Tag: நடராஜன் கல்பட்டு

  • பாம்பைக் கண்டால்…. 3

    நடராஜன் கல்பட்டு

    உலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270.  இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.
    ஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் ‘பெரிய நால்வர்’ என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும் இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள்.  இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள்  கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.
    பாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா?
    நல்ல பாம்பு :  விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் ‘நஜா நஜா’ என்பதாகும்.  ‘நஜா’ என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்?  பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.  ‘நாகா நாகா’ என்று நம் மக்கள் கூறியதை ‘நஜா நஜா’ என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், “அது மிகக் கொடிய விஷப் பாம்பு.  அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந…ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.
    நல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான்.  தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.
    நல்ல பாம்பின் தலை – முன்னும் பின்னும்
    நல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும்.  தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டு, கழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, “கிட்டெ வராதே.  வந்தால் கொன்று விடுவேன்” என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.
    நல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும்.  இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Spectacled cobra) என்பார்கள்.
    ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும்.  இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள்.
    கட்டு விரியன்:  நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது.  நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது.  இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும்.  உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.
    http://en.wikipedia.org/wiki/Bungarus
    மஞ்சளும் கருப்புமான பட்டைகள்
    கொண்ட கட்டு விரியன்.
    Photo Credit: Dr. Muhammad Sharif Khan
    கருமை நிறப் பட்டைகளுடன் ஒரு கட்டுவிரியன்.
    கண்ணாடி விரியன்:  இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான்.  கண்ணடி விரியன் களில் பல வகை உண்டு.  அவற்றில் இரண்டு “ரஸ்ஸல்’ஸ் விரியன்  (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன்  (Saw-scaled viper) என்பவை ஆகும்.
          http://en.wikipedia.org/wiki/File:Daboia_head.jpg                      http://en.wikipedia.org/wiki/File:Echis_carinatus_sal.jpg
    கண்ணாடி விரியன் பாம்பு                                          ரஸ்ஸல் கண்ணாடி விரியன்
    1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree) பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது.  சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது.  நண்பர் திடீரெனக் கேட்டார், “உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள்.  இது உண்மையா? அல்லது கட்டுக் கதைகளா?” என்று.  “அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா?” என்றேன்.  “எங்கே? எங்கே” காட்டு” என்றார் அவர்.  நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன்.  அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன்.  குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று.  அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி.  ஏன் அவருக்கு நான் பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.
    ராஜ நாகம்:  (King cobra)  ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை.  ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.  ஒன்று இதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற  பாம்புகள்  (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ?)   மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு ‘வீடு’ (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும்.  ராஜ நாகம் தன் ‘வீட்டினை’ மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.
    உலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம்.  இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.
    இதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.
    பவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும்.  மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.
     http://www.team-bhp.com/forum/attachments/4×4-off-roading/91469d1232383511-snakes-coral.jpg
    அழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம்.  மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று.
    சில விஷமற்ற பம்புகள்:  விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம்,  இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும்.  இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.
    1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake):  நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில்.  இதனை கண் கொத்திப் பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.
    இந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே.  அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும்.  மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.
    இந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும்.  அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.
    கொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.
    http://en.wikipedia.org/wiki/Ahaetulla_nasuta
    பச்சைப் பாம்பில் இரு வகை
    .
    கொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.
    1.  “கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.”
    2.  “கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் உடலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.  புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.”
    இந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.  காரணம் இதுதான்.  மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
    இரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.
    நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, “சார் ஒரு கழி கொடுங்க.  பாம்பு ஒண்ணு வந்துருக்கு” என்றனர்.  கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன்.  “பாம்பு எங்கே?” என்றேன்.  அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர்.  அதில் ஒரு பச்சைப் பாம்பு.  அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், “சார் அது கண்ணெக் கொத்தீடும்” என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை.  அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன்.  கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது.  என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு?
    ஓலைப் பாம்பு :  ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு.  “ஓலைப் பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள்.  இது ஓரளவு உண்மையே.  சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும்.  அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின.  எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில்.  அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.
    சாரைப் பாம்பு :  இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’.  இப் பெயர் ஒரு காரணப் பெயர்.  இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.
    http://en.wikipedia.org/wiki/File:Yellowratsnake-1-.jpg
    சாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.
    இப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வரும் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது.  தவறான ஒரு கருத்து இது.  இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.
    பாம்புகளைப் பற்றிப் பார்த்தோம்.  அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.
    (தொடரும்)
    Share
  • பாம்பைக் கண்டால்…. 1

    நடராஜன் கல்பட்டு

    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!

    ஆமாம் எனக்கும்தான். பாம்பு பற்றிய பல கட்டுக் கதைகள் கூட சுவையாகத்தான் இருக்கும். எத்தனை திரைப்படம் பாம்பு பற்றி எடுத்தாலும் ஓடத்தான் செய்கிறது. அதென்னமோ பாம்பு என்று சொன்னாலே எல்லோருக்கும் கண்ணில் பளிச்சென்று ஒரு மின்னல் வந்து போகும் இல்லையா?
    சமீபத்தில்  தினமணியில் கண்ட ஒரு செய்தி:
    பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.
     புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.
     எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும்
     பங்கேற்றனர்.
     இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான
     டாக்டர் கண்ணன் நம்மிடம் தெரிவித்ததாவது:
     “”பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.
     பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.
     அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.
     பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.
     குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கி
     யுள்ளன.
     இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.

     இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

     “”பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன.

     உலகிலுள்ள பாம்புகளில் 10 சத பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

     இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.
     எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

     இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.

    பாம்புகள் பற்றி திரு கல்பட்டு நடராஜன் ஐயா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மிக சுவாரசியமான தொடரினை அவரது அனுமதியின் பேரில் இங்கு அளிக்கிறேன்.  மிக்க நன்றி ஐயா.  அதன் முதல் பகுதி இங்கே:
    பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா? என்று.
    “அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.
    சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.  “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடா? அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை.  பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது.
    புற்று என்பது கறையான்கள தாம் வாழக் கட்டிக் கொண்ட வீடு.  அந்தப் புற்றுகளுக் குள்ளோ அல்லது எலி வளைகளுக் குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.
    வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?
    கரையான்
    எலிகளின் கதையும் இதேதான்.  பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.
    நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள்.  அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள்.  இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.
    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல.  ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்?  அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.
    பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை.  நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.
    அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.
    இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae)  அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன.  பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.
    செய்யான் பாம்பு
    செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.
    இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர்.  ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும்.  இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம்,  அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
    மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம்.  மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்?  அதுதான் மலைப் பாம்பு,  சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.
    மலைப் பாம்பு
    மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும்.  வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும்.  அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.
    மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும்.  மரத்தின் மீதும் ஏறும்.  தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.
    வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து.  ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.
    கட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று.  ஆனால் இது படித்துப் பட்டம் பெறுவதற்காக எழுதும் கட்டுரை அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை.  ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.
    திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம்.  அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள்.  அவர்கள் வீட்டில் பேசுவது  அக்ரகாரத் தமிழில்.  ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு.  ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.
    தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி.  அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே  வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள்.  தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.
    அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன்.  “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர்.  அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது.  பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது.  ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன.  அதன் உயிர் பிரிந்தது.  ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை.  சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது..  அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.
    பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார்.  அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது.  பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன்.  சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.  என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன.  நான், “அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன்.  “நீயே எடு” என்றார்.  நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன்.  தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு.  இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம்.  பின அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார்.   அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன்.  அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று.  உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.
    அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை.  காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான்.

    சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.
    நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.  ஏனெனில்  பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு.  அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான்.  அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது.  நீந்துகிறது.
    மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான்.  அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.
    நுகர்தல் :  பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு.  எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான்.  ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள்.  பின் எப்படி நுகர்கின்றன அவை?
    ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா?  நுகர்வதற்காகத் தான்.
    ஒலி கேட்டல் :   “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை.  பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.
    “இடியேருண்ட நாகம் போல்….” இது எந்த அளவு உண்மை?  உண்மை.  நூற்றுக்கு நூறு உண்மை.  பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும்.  மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும்.  ஆனால் அவ்வாறு கேட்பதற்கு  நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது.  அகச் செவிகள் உண்டு.  அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.   ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.
    ஒளி காணல் :  பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட.  தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய?  அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.
    விஷம் :  “பாம்பிற்குப் பல்லில் விஷம்.  தேளுக்குக் கொடுக்கில் விஷம்.   அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.”  இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை?  பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம்.  முன்னது ஐம்பது சத வீதம் உண்மை.  பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை.  அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது.  விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.
    http://encarta.msn.com/media_701681865_761578341_-1_1/snake_fangs.html
    கிலு கிலுப்பை எனத் தன் வாலினால் சல சல ஒலி எழுப்பும் பாம்பு அதன் விஷப் பற்கள் வெளியே தெரிய
    பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும்.  அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.
    பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.
    தோலுரித்தல் :  தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.  பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு.  பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.
    பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல.   அதனைக் கடித்து
    சத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.
    சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது.  சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.
    நாக ரத்தினம் :  “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது.  அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும்.  அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.”  இது உண்மையா, கட்டுக் கதையா?  பின்னது என்றே நான் சொல்வேன்.
    தொடரும்…
      
    Share
  • ஆன்மீகமும் நானும் (22)

    சிரத்தையும் சிரார்த்தமும்

    ஒருவர் இறந்த பின் அவரது பிள்ளைகள் இறந்தவர்களுக் கென வருடா வருடம் சிரார்த்தம் செய்கின்றனர் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து சிரார்த்தம் செய்வோரின் குடும்பத்தினை வாழ்த்திடல் வேண்டும் என்பதற்காக. செய்யும் விதம் மதத்திற்கு மதம் வேறு பட்டாலும் செய்வதின் நோக்கம் ஒன்றுதான்.

    இது தேவையற்ற ஒன்று என்பது என் சொந்தக் கருத்து.

    சிலர் சொல்வார்கள் உங்கள் பெற்றோர்களை நினைவில் இருத்திக் கொள்ள ஒரு வழி இது என்று. வருடத்தில் ஒரு நாள்தான் அவர்களை நினைவுக்குக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் அந்த ஒரு நாள் தான் எதற்கு? தன்னைப் பெற்று, பாசத்தினைப் பொழிந்து, வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைத்து உங்களை ஆளாக்கியவர்களை என்றுமே அல்லவா மறக்காது நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்?

    சிலர் சொல்வார்கள் ஒருவர் இறந்த பின் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யா விட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையாது. அது உங்களை சபித்து விடும் என்று. வாழ்ந்த நாட்களில் பெற்றோரை மதிக்காது நடந்து கொண்டவர்கள் கூட இந்த பயத்தினால் வருடா வருடம் சிரார்த்தம் செய்வதுண்டு. எந்த ஒரு தாயும் தந்தையும் தன் குழந்தைகள் கஷ்டப் பட வேண்டும் என சபிக்க மாட்டர்கள், குழந்தைகள் அவர்கள் கண்களில் கண்ணீர் வருமாறு நடந்து கொண்டிருந்தாலும் கூட.

    ஒருவர் அவர் தாய் தந்தைக்கு உயிரோடு இருக்கும் போது அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்தால் மட்டும் போதாது. அவர்களைத் தங்களுடனேயே வாழ வைத்துக் கொண்டு, என்றுமே அவர்கள் சந்தோஷமாக வாழ வழி செய்ய வேண்டும்.

    கடைசியாக நான் இதுவரை எழுதி வந்ததின் சாராம்சம்

    1. இறைவனைக் காண / அவரிடம் உங்கள் முறையீடுகளை வைக்க இடைத் தரகர்கள் உதவி தேவை இல்லை.

    2. எங்கும் நிறை இறவைன் உங்களுள்ளும் இருக்கிறான்.

    3. வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களைப் படிப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் படித்தவற்றுள் உள்ள நல்ல விஷயங்களை உங்கள் வாழ்வில் முடிந்த வரை கடை பிடியுங்கள்.

    4. எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் பழகுங்கள்.

    5. உங்களால் ஆன உதவிகளைப் பிறருக்குச் செய்யுங்கள்.

    6. உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

    உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

    (முற்றும்)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (20)

    பேச்சும் நடை முறையும்

    இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன் எனது நோக்கம் யாரையும் என் வழிக்குத் திருப்புவதோ அல்லது யாருடைய மனதையும் புண் படுத்துவதோ அல்ல என்று. இனி வரும் இரு மடல்களைப் படிக்க உங்கள் மனதினை சற்றே திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இதைச் சொன்ன உடன் ஏதோ திகில் கதை சொல்லப் போகிறேன் என்று எண்ண வேண்டாம். சராசரி மனிதர்களின் கதை தான் சொல்லப் போகிறேன்.

    1992ல் ஒரு முறை டில்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன் எனது நாலரை வயது பேரனுடன். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் எனக்கு நடு இருக்கையும் எனது பேரனுக்கு மேல் இருக்கையும் அளிக்கப் பட்டு இருந்தது.

    நாங்கள் பயணித்த பெட்டியில் சென்னையில் இருந்து ஹரித்துவார், டெல்லி என்று ஆன்மீகப் பயிற்சிப் பட்டரைக்காகச் சென்று விட்டுத் திரும்பும் சென்னை சின்மயா மிஷன் அன்பர்கள் சுமார் இருபது பேர் இருந்தார்கள். ஏறியதில் இருந்து பயிற்சிப் பட்டரையில் தாங்கள் அனுபவித்த இன்பம் பற்றிப் பேசி வந்தனர்.

    படுக்கும் நேரம் வந்தது. நான் என் அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன், “இந்தச் சிறுவனுக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கிறது. தூக்கத்தில் பிரண்டு கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டு விடுவான். உங்களில் யாராவது ஒருவர் கீழ் இருக்கையை அளிக்க முடியுமா?” என்று.

    “ஹூஹூம். முடியாது” என்றனர் அவர்கள். அன்றிரவு நடு இருக்கையில் பேரனை இடுக்கிக் கொண்டு படுத்து வந்தேன். மறு நாள் பொழுது விடிந்தது. நான் அவர்களிடம் கேட்டேன், “நீங்கள் பேசிக் கொண்டு வருவதில் இருந்து சின்மயா மிஷன் அங்கத்தினர்கள் நீங்கள் என்று தெரிகிறது. பகவத் கீதை படிப்ப துண்டல்லவா?”

    “கட்டாயம் தினசரி படிப்போம்.”

    “பக்தி யோகம் என்னும் பன்னிரெண்டாவது அத்தியாயம்?”

    “அது எங்களுக்கு மனப் பாடமாகத்த் தெரியுமே.”

    “அப்படியா? அதில் ‘அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ரக் கருண ஏவச’ என்று ஒரு வரி வருகிறதே அதற்கு என்ன பொருள்?”

    “எல்லா உயிகளிடத்தும் நட்பையும் கருணையையும் தவிற வெறுப்பு காட்டக் கூடாது என்பது அதன் பொருள்.”

    “நேற்றிரவு இந்தச் சிறுவனுக்காக உங்களில் ஒருவரது கீழ் இருக்கையைக் கேட்டேன. அதைக் கொடுக்க யாருமே முன் வரவில்லை. பகவத் கீதையைப் பள்ளி மாணவன் வாய்ப் பாடுகளை மனனம் செய்வதுபோல் தினமும் படிப்பதினால் என்ன உபயோகம், அதில் உள்ள ஒரு வரியினைக் கூட உங்கள் வாழ்க்கையில் நடை முறையில் கொண்டு வர முடிய வில்லை என்றால்?”

    என் கேள்விக்கு பதில் இல்லை.

    சின்மயானந்தா உயிருடன் இருக்கும் போதே தயானந்தா பிரிந்து தனியாக ஆசிரமம் ஆரம்பித்தார். ஹரிநாமானந்தா காவி உடையைக் களைந்து விட்டு மணம் செய்து கொண்டு அமெரிக்கா பயணமானார். தஞ்சையில் இருந்த ஒரு பிரும்மச்சாரி தங்கி இருந்த வீட்டு எஜமானரின் இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான அவர் மனைவியை அழைத்துக் கொண்டு தனி ஆசிரமம் அமைக்கச் சென்று விட்டார். திருச்சியில் இருந்து மேல் பயிற்சிக்காக பம்பாய் சென்ற ஒரு பிரும்மச்சாரி தன் சக மாணவியைக் காதல் புரியத் தூண்ட, அவள் அதை வெறுக்க, அவள் முகத்தில் கத்தியால் அவர் குத்த, அது போலீஸ் வரை போய் விட்டது.

    இதையெல்லம் பார்த்த போது இவர்கள் போதிப்பது என்ன? நடந்து கொள்ளும் விதம் என்ன? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா? இவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் தான் எனத் தோன்றியது.

    இறைவன் இருக்கிறான் எல்லாவற்றினுள்ளும். “அவனைக் காண / அடைய உன்னை நீயே கேட்டுப் பார் ‘நான் யார்?’ என்று. அந்தக் கேள்விக்கு விடை கண்டால் உன்னுள் உறையும் ஈசனை நீ காணலாம்” என்ற பகவான் ரமணரின் கூற்று எனக்கு சரியெனத் தோன்றியது.

    எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு. உன்னால் முடிந்த உதவியைப் பிறருக்கு நீ செய். நேர்மையாகவும் உண்மையாகவும் இரு. இவையே நீ நற்கதி அடைய வழி செய்யும் த்யானம். படித்தால் மட்டும் போதாது வேத, புராண, இதிகாசங்களை. அவற்றில் நீ காணும் நல்லவற்றை உன் வாழ்க்கையில் நடை முறைக்குக் கொண்டு வா. அது தான் நீ செய்ய வேண்டிய பூஜை. இவ்வாறான முடிவிற்கு நான் தள்ளப் பட்டேன்.

    (தொடரும்….)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (19)

    நடராஜன் கல்பட்டு

    கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே ?

    ank

    ஒரு ஊரில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒருவன் தன் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டுக் காஷாயம் தரித்துக் காட்டுக்குச் சென்றான் தவம் செய்ய. காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தவம் புரிந்தான். உணவு தேவைப் பட்ட போது அருகில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று பிச்சை யெடுத்து உண்டான். சில நாட்கள் கழிந்தன.

    ஒரு நாள் அவன் தவம் செய்து கொண்டிருந்த போது மரத்தின் மீது வந்தமர்ந்த் கொக்கு ஒன்று அவன் தலை மேல் எச்சமிட்டது. தவம் கலைந்த அவன் கோபக் கனல் வீச மேலே அண்ணாந்து பார்த்தான். அடுத்த கணம் கொக்கு எரிந்து சாம்பலாகிக் கீழே விழுந்தது.

    புதுச் சாமியாருக்குச் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆகா வந்து விட்டது எனக்கு அபார சக்தி என்று எண்ணியபடி ஊருக்குள் நுழைந்தார். ஒரு வீட்டின் கதவைத் தட்டி, “சாமியார் வந்திருக்கிறேன். பிச்சை போடுங்கள்” என்று உரக்கக் கத்தினார்.

    உள்ளிருந்து ஒரு குரல் வந்தது, “நான் என் கணவருக்கு போஜனம் அளித்துக் கொண்டிருக்கிறேன் சற்றுப் பொருங்கள். வருகிறேன்” என்று. சற்று நேரம் கழித்து மீண்டு கதவை பலமாகவே தட்டி, “சாமியார் வந்திருக்க்றேன். பிச்சை போடுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.

    சற்று நேரத்திற்குப் பின் கதவு திறந்தது. கையில் அரிசியுடன் வந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டார் புதிய சாமியார், “எவ்வளவு நாழியாக நான் காத்திருப்பது?” என்று.

    பதிலுக்கு அந்தப் பெண் கேட்டாள், “என்ன என்னையும் கொக்கென்று நினைத்தீரோ?” என்று.

    “கொக்கை நான் எரித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

    “அதுவா? பக்கத்து தெருவில் காதர் பாச்சா என்றொரு கசாப்புக் கடைக்காரர் இருக்கிறார். அவரிடம் போய் கேளுங்கள்” என்றாள் அவள்.

    காதர் பாச்சா வீட்டைத் தேடிக் கண்டு பிடித்த சன்யாசி. கதவைத் தட்டினார்.

    உள்ளிருந்து காதர் பாச்சாவின் குரல் கேட்டது, “செத்த இருங்க வந்தீட்டேன்.”

    சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் கதவைத் தட்டினார் சன்யாசி.

    “வாரேன்னு சொன்னேன் இல்லெ. செத்தப் பொறுமையா இருங்க.”

    பொறுமையிழந்த துறவி கதவில் இருந்த இடுக்கு வழியாக உள்ளே பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி, வயது முதிர்ந்த தந்தைக்குக் குளிப்பாட்டி, உடல் துடைத்து, ஆடை அணிவித்து நாற்காலியில் மெள்ள உட்கார வைத்துத் தட்டொன்றில் இருந்து உணவினை எடுத்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் காத பாச்சா. பின் அவருக்க் வாய் கழுவி விட்டு, மெல்லத் தூக்கிப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்து வாசல் கதவினத் திறந்தான் அவன்.

    கதவைத் திறந்ததும் கண்ணில் பட்ட சாமியாரைப் பார்த்துக் கேட்டானவன், “யாரு நீங்க? ஒங்களெ பக்கத்துத் தெரு வாசுகியம்மா அனுப்பினாங்களா? என்னா வேணும் ஒங்களுக்கு?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் காதர் பாச்சா.

    துறவி, “அப்பா நான் தேடி வந்தது கிடைத்து விட்டது எனக்கு” என்று சொல்லி மீண்டும் வாசுகியமாள் வீட்டினை அடைந்து கதவைத் தட்டினார். அவள் கதவைத் திறந்ததும் அவள் கால்களில் விழுந்து வணங்கி, “தாயே சரஸ்வதி என் கண்களைத் திறந்து விட்டீர்கள். புரிந்து கொண்டேன் நான் ஒருவனின் முதல் கடமை அவனை நம்பி உள்ளோரைக் காப்பாற்றுதல் என்பதை” என்று .

    துறவியின் காஷாயம் பறந்தது. சாதாரண உடையில் தன் வீட்டை நோக்கிப் பயணித்தான் அவன்.

    (கருப்பு வெள்ளை படம் பிடித்தது ந.க.)

    (தொடரும்….)

    Share
  • ஆன்மீகமும் நானும் (21)

    கல்பட்டு நடராஜன்

    நீங்களும் ஆகலாம் செத்தும் கொடுத்த சீதக்காதி

     

     

    ஒருவர் இறந்த பின் அவரது உடல் அழுகிக் கிருமிகளை உண்டாக்கக் கூடிய ஒன்று. ஆகவே அதை உடனே அப்புறப் படுத்தியாக வேண்டும். இல்லை யென்றால் அக்கிருமிகள் அருகில் உள்ள மற்றவர்களைப் பாதிக்கும்.

    இறந்தவர்களின் உடல்களை நம்மிடையே இருந்து அப்புறப் படுத்துவதில் பழக்கங்கள், மதத்திற்கு மதம், சாதிக்குச் சாதி வேறு படுகிறது. கிருஸ்துவர்களும், முஸ்லீம்களும் அவற்றைப் புதைக்கின்றனர். இந்துக்களில் சிலர் புதைக்கின்றனர். சிலர் எரிக்கின்றனர். பார்ஸீக்கள் என்றழைக்கப் படும் சூரிய வழிபாடு செய்யும் சொராஷ்ற்றியர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான ஒரு இடத்தில் அதற்கெனெப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட நிசப்தக் கிணறு (Tower of silence) என்ற ஒன்றில் எறிந்து விடுகின்றனர். அது கழுகு, காகம் போன்ற பறவைகளுக்கு உணவாகிறது.

    புதைப்பதால் இடம் ஆக்கிரமித்துக் கொள்ளப் படுகிறது. அது மட்டுமின்றிப் பின் நாட்களில் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் சேதப் படுத்தி விட்டால் மக்களிடையே கலவரங்களுக்கு வழி வகுக்கிறது.

    எரிப்பதால் பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுடல் அந்த பஞ்ச பூதங்களுடனேயே சேர்க்கப் படுகிறது. அதிக நிலப் பரப்பும் வீணாவதில்லை.

    ஆனால் இந்த மூன்று வழிகளைத் தவிற நான்காவதாக ஒரு வழியும் இருக்கிறது. அதுதான் உடல் உறுப்புகள் தானம். இறந்தவரின் உடல் மூன்று மணி நேரத்திற்குள் அதற்கான வசதிகள் கொண்ட மருத்துவமனைக்குச் சேர்ப்பித்தால் அந்த உடலில் இருந்து கண், கல்லீரல், மூத்திரக் காய்கள், இருதயத்தில் உள்ள வால்வுகள் போன்றவை அறுவடை செய்யப் பட்டு தேவையானவர்களுக்குப் பொருத்தப் பட்டு அவர்களுக்கு உயிர் தானம் அளிக்கப் படும். இதனால் நீங்களும் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆகலாம். என்றுமே சிரஞ்சீவியாக வாழலாம்.

    எனது மனைவியும், நானும் எங்கள் உடலை ராமச்சந்திரா மருத்துவ மனைக்குத் தானமாக அளிக்க ஒப்புதல் கடிதங்கள் கொடுத்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம். என்ன ஒன்று, இவ் விஷயம் எனது மூன்று மகள்களின் சம்மதம் வாங்கிக் கொண்டு செய்யப் பட்ட ஒன்று என்றாலும் நாங்கள் இறக்கும்போது அருகில் இருப்பவர்கள் மருத்துவ மனைக்குத் தெரியப் படுத்தி உடலினை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    (தொடரும்….)

    Share
  • ஆன்மீகமும் நானும் (17)

    நடராஜன் கல்பட்டு

    சின்மயா மிஷன் நடப்புகள்

    விஜயவாடவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின் எங்கள் வீட்டில் வெள்ளிக் கிழமைகள் பெண்களுக்கான ஆன்மீக வகுப்புகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் சிறுவர்களுக்கான பால விகாரும் நடத்த வசதிகள் செய்து தந்தேன். அதே சமயம் நானும் பகவத் கீதையின் சில பகுதிகளை மனனம் செய்து வந்தேன். அவற்றை அர்த்தத்துடன் கற்றேன்.

    திருச்சிக்கு மாற்றலாகி வந்த பின் சின்மயா மிஷனின் திருச்சி கிளையின் சார்பில் ப்ரும்மச்சாரி ஹரிதாஸ் அவர்களை திருச்சிக்கு அழைத்து சொற்பொழிவுகள் நடத்தச் செய்தோம். அப்போது அவர் பத்து நாட்களுக்கு எங்கள் வீட்டில் தங்கி இருந்தார்.

    அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்துப் பின் சுமார் ஒரு மணி நேரம் த்யானத்தில் அமர்வார் ஹரிதாஸ் அவர்கள். அவர் எழுமுன் நாங்களும் எழுந்துத் தயார் ஆகி விடுவோம். அவர் தங்கி இருந்த நாட்களில் எங்கள் வீட்டில் ஒரு தெய்வீக ஒளி வீசுவது போல உணர்ந்தோம். அடுத்த வருடமே ப்ரும்மச்சாரி ஹரிதாஸ் சுவாமி ஹரிநாமானந்தா வாக மாறினார் முற்றிலுமாக சன்நியாசம் எடுத்துக் கொண்டு.

    ஒரு முறை சுவாமி சின்மயானந்தா அவர்கள் திருச்சிக்கு விஜயம் செய்தார். பின் சுவாமி தயானந்தா அவர்கள் கும்பகோணத்தில் ஒரு வாரத்திற்கு த்யான வகுப்புகள் நடத்தினார்.

    எங்கள் வீட்டில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதற்காகவும், இறைவனின் துதிகள் கற்றுத் தருவதற்காகவும் வகுப்புகள் ஆரம்பித்தோம். ஆரம்ப நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். வகுப்பின் முடிவில் இறைவனின் படங்களுக்குக் கற்பூர ஹாரத்தி எடுத்து, வாழைப் பழம் நிவேதனம் செய்து, குழந்தைகளுக்குப் பிரசாதமாக ஆளுக்கொரு வாழைப் பழம் கொடுத்து வந்தோம். ஆனால் நாளடைவில் குழந்தைகளுக்கு ஈடுபாடுக் குறைவினாலோ என்னவோ எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து ஒரு நாள் எனது இரு மகள்களைத் தவிற வேறு யாரும் வரவில்லை. வாங்கி வைத்திருந்த பழங்கள் எல்லாம் வீணாகின.

    அதற்கடுத்த வாரம் எனது இரு மகள்களைத்த் தவிற இருவர் வந்தனர். அதில் ஒருத்தி எனது கடைசீ மகளின் தோழி. பக்கத்து வீட்டுப் பெண், பெயர் சிவகாமி. வயது பத்து.

    அன்று வாழைப்பழம் வாங்கி வைக்காத்தால் வீட்டில் இருந்த இரு வாழைப் பழங்களைப் பாதிப் பாதியாக வெட்டி வகுப்பு முடிவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டி வந்தது.

    சிவகாமி சொன்னாள், ‘அரை மணி நேரம் கவான் கவான்னு கத்த வெச்சூட்டுக் கெளெவன் அரை வாளப் பளத்தெக் கொடுக்கறான். யாரு வருவா இதுக்கு?’ என்று. அன்றோடு பால விகார் முடிவுக்கு வந்தது.

    அப்படி அவள் சொல்லக் காரணம் அரை வாழைப் பழம் அல்லவென்றும், அன்று காலை தோட்டத்தில் விளையாடும் போது என் மகளோடு ஏற்பட்ட ஒரு சிறு சண்டைதான் என்பதும் பின்னால் தெரிய வந்தது. அப்போதே அவளது தன் தீர்மானமான முடிவினைத் தெரிவித்து விட்டாளாம் சிவகாமி என் மகளிடம்!

    (தொடரும்….)

    Share
  • ஆன்மீகமும் நானும் (16)

    நடராஜன் கல்பட்டு

    ஐயப்பன் வழிபாடு – 4

    1974 டிசம்பர் மாதம் முதல் 1978 ஆகஸ்ட் மாதம் வரை நான் திருச்சியில் பணி புரிந்து வந்தேன். இந்த சமயம் எனெக்கொரு உடல் உபாதை வந்தது. வேலை செய்து கோண்டே இருப்பேன். திடீரென வயிற்றைக் கலக்கும். அடுத்த வினாடி நான் கழிப்பறை நாடி ஓட வேண்டும். சில மருத்துவர்களிடம் சென்றேன். ஒவ்வொருவரும் ஒரு வியாதியின் பெயர் சொல்லி மருந்தும் கொடுத்தனர். ஆனால் குணம் ஒன்றும் தெரியவில்லை. கடைசியாக ஒரு ரண சிகிச்சை நிபுணரை அணுகினேன்.

    அவர் சொன்னார், சில பரிசோதனைகளுக்குப் பின், ‘உங்கள் உடலில் பெருங்குடலில் புற்று நோய் இருக்கலாம். குடலில் இருந்து ஒரு சிறு துண்டு சதையினை எடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பலாம். அவர்கள் அதை பரிசோதித்து புற்று நோய் உள்ளதா இல்லையா என்று உறுதியாகச் சொல்லி விடுவார்கள்’ என்று. பின் அவர் சொன்ன படி ஒரு சிறு துண்டு சதையினை குடலில் இருந்து வெட்டி எடுத்து தஞ்சைக்கு அனுப்பினார்.

    தஞ்சையில் இருந்து பத்து நாட்களுக்குப் பின் செய்தி வந்தது ‘புற்று நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை’ என்று. உடனே என் மனைவி சொன்னாள், ‘நான் நம் கம்பெனியின் ஒரு விநியோகஸ்தரின் அறிவுரைப்படி அய்யப்பனுக்கு வேண்டிக் கொண்டிருக்கிறேன் தஞ்சையில் இருந்து நல்ல செய்தியாக வந்தால் உங்களை அய்யப்பனைத் தரிசிக்க அனுப்புகிறேன் என்று. நீங்கள் இந்த வருடம் சபரி மலை சென்று வரவேண்டும்’ என்று. நானும் ஒப்புக் கொண்டேன்.

    திரப் பட நடிகர் காலஞ்சென்ற எம்.என்.நம்பியார் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் ஒரு தீவிர அய்யப்ப பக்தர். சுமார் 50 – 60 முறைகளுக்கும் மேல் சபரி மலை சென்று வந்தவர் அவர் என்று. அவருக்கு அய்யப்பன் மீதுபக்தி ஏற்படக் காரணம் அவர் ஆரம்ப நாட்களில் பணி துவங்கிய நாடகக் குழுவின் தலைவர், புகழ் பெற்ற காலஞ்சென்ற் திரு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் தான்.

    நவாப் அவர்கள் அளித்து வந்த கிருஷ்ண லீலா என்னும் நாடகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. ஒரு சமயம் அவர் கேரளாவில் நாடகம் நடத்திய போது பர்மா ஷெல் மண்ணென்னை வியாபாரி ஒருவர் வீட்டில் தங்கினாராம். அந்த வியாபாரி கேட்டாராம், ‘நவாப் நீங்கள் கிருஷ்ணனைப் பற்றி இவ்வளவு அழகாக நாடகம் நடத்துகின்றிர்களே அய்யப்பனைப் பற்றியும் ஏன் ஒரு நாடகம் நடத்தக் கூடாது?’ என்று.

    ராஜமாணிக்கம் அவர்கள் சொன்னாராம், ‘போடலாம்தான். ஆனால் அவர் பற்றி சரியான, நம்பிக்கையான தகவல்கள் வேண்டுமே?’ என்று.

    ‘ஒரு முறை சென்று வாருங்கள் சபரி மலைக்கு. அய்யப்பன் சரித்திரம் தானே புரிந்து விடும் உங்களுக்கு’ என்றாராம் அந்த வியாபாரி..

    ராஜமாணிக்கம் பிள்ளையும் சென்று வந்தார் சபரி மலைக்கு. அன்று சென்றவர் தன் ஆயுள் முடியும் வரை சென்று வந்தார். கூடவே தோன்றியது சுவாமி அய்யப்பன் என்ற அழகியதொரு நாடகமும். அக்குழுவில் இருந்த நம்பியார் அவர்களுக்கும் தொற்றிக் கொண்டது அய்யப்பன் மீது அபாரபக்தி. சுவாமி அய்யப்பன் நாடம் தமிழ் நாட்டில் பெருமளவு அய்யப்ப பக்தியைத் தோற்று வித்தது.

    என் அதிருஷ்டம் நவாப அவர்களின் மகன் எனக்குக் குருவாக அமைந்தார்.

    வழக்கமாக வெய்யில் நாட்களிலும் மித வென்னீரில் குளிப்பவன் நான். பச்சைத் தண்ணீரில் குளித்தால் முதுகுப் பிடிப்பு வந்து விடும். நவம்பர் டிசம்பர் மாதங்களில் பச்சைத் தண்ணீரில் குளித்தேன் முதல் முறையாக ஒரு வித பாதிப்புமின்றி. அது மட்டுமல்ல. காலணியின்றி நடந்திடாத எனக்கு இரண்டே நாட்களில் பழகிப் போயிற்று. முதல் இரு நாட்கள் காலில் கற்கள் உறுத்தினாலும் மூன்றாவது நாளில் இருந்து அதுவும் பழகிப் போய் விட்டது. அதனால் மலை ஏறும் போது கூறிய கற்களும் என் கால்களை ஒன்றும் செய்ய வில்லை.

    அந்த யாத்திரையில் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது. அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் அந்த இன்பத்தினை. பல சிறு சிறு கஷ்டங்களைப் பொருட் படுத்தாது உறுதயோடு பதினெட்டு படிகள் ஏறி அய்யப்பன் சன்னதியை நாம் அடையும் போது நம் மனம் லேசாகிறது. சொல்ல முடியாத இன்பத்தினை அனுபவிக்கிறோம்.

    எல்லாமே இன்ப மயம் என்றும் சொல்லி விட முடியாது. சிறு சிறு கஷ்டங்களும் அனுபவிக்கத்தான் வேண்டி இருந்தது.

    லடசக் கணக்கில் அங்கு வந்தடையும் பக்தர்களைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் அதே சமயம் யாத்ரீகர்கள் திறந்த வெளியிலே மல ஜலம் கழிப்பதும் பின் பம்பை நதியில் உடல் கழுவுதலும் அதே நதியில் மக்கள் குளிப்பதும், நீரைக் குடிப்பதும் பார்க்க அருவருப்பாக இருந்தது.

    சன்னதியை அடையப் பதினெட்டு படிகள் வழியாக ஏறும் போது அங்கு உடைக்கப் பட்டுள்ள தேங்காய் சில்லுகள் கால்களில் குத்துவதும், தேய்ந்து சரிவாக இருந்த கற்படிகளில் வழிந்தோடும் இளநீரில் வழுக்குவதும் நமக்கு சிரமம தரும் ஒன்று.

    மலை ஏறி அய்யப்பனைத் தரிசித்து விட்டு பம்பைக்குத் திரும்பியதும் நீங்கள் வந்த வண்டி எங்கு நிற்கிறது என்று கண்டு பிடிப்பது ஒரு பெருங்கஷ்டம்.

    நான்காவது கஷ்டம் பிய்ந்த கீற்றுக் கூரையின் கீழே மண் தரையில் துண்டினை விரித்துப் போட்டுப் படுக்க வேண்டி இருப்பது.

    இந்த நான்கு கஷ்டங்களுமே அடுத்த முறை நான் சென்ற போது நிவர்த்தி செய்யப் பட்டிருந்தன.

    ஆங்காங்கே சுத்தமான கழிப்பறைகள், பக்தர்கள் தங்குவதற்கு பல விடுதிகள், அழகான உறுதியான கண்கள் கொண்ட இரும்புப் படிகள், உங்கள் வண்டியை அழைத்திட ஒலிபெருக்கி வசதி, இப்படி எல்லாமே பக்தர்களுக்கு சாதகமான மாற்றங்கள்.

    அடுத்த ஆண்டு பிள்ளைப் பேறு இன்றி இருந்த ஒரு வினியோகஸ்தரிடம் நான் கேட்டேன், ‘நீங்கள் ஏன் சுவாமி அய்யப்னுக்கு வேண்டிக் கொண்டு சபரி மலை ஒரு முறை சென்று வரக் கூடாது?’ என்று.

    அவரது மனைவி சொன்னாள், ‘உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தால் அவர் சார்பாக வேண்டிக் கொண்டு நீங்கள் ஏன் செல்லக் கூடாது?’ என்று. நான் இரண்டாவது முறை சென்று வந்தேன். ஆனால் அவர்களுக்கு மகப்பேறு கிடைக்க வில்லை. நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டுமோ?

    மூன்றாம் முறை சென்று வந்த கதையினைப் பின்பொரு நாள் பார்ப்போம்.

    தொடரும்….

    Share
  • ஆன்மீகமும் நானும் (15)

    நடராஜன் கல்பட்டு

    ஐயப்பன் வழிபாடு – 3

    அய்யப்பன் வழிபாட்டிற் கென விதிக்கப் பட்டிருக்கும் கட்டுப்பாடு களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஒவ்வொன்றுமே ஒரு காரணத்தோடு வைக்கப் பட்டவை என்பது புரியும்.

    பல வருடங்களுக்கு முன்பு நாற்பது கிலோ மீடர் தூரம் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான காட்டுப் பாதை வழியாக நடந்து சென்றுதான் அய்யப்பன் சன்னதியை அடைந்திட முடியும். இதை பெரிய பாதை என்பார்கள். பின்னர் பம்பா நதி வரை கார், பேருந்து இவற்றில் சென்று ஒரு சிறிய பாலத்தின் வழியாக நதியை கடந்து சுமார் ஏழு கிலோ மீடர் தூரம் சரிவான மலைப் பாதை வழிச் சென்றால் போதும். இதை சிறிய பாதை என்பார்கள்.

    இப்போது இந்த சிறிய பாதைக்கும் சுமார் ஐந்து கிலோ மீடர் தூரத்திற்கு சரிவான சிமிண்டு பாதையும் கடைசீ இரண்டு கிலோ மீடர் தூரத்திற்கு சரிவான பாதையும் கூடவே படிக் கட்டுகளும் வந்து விட்டன. இந்த இரண்டு கிலோ மிடர் தூரத்திற்கு நிழல் தந்திடும் கான்கிரீட் கூரையும் உண்டு.

    இனி கட்டுப் பாடுகளும் காரணங்களும்.

    கருப்பு அல்லது கரு நீல உடை ஏன்?

    வெள்ளை உடையோ, பிரகாசமான நிற உடையோ அணிந்தால் காட்டு மிருகங்களின் கண்களில் நீங்கள் நீண்ட் தூரத்தில் இருந்தே பட்டு விடுவீர்கள்.

    காலணிகளுக்ககு ஏன் தடை?

    நம் நாட்டில் பலரும் அணிந்திடும் காலணி செருப்பு. செருப்பை அணிந்து கொண்டு சாய்வான, சிறு சிறு கற்கள் கொண்ட பாதையில் நடந்தால் நம் கால்களில் இருந்த செருப்பு தனியே கழன்று நீங்கள் கீழே சறுக்கி விழுவீர்கள். மலையேரும் காலணிகள் என்பது சமீபத்தில் வந்த ஒன்று அதுவும் சாதாரண மக்கள் கைக்கெட்டாத ஒன்று. அப்படியே அவற்றை வாங்கி அணிந்து சென்றாலும் அதை பத்திரப் படுத்துவதில் தான் உங்கள் கவனம் செல்லும். ஆண்டவனை வழிபடுதலில் அல்ல.

    திடீரென அங்கு போகும் போது மட்டும் செருப்பின்றிச் சென்றால் உங்கள் பாதங்களால் அவற்றில் குத்தும் கற்களையும் முடகளையும் தாங்க முடியாது. நாற்பத்தி எட்டு நாட்கள் முன்பிருந்தே பழகி விட்டால் வெற்றுக் காலோடு எங்கும் நடக்கலாம்.

    மிகவும் எளிமையான் மரக் கறி உணவே, அதுவும் முடிந்தால் ஒரே ஒரு வேளை மட்டுமே, உண்ண வேண்டும். இது ஏன்?

    எளிதான மரக்கறி உணவை அதுவும் ஒரே வேளை உண்டால் உங்கள் உடல் எடை குறையும். மலைப் பாதையில் நடப்பதும் எளிதாக இருக்கும். நாவின் ருசி அடக்க வில்லை என்றால் போகும் வழியெல்லாம் உங்களுக்குப் பிரியமான உணவு கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?

    குளிப்பது பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.

    ‘வென்னீரில் குளித்துப் பழகியவர்கள் வென்னீரில் குளித்தால் என்ன தவறு?’ என்று கேட்கிறீர்களா?

    போகும் வழியெல்லாம் உங்களுக்கென வென்னீர் வைத்து தர ஆடகள் உட்கார்ந்திருப்பார்களா?

    தினமும் இரு வேளையும் குளிதுவிட்டு அயப்பனின் படத்தையோ, பதுமையையோ வைத்துப் பூசை செய்ய வேண்டும். அவ்வாறு பூசை செய்யும்போது, ‘சுவாமியே சரணம்’, ‘அய்யப்ப சரணம்’, என்று பல முறை(குறைந்தது 108 முறைகள்) உரக்க ‘சரணம் விளிக்க’ (கூப்பிட) வேண்டும்.

    இந்தக் கட்டுப் பாடு உங்கள் மனம் அலை பாயாமல் கட்டுப் ப்டுத்திடும் பயிற்சி. கூடவே தினமும் பல முறை‘சுவாமி சரணம் அய்யப்பா சரணம்’ என்று கோஷம் எழுப்பப் பயின்று விட்டால் பின் மலை வழிப் பாதையில் கோஷமெழுப்பிக் கொண்டு நடந்து செல்லும் போது நடையின் களைப்பும் தெரியாது. பலர் சேர்ந்து எழுப்பும் குரலால் காட்டு மிருகங்களும் தூர விலகி விடும்.

    யாத்திரை புறப்படு முன்னர் குழுவின் குரு சாமியின் மேற் பார்வையில் ‘பள்ளிக் கட்டு’ அல்லது ‘இருமுடி’என்று சொல்லப் படுவதைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

    பள்ளிக் கட்டு அல்லது இருமுடி என்பதை தயார் செய்வதே ஒரு தனிக் கலை.

    இரு முடி என்பது இரு அறைகள் கொண்ட ஒரு பருத்தித் துணியினால் செய்யப் பட்ட பை. இதன் ஒரு அறைக்குள் அய்யப்பனுக்கு சேர்ப்பிக்க வேண்டிய நெய், தேங்காய் வெற்றிலை, பாக்கு இவையும் மற்றொரு அறையில் அரிசி பருப்பும் இவையும் இருக்கும்.

    இரு முடி ஏன்? ஒரே முடியாக இருந்தால் அதைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டும். இரு பகுதிகளாக கட்டப் படும் இரு முடி சுலபமாக உங்கள் தலை மீது அமர்ந்து விடும். பிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதால் உங்கள் கைகள் இரண்டும் தேவைப் படும் போது உபயோகிக்கக் கிடைக்கும். ஒரு கையில் தடி ஒன்றினைப் பிடித்து நடக்கவோ அல்லது பாதையில் கால்கள் சறுக்கும் போது அருகில் உள்ள செடியினைப் பிடித்துக் கொள்ளவோ முடியும்.

    அய்யப்பனின் அபிஷேகத்திற்கென எடுத்துச் செல்லப்படும் நெய் கண்ணாடி சீசாக்களிலோ, தகர டப்பாக்களிலோ எடுத்துச் செல்லப் படுவதில்லை. சீசாக்களில் எடுத்துச் சென்றால் தப்பித் தவறி இரு முடி கீழே விழுந்தால் உடைந்து போகலாம். தகர டப்பாக்களில் எடுத்துச் சென்றால் வழியில் ஒழுகிடாமல் இருந்திட மூடியினை ஈயப் பற்று வைத்திடல் வேண்டும். பின் அந்த டப்பாவைத் திறந்திட ஆயுதம் வேண்டும். அதனால் தான் அபிஷேக நெய்யினை தேங்காயின் ஒரு கண்ணினைத் துளைத்து இளநீரை வெளியே கொட்டி விட்டு இளகிய நெய்ய்யை அதனுள் நிரப்பி, அடைப்பன் ஒன்றினால் அழுத்தி மூடி தேன் மெழுகினால் பூசி மூடிடுவார்கள். இதையெல்லாம் நல்ல முறையில் தயார் செய்திட பல முறை சென்று வந்த, அனுபவம் வாய்ந்த ஒருவரின் உதவி தேவை. அவரே குருசாமி.

    விரதம் ஆரம்பிப்பதின் அறி குறியாக மாலை (உத்திராட்சம், துளைசிக் கட்டை, வெள்ளெருக்குக் கட்டை அல்லது கண்ணடி இவற்றால் ஆன 108 மணிகள் கொண்ட ஜப மாலை) அணிந்த பின் ஒருவரை ஒருவர் ‘சாமி’என்றோ ‘அய்யப்பா’ என்றோ தான் அழைத்துக் கொள்ள வேண்டும்.

    மாலை, நாம் மேற்கொண்டுள்ள விரதத்தினை நமக்கு எப்போதும் நினைவில் வைத்திட உதவும் ஒன்று. ஜபம் செய்திடவும், சரணம் சொல்லவும் உபயோகப் படும் ஒன்று. ஒருவரை ஒருவர் அய்யப்பா என்றழைத்துக் கொள்வது ‘நான், எனது’ என்பதனை மறந்திடச் செய்யவும், எல்லோரும் சமம் என்னும் எண்ணத்தினை ஆழமாகப் பதிந்திடச் செய்யவும் உதவும்.

    நாற்பத்தி எட்டு நாட்களும் புலால் உண்ணல், பீடி, சிகெரெட், சுருட்டு, இவை பிடித்தல், மது அருந்துதல்,பாலியல் சுகம் காணல் இவை முற்றிலுமாகத் தவிர்க்கப் பட வேண்டும்.

    எல்லா உயிரகளிடத்தும் அன்பு காட்ட வேண்டும், மனத்தினை ஒரு முகப் படுத்தல் வேண்டும் என்பவற்றுக்கு உதவும் கட்டுப்பாடு இது.

    இந்த நாற்பத்தோரு நாட்களில் ஒரு நாள் ஏழைகளுக்கும், சக பக்தர்களுக்கும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

    தன்னிடம் உள்ளதைப் பிறரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சி இது.

    விரத நாட்களில் வெளியில் உணவு உண்ணுதலை முற்றிலு மாகத் தவிர்க்க வேண்டும்.

    ‘யாத்திரை கிளம்பியபின் வெளியில் தானே உணவு உட்கொள்ள வேண்டும்? இப்போது மட்டும் என்ன இந்தக் கட்டுப் பாடு?’ என்கிறீர்களா உண்மைதான். நாம் வெளியில் உணவருந்தும் போது கூடவே நம் உடலுள் நோய்க் கிருமிகளும் செல்லலாம்.. அவற்றின் பாதிப்பு உடனே இல்லாவிட்டாலும் யாத்திரை கிளம்பியபின்உண்டாகலாம். உடல் நலம் கெட்டால் நமக்கு வைத்தியம் செய்ய மருத்துவ மனையோ, மருத்துவரோ உடனே கிடைக்காமல் போகலாம். அதனால் நம் உடல் மிகவும் பாதிக்கப் படலாம். ஏன் மரணமே கூட சம்பவிக்கலாம். இக் காரணத்திற்ககத்தான் இந்தக் கட்டுப்பாடு.

    வெளியே சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் குளிக்க வேண்டும்.

    இந்தக் கட்டுப் பாடும் நம் உடல் மீதோ, உடைகள் மீதோ ஒட்டிக் கொண்டு வரும் கிருமிகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்.

    பத்து வயதுக்கு மேல் ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களை உடன் அழைத்துச் செல்லக் கூடாது.

    மாத விடாய் உடையவர்கள் சென்றால் அவர்களுக்கு மாத விடாய் நாட்களின் போது தேவைப்படும் தனிமை கிடைத்திடாது. அதனால் மற்றவர்களின் பயண வேகமும் தடைப் படும் என்பது ஒருமுக்கிய காரணம்.

    ஒரு சொல்ல மறந்த கட்டுப்பாடு சபரி யாத்திரை செய்வோர் முடித் திருத்தமோ முகச்சவரமோ செய்திடல் கூடாது என்பது.

    முடி திருத்தமோ, முகச் சவரமோ செய்து கொள்ள நேரம் தேவை. முடி திருத்தம் செய்திட முடி திருத்துனர் தேவை. இவை இரண்டும் யாத்திரைப் பாதையில் கிடைக்காமல் இருக்கலாம். இரண்டாவதாக நம் மீது வளரும் முடி நமக்கு ஓரளவுக்கு குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். சமவெளிப் பிரதேசத்தை விட மலை மீது குளிர் அதிகமாகவே இருக்கும். இக்குளிரில் இருந்து ஓரளவு தப்பலாம் அல்லவா முகத்திலே முடி வளர்ந்திருந்தால்?

    சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரியும் அய்யப்பன் வழிபாட்டிற்கென பிரத்தியோகமாக விதிக்கப் பட்டிருக்கும் கட்டுப் பாடுகள் எல்லாமே ஒரு நல்ல காரணத்திற்காகத் தான் என்பது.

    இனி நாளை எனது சிறிய அனுபவம் பற்றிச் சொல்ல நினைக்கிறேன்.

    (தொடரும்….)

    Share
  • ஆன்மீகமும் நானும் (14)

    நடராஜன் கல்பட்டு

    யப்பன் வழிபாடு 2

     

    ஐயப்பனை தரிசிக்கச் செல்பவர்கள் சாதாராணமாகத் தனி நபர்களாகச் செல்வதில்ல்.  தனித் தனிக் குழுமங்களாகத் தான் செல்வார்கள்.  இதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

    முதல் காரணம் இந்த வழிபாட்டின் தனித் தன்மை.

    இரண்டாவது செய்முறையை பல முறை சபரி மலை சென்று வந்த ஒருவரை குருவாக வரித்து அவறிடம் இருந்து கற்க வேண்டும்.

    மூன்றாவது காரணம் ஐயப்பன் கோவில் காடுகளின் நடுவே மலை மீது இருப்பதால் போகும் வழியில் தனிமையில் சென்றால் காட்டு மிருகங்களின் தாக்குதலுக்கு உட்படலாம் என்பது.

    இந்த வழிபாட்டின் மிக முக்கியமான ஒன்று இதில் ஈடு படுவோர் நான், எனது என்பதை மறந்து எல்லோரும் ஒன்றே என்ற மனப் பாங்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  அதனால் தான் அய்யப்ப பக்தர்கள் ஒருவரை ஒருவர் சாமி என்றோ ஐயப்பா என்றோதான் அழைத்திடுவார்கள்.  கூட்டமாகச் செல்லும்போது ஒரு தனிப் பட்டட நபரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், டாக்டர் சாமி, எஞ்சினியர் சாமி, கார் சாமி என்றோ தான் அழைப்பார்களே தவிற பெயர் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள்.  பெயர் இந்த பூத உடலோடு இணைந்தது.  எல்லோரும் சமம் என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவே எல்லோர் உள்ளும் இருக்கும் சாமியை அழைக்கிறார்கள்.

    சபரி மலை செல்ல விழைவோர் யாத்திரை கிளம்பும் முன் நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.  அப்படி விரதம் இருக்கும் போது சில முக்கிய கோட்பாடுகளை அனுசரிக்க வேண்டும்.  அவை சுமார் பன்னிரண்டு.  என்ன வென்று பார்ப்போம் அவற்றை.

    1. சபரி மலை செல்ல விரும்புவோர் கருப்பு (சிறந்தது) அல்லது     கரு நீல ஆடைகளே அணிய வேண்டும்.
    2. கால்களில் காலணிகள் அணியக் கூடாது.
    3. மிகவும்  எளிமையான் மரக் கறி உணவே, அதுவும் முடிந்தால் ஒரே ஒரு வேளை மட்டுமே, உண்ண வேண்டும்
    4. குளிப்பது பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.
    5. தினமும் இரு வேளையும் குளிதுவிட்டு அயப்பனின் படத்தையோ, பதுமையையோ வைத்துப் பூசை செய்ய வேண்டும்.  அவ்வாறு பூசை செய்யும்போது, ‘சுவாமியே சரணம்’, ‘ஐயப்ப சரணம்’, என்று பல முறை(குறைந்தது 108 முறைகள்) உரக்க ‘சரணம் விளிக்க’ (கூப்பிட) வேண்டும்.
    6. யாத்திரை புறப்படு முன்னர் குழுவின் குரு சாமியின் மேற் பார்வையில் ‘பள்ளிக் கட்டு’ அல்லது ‘இருமுடி’என்று சொல்லப் படுவதைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
    7. விரதம் ஆரம்பிப்பதின் அறி குறியாக மாலை (உத்திராட்சம், துளைசிக் கட்டை, வெள்ளெருக்குக் கட்டைஅல்லது கண்ணடி இவற்றால் ஆன 108 மணிகள் கொண்ட ஜப மாலை) அணிந்த பின் ஒருவரை ஒருவர் ‘சாமி’என்றோ ‘ஐயப்பா’ என்றோ தான் அழைத்துக் கொள்ள வேண்டும்.
    8. நாற்பத்தி எட்டு நாட்களும் புலால் உண்ணல், பீடி சிகெரெட்  சுருட்டு இவை பிடித்தல், மது அருந்துதல், பாலியல் சுகம் காணல் இவை முற்றிலுமாகத் தவிர்க்கப் பட வேண்டும்.

     

    09,  இந்த நாற்பத்தெட்டு நாட்களில் ஒரு நாள் ஏழைகளுக்கும், சக பக்தர்களுக்கும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

    1. விரத நாட்களில் வெளியில் உணவு உண்ணுதலை முற்றிலு மாகத் தவிர்க்க வேண்டும்.
    2. வெளியே சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் குளிக்க வேண்டும்.
    3. 10 வயதுக்கு மேல் ஐம்பது வயதுக்குட் பட்ட பெண்களை உடன் அழைத்துச் செல்லக் கூடாது.

     

    இந்தப் பன்னிரெண்டு கட்டுப்பாடுகளுமே காரணமின்றி வைக்கப் பாட்டவை அல்ல.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

    காரணங்களை நாளை பார்ப்போம்.

    (தொடரும்….)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (13)

    நடராஜன் கல்பட்டு

    ஐயப்பன் வழிபாடு – 1

    திருப்பதி, பழனி போன்ற தலங்களுக்கு மக்கள் கூட்டம் செல்வது போல, சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒன்று. முன்னவற்றுக்கு வருடம் பூராவும் மக்கள் செல்வார்கள். ஆனால் சபரி மலைக்கோ பங்குனி / சித்திரையிலும், மார்கழி / தை மாதங்களில் மட்டுமே செல்வார்கள். மற்ற நாட்களில் சபரி மலையில் வீற்றிருக்கும் சுவாமி ஐயப்பனின் கோவில் திறந்திருக்காது. அப்படி இருந்தும் ஆண்டொன்றுக்கு சுமார் 5 கோடிக்கும் மேலான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

    சபரி மலை, கேரள மாநிலம், மேற்குத் தொடர்ச்சி மலையில். பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஓரிடம்.

    சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் வம்சத்தில் வந்த குறுநில மன்னன் ராஜசேகரன் என்பவன் பந்தளம் என்ற இடத்தை, திருவிதாங்கூர் மன்னரின் கீழ் செயல் பட்டு, ஆண்டு வந்தான். அவன் பிள்ளை வேண்டி சிவனைத் துதித்து வந்தான். ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது பமபை நதிக் கரையில் கழுத்தில் மணி மாலையுடன் ஒரு ஆண் குழந்தையைக் கண்டான். அப்போது அங்குதோன்றிய ஒரு சிவனடியார் அரசனை அக் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்குமாறு கூறினார். அரசனும் அப்படியே அக் குழந்தையை எடுத்துச் சென்று, கழுத்தில் மணி மாலையோடு இருந்ததால், அதற்கு ‘மணிகண்டன்’ எனப் பெயரிட்டு வளர்க்கலானான். சில வருடங்களில் அவனை தக்க குருவிடம் சேர்த்து சகல கலைகளையும் கற்றுத் தரச் செய்தான். இதன் நடுவில் பந்தள ராஜன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. தனக்கே ஒரு குழந்தை பிறந்ததும் ராணிக்கு மணிகண்டன் மீதிருந்த பாசமும், அன்பும் குறைய ஆரம்பித்தது.

    மணி கண்டனுக்குப் பதிமூன்று வயது நிரம்பிய போது அரசன் அவனுக்கு பட்டம் சூட்ட ஏற்பாடுகள் செய்தான். ‘சொந்தக் குழந்தை இருக்கும் போது காட்டில் கண்டெடுத்த குழந்தைக்கு பட்டம் சூட்டுவதா?’ என்ற கேள்வி ராணியின் மனதில் எழுந்தது.

    மணி கண்டன் பட்டத்துக்கு வராது சின்னவன் வந்தால் தனக்கே எல்லா அதிகாரமும் வந்து விடும். நாளடைவில் தானே அரசனாகி விடலாம் என்ற பேராசை கொண்ட மந்திரி ராணிக்கு துர்போதனை செய்தான், ‘நீங்கள் உடல் நலம் சரியில்லை என்று படுத்துக் கொண்டு விடுங்கள். நான் அரச வைத்தியரை வைத்து உங்கள் வியாதியைக் குணப் படுத்த புலிப்பால் கொடுத்தால் தான் முடியும் என்று சொல்ல வைக்கிறேன். அரசரும் நம்பி விடுவ்வார். மணிகண்டன் தானே சென்று புலிப்பால் கொண்டு வருகிறேன் என்று காட்டுக்குப் போவான். அங்கு கொடிய காட்டு விலங்குகளுக்கு இறையாகி விடுவான்’ என்று. ராணியும் ஒப்புக் கொண்டு பிணியால் அவஸ்தைப் படுவது போல நடித்தாள்.

    மந்திரியும் ராணியும் எதிர்பார்த்த படியே மணிகண்டனும் காடடுக்குக் கிளம்பினான். பின் தேவர்களுக்குத் தொந்திரவு கொடுத்து வந்த மகிஷி என்ற அரக்கியை வதம் செய்தான்.

    பின்னர் சிவபெருமான் வேண்டியபடி தேவேந்திரன் மணிகண்டனுக்கு உதவுவதற்காக ஒரு புலியாக உருவெடுத்து மணிகண்டன் முன் தோன்றினான். மணிகண்டன் அதன் மீதேறி அமர, கூடவே ஆண் பெண் தேவர்கள் எல்லாம் ஆண் பெண் புலிகளாக மாறி அவன் பின் கூட்டமாக வந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட அரசனும், ராணியும் மணிகண்டன் தெய்வக் குழந்தை என்பதை உணர்ந்து அவன் கால்களில் விழுந்து வணங்கினர்.

    மணிகண்டன் தான் பூமியில் அவதரித்ததின் நோக்கம் நிறைவேறி விட்டது. ஆகவே இனி மறையும் நேரம் வந்து விட்டது என்று சொன்னான். பந்தள ராஜன் மணிகண்டனுக்கு அவன் நினைவாக ஒரு கோவில் கட்ட விரும்பி அதற்குத் தக்க இடம் காட்டுமாறு வேண்ட, மணிகண்டன் எய்த அம்பு சபரி மலை சென்று அதன் உச்சியில் குத்தி நின்றது.

    ராமாயணத்தில் ராமனுக்கு ருசி பார்த்துக் கனி கொடுத்த் சபரி இருந்த இடம் அது என்று சொல்லப் படுகிறது.

    பரசுராமரால் தயார் செய்யப் பட்ட மணிகண்டனின் (ஐயப்பனின்) சிலை ஒரு மகர சங்கராந்தி அன்று 18 படிகள் கொண்ட சபரி மலைக் கோயிலில் நிறுவப்பட்டது.

    இன்றும் மகர சங்கராந்தியன்று பந்தளத்தில் இருந்து மணிகண்டனின் ஆபரணங்கள் தலைச் சுமையாகத் தூக்கி வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப் பட்டு பூசைகள் நடக்கின்றன. அவ்வாறு ஆபரணங்களை எடுத்து வரும் போது கூடவே ஆகாயத்தில் ஒரு கருடன் பறந்து வந்து பின் கோவிலை மும்முறை வலம் வந்து மறைகிறது. சற்று நேரத்திற்க்குள் கோவிலின் எதிரில் உள்ள அடர்ந்த காடுக

    ள் நிறந்த மலைத் தொடரின் மேலாக ஒரு ஜோதி தோன்றி மறைவதையும் பார்க்க முடிகிறது.

    ஐயப்பன் வழிபாடு ஜாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இவ் வழிபாட்டு முறையில் உள்ள சில விசேஷங்கள் பற்றி பார்ப்போம்.

    (தொடரும்…..)

    Share
  • ஆன்மீகமும் நானும் (12)

    நடராஜன் கல்பட்டு 

    பூசையும் பூனையும்

    பக்தியும் சிரத்தையும் கொண்ட ஒருவர் தன் வீட்டில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் கிரமமாகப் பூசைகள் செய்வார். அவருக்கு மூன்று மகன்கள். மூத்தவனுக்கு வயது பத்திருக்கும் போது அவரும் அவர் மனைவியும் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். அவரது உறவினர்கள் ஆளுக்கு ஒரு பிள்ளையாக எடுத்துச் சென்று வளர்த்து வந்தனர்.

    மூத்தவன் படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்ததும் தனது இரு தம்பிகளையும் தன்னுடனே அழைத்துக் கொண்டான். மூவருமாக மீண்டும் செர்ந்து சந்தோஷமாக இருந்தனர்.

    அப்போது ஒரு நாள் மூத்தவன் சொன்னான், ‘நமது அப்பா ஒவ்வொரு பண்டிகையின் போதும் அழகாகப் பூஜைகள் செய்வார். நாமும் இனி பூஜைகள் செய்ய வேண்டும் நம் வீட்டில்’ என்று. ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று மற்ற இருவரும் தங்கள் தலைகளை ஆட்டினர்.

    விநாயக சதுர்த்தி வந்தது. பெரியவன் கடைக்குப் போய் பூ, பழங்கள், கரும்பு, வாழை இலை இவற்றை வாங்கி வந்தான். இரண்டாமவன், கணிமண் பிள்ளையார், பிள்ளையார் குடை, மஞ்சள் பொடி, சந்தனம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி இவற்றை வாங்கி வந்தான்.

    வீட்டின் ஒரு அறையில் சுவரோரமாக பெருக்கி, தணீர் தெளித்துத் துடைத்து, கோலம் போட்டு, ஒரு கோலம் போட்ட பலகை மீது பிள்ளையாரை வைத்து அவருக்கு மலர் மாலை அலங்காரங்கள் செய்தார்கள் மூவருமாக.

    ‘பூஜையை ஆரம்பிக்கலாமா?’ என்று பெரியவன் கேட்க, கடைசீ பையன் சொன்னான், ‘ஒரு நிமிஷம். அப்பா பூசைகள் செய்யும் போது எப்போதும் ஒரு கருப்புப் பூனையை அந்தத் தூணில் கட்டி விட்டுத் தான் பூசையை ஆரம்பிப்பார். இதோ வந்து விடுகிறேன்’ என்று சொல்லி வெளியே ஓடி சென்று ஒரு கருப்புப் பூனைக் குட்டியுடன் திரும்பினான்.

    அப்பா செய்தது வீட்டில் இருக்கும் பூனை பூசைகள் செய்து கொண்டிருக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக ஓடி எதையேனும் கொட்டிக் கவிழ்த்து விடாமல் இருக்க வேண்டுமே என்பதற்காத் தான். ஆனால் பிள்ளைகள் நினைத்தார்கள் பூசைக்குப் பூனைக் குட்டி அவசியம் என்று.

    இது ஒரு கதை தான். அனால் இது நிஜமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. காரணம் நாம் செய்யும் பூசைகள் பற்றியோ, செய்யும் செயல்களின் காரணங்கள் பற்றியோ அடுத்த தலை முறைக்கு நாம் விளக்குவது இல்லை.

    பூசைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தான் அவை செய்யப் படுவதின் பின்னணியைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதும்.

    (தொடரும்……)

    Share
  • ஆன்மீகமும் நானும் (11)

    நடராஜன் கல்பட்டு

    மாயை

    இவ்வுலகில் நாம் கண்ணால் காண்பதெல்லாம் மாயை என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். ‘மாயை என்பது என்ன சற்று விளக்க முடியுமா?’ என்று கேட்டார் ஒருவர் சுவாமி தயானந்தாவை. மாயையை விளக்க ஒரு குட்டிக் கதை சொன்னார் சுவாமிகள்.

    முன்னொரு காலத்தில் மலையாளப் பிரதேசத்தில் ஒரு தனவந்தர் இருந்தார். சாகும் தருவாயில் இருந்த அவர் தனது மூன்று மகன்களையும் அருகில் அழைத்து, ‘பிள்ளைகளே நான் இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்று தெரியாது. அதனால்தான் ஒரு உயில் பத்திரம் எழுதி இருக்கிறேன். அதன் நகல்களை உங்களிடம் தருகிறேன். நான் இறந்த பின் நீங்கள் மூவரும் அந்த உயிலில் கண்டுள்ளபடி எனது சொத்துக்களைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் சண்டை சச்சரவு ஏதுமின்றி. உங்கள் அம்மாவை நீங்கள் அன்புடன் ஆதரித்து அவள் கண்களில் என்றுமே கண்ணீர் வராது பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லிய அவர் சற்று நேரத்தில் கண் மூடினார்.

    ஈமச் சடங்குகள் நடந்து முடிந்தன. அதன் பின் அந்த மூவரும் தங்களிடம் இருந்த உயிலின் நகல்களைப் பிரித்துப் பார்த்தனர்.

    அதில் பின் வருமாறு கண்டிருந்தது.

    ‘என் குடும்பம் வசிக்கும் இந்த வீடு எனது முதல் மகனுக்குச் சேரவேண்டும். எனது கடையும் வியாபாரமும் என் இரண்டாவது மகனுக்குச் சேர வேண்டும். மூன்றாவது மகனுக்கு எனது நெல் விளையும் நிலங்களும், தென்னந்த் தோப்பும் சொந்தமாக வேண்டும்.’

    தனவந்தரிடம் பதினேழு யானைகள் இருந்தன. அவற்றையும் பங்கு போட வேண்டுமே? அவர் மனதிலே உள்ளூர ஒரு எண்ணம், ‘நான் எனது சொத்துக்களை எல்லாம் விற்று மூவரும் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் கஷடப் பட்டு சேர்த்த சொத்துக்கள் பிறர் கைகளுக்கல்லவா போய்விடும். ஆனால் அதே சமயம் நான் நினைத்துள்ள படி பிரித்தால் முதல் மகனுக்கு மிகக் குறைந்த மதிப்புள்ள சொத்தும் மூன்றாம் மகனுக்கு மிக அதிகமான மதிப்புள்ள சொத்தும் அல்லவா போய்ச் சேர்ந்து விடும். அதனால் யானைகளைப் பிரிக்க்கும் போது அதை சரி செய்திடல் வேண்டும்.’ இப்படி எண்ணிய அவர் உயிலில் எழுதி இருந்தார், ‘எனது பதினேழு யானைகளில் அரை (1/2) பாகம் பெரிய மகனைச் சேர வேண்டும், மூன்றில் ஒரு பங்கு (1/3) இரண்டாவது மகனுக்கும், ஒன்பதில் ஒரு பங்கு (1/9) மூன்றாவது மகனுக்கும் ஆகும்’ என்று.

    முதல் மகன் சொன்னான், ‘பதினேழில் பாதி எட்டரை. ஆகவே எனக்கு ஒன்பது யானைகள் வேண்டும்.’

    இரண்டாமவன் சொன்னான், ‘அது ஞாயமில்லை. நான் ஒத்துக்கொள்ள முடியாது.’

    மூன்றாவது மகன் சொன்னான், ‘பதினேழில் ஒன்பதில் ஒரு பங்கு ஒன்றும் எட்டின் கீழ் ஒன்பதும் (1 and 8/9) ஆகும். 8/9 என்பது 1/2யயை விடப் பெரியது. ஆகவே ஒண்ணும் எட்டின் கீழ் ஒன்பது என்பதை இரண்டு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக எனக்கு இரண்டு யானைகள் தரப் பட வேண்டும்.’ சண்டை வலுத்தது. சத்தமும் பெரிதாகியது.

    அவ்வழியே மந்திரி தன் யானை மீது சென்று கொண்டிருந்தார். இவர்கள் மூவரும் போடும் சண்டையைப் பார்த்தது என்ன வென்று விசாரித்தார்.

    “கவலைப் படாதீர்கள் எனது யானையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, “பதினெட்டில் பாதி 9. இது பெரிய மகனுக்கு. 18ல் மூன்றில் ஒரு பகுதி 6. இது இரண்டாவது மகனுக்கு. 18ல் ஒன்பதில் ஒரு பங்கு 2. இது மூன்றாவது பிள்ளைக்கு” என்றார் மந்திரி. ஆக 17 யானைகளை இறந்தவரின் உயில் படிப் பிரித்து (9+6+2 = 17) அவர்களிடம் சேர்த்து விட்டுத் தான் வந்த ய்னையின் மீதேறித் தன் வழிச் சென்றார் அவர்.

    பங்கு போடும் போதிருந்த பதினெட்டாவது யானை பங்கு போட்ட பின் மறைந்ததே அது தான் மாயை என்றார் சுவாமீஜீ.

    வேளியே சென்று விட்டு வீடு திரும்புகிறோம். தெரு விளக்கின் மங்கலான ஒளியில் நம் வீட்டு வாசலில் வளைந்து வளைந்து ஒரு பொருள் கிடக்கிறது. இதோ வால் சற்று ஆடுவது போல் இருக்கிறதே. இந்தப் பக்கம் தலை கூட சற்றே எழும்புகிறதே. நெஞ்சு பட படக்கிறது. பயத்தில் நாக்கு வறண்டு போகிறது. கால்கள் சற்றே நடுங்க ஆரம்பிக்கின்றன. சத்தம் செய்யாமல் மெதுவாகக் கையை நம் பைக்குள் விட்டுக் கை விளக்கை எடுத்து இயக்குகிறோம். அடச் சே. கீழே கிடப்பது கயிறு. நாம் அதைப் பாம்பென்று எண்ணிப் பயந்ததை நினைத்து நாமே சிரித்துக் கொள்கிறோம்.

    கயிறு பாம்பானது மாயை. அம் மாயையைப் போக்கிப் பாம்பைக் கயிறாக மாற்றியது இருளை நீக்கிய விளக்கின் வெளிச்சம். இதைப் போலத்தான் நம் மனம் காணும் மாயைகளை நீக்கத் தேவை மெய்ஞான ஒளி. அவ்வொளியினை அளிப்பதே ஆன்மீகம்.

    (தொடரும்….)

    நடராஜன் கல்பட்டு


    இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

    நடராஜன் கல்பட்டு

    எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
    வேறொன் றறியேன் பராபரமே

    Share
  • ஆன்மீகமும் நானும் (10)

    “தத்வமசி”

    சுவாமி சின்மயானந்தாவின் பிரதம சீடரான் சுவாமி தயனந்தா அவர்கள் ஒரு சமயம் இந்துக்களின் வேத சாரம் என்றழைக்கப் படும் உபநிஷத்துக்கள் பற்றி உரையாற்றினார். அப்போது “சந்தோக்ய” உபநிஷத் பற்றிப் பேசும்போது, ‘தத்வமசி’ என்னும் வார்த்தை வந்தது.

    கூட்டத்தில் ஒருவர் கேட்டார், சுவாமிஜி இந்த வார்த்தையை எளிதில் புரிந்து கொள்ளும்படியாக விளக்குங்களேன் என்று.
    சுவாமி தயானந்தா அவர்கள் ஒரு கதை சொன்னார்.

    வருவாய் பொருத்த மட்டில் நல்ல நிலையில் இருந்த ஒரு வண்ணான் கால்நடைகள் சந்தைக்குச் சென்று நான்கு கழுதைகள் வாங்கி வந்தான். வீட்டை அடைந்ததும் கழுதை மீது அமர்ந்தபடி தான் வாங்கி வந்த கழுதைகளை எண்ணிப் பார்த்தான், ‘,ஒண்ணு’ ரெண்டு, மூணு’ என்று. ஆனால் அவன் அமர்ந்திருந்த கழுதையைக் கணக்கில் சேர்க்காமல், “அய்யயையோ! ஒரு களுதையைக் காணுமே” என்று உரக்கக் கத்தினான். அதைக் கேட்ட அவன் மனைவி வெளியே வந்து கேட்டாள், “என்ன ஆச்சு?” என்று.

    வண்ணான் நடந்ததைச் சொன்னான். மனைவி கேட்டாள், “என்னது நாலு களுதெங்க வாங்கியாந்தியா அஞ்சில்லெ நிக்கிது இங்கெ?” என்று.

    வண்ணான் கேட்டான், “அஞ்சு களுதெகளா இருக்குது? நாலுதான் நான் வாங்கினேன். வார வளிலெ ஒரு களுதெ குட்டி போட்டீட்டு இருக்குமோ?

    “குட்டிக் களுதெ ஒண்ணும் இங்கெ இல்லெ. எல்லாமே பெரிய களுதைங்க தான்” என்று சொல்லிய அவள், “ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு” என ஒவ்வொரு கழுதையின் தலையிலும் தட்டிக் கொண்டு வந்து கடைசியாக “ஐந்து” என்று சொல்லி அவன் தலையிலும் தட்டினாள். நீதான் அது, அந்த ஐந்தாவது கழுதை, என்று அவள் சொல்லாமல் சொன்னாள்.
    கதையை முடித்தார் தயானந்தர்.

    சந்தேகப் பிராணி மீண்டும் கேட்டார், “சுவாமிஜீ எனக்கு இன்னொரு சந்தேகம். நீ தான் அது, எல்லாமே ஒன்றுதான் என்றால் பின் அவை வெவேறாகத் தெரிவதேன்?”

    “அது தான் மாயை. மாயையைப் பற்றி நாளை பார்க்கலாம்” எனச் சொல்லி அன்றைய பிரசங்கத்தை முடித்தார் சுவாமி தயானந்தர்.

    தத்வமசி என்ற சமிஸ்கிருத வார்த்தையின் பொருள் நீ தான் அது என்பதாகும். நீ என்பது இந்த உடலையும், அது என்பது இறைவனையும் குறிக்கும் சொற்களாகும். ஆங்கிலத்தில் இதை That thou art (That you are) என்று சொல்வார்கள்.
    உன்னுள் உறைந்து உன்னை இயக்குபவன் இறைவனே. அவனைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆன்மீகம்.

    (தொடரும்…..)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (9)

    நடராஜன் கல்பட்டு

    த்யானம்

    த்யானம், ஜபம் என்றால் என்ன? அதற்கு அவசியத் தேவைகள் என்னென?

    ஒரு அடைசல் அற்ற, சுத்தமான, சத்தமில்லாத, மங்கலான வெளிச்சம் கொண்ட அறை, துவைத்த ஆடை, உத்திராட்சம், துளசிக்கட்டை, வெள்ளெருக்குக் கட்டை இவற்றால் ஆன 108 மணிகள் கொண்ட மாலை, ஊதுவத்தி இவை தானே?

    இவை இருந்தால் நல்லது தான். ஆனால் இவையல்ல முக்கியத் தேவை. சுவாமி சின்மயானந்தா சொல்லிய இந்தக் கதையைக் கேளுங்கள்.

    ஒரு ஊரில் ஆன்மீகவாதி ஒருவர் தொடர் பிரசங்கங்கள் செய்ய ஏற்பாடாகி இருந்தது. பெரிய பந்தல். நல்ல ஜனக் கூட்டம். முன் வரிசையில் நாற்காலிகளில் ஊர் பெரிய மனிதர்களும், வயோதிகர்களும். அந்த நாற்காலிகள் ஒன்றில் விழாவிற்கான சகல ஏற்படுகளுக்கும் ஆகும் செலவினை ஏற்றுக் கொள்ளும் ஒரு தனவந்தர்.

    ஆன்மீகவாதி அன்று பேசவிருந்த விஷயம் த்யானம் பற்றியது.

    சிறிது நேரம் பேசிய பின், ஆன்மிகவாதி அந்த தனவந்தரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் த்யானம் செய்வதுண்டா?”

    “த்யானமா? எனக்கேதுங்க நேரம்? என் வியாபாரத்தெக் கவனிக்கவே நேரம் பத்த மாட்டேங்குது. நான் எப்படீங்க ஒரு எடெத்துலெ ஒக்காந்து அதெல்லாம் செய்ய முடியும்? தவிரெ எனெக்கெதுக்குங்க த்யானம், பூஜெ இதெல்லாம். எனக்கு வேண்டியது வியாபாரம். அதுலெ வர பணம்”

    “ஒரு எடத்துலெ உட்கார்ந்துதான் த்யானம் பண்ண வேண்டும் என்பது இல்லை. சரி. நீங்கள் பொழுது விடிந்ததும் படுக்கையை விட்டு எழுந்ததும் என்ன செய்வீர்கள்?”

    “பல்லு வெளெக்குவேன்.”

    “எங்கே?”

    “வேறெ எங்கெ? வீட்டு வாசலுலெதான்.”

    “அப்போது நிங்கள் என்ன பார்ப்பீர்கள்?”

    “வீட்டுக்கு எதுத்தாப்புளெ ஒரு கொயவன் குடிசெ இருக்குதுங்க. அங்கெ கொயவன் களி மண்ணுலெ தண்ணியெ ஊத்திக் காலாலெ பெசெஞ்சு கிட்டு இருப்பாங்க.”

    “சரி. நாளையில் இருந்து அந்தக் குயவனைப் பபார்த்த பின் தான் உள்ளே சென்று மற்ற வேலைகளைக் கவனிப்பது என்று வைத்துக் கொள்ளுங்கள்.”

    “சரிங்க. அப்படியே செய்யுறேன்” என்று சொல்லிய தனவந்தர் ம்று நாள் முதல் குயவைனைப் பார்த்த பின்பே உள்ளே சென்றுத் தன் வேலகளைக் கவனிக்கலானார். இது பல நாட்கள் நடந்தது.

    ஒரு நாள் காலை குயவனைக் காண வில்லை. வெகு நேரம் பொருத்துப் பார்த்த தன்வந்தர் குயவன் குடிசைக்கு ஓடி அவன் மனைவியைக் கேட்டார், “குயவன் எங்கே?” என்று.

    “அய்யா நம்ம ஊருலெ நல்ல களி மண்ணு கெடெய்க்க மாட்டேங்குதுங்க. அதான் அவரு பக்கத்து ஊருக்குப் போயிருக்காரு களி மண்ணு வெட்டியார” என்றாள் கொசத்தி.

    “வண்டியைக் கட்டு” என்றார் தனவந்தர் தன் ஆட்களை. தாவிக் குதித்து ஏறினார் அதில். “ஓட்டு பக்கத்து ஊருக்கு” என்றார் அவர்.

    பாதி வழியில் ஒரு பள்ளத்தில் ஒரு ஆளின் முண்டாசு தெரிய்வே, “பாத்தூட்டேன்… பாத்தூட்டேன்….” என்று கத்தியபடி வண்டியில் இருந்து எம்பிக் குதித்து ஓடினார் பள்ளத்தை நோக்கி. அதே சமயம் வெளியே எட்டிப் பார்த்த குயவன், “சாமி வெளிலெ சொல்லீடாதீங்க. எனக்குக் கெடெச்சிருக்குற பொதெயலுலெ பாதி ஒங்களுக்குக் குடுத்தூடறேன்” என்று சொல்லி தங்கக் காசுகள் நிறந்த ஒரு குடத்தினை அவர் கால்கள் முன்பு வைத்தான்.

    இது குழந்தைகளுக்குச் சொல்லப் பட வேண்டிய அத்தை பாட்டிக் கதை என்று சிரிக்காதீர்கள். இதில் புதைந்துள்ள ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

    ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு செய்வதுதான் த்யானம் என்றில்லை. அது ஒரு வகை த்யானம். தன் வேலையை, கடமைகளைச் சிரத்தையுடன் செய்வதும் த்யானமே.

    DOING YOUR DUTY OR JOB WITH DEDICATION

    IS ALSO MEDITATION

    (தொடரும்…….)

    Share