Blog

  • சேக்கிழார் பாடல் நயம் – 112 (பேணும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 112 (பேணும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி 

    பாடல்

    பேணும்  அன்பரை  நோக்கி’’நீர்   பெருகிய  அடியார்க்கு
    ஊணும்   மேன்மையில்   ஊட்டிநற்   கந்தை  கீளுடைகள்
    யாணர்   வெண்கிழிக்  கோவணம்  ஈதல்கேட்   டும்மைக்
    காண   வந்தனம் ‘’  என்றனன்  கண்ணுதல்  கரந்தோன்.

    பொருள் :

    இவ்வாறு   வழிபடும்  அன்பரை  நோக்கி, ‘’ நீர் (அன்பினால்) பெருகிய அடியவர்களுக்கு மேன்மை மிக்க  உணவும்  ஊட்டிக் கந்தை,  கீள், உடை  ஆகியவற்றையும்  புதிய வெண்மையான  உயர்ந்த  கோவணங்களையும் கொடுத்தல்  கேட்டு  உம்மைக்  காண வந்தோம் ‘’ என்று  நெற்றிக்கண்ணை  மறைத்து  வந்த இறைவர்  சொன்னார்.

    விளக்கம் :

    பேணும்  அன்பரை – வழிபடுகின்ற அடியவர்களை, பெருகிய- ஓர்அடியாருக்கு உணவு  உடை,முதலிய எல்லாம்உதவுதல்கேட்டு  அடியார்கள் பலரும் வந்தடைகின்றமை யால் அளவினால் பெருகிய என்றும் பொருள் கொள்ளலாம்,

    ‘’ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவிலார்  உளம்மகிழவே’’ என்று சேக்கிழாரே கூறுதல்காண்க மேன்மையில்  ஊட்டி – மேம்பட்ட வகையில்  உணவளித்து,  மேன்மை  என்பதை  உணவுக்காக்கி மேன்மையில் ஊணும் என்று கூட்டி உணவின் சிறப்புரைத்ததாகக் கொள்ளினு மமையும். ஊட்டுதலின் சிறப்பும், உணவின் சிறப்பும் 442, 443 திருப்பாட்டுக்களிற் காண்க .

    ஊட்டி – ஊண்பித்து. தாய் குழந்தையை ஊட்டுவதுபோலக். காலம் -அளவு – தகைமை – விருப்பு – முதலியன அறிந்து அன்போடு உண்ணச் செய்து என்பதாம். “பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து“ என்ற திருவாசகங் காண்க. உண்பது அடியவர் செயல் என்று காண இயலாதபடி அவர் உண்பது இவர் ஊட்டுவதாகிய செயலேயாய் நின்றது எனக் குறிக்கும் பிறவினைக் கூற்றிற் கூறிய சுவை காண்க.

    கந்தை முதலியன-  கந்தையாவது கிழிந்த துணிகள் பல சேர்த்துத் தைத்த பொந்தையேயாயினும் பற்றற்ற அடியார்கள் இதனையே வேண்டுவா ராதாலானும், வேண்டுவார் வேண்டியது தருதலே சிறந்த கொடையாதலானும், அதனையே உதவினர் என்ப.

    யாணர்வெண்கிழிக் கோவணம் – இச்சரித நிகழ்ச்சிக்குக் கோவணம் காரணமாதலின் இதனை உடை வகைகளினின்று வேறு பிரித்து,  யாணர் – வெண் – கிழி – என மூன்று அடைமொழிகள் தந்து சிறப்பித்துக் கூறினார். யாணர் – புதிய – அழகிய – நல்ல என்றலுமாம். கிழி – கிழி போன்ற. கிழி – பொன் முடிப்பு. எழுது படம் என்றலுமாம். இறைவனின் கீளுடை  புதுவருவாய், தூய்மை ,  பொன் முடிப்பு போன்ற உயர்வு கொண்டது என்று பாடுகிறார்!

    உம்மைக் காண – உம்முடைய தொண்டின் விளக்கங் கண்டு உலகிற்குக் காட்டும்பொருட்டு என்க. “ தொண்டரை விளக்கங் காண’’ என்ற பகுதியைக்  காண்க!  ஒன்றை வாங்கவாவது,கொண்டு போகவாவது அன்று; காணமட்டும் என்ற குறிப்புமாம். “சும்மா உங்களைப் பார்க்க வந்தேன்“ என்னும் உலக வழக்கும் காண்க.

    காண – கண்ணுதற் கரந்தோன் – காண வந்தவன் கண்ணைத் திறந்து வராமல் அதனைக் கரந்து வந்தான் என்ற நயமுங் காண்க. அக் கண் அடியாரிடத்துக் காட்டாது மறைத்தருளுங் கண் என்ற குறிப்பும் காட்டுகிறது!

    ஈவது கேட்டு – பேணிய அடியார்க்கு – என்பனவும் பாடங்கள். 11

    இப்பாடலில்  அடியார்முன்  காட்டிய கீளுடையின்  சிறப்பு அதன் புறத் தோற்றத்தைப் பொறுத்ததன்று, அதன் அகமதிப்பைக்  காட்டும்  அழகுடையது என்பதை விளக்குகிறது!

    Share
  • திருப்பாவை – 22 | அங்கண்மா ஞாலத்து

    திருப்பாவை – 22 | அங்கண்மா ஞாலத்து

    திருப்பாவை – 22

    அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
    கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 22 | அங்கண்மா ஞாலத்து | ஸ்வேதா குரலில்

    தாங்கள் பெரியவர்கள் எனக் கருதிய பேரரசர்கள், நீயே உலகின் தலைவன் எனப் புரிந்து உன் காலடியில் பணிந்து நிற்கின்றார்கள். தோழிமார்கள் நாங்களும் கூட்டமாக வந்து வணங்கி நிற்கின்றோம். உறக்கத்திலிருந்து மெல்ல மெல்ல நீ விழி திறந்து பார்ப்பதைக் கண்ணாரக் காணக் காத்திருக்கிறோம். சூரிய சந்திரனைப் போன்ற உன் இரண்டு கண்களால் எங்களைச் சற்றே நோக்கினால், எங்கள் மேல் உள்ள சாபம் அனைத்தும் நீங்கிவிடுமே எனப் பாவையர்கள் பாடுகிறார்கள்.

    தாமரைப்பூப் போன்ற சிவந்த கண்கள் என்ற ஆண்டாள், அடுத்த அடியிலேயே சூரியனைப் போலவும் சந்திரனைப் போலவும் இரு கண்களால் எம்மை நோக்கு என்கிறார். தாமரைப்பூ, கண்களின் வடிவிற்கு உவமையாக வந்தது. திங்களும் ஆதித்தியனும் பார்வையின் தன்மைக்கு உவமைகளாக வந்தன. அன்பர்களிடம் கனிவுடனும் பகைவர்களிடம் கடுமையாகவும் பார்ப்பது ஒரு பொருள். ஒரே நபரிடமே சூழலுக்கு ஏற்ப, கடுமையாகவும் கனிவுடனும் பார்ப்பது இன்னொரு பொருள். அன்பர் மேல் உள்ள சாபத்தைக் கடுமையால் நீக்கி, அருட்பார்வையால் வரங்கள் தருவான் கண்ணன்.

    சலங்கையின் கிண்கிணிப் பரல்போல் கண்களைத் திறக்க வேண்டுகிறாள் ஆண்டாள். பரலுக்குள் இருக்கும் மணியும் விழிக்குள் இருக்கும் கருமணியும் ஒப்பிடத்தக்கவை. அந்தச் சிறு இடைவெளியில் மணி ஒலிக்கின்றது. கண்களும் சிறிது திறந்த நிலையிலும் அருள் பொழிகின்றன. கிண்கிணியின் பரலானது, எப்போதும் (சிறிது மட்டும்) திறந்திருப்பது. ஒருபோதும் மூடப்படாதது. கண்ணனின் உறக்கமும் அறிதுயிலே. உறக்கத்திலும் கூட அவன் கண்கள் மூடியது போலத் திறந்திருக்கும். கீற்றுப் போல அவனது பார்வை வெளிப்படும். இந்தக் கீற்று நிலையிலிருந்து தாமரைப் பூப்போல் தன் கண்களைப் பூரணமாகத் திறப்பான். சட்டென்று திறந்துவிடமாட்டான். மெல்ல மெல்லத் திறப்பான். இதைத்தான் சிறுச்சிறிதே என்கிறார் ஆண்டாள். சிறிது சிறிதாக என்பதை விட, சிறிதினும் சிறிதாக என இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆண்டாள் கண்ணுற்ற அந்த அருட்பார்வை, நம் மீதும் சற்றே சேரட்டும். நம் மீதுள்ள சாபங்கள் யாவும் நீங்கட்டும்.

    இந்த இனிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் கிண்கிணிக் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 20 | போற்றி அருளுக

    திருவெம்பாவை – 20 | போற்றி அருளுக

    திருவெம்பாவை – 20

    மாணிக்கவாசகர்

    பாடியவர் : ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
    போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://upload.wikimedia.org/wikipedia/commons/a/a1/Gajasurasamhara_%28Temple_de_Chennakeshava_%C3%A0_Belur%2C_Inde%29_%2814481874186%29.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நான் ஏன் ஓடிப் போனேன்? – ஓவியர் ஸ்யாம் – 2

    நான் ஏன் ஓடிப் போனேன்? – ஓவியர் ஸ்யாம் – 2

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஓவியர் ஸ்யாம், யாரிடமும் சொல்லாமல் 15 வயதில், கால்சட்டை அணிந்த சிறுவனாக, ஊரிலிருந்து சென்னைக்கு ஓடிவந்தார். ஏன் வந்தார்? சென்னையில் யாரையெல்லாம் சந்தித்தார்? எங்கே தங்கினார்? இதே போன்று பல முறைகள் அவர், சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிருக்கிறார். அப்போது என்ன நடந்தது? 12 வயதில் காஷ்மீருக்குச் சென்றது ஏன்? அங்கே அவருக்கு ஏற்பட்ட திடீர்த் திருப்பங்கள் என்னென்ன? இந்த அனுபவங்களை எல்லாம் இந்த அமர்வில் ஸ்யாம் மிகச் சுவையாக விவரிக்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள்

    திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள்

    திருப்பாவை – 21

    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
    ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
    ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
    தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
    மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
    ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 21 | ஏற்ற கலங்கள் | ஸ்வேதா குரலில்

    திருப்பாவையின் 3ஆவது பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என அழைத்த ஆண்டாள், 21ஆவது பாடலில் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறார். பசுவை நினைக்கும்போதே அதன் வள்ளல் தன்மை, ஆண்டாள் நினைவில் எழுகிறது. ஒவ்வொரு முறையும் வள்ளல் பெரும்பசுக்கள் எனப் போற்றுகிறார். இங்கே பெரும்பசுக்கள் என்பதற்கு, அளவில் பெரிய பசுக்கள் எனப் பொருள் இல்லை. பெருமை மிக்க, பேருள்ளம் படைத்த பசுக்கள் எனப் பொருள்.

    முந்தைய பாடலில் வாங்கக் குடம்நிறைக்கும் என்றார். பெரும் குடத்தையே நீட்டினாலும் அதை நிறைக்கின்றது அந்தப் பசு. அது ஒரு வகை வள்ளல் தன்மை. 21ஆவது பாடலில் சிறியது, பெரியது என எந்தக் கலத்தை வைத்தாலும் நிறைப்பதோடு நிறுத்தாமல் வழிய வழியப் பாலைச் சொரிகின்றது. இது இன்னொரு வகை வள்ளல்தன்மை. பக்தர்கள் எத்தகையவராய் இருந்தாலும் அவர்களுக்கு அருள்பொழிகின்ற கண்ணனின் உள்ளத்தை ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார். தமிழமுதை வாரி வழங்குகின்ற வள்ளல் கோதையின் 21ஆவது பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 19 | உங்கையிற் பிள்ளை

    திருவெம்பாவை – 19 | உங்கையிற் பிள்ளை

    திருவெம்பாவை – 19

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
    அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள்
    எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
    எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
    எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    எங்கள் தலைவனே! உன் கையில், என் குழந்தை அடைக்கலப் பொருளாகும் என்று வழங்கிவரும் அப்பழமொழியைப் புதுப்பிக்கின்றோம் என்று அஞ்சி, உனக்கு ஒரு விண்ணப்பத்தைச் செய்கின்றோம். கேட்டருள்வாயாக. எங்கள் தனங்கள் உன்னடியவர் அல்லாதார் தோள்களைத் தழுவாதிருக்க; எம் கைகள் உனக்கன்றிப் பிறதேவர்க்கு எவ்வகையான தொண்டும் செய்யாதிருக்க; இரவும், பகலும், எம் கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாதிருக்க; இந்நிலவுலகில் இம்முறையே எங்கள் தலைவனே! நீ எங்களுக்கு அருளுவாயாயின், சூரியன் எத்திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (Thevaaram dot org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    https://commons.wikimedia.org/wiki/Category:Shiva_with_tiger_skin#/media/File:Shakta_Ardhanari.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 20 | முப்பத்து மூவர்

    திருப்பாவை – 20 | முப்பத்து மூவர்

    திருப்பாவை – 20

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
    செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
    செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
    நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 20 | முப்பத்து மூவர் | ஸ்வேதா குரலில்

    முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையில் நப்பின்னையை மூன்று இடங்களில் ஆண்டாள் பெயர் குறிப்பிட்டுப் பாடுகிறார். அதுவும் அடுத்தடுத்த மூன்று பாடல்களில் நப்பின்னை தோன்றுகிறார். நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் (பாசுரம் 18) என்றும் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை (பாசுரம் 19) என்றும் நப்பின்னை நங்காய் திருவே (பாசுரம் 20) என்றும் வாயாரப் பாடுகிறார். கந்தம் கமழும் குழலி, மைத்தடம் கண்ணினாய், செப்பென்ன மென்முலைச் செவ்வாய் என்றெல்லாம் வர்ணிக்கிறார்.

    திருமகளே துயிலெழு, உன் மைத்துனன் பேர்பாடு, உன் மணாளனை எழுப்பு, செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிக்கக் கதவைத் திற என்றெல்லாம் வேண்டுகிறார். இந்தப் பாடலில் விசிறியும் கண்ணாடியும் தருக என்றும் கேட்கிறார். திருவே துயிலெழாய் என உருக்கம் கொண்டாடுகிறார். இதன்வழியே திருப்பாவையின் திருவே நப்பின்னை என்றும் உளம் கொள்ளலாம். தமிழ்க்குலத்தின் திருவாய் விளங்கும் ஆண்டாளின் 20ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    ஓவியத்திற்கு நன்றி: கேசவ்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

    ஆன்லைன் வகுப்புகளும் அதன் பாதகங்களும்

    செந்தில்குமார் தியாகராஜன்,
    பேராசிரியர், எக்ஸல் பிசியோதெரபி கல்லூரி,
    குமாரபாளையம், நாமக்கல்,
    மெயில் : senphysio1981@gmail.com

    கட்டுரைச் சுருக்கம்

    சமீப காலமாக தினமும் நாம் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்துகொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை  செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களைக் கவனிப்பது இன்றைய சூழலில் கட்டாயமாகி இருக்கிறது. கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் வேலை செய்யும் பொழுது, அதேபோல் ஆன்லைன் வகுப்புகள் கவனிக்கும் பொழுது  பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகிறது. எலும்பு தசை நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் மலச்சிக்கல், சிறுநீரகத்தில் / பித்தப்பையில் கல் ஏற்படுதல், சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று, அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் கணிப்பொறி முன்பே அமர்ந்திருப்பதால் இதுபோன்ற பெரிய பிரச்சனைகளும் ஏற்படும்பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். நம் காலம் கணிப்பொறியோடு சேர்ந்துதான் கழிகிறது, கழித்ததாகத்தான் வேண்டும் அதனால் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் எப்படி தவிர்ப்பது என்பதைக் கண்டிப்பாக தெரிந்துகொள்ளலாம். அதற்குச் சில வழிமுறைகளையும் இங்கே பட்டியலிடுகிறேன். கணிப்பொறி வலியோடு வாழ நாம் பிறக்கவில்லை. வலி இல்லாமல் வாழ நமக்குத் தெரியும். தொடரும் வாழ்க்கை இனிமையாக அமைய, நல்ல வழிமுறைகள் உள்ளன.

    முன்னுரை

    நாம் தான் உலகை ஆண்டு கொண்டிருக்கிறோம் என்று மனிதன் நினைத்துக்கொண்டிருந்தபோது யாருமே எதிர்பாராத வண்ணம் இந்த உலகத்தையே மனிதர் கைக்கு அப்பால் இருந்து வெளிப்பட்ட வைரஸ் கிருமி இன்று நம்மைக் கடந்த சில மாதங்களாக ஆண்டுகொண்டிருக்கிறது. சமீப காலமாகத் தினமும் நாம் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையை வாழ முடியவில்லை அதாவது நாம் வாழ்ந்துகொண்டிருந்த அன்றாட வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்டு, அரசு கூறும் வாழ்க்கைமுறையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் அப்படி வாழ்வது தான் சிறப்பும் கூட. ஆன்லைன், ஒர்க் பிரம் ஹோம், லாக்டவுன், கரோனா, வைரஸ், சானிடைசர், முகக் கவசம், தனிமனித இடைவெளி இந்த வார்த்தைகளெல்லாம் நம் வாழ்க்கையில் ஊடுருவிவிட்டன. ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து கவனிக்கும் பொழுது கழுத்து, முதுகுத் தசைகள் தேய்வடைகின்றன. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் 86% பேருக்கு கழுத்து, முதுகு தோள்பட்டை மற்றும் மூட்டு தசைகளில் வலி மற்றும் இறுக்கம் ஏற்படுவதாக ஆய்வு விளக்குகிறது[1]

    பொருளுரை மற்றும் கருத்து விளக்கம்

    உன் வேலையை உன்  வீட்டிலேயே நீ செய் என்று பெரும்பாலான பன்னாட்டு நிறுவனக் கணிப்பொறி ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்[2]. அதேபோல பள்ளி மாணவ மாணவியர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் இதே போன்ற வாழ்க்கைக்கு வாழ கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்,  குறைந்தது ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரம் கணிப்பொறி முன்பு அமர்ந்து வேலை செய்வதோ மற்றும் பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களைக் கவனிப்பதை இன்றைய சூழல் கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த வாழ்க்கை முறை மாற்றம் நம்மில் அனைவருக்குமே மிகவும் புதியதாக இருக்கும். செல்போனிலோ கணிப்பொறி முன்பு அமர்ந்து விளையாடுவது அல்லது அப்பா வேலை செய்துகொண்டிருந்தபோது கணிப்பொறி கடந்து செல்வது என்றிருந்த பள்ளிக் குழந்தைகள் இன்று ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.[3]

    இந்தக் காலச் சூழ்நிலை மாற்றம் நாம் மிகவும் எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் நமது பொருளாதாரத்தைக் கட்டிக் காக்கவும் அதேபோல அலுவலக வேலைகளை முடிக்கவும் கணிப்பொறியோடு வாழும் வாழ்க்கை சாதாரணமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் நம் பிள்ளைகளைக்  கணிப்பொறி முன்பு அமர விடாத அப்பாக்களும் அம்மாக்களும் தங்கள் மகனையும் மகளையும் இன்று கணிப்பொறி முன்போ அல்லது செல்போன் முன்போ அமரக் கட்டாயப்படுத்துகின்றனர், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல ஆறு மணியிலிருந்து எட்டு மணிநேர ஆன்லைன் வகுப்புகளில் உள்ள அல்லது கணிப்பொறி வேளைகளில் மூழ்கி இருக்கும் பொழுது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஏம்மா  கம்ப்யூட்டரை பார்க்க வேணாம்னு சொல்லுவா அப்பல்லாம். இப்ப எல்லாம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார சொல்ற என்று கேள்வி கேட்கும் குழந்தைகளுக்குப் பதிலைத் தேடும் பெற்றோர்கள் ஏராளம்.  காலைல பல்லு தேய்ச்சியா பால் குடிச்சிட்டு போய் உட்காரு மேக்ஸ் டீச்சர் ஆன்லைன் கிளாஸ் போகுது பாரு என்று பெற்றோர்கள் குழந்தைகளை வருத்தும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.[4]

    கணிப்பொறி முன் அமர்ந்து வெகு நேரம் வேலை செய்யும் பொழுது அதேபோல் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கும் பொழுது  பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்ன்றன.[5] காலை 9 மணிக்கே தயாராகும் ஆன்லைன் வகுப்புகளை, குறைந்தது ஆறு மணி நேரம் தொடர்ந்து ஒரு குழந்தை கவனிக்கும் பொழுது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் மிக முக்கியமானவை முதுகு வலியும் கழுத்து வலியும் கைவிரல் வலியும். பொதுவாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இப்பொழுது ஏற்படும் சிறுசிறு கழுத்துவலி, முதுகுவலி பின்னாளில், நாள்பட்ட அதாவது தொடர் பிரச்சினையாக பூதமாக மாறலாம். முன்பெல்லாம் எலும்பு தேய்மானம் என்பது 55 வயதிற்கு மேலே இருப்பவர்களுக்கு ஏற்படுவதாக ஆராய்ச்சிகளில் எடுத்துக் கூறினர். ஆனால் கணிப்பொறிப் பயன்பாடும் செல்போன் பயன்பாடும் இந்த எலும்புத் தேய்மானம், தளர்ச்சியுறுதல் போன்று, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதைத் துரிதப்படுத்துகின்றன.[6]

    பொதுவான தொடர் கணிப்பொறி, செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

    1. கழுத்து வலி
    2. தோள்பட்டையில் ஏற்படும் வலி
    3. கணிப்பொறியில் இருக்கும் செயல்பாட்டை(மௌஸ்) கட்டுப்படுத்துவதால் கை விரல்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல்
    4. கட்டைவிரல், ஆட்காட்டி விரல், நடு விரல்களில் உணர்ச்சி மாறுபட்டு உணருதல்
    5. முழங்கை மற்றும் மூட்டு வலி
    6. முதுகு வலி, தலை வலி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல்
    7. அதிக நேரம் அமர்வதால் இடுப்பு தசைகளில் ஏற்படும் வலி
    8. முதுகு மற்றும் கால் பகுதி வரை மேலிருந்து கீழாக வலி வருதல்
    9. கால் விரல்கள் மரத்துப் போதல்
    10. உடம்பின் நிலைப்பாட்டு மாற்றம் (POSTURE) அதாவது உடம்பில் கூன் விழுதல்

    இதுபோன்ற எலும்பு, தசை, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் மலச்சிக்கல், சிறுநீரகக் கல், பித்தப்பையில் கல் ஏற்படுதல், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று, அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் கணிப்பொறி முன்பே அமர்ந்திருப்பதால் இதுபோன்ற பெரிய பிரச்சனைகளும் ஏற்படும்பொழுது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி தவிர்ப்பது அதற்காக ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்த்து விடலாமா, கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்த்து விடலாமா என்றால் கண்டிப்பாக அது நம்மால் முடியாது. அது சரியான தீர்வாகவும் இருக்காது. நம் காலம் கணிப்பொறியோடு சேர்ந்துதான் கழிகிறது, கழித்தாகத்தான் வேண்டும். அதனால் இதுபோன்ற பிரச்சனைகளை நாம் எப்படி தவிர்ப்பது என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளலாம். அதற்குச் சில வழிமுறைகளையும் இங்கே பட்டியலிடுகிறேன்.

    பெற்றோர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்

    1. உங்கள் குழந்தைகளைக் கண்டிப்பாக காலையிலோ மாலையிலோ விளையாடச் சிறுசிறு விளையாட்டுகளைப் பழக்குங்கள் நீங்களும் அவர்களோடு விளையாடலாமே
    2. உங்கள் குழந்தைகளோடு பெற்றோர்களும் மட்டைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகள் விளையாடும் பொழுது மேற்குறிப்பிட்ட தசை, எலும்பு, நரம்பு சார்ந்த பிரச்சினைகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்
    3. உங்கள் குழந்தைகள், ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கும் பொழுது, அவர்கள் இருக்கைகள் உள்ள அறை நல்ல காற்றோட்ட வசதி உள்ளதாகவும் அதேபோல நல்ல வெளிச்சம் உள்ளதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்
    4. ஒவ்வோர் ஆன்லைன் வகுப்பு முடியும் பொழுது இருக்கையிலிருந்து எழுந்து நடக்குமாறு உங்களின் குழந்தைகளுக்கு அறிவுறுத்தவும்.
    5. கணிப்பொறி முன் அமர்ந்து வேலை செய்யும் பொழுது, வயது வந்தவர்களும் தொடர்ந்து வெகுநேரம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்த்து நேர இடைவெளியை அனுசரிக்கவும்.
    6. அதிக நீர் பருகுவதையும் சிறுநீர் வரும்பொழுது சிறுநீர் கழிப்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும். இப்படிச் செய்தால், சிறுநீரை அடக்கும் பொழுது சிறுநீரகக் கற்கள், நோய்தொற்று போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்
    7. பழங்கள் உண்பதையும் பழச்சாறுகள் குடிப்பதையும் குழந்தைகளுக்குப் பழக்கபடுத்துவதோடு பெரியவர்களும் பருகுவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது சத்துக்களும் இதனால் கிடைத்துவரும்.
    8. நொறுக்குத்தீனிகள் உண்பதைக் கணிப்பொறி முன் இருக்கும் பொழுது தவிர்ப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமன் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

    சில உடற்பயிற்சிகள்

    கழுத்து முதுகு வலிகளை மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க சில உடற்பயிற்சிகளை இங்கே உங்களுக்குத் தருகிறேன்.

    1. கழுத்துத் தசைகளை இலகுவாக்க, வானத்தை நோக்கிய நேர்கொண்ட பார்வை இருக்குமாறு ஒரு ஐந்து மணித்துளிகள் மேலே நோக்குதல், அதேபோல தரையை நோக்கியவாறு பார்த்து, கழுத்தை ஐந்து மணித்துளிகள் கீழ் நோக்கியவாறு பிடித்திருப்பது. இதுபோன்று காலை மாலை 10 முறை செய்துவருவது உங்களது கழுத்துத் தசைகளை இலகுவாக்கும்.
    2. அதேபோல கண்பார்வை இடதுபுறமும் திருப்பியவாறு, வலதுபுறமும் திருப்பியவாறு ஐந்து மணித்துளிகள் பிடித்திருப்பது இதுவும் 10 முறை செய்யலாம்.
    3. தோள்களை வானத்தை நோக்கியவாறு உயர்த்துவது, உயர்த்திய வண்ணம் ஐந்து மணித்துளிகள் பிடித்திருப்பது. இதுபோன்று 10 முறை செய்வது.
    4. கழுத்துத் தசைகளை இலகுவாக்க, உங்களது கையைப் பின்புறம் கட்டிக்கொண்டு உங்கள் கழுத்தை வலது புறமோ, இடப்பக்கமோ உங்கள் தலையில் கைவைத்து இழுக்கும் பொழுது, கழுத்துத் தசைப்பிடிப்புகளைத் தவிர்க்கலாம்.
    5. நின்றுகொண்டு நேராகக் குனிந்து, கட்டைவிரலைத் தொடுவதை தினமும் 10 முறை செய்வது முதுகுத் தசைகளை இலகுவாக்கும்.
    6. டைனிங் டேபிள் போன்றவற்றில் உண்ணாமல், முடிந்தவரை தரையில் அமர்ந்து உங்கள் குழந்தைகளோடு உணவு உண்ணுவது சிறப்பானது.
    7. அதேபோல மாலையிலும் சிறிது நேரம் உங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள்.
    8. தினமும் எட்டு மணி நேர உறக்கத்தைக் கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள். உங்கள் உடல் தசைகளில் ஏற்படும் தளர்ச்சியை உறக்கம் தவிர்க்கும்.
    9. நீங்கள் படுத்துறங்கும் தலையணை மற்றும் படுக்கை ஆகியவற்றை, உங்களுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுக்கும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள்.
    10. நிறைய நீர் அருந்த வேண்டும். அதேபோல நீங்கள் உங்கள் குழந்தையோடு ஆன்லைன் வகுப்புகளில் அமர்ந்து அல்லது அவர்கள் அருகில் இருப்பது நல்லது.

    முடிவுரை

    நாம் வாழும் வரை நோயில்லாமல் வாழவே எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் கால மாற்றம், பல்வேறு சூழல் சார்ந்த பிரச்சினைகள், நம் வாழ்வை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. மேலே குறிபிட்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் ஏற்படப்போகும் பல்வேறு பிரச்சினைகளை வருமுன் காப்பதோடு தவிர்க்கவும் முடியும். பொதுவாக, பிற்காலத்தில் ஏற்படப்போகும் கை கால் மூட்டு, கழுத்து, முதுகு வலிகள், ஒருபக்கத் தலைவலி, பார்வைக் குறைபாடு போன்றவற்றைத் தடுத்து நிறுத்தவதோடு நோயில்லா, வலியில்லா வாழ்க்கை வாழ்வதோடு மேற்குறிப்பிட்ட சிறு உடற்பயிற்சிகள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு நீங்கள் செய்யும் வேலைகளையும் அதேபோல ஆன்லைன் வகுப்புகளையும் சிரமமில்லாமல் நல்ல ஊக்கத்தோடு கவனிக்கச் செய்ய முடியும்.

    References

    1. Parthibane S, Majumdar A, Kalidoss VK, Roy G. Prevalence and patterns of musculoskeletal pain among school students in Puducherry and its association with sociodemographic and contextual factors. Indian J Pain 2017;31:119-26
    2. Picavet HS, Schouten JS. Musculoskeletal pain in the Netherlands: prevalences, consequences and risk groups, the DMC (3)-study. Pain. 2003;102:167–78.
    3.  Dockrell S, Simms C, Blake C. Schoolbag carriage and schoolbag-related musculoskeletal discomfort among primary school children. Appl Ergon. 2015;51:281–90.
    4. “Neck pain: overview.” 17 December 2015. Pub Med Health, https://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0084213/#i2374.prevalenceandoutlook
    5. Viana MC, Lim CC, Pereira FG, Aguilar-Gaxiola S, Alonso J, Bruffaerts R, et al. Previous mental disorders and subsequent onset of chronic back or neck pain: findings from 19 countries. J Pain. 2018;19(1):99–110.
    6. San Francisco State University. “Computers can be a real pain in the neck.” ScienceDaily. ScienceDaily, 4 January 2019. <www.sciencedaily.com/releases/2019/01/190104131233.htm>.
    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 25

    பரிமேலழகர் உரைத்திறன் – 25

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகரின் உவமத் திறன்

    முன்னுரை

    சொல்லவரும் கருத்து, கற்பாருக்கு மயக்கமின்றிப் புலப்பட வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவதே உவமம் ஆகும். தொல்காப்பிய எழுத்ததிகாரத்திலோ சொல்லதிகாரத்திலோ இலக்கண விளக்கத்திற்காகத் தொல்காப்பியர் உவமத்தைக் கையாளவில்லை. ஆனால் பொருளதிகாரத்தில் பதின்மூன்று இடங்களில் பதின்மூன்று உவமங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். இது தனித்த ஆய்வுக்கு உரியது. உவமத்தைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. அது தமிழிலும் விரவியது. அதாவது உவமப்பயன்பாடு தமிழ் வழக்கு. அதனைச் செய்யுளுக்கு அணியாகக் கொள்வது வடமொழி வழக்கு. தொல்காப்பியத்தில் உவமம் என்ற சொல்லே பயன்பட்டு வந்திருக்கிறதேயன்றி ‘உவமை’ என்ற வழக்கு இல்லை. ‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்னும் நூற்பாவில் மட்டும் ‘உவமத்தின் தன்மை’ என்ற பொருளில் அச்சொல் பயின்று வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் உவமத்தைப் பழந்தமிழ் வல்லார் பொருட்பகுதியாகவே கருதியிருக்கின்றனர் என்பது தெளிவாம். ‘உவம விளக்கம்’ என்னுந் தலைப்பில் உவமத்தை நுட்பமாக ஆராய்ந்திருக்கும் அறிஞர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள், மிகத் தெளிவானதொரு கருத்தினை முன்னெடுக்கிறார். “உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தருக்க நூலோர் உவமத்தை ஓர் அளவையாகக் கொள்வர். அலங்கார நூலோர் அதனை ஓர் அலங்காரமாகக் கொள்வர். தமிழிலக்கண நூலோர் அதனைப் பொருள் புலப்படுக்கும் கருவியாதல் பற்றிப் பொருளுறுப்பாகக் கொள்வர்” என்பது அவர் ஆய்வு. செய்யுளியலும் அது தொடர்பான உவமவியலும் தொல்காப்பித்துள் பொருளதிகாரப் பகுதியில் அமைந்திருப்பதும் நாட்டார் அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கக் கூடும். மேலும் தொல்காப்பியர் உவமத்தை உவமவியலில் மட்டும் ஆராயாமல் அகத்திணையியல், பொருளியலிலும் ஆராய்ந்திருக்கிறார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. இந்த அடிப்படையில் திருக்குறள் பரிமேலழகர் உரையில் குறட்பாக்களின் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பயன்படுத்தும் உவமங்கள் சிலவற்றைப் பற்றிய ஆய்வுத் தொகுப்பு இக்கட்டுரைத் தொடரின் இறுதிக் கட்டுரையாக அமைகிறது.

    உவமப் பயன்பாட்டில் திருக்குறள்

    திருக்குறளில் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள உவமங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு. அது என்ன தனித்தன்மை? திருக்குறள் கருத்துக்களைத் திருவள்ளுவரால் காட்டப்பட்டிருக்கும் உவமங்களைத் தவிர்த்துப் பிற உவமங்களைக் கொண்டு விளக்க இயலாது. அவர் காட்டியிருக்கும் உவமங்களைக் கொண்டு பிற கருத்துக்களோடு பொருத்திக் காட்ட முடியாது. நுட்பமான இப்பிணைப்பு திருக்குறளில் மட்டுமே காணக்கூடியதாகும். ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்னும் உலகவழக்கை மாற்றிப் ‘பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று’ (273) என்றது ஒரு சான்றாகலாம். கருத்து விளக்கத்திற்காகவே திருவள்ளுவர் உவமங்களை நன்கு சிந்தித்துத் திட்டமிட்டே பயன்படுத்தியிருக்கிறார் என்பது இதனால் புலனாகக் கூடும்.

    அழகர் உரையில் உவமப் பயன்பாடு

    திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பரிமேலழகர் பல்வகையான உவமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகவழக்கிலிருந்தும் செய்யுள் வழக்கிலிருந்தும் உவமங்களை எடுத்துக் கொள்கிறார். உரையெழுதும் திருக்குறளிலிருந்தே உவமங்களை எடுத்துக் கொள்கிறார். இலக்கியமாகிய திருக்குறளுக்கு இலக்கணத்தை உவமமாக்கி விளக்கம் தருகிறார். சங்க இலக்கிய வரலாற்று நிகழ்வுகளை உவமமாகக் கொள்கிறார். இலக்கியப் பதிவுகளையும் வரலாறாகக் கருதி உவமமாக்கிக் கொள்கிறார். தமிழ் மருத்துவத்தையும் சமுதாயத்தில் நடப்பியலில் உள்ள மருத்துவச் சிந்தனைகளையும் உவமமாக்கி விளக்கம் தருகிறார். இவ்வாறு அவர் தமது உரையில் கருத்து விளக்கத்திற்காக எடுத்தாளும் உவமங்கள் சிலவற்றை ஆராய்வதன் மூலம் இலக்கிய உரைகளிலும் உவமம் செலுத்தும் ஆளுமையைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாகக் கவிதைகளில்தாம் உவமங்களைக் காண்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வேடு என எந்தப் பதிவுகள் ஆனாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் உவமங்களின் ஆழத்தை அறிந்து துய்த்தல் வேண்டும் என்பதை முன்னெடுப்பதும் இக்கட்டுரையின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

    உவமத்தில் உலாவரும் உலகியல்

    ஒரு பொருளைக் கேட்டு வாங்கிச் சென்று திருப்பித் தந்துவிடுதல் உலகியல் நிகழ்வு. சிலர் வாங்கிப் போவதோடு சரி. திரும்பத் தரமாட்டார்கள். பொருளைக் கொடுத்தவன் அவர்களைக் காணும் பொழுதெல்லாம் அவன் நினைவில் ‘இவன் அந்தப் பொருளைப் பெற்றுச் சென்றவன் அல்லவா?’ என அவன் வாங்கிச் சென்ற பொருள் நினைவுக்கு வரும்.’ ‘அவனைப் பார்க்கிற பொழுதெல்லாம் அவன் வாங்கிச் சென்ற புத்தகம் அல்லவா நினைவுக்கு வருகிறது’ என்பது போல! இந்த உலகியலை உற்று நோக்கிய பரிமேலழகர் பொருட்பாலில் அமைச்சனின் பழக்க வழக்கம் பற்றிக் கூறும் குறட்பாவில் இதனை உவமமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    “போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது” (693)

    “அமைச்சர் தம்மைக் காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வராமல் காக்க; அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது ஆகலான்.”

    (மேற்கண்ட தவறுகளைப் பற்றி) ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது, தகாதென்றே அவர் துணிய ஒழுகல். ஒருவாற்றால் தெளிவித்தாலும் கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போலக் கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின் ‘யார்க்கும் அரிது’ என்றார்.

    என விளக்கவுரையில் அழகரின் உலகியல் நோக்குப் புலப்படுவதைக் காணலாம். அரசு மந்தணங்களை மாற்றாரிடம் வெளிப்படுத்துதல் என்பது அறைபோதல், அரசுனுக்குரிய மகளிரோடு உறவு கொள்வதற்கு உரிமையோடு மருவல்.  அருமையான பொருளை அபகரித்தலுக்கு அரும்பொருள் வௌவல். இவையே அரிய பிழைகள். இத்தகைய பிழைகளை இவன் செய்திருப்பானோ என அரசன் ஐயுறா வண்ணம் அமைச்சன் ஒழுக வேண்டுமாம். ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிடின் பிறகு மன்னனைத் தெளிவித்தல் அரிதாம். இந்தக் கருத்தினை விளக்கத்தான் பரிமேலழகர் உலகியல் சார்ந்த ‘கடன் கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறு போல’ என்னும் உலகியல் உவமத்தைப் பயன்படுத்துகிறார்.

    இலக்கணத்தை உவமமாகக் காட்டுதல்

    ‘அண்ணல் காந்தியடிகளின் வழி செல்வோம்’ என்றால் எல்லாரும் தண்டி யாத்திரை போகவேண்டும் என்பது பொருளன்று. அவர் சொன்ன நெறிமுறைகள் என்பது பொருள். ‘கபிலரது பாட்டு’ என்னுந் தொடரில் கபிலரும் அவர் எழுதிய பாட்டும் தனித்தனியாக இருந்து உடைமைப் பொருளை உணர்த்துகிறது. அதனால் இது பிறிதின் கிழமை. இனி, அந்தப் பாட்டு அவர் எழுதியதாலேயே அவர்க்கு அது உடைமையாயிற்று. பாட்டாகிய செய்யுள் அவ்வுடைமைக்குக் காரணமாதலின்  அது செய்யுட்கிழமை ஆயிற்று. எனவே செய்யுட் கிழமை என்பது ஆறாம் வேற்றுமைப் பொருளாகிய உடைமைப் பொருளை உணர்த்தும் இரண்டு முறைகளில் பிறிதின் கிழமையின் வகைகளுள் ஒன்று என்பது பெறப்படும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்” (6)

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்கு,

    “மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார், பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.”

    என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். இந்தப் பொழிப்புரையைத் தொடர்ந்து வரும் விளக்கவுரையில்,

    “ஒழுக்கநெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின் ஆண்டை ஆறனுருபு செய்யுட்கிழமைக்கண் வந்தது ‘கபிலரது பாட்டு’ என்பது போல”

    என்று ஒரு குறிப்பு வருகிறது. ஐந்தவித்தவன் இறைவன். ஐந்தவித்தான் ஆற்றல் என்றால் ஐந்தவித்தானது ஆற்றல் என்று பொருளன்று. ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல் என்பது பொருள். சொன்னவன் ஐந்தவித்தான், சொல்லப்பட்டவை ஐவகை ஆற்றல். இவ்வாற்றல் அவனோடு பிணிக்கப்பட்டது அன்று. பிரிந்து நிற்பது. எனவே ‘ஐந்தவித்தானது ஆற்றல்’ என்னும் ஆறாம் வேற்றுமை விரிக்கப்படினும் அது ‘அவனது ஆற்றல்’ என்னும் தற்கிழமையாகாது. ‘அவனால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமையாய் நின்றதாம். எதுபோல? ‘கபிலரது பாட்டு’ என்பதுபோல!. ‘கபிலரது பாட்டு’ என்றால் ‘கபிலருடைய பாட்டு’ என்று பொருள் தந்தாலும் அவ்வுரிமைத்தொடர் கபிலரால் எழுதப்பட்ட பாட்டு’ என்று பிறிதின் கிழமையாகத்தான் அமையும். அதுபோல  ‘‘ஐந்தவித்தான் ஆற்றல்’ என்னும் தொடர் ஆறாம் வேற்றுமைக்குரியதாக விரிக்கப்படினும் அது ‘ஐந்தவித்தானது ஆற்றல் எனத்’ தற்கிழமையாக நில்லாது ‘ஐந்தவித்தானால் சொல்லப்பட்ட ஆற்றல்’ எனப் பிறிதின் கிழமைப் பொருளினைத் தருவதைக் காணலாம். இந்த விளக்கத்திற்குக் ‘கபிலரது பாட்டு’ என்னும் இதனைப் போன்ற இலக்கணப் பயன்பாடு உடைய மற்றொரு தொடரை உவமமாகப் பயன்படுத்தியுள்ளார் அழகர்.

    பாமர வழக்கை உவமமாக்குதல்

    ‘முரண்’ என்பது எல்லாப் படைப்புக்களுக்கும் அழகு சேர்க்கும் தொடையழகு, ‘பகலில் ஒரு நிலவு!’ ‘முள்ளும் மலரும்’ ‘பஞ்சும் நெருப்பும்’ ‘கருப்பும் சிவப்பும்’ என்பதுபோல. ‘இருளும் ஒளியும்’ என்பது மக்கள் வழக்கு!. புத்தாண்டு பிறந்தவுடன் இருளாண்டு கழிந்தது இனி வரும் ஆண்டு ஒளியாண்டு’ என்பது ஒரு மாற்ற முடியாத முரண். இந்த முரணைத் தனது உரையில் வைத்துத் திருக்குறளுக்குக் கருத்து விளக்கம் தந்திருக்கிறார் பரிமேலழகர்.

    “களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்
    ஆற்றல் புரிந்தார்கண் இல்” 287

    “களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல் உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை”

    “களவும் துறவும் ‘இருளும் ஒளியும்’ போலத் தம்முள் மாறாகலின் ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது”

    எனப் பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கிறார் அழகர்.

    1. களவின்கண் கன்றிய காதலவர் அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் (286)
    2. பொருள் கருதிப் பொச்சாப்பு பார்ப்பார்கண் அருள் கருதி அன்புடையர் ஆதல் இல் (285).

    இவையிரண்டும் இந்தப் பாடலுக்கு முந்தைய குறட்பாக்கள். ‘கள்ளாமை’ என்பது உள்ளத்தினாலும் கள்ளக் கருதாமை என்னும் பொருளைத் தரும். உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது இல்லறத்தில் இயலாது, துறவறத்திற்கும் அரியது. துறந்தார்க்குரித்தாய அறங்களுள் இது தலையாயது. துறவுநிலையில் உள்ளவர்கள் களவுமனம் கொண்டவர்களாக இருப்பின் துறவு நிலையில் அமைதி கிட்டாது. ஞானம் பிறவாது. இது திருவள்ளுவம். காரணம் துறவும் களவும் முரண். எதுபோல? இருளும் ஒளியும் போல. கரவு இருள். துறவு ஒளி. ‘இருளோடு சேர்ந்த ஒளி’ என்பது எங்கும் இல்லை. இது இருக்கும் இடத்தில் அது இருக்காது. அது இருக்கும் இடத்தில் இது இருக்காது. எனவே களவு மனம் கொண்டவர்களிடத்தில் துறவு காழ்கொள்ளுவதில்லை என்பதை விளக்கிய மூன்று பாடல்களுக்கும் ஒரே உவமத்தைப் பயன்படுத்தி விளக்கமளித்திருக்கும் அழகரின் உரைத்திறன் இது!.

    நத்தையெழுத்து நல்லெழுத்தாகாது

    யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழமொழி. அதனால் அடி சறுக்குவதனாலேயே அது யானையாகிவிடாது. கடற்கரையில் நத்தை ஊர்ந்து செல்லும். அதன் கூரிய கால்களால் மற்றும் கொம்புகளால் கோடுகள் சில உருவாகும். அவை எழுத்துக்களைப் போலத் தோன்றும். ஆனால் அவை எழுத்துக்கள் அல்ல. அந்த எழுத்துக்களைக் கொண்டு இலக்கியம் செய்ய முடியாது.  கற்க முடியாது.  நத்தைக்கு ‘ஏரல்’ என்பது பெயர். மணலில் ஊரும் நத்தையின் கோடு எழுத்தாவதில்லை. ஆயினும் அதனை யாரும் மதிப்பதில்லை. காரணம் கல்மேல் எழுத்து என்பது இந்த மண்ணின் எழுத்துக் கொள்கை. நீர்மேல் எழுத்து என்பதும் ஏரல் எழுத்து என்பதும் ஒரே தன்மையன. அறிவுடையார் அதனை எழுத்தாகவோ இலக்கியமாகவோ கொள்ளார்.  கல்லாதவன் ஊழ் காரணமாகச் சிற்சில பொழுதுகளில் கற்றாரும் வியக்கும் வண்ணம் கருத்துரை சொன்னாலும் அறிவுடையார் அதனை மதியார்.

    “கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
    கொள்ளார் அறிவுடையார்” (404)

    “கல்லாதவனது நுண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும் அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்”

    “(நன்றாயினும் – நன்றாகாது) ஆயிற்றாயினும் ஏரல் எழுத்துப் போல்வதோர் விழுக்காடாதலின் நிலைபெற்ற நூலறிவுடையார் அதனை மதியார் என்பதாம்”

    நத்தையின் கோடு எழுத்தாகாது. கல்லாதவரின் நுண்மை அறிவாகாது. கற்றாரின் கையெழுத்தைவிட நத்தையின் எழுத்து அழகாக இருப்பினும் ஏற்பாரில்லை. கல்லாதவர்களின் கருத்துக்கள் ஒரோவழிச் சிறப்பாயிருப்பினும் அதனை மதிப்பாரில்லை என்னும் திருக்குறள் கருத்தினை ‘ஏரல் எழுத்து’ என்பது கொண்டு விளக்கிய அழகர் உரைத்திறன் இது.

    அடைச்சொற்களுக்கும் உவமம் காட்டும் அழகர் 

    ‘இனியவை கூறல்’ என்பது ஒரு அதிகாரத்தின் பெயர். இனிய சொற்களைப் பேச வேண்டும் என்பது மட்டுமன்று. இன்னாத சொற்களைப் பேசுதல் கூடாது என்பதும் அந்த அதிகாரம் சொல்லவரும் கருத்து. இனிய சொற்களைப் பேசுவதினால் உண்டாகும் நன்மையையோ இன்னாத சொற்களைப் பேசுவதால் உண்டாகும் தீமையையோ திருக்குறள் குறிக்கவில்லை. அழகர் கண்டறிகிறார். இனிய சொற்களை ஏன் பேச வேண்டும்? இன்னாத சொற்களை ஏன் பேசக்கூடாது என்னும் வினாவைப் பரிமேலழகர் தமக்குத் தாமே எழுப்பிக் கொள்கிறார்.

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” (100)

    “அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; இனிய கனிகளும் தம் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

    என்று பொழிப்புரை எழுதியவர்,

    “இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தாவனவற்றை இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

    என விளக்கவுரை எழுதியிருக்கிறார். இந்தக் குறட்பாவிலும் அதற்கான உரையிலும் கவனத்திற்குரியன பல.

    1. ‘இனிய, இன்னாத’ என்றவாறு உவமத்திற்கு அடைபுணர்க்கப்பட்டுள்ளன.
    2. பொருளுக்கு அடைபுணர்க்கப்படவில்லை.
    3. ‘இனிய கனி’ என்றும் ‘இன்னாத காய்’ என்றும் பரிமேலழகர் தாம் வருவித்துக் கொண்ட தொடருக்கு உரையெழுதுகிறார்.
    4. ‘இனிய’ ‘இன்னாத’ சொற்களுக்கான காரணம் அறப்பயன் என்பதாகக் கொள்ளுகிறார்.
    5. கூடுதலாக இன்னாத சொற்கள் அறப்பயன் நல்காததோடு பாவத்தை நல்கும் என்பதாகவும் எழுதுகிறார்.

    இங்கே பதிவிடப்பட்ட இவைகள் திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்கள். அறப்பயன் தருவதால் சொற்கள் இனிமையாயின. அறப்பயன் தராதது மட்டுமன்றி உயிருக்கும் கேடு தரும் என்பதால் சொற்கள் இன்னாதவாயின. இவற்றுக்கு ‘ஔவை உண்ட நெல்லிக்கனி’ என்னும் புறநானூற்றுப் பதிவையும் ‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா’ என்னும் உலகியல் பழமொழியையும் இணையாகக் கொண்டு உவமித்துக் கருத்து விளக்கம் தருகிறார். ஒரே குறட்பாவின் இரண்டு கருத்துக்களை இருவேறுபட்ட உவமங்களால் விளக்கியிருப்பதே அழகரின் உரைத்திறனாகும்.

    தேனும் நெய்யும் சேர்ந்தால் நஞ்சு

    ‘மாறுபாடில்லாத உணவு’ என்னும் தொடர் திருக்குறளில் 944, 946 என்னும் இரண்டு குறட்பாக்களில் பயின்று வருகிறது. முதற் குறட்பாவில் வந்திருக்கும் மாறுபாடில்லாத உணவு எது என்பதை விளக்குவதற்காகப் பரிமேலழகர் கையாண்டிருக்கும் உவமமே தேனும் நெய்யும் சேர்ந்தால் நங்சாகும்’ என்பதாகும்.  முன் உண்ட உணவு செரித்தலும் வேண்டும் செரித்த உணவு குருதியாக மாறவும் வேண்டும். அதற்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். இதனைத்தான் ‘அற்றதறிந்து’ என்னும் சொல் குறிக்கிறது. ‘’அற்றாலும் அதன் புரதம் அறாதாகலின்’ என்பார் பரிமேலழகர். மாறு கொள்ளாத உணவு வகைகளை அவர் விரிவாகப் பட்டியலிடுகிறார்.

    1. உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமை
    2. கால இயல்போடு மாறுகொள்ளாமை
    3. சுவை வீரியங்களால் தம்முள் மாறு கொள்ளாமை

    இவை எப்படி எதனால் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளார்.

    1. வாத, பித்த, ஐயங்களான் ஆய பகுதிகளுக்கு அடாதவற்றைச் செய்தலும்
    2. பெரும்பொழுது, சிறுபொழுது என்னும் கால வேறுபாடுகளுள் ஒன்றற்கு ஆவன பிறிதொன்றற்கு ஆகாமையும்
    3. தேனும் நஞ்சும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவுமாம்.

    “அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து” (944)

    “முன்னுண்டது அற்றபடியை அறிந்து பின் மிகப்’ பசித்து உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க”

    “தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல” (944)

    என்று அமைந்திருக்கிறது. மாறுபட்ட சுவைகளின் இணைப்பு உடல்நலத்திற்குக் கேடு தரும். இன்றைக்கும் நடப்பியலில் மீனையும் கோழியையும் ஒரே நேரத்தில் உண்ணக் கூடாது என்பது பின்பற்றப்படுகிறது. இந்த மாறுபட்ட சுவைக்குத்தான் இருவேறுபட்ட சுவைகளைக் கொண்ட தேனையும் நஞ்சையும் உவமாக்குகிறார் பரிமேலழகர். அதாவது இனிப்புச் சுவையுடைய தேனும் அதனின் மாறுபட்ட சுவையுடைய நெய்யும் தனித்தனியாக நலம் செய்யினும் இணைந்தால் கேடுதரும். இதனைப்போல முரண்பட்ட சுவையுடைய உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும் என்பதற்காக இந்த இணைப்பை அழகர் உவமமாக்கியிருப்பதுதான் அவர்தம் உவமத்திறனாகும்.

    பசும் பானை நீரும் பரிமேலழகர் உரையும்

    இலக்கியப் பயன்பாடு, உலக வழக்கு என்னும் இரண்டிடத்தும் சிறக்கின்ற சில உவமங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று வேகாத மண்பானையில் ஊற்றிய நீர் போல’ என்பது மழலையைப் ‘பச்சை மண்’ என்பதும் மகப்பேறுற்ற மகளிரை ‘பச்சை உடம்பு’ என்று சொல்வதும் உலக வழக்கு. பச்சைப் பானையில் நீரூற்றுதல் என்பது செயல் ஒருங்கிணைந்து உருப்படாது என்பதற்கும் கனவாய்க் கற்பனையாய் மெல்லப் போய் முடிந்துவிடும் என்பதற்கும் வழக்கில் சொல்லப்பட்டு வரும் உவமையாகும். இலக்கியத்தில் திருவள்ளுவர் இந்த உவமத்தைச்,

    “சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட்
    கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று” (660)

    என்னும் குறட்பாவில் கையாள்கிறார். அல்நெறியில் தேடிய செல்வச் சேமிப்பு பசிய மட்கலத்துள் பெய்த நீருக்கு ஒப்பாகும் என்பது கருத்து. திருவள்ளுவருக்கு முன் இந்த உவமத்தைத் தொல்காப்பியர் தலைவி தன் அகவுணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிற்குப் பயன்படுத்தியுள்ளார்.

    “தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
    எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
    பிறநீர் மாக்களின் இன்றிய ஆயிடைப்
    பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப” (1064)

    என்னும் நூற்பாவில் இந்த உவமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அழகையும் ஆழத்தையும் உள்வாங்கிய பரிமேலழகர் தனது உரையிலும் எடுத்தாண்டுள்ளார்.

    “அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்” (755)

    “தாம் குடிகள் மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச் செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை அரசர் பொருந்தாது கழியவிடுக”

    “கூடிவருதல் ஆறில் ஒருபங்காய் வருதல் அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் செய்தானையும் கொண்டு இறத்தலின் அதனைப் புல்லார் என்று ஒழியாது புரளவிடல் என்றும் கூறினார்”

    தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் எனத் தொடங்கும் குறட்பாவால் அரசனுக்குரிய திறை குடிமகனின் வருமானத்தில் ஆறில் ஒருபங்கு என்பது பெறப்படும். அதற்கு மாறாக வரும் வருமானம் அல்நெறியால் பெறப்படுவதாகக் கருதப்படும். அவ்வருமானத்தைக் கருவூலத்தில் சேமித்தால் சேமிக்கப்படும் செல்வமும் அதனைச் சேமிக்கின்ற கருவூலமும் ஒருங்கே அழியும் என்பது கருத்து. இதனைத்தான் ‘செய்தானையும் கொண்டு இழத்தலின்’ என்னும் தொடர் குறிக்கிறது. ஆனால் இவ்வாறு உரை சொல்வதற்குக் குறட்பாவில் சொல்லோ இடமோ இல்லை. ‘சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்’ (660) என்னும் குறட்பாவைக் கருத்திற் கொண்டே இதனை எழுதுகிறார். மேலும் அந்தக்  குறட்பாவின் கருத்தாக, ‘அரசனும் செல்வமும் சேரப்போம்’ என்பதாம் என உரைத்திருப்பதும் காண்க. அகத்திணைப் பொருள் விளக்கத்திற்காகத் தொல்காப்பியத்தில் கண்ட உவமத்தைத் திருவள்ளுவர் பொருளதிகாரக் கருத்துக்குப் பயன்படுத்தி நூல் செய்கிறார். அவ்விரண்டனையும் உள்வாங்கிய பரிமேலழகர் அவ்விரண்டும் பொருளாகாத வேறொரு குறட்பாவின் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதே அழகரின் உவமத்திறன் ஆகும்.

    நிறைவுரை

    நூல் நுகர்ச்சிக்குக் காரணங்கள் பல. கருத்து, சொல்லாட்சி, யாப்பு, வெளிப்பாட்டு உத்தி, உணர்ச்சி, வண்ணனை, உவமங்கள் எனப் பல்வகையாக அது பல்கும். அவற்றுள் உவமத்தால் ஒரு நூலை நோக்குவதும் மதிப்பிடுவதும் கற்பாரின் உளப்பண்பைச் சார்ந்தது. தொடக்கத்தில் சொல்லியது போலத் திருக்குறளின் உவமங்களும் பொருள்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாய்ப் பிரிக்க முடியாததுபோலப் பரிமேலழகரின் உரையில் காணப்படும் உவமங்களும் குறட்பாவின் கருத்துக்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. மேலாகத் திருக்குறளில் காணமுடியாத இலக்கண உவமங்களைப் பரிமேலழகர் காட்டியிருப்பது மொழி, சிந்தனை, இலக்கிய உத்தி ஆகியவற்றின் வளர்ச்சிநிலையைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும். பரிமேலழகர் காட்டிய இந்த நெறியைப் பிற்காலத்தில் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர், உவமைக் கவிஞர் சுரதா முதலியோர் பின்பற்றிச் சிறந்தனர். திருக்குறள் உவமங்களும் அழகரின் உவமங்களும் துலாக்கோலின் தட்டுக்கள் இரண்டிலும் சமமாகவே நிற்கின்றன என்பதைக் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையும் ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னும் இக்கட்டுரைத் தொடரும் நிறைவு பெறுகிறது!. வல்லமைக்கு நெஞ்சார்ந்த நன்றி!

    (நிறைவு)

    Share
  • COVID shield vaccination

    COVID shield vaccination

    Baskar Seshadri

    The dry run of covid shield vaccination had started today in all the seventeen centres of Tamilnadu and in chennai this is now happening in Rajiv gandhi Hospital and other prominent places and in most of the places its the health department officials who participated in the event.

    Here in mylapore and santhome the venue chosen was the primary health centre at Santhome near the eastern end of Appu street. The GCC workers cleaned the whole area right in the morning to ensure the area is neat.

    Medical staffs were present on the time and the GCC officials had canvassed on this and the priority for the vaccination is to be given only to front line workers in the beginning. All these actions are supported by the GCC and directorate of public health.

    Persons who opt for treatment has to submit some proof of document so that the vaccination details be entered in the register and he or she may not be eligible another dose of vaccine. Normal temperature tests and oximeter tests are being conducted before the vaccination as part of medial practice .

    Share
  • குறளின் கதிர்களாய்…(334)

    குறளின் கதிர்களாய்…(334)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(334)

    களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
    தொளித்ததூஉ மாங்கே மிகும்.

    – திருக்குறள் -928 (கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்...

    கள்ளுண்பவன்
    கள்ளுண்ணும் போதினிலே,
    அவன் மறைத்து வைத்திருக்கும்
    குற்றங்கள் வெளிப்பட்டுவிடும்..

    எனவே அவன்
    கள்ளுண்ணாத போது
    யான்
    கள்ளுண்ணுவதை அறியேனெனக்
    கூறுவதைக் கைவிடுக…!

    குறும்பாவில்...

    கள்ளுண்கையில் வெளிப்பட்டிடும் குற்றங்கள்,
    மறைத்ததைக் கள்ளுண்ணாதபோது கள்ளுண்ணுதல் அறியேனெனக்
    கள்ளுண்பவன் கூறுதலை விட்டிடுக…!

    மரபுக் கவிதையில்...

    கள்ளை யுண்ணும் போதினிலே
    கரந்தே செய்த குற்றங்கள்
    தெள்ளத் தெளிவாய் வெளிவருமே
    தெரிந்து விடுமே எல்லோர்க்கும்,
    கள்ள மிதனை மறைத்தேதான்
    கள்ள துண்ணா வேளையிலே
    கள்ளுண லறியே னென்றொருவன்
    களறுதல் கைவிட வேண்டியதே…!

    லிமரைக்கூ..

    வெளிவந்திடும் குற்றங்கள் குடித்திடும் போதே,
    மறைத்ததை கள்ளுண்ணாதபோது யான் கள்ளுணல்
    அறியே னென்றே பொய்யுரைக் காதே…!

    கிராமிய பாணியில்...

    குடிக்காத குடிக்காத
    கள்ளு குடிக்காத,
    குடிச்சிப்புட்டு குடிக்கலண்ணு
    பொய்யச் சொல்லாத..

    கள்ளு குடிச்ச போதயில
    குடிச்சவன் வாயினாலே அவன்
    செய்த குத்தமெல்லாம் வெளிவந்திடுமே,
    அத மறச்சி
    அவன் குடிக்காதபோது
    எனக்குக் குடியப்பத்தி
    தெரியாதுண்ணு பொய்சொல்லுறது
    தேவயில்லியே..

    அதால
    குடிக்காத குடிக்காத
    கள்ளு குடிக்காத,
    குடிச்சிப்புட்டு குடிக்கலண்ணு
    பொய்யச் சொல்லாத…!

    Share
  • 15 வயதில் வீடு வாங்கினேன் – ஓவியர் ஸ்யாம் – 1

    15 வயதில் வீடு வாங்கினேன் – ஓவியர் ஸ்யாம் – 1

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    ஸ்யாம், ஓவிய உலகின் சச்சின் டெண்டுல்கர். மிக அழகான, இயல்பான, நேர்த்தியான ஓவியங்களை மிக வேகமாக வரையக்கூடியவர். ஒரே நாளில் 50 – 100 என வரையக்கூடிய ஆற்றல் படைத்தவர். இதுவரை இலட்சக்கணக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர். தமிழ்ப் பத்திரிகை உலகில், பதிப்புலகில் அழுத்தமான முத்திரை பதித்தவர். ஆயினும் வெற்றி என்ற சொல்லையே பொருட்படுத்தாமல் பயணிப்பவர்.

    15 வயதில் இராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்தவர். வந்த மூன்றாவது நாளே குமுதத்திற்குப் படம் போட்டவர். வந்த மூன்றாவது மாதமே சென்னையில் வீடு வாங்கியவர். இவையெல்லாம் திட்டமிடாமல், தற்செயலாக நடந்தவை. இப்போது நினைத்தாலும் உத்வேகம் கொள்ள வைக்கும் அந்தச் சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடனான உற்சாக உரையாடலைப் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய

    திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய

    திருப்பாவை – 19

    குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
    மைத்தடம் கண்ணினாய் நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
    தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 19 | குத்து விளக்கெரிய | ஸ்வேதா குரலில்

    திரைக்கதை எழுதும்போது, காட்சியை அணு அணுவாக விவரிப்பார்கள். எழுத்திலும் குறிப்பார்கள். அந்தக் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், பேசும் வசனம், அவர்கள் அணிந்திருக்கும் உடை, அந்தக் காட்சியில் இடம்பெறும் இதர பொருட்கள் என ஒவ்வொன்றையும் வர்ணித்து, காட்சியை நம் கண்முன் கொண்டு வருவார்கள். இவ்வாறு திரைக்கதை எழுதுவதில் ஆண்டாள், ஒரு முன்னோடி. சங்க இலக்கியத்திலும் இப்படியான வர்ணனைகள், பல உண்டு.

    திருப்பாவையின் 19ஆவது பாடலில் ஆண்டாள் இப்படியாக விவரிக்கிறார். அழகு துலங்கும் குத்து விளக்கு எரிகிறது. அதன் சுடரொளி, அறையைப் பேரழகாய் ஆக்குகிறது. எதிரே ஓர் அழகிய கட்டில். அதன் கால்கள், தந்தத்தால் செய்யப்பட்டுள்ளன. கட்டில் மீது மெத்தென்ற படுக்கை. அதன் மீது நப்பின்னை படுத்திருக்கிறாள். அவள் கூந்தலில் கொத்தாக மலர்ந்த வண்ண மலர்கள். அவற்றிலிருந்து நறுமணம் கமழ்கின்றது. அவள் மார்பின் மீது கண்ணன் தலைசாய்த்து, வாய்மூடி லயிக்கிறான். அவன் மார்பில் மலர்மாலைகளைச் சூடியிருக்கிறான். நப்பின்னையின் கூந்தல் மலர்களும் அவன் மார்பில் உதிர்ந்து கிடக்கின்றன.

    நப்பின்னையின் கண்களோ, மையால் வரைந்த தடம் கொண்டவை. வாயிலில் தோழிகள் வந்து எழுப்புகிறார்கள். அவளது மை வரைந்த கண்ணைத் திறந்து பார்க்கிறாள். ஆனால், மார்பில் தலைசாய்த்து உறங்கும் கண்ணனை எழுப்பினால், அவன் பிரிந்து சென்றுவிடுவான். எனவே நப்பின்னை அவனை எழுப்ப மறுக்கிறாள். மூச்சையே மெல்ல விடுகிறாள். அவளது மூச்சுக்கு ஏற்ப, அவன் முகம் ஏறி இறங்குகிறது. ‘உனது நலனுக்காகக் கண்ணனை எழுப்பாமல் இருப்பதா? இது நியாயம் இல்லை. உன் இயல்பும் இல்லை’ எனத் தோழிகள் செல்லமாகக் கோபிக்கிறார்கள்.

    இந்த அழகிய பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருவெம்பாவை – 18 | அண்ணா மலையான்

    திருவெம்பாவை – 18 | அண்ணா மலையான்

    திருவெம்பாவை – 18

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
    விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
    கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
    தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம்அகலப்
    பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
    விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
    கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
    பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    தோழியே! திரு அண்ணாமலை அண்ணலது திருவடித் தாமரையைப் போய் வணங்குகின்ற தேவர்களது முடியிலுள்ள இரத்தினங்களின் தொகுதி, ஒளி இழந்தாற்போல கண்களுக்கு நிறையும் சூரியன் தனது கிரணங்களுடன் தோன்றினமையால், இருளானது மறைய நட்சத்திரங்கள் குளிர்ச்சி பொருந்திய ஒளி குன்றி ஒழிய அப்போழ்தில், பெண்ணாகியும், ஆணாகியும், அலியாகியும், விளங்குகின்ற ஒளி பொருந்திய ஆகாயமாகியும் பூமியாகியும் இத்தனைக்கும் வேறுபட்டும் கண்ணால் பருகப்படுகின்ற அமுதமாய் நின்றவனாகிய இறைவனது திருவடியைப் பாடி இப்புது நீரில் வீழ்ந்து ஆடுவாயாக.

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

    By Unknown author – QwHFUq6AHDDEBQ at Google Cultural Institute maximum zoom level, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=21982354

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 18 | உந்து மதகளிற்றன்

    திருப்பாவை – 18 | உந்து மதகளிற்றன்

    திருப்பாவை – 18

    உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
    நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
    கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
    பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
    செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

    கண்ணனுக்கு ஆண்டாள் வழங்கிய அடைமொழிகள் தனித்த அழகுடையவை. கூர்வேல் கொடுந்தொழிலன், யசோதை இளஞ்சிங்கம், கதிர்மதியம் போல்முகத்தான், ஓங்கி உலகளந்த உத்தமன், ஆழி மழைக்கண்ணா!, ஊழி முதல்வன், மாயன், மாமாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், மாவாய் பிளந்தான், மல்லரை மாட்டிய தேவாதி தேவன், முகில்வண்ணன், மனத்துக்கு இனியான், புள்ளின் வாய் கீண்டான், பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான், சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன், பங்கயக் கண்ணான், வல்லானை கொன்றான், உம்பர் கோமான்… எனப் பலவாறாகக் கண்ணனைப் பாடிய ஆண்டாள், இந்த 18ஆம் பாடலில், உந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன் என அடுத்து எடுத்துப் பாடுகிறார். எண்ணி எண்ணி மகிழத்தக்க இனிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share