ஆன்மீகமும் நானும் (9)
நடராஜன் கல்பட்டு
த்யானம்
த்யானம், ஜபம் என்றால் என்ன? அதற்கு அவசியத் தேவைகள் என்னென?
ஒரு அடைசல் அற்ற, சுத்தமான, சத்தமில்லாத, மங்கலான வெளிச்சம் கொண்ட அறை, துவைத்த ஆடை, உத்திராட்சம், துளசிக்கட்டை, வெள்ளெருக்குக் கட்டை இவற்றால் ஆன 108 மணிகள் கொண்ட மாலை, ஊதுவத்தி இவை தானே?
இவை இருந்தால் நல்லது தான். ஆனால் இவையல்ல முக்கியத் தேவை. சுவாமி சின்மயானந்தா சொல்லிய இந்தக் கதையைக் கேளுங்கள்.
ஒரு ஊரில் ஆன்மீகவாதி ஒருவர் தொடர் பிரசங்கங்கள் செய்ய ஏற்பாடாகி இருந்தது. பெரிய பந்தல். நல்ல ஜனக் கூட்டம். முன் வரிசையில் நாற்காலிகளில் ஊர் பெரிய மனிதர்களும், வயோதிகர்களும். அந்த நாற்காலிகள் ஒன்றில் விழாவிற்கான சகல ஏற்படுகளுக்கும் ஆகும் செலவினை ஏற்றுக் கொள்ளும் ஒரு தனவந்தர்.
ஆன்மீகவாதி அன்று பேசவிருந்த விஷயம் த்யானம் பற்றியது.
சிறிது நேரம் பேசிய பின், ஆன்மிகவாதி அந்த தனவந்தரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் த்யானம் செய்வதுண்டா?”
“த்யானமா? எனக்கேதுங்க நேரம்? என் வியாபாரத்தெக் கவனிக்கவே நேரம் பத்த மாட்டேங்குது. நான் எப்படீங்க ஒரு எடெத்துலெ ஒக்காந்து அதெல்லாம் செய்ய முடியும்? தவிரெ எனெக்கெதுக்குங்க த்யானம், பூஜெ இதெல்லாம். எனக்கு வேண்டியது வியாபாரம். அதுலெ வர பணம்”
“ஒரு எடத்துலெ உட்கார்ந்துதான் த்யானம் பண்ண வேண்டும் என்பது இல்லை. சரி. நீங்கள் பொழுது விடிந்ததும் படுக்கையை விட்டு எழுந்ததும் என்ன செய்வீர்கள்?”
“பல்லு வெளெக்குவேன்.”
“எங்கே?”
“வேறெ எங்கெ? வீட்டு வாசலுலெதான்.”
“அப்போது நிங்கள் என்ன பார்ப்பீர்கள்?”
“வீட்டுக்கு எதுத்தாப்புளெ ஒரு கொயவன் குடிசெ இருக்குதுங்க. அங்கெ கொயவன் களி மண்ணுலெ தண்ணியெ ஊத்திக் காலாலெ பெசெஞ்சு கிட்டு இருப்பாங்க.”
“சரி. நாளையில் இருந்து அந்தக் குயவனைப் பபார்த்த பின் தான் உள்ளே சென்று மற்ற வேலைகளைக் கவனிப்பது என்று வைத்துக் கொள்ளுங்கள்.”
“சரிங்க. அப்படியே செய்யுறேன்” என்று சொல்லிய தனவந்தர் ம்று நாள் முதல் குயவைனைப் பார்த்த பின்பே உள்ளே சென்றுத் தன் வேலகளைக் கவனிக்கலானார். இது பல நாட்கள் நடந்தது.
ஒரு நாள் காலை குயவனைக் காண வில்லை. வெகு நேரம் பொருத்துப் பார்த்த தன்வந்தர் குயவன் குடிசைக்கு ஓடி அவன் மனைவியைக் கேட்டார், “குயவன் எங்கே?” என்று.
“அய்யா நம்ம ஊருலெ நல்ல களி மண்ணு கெடெய்க்க மாட்டேங்குதுங்க. அதான் அவரு பக்கத்து ஊருக்குப் போயிருக்காரு களி மண்ணு வெட்டியார” என்றாள் கொசத்தி.
“வண்டியைக் கட்டு” என்றார் தனவந்தர் தன் ஆட்களை. தாவிக் குதித்து ஏறினார் அதில். “ஓட்டு பக்கத்து ஊருக்கு” என்றார் அவர்.
பாதி வழியில் ஒரு பள்ளத்தில் ஒரு ஆளின் முண்டாசு தெரிய்வே, “பாத்தூட்டேன்… பாத்தூட்டேன்….” என்று கத்தியபடி வண்டியில் இருந்து எம்பிக் குதித்து ஓடினார் பள்ளத்தை நோக்கி. அதே சமயம் வெளியே எட்டிப் பார்த்த குயவன், “சாமி வெளிலெ சொல்லீடாதீங்க. எனக்குக் கெடெச்சிருக்குற பொதெயலுலெ பாதி ஒங்களுக்குக் குடுத்தூடறேன்” என்று சொல்லி தங்கக் காசுகள் நிறந்த ஒரு குடத்தினை அவர் கால்கள் முன்பு வைத்தான்.
இது குழந்தைகளுக்குச் சொல்லப் பட வேண்டிய அத்தை பாட்டிக் கதை என்று சிரிக்காதீர்கள். இதில் புதைந்துள்ள ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு செய்வதுதான் த்யானம் என்றில்லை. அது ஒரு வகை த்யானம். தன் வேலையை, கடமைகளைச் சிரத்தையுடன் செய்வதும் த்யானமே.
DOING YOUR DUTY OR JOB WITH DEDICATION
IS ALSO MEDITATION
(தொடரும்…….)