Blog

  • இலக்கிய குண்டாயிசமும் கள்ள மெளனமும் – மதுமிதா நேர்காணல் – 2

    இலக்கிய குண்டாயிசமும் கள்ள மெளனமும் – மதுமிதா நேர்காணல் – 2

    சந்திப்பு: ஜெயந்தி சங்கர்

    கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதாவுடன் ஜெயந்தி சங்கரின் உரையாடல் தொடர்கிறது. மதுமிதா தனது இலக்கியப் பயணம், பல்வகை அனுபவங்கள், சிக்கல்கள், சவால்கள் உள்ளிட்ட பலவற்றையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இலக்கிய உலகில் இருக்கும் அரசியலையும் கள்ள மெளனத்தையும் உடைத்துச் சொல்கிறார். விறுவிறுப்பான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

    முந்தைய நேர்காணல்கள்:

    மதுமிதாவின் பயணங்கள் – ஜெயந்தி சங்கர் நேர்காணல் – 1

    சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கராஜா பிறந்தநாள்

    சிங்கராஜா பிறந்தநாள்

    இன்று சிங்கராஜாவின் பிறந்தநாள். அவருடைய நண்பர்கள் புள்ளிமான், சேவல், கோழி எல்லோரும் வந்திருக்காங்க. நித்திலா உருவாக்கிய காட்டுக்குள் இந்தக் கொண்டாட்டம் நடக்கிறது. நீங்களும் வந்து ஒரு வாழ்த்துச் சொல்லலாமே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாலம் கல்யாணசுந்தரம் ஐயா

    பாலம் கல்யாணசுந்தரம் ஐயா

    பாஸ்கர் சேஷாத்ரி

    இன்று பாலம் திரு கல்யாணசுந்தரம் அவர்களைச் சந்தித்தேன். எளிமைக்குப் பெயர் போனவர். எங்களைக் காத்திருக்கச் சொல்லவில்லை. நேரே வந்து அமர்ந்தார். எங்களைப் பற்றி அவர் விசாரித்த பின் அவரின் சேவை மனப்பன்மையைப் பற்றி வினவினேன். அலட்டிக்கொள்ளாமல், எல்லோரும் சின்ன வகையாய் செய்வதை தாம் பெரிதாகச் செய்வதாகச் சொன்னார்.

    கொஞ்சம் இளைத்துத்தான் போயிருக்கிறார். ஆனால் பேச்சின் தீர்க்கம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. ஓய்வுக்குப் பின், தனக்கு வந்த பணத்தை அப்படியே அறக்கட்டளைக்குக் கொடுத்தவர். தனக்குச் சில நிறுவனங்கள் தரும் உணவும் உடையும் போதும் என்கிறார். நாலு ஜோடி சட்டை வேட்டி தான் அவர் சொத்து. எல்லாவற்றிற்கும் காரணம் அவர் அம்மா சிறு வயதில் கண்டிப்புடன் கொடுத்த போதனை – கிடைக்கும் வருமானத்தில் பத்து சதவிகிதம் ஏழை எளியோர்க்கு அளித்து வாழ்ந்தால் அதுவே போதும் என்ற அவரின் அறிவுரையை இன்று வரை கடைப்பிடிக்கிறார். உணவிலும் கூட, கிடைத்ததைப் பகிர்ந்துவிட்டு வாழ்கிறார். பிரம்மச்சாரி. எண்பது வயதை நெருங்குகிறார். தமிழில் பேசுவதைப் பெரிதும் விரும்பகிறார். பட்டதாரி தான். ஆனாலும் அவருக்குத் தமிழ்க் காதல் அதிகம். கொடுப்பதற்கு ஒரு பெரும் மனம் வேண்டும். இந்திய சீனப் போர் வந்த போது பண்டித நேரு அவர்கள் வானொலியில் பேசுவதைக் கேட்டு, தன்னிடம் இருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலியை அன்றே கொடுத்தவர் . தர்மம் செய்ய எந்தக் கல்லூரியும் கற்றுக் கொடுக்காது.

    ஒரு நிகழ்ச்சி சொன்னார். சிறு வயதில் ஏதோ விற்று அம்பது ருபாய் கிடைத்து அவர் சட்டை ஒன்றை வாங்கிக் கொண்டாராம். அதை அம்மாவிடம் சொன்ன போது, பத்து சதிவிகித நிதியை ஒதுக்காத காரணத்தால் இவரைக் கன்னத்தில் அறைந்து, அந்தச் சட்டையை மண்ணெண்ணெய் கொட்டி எரித்தாராம். எவ்வளவு உறுதியான பெண்மணி பாருங்கள்..

    இவரை நான் சந்தித்தது பெருமையான விஷயம் – எங்களை அமர வைத்து அருகில் இருந்து சம்பாஷித்தது எனக்குக் கிடைத்த பெரும் ஆசி. இவரைப் போல தர்மம் செய்வதற்காகவாவது நான் நிறைய ஈட்ட வேண்டும். நான் எமோஷனல் ஆவது கொஞ்சம் இயல்பு தான். இன்று அந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலான எனது அவருடன் ஆன இருப்பு, என்னைச் சுத்தப்படுத்தி உள்ளது.

    இந்தச் சந்திப்பு நடந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுபோல் அது என் நினைவில் பசுமையாக உள்ளது.

    Share
  • ஆன்மீக ஒளிபரப்பிய  ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

    ஆன்மீக ஒளிபரப்பிய ஆற்றலுடை யோகர் சுவாமிகள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.     

    சித் என்றால் அறிவுஞானம்தெள்ளிய பார்வை, கூர் நோக்குவிரிந்த நோக்கு என்று பொருள் சொல்லப்படுவதால் – சித்தர்களை அறிவாளிகள்ஞானிகள்,  தெளிந்த பார்வையினை உடையவர்கள்கூர்ந்த நோக்கினை உடையவர்கள், கடந்து சிந்திப்பவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா!

    சித்தர்கள் என்பவர்கள் மானிடம் செழித்திட வாழ்ந்த மகா ஞானிகள் எனலாம். “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்னும் தத்துவமே அவர்களது இறுக்கமான தத்துவமாய் இலங்கியது எனலாம். எதையும் விரும்பார். எதையும் தமக்காக்கிட எண்ணார். மற்றவர் நலனுக்காய் அவர்கள் எப்பொழுதும் கைகொடுத்திடவே எண்ணுவார்கள். அதன் வழியில் பயணப்படுவார்கள்.

    மக்கள் சேவையினை மகேசன் சேவையாய்” எண்ணி இப்பூவுலகில் வாழ்ந்தவர் – பல சித்தர்கள் இருக்கிறார்கள்அப்படியான சித்தருக்கென்று ஒரு பரம்பரையே இருக்கிறது என்பதை வரலாற்றால் அறிகிறோம்.

    பாரத நாட்டில் திருமூலருடன் சித்தர் பரம்பரையினை இணைத்துக் கூறுவது வழக்கம். திருமூலர் மூவாயிரம் வருடங்கள் இம்மண்ணு லகில் வாழ்ந்து பல அரியபெரியபணிகளையெல்லாம் ஆற்றினார் என்று அறிகிறோம். அவரின் பேராற்றல் வியந்து பார்க்கக் கூடியதாகும். அவரின் திருமந்திரம் என்னும் திவ்விய நூல் பலவித கருத்துக்களின் பொக்கிஷமாய் மிளிர்கிறது எனலாம். திருமூலரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பாரத மண்ணில் வந்தார்கள். அவர்களில் சிலர் ஈழத்திலும் கால்பதித்து சமூக நலனுக்காய் பலவற்றைச் செய்தார்கள் என்றும் அறிய முடிகிறது.

    ஈழத்துச் சித்தர்கள் என்றும் சொல்லும் பொழுது மற்றய சித்தர்களை விட மாறு பட்டவராய்வேறு பட்டபராய் ஒருவர் யாழ்ப்பாண மண்ணிலே பிறந்துஎல்லா இடமும் திரிந்து, யாவருக்கும் சுமை தாங்கியாய்ஆன்மீக வெளிச்சமாய் விளங்கியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுவது சாலவும் பொருந்தும் என எண்ணுகின்றேன். ஆடையில் ஆரம்பரம் இல்லை. தனிப்பட்ட எந்த அலங்காரங்களும் இல்லை. எளிமையான வாழ்வு. பரிவாரங்கள் இல்லை. பவனி இல்லை. யாரும் சந்திக்கலாம். ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பதும் இல்லை. நாடியவர்களின் நலன் காக்கும் நன்மருந்து.

    நல்லூரில் தேரடியில் ஞானம் பெற்றுகொழும்புத் துறையில் குடிசையில் அமர்ந்து அருளாட்சி புரிந்து இறையடியைச் சரண் புகுந்த யோகர் சுவாமிகள்தான் அப்பெரும் சித்தராவார்.

    மாவிட்டபுரத்தில் சைவக்குடும்பத்தில் பிறந்து “சதாசிவன்” என்னும் பெயர் பெற்று கத்தோலிக்க பள்ளியில் “யோன்” என்று பெயர் மாற்றப்பட்டு நிறைவில் யோகநாதனாகிப் பின் “யோகர் சுவாமி” என்னும் சித்தராய் மலர்கிறார் இந்த மகான். தாயார் சிறுவயதில் இறக்கிறார். தந்தையார் மலை நாட்டில் வேலை செய்கிறார். மகனை எப்படியாவது படிக்க வைக்கத் தந்தை விரும்புகிறார்.

    தந்தையின் உடன் பிறந்த சகோதரன் சின்னையாவோ கொழும்புத் துறையில் கத்தோலிக்கப் பெண்ணை மணம் முடித்து அம்மதத்துள் நிற்கின்றார். அந்தச் சூழலில் சதாசிவன் – யோனாகி கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டதைக் கண்டதும்தந்தையுடன் பிறந்த சகோதரி முத்துப்பிள்ளை என்பவர் மருமகனை மீட்டு சைவத்துள் கொண்டுவர முயலுகின்றார். சமணத்துக்குச் சென்ற தம்பியை மீட்ட திலவதியார் போல – மருமகனைச் சைவத்துக்குள் இழுத்திட மாமியார் முன்வந்து நின்றார் எனலாம். மருமகனை மாற்று மதம் தீண்டா வண்ணம் சைவப் பற்றினை ஊட்டுவதற்காக மாமியார் முத்துப்பிள்ளை கையாண்ட வழிகள் நல்ல வெளிச்சமாய் அமைந்தது எனலாம். மாமியாரின் நெறிப்படுத்தலினால் – யாழ் மண்ணுக்கு நல்லதொரு சித்தர் கிடைக்கப் பெற்றார் என்பதும் பொருந்தும் அல்லவா!

    கந்தப்பெருமான் அருள்புரியும் மாவிட்டபுரத்தில் பிறந்தவர் கந்தப் பெருமான் அருள் புரியும் நல்லூரில் ஞானம் பெற்றார் என்பது திருவருள் அல்லால் வேறு எப்படி என்று  எடுக்க முடியும்!

    எல்லோரையும் போலவே சாதரணமாகவே பிறந்தார். சாதாரணமாகவே வளர்ந்தார். சாதாரணமாகவே படித்தார். அதன் பின் அரச உத்தியோகமும் பார்த்தார். அவரின் பிறப்பில்கூட எந்த அதிசயமும் நிகழவில்லை என்பதும் நோக்கத்தக்கது. ஆனால் பெரும் மகானாகபெரும் சித்தராக அவர் வளர்ந்து நின்றார் என்பதற்கு இறையருளை தான் காரணம் எனச் சொல்லக்  கூடியதாக இருக்கிறது .

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு “     

    என்ற வள்ளுவத்தின் கருவே யாழ் மண்ணின் சித்தரிடம் நிறைந்து காணப்பட்டது எனலாம்.

    மற்றவர்கள் துயிலும் பொழுது ஞானி விழித்திருப்பான்” என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அது முற்றிலும் எங்கள் யாழ் மண்ணின் ஆன்மீக ஜோதி யோகர் சுவாமிகளுக்கு மிகவும் பொருத்தமாய் அமைந்தது எனலாம். கிளிநொச்சியில் சுவாமிகள் நீர்ப்பாசனப் பகுதியில் கடமையாற்றும் வேளை – வேலை முடிந்து மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவர். சுவாமியோ அவ்வேளை நித்திரையை விட்டு விட்டு நெடுநேரம் “தியானத்தில்” இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. சுவாமிகள் இப்படி இரவில் நடந்து கொள்ளுவதை – அங்கு சென்று வரும் அவரின் மாமியாரின் மகனாகிய  வயித்தியலிங்கம் என்பார் சுவாமிகளுக்கு “விசர்போக்கு” ஆரம்பித்து விட்டது என்று கூறியதாகவும் அறிய முடிகின்றது. கிளிநொச்சியில் இருந்த காலத்தில் – தேவாரம்திருவாசகம்திருமந்திரம், அருணகிரியார் பாடல்கள்தாயுமானவர் பாடல்கள்சித்தர் பாடல்கள்ஒளயார் பாடல்கள்ஆகியவற்றை மனனம் செய்திருக்கிறார் என்றும் அறிய வருகிறது.

    சுவாமிகளின் வாழ்கையில் அவரது இருபத்தைந்தாவது வயது குறிப்பிடத் தக்க காலம் எனலாம். அவர் வேலையை விட்டு யாழ்மண்ணுக்கு வருகிறார். இலங்கைவந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரைக் காணும் பேறும் அவருக்கு வாய்க்கின்றது. சுவாமி விவேகானந்தருக்கு யாழ்மண்ணில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.

    இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்தும்விவேகானாந்தரிடத்தும்இராமகிருஷ்ண அமைப்பிலும் சுவாமிகளுக்கு மிகுந்த நம்பிக்கையும் ஈடுபடும் இருந்தது எனலாம். மயில்வாகனம் என்னும் மட்டுநகர் பெருமகன் இராமகிருஷ்ண அமைப்பில் இணைய விழைந்த வேளை அவரை ஆசீர்வதித்து வரவேற்று நின்றவர் யோகர் சுவாமிகளாவர். அந்த மயில்வாகனே பிற்காலத்தில் முத்தமிழ் வித்தகராய் முகிழ்த்த “சுவாமி பிபுலானந்த” அடிகள் ஆவர்.

    எப்பவோ முடிந்த காரியம்”

    முழுவதும் உண்மை”

    “நாமறியோம்”

    முழுவதும் உண்மை”

    இவையாவும் உபநிடத வாக்கியங்களின் மொழி பெயர்ப்புப்போல் தென்படுகிறதல்லவா ஆம் …. யாழ்மண்ணில் வந்து நின்ற மகா சித்தரான செல்லப்பா சுவாமிகளின் உள்ளத்தினின்றும் வெளிவந்த வாக்கியங்களே இம் மகா வாக்கியங்களாகும். இவற்றை உபநிடதம் அல்லால் வேறு என்ன வென்று சொல்ல முடியும் !

    நல்லூர் தெரிவில் சிரித்தபடி திரிந்தார். வெறித்த பார்வையராய் இருந்தார்.

    வேடம் எதையுமே விரும்பினர் அல்லர். கறுப்பு நிற மேனியும்கந்தையுமே

    அவரடையாளம். அவரைப் பித்தன் என்று மற்றவர்கள் பேசித்திரிவார்கள்.

    அவரை நாடி வந்தால் வந்தவரைப்பார்த்துச் சீறுவார். வீதியால் செல்லுபவர்களைப் பேசுவார். புகழ்சியே இகழ்ச்சியோ எல்லாவற்றையும் ஒன்றாகவே எடுத்துக்கொள்ளுவார். திருநீறு அணிய மாட்டார். நெற்றியில் பொட்டும் இருக்காது. முதல் கூறியதைத் திரும்பக் கூறாதவர். சாதியைசமயத்தைப் பேசி சங்கடத்துக்குள் அகப்படாதவர். இப்படியெல்லாம் இருந்தவர்தான் நல்லூர் தேரடியில் இருந்த பெரு ஞானிசித்தர்செல்லப்பராவர்.

    அந்த ஞானியை யோகர் சுவாமிகள் 1904 ஆம் ஆண்டில் நல்லூர் தேரடியில் காணுகிறார். “டேய் நீ யார்” என ஒரு உலுக்கு உலுக்கி “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்று உறுமினார். “தேரடாவுள்”,  “தீரடா பற்று”என்னும் உபதேசங்கள் அங்கு அவருக்குக் கிடைத்தன. செல்லப்பரின் உறுமல் யோகர் சுவாமிகளைக் கட்டிப் போட்டது.

    ஞான தேசிகனைச் சந்தித்ததும் அதனால் தன்னுள் ஏற்பட்ட பரிபூரண நிலையையும் சுவாமிகள் பாட்டாகவே காட்டியுள்ளார்.

    இருவருந் தேடிக் காணா இறைவன் என்போல் உருத்தாங்கி
    இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்னான் இவனென்ன
    ஒருவரு மறியா தோடியுலாவி உவகை பூத்த முகத்தினராய்
    ஒருநாள் என்றனை உற்று நோக்கி ஓர் பொல்லாப்பு மில்லையென்று
    அருவமுங் காட்டி உருவமுங் காட்டி அப்பாற் கப்பாலாம்
    அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டிக் அந்த மாதி யில்லாச்
    சொரூபமும் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சுமத்தில் மாட்டிவிட்டான்
    துன்பம் இறந்தன இன்பம் இறந்தன சோதிசோதி சிவசோதி”

    உபதேசம் கிடைத்தும் சுவாமிகள் குருவை விட்டகலாதே இருந்தார். ஆனால் குருவோ அவருக்குச் சோதனைமேல் சோதனைகள் கொடுத்தார். தேறினார் யோகர் சுவாமிகள். ஆனால் செல்லப்பரோ ஏறியே விழுந்தார். இறுதியில் இரு யானைகள் ஒரு தறியில் கட்டப்படாது” என்று செல்லப்பர் கூறி சுவமிகளைக் கலைத்துவிட்டார்.

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
    பற்றுக பற்று விடற்கு”

    இக்குறள் வழியில் யோகர் சுவாமிகள் இருந்தார். அதனால் குருவின் ஏச்சோபேச்சோ அவரை மாற்றிவிடக் கூடியதாக அமையவில்லை. எல்லாமே தனக்கு வாய்த்த உபதேசம் என்று சுவாமிகள் எடுத்துக்கொண்டார்.

    குருநாதர் செல்லப்பர் உடல்நலம் இல்லாது படுத்திருந்த வேளை சுவாமிகள் அவரைப் பார்க்கச் சென்றாராம். “என்ன பார்க்கப் போகிறாய்நில் அங்கேஉன்னைச் சிந்தித்துப் பார்” என்றாராம் செல்லப்பர். அவ்வார்த்தையுடன் திரும்பிய சுவாமிகள் அந்தப்பக்கமே போகவில்லை என்று அறிய முடிகிறது.

    யோகர் சுவாமிகள் கொழும்புத்துறையில் ஒரு சிறு கொட்டிலில் தனது வாழ்வினை ஆரம்பிக்கிறார். அங்கு ஆன்மீக ஒளி அனைவருக்கும் கிடைக்கிறது. சாதிசமயஇனமொழி, வேறுபாடுகளைக் கடந்து பலருமே அவரை வந்து வணங்குகிறார்கள். ஆசிகளைவாழ்த்துகளைப் பெற்று திருப்தி அடைகிறார்கள்.

    யோகர் சுவாமிகளை நாம் இன்றும் நினைத்து அவருக்குக் குருபூசை வழிபாடுகள் செய்வதற்குக் காரணம் அவரின் வாழ்வியல் முறைகளே எனலாம்.

    அவரின் பூரணமான துறவு நிலை அவரை பெரும் ஞானியாய் சித்தராய் மிளிர வைத்திருக்கிறது எனலாம். பலரும் சமூகத்தில் துறவு நிலையினை மேற் கொண்டு பிரமச்சாரிகளாய் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வியலையும்  யோகர் சுவாமிகளின் வாழ்வியலையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதன்று. அவர்களின் நிலை வேறு. சுவாமிகளின் நிலை வேறு.

    தமக்கென வாழா பிறர்க்குரியவராய்” சுவாமிகள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தனக்கு நாளைக்குத் தேவை என்று கருதி எதையும் அவர் வைத்திருக்க எண்ணுவதே இல்லை. அன்பர்கள் கொடுப்பதில் ஒரு சிறுபகுதியை பயன்படுத்துவார். மற்றவற்றை எல்லாம் பங்கிட்டு அளித்து விடுவார். பணம்கூட அவருக்கு ஒரு பொருட்டல்ல. தேவையான பொழுது அவருக்குக் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக பொன்னோபொருளோ எதையும் சுவாமிகள் மனம் நாடுவதே இல்லை.

    பற்று இல்லாதவனிடத்து எல்லாப் பொருள்களும் வந்து சேரும்” என்பதற்கு சுவாமிகள் அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு எனலாம். இன்று சித்தர்கள்ஞானிகள்ஆன்மீக வழிகாட்டிகள் என்று நாட்டில் தலைவிரித்து நிற்கும் பலர் பொருள் ஒன்றே குறிக்கோளாய் மனமிருத்தி மக்களை ஏமாற்றி ஆன்மீகத்தையே இழிவு படுத்திக் கேவலத்துக்கு ஆளாகி நிற்பதை இன்று யதார்தமாகவே காணமுடிகிறதல்லவாஆனால் யோகர் சுவாமிகளோ பற்றினைப் பற்றா நின்றவர்”. பரமனைப் பற்றினார். பண்புகளைப் பற்றினார். சமூக நலன்களைப் பற்றினார். ஆன்மீகத்தைப் பற்றினார். அக ஒழுக்கத்தைப் பற்றினார். அன்பைப் பற்றினார். ஆறுதலைப் பற்றினார்.

    பலவித கொள்கையினை உடையவர்கள்அரசியலில் உயர் நிலையில் இருப்பவர்கள்அரச உயர்பதவிகளில் இருப்பவர்கள் என்று பலவகைப் பட்டவர்கள் சுவாமிகளை நாடி வருவர். வருபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் நடந்திட சுவாமிகள் விரும்பியதே இல்லையாம். இப்படி சுவாமிகள் நடப்பதால் வருபவர்கள் மனதில் – தங்களின் கொள்கையினை உடையவர் தான் சுவாமிகள் – என்னும் எண்ணம் உருவாகி விடுகிறது எனலாம்.

    பார்க்கும் இடமெங்கும் நீக்கமறப் பரம் பொருளையே”  சுவாமிகள் காண்பதனால் அவருக்கு வருபவர்கள் வேறுபாடுகள் தென்படுவதில்லை எனலாம்.” ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் செய்ய வேண்டும்” என்பதை வருபவர்களுக்கு சுவாமிகள் பெரும் உபதேசமாக வழங்குவார். பஞ்சமா பாதகங்களை ஒருவன் ஒழித்தாலே வாழ்வு சிறக்கும் என்பது சுவாமிகளின் பெரு நம்பிக்கையாய் அமைந்தது. துறவு பூண்டுதான் உண்மையினை உணர வேண்டும் என்பதில்லை. இல்லறத்தே இருந்தாலும் நல்லறமாய் வாழ்க்கையினை அமைத்துக் கொண்டால் உண்மையினை உணரலாம் என்பது சுவாமிகளின் நல்ல தொரு தத்துவமாயும் வாழ்வியலுக்கு ஏற்ற வழிகாட்டியாயும் அமைந்தது எனலாம்.

    உலகத்தைத் திருத்த முயலுதல் என்பது நாய் வாலை நிமிர்த்த முயல்வது போலாகும். உன்னை முதலில் திருத்த முயற்சி செய். உலகத்துக்கு நன்மை செய்ய முற்பட்டால் நாமே அதிக நன்மையை அடைகிறோம் என்பதை நாம் அனைவருமே உணருதல் வேண்டும் என்னும் அரிய தத்துவத்தை சுவாமிகள் மொழிந்திடுவார். இது யோகர் சுவாமிகளின் சமுதாய அக்கறையினைப் பறைசாற்றி நிற்கிறதல்லவாமுற்றும் துறந்த பற்றற்ற சித்தரான யோகர் சுவாமிகளின் இச்சிந்தனையாலேதான் இன்றும் நாம் அவரை நினைக்கவும் பூசிக்கவுமான நிலை ஏற்படுகிறது எனலாம். துறவி என்றால் காட்டுக்குப் போய் கடுந்தவம் ஆற்றுவதல்ல. நாட்டுக்குள்நாட்டு மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து நாட்டுமக்களின் நல் வாழ்வுக்கு வெளிச்சமாய் இருப்பதுதான் சரியான துறவியின் இலட்சணம்இலக்கு என்பதைக் காட்டியவர் யோகர் சுவாமிகள் என்பதை எவருமே மறுத்துரைத்துவிட முடியாது! அதனால் தான் அவரை நாடு கடந்தும் மொழி கடந்தும் இனங்கடந்து பின்பற்றிப் பல சீடர் பரம்பரையும்நல்ல வழிகாட்டுதல்களும் மலர்ந்திருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    யோகர் சுவாமிகளின் நெறிப்படுத்தலால் பல இளைஞர்கள் வாழ்விலே திருந்தி இருக்கிறார்கள். பொதுமக்களுக்கான சேவைகளை இன்றும் யாழ்மண்ணில் செய்து கொண்டு பல உள்ளங்கள் இருக்கின்றன என்றால் அதற்கெல்லாம் வித்தாகி உரமாகி நிற்பவர் யோகர் சுவாமிகளே ஆவர். ஆண்டவன் இல்லை என்று அடித்துக் கூறியவர்கள் பலர் சுவாமிகளின் அறிவுரைகளால் ஆன்மீகத்தில் நாட்டங் கொண்டு ஆண்டவன் புகழ் பாடும் நிலையில் வந்து நின்றார்கள் என்பதும் அறியக்கூடிய ஆனந்தமான அவசியமான தகவல் எனலாம்.

    திருவாசகத்தை பெரிதும் சுவாமிகள் விரும்பினார். திருவாசகத்துள்ளும் சிவபுராணத்தை அவர் முக்கியத்துவப் படுத்தினார். ஈழத்தில் சிவபுராணம் பள்ளிகள் தோறும் வெள்ளிக் கிழமைகளில் பிராத்தனை மண்டபத்தில் படிக்கப்படுவதற்கும் யோகர் சுவாமிகளின் வழிகாட்டலே துணையாய் அமைந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிவதொண்டன் நிலையம் சுவாமிகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இராகமாகப் பாடி திருமுறைகளை ஓதுவதில் சுவாமிகள் பெரு விருப்புடையவராக இருந்தார் எனலாம். அவரின் திருவாக்காய் மலர்ந்திருக்கும் “நற்சிந்தனைகள்” மிகப் பெரிய தத்துவக் கருத்துகளை உள்ளடக்கிய எமக்கு வாய்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

    சித்தர் என்றால்யோகி என்றால்ஞானி என்றால்சாத்திரம் சொல்லுவார். தொட்டவுடன் நோய்களைப் போக்குவார். கேட்டவற்றை உடனே கண்முன்னே வரவழைத்துக் கொடுப்பார். உருவை மாற்றுவார். சித்துக்கள் காட்டுவார். என்றெல்லாம் நாம் அனைவரும் எண்ணியே நிற்கின்றோம். இப்படியெல்லாம் செய்யும் நிலைக்கும் ஞானத்துக்கும் எந்தவித தொடர்புமே இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும். இதை நம்மில் பலர் அறியவில்லை எனலாம்.

    யாழ்மண்ணின் யோக புருஷரான யோக சுவாமிகள் மானிடம் தளைக்க நல்ல ஆன்மீக ஒளி பாய்ச்சிட வந்த மகானாகவே விளங்கினார். அவரிடமும் எதிர்காலத்தை அறியும் ஆற்றலும்வருகின்ற அல்லல்களை அறியும் ஆற்றலும்நிரம்பியே இருந்தது. ஆனால் அவர் அவற்றை மக்கள் மத்தியில் காட்டி செல்வாக்கினைப் பெற்றிட ஒரு நாளுமே எண்ணம் கொண்டவராக இருந்ததே இல்லை. தனது மனதுக்குப் பட்டால் சிலவேளை சிலருக்கு வழி காட்டியிருக்கிறார் என்பதை அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ள முடிகிறது. “பெரியோர்களை நாடுவதன் தலையாய நோக்கம் நம்மைச் சீர்படுத்துவதற்கே அன்றி வேண்டியதைப் பெறுவதற்கு அல்ல” என்னும் கருவினைத் தமது உள்ளத்தில் கொண்டு செயற்பட்டபடியால் தான் இன்றும் நாம் யோகர் சுவாமிகளை நினைத்து அவரைப் போற்றுகிறோம் எனலாம்.

    Share
  • இதயம் திறந்த அனுபவங்கள் – 1

    இதயம் திறந்த அனுபவங்கள் – 1

    வெ. சுப்ரமணியன்

    சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் எனக்கு இதயத் தமனி அடைப்புக்காகச் செய்யப்படும் பக்க வழி ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG) செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை என்றாலே பெரும்பாலானவர்களின் மனதில் இரு பெரும் அச்சங்கள் ஏற்படுகின்றன. முதலில் திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சங்கள் வரை செலவு செய்ய வேண்டுமே என்பதும் அடுத்தது  அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து உயிர் பிழைத்து வருவோமா என்பதும். இந்த இரண்டு அச்சங்களுமே இதய நோயாளிகளில் பலரைச்  சரியான நேரத்தில் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போடச் செய்கிறது.

    உண்மையில் அறுவைச் சிகிச்சை குறித்த மேற் சொன்ன இரண்டு அச்சங்களுமே பொருளற்ற தேவையற்ற அச்சங்களே.

    இந்தத் தொடர் கட்டுரைகள் சற்று நீண்டதாக இருந்த போதிலும் முழுவதும் படிப்பவர்களுக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை (Open heart surgery) குறித்த  புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

    தற்போதய சூழலில் மருத்துவம் என்பது எப்படி நாள்தோறும் நவீனமாகி வருகிறதோ அதேபோல அதிகச் செலவு ஏற்படுத்தக் கூடுதாகவும் உள்ளது. எனவே அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க அனைவரும் கண்டிப்பாக ஆரோக்கியக் காப்பீடு (Health insurance Policy) எடுத்துக் கொள்வதே சரியான தீர்வாக இருக்கும்.

    பலரும் ஆயுள் காப்பீடு (Insurance) என்றாலே ஆயுள் காப்பீடு (Life insurance) என்றே பொருள் கொள்கின்றனர். ஆயுள் காப்பீடும் ஆரோக்கியக் காப்பீடும் வேறு வேறு என்பதே இன்னும் நம் நாட்டில் உணரப்படவில்லை. மேலும் ஆரோக்கியக் காப்பீட்டின் முக்கியத்துவம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் பலராலும் உணரப்படுகிறது. என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன், அறுவைச் சிகிச்சைக்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் போது எந்தக் கட்டணமும் செலுத்தாமலே சேர என்னால் முடிந்தது. தவிரவும் என்னுடைய சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து புறப்படும் நாளில் அதுவரை சிகிச்சைக்கான செலவில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக நேரடியாக மருத்துவமனையின் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது.  மீதமுள்ள சுமார் 25 விழுக்காடுத் தொகையை மட்டும் செலுத்தி வீட்டிற்கு வர முடிந்தது. ஆகவே நிதிப் பிரச்சினை அதிகம் சிரமத்தைத் தரவில்லை.

    ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance)

    எந்த ஒரு நோயாளியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இரண்டு வகையான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதாவது, ஒன்று திடீர் உடல்நலக்குறைவு அல்லது விபத்து காரணமாக அவசர சிகிச்சைக்காகச் (emergency treatment) சேர்க்கப்பட்டுப் பின்னர் அதன் தொடர்ச்சியாக செய்யப்படும் சோதனைகள் அடிப்படையில் அறுவைச் சிகிச்சைக்கோ அல்லது வேறு வகையான சிகிச்சைக்கோ அனுமதிக்கப்படலாம்.

    இத்தகைய நேர்வில் நோயாளி மருத்துவக் காப்பீடு உடையவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கும், (Insurance company) காப்பீட்டு முகவருக்கும் (Insurance agent) தகவல் தொலைபேசி மூலம் சொல்லப்பட வேண்டும். .

    அடுத்து முடிந்த அளவுக்கு விரைவாகக் காப்பீடு ஆவணங்களையும், உரிய படிவங்களையும் பிழைகள் இன்றிப் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் சமர்ப்பித்து விட வேண்டும். காப்பீட்டு ஆவணங்கள் மருத்துவமனையில் சமர்ப்பிக்கப்பட்டதும் அவை மருத்துவமனை மூலமாகக் காப்பீட்டு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும். அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவமனை மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு காப்பீட்டு நிறுவனம் முன்பணம் வழங்குவது தொடர்பான ஒப்புதலை மின்னஞ்சல் வழியே பதிலாக அனுப்பி விடும். உங்கள் காப்பீட்டு முகவருக்குத் தனிப்பட்ட முறையில் தகவல் அளித்தால் அவரால் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு முன்பணத்திற்கு ஒப்புதல் வழங்குவதைத் துரிதப்படுத்தவும், ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களையும், காப்பீட்டுத் தொகை உரிமை கோரல் குறித்த (Claim) சரியான வழிகாட்டலையும் தர இயலும்.

    ஆரோக்கியக் காப்பீட்டின் மூலம் (Health insurance) மருத்துவமனையில் முன்பணமில்லாச் சிகிச்சைக்காகச் (Cashless treatment) சேர்க்கையை எளிதில் (Admission) பெற இயலும். நோயாளி சிகிச்சை பெறும்போதே ஒரு குறிப்பிட்ட முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்பளிப்பு (sanction) செய்யப்படும். ஒருவேளை முன்பணம் (advance amount) செலுத்தி இருந்தாலும் நோயாளி குணமடைந்து வீடு திரும்பும் போது தரப்படும் மொத்த செலவுப் பட்டியலில் அத்தொகை மருத்துவமனையால் காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் தொகையுடன் சேர்த்து வரவு வைக்கப்பட்டு மீதம் செலுத்த வேண்டிய தொகை எதாவது இருப்பின் அதற்கு நேர் (adjust) செய்து கொள்ளப்படும் அல்லது திரும்பத் தரப்படும்.

    இரண்டாவது வகை ஏற்கனவே மருத்துவர்களால் திறந்த இதய அறுவைச் சிகிச்சையோ அல்லது வேறு வகையான அறுவைச் சிகிச்சையோ மேற் கொள்ளப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நோயாளி தனது வசதிக்கு ஏற்பத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்க்கை (inpatient admission) பெறுவது.

    மருத்துவக் காப்பீடு உள்ளவர்கள் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காகத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் சேர்வதாக இருந்தால் சேர்க்கைக்கு (admission)  ஓரிரு நாட்கள் முன்னதாகச் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். உள் நோயாளியாகச் (Inpatient) சேருவதற்கு முந்தைய நாளில் மருத்துவக் காப்பீடு குறித்த ஆதாரங்களையும், உரிய வடிவங்களையும் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் கொடுத்தால் அவர்கள் மூலம் காப்பீட்டு நிறுவனத்திற்கு விவரம் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். அனுப்பப்பட்ட தகவல்கள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சைக்குத் தோராயமாகச் செலவாகும் என்று மருத்துவமனையால் குறிப்பிடப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடுத் தொகைக்கு முன்பணமாக காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விபரம் நோயாளிக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

    இத்தகைய நேர்வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நோயாளி முன் கட்டணமாக எதுவும்  செலுத்தத் தேவையில்லை. முன் பணமாகக் காப்பீட்டு நிறுவனத்தால்  ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை  மருத்துவமனையின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு விடும்.

    குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) குறித்த அனைத்து ஆவணங்களும் வீட்டில் எங்கிருக்கிறது  என்ற விவரத்தைக்  குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பது நல்லது. இதனால் குடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல்நலப்  பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது முன்பணம் செலுத்துவது தொடர்பாக சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

    எந்த ஒரு அறுவைச்சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு கோவிட்- 19 (Covid -19), எச்.ஐ.வி (HIV – AIDS),  மார்பு எக்ஸ் கதிர் படம்( Chest  x – ray),  இருபரிமாண வண்ண டாப்ளர் வரிக் கண்ணோட்டம் (2D colur Doppler scan) மற்றும்  இரத்தப் பரிசோதனைகள்(Blood tests) பலவும் செய்யப்பட்டு நோயாளியின் உடல் நிலை மருத்துவர் குழுவால் நன்கு ஆராயப்படுகிறது. அதன் அடிப்படையில் மட்டுமே நோயாளியின் அறுவைச் சிகிச்சைக்கான உடற் தகுதி முடிவு செய்யப்படுகிறது. அதன் பின்னரே நோயாளிக்கு ஏற்ற வகையில் உரிய சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. ஆகவே இரண்டாவதாகக் கூறப்பட்ட அச்சமும் அர்த்தமற்றதே. இனி சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை குறித்து விரிவாகக் காண்போம்.

    இதயத் தமனி இரத்தக் குழாய் அடைப்பு (Coronary Artery Blockage)

    இதய இரத்தத் தமனி அல்லது நாடி குழாயில் (Artery) அடைப்பு (block) ஏற்படும் போது மேற்கொள்ளப்படுவதே பக்கவழி இரத்தக்குழாய் ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG Surgery). இந்தச் சிகிச்சையே  நாம் பேச்சு வழக்கில் “பைபாஸ் சர்ஜரி” (Bypass surgery) என்று குறிப்பிடுகிறோம். இக்கட்டுரையில் பைபாஸ் சர்ஜரி  குறித்தே காணப் போகிறோம்.

    இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD)

    சிஏபிஜி (CABG) என்பது இதயத் தமனி இரத்தக்குழாய் நோய்க்கும் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் செயல்முறையாகும் (Procedure). இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD) என்பது இதயத் தமனி இரத்தக் குழாய்கள் விட்டம் குறுகிப் போவதாகும். இதயத் தசைக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச் சத்துக்களை வழங்குபவை  இதயத் தமனி இரத்தக் குழாய்கள். கொழுப்புப் பொருட்கள் இதயத் தமனி இரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் சி.ஏ.டி Coronary Artery Disease (CAD) ஏற்படுகிறது. இதனால் இரத்தக் குழாய் குறுகிப் போய் விடுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதயத்தசைக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிந்த இரத்தம் கிடைப்பது குறைந்து போகிறது.

    இதயத் தமனி இரத்தக்குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச்சிகிச்சையை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG) அடைபட்ட மற்றும் குறுகிப் போன ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரத்தக்குழாய்களுக்குச் சிகிச்சையளித்து இதயத் தசைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மருத்துவரால் மேற்கொள்ளப்படுகிறது.

    இதய இரத்தக்குழாய் நோயின் அறிகுறிகள் (Symptoms of Coronary Artery Disease – CAD)

    அடுத்து இதய இரத்தக்குழாய் நோயின் (Coronary Artery Disease – CAD) அறிகுறிகளாக நெஞ்சுவலி, கடும் சோர்வு, படபடப்பு, இயல்புக்கு மாறான சீரற்ற இதயத் துடிப்பின் தாள லயம் (Heart beat rhythm) மூச்சுத்திணறல், கை கால்களில் வீக்கம், செரிமானப் பிரச்சினை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும் இதய இரத்தக்குழாய் நோயின் ஆரம்ப நிலையில் துரதிருஷ்டவசமாக எந்த அறிகுறியும் வெளிப்படாமல் இருக்கலாம். இதனால் காலம் செல்லச்செல்ல தமனி இரத்தக்குழாய்களில் பெரிய அளவில் அடைப்பு அதிகரித்துச் சிக்கலை ஏற்படுத்தும் வரை நோயின் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும். இதனால் இதயத் தசைக்குப் போதுமான அளவிற்கு இரத்தம் கிடைப்பது குறைந்து கொண்டே போகும். இதயத் தசைக்குத் தடைப்படும் இரத்த ஓட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் இரத்த இதயத் தசையின் எந்தப் பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறதோ அப்பகுதியில் உள்ள திசுக்கள் இறந்து விடுவதால் மாரடைப்பு ஏற்படும். இது தவிர வேறு பிற காரணங்களுக்காகவும் மருத்துவர் சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம்.

    நகர்ப்புறங்களில் வசிக்கும்  பலரது இல்லங்களில் குழாய்க் கிணறுகளிலிருந்து (Bore wells) பெறப்படும் நீரையும் உபயோகிக்கிறோம். இந்த நீரில் கரைந்துள்ள உலோக உப்புக்கள் அதிக அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அந்த உப்புக்கள் குழாய்களின் உட்புறம் தொடர்ந்து படிந்து குழாய்களின் விட்டம் குறுகலாகும். இதன் காரணமாகக் குழாயில் நீர் செல்வது குறைந்து விடும். இந்தக் குறைபாட்டைக் கவனிக்காவிட்டால்  குழாயில் பயன்பாட்டுக்கு நீர் வருவதும் நீர் மேல் நிலைத் தொட்டிக்கு மேலேற்றப்படுவதும்  முற்றிலுமாகத் தடைப்பட்டு விடும். ஒரு கட்டத்தில் நீரிறைக்கும் மோட்டாரால் நீரை மேல் நோக்கித் தள்ள முடியாத நிலையில்  சூடாகிப் பழுதாகும்.  இதயத்தமனி இரத்தக் அடைப்பு நிகழ்வும் கிட்டத்தட்ட இது போன்ற நிலையே.

    முன்பெல்லாம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் வழியாகச் செல்லும். இப்போது நெடுஞ்சாலைகளில் பல நகரங்களை நகருக்குள் செல்லாமல் தவிர்த்துப் பயணிக்க புறவழிச் சாலைகள் (Bypass roads) போடப்பட்டுள்ளன. புறவழிச்சாலைகள் நெடுஞ்சாலையில் நகரங்களின் எல்லை தொடங்கும் முன்பாகவே பிரிந்து நகரங்களின் எல்லையைக் கடந்த பின்னர் மீண்டும் நெடுஞ்சாலையுடன் இணையும். இதனால் வாகனங்கள் நகரங்களின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துத் தடையின்றி விரைவாகச் செல்ல இயலுகிறது.

    இதய இரத்தக்குழாய் அடைப்புக்காகச் செய்யப்படும் ஒட்டு அறுவைச் சிகிச்சையும் (CABG – Coronary Artery Bypass Grafting surgery)  கிட்டத்தட்ட போக்குவரத்து தடைபடுவதைத் தவிர்க்கப் புறவழிச்சாலை ஏற்படுத்துதைப் போன்றதே.

    கொழுப்புப் பொருட்கள் படிந்து படிந்து குறுகலாகிப் போன தமனி இரத்தக் குழாய்களுக்கு மாற்றாக இணைப் பக்கப்பாதைகளை  நம் உடலின் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆரோக்கியமான தமனி  குழாய்களைக் கொண்டு தைத்து ஒட்டும்  அறுவைச்சிகிச்சைதான்  சி.ஏ.பி.ஜி வழி முறையாகும். இத்தகைய சிகிச்சைக்காக எடுக்கப்படும் இரத்த நாளம் காலிருந்தோ (leg), மார்பிலிருந்தோ (chest) அல்லது கையில் மணிக்கட்டுப் பகுதியிலிருந்தோ (wrist) எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட இரத்தக் குழாயின் ஒருமுனை  இரத்தக்குழாயின் அடைபட்ட பகுதிக்கு மேல்புறத்திலும் மறுமுனை அடைபட்ட பகுதிக்குக் கீழ்ப்புறத்திலுமாக இணைக்கப்படுகிறது. இதனால் இரத்தம் புதிய ஒட்டு இரத்தக்குழாயில் செல்வதால் இரத்த அடைப்பு தவிர்க்கப்படுகிறது.

    Picture courtesy:
    https://www.mayoclinic.org/tests-procedures/coronary-bypass-surgery/about/pac-20384589#dialogId19167970

    அடைபட்ட இதயத் தமனி இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG)

    அடைபட்ட இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சைக்கு  (சி.ஏ.பி.ஜி) மார்பைத் திறக்க மருத்துவர் மார்பில் கூரான கத்தியால் நீண்ட கீறல் (Incision) இடுவார். ஸ்டெர்னம் அல்லது மார்பெலும்பு என்பது மார்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நீண்ட தட்டையான எலும்பு ஆகும். இது குருத்தெலும்பு வழியாக விலா எலும்புகளுடன் இணைகிறது மற்றும் விலா எலும்புக் கூண்டின் முன்புறத்தை உருவாக்குகிறது, இதனால் இதயம், நுரையீரல் மற்றும் பெரிய இரத்த நாளங்கள் காயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஒரு கழுத்தணியைப் போல வடிவமைக்கப்பட்ட இது உடலின் மிகப்பெரிய மற்றும் நீளமான தட்டையான எலும்புகளில் ஒன்றாகும்.

    Picture courtesy: https://teachmeanatomy.info/thorax/bones/ribcage/

    பின்னர் (Sternam) நீளவாக்கில் பாதியாக வெட்டிப் பரப்பப்படும். இதனால் மார்புக்கூடு திறக்கப்பட்டு  இதயம் வெளிப்படும். இந்த நிலையில் மருத்துவர் இதய நுரையீரல் பக்கவழி இயந்திரத்தின் (Heart – Lung bypass machine) குழாய்களை இதயத்தில்  செலுத்தி இயந்திரத்தை இதயத்துடன் இணைத்து  விடுவார். இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் இதயத்தின் பணியான இரத்தத்தை அழுத்தி இரத்தக் குழாய்க்குள் செலுத்துவதையும் நுரையீரலின் அசுத்த  இரத்தத்தில் சேர்ந்துள்ள கார்பன் டை ஆக்சைடை அகற்றி அதில் ஆக்ஸிஜனேற்றுவதையும் இயந்திரம் மேற்கொள்ளும்.

    Picture courtesy: https://www.heart-valve-surgery.com/

    பலகாலமாகத் திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேலே குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதே பெரும்பாலும் பல சூழல்களிலும் விரும்பப்படுகிறது.

    இது ஒருபக்கம் இருந்தாலும் குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery) செய்யப்படுகிறது.

    குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery)

    1990 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சைச் செய்முறை (Minimally Invasive Surgical Procedure) அறிமுகமானது. இதில் இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படாமலே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதயநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் குறைந்தபட்ச ஊடுருவு இருதய அறுவை சிகிச்சையும் மிக நுட்பமானதோர் செய்முறையாகும். இது சாவித்துவார (Key hole surgery) அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

    வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையில் ஏற்படுத்தப்படும் பெரிய கீறல்களுக்கு மாற்றாக உடலில் சிறிய சாவித் துவார அளவிலான கீறல்களை (incisions) உருவாக்குவதன் மூலம் இந்தச் செய்முறையில் (Procedure) அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. பெரும்பாலும் சிறிய சாவித் துவாரக் கீறல்கள், சிறப்பு அறுவைச் சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

    Original picture courtesy : http://www.bypasssurgeryofmumbai.com/mica.aspx

    வழக்கமான அறுவை சிகிச்சைக்கு ஆறு முதல் எட்டு அங்குல நீளமுள்ள கீறல்கள் தேவைப்படும். ஆனால் குறைந்தபட்ச ஊடுருவு இதய அறுவை (Minimally Invasive Cardiac surgery)  சிகிச்சைக்கான கீறல்கள் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குலங்களே இருக்கும். மேலும் சாவித் துவார அறுவை சிகிச்சைகளில்  வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட மீட்சி நேரம் (Recovery time) மிகக் குறைவாகவே இருக்கும். மருத்துவர்கள் குறைந்த பட்ச ஊடுருவு அறுவை சிகிச்சைக்காக எல்லா இதய நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்யப்படுவதில்லை. சிகிச்சைக்குத் திட்டமிடும் முன்பு நோயறிதல்  தொடர்பான சோதனை முடிவுகளை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, நோயாளி குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery) ஏற்றதாக இருக்குமா அல்லது வழக்கமான திறந்த இதய அறுவைச் சிகிச்சையே (open heart surgery) அவருக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்பதை முடிவு செய்வார்கள்.

    குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery)  குறிப்பிட்ட சில இதய அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்துவதற்கே  அதிகம் விரும்பப்படுகிறது.

    எந்திரனியல் இருதய அறுவை சிகிச்சை (robotic heart surgery) என்பது மார்பில் மிகச் சிறிய வெட்டுத் துளைகள் (incisions) மூலம் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை ஆகும்.

    இதில் மிகச் சிறிய செயற் கருவிகளையும் (tiny instruments),  மற்றும் எந்திரனால் கட்டுப்படுத்தப்பட்ட கருவிகளையும்  (Robot controlled tools) பயன்படுத்துவதன் மூலம், திறந்த இதய அறுவை சிகிச்சையை விடக் குறைவான அளவில் ஊடுருவும் இதய அறுவைச் சிகிச்சையை (Minimally Invasive heart surgery) இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் செய்ய முடியும். இந்தச் செயல்முறை (Procedure) அதிக அளவில் பயன்படுத்தப்படும் எந்திரனின் (Robot) உற்பத்தியாளரின் பெயராலும் டா வின்சி அறுவை சிகிச்சை (Da Vinci Surgery) என்றும்  சில நேரங்களில்  அழைக்கப்படுகிறது.

    Picture courtesy: https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/robotic-cardiac-surgery?amp=true

    எந்திரனியல் இதய அறுவை  சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்தல்

    • இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தமனி பக்கவழி செயல்முறையில் (Artery Bypass Procedure)
    • கடினமான, விறைப்பான அல்லது கசியும் இதயத் தடுக்கிதழ்களை (Valves) சரிசெய்யும் போது அல்லது மாற்றும் போது
    • இதய ஊற்றறைத் துடிப்பு (Atrial fibrillation) என்பது அரித்மியா (arrhythmia) என்னும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மருத்துவநிலைகளின் (group of medical condition) பொதுவானதோர் வகை. நிமிடத்திற்கு100 துடிப்புகளை விடக் கூடுதலான அல்லது  நிமிடத்திற்கு 60 துடிப்புகளை விடக் குறைவான இதய ஊற்றறைத் துடிப்பைச்  சரி செய்ய
    • இதயத்தில் உள்ள கட்டிகளை(tumor) அகற்றுதல்
    • பிறவியிலேயே காணப்படும் இதயக் குறைபாடுகளை (congenital defects) நீக்குதல்

    போன்ற பிரச்சினைகளுக்காகப் பொதுவாக மருத்துவர்கள் எந்திரனியல் இதய அறுவை சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்கிறார்கள்.

    இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும் எதாவது அபாயம் அல்லது வெற்றியை உறுதி சொல்ல இயலாத நிச்சயமற்ற தன்மை கட்டாயமாக உண்டு. நூற்றுக்கு நூறு எந்தச் சிறு அபாயமோ அல்லது நிச்சயமாக வெற்றி தரக் கூடியதாகவோ எந்தச் செயல்பாடுமே இருப்பதில்லை. அது இயற்கையானது. மருத்துவமும் இதற்கு விலக்கில்லை. சொல்லப்போனால் அறுவைச்சிகிச்சையில் எதிர்பாராத சிக்கல்களும் அதனால் அபாயங்களும் ஏற்பட மிக அதிகமான வாய்ப்புகள் உண்டு. இதய இரத்தக் குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச் சிகிச்சையிலும் (CABG) எதிர்பார்க்கப்படும் மற்றும் எதிர்பாராத அபாயங்களுக்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.

    அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட வாய்ப்புள்ள அபாயங்கள்

    • அறுவைச் சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பின்னர் இரத்தப் போக்கு (Bleeding)
    • இரத்த உறைதல் ஏற்படும் நேர்வில் பக்கவாதம் (stroke) ,மாரடைப்பு (Heart attack) அல்லது நுரையீரல் பிரச்சனைகள் (Lungs Problem)
    • கீறல் (incision) செய்யப்பட்ட இடங்களில் நோய்க் கிருமித் தொற்று
    • நுரையீரல் அழற்சி (pneumonitis)
    • சுவாசக் கோளாறுகள்(Breathing problems)
    • கணைய அழற்சி (Pancreatitis)
    • சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure)
    • இயல்புக்கு மாறான இதயத்தின் தாளலயம் (abnormal heart rhythm)
    • இணைப் பக்கவழி ஒட்டு தோல்வி அடைதல் (Bypass grafting failure)
    • இறப்பு(Death) ஆகிய மேற் குறிப்பிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

    இவை தவிர நோயாளியின் தனிப்பட்ட உடல்நிலை சார்ந்து வேறு அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால் அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளும் முன்பாக நோயாளிகள் தங்கள் மருத்துவருடன் அவர்களின் கவலைகள் குறித்து தயக்கமின்றி விவாதித்தல் அவசியம்.

    அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய நாளிரவில்  இரவு 9 மணிக்கு முன்னதாக உணவு உட்கொண்டு விடுதல் நல்லது. மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு உணவோ உட்கொள்வது, நீர் அல்லது  எவ்வகையான பானமும் கட்டாயமாக அருந்தக் கூடாது.

    நோயாளி மருத்துவரிடம் கட்டாயமாகத்  தெரிவிக்க வேண்டிய தகவல்கள்

    • இதய நோயாளி பெண்ணாக இருக்கும் நேர்வில் அவர் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் தரித்திருப்பதாகக் கருதினாலோ அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
    • தனக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுத்தும் மருந்துகள் (medicines), ரப்பர் (Latex), அயோடின் (Iodine), நாடாக்கள் (tapes) பொது மயக்க மருந்து (General anaesthesia) மற்றும் குறிப்பிட்ட உடற்பகுதியை உணர்விழக்கச் செய்யும் மயக்க மருந்து (Local anaesthesia) ஆகியன குறித்த விவரங்களை மருத்துவரிடம் நோயாளி தெரியப்படுத்த வேண்டும்.
    • நோயாளி பயன்படுத்தி வரும் ஆங்கில, ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மற்றும் மூலிகை மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் பொது ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளும் கூடுதல் மருந்துகள் (Health suppliment medicines) ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
    • இரத்தப் போக்குக் கோளாறுகள் (Bleeding disorders) உள்ளனவா என்பது குறித்தும் மற்றும் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள், ஆஸ்பிரின்(Aspirin) அல்லது இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் (Anti blood clotting medicines) எடுத்துக் கொண்டிருப்பின் அது பற்றிய விவரங்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சில மருந்துகளை அறுவைச் சிகிச்சைக்குச் சில தினங்களுக்கு முன் மருத்துவர் நிறுத்தி விடக் கூறலாம். அதற்கு மாறாக வேறு ஊசி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

    இரத்தம் உறைய ஆகும் நேரத்தைக் (Time taken for clotting) கண்டறிய இரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்  மேற்கொள்ளச்  சொல்வார்.

    • நோயாளிக்கு செயற்கை இதய மின்னியக்கியோ (Pace maker) அல்லது வேறு இதய சம்பந்தமான கருவிகளோ பொருத்தப்பட்டிருப்பின் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.
    • நோயாளி புகைப்பிடிப்பவராக இருந்தால் எவ்வளவு விரைவில் அதனைக் கைவிட முடியுமோ அத்தனை விரைவில் கைவிடுதல் நல்லது. இதனால் ஓட்டு மொத்த உடலாரோக்கியம்  மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது என்பது மட்டுமல்லாமல் அறுவைச் சிகிச்சையின் தாக்கத்திலிருந்து விரைந்து குணமடையும் வாய்ப்புகளையும் அதிகரிக்கக் கூடும்.

    (7) வாயில் செயற்கைப் பற்கள் பொருத்தப்பட்டிருப்பின் அவை நிரந்தரமாக இணைக்கப்பட்டவையா அல்லது கழற்றி மாட்டிக் கொள்ளக் கூடியவையா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

    முதல் பதிப்பு

    Share
  • பழகத் தெரிய வேணும் – 59

    பழகத் தெரிய வேணும் – 59

    நிர்மலா ராகவன்

    குறையேதும் உண்டோ?

    இந்த நாகரிக யுகத்தில் யூ டியூபைப் பார்ப்பவர்கள் கண்ணில் அடிக்கடி தட்டுப்படுவது எந்த நடிகை எப்படியெல்லாம் கெட்ட வழியில் போனாள், எந்த நடிகர் எத்தனைப் பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார், மனைவியுடன் சண்டை போட்டார் போன்ற செய்திகள்தாம்.

    இவை அடிக்கடி வெளியிடப்படுவது எதனால்?

    பிறரிடம் குற்றம் கண்டுபிடித்தால் நாம் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறோம் என்ற அற்ப திருப்தியைப் பிறருக்கு உண்டாக்குவதற்காக.

    பிறரை வருத்துவது எதற்காக?

    தன்னிடம் நிறைய குறைகள் இருக்கின்றன என்று நினைப்பவரே அந்த வருத்தத்தைப் போக்க, அல்லது அதை மறைக்கவென பிறரது மகிழ்ச்சியைக் குலைக்கத் திட்டம் போடுவார்.

    இப்போது நல்ல நிலையில் இருப்பவர் ஒருவர் என்றோ தவறு செய்திருந்தால், இயன்றவரை அதைப் பரப்பி, அவருடைய மதிப்பைக் குறைக்க எண்ணுவார்.

    தம்மைப் போல் இல்லாத பிறரெல்லாம் `அசடு,’ `முட்டாள்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இவர்களுக்கு. தம்மால் இயலாததை, அல்லது புரியாததைச் செய்பவர்களைக் கண்டனத்துக்கு உரியவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். (இத்தகைய தாக்குதலுக்குப் பயந்தே பலரும் தமது ஆக்கப்பூர்வமான இயல்பை மறைத்து, பிறரைத் தொடர்ந்து நடக்கிறார்கள்).

    வெற்றி பெற்றவர்கள்தாம் மதிக்கத்தக்கவர்கள் என்பதில்லை. நற்பண்பு முக்கியமில்லையா?

    நற்குணம் என்பது மதம், இனம், அந்தஸ்து ஆகிய அனைத்தையும் கடந்தது.

    கதை

    மலேசியாவிலிருந்த அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அதில் கலாவின் நாட்டியம் இடம்பெற்றிருக்கும். ஏனெனில், அவள் ஒருத்திதான் பரதநாட்டியத்தை முறையாகப் பயின்றிருந்தாள்.

    அது போதாதா, சக மாணவிகளின் பொறாமையைத் தூண்டிவிடுவதற்கு!

    அவளுடன் படித்த யோக் மூய் (Yoke Mui) என்ற சீனப்பெண், “உன் தாய்க்கு உன்மேல் அன்பே கிடையாது,” என்று ஆரம்பிக்க, கலா விழித்தாள்.

    “பின் என்ன! உன் படிப்பைக் கெடுக்கிறார்களே! ஆடுவதற்கு விரயமாக்கும் நேரத்தில் நீ படிப்பில் கவனம் செலுத்தினால், பரீட்சைகளில் இன்னும் சிறப்பாக மதிப்பெண்கள் வாங்கலாமே!” என்று தூபம் போட்டாள்.

    யோக் மூய்க்கு அவளுடைய தாய் தன்னிடம் போதிய அன்பு காட்டவில்லை என்ற வருத்தம் இருக்கலாம். அதனால் இன்னொரு தாயைப் பழித்து, ஆறுதல் தேட நினைக்கிறாள்.

    `பிறர் என்ன சொல்லிவிடுவார்களோ!’ என்று பயந்தே அவளைப் போன்ற பலரும் தம்மை அடக்கிக்கொள்கிறார்கள். இதனால் நிம்மதியை இழந்துவிடுவோம் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

    கலா அதிரவில்லை. “படிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்று உன்னிடம் சொன்னேனா?” என்று அவள் வாயை அடைத்தாள்.

    பிறர் புகழ வாழ்கிறவர்கள்தான் இப்படிப்பட்ட தாக்குதல்களைச் சமாளிக்க நேரிடும்.

    பிறரைக் குறைகூறும் ஒருவர் தன்னையுமறியாது தன்னைப் பற்றித் தெரிவிக்கிறார். இது புரிந்தால், மனம் தளர விடமாட்டார்கள்.

    ஒரு பிரபல நடிகர் ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்து, ஒருசில படங்களுக்குப் பின்னர் மிகவும் பருமனாக ஆனார்.

    பத்திரிகைக்காரர்கள், விசிறிகள் என்று பலரும், `ஏன் இப்படி குண்டாகிக்கொண்டே இருக்கிறீர்கள்? உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்களேன்!” என்று வற்புறுத்தினார்கள். அவர்களால் அவருடைய நடிப்பினால் மட்டும் திருப்தி அடைய முடியவில்லை.

    ஒருவர் தன் வாணாளில் அனுபவித்தது, இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்த விதம், கடந்தகால நினைவுகள் — இவற்றையெல்லாம் புரிந்துகொண்டால் மட்டுமே அவரைப் பற்றி முழுமையாக அறியமுடியும்.

    அந்த நடிகர் அளித்த மறுமொழி: “என் இளமைக் காலத்தில் நான் ஒரு இட்லிகூட கிடைக்காமல் பசியில் வாடி இருக்கிறேன். இப்போதுதான் போதிய வசதி கிடைத்திருக்கிறது. இனியும் வயிற்றைக் காயப் போடச் சொல்கிறீர்களே!”

    `எதற்காவது குறை கண்டுபிடிக்காது, என் நடிப்பை மட்டும் கவனியுங்களேன்!’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்!

    பிறர் நம்மைக் குறைகூறுகிறார்களே என்று மனம் உடைந்துவிடாமல், `யாரிடம்தான் குறையில்லை?’ என்று மனத்தைத் தேற்றிக்கொண்டதால் அவர் நிலைத்து நிற்கிறார்.

    பிறர் ஒருவரைக் குறைகூறுவது, தவறாக எடைபோடுவது—இதெல்லாம் அவர்களுடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

    கதை

    “இந்த லீலா ஆண்களுடன் எப்படிச் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள்!” என்று நடுத்தர வயதுப் பெண்கள் பலர் தமக்குள் ரகசியமாகப் பேசிக்கொண்டார்கள்.

    `சிரித்துச் சிரித்து’ பேசிய லீலாவுக்கும் அவர்கள் வயதுதான். ஆனால், அவள் சிறு வயதிலிருந்தே ஆண்களுடன் சேர்ந்து பள்ளியில் பயின்று, அவர்களுடன் நன்கு பழகியவள். அயல்நாட்டில், நாகரிகமாக வளர்க்கப்பட்டவள்.

    இதில் தவறு யார்மேல்?

    தம்மையும் இவ்வாறு சுதந்திரமாகப் பழக விடவில்லையே என்ற ஆற்றாமையின் வெளிப்பாடுதான் வம்புப் பேச்சு.

    ஆண்களுடன் பேசினாலே கற்பு போய்விடும் என்பதுபோல் இளவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டு, முதலில் கணவரைக் கண்டு பயந்து, பிறகு அவரையே அதிகாரம் செய்யும் துணிச்சலை வளர்த்துக்கொண்ட அப்பெண்கள் மேலா, இல்லை, பலருடனும் சகஜமாகப் பழகிய லீலா மேலா?

    விடுமுறையில் பழகுவது

    பிறரது இல்லத்திற்கு குறுகிய காலம் விருந்தினராகப் போகிறவர்கள் வேடிக்கையாகப் பேசி அங்குள்ளவர்களைக் கவர நினைப்பார்கள். மிகுந்த கலகலப்புடன் இருப்பார்கள்.

    “எவ்வளவு நன்றாகப் பழகுகிறார்!” என்று வீட்டினர் மகிழ்வார்கள்.

    இது சரியான தீர்ப்புதானா என்று யோசிக்க வேண்டும்.

    அவருடைய குடும்பத்தினரிடமோ, அலுவலகத்திலோ அப்படியே இருப்பார் என்று சொல்ல முடியாது.

    வந்த இடத்தில் பிறர் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்று பலரும் நாடகம் போடுகிறார்கள். அவ்வளவுதான்.

    `நான் இதைச் செய்யலாம் என்றிருக்கிறேன்,’ என்று பிறரிடம் எதற்காகச் சொல்லவேண்டும்?

    ஒரு மேற்பயிற்சியின்போது, ஆசிரியை ஒருத்தி என்னிடம் கேட்டாள்: “ராமச்சந்திரனின் மனைவி சீனப் பெண்ணா?”

    குறிப்பிட்டவர், எங்களுடன் படித்தவர்.

    நான் சிரித்தேன். “நீ தவறானவளிடம் வந்து கேட்கிறாய்!”

    யார் எவளை மணந்திருந்தால் என்ன? அவருக்குப் பிடித்ததைச் செய்திருக்கிறார். மற்றவர்களுக்கு என்ன வந்தது?

    பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், அவரிடமிருக்கும் குறைகள் அல்லது வித்தியாசங்கள் என்னென்ன என்ற ஆராய்ச்சிகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை. அதற்காக விரயம் செய்யும் நேரத்தில் நாம் எப்படி முன்னேறலாம் என்று ஆழமாக யோசித்தாலாவது பிரயோசனம் உண்டு.

    பார்ப்பவர்களைப் பற்றிக் கருத்து தெரிவிப்பது சாமானியர்களின் குணம். ஆனால், அவர்களைப் பற்றிப் புரிந்தும், எதுவும் கூறாது இருப்பது நற்குணம்.

    ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு அவர்களைப் பற்றிக் குறை கூறுவதும், பிறர் குற்றம் காண்பதை நம்புவதும் காரணமாகிறது.

    நாம் பிறரைக் குறைகூறுவதால் அவர்கள் எந்தப் பாதிப்பும் அடையப் போவதில்லை. மாறாக, நம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்கிறோம்.

    கதை

    கலைஞர் பட்டுசாமி அடிக்கடி பிற கலைஞர்களைக் குறை சொல்வார். கேட்பதற்கு சுவாரசியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். அவரிடம் பயின்ற மாணவர்கள் சிரித்து ரசிப்பது அவருக்கு அருமருந்தாகியது. ஓயாமல் அப்படியே பேசத் தொடங்கினார்.

    ஒரு முறை நான், “எனக்கு இந்த சுருதிப் பெட்டியை இயக்கத் தெரியாது. அவர் சொல்லிக் கொடுத்தார்,” என்று வேறொருவருடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

    பட்டுசாமி அதிர்ந்து, “அப்போது, என்னைப் பற்றிக்கூடப் பேசுவீர்களா?” என்று கேட்டார்.

    “ஆமாம். நீங்க மற்றவர்களைப் பத்திப் பேசலியா?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்க, அவர் வாய் அடைத்துப் போயிற்று. (இத்தனைக்கும், நான் தவறாக எதுவும் சொல்லவில்லையே!)

    அவர் பிற கலைஞர்களைப் பற்றித் தாறுமாறாகப் பேசியது அவர்கள் குற்றமில்லை. தனக்கு எத்தனையோ திறமை இருந்தும், தான் அவர்களைப்போல் புகழ் பெறாமல் முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் அவருக்கு. அவர்களைப் பழித்து, தன்னையே சமாதானப்படுத்திக்கொள்கிறார்.

    அவர்களிடம் குறை இருந்தாலும்தான் என்ன!

    யாரிடம்தான் குறை இல்லை?

    நாம் பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாவிட்டால், நம்மைப் பற்றி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை. நம் கனவுகளை நனவாக்கிக்கொள்ளலாம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 300 (நிறைவு)

    படக்கவிதைப் போட்டி – 300 (நிறைவு)

    அன்பிற்கினிய நண்பர்களே!

    படக்கவிதைப் போட்டியைத் தொடங்கி, இதோ 300ஆவது வாரத்தைத் தொட்டுவிட்டோம். ஏராளமான புதிய கவிஞர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் அடையாளம் காண, இந்தப் போட்டி உதவியுள்ளது.  இதில் ஊக்கத்துடன் பங்கேற்ற, இதற்குத் துணை நின்ற கவிஞர்கள், தங்கள் புகைப்படங்களை வழங்கிய புகைப்படக் கலைஞர்கள், படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கிய சாந்தி மாரியப்பன், ராமலக்ஷ்மி உள்ளிட்ட தேர்வாளர்கள், நடுவராகத் தொடர்ந்து சீரிய செயலாற்றி வரும் மேகலா இராமமூர்த்தி. சில வாரங்களுக்கு நடுவராகச் செயலாற்றிய கவிக்கோ ஞானச்செல்வன், தொடர்ந்து வெளியிட்ட பவளசங்கரி, வல்லமை ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். ஒரே போக்கில் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்பதால், இந்த வாரத்துடன் இந்தப் போட்டியை நிறைவு செய்கிறோம். இதுவே இந்த வரிசையில் கடைசிப் போட்டி. அடுத்த வாரங்களில் வேறு புதிய போட்டியை அறிமுகப்படுத்துவோம். இப்போது இந்த வாரப் போட்டிக்குச் செல்வோம்.

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் அமுதா ஹரிஹரன் எடுத்த இப்படத்தை அவர்களது தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (28.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • ஜாதகப் பகுப்பாய்வு | கணியன் மாரிமுத்து

    ஜாதகப் பகுப்பாய்வு | கணியன் மாரிமுத்து

    ஒரு புதிய முயற்சியாக, ஜாதகப் பகுப்பாய்வை அறிமுகப்படுத்துகிறோம். விவாகரத்து பெற்ற பெண்மணி ஒருவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள கோள்களின் நிலை, அவரது மணவாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை ஜோதிடர் கணியன் மாரிமுத்து விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி 299இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 299இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    புகைப்படக் கலைஞர் திரு. எஸ். இராமலிங்கம் கலைநுணுக்கத்தோடு எடுத்திருக்கும் சிலைகளின் நிழற்படத்தை அவரின் படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 299க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    சொல்லில் கலைவண்ணம் ஊட்டிக் காலத்தால் அழியாப் பாடல்களைப் படைத்தளித்த பைந்தமிழ்ப் புலவர்களைப்போல், கல்லில் கலைவண்ணம் காட்டிக் காலத்தால் அழியாக் கவின் சிலைகளைப் படைத்த  சாதனையாளர்கள் நம் சிற்பிகள்; அவர்களைப் போற்றுதல் நம் கடன்!

    இந்தச் சிற்பங்களின் நேர்த்தியை, இவற்றை வடித்த சிற்பிகளின் சீர்த்தியைத் தீந்தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வருகிறார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை அன்போடு வரவேற்கின்றேன்.

    *****

    ”கல்லில் கலைவண்ணம் காட்டிய கலைஞனைப் போற்றுவோம்; அவன் சோராதிருக்க வாழ்த்துவோம்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    சிற்பியைப் போற்றுவோம்…

    கல்லில் கலையின் வண்ணமது
    கலைஞன் ஒருவன் எண்ணமதாய்
    வெல்லும் கால ஓட்டமதை
    விளங்கும் சிலையாய்க் காலமெல்லாம்,
    வல்லமை இதுதான் பேர்சொல்லும்
    வையம் உளநாள் வரையிலுமே,
    சொல்லிப் புகழ்வோம் இவர்திறனை
    சோரா திருக்க வாழ்த்துவோமே…!

    *****

    ”சிற்பக் கலையில் சிறந்தவன் தமிழன்! மாமல்லைச் சிலைகளைப் போற்றுவதா? ஆலயச் சிலைகளின் புகழைச் சாற்றுவதா?” என்று சிற்பியின் அழியாக் கலைநுட்பத்தை வியக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    செதுக்கி வைத்த சிற்பங்கள்
    செவ்வனே வடித்திட்ட இதில்
    சிற்பியின் கைகள்தான்
    சிறப்பம்சம் கொண்டதுவே!

    எத்தனையெத்தனை வர்ணங்கள்!
    எத்தனையெத்தனை முக அம்சங்கள்!
    அத்தனையத்தனை வடிவங்களும்
    தத்துவமதனை உரைத்திடுமே!
    மனம் அதில் சொக்கிடச்சொக்கிட வைத்திடுமே அதைப் போற்றிடப் போற்றிட

    சிற்பக்கலையில் சிறந்தவனே
    செம்மொழியில் சிறந்த தமிழன்தான்!
    வள்ளுவனுக்கோர் சிலை கண்ணகிக்கோர் சிலை
    நுட்பம் வாரி வழங்கியது அவன் நிலை

    மாமல்லபுரச் சிலைகளைச் சொல்வதா?
    சிறந்ததோர் ஆலயச் சிலைகளைச் சொல்வதா?
    கருத்துக்கள் கூறும் சிலைகளைச் சொல்வதா?
    தரணிபுகழ் பல சிலைகளைச் சொல்வதா?

    இத்துணைச் சிற்பங்கள் சிறந்திட
    சிற்பியின் கைகள்தான்
    சிறப்பம்சம் கொண்டதுவே நம்
    மனமும் அதில் கொள்ளை கொண்டதுவே
    சிற்பக்கலை அழியாக்கலை!

    *****

    சிற்பக்கலையின் சிறப்பினைச் செப்பும் நல்ல கருத்துக்களைத் தம் கவிதைகளில் செதுக்கித் தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன் உளமார!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    உளியின் வலி

    உள்ளத்தில் எண்ணிய சிந்தை
    உருக் கொண்டு எழுந்ததோர் விந்தை
    உளி கொண்டு உருவாக்கிய கவிதை
    உருவாக்கியவன் கையிலோ கந்தை

    விரல்களில் விளையாடும் கலை
    வியப்பூட்ட உருவான சிலை
    உழைத்து உருவாக்கியவன் நிலை
    எண்ணிப் பார்த்தவர் எவரும் இலை

    ஆலயங்காணும் கடவுளர் திருமேனி
    காலங்கள்தோறும் நிலைத்திடும் வண்ணம்
    மாயங்கள் காட்டும் மனங்கவர் சிற்பம் – அவர்
    காயங்கள் துயரங்கள் காட்டியா நிற்கும்?!

    ”சிலை, உளிகொண்டு உருவாக்கிய கவிதை; ஆனால் உருவாக்கியவன் கையிலோ கந்தை. மாயங்கள் காட்டிநிற்கும் சிற்பங்கள் அதை வடித்தவனின் மனக் காயங்களைக் காட்டுவதில்லை” என்று உளி பிடித்தவனின் வலியை – வேதனையைத் தம் கவிதையில் உளந்தொடும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

     

    Share
  • மாவடு ஊறுகாய் செய்யும் முறை

    மாவடு ஊறுகாய் செய்யும் முறை

    மாவடு ஊறுகாயின் சுவையே தனி. நினைத்தாலே வாயூறும். தயிர் சாதத்துக்கு மட்டுமில்லாமல், எல்லாச் சாதங்களுக்கும் அதைத் தொட்டுக்கொள்ளலாம். அது மட்டும் இருந்துவிட்டால், உணவே களைகட்டும். அமர்க்களமான சுவையும் மணமும் சத்தும் கொண்ட மாவடு ஊறுகாய் செய்யும் முறையை இதோ திருமதி ஜெயந்தி விளக்குகிறார். அவர் கணவர் வெ.சுப்ரமணியன், உடன் உரையாடுகிறார். இதைப் பார்த்து உங்கள் வீட்டிலும் மாவடு ஊறுகாய் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பிலவ – தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

    பிலவ – தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

    ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கிய, பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள்.

    ஜோதிடர் வேதா கோபாலன் அவர்களிடமிருந்து உங்கள் பிரத்யேக பலன்களைப் பெற, வேலை, தொழில், காதல், திருமணம், மகப்பேறு, ஆரோக்கியம் போன்றவை தொடர்பான துல்லியமான ஜோதிட ஆலோசனைகளைப் பெற, nallayogam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளுங்கள். இது கட்டணச் சேவை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

    எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

    மேகலா இராமமூர்த்தி

    மாட மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்வதே வாழ்க்கை என்று எண்ணும் மானுடரே இம்மன்னுலகில் அதிகம். எளிய வாழ்க்கையை மேற்கொள்வதும் அதில் தன்னிறைவு காண்பதும் பலராலும் சிந்தித்துப் பார்க்கவும் இயலாத ஒன்று. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில், வேண்டாமை அன்ன விழுச்செல்வம் எனும் வள்ளுவத்தை நெஞ்சில் நிறுத்தி, தேவைகளைக் குறைத்து நிறைவோடும் நிம்மதியோடும் வாழும் மனிதர்களும் அத்தி பூத்தாற்போல் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தாம் ஹென்றி டேவிட் தொரோ (Henry David Thoreau) எனும் மேனாட்டுச் சிந்தனையாளர். அவரின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வது எளிமையிலும் இனிமையாகவும் இன்பமாகவும் வாழ்வது சாத்தியமே என்பதை நமக்கு உணர்த்துவதாய் அமையும்.

    மாசசூசட்ஸ் மாகாணத்திலுள்ள கான்கார்டு (Concord, Massachusetts) என்ற ஊரில் ஜூலை 12, 1817ஆம் ஆண்டு ஜான் தொரோ (John Thoreau), சிந்தியா டன்பர் (Cynthia Dunbar) இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் ஹென்றி டேவிட் தொரோ. பென்சில்கள் செய்து அவற்றை விற்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த தொரோவின் தந்தையால் அதில் அதிக அளவில் பொருளீட்ட இயலவில்லை; அதனால் வீட்டில் வறுமையே கொலுவிருந்தது.

    எனினும், ஹென்றி டேவிட் தொரோவின் பெற்றோர்கள் வளமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தமையால் பழைய செல்வ வளத்தை அவர்களால் மறக்க இயலவில்லை. எனவே நிகழ்காலக் குடும்பச் சூழ்நிலை வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தாலும் அதற்காகத் தம் பிள்ளைகள் வெறும் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுவதை அவர்கள் விரும்பவில்லை.

    ஆகையால் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஹென்றி தொரோ முதலாவதாகப் படித்த பள்ளிக்கூடம் பாஸ்டனில் (Boston) இருந்தது. பிறகு கான்கார்டில் உள்ள பள்ளியில் பயின்றார். அங்குதான் அவர் நடனமாடவும் குழல் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

    இலத்தீன் கிரேக்கம் பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் கணிதத்திலும் நல்ல அறிவைப் பெற்றபிறகு ஏழை மாணவர்களுக்குரிய உதவிச் சம்பளத்தோடு ஹார்வார்டு பல்கலைக்கழத்தில் (Harvard University) நுழைந்தார் ஹென்றி தொரோ. அங்கே கல்லூரிப் படிப்பை முடித்து வெளியில் வந்தார். அவரைப் பொறுத்தவரை பல்கலைக்கழகம் என்பது பிற அறிஞர்களுடைய அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்குரிய வாயிலாக இருந்ததே தவிர சமுதாய நட்பைப் பெறவும் தொழில்முறையில் திறமை பெறவும் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாக அமையவில்லை. பாடத்திட்டத்தைவிடவும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று ஜெர்மானிய இலக்கியம், 17ஆம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியம் ஆகியவற்றைக் கற்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் தொரோ.

    ஹார்வார்டு பல்கலைக்கழகம் அக்கால நடைமுறைக்கேற்ப தொரோவை ஒரு படிப்பாளியாக மட்டுமல்லாமல் அதற்கும் மேற்பட்ட ஓர் எழுத்தாளராகவும் ஆக்கியிருந்தது. நியூ இங்கிலாந்தில் தோன்றிய புதிய சிந்தனை இயக்கத்தின் தலைவராக விளங்கவிருந்த ரால்ப் வால்டோ எமர்சன் (Ralph Waldo Emerson), ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் (Oliver Wendell Holmes) போன்றவர்களின் ஆசிரியராக விளங்கியவரும் அடுக்கு மொழியில் மிடுக்காய்ப் பேசுபவருமான  எட்வர்டு டிரல் சேனிங் (Edward Tyrrel Channing) என்பவரிடம்தான் தொரோவும் கல்வி பயின்றார். இவரிடம் பயின்றதால் ஒழுங்குமுறை, தர்க்கம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டான ஒரு நடையைக் கற்றார் தொரோ.

    ரால்ப் வால்டோ எமர்சன்தான் இளைஞரான ஹென்றி டேவிட் தொரோவிடம் காணப்பெற்ற மேதைமையை வெளிக்கொணர்ந்தவராவார். அத்தோடு எமர்சன் எழுதிய இயற்கை (Nature) என்ற நூலே தொரோவின் மனத்தில் இயற்கைமீது அளவிலாக் காதல் ஏற்படவும் இயற்கையோடு இயைந்தே மனிதன் வளர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணம் வளரவும் காரணமாய் அமைந்தது.

    1840ஆம் ஆண்டு ’தி டயல்’ எனும் இதழைத் தொடங்கினார் எமர்சன். அமெரிக்க இலக்கிய வரலாற்றில் அந்த நிகழ்வு இடம்பெறாவிட்டாலும், தொராவின் வாழ்க்கையில் அது முக்கியமான ஒன்றாக அமைந்தது என்றே குறிப்பிட வேண்டும். பாஸ்டன் நகரில் வெளியான அந்த இதழுக்கு முந்நூற்றுக்கும் குறைவான சந்தாதாரர்களே இருந்தபோதிலும் அறிவாளிகள் வட்டத்தில் அந்த இதழுக்கு நல்ல மதிப்பிருந்தது. தொரோவைப் போல் உலகுக்கு அறிமுகமாகாதிருந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நற்பணியையும் அவ்விதழ் செவ்வனே செய்தது.

    ஆற்றல்மிகு எழுத்தாளராகவும், புதுமைச் சிந்தனையாளராகவும் திகழ்ந்த மார்கரெட் புல்லர் (Margaret Fuller) என்ற அம்மையார் அந்த இதழின் ஆசிரியராய்ப் பணியாற்றினார். தொடக்க கால எழுத்தாளராக அப்போதிருந்த தொரோவின் ’வாச்சுசெட்டில் ஓர் நடைப்பயணம்’ (A walk to Wachusett) என்ற கட்டுரையை, ஓர் கற்றுக்குட்டியின் எழுத்து, என்று விமரிசித்து தி டயல் இதழில் வெளியிட மறுத்தார் புல்லர். தொரோவுக்கு அஃது அப்போது அவமானத்தைத் தருவதாக இருந்தாலும் அவருடைய எழுத்தைச் செம்மைப் படுத்திக்கொள்ள அப் புறக்கணிப்பு உதவிற்று எனலாம்.

    1842ஆம் ஆண்டு தி டயல் இதழை எடுத்து நடத்தும் பொறுப்பை புல்லரிடமிருந்து எமர்சனே ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தொரோவின் கட்டுரைகள் பல அவ்விதழை அணிசெய்யத் தொடங்கின. ’மசாசூசெட்சின் இயற்கை வரலாறு’ (Natural History of Massachusetts) என்ற தொரோவின் நீண்ட கட்டுரை டயல் இதழில் அப்போது வெளியாயிற்று. எதிர்காலத்தில் உயர்ந்த நடையில் எழுதக்கூடிய சிறந்த எழுத்தாளராகத் தொரோ மலரப்போகின்றார் என்பதற்குக் கட்டியம் கூறுகின்ற வகையில் அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.

    தொடர்ந்து எழுதிவந்த போதிலும் வாழ்க்கைக்குத் தேவையான பொருளைத் தொரோவால் ஈட்டமுடியவில்லை. எமர்சனைப்போல், எழுதுவதோடு சொற்பொழிவும் நிகழ்த்தினாலொழிய வாழ்வதற்குத் தேவையான பொருளைப் பெறமுடியாது என்றுணர்ந்தார் தொரோ. ஆனாலும் பொருளுக்கு அடிமையாகாத – எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்ற வாழ்க்கையையே அவருடைய அகமனம் அவாவியது.

    நவீன யுகத்தின் இயல்பாக அமைந்துள்ள ஓயாத அவசரம், ஒழியாத வேலை என்ற இரண்டையும் இயற்கை முற்றிலும் மறுப்பதாகவே தெரிகின்றது என்று கருதிய தொரோ, எப்போதெல்லாம் இயலுகின்றதோ அப்போதெல்லாம் மிக நீண்ட பயணங்களை மேற்கொண்டார். சிறுத்தைத் தவளைகளோடு தாம் நிகழ்த்திய சுவையான பன்னிரண்டு மணிநேர உரையாடல், பணம் சேகரிக்கச் செலவழிக்கும் ஒருநாளைவிட மிகவும் பயனுள்ள காலமாகும் என்று கூறியுள்ளார். அந்தி நேரத்தில் வெடிக்கும் துப்பாக்கியைப்போல் தம்முடைய மறைவான இடத்திலிருந்து பிட்டர்ன் (Bittern) பறவைகள் ஒலியெழுப்புவதைக் கேட்கக்கூடுமானால் வசதியுள்ள வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் குளிர்ந்த சதுப்பு நிலங்களில் வாழும் வாழ்க்கை மேன்மையானது என்பது அவருடைய கருத்தாய் இருந்திருக்கின்றது.

    இதற்கிடையில் தம்முடைய தமையனார் வில்லியம் எமர்சனின் மகனுக்கு ஆசிரியராகப் பணிபுரியவேண்டி தொரோவை நியூ யார்க்கை அடுத்துள்ள ஸ்டேட்டன் தீவுக்கு (Staten Island) அனுப்பினார் எமர்சன். அங்குத் தொரோவுக்குச் சில நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனால் எழுத்தாளராக அவரால் அங்கே பிரகாசிக்க இயலவில்லை. காரணம், அங்கு(ம்) மக்களின் உணர்ச்சிகளுக்குத் தீனிபோடும் மலினமான இதழ்களுக்கு எழுதினால்தான் வயிறுவளர்க்க முடியும் என்ற நிலை இருந்ததே. அவ்வகையில் தரந்தாழ்ந்து எழுதத் தொரோவால் இயலவில்லை. ஆதலால் மீண்டும் தம் சொந்த ஊரான கான்கார்ட்டுக்கு 1844இல் திரும்பினார் தொரோ.

    ஜெர்மானியத் தத்துவவியல் அறிஞரான ஜிம்மர்மேன் எழுதிய ’தனிமை நெஞ்சினிடத்துச் செலுத்தும் ஆதிக்கம்’ எனும் நூலினைக் கற்றார். எமர்சனின் ’இயற்கை’ என்ற நூல் அவர் மனத்தைவிட்டு நீங்கவே இல்லை. அதில் கூறப்பெற்ற “காடுகளில்தான் அழியா இளமை இருக்கிறது; காட்டு வாழ்க்கையில் அறிவும் நம்பிக்கையும் ஏற்படுகின்றன” என்ற சொற்கள் அவர் நெஞ்சுக்குள் சிட்டுக்குருவியாய் வட்டமிட்டுக்கொண்டே இருந்தன.

    எனவே கான்கார்டுக்கு அருகிலிருந்த வால்டன் குளத்தருகே (Walden Pond) ஒரு மர வீட்டை அமைத்துக்கொள்ளும் நோக்கத்தோடு காட்டுக்குச் சென்றார் தொரோ. அந்தக் காட்டுப் பகுதி எமர்சனுக்குச் சொந்தமானது; அவர்தாம் அந்த இடத்தைத் தொரோவுக்கு இலவசமாக வழங்கினார்; இல்லையேல் ஆங்கோர் இலைக்குடில் அமைத்து வாழும் அரிய வாழ்க்கை தொரோவுக்கு வாய்த்திருக்காது.

    1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொரோ அந்தப் பகுதியில் தம் குடிலை அமைக்கத் தொடங்கினார். குளங்களுக்கு அருகில் வளர்ந்திருந்த வெண் பைன் மரங்களைக் குடில் கட்டுவதற்குத் தேவையான அளவுக்கு வெட்டிக்கொண்டார். குடிலின் பின்புறம் இருந்த மணல்மேட்டைத் தோண்டி நிலவறை ஒன்றைச் செய்துகொண்டார். குளிரும் பனியும் மிகுந்திருக்கும் காலத்தில் காய்கறிகளைப் பாதுகாக்கவே அவ்வாறு ஓர் அறையை அவர் அமைத்திருந்தார். அந்தக் குடில் அழிந்துபோனாலும் மண்ணுக்குள் அமைக்கப்பட்ட வளைபோன்ற அந்த நிலவறையானது அழியாது என்பது அவரது எண்ணம். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தாம் கட்டிய நிலவறையைத் தேடிக்கொண்டு வால்டனுக்கு மக்கள் கூட்டம் செல்லும் என்பதை அப்போது தொரோ அறிந்திருக்கவில்லை.

    1845ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் கூரையின் கடைசிப் பலகையைச் செருகிய பின்னர் தொரோ அக்குடிலுக்குள் வசிக்கத் தொடங்கினார். அமெரிக்கச் சுதந்தர நாளன்று அவருடைய சுதந்தரமான காட்டு வாழ்க்கையும் தொடங்கியமை தற்செயலாய் நடந்தே ஒன்றே.

    அருகிலிருந்த நிலத்தில் அவர் வேளாண்மையும் செய்யத் தொடங்கினார். பீன்ஸ் செடிகளைப் பயிரிட்டார். அவற்றைப் பராமரிப்பதில் மனநிறைவுற்றார்.

    தமக்குத் தேவையான எளிய உணவை அவரே தயாரித்துக்கொண்டார். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க விரும்பி தேநீர், காபி அருந்துவதையும் தவிர்த்தார். என்றேனும் ஒருநாள் வால்டன் குளத்தில் பிடித்த மீனை உண்பதைத் தவிரப் புலால் உணவுப் பழக்கத்தையும் விட்டுவிட்டார்.

    மேசை, இரண்டு மூன்று நாற்காலிகள், சில சமையல் பாத்திரங்கள் தவிர அவரது குடிலில் வேறெந்தப் பொருளுமில்லை.

    தனிமையைப் போன்ற உற்ற துணைவன் ஒருவருமில்லை என்ற நோக்கத்தோடு அவர் தனித்திருக்க விரும்பினாலும், அவ்வப்போது அவரைத் தேடிக்கொண்டு சிலர் அவருடைய குடிலுக்கு வந்தவண்ணந்தான் இருந்தனர். எனினும் குடிலின் அளவு மிகச் சிறிதாக இருந்ததால் வந்தவர்கள் அதிக நேரம் அங்கே தங்காமல் சென்றது அவர் விரும்பிய தனிமை இன்பத்துக்கு அதிகக் குந்தகத்தை விளைவிக்கவில்லை. சனிக்கிழமைகளில் அவரைக் காண அவருடைய சுற்றத்தார் வந்துசென்றனர்.

    வால்டனில் அவர் மேற்கொண்ட இயற்கை வாழ்வின் காரணமாக உயிரியலாரும் வேட்டைக்காரர்களும் உயிருடன் வாழும் விலங்குகட்கு இழைக்கும் கொடுமையால் அவை அடையும் துன்பத்தை நேரடியாக அறிந்தார். அதுகண்டு பெரிதும் வருந்திய அவர்,

     ”மனிதன் முதலில் காட்டிற்குள் நுழையும்போது மீன் பிடிப்பவனாகவும் வேட்டைக்காரனாகவும்தான் செல்கின்றான். ஆனால் வாழ்வில் உயரக்கூடிய வாய்ப்பு ஏதேனும் இருந்தால் ஒரு கவிஞனைப் போலவோ அன்றி உயிரியல் வல்லுநனைப் போலவோ உயிர்களின் வேறுபாட்டை அறிகின்றான். அறிந்தவுடன் துப்பாக்கியையும் தூண்டிலையும் தூர விட்டுவிடுகிறான்.  ஆனால் மக்களில் பெரும்பாலோர் இத்துறையில் இன்னமும் முதிர்ச்சியற்ற இளைஞர்களாகவே இருக்கின்றனர். சில நாடுகளில் வேட்டையாடும் தொழிலை மேற்கொண்டிருக்கும் மதபோதகர்களைக்கூட அதிகம் காணலாம். அத்தகைய போதகர்கள் மேய்ப்போனிடம் உள்ள நாயாக இருக்கமுடியுமே தவிர நல்ல மேய்ப்போராய் இருக்கமுடியாது” என்றார்.

    தொரோவைப் பொறுத்தவரை வேனிற் காலத்தைப் போலவே அவர் பனிக் காலத்தையும் விரும்பினார்.  பனிக்கட்டி அவரின் ஒரு கன்னத்தில் அடித்தால் தம்முடைய மறுகன்னத்தையும் அதற்குத் திருப்பிக் காட்டினார்.

    தொரோ விரும்பி மேற்கொண்டிருந்த வால்டன் குளக்கரை வாழ்க்கைக்கும்  ஓர் முடிவு வந்தது. 1847ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் அவர் தம்முடைய குடிலைவிட்டுப் புறப்பட்டார். வால்டன் வாழ்க்கை அவர் வாழ்வின் ஒருபகுதியாக இருந்ததே தவிர அதுவே முழுமையான வாழ்க்கையாக அமைந்துவிடவில்லை. வாழ்க்கை என்பது ஒரு சோதனையிலிருந்து மற்றொரு சோதனைக்குச் செல்வது என்பதில் அவர் திண்ணமாயிருந்ததால் வால்டனிலிருந்து புறப்படுவதும் அவருக்குச் சிரமமானதாக இருக்கவில்லை. அகத்தே தோன்றும் விருப்பங்களை நோக்கித் துணிவுடன் முன்னேறுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினார் அவர்.

    எழுத்தாளர் என்ற முறையில் தம்முடைய பலம், தமக்குரிய பாதை, தம் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டடைவதற்கு வால்டன் வாழ்க்கை அவருக்குப் பெருந்துணை புரிந்தது.

    1847இன் பிற்பகுதியில் எமர்சனுடைய வீட்டிற்குச் சென்று வசிக்கத் தொடங்கினார். அக்காலம் அவர் வாழ்வின் சிறந்த காலமாக அமைந்தது. அங்கிருந்தபோது வால்டன் பற்றியே அதிகம் எழுதினார். எதனையும் நுணுகி ஆராய்ந்து அதற்குப் பொருத்தமாகப் பெயரிடும் அறிவியலாளரின் பண்பு தொரோவிடமிருந்தது.

    ”ஒரு மனிதன் தன் முயற்சிகளின் விளைவாக இயற்கையிலிருந்து நேரடியாகக் கற்பதுதான் மிகச் சிறந்த கல்வி; பிறர் கற்றுக்கொடுத்தோ, தானே படித்தோ வரும் அறிவு இரண்டாந்தரமானதுதான். நேரடியாகக் கூர்ந்து கவனித்து அறிவதைக் காட்டிலும் ஏட்டுக்கல்வி உயர்ந்ததாகாது. இந்த வயல்களும் ஓடைகளும் காடுகளும் இங்கு வாழும் மக்கள் மேற்கொண்டுள்ள எளிய தொழில்களும் எனக்கு உற்சாகத்தை ஊட்டவில்லையானால் அதனால் ஏற்படும் இழப்பை எந்தப் பண்பாடும் செல்வமும் ஈடுகட்ட முடியாது” என்று கூறியுள்ளார் அவர்.

    கான்கார்டிலும் மெர்ரிமாக் ஆற்றிலும் ஒரு வாரம் (A Week on the Concord and Merrimack Rivers) என்ற நூலை 1849ஆம் ஆண்டு வெளியிட்டார் தொரோ. அந்த நூல் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அச்சிட்ட 1000 படிகளில் 700 படிகள் அவரிடமே திரும்பி வந்துவிட்டன. ”என்னுடைய நூலகத்தில் தொள்ளாயிரம் நூல்கள் உண்டு; அவற்றுள் எழுநூற்றுக்கு மேல் நானே எழுதியவை” என்று தொரோவே இதுகுறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டாம்.

    இந்தியாவின் தத்துவ சாத்திரங்களின்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார் தொரோ என்பதை அவருடைய கருத்துக்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மேனாட்டினர் காணமுடியாத ஆழமும் அகலமும் இந்தியத் தத்துவ சாத்திரங்களில் இருப்பதாக அவர் கருதினார்.

    ”அண்டங்களின் படைப்புக் குறித்துப் பகவத்கீதை கூறும் தத்துவத்துக்கு எதிரே ஷேக்ஸ்பியர்கூட மிகவும் அனுபவமில்லாதவராகவும் வெறும் உலகியல் மட்டுமே உணர்ந்தவராகவும் காணப்படுகின்றார்” என்கிறார் தொரோ.

    எமர்சன் வீட்டில் தங்கி வால்டனைப் பற்றி எழுதிய அதே காலக்கட்டத்தில்தான் புரட்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ’சட்ட ஒத்துழையாமை’ (Civil Disobedience) என்ற தலைப்பிலான தம் கட்டுரையையும் தொரோ எழுதினார். இக்கட்டுரை அண்ணல் காந்தியாரைப் பெரிதும் ஊக்குவித்ததாகலின் இந்தியாவில் தோன்றிய சத்தியாகிரக இயக்கத்தின் மூலகாரணங்களுள் இக்கட்டுரைக்கும் முக்கிய இடமுண்டு என்று கூறலாம்.

    ’அரசாங்கத்தில் தனி மனிதனின் உரிமையும் கடமையும்’ (The Rights and Duties of the Individual in relation to Government) என்ற பெயரில் இக்கட்டுரையானது கான்கார்டு சொற்பொழிவுக் கூடத்தில் தொரோவால் படிக்கப்பெற்றது. அறவழியில் போரிட விரும்பும் அனைவராலும் மேற்கோள் காட்டப்பெறும் கட்டுரையாக இப்போது அது திகழ்கின்றது.

    1850ஆம் ஆண்டு பாஸ்டன் நகர இயற்கை வரலாற்றுக் குழுவிற்குத் தொரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினரானார்.

    தொரோவின் நூல்களைப் படித்த பலரும் காட்டிலும் மேட்டிலும் சாகசங்கள் செய்வதில் விருப்பமுடைய அவர், வலிமையான உடலமைப்பைப் பெற்றவராக இருப்பார் என்றே கற்பனை செய்திருந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக மெலிந்த உடலமைப்புடைய அவரைக் கண்ட பலரும் ஏமாற்றமே அடைந்தனர். 

    தொரோவின் காலத்தில்தான் அமெரிக்காவின் தென்பகுதிகளில் அடிமைகள் வைத்திருக்கும் பழக்கத்தை ஒழிப்பது பற்றிய இயக்கம் தீவிரமாய் நடந்தது. உள்நாட்டுப் போரின் முக்கியக் காரணங்களுள் அதுவும் ஒன்று. தென்பகுதி தோட்டங்களிலிருந்து அடிமைகள் பலர் தப்பித்து வட பகுதிகளுக்கு ஓடிவந்தனர். அவர்களை வட பகுதிகளில் குடியேற்றவும் கனடா நாட்டுக்கு அவர்கள் தப்பிச் செல்லவும் பலர் பரிவுடன் உதவினர். அந்த அடிமைகள் தப்பிச்செல்லும் வழியில் கான்கார்ட் கிராமம் இல்லாததால் எப்பொழுதாவது அரிதாகவே அந்தப் பக்கம் அடிமைகள் வருவார்கள். அவ்வாறு வந்தவர்களுக்குத் தொரோவும் அவருடைய குடும்பத்தினரும் அனைத்து உதவிகளையும் செய்தனர்.

    அடிமை வணிகத்தை தொரோ வெறுத்ததுபோலவே மக்கள் எப்போதும் பணம் சேர்க்கும் முயற்சியிலேயே வாழ்நாளைக் கழிப்பதையும் வெறுத்தார். தேடித் தேடிப் பொன் சேர்க்கும் முயற்சியில் மக்கள் ஈடுபடுவதைவிடவும் தம் மனத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள பொன்னைத் தோண்டி எடுக்கும் அகமன ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டால் எத்துணைச் சிறப்பாக இருக்கும் என்று அவர் சிந்திக்கலானார்.

    1854ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ஆம் நாள் ’வால்டன் அல்லது காட்டு வாழ்க்கை’ (Walden or Life in the woods) என்ற அவருடைய நூல் வெளியாயிற்று. அந்நூல் இன்றளவும் அவருடைய தலைசிறந்த நூலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    ’எழுத்துக் கலை’ பற்றித் தொரோ நிரம்பக் கூறியிருக்கின்றார். அவற்றில் சில:

    • ”என்னுடைய வாக்கியங்கள், துப்பாக்கி சுடுபவன் குறிபார்ப்பதுபோலக் கூர்மையாகவும் சாவதானமாகவும் அமைக்கப்படுகின்றன. ஒரு நல்ல வாக்கியத்தை அமைப்பதென்பது ஹெர்க்குலிஸின் முயற்சிபோல மிகக் கடினமானதாயினும் அதற்கு எடுத்துக்கொள்ளும் சிரமம் பயனுடையதாகும்.
    • ஓர் எழுத்தாளனுடைய சொற்கள் அவனுடைய நேரடி அனுபவத்திலிருந்து பிறக்கவில்லையானால் அவன் காலத்தை வீணடிக்கின்றான் என்றே பொருள். சொற்களின்பின்னே பொருள் இல்லையானால் அச்சொற்கள் பயனற்றவை. நாமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி எழுதுவது வீண். அந்த விஷயம் நம்முடைய மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டுமானால் அதன்பின்னே அன்பின் கூட்டுமுயற்சி இருத்தல் அவசியம்.
    • எவ்வளவு சிறந்த முறையில் எழுதுகிறீர்களோ அவ்வளவு சிறந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள். முதற்பக்கத்திலிருந்து இறுதிப்பக்கம் வரை ஆசிரியனுடைய பண்பாட்டையே அவனுடைய நூல் விளக்கி நிற்கின்றது.

    தொரோ என்றுமே வலுவானவராக இருந்ததில்லை. ஹார்வார்டில் படிக்கின்ற காலத்திலேயேகூட அவர் பிராங்கைட்டிஸ் (Bronchitis) எனப்படும் மூச்சுக்குழல் அழற்சிநோயால் பீடிக்கப்பட்டு அல்லலுற்றார். அந்நோய் வாழ்நாள் முழுவதுமே அவ்வப்போது அவருக்குத் தொல்லைகொடுத்து வந்தது. எனினும் அவர் அந்நோயைப் பொருட்படுத்தவில்லை.

    1860ஆம் ஆண்டு அதிகக் குளிரும் ஈரமும் நிறைந்த நவம்பர் மாதத்தில் மார்புச் சளியால் தொரோ மீண்டும் தாக்கப்பட்டார். அஃது அவருடைய நுரையீரலையும் தாக்கியது. இதனால் பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் 1862ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள் உயிர்நீத்தார்.

    பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு மனிதர்களும் தொரோவைப் போற்றுகின்றார்கள்; எனினும், இயற்கையோடு நெருங்கிய தொடர்புகொண்டு எளிமையாக வாழவேண்டும் என்று எடுத்துக்கூறியவர் அவர் என்பதற்காகவே அவரைப் பலரும் கொண்டாடுகின்றார்கள்.

    குறைவான தேவைகளோடு இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்தால் நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும் என்பது தொரோ வாழ்ந்துகாட்டி உணர்த்திய வாழ்க்கை நெறியாகும். இயற்கையிடமிருந்து பெரிதும் விலகிநிற்கும் இன்றைய மக்கள் தொரோவிடமிருந்து கற்றுக் கடைப்பிடிக்கவேண்டிய உயரிய வாழ்வியல் தத்துவமும் அதுவே.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    https://en.wikipedia.org/wiki/Henry_David_Thoreau
    https://en.wikipedia.org/wiki/Civil_Disobedience_(Thoreau)
    தொரோ வாழ்க்கை வரலாறு – பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 121 (குழையணி)

    சேக்கிழார் பாடல் நயம் – 121 (குழையணி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
    பிழை படின் அன்றிக் கொல்லார்; பிழைத்தது உண்டு’ என்று உட்கொண்டு
    மழை மத யானை சேனை வரவினை மாற்றி, மற்ற
    உழை வயப் புரவி மேல் நின்று இழிந்தனன்; உலக மன்னன்’’

    வரலாறு

    தாம் ஏந்தி வந்த பூக்கூடையைப்  பட்டத்து யானை தட்டிச்  சிதைத்தது கண்ட சிவகாமியாண்டார், அந்த  யானையைத் தொடர்ந்து ஓட  இயலாமல் கீழே விழுது கதறினார். இதனை எறிபத்தர் முன் பாகர்கள் கூறினார். அதுகேட்டு

    ‘’பெருமான் அந்தணர் அனுப்பிய யானைத்தோலை உரித்த காலம், கயமுகாசுரன் காலம்  முதலாக சிவபெருமானின் வழிப்பகை களிறே!’’ என்று கருதிய எறிபத்தர்  அதனைக் கொன்று வீழ்த்துவேன் என்று கொலைமழுவை எடுத்தார்.

    சிவகாமியாண்டாரிடம் யானை செய்ததையும், அது சென்ற திசையையும் அறிந்து கொண்டு அத்திசையில் விரைந்தோடி, சிங்கம் போல் யானைமேல் பாய்ந்தார். இதனைச்  சேக்கிழார்

    ‘’செங் கண் வாள் அரியின் கூடிக் கிடைத்தனர்; சீற்றம் மிக்கார்.’’ என்று பாடுகிறார். (**இங்கே ஒரு குறிப்பை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ‘’கிடைத்தனர்‘’ என்ற சொல்லுக்கு எதிர்த்தனர் என்று பொருள் கொள்ள வேண்டும்; ‘கிடைக்கும்’  என்று இப்போது கடைகளில் எழுதும் சொல் பிழை பட்டது என்பதைப் புரிந்து கொள்க )

    இதுவே இறைவனை  எதிர்த்த யானை என்றெண்ணி அதன்மேல் பாய்ந்தார்.பாகரால் அடக்க வியலாத யானை அடியார் இறைவன்பால் கொண்ட அன்பின்முன் நிற்கவில்லை. அதன் தும்பிக்கை வீழுமாறு விறன்மிண்டர் வெட்டினார். அந்த யானையுடன் அருகில் வந்த பாகர் மூவர், போரிட வந்த இருவர் ஆகிய  ஐவரைக் கொன்று மலை போன்ற தோளுடன் விறன்மிண்டர் நின்றார் .

    இதனை அங்கிருந்தார்  விரைந்து சென்று அரண்மனைக் காவலரிடம் கூறினர். அது கேட்டு அரசனிடம் சென்ற காவலர் நம் பட்டத்துயானையை எவரோ வெட்டி விட்டார்  என்றனர். உடனே அரசன் வெகுண்டு வாயிலுக்கு வந்தான். அவருடன் அரசரின் சேனைகள் யாவும் தொடர்ந்தன. பட்டத்து யானையை வெட்டியவர் பகைவரோ என்றெண்ணிய மன்னன்,அங்கே அடியார் மட்டுமே வெட்டுண்ட யானையுடன் நிற்பதைக் கண்டான். சிவனடியாரைக் கண்ட மன்னன் இவர் கொலை செய்ய மாட்டார் என்று கருதி, அங்குள்ளோரை ‘’யார் யானையைக் கொன்றவர்?’’ என்று முழங்கினான். அப்போது அங்கிருந்தோர், ‘’மன்னனே நம் யானையைக் கொல்ல எந்தப் பகைவராலும்  முடியாதே, இதோ இங்கே மழுவேந்தி  நிற்கும் சிவனடியார் தாம் கொன்றார் ‘’   என்றனர்.

    அப்போது மன்னன் இறைவனடியார்  எதோ பிழை நிகழாவிட்டால் கொல்ல மாட்டார்! யாரோ பெரும் பிழை புரிந்துள்ளார் ‘’ என்றார் மனத்துள் நினைந்து தம் படைகளைத் திரும்ப அனுப்பித் தம் குதிரைமேலிருந்து இறங்கினான்.

    இப்பாடலின்பொருள்

    “குழை யணிந்த காதினையுடைய சிவபெருமானுக்கு அன்பராகிய குணத்தின் மிக்க இவர், பிழைபட்டிருந்தாலல்லது கொலைசெய்யமாட்டார்; ஆதலின் பிழை நேர்ந்ததுண்டு.” என்று மனத்தினுட் கொண்டு, மழைபோலமதஞ் சொரியும் யானை, படை முதலிய சேனைகள் மேல்வராமற்றடுத்து, தாம் மேல் கொண்டுவந்த கொற்றக்குதிரையினின்றும் உலகமன்னர் (தனியிடத்து) இழிந்தனர்.

    இப்பாட்டில் குழையணி காதினான் என்ற தொடர் சிவபெருமான் குழையணிந்தசேவியர் என்பதைக்குறிக்கும் இறைவனது திருவுருவத்தில் ஆண்பாகம் வலப்பாகம். வலக்காதிலணிந்த குழை வலிய வீரம்பற்றிய மறக்கருணை குறிக்கும். அவனன்பராகிய இவரும் பிழைநீக்கும் மறக்கருணையாலே இது செய்தாராதல் வேண்டும் என்பது குறிப்பு.

    ‘’குணத்தின் மிக்கார் பிழை படின் அன்றிக் கொல்லார்’’ என்றதொடர்  குணத்தால் மிக்காராதலின் பிழை கண்டல்லாது கொல்லுதலைச் செய்யார் என்ற நியதியை அரசர் இங்குத் தம்முள் நிச்சயித்துக் கொண்டனர். எவ்விடத்தும் கொலைதீது என்று வெறு முழக்கம் செய்து ஆரவாரிக்கும் பொய்க்கொள்கை இங்கு மறுக்கப்பட்ட நேர்மை நோக்குக. பிழைபடிற் குற்ற நீங்கத் தண்டித்தல் இறைவன் மறைவழிக் காட்டிய நீதியாம். இதனை நன்கறிந்து நீதிசெலுத்திய அரசாராதலின் இவ்வாறு துணிந்தனர். இவரது புராண சரிதத்தில், பின்னர் இவர் சேனை செய்த அபராதத்துக்குக் கழுவாயாகத் தாமே தீப்புகுந்தமையும் இங்கு வைத்துக் காண்க. பிழைபடிற் கொல்லுதல் பிறவுயிர்கள் ஈடேறவும், அவ்வுயிர்,மேலேதருமன் தண்டனைக்குத் தப்பவும் ஆம் என்பது.

    ‘’பிழைத்ததுண்டு’’ என்றதொடருக்குப்  பிழை நேர்ந்ததுண்டாம் என்பது பொருள்  இது கருதலளவையாற் போந்த முடிபு. அனுமானம் என்பர். நெருப்பில்லாத விடத்துப் புகையில்லை. ஓரிடத்துப் புகை காணப்பட்டபோது தீ அங்குக் காணப்படாவிடினும், நெருப்புண்டு எனக் கொள்ளுதல்போல ஈண்டுக் காணப்படாத பிழையாகிய காரணத்தைக் காணப்பபட்ட தண்டமாகிய காரியத்தினின்றும், பிழைபடினன்றிக் கொல்லார் என்ற ஏதுவினைக் கொண்டு துணிந்தனர்.

    படின் அன்றிக்  கொல்லார்,  படிற் கொல்வார் என்பதனை வலியுறுத்த இரண்டு எதிர்மறைகளாற் கூறினார்.

    “ஞாயிறு படரி னல்லதைக் காண்டல் செல்லாக் கண்”

    என்ற விடத்துப், “படரிற் காண்டல் செல்லும் கண்ணென  அதனை எதிர்மறை முகத்தாற் கூறினார் இன்றியமையாமை விளக்குதற்கு!” என்று மாதவச் சிவஞான சுவாமிகள் சிவஞான போதப் பாயிரத்துட் காட்டினமை காண்க.

    ‘’சேனை வரவினை மாற்றி’’   என்றதொடர்  சேனை அழிவு செய்யு முயற்சி யின்மிக்கு வேகத்தால் வருதலால் அவை, உண்மை அறியாமையாலே, மேல்வந்து  அடராதபடி சேனை வரவினை மாற்றினார். தடுத்து நிறுத்தினார்.

    இனி, மேல்நின்று இழிந்தனன் என்றதொடர்  கீழே இறங்கினார் என்பதைக் குறித்தது . தான் மேற்கொண்டு வந்த அளவில் சீற்றமாகிய தலைநிமிர்ந்த நிலையினின்றும், தணிந்து இறங்கிய நிலையினையடைந்தனர் என்பதும் குறிப்பு.

    இப்பாடல், அளவில் சீற்றங் கொண்டெழுந்து வந்த மன்னனுக்கு, இச்செயல் அன்பர் செய்தார் என்றறிந்தவுடனே அத்தனை சீற்றமும் மாறிச் சிவாபராதத்தில் அச்சம் மிக்கதாகி,  எஞ்ஞான்றும் பிறழாத அவரது அன்பு நெறியொழுக்கத் திண்மையினைக் காட்டுகிறது. இங்கே,

    ‘’எண்ணித் துணிக கருமம்  துணிந்தபின்
    எண்ணுவம் என்ப  திழுக்கு!’’

    என்றதிருக்குறள் எண்ணற்பாலது.

    Share
  • காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் – ஒரு சிறு விளக்கம்

    காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் – ஒரு சிறு விளக்கம்

    வெ. சுப்ரமணியன்

    காப்பீட்டுத் திட்டங்கள் (Insurance plans) குறித்து மக்களிடையே போதிய  விழிப்புணர்வு இல்லை. இன்னும் பொதுமக்களில் பலருக்கும் ஆயுள் காப்பீடு (Life Insurance), விபத்துக் காப்பீடு (Accidental Insurance) மற்றும் ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance) ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகளைக் குறித்த சரியான புரிதல் இல்லை.

    சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையின் சேர்க்கைப் பிரிவில் (admission section) எனக்கு முன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி நின்றிருந்தார். அவர் அங்கிருந்த பணியாளருடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடியதிலிருந்து அவர் படித்த பெண்மணி என்று ஊகித்துக் கொண்டேன். அவர் தன்னுடைய  கணவரை இதய அறுவைச் சிகிச்சைக்காக உள் நோயாளியாக சேர்க்கை பெற வேண்டி அங்கு வந்திருப்பதையும் அவருக்கும் மருத்துவமனை ஊழியருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் வாயிலாக அறிய முடிந்தது.

    மருத்துவமனை ஊழியர் அவரிடம் சேர்க்கைக்காக இருபதாயிரம் ரூபாய் முன்பணமாக செலுத்தும்படி கூறினார். அதற்கு அந்தப் பெண்மணி தன்னிடம் நாற்பது இலட்ச ரூபாய்க்குக் காப்பீடு (Insurance) உள்ளது ஆகவே முன்பணம் செலுத்தாமல் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னார்.

    அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை ஊழியர், அவரது கணவருக்கு ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) இருந்தால் முன்பணம் கட்ட அவசியம் இல்லை. இருப்பினும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் (Insurance company) சேர்க்கைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆகவே அருகில் உள்ள காப்பீடு மேசையில் (Insurance desk)  உரிய படிவங்களைப் பெற்றுத் தவறின்றிப் பூர்த்தி செய்து கூடவே உரிய காப்பீட்டு ஆவணங்களின் நகல்களையும் (copies of policy document) இணைத்துத் தர வேண்டும் என்று கூறி எதிர்வரிசையில் இருந்த காப்பீட்டு மேசைக்குச் செல்லும்படி கூறினார்.

    காப்பீட்டு மேசையில் பணியிலிருந்த ஊழியர் அந்தப் பெண்மணியிடம் தேவையான படிவங்களை வழங்கிய பின் காப்பீட்டு நிறுவனம் மற்றும் காப்பீட்டின் அளவு குறித்து மேலோட்டமாக அறிந்து கொள்வதற்காகக் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ள கடைசியாகச் செலுத்திய தவணைக் தொகை ரசீது அல்லது அதன் நகலைத் தரக் கோரினார். அந்தப் பெண்மணி உடனே எடுத்துக் கொடுத்த  ஆவணங்கள் ஆயுள் காப்பீட்டு எல்லாம் ஆவணங்களே (Life insurance policy document). அவற்றில் எதுவுமே ஆரோக்கியக் காப்பீட்டு ஆவணங்கள் (Health insurance documents) இல்லை. கல்வியறிவு உள்ளவர்களுக்கே இந்த வேறுபாடுகள் புரிவதில்லை.

    நான் ஆயுள் மற்றும் ஆரோக்கியக் காப்பீட்டு ஆலோசகராக (Insurance Advisor) இரு வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறேன். இருப்பினும் பொதுவெளியில் கட்டுரை எழுதும்போது சார்பற்று நடுநிலையான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால் இதில் நான் சார்ந்துள்ள நிறுவனங்களைக் கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை.

    இந்தக் கட்டுரை விழிப்புணர்வு நோக்கில் மட்டுமே எழுதப்பட்டது. ஆகவே எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தும் விவரங்களும் தரவுகளும் வியாபார நோக்கில் தரப்பட்டவை அல்ல. அதே போல் எந்த ஒரு தனிப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும் கட்டுரை எழுதப்படவில்லை. இக் கட்டுரை பல்வேறு வகை காப்பீட்டுத் திட்டங்களை மேலோட்டமாகப் பறவையின் கண்பார்வையில் (Bird’s eye view) காட்டும். கூடுமானவரை பொதுமக்கள் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை அறிந்து கொண்டு பயனடைய வேண்டும் என்பதே கட்டுரையின் மைய நோக்கமாகும். கட்டுரையில் சொல்லப்பட்டவை அனைத்தும் சட்டபூர்வமான ஆதாரமாக எடுத்துக் கொள்ளத் தகுதி வாய்ந்தவை அல்ல. சரியான வழிகாட்டலுக்கு உங்களின் காப்பீடு ஆலோசகரையோ அல்லது நீங்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியையோ அணுகவும்.

    நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் செயல்பாடுகளை எவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கட்டுப்படுத்தி வழி நடத்துகிறதோ அதைப் போலவே அனைத்து வகையான காப்பீட்டு நிறுவனங்களையும்  இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insuranace Regulatory and Development Authority of India – IRDAI) என்ற சட்டப்பூர்வமான அமைப்பு கட்டுப்படுத்தி வழி நடத்துகிறது.

    காப்பீட்டுத் துறையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும்  நிறுவனங்களின் எண்ணிக்கை 57. இவை அனைத்தும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவை.

    இவற்றில் 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் (Life Insurance companies) உள்ளன. இவற்றில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ( Life Insurance Corporation of India) மட்டுமே அரசு நிறுவனம். மற்றவை அனைத்தும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களே.

    ஆயுள் காப்பீடு அல்லாத பிற காப்பீட்டு நிறுவனங்கள் (Non – life insurance companies) மொத்தம் 33. இவற்றில் 6 காப்பீட்டு நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள்.

    இவை தவிர ஒரே ஒரு  மறு காப்பீட்டு நிறுவனமும் (Reinsurance company) உள்ளது. இது ஒரு அரசு நிறுவனம்.

    இவை தவிர அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Postal Life Insurance) மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.

    ஆயுள் காப்பீடு குறித்து முதலில் காண்போம்.

    ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது,  ஒரு குடும்பத்தில்  முதன்மையானவர் குடும்பத்தை நடத்த வருவாய் ஈட்டுபவராவார். வருவாய் ஈட்டும் அந்தக் குடும்பத்தின் தலைவர் துரதிருஷ்டவசமாக இறக்க நேரிட்டால், அக் குடும்பத்தின் நிதி நிலைமையைப் பராமரித்துப் போதுமான உணவைப் பெற வழி வகை செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நம் நாட்டில் ஆயுள் காப்பீட்டில் பல வகைகள் புழக்கத்தில் உள்ளன. இவை குறித்து சுருக்கமாகக் காண்போம்.

    1) பிற கூறுகள் ஏதுமற்ற காலக் காப்பீடுத் திட்டம் ( Pure Term insurance policy)

    இத்திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால அளவுகளில் அதாவது 10, 20, 30 அல்லது இன்னும் கூடுதலான ஆண்டுகளுக்கு காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.

    இத்திட்டம் ஆயுள் காப்பீட்டை மட்டுமே கொண்டுள்ளதால் இதில் சேமிப்புக் கூறு (savings component) இல்லை. இதனால் பிற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் போல இதிலிருந்து முதிர்வுப் பலன் (maturity benefits) எதுவும் கிடைக்காது. 

    இதனால் மற்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் மிக அதிகமான காப்பீட்டுத் தொகைக்கும் மிகக் குறைந்த தவணைக் தொகையே செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.

    2) தவணைத் தொகையைத் திரும்பப் பெறும் காலக் காப்பீடுத் திட்டம் (Term insurance policy with return of premium)

    இந்தத் திட்டத்தில் காப்பீடு எடுத்துக் கொண்டவர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்து காப்பீட்டுக் காலத்திற்குப் பின்னரும்  உயிர் வாழும் நேர்வில் (survival) அவர் செலுத்திய தவணைக் தொகை முதிர்வின் போது (maturity) முழுமையாகத் திரும்பத் தரப்படும்.

    கால காப்பீட்டுத் திட்டத்திற்கும், தவணைக் தொகையைத் திரும்பப் பெறும் காப்பீட்டுத் திட்டத்திற்கும் செலுத்தும் தவணைத் தொகையில் பெரும் வேறுபாடு உண்டு. இதனைக் கீழ்வரும் அட்டவணை தெளிவுபடுத்தும்.

    Comparison chart courtesy: Business today

    3) யூலிப் திட்டங்கள் (unit linked insurance plans)

    ஒருசிலர் ஆயுள்காப்பீட்டிற்கா அல்லது சேமிப்பிற்கா எதற்கு  முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்து தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழப்பமான மனநிலையில்  இருப்பார்கள். யூலிப் திட்டங்கள் இவர்களைப் போன்றவர்களைக் கருத்தில் கொண்டு  உருவாக்கப்பட்டவை. யூலிப் காப்பீட்டுத் திட்டங்கள் காப்பீடுதாரருக்கு ஒரே திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டையும், சேமிப்பையும் தரக் கூடியவை. இத்திட்டங்களின் மூலம் செலுத்தும் காப்பீட்டுத் தவணைத் தொகையைக் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு முன்பாகத் திரும்பப் பெற முடியாது.

    செலுத்தப்படும் காப்பீட்டுத் தவணைத் தொகை காப்பீட்டு கூறு (Insurance component) மற்றும் சேமிப்புக் கூறாக (savings component) பங்குச் சந்தை முதலீடு என்று இரண்டு கூறுகளை உடையதாக இருக்கும். எந்தெந்த பரஸ்பர நிதிகளில் எந்த விழக்காடு அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் காப்பீட்டாளர் முடிவு செய்யலாம். காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட பரஸ்பர நிதிகளில் ( mutual fund schemes) முதலீடு செய்து அலகுகளாக (Units) மாற்றிக் காப்பீட்டாளரின் கணக்கில் வைத்துக் கொள்ளும். காப்பீட்டாளர் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப பரஸ்பர நிதிகளையோ அல்லது முதலீட்டின் விழுக்காட்டையோ குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றம் செய்து கொள்ள முடியும் (switching). காப்பீட்டுக் காலம் முடியும் முன் ஐந்தாண்டுகளுக்குப் பின்பு எப்போது வேண்டுமானாலும் பரஸ்பர நிதி அலகுகளின் அன்றைய மொத்த சொத்து மதிப்பின் (Net Asset Value – NAV) அடிப்படையில் காப்பீட்டைச் சரண் செய்து முழுவதுமாகப் பணமாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

    நீண்டகாலம் இத்தகைய திட்டங்களில்  நீடித்திருப்பதே நல்ல பலன்களைத் தரும். மேலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்துப் போதிய அனுபவம் இல்லாதவர்களும் அதில் ஒரளவுக்குப் பாதுகாப்பான முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பை யூலிப் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குகின்றன.

    4) காலவரை ஈட்டுறுதித் திட்டங்கள். (Endowment insurance plans)

    இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காப்பீட்டையும் சேமிப்பையும் ஒருங்கே தரக்கூடியவை. நீண்டகால  நிதி இலக்காக ( financial goal) அடைய நினைக்கும் தொகையை சிறுசிறு தவணைகளில் சேமித்து முதிர்வில் செலுத்திய தவணைக் தொகையுடன் ஊக்கத் தொகையாக (Bonus) ஒரு தொகையையும் சேர்த்து காப்பீட்டாளரால் பெற இயலும். காப்பீட்டாளர் துரதிர்ஷ்டவசமாக காப்பீட்டுக் காலத்திற்குள் இறக்க நேரிட்டால் காப்பீட்டுத் தொகையை நியமனதாரருக்குக் (nominee) காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

    5) பணம் திரும்பப் பெறும் காப்பீட்டுத் திட்டம் (Money back insurance policy)

    காலவரைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேமித்த தொகை கைக்கு வர முதிர்வு வரை காத்திருக்க வேண்டும். ஆனால் அனைவருக்கும் பணத்தேவை அவ்வப்போது ஏற்படும் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டு வடிவமைக்கப்பட்டவையே பணம் திரும்பப் பெறும் காப்பீட்டுத் திட்டம். இத்திட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு காப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள இயலும். காப்பீட்டின் முதிர்வில் மீதமுள்ள காப்பீட்டுத் தொகையுடன் ஊக்கத் தொகையையும் சேர்த்து பெற்றுக் கொள்ள முடியும்.

    துரதிர்ஷ்டவசமாக காப்பீட்டாளர் காப்பீட்டுக் காலத்திற்குள் இறக்க நேரிட்டால் அதுவரை வழங்கப்பட்ட உயிர்வாழ் பலனாகப் பெற்ற தொகைகளைக் கணக்கில் கொள்ளாமல் முழுக் காப்பீட்டுத் தொகையும் நியமனதாரருக்குத் வழங்கப்படும்.

    6) முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (Whole life insurance policy)

    முழு ஆயுள் காப்பீட்டுத்திட்டம் நூறு ஆண்டுகள் வரையில் காப்பீடு வழங்கும் திட்டமாகும். நூறாண்டுகளுக்கு மேல் காப்பீட்டாளர் உயிரோடிருப்பின் முதிர்வுத் தொகையுடன் ஊக்கத் தொகையும் சேர்த்து அவருக்கு வழங்கப்படும். ஒருவேளை துரதிருஷ்டவசமாகக் காப்பீட்டாளர் நூறு வயதை அடையும் முன் இறக்கும் தேர்வில் காப்பீட்டுத் தொகை நியமனதாரருக்கு (nominee) வழங்கப்படும்.

    முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டாளர் நுழையும் வயதைப் (entry age) பொறுத்து காப்பீட்டுத் தவணைத்தொகை (instalment of premium) அமையும்.  தவணைத்தொகை மாறாது (fixed premium). தவணைத்தொகை காலக் காப்பீட்டுத் திட்ட (term life insurance) தவணைத்தொகையை விடக் கூடுதலாக இருக்கும். ரொக்க மதிப்பு (Cash value) என்பது இத்திட்டத்தில் உள்ள ஒரு முக்கியக் கூறாகும்.

    காப்பீட்டாளர் ஆயுள் காலம் முழுவதும் தவணைத்தொகை செலுத்துதல் தவிர குறிப்பிட்ட கால அளவுகளில் தவணை செலுத்தும், அதாவது 15, 20, 25….. ஆண்டுகளுக்கு (Limited pay)  தவணைக் தொகை செலுத்தும் மற்றும்  ஒரே ஒருமுறை (single pay) மொத்தமாக  செலுத்தும்  விருப்பத் தேர்வுகளும் (options) இத்திட்டங்களில் உள்ளன.

    இத்திட்டத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. பின்னொரு சந்தர்ப்பத்தில் அவை குறித்துக் காண்போம்.

    7) குழுக் காப்பீட்டுத் திட்டம் (Group insurance policy)

    குழு ஆயுள் காப்பீடானது பெரியதொரு குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே மதிப்பிலான காப்பீட்டை வழங்குகிறது.  ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கும் குழு ஆயுள் காப்பீட்டுத் திட்டமொன்றில் பொதுவாக நிறுவனத்தின் முதலாளியே பாலிசிதாரராக இருப்பார். குழு ஆயுள் காப்பீடு மற்ற ஆயுள் காப்பீடுகளை விட சற்று குறைவான பாதுகாப்பையே அளிக்கிறது, காரணம் இது அதிகச் செலவின்றி கிட்டத்தட்ட இலவசமாகவே கிடைக்கிறது . நிறுவனத்தின் ஊழியர் குழு ஆயுள் காப்பீட்டை ஏற்றுக்கொள்ளும் நேர்வில், பொதுவான காப்பீட்டுத் தொகையைப்  பொறுத்து, ஒரு சிறிய தொகை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படலாம்.

    எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசாங்கம் ஓய்வூதியம் (pension) பெறுபவர்களின் ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதியாக (pensioners’ family security fund) ரூபாய் 80/= பிடித்தம் செய்கிறது. ஓய்வூதியதாரர் இறக்கும் நேர்வில் அவரது நியமனதாரருக்கு ரூபாய் 50000/= வழங்கப்படுகிறது.

    அதைப் போலவே அனைத்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் நான்கு இலட்சம் ரூபாய்ஆரோக்கியக் காப்பீடு வழங்க  ஒவ்வொரு மாதமும் சிறு தொகை ரூபாய் 350/= பிடித்தம் செய்கிறது.

    8) சிறார் காப்பீட்டுத் திட்டங்கள் (children insurance policies)

    பிற்காலத்தில் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிற்காகத் தேவைப்படும் நிதியை எட்டுவதை இலக்காகக் கொண்டு காப்பீடுடன் (Insurance) கூடிய முதலீடு (Investment) என்று நோக்கில் உருவாக்கப்பட்டவையே சிறார் காப்பீட்டுத் திட்டங்கள். இத்திட்டங்களில் குழந்தைகள் பிறந்த தினத்திலிருந்தே சேமிக்கத் துவங்கலாம். ஒருவர் தான் எட்ட வேண்டிய நிதி இலக்கைத் (financial goal) தனது நிதிநிலைக்கேற்ப (financial condition)  வெவ்வேறு நிதித்திட்டங்களைத் (funds) தேர்வு செய்யும் வசதி இத்திட்டங்களில் உள்ளது.

    9) ஓய்வு காலத் திட்டங்கள் (Retirement plans)

    ஓய்வு காலத் திட்டங்கள் ஒருவர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பு(financial security) மற்றும் செல்வ வளத்தை உருவாக்குதல் (wealth creation) ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீட்டப்பட்டவையாகும். ஓய்வுக் காலத் திட்டங்களில் சேமிக்கப்பட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் ஓய்வூதியமாகப் பெற இயலும். ஒருவேளை துரதிருஷ்டவசமாகக் காப்பீட்டாளர் மரணமடைய நேரிட்டால் நியமனதாரருக்கு இறப்புப் பலன்கள் (death benefits) வழங்கப்படும்.  இதிலும் நிறைய வகைகள் உள்ளன. அவற்றைப் பின்னர் காண்போம்.

    சுருக்கமாகச் சொன்னால்,

    1) காலத் திட்டம் (Term insurance) –  ஆயுள் ஆபத்துக்கான பாதுகாப்பு மட்டும் (Purely life risk cover)

    2) யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் (Unit linked insurance plan – ULIP) (யுலிப்) – காப்பீடு (Insurance) + முதலீட்டு வாய்ப்பு (Investment opportunity)

    3) எண்டோவ்மென்ட் திட்டம் (Endowment plan) – காப்பீடு ( Insurance) + சேமிப்பு (Savings)

    4) பணம் திரும்பப் பெறுதல் திட்டம் (Money back plan)  – காப்பீட்டுத் தொகையுடன்  அவ்வப்போது வருமானம் (Insurance with periodic income)

    5) முழு ஆயுள் காப்பீடு (Whole life insurance) – முழு ஆயுளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஆயுள் பாதுகாப்பு (Guaranteed life cover for the whole life)

    6) சிறார்கள் காப்பீட்டுத் திட்டம் (Children insurance plan) – கல்வி, திருமணம் போன்ற உங்கள் குழந்தையின் வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்றுவதற்காக ( To fulfilling the financial requirements of children like education , marriage)

    ஓய்வூதியத் திட்டம் (Pension plan) –  ஓய்வைத் திட்டமிட்டு, கவலை ஓய்வு பெறுங்கள்

    இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) பரிந்துரைக்கும் செய்ய வேண்டியவையும்

    செய்யக் கூடாதவையும் (Do’s and Don’ts)

    செய்ய வேண்டியவை(Do’s):

    காப்பீட்டை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான முக்கிய தேவைகள் மற்றும் உங்களின் எதிர்பார்ப்புகளைச் சிந்தித்துப் பாருங்கள்

    பொறுமையாக விருப்பங்களைத் தேர்வு செய்து, ஆலோசனைகளைப் பெறுங்கள்

    திறந்த மனதுடன் இருங்கள், நீங்கள் சேகரிக்கும் ஆலோசனை மற்றும் தகவல்களைப் பற்றி எச்சரிக்கையோடு இருங்கள்.  உங்கள் தேவைகளுக்கு எது பொருத்தமானது என்பதைக் காண காப்பீட்டின் பல்வேறு  விருப்பத் தேர்வுகள் (Policy options) குறித்து நிறைய வினாக்களை எழுப்பி உங்களுடைய தேவைக்குத் தோதான காப்பீட்டை கண்டு கொள்ளுங்கள்.

    காப்பீடு குறித்த விபரங்களை அதாவது ஒற்றைத் தவணையா (single premium) அல்லது வழக்கமான தவணைக் காப்பீடென்றால் (Regular premium policy) அதாவது காலாண்டுத் தவணையா (Quarterly premium), அரையாண்டுத் தவணையா (Half yearly premium) அல்லது ஆண்டுத் தவணையா (Yearly premium) அல்லது மின்னணு பணப் பரிமாற்றம் (Electronic Clearing Service – ECS) இவற்றில் எதுவாக இருந்தாலும் எது உங்களுக்கு பொருத்தமான சிறந்த தவணை முறை என்பதையும் கேட்டறிந்து கொண்ட பின் சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

    முன்மொழிவு படிவத்தை (Proposal form) மிகவும் கவனமாகவும் தனிப்பட்ட முறையில் உங்கள் கையால் நிரப்பவும்

    முன்மொழிவு படிவத்தின் (Proposal form) உள்ளடக்கங்களுக்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு என்பதை நினைவில் கொண்டு  அதனை முழுமையாகவும் உண்மையான தகவல்களால் மட்டுமே நிரப்பவும். இப்போது நீங்கள் கொடுக்கும் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  தகவல்களைப் பிற்காலத்தில் உரிமைகோரலின் (Claim) போது  மறுக்க முடியாது.

    நீங்கள் நியமனதார் விவரங்களைக் (Nominee details) கட்டாயமாக நிரப்பி உறுதி செய்து கொள்ளுங்கள்.

    ஒரு மொழியில் படிவம்  இருந்து எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் இருந்து, நீங்கள் வேறு மொழியில் எடுத்துக்காட்டாக தமிழில் படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கிறீர்கள் என்றால் படித்துக் காட்டப்பட்ட வினாக்களை நன்கு உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்கப்பட்டது என்ற உறுதிச்சான்றை (declaration) முன்மொழிவுப் படிவத்தில் அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    நீங்கள் கையொப்பமிட்ட பூர்த்தி செய்யப்பட்ட முன்மொழிவுப் படிவத்தின் நகலையும், உங்கள் பதிவுகளுக்கு பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளையும் உங்களது கோப்பில்  வைத்திருங்கள்

    நீங்கள் யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தை அதாவது யூலிப்பைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால் (Unit Linked Insurance Policy – ULIP)   அது குறித்த கீழ்க்கண்ட  வினாகளை எழுப்பித் கட்டாயமாகத் தெளிவு பெற வேண்டும்.

    அ) பல்வேறு கட்டணங்கள் (various changes)

    ஆ) நிதி விருப்பங்கள் (fund options)

    இ) நிதி மாறுதல் செய்தல் (switching of funds)

    ஈ) நீங்கள் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து விலகினால் விளையும் நன்மைகள் (Benefits of discontinuing the policy)

    உ) காப்பீட்டை சரண் செய்தல் (surrendering the policy)

    ஊ) பகுதியளவு நிதியைத் திரும்பப் பெறுதல்( Partial withdrawal of fund)

    செய்யக்கூடாதவை (Don’ts):

    அ) முன்மொழிவுப் படிவத்தில் (Proposal form) எந்த நெடுவரிசையையும் (coloumn) நிரப்பாமல் காலியாக விட வேண்டாம்.

    ஆ) முன்மொழிவுப் படிவத்தை நீங்களே நிரப்புங்கள்.  வேறு யாரும் நிரப்ப அனுமதிக்காதீர்கள்.

    இ) எந்தவொரு தகவலிலும் உண்மையை மறைக்கவோ (conceal) அல்லது தவறாகக் குறிப்பிடவோ (misstate)  வேண்டாம். காரணம் உரிமைகோரலின் போது சர்ச்சைகளுக்கும் சிக்கல்களுக்கும் அது வழிவகுக்கும்.

    ஈ) உங்கள் காப்பீடுத் தவணைத் தொகையைக் குறித்த நாளில் செலுத்துவதைத் வழக்கமாகக் கொள்ளுங்கள். தவணைக் தொகை செலுத்துவதைத் தாமதப்படுத்தவோ அல்லது தவறவிடவோ வேண்டாம்.

    அடுத்து ஆரோக்கியக் காப்பீடு குறித்து விரைவில் எழுதுகிறேன்.

    தொடரும்….

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 7

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இலக்கண விளக்கமும் உவமமும்

    முன்னுரை

    பொதுவாக ‘உவமம்’ என்பது இலக்கியம் சார்ந்தது. அதற்கேயுரியது. வண்ணனைச் செய்யப்படும் பொருளை அல்லது விளக்கப்படும் கருத்துகளைக் கூடுதல் கவர்ச்சியோடும் தெளிவோடும் அழகோடும் புரிந்துகொள்வதற்காகப் படைப்பாளனால் ஒப்புமை செய்து காட்டப்படுவதே உவமம். ஆனால் தமிழியல் வரலாற்றில் முற்றிலும் மாறான நிலையில் இந்த உவமத்தைப் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது. இலக்கண நுட்பங்களைக் கற்பித்தலுக்கான கருவிகளில் ஒன்றாக இந்த உவமமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருவகையில் பொருள் விளக்கம் எனக் கருதப்படலாம். ஆனால் பொருள் விளக்கம் என்பது ‘அகர முதல எழுத்தெல்லாம்’, ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ என்பன போல அமையும். இலக்கண விளக்கத்திற்காக உவமத்தைப் பயன்படுத்துவது நுண்ணியது. அரியது. உலகத்தின் வேறு எந்த மொழிகளிலாவது இவ்வாறு அமைந்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. இந்தப் பின்புலத்தில் இலக்கண விளக்கத்தில் உவமத்தின் பங்களிப்பை இந்தப் பகுதி சுருக்கமாக ஆராய்கிறது.

    இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு

    இலக்கண நூல்களில் உவமப் பயன்பாடு இருவகையில் அமைந்திருப்பதை அறியமுடிகிறது.

    1. தொடர்புடைய இலக்கண நூலிலேயே நூற்பாவின் கருத்தை விளக்குதற்கு நூலாசிரியரே உவமையைப் பயன்படுத்துதல்.
    1. நூற்பாவின் கருத்தை விளக்க உரையாசிரியர்கள் உவமையைப் பயன்படுத்துதல்.

    தெளிவுக்குத் தொல்காப்பியம் காட்டும் உவமம்

    மகாகவி பாரதி அறிவைச் சுட்டுகிற பொழுதெல்லாம் தெளிவை முன்னிறுத்துவது இயல்பு. ‘பாரதி கவிதைகள்’பெற்ற வெற்றிக்கு இந்தத் தெளிவின் பங்கு ‘செம்பாகம் அன்று., பெரிது. பாரதியின் பெயரை முன்னிறுத்திக் கொள்ளும் கவிஞர் பலரால் எழுதப்படும் கவிதைகள் புரியாத மொழியில் அமைந்திருக்கின்றன என்பது தனி ஆய்வுக்குரியது.“தெளிவு பெற்ற மதியினாய்”  “தெள்ளிய ஞானப் பெருஞ்செல்வமே”, “தெளிவுறு அறிவினை”, “சிந்தை தெளிவாக்கு”, “தெளிந்த நல் அறிவு வேண்டும்”, “மூடச் சித்தமும் தெளிவுறச் செய்தாள்”, “சிந்தனை தெளிந்தோம்”, “நல்ல தெள்ளறிவு”, “சித்தத் தெளிவெனும் தீயின் முன்”, “சித்தந் தெளியும்”, “அறிவு தெளிந்திடும்”, “அறிவிலே தெளிவு”  என்றெல்லாம் தெளிவை முன்னிறுத்தும் பாரதியின் இலக்கியப் போக்கு, தொல்காப்பியத்திலேயே தொடங்கிவிடுகிறது. இந்தத் தெளிவுக்குத் தொல்காப்பியம் ஆடியை உவமமாக்கியிருப்பதை அறியமுடிகிறது.

    “அவற்றுள்
    ஆடி நிழலின் அறியத் தோன்றி
    நாடுதல் இன்றிப் பொருள்நனி விளங்க
    யாப்பினுட் தோன்ற யாத்தமைப் பதுவே”

    என்னும் நூற்பாவில் தெளிவுக்கு ஆடியை உவமிக்கும் தொல்காப்பியம், ஆடியின் பண்புகளாக,

    1. நாடுதல் இன்மை
    2. பொருள் நனி விளங்குதல்

    என்னும் இரண்டினைச் சுட்டி அவ்விரு பண்புகளும் சூத்திரங்களில் அமைதல் வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுகிறது. ஆடியின் தெளிவைத் தெய்வப் புலமைத் திருவள்ளுவர்  ‘அடுத்தது காட்டும் பளிங்குபோல்’என முகத்திற்கு உவமமாக்குவது ஈண்டு ஒப்பிடத்தகுந்தது.

    இனமான மணிகள் இணைந்து நிற்கும் ஓத்து

    சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் எனத் தொல்காப்பியர் நூல்வகைகளை நான்காகப் பகுப்பர். அவற்றுள் ஓத்தின் இயல்பு கூற வந்தவர்,

    “நேரின  மணியை நிரல்பட வைத்தாங்கு
    ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
    ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

    என்னும் நூற்பாவில் உவமத்தால் விளக்கிக் காட்டுவதை அறியமுடிகிறது. இந்நூற்பாவில் ‘நேர், ‘இனம்’ஆகிய இரு சொற்களும் உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனுக்குப் பேருதவி செய்வனவாம். அளவாலும் தரத்தாலும் ஒத்திருக்கும் மணிகளைக் கோத்து ஆரம் அமைப்பதுபோல, ஒன்றற்கொன்று இயைபுடைய பொருள்களை நிரல்படக் கோத்தமைப்பதே ‘ஓத்து’என்பது இந்நூற்பாவின் உள்ளடக்கமாகும்.

    மேலெழுந்தவாரியாக நோக்குவார்க்குச் சூத்திரமும் ஓத்தும் ஒன்று போலத் தோன்றிடினும், முன்னதற்குத் தெளிவையும், பின்னதற்கு அளவு, தன்மை ஆகியவற்றையும் இயல்புகளாக்கித் தொல்காப்பியம் அவற்றிடையே அமைந்த வேறுபாடு காட்டுவது உணரத்தக்கது. தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு வழிநூல் செய்த பவணந்தியார் இந்நூற்பாவில் (நன்னூல் 16) எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் கையாளுவதற்கு மேற்கண்ட உவமத்தின் பொருள் புலப்பாட்டுத் திறனே காரணமாக இருத்தல் கூடும். நூன்மரபும் மொழிமரபும் எழுத்திலக்கணமேயானாலும், எழுத்தின் தனிப்பண்புகளை ஆராயும் நூன்மரபை ஒரு தொகுப்பாகவும், மொழியிடை நிற்கும் அதன் மற்றொரு இயல்பை ஆராயும் மொழிமரபை மற்றொரு தொகுப்பாகவும்; தனித்தனி ஓத்துக்களாகப் பிரித்தமைத்திருப்பது ‘ஓத்து’என்பதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாகலாம்.

    நன்னூலுள் உவமங்கள்

    ‘நூல்’என்பதற்குப் பயனடிப்படையில் தாம் தரும் பொருள் வரையறையைத் தொழில் சார்ந்ததோர் உவமத்தின் துணையால் நன்னூலாசிரியர் பவணந்தியார் அளித்திருப்பதை அறியமுடிகிறது.

    “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமை
    புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்
    மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு”

    மரத்தின் கோணல்களை நூல் தீர்ப்பதுபோல் மனத்தின் கோணல்களை நூல் தீர்க்க வேண்டும்’என்பது மேற்கண்ட நேரிசை வெண்பாவின் கருத்து. ‘மனக்கோட்டம் தீர்ப்பதே நூல்’என்பது பொருள் வரையறை. இலக்கண நூலாசிரியர் ஒருவர் தச்சுத் தொழில் தொடர்பானதோர் உவமத்தைத் தம் கருத்து விளக்கத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சிந்தனைக்குரியது. இதனைப் போலவே, சூத்திரத்தின் இயல்புக்கு வரையறை கூறும் நன்னூல்,

    “சில்வகை எழுத்திற் பல்வகைப் பொருளைச்
    செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
    திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்”

    எனத் தொல்காப்பியத்தைப் போலவே ஆடியைத் துணைக்கழைத்திருப்பதைக் காணமுடிகிறது. தொல்காப்பியம் தெளிவுக்கு ஆடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்க, நன்னூல் அதனோடு திட்பத்திற்கும் நுட்பத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே ‘ஆடி’என்னும் உவமம், தெளிவு, செறிவு, இனிமை, நுட்பம் முதலிய  பல்வகைப் பண்புகளுக்கும் களனாகிறது எனலாம்.

    அமிதசாகரரும் அம்போதரங்க உறுப்பும்.

    தொல்காப்பியமும் நன்னூலும் தாம் கூறவந்த கருத்துக்களை விளக்குதற்கு  நூற்பாக்களில் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளதைப் போலவே யாப்பருங்கலக்காரிகையுள்ளும் யாப்பு பற்றிய கருத்துக்களைத் தெளிவுறுத்த உவமத்தைப் பயன்படுத்தியுள்ளமை அறியமுடிகிறது. முன்னவற்றில் ஆங்காங்கே உவமை பயன்பட்டிருப்பதைப் போலல்லாது, காரிகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இலக்கண விளக்கத்திற்கு உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. நால்வகைப் பாக்களில் ஒன்றான கலிப்பா, ஒத்தாழிசைக்கலிப்பா, வெண்கலிப்பா, கொச்சகக்கலிப்பா என மூன்று பிரிவாகும். அவற்றுள் ஒத்தாழிசைக் கலிப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என மூன்று தன்மையனவாக அமைகின்றன. இவற்றுள் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவைப் பற்றி இலக்கணம் கூறவந்த காரிகையாசிரியர் அதில் அமைந்துள்ள அம்போதரங்க உறுப்பை விளக்க எண்ணுகிறார். தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புக்கள் நிரல்பட அமையும் நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவினின்று ‘அம்போதரங்கம்’ என்னும் ஓருறுப்பால் வேறுபடுவதே அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும்.  தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே அம்போதரங்க உறுப்பு வந்து, ‘தரவு, தாழிசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம்’என்னுமாறு ஐந்து உறுப்புக்களால் அமைந்தால் அது ’அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா’எனப் பெயர் பெறும். இவ்வம்போதரங்க உறுப்பு எவ்வாறு அமையும் என்பதைக் கூற வந்த காரிகை,

    “நீர்த்திரைபோல் மரபொன்று நேரடி, முச்சீர் குறள் நடுவே மடுப்பின்
    …………………………………………..அம்போதரங்க ஒத்தாழிசையே”

    ‘அம்போதரங்க’ உறுப்பு என்பது இருசீர் அடிகளாலும், முச்சீர் அடிகளாலும், நாற்சீர் அடிகளாலும் அமையப்பெறும். இரண்டு, மூன்று, நான்கு என்னும் சீர்வரிசைகளில் அமையும் அவற்றை நோக்க, நீர்நிலையில் கல்லெறிந்தால் எழும் நீரலை, கல் விழுந்த ஒரு குறிப்பிட்ட மையப் புள்ளியிலிருந்து சிறிது சிறிதாக விரிந்து சென்று கரைந்துவிடுவதைப் போல இருப்பதாகக் காரிகை ஆசிரியர் உவமம் கூறுகிறார். இவ்வடிகளுக்குக்,

    “கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற்
    சுருங்கி வருகின்ற நீர்த்தரங்கம்போல”

    என உரையாசிரியர் குணசாகரர் எழுதிக்காட்டும் உரையும் ஈண்டுச் சுட்டற்பாலது.

    நிறைவுரை

    இதுகாறும் கூறியவாற்றால் உவமம் இலக்கியத்துள் அழகியல் உணர்வை மிகுவிக்கும் பகுதி என்பதும் கருத்து விளக்கத்தில் அதன் பங்களிப்பு இலக்கியம், இலக்கணம் ஆகிய இரண்டினுள்ளும் விரவியிருக்கிறது என்பதும் அதுவும் நூலாசிரியர் உரையாசிரியர் என்னும் இருவர் திறத்தன என்பதும் தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களுள் தொடர்புடைய இலக்கண விளக்கத்திற்காக எளிய அழகிய உவமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் அறியலாகும். தொல்காப்பிய இலக்கணத்துள் எழுத்து, சொல் ஆகிய இரண்டு அதிகாரங்களில் இலக்கண விளக்கத்திற்காக உவமப் பயன்பாடு இல்லாத நிலையில் பொருளதிகாரத்தில் அதன் பங்களிப்பு அடுத்த தலைப்பில் ஆராயப்படும்.

    (தொடரும்…)

    Share