையிலே கதவுதிறந்து, வந்த விருந்தினை உள்ளமும் முகமும் மலர்ந்து உரிய உண்மைவகையிலே வரவேற்று எதிர்கெண்டார் எனவும் வருவித்துரைத்துக் கொள்க. பண்புற – விருந்தோம்பலுக்கு ஏற்ற பண்பு பொருந்தும்படி. அகனமர்ந்த அன்போடு முகமும் மலர்ந்து உரிய பண்பினாலே வரவேற்றல் குறித்தது. இதன் இயல்புகளெல்லாம் நீதிநுல்களுட் காண்க.

    பண்பு உற – வீடுபெறும் பண்பு தன்மை உறும்படியாக – அத்தன்மை தம்மை உற்றதனாலே – என்ற பின்நிகழ்ச்சிக் குறிப்புமாம். இல்லம் அடைந்த பின் என்பது பாடமாயின் நண்ணிய தவசியார், ஓர் தயாரிப்புமில்லாது பசி தலைக்கொண்டு அதிகரிக்கப் பெற்றாராய் நாயனாரது இல்லத்தையடையவே அவர் பண்புற அவ்விருந்தை எதிர் கொண்டனர் என்றுரைத்துக் கொள்க. இப்பொருளில் தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது என்பன நற்றவத்தவர் நிலைகுறித்தது. இது பின்னர்த் தீரவே பசித்தார் (449) என்றதனோடும் பொருந்துமாறும் காண்க. இப்பொருள் சிறந்ததாகக் காண்கின்றது. ஆயினும் பெரும்பான்மை கொண்டுள்ள பாடத்துக் கேற்ப முன்னர் உரைக்கப் பெற்றது.

    விருந்து – புதுமை; புதியராய் வந்தார்மே னின்றது. இங்கு முன் எந்நாளும் கண்டிராத புதுநிலைமை குறித்தது. “இம்மடத்திற் காணும் படியிலாத நீர்“ – (அமர்நீதி – புரா – 10) என்றது காண்க. முன்னெல்லாம் அடியாருடன் கலந்து வந்தனரேயன்றித் தனித்துத் தாமே எழுந்தருளியதில்லையாதலின் இது புதுமை என்பார் விருந்து என்றார். எதிர்கொண்டு வரவேற்றலை ஆவாகனம் என்பது வழக்கு.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 53

    சேக்கிழார் பா நயம் – 53

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    இனி, நிலவு வெளிப்படுதல்  என்னும்  இலக்கிய உத்தி,   மிகச்சிறந்த  காப்பியங்களில் பல்வேறு  வகைப்பட்ட   சுவைகளுடன் அமைந்த அழகைக் காண்போம்.

    கம்பர், கன்னிமாடத்தின்  மேலிருந்து  இராமனைக்  கண்ட சீதை, அவன்பால்  காதல் கொண்டு  பஞ்சணையில்  சாய்ந்தாள்.  அப்போது வெண்ணிலவு வானில்  தோன்றியது.  அது முன்பு பாற்கடலைக் கடைந்தபோது அங்கிருந்த அமுதக்கலசம் பாற்கடலின் துளிகள் விண்மீன்களாய்   விளங்க,  வானில்    தோன்றியதுபோல் கடலின்மேல்  வெண்திங்கள் தோன்றியது என்பதை,

    பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின்
    விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க
    இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம்
    இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள்

    என்றுபாடுகிறார்.   இடையிடையே  புள்ளிகளை இட்டது போல் விண்மீன்கள் தோன்றும் இருளின்  குழம்பை , நிலவின்  கதிர்கள் நக்கி உண்டதுபோல எங்கும்   இருள்  தேய, கீழ்த்திசையில்  தோன்றும் வெள்ளிப்  பூரண  கும்பத்தில் வைத்த இளம்பாளைகள் போல நிலவின் கதிர்கள்   விரிந்தன என்பதைக்  கம்பர்,

    புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
    நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை
    கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த
    வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால்

    என்று பாடுகிறார். அந்த வானின்   இருள்   முழுவதையும் நிலவு   தன்  கைகளால்  வாரி  உண்டு  எங்கும்பரவியது.  அது,   சடையப்ப வள்ளலின் ஒளி  மிக்க புகழ் எங்கும்  பரவியது போல் இருந்தது  என்பதைக் கம்பர்,

    வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம்
    உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை
    விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர்
    பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால்

    என்று பாடுகிறார்.  மேலும்  கடலின் நடுவில் முளைத்து எழுந்த  நிலவுஎன்னும் ஓவியன், தன்   வெள்ளிய சுதை மட்டைகளால் பூசி,  அண்டத்தின்  பழையதான மங்கிய தோற்றத்தை நீக்கிப் புதுமைப்  பொலிவினை உருவாக்கியது என்பதை,

    நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன்
    மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால்
    காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு
    பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால்

    என்று பாடுகிறார். பின்னர் யுத்தகாண்டத்தில் வீடணனுக்கு   அடைக்கலம்  கொடுத்த இராமபிரான்  சீதையைத்  தேடி  அடைவது  குறித்து  எண்ணிய  போது, உலகம் என்ற  வலைஞன் ,   பெண்ணின் உருவுடைய  சீதை   கிட்டினால் பிடித்துத்  தருவேன் என்று நிலவு  என்ற  வெள்ளைநிற வலையை வீசியது போல  நிலவொளி  பரவியதை,

    கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
    பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா
    உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும்
    வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்

    என்று பாடுகிறார். இவ்வாறே சேக்கிழார் சுவாமிகளும், இறைவனால்  தோற்றுவிக்கப்  பெற்ற  உயிர்களுக்குத் தூய்மையையும், பிறர்  போற்றும் இன்பத்தையும், குளிர்ச்சியையும்  தந்து,  வானெங்கும்   பரவிய   வெண்ணீற்றின்  உயர்ந்த  ஒளிபோல்      நீண்ட   நிலவின்   ஒளி  பரவியது   என்பதை ,

    தோற்று  மன்னுயிர்  கட்கெலாந்   தூய்மையே
    சாற்று   மின்பமும்  தண்மையும்  தந்துபோய்
    ஆற்ற   அண்டமெ   லாம்பரந்  தண்ணல்வெண்
    ணீற்றின்  பேரொளி  போன்றது  நீணிலா

    என்று   பாடுகிறார்.

    கம்பர் சீதை  திருமணத்துக்கு  எழுந்தருளும்  இராமனுக்குப் பூரண கும்பம்அளிப்பது  போலும் என்றும் , சீதை இராமன்திருமண வாழ்க்கை அமுதம்போல இனிமை  தரும்  என்றும் , சடையன் புகழ் போல்  இருவர் புகழும் பரவும் என்றும், சீதையைத்  தேடும்  வலைஞனாய்  விளங்கும்  என்றும்  அவர் கருத்தின்  படிக்  கூறினார்.

    சேக்கிழார் சுவாமிகள்  தம்  சைவத்   திருவுள்ளத்துக்கு  ஏற்ப , நிலவொளி  திருநீற்றை  நினைவூட்டியது.   பார்க்கும் இடமெல்லாம்  பர வெளியாகத் தோன்றும்  புலவரின்  சிவக்கண்ணுக்கு  நிலவொளி  திருநீற்று  ஒளியாகக்  காட்சி தருகிறது.

    நிலாப்போலவே திருநீறும் தோற்றம் பெறும் உயிர்களுக்கெல்லாம்தூய்மையும் இன்பமும் தண்மையும் தருவதாம்; எல்லா அண்டங்களிலும்  தனது ஆணை பரப்புவதுமாம். நிலாவானது தோற்றம் பெறும் உயிர்களின்உடம்புக்கு அளிக்கும் இயல்பைத் திரு நீறானது உயிர்களுக்கு அளிப்பதாம்.  நீறு – உயிர்க்குத் தூய்மை தருதல்,   கட்டிய பாசத்தினின்றும் நீக்குதலாம்.  இன்பம் தருதலாவது பிறப்பிறப்புக்களால் வரும் துன்பம் நீக்கிப் பேரின்பம் தருதல்.   தண்மைதருதலாவது “சுழலார் துயர்வெயில்   சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும் நிழலாவன“ என்ற அப்பர் பெருமானின் திருவாக்கின்படி,  பாச வெப்பத்தினின்றும் நீக்கிச் சிவனடித் தண்ணிழலிற் சேர்த்தலாகும்.  இதுவேயின்பம், பிறவெல்லாம் துன்பம் என நூல்களிற் பேசப்பெறும். நீறு சத்தியின் இயல்புடையதாதலின் உயிர்களுக்குத் தூய்மை முதலியன தரும் என்பர். “பரா  (பராசக்தி)வண்ணமாவது நீறு“ என்பது தமிழ்மறை.

    நிலா, தோற்றம் பெறும் உடம்புகளுக்குத்தூய்மை – இன்பம் – தண்மை தந்து வளர்க்குமென்ப. சூரியன் உயிர் தங்குவதற்குரிய வெப்பம் கொடுப்பன். சந்திரன் உடம்பு வளர்ச்சிக்கு உரிய தண்மையும் பிறவும் தருவன் என்பது உலகநூல்  துணிபு!   சைவர்க்கு விதித்த மணச் சடங்குகளில் முளைசாத்துதல்  ஆகிய சடங்கில்   சந்திரனுக்குரிய பகுதிகளே சிவாகமங்களிற் கூறப்படுதலும்காண்க.

    திருநீறு  தூய்மை  தருவதையும், இன்பம் தருவதையும், குளிர்ச்சி  தருவதையும், ‘’மந்திரமாவது  நீறு ‘’ என்ற பதிகத்தில்   கண்டறியலாம்

    வேதத்தில்  உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
    போதம்  தருவது  நீறு;  புன்மை தவிர்ப்பது நீறு;
    ஓதத்   தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு;
    சீதப் புனல்வயல்  சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!

    எயிலது  அட்டது  நீறு; இருமைக்கும்   உள்ளது நீறு;
    பயிலப்  படுவது நீறு; பாக்கியம்   ஆவது  நீறு ;;
    துயிலைத்  தடுப்பது நீறு;  சுத்தம்  அதாவது  நீறு;
    அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே!

    என்ற  இரு  பாடல்களே   இவையனைத்தையும்  குறிப்பதைச்  சிந்தித்து உணர்க.

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 51

    சேக்கிழார் பா நயம் – 51

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    திருநாவலூரர் ஆகிய சுந்தரர் , திருக்கோயிலில் இறைவனை வணங்கச் செல்லும் போது பரவையாரைக் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தார். இறைவன் திருவடிகளையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழும் சுந்தரர் உள்ளத்தில் தானே வந்துநின்று அவர் உள்ளத்தில் சிவனருளாக விளங்கினார் பரவையார்! இறைவனை வணங்கி, வழிபட்டுத் திரும்பும்வரை, அவர் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட அப்பெண்மணி, அவர் வெளியே வந்த போது அங்கிருந்துசென்றுவிட்டார்! கண்வழியே புகுந்து இறைவன் திருவருளே போல நின்ற உருவம் மறைந்துவிட்டது! அவ்வுருவம் எங்கே என்று தேடத் தொடங்கினார் சுந்தரர். இறைவன் திருவருட் செயல்களுள் மறைப்புஎன்னும் திரோதான சக்தி பரவையாரை மறைத்தருளியது. ஆனாலும் சுந்தரர் தேவாசிரியன் மண்டபத்தைச் சார்ந்துநின்றார். தனக்குத் திருவருளைக் காட்டிய இறைவனே, தம் கண்முன் மறைந்த பரவை நாச்சியாரை மீண்டும் கொண்டு வந்து காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் யாரிடமும் எதனையும் கேட்காமல் நின்றார். அப்போது மாலை நேரத்துக் கதிரவன் மேலைக் கடலுக்குள் மறைய முற்பட்டான். அந்த நிகழ்ச்சியைக் கதிரவன் உளக் கருத்தாகத் தன் குறிப்பினை ஏற்றிக் கவிஞர் பாடுகிறார்.

    இறைவன் திருவருளால் சிவபிரான் புகழையும் அடியார் புகழையும் மண்ணுலகில் நிலைநாட்டப் பிறந்தவரே சுந்தரர் என்பதைக் கயிலை மலையில் , ‘’மாதவம்செய் தென்திசை வாழ்ந்திட – அதாவது சிவபெருமான் புகழைத் தம் பாடல்களால் பரவச் செய்து தென்னாட்டிற்கே புது வாழ்வைத் தந்திட, தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர – அதாவது இறைவனடியார்கள் பலரின் சிறப்பைக் கூறும் திருத்தொண்டத் தொகை என்ற முதல் நூலை வழங்கிச் சைவத்தை உயர்த்தும் கடமையைச் செய்ய அங்குள்ள மாதரார் மேல் மனம் போக்கினார் என்று சேக்கிழார் பெருந்தகை முன்னதாகவே கூறிவிட்டார்.இதனை உரையாசிரியர்,’’சிவபெருமானது புகழையும் அடியார் புகழையும் உலகில் நிலவச் செய்வதற்கே அவதாரஞ் செய்தாராகலின் நல்லிசை நாட்டும் நாவலூரன் என்றார்
    ஏனையோர் இசைகள் ஒன்றும் முற்றும் நல்லன ஆகாமையின் அரன் புகழும் அவன் அடியார் புகழுமே நல்லிசை எனப்பெறும்.இதனை நிலைநிறுத்தியவர் திருநாவலூரர். ஆகவே, ‘’நாட்டு நல்லிசை நாவலூரன்‘’என்றார். அவர் முன்பு கைலையில் தம் மனத்தால் விரும்பிய கமலினியாரே
    திருவாரூரில் திருக்கோயிலில் வந்து நின்றமையால், விதி கடைக்கூட்ட, அவரை விரும்பினார், இதனை ‘வேட்ட ‘ என்ற சொல் உணர்த்துகிறது. அவர் விரும்பியது,இறைவன் திருவருளை! அத்திருவருள் மின்னல் போன்ற இடையை உடைய பரவையார் என்ற பெண்ணுருவில் தோன்றி மறைந்தது. மின்னல் போன்று தோன்றி மறைந்த , தம் உயிரை மீட்டுத் தர வல்லது அமுதமே! அந்த அமுதத்தை மேற்கடலில் குளித்துக் கைப்பற்றிக் கீழ்க்கடலில் தரவல்ல அருஞ்செயலைச் செய்யவல்லவன், கதிரவனே! ஆதலால் ஏழு வண்ணங்க ளாகிய குதிரைகளை பூட்டிய தேரோனாகிய ‘’ஏழ் பரித் தேரோன் ‘’ மேலைக் கடலில் புகுந்தான். இதனைச் சேக்கிழார்,

    ‘’வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
    காட்டுவன் கடலைக் கடைந்து என்பபோல்
    பூட்டும் ஏழ்பரித் தேரோன் கடல்புக’’

    என்று பாடினார். இப்பாடற்பகுதி தற்குறிப்பேற்ற அணியின் பாற்படும். இயல்பாக நிகழும் இயற்கை நிகழ்ச்சியின் மேல் , புலவன் தன் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றம் ஆகும். இத் தற்குறிப்பேற்றத்தின் மேலும் அதனை விளக்குகிறார் புலவர். கீழ்க்கடலில் புகுந்து அமுதத்தைத் தேடக் கதிரவன் புகுந்ததாகக் கூறுவது சற்று மிகையான விளக்கம்.

    உலகில் நிகழும் நிகழ்ச்சிகளை எப்போதும் கண்டு சாட்சியுரைப்பது கதிரவன். அதனால்தான் கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதை, நிறுவக் ‘’காய்கதிர்ச் செல்வனே, கள்வனோ என்கணவன் ?’’ எனக்கேட்டாள். இவ்வாறு இயற்கை நிகழ்ச்சியில் தன குறிப்பை ஏற்றிக் கூறும் கவிஞர் , மேலும், பரவை நாச்சியாரை நாவலூரன் சிந்தை வேட்ட ‘’மின்னிடை இன்னமுதம் ‘’ என்று உருவகப்படுத்துவது மிக்க நயத்துடன் விளங்குவதைக் காண்கிறோம். இனிப் பாடலைப் பயில்வோம்.

    “நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
    வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
    காட்டுவன் கடலைக் கடைந்து என்பபோல்
    பூட்டும் ஏழ்பரித் தேரோன் கடல்புக.”

    இப்பாடலில் சுந்தரருக்கு இயற்கையே உதவும் சிறப்பைக் கண்டு மகிழ்கிறோம்!

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 48

    சேக்கிழார்  பா நயம் – 48

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    இளம் பருவத்திலேயே  முதிர்ந்த அறிவின் அடையாளங்கள் வெளிப்பட, சுந்தரர்

    கண்முன் தோன்றிய  பரவை நாச்சியாரின் பேரழகு  பற்றியது இப்பாடல். அம்மங்கை நல்லாளைக் கண்டவுடன் இறையருளால் சுந்தரருக்குக் காதலுணர்வு உண்டாயிற்று.

    இந்த உணர்வைக் களவியல் உணர்வு என்று  தொல்காப்பியம் கூறும். இளம்பருவத்தினர் இணைவிழைச்சுக் கொள்வது இயல்பு. பாவேந்தர் பாரதி தாசனர், ‘’காதல் அடைதல் உலகியற்கை!’’  என்றுபாடுவார். இக்காதல் உணர்வு, பிறர் அறிந்துகொள்ள இயலாத நிலையில், இருவருக்கும் இடையே ஏற்படும். இதனைக் ‘களவு’ என்ற இயலாக  இலக்கணம்கூறும். இக்களவியலின் தொடக்க நிகழ்ச்சிகளாகக் காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் ஆகிய நான்கும் நிகழும் ! இதனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். இதனைத் திருக்குறள் காமத்துப் பாலின்  முதற்குறள் விளக்குகிறது. 

    தலைவன் தலைவியை நெடுந்தொலைவில்  வரும்போதே கண்டுவிடுகிறான். அவன் தான்காண்பது ஓரு தெய்வத்திருவுருவோ? என்றுஎண்ணுகிறான், இதனை ‘அணங்கு கொல்!’  என்றெண்ணி ஐயுறுகின்றான்! பின்னர் தலைவி மேலும் நெருங்கி வரும்போது , சிறந்த உருவுடைதாய்த் தோன்றும் தேர்ந்தெடுத்த மயிலோ? என்பதை, ‘ஆய்மயில் கொல்லோ?’  என்று கருதுகிறான். அதன்பின் மேலும் நெருங்கி வரும்போது, அவள்காதில் அணிந்த குழையாகிய அணிகலனைக் காண்கிறான். அப்படியானால் காதில் நகையை அணிந்து கொண்டு நெருங்கி வருபவள் ‘பெண் தானோ?‘ என்ற  தெளிவற்ற மனநிலை கொள்கிறான்! இதனை, 

    ‘’அணங்குகொல் ,  ஆய்மயில் கொல்லோ  கனங்குழை
    மாதர்கொல்  மாலும்என் நெஞ்சு!’’

    என்ற  திருக்குறள்  படம் பிடித்துக்  காட்டுகிறது! காட்சி, ஐயம்,  தெளிவு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இத்திருக்குறள்  அமைந்து நம்மை வியப்படைய வைக்கிறது!  

    இதனைப் பரிமேலழகர், ‘.எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி ‘அணங்குகொல்’ என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, ‘ஆய்மயில்கொல்’ என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி ‘மாதர்கொல்’ என்றும் கூறினார்.  என்று மேலும்விளக்குவார்! இத்தகைய  காதல் நிகழ்வு சேக்கிழார் சுவாமிகளின்  பாடலில் விளங்குகிறது. 

    இதற்கு முதற்பாடலில் ‘’விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்!’’ என்றபகுதி இருவர்தம்  கண்ணும் ‘’ கண்ணொடு கண்ணிணை நோக்கு’’ ஒத்ததை நினைவூட்டுகிறது. அப்பாடலில் ‘’நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழையவர்’’ என்றபகுதி,  பரவையாரது இயற்கை செயற்கை என்ற இருவகைத் தெய்வீக அழகுகளையும் காட்சிபெற வைத்தவாறு. நம்பிகள் காட்சிக்குக் கவர்ச்சியுற முதலிற் புலப்பட்டது நகை. அதன் பின்னரே அதற்கிடமாகிய செவ்வாய் தோன்றிற்று. இவை யிரண்டினால் அக்காட்சியை அவர் உள்ளத்தே ஊன்ற வைத்தன மேலே கண்ட வில்லும் வேலும் ஆம். -ஆதலின் இம்முறை வைத்தார். ஊறுசெய்து உறுத்தியன ஆதலின் படையாகக் கூறியவாறு. வில் கைவிட்டகலாது தொழில் செய்வதுபோல் நுதலும் தானிருந்தபடியே செயல் விளைத்தது ஆதலின் வில் என்றார். வேல் உடையாரால் எறியப்பட்டு ஏவப்பட்டாரிடம் போய்ச் செயல் விளைக்கும்; ஆதலின் கண்ணை வேல் என்றார். இங்குக் கண் என்றது கண்ணின் தொழிலாகிய பார்வையை. அந்தக் கண்ணால் பரவையாருங் கண்டாராதலின் (288) “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனு மில“ என்ற திருக்குறளிற் கண்டவாறு நிகழ்ச்சி உண்டாயிற்று என்க. இக்காரணம் பற்றியே வரும்பாட்டில் விற்குவளை என ஒரு சேர வைத்து எண்ணியபடியாம்’’ என்ற   சிவக்கவிமணியார் உரையின் ஆழமும் அகலமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இது காட்சி !

    அடுத்து  ஐயம் என்ற  தொடர் நிகழ்ச்சி. பரவையாரின்  அழகிய தோற்றம் சுந்தரர் உள்ளத்தில்  பல்வேறு ஐயங்களை உண்டாக்குகின்றன! முதலில் அவர் தோற்றம்  தேவருலகக் கற்பக மரத்தின் பூங்கிளை போன்று காட்சி தந்தது.அதனைக்  ‘’கற்பகத்தின் பூங்கொம்போ?’’ என்று கருதுகிறார்!  

    கற்பக மரம்  வானுலகைச் சார்ந்தது. மண்ணுலகில் அதன் கிளைமட்டும் வந்ததோ? பரவையார்  வரும்போதே எங்கும் பரவிய நறுமணம் கற்பகப்பூவின் நறுமணமோ? மரக்கிளை என்ற  கருத்து முற்றப் பொருந்தவில்லை எனக்கருத்தினால், அத்தொடரை கற்பு+அகத்து+ இன்+ பூ+கொம்பு என்று பிரிக்கப்பெற்று, கற்பினை  அகத்தே கொண்ட இனிய மலர்க்கொத்து போன்ற மங்கை என்ற தொனிப் பொருள் தோன்றுகிறது ஆகவே இது கொம்போ? பெண்ணோ? என்றஐயம்தோன்றியது!

    அடுத்து பரவையாரை மன்மதன்,  தான் காதல் மலரம்புகளை எய்து சுந்தரரை வசப்படுத்தி   உயர்வாழ்வு அடைதற்கு உரிய வாழ்விடமாகக் கருதி வந்தானோ? 

    என்றகருத்தில் ‘’காமன் தன் பெருவாழ்வோ’’  என்று கருதினார்! மணிவாசகரின் திருக்கோவையாரின், 

     திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள், ஈசர்தில்லைக்
    குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங்காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
    மருவளர் மாலை, ஓர் வல்லியின் ஒல்கி, அனநடை வாய்ந்து
    உருவளர் காமன்தன் வென்றிக்கொடி  போன்று? ஒளிர்கின்றதே!

    என்ற பாடலில்  உருவளர் காமனின்  வெற்றிக்கொடி போன்று  என்ற உவமை பரவை நாச்சியாருக்கும்  பொருந்துகிறது.இதில் பூங்கொம்பு என்ற தொடரின் பொருளும் இணைகிறது!

    அடுத்து அழகிய புண்ணியங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த பெரும்புண்ணியமோ? என்று பரவையாரின் தோற்றம் சுந்தரரைக் கருதவைக்கிறது !  அல்லது அழகு என்றபொருளின் பயன்கள் பலவற்றுள் சிறந்த புண்ணியப்பயனோ? என்றுசுந்தரர்கருதுகிறார். புண்ணியம் காட்சிப் பொருள் அல்லவே! அதுவோ,  பெண்வடிவமோ? என்ற ஐயம்தோன்றும் காட்சி இது! இதனை,’’ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ?’’ என்ற பாடல்வரி புலப்படுத்துகிறது. 

    இது நிலத்தில் கால்பதித்து  முளைத்த கொடியோ? இக்கொடியில் வில், குவளை, பவளம், மலர், மதி ஆகியவை பூத்துக் காணப்  படுகின்றனவே? ஒரு கொடி மேகத்தைத் தலையில் சுமந்துகொண்டு வில் , பவளம், மதி ஆகிய வேறுபட்ட பொருள்களுடன், குவளை மலர்களையும்   ஏந்திக்கொண்டு மிகுந்த வாசனை வீசித் தோன்றுவது போல் இருக்கின்றதே! உலகில் இல்லாத கொடியோ? உள்ள பெண்ணோ? என்பது ஐயப் பொருள் தருகிறது! இதனை,

    ‘’புயல் சுமந்து  வில் குவளை பவள மலர் மதி பூத்த  விரைக்கொடியோ?’’  

    என்று   சேக்கிழார்  பாடுகிறார்! ஒருபெண்ணின் மேகம்போன்ற கூந்தல், வில் போன்ற புருவம், குவளை  போன்ற விழிகள், பவளம் போன்ற இதழ்கள், கோங்க மலர் போன்ற கொங்கை, மதி போன்ற நுதல் ஆகியவற்றை உருவகம்  செய்யும் சொல்லாட்சித் திறம் பெற்றது இப்பகுதி! பெண்ணின் அங்கங்கள் இன்று படிப்போருக்கும் காட்சிப்பொருளாக அமைந்தது. அன்று  நேரில் கண்ட போது, சுந்தரர் மட்டுமே உணர்ந்த மலரின் நறுமணம் ‘’ விரைக்கொடி’’ என்ற தொடரில் அமைந்தமை இன்புறத் தக்கது.  

    அடுத்து சுந்தரருக்குப் பெருமிதமும் தரும்ஓர்உள்ள நிகழ்ச்சி கூறப்பெறுகிறது. இதுவரை கண்டறியாத புதுமையை  பரவையார் தோற்றத்தில், சுந்தரர் உணர்ந்தார் . ஆதலால், ‘’அற்புதமோ?’’ என்று கருதினார். அவர் மட்டுமே உணர்ந்த அனுபவம், அது!  இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பெற்று இறைவன் திருவுள்ளப் பாங்கின் வண்ணமே வாழும் சுந்தரருக்கு இக்காட்சியும் இறைவன் திருவருளாகவே  தோன்றியது. ஆதலால் இதனை ‘’ சிவனருளோ?’’ என்றார்.

    இந்நிகழ்ச்சி, ஐயம் என்ற துறையாதலின் ஐயத்தின் இலக்கணமாகிய அறிவும் அறியாமையும் கலந்த உள்ள நிகழ்ச்சியைக் குறிக்கின்றமை உணர்க.   கொம்போ – வாழ்வோ – புண்ணியமோ – 

    கொடியோ – அற்புதமோ – இவற்றில் ஒன்றோ, அன்றி முற்றும் கலந்ததோ, பிறிதோ என்று அறிவும், துணிவுபடாமையின் அறியாமையும், கூடி அறியேன் எனப் பெற்றது. 

    அதிசயித்தார் – இதுவும் அற்புதம் போலவே பெருமிதமும் இன்பமும் கலந்த தொரு உள்ள நிகழ்ச்சியேயாயினும் இன்னதென்று அறிந்து அனுபவிக்கப் பெறும். “அதிசயம் கண்டாமே“ என்ற (திருவாசம்) அதிசயப்பத்து முடிபுகளைக் காண்க. 

    மேலே சொல்லிய கருத்துக்கள் நம்பிகளது உள்ள நிகழ்ச்சிகளாம். மனதுக்குப் புலனாய் அறிந்து உரைக்கப்படுதலின் அதிசயித்தார் என்பதாம்.

    முதலில் தெய்வ மணமும், தெய்வ வொளியும், தெய்வ அழகும் கொண்ட ஒரு பொருள் நம்பிகளது காட்சிக்குட்பட்டது. அதனைக் கொம்போ என்றார். பின்னர் அதன் அழகு மிகுதி நோக்கிக் காமன் வாழ்வோ என்றார். அந்த அழகு வெறுங் கீழ் நிலைப்பட்டதாய்த் தோன்றாமல் புண்ணிய விளைவாய்ப் புலனானமையின். “புண்ணியமோ“ என்றார். இவ்வளவும் நிருவிகற்பமாகிய பொதுக் காட்சியாம். 

    இனி அவ்வாறு மணமும் அழகும் ஒளியும் பிரித்துணர்ந்து இன்னின்னவற்றால் விளைந்தன வென்று கூறுபடுத்தி அறியும் உள்ளநிலை உண்டானபடியால் ‘வில் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ’ என்ற சவிகற்பமாகிய சிறப்புக் காட்சியாயிற்று. இவ்விரண்டினோடு அமையாமையின் அற்புதமாயிற்று. அதன் பின்னர் அவனருளே யன்றி வேறு பற்றுக்கோடு தமக்கின்மையின் முன்னினைவின் குறிப்புத் தோன்றவே சிவனருளோ? என்ற மன நிகழ்ச்சியாயிற்று.

    இவையனைத்தும்  சிவக்கவிமணியாரின் விளக்கம்! இனி முழுப்பாடலையும்  பயின்று பயன் பெறுவோம்!

    கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? 

    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து 

    விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ? 

    அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்

    இப்பாடலின்  நயங்கள் அனைத்தும்  எண்ணியெண்ணி மகிழ்தற்கு  உரியன. 

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 47

    சேக்கிழார்   பா நயம் – 47

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ஒருநாள்  திருவாரூர்  வீதி வழியே தம் சேடியர்களோடு திருக்கோயில் நோக்கிப் பரவையார்  சென்றார். அவர் முன்பு கைலாயத்தில் மலர்களைக்  கொய்து தம் நாயகியாகிய உமையம்மை பூசைக்கு உதவியவர். அதன் தொடர்ச்சியாகத் திருவாரூரிலும் புற்றிடங் கொண்டாருக்கும், அன்னை கமலாம்பிகைக்கும் வழிபாடு செய்யப் பூக்களைப் பறித்து அளித்தார். அவற்றை இறைவியின் நிர்மாலியமாய்த் தலையில் சூடிக்கொண்டார். அதனால் அப்பூக்களின்  தெய்வமணம் ஊரெங்கும் கமழ்ந்தது! 

    இறைவழிபாட்டை  மட்டுமே அவர் தம் அன்றாடக்  கடமையாகக் கொண்டிருந்தார். திருவாரூர்த் தியாகராசப் பெருமானின் திருவுருவைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதற்காகத் தம் சேடியருடன் மெல்ல நடந்து சென்றபோது சுந்தரர்,  இறைவன் திருவருளினால் பரவை நாச்சியாரைக் காண நேர்ந்தது. அப்போது அவர் திருவடிகளில் சிலம்பும், இடையில் மேகலையும், கூந்தலில் சூடிய மலர்களைச் சூழ்ந்த வண்டுகளும் ஆரவாரம் செய்தன!   

    அவருடைய  பேரழகு மிகப்பேரழகியான கமலாம்பிகைக்குத் திருப்பணி செய்தமையால் தமிழகமே போற்றிப் புகழும் அளவுக்கு ஒளிவீசி விளங்கியது!

    அதனால்  அவள் அழகிய பாதங்களில் அணிந்திருந்த சிலம்புகள், ’’ இவள் பாதங்கள் இந்தப் பாருலகினையே வென்று தம் அடிமைப்  படுத்தி விட்டமையால். இந்த நிலமே இவற்றைப் பணிந்து தாங்குகின்றன!’’ என்று ஆரவாரம்  செய்கின்றன! ஆகவே அவள் பாதங்கள் நிலவுலகையே அடிமைப்படுத்தின! அடுத்து அவளுடய இடை, அழகிய நாகம்போன்ற அல்குலின் மேலே   மணிகள் கட்டிய மேகலைகளை அணிந்து விளங்குகின்றது. ஆகவே அவர் இடையில் அணிந்த மணிமேகலை, ‘’இவள்அழகு கீழே அரவம் திகழும் நாகலோகத்தினை அடிமைப்படுத்தி விட்டது,! என்பதைப் புலப்படுத்தி ஆரவாரிக்கின்றன!  அடுத்து பரவையாரின் கரிய மேகத்தை வென்ற கூந்தலில் சூட்டிக்கொண்ட பூக்களின் மணத்தையும் தேனையும் நுகரும் ஆவலில் வண்டுகள் சூழ்ந்து பறந்து, ரீங்காரிக்கின்றன! வண்டுகள், ‘’ எம் தலைவியின்  கூந்தலின் கருமைக்கு வானத்தின் மேகங்கள் தோற்றுவிட்டன, அதாவது வானுலகே தோற்றுவிட்டது!’’ என்று அறிவிக்கின்றன! 

    மூன்று அங்கங்கள் முறையே மூன்று உலகங்களை வென்றதற்கு அடையாளமாக, மூன்றுபொருள்கள் ஆர்த்தன. மேலும் – நடுவும் – கீழும் உள்ளன மூவுலகங்கள் என்பர். இவையேசுவர்க்க மத்திய பாதலமாம். 

    மூவுலகையும் வெல்லுதலாவது இம்மூன்று உலகத்திலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரு மில்லையாதல். தமிழ் நூற்களின்படி இதுவே தலைவியினது இலக்கணமாதலின் இவ்வாறு கூறினார். ஒவ்வோர் உலகை வென்றதற்கு ஒவ்வோர் பகுதி காரணமும் உதாரணமு மாயிற்று!.

    இனிப்பாடலை   முழுவதும் படித்துப் பயில்வோம்.

    “அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப  
    மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
    துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
    பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.”

    இதனை   உரையாசிரியர்  மேலும் விளக்குகிறார். பரவையாரது அடிகள் மண்ணை அடிப்படுத்தி மிதித்தற் றொழிலாலும், அல்குல் அரவுலகை அரவரசாகிய நாகத்தினும் மிக்க வடிவினாலும், காஞ்சியில் உள்ளனபோன்ற மணிகள் அரவுகளில் இல்லாமையினாலும், குழல் மேகத்தின் மிக்க நிறத்தாலும் வென்றதை, முறையே, அங்கங்குள்ள சிலம்பும் – காஞ்சியும் – வண்டுகளும் தெரிவித்து ஆர்த்தன என்க. மண் அடிப்பட்டது; விண்பணிந்தது; ஆனால் அரவுலகு உறுதியாய் வெல்லப்பட்டது; ஆதலின் இதைத் தெரிவிக்குமாறு ‘துணிவு கொண்டு காஞ்சி ஆர்க்க’ என்றமை  காண்க.      

    விண் – புண்ணியத்தால் வரும் இன்பானுபவமும், மண் – புண்ணிய பாவங்களால் வரும் மிச்சிரமாகிய கலப்பு அனுபவமும் பெறும் இடங்கள் ஆதலின் இவற்றைக் கீழ்ப்படுத்தலே அமையும். ஆனால் அரவுலகு என்ற கீழுலகம் பாவத்தால் விளையும் துன்பானுபவத்திற்கே உரியதாதலின் அது முற்றும் வெல்லப்பட்டொழிதல் வேண்டும் என்பதுபற்றி “வென்ற துணிவுகொண்டு“ என்றதாம். துணிவுகொண்டு – அடியும் குழலும்போல வெளித் தோற்றாது, அல்குலினது செயல் காஞ்சி யணியின் தன்மையால் அனுமானித்துத் துணியப்படு பொருளாதலும் குறிப்பாம். 

    அடி – அல்குல் – குழல் – பாதாதிகேச வருணனை. மண்ணும் அரவுலகும் அன்றி விண்ணும் என்ற பொருளில்வந்த இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம். பரவையார் என்ற பெண்மணியின் அவதாரத்தால் சிவத்துவம் விளங்க நாகலோகம் தூர்ந்து ஒழியக் காரணமாயிற்று என்ற குறிப்பும் காண்க. இதனால் பரவையார் மறுகுசூழ ஒப்பற்ற இறைவனை  வணங்கப்போந்த நடைச் சிறப்பும், பயனும் கூறியபடி.’’ என்று உரையாசிரியர் விளக்குகிறார்!

    பரவை நாச்சியார்  இறைவனது கருணையால்  நிலவுலகிற்கு அனுப்பப் பெற்றமையால்,  அவருடைய தனிச் சிறப்பு வாய்ந்த தகுதி  இப்பெரிய புராணத்தில் விளங்கும். அதனாலேயே  இறைவன் தம் திருப்பாதங்கள் ஆரூர் வீதியில் படிய, இருமுறை தூது நடந்தார். இப்பாடல்  பரவை நாச்சியார் மற்றைய பெண்களிலும் மேம்பட்டவர் என்பதை சேக்கிழார் பாநயம் புலப்பட

    விளக்குகிறார். பெண்ணின்  பெருமையைப் போற்றும் பகுதி இது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 46

    சேக்கிழார் பா நயம் – 46

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ————————————————–

    திருக்கயிலையில் இறைவன் காட்டிய அருட்கருணையால் கமலினிக்குத் திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றி வளரும் நல்வாய்ப்புக் கிட்டியது. திருக்கயிலையில் தவறான நோக்கமின்றிச் செய்த ‘சிறுகுறையும் நல்லதையே செய்யும்’ என்பதைக் கமலினியார், நாடே போற்றி மதிக்கும் பரவையாராக வளர்ந்த பாங்கு புலப்படுத்தும்.

    சுந்தரரின் மனங்கவர்ந்த மங்கையாக, இறைவனையே தூதராகக் காணும் பேறு பெற்றவராக, திருவாரூரினுள் யாவரும் மதிக்கத்தக்க பெண்ணடியாராக விளங்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் வணங்கத் தக்கவரே யாவார். இனி அடுத்த பாடலில் பரவையார் பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து இறைவன் சேவடியையே கருதி வளர்ந்த சிறப்பைக் கூறுகிறது.

    தளர் நடைப் பருவம் கடந்து பரவையார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெற்று வளர்கிறார். அவருடைய அகன்ற சிறு கண்கள் இளம் பெண்மான் குட்டியின் விழிகளைப் போல ஒளிவீசி விளங்குகின்றன. அவருடைய மார்பு சற்றே வளர்ந்து தாமரை மொட்டுப்போலத் திகழ்கின்றன. அவருடைய மொழி தேனுண்ணும் வண்டுகளைப் போல் ஒலிக்கிறது. அவருடைய மெல்லிய இடை , பவளக் கொடிபோல் விளங்குகிறது. அவரது நெற்றி இளம்பிறையின் கொழுந்து போல ஒளி வீசுகிறது. அவருடைய வளைந்த புருவங்கள் காமவேள், மலரம்புகளைஎய்து, மக்களைக் காமத்தில் வீழ்த்துவதற்கான பயிற்சியைக் கற்றுக்கொள்ளும் சிறிய வில்லோ? என்றெல்லாம் பறவையாரைக் காணும் சுற்றத்தாரும், பெரியோரும் போற்றுகின்றனர்.

    இந்தப் பாடலில் மானிளம் பிணை, இளமுகை, இளந்தேன்பதம், இளம் பவளக்கொடி, நிலவின் இளங்கொழுந்து, காமனின் இளையவில் என்ற உவமைகள்,அவரது இளமையையும் , கண், மார்பு,மொழி, இடை,நெற்றி, புருவம் ஆகியவற்றையும் உருவகித்துக் காட்டுகின்றன. அவருடைய அங்கங்களைக் குறிப்பிடாமல் , உவமைகளின் மூலம் அவற்றின் அழகையும் இளமையையும் குறிப்பிடுவது பாடலின் நயத்தைப் புலப் படுத்துகிறது. இனிப் பாடலைப் படித்தறிவோம்.

    “மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
    தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
    கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
    தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.”

    இப்பாடலில் இளம் என்ற சொல், இளமையான என்ற பொருளுடன் எட்டுமுறை அமைந்திருக்கும் அழகினைச் சொற்பொருட் பின்வரு நிலை அணி என்று கூறுவர்! ஆறு அங்கங்களின் இளமையை , இளம் என்ற சொல்லை எட்டுமுறை அமைத்து வருணிப்பது நுட்பமாக உணரத் தக்கது. இந்த ஆறு உறுப்புக்களும் மக்கள் எண்ணுவதை விட மிகவும் இளமையுடன் காட்சியளித்தன, என்று சேக்கிழார் பெருந்தகை நயம்படக் கூறுகிறார்.

    இளம்பெண்ணான பரவை நாச்சியாரின் வளர்ச்சியை அவர்தம் பண்பு நலன்கள் இனிப் புலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை இப்பாடல் உருவாக்குகின்றது.

    “முதுக்குறைந் தனளே , முதுக்குறைந்தனளே ,
    மலையன் ஓள்வேற் கண்ணி
    முலையும் வாரா முதுக்குறைந்தனளே! ‘’

    என்ற பழம்பாடலை இது நினைவூட்டுகின்றது.

    .

    Share
  • சேக்கிழார் பா நயம் – 45

    சேக்கிழார் பா நயம் – 45

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    —————————————————

    முன்பொரு காலத்தில் கைலாய மலையில் கமலினி, அனிந்திதை ஆகிய இருவரும் பார்வதியன்னை பூசைக்கு மலர் கொய்து தொடுத்தளிக்கும் பணி புரிந்தனர். அவர்களைக் கண்டு தன்னிலை மறந்த சுந்தரரை இறைவன் ‘’மாதர் மேல் மனம் வைத்தனை, ஆதலால் தென்திசையில் பிறந்து, அம்மங்கையருடன் வாழ்ந்து, பின்னர் சிவலோகம் அடைவாய்’’ என்று அனுப்பினார். அவ்வகையில் அப்பெண்களும் தென்னாட்டில் அவதரித்தனர். அவர்களுள் கமலினி என்ற மங்கை, திருவாரூரில் தோன்றிய சிறப்பை இப்பாடல் கூறுகிறது!

    கமலினியார் திருக்கயிலாய மலையில் இறைவிக்கே அணுக்கத் தொண்டு புரியும் பெருமை பெற்றவர். அவர் இம்மாநிலத்தில் பிறந்த நிகழ்ச்சியை அவதரித்ததாகக் கூறும் சிறப்பை உற்று நோக்க வேண்டும். இறைவனைத் தவிர வேறெவரையும் தமக்குப் பதியாகக் கருதாத உயர்குலமாகிய ”பதியிலார் ‘’ குலத்தில் அவர் தோன்றினார்!

    அப்பதியிலார்குலம் என்பது சிவனடியார்களின் வேண்டுகோளால் , பெருந்தவத்தால் கிட்டுவதாகும். இதனை

    “உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே யெம் கணவ ராவார் அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்“
    …………………………………………………………………………….
    “எம் கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
    எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க“

    என வரும் திருவெம்பாவைத் திருவாசகங்களிற் காண்க.
    அவர்கள் குலத்தை உருத்திர கணிகையர் குலம் என்பர்.அக்குலத்தவர் அரன் சார்பும், அடியார் சார்பும் உடையவர்கள் ஆதலால் அவர்கள் உயர்ந்த மணிகளுக்கு இணையானவர்! அக்குலத்தார் செய்த நீண்ட தவத்தால் கமலினியார் பிறந்தார். அவருக்கு சாதகர்மம் நாமகரணம் என்ற சாதகம், பெயர் ஆகியன சூட்டும் சடங்குகளை முறையாகச் செய்தார்கள். ஆதலால் கமலினியாருக்குப் பரவையார் என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘’முருக வாங்கி கடைய முன் நிற்கும் ‘’ என்ற திருமுறை வாசகத்தின்படி, அவர் பிறந்த நிகழ்வை,

    ‘’கதிர்மணி பிறந்ததென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்தில் தோன்றி ‘’

    என்று சேக்கிழார் பாடுகிறார். உருத்திர கணிகையர் மரபு வேறு, சேரிப்பரத்தையர் மரபு வேறு! இவர்கள் செய்த திருக்கோயிற் பணிகளைப் பின்னாளில் பரத்தையர் கைக்கொண்டனர் என்பது வரலாறு. இதன் விரிவை , காமிகாகமம், ஆசாரிய லட்சணப்படலத்தின் சுலோகங்களில் காணலாம்.

    இச்சை ஞானம் கிரியை என்ற சிவசத்திகள் மூவரின் நூபுரச் சத்தத்திலிருந்து முறையே உருத்திரகணிகை, உருத்திரகன்னிகை, உருத்திரதாசி என்ற மூவகையார் உண்டானார்கள் என்று காமிகாகமம் பேசும். இவர்களது இலக்கணங்களையும் ஒழுக்கங்களையும், இவர்கள் ஆலயங்களில் முறையே செய்யவேண்டிய திருப்பணிகளையும், ஆங்கு விரிவாய்க் காணலாம். உருத்திரகணிகை, மகாமண்டபம் முதல் கருப்பாவரணப்பிராகாரம் வரை திருவலகு திருமெழுக்கு இட்டுப் பஞ்சசூர்ணங்களினால் அலங்கரித்துச், சுத்தமாயிருந்து, பூசை நேரங்களில் தீபங்களை ஏந்தியும், கானம் செய்தும், நிர்த்தனம் செய்தும், உபசரிக்கத்தக்கவள். சுத்தம், மிசிரம், கேவலம் என்ற மூவகை நிர்த்தனங்களிலே சுத்தநிர்த்தனமே உருத்திரகணிகைக்கு விதிக்கப்பெற்றது. ஆசாரியனால் பொட்டு அணியப் பெற்று அவனை நாயகனாகக்கொள்வதும் இவளுக்கு உரியதாம். இன்னும் இவ்வாறே தூர்க்கை இலக்குமி சரச்சுவதி என்ற இவர்களுடைய பாதச் சிலம்பொலியினின்றும் முறையே இராசகணிகை, கிராமகன்னிகை, தாசி என்பவர்கள் உண்டானார்கள் எனவும் இவர்கள் இலக்கணம், கடமை, வாழ்க்கைத் திறம், மரபுவளர்ச்சி முதலியவை இன்ன எனவும் ஆங்கே விரிவாய்க் கூறப்பெற்றுள்ளன.

    இவைபற்றிப் பற்பலவாறு ஆராய்ச்சிகள் எழுந்து பெருமயக்கிற் கிடந்தந்தன. இவ்விருசாராரையு மின்றிப் பெண்கள் தம்மை இறைவன் பணிக்கே ஒப்புவித்துத்துறவுபூண்டுஒழுகியவர்களுமுண்டு. அன்னார் எக்குலத்தாராயினும் ஆகலாம். அவர் மேற்கூறிய இருமரபினருடன் மயங்கியறிதற்பாலரல்லர். முதலிற் பெண்டிர் துறவிகளாயிருந்து, பின்னர் மரபு வளர்ச்சிக்குரிய உருத்திரகணிகையராகி ,அதன்பின் அவர்களே நாளடைவில் பரத்தையர் குலத்தவராயினர் என்று கூறுவாருமுண்டு. இவையெல்லாம் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்பச் செய்திகளைப் பொருத்தி முடிபு செய்யும் தவறான ஆராய்ச்சிமுறையாம். பரத்தையர் சேரியும், பரத்தையிற் பிரிவும் தொல்காப்பியம் முதலிய மிக்க பழந்தமிழ் நூல்களிற் பல்லாயிர ஆண்டுகளின் முன்னரே பேசப்பெற்றன.

    “ஏமப்பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்,
    தாமேசெல்லுந் தாயரு முளரே“,
    “பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி,
    யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ,
    டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன“

    என்பன முதலிய தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்களையும், அவற்றின்கீழ் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையையுங் காண்க. இவற்றிற் கிலக்கியங்களாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் முதலியவற்றிற் காணும் பரத்தையிற்பிரிவு முதலிய துறைகளையுங் காண்க.

    ‘உண்மை இவ்வாறாகவும், பண்டைநாளில் இவர்களுக்கு மரபு வளர்ச்சி கிடையாது என்றும், உலக வாழ்விற்குத் தகுதியற்ற பெண்கள் இறைவனையே பதியாகக் கொண்டொழுகினர் என்றும், பின் மற்றும் சிலர் அவர்களோடு கலத்தலாகி உலக இன்பம் துய்த்துக்கொண்டு இறைபணி செய்ய எண்ணினர் என்றும், பின்னாளிற் கோயிற்றலைவர்களின் அடக்குமுறையால் கொடுமைக்கு ஆளாகி நாளடைவில் வேசையராயினர் என்றும் இவ்வாறு எழுந்த ஆராய்ச்சிகள் உண்மை நிலைக்கு மாறானவை என்று காணலாம்.
    இப்பெருமை மிக்க குலத்தில் தோன்றிய பரவையார் உருத்திர கணிகையர் ஆதலால், உருத்திரனுக்கு உரிய திருவாதிரை நன்னாளில் ,சாதம் எழுதுதல், திருப்பெயர் சூட்டுதல் ஆகியவற்றை மேன்மை மிக்க சான்றோர் இயற்றினர். இதனைச் சேக்கிழார்

    ‘’விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.
    ,
    என்று பாடியுள்ளார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் .

    கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்துள் தோன்றி, பரவையார் என்னும் நாமம்
    விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி ‘

    இப்பாட்டில் மதியணி புனிதன் நன்னாள் என்று சிவபெருமானுக்கு உரிய நன்னாளாகிய திருவாதிரை நாளைக் குறித்துள்ளார்.

    “மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
    முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
    ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
    ஊர்திரைநீர் வேலி உலகு !’’

    என்று இதனை முத்தொள்ளாயிரப் பாடல் கூறுகிறது. சிவபெருமானுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவரே நாளையும், நட்சத்திரத்தையும் நிலவையும் கதிரவனையும் படைத்தவர்! ஆதலால் சிவபெருமானைத் திருவாதிரை நாளில் தோன்றியவர் என்று ஏதோ ஒருகாரணம் கருதி உலகியல் வழக்கில் உரைப்பர். சிவபிரான் நிலவைச் சடையில் சூடிக்கொண்ட நாள் திருவாதிரை நாளாகஇருக்கலாம்! இதனையே பரவை நாச்சியார் தோன்றிய நாளாகக் கருதியது அவர்தம் காலத்தை வென்ற சிறப்பைக் குறிக்கிறது!!

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 44

    சேக்கிழார்   பா நயம் – 44

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ——————————————-

    திருவாரூரில்  இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக  வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி  ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே  அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட  பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி,  ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத்  தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய்  நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட  திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை  அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!    

    இப்பாடல்  ‘வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது!  இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள் கொள்ள வேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள்’’ என்ற தொடர்  ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட‘’ என்று  பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது, ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த  புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங் கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற  திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும்  இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர்  என்றும் பொருள் கொள்ளலாம்! 

    இறைவனின் சிறப்பினை உணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி,  ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றி தாமே பிரமாணமாக உள்ளார்‘’   என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல் 

    தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர் பெரியோர்!  உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார். 

    “வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என்?
    நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
    ஓதி அங்கம்ஓர் ஆறும் உணர்த்தின்என்?
    ஈசனை  யுள்கு   வார்க்கன்றி  இல்லையே!’’

    என்ற  அப்பர் தேவாரம்  இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்!  சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,

    ‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’  என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன்   செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர்   ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்க வந்தவர் என்பர்! 

    இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற  தொடருக்கு  ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!  

    எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி,  இப்பாடலை  முழுமையாகப்  படித்துப் பயில்வோம்! 

    ‘’வாழிய  மாமறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார்  அருளால் ஓர் வாக்கு
    ‘’தோழமையாக   உனக்கு நம்மைத்
       தந்தனம் .  நாம்முன்பு தொண்டுகொண்ட
    வேள்வியில்  அன்றுநீ கொண்ட கோலம் 

    என்றும் புனைந்துநின்  வேட்கைதீர
    வாழிமண்  மேல்விளை யாடுவாய்’’என்று
       ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’

    என்ற  இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை  ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.

    அதனை இனி  வருங்காலத்தில்‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர  வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது!    பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து  கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!   

    Share
  • சேக்கிழார் பா நயம் – 44

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ——————————————-

    திருவாரூரில் இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி, ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத் தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!

    இப்பாடல் ‘ வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது! இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள்கொள்ளவேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள் ’’ என்ற தொடர் ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட ‘’ என்று பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது , ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங்கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும் இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர் என்றும்பொருள்கொள்ளலாம்!

    இறைவனின் சிறப்பினைஉணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி, ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றித் தாமே பிரமாணமாக உள்ளார் ‘’ என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல்
    தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர்பெரியோர்! உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார்.

    “ வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என் ?
    நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
    ஓதி அங்கம் ஓர் ஆறும் உணர்த்தின்என்?
    ஈசனை யுள்கு வார்க்கன்றி இல்லையே!’’

    என்ற அப்பர் தேவாரம் இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்! சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,

    ‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’ என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர் ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்கவந்தவர்என்பர் !

    இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற தொடருக்கு ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!

    எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி, இப்பாடலை முழுமையாகப் படித்துப் பயில்வோம்!

    ‘’வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார் அருளால் ஓர் வாக்கு
    ‘’தோழமையாக உனக்கு நம்மைத்
    தந்தனம் . நாம்முன்பு தொண்டுகொண்ட
    வேள்வியில் அன்றுநீ கொண்ட கோலம்
    என்றும் புனைந்துநின் வேட்கைதீர
    வாழிமண் மேல்விளை யாடுவாய்’’என்று
    ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’

    என்ற இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.

    அதனை இனி வருங்காலத்தில் ‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது! பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 35

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருவதிகை வீரட்டானத்தில் சித்த வட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி தலைமேல் திருவடியைப் பலமுறை வைத்தருளியதன் உட்பொருளைச் சுந்தரர் உணர வில்லை. அவருக்கே உரிய இறுமாப்புக்கொண்டு இறைவனிடமே கேள்விகேட்டார்! இறுமாப்பு என்பது தன்னை அறியாத தருக்கு! அது தலைவனையும் அறிந்து கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளிவிடும்! அதனால் தம்செயல், இறுமாப்பினால் அதாவது செம்மாப்பினால் விளைந்தது என்பதை ’’செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் !’’ என்று வருந்தும் நிலைக்குத் தள்ளியதே என்று சுந்தரர் கூறுகிறார்! அதன் பின்னர் அவர் தெளிவடைகின்றார். இங்கே இறைவன் சுந்தரர் தலைமேல் பலமுறை திருவடியை வைத்தது, அவருக்கு அவர் நிலையைத் தெரிவிக்கவே என்பது புலனாகின்றது. அருணகிரிநாதர் தம் தலைமேல் முருகன் திருவடி பட்டமையால் நிகழ்ந்த நன்மையைக் கூறுகிறார்!

    ‘’அவன் கால் பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!’’ என்பது அவர் இயற்றிய கந்தரலங்காரம்! இதனைச் சித்தாந்தம் ‘’;திருவடி தீட்சை’’ என்று கூறும். இவ்வாறு வலிய வந்து சிவபெருமான் தம்திருவடியால் சுந்தரருக்கு ஞானம் தந்தார் .அதனால் யான் அறியாமையால் தவறு செய்தேன் இப்போது அறிவு பெற்றேன்! அதனால் ‘’எத்தகைய தவறுசெய்தேன்! ‘’ என்று வருந்துகிறார். அதனால் தம் இழிந்த மனநிலைமையால், தம்தலைவரைக்கூட அறியாத தொண்டனாகி விட்டேனே! என்றுவருந்தி,

    ‘’தம்மானை அறியாத சாதியார் உளரே!’’ என்று கூறுகின்றார். அனைவருக்கும் தலைவராய், வீரட்டானம் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவபிரானை நினைக்கிறார்! அப்பிரான் ஆணவத்தால் எதிர்த்து வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்து அணிந்த வீரச் செயல் புரிந்த தலம், வீரட்டானம்! ஆகவே செம்மாப்பை, – இறுமாப்பை விலக்குவதற்காக அவர் திருவடி பதித்தார்! முன்பு திருக்கைலையை விட்டுநீங்கிய நிலையில் நினைவால் ஞானம் தரும் ‘’மானஸ தீட்சை’’ எனப்படும் திருவுள்ளதீக்கை யாலும், திருவருட்டுறையில் காட்சிதந்தபோது, நேரில் கண்டு ‘’சட்சுதீட்சை’’ எனப்படும் திருக்கண் தீக்கையாலும், பின்னர் அந்தண வேடத்துடன் சித்தவடமடத்திற்கு வந்த போது, திருவடி தீட்சை எனப்படும் பரிச தீக்கையாலும், ‘’எம்மைப்பாடு!’’ என்றபோது, உபதேச தீட்சை எனப்படும் வாக்குத் தீக்கையாலும், தடுத்தாட் கொண்டார். இவையனைத்தையும் தம் திருப்பாடலில், சேக்கிழார் அமைக்கிறார்.

    ‘தம்மானை அறியாத சாதியாருளரே’ – இது உண்மையுணர்ந்தவுடனே நம்பிகள் பாடிய திருப்பதிகத்தின் முதற்குறிப்பு. தமது தலைவனையும் அறிந்துகொள்ளாத வகுப்பாரும் உலகத்தில் உண்டோ? சாதியார் – வகுப்பினர் – வகையிலே – பட்டவர் – அறியாத வகையினர். சாதி – வகுப்பு என்ற பொருளில் வந்தது. தமது தலைவனைத் – தம்மை ஆளாகக்கொண்டு காக்கின்றவனைத் தமது நலங்கருதியேனும் யாவரும் அறிவர். அவ்வாறு அறியாத வகையினர் உலகில் இல்லை என்றபடி. உளரே – ஏகார வினா இல்லை என்ற விடை குறித்து நின்றது. வேறு ஒருவரும் இல்லை; ஆயினும் யான் ஒருவன் இறைவனை யறியாது இறைபோதும் இகழ்வன் போலும் என்பது பதிகக் கருத்து. முன்னர் ஆணவ மறைப்பினாலே ‘பலகாலும் மிதித்தனை’ என வெறுத்த அந்தக் கழலையே மறைப்பு நீக்கம் பெற்ற இப்போது பணிந்து துதித்தார்.

    (1) எம்மான்ற னடிக்கொண்டென் முடிமேல் வைத்திடு மென்னு மாசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் – இது திருவடி தீக்கையிலே நம்பிகள் ஆசை வைத்திருந்ததைக் குறிக்கும் “இறைதாள் புரிவுடைய மனத்தினராய்“ என்ற சரிதத்துக்கு அகச்சான்றாம். அறிவிலா நாயேன் – முன்னர் வழக்கு இட்டபோது அறியாததுபோலவே இன்றும் இறைவர் தாமே வெளிவந்தபோதும் அறியாமலிருந்ததற் கிரங்கிய கூற்று.

    (2) முன்னே எம்பெருமானை மறந்தேன்கொல் மறவா தொழிந்தேன்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன். இதுவும் நம்பிகளது அறிவு நிலையை மிக நன்றாக உணர்த்தும் அகச்சான்றாம்.

    (3) வளராத பிறையும் வரி அரவும் உடன்றுயில வைத்தாளும் எந்தை – உடன்றுயில
    – ஒன்றாய் வாழ; வளராத பிறை –

    ‘மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமே னாகந்
    தெறுமென்று தேய்ந்துழலு மாவா – உறுவான்
    தளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
    வளருமோ பிள்ளை மதி’

    – காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி – 36

    காண்க.

    4) நாற்றானத் தொருவனை – ‘இது நாலா நிலையாகிய சிவயோகத்தைக் குறிக்கும் என்பர். நாற்றானத் தொருவனை – என்பது திருக்களிற்றுப்படி. நின்மல துரிய நிலையே தசகாரியத்துள் சிவயோகநிலை. சிவம் தெளிவாக விளங்கும் நிலை இதுவே! நம்பிகள் ஞானயோக நெறியை விளக்கவந்த ஆசாரியராதலும் காண்க

    “பத்திப்போர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள் வாய்ப்
    பாலே போகா மேகாவாப் பகையறு வகைநினையா
    முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
    மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச்
    சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
    சேர்வார் தாமே தானாகக் செயுமவன்’’

    தலவிசேடம் – அட்டவீரட்டங்களில் ஒன்று. திரிபுரமெரித்த வீரம் நிகழ்ந்த தலம். அப்பர் சுவாமிகளை ஆட்கொண்ட வரலாறு அப்புராணத்துக் காண்க. திலகவதியம்மையார் திருப்பணி செய்தமர்ந்த தலம். இவர்களது திருவுருவங்கள் இங்கு அமைத்துப் பூசிக்கப் பெறுகின்றன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு இறைவன் இங்கு முன்னே எதிர்காட்சி கொடுக்க ‘ஆடும் வீரட்டானத்தே’ என்ற குறிப்புடன் பதிகம் பாடியருளினர். இறைவனது இலிங்க அருட்டிரு மேனி மிக உன்னதமாய் விளங்குவது. தீர்த்தம் – கெடிலநதி. சுவாமி – திரிபுராந்த கேசுவரர். தேவியார் – திரிபுரசுந்தரி. இது நடுநாட்டுத் தலங்களில் 7-வது தலம். கெடில நதியின் வடகரையில் உள்ளதென்பது பதிகம் . பண்ணுருட்டி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. இனி ,முழுப்பாடலையும் காண்போம்.

    ‘’செம்மாந்திங்கு யான்அறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
    ‘தம்மானை அறியாத சாதியார் உளரே ‘ என்று
    அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
    கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்!’’

    Share
  • சேக்கிழார் பா நயம் 34

    திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி

    சுந்தரமூர்த்தியாரை, இறைவன்  திருவருட்டுறையமைந்த  திருவெண்ணை நல்லூரில் ஓர் அந்தணராக வந்து  ஆட்கொண்டருளியபின்    இறைவன் மேல்  அருச்சனை யாகிய சொற்றமிழ்ப் பதிகம்  பாடினார்!  பின்னர் அங்கிருந்து  புறப்பட்டுத் திருநாவலூர் கடந்து  திருத்துறையூரில்  தவநெறி தந்தருள வேண்டிப்   பாடினார். பின்னர் பெண்ணை  யாற்றைக்   கடந்து திருத்தில்லையில்  நடமாடும் கூத்தப் பிரானின்   திருப்பாதம்  பணிய   எண்ணினார்.  தில்லை  செல்லும்   வழியிலே திருமாணி குழியைக்  கடந்து  திருவதிகை என்ற  தலத்தை அடைந்தார்.

    அங்கேதான்  திருநாவுக்கரசரைச்  சிவநெறியில்   செலுத்த  வேண்டித்  திலகவதியார் வழிபட்டார்;  பின்னர்   அப்பருக்குத்  திருநீறளித்தார்!  அந்தத்  திருத்தலத்தில் உறைந்த இறைவனைக்  ‘’கூற்றாயினவாறு’’  என்ற  பதிகத்தால்   திருநாவுக் கரசர்   வழிபட்டார், அந்த அருள்  வரலாற்றை எண்ணிய  சுந்தரர், திருநாவுக்கரசர் நடமாடிய திருத்தலத்துள் கால்வைக்க மாட்டேன் என்று ஊருக்குப்  புறம்பேயுள்ள ‘’சித்தவட மடம்’’ என்ற   வழிப்போக்கர் தங்கும் இடத்தில்  சற்றே சாய்ந்து   படுத்தார்.          

    சுந்தரர் செல்லுமிடந்தோறும்  எழுந்தருளும்  சிவபிரான், அந்தச்   சித்தவட மடத்தில் சுந்தரர்  படுத்திருந்த  இடத்திற்கு ஓர்  அந்தணர்  உருவுடன் வந்தருளி,  அவர் தலைமேல்  தம் பாதத்தை  வைத்தபடிப்  படுத்தார்! தம் தலைமேல்  கால் படும்படி, அவர் படுத்திருப்பதைக்  கண்ட சுந்தரர், ‘’அருமறை உணர்ந்த அந்தணரே, இவ்வாறு  என் தலைமேல்  கால் படும்படிப்  படுக்கலாமா?’’ என்று  கேட்டார். சுந்தரருக்குத்  தாமும் உயர்ந்த  அந்தணர் குலத்தில் பிறந்தோம்  என்ற செருக்கு! அதனால்  ஓர் அந்தணர்  தம் தலைமேல்  பாதம் படப்  படுக்கலாமா?  என்ற  சினத்துடன், ‘’அரிய  வேதங்களைக்  கற்ற  அந்தணரே! இவ்வாறு  அடுத்தவர் தலைமேல் கால் வைத்துப் படுக்கலாமா?’’ என்று கேட்டார்.

    வந்தவர் வேதம் பயின்ற  அந்தணர் என்பதைத்  தம் வாக்கால் வெளிப்படுத்திய  சுந்தரர், தம்மைத்  திருவெண்ணெய் நல்லூரில்  தடுத்தாட்கொள்ள  வந்த சிவபெருமான்  வேதம் பயின்ற அந்தணர்  கோலத்தில்தானே வந்தார், என்பதை மறந்து விட்டார்! வந்த அந்தணர்  சிவபெருமானே  என்பதையும் உணர வில்லை.  அதனால்  அந்தணரிடம்  சினங் கொண்டார்! இன்னும் அவர் மையல் மானுடமாய்  மயங்கினார்! ஆனால் அவரைத்  தொடர்ந்து வந்த சிவபெருமான் , தம் அடையாளத்தை  நுட்பமாக  உணர்த்தினார்! ‘’ எனக்கு  அகவை  மிகவும் அதிகம். ‘’யான்  என்று பிறந்தவன்  என்று  உணராத  இயல்பினன்!’’என்றார்! அவரைப்‘’பிறவாயாக்கைப்பெரியோன், முதுமுதல்வன்’’என்று  சங்கப்பாடல்கள் கூறும். காலப்  பெருவெளியில் என்றும்   நடனமாடுபவர் அவர்! அவர்  ஆடும்  பரவெளிக்குத் திசைகள்  இல்லை !  ஆதலால், ‘’என் மூப்பு என்னைத்   திசை அறியா  வகையில் இவ்வாறு உன்னை மிதிக்கச்செய்துவிட்டது!’’ என்று   அவரே  கூறியருளினார்!  இதனைக்   கேட்ட  பின்னரும் சுந்தரர் பெருமானை உணரவில்லை. ஆதலால் முதியவரை  விட்டு  விலகி சற்றுத்   தள்ளிப்   படுத்தார்! இதனைச்  சேக்கிழார்,  

    ‘’அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்

     சென்னியில் வைத்தனை ‘’

    என்று பாடினார்!  உடனே சிவபிரான் ,

    ‘’திசை அறியா   வகை செய்தது  என்னுடைய   மூப்புக்  காண் ! ‘’    என்றார். அப்படியும்  உணராத சுந்தரர் ,

    ‘’அதற்கு இசைந்து

     தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.’’

    என்று  பாடினார் . அங்கும்  அவர் தலைமேல்  தம் காலை நீட்டினார்   இறைவன்! ‘’இங்கே மீண்டும் மீண்டும்  என்னைத் தொடர்ந்து வந்து  பலமுறை மிதித்தது  ஏன்?’’ என்று  சுந்தரர் கேட்டார்! கங்கையைச்  சடையில் மறைத்துக் கொண்ட சிவபிரான் , ‘’என்னை அறிந்து கொள்ள வில்லையோ?’’ என்று கேட்டு , அங்கேயே  மறைந்தார்! அதன் பிறகே  சுந்தரருக்கு  உணர்வு  வந்தது. எந்தக்  கூத்தன் திருவடியில்  வணங்கிப்  பணிய வேண்டும் என்று ஆசைப்பட்டுத்  தில்லை நோக்கி நடந்தேனோ, அந்தப் பெருமானே  எளியேன் தலை  மேல்  திருவடி பதித்தானே !’’ என்று புலம்பினார்! எண்ணங்களின் அலைபாய்ந்த  அவர் உள்ளம்,   செங்கயல் மீன்கள் பாயும் குளம்  போல  அலைபாய்ந்தது  என்பதைச் சேக்கிழார் ,  

    ‘’அங்குமவன்   திருமுடிமேல்  மீட்டும் அவர்   கால் நீட்ட

    செங்கயல் பாய்   தடம்புடைசூழ்  திருநாவ    லூராளி

    ‘’இங்கென்னைப்   பலகாலும்  மிதித்தனைநீ   யார்?’’ என்ன

    கங்கைசடைக்  கரந்தபிரான்   ‘’அறிந்திலையோ?’’ எனக்கரந்தான் ‘’

    எனப் பாடினார்! இப்பாடலில்  சுந்தரர் மனக்கலக்கமும், இறைவன்  அருளிய மொழியும், அடியார்  ஒழுக்கமும், ஆண்டவன்  விளையாடலும் எனப் பல்வகைச்  சொல்லாட்சித்  திறத்துடன்  விளங்குவதைக்  காணலாம்!

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

     திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

    சேக்கிழார்  அருளிய திருத்தொண்டர் புராணத்தைக்  கற்போருக்கு  ஐயங்கள் ஓரிரண்டு தோன்றலாம். அவ்வையங்கள் எல்லாருக்கும் தோன்றுவனவே! கயிலையிலிருந்து  தென்திசையில்  தோன்றி வளர்ந்த சுந்தரரும், அங்கு  மலர்த்தொண்டு புரிந்த  கமலினியாரும்  அநிந்ததையாரும், தமிழகத்தில் பரவையாரும்  சங்கிலியாருமாய்த் தோன்றி, சிவத்தொண்டு  புரிந்து மீண்டும் சிவலோகம்   எய்தினர்.   இறைவனால்  தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரரோ, சடங்கவியார் மகளை விட்டு  நீங்கித்  தலந்தோறும்    பதிகப்  பாடல்கள் பாடியவாறே  சென்றார்! ‘‘அந்தச்   சுந்தரர் வாழ்க்கையின்  இடையில், அவரைத் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த  சடங்கவி சிவாச்சாரியார் திருமகள் வாழ்க்கை  என்னவாயிற்று?’’  என்ற ஐயம் எல்லாருக்கும் உண்டாகும்!

    அவ்வாறு  கதைப்போக்கில் ஐயம் நிகழும்போது, உடனுக்குடன்  அதனைத் தீர்த்து வைத்து, நூலை  எழுதிச் செல்வது சிறந்த அறிஞர் பெருமக்களுக்கே  உரிய இலக்கியக் கடமை ஆகும். அவ்வகையில்  தமிழ் இலக்கியங்களில் நம்முன்  தோன்றிப் பின் மறைந்த கதை மாந்தர்கள் சிலரைப்  பற்றி விரிவாகவே எழுதலாம். அத்தகைய  கதை மாந்தர்களின்  நிலையை வேறெங்கேனும்  தேடிக் கண்டு பிடிக்கலாம்.

    இங்கே சுந்தரர், சடங்கவி பேதையைத் திருமணம் புரிந்துகொள்ள வந்த சிறப்பை அருகில்  நின்ற மகளிர்  புகழ்ந்தார்கள்.  வலிமை  மிக்க காளையைப் போன்று  விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அழகைப்  புகழ்ந்த போது, ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும்  காளையைக் காண!’’ என்றனர். மேலும் “பெண்களில்   உயர  நோன்றாள் சடங்கவி  பேதை’’ என்றனர். “சிவவேதியர்   குலப் பெண்களுள்  இவளே, பெரிதும்  உயர்வைப் பெறத்  தவம்  செய்தாள்!’’ என்று சற்று வேறுபட்ட வகையில் புகழ்ந்தனர்.

    இங்கே சுந்தரரின்  அழகும், ஒப்பனையும் மிக விரிவாகக் கூறப்பட்டன.   ஆனால், சடங்கவி சிவாச்சாரியாரின் மகள், பேதை என்பன  தவிர வேறு  வர்ணனைகள்  இல்லை. அவர் நோற்றார் என்பதே அவரது  சிறப்பாகக் கூறப்பெறுகிறது. அவள் சுந்தரரை அடைய  நோன்பு செய்திருக்கிறார். சிறந்த  சிவனடியாரை அடைதல்  மட்டுமே சைவப்  பெண்டிரின் நோக்கம் என்பதை,

    “எம்கொங்கை  நின்  அன்பர் அல்லார் தோள்  சேரற்க
     கங்குல் பகல்  எம்கண்   மற்றொன்றும்  காணற்க
     இங்கு இப்பரிசே  எமக்கு  எங்கோன்  நல்குதியேல்
     எங்கு எழின்  எஞ்ஞாயிறு  எமக்கு”

    என்று மணிவாசகர் கூறுகிறார்.  எந்தச் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எமக்கு அதில் நாட்டமில்லை. அதாவது அடியார் உறவே சிவலோகம், மற்ற நிகழ்ச்சிகள் எம் தியானத்தைக் கலைக்க மாட்டா என்பது அதன் பொருள்.   அந்தப் பெருவாழ்வை  அடைவதையே, ‘பெண்களில் உயர’ என்ற தொடர் குறிக்கிறது. சுந்தரரைத் தம் வாழ்முதலாக  ஏற்றுக்கொண்ட சடங்கவி பேதை,  அவரைப் புறத்தார் பார்வையிலும், தம் அகத்திலும்  என்றும் நீங்காத நிலையைப்  பெற்றாள். திருமண நாளிலேயே , அதற்குரிய  சடங்குகள் நிகழாத  நிலை.  ‘‘சடங்கு அவி’’ நிலை. இதனையே சிவ வேதியன் மகளும் அடைந்தாள். அதனால்  உலகில் சிவநெறியை  உயர்த்தும் நாவலூரரை, தம் தனி நாதனாக ஏற்றுக்கொண்ட அவர், உள்ளும் புறமும் அவரையே நீங்காது நினைந்து, இணைந்து உணரும்  நெறியிலிருந்து வழுவாது  வாழ்ந்தார். இதனைச் சேக்கிழார்,

    “அன்றே  மணம்  அழியும் 
     செயலால்  நிகழ் புத்தூர் வரும்   சிவவேதியன்  மகளும்     
     உயர் நாவலர்  தனி நாதனை  ஒழியாது  உணர்  வழியில்
     பெயராது”

    எனப் பாடினார். ஆகவே சுந்தரர் வாக்குப் படியும்,

    “இம்மையே தரும்சோறும்கூறையும் ஏத்தலாம் இடர்  கெடலும்ஆம்
     அம்மையே  சிவ லோகம் ஆள்வதற்கு யாதும்  ஐயுறவு  இல்லையே!’’

    என்ற நிலையில் ’’உயர்சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்’’ என்று சேக்கிழார் பாடியதன் பொருளை நாம்  புரிந்துகொள்ளலாம். மற்றையோர் திருமணத் தடையோ, வாழ்க்கையில்  இடையூறோ  அடைந்தால் வெவ்வேறு வகையில் நோன்பு நோற்றுச்  சுவர்க்கம்    புகுவர்.   இதனைச்  சேக்கிழார்,

    “அயலார்  தவம்  முயல்வார்’’ என்று  குறிக்கிறார்.  ஆகவே சிவவேதியன் மகளான  சடங்கவி பேதை, பெண்களில்  உயர நோற்றாள்;  அதனால்  சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் என்ற சேக்கிழாரின்  வாக்கு, நமக்கு மனநிறைவு  அளிக்கிறது.  இனி முழுப் பாடலையும்  பயில்வோம்.

    “அயலார்தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
      செயலால் நிகழ் புத்தூர் வரு சிவவேதியன் மகளும்
      உயர்நாவலர்  தனிநாதனை  ஒழியாதுஉணர் வழியில்
      பொறாது உயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றார்”

    ‘இப்பாடலால் ஆசிரியர் இவ்வம்மையாரது பிற்சரிதங் கூறி முடித்துக் கொண்டதுமன்றி, ஏனையோரைப் போல, இவ்வம்மையார் தம் நாயகனை உடம்பு நாயகனாகக் கொள்ளாது தியானப் பொருளாகிய உயிர்நாதனாகக் கொண்டு ஒழுகினமையால் அவரையும் பிரியாது, பெறற்கரிய சிவலோக வழியும் பெற்றார் என்று இவரது வாழ்க்கையின் உயர்வையும் காட்டினார். இவ்வாழ்வு பெற உபகரித்து நின்றமையால் அம்மையாரை விட்டு நீங்கினார் என்ற சொல், நம்பிஆரூராரிடத்துச் சாராமையுங் காட்டியவாறு. திலகவதியம்மையார் சரிதமும் இங்கு வைத்து உணர்தற்பாலதாம். இவ்வுண்மைகளை உணராது, ஒரு கணவனிறப்பவும், அல்லது இருக்கவும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல மணங்களையும் நிகழ்த்தலாம் என்று கூவும் நவீன உணர்ச்சிக்காரர்கள் இச்சரிதங்களை உய்த்து ஓர்ந்து ஒழுகுவார்களாக.’

    என்ற  சிவக்கவிமணியார்  உரையையும்  இங்கே நாம் சிந்திப்போம். இவ்வகையில்  நம் மனத்துள் எழும் ஐயத்தை நீக்கி உரிய விளக்கத்தையும் அளித்த  சேக்கிழார் பெருமானின்  பா நயம்  போற்றுதற்கு  உரியது.

    ============= சே. பா ந. 33 === ========

    Share
  • சேக்கிழார் பா நயம் (32)

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருத்தொண்டர் புராணத்துக்குத், திருத்தொண்டத்  தொகை   முதல் நூல்; திருத்தொண்டர் திருவந்தாதி   வழிநூல்!  இவ்வாறு சேக்கிழார்    இறைத் தொண்டர்  பலரின் வரலாற்றைக் கூறினாலும் , சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  வரலாற்றின்  வழியிலேயே  ஏனையோர் அருள்   வரலாறுகளையும் கூறுகிறார். அவ்வகையில் இந்நூலின் கதைத்தலைவர்  சுந்தரமூர்த்தியே ஆவார்! கைலையில்  தொடங்கித்  தென்னாட்டில்  தொடர்ந்து மீண்டும் கைலையிலேயே நிறைவுறும்  சுந்தரரின்  அருள்வரலாற்றின் இடையே  அறுபத்துமூவர் அருள்வரலாறும்   அமைந்துள்ளன!

    அவ்வரலாறுகளில்  தம்  திருமுறைகளாகிய தோத்திரங்களால்  சமயத்தொண்டு   புரிந்த, தேவார மூவரின்  வாழ்க்கையுடன்  அவர்கள் அருளிய வாக்கினையும் அப்படியே எடுத்துக்கொண்டு  நூலியற்றும் சேக்கிழார் பெருமானின்  சிறப்பு  போற்றுதற்கு உரியது!   சுந்தரமூர்த்தி  சுவாமிகளின் முதல் திருப்பாடலை இந்நூலில்,  அப்பாடலின் யாப்புமுறையை  அப்படியே மேற்கொண்டு தம் புராணத்தில் அமைத்து விடுகிறார்! சுந்தரரை  அற்புதப் பழ ஆவணம் காட்டித்  தடுத்தாட்  கொண்டார்  பெருமான்! அவருடன் திருவெண்ணெய்  நல்லூர் திருக்கோயிலாகிய  திருவருட்டுறைக்குள்  சென்ற சுந்தரரை நோக்கி இறைவனே , ‘’ நம்மைப் பாடுவாய்!’’ என்று அருளினார்!

    தம்மை அடிமுடி தேடி அலைந்த  திருமாலும் பிரமனும்  காணா  மலையாக உயர்ந்த இறைவனின்  திருப்பாதங்களில் தம் உள்ளத்தை ஊன்றிச் சிந்தித்து வணங்கினார் சுந்தரர்!   அவரை நமச்சிவாய   என்றும்,  சிவாயநம  என்றும் ஐந்தெழுத்து மந்திரத்தால் அனைவரும் வழிபட்டாலும் அந்த ஐந்தெழுத்தின் பொருளையும் பெருமையையுயும்  அளவிட்டுக் கூறுதல் எத்தகையோருக்கும்   அரிது!  அத்தகைய  பெருமானின்  திருப்பாதங்களைச்    சிந்தித்துத்  தம் கரங்களைக்  கூப்பி  நின்றார் சுந்தரர்!  

    நம் நீண்ட வாழ்க்கையின் பயனாக  நாம் அடையும்  ஊதியம் யாது என்பதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும். தம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு  ஈதலால்  இவ்வுலகில் புகழ் உண்டாகும். இவ்வாறு ஈந்து புகழ் பெற்றால் பிறவிப் பயனாகிய திருவடிப்பேறு  கிட்டும். இதனைத்  திருக்குறள்,

    ‘’ஈதல்  இசைபட வாழ்தல்  அதுவல்ல

    ஊதியம்  இல்லை  உயிர்க்கு!’’

    என்று கூறுகிறது! இத்தகைய  வாழ்க்கையின் ஊதியத்தை அறியாமல்  மையல் மானுடமாய்  மயங்கினார்  சுந்தரர்! அதனால், இறைவனிடம்  ‘’எளியேன்   முன்னே , ஒரு முதிய   வேதியனாக   எழுந்தருளி, வாழ்க்கைப்   பணியையும், அதன்  ஊதியத்தையும்  எளியேனுக்கு  உணர்த்தினாய்! குற்றமேதும்  அற்ற நற்பண்பே உருவமான தேவா! எளியேனைப் பாடு  என்றாயே,  நின் குணங்களாகிய பெருங்கடலை எவ்வாறு அறிந்துகொள்வது? அதன்  தனிச்   சிறப்புகளை  எவ்வாறு  ஆராய்ந்தறிந்து  கொள்வது?அவற்றை  எவ்வாறு, எதனைச்  சிறப்பித்துப் பாடுவது? ‘’

    அதனைக் கேட்டருளிய  பெருமான், ‘’ முன்பு   அந்தணர்கள்  சூழ்ந்த அவையில் என்னைப் ‘’பித்தனோ? ‘’ என்றாயே!  இப்போது  பித்தன் என்றே என்னை  அழைத்துப்  பாடு!’’ என்றார். உடனே  அந்தத்  திருவார்த்தையையே  மந்திரமாகக்  கொண்டு சுந்தரர்  பாடத்  தொடங்கினார்.

    கொத்துக்களால் ஆன  மலர்களை அணிந்து  கொண்டு , இறைவனின் இடப் பாகத்தில்  இணைந்து காட்சி தரும் அன்னை பார்வதியுடன் , நமக்குப்  பெற்ற தாயினும் இனியவர்  சிவபிரான்! என்பதை ,

    ‘’கொத்தார்  மலர்க்  குழலாள்  ஒரு கூறாய் அடியவர்பால்

    மெய்த்தாயினும் இனியானை ‘’

    என்று சேக்கிழார் பாடுகிறார்! இங்கே சுந்தரருக்குப்  பழைய நினைவு வருகிறது.

    முன்பு கைலையில்  மலர்த்தொண்டு  புரிந்தமையும், அப்போது அன்னைக்கு அணுக்கராய்  விளங்கிய  பெண்டிர்  செய்த  தொண்டால், அன்னையின்  கூந்தலில்  மலர்க்கொத்துக்கள் அமைந்தமையும்  சுந்தரர் நினைவுக்கு  வருகின்றன. ஆதலால் அந்தத்  தாயினும் இனியானாகத்  தம்மைத்  தடுத்தாட்  கொண்ட பெருமானை , உலகெல்லாம்  போற்றத்தக்க  நாவலூரராகிய  சுந்தரர்,     ‘’பித்தா’’ என்றழைத்தார்! இச்சொல்  உலகியலில்  பெற்ற  மனம்  பித்து ,‘’பிள்ளை  மனம்  கல்லு ‘’  என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. அது கருதியே சேக்கிழார் ‘’ மெய்த் தாயினும் இனியானை ‘’ என்று இறைவனின் தாயுள்ளத்தை எண்ணிப் பாடுகிறார்! ‘பித்தா’ என்று தொடக்கிச்  சுந்தரர்  பாடிய திருப் பதிகம்,  மிகவும் பெரும் புகழ் பெற்றது!  

    பண்ணிலக்கணம்  பதினொன்றில், மருதத்தின் வகையாகிய  இந்தளத்தில்  முறையான  தாளத்துடன்  ஒத்திசைய, இசையை  உலகிற்களித்த  இறைவன் மகிழும்படி , தமக்கு ஒப்பாரில்லாத  சுந்தரர் , ‘’பித்தா பிறைசூடி’’ எனத் தொடங்கிப்   பாடலுற்றார். இறைவர் பித்தனல்லர், அவர் பிறையின் குறையை நீக்கிச்  சூடியவர்! ஆகவே  சுந்தரரின்  குறையை நீக்கி  நிறைசெய்யும் தாய் போன்றவர் இறைவன் என்கிறார். இதனைச் சேக்கிழார் ,

    ‘’’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

      மெய்த் தாயினும் இனியானை ‘’

    என்று பாடுகிறார். மேலும் பத்துப் பாடல்களைக் குறிக்கும்  இப்பதிகம்   பெரியபுராணத்தில் முதன்முதலாக  இடம் பெற்றது! இப்பதிகமுறையைத் தமிழில் முதன்முதலில்   அறிமுகப்  படுத்தியவர் , மூத்த திருப்பதிகம்  பாடிய  காரைக்கால்  அம்மையார் ஆவார்! அவர் பாடிய பண் இந்தளமாகும்; சுந்தரர் பாடிய பண்ணும் இந்தளமாகும்! ஆகவே இப்பதிகம்  சைவ உலகில் பெருமதிப்புப்  பெற்றதாயிற்று!   ஆகவே  இவ்வுலக மெல்லாம் சிவநெறியை உணர்ந்து  உய்வடைந்தது! இதனைச் சேக்கிழார்,

    “பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

    இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

    என்று பாடினார்! இனி முழுப்பாடபாலையும்  பயில்வோம்!

    ‘’கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்

    மெய்த் தாயினும் இனியானை அவ்வியன் நாவலர் பெருமான்

    “பித்தா பிறை சூடி எனப் பெரிதாம் திருப் பதிகம்

    இத்தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.’’

    இப்பாடலில்  இறைவனின் தாயினும் இனிய தன்மை, சுந்தரர் இயல் நாவலர் பெருமான் என்று போற்றப்பெற்ற  நிலை, உலகத்தார்  எல்லாருக்கும் இறை வழிபாட்டுக்கு உரிய சாதனத்தை அறிமுகப்படுத்திய அழகு ஆகியவை  நமக்குப்  புலப்படுகின்றன! இன்னும் இப்பாடலின் சிறப்பைச் சான்றோர்கள்  மேலும் விரிவாக உரைப்பர்.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 31

    – திருச்சி   புலவர் இரா. இராமமூர்த்தி

    இறைவன்   திருவருள்  நிகழ்ச்சிகள்  உலகில்  நிகழும்போது,  இயற்கையாகவே இசைக்கருவிகள்  ஆர்த்து ஒலிக்கும். திருஞான  சம்பந்தர்  அவதரித்த    நேரத்தில்,

    மங்கல முழக்காகிய தோற்கருவியும் , தாளமாகிய கஞ்சுகக்கருவியும், சங்கு, படகம், தாரை முதலான காற்றுக் கருவிகளும்  இசைப்பார்  இல்லாமல்  தாமாகவே   வானில்  எழுந்து  ஒலித்தன! இதனை,

     ‘சங்கபட கங்கருவி தாரைமுதலான, எங்கணுமி யற்றுபவரின்றியு மியம்பும்,
     மங்கல முழக்கொலி’’ 

    என்று  சேக்கிழார் பாடுவார்.   முன்னரே  , ’மாதவம் புரி  தென்திசை  வாழ்ந்திடத்  தீதிலாத்திருத்  தொண்டத்தொகைதர   வந்த  சுந்தரரைத்  தடுத்தாட்கொண்ட போது,  இயற்கையாகவே  பூமியிலுள்ள  இசைக்கருவிகள் ஐந்தும்  முழங்கின! அதன் ஓசை வானுலகை எட்டியது!  அப்போது வானவர்கள்  பூமாரி பொழிந்தனர்; வேதங்களின் ஓசை  எங்கும்நிறைந்தது!  -. பூவுலகினின்று போந்த ஓசையைந்தும் விசும்பு சென்று நிறைய, அதற்குப் பிரதியாய் விண்ணினின்று போந்த பூமாரி மேதினி நிறைந்த தென்ற அழகு காண்க) இதனைச் சேக்கிழார்,

    ‘’எண்ணிய வோசை யைந்தும் விசும்பிடை நிறைய வெங்கும்
     விண்ணவர் பொழிபூ  மாரி மேதினி நிறைந்துவிம்ம,
    மண்ணவர் மகிழ்ச்சிபொங்க  மறைகளும் முழங்கியார்ப்ப’’

    எனப்பாடுகிறார். இவை  இரண்டும்   சிறந்த நிகழ்ச்சிக்கான அடையாளங்க ளாகும்! அடுத்து இறைவன்  சுந்தரரை நோக்கிக்   கூறும்பாடல் நயம்மிக்கதாகும்!

    இறைவன்  தாமே சுந்தரர்  செயல்களை நோக்கிச் , சுந்தரருக்கு ‘வன்றொண்டன் ‘ என்ற திருப்பெயரை  இட்டருளினார்! ‘’அந்தப் பெயரை நாமிட்டதால், நீயே  உனக்கு உரியதாய்ப்  பெற்றுக்கொண்டாய்!’’  என்கிறார்! இதனை இறைவன் ,

    ‘’மற்றுநீ  வன்மை பேசி  வன்றொண்டன்  என்னும் நாமம்  பெற்றனை!’’

    எனக் கூறினார்! சுந்தரர் இறைவனைப் ‘’ பித்தனோ, மறையோன் ?’’ என்றும், தம் சாதி பெருமை தந்த  வலிமையை வாதத்தில் ஏற்றியும்   கூறியதை , ‘’வன்மை பேசி ‘’ என்ற தொடரால்  குறிப்பிடுகிறார்!  அதனால்  சுந்தரர் எடுத்துக்கொண்ட  உரிமையைப் பாராட்டி, ‘’வன்றொண்டன்‘ என்ற திருப்பெயரைப் பெற்று  விட்டாய்!’’ என்று கூறினார்! இவ்வாறு இறைவனால் தரப்பெற்ற  பெயரைச் சுந்தரர்  விருப்புடன் ஏற்றுக் கொண்டார்! அதனால்  தம் சொற்றமிழ்ப் பாடல்களில்  பல இடங்களிலும் எடுத்துக் போற்றியுள்ளார்!

    ‘’அடியேனைத்  தாமாட்கொண்டநாட் சபைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர்  வாழ்வு தந்தார்………’’ (நம்பிகள் தேவாரம் – திருநாவலூர் – 2) முதலியவை காண்க. இதுபோலவே நம்பிகள் சரித நிகழ்ச்சிகள் பெரும்பாலும் அவரது தேவாரத்திருவாக்குக்களாகிய அகச்சான்றுகளாலே மிகத் தேற்றமாய்  விளங்குதல் காணத் தக்கதாம். சுந்தரருடைய  பிள்ளைத் திருநாமம்  ‘ஆரூர்நம்பி’  என்பதாகும் . ‘’வன்றொண்டன்’’ என்பதுதீட்சாநாமம்.

    பெண்ணும்  ஆணுமாய், உடலழகை ஐம்புலன்களால் துய்க்கும்  நிலை எளிய மானிட வாழ்க்கை. ஆனால் இறைவனின்  பேரழகை  அறுவகைப் புலன்களாலும் ஆரத்  துய்ப்பது அடியார்களின் வாழ்க்கை.

    ‘’மாசில் வீணையும்  மாலை மதியமும்
     வீசு   தென்றலும்  வீங்கிள  வேனிலும்
     மூசு  வண்டறை  பொய்கையும் போன்றதே
     ஈசன் எந்தை இணையடி நீழலே ‘’

    என்பது , சுண்ணாம்புக் காளவாயில், அப்பரின் உடல் , வெந்து நொந்தபோது, அந்நீற்றறை  மாசில் வீணை ஓலியாய் செவிக்கும், மாலை மதியமாய் கண்ணுக்கும், வீசுதென்றலாய்  உடலுக்கும், வீங்கிளவேனில்  கனிகளாய் நாவுக்கும்,  மூசுவண்டுகள்  ஒலிக்கும் பொய்கை மணமாய் மூக்குக்கும் இன்பம் தந்ததோடு , உள்ளத்தில்  ஏற்பட்ட நிரதிசய இன்பமாய் மனத்துக்கும்  பேரின்பமாகி  ஆறத்  துய்க்க  வைத்தது!  ஆகையால்  பக்தியுணர்வே  பேரின்பம்!  இந்த இன்பத்தைத்  தாமும் துய்த்துப்  பிறரும் துய்க்க வைப்பது அடியாரின் அனுபவங்களை  விளக்கும் பாடலாகும். அவ்வாறு அடியார் இறைவனைப் போற்றிப் பாடுவதே இறைவழிபாடாகும்.

    ‘’இங்குத் தொண்டுசெய்யும் பலவகை வழிபாடுகளையும்உட்கொண்ட பொதுப் பெயராய்நின்றது. ‘அருச்சனை வயலுளன்பு வித்திட்டு’ (திருவண்டப் பகுதி) என்ற திருவாசகம் காண்க. அன்பிலிருந்து ஊறிப்பெருகியதும் அதனாலே சிறப்பின் மிகுந்ததும் ஆகிய பாட்டு என இவற்றைப் பாட்டுக்கு அடைமொழியாக்கி உரைக்க. என்னை வலிய ஆட்கொண்டது மன்றுளீர் செயல் என்று தெளிந்த நம்பிகளுக்குத் தம்முடைய பணியாவது இன்னதென்று காட்டியவாறு. அன்பு மிகுதியினாலே தாமே மேல் எழுந்து வழியும் பாட்டே சிறந்ததாய் இறைவன் மகிழ்ந்து அருளுவன் என்க.’’ என்பது    சிவக்கவிமணியார்   விளக்கம்.

    இறைவனே நான்மறையையும் அருளினார் அந்நான்மறைகளை நாள் தோறும் ஓதிய   ஞானியரே, நான்மறையின் பொருளுணர்ந்து மகிழ்வர். எளிய வாழ்க்கை உடைய மானிடருக்கு,   இனிய  தமிழால் கூறும்   எல்லாமே  பொருளின்பம்தரும். இந்த இன்பத்தை எல்லாரும்    துய்க்கும்  போது, அவர்களின்  ஆன்ம  நாயகனாய் உயிரெங்கும் உள்ளவனாகிய  ஆண்டவனும்  இன்பம்  அடைவான் போலும்!  இதனை,

    கோழை மிடறாக   கவி கோளும்  இலவாக  இசை  கூடும் வகையால்
    ஏழை  அடியார்  அவர்கள்  யாவை  சொன்ன  சொல்மகிழும்  ஈசன் ‘’

    என்று திருஞானசம்பந்தர் அருளுகின்றார்!இதே இன்பத்தைத்   தோத்திரங்களின்    பொருள் உணரும்  பாமரரும் அடைகிறார்கள். இதனை மிக விளக்கமாக, நால்வர் நான்மணி  மாலை  கூறுகின்றது!

    ‘’உமையம்மை  உடனாய முக்கண்ணனாகிய அனைத்துக்கும் காரணன்  ஆகிய  சிவபிரான்  அருளிய  வேதமோ, இறைவனின்  பழம்பெருமையை  எடுத்துரைக்கும்  திருவாதவூரராகிய  மாணிக்க வாசகர்  திருவாய் மலர்ந்து அருளிய  திருவாசகம் என்னும் தேனோ, எது சிறந்தது? ‘’ எனக் கேட்பீராயின் அதற்கு விடை கூறுகிறேன்!  ‘’வேதம் ஓதினால் பாமரர்கள்  அதைக் கேட்டு  விழிகளில் கண்ணீர் பெருகி , உள்ளம் உருக மாட்டார்கள்! ஆனால் மாணிக்க வாசகரின்  திருவாசகப் பாடலை ஒரே ஒருமுறை  ஓதக்கேட்டால், கல் போன்ற  வன்மையான  மனமும்  கரைந்து உருகும்;   கண்களிலிருந்து மணற்கேணியில்  ஊறிப்பெருகும் நீர்போலக்  கண்ணீர்  பெருகும்; உடல் சிலிர்க்கும்; மனம் பதைக்கும்; அப்பாடலின் பொருள் உணர்ந்து அப்பாட்டுக்கு  உரிய இறைவனின் அடியார்களாக , எளிய பாமரரும்  ஆவார்கள்! மற்ற எவரும் இதே நிலையை அடைவார்கள்! இதனை  சிவப்பிரகாசர் ,

    ‘’விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
    காரணன் உரையெனும் ஆரண மொழியோ
    ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
    மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
    யாதோ சிறந்த தென்குவீ ராயின்
    வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
    நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
    திருவா சகமிங் கொருகால் ஓதிற்
    கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
    மெய்மயிர் பொடிப்ப விதிர்வதிர்ப் பெய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே.’’

    என்பது  அப்பாடல்!   இறைவன்  தமிழ்ப் பாட்டின் சிறப்பை உணர்ந்து, தாம் ஓதும் வேதத்தைத்  தமிழில் ஆக்கி,  ஒலிக்கச்  செய்து அதனைக் கேட்க  விரும்பினார்! இவை  அனைத்தையும் சேர்த்து,

    மற்றுநீ  வன்மை பேசி  வன்றொண்டன்  என்னும் நாமம்
    பெற்றனை! நமக்கும்  அன்பின்  பெருகிய  சிறப்பின் மிக்க 
     அர்ச்சனை  பாட்டேயாகும். ஆதலால்  மண்மேல் நம்மைச் ’
    ’சொற்றமிழ்  பாடுக  என்றார்,  தூமறை பாடும் வாயார்! ‘’

    என்று சேக்கிழார்  சுவாமிகள்  அருளுகின்றார்!  இந்தப்பாடல், அடியார்களின்  வழிபாட்டு முறையையும்,  சிறந்த சொற்களையும்  பொருளுணர்ச்சியையும் உடைய தமிழ்ப்  பாடலின்  பெருமையையும், எளிமையையும், உள்ளம் உருக்கும் பக்தி  நெறியையும் என்றும்,   பாராயணம்  செய்யத்தக்க  அருமையையும்,  இது  சிவபிரானுக்கே  விருப்பம் உடையது  என்பதையும் எடுத்துக் காட்டுகிறது!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 25

     திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    சிவபிரான் முதிய அந்தணனாகி ,சுந்தரர் திருமணம் நடந்த  புத்தூர்  நோக்கி  வந்த சிறப்பை முன்பு கண்டோம்!  இங்கே அவர் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள ஆடிய அழகிய நாடகத்தின் தொடக்கத்தைக் காண்போம்.  சுந்தரர் புத்தூர் சிவவேதியர் சடங்கவியார் மகளைத் திருமணம் செய்துகொள்ள  வந்த திருமண மண்டபத்தில் எழுந்தருளிய முதிய அந்தணர், ‘’யாவரும் கேளுங்கள்! இங்கே திருமணம் புரிந்துகொள்ளும்  நாவலூரருக்கும் எனக்கும் இடையே ஒருவழக்கு உள்ளது! அதனை முடித்துக்கொண்டு இவர்  திருமணம் புரிந்துகொள்ளட்டும்’’    என்றார்! இதைக்கேட்ட அந்தமண்டபத்தில்  கூடியிருந்த சான்றோர்கள் மிகவும் வியப்படைந்தனர். ‘’அந்தணர்  குலத்திருமகன்! அரசரின் வளர்ப்புப்பிள்ளை! அவருடன் இவர்க்கு எப்படி வழக்கு இருக்கக்கூடும்?  இதென்ன புதிய இடையூறு!’’  என்று எண்ணினர்.

    முறைப்படி அந்த  மூத்த அந்தணரை வரவேற்று , ‘’உங்கள்வரவு எங்கள் தவப்பயன்! நீங்கள் உங்கள்கருத்தைக்  கூறுங்கள் ‘’ என்றுஒப்புதல்அளித்தனர். பழங்கால முறைப்படி அந்த  அவையினரிடம் ஒப்புதல் பெற்ற மூத்த அந்தணர்,

    கூறிய வாசகம் கேட்ட  சபையினர்  மிகவும் வியந்தனர்!  சுந்தரர் சிரித்தார் முதியஅந்தணரிடம்  ‘’எனக்கும்  உங்களுக்கும்  இடையில் உள்ள  வழக்கை முடித்தபின்னரே, திருமணம்புரிந்துகொள்வேன்! ‘’ என்றார் .

    அவையில் தம்மை இகழ்ந்து சிரித்த சுந்தரரிடம், தம் உத்தரியத்தைத் தோளில் அணிந்தபடி சென்று’’ அந்தக் காலத்தில் உன்தந்தைக்குத் தந்தையாகிய பாட்டனார்   உங்கள்   பரம்பரைக்கே எழுதிக்  கொடுத்த அடிமைச்சாசனம் இது!’’

    இதனைக் கண்டு,  அடே  , சிறுவா! சிரித்தது ஏனடா?’’ என்றார்! அவையினர்  அதிர்ச்சியடைந்தனர் சுந்தரரோ, ‘’அந்தணர்  இன்னோர் அந்தணருக்கு  அடிமையாதல் உண்டோ? இக்கிழவன் பித்தனோ?  ‘’ என்றனர்!

    உடனே மூத்தஅந்தணர்,  ‘’ நீ எத்தகைய தீச்சொற்களையும் அபவாதத்தையும் சொன்னால்,  அதற்கெல்லாம் யான்   வெட்கமடைய மாட்டேன்! அந்தஅளவுக்குப் பெரியனாகிய நீ என்னை  நன்றாக அறிந்துகொண்டிருந்தால்,  இப்படி அறிந்தவன்போல்  என்னெதிரில்  நின்று அறிவுவாசகம் பேசவேண்டா!  நீ எனக்கு  இப்போதே  அடிமைப்பணி  செய்ய வேண்டும்!’’ என்றார்!

    இதனை  அந்த அந்தணர் கூறும்போது,’’நீ என்னை நன்றாக அறிந்துகொள்ளவில்லை ! ‘’ என்றுகூறித் தம்  உத்தரியத்தைத் தோளில்  அணிந்துகொள்வது போல், தம் நஞ்சுண்ட  கண்டத்தைக் காட்டினார்! அந்தஅளவுக்கு நீ  இந்த இளம்பெண்மேல் மையல் கொள்ளும் மானுடமாய், மயங்கி,  என்னை நோக்கி, இழிந்த  சொல்லாகிய ‘’பித்தன்’’ என்றாய்! அவ்வாறே நான்  பித்தனும், பேயனும் ஆகிறேன்!  இப்போது உன்  பழைய  நினைவு வந்து என்னை அறிந்து கொள்ள வில்லை! ஆதலால் வித்தகம்பேசுகிறாய்!’’ என்றார் .  சுந்தரர் தம் அரசவாழ்வு,  அந்தணப் பெருமை இவற்றால் உயர்வு மனப்பான்மை   மயக்கத்தில், தம்நிலை அறியாமல் இருந்தார்! ‘’உடனே, எனக்கு அடிமைப்பணி செய்!’’ என்று  ஆணையிட்டார்! இவற்றையெல்லாம் விளக்கும் வகையில் சேக்கிழார் பெருந்தகை ,

    “பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
    எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
    அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
    வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்” என்றார் 

    என்று பாடியுள்ளார்! உள்ளாழ்ந்த   பெருந்தன்மையும் ,  பெருமையும்   சற்றே மோதிக்  கொண்ட  அரிய நிகழ்ச்சிஇது!  தொடர்ச்சியை மேலும்காண்போம்!

    Share