Blog

  • திருவெம்பாவை – 15 | ஓரொருகால் எம்பெருமான்

    திருவெம்பாவை – 15 | ஓரொருகால் எம்பெருமான்

    திருவெம்பாவை – 15

    மாணிக்கவாசகர்

    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
    சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
    நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
    பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
    ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    கச்சணிந்த அழகிய அணியுடன் கூடிய கொங்கை களை உடையீர்! ஒவ்வொரு சமயத்தில், எம்பெருமான் என்று சொல்லி வந்து இப்பொழுது நம்மிறைவனது பெருமையை ஒருகாலும் வாயினாள் கூறுதலை நீங்காதவளாகிய இவள் மனம் மகிழ்ச்சி மிக விழிகளினின்றும், ஒருபொழுதும் நீங்காத நீரின் நீண்ட தாரைகள் ஒழுகப் பூமியின்மேல் ஒருமுறையே வீழ்ந்து எழாது வணங்குவாள். பிற தேவரைத் தான் வணங்கமாட்டாள். பெரிய தலைவனாகிய இறைவன் பொருட்டு ஒருவர் பித்தராகுமாறும் இவ்வாறோ? இவ் வாறு பிறரை அடிமை கொள்ளும் ஞான உருவினர் யார் ஒருவரோ, அவருடைய திருவடியை நாம் வாயாரப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்த நீரில் நீர் குதித்து ஆடுவீராக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    By Sharvarism – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=87535488

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே

    திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே

    திருப்பாவை – 15

    எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
    சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
    வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
    வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
    ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
    எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
    வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 15 | எல்லே இளங்கிளியே | ஸ்வேதா குரலில்

    மரபுக் கவிதைக்குள் உயிர்ப்புள்ள ஓர் உரையாடலை இயல்பாக அமைக்க முடியும், ஒரு காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்ட முடியும் என்பதற்கு, திருப்பாவையின் 15ஆம் பாடல் ஓர் எடுத்துக்காட்டு.

    வாசலில் நின்று அழைக்கும்போது, சற்றே உரக்க அழைப்போம். அப்படித் தோழியை உரக்கக் அழைக்கிறார். ஏய் என்பதன் அக்கால வடிவம், எல்லே. எல்லேஏஏஏ என்று அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டலாம். அவர்களின் உரையாடல் இப்படிப் போகிறது.

    ஏடீ பொண்ணே இன்னுமா தூங்குறே?

    சில்வண்டு போல் காதுகிட்ட ங்கொய்ய் என்று கூப்பிடாதீங்க, பெண்டுகளா. இதோ வந்துட்டேன்.

    கதை விடுவதில் நீ கெட்டிக்காரி. உன் வாயளப்பு எல்லாம் எப்பவோ எங்களுக்குத் தெரியும்.

    நீங்களே வல்லவர்களாக இருங்கள். நானே ஏமாற்றுக்காரியாக இருந்துட்டுப் போறேன்.

    சீக்கிரமா வா. உனக்கு மட்டும் தனியா என்ன வேண்டியிருக்கு?

    எல்லாரும் வந்தட்டாங்களா?

    வந்துட்டாங்க, நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கோ. குவலய பீடம் என்ற யானையைக் கொன்றவனும் பகைவர்களை நேருக்கு நேர் சந்தித்து வென்றவனுமாகிய மாயக்கண்ணனைப் பாடுவதற்கு வாடீ, இளங்கிளியே.

    இந்த இனிய உரையாடலை அழகிய கவிதையாய்ப் படைத்த ஆண்டாளின் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எதிர்காலத்தில் மூளையும் கொந்தல் செய்யப்படுமா?

    எதிர்காலத்தில் மூளையும் கொந்தல் செய்யப்படுமா?

    முனைவர். நடராஜன் ஸ்ரீதர்
     ஆற்றல் அறிவியல் துறை
     அழகப்பா பல்கலைக்கழகம் , காரைக்குடி
     natarajangravity@gmail.com

    முன்னுரை

    சமீப காலங்களில் கணினிகள் கொந்தல் செய்யப்படுவது போல எதிர்காலத்தில் மனிதனின் மூளையும் கொந்தல் செய்யப்படுமா என்பது குறித்து இந்த கட்டுரை ஆய்வு செய்கிறது.

    கணினி கொந்தல்

    கணினிகள் கொந்தல் செய்யப்படுவது என்பது சமீப காலங்களில் வாடிக்கையாக ஒன்றாக அமைந்துவிட்டது. கணினிகள்  நமது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நாம் பயன்படுத்தும் திறன்பேசி கூட கணினியாகவே செயல்படுகிறது. ஒரு காலத்தில் ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கணினி இன்று பல்வேறு வகைகளில் நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகக் கலந்து விட்டது. பல்வேறு கணினி அமைப்புகளை பல்வேறு விதங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். டிஜிட்டல் முறையில் நாம் பல்வேறு விஷயங்களைக் கையாள கணினிகள் அமைப்பைப் பயன்படுத்தி வருகிறோம்.

    திறன்மை என்பது கணினிகளின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது.

    திறன்மையை அடிப்படையாகக் கொண்டு நமது அன்றாட வாழ்வில் பல்வேறு கருவிகளின் இயக்கங்கள் கட்டமைக்கப்படும் போது கொந்தல் என்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. காரணம் இத்தகைய கருவிகள் கொந்தர்களுக்கு மிக எளிமையாக ஆட்கொள்ளும் விதமாக அமைந்து விடுகிறது. கொந்தர்கள் பல்வேறு வகைகளில் கணினிகளையும், கணினிகள் சார்ந்த கருவிகளையும் ஆட்கொண்டு விடுகின்றனர். அவ்வப்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் கொந்தர்களால் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது சமீபகாலத்தில் ரான்சம்வேர் எனப்படும் கொந்தல் தாக்குதல் உலகிலுள்ள பல்வேறு கணினிகளில் மற்றும் கணினிகள் வலையமைப்பின் மீது தொடுக்கப்பட்டது. இத்தகைய தாக்குதலால் பல இணையதள சேவைகள் மற்றும் வர்த்தகம் வெகுவாகப்  பாதிக்கப்பட்டன.  இந்த கொந்தல் தாக்குதல் நடத்தப்படும் விதமானது மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது. ஒரு கணினியின் மீது அத்தகைய கொந்தல் மென்பொருள் தாக்குதல் நடத்தி அதன் கோப்புகளைப் பூட்டி விடுகிறது. இதை திறப்பதற்கான சாவியை வைத்துக்கொண்டு, தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பணம் கேட்டு கொந்தர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  இவ்வகையில் மிக அதிகமான தொகை கைமாறுகிறது. எனினும் இவ்வளவு தொகை கைமாறிய பிறகும் அத்தகைய கோப்புகள் மீண்டும் பழையபடி கிடைக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதேபோன்று பல்வேறு கொந்தல் தாக்குதல்கள் பல்வேறு கணினிகளில் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

    இவற்றைத் தடுப்பதற்குப் பல்வேறு பாதுகாப்பு மென்பொருள்கள் மற்றும் கணினி மேம்படுத்தல்கள் ஆகியவை உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டே வருகின்றன. இவையெல்லாம் கணினி தொழில்நுட்பத்தில் நடக்கின்றன இதேபோன்று மனிதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் என்னவாகும்?  மனிதன் மீது கொந்தல் தாக்குதல் நடத்தப்படுமா? படிக்கும் போது ஆச்சரியமாக உள்ளதல்லவா! வாருங்கள் இதைப்  பற்றி மேலும் காணலாம் .

    மூளையும் கணினியும்

    மனித உடலில் மிகப்பெரும் சிந்திக்கும் அமைப்பான மூளையை நாம் பயன்படுத்தி வருகிறோம். மூளையின் திறமை அளவிட இயலாதது. மனிதனின் மூளையானது மிக சிக்கலான நரம்பு அமைப்புகளைக் கொண்டது. மனித மூளை பில்லியன் கணக்கிலான நரம்பணுக்களைக் கொண்டது. இந்த நரம்பணுக்களின் வாயிலாகச் சமிக்ஞைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு மூளையின் இயக்கமானது நடைபெறுகிறது. நாம் சிந்திப்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது மற்றும் முடிவெடுப்பது ஆகியவை இத்தகைய நரம்பணுக்களின் செயல்பாடுகளின் வாயிலாகவே நடக்கிறது. இத்தகைய நரம்பணுக்கள் சமிக்ஞைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்த சமிக்ஞைகள் மின்காந்த அலைகளாக அமைகின்றன. இத்தகைய மின்காந்த அலைகளைப் படிப்பதன் மூலம் மூளையின் இயக்கத்தை தெரிந்துக் கொள்ள முடியும் என விஞ்ஞானம் நம்புகிறது. இதற்காகப் பல்வேறு முயற்சிகள் நவீன விஞ்ஞானத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளில் முன்னணியில் இருப்பது மற்றும் ஓரளவிற்கு வெற்றி கண்டிருப்பதுமான ஒரு தொழில்நுட்பம் நியூரலின்க் நிறுவனத்தால் முன்மொழியப்பட்டுள்ள தொழில்நுட்பம் ஆகும். நியூரலின்க் நிறுவனமானது,  பல்வேறு துறைகளில் தொழில்நுட்பப் புரட்சிகளைச் செய்து வருகின்ற, எலான் மஸ்க் அவர்களின் நிறுவனமாகும். இந்நிறுவனம் மனித மூளையும், கணினியையும் ஒருங்கிணைக்கக் கூடிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

    நியூராலிங்க்

    மனித மூளையையும் , வெளிப்புறத்தில் உள்ள ஒரு கணினியையும் ஒன்றிணைக்கும் போது மனித மூளையில் நாம் எண்ணும் எண்ணங்களை கணினிகள் வாயிலாகப்  படித்துக் கொள்ள முடியும் எனவும் மற்றும் மூளை பாதிக்கப்பட்டுள்ள அல்லது செயலிழந்த  நபர்களுக்கு வெளியிலிருந்து சமிக்ஞைகளைக் கொடுத்து அவர்களிடமிருந்து தகவல்களை பெற வைக்கவோ அல்லது அவர்களது உடல் பாகங்களை இயங்கவைக்கவோ முடியும் எனவும் ஆழ்ந்த நோக்கங்களைக் கொண்டு நியூராலின்க் நிறுவனம் தமது ஆய்வுகளை நடத்தி வருகிறது [1]. இதற்கென இந்நிறுவனம் நடவி அமைப்பு ஒன்றைத் தயார் செய்து  வைத்துள்ளது. இந்த அமைப்பு மூளையும் வெளிப்புறக் கணினியையும் தொடர்பாடச் செய்கிறது. இந்த அமைப்பில் இணைப்பான்கள் மற்றும் நரம்பணு இழைகள் ஆகியவை இருக்கும். இவை தலையின் மேல் பகுதி வாயிலாக மூளையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும். இந்த நடவி அமைப்பு மின்னேற்றம் செய்து கொள்ளக் கூடிய வகையிலும் வருகிறது. இதனுடன் மின்கலங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நடவி அமைப்பானது மூளையில் உள்ள மின் காந்த அலைகளைப் பெருக்கிக் கணினிக்குச்  சமிக்ஞைகளாக அனுப்புகிறது. தகுந்த மென்பொருட்கள் வாயிலாக இந்த சமிக்ஞைகள் படிக்கப்பட்டு மூளையில் உள்ள தகவல்கள் ஆய்விற்குத் தரப்படுகிறது.

    சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் இத்தகைய நடவி அமைப்பைப் பார்வையாளர்களுக்கு அரங்கேற்றம் செய்து காட்டியது. பன்றியின் மூளையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கணினிகள் வாயிலாக சமிக்ஞைகளாகப் பெற்று மூளையில் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று உலகிற்கு இந்நிறுவனம் வெளிப்படுத்தியது. இதுகுறித்து தமிழில் வெளிவந்துள்ள கட்டுரையை உசாத்துணை எண் [2] இல் காணலாம்.

    மூளையும் கொந்தலும்

    இவ்வாறு மூளையில் உள்ள தகவல்களைக் கணினியில் பெற்றுக் கொள்வதும் மேலும் கணினி வாயிலாகக் கட்டளைகளை மூளைக்குள் செலுத்த முடிவதையும் ஒரு பொதுவான கட்டமைப்பின் வாயிலாகக் காணும்போது, இவ்விணைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடும் கணினியினை, அடிப்படையாகக் கொண்டு செயல்படும் திறன்மைக் கருவிகளை ஒத்ததாக  இருப்பதாக ஒரு பொதுவான கருத்துக்கு வரமுடியும்.

    படம் 1 : எதிர்கால மூளை கொந்தல் . படம் உதவி : kaspersky ஆய்வகம்

    திறன்மைக் கருவிகளை கொந்தர்கள் அவற்றின் அடிப்படைக் கணித அமைப்புகளை கொண்டு கொந்தல் செய்து விடுகின்றனர். திறன்மைக் கருவிகளில் உள்ள கம்பியில்லாத்  தகவல்கள் பரிமாற்றம் வாயிலாகவும் மற்றும் இணைய வழிச் செயல்பாடுகள் வாயிலாகவும் பொதுவாக கொந்தலானது நடைபெறுகிறது. அதேபோல கணினிகளில் உள்ள பல்வேறு மென்பொருட்கள் மூலமும் கொந்தல் நடைபெறுகிறது.  இத்தகைய கொந்தல் தாக்குதல்களானது திறன்பேசிகள் மற்றும் திறன் கருவிகளைத் தாக்கும்போது மூளையின் சமிக்ஞைகளைக் கையாளும்  திறன் கருவிகளும் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியவருகிறது. அதேபோல திறன்மைக் கருவிகள் வாயிலாக அல்லது கணினிகள் வாயிலாக மூளைக்கு அனுப்பப்படும் சமிக்ஞைகளைக் கொந்தர்கள் கையாடல் செய்து விட முடியும் என ஊகிக்க முடிகிறது. மூளையின் சமிக்ஞைகள் கணினிக்கு அனுப்பப்படும் போது மூளையில் உள்ள ரகசியங்கள் கொந்தர்களுக்கு அக்கருவிகளக்  கொந்தல் செய்வதன் மூலம் தெரியவரும் என்பது இதுவரை நடந்துள்ள உலகளாவிய கொந்தல் தாக்குதல்கள் நமக்கு அளிக்க வரும் செய்தியாகும். இதேபோல கணினிகள் கொந்தல்கள் செய்யப்பட்டு அவற்றில் மூலம் தவறான கட்டளைகள் மூளைக்குச்  செலுத்தப்படும் அபாயமும் இதனுடன் சேர்ந்து கொள்கிறது. இதன் மூலம் ஒரு மனிதன் கொந்தர்களால் ஆளப்படும் நிலைகூட எதிர்காலத்தில் உருவாகிவிடும். மேலும் இவற்றுடன் செயற்கை நுண்ணறிவும் சேர்ந்து கொண்டால் நிலைமை இன்னும் விபரீதம் ஆகிவிடும். சமீபத்திய ஆய்வுக் குறிப்பு ஒன்று 2030 ஆம் ஆண்டு வாக்கில் முதல் மூளைக் கொந்தல் நடைபெறும் என்று தெரிவிக்கிறது[3]. எனவே எதிர்காலத்தில் மனித மூளையும் கொந்தல் செய்யப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிகிறது.

    முடிவுரை

    பிரபஞ்ச ரகசியங்களைப் புரிந்து கொள்வதிலும் மற்றும் மனித உடலின் ரகசியங்களை ஆழமாக உணர்ந்து கொள்வதிலும் மனிதனின் தேடல் எப்போதும் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கிறது. இவ்வகையில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் மனித வாழ்வை மேம்படுத்தப்பட்ட நிலையை நோக்கி அழைத்துச் செல்கிறது. எனினும் சில சில தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதனின் அன்றாட வாழ்விற்கு ஊறு  விளைவித்து விடக் கூடிய வகையில் அமைந்து விடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியில் தற்போது வெகுவாகத் தொற்றிக்கொண்டுள்ளது. இத்தகைய பயங்களைச் சரி செய்வதும் மற்றும் இவ்வாறான தவறுகள் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் இத்தகைய தொழில்நுட்பத்தைக் கண்டறியும் விஞ்ஞானிகளின் தலையாய கடமையாக உள்ளது. எதிர்கால வாழ்வு இனிமையாக அமையும் என நம்புவோம்.

    உசாத்துணைகள்

    [1] https://neuralink.com/
    [2] மனித மூளை கணினி நேர் தொடர்பு S Natarajan முழுமை அறிவியல் உதயம் 13 (11), 11114-11123, 2020
    [3] https://www.rt.com/news/442800-brain-implants-hacking-security/

    கலைச்சொற்கள்

    கொந்தல் – Hacking
    திறன்மை – Smartness
    கொந்தர் – Hacker
    நடவி – implant
    இணைப்பான் – Link
    நரம்பணு இழை – Neural Thread
    மின்னேற்றி – Charger
    மின்முனை – electrode
    நரம்பணு  – நியூரான்
    சில்லு – Chip

    Share
  • Azhisoor Srinivasachariar – Erudite Vaishnavite Scholar

    Azhisoor Srinivasachariar – Erudite Vaishnavite Scholar

    Baskar Seshadri

    Azhisoor (Azhagiya seyyur) Srinivasachariar is a erudite vaishnavite scholar residing in mandaveli and is a repute teacher practising for many decades. He was conferred Vaishnava Agama Ratna award. By Madras Sanskrit College a month back and was given given a purse for his contribution to the Sanskrit language. He is conducting the classes On Bhagavad Gita , Divya Prabandham and also conducts Kalakshepam regularly batch by batch in his office and house.

    He served in Sri Vedantha Desikar Devasthanam (Srinivasa perumal Temple, Mylapore ) for more than twenty eight years and got retired in the year 2000. Today he is one among the authority of the rigid rituals of Agama Sastiram and on Temple consecration especially connected to Vaishnavite Tradition. He has authored several books in both Tamil and sanskrit and still active at the age of 92. My Pranams.

    Prime minister who was on AIR on his Ma-ki-Bath spoke about this man and shared how he happy he was to come to know that Srinivasacharya who is 92 is active in doing his scholarly work. At the age of 85 He started learning computer and now types his works on system. He is highly acknowledged for his works on Gita and had authored good number of works.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 111 (பிறை)

    சேக்கிழார் பாடல் நயம் – 111 (பிறை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு  நல்லூர்க்
    கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
    நிறைத்த வன்புடைத் தொண்டர்க்கு நீடருள்  கொடுப்பான்
    மறைக்கு லத்தொரு பிரம  சாரியின் படிவாகி,

    அருஞ்சொற்பொருள்

    பிறைத்தளிர் – இளம்பிறையாகிய தளிர், கறைக்களம் = நஞ்சுண்ட கண்டம், கோவணம் = கீளுடை, மறைக்குலம் = வேதியர் சாதி, படிவாகி  = வடிவம் கொண்டு

    பொருள்

    பிறையாகிய தளிரைச் சூடிய சடையினையுடைய பெருந்தகையாகிய பெருந்திருநல்லூரில் எழுந்தருளிய திருநீலகண்டராகிய, இறைவனார், தமது கோவணத்தின் பெருமையை முன்காட்டி, அதன் மூலம், நிறைந்த அன்புடைய திருத்தொண்டர்க்கு நீடிய அருள் கொடுக்கும் பொருட்டு, வேதியர் குலத்து ஒரு பிரமசாரியின் வடிவுடையராகி,

    விளக்கம்

    பிறைத் தளிர்ச் சடை  என்ற தொடர், பிறையைத் தளிர்போலச் சூடிய சடையைக்  குறித்தது. இலையாக மேலும் வளர நிற்பது தளிராதலின், சடையைச் சார்ந்ததனால் முழுமதியாக வளரநின்ற பிறையைத் தளிர் என்றார். ‘பிறையும், ஆத்தியின்தளிரும்’ சூடிய, என்று உம்மைத் தொகையாக்கி உரைப்பாருமுண்டு. “பிறை மல்கு செஞ்சடை“ என்ற இத்தலத் தேவாரக் குறிப்பும் காண்க. பிறை எனத் தக்கன் சாபத்தால் குறைந்த சிறுபிறை, இறைவனின் பெருங்கருணையினால்  வளர்ந்து நிலவாயிற்று  என்று புராணம் கூறும்.

    பெருந்தகைஎன்றதொடர்,பெரியதனுளெல்லாம் பெரிதான தகைமையுடைய என்று பொருள் படும்.  இறைவனது பெருந்தகைமை யாவது உயிர்கள் எத்தனை பிழை செய்யினும் வெறுத்துத் தள்ளாது பொறுத்து அவைகளிடத்து மேலும் கருணை செய்துகொண்டே யிருத்தல்.

    “வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே“,

    “பிழைத்தவை பொறுக்கை யெல்லாம் பெரியவர் கடமை போற்றி“,

    முதலிய திருவாசகங்களும்,

    “மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற்,
    கண்ணுதலான்பெருங்கணை கைக்கொள்ளும்“

    என்ற புராணமும் காண்க.

    “பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே“  சம்பந்தர் தேவாரம் .

    “பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தை“ – திருச்செங்காட்டங்குடி – திருத்தாண்டகம்.

    பெருந் திருநல்லூர்  என்ற தொடர், அவனும் பெருந்தகை; அவனது ஊரும் பெரியது; திருவும் நலமும் தருவது என்ற குறிப்பைக்   கொண்டது.

    கறைத் களத்திறை, என்பது கரிய கண்டத்தர்’

    “நஞ்சணி கண்ட னல்லூருறை நம்பனை“ என்பது இத்தலத் தேவாரம். திருநீல கண்டம் அவரது பெருந்தகைமையும் கருணையும் காட்டி நிற்கும் அடையாளமாம்.

    “ஆர்ந்த நஞ்சயின்று  வானோர்க் கமுதமீ வள்ளல் போற்றி“,

    “பொங்கி நின் றெழுந்த கடல் நஞ்சினைப்
    பங்கி யுண்டதோர் தெய்வ முண்டோ சொலாய்“

    முதலிய திருவாக்குக்கள் காண்க.

    ‘’விண்ணோர்  அமுதுண்டும்  சாவ, ஒருவரும்
    உண்ணாத  நஞ்சுண்டு  இருந்து அருள் செய்குவாய்’’

    என்பார் இளங்கோவடிகள் .

    கோவணப் பெருமை முன்காட்டி – கோவணப் பெருமை காட்டுதல் பின்னர் இச்சரித நிகழச்சியிற் காணலாம்.

    மடையில்  வாளை  பாய  மாதரார்
    குடையும்  பொய்கைக்  கோலக்  காவுளான்
    சடையும்  பிறையும்  சாம்பற்   பூச்சும்கீள்
    உடையும்  கொண்ட  உருவ  மென்கொலோ?

    பொ-ரை: நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?

    சாம்பற் பூச்சும், கீள் உடையும் பரமனின் பற்றற்ற நிலையைக் குறிப்பன. எல்லாம் இருந்தும் தான் ஒன்றும் அநுபவியாமல் யோகியாயிருந்து உயிர்கட்கு யோகநெறி காட்டி விடுதலை செய்பவன் என்பதைக் குறிப்பது.

    துறந்தோராலும் விரும்பப் பெறும் பெருமை. அதனைத் தரிக்கும் அன்பர் பெருமை, அதன் பெருமை முதலியன. இதனைக் காட்டவே இறைவனும் தாம் இல்வாழ்வார் என்ற நிலையினின்றும் பிரமசாரியா யிறங்கி வந்தனர்.

    ‘முன்’  என்ற சொல்  தேற்றமாக – யாவரும்  அறியுமாறு,  முன்னிலையில் விளங்க. அன்பர்க் கருள் கொடுப்பதன் முன் என்றெல்லாம்  பொருள் தரும்.

    நிறைந்த அன்புடைத் தொண்டர்  என்ற தொடருக்கு,  இனி மேலும்  கொள்ளுதற் கிடமில்லாத படி நிறைவித்த அன்பு எனப்பொருள் கொள்ளலாம்.

    “தீர்ந்த வன்பாய வன்பர்“ என்பது திருவாசகம்.

    “விளைத்தவன் புமிழ்வார் போல“ – என்பது கண்ணப்பர் புராணம்.

    நீடருள் அருள் பேணி என்ற படி இதுவரை ஈந்ததும் அருளேயாம்; ஆயின் இனித் தருவது நீடுகின்ற அருள். அளவு, காலம், அனுபவம், இன்பம் முதலியவற்றாற் குறைவில்லா திருத்தல் நீடு எனப்பெறும். மாளா இன்பம், மீளா நெறி  முதலியனவாகப் பேசப் பெறும் வீட்டின்பம்.

    “பேரா வொழியாப் பிரிவில்லா
    மறவா நினையா வளவிலா
    மாளாவின்ப மாகடலே“

    என்பது திருவாசகம்.

    கொடுப்பான் – பானீற்று வினை யெச்சம். கொடுக்கும் பொருட்டு.

    மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவாகி – மறைக்குலத்து – வேதியர் குலத்திலே. குலங்களிலும் முதல் மூன்றிலும் பிரமசரிய முதலிய நிலைகள் நூல்களில் வகுக்கப் பெறுமாதலின் அவற்றுள் ஏனை மூன்று குலங்களையும் நீக்குதற்கு மறைக்குலத்து என்றார். பிறிதினியையு நீக்கிய விசேடணம்.

    பின்னர்த் துன்று வேதியர் தூய்மையி னமைப்பது முளதால்“

    என்று  இப்புராணமே  பாடும்.

    ஒரு – ஒப்பற்ற. பிரமசாரி – பிரம உபாசனை நிலையிலே சரிக்கின்றவன் – “வேதத்தை ஓதுகின்றவன். அவனுடைய செய்கையாவது: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இம்மூன்று சாதியில் ஒரு பாலன் உபநயனம் ஆனவுடனே பாக்கு வெற்றிலை தின்னாமலும், சந்தனந்தரித்தல்,  பூச்சூடுதல் இல்லாமலும், இடையில் ஒரு வஸ்திரத்தை மாத்திரஞ் சுற்றிக் கொண்டு அயலூரில் உள்ள பிராமண அக்கிரகாரத்தில் சென்று, இராக் காலத்தில் தருப்பையைக் கீழே பரப்பி அதன்மேற் படுத்துக்கொண்டு, பிட்சையாகக் கொண்டஅன்னத்தைப் புசித்துத்தகுந்த குருவினிடத்தில் கலியாணம் செய்யத்தக்க காலம். வருகின்ற அளவும் வேத அத்தியயனம் பண்ணிக்கொண் டிருத்தல்“ என்பர் மகாலிங்கையர். இது நாற்பத்தெட்டு வயது எல்லை வரை நீடிக்குமென்பர்.

    “அறுநான் கிரட்டியிளமை நல்லியாண்டு
    ஆறினிற் கழிப்பிய வறனவில்கொள்கை“

    என்பது  திருமுருகாற்றுப்படை!

    இவ் வியல்பின் இயன்ற உண்மைப் பிரமசரிய நிலை இந்நாளில் எங்கேனும் காணக் கிடைக்குமா என்பது அறிவாளிகள் கருதத்தக்கதாம்.

    Share
  • History Makes itself a History

    History Makes itself a History

    Baskar Seshadri

    St. Luke’s Church building on Mandaveli street junction may not be known to many Mylaporeans Its tucked at the end of Adam street and connect to Mandaveli street near the old Market area. It was an effort made by the renowned Wesleyan Mission long years ago and i have been seeing this building since my childhood days as that was my route to PS High school by walk way back in 1970’s .

    The maintenance was extremely bad those days and many did not consider it even for a heritage value and only in early 2000. The building was modernised a bit without any big changes and the appearance of the old version looked like a haunted place before that

    Strangely in that part of area there are few more buildings still now which looks even today like a Boot Bungalow. But the Managers here at Church managed to make it look better decades back.

    However this place was never put into frequent usage even then. With the emergence of Covid 19 the opening of this place is something rare and you can always find it locked. This comes under the CSI ambit and few historians had wrote about this entity in local tabloids those days. Few Years ago if i remember right that place acted as a good samaritan shop under the head of Rev Sailas Gnanadass and it was MLA Sri Nataraj who presided the shop.

    Keeping in mind the heritage value in its entirety it can be revisited by the concerned people to show the glory of the past. This coming January 14th 2021, This church is going to start its 107th Year of its existence. History is to be remembered not just in books but in the minds of the people more in the minds of locals who were part of such installations of those days. Few Photo Courtesy – V Sriram / DT Next. The cleaned tablets were shot by me and Posted here .

    Share
  • திருவெம்பாவை – 14 | காதார் குழையாட

    திருவெம்பாவை – 14 | காதார் குழையாட

    திருவெம்பாவை – 14

    மாணிக்கவாசகர்

    பாடியவர் – ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
    சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
    சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
    ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
    பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

    பொழிப்புரை:

    காதில் பொருந்திய குழை அசையவும், பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும் பூமாலை கூந்தலில் இருந்து அசையவும் மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும், குளிர்ச்சியாகிய நீரில் மூழ்கித் தில்லைச் சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி, வேதப் பொருளாகிய சிவபிரானைப் பாடி, அப்பொருள் நமக்கு ஆகும் வண்ணம் பாடிப் பரஞ்சோதியின் தன்மையைப் பாடி, இறைவன் சென்னியில் சூழ்ந்துள்ள கொன்றையைப் பாடி, அவன் ஆதியான தன்மையைப் பாடி, அவன் அந்தமான முறையைப் பாடி, பக்குவமுறைகட்கு ஏற்ப வேறுபடுத்தி, நம்மை ஆக்கமாய வேறுபாடுறுத்தி உயர்த்திய, வளையலை உடைய உமாதேவியின் திருவடியின் தன்மையைப் பாடி ஆடுவாயாக.

     

    உரைக்கு நன்றி – தேவாரம் தளம் (http://thevaaram.org)
    படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா
    By Artist Genius Shri K.R.Venugopal Sharma
    https://commons.wikimedia.org/wiki/File:KAMAKSHI_.jpg

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை

    திருப்பாவை – 14

    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
    செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 14 | உங்கள் புழக்கடை | ஸ்வேதா குரலில்

    ஆஹா, நாம் எப்பேர்ப்பட்ட காலத்தைக் கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வோர் வீட்டிலும் புழக்கடை (வீட்டின் பின்புறப் பகுதி) இருந்தது. அங்கே தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு குளம் (வாவி) இருந்தது. அதில் காலையில் செங்கழுனீர்ப் பூக்களும் இரவில் ஆம்பல் மலர்களும் மலர்ந்தன.

    இந்த இடத்திலிருந்து குறுகி, நாம் இன்றைய சதுர அடி வீடுகளுக்கு வந்திருக்கிறோம். இன்றும் மிகப் பெரிய மாளிகைகளில் வீட்டோடு இணைந்து நீச்சல் குளம் உண்டு. அதுவும் நீச்சல் குளம் தான். பூந்தடாகம் இல்லை. இன்றும் பலர் வீடுகளில் தோட்டம் உண்டு. ஆனால், அதில் செங்கழுனீர், ஆம்பல் மலர்கள் இல்லை. இன்றும் கிராமப்புற வீடுகளில் புழக்கடை உண்டு. ஆனால், வீட்டுக்கு வீடு குளம் இல்லை.

    வீட்டுக்கு வீடு தண்ணீர்த் தொட்டி வைத்து, வாளிகள் வைத்து, அதில் லாரியில் தண்ணீர் வாங்கி நிரப்பும் இந்தக் காலத்தில், வீட்டுக்கு வீடு ஒரு வாவி (குளம்) என்பது எப்பேர்ப்பட்ட கனவு. நாம் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுகிறது ஆண்டாளின் இந்தப் பாடல்.

    அதிலும் உன் வீட்டுத் தோட்டத்து வாவியில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்கின்றன. நீ இன்னும் உறங்குகிறாயே எனக் கேட்கிறார். அந்தப் பூக்களை மட்டுமில்லை, பூக்கள் மலரும்போதே விழிக்கின்ற வழக்கத்தையும் நாம் இழந்திருக்கிறோம் எனப் புரிகிறது. திருப்பாவையின் 14ஆவது பாடல் உங்கள் புழக்கடை, செல்வி ஸ்வேதாவின் குரலில் இதோ.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை

    திருப்பாவை – 13

    புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
    பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | ஸ்வேதா குரலில்

    நீரில் பாய்ந்து மூழ்கிக் குளிப்பதைக் குடைதல் (dive) என அக்காலத்தில் அழைத்தனர். சங்க இலக்கியத்தில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய (பொரு. 241) எனப் பொருநராற்றுப்படையிலும் கயம்குடைந்து அன்ன இயம்தொட்டு இமிழ்இசை (மது 363) என மதுரைக் காஞ்சியில் காண்கிறோம்.

    திருப்பாவையின் 13ஆவது பாடலில் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ என ஆண்டாள் பாடுகிறார். திருவெம்பாவையின் 11ஆவது பாடலில், பொய்கை புக்கு முகேர் என்னக் கையாற் குடைந்து குடைந்து என்றும் 12ஆவது பாடலில் பூத்திகழும் பொய்கை குடைந்து என்றும் மாணிக்கவாசகர் பாடுகிறார். திருப்பாவையின் 13ஆவது பாடலை இதோ செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள். ஆண்டாளின் தமிழ்ப் பொய்கையில் குடைந்து நீராட வாருங்கள்.

     

    திருப்பாவை – 13 | புள்ளின்வாய் கீண்டானை | சேகர் முத்துராமன் குரலில்

    புள்ளும் சிலம்பினகாண் என்பது திருப்பாவையில் இரு இடங்களில் வருகின்றது. 6ஆவது பாடல், ‘புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்’ எனத் தொடங்குகின்றது. 13ஆவது பாடலில் ‘புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்’ என வருகின்றது. சிலம்புதல் என்றால் இரட்டிப்பொலி எழுப்புதல், மாறி மாறி ஒலித்தல் எனப் பொருள். புள் எனில் பறவை. பறவை விதவிதமாக இரட்டிப்பு ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். ‘கீசுகீசு’ என ஆனைச்சாத்தன் பேசுவதை ஆண்டாளே பதிவு செய்துள்ளார். அரிய, அழகிய வாழ்வியற்கூறுகள் நிறைந்த திருப்பாவை, நாம் பெற்ற செல்வம். புள்ளின் வாய் கீண்டானை என்ற 13ஆவது பாடலைச் சேகர் முத்துராமன் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 23

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 23

    -மேகலா இராமமூர்த்தி

    சீதையை அவள் தங்கியிருந்த பன்னசாலையோடு பெயர்த்தெடுத்துக்கொண்டு தன் தேரில் ஏறிய இராவணன், தேரை விரைந்து செலுத்து என்று தேர்ப்பாகனுக்குக் கட்டளையிட்டான். இந்த அசம்பாவிதங்களைச் சிறிதும் எதிர்பாராத சீதை, தீயில் வீழ்ந்து வெந்தழியும் கொடிபோல் துடித்து எழுந்தாள்; அழுதாள்; அரற்றினாள்; அறமே என்னை இத்துன்பத்திலிருந்து விரைந்து காத்திடு என்று முறையிட்டுக் கதறினாள்.

    விடு தேர் என வெங் கனல்
         வெந்து அழியும்
    கொடிபோல் புரள்வாள்
         குலைவாள் அயர்வாள்
    துடியா எழுவாள்
         துயரால் அழுவாள்
    கடிதா அறனே இது
         கா எனுமால். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3492)

    யாரும் தனக்குத் துணையில்லாத நிலையில் அறமே தன்னைக் காக்கும் என்றெண்ணிய சீதை என்னைக் காப்பாற்று என்று அறத்திடம் இறைஞ்சுகின்றாள். வழியில் தென்பட்ட மலையிடமும் மரத்திடமும் மயிலிடமும் குயிலிடமும் இவையொத்த இன்னபிற அஃறிணைப் பொருள்களிடமும் தன்னிலையை விளக்கி இராம இலக்குவரிடம் இதை உரைப்பீர் என்று புலம்பியவண்ணம் செல்கின்றாள்.

    தலைவனைப் பிரிந்த தலைவி பல பொருள்களைத் தலைவனிடம் தூதனுப்புவதுபோல் இங்கே சீதையும் தன் பரிதாப நிலையை கண்ணில்படுகின்ற அஃறிணைப் பொருள்களிடத்துச் சொல்லித் தன் தலைவன் இராமனிடம் உரைக்கச் சொல்லுகிறாள் என்று கொள்ளலாம்.

    சீதையின் புலம்பலைக் கேட்ட இராவணன் ”பெண்ணே! இராமன் என்னோடு போரிட்டு என்னைக் கொன்றபின் உன்னை மீட்டுச் செல்லட்டும்” என்று கூறிவிட்டு நகைத்தான். அதைக்கேட்டுச் சினமுற்ற சீதை, அவனோடு போரிட அஞ்சித்தானே என்னைத் திருட்டுத்தனமாய்க் கடத்திச் செல்கின்றாய்?” என்று சீறினாள்.

    “வலியற்ற மானுடர்களோடு பொருதல் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த என் வீரத்தோளுக்கு இழுக்காகும்” என்று இராவணன் அதற்குச் சொன்ன மறுமொழி சீதையின் சினத்தீயில் மேலும் எண்ணெய் வார்த்தது. 

    ”தம் குலப் பகைவரோடு போரிடப் போதல் குற்றம்; அவர்களோடு வாளேந்திப் பொருதல் நாணுதற்குரியது; ஆனால் கற்புடைய மகளிரை வஞ்சகமாகக் கவர்ந்துசெல்வது வலிமையைப் பறைசாற்றும் செயல்போலும்” என்று இராவணனின் ஈனச்செயலைப் பழித்துரைத்த சீதை, ”இரக்கமற்ற அரக்கர்க்கு பழிச்செயல் என்பதுதான் எதுவோ?” என்று கேட்டாள் எள்ளலோடு.

    பாவையும் அதனைக் கேளா தம்
         குலப் பகைஞர்தம்பால்
    போவது குற்றம் வாளின் பொருவது
         நாணம் போலாம்
    ஆவது கற்பினாரை வஞ்சிக்கும்
         ஆற்றலே ஆம்
    ஏவம் என் பழிதான் என்னே
         இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள். (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3502)

    அவ்வேளையில் இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதைக் கண்ணுற்றான் அப்பகுதியில் தங்கியிருந்த கழுகரசன் சடாயு. பொன்மலையொன்று வானில் பறந்துவருவதுபோல் வந்த அவன், ”அடே இராவணா! நீ உன் கிளையொடும் கெடுவாய்; அதிலிருந்து தப்ப வேண்டுமானால் சீதையை இப்போதே விடுவாய்!” என்று இராவணனைப் பார்த்துக் கர்ஜித்தான்.

    தொடர்ந்து பேசிய சடாயு, “விடையானிடம் நீ பெற்ற வரங்கள் யாவும் இராமன் உன் எதிரில் வந்து கணைதொடுக்கும் போழ்தில் விடைபெற்றுப் போய்விடும்; ஆதலால் அன்னை அனைய சீதையை விட்டுவிட்டு இங்கிருந்து ஓடிப் போய்விடு; இவளை நானே முன்பிருந்த இடத்தில் கொண்டு சேர்ப்பேன்!” என்றான்.

    அவன் கருத்தை ஏற்கமறுத்த இராவணன், ”உன் மார்பில் என் அம்பு ஊடுருவி அதனைப் பெரும்புண் ஆக்குதற்கு முன்பு நீ இங்கிருந்து அகன்றிடு! காய்ச்சிய இரும்பிலிட்ட நீர் மீண்டாலும் கரும்பனைய மொழியாள் சீதை என்னிடமிருந்து மீண்டிலள்” என்றுரைத்தான் தீர்மானமாக.

    வரும் புண்டரம் வாளி
         உன்மார்பு உருவிப்
    பெரும் புண் திறவாவகை
         பேருதி நீ
    இரும்பு உண்ட நீர்
         மீளினும் என்னுழையின்
    கரும்பு உண்ட சொல்
         மீள்கிலள் காணுதியால் (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3520)

    ”இரும்பு உண்ட நீர் மீளினும்” என்ற இச்சொற்றொடர் ஐயூர் மூலங்கிழாரின் பின்வரும் புறப்பாடல் அடிகளை நினைவூட்டுகின்றன.

     …கானப் பேரெயில்
    கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டி
    இரும்புண் நீரினும் மீட்டற்கு அரிதென
    வேங்கை மார்பன் இரங்க…
    (புறம்: 21)

    பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்கும் கானப்பேரெயில் (இப்போதைய காளையார் கோயில்) எனும் ஊரையாண்ட குறுநில மன்னன் வேங்கை மார்பனுக்கும் நிகழ்ந்த போரில் கானப்பேரெயிலைக் கைப்பற்றினான் உக்கிரப் பெருவழுதி. அதுகண்ட வேங்கை மார்பன், கொல்லனின் செந்தீயில் மாட்டப்பட்ட இரும்பு உண்ட நீர் மீளுவதைவிட அரிதான செயல் என் கானப்பேரெயிலை வழுதியிடமிருந்து மீட்பது என்றெண்ணி இரங்கினான் என்கின்றார் புலவர்.

    ”கனலிரும்புண்ட நீரின் விடாது” (பெருங். 3.25.71) என்று பெருங்கதையில் கொங்குவேளிரும் இவ் உவமையைப் பயன்படுத்தியிருக்கக் காண்கின்றோம்.

    சான்றோர் பலராலும் எடுத்தாளப்பட்ட இவ் உவமை கல்விவல்லாரான கம்பரையும் கவர்ந்ததில் வியப்பில்லை.

    சடாயுவுக்கும் இராவணனுக்கும் கடும்போர் தொடங்கிற்று. சடாயு தன் அலகால் கொத்தியும் நகங்களால் பிறாண்டியும் இராவணனின் முத்தார மார்பில் இருந்த கவசங்களை நெகிழச் செய்தான். பதிலுக்கு இராவணனும் கணைகளால் சடாயுவின் மார்பைத் துளைத்தான். சடாயுவும் சளைக்காது இராவணனின் கையிலிருந்த வில்லைத் தன் பல்லால் பிடுங்கி எறிந்தான். சிச்சிலிப் பறவைபோல் இராவணனைப் பாய்ந்து தாக்கினான்.

    சடாயுவால் தன் படைக்கலங்கள் அனைத்தையும் இழந்த இராவணன் பொறுமையும் இழந்தவனாய்க் கயிலையைப் பெயர்த்தெடுக்க முனைந்த காலத்துச் சங்கரன் கொடுத்த தெய்வ வாளான சந்திரகாசத்தை எடுத்துச் சடாயுவை நோக்கி வீசவே சிறகுகளற்ற மலைபோல் மண்ணில் துவண்டு வீழ்ந்தான் புள்ளின் வேந்தன் சடாயு.

    தன்னைக் காக்கப் போராடிய ஒரே உயிரும் தோற்று மண்ணில் வீழ்ந்ததைக் கண்ட சீதை, ”அல்லலுற்ற என்னை அஞ்சேல் என்று காத்துநின்ற இந்த நல்லவன் தோற்பதேன்? நரகன் வெல்வதேன்? அறமென்ற ஒன்று இல்லையோ?” என்றெண்ணிக் குமைந்தாள்.

    அல்லல் உற்றேனை வந்து அஞ்சல்என்ற இந்
    நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
    வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
    இல்லையோ அறமென இரங்கி ஏங்கினாள்.
    (கம்ப: இராவணன் சூழ்ச்சிப் படலம் – 3549)

    தடுப்பதற்கு வேறாரும் இன்மையால் சீதையோடு விரைந்து விண்ணில் ஏகிய இராவணன், அவளை அசோகவனம் எனுமிடத்தில் அரக்கியர் நடுவில் சிறைவைத்தான்.

    சீதையின் நிலை இவ்வாறிருக்க, இராமனைத் தேடிச்சென்ற இலக்குவன் அவனை வழியிலேயே சந்தித்தான். இலக்குவனை அங்கே எதிர்பாராத இராமன், ”சீதைக்குக் காவலாய் இரு என்ற என் சொல்லையும் மீறி இலக்குவன் இங்கு வந்த காரணமென்ன? ஒருவேளை அரக்கன் எழுப்பிய குரலை என் குரல் என்றெண்ணிச் சீதை இவனை அனுப்பியிருப்பாளோ?” என்று சிந்தித்தான். தன்னருகில் வந்த இலக்குவனை அன்போடு தழுவிய இராமன், இங்கு நீ வந்த காரணம் யாது என்று வினவ,

    “அண்ணா! உம் அபயக் குரலைக் கேட்ட சீதை, நீர் அபாயத்தில் சிக்கியிருக்கின்றீர் என்றெண்ணி உம்மைக் காக்க என்னைப் போகச் சொன்னாள்; நான் மறுத்தால் தீயில் வீழ்ந்து இறப்பேன் என்றாள். அதனால்தான் வேறு வழியின்றி நான் இவ்விடம் வந்தேன்” என்று தன் சங்கடமான சூழலை இராமனுக்கு விளக்கினான் இளவல்.

    அதனை ஏற்ற இராமன், “நீ மாய மான் என்று தடுத்தும் கேளாமல் அதன் பின்னால் நான் போனதால் நேர்ந்த சங்கடங்களே இவை” என்று வருந்தினான். பின்னர் இருவரும் சீதைக்கு ஏதேனும் தீங்கு நேராதிருக்க வேண்டுமே எனும் பதைபதைப்புடன் பன்னசாலை நோக்கி விரைந்தனர்.

    அங்கே கனங்குழையாள் சீதையைக் காணவில்லை! தான் பயன்படுத்திக் கொள்வதற்காக மண்ணில் புதைத்துவைத்த மாநிதியை வஞ்சனையார் கொள்ளையிட்டுச் சென்றதுபோன்ற வேதனையையும் ஏமாற்றத்தையும் அடைந்து நைந்தான் இராமன்.

    இராமன் நிலைகண்ட இலக்குவன், ”அண்ணா! தேர்ச்சக்கரங்களின் சுவடுகள் இங்கே தெரிகின்றன; சீதையைத் தீண்டுதற்கு அஞ்சி யாரோ பன்னசாலையோடு அவளைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். எனவே இங்கேயே இருந்து வேதனைப்படுவதை விடுத்துச் சீதையைக் கொண்டுசென்றவர்கள் நெடுந்தூரம் செல்வதற்குமுன் நாம் அவர்களைத் தொடர்ந்துசென்று பிடிப்போம்” என்று சொன்னதை இராமன் ஏற்றுக்கொண்டான். இருவரும் தேர்ச்சக்கரச் சுவடுகளைத் தொடர்ந்து செல்லலானார்கள்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 24

    பரிமேலழகர் உரைத்திறன் – 24

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பரிமேலழகரும் புறநானூறும்

    முன்னுரை

    பரிமேலழகர் தாம் எழுதிய திருக்குறள் உரையில் தாம் கற்றறிந்த பல நூல்களைப் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அறிந்த எல்லா நூல்களையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பயன்படுத்திய நூல்களிலிருந்தும் ஒரே எண்ணிக்கையில் எடுத்துக்காட்டுக்களைத் தரவில்லை. தந்த எடுத்துக்காட்டுக்களையும் ஒரே தன்மையை விளக்குவதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறட்பாவுக்குத் தாம் சரியென்று கருதிய கருத்தியலை முன்வைத்து உரையெழுதும் பரிமேலழகர், எந்த விளக்கத்திற்கு எந்த எடுத்துக்காட்டைத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். சொற்பொருள் விளக்கம், பொருளமைதி, இலக்கணக் கொள்கை, வரலாற்றுப் பதிவு, பண்பாட்டுப் பதிவு எனப் பல நோக்கங்களுக்காகப் பல இலக்கியங்களைப் பயன்படுத்தியிருக்கிறார். இத்தகைய பயன்பாட்டிற்கு முதலில் திருக்குறளையே பயன்படுத்திக் கொள்வது பற்றிய கருத்துக்கள் முந்தைய கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய நூல்களில் அதிகமான எடுத்துக்காட்டுக்களுக்காகப் பயன்பட்ட நூல் ‘புறநானூறு’. அந்நூலிலிருந்து அவர் தரும் எடுத்துக்காட்டுக்களையும் அவை தரும் விளக்கங்களையும் சுருக்கமாக ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்படுகிறது.

    அறமா? பொருளா? இன்பமா? (அதிகார விளக்கம்)

    கல்வியா? செல்வமா? வீரமா? எனத் தொடங்கும் திரையிசைப்பாடலைப் பலரும் கேட்டிருக்கக்கூடும். அது இணையான பொருட்களை எடைபோடுகின்ற பாடல். எது சிறப்பு என்று வினவுகிற பாடல். அறம் பொருள் இன்பம் என்னும் தொடர் தம்முள் மாறுபட்டும் வழங்கப்படுகிறது. ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என்பது தொல்காப்பியம் கண்ட தலைகீழ் பாடம். ‘வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்’ என்பது நாலடியார். இத்தகைய சிந்தனைகளையெல்லாம் உள்வாங்கிய திருவள்ளுவர் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரத்தைப் பாயிரத்துள் அமைத்திருக்கிறார். அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளைப் பாடியிருக்கும் திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்றால் அறத்தினை மட்டுமே வலியுறுத்துகிறாரா என்னும் ஐயம் தோன்றக் கூடும். நம்முள் பலருக்கும் வராத இந்த ஐயம் பரிமேலழகருக்கும் வந்திருக்கிறது. ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் தொடருக்கு,

    “அம்முனிவரால் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனை பொருளும் இன்பமும் போலாது அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல்” (பாயிரம் — அறன் வலியுறுத்தல் – அதிகாரப் பொருண்மை விளக்கம்)

    என்று தொடர் விளக்கம் தந்திருக்கிறார். வழக்கில் வலியுறுத்தல் என்பதை ஒரு சொல்லாகவே நோக்கிய நம்மில் பலரும் வலி என்பது வலியறிதல் என்னும் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் வலிமையை உணர்த்தும் என்பதை அறிவதில்லை. அறம் பொருளைவிட வலிமையானது, இன்பத்தைவிட  வலிமையானது என்று கூறுவதோடு அதற்கான காரணத்தையும் தொடர்ந்து கூறுகிறார். அறம் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் தரும். மற்ற இரண்டும் தராது.

    அறத்தை அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர் பொருளைப் பொருட்பாலில் கூறுகிறார். அதற்கு விளக்கமளித்த பரிமேலழகர் ‘பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாய பொருள்’ (பொருட்பால் முன்னுரை) என்று தெளிவாக்குகிறார். இன்பத்தைப் பற்றிச் சொல்ல வருமிடத்து ‘இம்மையே பயப்பதாய இன்பம்’ (இன்பத்துப்பால் முன்னுரை) என்று பொருள் வரையறை செய்கிறார். எனவே அறம் மூன்றுவகையான பயனைத் தரும். அறமே மற்ற இரண்டினும் வலியுடையது என்னும் கருத்தினை அவர் புறநானூற்றிலிருந்து  பதிவிறக்கம் செய்து கொள்கிறார்.

    “சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல” (புறம். 31)

    என்னும் எடுத்துக்காட்டால் விளக்குகிறார். அதிகாரத்தின் தொடக்கத்திலேயே அது பற்றிய பொருள் வரையறை தெளிவானால் ஏனைய அதிகாரக் கருத்துக்களும் தெளிவாகும் என்பது அவர் கருத்து. அதற்கே புறநானூற்றைத் துணை கொள்கிறார்.

    இலக்கணம் இலக்கியத்திற்காகவே

    ‘ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்’ என்பன மூன்றாம் வேற்றுமைக்குரிய உருபுகள் ஆகும். இந்த ஐந்து உருபுகளுள் ‘ஆல் ஆன்’ என்னும் இரண்டும் கருவிப் பொருளிலும் கருத்தாப் பொருளிலும் வரும், ‘மழையினால் குளம் நிறைந்தது’, ‘கோலால் எழுதினான்’, ‘இதனான் முடிக்கும்’, ‘கலைஞரால் கட்டப்பட்டது’, ‘சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்டவை’ என்பன போல. ‘ஆன்’ உருபு தற்போது வழக்கில் இல்லை. ‘ஒடு, ‘ஓடு’, ‘உடன்’ என்னும் மூன்றும் உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும். ‘அமைச்சரோடு உதவியாளர் சென்றார்’, ‘அமைச்சருடன் ஒப்பந்தக்காரர் சென்றார்’ என்பன போல. இவற்றால் ஐந்து உருபுகள் கொண்ட மூன்றாம் வேற்றுமை மூன்று பொருண்மைகளில் வரும் என்பது தெரியவரும். வந்தாலும் இவ்வைந்து உருபுகளும் மூன்றாம் வேற்றுமைக்குரியனவே என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

    “அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
    புறத்த புகழு மில”  (39)

    என்ற குறட்பாவிற்கு,

    ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினும் துன்பத்தினிடத்த., அதுவுமேயன்றிப் புகழுடைய அல்ல”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது ‘தூங்கு கையால் ஓங்கு நடை’ என்புழிப்போல” (புறம் 22)

    என்று விளக்கவுரை எழுதியிருக்கிறார். ‘அறத்தான் வருவதே இன்பம்’ என்னும் தொடரில் பயின்று வரும் ‘ஆன்’ என்னும் வேற்றுமை உருபு அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பாட்டில் சொல்லப்படுவது காம இன்பத்தினை. அது இல்லறத்தோடு இணைந்திருக்க வேண்டிய ஒன்று. ‘பிறன்மனை விழைதல்’ காம இன்பம் தருமெனினும் அது துன்பத்தைத் தரும் புகழைத் தராது. இருக்கின்ற புகழை அழிக்கும். இழிவைத்தரும். அந்த வேற்றுமை உருபிற்கு இலக்கண அடிப்படையில் கருவிப்பொருளைக் கொண்டால் ‘இல்லறத்தால் வருவது இன்பம்’ எனப் பொருள் மயக்கம் உண்டாகும். ‘இல்லறத்தோடு பொருந்தி வருவதே காம இன்பம்’ என்னும் பொருள் கிட்டாது. எனவே பரிமேலழகர் ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு உடன்நிகழ்ச்சிப் பொருள் தந்ததாகக் கருதி எழுதுகிறார். சரி! பரிமேலழகருக்காக வேற்றுமை இலக்கணம் மாறுபடுமா? என்றால் அவர் தான் கொண்ட அதே பொருளை மற்றொருவரும் கொண்டிருக்கிறார் என்பதற்கான இலக்கியச் சான்றினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். அந்த எடுத்துக்காட்டில், யானையின் வரவு கூறப்பட்டுள்ளது. ஆடிவரும் அதன் துதிக்கையும் அசைநடையும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆனால் பாட்டு எப்படி அமைந்திருக்கிறது? ‘தூங்கு கையான் ஓங்கு நடைய’ என்றிருக்கிறது. ‘தூங்கு’ என்றால் ‘தொங்கு’ என்பது பொருள். ‘தொங்குகின்ற கையால் ஓங்கிய நடை’ என்று வராது.  நடைக்குக் கை காரணமல்ல. கையொடு நடையாம். ‘கையான் நடை’ என்பதைக் ‘கையொடு நடை’ என மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். கொள்ளவே ‘தூங்கு கையொடு ஓங்கு நடைய’ என்பது பெறப்படும். இங்கே ‘ஆன்’ என்னும் கருவிப்பொருள் உருபு, உடன்நிகழ்ச்சிப் பொருளில் வந்தது. இவ்விரண்டு உருபுகளும் மூன்றனுக்குரியன வெனினும் இலக்கியப் பொருள் நுட்பத்திற்காக மாறிய பொருள் தந்து அமைந்திருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புறநானூறு கொண்டு உணர்த்தியிருக்கிறார்.

    கோட்டுப் பூ என்றால் கிளைப்பூ அல்ல

    இலக்கணப் பொருண்மை விளக்கத்திற்காகப் புறநானூற்று வரிகளைப் பயன்படுத்திக் கொண்ட பரிமேலழகர் தான் கொண்ட பொருளுக்குத் துணையாகவும் புறநானூற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார். நீர்ப்பூ, நிலப்பூ, கோட்டுப்பூ, கொடிப்பூ எனப் பூ நால்வகைப்படும். அவற்றுள் கோட்டுப்பூ என்பது கிளையில் மலரும் பூ. அது இலைகளுக்கு நடுவே மலராது. திருக்குறள் இன்பத்துப்பாலில் தலைவன் தலைவிக்கு இடையே நிலவிய ஊடல் பற்றி உசாவிய தோழிக்குத் தலைவன் சொல்கிறான்,

    “கோட்டுப்பூச் சூடினும் காயும், ‘ஒருத்தியை
    காட்டிய சூடினீர்’ என்று” (1313)

    “கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேன் ஆயினும், நும்மால் காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்ட வேண்டிச் சூடினீர் என்று வெகுளா நிற்கும்”

    அக்காலத்தில் (தற்காலத்தில் அருகிய பழக்கம் இது) ஆண்களும் குஞ்சி வளர்த்துப் பூச்சூடுவர். ‘குஞ்சி’ என்பது ஆண்பாலுக்குரியது. ‘குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்’ என்பது நாலடியார் (131). ‘கூந்தல்’ என்பது பெண்பாலுக்குரியது. அந்தக் குஞ்சியில் தலைவன் சூடியது கோட்டுப்பூ. ஊடலுக்கு உரிய திணை மருதம். அத்திணைக்குரிய பூ கோட்டுப்பூ அல்ல. நீர்ப்பூ! மருதம் வயலாகிய நீர்ப்பகுதி! தலைவன் மருத நிலத்துப் பூவைச் சூடாமல் பிறிதொரு நிலத்துப் பூவைச் சூடியதே தலைவியின் ஊடலுக்குக் காரணம் என்று பிற உரையாசிரியர்கள் கருதினார்கள். ஆனால் பரிமேலழகரோ ‘கோட்டுப்பூ’ என்பதைத் தொழில் அடிப்படையில் வந்த பெயராகக் கருதி உரையெழுதுகிறார். எப்படி?

    ‘கோடுதலைச் செய்யும் மாலை’

    ‘கோடு’ என்பதைக் கிளையென்னும் பெயர்ச்சொல்லாகக் கொள்ளாமல் முதனிலைத் தொழிற்பெயராக் கொள்கிறார். கொண்டு, ‘பூ’ என்பதைப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலைக்கு ஆகுபெயராக்குகிறார்.

    பூ – ஆகுபெயர்

    என்று எழுதுகிறார். சரி. இப்படி கோட்டுப்பூ என்பதற்கு அவர் ஏன் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொண்டார். தலைவன் உண்மையில் பிற நிலத்துப் பூவை அணியவில்லை. அணிந்திருந்தால் ஊடல் உண்மையாகிவிடும். ஊடல் என்பது கூடலை மிகுவிக்கும் பொய்யாக வருவித்துக் கொண்ட காரணியன்றி உண்மையன்று. அதற்கான காரணம் பொய். எனவேதான் ‘வளைந்த மாலை’ என்று பொருள் கொள்கிறார். மேலும் அதிகாரம் ‘புலவி நுணுக்கம்’. இவ்வாறு ‘வளைந்த மாலை எனத்  தன்னிச்சையாகப் பொருள் கொள்ள இயலுமா? என்னும் வினாவை அவரே எழுப்பிக் கொண்டு அதற்கான சான்றினைக்,

    “கோட்டம் கண்ணியும் கொடுந்திரை காடையும்’ (புறம். 275)
    என்றார் பிறரும்”

    எனப் புறநானூற்று வரிகளை எடுத்தாள்கிறார். இந்தப் புறநானூற்றுப் பாடலுக்குரிய சிறப்பு இதன் ஆசிரியர் ஒரூஉத்தனர் என்பார் பாடிய ஒரே பாடல் இது மட்டுமே. இந்தப் பாடலின் தொடக்க அடியில் போர்க்களத்து வீரனின் தோற்றப் பொலிவைக் குறிப்பிடும் ஆசிரியர் ‘கோட்டம் கண்ணி’ என்ற தொடரை ‘வளைந்த மாலை’ என்னும் பொருளில் பயன்படுத்தியிருக்கிறார். இதனைத் தம் நினைவுப் பேழையிலிருந்து பரிமேலழகர் காட்டி ஒரு நூல் தொடருக்கோ சொல்லுக்கோ சொல்லப்படுவது புத்துரையேயானாலும் அதற்கான சான்றுகளைத் தருவதையும் தமது உரைக்கொள்கையாகக் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது.

    ஒன்றில் இரண்டும் இரண்டில் ஒன்றும்

    பரிமேலழகர், புறநானூற்றில் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை அவருடைய உரையால் அறிந்து கொள்ளலாம். இக்காலத்தில் உரையெழுதும் அறிஞர் பெருமக்கள் உலகப் பெருநூலைக் கையடக்கப் பதிப்பாகக் கொண்டுவருவதில்தான் கவனமாயிருக்கிறார்களே தவிர, நூல்  நுவலும் பொருளாழத்தை உணர்ந்து புத்துரை கண்டார் இலர். அளவையியல் நுட்பத்தோடு தமது உரையை எழுதும் அழகர், ஒரு நூலை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் முறையறிந்தவர். ஒரே திருக்குறளுக்கு இரண்டு புறநானூற்று எடுத்துக்காட்டுக்களைத் தருகிறார். அதே நேரம் ஒரே புறநானூற்று வரியை இரண்டு குறட்பாக்களுக்கும் பொருத்திக் காட்டுகிறார்.

    “புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
    நட்பாங் கிழமை தரும்” (765)

    என்று ஒரு குறட்பா. இது உண்மையான நட்பிற்கு மெய்ப்புணச்சியும்  சொல்லாடலும் வேண்டுவதில்லை. உணர்ச்சி ஒத்திருப்பதே அதன் அடையாளமாகும் என்னும் கருத்தில் அமைந்திருக்கிறது.

    “ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் ஒத்த உணர்ச்சிதானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்”

    புணர்ச்சி ஒரு தேயத்தராதல். “இன்றே போல்க நும் புணர்ச்சி என்றதும் அதனை. ‘பழகுதல்’ பலகாற் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி ஒப்பின் அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்.

    என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியிருக்கும் பரிமேலழகர், விளக்கவுரையில் நட்பாகிய பொருண்மையை விளக்க இரண்டு முறை  புறநானூற்று வரிகளை இரண்டுவகையான பொருண்மை விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    1. சோழன் குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. புணர்ச்சியென்பது அவர்களைப் போல ஓரிடத்திருந்தது என்பதை விளக்குதற்கு ‘இன்றே போல்க நும் புணர்ச்சி’ என்ற தொடரைப் பயன்படுத்தியிருக்கிறார்.
    1. பழகுதலாகிய சொல்லாடுதலைப் பற்றிய விளக்கம் தருகிறார். அதனைத் தொடர்ந்து புணர்ச்சியும் பழகுதலும் இல்லாததோர் உயரிய நட்பினை விளக்குவதற்காகக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையர் நட்பினைப் புறநானூற்றுப் பதிவிலிருந்து எடுத்து விளக்குகிறார்.

    புறநானூறு ஒரு இலக்கியம். அதனைத் தமிழினத்தின் வரலாற்று ஆவணம் எனக் கருதும் வரலாற்றறிஞரும் உளர். ஆனால் இலக்கியத்தை வரலாற்று ஆவணமாகக் கருதுவது குறைந்த விழுக்காட்டுப் பயனையே தரும் என்பர் சிலர். ஆனால் பரிமேலழகர் புறுநானூற்றுப் பதிவுகளை வரலாற்று நிகழ்வுகளாகவே கருதியிருக்கிறார் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு சான்றாகலாம்.

    இது ஒரு குறட்பாவிற்கு இரண்டு புறநானூற்றுப் பதிவுகள் என்றால் மற்றொரு குறட்பாவில் ஒரே புறநானூற்று வரிகளை இரண்டு வகையான விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.

    ‘நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு” (234)

    “ஒருவன் நில எல்லைக்கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச், செய்யுமாயின், புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது”

    “புகழுடம்பான் இவ்வுலகும் புத்தேள் உடம்பால் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின் ‘புலவரைப் போற்றாது’ என்றார். அவை இரண்டும் உலகும் ஒருங்கு எய்துதல்”

    என்று பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதிப்,

    ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வானவூர்தி,
    எய்துப என்ப தம் செயலினை முடித்தெனக் கேட்டல்”

    (சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடல் (27)) என்னும் பாடலை எடுத்துக்காட்டாக்கியிருக்கிறார்.

    ஞானிகளைப் பேணாது என்றது, “இம்மையிற் புகழையீட்டாமல் அறிவை மாத்திரம் பெற்று யோக முயற்சியால் மறுமையில் தேவ உடம்பைப்  பெற்றவர்களினும், இம்மையிற் புகழையும் ஈட்டித் தானம் முதலியவற்றின் பயனால் மறுமையில் தேவ உடம்பையும் பெற்றவர்களுக்குத் தேவலோகத்தில் மிக்க சிறப்பு கிட்டும் என்பது கருத்து.

    இம்மையில் பூத உடம்பு, புகழுடம்பு என உடம்பு இருவகைப்படும்.  பூதவுடம்பாவது மண், நீர், நெருப்பு, காற்று, விண் என்னும் ஐம்பூதங்களால் ஆன உடம்பு. புகழுடம்பாவது கீர்த்தியாலும் சீர்த்தியாலும் பெறுவது. முன்னதற்கு அழிவுண்டு. பின்னதற்கு அழிவில்லை. தேவ உடம்பு என்பது ஞானிகள் மறுமையில் பெறுவது.

    இம்மூவகை உடம்பினுள் பூத உடம்பு மட்டும் பெற்றுநின்ற மண்ணுலகத்தாரினும் தேவ உடம்பு மட்டும் பெற்றுநின்ற விண்ணுலகத்தாரினும் இவ்விரு உடம்புகளையும் ஒரே நேரத்தில் பெற்றவர்களின் பெருமை சிறந்து நிற்றல் காண்க. அதனால்தான் புத்தேள் உலகம் தேவ உடம்பு மட்டும் பெற்ற ஞானியரைப் போற்றாதாம்.

    இந்தக் கருத்தியலைத் தாம் புறநானூற்றிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். அதாவது புகழைப் பற்றிய கருத்தியல் புறநானூற்றுக் காலத்திலேயே நிலவிவந்த வரலாற்று உண்மையை இந்த எடுத்துக்காட்டின் மூலம் அவர் உறுதி செய்கிறார்.

    புகழைச் செய்கின்ற உடல் நிலையற்றது. நிலையற்ற அதனால் ஈட்டப்படும் புகழ் நிலையானது. இது அறிவின் உச்சம். இதற்கு ‘வித்தகம்’ என்று பெயர். இதனை உடையவர் ‘வித்தகர்’. அடுத்த பாட்டில் (235) ‘வித்தகர்க்கல்லால் அரிது’ என்னுந் தொடருக்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கம் இதனை இன்னும் தெளிவாக்கும்.

    மேற்கண்ட புறநானூற்றுப் பதிவினை மற்றொரு பாடலுக்கும் மேற்கோளாகக் காட்டுகிறார் அழகர்.

    “இளிவரின் வாழாத மானமுடையார்
    ஔிதொழுதேத்தும் உலகு” (970)

    “தமக்கோர் இழிவு வந்துழிப் பொறுத்து உயிர்வாழாது அதனை நீத்த மானமுடையாரது புகழ்வடிவினை எஞ்ஞான்றும் தொழுது துதியா நிற்பர் உலகத்தார்” என்று பொருளைத் தருவது அது. புகழின்றேல் புத்தேள் நாட்டு உய்யாதால் (பாடல் எண். 966) என்பது மேலே சொல்லப்பட்டது. இந்தப் பாட்டில் ‘உலகு மானமுடையார் ஒளியை ஏத்தும்’ (970) என்று இருக்கிறது. இருக்கவே, ‘புத்தேள் நாடு உய்த்தல்’ பாட்டில் சொல்லப்படவில்லையே, அதாவது இளிவரின் வாழாத மானமுடையவரது புகழால் தேவலோகம் செல்லுதற்பற்றி யாதும் கூறப்படவில்லையே என்பாரின் ஐயம் களைவதற்காகப்,

    “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துவராகலின்” துறக்கச் செலவு சொல்ல வேண்டாவாயிற்று”

    எனப் புறநானூற்றின் அதே பாடலை ஈண்டும் எடுத்துக்காட்டாக்குகிறார்.

    மரணத்திற்கு மருந்தில்லை

    எமனுக்கு ‘எமதர்மன்’ என்றும் பெயர். ‘கூற்றுவன்’ என்றும் பெயர். உயிர் வௌவுதலாகிய தன்னுடைய கடமையை வினைப்பயனுக்கு ஏற்பத் தவறாது செய்தலின் எமனுடைய செயல் அறஞ்சார்ந்து நிற்பது. அதனால் அவன் எமதர்மன். உயிரையும் உடலையும் இரண்டாகக் கூறுபடுத்தலின் கூற்றுவன் என்றும் பெயர். இவையெல்லாம் அறிஞர்களுக்குத் தோன்றிய விளக்கங்கள். எனினும் கூற்றுவன் வந்து உயிரைப் பறித்துவிடின் அம்மரணத்தை மாற்றுதற்கு மருந்து கிடையாது. பரிகாரம் கிடையாது. மரணம் வந்தால் இறப்பைத் தவிர வேறு வழியில்லை.

    “கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை.” (765)

    வீரனின் வீரம் பற்றிக் கூறும் இந்தக் குறட்பாவிற்குக்,

    “கூற்றுவன்தானே வெகுண்டு மேல்வந்தாலும் நெஞ்சொத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலுடையதே படையாவது”

    என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் ‘மேல்வரினும்’ என்னும் தொடரிலுள்ள உம்மைக்கு விளக்கம் தர எண்ணுகிறார். அது சிறப்பும்மை என்பது அவர் கருத்து. அது சிறப்பும்மையாக வேண்டுமானால் கூற்றத்தைச் சிறப்பிக்க வேண்டும். எப்படிச் சிறப்பிப்பது? அந்தக் கூற்றுவனுடைய தொழிலுக்கு மாற்றாகப் பிறதொழில் இல்லையாம். அதுதான் சிறப்பாம். அதாவது கூற்றுவனுடைய தொழிலாகிய மரணத்தைத் தடுக்கும் அல்லது நீக்கும் மருந்து இல்லையாம். எனவே அது ‘மருந்து இல் கூற்று’ இந்தக் கருத்துக்குரிய பதிவினைப் புறநானூற்றிலிருந்து எடுத்துக்கொள்ளும் பரிமேலழகர், அதனால் உம்மை சிறப்பும்மை என்கிறார்.

    “மருந்தில் கூற்றமாகலின் உம்மை சிறப்பும்மை”

    இந்தத் தொடர் அமைந்த புறநானூற்று வரிகள்,

    “பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி” (புறம். 3)

    “மாற்றரும் கூற்றம்” (1026) என்பது தொல்காப்பியம். கூற்றத்துக்கு மருந்தில் என்றும் அவன் செயலுக்கு அருந்தொழில் என்றும் அடைபுணர்த்திய பாங்குணர்ந்த பரிமேலழகர் ‘மருந்தில் கூற்றமாகலின்’ என்பதைத் தமது உரையில் ஆசிரிய வசனமாகவே (முன்னோர் மொழியை அப்படியே எடுத்துத் தம் உரையில் ஆளுதல்) எடுத்தாண்டுள்ளார்.

    நிறைவுரை

    ஏறத்தாழ முப்பது இடங்களில் ‘புறநானூறு’ என்னும் ஒரு நூலை மட்டும் திருக்குறள் பொருள் விளக்கத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார் பரிமேலழகர். இது ஒரு பன்முகப் பயன்பாடு. ஒரு நூலைக் கற்கிறபோது உண்டாகும் பயன்களையும் அவற்றின் கூறுகளையும் மனத்துள் பதிவு செய்வார்க்கே இத்தகைய வல்லாண்மை கைகூடும். சொற்பொருள் விளக்கம், பொருள் விளக்க அமைதி, இலக்கண அமைதி, இலக்கண விளக்கம், இலக்கியத்தை வரலாறாகக் கொள்ளுதல் என்னும் இத்தகைய பன்முகப் பயன்பாட்டுக்கான கருவியாகப் புறநானூறு அவரால் நோக்கப்பட்டிருக்கிறது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து காட்டப்பட்டிருக்கும் மேற்கோள்களால் திருக்குறள் ஆழம் தெளிவாகிறது. ஒரு நூலை எப்படிக் கற்க வேண்டும் என்னும் கற்றல் கொள்கையும் புலப்படுகிறது. திருக்குறளை இப்படி நோக்கி உரையெழுதியோர் இவரன்றி யாரும் உளரோ? என்னும் ஐயம் ஐயமாகவே நிற்கிறது!

    (அடுத்த கட்டுரையோடு நிறைவுறும்…)

    Share
  • Poor Understands Poor Better

    Poor Understands Poor Better

    Baskar Seshadri

    Probably a Poor can understand a poor Better.

    This old woman used to sit near the Kapali Temple tank and sometimes she used to sleep on the pavements of Ramakrishna Mutt.

    She cannot walk but can only crawl and even if she could walk it could be only for few yards. During the peak time of Corona we regularly donated food packets and many of friends donated good number of clothes.

    Later many groups had started donating the food but the only issue was facing was the shelter during rainy days.

    This morning i saw the lady near The Mutt and her friend and a helper to her to have taken the care to dress her and you can see the photo on Plaiting her.

    It needs a great patience, care and concern to nurse one and its not too easy a task. I was so much moved at the very sight of them. Was actually in Tears and could not stay beyond a minute.

    Life is not money, pampering wealth or fancy cars but here it lies just across us. In a High Thick of Emotions.

    Share
  • குறளின் கதிர்களாய்…(333)

    குறளின் கதிர்களாய்…(333)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(333)

    அகடாரா ரல்ல லுழப்பர்சூ தென்னும்
    முகடியான் மூடப்பட் டார்.

    – திருக்குறள் – 936 (சூது)

    புதுக் கவிதையில்...

    தன்பெயர் மறைத்து
    சூதென்ற பெயரில் வரும்
    மூதேவியால்
    விரும்பிக் கொள்ளப்பட்டவர்கள்
    வயிற்றுக் உண்ண உணவின்றியும்,
    உலகில்
    பலதுன்பம் பெற்றே
    அல்லலுறுவர்…!

    குறும்பாவில்...

    சூதென வரும் மூதேவியால்
    முடக்கப்பட்டவர்கள் உண்ண உணவின்றித் தவிப்பர்
    அல்லல் அதிகம்பட்டு அவதியுறுவர்…!

    மரபுக் கவிதையில்...

    தன்பெயர் மறைத்து மூதேவி
    தரணியில் வருவாள் சூதெனவே,
    அன்னவள் தன்னை விரும்பியேதான்
    அவளிடம் தானே அகப்பட்டோர்,
    மன்பதை தன்னில் பசியதனை
    மாற்றும் உணவு பெற்றிடாமல்
    இன்னல்; பலவும் பெறுவதுடன்
    இன்னும் துன்பம் பெறுவாரே…!

    லிமரைக்கூ..

    மூதேவியாய் வந்திடும் சூதே,
    விரும்பியதனிடம் அகப்பட்டோரைப் பசிக்குணவின்றி ஆக்கிப்
    பலதுன்பம் தருமித் தீதே…!

    கிராமிய பாணியில்...

    கொடியது கொடிய,து
    சூதாட்டம் கொடியது,
    ஓன்னையே அழிச்சிடும்
    சூதாட்டம் கொடியது..

    சூதாட்டமுங்கிறது வேற ஒண்ணுமில்ல,
    மறஞ்சி வருற மூதேவிதான்,
    தானாப் போயி அவகிட்ட
    விரும்பி மாட்டுறவனுக்கு
    ஒலகத்தில திங்கிற
    சோத்துக்கும் வழியிலாமப் போயிடுமே,
    தொடந்தாப்புல
    துன்பந்தான் வந்திடுமே..

    தெரிஞ்சிக்கோ,
    கொடியது கொடிய,து
    சூதாட்டம் கொடியது,
    ஓன்னையே அழிச்சிடும்
    சூதாட்டம் கொடியது…!

    Share
  • திருவெம்பாவை – 12 | ஆர்த்த பிறவி

    திருவெம்பாவை – 12 | ஆர்த்த பிறவி

    திருவெம்பாவை 12

    மாணிக்கவாசகர்

    பாடியவர்: ஸ்ருதி நடராஜன், டெக்சாஸ்

    ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
    தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
    ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
    பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
    ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

     

    பொழிப்புரை

    நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி, நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும், விளையாடுபவனாகிய இறை வனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்குவாயாக.

    நன்றி – http://thevaaram.org/
    படத்துக்கு நன்றி – விக்கிப்பீடியா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 12 | கனைத்து இளம்

    திருப்பாவை 12

    கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலை வழியே நின்று பால்சோர
    நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
    பனித்தலை வீழ நின் வாசற் கடைபற்றிச்
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
    அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | ஸ்வேதா குரலில்

    11ஆவது பாடலில் ஆயர்கள், கறவைக் கணங்களிடம் தாங்களே பால்கறக்கிறார்கள். 12ஆவது பாடலில், கற்றெருமை கன்றை நினைத்து, நின்று பால்சொரிந்து, தான் நின்ற இடத்தையே நனைத்துச் சேறாக்குகிறது. நின்று பால்சோர என்றால், மாடு நிற்கிறது எனப் பொருள் இல்லை. மழை நின்று பெய்கிறது என்றால், நீடித்துப் பெய்கிறது எனப் பொருள் கொள்வோமே அப்படி இந்த எருமை நின்று பால்சொரிகிறது. கன்றை நினைத்த உடனே தாய்க்கு இப்படிப் பால் பெருகும். அப்படிப் பக்தர்களுக்காக அருள் சொரிகின்ற மனத்துக்கு இனியானைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    திருப்பாவை – 12 | கனைத்து இளம் | சேகர் முத்துராமன் குரலில்

    குளிர்ந்தேலோர் எம்பாவாய் என உள்ளம் குளிர்தலைப் பற்றி முன்னர் பார்த்தோம். மார்கழிக் குளிரையும் ஆண்டாள் பாடியுள்ளார். தலையில் பனி வீழ, நின் வாசற்கடை பற்றி நிற்கின்றோம். ஈதென்ன பேருறக்கம்? இப்போதாவது எழுந்திரு எனத் தோழியைக் கோதை எழுப்புகிறார். உள்ளம் குளிரச்செய்யும் திருப்பாவையின் 12ஆவது பாடலைச் சேகர் முத்துராமனின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share