Blog

  • கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி

    கடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    சூரிய மின்சக்தி சேமிக்க,
    நூறு மெகாவாட் பேராற்றல் உடைய
    ஓரரும் பெரும் மின்கலம்
    தாரணியில் உருவாகி விட்டது
    வாணிபப் படைப்புச் சாதனமாய்!
    பசுமைப் புரட்சிச் சாதனையாய்
    சூழ்வெளித் தூய புது எரிசக்தி!
    மீள்சுழற்சிக் கனல்சக்தி!
    பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்
    பிரபஞ்சக் கொடை வளமாய்
    தாரணிக்கு வற்றாத அளவில்
    வாரியம்  அனுப்பும் மின்சக்தி!
    கடல்நீரைக் குடிநீராக்கின்
    குடிநீருக்கும் பஞ்ச மில்லை!
    வானூர்தி விண்ணில் பறக்குது!
    பரிதி சக்தியால்!
    எரி வாயு இல்லாமல் பறக்கும்!
    பகலிலும் இரவிலும் பறக்கும்!
    பசுமைப் புரட்சியில் உதித்தது!
    பாதுகாப்பாய் இயங்குவது!
    நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில்
    நான்கு காற்றாடி உந்துது!
    பனிரெண் டாயிரம் சூரியச் செல்கள்
    பரிதிச் சக்தி அளிக்கும்!
    ஒற்றை விமானி ஓட்டுவது!
    ஒருநாள் பறந்த ஊர்தி
    இருபது நாட்கள் தொடர்ந்து பறந்து
    அட்லாண்டிக் கடலைக் கடந்து,
    அகில உலகினைச் சுற்றி இறங்கியது!
    நூறாண்டுக்கு முன் பறந்த
    ரைட் சகோதரர் முதல் ஊர்தி போல்
    வரலாற்று முதன்மை பெறுவது !

    TIDAL ENERGY TECHNOLOGY PRESENTED BY:- SOUMYA RANJAN DAS SNEHASIS PANDA SATYABRATA NAYAK SITUPARNA SAHU BADRI NARAYAN SAHU

    “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

    “2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

    டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

    See the source image

    சூழ்வெளித் தூய பசுமைப் புரட்சி மீள்சுழற்சி எரிசக்தி வளங்கள்

    சூரியனின் கதிர்க்கனலும், கடலின் அலை ஆற்றலும் உள்ளவரை உலக மானிடருக்கு எரிசக்தி தேவைக்கும், குடிநீர் உற்பத்திச் செழுமைக்கும் பஞ்சம் ஏற்படாது.  பெருமளவில் கதிர்ச்சக்தியில் மின்சாரம் எடுத்துச் சேமிப்பதிலும், கடல்நீரில் உப்பு நீக்கிக் குடிநீர் ஆக்குவ திலும் சவாலான தேவைகள் உள்ளன.  முதற்கண் அவற்றுக்கு பொறியியல் நுணுக்கமும், மலிவான, மின்சார /  யந்திர சாதனங்களும் தேவை.  சாதனங்களை விற்கும்  வணிக பூர்வமான தொழிற் துறை அமைப்புகள் தேவை.  சூரியக் கதிர்க் கனல் மின்சக்திச் சாதனங்கள்  இப்போது கிடைக்கின்றன.  ஆனால் மலிவாகக் கடல் அலை அடிப்புகள் ஆற்றல் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில் நுணுக்கம் மேலை நாடுகளில் துவக்கம் ஆனது போல், முப்புறம் கடல் சூழ்ந்த இந்தியாவில் இதுவரை ஆரம்பமாக வில்லை.  கடற்கரை ஊர்களில் மின்சக்தி உற்பத்தி செய்யவும், உப்பு நீக்கி  குடிநீர் தயாரிக்கவும், இப்போது நம் கைவசம் திறமை இருந்தும், பயன்படாமல் காத்திருப்பது கடல் அலை அடிப்பு ஆற்றல் மின்சக்தி.

    ++++++++++++++++++++++

    https://www.youtube.com/watch?v=7ZN5CthZhvghttps://youtu.be/7ZN5CthZhvghttps://youtu.be/bEfrtAOMuvkhttps://youtu.be/KehkHkV7nL4https://youtu.be/fGfadMRyFXIhttps://youtu.be/7r9tQV3tMoI

    +++++++++++++++++++

    https://youtu.be/fnSZCOtuDgs
    https://greengarageblog.org/19-top-advantages-and-disadvantagesof-wave-energy-and-power-

    உலக நாடுகளில் உள்ள கடல் அலை அடிப்பு மின்சார நிலையங்கள்.

    கடல் அலை அடிப்பு ஆற்றல் பண்ணைகள் [Wave Forms]  விரல் விட்டு எண்ணும் வகையில் 2018 இல் இருப்பவை : நான்கு. பிரிட்டன், போர்ச்சுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா.  முதன் முதலில் 2000 ஆண்டு தேசீய மின்வட இணைப்பில் [National Power Grid] மின்சாரம் அனுப்பியது பிரிட்டன்.  2007 பிப்ரவரியில் 3 மெகாவாட் சிற்றளவு கடல் அலை அடிப்பு நிலையம் 4 மில்லியன் பவுண்ட் [5.2 மில்லியன் டாலர்] செலவில் ஸ்காட்லாண்டில் அனுமதி பெற்றது. பிறகு கார்ன்வாலில் [இங்கிலாந்து] 20 மெகாவாட் நிலையம் நிறுவகமானது.  பிறகு அது 40 மெகாவாட் ஆற்றல் பெருகும் நிலை பெற்றது.

    போர்ச்சுகல் நாட்டில் 2008 இல் 2.25 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் இயங்கத் தொடங்கியது.  ஆஸ்திரேலியாவில் 19 மெகாவாட் கடல் அலை ஆற்றல் நிலையம் AU$ 66.5 மில்லியன் செலவில் 2015 ஆண்டுகளில்  இயங்க ஆரம்பித்தது.  அமெரிக்காவில் முதன்முதலில் 45 டன் கடல் அலை ஆற்றல் மாற்றி நிறுவகம் [45 ton Wave Energy Converter] ஆனது.

    2016 அறிக்கைப்படி, அமரிக்க நாட்டின் இருபுறக் கடல் அலை அடிப்பு ஆற்றல் அளவு எதிர்பார்ப்பு, ஆண்டுக்கு  2640 டெராவாட் ஹவர்ஸ்  [terawatt-hours].  [one terawatt = 10^12 watts =[1000 gegawatts].  அதாவது 1 terawatt-hour மின்சார ஆற்றல் 93,000 அமெரிக்க வீடுகளுக்கு ஓராண்டு பரிமாறும்.

    கடல் அலை ஆற்றல் உற்பத்தி செய்வது எளிதாகத் தெரிந்தாலும்  அவற்றை அமைப்பதிலும் சிக்கல்கள், இடர்ப்பாடுகள் உள்ளன,  கடல் அலை அடிப்புகள், கடல் அலை உயர்ச்சிகள் [Waves & Tides] சூரிய – சந்திர நகர்ச்சிக்கு ஏற்ப அனுதினம் மாறுபவை.  உப்புக் கடல் நீர் தீவிரமாய் உலோகங்களில் துரு ஏற்றுவது.  பருவநிலை மாறுபாட்டில், ஆண்டுதோறும் சூறாவளி, பெருமழை, சுனாமி, ஹர்ரிக்கேன் தாக்கிப் பேரிடர்  விளைவிப்பவை.

    “இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்!  உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது!  இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை!  ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனை களுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.

    நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

    ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.  கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

    World’s Largest Lithium Ion Battery Banks

    மிகப்பெரும் 100 மெகாவாட் மின்கலச் சேமிப்பணி [Battery Bank] தயாரிப்பாகி வருகிறது.

    2017 ஜூலை 7 ஆம் தேதி வாணிப முறைபாட்டில் டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க் [Elon Musk’s Tesla] என்பவர், “100 நாட்களுக்குள் 100 மெகாவாட் திறனுள்ள லிதியம் – அயான் மின்கலன் ஒன்றை உற்பத்தி செய்வதாய்ச் சவால் விட்டுத், தென் ஆஸ்திரேலியாவின் கனல்சக்தி பற்றாக் குறையை நிவர்த்தி செய்யப் பணிமேற் கொண்டார்.  2016 இல் பேய்புயல் அடித்து ஆஸ்திரேலி யாவில் மின்வடக் கோபுரங்களை வளைத்து, முழு மின்சார இருட்டடிப்பு நேர்ந்த பிறகு, பில்லியனர் இலான் மஸ்க், 2017 மார்ச்சில் மாபெரும்  மின்கலன் ஒன்றைத் தயாரித்து நிறுவுவதாக வாக்குறுதி அறிக்கை விடுத்தார்.  2016 டிசம்பரில் இயங்கிய மாபெரும் மின்கலன் ஒன்றைத் தயாரித்த அமெரிக்க டெஸ்லா தொழிற்துறை அதிபர் இலான் மஸ்க், தற்போது  100 மெகாவாட் ஆற்றல் கொண்டமிகப்பெரும் மின்கலத்தை 100 நாட்களில் தென் ஆஸ்திரேலியாவில் நிறுவிக் காட்டுவதாக உறுதி கூறினார். அடுத்து 1000 மெகாவாட் பூத ஆற்றல் கொண்ட மின்சேமிப்பி வாணிபச் சந்தையில் பல்வேறு உற்பத்தியாகி விலை மலிவாய்க் கிடைக்கும் என்று நாம் உறுதியாய்ச் சொல்லலாம்.

    Image result for Lithium Ion ResearchImage result for Solar Power Fuel Cell

    இப்பெரும் லிதியம்-அயான் மின்கலன் சேமிப்பணி [Battery Bank] 30,000 இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பும் ஆற்றல் உடையது. அந்த மின்கலன் சேமிப்பணி தென் ஆஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் டவுனில் நிறுவப்படும்.  அது அடிலைடு நகருக்கு வடக்கே 230 கி.மீ. [143 மைல்] தூரத்தில் உள்ளது.  மீள்சுழற்சி  கனல்சக்தி விட்டுவிட்டு தரும் சூரியக்கதிர், காற்றாலைச் சாதனங்கள் இயங்கும் போது சேமிக்கக் கூடிய மின்கலன் சேமிப்பணிகள் இவை. 2008 ஆண்டு முதல் பிரான்சின் நியான் [Neoen] தொழிற்துறை தற்போது 300,000 இல்லங்களுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.  நிலக்கரியைப் பேரளவு பயன்படுத்தி சூழ்வெளியை மாசுபடுத்தும் ஆஸ்திரேலியா, மீள்புதிப்பு கனல்சக்தியைப் பயன்படுத்தி, மின்னியல் சேமிப்பணியில் சேமித்து, மின்சக்தி உற்பத்தி செய்யும்.  மேலும் இப்போது பேரளவில் பெருகிவரும் மின்சார கார் வாகனங்கள் இயக்கும் மின்கலன் மீள் ஊட்டத்துக்கும் [Recharging Station] பயன்படும்.

    Image result for Lithium Ion Technology

    மின்கலன் சேமிப்பணிகளுக்கு ஏற்ற ஆற்றல் தரும் லிதிய-அயான் தொழிற்துறை இப்போது விருத்தியாகி வருகிறது. மின்சார வாகனங்களை இயக்கவும் லிதியம்-அயான் மின்சேமிப்பி செம்மையாகி வருகிறது. 2016 ஆண்டில் 2 மில்லியன் மின்னுந்து கார்கள் [Electric Cars] உற்பத்தியாகி உள்ளன.  அந்த வேகத்தில் 2020 ஆண்டில் 9 -20 மில்லியன் மின்சார வாகனங்கள் பெருகிடும் என்று கணிக்கப் படுகிறது.  2025 ஆண்டில் அந்த வாகன எண்ணிக்கை பூதகரமாய் 40 -70 மில்லியனாய்  ஏறிவிடும்  என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for Lithium Ion TechnologyImage result for Solar Power Fuel Cell

    மின்சேமிப்பிகளின் நேர்மின், எதிர்மின் முனைகளுக்குப் [Cathodes & Anodes] பயன்படும் உலோகத் தனிமங்கள் சோடியம் – அயான், ஈயம்-அமிலம், சோடியம்-கந்தகம், நிக்கல்-காட்மியம், அலுமினியம்-அயான், லிதியம்-அயான் [Sodium-Ion, Lead-Acid, Sodium-Sulpher, Ni-Cd, Al-Ion, Li-Ion] போன்றவையாகும்.  எல்லாவற்றிலும் சோடியம்-அயான் பயன்படும் மின்சேமிப்பி மலிவானது; ஆனால் தொல்லை கொடுப்பது.  லிதியம் – அயான் மின்சேமிப்பி விலை மிக்கது. ஆனால் சோடியம்-அயான் மின்சேமிப்பியை விட  20% கனல்சக்தி  திரட்சி [Energy Density] மிக்கது. கனல்சக்தி திரட்சி அல்லது மின்னியல் சேமிக்கும் தகுதி [Energy Density OR Energy Stroge Capacity] மின்சேமிப்பி ஆயுள் நீடிப்புக் காலத்தைக் குறிக்கும். சூரியக்கதிர் சக்தி மின்சாரம் நேரோட்டம் [Direct Current] உள்ளது. நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் மிகக் குறைவு.  நேரோட் டத்தைத் திசைமாற்றி மூலம் [Inverter] அனுப்பி மாறோட்டமாக [Alternating Curent] மாற்றினால்தான் தற்போதைய மின்சார சாதனங்களை இயக்க முடியும்.  2015 ஆண்டில் நிலைப்பு மின்சேமிப்பி வாணிப நிதிப்பாடு [Stationary Storage Market] சுமார் 1.0 பில்லியன் டாலர் என்று கணித்துள்ளார். 2023 ஆண்டில் அது 13.5 பில்லியன் டாலராகப் பெருகும் என்று ஊகிக்கப் படுகிறது.

    Image result for large size 100 mw batteryImage result for Solar Power Fuel Cell

    மின்சார மின்வடப் பின்னலில் மின்சக்தி நிலைய உற்பத்திகளும், மின்சக்தி மின்கல சேமிப்பிகளும் இடையிடையே இணைந்து இருப்பது எதிர்கால இந்தியாவுக்கு தேவையான அமைப்பாகும். நிலக்கரி, நீரழுத்தம், எரிவாயு, ஆயில், அணுசக்தி கனல்சக்தி நிலையங்கள் தொடர்ந்து மாறோட்ட மின்சாரம் [Alternating Current] அனுப்புகின்றன.  சூரியக்கதிர், காற்றாலை, கடலலை மின்சார நிலையங்கள் வேறுபட்டு, விட்டுவிட்டு, சில சமயம் ஓய்ந்துபோய் அனுப்பும் மின்சார நேரோட்டத்தை, மாறோட்ட மின்சாரமுடன் இணைக்க முடியாது. மீள்சுழற்சி கனல்சக்தியை அனுப்பும் மின்வடத்துடன் அவசியம் மின்கல சேமிப்பிகளும், நேரோட்ட மாற்றிகளும் இடையிடையே சேர்க்கப் பட்டு மாறோட்ட மின்வட இணைப்புகளோடு இயங்க வேண்டும்.

    Image result for Solar Power Fuel CellSolar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Solar+Storage in India: SECI publishes tender for 100 MW Grid connected solar PV projects along with large scale battery energy storage system at Kadapa Solar Park, Andhra Pradesh

    Image result for Lithium Ion Research

    1.  https://www.bing.com/videos/search?q=Electric+power+from+ocean+waves&&FORM=VDVVXX

    2.  https://www.boem.gov/Renewable-Energy-Program/Renewable-Energy-Guide/Ocean-Wave-Energy.aspx

    3.  https://www.machinedesign.com/archive/electricity-ocean-waves

    4. https://gineersnow.com/industries/marine/tidal-energy-using-ocean-waves-new-source-electric-power

    5. http://www.solardaily.com/reports/Modelling_a_future_fuelled_by_sustainable_energy_999.html  [October 31, 2018]

    6.  http://www.terradaily.com/reports/New_technologies_in_the_ocean_energy_sector_999.html  [October 31, 2018]

    7.  https://en.wikipedia.org/wiki/Wave_power  [October 19, 2018]

    8.  https://scitechdaily.com/floating-power-buoy-creates-electricity-from-ocean-waves/  [November 2, 2018]

    +++++++++++++++

    Share
  • குறளின் கதிர்களாய்…(341)

    குறளின் கதிர்களாய்…(341)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(341)

    சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
    இகல்வெல்லல் யார்க்கு மரிது.

    – திருக்குறள் – 647 (சொல்வன்மை)

    புதுக் கவிதையில்...

    எண்ணியதைப் பிறர்
    ஏற்றிடும்படிச் சொல்லும்
    ஆற்றல் மிக்கவன்,
    சொல்லிடும் செய்தி
    சொல்லிடக் கடினமானதெனிலும்
    சோர்வுறாமல் சொல்பவன்,
    கேட்பவர்
    பகையாளர் என்றாலும்
    பயமில்லாதவன் எனப்
    போற்றப்படும் இவனை
    மாறுபாட்டால் வெல்வதென்பது
    எவர்க்கும்
    மிக அரிதாகும்…!

    குறும்பாவில்...

    புரியும்படி எடுத்துச்சொல்வதில் வல்லவனாய்
    கடினமான செய்தியையும் சோர்வுறாமல் சொல்பவனாய்
    அஞ்சாதவனை மாறுபாட்டால் வெல்வதரிது…!

    மரபுக் கவிதையில்...

    சொல்ல எண்ணிடும் சேதியினைச்
    சொல்லும் வகையில் சொல்லியேதான்
    எல்லோர் மனத்தையும் ஈர்ப்பவனாய்,
    எந்தக் கடினச் செய்தியையும்
    சொல்லிடச் சோர்வு கொளாதவனாய்,
    சுற்றிலும் பகைவரே யிருந்தாலும்
    சொல்லிட அச்சமே யிலாதவனைச்
    சூழ்ந்தும் வென்றிடல் அரிதாமே…!

    லிமரைக்கூ..

    பிறரறியும் வகையில் சொல்லல்
    சோர்வுறாமை அஞ்சாமை அமைந்திருந்தால் ஒருவனிடம்,
    மிகவரிதாம் அவனை வெல்லல்…!

    கிராமிய பாணியில்...

    வேணும் வேணும்
    தெறம வேணும்,
    மனுசனுக்கு வேணும் நல்ல
    பேச்சுத் தெறம..

    தன் மனசுல உள்ளதத்
    தெளிவா மத்தவங்க
    புரியும்படி பேசத்தெரிஞ்சவனா,
    கடினமான பேச்சிக்கும்
    களச்சிப் போவாதவனா,
    எதிரிக்கும் பயப்படாதவனா இருக்கவன
    எப்புடி எதுத்தாலும்
    செயிக்கிறது ரெம்ப செரமந்தான்..

    அதால
    வேணும் வேணும்
    தெறம வேணும்,
    மனுசனுக்கு வேணும் நல்ல
    பேச்சுத் தெறம…!

    Share
  • காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா –  அழைப்பிதழ்

    காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா – அழைப்பிதழ்

    கம்பன் கழகம் காரைக்குடி

    இவ்வாண்டு காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழாவின் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம். எதிர்வரும் மார்ச் திங்கள் 26, 27, 28, 29 ஆகிய நாள்களில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்திலும், நாட்டரசன் கோட்டை கம்பன் அருட்கோயிலிலும்  இவ்விழாக்கள் நடைபெற உள்ளன. தாங்கள் இவ்வி்ழாவில் கலந்து கொண்டுச் சிறப்பிக்க வேண்டுகிறே்ாம்.

    அழைப்பின் காணொளித் தொடுப்பு;  https://youtu.be/GKPymPTDGtQ

    கம்பன் திருவிழாவில் வெளியிடப்பெறும் நூல்களின் பட்டியல் காணொளித் தொகுப்பு ;
    https://youtu.be/vkbOOZjWpO8

    அழைப்பிதழ்

    Share
  • என் அமெரிக்க அனுபவங்கள் – பாஸ்டன் பாலா நேர்காணல்

    என் அமெரிக்க அனுபவங்கள் – பாஸ்டன் பாலா நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அந்நாட்டில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நண்பர் பாஸ்டன் பாலா, தமது அமெரிக்க அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கனவு தேசம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணல் வழியே நீங்கள் காணலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 298

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ராமலக்ஷ்மி எடுத்த இப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 27

    -மேகலா இராமமூர்த்தி

    நூலறிவும் வாலறிவும் நிரம்பிய அருங்குணத்தோனான மாருதி, உருசியமுக மலையேறிவந்த குரிசில்களான இராம இலக்குவரோடு அளவளாவி அவர்கள்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவனானான். சுக்கிரீவனின் துயரத்தைத் தீர்க்க இவர்களால்தாம் இயலும் என்றுணர்ந்தவன், ”சிறுபோது இங்கே இருப்பீர்; சுக்கிரீவனை விரைந்து கொணர்கின்றேன்” என்றுகூறிச் சென்றான்.

    சுக்கிரீவனை அணுகிய அனுமன், ”வாலிக்கு வந்துசேர்ந்தான் காலன்; நாம் இடர்க்கடல் கடந்தோம்” என்று மகிழ்வோடியம்பி, இராமனின் வரலாற்றை விரிவாக அவனிடம் விளம்பத் தொடங்கினான். மாய மான் வடிவெடுத்து வந்த மாரீசனின் கதையை இராமன் முடித்ததைச் சொல்லவந்த அனுமன்,

    ”காவலனே! மானிடக் காயத்தில் (உடம்பில்) உள்ள இராமன் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலேயன்றி வேறு யாருமல்லன்! அவ் அம்மானோடு (பெருமைக்குரியவன்) நீ நட்புக் கொள்! மாய மானாக வந்த மாரீசன் மாயும்படி அவனுக்கு மா யமானாக (பெரிய யமன்; யமான் – யமன் என்பதன் நீட்டல் விகாரம்) ஆனவன் இந்த இராமன்” என்று தேர்ந்த சொற்களால் சுக்கிரீவனிடம் இராமனின் திறலுரைத்தான்.

    ஆயமால் நாகர் தாழ் ஆழியானே அலால்
    காயமான் ஆயினான் யாவனே காவலா
    நீ அம்மான் நேர்தியால் நேர்இல் மாரீசன் ஆம்
    மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3898)

    தொடர்ந்தவன்… ”நிருதர்கோனான இராவணன் மதியின்மையால் இராமன் மனைவியை வஞ்சனையால் கவர்ந்துசென்றான்; அவளைத் தேடிவந்த அம்மானுடர்களின் கிடைத்தற்கரிய நட்பு நினக்குக் கிட்டியது நின் தவப்பயனே!” என்று இராமலக்குவரின் இயல்பைத் தன் நுண்ணறிவினால் கண்டுணர்ந்த அனுமன் அதனைச் சொல்வன்மை தோன்றத் தன் தலைவனிடம் விண்டுரைக்கின்றான்.

    இச்செய்திகளால் மனமகிழ்ந்த அருக்கனின் (சூரியன்) அருமை மைந்தன் சுக்கிரீவன், தன் துணைவர்கள் உடன்வர அனுமனோடு சென்று அண்ணல் இராமனைக் காணுகின்றான். ”திருமாலே மானுடனாய் வடிவெடுத்து வந்ததுபோல் அல்லவா இவன் இருக்கின்றான்!” என்று இராமனைக் கண்டு தன்னுள் வியந்தவன், இறைவனே மானுட வடிவில் தோற்றரவு செய்திருப்பதால் மற்றுள்ள தேவர் குழுக்களையெல்லாம் மானுடம் வென்றுவிட்டது என்று தெளிந்தான்.

    இராமனுக்கு அருகில்சென்ற சுக்கிரீவன், முற்பிறவியில் நானியற்றிய நல்வினைகளாலேயே உன்னைக் காணும் பேறுபெற்றேன் என்று உபசார மொழிகள் கூறிநின்றான். அதனைக் கேட்ட இராமன், ”சவரி எனும் மூதாட்டி வழிகாட்டியதன்பேரில் நாங்கள் உன்னைத் தேடிவந்தோம்; எங்கள் கையறு துன்பம் உன்னால் நீங்குமென்று மெய்யாய் நம்புகின்றோம்” என்று தாங்கள் சுக்கிரீவனைத் தேடிவந்த காரணத்தைச் செப்பினான்.

    ஆனால் சுக்கிரீவனோ சீதையைத் தேடுதற்குத் தான் துணை செய்கின்றேன் என்று உடனடியாகச் சொல்லவில்லை. மாறாக, “என் அண்ணன் வாலி தன் தடக்கைகளை ஓங்கிக்கொண்டு என்னை இருள் நிலைபெற்ற இவ்வுலகிற்கு அப்பாலும் துரத்திவர, இம்மலையே எனக்குப் பாதுகாவல் என்று கருதி இங்கு ஒளிந்து உயிர்பிழைத்தேன்; உயிரைவிடவும் துணிவில்லாத நான் உன்னைச் சரண் புகுந்தேன்; என்னைக் காத்தலே உனக்கு தருமமாகும்!” என்று தனக்கு முதலில் உதவுமாறு இராமனிடம் இறைஞ்சுகின்றான். 

    முரணுடைத் தடக் கை ஓச்சி
         முன்னவன் பின்வந்தேனை
    இருள்நிலைப் புறத்தின்காறும் உலகு
         எங்கும் தொடர இக் குன்று
    அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்
         ஆர் உயிர் துறக்கலாற்றேன்
    சரண் உனைப் புகுந்தேன் என்னைத்
         தாங்குதல் தருமம் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3912)

    எந்த உயிருமே முதலில் தன்னைப் பற்றித்தான் சிந்திக்கும்; தான்படும் தொல்லைகளிலிருந்து விடுபடவே விழையும்; விரையும். பின்புதான் மற்றவர்களின் துயருக்கு உதவத் தலைப்படும். இதுவே உயிர்களின் உளவியல். இந்த உளவியலைச் சுக்கிரீவன் பாத்திரப் படைப்பு வாயிலாக நமக்குத் தெளிவாய் உணர்த்திவிடுகின்றார் கல்வியில் வல்லவரான கம்பர்.

    சுக்கிரீவனின் நிலைகண்டு இரங்கிய இராமன், அவன் துன்பத்தை முதலில் தீர்ப்பது என்ற முடிவுக்கு வந்தவனாய், ”இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நின்னை வருத்தியவர் என்னை வருத்தியவர் ஆவர்; தீயரே ஆயினும் உனக்கு நட்பானவர்கள் எனக்கும் நண்பரே; உன் உறவினர் எனக்கு உறவினர்; என் சுற்றத்தார் உன் சுற்றத்தார்; நீ என் இன்னுயிர் நண்பன்!” என்று கூறி அவனோடு நட்புக் கொள்கின்றான்.

    மற்றுஇனி உரைப்பது என்னே
         வானிடை மண்ணில் நின்னைச்
    செற்றவர் என்னைச் செற்றார்
         தீயரே எனினும் உன்னோடு
    உற்றவர் எனக்கும் உற்றார் உன்
         கிளை எனது என் காதல்
    சுற்றம் உன்சுற்றம் நீ என்
         இன் உயிர்த் துணைவன் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3914)

    எளியோரின் நிலைகண்டு இரங்குதலும் அவர்கட்கு உதவுதலும் உயர்ந்தோர் பண்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் சுக்கிரீவனைப் பற்றியும் அவன் அண்ணன் வாலியைப் பற்றியும் முழுமையாக எதுவும் அறிந்துகொள்ளாத நிலையில் சுக்கிரீவனிடம் உன் பகைவர் எனக்குப் பகைவர்; உன் நண்பர் எனக்கும் நண்பர் என்று இராமன் வாக்குறுதி அளிப்பதை அறிவுடைய செயலாகக் கருத இயலவில்லை. ”தேறற்க யாரையும் தேராது” என்பது வள்ளுவம் அல்லவா?

    சுக்கிரீவனுக்கும் இராமனுக்குமிடையே மலர்ந்த நட்பைக்கண்டு மகிழ்ந்த குரக்குச் சேனை ஆர்த்தது; அஞ்சனைச் சிறுவனும் மேனி பூரித்தான். இராமலக்குவரோடு ஆங்குள சோலைநோக்கிச் சென்றனர் அனைவரும். சோலைபுக்கதும், இராமனும் சுக்கிரீவனும் பூக்களால் செய்த அணையில் அமர்ந்து உரையாடினர்.

    பின்னர், நீராடிவிட்டு வானரர்கள் படைத்த விருந்தை உண்டு மகிழ்ந்த இராமன், அங்கே விருந்தோம்பப் பெண்டிர் யாரும் இல்லாததைக் கண்டான். அதன்மூலம் சுக்கிரீவனும் தன் மனையாட்டியைப் பிரிந்திருக்கின்றானோ என்று ஐயப்பாடுற்றான். அதனை அறிந்துகொள்ளுமுகத்தான், ”நன்மனைக்குரிய பூவையை நீயும் பிரிந்துளாயா?” என்று வினவினான்.

    ……பொருந்து நன் மனைக்கு
         உரிய பூவையைப்
    பிரிந்துளாய்கொலோ நீயும்
         பின் என்றான். (கம்ப: நட்புக் கோட் படலம் – 3922)

    விருந்தோம்புதலை மகளிர்க்குரிய தலையாயக் கடனாக – அறனாகக் கருதியவர்கள் தமிழர்கள். கோவலனோடு மதுரையில் தங்கியிருந்த கண்ணகி, அவனைப் பிரிந்திருந்த காலத்தில், அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலுமாகிய மகளிர்க்குரிய அறங்கள் அனைத்தையும் தான் செய்யமுடியாமல் போனதுபற்றி அவனிடம் வருந்தியதை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம்.

    சுக்கிரீவன் நிலையை விரிவாக விளக்குவதே இராமனின் வினாவுக்கான விடையாக அமையும் எனக் கருதிய அனுமன், சுக்கிரீவனின் தமையனான வாலி பற்றி இராமனிடம் சொல்லத் தொடங்கினான்.

    நான்கு வேதங்களையும் வேலிபோல் பாதுகாக்கும் சிவபெருமானின் அருளைப் பெற்றவனும், பெருவலி படைத்தவனுமாகிய ஒருவன் இங்கே இருக்கின்றான்; அவன் பெயர் வாலி!

    திருப்பாற்கடலில் அமுதம் எடுக்க முனைந்த அமரரும் அவுணரும் முயன்று வலியற்று நின்றவேளையில் அங்குவந்த வாலி, தான் ஒருவனாகவே பாற்கடலைக் கடைந்து அமுதெழச் செய்த தோள்களை உடையவன். நிலம் நீர் காற்று நெருப்பு எனும் நான்கு பூதங்களின் ஆற்றலையும் தான் ஒருவனே பெற்றவன்.

    வாலியை எதிர்த்து யார் போருக்கு வந்தாலும் வந்தவர்களின் வலிமையில் செம்பாதி அவனுக்கு வந்துவிடும் வரத்தைச் சிவபிரானிடம் பெற்றவன் அவன். அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானை நாள்தவறாது எட்டுத் திக்கும் சென்று பணிபவன். [பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், இயமானன் (இயமான னாம்விமலா – திருவாசகம்) ஆகியோர் அட்டமூர்த்திகள் எனப்படுவர்.  இவ் எண்மரையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின் சிவபிரான் ‘அட்டமூர்த்தி’ எனப்பட்டான்.]

    கிட்டுவார்பொரக் கிடைக்கின் அன்னவர்
    பட்ட நல்வலம் பாகம் எய்துவான்
    எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
    அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்.
    (கம்ப: நட்புக் கோட் படலம் – 3927)

    அந்த வாலியின் வேகத்துக்கு ஈடுகொடுத்துக் காற்றுச் செல்லாது; கந்தவேளின் வேலும் அவன் மார்பைத் துளைக்காது; அவன் வால் செல்லும் இடத்தில் இராவணனின் கோல் செல்லாது; அவனது வெற்றிக் கொடியும் செல்லாது என்றுரைக்கின்றான் அனுமன்.

    கால்செலாது அவன் முன்னர்
         கந்த வேள்
    வேல் செலாது அவன்
         மார்பில் வென்றியான்
    வால் செலாத வாய்
         அலது இராவணன்
    கோல் செலாது அவன்
         குடை செலாது அரோ.  (கம்ப: நட்புக் கோட் படலம் – 3928)

    ”இந்திரன் முதலான தேவர்களை வென்றவன் நான்” எனத் தருக்கித் திரியும் தசமுகனான இராவணனின் வீரமும் வாலியிடம் எடுபடவில்லை. அவ்வளவு ஏன்? இரணியன் மார்பைப் பிளந்த நரசிங்கமும் வாலியின் தோள்வலியின்முன் நிற்கும் திறனற்றது என்று வாலியின் இணையற்ற தோளாற்றலை இராமனுக்கு அறியத் தருகின்றான் அஞ்சனையின் அரும் புதல்வன்.

    அந்த வலிமிகு வாலி அரசனாகவும் சுக்கிரீவன் இளவரசனாகவும் இந்தக் கிட்கிந்தையை ஆட்சிசெய்து வருகின்ற காலத்தில் ஒருநாள் மயன் மகனான அரக்கன் மாயாவி, வாலியோடு போர்புரிய வந்தான். சிறிது நேரத்துக்குள்ளாகவே வாலியை எதிர்த்துநிற்க இயலாமல் ஆற்றல்குன்றித் தோற்றோடினான். பூமியில் எங்கிருந்தாலும் வாலி தன்னைத் தேடிவந்து காலிசெய்து விடுவான் என்றஞ்சிய மாயாவி புகுவதற்கரிய பிலம் (பூமிக்குள் செல்லும் சுரங்கவழி) ஒன்றிற்குள் ஓடி ஒளிந்தான்.

    வாலியும் அவனை விடவில்லை; துரத்திச் சென்றான். பிலத்தருகே வந்தவன் தம்பி சுக்கிரீவனிடம், “நான் உள்ளே சென்று மாயாவியைப் பிடித்துக் கொணர்வேன். அதுவரை அவன் வெளியில் எங்கும் தப்பிச் செல்லாவண்ணம் நீ பிலத்தின் வாயிலில் சிறிதுநேரம் காவல் இரு!” என்று கூறிவிட்டுப் பிலத்தினுள் புகுந்தான்.

    காலம் கரைந்தது; இருபத்தெட்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் வாலி வெளியில் வரவில்லை. ”இவ்வளவு காலமாகியும் வாலி வெளியில் வரவில்லையே…ஒருவேளை அவன் இறந்துபட்டானோ?” என்ற ஐயம் சுக்கிரீவனுக்கு ஏற்படலாயிற்று.  

    நாடோ அரசனில்லாது தாயற்ற குழவிபோல் தவித்திருந்தது. அதனைக்கண்ட நாங்கள், ”நீ அரசாட்சியை ஏற்றுக்கொள்” என்று இளவரசனான சுக்கிரீவனிடம் வேண்டினோம் என்றான் அனுமன்.

    சுக்கிரீவன் அதற்கு உடன்பட்டானா?

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 57

    பழகத் தெரிய வேணும் – 57

    நிர்மலா ராகவன்

    பொறாமை ஏன் எழுகிறது?

    புதிதாக மணமானவன் சீலன். `உன்னை யாராவது உற்றுப் பார்த்தால்கூட என்னால் தாங்க முடிவதில்லை,’ என்று அடிக்கடி மனைவியிடம் கூறுவான்.

    `நீ ரொம்ப அழகு. நான் உனக்கு ஏற்றவனே அல்ல!’

    `இவருக்குத்தான் என்மேல் எவ்வளவு அன்பு!’ என்றெண்ணி மனைவி பெருமைப்படுவாள். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தான்.

    ஆனால், உண்மை அதுவல்ல.

    ஒருவர்மீது ஆதிக்கம் செலுத்தி, எப்போதும் கட்டுப்படுத்த ஓயாத புகழ்ச்சி ஒரு வழி.

    பொதுவாகவே, தனக்குக் கிடைத்தற்கரிய உறவாக ஒரு பெண்ணை மணந்தவன் அளப்பரிய அன்பால் அவளைத் திக்குமுக்காடச் செய்கிறான். அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயம்.

    பாராட்டுவதுபோல் கூறுவது பொறாமையின் வெளிப்பாடு. அவனுடைய கணக்குப்படி, அவன் தாழ்ந்திருக்கிறான். மகிழ்ச்சி அற்றுப்போக, தன்னை வருத்திக்கொண்டு, பிறரையும் நோக அடிக்கிறான்.

    ஆண் மட்டுமல்ல, தன் தகுதிக்குமீறிய ஒருவரை மணந்துவிட்டோமோ என்று குழம்பும் பெண்ணும் இத்தகைய உணர்ச்சிகளால் தன்னையே வருத்திக்கொள்ளக்கூடும்.

    பொறாமை ஏன் எழுகிறது?

    பொறாமை என்கிற குணம் எல்லா மனிதர்களிடமும் இயற்கையாக அமைந்திருப்பது.

    தன்னைவிட வேறு ஒருவர் பணம், அழகு, அந்தஸ்து இப்படி எதிலாவது சிறந்திருக்கிறாரோ என்ற சிறுமை உணர்ச்சி, அதனால் எழும் அச்சம், பொறாமையாக மாறுகிறது.

    ஒரு பெண் கணவனைவிட அதிக உயரமாக இருந்தால், `அவர்களிடையே ஒற்றுமை இருக்குமா?’ என்று அதிசயப்பட்டுப் பார்க்கிறோம்.

    பொதுவாகவே, மனைவி தன்னை எந்த விதத்திலும் மிஞ்சிவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்பு ஆண்களுக்கு உண்டு.

    ஆனால் ஒரு முரண். அவள் பிறரைப் பொறாமையில் ஆழ்த்தும் அளவிற்கு உயர்ந்த தகுதி உடையவளாக இருக்கவேண்டும்.

    எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் மனைவி சராசரியைவிட மிக அதிகமான உயரம். அந்த நபரை விளையாட்டாகக் கேட்டேன், “நீ உன் மனைவியைவிட உயரமா?”

    “Of course!” சற்றே கோபத்துடன் வந்த அவரது பதிலின் தொனி, `இது என்ன முட்டாள்தனமான கேள்வி!’ என்பதுபோல் இருந்தது.

    இல்லறத்தில் அன்புதானே முக்கியம்? அதற்கும் தகுதிக்கும் என்ன சம்பந்தம்?

    குழந்தைகளிடையே பொறாமை

    தாயின் மடியில் இன்னொரு குழந்தை தவழ்வதைக் கண்டால் ஒரு குழந்தையின் சுபாவமே மாறிப்போகும். யாரும் பார்க்காதபோது, சின்னக் குழந்தையின் கண்ணைக் குத்த வரும். தாய் திட்டுவாள். அதனால் தம்பி அல்லது தங்கையைப் பிடிக்காமல் போகும்.

    சற்று வளர்ந்ததும், அக்காள் தன்னிடம் ஏன் அன்பாக இல்லை என்று புரியாது, அவள் சொல்வதையெல்லாம் தாயிடம் போய் கோள் சொல்வாள் தங்கை.

    `இது ஏதோ குழந்தைகள் சண்டை!’ என்று தாய் அதைப் பெரிதுபடுத்தாது விடவேண்டும்.

    அல்லது, “நான் கேட்டேனா? இன்னொருவரைப்பற்றிக் கோள் சொல்லாதே!” என்று இளையவளுக்குப் புத்திகூற வேண்டும்.

    அதைவிட்டு, பெரியவளைக் கண்டித்தால், சகோதரிகளிடையே இருக்கும் உறவில் விரிசல் அதிகமாகும்.

    பிறர்தான் என்னைவிட உயர்த்தி

    சிலருக்குத் தன்னிடமிருக்கும் சீரிய தன்மைகள் முக்கியமாகத் தோன்றாது.

    பார்ப்பவர்கள், கேள்விப்படுகிறவர்கள் எல்லாரையும்விடத் தான் தாழ்ந்திருப்பதுபோல் உணர்ந்தால், அவர்களுடைய அமைதி பறிபோகாமல் என்ன செய்யும்?

    கதை

    பதின்ம வயதிலேயே திருமணமாகிவிட்ட அபிராமிக்குத் தான் அதிகம் படிக்கவில்லையே என்று குறை. தனக்குக் கிடைக்காதது எல்லாம் மகளுக்குக் கிடைக்கவேண்டும் என்று உறுதிபூண்டாள்.

    மகளும் தாயின் ஆதங்கம் புரிந்து, நல்ல உழைப்பால் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.

    சிறுமியாக இருந்தபோது, மகள் அடைந்த சிறு, சிறு வெற்றிகளால் பூரித்த அபிராமி மாறிப்போனாள். அவள் வளர்ந்தபின்னரோ பொறாமைதான் ஏற்பட்டது.

    அபிராமியைப்போல் அவள் மகளுக்குக் கோலம் போடவோ, சமைக்கவோ தெரியாது. எந்த பண்டிகைக்கு என்ன செய்யவேண்டும் என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. தாயைப்போல் எல்லாவற்றிலும் ஆர்வம் செலுத்தாது, படிப்பிலேயே கவனம் செலுத்தினாள். இதெல்லாம் தாய்க்குப் புரியாமல் போனதுதான் பரிதாபம்.

    பிறர் அடையும் வெற்றியால் மற்றொருவர் எதையும் இழந்துவிடுவதில்லை.

    தான் அடைந்த வெற்றியைவிடப் பிறரது வெற்றியைக் கவனித்துப் பார்த்துப் பெருமூச்சு விடுவது ஒருவர் தன்மேல் கொண்டிருக்கும் மிகையான அன்பின் வெளிப்பாடு.

    ஒப்பீடு எதற்கு?

    தமக்கு இருக்கும் திறமைகளைப் பிறருடன் ஒப்பிட்டுக்கொள்கிறவர்கள், `நான்தான் சிறந்தவன்! நான் செய்வதையெல்லாம் உன்னால் செய்ய முடியுமா?’ என்று சவால் விடுவார்கள். இதனால் எந்தவிதப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

    பொறாமைக்கு ஆளானவர்களுக்கு உள்ளுக்குள் ஏதோ கசப்பு இருக்கும். நம்மைப்பற்றி – நம்மிடமே – அவதூறாகப் பேசுவார்கள்.

    நம்மிடமுள்ள சிறப்புகளைப் பொறுக்க முடியாதவர்களே `இவனிடம் என்னென்ன குறைகளைக் கண்டுபிடிக்கலாம்?’ என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் உறவுகளையும், நட்பையும் பிரிக்க முயல்வார்கள்.

    கதை

    எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் தன்னுடன் வேலைபார்த்த மோகனா என்ற பெண்ணைக் காதலித்து மணந்தார். சில ஆண்டுகளிலேயே மோகம் குறைந்தது.

    கல்யாணத்துக்குப் பிறகு கணவர் தன்னைக் கவனியாது, நண்பர்களுடனேயே பொழுதைப் போக்குகிறாரே என்ற வருத்தம் மோகனாவிற்கு. அந்த உணர்வு தன்னைப்போல் இல்லாது, மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தும் பிற பெண்கள்பால் திரும்பியது.

    அவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதா!

    `உன் கணவரைப் பிற பெண்களுடன் பார்த்தேன்,’ என்று ஆரம்பிப்பாள்.

    அந்த மனிதர் வேலை முடிந்து, அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை தன் காரில் ஏற்றிப் போயிருப்பார். அதிகம் ஆராயாது, கணவர்மேல் சந்தேகம் கொண்டு, சண்டை பிடிப்பாள் மனைவி.

    இதைத்தானே மோகனாவும் எதிர்பார்த்தாள்!

    இப்படியாக, பல குடும்பங்களில் தகராறு எழச் செய்தாள் மோகனா. அதில் ஒரு அற்பதிருப்தி.

    அவளுடைய திட்டம் புரிந்த ஆண்கள் தம் மனைவியை எச்சரிக்கை செய்யும் அளவிற்குப் போயிற்று அவளது கலகம்.

    யாரைத்தான் நம்புவது?

    வெற்றி பெற்றவர்களும், தம்மால் இயன்றதை மட்டும் செய்து திருப்தி அடைந்தவர்களும் பிறரைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை.

    இவர்களால் நமது வெற்றியை ஊக்கமாகக்கொண்டு நடக்க முடியும். நம் வீழ்ச்சி இவர்களை வருத்தம் கொள்ள வைக்கும்.

    கீழே இருப்பவர்கள்

    தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தம்மைப்போல் கீழே இறக்கிவிட நினைத்து, அதன்படி நடப்பவர்கள் கீழேயேதான் இருப்பார்கள்.

    இது புரிந்து, அவர்களது செய்கையால் நாம் மாறவும் கூடாது, மனம் வருந்துவதிலும் பயனில்லை.

    தாழ்ந்திருப்பவரைப் பார்த்து யாராவது  பொறாமை கொள்கிறார்களா?

    பிறரைப் பொறாமைப்படவைக்கும் அளவுக்கு நாம் சிறந்திருக்கிறோமே என்று பெருமைகொள்ள வேண்டியதுதான்!

    நிர்மலா ராகவன் யூடியூப் அலைவரிசையில் இணையஇங்கே சொடுக்குங்கள்:
    https://www.youtube.com/channel/UCx_QN5oaxMHPCs_I9B20n7A

    Share
  • சுப்ரபாரதிமணியனின் “அந்நியர்கள்“ நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

    சுப்ரபாரதிமணியனின் “அந்நியர்கள்“ நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

    மதுராந்தகன் 

    (கனவு இலக்கிய வட்டத்திற்காக)

    திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “அந்நியர்கள்“ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது .

    எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் (044 28270 937).

    எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார்.

    ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை  ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது.

    Share
  • நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், ‘நம்பிக் கெட்டவர் எவர் ஐயா’, கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.

    பல்லவி

    நம்பிக் கெட்டவர் எவர் ஐயா-உமை
    நாயகனைத் திருமயிலையின் இறைவனை (நம்பிக்)

    அனுபல்லவி

    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்பு கபாலியை (நம்பிக்)

    சரணம்

    ஒன்றுமே பயன் இல்லையென்று உணர்ந்தபின்பவர் உண்டென்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மருபொழுது சிவன் பெயர் நாவில் வாராதே
    ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப் பழகு அன்புடன் (நம்பிக்)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

    மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா, கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.

    பல்லவி

    சம்போ மஹாதேவ சரணம் ஸ்ரீ காள ஹஸ்தீச

    அனுபல்லவி

    அம்போஜ சம்பவனும் அன்பான மாயவனும்
    அடி முடி காணா நெடுமலை வாணா
    அகில புவன பரிபால சகல வரகுண விஸாலா (சம்போ)

    சரணம்

    அறியேன், சின்னஞ் சிறியேன் உனக்கனந்தம் தண்டனிட்டேன்
    அபராதங்கள் முழுதும் க்ஷமித்தருள்வாய் கை கும்பிட்டேன்
    பரிவாய் உன் சொல் கனவில் கண்டு பிழைக்கும் வழி தொட்டேன்
    பேதையாகிலும் உன் பாதம் பணியும் என் பெருகிய
    பவவினை தீரும், குரு பரனே கருணைக் கண்பாரும் (சம்போ)

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நற்றுணையாவது நமச்சிவாயவே

    நற்றுணையாவது நமச்சிவாயவே

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    சைவசமயம், இறை வழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும்வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதைச் சைவ சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை  “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாகச் சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்கு கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்திருத்த வேண்டும். பசித்திருவில் – பதனித்திருவில் – தவிழித்திருவில் – விஇம்மூன்று எழுத்தையும் சேர்த்தால்  வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்து விடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவாபதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி அதாவது இறைவனது அருள் என்னும் பதவிமனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவிஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில்எழுந்திடும் பதவிஎன்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவசமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

    சிவராத்திரி நோன்பு காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோமற்றவரைக் குறை சொல்லுவதோ  தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ, சீட்டாடுவதோ, களியாட்ட விடுதிகளை நாடுவதோ, முறையல்ல. விழிப்பது முக்கிய மானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

    கருடபுராணம்அக்னிபுராணம்அருணாசலபுராணம்சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றி யெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும்அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப் பிளம்பாக காட்சி கொடுத்த சம்பவமும்அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும்கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடிங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பலகாலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசிமாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம். மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு புராணக் கதைகளை விட அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவாஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடை கின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

    ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும் அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை  நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

    பூமியானது சூரியனை சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதையில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே  ஈத்தர் சக்தியின் அளவு அபரிதமாக இருக்கும். இப்படி அபரிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியைமகாசிவராத்திரி”  என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும் .  

    மாசிமாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை இந்த மகா சிவராத்திரிக்கே வாய்க்கிறது.

    மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்த சுரப்பி  மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே

    ஆசீர்வாதம் (Self Blessing)  செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது பகலிலும் உண்டு. இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக்குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும்.

    இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    சிவன் என்றால் மங்களம் என்பது பொருளாகும். அந்த மங்களமான சிவனைக் குறிப்பதுதான் சிவராத்திரி. எம்மை யெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுக்கும் ஒரு பற்றுக்கோடு தேவையாகின்றது. அந்தப் பற்றுக்கோடாக விளங்கும் ஆற்றல்தனைத்தான் சிவன் என்கிறோம். இந்தச் சிவனை உருவமாய்அருவமாய்அருவுருவமாய் வழிபடுகிறோம். இது சிவ வழிபாட்டில் அமைந்திருக்கும் சிறப்பெனலாம்.

    சிவனுக்கு உகந்த மந்திரமாய் பஞ்சாட்சரம் மந்திரம் விளங்கு கின்றது என்று அருளாளர்கள் எடுத்து மொழிந்திருக்கிறார்கள். சம்பந்தர் தொடக்கம் மணிவாசகப் பெருமான்திருமூலர். அருணகிரி நாதர்வரை சொல்லி இருக்கிறார்கள். சைவசித்தந்தமே நமச்சிவாய என்னும் நாமத்தைப் பெரிதும் போற்றி அதற்கெனப் பல தத்துவார்த் தங்களையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பதையும் காணமுடிகிறது எனலாம்.

    வேதம் நான்கினும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமச்சி வாயவே”

    நற்ற வாவுனை நான்ம றக்கினும்
    சொல்லும் நாநமச்சி வாயவே”

    நமச்சிவாய வாழ்க”  இந்த வார்த்தை சிவனைக் குறிக்கும் சக்தி மிக்க வார்த்தையாகும்.

    நமசிவாய என்பதற்கு – சிவனை வணங்குகிறேன் என்பது அர்த்தமாகும். இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் வாழ்வில் நலம் பெருகும். மனம் வெளிக்கும். சிவனின் அருள் என்றுமே துணையாகி நிற்கும்.

    நமசிவாய மந்திரதை உச்சரித்தால் உலக இன்பங்கள் கிடைக்கும். நலம் பெருகும்.ஞான மார்க்கத்தின் முதற்படிக்கு எம்மையெல்லாம் இட்டுச் செல்லும்.ஆகவேதான் அடியார்கள் இம்மந்திரத்தை உயிரெனப் போற்றினார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். சிவராத்திரியில் இந்தச் சக்திமிக்க சித்திவழங்கும் “நமச்சிவாய” என்னும் நாமத்தை மறவாமல் மனமார நினைந்து வாயாலே உச்சரித்தால் நிச்சயம் பரம்பொருளான அந்தச் சிவனின் அருள் கிட்டுவதோடு எமது அழுக்கான மனமெல்லாம் அழுக்ககன்று ஆண்டவனின் நினைப்பு நிச்சயம் அமரும் என்பதை அனைவரும் அகமிருத்துவோம்.

    எமது சமயம் நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக் கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந் தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினைத் தெளிவாக்கல் சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திடச் சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

    “சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே

    “சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமில னாடொறு நல்கு வானவன்
    குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே” 

    “இல்லக விளக்கது விருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே” 

    Share
  • படக்கவிதைப் போட்டி 297இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 297இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பசுமை வயல்கள் காண்போர் கண்களுக்குக் குளிர்ச்சியூட்ட, தலைச்சுமையாய் வாழைத் தாறு சுமந்து நடந்துவருகின்றார் பெரியவர் ஒருவர். கவிதைபோல் அமைந்த இந்தக் காட்சியைப் படம்பிடித்திருப்பவர் திரு. சரவணன் தண்டபாணி. இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    வாழைக் குலையை நாம் ’வாழைத் தார்’ என்றே தவறாகச் சொல்லிப் பழகிவிட்டோம். அதனை ’வாழைத் தாறு’ என்று கூறுவதே சரி.

    தாறு நாறுவ வாழைகள் தாழையின்
    சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
    நாறு நாறுவ நாறு வளர்க்குறும்
    சேறு நாறுவ செங்கழுநீர் அரோ.

    என்ற கம்பராமாயணப் பாடலில் இச்சொல் பயின்று வந்திருப்பதைக் காண்க.

    கண்ணுக்கினிய இக்காட்சிக்குக் கவிஞர்கள் தீட்டியிருக்கும் தண்டமிழ்க் கவிதைகளைக் கண்டுவருவோம் வாருங்கள்!

    *****

    ”வாழைக் குலை விற்கும் ஏழையை ஏய்க்காதீர் தரகர்களே! அவர்களும் வாழட்டும்!” என்று உழவரின் நல்வாழ்வுக்கு உரிமைக்குரல் எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பயன் பெறட்டும்…

    வாழைக் குலையது விளைந்ததென
    வயலில் வெட்டிக் கொண்டுசென்றால்,
    ஏழையை ஏய்க்கிறான் சந்தையிலே
    இடையே புகுந்திடும் தரகனுமே,
    வாழ வழியிலை உழவனுக்கே
    வழிப்பறி கொள்ளைதான் வழியினிலே,
    பாழும் மனிதரே திருந்திடுவீர்
    பயனது பெறட்டும் விவசாயியே…!

    *****

    ”அகிலமெங்கும் கிடைக்கும் பழம்; ஆண்டவனுக்குப் படைக்கும் பழம்” என்று தொடங்கி வாழைப் பழத்தின் பயன்பாடுகளைப் பாங்குறப் பாட்டில் பட்டியலிட்டிருக்கின்றார் திருமிகு. இராதா. 

    அகிலம் எங்கும் கிடைக்கும் பழம்
    ஆண்டவனுக்குப் படைக்கும் பழம்
    இல்லை இதற்கு எங்கும் இவ்வுலகில்
    ஈடு உண்டோ சொல்வீர்கள்…

    உடலைப் பேண உதவும் இந்தப் பழம்
    ஊரெங்கும் எளிதாகக் கிடைத்திடுமே
    எத்தனையோ வகைகளும் உண்டு
    ஏழைகூட வாங்க இயலும் பழமிது!

    ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும் இதனை
    ஐந்து வயதுக் குழந்தைகூட தின்னலாம்

    ஒன்றை தினமும் சாப்பிடக் கிடைக்கும்
    ஓடி உழைத்திட பல சத்துக்கள்!

    காயாக இருக்கக் கறிக்கும் உதவுதே
    கால்நடைகளும் உண்டு களிக்குதே
    பாட்டி தாத்தா பாங்காய் உண்ணவே
    பழுத்த பழம் அவரின் பசி தீர்க்குமே!

    மனிதன் உண்டபின் இதன் தோலும்
    மண்ணுக்கும் உரமாகுதே காணீர்!
    புதுமை வேண்டி ரசாயனத்தை இதில்
    புகுத்தப் போகுதே உயிர்ச் சத்துக்கள்

    வகை வகையான இந்த வாழை
    வாழ வைக்க வந்தது நமக்கிது வரமே!
    வாழையடி வாழையாக நாம் வாழவே
    வந்த வாழையை வளர்த்திடுவோமே!

    *****

    சுவைபொதி வாழையைப்போல் கருத்துக்களைத் தம் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.  

    அடுத்து இடம்பெறுவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    வாழை

    உழைக்கும் மக்கள் குறும்பசியைத்
    தீர்த்து வைக்கும் வாழை
    ஏழை மக்கள் வீட்டினிலும்
    குடியிருக்கும் வாழை

    உயிர்ச்சத்து தாதுஉப்பு
    உயர்ந்திருக்கும் வாழை
    உடல் நலத்தைச் சீராக்க
    உதவி செய்யும் வாழை

    மருந்தாக மக்கள் நலம்
    காத்து நிற்கும் வாழை
    விருந்தோம்பல் வேள்விகளில் கொலு
    வீற்றிருக்கும் வாழை

    மனிதர் வாழ்வில் மங்களங்கள்
    சேர்த்திருக்கும் வாழை
    புனிதச் சின்னமாக என்றும்
    பூத்திருக்கும் வாழை

    ”உழைப்போரின் பசி தீர்க்கும்; ஏழைகள் வீட்டில் குடியிருக்கும்; மருந்துக்கும் விருந்துக்கும் பயன்படும்; மனித வாழ்வில் மங்கலம் சேர்க்கும்; புனிதச் சின்னமாய்ப் பூத்திருக்கும்” என்று வாழையின் மகத்துவத்தை கவித்துவத்தோடு விளம்பியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    பெண்கள் ஏன் குடிக்கக் கூடாது?

    ஜோதிர்லதா கிரிஜா

    ஆண்கள் செய்வதை யெல்லாம் நாங்களும் செய்வோம் என்று பெண்கள் கூறத் தலைப்பட்டால், அது அடி முட்டாள்தனமாகும். தாய்மை எனும் மகத்தான பேற்றை இயற்கை தங்களுக்கு அருளியுள்ளதன் அடிப்படையில் சிந்தித்தால் “பெண்ணுரிமை” என்பதன் பெயரால் பெண்களில் சிலர் இப்படிப் பேச மாட்டார்கள்.

    நாம் உட்கொள்ளும் உணவுகள் நம் உடல் நலத்தை மட்டுமல்லாது, நமது மனநலத்தையும் நல்ல விதமாகவோ கெட்டவிதமாகவோ பாதிக்கின்றன என்பது கண்கூடான விஞ்ஞானமாகும். கள், சாராயம், போதை மருந்துகள், புகைபிடித்தல் போன்றவையும் இந்தப் பொதுவான விதிக்கு விலக்காக இருக்க முடியாதுதானே?

    குடி ஆணையும் பெண்ணையும் பாதிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில விஷயங்களில் பெண் அதிகமான பாதிப்புக்கும், வேறு சில விஷயங்களில் ஆண் அதிகமான பாதிப்புக்கும் ஆளாவதாய்ச் சொல்லப்படுகிறது. ஆணுக்கு ஏற்படும் பாதிப்பு அவனைவிடவும் பெண் குறைவாய்க் குடித்தாலும் அவளுக்கு அதே அளவு ஏற்படுவதாய்த் தெரியவந்துள்ளது.  ஆனால் அந்தப் பாதிப்புகளிலும் சில வேறுபாடுகள் உள்ளனவாம். குடிவெறியில் கொலை செய்வது, வன்னுகர்வு செய்வது போன்றவற்றில் பெண் ஈடுபடுவதில்லை என்று சொல்லப்படுகிறது. உடலளவில் பெண் அதிகமாகவும், மனத்தளவில் ஆண் அதிகமாகவும் பாதிக்கப்படுவதாய் இதிலிருந்து நினைக்க வேண்டியுள்ளது.

    பெண் குடிப்பதால் அவளது உடல் நிலையில் ஏற்படக்கூடிய சீர்குலைவு அவள் பெறும் குழந்தைகளைக் கண்டிப்பாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகிக்கலாம். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற வேண்டுமாயின், ஒரு பெண் குடிகாரியாக இல்லாதிருக்கவேண்டும். அதிலும், குழந்தையைத் தன் வயிற்றில் சுமக்கும் போது ஒரு பெண் இந்த விஷயத்தில் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. கர்ப்பமுற்றிருக்கும் போது ஒரு பெண் உட்கொள்ளும் உணவுகள் அவள் சுமக்கும் கருவையும் பாதிக்கின்றன எனும் நிலையில் அவள் தன் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியதாகிறது. சில உணவுகள் கர்ப்பத்தையே கலைத்துவிடக் கூடியவை.  சில உணவுகள்  வேறு வகையான குறைபாடுகளைக் கருவில் உற்பத்திசெய்துவிடக் கூடியவை. எனவே கருவுற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் தன் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாக வேண்டிய நிலையில் உள்ளாள். அவ்வாறு இல்லையெனில், குழந்தைகள் பிறவி யிலேயே அவற்றைப் பாதிக்கும் நோய்களுடன் மட்டுமல்லாது, பல்வேறு ஊனங்களுடனும் பிறக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு ஊனமுற்ற குழந்தைகளை உருவாக்கும் உரிமை எந்தப் பெற்றோர்க்கும் கிடையாது.

    இதைப் பற்றியெல்லாம் அறியாமல், பெண்ணுரிமை என்பதன் பெயரால் ஆண்கள் செய்யும் தவறுகளையெல்லாம் பெணகள் தாங்களும் செய்ய முற்படுவது அசட்டுத்தனம் அல்லது அறிவீனமாகும்.  ‘பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்களே! இது எதில் போய் முடியும்?’ என்று சிலர் கவலைப்படுகிறார்கள்.  இது நியாயமான கவலைதான். குடிகாரிகளின் எண்ணிக்கை குடிகாரர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக, மிகக் குறைவுதான். ஆனால், இதை எண்ணி நாம் நிம்மதி யடைந்துவிடலாகாது. இந்த எண்ணிக்கை பெருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    விதைக்கும் விதை நன்றாக முளைக்கவேண்டுமாயின் அது விதைக்கப்படும் நிலம் செழிப்புள்ள நல்ல நிலமாக இருத்தல் வேண்டும். கருவைப் பெற்றுத் தன்னுள் வைத்து வளர்க்கும் பெண்ணை நிலத்துக்கு ஒப்பிடுவார்கள்.  நிலம் மட்டுமே நல்ல நிலமாக இருந்துவிட்டால் ஆயிற்றா? அதில் விதைக்கப்படும் விதையும் சேதமடைந்ததாகவோ, சொத்தையாகவோ இருக்கலாமா? ஒரு நிலம் என்னதான் களர்நிலமாக இல்லாமல் செழிப்பானதாக இருந்தாலும், அதில் ஊன்றப்படும் விதை சொத்தையாக இருந்தால் அது முளைத்து வளருமா என்ன!

    குடியால் ஓர் ஆணுக்கு ஏற்படும் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று அவனுடைய உயிரணுக்கள் பாதிக்கப்படும் என்பதாகும். குடித்துக் குடித்துச் சொத்தையான உடம்பை வைத்துக்கொண்டிருக்கும் ஓர் ஆணின் மனைவி குடிப்பவளாக இல்லாவிட்டலும் கூட, அவன் மூலம் அவள் பெறும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்குமா என்ன?

    எனவே,  ‘அய்யோ! பெண்கள் இப்படிக் குடிக்க ஆரம்பித்துவிட்டார்களே!’ என்று அங்கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்களும் குடிக்காமல் இருப்பதற்கான உபதேசங்களை இவர்கள் செய்வது நடுவு நிலையான செயலாக இருக்கும். தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் அரசையுமன்றோ இவரைப் போன்ற சீர்திருத்தவாதிகள் கண்டிக்க வேண்டும்? ஆணோ பெண்ணோ தவறிழைப்பதற்கான அத்தனை தவறுகளுக்கும் அடித்தளம் அமைத்திருக்கும் அரசன்றோ  கண்டனத்துக்கு உரியது? ஆனால், அரசுக்குத் தமுக்கு அடிப்பார்கள், அல்லது கண்டுங் காணாதிருப்பார்களே தவிர, அதற்கெல்லாம் இவர்களுக்குக் கடுகளவு துணிச்சலும் கிடையாது என்பதே கசப்பான உண்மை.

    புகை பிடிப்பதும், போதை மருந்து உட்கொள்ளுவதும் கூட ஆணின் உயிரணுக்களைப் பாதிப்பதாய்ச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியக் குறைபாடுகளுடனோ, ஊனத்துடனோதான் பிறப்பார்கள். எனவே, தீயவற்றுக்கு அடிகோலும் அரசு, அவற்றுக்குத் துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரையும் இவர்களுக்கெல்லாம் துணைநிற்கும் காவல்துறையினரையும் ஒருமித்துச் சாடுவதே முறையாக இருக்கும்.

    மதுவிலக்கை அமல்படுத்த இயலாது என்பதற்கான சாக்குப் போக்குகள் ஏற்புடையனவல்ல. காவல்துறை அலுவலர்களும், ஆட்சியாளர்களும், இன்ன பிற அரசியல்வாதிகளும் ஒழுங்காகச் செயல்பட்டு நடக்க முற்படின், எதையும் சாதிக்கலாம். ஒரு பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் இருப்பின், அந்தப் பகுதியைச் சார்ந்த காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் அல்லது பணி நீக்கம் செய்யப்படுவர் என்று சட்டமியற்றினால், கள்ளச் சாராயம் எப்படி ஒழியாமலிருக்கும்? வெறும் இடமாற்றம் தண்டனையாகுமா? வேறு இடத்துக்கு மாற்றலாகிச் செல்லும் காவல்துறையினர் அங்கும் அதையேதானே செய்வர்?

    ராஜாஜி சொன்னதுதான் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது ‘கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டுச் செத்தாலும் சாவேனே ஒழிய, குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்று சொல்லுபவர்களுக்காக மதுவிலக்கை அமல் படுத்தாமல் இருக்கக் கூடாது’ என்று அன்றே அவர் சொன்னதை  நினைவுகூர்ந்து நடப்பதே அறிவார்ந்த – மனிதாபிமானம் மிக்க – நிலைப்பாடாக இருக்கும்.

    இன்று பணிப்பெண்களின் கணவன்மார்கள் அனைவருமே குடிப்பதாய்த் தெரிகிறது. புருசனுக்காகப் படையல் வைத்துக்கொண்டிருந்த பெண்கள் இன்று, ‘அவன் என்னைக்குச் செத்து ஒழியறானோ அன்னைக்குத்தான் என் கொழந்தைங்களும் நானும் நிம்மதியாயிருப்போம்’ என்று விரல் சொடுக்குகிற அளவுக்கு வெறுத்துப் போய் ஒருமையில் அவனைக் குறிப்பிட்டுப் பல்லைக் கடிக்கிறார்கள்.

    மாணவர்களில் பலரும், மாணவிகளில் சிலரும் குடிக்கத் தொடங்கியிருப்பது எதில் போய் முடியும் என்பதை மனச்சாட்சியுள்ள ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். …ஹ்ம்…மனம் என்னும் ஒன்றே  இல்லாதவர்களிடம் மனச்சாட்சியை எதிர்பார்ப்பதும் மடத்தனம்தானே?

    Share
  • Chandrababu

    Chandrababu

    Baskar Seshadri

    Joseph Pichai Chandrababu was born in 1927 and He died on March 8th in 1974 at the prime age of 47. He would have turned 94 this year had he been alive. A No nonsense man and straight forward person could not survive for long here in the industry. His last days were too pathetic and the owner of the house where he lived had cut the electricity (Babu could not pay even the small Electricity bill or the rental) and Babu had no means to eat or manage. At times It was the family of MSV which used to get him the food.

    Many oldies may be aware that it was Chandra babu who lived such a lavish life had even built his car parking in the first floor where he used drive in atop to reach home. All came to a standstill and at a point when Bhantalu went to Book him for Sabash Meena (Double role) he insisted that he be paid one Rupee extra than what Sivaji Ganesan was Paid. When the news went to Ganesan he simply said “He is a performer and pay him what he needs” Such was the generosity and confidence one had in their talent. When everyone left Babu It was Visvanathan who helped him to his best level and as a gratitude Babu told the people around him on death bed that MSV be informed first about his death. In deference to his wishes the cortege carrying Chandrababu stopped a while at the house of MS Viswanathan. Then went on to Rest at Quibble islands Cemetery. Today is the day of His Memorial. His life is a Lesson to everyone. An Actor who has no parallel.

    Share
  • இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது

    இத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 இல் இத்தாலிக்கு தென்முனையில் உள்ள சிசிலி தீவில் எட்னா மலை முகட்டில் பூத எரிமலை சீறி எழுந்து அரை மைல் உயரத்துக்கு மேல் தீக்குழம்பை வீசிப் பொழிந்தது. இந்தச் சீற்றம் 30 மணி நேர இடைவெளியில் விட்டுவிட்டு 16, 18, & 19 தேதிகளில் செந்தீப் பிழம்பை வெளியே எறிந்தது. திடீரென்று 20 ஆம் தேதி விதி மாறிப் பூத எரிமலை ஆனது. இருட்டத் தொடங்கியதும், ஒளிமின்னும் சிறுசிறு துகள் கள் பன்னூறு அடி உயரத்தில் வான வேடிக்கை செய்தன. நள்ளிரவு 1:30 மணிக்கு இடி முழக்கி பெரும் கட்டிகள் எரிமலைக் குண்டுகள் போல் 3300 அடிக்கு மேல் வெடிச் சத்தம் உண்டாக்கின. தீப்பொறிகள் 6 மைல் உயரம் ஏறி இடிநகை புரிந்த பயங்கரச் சத்தம், மலை சரிவில் வாழ்ந்து வரும் மில்லியன் மக்கள் காதில் விழுந்தது! பிப்ரவரி 22 இல் தீவிரக் காட்சிகள் கடுமை தணிந்து, எரிமலைக் குழம்பு 6500 அடியாகத் தாழ்ந்தது.

    எட்னா எரிமலையின் அசுரப் பேரழிவுக் கடுமை கடந்த 3500 ஆண்டுகளாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளது. 2013 செப்டம்பர் வரை, தடைப்பட்ட எழுச்சிகளாய்த் தெரிந்தும், 2019 செப்டம்பர் வரைத் தொடர்ச்சியாகவும், 2020 டிசம்பர் முதல் செங்குத்து நிகழ்ச்சியாகவும், வழியும் பொழிவாகவும் காணப் படுகிறது.

    பிறகு வியப்பூட்டும் நிகழ்ச்சி, எரிமலைக் குழம்பில் பேரளவு நீர் மய ஆவி தென்பட்டது. ஆயின் அது தீக்கனல் வெப்பத்தைத் தணிக்க வில்லை. ஒரு மணி நேரத்தில் மாறுபட்ட வடிவத்தில் எரிமலைக் குழம்பு காட்சி தருகிறது, உயரத்தில் செங்குத்தாய் எழும் கருஞ் சாம்பல் திரண்ட தூண் தூள்கள், பயங்கர வெடிச் சத்தமுடன் பரவும் தீப்பொறிகள்! இத்தாலிய மக்கள் எட்னா எரிமலைக் கோரத்தை எதிர்கொள்ளத் தயாராய், சாம்பல் பொழிவுகளைத் தெருக்களில் நீக்குகிறார். சிரமங்களைப் பொறுத்துக் கொள்கிறார்!

    https://www.usatoday.com/picture-gallery/news/world/2021/02/23/mount-etna-volcano-eruptions-rise/4554726001/

    இத்தாலியின் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்

    1980 இல் இதற்கு முன் ஏற்பட்ட இத்தாலியின் 6.5 ரிக்டர் அளவு பூகம்பத்தில் 2735 பேர் கொல்லப் பட்டார் !  2009 ஏப்ரலில் தாக்கிய பூகம்ப ஆட்டத்திலும் அதற்குப் பிறகு நேர்ந்த பின் அதிர்ச்சிகளில் (Aftershocks) இடிந்து போன கட்டடங்கள் அநேகம்.  காரணம் அவற்றில் பெரும்பான்மையான வீடுகளின் ஆயுட் காலம் நூறாண்டுகளைத் தாண்டியவை!  இத்தாலியின் மத்தியில் சுமார் 26 நகரங்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள இல்லங்கள் பல இடிந்து வீழ்ந்தன!  லாகுயிலா நகரைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் தகர்ந்து ஏறக்குறைய தரை மட்டமாயின!  லாகுயிலா நகரில் மூன்றில் இரு பங்கு கட்டடங்கள் முறிந்து பிளந்தன!  அவற்றில் பொதுவாக மருத்துவ மனைகள், பல்கலைக் கழகத்தின் விடுதிகள், பெரிய ஹோட்டல் ஒன்றும் அடங்குகின்றன.

    நிவாரண உதவிப் பணிகள் செய்ய சுமார் 7000 இத்தாலியர் உழைத்தாக அறியப்படுகிறது. பூகம்பத்தால் நேர்ந்த பொருட் சேதாரங்களின் மதிப்பீடு சுமார் 2 முதல் 3 பில்லியன் ஈரா (1.5-2.2 பில்லியன் டாலர்) என்று யூகிக்கப்படுகிறது.  இத்தாலியின் உற்பத்தி விற்பனை நிதி சுமார் 1.5 டிரில்லியன் ஈரோ (1 டிரில்லியன் =1000 பில்லியன்).  முதல் பேரிடிப் பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட பின்னதிர்ச்சிகளில் பிழைத்த கட்டடங்களும் அடுத்துப் பிளந்து போயின.  அந்த அதிர்ச்சி ஆட்டங்கள் 60 மைலுக்கு அப்பாலிருந்த ரோமாபுரியிலும் எதிரொலித்தன!  அதில் தீவிர நில அதிர்ச்சி 5.6 ரிக்டர் அளவானது.

    fig-2-earthquake-force-in-tnt

    இத்தாலியின் “அப்பெனைன் மலைத் தொடரை” ஆக்கிய அடித்தட்டு நகர்ச்சியே (The Crustal Plates that formed Italy’s Apennine Mountains) அம்மலைத் தொடரின் ஒரு பகுதியைச் சரித்ததாகவும் தெரிகிறது.  மஞ்சள் நிற ஆ·ப்பிரிகன் அடித்தட்டும் செந்நிற அனடோலின் அடித்தட்டும் ஒன்றை ஒன்று நெருக்கி கிரே வண்ணத்தில் உள்ள யுரேசியா அடித்தட்டைக் காற்று வெளியில் தள்ளுகிறது.  அதாவது மரப்பலகைத் தளம் ஒன்றில் ஒரு கார்ப்பெட்டைப் பக்கவாட்டிலிருந்து தள்ளுவது போன்றது.  மேற்குப் பக்கத்தில் மலைகள், ஈர்ப்பியல் விசை கீழ் இழுத்து அடித்தட்டு நகர்ந்து நழுவிச் செல்கின்றன.  பூகம்பத்தால் நேரும் இந்த மலைகளின் மோதல்கள் பூதள ஆட்டங்களை உண்டாக்கிப் பின்னதிர்ச்சிகள் தொடர்ந்து நேப்பிள்ஸ் வரையும் செல்கின்றன!

    fig-4-the-himalayan-fault-line

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்! இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்! அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

    fig-5-the-indian-plate-monitoring-satellite

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன! வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள்!

    fig-5-indo-eurasian-plate-movements

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது! இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

    major-earthquakes-1

    World’s Most Earthquake Disasters

    +++++++++++++++

    தகவல்:https://www.usatoday.com/picture-gallery/news/world/2021/02/23/mount-etna-volcano-eruptions-rise/4554726001/

    ********************

    Share