Tag: பவளசங்கரி திருநாவுக்கரசு

  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 34

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 29 – திருமூல நாயனார்

    ‘நம்பிரான் திருமூலன்’ அடியார்க்கும் அடியேன், என்று ஆரூரர் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் புகழும் திருமூல நாயனார், சைவ சமயத்தில் காலத்தால் முதிர்ந்தவர் மட்டுமின்றி கருத்தால், எண்ணத்தால், சிந்தையால் முதிர்ந்தவர் என்று அறியப்படும் ஆகச்சிறந்த சிவயோகி ஆவார். திருக்கையிலை மலையின் திருக்கோயிலுக்கு முதற்பெரும் நாயகரான திருநந்திதேவர், இந்திரன், மால், அயன் முதலிய தேவர்களுக்கு நெறி அருள்கின்ற திருவருள் பெற்றவர். இத்தகைய நந்தி தேவரின் திருவருள் பெற்ற சிவயோகிகளில் ஒருவர் என்ற பேர் பெற்றவர். திருமந்திரத்தில் திருமூலர் என்று குறிப்பிடப்படும் இவர் சுந்தரநாதன் அன்று அழைப்பட்டவர்.

    “நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
    என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே” 

    திருமூலரின் பழைய நண்பராகிய, பொதிகையில் எழுந்தருளியுள்ளஅகத்திய மகாமுனிவருடன் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பியவர் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென் திசையை நோக்கி வந்தார். திருக்கேதாரம், நேபாளம், காசி, திருசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே ஆவடுதுறைப் பெருமானை வணங்கத் திட்டமிட்டார்.

    ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்தினில் பசுக்கூட்டங்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். சாத்தனூரில் மூலன் எனும் இடையன் அவைகளை மேய்க்கின்றவன். அன்று அவன் அவ்விடத்தில், பசும்புல்வெளியில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவன் மீது உள்ள அன்பினால் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி அழுதன.

    பசுக்களின் துன்பத்தைக் கண்ட சிவயோகியார், எம்பெருமானின் திருவருளால் அப்பசுக்களின் துயரத்தை நீக்க  வேண்டும் என்று முடிவெடுத்தார். தம் திருமேனியை ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு, மூலனின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினார். பசுக்களின் துயரத்தைப் போக்குவதற்காக திருமூலராய் எழுந்தார். மூலனை மோந்த பசுக்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற் சென்று மேய்த்தார். மகிழ்ந்து, துள்ளிக் குதித்து, மேய்ந்திருந்த பசுக்கள் அந்தி நேரத்தில், பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன. சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் தத்தமது வீடுகளுக்குச் செல்லத் தாம் வெளியிலே நின்றார்.

    மூலனுடைய மனைவி தன் கணவனைத் தேடி வந்தவள், சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, அவருடைய திருமேனியைத் தீண்ட, அவர் விலகி நின்றார். திருமூலநாயனார், தனக்கும் மூலனின் மனைவிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று மறுத்து, ஒரு பொது மடத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி கவலை கொண்டிருந்தவள் மறுநாள் அதனை ஊர்ப்பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். தன் கணவனுக்கு சித்தம் பேதலித்துவிட்டதாகவும் கூறினாள். திருமூலனைக் கூர்ந்து கவனித்த அப்பெரியவர்கள் அவர் சிறந்த ஞானியாகத் தெரிவதாகவும், சிவயோகியாராகத் தெரிவதாகவும் கூறி, அவரை இனி அவள் என்றும் சேர முடியாது என்று புரிய வைத்து திரும்ப அழைத்துச் சென்றனர்.

    சிவயோகத்தில் இருந்த திருமூல நாயனார் எழுந்து, பசுக்கள் வந்த வழியே சென்று தாம் மறைத்து வைத்திருந்த தம் உடலைக் காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, சிவபெருமான் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருள் அனைத்தும் தமிழ் ஆக்க எம்பெருமான் திருவருள் இவ்வுடலைத் தந்தது என்று உணர்ந்தார்.

    “தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப் பொருளை
    மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
    கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
    எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர் அருள் எனவுணர்ந்தார்” 

     திருமூலரும் எம்பெருமானின் திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்தின் சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப் புறத்தில் உள்ள அரசின் கீழ் அமர்ந்து சிவயோகத்தில் நிலைத்திருந்தார். மூவாயிரம் ஆண்டுகள் அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு ஆண்டிற்கு ஒவ்வொரு திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடலால் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரம் எனும் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கையிலையை அடைந்தார்.

    முன்னிய அப் பொருள் மாலைத்

      தமிழ் மூவாயிரம் சாத்தி

    மன்னிய மூவாயிரத்து ஆண்டு

      இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து

    சென்னி மதி அணிந்தார் தம்

      திருவருளால் திருக் கயிலை

    தன்னில் அணைந்து ஒரு காலும்

      பிரியாமைத் தாள் அடைந்தார். 

     

    திருமூலதேவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

    திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களும் திருமந்திரம் என்ற நூலாகப் பன்னிரெண்டு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக விளங்குவது. திருமூலர், இறைவன் தம்மைப் படைத்தது இறைவனுடைய தன்மைகளைத் தமிழில் அழகுற எடுத்தியம்புவதற்காகவே என்றார். திருமூலர் திருமந்திரம் ஆகமப் பொருளையெல்லாம் திரட்டி ஒன்பது தந்திரங்களாக அருளிச் செய்தார்.

    ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு மந்திரமாலை” என்ற திருத்தொண்டர்புராண வசனமாகிய புறச்சான்றினாலும் அது வலுவுறும்.

     

    பக்தன் சரியை கிரியை பயில்வுற்றுச்

    சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்

    உய்த்தநெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்

    சித்தங் குருவருளாற் சிவமாகுமே”

    சிவப்பேறடைதற்குரிய நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கும் சைவநாற்பாதங்களாம். நான்காவதாகிய ஞானம் சிவப்பேற்றை நேரே அருள்வதாக, ஏனைய மூன்றும் படிமுறைக்கிரமத்தில் அதற்குத் தகுதியளிப்பன. ஞானம் என்பது சிவத்தில் இலயித்த உயிர் சிவத்தையுணர்தலாகிய மெய்யுணர்வு விளக்கமுற்றிருப்பதாகவும் அமையும்.

    திருவாவடுதுறையில் அரசின் கீழ் திருமூலர் யோகத்தில் இருந்ததை ,

    சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
    சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
    சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
    சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே

    என்று குறிப்பிடுகின்றார்.

    சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு முன்னோடியாக விளங்கும் திருமந்திரம், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்ற சொற்றொடரை அருளியவர் திருமூலர். சாத்திரங்களின் சாரத்தை மிக எளிமையாகவும், முழுமையாகவும் உரைத்தவர் திருமூலர். ஆகமங்கள் 28 தமிழாகமம் சொல்ல வந்த திருமூலர் வரலாறு 28 பாடல்களில் அமைந்துள்ளதும் போற்றத்தக்கது.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார்

    ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்

        ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே

    தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்‘ என்னும்

        துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி

    ‘வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்’ என்ன

        வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்

    போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து

        போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில், “ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் தலத்தில், வேளாளர் குலத்தில் தோன்றியவர். சோழ மன்னர்களிடம் பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாக இருந்து வந்துள்ள குடும்பம் இவருடையது. ஏயர்கோன் கலிக்காமர் சிவபக்தியிலும் சிவனடியார் திருத்தொண்டிலும் சிறந்து விளங்கியவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்தில் அளவில்லாத திருப்பணிகள் செய்தவர். “ஏயர்கோன்” என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலமான எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் இளம் வயதிலேயே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.

    ஏயர்கோன் கலிக்காமர் மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு சிறப்பாகத் தமது இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இக்காலகட்டத்தில் ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தமது இல்லத்தரசியான பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டிக் கொண்டதால் சிவபெருமானும் அவ்வண்ணமே அவரிடம் சென்றார். இதைப் பற்றி கேள்வியுற்ற, சிவனையே முழுமுதற் பொருளாகப் போற்றிய ஏயர்கோன் கலிக்காம நாயனார், இத்தகைய காரியத்தைச் செய்து, தன்னை அடியார் என்று கூறிக்கொள்ளும் சுந்தரர் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறார். சிவபெருமானே இதற்கு இசைந்திருந்தாலும் சுந்தரர் செய்த இந்தக் காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவராய், இப்படிப்பட்டச் செய்தியை கேட்ட பின்னும் தன்னுயிர் போகவில்லையே என்று வருந்தி சுந்தரமூர்த்தி நாயனார் மீது சொல்லொணா துயரமும், கடுங்கோபமும் கொண்டார். இதையறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வருந்தி, அவர்தம் சினத்தை தணித்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் பணிந்து வேண்டினார். அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்கிய இடமும் இதுதான்.

    சூலை நோயை உண்டாக்கி ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு ஆறாத வலியைக் கொடுத்தார் எம்பெருமான். கலிக்காம நாயனாரும் என்ன செய்தும் தம் வலி குறையவே இல்லையே என்று வருந்தி அதனைப் போக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியவர் அப்படியே மயங்கினார். அந்த மயக்கத்தில் சிவபெருமான் தோன்றி, இந்த சூலை நோயால் ஏற்பட்டுள்ள வலியைத் தீர்க்க வல்லவன் சுந்தரன் மட்டுமே என்று கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டு கொதித்துப் போனார் கலிக்காமர். ஆனால் கலிக்காமரோ, சுந்தரர் வந்துதான் என் வயிற்று நோய் தீரும் என்றால் அந்நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவனார் மறைந்தாலும் அவர் அத்தோடு நிற்கவில்லை. ஆரூரரிடம் சென்று, தம்முடைய ஆணையை ஏற்று கலிக்காமரின் சூலையைத் தீர்க்க வேண்டும் என்று பணித்துவிட்டு மறைந்தார். எம்பெருமானின் கட்டளையை ஏற்று நம்பியாரூர் ஏயர்கோன் உற்ற பிணியைத் தீர்ப்பதற்குத் தாம் வருகின்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

    ஆனால் ஏயர்கோன் தம் மனைவிக்காக எம்பெருமானையே தூது அனுப்பிய சுந்தரன் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு வருகிறார் என்றால், அவர் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு முன் தான் மாய்ந்து விடுவதாகக் கூறி, சூலை உள்ள வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் என்று தன் உடைவாளை எடுத்துக் குத்திக்கொண்டு உயிர் துறந்தார். வேகமாக வந்த ஆரூரரை வெளியே சென்று மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார் அவருடைய துணைவியார்.

    சுந்தரர் தான் வந்த காரியத்தைக் கூற, கலிக்காமர் அவ்வாறு நோயால் வருந்தவில்லை என்றும், அவருக்கு நோயுமில்லை துன்பமுமில்லை, அவர் உறங்குகிறார் என்று கூறி தன் கணவரின் இறப்பை மறைக்க முயன்றார். சுந்தரர் விடாது தன் மனம் தடைபடுவதைக் கூறி அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்தவே வேறு வழியின்றி தன் கணவரின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு கலிக்காமர் இரத்த வெள்ளத்தில் வயிறு கிழிந்து, குடல் வெளிப்பட்டு இறந்து கிடப்பதைச் சுந்தரர் கண்டார். நடந்த எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்று வருந்திய சுந்தரமூர்த்தி நாயனார் தம்மிடம் உள்ள வாளால் குத்திக்கொள்ளும் போது சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர்த்தெழுந்தார்.

    இறையருளால் உயிர்த்தெழுந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரை அன்பினால் தழுவிப் பிரியாத நண்பர்களானார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் சில நாட்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் தங்கி திருப்புன்கூர் திருத்தலத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் விருப்பத்துகிணங்க அவருடன் திருவாரூர் சென்று சில நாட்கள் தங்கியிருந்து தியாகராசரை வணங்கி மகிழ்ந்தார். பின்னர் ஏயர்கோனார் திருப்பெருமங்கலம் திரும்பி வந்து சிவப்பணி செய்து சிவனடி சேர்ந்தார்.

     

    ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    மெய்ஞ்ஞானம் உற்றார்க்குப் பக்தி பொதுவாயினும் அவரவர் ஆன்ம எழுச்சியின் நிலையைப் பொறுத்து ஒவ்வொருவர் பக்திக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை திருத்தொண்டர் புராண வரலாறுகளின் மூலம் அறியலாம்.

    “தந்தம் பெருமைக்களவாகிய சால்பினிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்” மூர்த்தி நாயனார் புராணம்.

    “ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரமீசன் பணியலதொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரமென்னால் விளம்புந் தகையதோ”திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

    தீது ஒன்றுமில்லை என்று தன் கணவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மாண்டதையே மறைக்கத் துணிந்த அவருடைய பத்தினியின் மாண்பைப் போற்றினாலும், தம் மனம் தடைப்பட ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என எண்ணிய ஆரூரர் அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்த அவர் இருந்த அறையினைக் காட்ட, அங்கு அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தம்பால் வந்த கோபத்தினால் ஏயர்கோனார் இந்த முடிவுக்கு வந்தார் என்றால் அவர் சென்ற இடத்திற்கே தானும் செல்லப்போவதாகக் கூறி, ஏயர்கோன் கலிக்காம நாயனார் தம் உடைவாளினால் தமது வயிற்றைத் தாமே குற்றிக் கிழித்துக் கொள்ளப் போனார். இதனை கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்,

    “பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்

    புயன்மறந்த கன்னன்மை தீரப்புனிற்றுக்

    கலிக்காமற் கன்று புன்கூர் மன்னு

    மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே

    பின்னும் மழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே” என்றும்

    திருத்தொண்டர் புராணத்தில்,

    “பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால் வரும்பெருமைக் கலிக்காமனார்” எனவும்

    சுந்தரர் தேவாரத்தில்,

    “வையகம் முற்றும் மாமழை துறந்து

    வயலில் நீரிலை மாநிலந் தருகேம்

    உய்யக்கொள்கமற் றெங்களை யென்ன

    ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

    பெய்யுமாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்

    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளுஞ்

    செய்கைகண்டுநின் திருவடியடைந்தேன்

     செழும்பொழிற்றிருப் புன் கூருளானே”

    எனவும் வருபவற்றால் அறியப்படும்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தம் பத்தினி பரவைபால் தூதனுப்பிய செய்தியைக் கேட்டமாத்திரத்தே, அதிசயித்து எரிச்சலுற்றவர் இவரெல்லாம் ஒரு தொண்டரா, எத்தகையதொரு பெரிய பாவத்தைச் செய்துள்ளார். இச்செய்தியைக் காதால் கேட்கவும் இயலவில்லை என்னால் என்று புலம்புகிறார்.

    “நம்பியாரூரர் நெஞ்சினடுக்கமொன்றின்றி நின்று

    தம்பிரானாரைத் தூது தையல்பால்விட்டா ரென்னும்

    இம்பரின் மிக்கவார்த்தை யேயர்கோனார்தாங் கேட்டு

     வெம்பினாரதிசயித்தார் வெருவினார் விளம்பலுற்றார்”

     

    “நாயனை அடியானேவுங் காரியம் நன்று

    சால ஏயுமொன்றிதனைச் செய்வான்

    தொண்டனாமென்னே பாவம் பேயனேன்

    பொறுக்கவொண்ணாப் பிழையினைச் செவியார்

     கேட்ப தாயின பின்னும் மாயா திருந்ததென் ஆவியென்பார்”

    மற்றும்

     “நம்பர்தா மடியாராற்றாராகியே நண்ணினாரேல்

    உம்பரார்கோனும் மாலு மயனுநேருணரவொண்ணா

    எம்பிரானிசைந்தாலேவப் பெறுவதே யிதனுக்குள்ளங்

    கம்பியாதவனை யான்முன் காணுநா ளெந்நா ளென்று”

    என வரும் சேக்கிழார் பெருமானின் பாடல்களால் அறியலாம்.

     

    குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:

    நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை முப்பொழுதும் வணங்கி வாழ்ந்து கொண்டிருந்தார். அச்சமயம் திருக்கோளிலி என்னும் திருத்தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டிருந்தார். அந்த அன்பின் காரணமாக அவருக்காக பரவையார் திருமாளிகைக்கு, செந்நெல், பருப்பு போன்ற பொருள்களைத் தவறாமல் அனுப்பி வரும் கடமையைக் கொண்டிருந்தார். ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் வழமைபோல் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் வருந்தியவர், உணவு உண்ணாமல்  உறங்கச் சென்றார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி “ஆரூரன் தனக்கு உன் பொருட்டாக நெல் கொடுத்தோம் என்று அருள்பாலித்தார். காலையில் எழுந்து பார்த்தபொழுது குண்டையூர் முழுதும் நெல் மலை குவிந்திருந்தது. நெல்மலையைக் கண்டு வியந்தவர், திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் நடந்தவற்றைக் கூறினார். குண்டையூர்க்கிழார் அந்நெல்மலையைப் பார்த்து இது மனிதர்களால் எடுத்து வரும் அளவினதன்று. மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்றார். அப்போது சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து,

    நீள நினைந்தடி யேனுமை

      நித்தலுங் கைதொழுவேன்

    வாளன கண்மட வாளவள்

      வாடி வருந்தாமே

    கோளிலி எம்பெரு மான்குண்டை

      யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

    ஆளிலை எம்பெரு மானவை

      அட்டித் தரப்பணியே.

    என்னும் திருப்பதிகம் பாடி நெல்லை எடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி விண்ணப்பித்துக்கொண்டார். அன்றிரவு தம்முடைய பூத கணங்களைக் கொண்டு பரவையார் இருந்த வீதியில் நெல்லைக் கொண்டுவந்து குவித்தார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்தவர் பரவையார்க்கும் அந்த நற்செய்தியை தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.

     

    ஆரூர்ப் பெருமானைப் பரவையாரிடம் தூதனுப்புதல்:

    சுந்தரர் எம்பெருமானை வணங்கச் சென்ற பொழுது அவருடைய பரிசனங்களில் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சங்கிலியாரை மணந்த சுந்தரரின் செய்கையை முன்பே அறிந்திருந்த பரவையார் அவர்களைத் தடுத்த செய்தியினை சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர் மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என உணர்ந்தவர், பெரியார் பலரைப் பரவையார்பால் தூது விடுத்தும், அவர்கள் பலவாறு எடுத்துக் கூறியும் சினந்தணியாமல் பரவையார், மீண்டும் பேசினால் தன்னுயிர் இழப்பது உறுதி என்று கூறினார். அதனால் மனம் வருந்திய சுந்தரர் உறங்காது சிவபிரானை எண்ணி வேண்டினார். அடியார் துயர் பொறுக்காத  எம்பெருமான் நள்ளிரவில் சுந்தரர் முன் வந்தணைந்தார். சுந்தரர் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று, தமக்குற்ற குறையை எடுத்துக்கூறி தன்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் அப்போதே பரவைபால் தூது செல்ல இசைந்தார். பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக் காண வேண்டுமென்ற திருவிளையாடலை மனத்திற்கொண்டு பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார். சுந்தரர் எம்பெருமானை எதிர்கொண்டு வணங்கி விவரம் கேட்டவரிடம், எம்பெருமான் `நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்துவிட்டாள்` என்று கூறினார். அச்சொற்கேட்டு நடுங்கிப் போனவர், பரவையிடம் தன்னைக் கூட்டவில்லை என்றால் தன்னுயிர் நீங்குவது உறுதி என்று பலவாறு கூறித் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.
    சிவபெருமானும் நம்பியாரூரரைப் பார்த்து,  மீண்டும் ஒருமுறை தூது சென்று அவர்தம் குறையை தீர்த்து வைப்பதாகக் கூறியவர் பரவையார் மாளிகையை நோக்கி மீண்டும் எழுந்தருளினார். பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்து உழலும் எம்பெருமானின் கருணையை வியந்து, இசைவுற்றதால் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரிடம் மீண்டும் எழுந்தருளினார். சிவபெருமான் சுந்தரரைப் பரவையார்பால் அனுப்பிவைத்த பின்னர் திருக்கோயிலினுள் புகுந்தருளினார். இருவரும் இறைவனது எளிவந்த கருணையை வியந்து இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.

    தங்கக்கட்டியான செங்கல்

    திருவலிவலம் பெருமானின் திருவடிக் காட்சியைக் கண்டு களித்த ஆரூரர், திருவாரூர் சென்று அங்கு தங்கியிருந்தார். பங்குனித் திருவிழாவிற்கு ஆகும் பெருஞ்செலவில் தம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் , இல்லையென்றால் பரவையார் முகம் வாடிவிடுமே என்று வருந்தியவர், பணம் பெறுவதற்காக திருப்புகலூர் சென்று பொன் வேண்டிப் பாடினார். திருக்கோயிலை வலம் வந்து வழிபாட்டினை நிறைவு செய்து புறப்படும் சமயம் அயர்ச்சியில், அங்கு அக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வைத்து அதன்மீது தமது துண்டினை விரித்து அப்படியே கண் அயர்ந்து உறங்கி விட்டார். தூக்கம் விழித்து துண்டை எடுத்தவர் அதிசயித்துப் போனார். துண்டின் கீழிருந்த அச்செங்கல் தங்கக்கட்டியாக மாறியிருந்த்தே அதன் காரணம். இன்றும் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், இந்த அரிய திருப்பாசுரத்தைப் பாடினால் இறைவன் வேண்டிய பொருளை அளிக்க வல்லான் என்ற நம்பிக்கை அடியவர்களிடம் உண்டு என்பதும் சத்தியம்! அப்பாடல்,

    தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்

      சார்வினுந்தொண்டர் தருகிலாப்

    பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை

      புகலூர்பாடுமின் புலவீர்காள்

    இம்மையேதருஞ் சோறுங்கூறையும்

      ஏத்தலாமிடர் கெடலுமாம்

    அம்மையேசிவ லோகமாள்வதற்

      கியாதுமையுற வில்லையே. 

     

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 32

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (5)

    எலும்பைப் பெண்ணாக்கியது

    மயிலாப்பூரில் வணிகர் குலத்தில், சிவனடி மறவாச் சீலர் சிவநெறித் தொண்டில் ஈடுபட்டு ஈசனடியாரை நேசிக்கும் இயல்புடையாரான  சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், பிற சமயமாகிய சமண, பௌத்த மதங்களைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, சைவப் பயிர் செழித்தோங்கச் செய்யும் உறுதியுடையோராய்த் திகழ்ந்தவர். தமது மூன்றாம் அகவையில் திருக்காழிப்பதியில் ஞானப்பால் உண்டு, முத்துச் சிவிகை, முத்துப்பந்தர், பொற்றாளம் சிவபெருமான் கருணையால் பெற்றவர், மதுரை மூதூர் சென்று சமணர்களை வென்று சைவம் தழைத்தோங்கச் செய்த அருமைப் பெருமைகளுக்கு உரியவரான ஞானசம்பந்தர் பற்றி கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு அழகிற் சிறந்த பூம்பாவை எனும் ஒரு பெண் மகவு இருந்தாள். மணப்பருவம் எய்திய நிலையில் இருந்த அப்பெண் திருமகளென அழகும் கலைமகளென அறிவும் மிக்கவளாய் இருந்தாள். அவளையும், தன்னையும், தன் செல்வத்தையும் ஞானசம்பந்தருக்கே உடமையாக்கி அவர் மடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி கொண்டார்.

     

    இந்நிலையில் பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி உயிர் துறந்தாள்.  சிவநேசர் மிகவும் வருந்தினாலும் அப்பெண், சம்பந்தப் பெருமானின் உடமையென்பதால் தாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று உளம் தெளிந்து, அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதைக் கன்னி மாடத்தில் வைத்து அக்குடத்திற்குப் பூம்பாவை பூணும் அணிகலன்களையெல்லாம் அணிவித்துப் பூசனை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் என்ற செய்தியை அவ்வூர் மக்கள் சிவநேசரிடம் தெரிவித்தனர். அகமலர்ந்த சிவநேசர் சம்பந்தரை வரவேற்கத் திருவொற்றியூர் சென்று எதிர் கொண்டழைத்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார்கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியையும் அவரிடம் கூறினர்.

    ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி கபாலீசுரரை வழிபட்டு, சிவநேசரை அழைத்து அவர்தம் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன் வைக்கும்படி பணித்தார். சிவநேசரும் வெந்த சாம்பலோடு எலும்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்து எடுத்து வந்து கபாலீச்சுவரப் பெருமான் திருமுன் வைத்து வணங்கினார். `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய,

     

    மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

     

    எனத் திருப்பதிகம் தொடங்கி, முதல் பாடலிலே உருவம் பெற்ற பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையான எட்டுப் பாடல்களைப் பாடிய அளவில் பன்னிரெண்டு வயதுடையவளாக மாறி நின்றாள்.

     

    உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

    இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

    கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

    பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

     

    எனும் பத்தாவது பாடலைப் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உயிர் பெற்று குடம் உடைய வெளிப்பட்டு எழுந்தவள், ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். அது கேட்ட ஞானசம்பந்தர், அரவு தீண்டி உயிர் துறந்த மகளை இறைவன் திருவருளால் பூம்பாவையாக மீண்டும் பிறப்பித்த்தால் அவள் தமக்கு மகளாவாள் என்ற மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தினார். சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச் செய்தார். பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி சேர்ந்தார்.
    பின்னர் ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள், திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீர்காழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானை வழிபட்டுத் தம் திருமாளிகையை அடைந்தார்.

    காழிவேந்தருக்குக் கடிமணம்!

     

    ஞானசம்பந்தர் சீர்காழிமேய பெருமானை நாளும் வணங்கி முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய அடியவருடன் இனிதிருந்தார். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர், அக்கால மரபுப்படி திருமண வயதான பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தாலும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைந்தார்.

     

    சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழ்ந்த சீலமிக்க அந்தணர் குடியில் தோன்றிய நம்மாண்டவர் என்பாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய அத்திருநாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் எம்பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து, கோயிலின் அருகே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்மாண்டவர் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தி, மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்புறம் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காண வந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார். திருநீலநக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்மாண்டவர் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் மணமகளைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி உடனானார்.
    அச்சோதி மறைய பெருமணக் கோயில் முன் போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

     

    கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
    பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
    சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
    நல்லூர்ப் பெருமண மேயநம் பானே

    ஞானசம்பந்தர் உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினை அறிவுறுத்த உளங்கொண்டு ஞானமெய் நெறிதான் யார்க்கும், ‘நமச்சிவாயச் சொல்லாம்’ என்று அனைவருக்கும் ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்து கூட்டுச் சிவதீக்கை செய்வித்துச் சோதியில் கலக்கச் செய்தார்.

     

    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது வரலாற்று ஆசிரியர்கள் கணித்துள்ள உண்மையாகும். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பதும் அவர் தம் வரலாறுகளால் விளங்கும். குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும் என்ற வகையில் அம்மன்னனும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்மவர்மப் பல்லவன் காலத்தில் படைத் தளபதியாக இருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி.642 ஆகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனான இம்மன்னனின் காலம் கி.பி. 640-670 என்ற வகையில் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம் என்கின்றனர்.

    வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை

    விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய்

    மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

    என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளால், வேதநெறியையும் சைவத்துறையையும் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டாகத் திருவவதாரம் செய்தருளியுள்ளவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் என்பது உறுதிப்படும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞான நிலை சைவத்துறையாதல் அமையும். “ஞானம் ஈசன்பாலன்பே” எனத் திருத்தொண்டர் புராணத்தும் “அன்பே சிவமாவது” எனத் திருமந்திரத்தும் வருவன கொண்டும் அது தெளியப்படுகிறது.

    அன்பு, அறம், மறம் ஆதியனவும் அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது,

    பூவினில் வாசம் புனலினிற் பொற்பு

    புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற்

     பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்”

     

     “கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

    கடல்மலைவா னாகாசமானாய் நீயே”

     

     “பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி”

    என்பன போன்ற தேவாரத் திருப்பதிகங்களாலும்,

     “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்

    நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள்

    வாய்மைநீ அறத்தினுளன்புநீ

    மறத்தினுள் மைந்து நீ வேதத்து

    மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ

    அனைத்தினுட் பொருளுநீ”

    என்னும் பரிபாடலாலும் அறியப்படும்.

    வேள்வி நெறியாகிய வேத நெறி மீளத் தலையெடுத்தோங்க வைத்து அருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டின் மகிமை அளப்பரியது என்பது அவர்தம் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே இன்றளவிலும் உறுதியாக நிற்பதும் கண்கூடு.

    சைவத்துறை தழைத்தோங்கும் பொருட்டு அவர்தம் திருவவதாரம் அமைந்தது என்பதற்கு ஆதாரம், அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்று, சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார் – திருஞானசம்பந்தர் – சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்து மூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் எனும் ஞானம் பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப் பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், தனிப்பட்டதொரு ஞான எழுச்சியும் விறலும் உடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய ஞானச்செல்வனைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் விதந்தோதப்பட்டுள்ளார்.

    காகமுணவு கலந்துண்ணக் கண்டீர்

    அகண்டாகாரசிவ போக மென்னும்

    பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய்

    ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்

    இனியெடுத்த தேகம் விழுமுன்

    புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

    எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலால், உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாக இருக்குங்கால் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் ஞான மகிமை எக்காலத்தும் போற்றுதலுக்குரியதாம்.

    ஞானப்பிள்ளையார், தென்பாண்டி நாட்டில் சென்றபோது நாடு இருந்த நிலையும் சைவம் இருந்த நிலையும் வேதனைக்குரியதாக இருந்தது. சமணரைக் கழுவில் ஏற்றியது சரியா என்ற வாதம் எழுவது இயல்புதான் என்றாலும் அது சிந்திக்கத்தக்க வினாவாகும். ஆனால் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றச் சொல்லவில்லை என்பதும் உண்மைதான். சமணர்களைப் பொருத்தவரை, அவர்களே சூளுரைத்து அவர்களுக்கு, அவர்களே விதித்துக் கொண்ட தண்டனைதான் அது. வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படி, பாண்டி வேந்தன், கழுவிலே ஏற்றுமாறு உத்தரவிட்டான். குலச்சிறையாரும் அதனை நிறைவேற்றினார். ஆனால் சமணர்கள் பல்லாயிரம் அடியார்கள் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் உண்மை. நாடாளும் மன்னனான நின்றசீர் நெடுமாறன் அரச நீதி காக்கும் பொருட்டே அவர்களைக் கழுவேற்றினான். நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைப்பது மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதனைச் சரி செய்வதும் மன்னனின் கடமையாகும். எனவே மன்னன் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினான். இதனை சம்பந்தர் தடுத்திருக்கலாமே என்ற வினாவும் எழலாம். அவருக்குச் சமணர்கள்பால் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றாலும் அரச நீதியில் மதம் கலந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அடியவர்களுக்கு இழைத்த அநீதிக்காகவும் அவர் இதில் தலையிடவில்லை என்றே அறியலாம்.

    வழிபாட்டு மொழி பற்றிய ஐயம் எழுபவருக்கு ஞானச்செல்வர் எம்பெருமானை வழுத்தும் அடியவருக்கும் பெருமானுக்கும் இடையில் மொழி எந்த தடையும் இல்லை. காரணம் அனைத்து மொழியும் அறிந்தவன் சிவபெருமான். ஆகவே அடியாருக்குத் தெரிந்த மொழியால் அவன் புகழ் சொல்லிப் பரவலாம் என்பதைத் தெள்ளென விளக்குகிறார்.

    1. தம்மலரடி யொன்ற அடியவர் பரவத்

    தமிழ் சொல்லும் வட சொல்லும் தாணிழற்சேர

    அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள்

     

    1. கல்லால் நிழல்மேய கறை சேர் கண்டா என்று

    எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த

     

    1. பத்தரொடு பலரும் வொலியும்மலர் அங்கை புனல்தூவி

    ஒத்த சொல்லி யுலகத்தவர் தாந்தொழ

     

    1. செந்தமிழ் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு

    அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்.

     

    சம்மந்தப் பெருமான் வழிபாட்டு மொழி எது எனில், தம் உள்ளத்தை எது ஒன்றச் செய்கிறதோ அம்மொழியே வழிபாட்டு மொழி என வழிகாட்டுகிறார்.

     

    வழிபாட்டு நெறிகள்

    1. சிவ வழிபாடு செய்தல்
    2. திருநீறு அணிந்து மகிழ்தல்
    3. ஐந்தெழுத்து ஓதல்

    ஆகிய மூன்று நெறிகளை வலியுறுத்தி நாம் வாழச் சிந்தை நிலை பெறச் சிவ வழிபாடும் அதற்குச் சாதனமாகத் திருநீறு அணிதலும், திருஐந்தெழுத்தை ஓதலுமே முத்தி பெற எளிய வழி என வலியுறுத்தி வாழ்ந்து காட்டினார்.

    திருஞானசம்பந்தர் துதி

    பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த

    சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்

    குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை

    விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம்  – பகுதி 27

     

    63 நாயன்மார்கள் வரலாறு   – 24. நமிநந்தியடிகள் நாயனார்

    நமிநந்தியடிகள் நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்து, வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்த, அடியவர்கள்பால் மாறாத அன்பு கொண்டவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர். “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் நாயனார் பெருமான். சோழ வளநாட்டில் திருவாரூருக்குத் தெற்கே திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் ஆறாவது மைல் தொலைவில், தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படும் ஏமாப்பேரூர் எனும் தலத்தில் அவதரித்த இவர், திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானை வழிபடுவது வழக்கம். சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இத்தலத்தின் மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராசன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்.

    இவ்வாரூர் திருக்கோயில் திருமதிலுக்கு அருகில் அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ள இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.  நமிநந்தியடிகள் அரநெறி அண்ணலை கண்ணீர் சொரிந்து வழிபட்டார். அத்திருக்கோயிலில் அழகாக விளக்குகள் பல ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்றும் விரும்பினார். அப்போது கதிரவன் மறையும் பொழுது. தமது இல்லம் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்றலாம் என்றால் அதற்கு போதிய நேரம் இல்லை. ஆதலால் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, சமணர் வீடு என்று அறியாமல் எம்பெருமானுக்கு விளக்கேற்ற நெய் வேண்டுமென்று கேட்டார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன் கையில் தீயை வைத்துள்ள அவருக்கு விளக்குக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்” என்று ஏளனம் செய்தனர்.

    கையில் விளங்கும் கனல் உடையார்

      தமக்கு விளக்கு மிகை காணும்

    நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர்

      ஆகில் நீரை முகந்து எரித்தல்

    செய்யும் என்று திருத் தொண்டர்க்கு

      உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப்

    பொய்யும் மெய்யும் ஆம் என்னும்

      பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.

    சமணர்கள் எம்பெருமானை ஏளனம் செய்ததை எண்ணி அழுது தொழுத நாயனார், அரநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது வான்வெளியில் ஒரு குரல் ஒலித்தது. நமிநந்தி! கவலை வேண்டாம். திருவிளக்குப் பணி நிறைவடைய நெய்தானே வேண்டும். ஏளனம் செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.

    பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஒரு விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! உலகம் வியக்க விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வெட்கம் அடைந்தனர். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.

    சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும்

      சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி

    ஆதி முதல்வர் அரநெறியார் கோயில்

      அடைய விளக்கு ஏற்றி

    ஏதம் நினைந்த அருகந்தர்

      எதிரே முதிரும் களிப்பினுடன்

    நாதர் அருளால் திரு விளக்கு

      நீரால் எரித்தார் நாடு அறிய

    வீட்டில் அனுதினமும் வழிபாடு செய்வதற்காக நள்ளிரவில் புறப்பட்டுச் செல்வார். மீண்டும் திருவாரூரை அடைந்து திருக்கோயிலின் உள்ளும் புறமும், நீரினால் விளக்கேற்றினார். ‘நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே’ என்று நாவுக்கரசர் பெருமானார் பாடியருளினார்.

    திருவாரூருக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப் பெருமாள் எழுந்தருளுவார். மக்களுடன் நமிநந்தியடிகளும் அங்கு சென்று வழிபட்டு வீடு வந்தவர், வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தவாரு, மனைவியை அழைத்து, பல தரப்பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத்தான் வழிபாடு  செய்ய வேண்டும் என்பதால் வெந்நீர் தயார் செய்யவும்  கூறினார். உடல் அசதி காரணமாக மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் திண்ணையில் கண்ணயர்ந்துவிட்டார். அப்போது அவருடைய கனவில் பேரொளியாகத் தோன்றிய திருவாரூர்ப் பெருமான், திருவாரூரில் பிறந்த அனைவருமே நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று கூறினார்.

    மேன்மை விளங்கும் திருவாரூர்

      வீதி விடங்கப் பெருமாள்தாம்

    மான அன்பர் பூசனைக்கு வருவார்

      போல வந்து அருளி

    ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார்

      எல்லாம் நம் கணங்கள்

    ஆன பரிசு காண்பாய் என்று அருளிச்

      செய்து அங்கு எதிர் அகன்றார்.

    கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். திருக்கோயிலுக்கு வந்தவர்கள் யாராயினும் அவர்கள் சிவனடியார்கள் என்று கருதாதது மிகப்பெரிய குற்றம் என்று வருந்தினார். பின்னர் குளிக்காமலே உடனே சென்று வழிபாடு செய்யலானர். விடியற்காலை எழுந்து வழிபாட்டை முடித்துவிட்டு திருவாரூர் நோக்கிச் சென்றார். கனவில் பெருமான் குறிப்பிட்டது போன்று அவர் திருவாரூரில் பிறந்து வாழும் அனைவரும் சிவனடியார்களாகவும், ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சியைக் கண்டார். உடனே நமிநந்தியடிகள் நாயனார் தலைக்கு மேல் கைகூப்பி வணங்கினார். எம்பெருமான் திருமுன் வீழ்ந்து வணங்கி மன்னிப்பும் வேண்டினார். திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டு பல செய்து வந்தார்.

    பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்ததும் இவ்வடியாரே ஆவார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூர் பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனி உத்தரப் பெருவிழாவை சிறப்புறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார்.

    சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப்பதிகத்தில் தொண்டற்காணி என்று சிறப்பித்துப் பாடப்பட்டார்.

    சிவபெருமானால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.

    நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர்

        நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க

    வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு

        ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற்

    கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக்

        காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே

    யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க்

        காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.

     

    நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

     

    சிவாலயத் திருத்தொண்டுகளில் திருவிளக்குத் திருத்தொண்டு மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

    விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்

     துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்

     விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்

    அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே

    என்ற தேவாரப் பாடல் விளங்கச் செய்கிறது.

    சிவ வடிவம் ஒளிமயமாதல் என்பதனை, தேவாரத்தில் “திருவையாறகலாத செம்பொற் சோதி” என்றும்,

    திருவாசகத்தில், ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி” – “சோதியாய்த் தோன்றும் உருவமே” – “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்றும், திருவிசைப்பாவில் “ஒளிவளர்விளக்கே” – “சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி” எனவும், கந்தரலங்காரத்தில் “ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு தூங்கார்” எனவும் வருவனவற்றாலும் அறியலாம்.

    மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஆன்மாவும் ஒளிமயமாகவேயிருக்குமெனல், விளக்கினை யேற்றி வெளியை யறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கை விளக்கும் விளக்கவர்தாமே” என்னும் திருமந்திரத்தால் அறியப்படும்.

    “தாவியவனுடனிருந்துங் காணாத தற்பரனை

    ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்

    நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்

    கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே”

     எனும் தேவாரப் பாடலால் அறியலாம்.

     “விளக்கில் விளக்கும் விளக்கவர்தாமே” என்ற திருமூலர் கூற்றுக் கிலக்கியமாய் விளங்கித் திகழ்ந்தவர் நமிநந்தியடிகள்.

    வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாள் தாம் என்றுந் திருவாரூராளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டொன்றுஞ் செயலும் பங்குனியுத்தரமாந் திருநாள் உயர்சிறப்பும் நின்று விண்ணப்பஞ் செய்தபடி செய்தருளும் நிலைபெற்றார்” எனவும்,

    “இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ்செய்தே ஏழுலகும் மன்னு பெருமைத்திருவாரூர் மன்னரடியார் வழிநிற்பார் அன்ன வண்ணந் திருவிளையாட் டாடியருள எந்நாளும் நன்மை பெருக நமிநந்தியடிகள் தொழுதார் நாமுய்ய” எனவும் உள்ள திருத்தொண்டர் புராணச் செய்யுள்களால் அறியப்படும்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 26

                                                63 நாயன்மார்களின் வரலாறு – 23. திருநீலநக்க நாயனார்

     

    வேத உள்ளுறை ஆவன

      விரிபுனல் வேணி

    நாதர் தம்மையும் அவர்

      அடியாரையும் நயந்து

    பாதம் அர்ச்சனை புரிவதும்

      பணிவதும் என்றே

    காதலால் அவை இரண்டுமே

      செய் கருத்து உடையார்

    சோழமண்டலத்தில், காவிரி ஆறு பாய்ந்தோடி வளப்படுத்தும் தன்மை கொண்ட  சாத்தமங்கை எனும் ஊரில் திருநீலநக்க நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து கிழக்கே ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் நம்பியாரூரரால் தம் திருத்தொண்டத்தொகையில்,’ஒலி புனல் சூழ் சாத்தமங்கைஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.”
    திருநீலநக்க நாயனாரை
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்” என்று போற்றுகின்றார். திருச்சாத்தமங்கை இன்று மக்கள் வழக்கில் சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்தில் அயன் என்னும் நான்முகன்வழிபட்டதால் அயவந்தி எனப்பட்டது. மறையவர்கள் மிகுதியாக வாழ்கின்ற இவ்வூரின் இறைவன் திருநாமம் மலர்க்கண் அம்மை என்றும் அயவந்தீசுவரர் என்றும் பார்வதி தேவி இருமலர்க்கண்ணம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். திருநீலநக்க நாயனார் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் என்பதால் மறையொழுக்கம் வழுவாமல் ஆகமவிதிப்படி எந்நேரமும் வேத பாராயணம் செய்வார். இத்திருக்கோயிலில் அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துகொண்டு, அங்கு வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையும் செய்து வந்தார். திருச்சாத்தமங்கையில் வாழும் மறையவர்கள் திருநீற்றினைப் போற்றி அதன் பெருமையை வளர்த்து மூன்று வகையான அக்னியை வளர்த்தனர்.

    சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் உகந்த நாளான திருவாதிரை நன்னாளில்தான் ஞானப்பால் உண்டார் சம்பந்தப் பெருமான். அப்படிப்பட்ட ஒரு திருவாதிரை நன்னாளில், திருநீலநக்க நாயனார் அயவந்தீசுவரருக்குப் பூசை செய்வதற்காக பூசைக்குரிய பொருட்களுடன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வலம் வந்து வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் இறைவன் திருமேனியில் சிலந்தி ஒன்று விழுந்தது. அதனைக் கண்ட திருநீலநக்க நாயனாரின் மனைவியார் விரைந்து சென்று தாய்மையுணர்வுடன் வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். இதனைக் கண்ட திருநீலநக்க நாயனார் கோபமடைந்தார். வழிபாட்டில் எச்சில் படுவது பாவம் என்பதால் ஆகம நெறிக்கு புறம்பாக சிவபெருமானை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று கூறி, மாலைப்பொழுது ஆனதால் வீட்டிற்குத் திரும்பினார்.  அச்சங்கொண்டு நடுங்கிய நாயனாரின் மனைவியும் மன வேதனை மேலிட செய்வதறியாது கோயிலிலேயே தங்கி விட்டார். இருள் சூழ்ந்திருக்க எம்பெருமானை வணங்கியபடியே அந்தக் காரிருளில் நடுங்கியபடியே கோயிலுக்குள் தங்கியிருந்தார். நாயனார் வீட்டில் சென்று படுத்து உறங்கினார்.

    நீலநக்க நாயனாரின் உறக்கத்தில் ஒரு கனவு தோன்றியது. அயவந்தித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அயவந்திநாதர் தோன்றினார். எம்பெருமான் நாயனாரிடம், அவருடைய மனைவியார் ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறி தம் திருமேனியைக் காட்டியருளினார். மனைவியின் எச்சில் பட்ட இடம் எம்பெருமானுக்கு அமுதநீராயிற்று எனவும் அதுபடாத இடமெல்லாம் கொப்பளமாக மாறியதையும் பெருமான் கனவில் காட்டியதை உணர்ந்து தவறு செய்துவிட்டோமே என்றும் வருந்தினார். கண் விழித்த திருநீலநக்க நாயனார் எம்பெருமானுடைய திருவருளை வியந்து ஆடிப்பாடி கூத்தாடி, கோயிலுக்குச் சென்று அயவந்தீசுவரரைத் தரிசனம் செய்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.  

    நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை

        நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி

    யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்

        குமியாத விடநாத னுறுநோய் காட்டக்

    காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்

        காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து

    வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி

        விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்தவரான திருநீலநக்க நாயனாருக்கு அவர்மீது அதீத ஈடுபாடும் பக்தியோடும் நெருங்கிப் பழகினார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை வந்தபோது அவரை வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வரவேற்றார். அன்று இரவு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீலநக்க நாயனார் இல்லத்தில் தங்க முடிவெடுத்தவர், தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு திருநீலநக்க நாயனார் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய திருநீலநக்க நாயனாரின் பெருமையை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீசுவரரின் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


    திருநீலநக்க நாயனார் அவ்வப்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இருக்கும் தலங்களுக்குச் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தினைக் கண்டு களிக்க மனைவியுடன் திருப்பெருமணநல்லூரை அடைந்தார். அத்திருமணத்தை, திருமண வேள்விச் சடங்கினை தாமே முன்னின்று நடத்தி வைத்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் சிவசோதியினுள் கலந்து இன்புற்றனர்.

    திருநீலநக்கர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருவாசகத்தில்,

    சொற்பதங்கடந்த அப்பன் தாளதா

    மரைக ளேத்தித் தடமலர்

    சூட்டமாட்டா ஆளலா தவரைக்கண்டால்

    அம்மநாம் அஞ்சுமாறே

    உயிர் பாச நீக்கம் பெற்று சிவப்பேறடைதல் உள்ளார்ந்த ஆன்மிகத் தகுதியை உண்டுபண்ணுதற்கும் பெருஞ்சிவப்பேற்றை அடைந்து பேரின்பமடையச் செய்வதுமே சிவபூசையின் சாராம்சமாகும்வேதத்தின் முதற்பொருளான அடியார்களைப் போற்றலும், எம்பெருமானை அர்ச்சிப்பதுமாகிய இரண்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் திருநீலநக்க நாயனார். அருள் நூல்களின் சாரமாக விளங்குவது மெய்ப்பொருளாக விளங்குவது திருநீறே ஆகும். உயிர்களைக் காப்பதும் திருநீறே ஆகும். சைவத்தில் சிவபூசையானது சுத்த நிலையிலுள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகும். திருமந்திரத்தில், யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை” எனவும் போற்றப்பட்டுள்ளது.

     தேவாரத்தில்,

    அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரும்

    அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே  

    ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில்

    உண்பதின்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில்

    அருநோய்கள் கெட வெண்ணீறணியா ராகில்

     அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

     பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப்

    பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே

    என்று போற்றப்படுதலும் குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள், பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை” என்ற அருளிப்பாட்டின் மூலம் சிவபூசை அனைவர்க்கும் உரித்தானதென்று விதித்துள்ளதும் அறியத்தக்கது.

     சிவனடியார் வழிபாடும் சிவபூசைக்குச் சமமான மகிமையுடைத்ததாகும். சிவபெருமானை பூசிப்பவர்களின் உள்ளத்தில் சிவபெருமானே தோன்றி அருள் அளிப்பதற்கொப்ப சிவனடியார் வழிபாட்டுக்கும், வழிபடுவோரிடத்தில் சிவம் தோன்றி விளங்குதலால் அறியலாம் என்பது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

    எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும்

    அஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே

    அவரவரைக் கண்டபோதில் உகந்தடிமைத்

    திறம் நினைந்தங் குணர்வே மிக்கு

    இவர்தேவர் அவர் தேவரென்று பேசி

    இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே

    பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

    கன்றாப்பூர் நடுதறியைக்காணலாமே

     எனவும், திருமந்திரத்தில் “மஞ்சன மாலை நிலாவியவானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுதாம் உபசாரமெட்டெட்டொடும் அஞ்சலியோடுங் கலந்தர்ச்சித்தார்களே” எனவும் வருவனவற்றாலறியப்படும்.

     “வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாமுள” என்கிறார் திருமூலர்.

    தாம் பூசிக்கும் சிவலிங்கத்தின் திருமேனியில் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற தம் மனைவியார் எம்பெருமானை பச்சிளங் குழந்தையாகக் கருதி வாய் நீர்பட ஊதி உமிழ்ந்து விட்டமை மாபெரும் தவறு என்று நினைத்தவர் உடனடியாகத் தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றிவிட்டார்.

    விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்
    றெழுந்த ச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
    ஒழிந்து நீங்கிட வூதிமுன் றுமிப்பவர் போலப்
    பொழிந்த வன்பினா லூதிமேற் றுமிந்தனர் போக.

    என்ற சேக்கிழார் வாக்கினால் அறியலாம்.

    “ஈசனறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களை” என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க நாயனாரது இறை அன்பையும் தம் மனைவியாரது தாய்மைப் பரிவுடனான அன்பையும் சீர்தூக்கி இருவரது ஆக்கத்துக்கும் ஏற்றவகையில் அருளிய சிவபெருமானின் கருணையை அறியச்செய்கிறது.

    திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் தங்க இடம் கொடுக்க வேண்டி ஞானசம்பந்தப் பெருமான் சுவாமிகள் இந்நாயனாரைக் கேட்டுக் கொண்டதும் சுவாமிகள் அவர்களுக்குத் தமது சிவபூசை மேடையிலேயே இடங்கொடுத்ததும், சைவசமயத்தில் சாதியொழிந்த இடம் இது என்ற பக்குவநிலையை எடுத்துரைப்பதையும் அறியலாம்.  . சிவபெருமான் மீது கொண்ட பற்றே அனைத்திலும் சிறந்தது என்ற சுத்த நிலையில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் மனைவியாரும் உண்மைச் சிவனடியார்களாகிவிட்ட நிலையில் பாணர் என்ற பெயர்க்குரிய அவர்களின் சாதி, குல நிலைகள் முற்றாக அற்றொழிந்தவாயின.

    சீல மெய்த் திருத்

      தொண்டரோடு அமுது செய்தருளி

    ஞாலம் உய்ந்திட நாயகியுடன்

      நம்பர் நண்ணும்

    காலம் முற்பெற அழுதவர்

      அழைத்திடக் கடிது

    நீல நக்கனார் வந்து அடி

      பணிந்து முன் நின்றார். 

     

    நின்ற அன்பரை நீல

      கண்டப் பெரும் பாணர்க்கு

    இன்று தங்க ஓர் இடம்

      கொடுத்து அருளுவீர் என்ன

    நன்றும் இன்புற்று நடு

      மனை வேதியின் பாங்கர்ச்

    சென்று மற்று அவர்க்கு

      இடம் கொடுத்தனர் திருமறையோர். 

     

    ஆங்கு வேதியில் அறாத

      செந்தீ வலம் சுழிவுற்று

    ஓங்கி முன்னையில் ஒரு

      படித்து அன்றியே ஒளிர

    தாங்கு நூலவர் மகிழ்வுறச்

      சகோட யாழ்த் தலைவர்

    பாங்கு பாணியாருடன் அருளால்

      பள்ளி கொண்டார்.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 25

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 22. அப்பூதியடிகள் நாயனார்

     

    அந்தமினற் றிங்களுர் வருமப் பூதி

        யருமறையோர் திருநாவுக் கரசி னாமம்

    பந்தரிடை யெழுதக்கண் டரக மெய்தப்

        பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த

    மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும்

        வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச்

    சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத்

        திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.

    ப்பூதியடிகள் சோழநாட்டின் திங்களூர் எனும் ஊரில் பிறந்தவர். நால்வர் பெருமக்களாலும் பாடப்பெற்ற அருட்தலமான திருஐயாறு எனும் ஊருக்கு ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ளது திங்களூர். இவ்வூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினைப் பற்றி கேள்விப்பட்டு அவரை மிகவும் மதித்து வந்தவர், அவரை முன்பின் பார்த்திராமலே அவர்மீது அளப்பரிய அன்பும், பக்தியும் கொண்டு அவரையே தம் குருவாக எண்ணி போற்றி வந்தார். நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குருபஞ்சாட்சரம் என்று அழைக்கப்படும். அந்த வகையில் தம் குருவின் திருநாமமாகிய திருநாவுக்கரசு எனும் பெயரை குருபஞ்சாட்சரமாகப் போற்றும் அப்பூதியடிகள் தம் மனைவி, மக்கள், மனைப் பொருட்கள் அறச்சாலைகள் போன்று அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டினார். அவருடைய நான்கு குழந்தைகளுக்கும் திருநாவுக்கரசர் என்றுதான் பெயர் சூட்டினார். அவர் வீட்டிற்கும் திருநாவுக்கரசர் பெயர்தான், அவருக்கு எல்லாமே திருநாவுக்கரசர் என்ற வகையில் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் அளித்தல், சத்திரம் அமைத்தல், நீர்ப்பந்தல் அமைத்து தாகம் தீர்த்தல் போன்ற அறப்பணிகளையும் செய்து வந்தார்.

    களவு பொய் காமம் கோபம்

      முதலிய குற்றம் காய்ந்தார்

    வளம் மிகு மனையின் வாழ்க்கை

      நிலையினார் மனைப் பால் உள்ள

    அளவைகள் நிறைகோல் மக்கள்

      ஆவொடு மேதி மற்றும்

    உள எலாம் அரசின் நாமம்

      சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார்

    என்கிறார் சேக்கிழார் பெருமான், அப்பூதியடிகளின் பெருமையைப் பற்றி.

    திருநாவுக்கரசர், தம் பெயரால் பல அறப்பணிகள் செய்யும் அப்பூதியடிகள் அப்படி செய்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தித்தவராய், அப்பூதியடிகள் இருக்கும் இடம் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.  இந்த நற்தொண்டினைப் பற்றி அறிந்து உள்ளம் மகிழ்ந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளைக் காணும் பொருட்டு அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். ஆனால், அவர்தான் திருநாவுக்கரசர் என்பது அப்போது அப்பூதியடிகளாருக்குத் தெரியாது. எதிர் நின்ற நாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, தாம் முன் செய்த தவமே கருணை பொழியும் திருமுகத்தையுடைய அத்தவச் செல்வர் தங்கள் மனைக்கு எழுந்தருளியது என்று கூறி அவர் வந்த காரணம் குறித்தும் கேட்டார். திருப்பழனநாதரை வழிபட்டு வரும் வழியில் தண்ணீர்ப் பந்தலைக் கண்டதோடு அவர் புரியும் அறம் பலவும் கேட்டறிந்து அப்பூதியாரைக் காண வந்ததாகக் கூறுகிறார்.

    தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா

    மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே

    யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரா

    னனமார் வயற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே.

    திருநாவுக்கரசர், அப்பூதியடிகளை நோக்கி, “அடியார்களுக்கு உங்கள் சொந்தப் பொறுப்பில் செய்யும் அனைத்து அறப் பணிகளுக்கும் ஏன் நீங்கள் உங்கள் பெயரை வைக்காமல் வேறொருவரின் பெயரை வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் மிகவும் மனம் வருந்திய அப்பூதியடிகள், பெரியவர் வாயில் நல்ல வார்த்தைகள் வரக்கூடாதா என்று நொந்து போனார். சமணர்களும், நாடாளும் மன்னனும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினைத் திருத்தொண்டின் உறைப்பால் வென்ற நாவுக்கரசர் திருப்பேரா வேறோரு பேர் என்று கூறி புரியாமல் பேசுகிறீரே” என்றவர், அத்திருப்பேரே தமது தாரக மந்திரம் என்று வாய் குளர மொழிந்தார்.  அதுமட்டுமல்லாமல் நாவுக்கரசரின் மகிமையை அறியாத அவர் சமணர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லையே என்றும் கேட்டார். பின்னர் அவருடைய ஊரையும், பேரையும் குறித்தும் கேட்டார்.

    அப்போது நாவுக்கரசரும், தன்னைக் கடைத்தேற்ற எவ்வழியும் காணாது அதிகைப் பெருமானாரால் கொடுஞ்சூலையினால் ஆட்கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியேன், தாம் என்று சூசகமாக பதிலிறுத்தார். இதனைக் கேட்ட அப்பூதியடிகளார் மீப்பெரும் அதிர்ச்சிக்குள்ளானவர், யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் என்று தவம் புரிந்து காத்துக் கிடந்தாரோ, யார் பெயரால் அனைத்தறங்களும் செய்து வந்தாரோ, தம் செல்வங்கள் அனைத்திற்கும் எவர் பெயரை வைத்து ஓயாமல் மூலமந்திரமாக எண்ணி செபித்துக் கொண்டிருந்தாரோ, அப்பெயருக்குரிய பெருமானார் தம் கண் முன்னால் நிற்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்தவர், ஆடினார், பாடினார், மனைவி, மக்களையெல்லாம் அழைத்து வந்து அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கச் செய்தார். தாமும் கண்ணில் நீர் பெருக கைகூப்பியவராய் நாவுக்கரசர் மலரடிகளே சரணம் என்று அடியில் வீழ்ந்தார். அப்பரடிகளும் அவரைத் தம் திருக்கரத்தால் வாஞ்சையுடன் எடுத்தருளினார். அப்பரடிகளின் திருவடியை பூவும், நீரும் கொண்டு பூசனை செய்தார்.

    தன்னுடைய இல்லத்திற்கு திருநாவுக்கரசரே வந்திருப்பதை அறிந்த அப்பூதியடிகள் மகிழ்ந்து கூத்தாடி, உணவு உண்ணுமாறு வேண்டினார். அவரும் அந்த அன்பிற்கு இசைந்ததால் திருஅமுது படைக்கத் தயாரானார்கள். காய்கறிகளும், கனி வகைகளும் கொண்டு தூய நற்புனிதமான உணவைத் தயார் செய்தனர். தங்கள் புதல்வன் மூத்த திருநாவுக்கரசை, திருநாவுக்கரசருக்கு பரிமாறும் பொருட்டு அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து வாழைக்குருத்து அரிந்து வரும்படி அனுப்பினார். அங்கு அவன் வாழைக் குருத்தை அரியும் போது கொடிய நாகம் ஒன்று அவன் கரத்தைத் தீண்டிவிட்டது. நஞ்சு ஏறுவதை அறிந்தும் அவன் ஓடிச்சென்று வாழைக்குருத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து சிரமம் பாராமல் வந்து தாயின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு அப்படியே அவர் பாதங்களில் சரிந்து விழுந்தான். விடம் தீண்டி அன்பு மகன் உயிர் இழந்தது தெரிந்தும் வேதனையை வெளிக்காட்டாமல் நாவுக்கரசரை அமுது செய்விப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்தப் பெரிய தலைவாழைக் குருத்தில் உணவு பரிமாறி அப்பரடிகள் திருவடியில் விழுந்து வணங்கி அமுதுண்ண அன்புடன் அழைத்தனர். திருநாவுக்கரசர் பூசனை முடித்து தாம் திருநீறு அணிந்த பின்னர் அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியார் மற்றும் குழந்தைகளுக்கும் திருநீறு வழங்கினார். அப்போது மூத்த திருநாவுக்கரசு எங்கே, அவனையும் அழையுங்கள் திருநீறு பூச வேண்டும் என்றார். நடந்த உண்மையைச் சொன்னால் நாவுக்கரசர் உணவருந்த மாட்டாரே என்று நினைத்த அப்பூதியடிகள், “இப்போது இங்கு அவன் உதவான்” என்றார். அவர் வார்த்தைகளில் இருந்த தடுமாற்றத்தைக் கவனித்த நாவுக்கரசர், “இந்தப் பதிலை என் உள்ளம் ஏற்காது. என் செய்தான்? உண்மையைக் கூறுங்கள்” என்றார். அதற்குமேல் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்தவர், மகனுக்கு நேர்ந்த அவலத்தையும் பாயினால் மூடி வைத்த பாங்கினையும் உள்ளவாறு கூறினார்.

    இதனைக் கேட்ட நாவரசர், இப்படியும் யாரேனும் செய்வார்களோ என்று வருந்தி, ஆவி போன மகனின் சவத்தை பாயிலிருந்து எடுத்து தன் முன் கொண்டு வரும்படி பணித்தார். அச்சவத்தை நோக்கி சிவபெருமான் அருளும் வண்ணம் அவர் அருளாகிய திருமேனிகள் அமைந்த அளப்பரிய தோற்றத்தை ஒன்று முதல் பத்து வரையாக வைத்து எண்ணும் நிலையாற் பத்துப் பாடல்களைப் பாடியருளினார்.

    ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை

    ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

    ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

    ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

     

    பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்

    பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

    பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை

    பத்து கொலாம் அடியார் செய்கை தானே.

    பாம்பு கடித்து உயிர் துறந்து பாயிற் கிடத்தப்பட்ட மைந்தன் உறங்கி எழுபவன் போல் எழுந்தவன் அப்பரடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அன்போடு திருநீறு பூசி வாழ்த்தினார். ஆயினும் அப்பூதியடிகளும், அவரது மனைவியாரும் அப்பர் பெருமானால் உணவருந்த முடியவில்லையே என்று வருந்தினர்.  இதனை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் புதல்வர்களை இரு புறமும் இருத்தி உணவருந்தி சில காலம் திருப்பழனத்தில் அப்பூதியடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பல பதிகங்களைப் பாடியருளினார் .

    அப்பூதியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருநாவுக்கரசு என்னும் மந்திரத்தைச் சொல்லியும், எழுதியுமே முத்தி பெற்றவர் அப்பூதியடிகள்.  சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதியடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமானை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

    ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது

    வேதநான்கினும் மெய்ப்பொருளாவது

    நாதன் நாமம் நமச்சிவாயவே

    என்று தேவாரத்திலும்,

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்

    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

    சிவசிவ என்றிடத் தேவருமாவர்

    சிவசிவ என்ன சிவகதிதானே.

    என்று திருமந்திரத்திலும் கூறுவது போன்று அப்பூதியடிகள் நாவுக்கரசரைக் காணாமலேயே அவர்மீது பக்தி கொண்டு அவரையே தம் குருவாகவும் ஏற்றுக்கொண்டார். சைவ சமயத்தில் சிவபஞ்சாட்சரம் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. அதே போன்று நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குரு பஞ்சாட்சரம் என்று போற்றப்படுகின்றது. அப்பூதியடிகளும் தம் குருவின் நாமமாகிய திருநாவுக்கரசு என்ற பெயரை குரு பஞ்சாட்சரமாகப் போற்றி, திருநாவுக்கரசரை நேரடியாகக் காணாவிட்டாலும் செவிவழியாக அவருடைய பெருமைகளையும், திருத்தொண்டினையும் அறிந்து அவர் மீது தீராத பேரன்பு கொண்டார். ஆகையால், நாவுக்கரசரின்  திருப்பெயரிலேயே மடங்களும், தண்ணீர் பந்தல்களும் அமைத்து வறியவர்களுக்கும், அடியார்களுக்கும் அனைத்து உதவிகளையும் மனிதநேயத்துடன் செய்து வாழ்ந்து வந்தார்.

     

     “நம்மை உடையவர் கழல்கீழ் நயித்த திருத்தொண்டாலே

    இம்மையிலும் பிழைப்பது என என்போலவாரும் தெளிய

     

    அப்பூதியடிகள் ‘திருத்தொண்டு’ என்பதனை இறைவனுக்கு மட்டுமன்றி சிவனடியார்களுக்கும், எளியவர்களுக்கும் விருந்தோம்பல் செய்வதையும் தம் அன்றாட வழிபாடாகவே செய்து கொண்டிருந்தார்.

     

     ஆதியோடு அந்தம் இல்லான் அருள்நடம் ஆடும்போது

    கீதம்முன் பாடும்அம்மை கிளர்ஒளி மலர்தாள் போற்றி

    சீதாமூர் வயல்சூழ்  திங்களூரில் அப்பூதியாராம்

    போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகலுற்றேன்

     

    அப்பூதியடிகள் தம்மைநாடி வந்தவர்களுக்குச் செய்யும் அனைத்து உதவிகளையும் சிவபெருமானுக்குச் செய்யும் தொண்டாகவே எண்ணிச் செய்ததை சேக்கிழார் பெருமான் அப்பூதியடிகளை அறிமுகப்படுத்தும் பாங்கில் இருந்தே அறியலாம்.

    தங்கள் தவப்புதல்வனான மூத்த திருநாவுக்கரசை அருகிலிருந்த தோட்டத்தில் வாழைக்குருத்து அரிந்து வரச்சொல்லி அனுப்புகிறார். விரியாத குருத்தினை குறிப்பாக எடுத்து வரச்சொல்கிறார். விரிந்த இலையில் காகம் முதலான பறவைகள் எச்சம் இட்டிருக்கலாம் என்பதற்காகவே குருத்து இலையை அரிந்து எடுத்து வரச்சொல்கிறார். ஆனால் இறைவனின் திருவிளையாடலாக குருத்திலைக்குள் நாகம் இருந்து தீண்டிவிட நஞ்சு ஏறிய சிறுவன் உயிர் இழக்கிறான். நல்ல திருப்பணியைச் செய்ய பெரும்பேறு பெற்றேன் என்ற மகிழ்வுடன் சென்றவனுக்கு நாகம் தீண்டினாலும், ‘பாம்பு தீண்டிய வேகத்தில் உண்டாகிய  கொடிய நஞ்சால் நான் இடறிக் கீழே விழும் முன்னர் இலைக்குருத்தினை தாயிடம் கொண்டு சேர்ப்பேன்’ என்று தீர்மானித்து ஓடிவந்தான். தன் உயிர் நீங்கினும்  அடியாராக வந்த நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது  என்ற எண்ணம் மிக்க சிறந்த தொண்டராக மூத்த திருநாவுக்கரசர் படைக்கப்பட்டுள்ளார்.

     

    பெறல் அரும் புதல்வன் தன்னைப்பாயினுள் பெய்துமூடிப்

    புறமுனை முன்றில் பாங்குஓர் புடையினில் மறைத்துவைத்தே

    அறஇது தெரியாவண்ணம் அமுதுசெய்விப்போம் என்று

     

    தம் மகனின் உயிர் பிரிந்த நிலையிலும் சடலத்தை பாயினுள் வைத்துச் சுருட்டி தன் மனையின் புறத்தே உள்ள முற்றத்தில் மறைத்து வைத்த பின்பு நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். அடியார்களையும் வறியவர்களையும் விருந்தினர்களையும் தமது இல்லத்தில் எவ்வித சூழ்நிலை இருந்தாலும் இன்முகத்துடன் வரவேற்று, முகமலர்ச்சியுடன் உபசரித்து அனுப்ப வேண்டும் என்ற உயரிய கொள்கையை தமக்கு மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளுக்கும் கடமையாக்கியுள்ள அப்பூதியடிகளின் வரலாறு போற்றுதலுக்குரியது.

     

    திருச்சிற்றம்பலம்.

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 12

     

    63 நாயன்மார்கள் வரலாறு 11. மானக்கஞ்சறார்

     

     

    மேலாறு செஞ்சடை மேல்

      வைத்தவர் தாம் விரும்பியது

    நூலாறு நன்கு உணர்வார்

      தாம் பாடு நோன்மையது

    கோலாறு தேன் பொழியக் கொழுங்

      கனியின் சாறு ஒழுகும்

    காலாறு வயல் கரும்பின்

      கமழ் சாறூர் கஞ்சாறூர்.

    மானகஞ்சார நாயனார் எத்தகைய புண்ணிய பூமியில் அவதரித்திருக்கிறார் என்பதை சேக்கிழார் பெருமான் வாயிலாக அறியத் தருகிறார். கங்கை ஆற்றினை தம் சடையிலே தரித்துள்ள சிவபெருமானார் விரும்பி உறையும் ஊர் கஞ்சாறு. ஊரின் தன்மையையும், தேனொழுகும் கனிகளின் இனிமையும் நிறைந்த ஊராம்.

    வேளாளர் குலம் மிகச் சிறப்புற்றிருக்கும் ஊரும் இதுதான். இந்நாயனார் இக்குலத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சோழ மன்னரின் படைத்தளபதியாகவும் விளங்கியவர். அனைத்திற்கும் மேலாக சிவமே மெய்ப்பொருள், சிவமே சகலமும் என்றுணர்ந்த மிகச்சிறந்த சிவனடியாராகவும் விளங்கியவர். சிவனடியார்களைச் சிவம் என்றே போற்றுவதோடு, மிகச்சிறந்த கொடையாளியாகவும் இருந்த  தகைமையாளர் இந்நாயனார். ஆனாலும் இத்தகைய சிறப்பு வாய்ந்தவருக்கு ஒரு மகவு இல்லையென்ற குறையும் இருந்தது. அதனால் எம்பெருமானை நினைத்து தவம் மேற்கொள்ளவும் செய்தார். பெருமான் கருணையால் மானகஞ்சாறரின் துணைவியாருக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த அப்பெண் திருமணப் பருவத்தை அடைந்தாள்.

    நீலகண்டப் பெருமான் மீது மாறாத அன்பு கொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்ற மணமகனுக்கு மணம் பேச முதியோர் சிலர் வந்தனர். மானக்கஞ்சாறரும் இந்தத் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார். பெருமங்கலம் என்ற தமது ஊரிலிருந்து மணமகள் இல்லம் நோக்கி புறப்படுகிறார் மணமகன் ஏயர்கோன் கலிக்காமர். திருமணக்கோலத்தில் மிளிர்ந்த மணமகள் வீடும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. செல்வச் செழிப்பு மிக்க நாயானாரும் தம் செல்வ மகளின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவிற்கு சீரும் சிறப்புமாக நடத்த முடிவு செய்தார். இந்த நேரத்தில்தான் சிவபெருமானாரும் நாயனாரின் சிவனடியார்களின் தொண்டினை உலகறியச் செய்ய அருள்கூர்ந்தார். மணவிழாக் காணப்போகும் இல்லம் நோக்கிப் புறப்பட்டவர் மாவிரதியர் கோலத்தில் நாயனார் இல்லம் வந்து சேர்ந்தார். நாயனாரும் அந்த அடியவரை வணங்கி வரவேற்று உபசரித்தார். அடியார் தம் இல்லம் வந்தது தம் தவப்பயனே என்று மகிழ்ந்திருந்தார். இல்லத்திலிருந்த மனைவி, மகள், உறவினர் என அனைவரையும் அவ்வடியாரின் அடி பணியச் செய்தார்.

    அவ்வென்பின் ஒளிமணி கோத்து

      அணிந்த திருத் தாழ்வடமும்

    பைவன்பேர் அரவு ஒழியத்

      தோளில் இடும் பட்டிகையும்

    மைவந்த நிறக் கேச வடப்

      பூணு நூலும் மனச்

    செவ்வன்பர் பவமாற்றுந் திரு

      நீற்றுப் பொக்கணமும்

    தந்தையாரின் வாக்கிற்கிணங்க அன்பு மகளான மணமகளும் வந்து அந்த அடியவரின் ஆசியை வேண்டி வணங்கி நின்றாள். அப்போதுதான் அவர் எவரும் எதிர்பாராத ஒன்றைச் சொல்லி அனைவரையும் திகைக்க வைத்தார். அதாவது அப்பெண்ணின் அடர்ந்த, நீண்ட கருங்கூந்தல் பஞ்சவடிக்குப் பயன்படும் என்றுரைத்தார்.

    தம் சரணத்து இடைப் பணிந்து

      தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்

    மஞ்சு தழைத்து என வளர்ந்த

      மலர்க் கூந்தல் புறம் நோக்கி

    அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து அணங்கு

      இவள் தன் மயிர் நமக்குப்

    பஞ்ச வடிக்காம் என்றார்

      பரவ அடித் தலங்கொடுப்பார்.

    என்பார் சேக்கிழார் பெருமான்.

    அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றும் பண்பாளரான மானக்கஞ்சற நாயனார் அவருடைய தேவையைப் புரிந்துகொள்கிறார். மகளின் திருமணக் காலம் என்ற நினைவும்கூட ஏதுமின்றி, ‘இப்பெண்கொடியின் தலை மயிர் எமக்குப் பஞ்சவடிக்குப் பயன்படும்’, என்று சொன்ன நொடியில் மணமகன் வீட்டில் என்ன சொல்வார்கள், மகள் மனதில் என்ன எண்ணம் இருக்கும், மணமகன் ஏதும் சொல்லிவிடுவாரோ என்ற நினைவும் இன்றி சிவனடியாரின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்தார். உடனே ஒரு கத்தியை எடுத்து வந்து, அன்பு மகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியோடு அறுத்து அடியவரிடம் கொடுத்து வணங்கி நின்றார்.

    அக்கணமே மாவிரதியர் மறைந்தார். சிவபிரான் உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி திருக்காட்சி அளித்தார். அமரரும் மலர்மாரி பொழிந்தனர். மணப்பெண்ணின் கூந்தலும் முன்போலவே நீண்டு வளர்ந்தது.

    அருள் செய்த மொழி கேளா

      அடல் சுரிகைதனை உருவிப்

    பொருள் செய்தாம் எனப் பெற்றேன்

      எனக் கொண்டு பூங்கொடி தன்

    இருள் செய்த கருங்கூந்தல் அடியில்

      அரிந்து எதிர் நின்ற

    மருள் செய்த பிறப்பு அறுப்பார்

      மலர்க் கரத்தினிடை நீட்ட. 

    சிவபெருமான் நாயனாரிடம், “அன்பனே நம்பாலும், நம் அடியவர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். நம் புவனத்தில் உமக்கு இடம் கொடுத்தோம்” என்றும் அருள் செய்தார்.

    மணமகன் ஏயர்கோன் கலிக்காமர், நடந்ததைக் கேட்டறிந்தவர், வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என்று வருந்தினார். கலிக்காமருக்கும் மானக்கஞ்சாறரின் புதல்விக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. மணமகளும், மணமகனும் தம் ஊர் சென்றனர். மானக்கஞ்சாறரும் சிறப்புற வாழ்ந்து, அடியவர் தொண்டை வழுவாது செய்து சிவபதம் அடைந்தார்.

    மானக்கஞ்சாறநாயனார் புராணம் கூறும் கருத்து:

    அப் பதியில் குலப் பதியாய்

      அரசர் சேனா பதியாம்

    செப்பவருங் குடி விளங்க

      திரு அவதாரம் செய்தார்

    சேக்கிழார் பெருமான் சைவ நெறியில் பதிகம் என்ற அமைப்பை உருவாக்கியவர். அதனால் அவர் பாடியது மூத்தத் திருப்பதிகம் எனப்பட்டது. அவர்தாம் பாடிய காவியத் தொண்டர்கள் அனைவரையும் அவதாரம் செய்தார் என்று கூறுவதில்லை. ஆனால் மானக்கஞ்சாற நாயனார் போன்று ஒரு சிலரை மட்டுமே அவதரித்தார் என்கிறார். அவதாரம் என்ற சொல்லுக்கு மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். தூய ஆன்மா இறையருளைத் தங்கி மண்ணுலகில் தோன்றுவதையே அவதாரம் என்பது மரபு. அந்த வகையில் இந்நாயனாரின் பெருமையை நாம் உணரலாம்.

    சிவனடியார்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுக்கும் பண்பாளர் மானக்கஞ்சாற நாயனார். சிவனடியார்கள் விரும்பியது யாதாயினும், அதனை அவர் கேட்குமுன் அவர் குறிப்பறிந்து கொடுத்தல் மிகச் சிறந்த சிவபுண்ணியமாம். இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மானக்கஞ்சாற நாயனார். மாவிரதி வடிவங்கொண்டு வந்த சிவபெருமான், நாயனாரின் புதல்வியின் நீண்ட கருங்கூந்தலை நோக்கி, இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்காம் என்று அருளிச் செய்தவுடனே, அன்றைய தினம் அவளுக்கு விவாகம் நிகழும் தினம் என்றாலும் பெருமகிழ்ச்சியோடு அவளது கூந்தலை அடியோடு அரிந்து வழங்கிய பெருந்தகைமையே இவரது பேரன்பிற்கு சான்றாம். பொதுவாக மயிர் நீக்குவது அமங்கலத்தின் அடையாளம் என்பார்கள். அதுவும் திருமண நாளன்றே இத்தகைய காரியத்தைச் செய்வது இந்நாயனாரது மெய்யன்பை உணர்த்துகின்றது.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 9

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 8. ஏனாதிநாதர்

    ஈழக் குலச்சான்றா ரெயின னூர்வா

        ழேனாதி நாதனா ரிறைவ னீற்றைத்

    தாழத் தொழுமரபார் படைக ளாற்றுந்

        தன்மைபெறா வதிசூரன் சமரிற் றோற்று

    வாழத் திருநீறு சாத்தக் கண்டு

        மருண்டார்தெ ருண்டார்கை வாள்வி டார்நேர்

    வீழக் களிப்பார்போ னின்றே யாக்கை

        விடுவித்துச் சிவனருளே மேவி னாரே.

     

    சோழ நாட்டில் எயினனூர் எனும் ஊரில் பிறந்தவர் ஏனாதியார். எயினனூர் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தற்காலத்தில் ஏனநல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. ஏனாதி என்பது அந்நாட்களில் படைத்தளபதியைக் குறிக்கும் சொல்லாகும். ஏனாதி என்ற பட்டம் படைத்தளபதிக்கு ஆபரணமாக நெற்றியில் அணியச் செய்வார்கள். இந்நாயனார் ஏனாதி என்ற பட்டத்தைப் பெற்றவர். ஈழகுலச் சான்றோர் குடியில் பிறந்தவர் இவர். மன்னர் குடி வந்தவர்களுக்கு வாட்போர்ப்பயிற்சி அளிப்பது இவருடைய பணி. இப்பணியிலிருந்து வரும் வருவாய் மூலமாக அடியார்களுக்கு உதவி செய்வதை தம் கடமையாகக் கொண்டு வாழ்பவர். வாட்படைப் பயிற்சிக் கூடம் அமைத்து பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த இவர் வாள் வலிமையும், தோள் வலிமையும், அஞ்சா நெஞ்சமும் கொண்டு வாழ்ந்தவர். அந்த வகையில் மிகத்திறமையான அவருடைய பயிற்சியால் அவருக்கு செல்வாக்கும், செல்வமும் பெருகியது. அவருடைய அரவணைப்பால் அடியார்களும் சிறப்பாக வாழ்ந்ததால் அவருடைய புகழும் உச்சம் தொட்டது.

    இவையனைத்தையும் கண்டு எரிச்சலுற்ற மற்றொரு வாட்பயிற்சியாளனான அதிசூரன் என்பவன் அவர்மீது அழுக்காறு கொண்டான். அவன் இயல்பாகவே தற்பெருமையும், ஆணவப்போக்கும், பிறரை மதியாத தன்மை போன்ற குணக்கேடான எண்ணங்கள் கொண்டவன் என்பதால் குணக்குன்றான ஏனாதியாரைப் பகையாகக் கருதினான். ஒருநாள் ஏனாதியாரைப் பார்க்க அதிசூரன் அவர் இருக்கும் இடம் தேடி வந்தான். அவருடைய தொழிலைக் குறிவைத்துப் பறிக்க வந்தான். ஒரு ஊரில் இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கலாமா? யார் வலிமையானவரோ அந்த ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்றான். அதற்காக ஏனாதியாரிடம் பயிற்சி பெறுபவர்களையும், தன்னிடம் பயிற்சி பெறுபவர்களையும் வைத்து சண்டையிட்டு, அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தலாம் என்று திட்டமிட்டான். ஒரு உரையில் ஒரு கத்தி மட்டுமே இருக்க வேண்டும் என்றான். ஏனாதியாரும் அதற்கு இசைந்தார். அதற்கான நாளும், இடமும் குறிக்கப்பட்டது. அந்நாளில் அதிசூரன் கூறியபடி அனைவரும் கூடினர். போர் தொடங்கி வாள் வீச்சில் தலைகளும் துண்டாகி வீழ்ந்தன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தன. இரத்த வெள்ளத்தில் மிதந்தனர் பலர். இறுதியில் அதிசூரனைத் தோற்கடித்தார் ஏனாதியார். அதிசூரனின் படைகள் தோற்று ஓடின. சேக்கிழார் பெருமானின் கவிச்சொற்கள் இவற்றை அழகாகப் பதிவிடுகின்றன:

    குருதியின் நதிகள் பரந்தன குறை

      உடல் ஓடி அலைந்தன

    பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி

      குடர் உடல் பம்பின

    வெருவர எருவை நெருங்கின

      விசியறு துடிகள் புரண்டன

    இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர்

      எதிர் அமர் செய் பறந்தலை. 

     

    தலைப்பட்டார் எல்லாரும் தனி

      வீரர் வாளில்

    கொலைப் பட்டார் முட்டாதார்

      கொல் களத்தை விட்டு

    நிலைப்பட்ட மெய் உணர்வு

      நேர் பட்ட போதில்

    அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்

      போல் ஆயினார்.

    புறமுதுகிட்டு ஓடும் நிலையில் மேலும் சினங்கொண்ட அதிசூரன் வன்மத்தைக் கக்கினான். தோல்வியால் அவமானத்தில் உழன்றவன், ஏனாதியாரை போரில் வெல்வது கடினம் என்பதைப் புரிந்துகொண்டு, அவரை வஞ்சனையால் வீழ்த்துவது என்று முடிவு செய்தான். மீண்டும் வந்தவன், நம்மால் நம் மாணவர்கள் வீணாக மடிய வேண்டாம். நாம் இருவரும் நேருக்கு நேர் மோதி யார் இந்த பயிற்சி வகுப்பை நடத்தத் தகுதியானவர் என்று முடிவு செய்யலாமே என்றான். நாயனாரும் இதற்கும் ஒப்புக்கொண்டு நாளைக் குறித்தனர். குறித்த நாளில் போரும் துவங்கியது. தீவிரமாக நடந்த போரில் அதிசூரன் தோற்கும் நிலைக்கு வந்துவிட்டான். அப்போது ஏற்கனவே தான் திட்டமிட்டபடி, அதுவரை தான் மறைத்திருந்த திருநீற்று மறைப்பை விலக்கினான் அதிசூரன். அதிசூரன் நெற்றியில் திருநீறு பொலிவதைக் கண்ட நாயனார் உள்ளம் சற்றே தடுமாறியது. கடையனே ஆனாலும் திருநீறு பூசியதால் இவன் சிவபிரானின் அடியவராகிவிட்டானே! இவ்வடியாரைக் கொல்வதா என்று வாளை வீசி எறியத் துணிந்தார். ஆனாலும் நிராயுதபாணியாக நிற்கும் தன்னைக் கொன்ற பாவம் அந்த சிவனடியாருக்கு வந்துவிடக் கூடாதே என்றும் தயங்கியவர், சண்டை போடுவது போல பாசாங்கு செய்தார். அதிசூரனும் தாம் எதிர்பார்த்தது நடந்துவிட்ட களிப்பில் தாம் நினைத்தபடி அவரை வெட்டி வீழ்த்த நாயனாரும் மண்ணில் சாய்ந்தார்.

    கடையவன் தன் நெற்றியின் மேல்

      வெண்ணீறு தாம் கண்டார். 

      கண்ட பொழுதே கெட்டேன் முன்பு

      இவர் மேல் காணாத

    வெண் திரு நீற்றின் பொலிவு

      மேற்கண்டேன் வேறு இனி என்

    அண்டர் பிரான் சீர் அடியார்

      ஆயினார் என்று மனம்

    கொண்டு இவர் தம் கொள்கைக்

      குறி வழி நிற்பேன் என்று.

    என்று அழகுற மொழிகிறார் சேக்கிழார் பெருமான்!

    நாயனார் பெருமான் அருள்வெளியில் எம்பெருமானின் காட்சியைக் கண்டு ஆனந்தம் கொள்கிறார்.  பொய்யாக திருநீறு பூசிப் பாதகம் செய்த அதிசூரன் நரகினை அடைந்து துன்பமுற்றான்.

     

    ஏனாதிநாத நாயனார் புராணம் கூறும் கருத்து!

     

    வேழக் கரும்பினோடு மென் கரும்பு தண்வயலில்

    தாழக் கதிர்ச்சாலி தான் ஓங்கும் தன்மையதாய்

    வாழக் குடி தழைத்து மன்னிய அப் பொற் பதியில்

    ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாதனார். 

    எனும் சேக்கிழார் பெருமானின் கூற்று பெண்மையின் ஒழுக்கத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது. கரும்பு பூக்கும். காய்க்காது. நெல் பூக்கும், காய்க்கும். அதுபோன்று குலமகனானவள் பூத்துக் குழந்தைச் செல்வத்தைத் தருவாள். விலைமகளோ பூப்பாள். ஆனால் மகப்பேறு விருப்போடு பெறுவதில்லை. பெற்றாலும் அதில் சிறப்பில்லை என்கிறார் சேக்கிழார் பெருமான்!

    வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
    போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
    ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
    சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

    நம் சைவ சமயத்தின் ஆகச்சிறந்த சின்னமாகக் கருதப்படுகிற திருநீற்றின் சிறப்பினைப் பற்றி திருஞானசம்பந்தப் பெருமான் பதிகமாகப் பாடியுள்ளார். திருநாவுக்கரசரும், ‘மெய்யெல்லாம் வெண்ணீறு சந்தித்த மேனியான்’ என்கிறார். குழந்தையான திருஞானசம்பந்தப் பெருமான் தொட்டிலில் இருந்த வேளையில் அக்குழந்தையைக் காப்பதற்கு திருநீறை அதிகமாகப் பூசினார்களாம். சேக்கிழார் பெருமான் இதனை, ‘வேற்றுக் காப்பு மிகை என்று நீற்றுக் காப்பே நிறையச் சாத்தி’ என்கிறார்.

    இத்தகைய சிவசின்னமாகிய திருநீறை மெய்யன்போடு பூசுபவர் சிவபதம் அடைவர்.

     “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை – மங்காமற்

    பூசி மகிழ்வாரே யாமாகிற் – றங்கா

    வினைகளுஞ் சாருஞ் சிவகதி

    சிங்காரமான சிவனடி சேர்விரே”

    என்னும் திருமந்திரத்தால் உணரலாம்.

    திருநீற்றுக்கு பஞ்சாட்சரம் என்ற பெயர். வி என்றால் ஒப்பற்ற என்றும், பூதி என்றால் செல்வம் என்றும் பொருள். ‘விபூதி’ என்றால் ‘ஒப்பற்ற செல்வம்’ என்பது பொருள். ஏனாதியார் போன்று திருநீறு பூசிய அடியார் யாவராயினும் அவரைச் சிவமாகவே வணங்கும் பண்புடையவர்கள் இவ்விபூதியைத் தரித்த அடியார்களைக் காணின், அவர்களுக்கும் சிவனுக்கும் பேதம் நோக்காமல் அவர்களை வழிபடுவர்.

    எவரேனும் தாமாக விலாடத்து இட்ட திருநீறும்

    சாதனமும் கண்டால் உள்கி   

           உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்து அடிமைத்

    திறம் நினைந்து அங்கு  உவந்து நோக்கி

           இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு

    ஆட்டாது ஒழிந்த ஈசன் திறமே பேணிக்

           கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர்

    நடுதறியைக் காணலாமே

    என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தால் அறியலாம்.

    சிவன் விதித்தவழி ஒழுகாமல், பொய்த்தவ வேடத்தாற் பயனேதும் இல்லை என்பது,

    வேடநெறிநில்லார் வேடம்பூண்டென்

    பயன் – வேட நெறி நிற் போர் வேட

    மெய் வேடமே – வேட நெறிநில்லார்

    தம்மை விறல்வேந்தன் – வேட

    நெறி செய்தால் வீடதுவாகுமே

    என்றும்

     தவமிக்கவரே தலையான வேடர்

    அவமிக்கவரே அதிகொலே வேடர்

    அவமிக்கவர் வேடத்தாகா ரவ்வேடந்

    தவமிக்கவர்க் கன்றித் தாங்கவொண்ணுதே

    என்றும் திருமந்திரம் கூறுவதைக் காண்கிறோம்.

    சேக்கிழார் நாயனார் பாதகர்கள் மெய்யடியார்களை வஞ்சித்துக் கொன்றார்களே என்று இகழ்ந்தமைக்கும் சிவபத்தியே காரணம் என்பதை அறியலாம்.

    திருச்சிற்றம்பலம்

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 3

    பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

    63 நாயன்மார்கள் வரலாறு – 2. இயற்பகை நாயனார்

    இயற்பகை நாயனார் புராணம்

     

    வானவர் பூவின் மாரி பொழிய மாமறைகள் ஆர்ப்ப

    ஞானமா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்

    ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்

    ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்.

     

    எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து

        ளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட

    வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி

        யாயிழையைத் தரவேண்டி யணைய வையன்

    கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்

        காதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த

    பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்

        பிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் என்பார் சிவபெருமான் மீது மாளாத பற்றும், சிவனடியார்கள் விரும்பிக் கேட்பது மட்டுமன்றி அவர்கள் மனதால் நினைப்பதும் ஏதாயினும் இல்லை என்று கூறாமல் மனமுவந்து வழங்கும் வள்ளற்தன்மையும் கொண்டவர். சிவனடியார்கள்பால் நேசமும், அன்பும் கொண்டு அவர்களை மகிழ்வித்தால் சிவபெருமானாரின் அருள் பெறலாம் என்ற அளவில் சிறந்த பக்தி உடையவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன என்று தெரியவில்லை. உலக இயலுக்குப் பகையானவர் என்பதால் இவர் இயற்பகையார் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் பெருமானார். இவரை முதலில் அறிமுகம் செய்பவரான நம்பி ஆரூரர், இல்லையே எனாத இயற்பகைக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றுகின்றார்.

    ‘பொன்னொடு வந்து கரியொடு ஏகும்’ என்று சங்க காலத்தில் சிறப்பான வணிக நகரமாகத் திகழ்ந்த, சோழநாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தை பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. புகார் எனும் அழகிய துறைமுகப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தில் வணிக மரபில் பிறந்தவர் இயற்பகை நாயனார். அவர் தம் வணிகத் திறமையால் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததால் சிவனடியார்களுக்கு வேண்டுவதனைத்தையும் வழங்குவதே தலைசிறந்த அறமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஐயனின் திருவிளையாடலுக்கு ஆட்பட்டார் இந்நாயனார். சிவனடியார் கோலத்தில் வந்து  இயற்பகையாரின் மாறுபட்ட பக்தியின் திறத்தை உலகறிய வெளிப்படுத்த இறைவனின் திருவிளையாடல்தான் இது.

    அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமையும் எல்லாமும்

    குன்றே அனையாய் எனை ஆண்கொண்டபோதே கொண்டிலையோ

    என்ற மணிவாசகப் பெருமானின் கூற்றுக்கிணங்க வாழ்ந்த இயற்பகையாருக்கு என்னே வந்த சோதனை பாருங்கள்.

    சிவபெருமானின் திருவிளையாடல்:

    சிவபெருமான் ஒரு திருநாளில் சிவனடியார் வேடம் பூண்டு இயற்பகையாரின் வீட்டின் முன்பாக வந்து நின்றார். தம் இல்லம் தேடி வந்திருப்பவர் தாம் எந்நேரமும் பூசித்துக் கொண்டிருக்கும் சிவபெருமானார் என்பதை அறியாத இயற்பகையார், அவரை சிவனடியார் என்று நினைத்து ஆனந்தம் கொண்டு, அவ்வடியார் தன் வாசல் தேடி வந்தது தான் செய்த பெருந்தவப் பயனென்று பணிவுடன் வழிபட்டு வரவேற்றார். சிவனடியாராய் வந்த பெருமானாரும் இயற்பகையாரைப் பார்த்து,

    “நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்பினும் இல்லை என்று கூறாது அள்ளி வழங்கும் உம் வள்ளன்மையைப் பற்றித் தெரிந்துதான் உம்பால் ஒன்றை வேண்டி வந்தோம்” என்கிறார்.

    இயற்பகையாரும், “அடியவரே ஏன் தயக்கம்? எம்மிடமுள்ளதனைத்தும் என் உடமையல்ல. அவை அடியவர்களுக்குரியது என்பதே உண்மை. உரியவர் கேட்டால் பாதுகாவலனாகிய நான் கொடுப்பதில் தயக்கம் என்ன இருக்க முடியும்? என்னிடம் உள்ளது எதுவாகினும் தாராளமாகக் கேட்கலாம். ஐயம் ஏதும் தேவையில்லை” என்றார்.

    அந்த சிவனடியாரும் சற்றே தயங்கியவாறு, ‘‘இயற்பகையாரே, எமக்குப் பணிவிடை செய்ய காதல் உம் மனைவியைத் தாரும்’’ என்றார். அதற்கு இயற்பகை நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து, “தாங்கள் என்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்காமல் என் முன்னால் உள்ளதையே வேண்டியது எனது பெரும்பேறு” எனக் கூறுவதாக சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

    ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே

    அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர்
    நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா

    நங்கைதான் அறியாமையோ? அறியோம்;
    தூய நீறு பொன் மேனியில் விளங்கத்

    தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
    மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர்

    மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்.

    இப்பாடலில் சேக்கிழார் பெருமானின் கவிக்கூற்றை உணர முடிகின்றது. இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் சிவனடியாரின்  இயல்பினைப் பற்றி ஆராய்கின்றார். இவரிடம் இரண்டு மாறுபட்ட இயல்புகள் காணப் பெறுகின்றன. தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறுடன் இப்படி வருங்கால் தமது இணையரான உமையம்மையார் அறிய வந்திருப்பாரோ அல்லது அறியாமல் வந்திருப்பாரோ? ஒருவேளை அவர் அறிய வந்திருப்பாராயின், இவர் இங்குப் பிறர் மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிருக்கமாட்டார். அதேபோல் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அதுவும் இயலாத காரியம். ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்கிறார் சேக்கிழார்.

    இயற்பகையார் தம் மனைவியின் முன் சென்றவர், “இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனம்” என்கிறார். அம்மையாரை ஒரு உயிரற்ற பொருளாக எண்ணி அந்த அடியாருக்குக் கொடுப்பதாகக் கூறியது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கலங்கி நிற்கிறார். எந்தக் கணவனும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்த கணவரின் இந்நிலை கண்டு ஊர் மக்கள் என்ன சொல்லப்போகிறார்களோ என்றும் கலங்கினார். ஆனாலும் தன் கணவனின் மனநிலையைப் புரிந்து கொண்டபின் மனம் தெளிந்ததாக சேக்கிழார் குறிப்பிடுகிறார். அம்மையார் தம் கணவனைப் பார்த்து, “இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என்னுயிர்க்கொரு நாத நீர் உரைத்ததொன்றை நான் செய்யும் அத்தனையல்லாமல் உரிமை வேறுளதோ” என்று வணங்கித் தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச் சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள், திருவினும் பெரியாள்.

    கணவன் சொல்லைக் காக்க முனைந்த மனைவியைத் தாழ்ந்து வணங்கினார் என்ற சொற்களால் சேக்கிழார் பெருமான் நாயனாரின் மனநிலையை நமக்கு விளங்கச் செய்கிறார். திருமகள் உலகில் நல்லவர், தீயவர், பெரியோர், சீலர், சீலமில்லார் என்றெல்லாம் பாரபட்சம் பாராமல் எல்லோரிடமும் சென்று சேர்வாள், என்பதனால் அம்மையாரையும் திருமகளுக்கு ஒப்பாகக் கூறுகின்றார் போலும்.

    கணவனின் வாக்கிற்கிணங்க அடியவரை வணங்கி நின்றார் நாயனாரின் மனைவியார். நாயனாரும் அடியவரைப் பார்த்து, அடுத்து தான் செய்ய வேண்டியது யாது என்று கேட்கிறார். அதற்கு அடியவர், “இந்த ஊரில் உனது உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். நான் உன் மனைவியை அழைத்துச் செல்லும்போது அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனக்கு அச்சமாக இருப்பதால் இவ்வூர் எல்லையைக் கடக்கும் வரை நீயும் எனக்குத் துணையாக வரவேண்டும்’’ என்றார்.
    உடனே மனைவியையும், சிவனடியாரையும் முன்னே போகவிட்டு நாயனாரும் பின் தொடர்கிறார். அந்த வேளையில் வாளொடு வந்து இவர்களைத் தடுத்து நிறுத்திய அவரது உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் சீற்றம் கொண்டு வெட்டி வீழ்த்தியவர், சிவனடியாருக்குக் காவலாக ஊரின் எல்லையிலுள்ள சாய்க்காடு என்ற இடத்தை அடைந்தனர். அத்தருணத்தில்தான் இறைவனே இயற்பகை நாயனாரின் பற்றற்ற செயலைக் கண்டு வியக்கிறார். ‘பொய் திகழ் உள்ளம் இல்லான்’ எனும் நற்சான்றை இறையருள் பெற்றுத்தர மெய்யான அடியாராகிறார் இயற்பகை நாயனார்! சேக்கிழார் பெருமானின் கவிமொழி இதனை அழகாக வெளிப்படுத்துகிறது.

    இயற் பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்!
    அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!
    செயற்கு அரும் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்
    மயக்கு அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்.

    அழைத்த பேர் ஓசை கேளா ‘அடியனேன் வந்தேன்! வந்தேன்!
    பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலித் தடக்கை வாளின்
    இழைத்தவர் ஆகின்றார்’ என்று இயற்பகையார் வந்து எய்தக்
    குழைப் பொலி காதினானும் மறைந்தனன்; கோலம் கொள்வான்.

    சென்றவர் முனியைக் காணார்; சேயிழை தன்னைக் கண்டார்;
    பொன் திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னத்
    தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்;
    நின்று இலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தின்நின்று எழுந்தார்; நேர்ந்தார்.

    திருவிளையாடலை முடித்துக்கொண்ட எம்பெருமான் தமது அடியார் வேடத்தை விடுவித்து வான்மீது வெள்விடை மீது உமையம்மையுடன்  தோன்றியவர், இயற்பகை நாயனாரையும் அவர்தம் மனைவியாரையும் தங்களுடன் வரப்பணித்தார். இருவரும் சிவபெருமானுடன் விண்ணுலகம் சென்றனர்.  இயற்பகையாரின் வாளுக்குப் பலியான அவர்தம் சுற்றத்தார்களும் பொன்னுலகம் சென்றனர்.

     

     இயற்பகை நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    சிவபெருமானார் தம்மிடம் இடையறாத அன்பு பாராட்டும் மெய்யடியார்கள் மீது தாமும் இடையறாத அருள் பாலிக்கும் வள்ளன்மை மிக்க இனியர்.

    கனியினும் கட்டி பட்ட கரும்பினும்

    பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்

    தனிமுடி கவித்து ஆளும் அரசினும்

    இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே.

    எனும் திருநாவுக்கரசு நாயனாரின்  கூற்று இதனை விளங்கச் செய்யும்.

    இறைவன் மீது உண்மையான அன்பு கொண்ட மெய்யுணர்வுடையவர்கள் தம்மிடம் உள்ள சொத்து, சுகம் மட்டுமின்றி பந்தம் கொண்டோரும் கூட அந்த இறையனாருக்கேச் சொந்தம் என்று எண்ணுவதால் அனைத்தின் மீதும் தாமரையிலை தண்ணீர் போன்று ஒரு பற்றற்ற நிலையிலேயே இருக்கின்றனர். முற்பிறவியின் பயனாக இயற்பகை நாயனார் சிவனடியார்களையும் சிவலிங்கமாக எண்ணியே வழிபடும் வழமை கொண்டவராகிறார். அந்த வகையில் இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தன்னை விடவும், அவ்வடியார்கள் அனுபவித்தலில் பெரிதும் விருப்பம் கொண்டவராதலின்  அவற்றை மகிழ்ச்சியோடு அவர்களுக்குக் கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இயற்கைக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் இத்தன்மையாலேயே அவர் இயற்பகை நாயனார் என்றும் அழைக்கப் பெற்றுள்ளார்.

    இவரிடத்துள்ள இவ்வரிய இம்மெய்யன்பை, சர்வ ஆன்மாக்களும் உணர்ந்து உய்யும்படி எடுத்துரைக்கும் திருவுளங்கொண்ட சிவபெருமான், மனைவியினும் இனிய பொருள் பிறிதொன்றும் இல்லை என்பதால்  சிவனடியார் வேடம் தரித்து வந்து அவர் மனைவியையே கேட்கிறார். கற்பினிற் சிறந்து விளங்கும் தம் மனைவியையும் பெருமகிழ்ச்சியோடு கொடுக்க உறுதி கொள்கிறார். இதனால் உலகத்தோரின் பழிப்புரைக்கு ஆளாக நேரிடும் என்பதறிந்தும் அதைச் செய்யத் துணிந்தார். பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட மிகப்பெரிய பாவம் என்பதைக்கூட கருதாமல் தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ என்று தோன்றுவதே இயல்பு.

    இவ்வடியாரின் இத்தகைய இயல்பினை உலகறியச் செய்யும் நோக்கொடு இறைவன், அம்பலத்தாடும் பெருமானார் அத்தகைய வேடம் பூண்டு புறப்பட்டார். மனமுவந்து மனைவியை அனுப்பத் தயாரான நாயனார் மீது கடுங்கோபம் கொண்ட அந்த அம்மையாரின் சுற்றத்தார் வாளுடன் வந்து தடுத்து நிறுத்தப் பார்த்தனர். சமுதாயத்தில் தங்கள் கண் முன்னால் நடக்கும் அதீத கொடுமையான ஒரு நிகழ்வைப் பார்த்து கண்டுங்காணாமல் இருப்பது நியாயமன்று, தங்கள் உயிரைப் பணயம் வைத்தேனும் அதைத் தடுக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்க முனைந்தார் இறைவன் என்பதை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். பாரதி தம் பாஞ்சாலி சபதத்தில், திரௌபதியைக் குழல் பற்றிப் பாதையில் இழுத்துச் சென்ற துச்சாதனனைக் கூடி நின்று வேடிக்கைப் பார்த்த மக்களை,

    நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி இழுக்கையிலே

    நெட்டை மரங்களென நின்று புலம்பினர்

    பெட்டைப் புலம்பல் பிறர்க்காமோ?

    என்று கடிந்து கொள்கிறார். அதுபோல் கண்முன்னால் அநீதி நடக்கும் போது தடுத்து நிறுத்தாமல் இருப்பது ஆண்மைக்கே அழகன்று என்பதையும் விளங்கச் செய்கிறார் சேக்கிழார் பெருமான்.  அந்த வகையில் சிவபெருமானாராலேயே “செயற்கருஞ் செய்கை செய்ததீரனே” என்று வியக்கப்பட்ட இந்நாயனாரின் அற்புத பக்தியினை விளங்கச் செய்கிறார்.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன்  வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    Vallamai in 9th Year

    வல்லமை, 2017 மே மாதம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் [University Grants Commission (UGC) (யுஜிசி)] அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழாக அறிவிக்கப்பெற்றது. 2018 மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பெற்ற பட்டியலிலும் வல்லமை தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், 4305 ஆய்விதழ்களைப் பட்டியலிலிருந்து யுஜிசி நீக்கியுள்ளது. ஆயினும் தமிழ்ப் பிரிவில் வல்லமை நீடிக்கிறது.

    இந்தக் காலக் கட்டத்தில் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை பதிப்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆக்கங்களை வல்லமை வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், இலக்கணம், சமூகவியல், பக்தி, வரலாறு, உளவியல், அறிவியல், இணையம், மொழிபெயர்ப்பு, ஒப்பீடு, பறவையியல், இன வரைவியல், நாட்டுப்புறவியல், கல்வி, இசை… எனப் பற்பல துறைகள் சார்ந்த கூர்நோக்கும் புதிய பார்வையும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

    இவை மட்டுமின்றி, கனடாவிலிருந்து ஜெயபாரதன், அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 700க்கும் மேலான படைப்புகளை நல்கியுள்ளார். கேசவ் அவர்களின் கிருஷ்ணர் ஓவியங்களுக்குக் கிரேசி மோகன், நாள்தோறும் நவரசங்களில் வெண்பா விருந்து படைத்து வருகிறார். தொடர்கள் எழுதி வரும் இன்னம்பூரான் (இந்தியா), நிர்மலா ராகவன் (மலேசியா), அவ்வை மகள் (அமெரிக்கா), நாகேஸ்வரி அண்ணாமலை (அமெரிக்கா), மேகலா இராமமூர்த்தி (அமெரிக்கா), சக்தி சக்திதாசன் (இங்கிலாந்து), ஜெயராம சர்மா (ஆஸ்திரேலியா), முனைவர் சுபாஷிணி (ஜெர்மனி), கல்வியியல், வாழ்வியல் தொடர்களைச் செம்மையாக வழங்கி வரும் க.பாலசுப்பிரமணியன், செண்பக ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் வல்லமையின் படைப்புச் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள். ஆசிரியர் பவளசங்கரியின் தலையங்கங்கள், நம் கவனத்தை ஈர்ப்பவை. பெரும்பாலான தமிழ் மின்னிதழ்களில் தலையங்கம் என்ற பகுதி இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கலாம்.

    மேலும், படக்கவிதைப் போட்டி 161 வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. உலகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் பங்கேற்க, மேகலா இராமமூர்த்தி நடுவர் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி வருகிறார். இந்த வார வல்லமையாளர் விருதினை 270 வாரங்களாக வழங்கி வருகிறோம். கடந்த 50 வாரங்களாகச் சிறப்புறத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் செல்வன் விடைபெற, அந்தப் பொறுப்பினை இளைஞர் கௌதம் ராஜ் ஏற்றுள்ளார். அத்துடன் வல்லமை ஆசிரியர் குழுவில் முனைவர் விஜய ராஜேஸ்வரி, கவிஞர் ராமலட்சுமி ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர்களை வரவேற்கிறோம்.

    வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பினைத் தமிழ் இன்று – கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேமொழி தேர்ந்தெடுத்த வல்லமையாளர்கள் 100 பேர்களின் தொகுப்பும் மின்னூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் வல்லமையாளர்கள் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பெஞ்சமின் லெபோ, முனைவர் சுபாஷிணி, ஜெயராம சர்மா, சுப்ரபாரதி மணியன் உள்ளிட்டோர், தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வென்றதில் உள்ளம் உவக்கின்றோம்.

    ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். வல்லமையின் ஆண்டிராய்டு செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android விரைவில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பினை மாற்ற உள்ளோம். வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதியும் திட்டம் உள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

    இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் விஜய ராஜேஸ்வரி, சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்.

    உங்கள் அனைவரின் ஆதரவுடன் இன்னும் பல முத்திரைகளைப் பதிப்போம். முயற்சி திருவினையாக்கும்.

    Share
  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்!

    வல்லமை நிர்வாகக்குழு – 2018

    ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம் வல்லமை இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இன்று புதிதாக பொறுப்பேற்கும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக, மொழிபெயர்ப்புத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். விஜயராஜேஸ்வரி அவர்களை மகிழ்வுடன் வரவேற்கிறோம். தமிழ் மலையாள மின் அகராதி உருவாக்கம், கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project, Govt.of India ) , மொழியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், பேரா. முனைவர். ச.இராசேந்திரன். 2. கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு, கணினிக்கான இலக்கண வரைவு – இந்திய மொழிகளுக்கிடையேயான இயந்திர மொழிபெயர்ப்புத்திட்டம் (IL- ILMT Project , With Professor Uma Maheshwar Rao at Centre for Applied Linguistics and Translation Studies, Central University of Hyderabad and IIIT-Hyderabad ) உதவி ஆய்வாளர் ( Junior Research Fellow ), முதுமுனைவர். வ.அய்.சு நினைவு திராவிட மொழிகள் பள்ளி, (International School of Dravidian Linguistics, Thiruvananthapuram) திருவனந்தபுரம், போன்ற மிகச்சிறந்த பணி அனுபவங்கள் கொண்ட முனைவர் விஜய ராஜேஸ்வரி நம் வல்லமை இதழ் மென்மேலும் சிறப்புற தம் ஒத்துழைப்பை முழுமையாக நல்குவார் என்று உளமார வாழ்த்தி வரவேற்கிறோம்.

    நம் வல்லமை இதழின் முதல் வல்லமையாளரான திருமதி ராமலட்சுமி அவர்கள் நம் ஆசிரியர் குழுவில் இன்று இணைகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி ராமலட்சுமி அவர்களின் சிறப்பான பங்களிப்புகளையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

    Share
  • சொந்தமண் இழந்தும் நம்பிக்கை இழக்கவில்லை!

    பவள சங்கரி

    தலையங்கம்

    வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு தமிழ் ஈழம் இழந்து 10 ஆண்டுகளுக்கு முன் தாயகத்திற்கு அகதிகளாக வந்து, சென்னை, ஈரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தும், அல்லது அங்கிருந்து வெளியே வந்து தங்கியிருந்தும் கல்வி ஒன்றே தங்கள் நிலையான எதிர்காலம் என்பதை உணர்ந்துகொண்டு மிகச்சிறந்த முறையில் 10 ஆம் வகுப்பில் 92%, 12ஆம் வகுப்பில் 95%, குறிப்பாக பெண்கள் அதிகளவில் வெற்றி பெற்றும், இளநிலை பட்ட வகுப்பில் 500 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றும், முதுநிலை பட்ட வகுப்பில் 250 பேரும், நல்ல தேர்ச்சி பெற்றும், 5 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு நிலையான தங்குமிடமோ, மற்ற வசதிகளோ கிடையாது என்றாலும் தங்கள் எதிர்காலமே கல்வியில்தான் என்பதை மனதில்கொண்டு இந்த உயரிய சிறப்பைப் பெற்றுள்ளதைக்கண்டு தாய்த்தமிழ் நாடே பெருமை கொள்கிறது. தமிழ் ஈழம் செல்ல விரும்புபவர்களுக்கு விமான பயணச்சீட்டு, தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஆகும் செலவுத்தொகை மற்றும் இலங்கையில் விமான நிலையத்திலிருந்து அவர்கள் செல்லவேண்டிய பகுதிவரை அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதும் மகிழ்வான செய்தி. இவர்களுக்கு அங்குள்ள இலங்கை அரசு 6 மாதத்திற்குரிய தேவையான உணவுப் பொருட்களையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளது. இதைத் தவிர்த்து தமிழகத்திலேயே தங்க விரும்புபவர்களை தமிழக மக்களாகவே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. அகில உலக அளவில் இதுபோன்ற அகதிகள் முகாமில் பென்களுக்கு இதுவரை எந்தவிதமான இன்னல்களும் ஏற்படவில்லை என்பதும் மகிழ்ந்து குறிப்பிடத்தக்கது!

    Share
  • OH, INDIA – ஓ, இந்தியா

     

    பவள சங்கரி

    INDIA & OTHER POEMS (KOREAN)

    கொரிய மூலம் :  கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் – கிம் ஜின் -சுப்

    தமிழ் மொழியாக்கம் : பவள சங்கரி

    unnamed (3)

    OH, INDIA
    ஓ, இந்தியா

     

    ஓ, இந்தியா
    வெந்து தணிந்த மண்துகள்களுடன்
    மஞ்சள் பூமி
    ஏழ்மையில் வாடும் சடங்களாய் குழவிகள்
    ஆயினும்
    நிமிர்ந்த நன்னடையும்
    வஞ்சமிலா புன்னகையும்
    தெள்ளத்தெளிந்த நயனங்களும்
    கொண்டோரவர்.
    மெய்மையில் சுகந்தமாய் மலரும்
    கமலமல்லவோ அவர்கள்?

    Share
  • களப்பலி வீரர் சிற்பம்!

    பவள சங்கரி

    DSCN1622

    DSCN1620

    DSCN1616

    DSCN1615

    மூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னை அல்லது கொற்றவைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. நவ கண்டம் என்பர் இதை. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன.

    Share
  • ஐந்தாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    முனைவர் அண்ணாகண்ணன்
    5_five

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மையக் கருவுடன், 2010 மே 16 அன்று தன் முதல் இடுகையை வல்லமை வெளியிட்டது. 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 2014 மே 16 அன்று, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 4 ஆண்டுகளில் வல்லமை ஒட்டுமொத்தமாக 5726 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இவற்றுக்கு 8204 பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன. பல நாடுகளிலிருந்து பல்லாயிரம் வாசகர்கள், இலட்சத்துக்கும் மேலான முறைகள், வல்லமையின் பக்கங்களை வாசித்துள்ளார்கள்.

    2013 மே 16 முதல் 2014 மே 15 வரையிலான இந்த ஓராண்டில் வல்லமை, முக்கியத்துவம் வாய்ந்த பல முத்திரைகளைப் பதித்துள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம்.

    வல்லமையின் தொடர்கள்

    இந்த ஒரே ஆண்டில் வல்லமை, 30க்கும் மேற்பட்ட தொடர்களை வெளியிட்டுள்ளது.

    திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேசி மோகன், வெண்பாவிலும் சந்தப் பாடல்களிலும் தமக்குள்ள தனித் திறனை வல்லமையில் வெளிப்படுத்தியுள்ளார். திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில் அவர் தினந்தோறும் இயற்றி வரும் துடிப்பான, வீச்சு மிகுந்த பாடல்கள், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

    பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய சைவ சமயம் அறிவியல் மையம், ராமஸ்வாமி ஸம்பத் எழுதிய உத்தமன் அலெக்சாண்டர்!.., ராமன் வரும் வரை காத்திரு, தேமொழியின் பிக்கோலிம் புளுகு, மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, புவனேஷ்வரின் மகாபாரத முத்துகள், இவள் பாரதியின் சிறுகை அளாவிய கூழ், நாகேஸ்வரி அண்ணாமலையின் கென்யா பயணம், இஸ்ரேல் பயணம், சு.கோதண்டராமன் எழுதி வரும் பாரதியின் வேத முகம், ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! உள்ளிட்ட தொடர்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன.

    சி.ஜெயபாரதனின் அணுவியல் – அறிவியல் கட்டுரைகள், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், காதல் நாற்பது, பவளசங்கரியின் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! , சுபாஷிணி ட்ரெம்மலின் அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!, இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, சாகர் பொன்னியின் செல்வனின் அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை, சங்கர் ராமனின் நம்பிக்கை.. அதானே எல்லாம்!, செல்வனின் நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! கவியரசு கண்ணதாசன் குறித்த காவிரி மைந்தனின் தொடரும் சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், சச்சிதானந்தம் எழுதும் அறுமுகநூறு, பரம்பொருள் பாமாலை, கே.எஸ்.சுதாகரின் அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும், செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், மேகலா இராமமூர்த்தி எழுதிய புறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள், விசாலம் அவர்களின் இசையும் கோயிலும் உள்ளிட்ட தொடர்கள் மிகுந்த தரமும் நேர்த்தியும் கொண்டவையாய் அமைந்தன.

    மின்னூல்கள் பகுதியில் தேமொழியின் முயற்சியில், குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை நலம் என்ற 60 பகுதிகள் கொண்ட நூல், முழுமையாக இடம் பெற்றுள்ளது.

    போட்டிகள்

    இந்த ஓராண்டில் வல்லமை 4 போட்டிகளை நடத்தியுள்ளது.

    வல்லமை – ஐக்கியா டிரஸ்டு சிறுகதைப் போட்டி

    ஐக்கியா டிரஸ்டுடன் இணைந்து வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியின் மே, ஜூன் மாதங்களிலும் தொடர, வெங்கட் சாமிநாதன் மாதந்தோறும் தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து சிறந்த மூன்று சிறுகதைகளை நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்து அளித்தார். இதன் முடிவுகள் ஆகஸ்டில் வெளியாகின. முன்னர் அறிவித்தவாறு, வல்லமைச் சிறுகதைகள் என்ற தலைப்பில் இவற்றைத் தாரிணிப் பதிப்பகம் நூலாக வெளியிட்டது. இந்தப் போட்டியை எம்முடன் இணைந்து நடத்திய வையவன் அவர்களுக்கு நன்றி.


    புத்தக மதிப்புரைப் போட்டி

    தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. அந்த வகையில் இந்தப் போட்டியை 11.10.2013 அன்று வல்லமையில் நாம் அறிவித்த போது, இதற்கு முன் இத்தகைய போட்டி நடந்ததில்லை என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால், அந்தரவெளிகள் குழுமத்திலும் (18.08.2010) முகநூலில் இயங்கும் டீக்கடைக் குழுமத்திலும் (02.02.2014) புத்தக மதிப்புரைக்கான சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இவையல்லாமல், தமிழின் எந்த நூலுக்கும் விமர்சனம் எழுதலாம் என்ற கூடுதல் சுதந்திரத்துடன், விரிந்த தளத்தில் பொதுவான புத்தக மதிப்புரைப் போட்டியை நடத்தியதில் வல்லமை முன்னோடியாக விளங்குகிறது. இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துவதில் உறுதியாக இருந்த கவிதாயினி மதுமிதா அவர்களுக்கும் சிறந்த மதிப்புரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டி

    வல்லமை வளர்தமிழ் மையமும் – மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து முதல் இணையவழி சர்வதேச அறிவியல் தமிழ்ப் பேச்சுப் போட்டியை (First International Peer Reviewed Scientific Tamil Oration Competition For School Students) நடத்தின; கோவை, மேட்டுப்பாளையம் அருகில் அன்னூரில் அமைந்துள்ள கே.ஜி. சர்வதேசப் பள்ளி மாணவர்கள் 5 பேரின் அறிவியல் தமிழ்ச் சொற்பொழிவை ஒளிப்பதிந்து, யூடியூபில் ஏற்றினோம். 100 நாள்கள் அவற்றைப் பார்த்து மதிப்பிட அவகாசம் அளித்தோம். வல்லமைக் குழுவினர் அவற்றை மதிப்பிட்டு, நான் விரும்பும் வடிவியல் கருவி என்ற தலைப்பில் உரையாற்றிய சுமதியை முதல் பரிசுக்கு உரியவராகத் தேர்ந்தெடுத்தோம். இந்தத் திட்டத்தை அறிவித்த மருத்துவர் செம்மல் அவர்களுக்கும் கே.ஜி.சர்வதேசப் பள்ளி நிர்வாகி மகேஷ் துளசி அவர்களுக்கும் நம் நன்றிகள்.

    Vallamai_oratory_competitio

    கடித இலக்கியப் போட்டி

    அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில், முனைவர் தேமொழி அறிவித்த கடித இலக்கியப் போட்டி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2013ஆம் ஆண்டு மறைந்த அவர்தம் சகோதரி மணிமொழியின் நினைவாக நடத்தப் பெற்ற இந்தப் போட்டியில் 60க்கும் மேலான கடிதங்கள் வந்து சேர்ந்தன. பல புதிய கோணங்களில், நெகிழ்வூட்டும் தருணங்களுடன் இக்கடிதங்கள் அமைந்தன. முதலில் மூன்று பரிசுகள் என அறிவித்தோம். அடுத்து, கூடுதலாக மூன்று ஆறுதல் பரிசுகளைத் தேமொழி அளிக்க முன்வந்தார். நடுவர் பொறுப்பேற்ற இசைக்கவி ரமணன் அவர்கள், தம் பொறுப்பில் கூடுதலாக ஆறு பேருக்குச் சிறப்புப் பரிசுகளை அறிவிக்க, மொத்தம் 12 பேர் பரிசு பெற்றனர். இது, கடித இலக்கியத்திற்கு அழுத்தமான பங்களிப்பாகவும் அமைந்தது. அந்த வகையில் இந்தப் போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்த முன் வந்த தேமொழி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

     
    வல்லமை.காம் ISSN: 2348 – 5531

    வல்லமை.காம், பன்னாட்டுத் தரநிலைத் தொடரியல் எண்ணைப் பெற்றுள்ளது. (International Standard Serial Number – ISSN: 2348 – 5531). இந்த எண்ணைப் பெற்றுள்ள மின்னிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளுக்குக் கல்வித் துறையில் மதிப்பும் மதிப்பெண்ணும் உண்டு. கல்லூரி / பல்கலைக்கழகம் / ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்கள், இத்தகைய இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தால், ஒவ்வொரு கட்டுரைக்கும் பல்கலைக்கழக மானியக் குழு மதிப்பெண் வழங்குகிறது. இது, அவர்களின் பணி வாய்ப்புக்கும் பதவி உயர்வுக்கும் உதவும். இத்தகைய கல்விப் புல முக்கியத்துவத்தை வல்லமை மின்னிதழ் பெற்றுள்ளது. எனவே, ஆராய்ச்சியாளர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்.

    ஃபேஸ்புக் & வாட்ஸ் அப் குழுமம்

    கூகுள் குழுமத்தைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் வல்லமை புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. https://www.facebook.com/groups/682321115112693/; வாட்ஸ் அப், செல்பேசி வலைப்பின்னலிலும் Vallamai – Tamil Minds என்ற புதிய குழுமத்தைத் தொடங்கியுள்ளது. வல்லமை அன்பர்கள், இவற்றில் இணைந்து கலந்துரையாடுமாறு அழைக்கிறோம்.

    ஆசிரியர் குழுவில் மேகலா, தேமொழி

    வல்லமை ஆசிரியர் குழுவில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழாசிரியர் மேகலா இராமமூர்த்தி, முனைவர் தேமொழி ஆகியோர் இணைந்துள்ளார்கள். மேகலா, திருக்குறள், புறநானூறு, பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட பலவற்றில் வாசிப்பும் நேசிப்பும் கொண்டவர். முனைவர் தேமொழி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் வசித்து, திட்ட ஆய்வாளராகவும் பணி புரிந்தவர்; கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறப்புகள் வாய்ந்த இந்த இருவரையும் வல்லமை ஆசிரியர் குழு சார்பில் இனிதே வரவேற்கிறேன். ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள பெருவை பார்த்தசாரதி, பர்வதவர்த்தினி ஆகிய இருவரும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்கள். இவர்களின் துணையுடன் வல்லமை மேலும் ஒளிரும்.

    கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி!

    வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளோம். கண்ணதாசனை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவரது பங்களிப்பு என்ன? உங்களுக்கு அவரிடம் பிடித்தவை என்னென்ன? உங்கள் வாழ்க்கையில் அவரது பாடல்கள், எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இப்படியாக, எந்தக் கோணத்திலும் உங்கள் கட்டுரைகள் அமையலாம். மொத்தப் பரிசு, ரூ.4250. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சார்பாகக் காவிரி மைந்தன் மற்றும் கிரி ஐங்கரன், இதனை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள். வாசகர்கள் இதிலும் துடிப்புடன் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

    புதிய தொடர்கள்

    வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை நாம் தரிசிக்கலாம். இவர், பாரதி, இசை, இலக்கியம், பக்தி, யோகம், ஞானம்.. எனப் பல துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர். இவற்றையெல்லாம் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பாக, இந்தப் புதிய பகுதி அமைகிறது. இது தவிர, கே.ரவியின் கவிதைகள், சு.ரவியின் கவிதை ஓவியங்கள், கேஷவ் ஓவியங்கள் எனப் பலவும் தொடர்ந்து வல்லமையை அலங்கரித்து வருகின்றன.

    புதிய முயற்சிகளுக்கு வல்லமை, சிறந்த களமாக உருவாகி வருகிறது. கருத்துச் சுதந்திரமும் இயல்பான நட்புறவும் ஆரோக்கியமான பின்னூட்டங்களும் இதனைத் தரமான மின்னிதழாக வளர்த்தெடுத்துள்ளன. இதனை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

    புதிய திட்டங்கள்

    வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிந்து, மேலும் அதிகப் பணிகளை ஆற்றத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு நேரம், நிதி, வளங்கள், தன்னார்வலர்களின் உழைப்பு.. எனப் பலவும் தேவை. எனவே, உங்களால் எந்த வகையில் எங்களுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தால், அடுத்தடுத்துத் திட்டமிட வசதியாய் இருக்கும்.

    வல்லமையின் பணிச் சுமை அதிகரித்து வருவதால், புதிய தன்னார்வலர்களை வரவேற்கிறோம். இதழியல் ஆர்வமுள்ள மாணவர்களையும் இல்லத்தரசிகளையும் ஓய்வுபெற்ற ஆர்வலர்களையும் எழுத்தார்வமும் படைப்பூக்கமும் கொண்ட திறனாளர்களையும் ஆவலுடன் அழைக்கிறோம். நுட்பியல் திறனுள்ள அன்பர்கள் ஒத்துழைத்தால், வல்லமைக்கு என ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளை உருவாக்கலாம்.

    நன்றிகள்

    வல்லமையின் இந்த வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. அர்ப்பணிப்பு மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழு, எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன், ஏற்கெனவே நம் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய காயத்ரி பாலசுப்பிரமணியன், கவிநயா உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள், இன்னும் வளர்வோம்.

    Share