இதயம் திறந்த அனுபவங்கள் – 1

0

வெ. சுப்ரமணியன்

சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் எனக்கு இதயத் தமனி அடைப்புக்காகச் செய்யப்படும் பக்க வழி ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG) செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை என்றாலே பெரும்பாலானவர்களின் மனதில் இரு பெரும் அச்சங்கள் ஏற்படுகின்றன. முதலில் திறந்த இதய அறுவைச் சிகிச்சைக்குக் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு லட்சங்கள் வரை செலவு செய்ய வேண்டுமே என்பதும் அடுத்தது  அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்து உயிர் பிழைத்து வருவோமா என்பதும். இந்த இரண்டு அச்சங்களுமே இதய நோயாளிகளில் பலரைச்  சரியான நேரத்தில் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்வதைத் தள்ளிப் போடச் செய்கிறது.

உண்மையில் அறுவைச் சிகிச்சை குறித்த மேற் சொன்ன இரண்டு அச்சங்களுமே பொருளற்ற தேவையற்ற அச்சங்களே.

இந்தத் தொடர் கட்டுரைகள் சற்று நீண்டதாக இருந்த போதிலும் முழுவதும் படிப்பவர்களுக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை (Open heart surgery) குறித்த  புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

தற்போதய சூழலில் மருத்துவம் என்பது எப்படி நாள்தோறும் நவீனமாகி வருகிறதோ அதேபோல அதிகச் செலவு ஏற்படுத்தக் கூடுதாகவும் உள்ளது. எனவே அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க அனைவரும் கண்டிப்பாக ஆரோக்கியக் காப்பீடு (Health insurance Policy) எடுத்துக் கொள்வதே சரியான தீர்வாக இருக்கும்.

பலரும் ஆயுள் காப்பீடு (Insurance) என்றாலே ஆயுள் காப்பீடு (Life insurance) என்றே பொருள் கொள்கின்றனர். ஆயுள் காப்பீடும் ஆரோக்கியக் காப்பீடும் வேறு வேறு என்பதே இன்னும் நம் நாட்டில் உணரப்படவில்லை. மேலும் ஆரோக்கியக் காப்பீட்டின் முக்கியத்துவம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் பலராலும் உணரப்படுகிறது. என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன், அறுவைச் சிகிச்சைக்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் போது எந்தக் கட்டணமும் செலுத்தாமலே சேர என்னால் முடிந்தது. தவிரவும் என்னுடைய சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து புறப்படும் நாளில் அதுவரை சிகிச்சைக்கான செலவில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு காப்பீட்டு நிறுவனத்தின் மூலமாக நேரடியாக மருத்துவமனையின் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது.  மீதமுள்ள சுமார் 25 விழுக்காடுத் தொகையை மட்டும் செலுத்தி வீட்டிற்கு வர முடிந்தது. ஆகவே நிதிப் பிரச்சினை அதிகம் சிரமத்தைத் தரவில்லை.

ஆரோக்கியக் காப்பீடு (Health Insurance)

எந்த ஒரு நோயாளியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இரண்டு வகையான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதாவது, ஒன்று திடீர் உடல்நலக்குறைவு அல்லது விபத்து காரணமாக அவசர சிகிச்சைக்காகச் (emergency treatment) சேர்க்கப்பட்டுப் பின்னர் அதன் தொடர்ச்சியாக செய்யப்படும் சோதனைகள் அடிப்படையில் அறுவைச் சிகிச்சைக்கோ அல்லது வேறு வகையான சிகிச்சைக்கோ அனுமதிக்கப்படலாம்.

இத்தகைய நேர்வில் நோயாளி மருத்துவக் காப்பீடு உடையவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கும், (Insurance company) காப்பீட்டு முகவருக்கும் (Insurance agent) தகவல் தொலைபேசி மூலம் சொல்லப்பட வேண்டும். .

அடுத்து முடிந்த அளவுக்கு விரைவாகக் காப்பீடு ஆவணங்களையும், உரிய படிவங்களையும் பிழைகள் இன்றிப் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் சமர்ப்பித்து விட வேண்டும். காப்பீட்டு ஆவணங்கள் மருத்துவமனையில் சமர்ப்பிக்கப்பட்டதும் அவை மருத்துவமனை மூலமாகக் காப்பீட்டு நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும். அனைத்துத் தகவல்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவமனை மின்னஞ்சல் அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு காப்பீட்டு நிறுவனம் முன்பணம் வழங்குவது தொடர்பான ஒப்புதலை மின்னஞ்சல் வழியே பதிலாக அனுப்பி விடும். உங்கள் காப்பீட்டு முகவருக்குத் தனிப்பட்ட முறையில் தகவல் அளித்தால் அவரால் நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு முன்பணத்திற்கு ஒப்புதல் வழங்குவதைத் துரிதப்படுத்தவும், ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களையும், காப்பீட்டுத் தொகை உரிமை கோரல் குறித்த (Claim) சரியான வழிகாட்டலையும் தர இயலும்.

ஆரோக்கியக் காப்பீட்டின் மூலம் (Health insurance) மருத்துவமனையில் முன்பணமில்லாச் சிகிச்சைக்காகச் (Cashless treatment) சேர்க்கையை எளிதில் (Admission) பெற இயலும். நோயாளி சிகிச்சை பெறும்போதே ஒரு குறிப்பிட்ட முன்பணம் காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்பளிப்பு (sanction) செய்யப்படும். ஒருவேளை முன்பணம் (advance amount) செலுத்தி இருந்தாலும் நோயாளி குணமடைந்து வீடு திரும்பும் போது தரப்படும் மொத்த செலவுப் பட்டியலில் அத்தொகை மருத்துவமனையால் காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் தொகையுடன் சேர்த்து வரவு வைக்கப்பட்டு மீதம் செலுத்த வேண்டிய தொகை எதாவது இருப்பின் அதற்கு நேர் (adjust) செய்து கொள்ளப்படும் அல்லது திரும்பத் தரப்படும்.

இரண்டாவது வகை ஏற்கனவே மருத்துவர்களால் திறந்த இதய அறுவைச் சிகிச்சையோ அல்லது வேறு வகையான அறுவைச் சிகிச்சையோ மேற் கொள்ளப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நோயாளி தனது வசதிக்கு ஏற்பத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்க்கை (inpatient admission) பெறுவது.

மருத்துவக் காப்பீடு உள்ளவர்கள் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காகத் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் சேர்வதாக இருந்தால் சேர்க்கைக்கு (admission)  ஓரிரு நாட்கள் முன்னதாகச் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். உள் நோயாளியாகச் (Inpatient) சேருவதற்கு முந்தைய நாளில் மருத்துவக் காப்பீடு குறித்த ஆதாரங்களையும், உரிய வடிவங்களையும் பூர்த்தி செய்து மருத்துவமனையில் உள்ள காப்பீட்டு அலுவலகத்தில் கொடுத்தால் அவர்கள் மூலம் காப்பீட்டு நிறுவனத்திற்கு விவரம் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். அனுப்பப்பட்ட தகவல்கள் ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சைக்குத் தோராயமாகச் செலவாகும் என்று மருத்துவமனையால் குறிப்பிடப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடுத் தொகைக்கு முன்பணமாக காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விபரம் நோயாளிக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

இத்தகைய நேர்வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது நோயாளி முன் கட்டணமாக எதுவும்  செலுத்தத் தேவையில்லை. முன் பணமாகக் காப்பீட்டு நிறுவனத்தால்  ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை  மருத்துவமனையின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு விடும்.

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியக் காப்பீடு (Health insurance) குறித்த அனைத்து ஆவணங்களும் வீட்டில் எங்கிருக்கிறது  என்ற விவரத்தைக்  குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பது நல்லது. இதனால் குடும்பத்தில் யாருக்காவது திடீரென உடல்நலப்  பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது முன்பணம் செலுத்துவது தொடர்பாக சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

எந்த ஒரு அறுவைச்சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு கோவிட்- 19 (Covid -19), எச்.ஐ.வி (HIV – AIDS),  மார்பு எக்ஸ் கதிர் படம்( Chest  x – ray),  இருபரிமாண வண்ண டாப்ளர் வரிக் கண்ணோட்டம் (2D colur Doppler scan) மற்றும்  இரத்தப் பரிசோதனைகள்(Blood tests) பலவும் செய்யப்பட்டு நோயாளியின் உடல் நிலை மருத்துவர் குழுவால் நன்கு ஆராயப்படுகிறது. அதன் அடிப்படையில் மட்டுமே நோயாளியின் அறுவைச் சிகிச்சைக்கான உடற் தகுதி முடிவு செய்யப்படுகிறது. அதன் பின்னரே நோயாளிக்கு ஏற்ற வகையில் உரிய சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. ஆகவே இரண்டாவதாகக் கூறப்பட்ட அச்சமும் அர்த்தமற்றதே. இனி சிஏபிஜி (CABG) அறுவைச் சிகிச்சை குறித்து விரிவாகக் காண்போம்.

இதயத் தமனி இரத்தக் குழாய் அடைப்பு (Coronary Artery Blockage)

இதய இரத்தத் தமனி அல்லது நாடி குழாயில் (Artery) அடைப்பு (block) ஏற்படும் போது மேற்கொள்ளப்படுவதே பக்கவழி இரத்தக்குழாய் ஒட்டு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting – CABG Surgery). இந்தச் சிகிச்சையே  நாம் பேச்சு வழக்கில் “பைபாஸ் சர்ஜரி” (Bypass surgery) என்று குறிப்பிடுகிறோம். இக்கட்டுரையில் பைபாஸ் சர்ஜரி  குறித்தே காணப் போகிறோம்.

இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD)

சிஏபிஜி (CABG) என்பது இதயத் தமனி இரத்தக்குழாய் நோய்க்கும் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் செயல்முறையாகும் (Procedure). இதயத் தமனி இரத்தக்குழாய் நோய் (Coronary Artery Disease – CAD or Coronary Heart Disease – CHD) என்பது இதயத் தமனி இரத்தக் குழாய்கள் விட்டம் குறுகிப் போவதாகும். இதயத் தசைக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச் சத்துக்களை வழங்குபவை  இதயத் தமனி இரத்தக் குழாய்கள். கொழுப்புப் பொருட்கள் இதயத் தமனி இரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதால் சி.ஏ.டி Coronary Artery Disease (CAD) ஏற்படுகிறது. இதனால் இரத்தக் குழாய் குறுகிப் போய் விடுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதயத்தசைக்குத் தேவையான ஆக்ஸிஜன் செறிந்த இரத்தம் கிடைப்பது குறைந்து போகிறது.

இதயத் தமனி இரத்தக்குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச்சிகிச்சையை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG) அடைபட்ட மற்றும் குறுகிப் போன ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இரத்தக்குழாய்களுக்குச் சிகிச்சையளித்து இதயத் தசைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் பொருட்டு மருத்துவரால் மேற்கொள்ளப்படுகிறது.

இதய இரத்தக்குழாய் நோயின் அறிகுறிகள் (Symptoms of Coronary Artery Disease – CAD)

அடுத்து இதய இரத்தக்குழாய் நோயின் (Coronary Artery Disease – CAD) அறிகுறிகளாக நெஞ்சுவலி, கடும் சோர்வு, படபடப்பு, இயல்புக்கு மாறான சீரற்ற இதயத் துடிப்பின் தாள லயம் (Heart beat rhythm) மூச்சுத்திணறல், கை கால்களில் வீக்கம், செரிமானப் பிரச்சினை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இருப்பினும் இதய இரத்தக்குழாய் நோயின் ஆரம்ப நிலையில் துரதிருஷ்டவசமாக எந்த அறிகுறியும் வெளிப்படாமல் இருக்கலாம். இதனால் காலம் செல்லச்செல்ல தமனி இரத்தக்குழாய்களில் பெரிய அளவில் அடைப்பு அதிகரித்துச் சிக்கலை ஏற்படுத்தும் வரை நோயின் தாக்கம் மெல்ல அதிகரித்து வரும். இதனால் இதயத் தசைக்குப் போதுமான அளவிற்கு இரத்தம் கிடைப்பது குறைந்து கொண்டே போகும். இதயத் தசைக்குத் தடைப்படும் இரத்த ஓட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் இரத்த இதயத் தசையின் எந்தப் பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைப்படுகிறதோ அப்பகுதியில் உள்ள திசுக்கள் இறந்து விடுவதால் மாரடைப்பு ஏற்படும். இது தவிர வேறு பிற காரணங்களுக்காகவும் மருத்துவர் சி.ஏ.பி.ஜி (CABG) அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம்.

நகர்ப்புறங்களில் வசிக்கும்  பலரது இல்லங்களில் குழாய்க் கிணறுகளிலிருந்து (Bore wells) பெறப்படும் நீரையும் உபயோகிக்கிறோம். இந்த நீரில் கரைந்துள்ள உலோக உப்புக்கள் அதிக அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அந்த உப்புக்கள் குழாய்களின் உட்புறம் தொடர்ந்து படிந்து குழாய்களின் விட்டம் குறுகலாகும். இதன் காரணமாகக் குழாயில் நீர் செல்வது குறைந்து விடும். இந்தக் குறைபாட்டைக் கவனிக்காவிட்டால்  குழாயில் பயன்பாட்டுக்கு நீர் வருவதும் நீர் மேல் நிலைத் தொட்டிக்கு மேலேற்றப்படுவதும்  முற்றிலுமாகத் தடைப்பட்டு விடும். ஒரு கட்டத்தில் நீரிறைக்கும் மோட்டாரால் நீரை மேல் நோக்கித் தள்ள முடியாத நிலையில்  சூடாகிப் பழுதாகும்.  இதயத்தமனி இரத்தக் அடைப்பு நிகழ்வும் கிட்டத்தட்ட இது போன்ற நிலையே.

முன்பெல்லாம் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களின் வழியாகச் செல்லும். இப்போது நெடுஞ்சாலைகளில் பல நகரங்களை நகருக்குள் செல்லாமல் தவிர்த்துப் பயணிக்க புறவழிச் சாலைகள் (Bypass roads) போடப்பட்டுள்ளன. புறவழிச்சாலைகள் நெடுஞ்சாலையில் நகரங்களின் எல்லை தொடங்கும் முன்பாகவே பிரிந்து நகரங்களின் எல்லையைக் கடந்த பின்னர் மீண்டும் நெடுஞ்சாலையுடன் இணையும். இதனால் வாகனங்கள் நகரங்களின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துத் தடையின்றி விரைவாகச் செல்ல இயலுகிறது.

இதய இரத்தக்குழாய் அடைப்புக்காகச் செய்யப்படும் ஒட்டு அறுவைச் சிகிச்சையும் (CABG – Coronary Artery Bypass Grafting surgery)  கிட்டத்தட்ட போக்குவரத்து தடைபடுவதைத் தவிர்க்கப் புறவழிச்சாலை ஏற்படுத்துதைப் போன்றதே.

கொழுப்புப் பொருட்கள் படிந்து படிந்து குறுகலாகிப் போன தமனி இரத்தக் குழாய்களுக்கு மாற்றாக இணைப் பக்கப்பாதைகளை  நம் உடலின் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆரோக்கியமான தமனி  குழாய்களைக் கொண்டு தைத்து ஒட்டும்  அறுவைச்சிகிச்சைதான்  சி.ஏ.பி.ஜி வழி முறையாகும். இத்தகைய சிகிச்சைக்காக எடுக்கப்படும் இரத்த நாளம் காலிருந்தோ (leg), மார்பிலிருந்தோ (chest) அல்லது கையில் மணிக்கட்டுப் பகுதியிலிருந்தோ (wrist) எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட இரத்தக் குழாயின் ஒருமுனை  இரத்தக்குழாயின் அடைபட்ட பகுதிக்கு மேல்புறத்திலும் மறுமுனை அடைபட்ட பகுதிக்குக் கீழ்ப்புறத்திலுமாக இணைக்கப்படுகிறது. இதனால் இரத்தம் புதிய ஒட்டு இரத்தக்குழாயில் செல்வதால் இரத்த அடைப்பு தவிர்க்கப்படுகிறது.

Picture courtesy:
https://www.mayoclinic.org/tests-procedures/coronary-bypass-surgery/about/pac-20384589#dialogId19167970

அடைபட்ட இதயத் தமனி இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சை (Coronary Artery Bypass Grafting Surgery – CABG)

அடைபட்ட இரத்தக் குழாய்க்கு இணையாகப் பக்க ஒட்டு இரத்தக்குழாய் இணைப்பு அறுவைச் சிகிச்சைக்கு  (சி.ஏ.பி.ஜி) மார்பைத் திறக்க மருத்துவர் மார்பில் கூரான கத்தியால் நீண்ட கீறல் (Incision) இடுவார். ஸ்டெர்னம் அல்லது மார்பெலும்பு என்பது மார்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நீண்ட தட்டையான எலும்பு ஆகும். இது குருத்தெலும்பு வழியாக விலா எலும்புகளுடன் இணைகிறது மற்றும் விலா எலும்புக் கூண்டின் முன்புறத்தை உருவாக்குகிறது, இதனால் இதயம், நுரையீரல் மற்றும் பெரிய இரத்த நாளங்கள் காயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஒரு கழுத்தணியைப் போல வடிவமைக்கப்பட்ட இது உடலின் மிகப்பெரிய மற்றும் நீளமான தட்டையான எலும்புகளில் ஒன்றாகும்.

Picture courtesy: https://teachmeanatomy.info/thorax/bones/ribcage/

பின்னர் (Sternam) நீளவாக்கில் பாதியாக வெட்டிப் பரப்பப்படும். இதனால் மார்புக்கூடு திறக்கப்பட்டு  இதயம் வெளிப்படும். இந்த நிலையில் மருத்துவர் இதய நுரையீரல் பக்கவழி இயந்திரத்தின் (Heart – Lung bypass machine) குழாய்களை இதயத்தில்  செலுத்தி இயந்திரத்தை இதயத்துடன் இணைத்து  விடுவார். இதயத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் இதயத்தின் பணியான இரத்தத்தை அழுத்தி இரத்தக் குழாய்க்குள் செலுத்துவதையும் நுரையீரலின் அசுத்த  இரத்தத்தில் சேர்ந்துள்ள கார்பன் டை ஆக்சைடை அகற்றி அதில் ஆக்ஸிஜனேற்றுவதையும் இயந்திரம் மேற்கொள்ளும்.

Picture courtesy: https://www.heart-valve-surgery.com/

பலகாலமாகத் திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேலே குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதே பெரும்பாலும் பல சூழல்களிலும் விரும்பப்படுகிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும் குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery) செய்யப்படுகிறது.

குறைந்த அளவில் ஊடுருவும் இதய அறுவை சிகிச்சையும் (Minimally Invasive Cardiac Surgery)

1990 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சைச் செய்முறை (Minimally Invasive Surgical Procedure) அறிமுகமானது. இதில் இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படாமலே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதயநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் குறைந்தபட்ச ஊடுருவு இருதய அறுவை சிகிச்சையும் மிக நுட்பமானதோர் செய்முறையாகும். இது சாவித்துவார (Key hole surgery) அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

வழக்கமான திறந்த இதய அறுவை சிகிச்சையில் ஏற்படுத்தப்படும் பெரிய கீறல்களுக்கு மாற்றாக உடலில் சிறிய சாவித் துவார அளவிலான கீறல்களை (incisions) உருவாக்குவதன் மூலம் இந்தச் செய்முறையில் (Procedure) அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. பெரும்பாலும் சிறிய சாவித் துவாரக் கீறல்கள், சிறப்பு அறுவைச் சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

Original picture courtesy : http://www.bypasssurgeryofmumbai.com/mica.aspx

வழக்கமான அறுவை சிகிச்சைக்கு ஆறு முதல் எட்டு அங்குல நீளமுள்ள கீறல்கள் தேவைப்படும். ஆனால் குறைந்தபட்ச ஊடுருவு இதய அறுவை (Minimally Invasive Cardiac surgery)  சிகிச்சைக்கான கீறல்கள் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குலங்களே இருக்கும். மேலும் சாவித் துவார அறுவை சிகிச்சைகளில்  வழக்கமான அறுவை சிகிச்சைகளை விட மீட்சி நேரம் (Recovery time) மிகக் குறைவாகவே இருக்கும். மருத்துவர்கள் குறைந்த பட்ச ஊடுருவு அறுவை சிகிச்சைக்காக எல்லா இதய நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்யப்படுவதில்லை. சிகிச்சைக்குத் திட்டமிடும் முன்பு நோயறிதல்  தொடர்பான சோதனை முடிவுகளை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, நோயாளி குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery) ஏற்றதாக இருக்குமா அல்லது வழக்கமான திறந்த இதய அறுவைச் சிகிச்சையே (open heart surgery) அவருக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்பதை முடிவு செய்வார்கள்.

குறைந்தபட்ச ஊடுருவு அறுவைச் சிகிச்சை (minimally Invasive surgery)  குறிப்பிட்ட சில இதய அறுவைச் சிகிச்சைகளில் பயன்படுத்துவதற்கே  அதிகம் விரும்பப்படுகிறது.

எந்திரனியல் இருதய அறுவை சிகிச்சை (robotic heart surgery) என்பது மார்பில் மிகச் சிறிய வெட்டுத் துளைகள் (incisions) மூலம் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை ஆகும்.

இதில் மிகச் சிறிய செயற் கருவிகளையும் (tiny instruments),  மற்றும் எந்திரனால் கட்டுப்படுத்தப்பட்ட கருவிகளையும்  (Robot controlled tools) பயன்படுத்துவதன் மூலம், திறந்த இதய அறுவை சிகிச்சையை விடக் குறைவான அளவில் ஊடுருவும் இதய அறுவைச் சிகிச்சையை (Minimally Invasive heart surgery) இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் செய்ய முடியும். இந்தச் செயல்முறை (Procedure) அதிக அளவில் பயன்படுத்தப்படும் எந்திரனின் (Robot) உற்பத்தியாளரின் பெயராலும் டா வின்சி அறுவை சிகிச்சை (Da Vinci Surgery) என்றும்  சில நேரங்களில்  அழைக்கப்படுகிறது.

Picture courtesy: https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/robotic-cardiac-surgery?amp=true

எந்திரனியல் இதய அறுவை  சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்தல்

  • இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தமனி பக்கவழி செயல்முறையில் (Artery Bypass Procedure)
  • கடினமான, விறைப்பான அல்லது கசியும் இதயத் தடுக்கிதழ்களை (Valves) சரிசெய்யும் போது அல்லது மாற்றும் போது
  • இதய ஊற்றறைத் துடிப்பு (Atrial fibrillation) என்பது அரித்மியா (arrhythmia) என்னும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மருத்துவநிலைகளின் (group of medical condition) பொதுவானதோர் வகை. நிமிடத்திற்கு100 துடிப்புகளை விடக் கூடுதலான அல்லது  நிமிடத்திற்கு 60 துடிப்புகளை விடக் குறைவான இதய ஊற்றறைத் துடிப்பைச்  சரி செய்ய
  • இதயத்தில் உள்ள கட்டிகளை(tumor) அகற்றுதல்
  • பிறவியிலேயே காணப்படும் இதயக் குறைபாடுகளை (congenital defects) நீக்குதல்

போன்ற பிரச்சினைகளுக்காகப் பொதுவாக மருத்துவர்கள் எந்திரனியல் இதய அறுவை சிகிச்சையை (Robotic heart surgery) பரிந்துரை செய்கிறார்கள்.

இவ்வுலகில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும் எதாவது அபாயம் அல்லது வெற்றியை உறுதி சொல்ல இயலாத நிச்சயமற்ற தன்மை கட்டாயமாக உண்டு. நூற்றுக்கு நூறு எந்தச் சிறு அபாயமோ அல்லது நிச்சயமாக வெற்றி தரக் கூடியதாகவோ எந்தச் செயல்பாடுமே இருப்பதில்லை. அது இயற்கையானது. மருத்துவமும் இதற்கு விலக்கில்லை. சொல்லப்போனால் அறுவைச்சிகிச்சையில் எதிர்பாராத சிக்கல்களும் அதனால் அபாயங்களும் ஏற்பட மிக அதிகமான வாய்ப்புகள் உண்டு. இதய இரத்தக் குழாய் பக்க இணைப்பு ஒட்டு அறுவைச் சிகிச்சையிலும் (CABG) எதிர்பார்க்கப்படும் மற்றும் எதிர்பாராத அபாயங்களுக்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.

அறுவைச் சிகிச்சையின் போது ஏற்பட வாய்ப்புள்ள அபாயங்கள்

  • அறுவைச் சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பின்னர் இரத்தப் போக்கு (Bleeding)
  • இரத்த உறைதல் ஏற்படும் நேர்வில் பக்கவாதம் (stroke) ,மாரடைப்பு (Heart attack) அல்லது நுரையீரல் பிரச்சனைகள் (Lungs Problem)
  • கீறல் (incision) செய்யப்பட்ட இடங்களில் நோய்க் கிருமித் தொற்று
  • நுரையீரல் அழற்சி (pneumonitis)
  • சுவாசக் கோளாறுகள்(Breathing problems)
  • கணைய அழற்சி (Pancreatitis)
  • சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure)
  • இயல்புக்கு மாறான இதயத்தின் தாளலயம் (abnormal heart rhythm)
  • இணைப் பக்கவழி ஒட்டு தோல்வி அடைதல் (Bypass grafting failure)
  • இறப்பு(Death) ஆகிய மேற் குறிப்பிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இவை தவிர நோயாளியின் தனிப்பட்ட உடல்நிலை சார்ந்து வேறு அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால் அறுவைச் சிகிச்சை மேற் கொள்ளும் முன்பாக நோயாளிகள் தங்கள் மருத்துவருடன் அவர்களின் கவலைகள் குறித்து தயக்கமின்றி விவாதித்தல் அவசியம்.

அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய நாளிரவில்  இரவு 9 மணிக்கு முன்னதாக உணவு உட்கொண்டு விடுதல் நல்லது. மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு உணவோ உட்கொள்வது, நீர் அல்லது  எவ்வகையான பானமும் கட்டாயமாக அருந்தக் கூடாது.

நோயாளி மருத்துவரிடம் கட்டாயமாகத்  தெரிவிக்க வேண்டிய தகவல்கள்

  • இதய நோயாளி பெண்ணாக இருக்கும் நேர்வில் அவர் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் தரித்திருப்பதாகக் கருதினாலோ அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
  • தனக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுத்தும் மருந்துகள் (medicines), ரப்பர் (Latex), அயோடின் (Iodine), நாடாக்கள் (tapes) பொது மயக்க மருந்து (General anaesthesia) மற்றும் குறிப்பிட்ட உடற்பகுதியை உணர்விழக்கச் செய்யும் மயக்க மருந்து (Local anaesthesia) ஆகியன குறித்த விவரங்களை மருத்துவரிடம் நோயாளி தெரியப்படுத்த வேண்டும்.
  • நோயாளி பயன்படுத்தி வரும் ஆங்கில, ஆயுர்வேத, யுனானி மற்றும் சித்த மற்றும் மூலிகை மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் பொது ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளும் கூடுதல் மருந்துகள் (Health suppliment medicines) ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
  • இரத்தப் போக்குக் கோளாறுகள் (Bleeding disorders) உள்ளனவா என்பது குறித்தும் மற்றும் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள், ஆஸ்பிரின்(Aspirin) அல்லது இரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் (Anti blood clotting medicines) எடுத்துக் கொண்டிருப்பின் அது பற்றிய விவரங்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் சில மருந்துகளை அறுவைச் சிகிச்சைக்குச் சில தினங்களுக்கு முன் மருத்துவர் நிறுத்தி விடக் கூறலாம். அதற்கு மாறாக வேறு ஊசி மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

இரத்தம் உறைய ஆகும் நேரத்தைக் (Time taken for clotting) கண்டறிய இரத்தப் பரிசோதனைகளை மருத்துவர்  மேற்கொள்ளச்  சொல்வார்.

  • நோயாளிக்கு செயற்கை இதய மின்னியக்கியோ (Pace maker) அல்லது வேறு இதய சம்பந்தமான கருவிகளோ பொருத்தப்பட்டிருப்பின் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம்.
  • நோயாளி புகைப்பிடிப்பவராக இருந்தால் எவ்வளவு விரைவில் அதனைக் கைவிட முடியுமோ அத்தனை விரைவில் கைவிடுதல் நல்லது. இதனால் ஓட்டு மொத்த உடலாரோக்கியம்  மேம்பாடு அடையும் வாய்ப்புள்ளது என்பது மட்டுமல்லாமல் அறுவைச் சிகிச்சையின் தாக்கத்திலிருந்து விரைந்து குணமடையும் வாய்ப்புகளையும் அதிகரிக்கக் கூடும்.

(7) வாயில் செயற்கைப் பற்கள் பொருத்தப்பட்டிருப்பின் அவை நிரந்தரமாக இணைக்கப்பட்டவையா அல்லது கழற்றி மாட்டிக் கொள்ளக் கூடியவையா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

முதல் பதிப்பு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *