நிற்கிறேனா? நடக்கிறேனா?
இசைக்கவி ரமணன்
நின்ற இடத்தில்தான் நிற்கின்றேன்
நில்லா தெங்கோ நடக்கின்றேன்
என்றிக் கூத்து முடிந்திடுமோ?
எப்படித் தானிது விடிந்திடுமோ?
நெற்றியில் வியர்வை உயிர்க்கிறது
நிலத்தை நனைக்கத் துடிக்கிறது
வற்றிக் கிடந்த நெஞ்சத்தில்
வயிரக் கனலொன் றெழுகிறது
ஒரே இடத்தில் நின்றபடி
ஓயா தெப்படி நடக்கின்றேன்?
ஒரே இடத்தில் நடந்தபடி
தொலைவை எவ்விதம் கடக்கின்றேன்?
பாதம் விரைந்த காரணத்தால்
பாதை விளைந்த நாள்போக
பாதை கீழே விரைகிறது
பாதம் அதனால் அசைகிறது
பாதை நிற்கப் போகிறதா?
பாதம் நிற்கப் போகிறதா?
ஏதும் முடிவொன் றிதற்குண்டா?
இதனைத் தான் தவம் என்கிறதா??!!
31.05.2014 / சனிக்கிழமை / 09.55