63 நாயன்மார்கள் வரலாறு 11. மானக்கஞ்சறார்

 

 

மேலாறு செஞ்சடை மேல்

  வைத்தவர் தாம் விரும்பியது

நூலாறு நன்கு உணர்வார்

  தாம் பாடு நோன்மையது

கோலாறு தேன் பொழியக் கொழுங்

  கனியின் சாறு ஒழுகும்

காலாறு வயல் கரும்பின்

  கமழ் சாறூர் கஞ்சாறூர்.

மானகஞ்சார நாயனார் எத்தகைய புண்ணிய பூமியில் அவதரித்திருக்கிறார் என்பதை சேக்கிழார் பெருமான் வாயிலாக அறியத் தருகிறார். கங்கை ஆற்றினை தம் சடையிலே தரித்துள்ள சிவபெருமானார் விரும்பி உறையும் ஊர் கஞ்சாறு. ஊரின் தன்மையையும், தேனொழுகும் கனிகளின் இனிமையும் நிறைந்த ஊராம்.

வேளாளர் குலம் மிகச் சிறப்புற்றிருக்கும் ஊரும் இதுதான். இந்நாயனார் இக்குலத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சோழ மன்னரின் படைத்தளபதியாகவும் விளங்கியவர். அனைத்திற்கும் மேலாக சிவமே மெய்ப்பொருள், சிவமே சகலமும் என்றுணர்ந்த மிகச்சிறந்த சிவனடியாராகவும் விளங்கியவர். சிவனடியார்களைச் சிவம் என்றே போற்றுவதோடு, மிகச்சிறந்த கொடையாளியாகவும் இருந்த  தகைமையாளர் இந்நாயனார். ஆனாலும் இத்தகைய சிறப்பு வாய்ந்தவருக்கு ஒரு மகவு இல்லையென்ற குறையும் இருந்தது. அதனால் எம்பெருமானை நினைத்து தவம் மேற்கொள்ளவும் செய்தார். பெருமான் கருணையால் மானகஞ்சாறரின் துணைவியாருக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த அப்பெண் திருமணப் பருவத்தை அடைந்தாள்.

நீலகண்டப் பெருமான் மீது மாறாத அன்பு கொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்ற மணமகனுக்கு மணம் பேச முதியோர் சிலர் வந்தனர். மானக்கஞ்சாறரும் இந்தத் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார். பெருமங்கலம் என்ற தமது ஊரிலிருந்து மணமகள் இல்லம் நோக்கி புறப்படுகிறார் மணமகன் ஏயர்கோன் கலிக்காமர். திருமணக்கோலத்தில் மிளிர்ந்த மணமகள் வீடும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. செல்வச் செழிப்பு மிக்க நாயானாரும் தம் செல்வ மகளின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவிற்கு சீரும் சிறப்புமாக நடத்த முடிவு செய்தார். இந்த நேரத்தில்தான் சிவபெருமானாரும் நாயனாரின் சிவனடியார்களின் தொண்டினை உலகறியச் செய்ய அருள்கூர்ந்தார். மணவிழாக் காணப்போகும் இல்லம் நோக்கிப் புறப்பட்டவர் மாவிரதியர் கோலத்தில் நாயனார் இல்லம் வந்து சேர்ந்தார். நாயனாரும் அந்த அடியவரை வணங்கி வரவேற்று உபசரித்தார். அடியார் தம் இல்லம் வந்தது தம் தவப்பயனே என்று மகிழ்ந்திருந்தார். இல்லத்திலிருந்த மனைவி, மகள், உறவினர் என அனைவரையும் அவ்வடியாரின் அடி பணியச் செய்தார்.

அவ்வென்பின் ஒளிமணி கோத்து

  அணிந்த திருத் தாழ்வடமும்

பைவன்பேர் அரவு ஒழியத்

  தோளில் இடும் பட்டிகையும்

மைவந்த நிறக் கேச வடப்

  பூணு நூலும் மனச்

செவ்வன்பர் பவமாற்றுந் திரு

  நீற்றுப் பொக்கணமும்

தந்தையாரின் வாக்கிற்கிணங்க அன்பு மகளான மணமகளும் வந்து அந்த அடியவரின் ஆசியை வேண்டி வணங்கி நின்றாள். அப்போதுதான் அவர் எவரும் எதிர்பாராத ஒன்றைச் சொல்லி அனைவரையும் திகைக்க வைத்தார். அதாவது அப்பெண்ணின் அடர்ந்த, நீண்ட கருங்கூந்தல் பஞ்சவடிக்குப் பயன்படும் என்றுரைத்தார்.

தம் சரணத்து இடைப் பணிந்து

  தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்

மஞ்சு தழைத்து என வளர்ந்த

  மலர்க் கூந்தல் புறம் நோக்கி

அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து அணங்கு

  இவள் தன் மயிர் நமக்குப்

பஞ்ச வடிக்காம் என்றார்

  பரவ அடித் தலங்கொடுப்பார்.

என்பார் சேக்கிழார் பெருமான்.

அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றும் பண்பாளரான மானக்கஞ்சற நாயனார் அவருடைய தேவையைப் புரிந்துகொள்கிறார். மகளின் திருமணக் காலம் என்ற நினைவும்கூட ஏதுமின்றி, ‘இப்பெண்கொடியின் தலை மயிர் எமக்குப் பஞ்சவடிக்குப் பயன்படும்’, என்று சொன்ன நொடியில் மணமகன் வீட்டில் என்ன சொல்வார்கள், மகள் மனதில் என்ன எண்ணம் இருக்கும், மணமகன் ஏதும் சொல்லிவிடுவாரோ என்ற நினைவும் இன்றி சிவனடியாரின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்தார். உடனே ஒரு கத்தியை எடுத்து வந்து, அன்பு மகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியோடு அறுத்து அடியவரிடம் கொடுத்து வணங்கி நின்றார்.

அக்கணமே மாவிரதியர் மறைந்தார். சிவபிரான் உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி திருக்காட்சி அளித்தார். அமரரும் மலர்மாரி பொழிந்தனர். மணப்பெண்ணின் கூந்தலும் முன்போலவே நீண்டு வளர்ந்தது.

அருள் செய்த மொழி கேளா

  அடல் சுரிகைதனை உருவிப்

பொருள் செய்தாம் எனப் பெற்றேன்

  எனக் கொண்டு பூங்கொடி தன்

இருள் செய்த கருங்கூந்தல் அடியில்

  அரிந்து எதிர் நின்ற

மருள் செய்த பிறப்பு அறுப்பார்

  மலர்க் கரத்தினிடை நீட்ட. 

சிவபெருமான் நாயனாரிடம், “அன்பனே நம்பாலும், நம் அடியவர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். நம் புவனத்தில் உமக்கு இடம் கொடுத்தோம்” என்றும் அருள் செய்தார்.

மணமகன் ஏயர்கோன் கலிக்காமர், நடந்ததைக் கேட்டறிந்தவர், வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என்று வருந்தினார். கலிக்காமருக்கும் மானக்கஞ்சாறரின் புதல்விக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. மணமகளும், மணமகனும் தம் ஊர் சென்றனர். மானக்கஞ்சாறரும் சிறப்புற வாழ்ந்து, அடியவர் தொண்டை வழுவாது செய்து சிவபதம் அடைந்தார்.

மானக்கஞ்சாறநாயனார் புராணம் கூறும் கருத்து:

அப் பதியில் குலப் பதியாய்

  அரசர் சேனா பதியாம்

செப்பவருங் குடி விளங்க

  திரு அவதாரம் செய்தார்

சேக்கிழார் பெருமான் சைவ நெறியில் பதிகம் என்ற அமைப்பை உருவாக்கியவர். அதனால் அவர் பாடியது மூத்தத் திருப்பதிகம் எனப்பட்டது. அவர்தாம் பாடிய காவியத் தொண்டர்கள் அனைவரையும் அவதாரம் செய்தார் என்று கூறுவதில்லை. ஆனால் மானக்கஞ்சாற நாயனார் போன்று ஒரு சிலரை மட்டுமே அவதரித்தார் என்கிறார். அவதாரம் என்ற சொல்லுக்கு மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். தூய ஆன்மா இறையருளைத் தங்கி மண்ணுலகில் தோன்றுவதையே அவதாரம் என்பது மரபு. அந்த வகையில் இந்நாயனாரின் பெருமையை நாம் உணரலாம்.

சிவனடியார்கள் விரும்பியதைக் குறிப்பறிந்து கொடுக்கும் பண்பாளர் மானக்கஞ்சாற நாயனார். சிவனடியார்கள் விரும்பியது யாதாயினும், அதனை அவர் கேட்குமுன் அவர் குறிப்பறிந்து கொடுத்தல் மிகச் சிறந்த சிவபுண்ணியமாம். இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மானக்கஞ்சாற நாயனார். மாவிரதி வடிவங்கொண்டு வந்த சிவபெருமான், நாயனாரின் புதல்வியின் நீண்ட கருங்கூந்தலை நோக்கி, இவளது தலைமயிர் நமக்குப் பஞ்சவடிக்காம் என்று அருளிச் செய்தவுடனே, அன்றைய தினம் அவளுக்கு விவாகம் நிகழும் தினம் என்றாலும் பெருமகிழ்ச்சியோடு அவளது கூந்தலை அடியோடு அரிந்து வழங்கிய பெருந்தகைமையே இவரது பேரன்பிற்கு சான்றாம். பொதுவாக மயிர் நீக்குவது அமங்கலத்தின் அடையாளம் என்பார்கள். அதுவும் திருமண நாளன்றே இத்தகைய காரியத்தைச் செய்வது இந்நாயனாரது மெய்யன்பை உணர்த்துகின்றது.

திருச்சிற்றம்பலம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.