சொந்தமண் இழந்தும் நம்பிக்கை இழக்கவில்லை!
பவள சங்கரி
தலையங்கம்
வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு தமிழ் ஈழம் இழந்து 10 ஆண்டுகளுக்கு முன் தாயகத்திற்கு அகதிகளாக வந்து, சென்னை, ஈரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தும், அல்லது அங்கிருந்து வெளியே வந்து தங்கியிருந்தும் கல்வி ஒன்றே தங்கள் நிலையான எதிர்காலம் என்பதை உணர்ந்துகொண்டு மிகச்சிறந்த முறையில் 10 ஆம் வகுப்பில் 92%, 12ஆம் வகுப்பில் 95%, குறிப்பாக பெண்கள் அதிகளவில் வெற்றி பெற்றும், இளநிலை பட்ட வகுப்பில் 500 பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றும், முதுநிலை பட்ட வகுப்பில் 250 பேரும், நல்ல தேர்ச்சி பெற்றும், 5 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு நிலையான தங்குமிடமோ, மற்ற வசதிகளோ கிடையாது என்றாலும் தங்கள் எதிர்காலமே கல்வியில்தான் என்பதை மனதில்கொண்டு இந்த உயரிய சிறப்பைப் பெற்றுள்ளதைக்கண்டு தாய்த்தமிழ் நாடே பெருமை கொள்கிறது. தமிழ் ஈழம் செல்ல விரும்புபவர்களுக்கு விமான பயணச்சீட்டு, தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து விமான நிலையம் செல்ல ஆகும் செலவுத்தொகை மற்றும் இலங்கையில் விமான நிலையத்திலிருந்து அவர்கள் செல்லவேண்டிய பகுதிவரை அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்வதும் மகிழ்வான செய்தி. இவர்களுக்கு அங்குள்ள இலங்கை அரசு 6 மாதத்திற்குரிய தேவையான உணவுப் பொருட்களையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளது. இதைத் தவிர்த்து தமிழகத்திலேயே தங்க விரும்புபவர்களை தமிழக மக்களாகவே ஏற்றுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. அகில உலக அளவில் இதுபோன்ற அகதிகள் முகாமில் பென்களுக்கு இதுவரை எந்தவிதமான இன்னல்களும் ஏற்படவில்லை என்பதும் மகிழ்ந்து குறிப்பிடத்தக்கது!