Blog

  • பெற்றோர் கற்க வேண்டியது

    எஸ் வி வேணுகோபாலன்

    ameமொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது என்று சிந்தித்தார்…கடுமையாகப் போராடி முதல் வகுப்பில் சேர்த்துவிடப்பட்ட மொகலம்மா பிறகு திரும்பிப் பார்க்க நேரவே இல்லை…கல்லூரிப் படிப்பையே அழகாக முடித்துக் காட்டினார். அசையவும், நகரவும் இயலாத ஒரு பெண் பிறகு எத்தனை பேரை அசைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.

    ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மொகலம்மாவின் தாய் போராடி வந்தார். ஒரு கட்டத்தில் மொகலம்மா தனது தாய் முடியாது என்று நினைத்த படிக்கட்டுகளிலும் ஏறத் தொடங்கியது முக்கியமானது. தனது சிற்றூரின் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வரவு செலவு கணக்கு எழுதுவது முதல், எத்தனையோ விதங்களில் தனது படிப்பின் பயனை வழங்கிக் கொண்டிருக்கிறார் மொகலம்மா.

    பெற்றோரின் பங்கு

    தமது குழந்தைகளுக்கான கல்விக்குப் பாடு எடுப்பதில் பெற்றோர் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி பெறுதல் சவால் மிகுந்ததாக மாற்றப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் பெற்றோர் செய்யும் தேர்வு, பெற்றோர் மேற்கொள்ளும் அணுகுமுறை, பெற்றோர் எடுக்கும் முடிவுகள் மிக மிக முக்கியமானவை.

    குழந்தைகளின் மீதான எதிர்பார்ப்பு, குழந்தைகளது எதிர்காலம் குறித்த கலக்கம் போன்றவை பெற்றோர் உள்ளத்தில் ஆதிக்கம் கொள்கின்றன. இதன் பிரதிபலிப்பாக, குழந்தைகள் அவர்களாக என்ன விரும்புகின்றனர், என்ன தேவையில்லை என்று கருதுகின்றனர் போன்றவை குறித்தெல்லாம் பெற்றோர் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. உளவியல் ரீதியாக இரண்டு பக்கங்களிலும் இதனால் நேரும் அதிர்ச்சியும், அதன் தொடர் நிகழ்வுகளும் அதிகம் பேசப்படாது போகின்றன.

    பெற்றோர் பொறுப்பில் நுட்பமான மாற்றங்கள்

    பெற்றோர் பொறுப்பு என்ற அம்சத்தில் கடந்த பத்து இருபது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் நுட்பமான மாற்றங்கள் ஒரு தனி ஆய்வுக்கு உரியவை. புதிய தாராளமய காலத்தின் தாக்கம் இதிலும் இருக்கும் என்பதை விளக்க வேண்டுமா? அது மட்டுமின்றி, ஐம்பதுகள், அறுபதுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்த தலைமுறை பெற்றோர் அவர்களும் கல்வி பெற்று முன்னேறியவர்களாக மாறுகையில் தங்களுடைய குழந்தைகளது கல்வி விஷயத்தில் அவர்களது ஈடுபாடு என்பதன் தன்மை முந்தைய தலைமுறை பெற்றோர் கொண்டிருந்த ஈடுபாட்டின் தன்மையிலிருந்து மாறுபட்டு வந்திருப்பதில் வியப்பில்லை. நாம் இங்கே விவாதிக்க இருப்பது, அந்த ஈடுபாடு என்பது வழிகாட்டுதல்-ஒத்துழைப்பு-பேருதவி என்ற வகையிலிருந்து குறுக்கீடு-தலையீடு-முட்டுக்கட்டை என்கிற இன்னோர் எல்லை வரை பயணம் செய்வது பற்றியதுதான்.

    இன்னும்கூட சிற்றூர்களிலிருந்து முதல் தலைமுறை மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்கல்விக்கும் இன்றும் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சமூகத்தின் தட்டுக்களில் அடுத்த முனையில் உயர் கல்வி பயின்ற மூன்று நான்கு தலைமுறைகளைக் கடந்துவிட்ட குடும்பங்களையும் பார்க்கிறோம். இந்த முரண்பாட்டின் எதிரொலியும் இப்போதைய பெற்றோர் நடவடிக்கைகளில் தென்படுவதைப் பார்க்க முடியும்.

    கல்வி எதற்காக?

    கல்வி என்பது சமூக மதிப்பீடு என்ற காலம் ஒன்று இருந்தது. அது தேவையில்லை, வாழத் தெரிந்தால் போதும், சொத்து இருந்தால் எதையும் சமாளிக்க முடியும் என்ற நிலவுடைமை சமூகத்தின் மிச்ச சொச்ச சிந்தனைகளோடு முட்டி மோதி கல்வியின் வளர்ச்சி ஏற்படவே செய்தது. கல்வி நாகரிகத்தின் அடையாளம் என்ற வரையறையை முன்வைத்தாலும், சமூக பாகுபாடுகளின் தாக்கத்தின்முன் கல்வி பெற்றவர்களும் தங்களை ஒப்புக் கொடுத்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. படிப்பு என்பது வேறு, கால காலமான சமூக வழக்கம் என்பது வேறு. அந்த சமூக வழக்கத்தில் ஊறிய சிந்தனைகளைத்தான் நெஞ்சில் பதித்துக் கொள்ளவேண்டும் என்ற தேர்வு தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகிறது. ஆனால் கல்வி இதற்கான ஒரு வேகத் தடையை நிச்சயம் ஏற்படுத்தவே செய்கிறது. அது விரிந்த விவாதத்திற்கு உட்பட்ட பொருள்.

    இந்தப் பின்புலத்தில் பெற்றோரின் இயங்குதல் வெவ்வேறு முறைகளில் அமைகிறது.

    எந்த மாதிரியான ஊடாட்டம் ஆரோக்கியமானது?

    குழந்தைகள் வளர்ச்சியில் பெற்றோர் என்ன மாதிரியான முறையில் ஊடாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் பலர் ஏராளம் சொல்லியிருக்கின்றனர். மருத்துவ உலகம்-குறிப்பாக உளவியல் மருத்துவம் அருமையான அம்சங்களை சமூக போக்கிலிருந்தும், தனித் தனி அனுபவங்களின் வெளிச்சத்திலிருந்தும் படிப்பினைகளாகவும் கூட வழங்கிக் கொண்டே இருக்கிறது.

    அதற்கெல்லாம் வெகுமுன்பே கலீல் கிப்ரான், அதிரடியாகச் சொன்ன கவிதை மொழியை உலகம் இன்னும் கற்க மறுக்கிறது.

    உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் வாழ்க்கையின் புதல்வர்களும் புதல்வியரும் ஆவர். அவர்கள் உங்கள் மூலம் வந்தவர்களே அன்றி உங்களிடமிருந்து தோன்றியவர்கள் அல்ல.
    உங்களோடு இருப்பதனானேலேயே அவர்கள் உங்களுக்கானவர்கள் ஆகிவிட மாட்டார்கள்.
    உங்கள் அன்பைச் செலுத்தலாம் நீங்கள், உங்கள் எண்ணங்களை அல்ல.
    ஏனெனில் அவர்களுக்கே உரித்தான எண்ணங்கள் அவர்களுக்கு உண்டு….

    என்று விரியும் அந்தக் கவிதை குழந்தைகளின் தனித் தன்மைக்கு குந்தகம் விளைவிக்காத உதவிகளையே பெற்றோர் செய்யக் கேட்டுக் கொள்கிறது.

    நடைமுறையில் ‘சொன்னா சொன்ன பேச்சைக் கேட்கணும் இல்லையென்றால் எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்பதான அணுகுமுறை பெற்றோரிடம் ஆதிக்கம் செய்கிறது. நொடிக்கு நொடி தலையீடு செய்வதும் சரி, கண்டு கொள்ளாமலே விட்டு விடுவதும் சரி ஒரு புள்ளியில் இணைந்து குழந்தைகளின் வளர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    கல்வியைக் குறித்த மட்டில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் இங்கே சற்று காண்போம். இப்போதைய கல்வி முறையின் வேகத் தன்மை, போட்டி உலகம், சம வயதில் உள்ள குழந்தைகளை ஒப்புநோக்கும் பிரச்சனை இவையே அதிகம் கவனிக்கத் தக்க விஷயங்களாக உருப்பெற்று வருகின்றன.

    சலவை எந்திர உளவியல் போக்கு

    பள்ளியில் தொடக்கநிலை வகுப்பில் சேர்த்ததும், இனி அடுத்தடுத்த வளர்ச்சியை இந்த நிறுவன ஏற்பாடே கவனித்துக் கொள்ளும் என்று கருதுகிற தன்மை அதிகமாகி வருகிறது. அவ்வப் பொழுது எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அதனைச் செலுத்தி வருவது; நன்கொடையோ, புத்தகங்களோ, இதுவோ, அதுவோ என்ன கேட்டாலும் கொட்டிக் கொட்டிச் செய்துவிட்டு பள்ளி இறுதி வகுப்பு, பிளஸ் 2, பின்னர் உயர் கல்விக்குத் தகுதியாக வெளியேறி விட்டால் போதும் என்கிற மனப்பான்மை அது! அங்கே என்ன நடக்கிறது; என்னவிதமான கல்வி கிடைக்கிறது; குழந்தையின் பன்முகத் தேடலுக்கு ஊக்கம் பிறக்கிறதா, முடங்கிப் போகிறதா என்ற எதையும் பெற்றோர் அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை.

    மேற்கண்ட அணுகுமுறையை ‘சலவை எந்திர உளவியல்‘ (WASHING MACHINE PSYCHOLOGY) என்ற பெயரால் அடையாளப்படுத்தலாம். துணிமணிகளை தனித்தனியாக எடுத்து, தண்ணீரில் அழுக்கு போக அலசி, சலவைக் கட்டியைப் பயன்படுத்தித் துவைத்து, வெளுத்து, அலசிப் பிழிந்து உலர்த்திய காலம் இப்போது மாறிவிட்டது; பொறுப்பை ஓர் எந்திரத்திடம் ஒப்படைத்து தண்ணீர், சலவைப் பொருள், வெப்ப அளவு, துவைக்க வேண்டிய துணிக்கேற்ற வேக அளவு இவற்றை மட்டும் சரி பார்த்து விசையை அழுத்திவிட்டு நாம் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடலாம். எந்திரம் அதன் வேலையை முடித்தபின் துணியை எடுத்து உலர்த்தினால் போதும். அதிநவீன எந்திரம் கிடைத்தால் அதுவே துணிகளை உலர்த்தியும் கொடுத்துவிடும்.

    இப்படி பட்டும் படாத தன்மை குழந்தைகளை ஆரம்ப நிலையில் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு உயர் கல்விக்குப் போகும் நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான பழியை அவர்கள் மீதே சுமத்துவதில் முடிகிறது. காசு கொடுத்தால் போதும்; அதோடு என் கடமை முடிகிறது என்ற போக்கு. குழந்தைகளது நலனில் உண்மையான பாத்திரம் வகிக்க விடுவதில்லை. மாணவர்களிடம் தோன்றும் முரட்டுத் தனம், தகாத சேர்க்கை, தவறான பழக்க வழக்கங்கள், எந்தத் தீய செயலுக்கும் ஆட்பட்டுவிடும் அபாயம் இவற்றுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் காரணமாகிறது. அருமையான குழந்தைகள் முடங்கிப் போவதும் நேர்கிறது.

    அர்ச்சனா எத்தனை மதிப்பெண் வாங்கினால் எனக்கென்ன?

    இன்னொருபுறம் ஓயாத தலையீடு, ஒப்பு நோக்கல் பிரச்சனை. மதுரை எஸ் பி ஓ ஏ மாணவர் கார்நியோ நிமலன் (தி இந்து: திறந்த பக்கம்:மார்ச் 11, 2012) எழுதியிருந்த கட்டுரையில், “தேர்வுகளில் எனது மதிப்பெண் பற்றிப் பேசுங்கள் என் தந்தையே, அர்ச்சனா எவ்வளவு வாங்கி இருக்கிறாள் என்று எதற்குக் கேட்கிறீர்கள்?” என்று பொரிந்து தள்ளி இருந்தார். போட்டி எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருப்பதில் தவறில்லை. என் பெற்றோருக்கும் அவள் பெற்றோர்க்கும் எதற்கு போட்டி என்று மேலும் எழுதுகிறார் அந்த மாணவர்.

    மதிப்பெண் பட்டியல் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர், 99 மதிப்பெண்கள் வாங்கினாலும் தனது மகள் ஏன் நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்று வாதம் செய்கின்றனர். இது ஏதோ பத்தாம் வகுப்பு காலத்தில் அல்ல, ஏழாம் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கே இந்த சோதனை. கொண்டாட வேண்டிய குழந்தைகளை ஓயாது துரத்தித் துரத்தி வெறுப்படைய வைப்பது மோசமான உளவியல் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.

    மைதானமே இல்லாத பள்ளிக்கூடங்கள்

    குழந்தைகளுக்கு பாடத்தின் மீது மட்டுமே கவனம் வேண்டும் என்ற வகையில், விளையாட்டு நேரத்தை அவர்களுக்கு மறுப்பது அவர்களை வேறு வகையில் தங்களது கேளிக்கைகளைத் தேர்வு செய்து கொள்ளத் தூண்டுகிறது. வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப்படும் பிள்ளைகள் கடைசியில் அலைபேசி, கணினி மூலம் விளையாடும் விளையாட்டுக்களில் மூழ்கி தங்களது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கும் அலைக்கழிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நல்ல மதிப்பெண்களுக்காக விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகளில் சேர்க்கக் கூட தயங்குவதில்லை பெற்றோர்.

    மதிப்பெண்கள் குறித்த பெற்றோரது பதட்டத்தின் மிகப் பெரிய சோக வெளிப்பாடுதான் பெருகிவரும் ‘போர்டிங்’ பள்ளிகள். பல மைல் தொலைவுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர் மாணவர்கள். குழந்தைகளை ஜெயிலில் போட்டு, பின்னர் பெயிலில் எடுத்துப் பார்த்துவரும் பெற்றோர் என்று இதைத் தான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சோகமாக வருணிக்கிறார்.

    கல்வி என்பது மூளைக்கான விஷயம் என்ற பெற்றோரின் தவறான புரிதலால் குழந்தைகளுக்கான கல்வி பலவித வாழ்க்கை அம்சங்களையும் உள்ளடக்கியது என்பது பிடிபடாமலே போகிறது. துள்ளாட்டமான கல்விப் பயணம் வாடி வதங்கிய களைப்பான நகர்த்தலாக மாறிவிடுவதில் பெற்றோரின் வருந்தத் தக்க பங்களிப்பு சேர்ந்திருக்கிறது. அவர்களது போதாமை அல்லது அவர்களது பிடிவாதம் அல்லது அவர்களது பரிதாபத்திற்குரிய குழப்பம் இதற்கு காரணமாகிறது. வறுமை, பொருளாதார நெருக்கடி இவை ஏற்படுத்தும் சிக்கல்கள் தனியே விவாதிக்க வேண்டியவை.

    கசங்கிப் போகும் மலரின் இதழ்களாய்

    unnamedதங்களைப் பெருமைப்படுத்தும் குழந்தைகளின் பெற்றோராக எல்லோரும் இருக்க விரும்புகிறோம். சங்கடமான எந்த இடைச் செருகலையும் நாம் கடந்து போகத் துடிக்கிறோம். பதட்டமான அன்றாட வாழ்க்கை குழந்தைகளின் மீதான சந்தேகமாக வெளிப்படுகிறது. பிள்ளைகள் எந்த விஷயத்தைப் பேச வரும்போதும், நாம் குறுக்கிட்டுக் கேட்கும் அவர்களது தேர்வுகள், மதிப்பெண்கள் குறித்த கேள்விகள் அவர்களது முகத்தில் படரும் வெளிச்சத்தை ஊதி அனைத்துவிடுகிறது. மற்ற குழந்தைகளின் குறும்புகள், வகுப்பறையில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு, சேட்டைகள் பற்றியெல்லாம் காதுகொடுத்து கேட்பதற்கு அனுமதிக்காத வேகமான வாழ்க்கைமுறை ரசனை மிக்க பருவத்தின் அத்தனை இதழ்களையும் ஈவிரக்கமின்றிக் கசக்கிப் போடுவதாகிறது.

    கண்கள் விரிய விரிய அவர்கள் புதிதாகக் கற்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளவரும்போது எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்ற பதிலடி அவர்களது உளவியலைச் சிதைக்கிறது. இதன் பிரதிபலிப்பு அவர்கள் பள்ளி இறுதி வகுப்பில் அல்லது உயர் கல்விக்கான தயாரிப்பில் இருக்கையில் பெற்றோர் ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் எரிந்து விழுவதில் காணப்படுகிறது.

    வேற்று உலக ஜீவராசிகளா?

    பத்தாம் வகுப்பு எட்டுகிற குழந்தையின் பெற்றோர் அந்த நாளிலிருந்து பதட்டமான உடைகளை அணிந்து, வேகமான உணவுவகைகளை ருசித்து, தடுமாற்றமான சாலைகளில், நெரிசல் மிக்க நேரங்களில் நடையாய் நடந்து, குழப்பமான கனவுகளுக்குப் பயந்து தூங்காமலே விழித்திருந்து வேறு ஓர் உலகத்தின் ஜீவராசிகள் மாதிரி நடந்து கொள்ளத் தொடங்குகின்றனர்.

    பள்ளிகளும், நண்பர்களும்,உறவினர்களும் இந்தப் பெற்றோரை வாட்டி எடுப்பது சொல்லி மாளாது. ஹால் டிக்கெட்டை கோவிலுக்குச் சென்று வைத்து அருச்சனை செய்வதிலிருந்து, பெற்றோருக்கு பாத பூஜை செய்வது, தேர்வு நாளன்று பள்ளி வாசலில் கும்பலாகத் திரண்டு சென்று வாழ்த்தோ வாழ்த்தென்று சொல்லி உருட்டி மிரட்டி அனுப்புவது என நடப்பு காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுக் காலங்களில் பெற்றோர் படும் பாடும், அவர்கள் பிள்ளைகளைப் படுத்தி எடுக்கும் பாடும் சித்திரவதை.

    ஒரு காலகட்டம் வரை பட்டப் படிப்புதான் முன்னுரிமை பட்டியலில் இருந்தது. எல்லாரும் பி ஏ, பி எஸ் சி என்று அலைந்தனர். தொண்ணூறுகளின் இறுதியில் எல்லா பெற்றோர்க்கும் பொறியியல் தேவதை கனவில் வரத் தொடங்கினாள். மருத்துவ அம்மன் ஆட்டிப் படைத்தாள். இலக்கியம், சமூக அறிவியல், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற பாடப் பொருள்கள் எதற்கும் விளங்காது போனவர்களுக்கு என்று சொல்லாமல் சொல்லப்பட்டது.

    தனி அனுபவங்களும் பொதுவான படிப்பினைகளும்

    இதன் அவஸ்தைகளும் பெற்றோர்-குழந்தைகள் விவாதத்தில் பெருத்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நிறைய பிள்ளைகள் பாதியில் கல்லூரிப் படிப்பிலிருந்து நின்றுவிடுவது, திணறுவது, தோல்வியடைந்து நொறுங்கிப் போவது என்ற பல பாதிப்புகளை பொது விவாதங்களில் நாம் பேசுவது கிடையாது. அது தனித் தனி நபரது அனுபவம் போலவும், அவரவர் விதி என்பதாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

    கல்வி குறித்த புரிதலில் ஏற்படும் அடிப்படை குழப்பங்களே இத்தனை பிரச்சனைகளுக்கும் தோற்றுவாய். சமூக மனிதர்கள் நாம் என்பதும், கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றப் படி என்பதும், சொந்தத் திறன்-தேடல்-பேரார்வம் கொண்டிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தங்களை வெளிப்படுத்த முடியும் என்பதும், யாரும் யாரோடும் ஒப்பிடத் தக்கவர் இல்லை என்பதும் நமக்குப் பிடிபட்டு விடுமானால் சமூகத்தின் தோற்றம் அதிசயிக்கத் தக்க விதத்தில் உருமாறும்.

    மொகலம்மா அவரது தாய்க்கு ஒற்றைக் குழந்தை அல்ல. ஆனால், படிப்பு வாசனை அற்ற அந்தத் தாய், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், உடல் ஊனமுற்றிருக்கும் மொகலம்மாவுக்குத் தான் கல்வி முக்கியம் என்று கண்டறிந்தார். இன்று அந்தக் குடும்பத்தை மொகலம்மா தனது ஊதியத்தைக் கொண்டு பொறுப்பேற்று நடத்தும் நிலைக்கு வந்துவிட்டார். கல்வியற்ற தாய்க்கு அவரது அடிப்படை மனித இயல்பு உரமூட்டியது. புறக்கணிப்பு, விதி, சாபம் என்ற எல்லா ஊழையும் உப்பக்கம் கண்டு உழைவின்றித் தாழாது முயற்சி மேற்கொண்டு முன்னேறும் துணிவை மொகலம்மாவுக்கு அவரது கல்வி புகட்டியது. இதுவே வாழ்க்கையின் வலிமிகுந்த ஆனால் சுவாரசியமிக்க நம்பிக்கை வழிப் பயணம்.

    *************
    நன்றி: செம்மலர் ஜூன் 2014 இதழ்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 121

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 11: காடுகாண்காதை

    இடைப்பட்ட வழி

    ”முன்பு கூறிய இரு வழிகளிலும்
    நீவிர் செல்லவில்லையென்றால்                                                                திரௌபதி for kaadukaan kaathai
    இடைப்பட்ட செவ்விய வழியொன்று காணப்படும்.
    அவ்வழி செல்லுங்கள்.

    அவ்வழிதனில்
    தேன் வடியும் பூக்களையுடைய சோலைகளும்,
    ஊர்களும், காடுகளும்
    இடையிடையே காணப்படும்.
    அவற்றைக் கடந்து சென்றால்
    ஆங்கே அரிய வழியொன்று தென்படும்.

    அங்கே துன்பம் துடைக்கும்
    தெய்வம் ஒன்று உள்ளது.
    அவ்வழியில் செல்பவர்களை
    அச்சுறுத்தாது அத்தெய்வம்;
    என்றாலும்,
    கண்டவர் நடுங்காத வண்ணம்
    அழகான தோற்றம் கொண்டு
    அவர்களை மயக்கிப்
    பயணம் தொடரவிடாமல் தடுத்திடும்.

    அதற்கு மயங்கிவிடாமல்
    நீங்கள் தொடர்ந்து சென்றால்,
    பல கிளைவழிகளைத் தன்னுள் அடக்கியிருக்கும்
    ஒன்றியிருக்கும் இடைப்பட்ட வழியான
    மதுரைப் பெருவழி காண்பீர்கள்.
    அவ்வழியை மேற்கொண்டு செல்லுங்கள்.

    இந்நிலவுலகையளந்த நெடுமுடி கொண்ட
    எம் தலைவனாம் திருமாலின் அடிகளைக்
    கண்டுதொழ நானும் போக வேண்டும்”
    என்றான் மாங்காட்டு மறையோன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  141 – 149

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:

    http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section30a.html

     

    Share
  • அ..ஆ..இ..

    மாதவன் இளங்கோ

    மனிதனின் இடுப்புச் சுற்றளவு – 0.001 கிலோ மீட்டர் (என்று வைத்துக்கொள்வோம்)

    பூமியின் சுற்றளவு – 40075 கிலோமீட்டர்
    வியாழனின் சுற்றளவு – 448969 கிலோமீட்டர்
    சூரியனின் சுற்றளவு – 4368175 கிலோமீட்டர்
    ரைஜலின் சுற்றளவு – 340717650 கிலோமீட்டர்
    மு-செபேயின் சுற்றளவு – 2839313750 கிலோமீட்டர்
    கேனிஸ் மேஜோரிசின் சுற்றளவு – 6202808500 கிலோமீட்டர்

    இப்படி விரிந்துகொண்டே போகிறது பிரபஞ்சம்…

    மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த நட்சத்திரத்தை விட 6202808500000 மடங்கு சிறிய இந்த மனிதனாகிய எனக்கு ஏன் இவ்வளவு அ..ஆ..இ.. இன்னொரு மனிதனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து?

    அகம்பாவம்… ஆணவம்… இறுமாப்பு…!

    அந்த மனிதன் ஒருவேளை அந்த நட்சத்திரத்தை விட ஒரு 6202808500000.01 மடங்கு சிறியவனாக இருப்பானா?

    தூசு நான்!

    ஒருநாளும் என்னை கேலி செய்ததில்லை பிரபஞ்ச அன்னை என் சிறுமை கண்டு!

    எனக்கு ஏன் இவ்வளவு அகம்பாவம்.. ஆணவம்.. இறுமாப்பு..?

     universe

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(29)

    -செண்பக ஜெகதீசன்

    மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
    விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.
              (திருக்குறள் -624: இடுக்கண் அழியாமை)

     

    புதுக் கவிதையில்…                                                  bullock cart reached home

    கரடுமுரடான பாதையிலும் வண்டியைக்
    கலங்காது இழுத்துச் செல்லும்
    காளைமாடு…

    இத்தகு
    இயல்புடை மாந்தரிடம் வரும்
    துன்பமும்
    துவண்டிடும் துன்பப்பட்டே…!

    குறும்பாவில்…

    கடும்பாதையிலும் வண்டியை இழுத்துச்செல்லும்
    காளை போன்றோரிடம் வரும்
    துன்பமும் துன்பப்படும்…!

    மரபுக் கவிதையில்…

    கல்லும் முள்ளும் நிறைந்திருக்கும்
         கரடு முரடாம் பாதையிலும்,
    நில்லா திழுத்தே வண்டியுடன்
         நீண்ட தூரம் சென்றுவரும்
    வல்லமை மிக்க காளையொத்த
         வலியரைத் தேடி வந்துசேரும்
    தொல்லை தந்திடும் துன்பமதும்,
         துன்பப் பட்டுப் போய்விடுமே…!

    லிமரைக்கூ…

    பழுதான பாதையிலும் வண்டியிழுக்கும் காளை,
    அத்தகையோரின் துன்பமும்
    துன்பமுறும், அன்னவரைச் சேர்ந்திடும் வேளை…!

    கிராமிய பாணியில்…

    காளகாள வண்டிக்காள
    காடுமேடு போறக்காள,
    கரடுமொரடு பாதயிலும்
    கச்சிதமாப் போவுங்காள…

    இந்தக்
    காளபோல மனுசங்கிட்ட
    கஸ்டம்வந்தா கஸ்டப்படுமே
    கவலவந்தா கவலப்படுமே
    கண்ணுலபடாம ஓடிருமே…!

    காளகாள வண்டிக்காள
    காடுமேடு போறக்காள…!

     

    Share
  • மன்னி வீடுபோய்ச் சேர்ந்தாள்….

    இசைக்கவி ரமணன்

    து அதிகாலை நேரம். ஒரு மூன்றரை மணி இருக்கும். நான் வாசல் அறையில், ஒரு சோபாவில் படுத்திருக்கிறேன். இயற்கை உபாதை. எழுந்து, பின்கட்டுக்குச் செல்லவேண்டும். செல்லும்போது, ஏதோ என்னை ஈர்த்ததாக உணர்ந்தேன். வலதுபக்கம் திரும்பினால், மீனாட்சி அம்மன் படம். ஒற்றைச் சுடர் குத்துவிளக்கு. அதன் எதிரே, ஒரு மனையில், ஊசிபோல், நேர்மையாளனின் நெஞ்சுபோல், சற்றும் வளையாமல் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கிறது. மூடிய விழிகள். இடதுபுறத் தோளில் புரளத் துடிக்கும் ஈரக் கூந்தல். பொடிசாய் ஒரு மூக்குத்தி, சுடர்போல் அல்லாமல் அடக்கமாக மின்னுகிறது. பண்டைக் காலத்துத் தவமுனியின் மனைவிபோல், தவம் செய்வோர்க்கு வரம் அருளும் அம்பிகை போல், உடலைச் சுற்றி ஒரு மென்மையான ரோஜா நிறம் கலந்த வெண்மை ஒளியோடு உட்கார்ந்திருக்கிறாள் மன்னி.

    துரையில் நான் தனியே இருந்தபோதும், எனக்குத் திருமணம் ஆன பிறகும், மன்னியின் தல்லா குள வீட்டிலும், பிறகு “க்ருபா சித்தம்” என்னும் விஸ்வனாதபுரத்துச் சொந்த வீட்டிலும் நான் கழித்த பொழுதுகள் பொன்னானவை.

    aசுப்புலஷ்மி என்ற பெயர் எனக்குப் பிடிபடவே இல்லை. அவள், மன்னி. அப்படி அவளை அழைப்பதுதான் அழகு, முறை. கொடுமைக்கார சாவித்ரி அத்தையின் மூத்த மருமகள். கணவர் திரு. கிருஷ்ணமூர்த்தி. அவரை ஜகல் அத்தான் என்றால்தான் எங்களுக்குப் புரியும். அவரும் என் அப்பாவும் அந்தரங்க சிநேகிதர்கள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். சாந்தி, லலிதா, சுந்தர்.

    ன்னிக்கு, எவர் மூலமாகவும், எதன் மூலமாகவும் இறைவனைப் பற்றிச் சிந்திப்பதிலும், பேசுவதிலும், கேட்பதிலும்தான் வாழ்க்கையின் தலையாய ருசியாக இருந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான ரசனைகள் உண்டு. மன்னிக்கு ஒரேயொரு ரசனைதான். இறைவன்! இந்த தெய்வ ரஸம் அவளுடைய ஊனினை உருக்கி உள்ளொளியைப் பெருக்கி இருந்தது. அவளைப் பார்த்தால், இவள் சாப்பிடுவாளா என்பதே சந்தேகமாக இருந்தது. சுவாசத்தைத் தவிர அந்த தெய்வக் கூட்டில் வேறெதும் இல்லை என்றே தோன்றியது. கொஞ்சூண்டு சாப்பிடுவாள்; ஆனால், அதை ரசித்து ரசித்து, அதை வழங்கிய கடவுளை நன்றியோடு நினைந்து நெகிழ்ந்து, போதுமென்று நிறுத்தித் தண்ணீர் குடித்துவிடுவாள்.

    அவள் என்ன செய்தாலும், அது தெய்வமே செய்தது போல அவ்வளவு நேர்த்தியாகவும், தூய்மையாகவும், உயர்ந்த ரசனை மிக்கதாகவும் இருக்கும். மாவடு போடுவாள். ரெண்டு வருஷத்துப் பழைய வடுவும் கடுக்கென்று இருக்கும். அல்வா கிண்டுவாள். அமிழ்தக் கோப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அமரர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வருவார்கள். இதைவிட இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னும்படிச் செய்வதுதான் அவள் இயல்பு. ‘செய்கையில் நேர்த்தியே யோகம்.’ ‘செய்வன திருந்தச் செய்.’ இந்த வாக்கியங்களுக்கு முழு உதாரணம் மன்னி.

    ந்த ரசனையின் சாரம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும் இயல்பாக இறங்கி இருந்ததை நான் அனுபவித்திருக்கிறேன். சாந்தியின் நாட்டியம். ஆட மாட்டாள், அபிநயிப்பாள். மிதப்பாள். நகர்வாள். ஒரு மாலை நேரத்து மரத்தடியில், அவள் “கிருஷ்ணா நீ பேகனே பாரோ!” என்னும் பாடலுக்கு அபிநயம் செய்ததை என் அக்காக்களோடு சேர்ந்து நான் வியந்து பார்த்தேன். கோலக் குழலுடன் நீல நிறத்துக் கண்ணன் அவளை அன்புடன், கொஞ்சம் பனித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை, அப்போது நான் குழந்தையாகவே இருந்ததால் என்னால் உணர முடிந்தது. ஒரு பிறந்த நாள் வாழ்த்தென்றால், பட்டுத் துணியில், அழகான கையெழுத்தில், ஆத்மார்த்தமான கவிதை வரிகளை எழுதி, அதைச் சன்னமான குரலில் வாசித்து, மகிழ்ந்து பரிசளிப்பாள்.

    அவளுடைய தங்கை துர்கா என்னும் லலிதாவின் படிப்புக்கு அளவே கிடையாது. மதுரை டாக்டர் எஸ். ராமகிருஷ்ணனின் செல்ல மாணவி.

    சுந்தர் பெருங்குரலோன். கடும் உழைப்பாளி. தேசியம், மார்க்சியம், பெளதிகம் எல்லாம் அத்துப்படி. மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவன். பெங்களூர் டாடா இன்ஸ்டிட்யூடில் சூப்பர் கண்டக்டிவிடிக்காக பி.ஹெச்.டி. எடுக்க முயன்று, பிறகு அதைக் கைவிட்டு, அமெரிக்காவில் குழந்தைகள் கொண்டாடும் ஆசிரியனாக விளங்குகிறான். அவன், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்துக்கொண்டிருந்தபோது, வெள்ளம் வந்தது. படகில் போய்ப் பலரையும் மீட்டிருக்கிறான். அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது என்று, பெங்களூரிலிருந்து சைக்கிளில் மதுரைக்கு வந்தவன் அவன்!

    ன்னிக்கு எல்லாவற்றுக்கும் எப்போதும் நேரம் இருந்தது. தண்ணீர் பிடிப்பது, சமையல் செய்வது, ஊறுகாய் போடுவது, தியானம் செய்வது, படிப்பது, கேட்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, கோயிலுக்குத் தவறாமல் செல்வது, விரும்பி விரும்பி விருந்தினர்களை உபசரிப்பது, இன்னும் எத்தனை எத்தனையோ பணிகள். அவற்றைச் சுமையாகக் கருதாமல், சுவைத்துச் சுவைத்தே செய்தாள்.

    வள், துன்பத்தை எப்படி எதிர்கொள்கிறாள் என்று சோதித்துப் பார்க்கத்தானோ என்னவோ, ஆண்டவன் அவளைப் பலவித சோதனைகளால் தாக்கினான். வங்கியில் நல்ல பதவியில் இருந்த கணவர், ஒரு வழக்கில் சிக்கி நிலையை இழந்தார்; அது பரவாயில்லை; கண் பார்வையை இழந்தார். சாந்தி, இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, கணவனால் கைவிடப்பட்டாள்; அவளும் கண்பார்வையை மெல்ல மெல்ல இழந்தாள்; இறுதியில் புற்று நோய்க்கு சமீபத்தில்தான் பலியானாள்; லலிதாவின் படிப்புக்கும் அழகுக்கும் வேலையும் கிடைக்காமல் விவாகமும் நடக்காமல் ஆண்டுகள் சென்றன. இவை போதாதென்று, மாமியாரான சாவித்ரி அத்தையின் கடும் வசவுகள்.

    ”மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி” என்று பாரதி சொன்னது போல, அத்தனை துன்பங்களுக்கும் மத்தியில், இனிமை குன்றாமல் இருந்தாள்; இறைவனை நாடிக்கொண்டே இருந்தாள்; இன்முகத்துடன், வருவோர்க்கெல்லாம் அமுதனைய உணவிட்டு மகிழ்ந்தாள். சுந்தரத்தின் மிருதங்க வாத்தியார், வகுப்பு முடிந்தவுடனேயே, “இன்னிக்குப் பக்க வாத்தியம் என்ன?” என்று விசாரிப்பார். சாதாரண இட்டிலியை, ஒரு மகாராணியாக உயர்த்திவிடும் மன்னியின் வியஞ்சனத் தோழிக் கூட்டம்! இன்று புகழ்பெற்று விளங்கும் திரு பிரணதார்த்திஹரன், மன்னி வீட்டில் அடிக்கடி ஆஜர்! எல்லாம் மன்னியின் கைவண்ணம்தான்!

    வெளியூரில் இருக்கும் சுந்தரத்திற்காக, மாதாமாதம் அவனுடைய நட்சத்திர நாளன்று, மீனாட்சி கோயிலுக்கு நடந்தே போய் அர்ச்சனை செய்வாள். அவன் நினைப்பு மேலிடும்போது, அவனுக்குப் பிடித்த இனிப்பு வகையைச் செய்வாள், நான் அன்றைக்கென்று பார்த்து அவள் வீட்டுக்குச் சென்று நிற்பேன். “எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?” என்று கிண்டல் செய்தபடி, நம்மைக் குளிப்பாட்டித் தூய்மை செய்யும் அன்புடன் அதை அள்ளி இடுவாள்.

    சுந்தரம் தோசை தின்ன உட்கார்ந்தால், ரெண்டடுப்பு; ரெட்டைக் கல். சத்தமே இல்லாத ஒரு பரபரப்பு அந்தச் சமையலறையில் நிலவும். ஒரு கட்டத்தில், மன்னி, “சுந்தரா! பாதி மாவு ஆயிடுத்துடா…” என்பாள் மெதுவாக. சுந்தரம் மிகவும் ஒத்தாசையாக, “கடைசி ஏழும்மா” என்பான். அப்படி ஒரு பதிலை நான் எங்கும் கேட்டதில்லை. அவன் சொன்னது சரிதான் என்று மகிழ்ந்த அப்படி ஒரு தாயையும் நான் எங்கும் கண்டதில்லை!

    என் மனைவியின் சீமந்த வளைகாப்பை அவள்தான் தன் வீட்டில் நடத்தினாள்.

    வள் குறைப்பட்டுக்கொள்ள ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால், துன்பங்களைப் பரிசாகப் பணிவோடு ஏற்றுக்கொண்டு, ஆண்டவனை வெட்கப்படச் செய்தாள். என்னை ஒரு சகாவாகவே நடத்தி வளர்த்தாள். ஆம், நான் அவளால் வளர்க்கப்பட்டேன் என்பது மிகையல்ல. நான் அவளோடு கழித்த நேரம் கொஞ்சமாக இருந்திருக்கலாம். ஆனால் அதன் தரம், அதனால் என் மீது படிந்த தெய்வீகம் இதை நான் எப்போழுதும் நன்றியுடன் நினைப்பேன் மன்னி! இறுதிவரை, அவள் இறையனுபவத்தையே நாடி வாழ்ந்தாள்.

    என்னிடம் கடைசியாகப் பேசும்போதும், அவள் இதைத்தான் தெரிவித்தாள். “மன்னி! நீ பழுத்த பழம். அது உனக்குத் தெரியவில்லை. நீ சாகமாட்டாய் மன்னி! இறைவன் உன்னை மரியாதையோடு உனக்கு நோகாமல் இந்த உடம்பிலிருந்து உன்னை அழைத்துச் செல்வான். அதை நீ உணர்வாய்,” என்று நெஞ்சாரச் சொன்னேன். அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டு, கண்மல்க, “ரமணா!” என்று தொண்டை அடைக்க, என் கைகளில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். என்னால் தாங்க முடியவில்லை…

    துன்பத்தை ஒரு குறையாகக் கருதாத, சோதனைகளை ஒரு பொருட்டாக மதிக்காத, எத்தனை இடர்கள் வந்தாலும் இறைவனை இடைவிடாமல் நன்றியோடு நினைத்துக்கொண்டே இருந்த, உடல், உயிர். மனம் ஒருசேரக் கலந்து தினந்தினம் விருந்தினரை உபசரித்த, அதிர்ந்து ஒருவார்த்தை பேசாத, காதே கேளாத போதும், இலக்கியம், இறைவன் என்று நல்ல வார்த்தைகளைக் கேட்பதிலேயே ஆர்வம் கொண்ட, அன்பன்றி வேறேதும் அறியாத, உத்தமிகள் எத்தனை பேரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

    அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒருத்தியின் முழு அன்புக்குப் பாத்திரமானவன் நான்! மன்னியை யாரோடும் ஒப்பிட முடியாது. தன்னுடைய அறிவை அப்படியே புறந்தள்ளி முந்திவந்த அவளுடைய பணிவு, கடவுளைப் பதற வைத்திருக்கும்.

    வள் விரும்பியபடியேதான் அவள் விடைபெற்றுச் சென்றுவிட்டாள். பீஷ்மரைப் போல, ரதசப்தமி நாளுக்காகக் காத்திருந்து, அன்பான மகனின் அருகாமையில், வலியின்றி வான்கலந்தாள். தேவர்கள் கண்ணீர் சிந்தினர். தெய்வம் சற்றே குற்ற உணர்வில் குமைந்தது. குடும்பத்திலிருந்து, கண்ணியத்தின் உருவாரமொன்று நீங்கிவிட்டது.

    வையம் ஒரு வரத்தை இழந்தது.

    சுந்தரா! அம்மா போய்ட்டாடா…

    நன்றி : அமுத சுரபி

    Share
  • ஜனநாயகம்

    பவள சங்கரி

    தலையங்கம்

    1989ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி, பெய்ஜிங், டியானமென் (Tiananmen) சதுக்கத்தில் மாபெரும் போராட்டம் நடந்தது. சுதந்திரத்திற்கு ஆதரவாகப் போராடிய பல ஆயிரம் மாணவர்களை தங்களுடைய இரும்புக் கரம் கொண்டு கொன்று குவித்து அந்தச் சுதந்திரப் போராளிகளை நசுக்கினர். அதன் பிறகு இந்த 25 ஆண்டு காலத்தில் எந்த விதமான போராட்டங்களோ, ஜனநாயகம் பற்றிய பேச்சோ இல்லாமல் கவனமாக பார்த்துக்கொண்டனர். ஜனநாயகத்திற்காகப் போராடிய அந்த மாணவர்களை நினைவுகூர வேண்டிய காலமிது. அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் விடுதலைக்காகப் போராடி ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டு வந்து தலைவரானவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள். இன்று பாரக் ஒபாமா அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு சாதாரண தனி மனிதனும் தலைமைப் பொறுப்பில் வர முடியும் என்று காட்டிய அமெரிக்காவின் ஜனநாயகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் ஆட்சி நடைமுறையில் இருப்பினும், அங்கு இருப்பது மன்னராட்சி முறை. அதாவது, மகாராணி, அவருடைய மகன், பேரன் என்று பரம்பரையாக ஆட்சி செய்யும் முறையே உள்ளது. அதனுடைய காமன்வெல்த் நாடாகிய ஆஸ்திரேலியாவில், இங்கிலாந்து அரசியாரின் பிரதிநிதி தலமையில்தான் ஆட்சி நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கும் சுய ஆட்சி போராட்டங்கள் நடந்து அது தோல்வியைக் கண்டது. தாங்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வாழ்வதையே விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.

    மாபெரும் ஜனநாயக நாடான நம் இந்தியாவிலும் ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் பரம்பரை ஆட்சி நடைபெற்றது. காந்தியடிகள் கைகாட்டுதலால் பிரதமரான நேரு, அவர்களுக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி, அவருடைய மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி என்று வரிசையாக ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு இந்த காங்கிரசு கட்சியை கலைத்துவிடலாம், ஒவ்வொரு தலைவரும் அவரவர்கள் கொள்கையின் மூலம் மக்களுக்குப் பணி செய்து ஆட்சி செய்ய வரட்டும் என்ற நிலையை தொடராமல் விட்டதால் பரம்பரை ஆட்சி வந்தது. ஆனால் இன்று நம்முடைய இந்திய ஜனநாயகம், மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி ஒரு சாதாரண தனி நபர் இந்தியாவை ஆட்சி செய்யும் அளவிற்கு வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதற்காக நம் இந்திய ஜனநாயகத்திற்கும், உயர்திரு மோடி அவர்களுக்கும் நம் பாராட்டுகள். பாராளுமன்றத்தில் இரண்டே உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு கட்சி இன்று ஆலமரமாக வளர்ந்து வரலாறு படைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த ஜனநாயகத்தால் பிரதமர் மோடி அவர்களுக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை மனதில்கொண்டு மக்களுக்காகப் பணியாற்றினால் மக்கள் அவர்களை காலத்திற்கும் மறக்காமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வாய்ப்பை அளிப்பார்கள் என்பது உறுதி. காங்கிரசு பேரியக்கமே என்றாலும் இன்றைய மோசமான தோல்வியால் துவள வேண்டியதில்லை. உடனடியாக, நல்ல மக்கள் தலைவரை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் உண்மை. மீண்டும் அடி மட்டத்திலிருந்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய இந்த நேரத்தில் தோல்விக்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் மக்களுக்குப் பணியாற்ற ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் காங்கிரசு கட்சியின் நிலை கேள்விக்குறி ஆகிவிடும் அபாயம் உள்ளது என்பதே நிதர்சனம்.

    Share
  • திருமால் திருப்புகழ் (101)

    கிரேசி மோகன்

    The Lord's foot rising upto the skies (emphasised with a line) during the Vamana avatar. Brahma washes his feet, the water of which flows down as the Ganga. Keshav
    The Lord’s foot rising upto the skies (emphasised with a line) during
    the Vamana avatar. Brahma washes his feet, the water of which flows down as the Ganga. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    —————————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    —————————————————

    Krishnapremi series. #krishnafortoday - Keshav
    Krishnapremi series. #krishnafortoday – Keshav

    நீல யமுனையில், நீந்திய கோபியர்,
    சேலைப் புதையலை சேகரித்தோய், -நாளை,
    சபையில் துரோபதை, சோகம் களைந்து,
    அபயம் அளிக்கத்தா னே….(113)

     
    நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை,
    கருத்துக்கு கொள்மனமே கீதை, -சிரத்துக்குள்,
    சீர்மல்கும் சீதரனை, சிந்திக்க ஜீவன்கண்,
    ணீ ர்மல்க ஆன்மாவா கும்….(114)
    நிவேதனம்
    ————–

     
    திருக்கண் ணமுது, திரள்கின்ற வெண்ணை,
    பருப்பு,தயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து,
    அண்டாவில் சாறு, அதிரசம், சீடை,முறுக்கு,
    உண்டேனுன் நாமம் உரைத்து….(115)

     
    ஒருவர் படுக்க, இருவர் அமர,
    வருகை புரிந்தவரால் நிற்க, -ஒருயிரவில்,
    பொய்கைபேய், பூதத்தார் பின்னிப் பிணைந்திடச்,
    செய்த மழையோன் சரண்….(116)

     
    பாங்கி முதற்கொண்டு, பாமாக்கள், ருக்மணிகள்,
    தாங்கிய திண்தோள் மணிவண்ணா, -சாங்கிய,
    யோகமகள் பாதாதி, கேசமதை நீயுரைக்க,
    வாகனமாம் புள்ளேறி வா….(117)

     
    பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
    சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
    எங்கும் திகழ்வோனை ஏத்து….(118)….கிரேசி மோகன்….

    ———————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/2013_01_01_archive.html

     

    Share
  • நிற்கிறேனா? நடக்கிறேனா?

    இசைக்கவி ரமணன்

    Man-treadmill_cmyk_flat2-1024x682

     

    நின்ற இடத்தில்தான் நிற்கின்றேன்
    நில்லா தெங்கோ நடக்கின்றேன்
    என்றிக் கூத்து முடிந்திடுமோ?
    எப்படித் தானிது விடிந்திடுமோ?

    நெற்றியில் வியர்வை உயிர்க்கிறது
    நிலத்தை நனைக்கத் துடிக்கிறது
    வற்றிக் கிடந்த நெஞ்சத்தில்
    வயிரக் கனலொன் றெழுகிறது

    ஒரே இடத்தில் நின்றபடி
    ஓயா தெப்படி நடக்கின்றேன்?
    ஒரே இடத்தில் நடந்தபடி
    தொலைவை எவ்விதம் கடக்கின்றேன்?

    பாதம் விரைந்த காரணத்தால்
    பாதை விளைந்த நாள்போக
    பாதை கீழே விரைகிறது
    பாதம் அதனால் அசைகிறது

    பாதை நிற்கப் போகிறதா?
    பாதம் நிற்கப் போகிறதா?
    ஏதும் முடிவொன் றிதற்குண்டா?
    இதனைத் தான் தவம் என்கிறதா??!!

    31.05.2014 / சனிக்கிழமை / 09.55

    Share
  • சென்ற இடமெல்லாம் (தொலையும்) செருப்பு

    — எஸ் வி வேணுகோபாலன்

    வாழ்க்கை அனுபவம்: சென்ற இடமெல்லாம் (தொலையும்) செருப்பு

    Kolhapuri-chappalsமந்தைவெளி அம்மனுக்கும் எனக்கும் இருந்த உடன்படிக்கை யாருக்கும் தெரியாது. எத்தனை நாள் செருப்பை கோவில் வாசலிலேயே மறந்து போட்டுவிட்டு அருகே இருக்கும் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது நான் மூன்றாவது வகுப்புதான். எனது கால் அளவும், செருப்பளவும் சிறியது தான். இருக்கட்டுமே, ஒரு நாள், இல்லை ஒரே ஒரு நாள் திருடு போனதுண்டா… மாலையில் வீடு திரும்புகையில்,  இந்தாடா எடுத்துப் போட்டுட்டுப் போடா என் ராசா என்று சொல்வது மாதிரி அம்மனே காப்பாற்றி வைத்திருப்பாள் ஜோடி செருப்பை.

    ஆனால் செருப்பை கவன பிசகாக எங்காவது விட்டுவிட்டுத் தேடுவது, அல்லது தொலைப்பது என்பது எனது மரபணுவில் உள்ள பிரச்சனை என்பது உலகோருக்குத் தெரிய மறுக்கிறது. மாணவப் பருவத்தில் காசி விஜயம் மேற்கொண்ட போது, காசி விசுவநாதர் கோவில் வாசலில் எத்தனையோ முறை விட்டது ஒருபோதும் தொலையக் கிடையாது. தமிழர்கள் தங்குவதற்காக நம்மவர்கள் அங்கே சென்று கட்டி வைத்திருக்கும் சத்திர வாசலில் ஒரே ஒரு முறை கழற்றி வைத்தது, அடுத்த நொடியே காணமல் போய்விட்டது. வெளியே சொல்ல முடியுமா?

    ஆனால் செருப்பு தொலைத்த விதங்களில் இரண்டு மிகவும் ருசியானவை. இரண்டும் இரண்டு கவிதைகள். நாங்கள் அப்போதுதான் சென்னை ரங்கராஜபுரம் பகுதியில் ஓர் அவுட் ஹவுஸ் பகுதியாக இருந்த மிகச் சிறு வீட்டைச் சொந்தமாக்கிக் கொண்டு குடியேறி இருந்தோம். அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சி அந்த வீட்டை வாங்கியதில். மாமரங்கள். தென்னை மரங்கள். சுற்றிலும் சின்னஞ்சிறு செடிகள் போட இடம். அந்தக் குறுந்தோட்டப் பகுதியில் அழகான கிணறு. என்று அம்மாவுக்கும் அந்த வீடு கொள்ளையாகப் பிடித்தமாகிவிட்டது.

    அந்தத் தோட்டத்தில் கிணற்றடியில் அரை வட்ட சிமிண்டுப் பூச்சின் மீது ஒரு துணி தோய்க்கும் கல். எனது காலை நேரம் அங்கே நின்று பல் துலக்குவதும், பின்னர் குளிக்கப் போகுமுன் துணி தோய்க்க அங்கே போய் நின்று கொண்டு திரைப்பாடல்களை சத்தமாகப் பாடியபடி துணிகளை வெளுத்தெடுப்பதுமாகக் கழிந்து கொண்டிருந்தது.

    ஒரு ஞாயிற்றுக் கிழமை நண்பகலைத் தொடும் நேரத்தில் நான் பி பி ஸ்ரீநிவாசாக மாறிக் கொண்டிருந்தது தெரியாமல் எனக்குப் பின்புறம் சுவர் தாண்டி ஏதோ வந்து விழுந்த பெருஞ்சத்தம். திரும்பிப் பார்த்தால் பதினான்கு வயது கூட சொல்ல முடியாத ஒரு சிறுவன். காலில் ஒரே இரத்தம். என்னை அச்சத்தோடு பார்த்தபடி, தத்தித் தத்தி நடந்து வந்தான். “என்னப்பா, யாரு நீ, எங்கிருந்து ஓடி வர்ற…எதுக்கு சுவர் எகிறி குதிச்ச?” என்று கேட்டேன்.

    “சார், எங்க மாமா என்ன அடி அடின்னு அடிச்சுத் துவைச்சிட்டாரு சார்…தப்பி ஓடி வர்றேன்…குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க சார்” என்றான். பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. பி பி எஸ் பாட்டைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சமையல் அறைக்கு ஓடினேன். என்ன ஏது என்று கேட்டுக் கொண்டே வந்த  அம்மாவிடம்,”பாவம் சின்ன பையன்…மாமா அடிச்சாருன்னு ஓடி வந்து குதிச்சிருக்கான் நம்ம வீட்டுக்குள்ள…தண்ணி தாகம் பாவம்” என்றபடி தோட்டத்திற்குப் போனேன். ஆனால் …பையனைக் காணோம்.

    எங்கே போயிருப்பான் என்று உள்ளே போய் தண்ணீர்ச் செம்பை வைத்துவிட்டுப் பார்த்தபோது, வாசல் வழியாக மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்கள் கழித்து மூன்று நான்கு பேர் ஓடி வந்தனர். “சார் சார், ஒரு பொடிப் பையன் உங்க காம்பவுண்ட் வழியாத் தானே குதிச்சான், எங்கே அவன்?” என்றனர். ” நீங்கதான் அவன் மாமாவா…பாவம், ஏன் போட்டு அடிக்கிறீங்க..ரத்தம் சொட்டச் சொட்ட வந்தானே.. “என்றேன்.

    “மண்ணாங்கட்டி, யாருய்யா சொன்னது நான் அவனுக்கு மாமான்னு. திருட்டுப் பய சார். எதையோ திருட எங்க வீட்டுக்குள்ள புகுந்தான். பார்த்துக் குரல்  கொடுத்ததும்,அப்படியே உங்க காம்பவுண்ட் சுவத்துல ஏறி குதிச்சிருக்கான். அங்கே பொத்தி வச்சிருக்கிற கண்ணாடிச் சில்லு குத்திக் கிழிச்ச காலில் இருந்து வந்த ரத்தமாயிருக்கும் சார் அது” என்றார் வந்தவரில் ஒருவர். போகட்டும் போ என்று அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்து பார்த்தால், வீட்டு முகப்பில் விட்டு வைத்திருந்த செருப்பைக் காணவில்லை.. சரிதான் பொடிப் பையன் அன்போடு அந்தச் செருப்பையும் நகர்த்திக் கொண்டு போய்விட்டான் என்று தெரிந்தது. அப்போதும், பாவம் தண்ணீர் குடிக்காமல் போய்விட்டானே என்ற வருத்தமே அதிகம் இருந்தது.

    அதைவிட அருமையான செருப்புத் திருட்டுக்கு ஏமாற நான் திருவான்மியூர் சென்று குடியேற வேண்டியிருந்தது. அந்த வீட்டுக்கு இரண்டு பக்கம் வாசல்படி. முதல் நாள் இரவுதான் புது ஜோடி செருப்பை வாங்கி வந்திருந்தேன். முன்பக்க அறையின் ஓரம் இருந்தது அது. மறுநாள் அதிகாலை வழக்கம்போல், தண்ணீர்க் குழாயில் நீர் பிடித்துக் குடங்களைக் கொண்டு தரும் வேலைக்காரப் பெண்ணுக்காக ஒரு பக்க வாசல் கதவைத் திறந்து வைத்தேன். அப்படியே தரையில் கீழே உட்கார்ந்தவன் சொக்கித் தூங்கிவிட்டேன். விழித்தெழுந்து பார்த்தபோது இரண்டு குடம் தண்ணீர் பத்திரமாயிருந்தது. புது ஜோடி செருப்பு போயே போய்விட்டது.

    அது பிரச்சனை இல்லை. எனது மாமனாருக்கு நான் செருப்பை ஏமாந்து திருட்டுக் கொடுத்தது பற்றி விளக்கக் கடமைப் பட்டிருந்தேன். “தெரியல சார்…யாரோ வந்து எடுத்துப் போய்விட்டான்” என்றேன். அவருக்கு அடாத கோபம். உடனே எனது நாத்திகம் தான் அவருக்குத் துணைக்கு நின்றது – என்னைக் கடிந்து கொள்வதற்கு. வீட்டுக்கு நடுவே நின்றுகொண்டு , “ஒரு பயலும் இங்கே சாமி கும்பிடறதில்ல…ஒரு பூஜை, புனஸ்காரம் எதுவும் இங்கே நடப்பதில்ல…அதான் செருப்பு போச்சு. கொஞ்சமாவது பயபக்தி இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா” என்றார் உரத்த குரலில்.

    “நானாவது கோயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன்..இன்னும் என்ன எல்லாம் நடக்குமோ?” என்றபடி இன்னொரு வாசல் பக்கம் சென்றார். தனது செருப்பை எடுத்துப் போட்டுக் கொள்ளச் சென்றவர் நெருப்பை மிதித்தவர் மாதிரி துடித்தார். அவரது ஜோடி செருப்புக்களும் சேர்ந்தே காணாமல் போயிருந்தன.

     
     
     
     
    நன்றி: தமிழ் இந்து
    sv.venu@gmail.com
     
     
     
     

    படம் உதவி:  http://blog.zodomo.com/7-kinds-of-shoes-every-woman-must-own/mojris-and-kolhapuri-chappals-2/, http://blog.zodomo.com/wp-content/uploads/2012/03/Mojris-and-Kolhapuri-chappals-2.jpg

    http://kids.baps.org/storytime/bharatthegemofloyality.htm, http://kids.baps.org/storytime/photo/bharatthegemofloyality.jpg

    Share
  • திருமால் திருப்புகழ் (100)

    கிரேசி மோகன்

    Krishna for today: the surrender of Brahma. Water colour.  Keshav
    Krishna for today: the surrender of Brahma. Water colour. Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ——————————————————-

    Gajendra Moksha 02
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    Krishna- New forever series. Acrylic on paper.  Keshav
    Krishna- New forever series. Acrylic on paper.
    Keshav

    முதலைவாய் சிக்கி, மதகளிறு ஆதி,
    முதலைவா வென்றைக்க, மூன்றில் -முதலாய்,
    கருடன் அமர்ந்து, கஜேந்திரனைக் காத்த,
    புருடனைப் போற்றல் பிழைப்பு….(107)

    மூண்ட சமர்தனில், மாண்ட உறவுகள்,
    மீண்டெழுந்து கண்ணனை கெக்கலிக்க, -பூண்டோடு,
    பாயாசம் சேர்ந்தாற்போல், வெற்றியில் வாடைவர,
    ஆயாச மானா னவன்….(108)

    முழங்கால் முடிச்சேறி, மொட்டையிட்டு மாலை,
    தொழுங்கால் துயரம் தொலையும், -விழுங்கிஆல்,
    தன்னில் மிதந்த, தவசுப்ர பாதனவன்,
    முன்னில் அவிழும் முடிச்சு….(109)

    நாமடைதல் சிற்றின்பம், நாமாதல் பேரின்பம்,
    நாமாதல் நாமடைய நாடுவீர், -நாமா
    வளிசொல்லி, வேணு விட்டலனை வாழ்த்தி,
    களிகொள் அடியார்தம் கூட்டு….(110)

    நாவல் நிறத்தனே, நாலாயிரம் போற்றிடும்,
    காவலில் தோன்றிய கண்ணனே, -ஆவலால்,
    விட்டகன்றாய் அத்வைதம், வந்தாய் விசிஷ்டனாய்,
    வெட்டுநீ துண்டிரெண்டு நாம்….(111)

    நீலம் அரவணைக்க, நிர்மூலம் ஆகிடும்,
    காலம் இடம்பொருள் கொள்கைகள், -கோல,
    விடமுறங்கி ஆலில், விளையாடும் பிள்ளை<
    உடனிருக்க உற்சாக ஊற்று….(112)

    ——————————————————————————————————————

    Share
  • மந்த்ராலயம்

    கே.ரவி

    1980-களில் இசைக்கவி ரமணன் எழுதிப் பாடி எங்கள் குழுவில் மிகப் பிரபலமான பாடல். பல்லவியில் ஹூங்காரமாக ஒரு ஹம்மிங்! அதற்கே வசப்பட்டு ஒரு போதையில் நாங்கள் எல்லாரும் அதையே ஹம் செய்து கொண்டிருப்போம். இந்தப் பாட்டும் என் இசையமைப்பில் (மெட்டு அப்படியே ரமணன் போட்டது. பின்னணி இசை மட்டும் எனது) அமரத்வனி இசைப்பேழையில் ராஜுவின் குரலில் பதிவானது. (அமரத்வனி பேழை 1987 ஆகஸ்ட் மாதம் ம்யூஸிக் அகடமியில் திருமதி ஹேமமாலினி முன்னிலையில் திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.)

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய பாடலை, கே.ரவியின் பின்னணி இசையில், ராஜகோபால் குரலில் இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam_new3.mp3

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய இதே பாடலை அவர் மகன் ஆனந்த் பாடுகிறார். அதனை இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam-Ananda.mp3

    ======================================

    என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம் – ம்ம்ம்ம்
    என்நேரமும் உன்நாமமே சங்கீர்த்தனம்images
    அந்தநாள் பாலைவனம் – உன்
    அன்பிலே ப்ருந்தாவனம் – என்
    அன்னை உன்னில் கனவும் நினைவும் துயிலும்
    (என்மனம்)
    பனித்த கண்கள் குவிந்த கைகள்
    பாதிக் கண்கள் திறந்த பண்கள்
    தனித்த வனத்தில் தாயைத் தேடும்
    மானைப் போல மருளும் நெஞ்சம்
    இனியும் பாதை தேடுவேனோ
    இமையை மறந்தும் மூடுவேனோ
    மலரைத் தேடிப் புலர்ந்த வானம்
    சரணம் சரணம் ராகவேந்த்ரம்

    நினைத்ததில்லை நெகிழ்ந்ததில்லை
    நீண்ட பாதை நடந்ததில்லை
    கனத்த நெஞ்சம் உனது பாதம்
    கனவில் கூடத் தொழுததில்லை
    கங்கையோடு பொங்கும் போது
    கண்கள் அழுத சுவடும் ஏது
    நான்விழுந்த கரையின் ஓரம்
    நாணலாகும் ராகவேந்த்ரம்
    (என்மனம்)

    (ரமணன்)

     

    கே.ரவி

    Share
  • திருமால் திருப்புகழ் (99)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பாக்கள்)….
    ———————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

     

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    மனைவிமக்கள் சுற்றத்தார், மீது பொழிந்தாய்,
    அணைதிறந்த வெள்ளமாய் அன்பை, -மனமே,
    விழலுக்(கு) இறைத்தநீர் வீணாமே , கண்ணன்,
    கழலுக்குப் பாய்ச்சதில் கொஞ்சம்….(101)
    மதிலரங்கக் கோயில், தனிலுறங்கும் மாலே,
    விதிநெருங்கும் வேளை வருமுன், -பதிலளிப்பாய்,
    தேனடைக்குள் தேனியாய், நீயிருக்க என்னுள்ளே,
    நானெதற்கு வீணாய் நவில்….(102)

     

    மெய்யே அகலாக, மேவுமுயிர் நெய்யாக,
    உய்யும்ஒரே ஆன்மன் ஒளியாக, -அய்யநின்,
    ஆரா தனையல்லால், வேறே துமெண்ணாத,
    சீரான வாழ்வில் செலுத்து….(103)

     

    முக்திமார்க ஆனந்தம், சத்தான சித்தாகும்,
    யுக்தியுடன் பூமிக்கு வந்துவிட்டால், -பக்திமார்க,
    பாதைக்கு அப்பனாகும்; பத்தினியே ஆனாலும்,
    சீதைக்கு சித்தப்பா ராமன்….(104)

     

    முலைகனத் தாயை, அலைக்கழிய விட்டு,
    கொலைகுண பூதனை கொங்கை, -மலைசுவைத்தாய்,
    அந்நஞ்சைப் பாம்பின்மேல், ஆடி ஜெரித்தவன்பால்,
    நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….(105)

     

    முரணெனப் பட்டாலும், மூலமே நின்னை,
    வரவழைக்கக் கண்டேன் வழியை, -இரணியன்போல்,
    இல்லை இறையென்று, சொல்லி இரையாக,
    மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து….(106)

     

     

    ——————————————————————————————————————

    .

    Share
  • மன நல ஆலோசனை

    மன நல ஆலோசனை

    கேள்வி பதில்கள் :

    கேள்வி : 5

    எனது தோழி என்னைச் சில காலம் அண்ணா என்று அழைத்தாள். நானும் அப்படியே இருந்தேன். ஆனால் போகப் போக எங்களுக்குள் அன்பு அதிகமாகி ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய முடியாத வண்ணம் உள்ளோம். ஆனால் நண்பர்கள் வட்டாரத்தில் எங்களை அண்ணன் தங்கை என்று நம்புகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?

    பதில் :

    புதிதாய் பார்த்துப் பழகும் ஒருவரை முறை சொல்லி அழைப்பது நம் கலாச்சாரம். என்றாலும் முறைக்காக அழைப்பது உணர்வு ரீதியாக அப்படியே  இருப்பதில்லை. உங்கள் இருவரின் உணர்வுகள் காதலாக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறொன்றுமில்லை. உங்கள் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து கொடுத்து இருவரும் உங்கள் நிலையை  அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். புரிந்து கொள்பவர் நண்பர்களாக தொடரட்டும். புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை உண்மையாக புரிந்து கொள்வதே முக்கியம்.

    கேள்வி : 6

    நானும் என் கணவரும் வேலைக்குப் போகிறோம். என் 8 வயது மகன் உறவுக்காரப் பெண் ஒருவரின் பராமரிப்பில் இருக்கிறான். அந்தப் பெண் எங்கள் வீட்டோடு இருக்கிறாள். அவள் என் மகன் வீட்டிலிருந்து பணத்தைத் திருடுவதாகக் கூறினாள். ஒரு நாள் இதை நானும் கண்டுபிடித்தேன். அவனிடம் இதைப் பற்றி கேட்டு கண்டிக்கலாமா? கண்டித்தால் பிரச்சனை அதிகமாகுமா?

    பதில் :

    குழந்தை பணத்தை எடுத்ததை தெரிந்து கொண்டு உடனடியாக அவனை அடித்தோ, திட்டியோ கேட்காமல் இருந்ததிலிருந்து உங்களின் பக்குவமான மனப்பான்மை தெரிகிறது. இதே பக்குவத்துடன் குழந்தையிடம் மென்மையாக தனிமையில் இதைப்பற்றி கேளுங்கள். பணம் அங்கே இருக்கிறது எனவே எடுத்துக் கொண்டேன் என்பதாக அவன் பதில் இருந்தால் பணத்தை ஆங்காங்கே போட்டு வைப்பது உங்கள் தவறு. தெரியாமல் எடுத்திருந்தால் அது திருட்டு அப்படி செய்யக் கூடாது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அவன் எதற்காக எடுக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டு அவன் தேவையை நீங்களாக பூர்த்தி செய்யுங்கள். குழந்தைகள் பணத்தைத் தானாகக் கையாள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவனுக்குப் புரிய வையுங்கள். அவன் செய்வது தவறு ஆனால் அதை மாற்றிக் கொள்ளலாம் என்பதை அவனுக்கு பக்குவமாகப் புரிய வையுங்கள். போதுமான அன்பு கிடைக்கவில்லையென்றாலும் கூட சில குழந்தைகள் பெற்றோருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய முற்படும். எனவே அவனுடன் அதிக நேரத்தை செலவு செய்யுங்கள். அன்போடு கூறினால் குழந்தைகள் சுலபமாக திருந்தி விடுவார்கள்.

     கேள்வி :7

    என் குழந்தை (வயது 3) வீட்டில் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான். தொல்லை செய்து அடித்துதான் ஊட்ட வேண்டியுள்ளது. அதுவே உறவினர் நண்பர் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கு எதைக் கொடுத்தாலும் அலைந்து சாப்பிடுகிறான். இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

    பதில் :

    நீங்கள் அவமானமாக  நினைப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. குழந்தைகள் வீட்டில் சாப்பிடும் போது பொதுவாக ஒரே மாதிரியான உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். உங்கள் ரசனை  மற்றும் தேவைக்கேற்ப உணவை சமைத்து அதை ஊட்டுவீர்கள். அது குழந்தைகளுக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் வெளியில் செல்லும் போது வெளியே செல்கிறோம் என்ற குஷியான மன நிலையில் குழந்தைகள் இருப்பார்கள். மற்றொன்று  மற்ற வீடுகளில் அவர்களின் உணவு மற்றும் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருக்கும் போது குழந்தைகள் அதை விரும்பி உண்பார்கள். எவ்வளவு விலையுர்ந்த பொம்மையாக இருந்தாலும் சிறிது நாளில் தூக்கிப் போட்டு விட்டு உடைந்து போன பழைய பொம்மைக்காக குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் வளரும் வயதில் புதிது புதிதாய் கற்கவும் அனுபவிக்கவும் விரும்புவார்கள். எனவே குழந்தையின்  ரசனைக்கேற்ப உணவை வித்தியாசமாக தயாரித்து வித விதமாய் பரிமாறுங்கள். நிறைய பளிச்சென்ற நிறங்கள் உணவில் (காய்கறிகள், பழங்கள், பருப்புகள் மூலம்) இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வடிவங்களை வித்தியாசமாக (வடை, சப்பாத்தி வட்டமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?) செய்து கொடுங்கள். குழந்தைகளுக்காக சிறிது மெனக்கெட்டால் போதும், ”என் அம்மா கொடுத்தா தான் சாப்பிடுவேன்” என்று உங்கள் குழந்தை சொல்லும்.

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 6

    – சி. ஜெய பாரதன்

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை –6

    Triple Parrots

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 21Mukkonakkilikal - 22Mukkonakkilikal - 23Mukkonakkilikal - 24

    Share
  • புதிய தலைமுறையின் புதிய நிகழ்ச்சி!

     செல்வரகு

    சினிமா 360 டிகிரி

    (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு)

     puthu

    செய்தி தொலைக்காட்சியான புதியதலைமுறையில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “சினிமா 360டிகிரி” சனிக்கிழமைகளில் இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு,முக்கியமான திரைப்படங்கள்,திரையுலக பிரச்சினைகள்,சாதனைகள்,சந்திக்கும் சோதனைகள் என பலதரப்பட்ட கோணங்களில் அலசி ஆராயும் தொகுப்புகள் ஒளிபரப்பாகிறது.

    puthu1

    balaji

    ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னணி நட்ச்சத்திரங்கள் மற்றும் சாதிக்க காத்திருக்கும் புதுவரவுகள் நடிக்கும் புத்தம் புதிய படங்களின் கலைஞர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் பங்குபெறும் சிறப்பு நேர்க்காணல் இடம்பெறும்.தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்ச்சத்திரங்கள் மட்டுமின்றி,பாலிவுட் பிரபலங்களான ரண்பீர் கபூர்,ஜான் ஆப்ரஹாம்,ஸ்ரீதேவி உள்ளிட்டோரும் பங்கு பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியினை பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.

    Share