Blog

  • கறுப்பின வெறுப்பு

    கறுப்பின வெறுப்பு

    சி. ஜெயபாரதன், கனடா

    கறுப்பின வெறுப்பு
    ஆயிரம்
    காலத்துப் போர்!
    கறுப்பு  என்றால் வெறுப்பு
    எனப் பொருள்.
    கறுப்பும் வெறுப்பும் சமமில்லை!
    வெள்ளை மாளிகை
    எரிந்துபோய்க்
    கறுப்பு நிறம்
    பூசி  உள்ளது ஒரு காலம்.
    கறுப்புத் தளபதி ஆண்ட தடம்
    உள்ளது.
    ஞாலத்தில்  எழும்பிய
    தீராத
    தீண்டாமைப் போர்.
    கறுப்பும் வெளுப்பும் அங்கே.
    சமமில்லை!
    ஆப்ரகாம் லிங்கன் அடிமைகட்கு
    விடுதலை பெற்றார்.
    வெள்ளைக் காவலர்  ஆயினும்
    கறுப்பரை
    வேட்டை ஆடும் விலங்குகளாய்
    பலி ஆடுகளாய்த்
    தமக்கு
    நாட்டில் நடமாடும் எளிய
    துப்பாக்கிக் குறிகளாய், கண்முன்
    இரையாக்கி வருகிறார்.
    கறுப்பினக் குற்றவாளி ஒருவர்
    நடுத் தெருவில்
    கொல்லப் பட்டால்
    பில்லியன் கணக்கில் மக்கள்
    உலகிலே
    துள்ளி எழுகிறார்!
    கண்ணீர் பொழிகிறார்!
    ஏன்? ஏன்? ஏன்?
    ஒற்றைக் கொலை நிகழ்ச்சி
    திரண்டெழுப்பும்
    மாபெரும் எதிர்ப்புக் காட்சி
    உலகிலே!
    ஒற்றை
    மரண நிகழ்ச்சி
    ஒருபெரும் எதிர்ப்புப் புரட்சியை
    உண்டாக்கும்
    மக்கள் மனத்திலே!
    கறுப்பின மனிதனுக்கு இப்போது
    விடுதலை தான்! ஆயினும்
    மூச்சு விட முடிய வில்லை அவனால்!
    கறுப்பின மக்களின்
    வானவில் ஐக்கியக் கொடி
    வெள்ளை மாளிகைக் கம்பத்தில்
    பறக்கும் ஒருநாள்!

    Share
  • சங்கிலியன் 401ஆவது ஆண்டு நினைவு நாள்

    சங்கிலியன் 401ஆவது ஆண்டு நினைவு நாள்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 

    சங்கிலி மன்னனின் நீத்தார் கடன் நிகழ்வுகள் நீர்நிலைகளில் நடைபெற உள்ளன.

    வடக்கே கீரிமலை தொடக்கம் தெற்கே கதிர்காமம் வரை, மேற்கே உடைப்புத் தொடக்கம் கிழக்கே கல்முனை வரை பல்வேறு ஊர்களில் ஆறுகள் குளங்களில் கடல் ஓரத்தில் மன்னன் சங்கிலியனுக்கு நீத்தார் கடன் செய்யப் பலர் முன்வந்துள்ளனர்.

    தீநுண்மி பரவாமல் தடுப்பதற்காகச் சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு நீத்தார் கடன் நிகழ்வுகளில் ஒருவர் அல்லது இருவர் பங்கேற்பர்.

    வெள்ளிக்கிழமை 12.06.2020 காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு சங்கிலியன் சிலைக்கு மாலை அணிவிக்க ஏணி வசதிகளை யாழ் மாநகரசபை செய்துள்ளது.

    மாலை அணிவித்த பின் யமுனா ஏரி சென்று பூத்தூவி வழிபட மூத்த குடிமக்கள் வருவர்.

    சனிக்கிழமை காலை 9 மணிக்குக் கீரிமலைக் கடற்கரை தொடக்கம் கதிர்காமம் மாணிக்க கங்கை வரை இலங்கை முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் நீத்தார் கடன் நிகழ்வுகள் நடைபெறும். சைவ சமய முறைப்படி நடைபெறும் இந்நிகழ்வுகளில் சைவக் குருமார் பங்கேற்பர்.

    இல்லத்தில் இருந்தவாரே இந்த ஆண்டு சங்கிலியன் நினைவை நீத்தார் கடன்களை மேற்கொள்ளுமாறு சைவத் தமிழ் அன்பர்களைகக் கேட்டுக்கொள்கிறோம்.

    கூட்டமாகக் கூடி நீத்தார் கடன்களைச் செய்வது பொருத்தமானதல்ல. தீநுண்மி பரவலைத் தடுப்போம்.

    Share
  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 21

    அவ்வைமகள்

    21. ஞானோதயக் காலம் 

    இந்தியாவில், மக்களிடையே காணப்பட்ட சுதந்திரம் மிகுந்த சமயப் பழக்கங்களும் பயிற்சியும் மற்றும் மன்னர்களின் மூன்று தட்டு, தர்மபரிபாலனத்தில், அன்று காணப்பட்ட  செம்மையான முறைமைகள் ஆகியன  ஐரோப்பாவில் உதித்த, Age of Enlightenment எனப்படும் ஞானோதயக் காலம் பிறக்க முன்னோடிகளாக இருந்தன. ஞானோதயக் காலத்தின் நோக்கம் என்னவென்றால், ஆட்சிமுறைமை மூன்று தட்டுகளாக (சட்டம், நீதி, நிர்வாகம்) இருக்கவேண்டும் என்பதும், சமயம் என்பது  ஆட்சியாளர்கள் கையில் இல்லாமல், மக்கள் வாழ்வியலில், அவர்களது பரிபூரண மனச் சுதந்திரத்தில், சனாதனமாகப்   பொருந்தியிருக்க வேண்டும் என்பதாகும்.

    இந்நிலையில், சனாதனம் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல் நலம். சனாதனம் என்பது, இனம், நிறம், குலம், சாதி, பிறப்பிடம், வாழுமிடம், பேசும் மொழி, சமயம் சார்ந்த பழக்கங்கள், பொருளாதார  ஏற்றத்  தாழ்வுகள், இவற்றையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கவேண்டிய இன்றியமையா நல்லொழுக்கங்கள்  (virtues) ஆகும். இந்த நால்லொழுக்கங்கள் யாவன என்றால்:  தூய்மை, நேர்மை, ஜீவகாருண்யம், நற்சிந்தை, கருணை, பொறுமை, சகிப்புத்தன்மை, சுயக் கட்டுப்பாடு, பெருந்தன்மை, விரதம் ஆகியன. இங்கு விரதம் என்பதைத் தியாகம் என்றும் கொள்ளலாம். அவரவர் வாழும் வாழ்முறை மற்றும் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் இந்த நல்லொழுக்கங்களை அவர்களால் இயன்ற வகையால் ஆற்றுதல்  வேண்டும் என்பது தான் சனாதனத்தின் சாராம்சம். சமயத்தைவிட சனாதன தர்மம் தான் முக்கியமானது.

    சமுதாயம் என்பது தோப்பு; இதில் தனி மனிதர்கள், தனித்தனி தாவரம் போன்றவர்கள். தனி மனிதர்கள் சேர்ந்து சமுதாயம் எனும் தோப்பை உருவாக்கும்போது, தனிமனித ஒழுக்கங்கள் மற்றும் தனிமனித வளம் ஆகியனவற்றைப் பொறுத்தே, சமுதாயமெனும்  தோப்பின் ஒழுக்கமும் வளமும் அமைகிறது. எனவே, நல்லொழுக்கப் பண்புகள் யாவையும் உடைத்தவராய் தனிமனிதர்கள் உருவாக்கப்பட வேண்டும்  என்பது மட்டுமே சனாதன தர்மத்தின் நோக்கம்.

    இத்தகைய உன்னத  மார்க்கமான சனாதன தர்மத்தை அடைவதே, ஐரோப்பிய ஞானோதய காலத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. எனவே, ஞானோதய  கால முன்னோடிகளின் சித்தாந்தம் என்னவென்றால் – அவர்களால் வேண்டப்பட்டது, என்னவென்றால்: சனாதன தர்மம் கூறும் நல்லொழுக்கங்கள், தமக்கும், தம் சந்ததிகளுக்கும், பயிற்றுமாறு, பயிற்சிக்குமாறு அவரவர் தமக்குத் தோதான சமயப் பண்பாட்டு முறைமையை மேற்கொள்ளும் சுதந்திரம் வேண்டும் என்பதே. சமயம் என்பது தனிமனிதர்களின் கையில் இருக்கவேண்டிய கருவியே தவிர, ஆட்சியாளர்கள் கையில் இருக்கவேண்டிய ஆயுதம் இல்லை

    சமயத்தை ஆட்சியாளர்கள் தம் கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களையும் சமயத்தையும் ஆளக்கூடாதுசமயத்தை ஆளவேண்டியவர்கள்  மனிதர்களே தவிர, ஆட்சியாளர்கள் அல்லர்.

    இவ்வாறாக, ஞானோதய காலத்தில், ஐரோப்பா முழுவதும், சமயத்தை ஆட்சியாளர்களிடமிருந்து விலக்கப் போர்களும் போராட்டங்களும் நடக்க, அதே காலக்கட்டத்தில், மதவெறி பிடித்த, மதம் மூலம் மட்டுமே ஆட்சி நடத்தவேண்டும் என்கிற குறிக்கோள் கொண்ட ஐரோப்பியக் காலனி  ஆட்சியாளர்களோ,  தமது குடியேற்ற நாடுகளில், தமது ஆட்சிபலத்தின் முலம் கிறித்துவ மதத்தை, வன்முறையாக நிலைநாட்டலானார்கள். துரதிருஷ்டவசமாக, அன்று நம் தாய்நாடு காலனியாளர்கள் கைப்பிடியில் இருந்தது.

    புண்ணிய பூமி, ஞான பூமி, என்று ஆதி காலந்தொட்டே ஞானோதயக்  களஞ்சியமாக இருந்து வரும் பூமியாக நம் நாடு இருப்பினும், ஐரோப்பிய ஞானோதய காலத்தில், அந்த ஐரோப்பிய ஞானோதயத்துக்கே நம் நாடுதான் முன்மாதிரி நாடாய்க் கருதப்பட்டது என்றாலும் கூட, நம் நாட்டில், சுதேசி சமயமான இந்து சமயம், காலனி ஆதிக்க மதவெறியாளர்களால் கடுமையான சமய நெருக்கடிக்கு இலக்காகிறது.

    எனவே, அக்காலக்கட்டத்தில், இந்து சமயம்,  முன்னெப்போதும் இல்லாத முனைப்போடு எழுந்து நின்று, தனது கால்களைத் தன் சொந்த பூமியில் நிலைநாட்ட வேண்டிய  நிர்ப்பந்தம்  எழுந்தது.

    இந்தக் காலக்கட்டத்தை, இந்தியாவின் புதிய ஞானோதய காலம் என்று அழைப்பது பொருந்தும். சொல்லப்போனால், அது, மிகவும் சிக்கலானதொரு காலக்கட்டம். வரலாறு காணாத, இடர்ப்பாடு மிகுந்த காலம் அது. வெளியிலிருந்து வந்தவன், ஆட்சியைப் பிடித்தது மட்டுமில்லை;  தன் சமயத்தைப் பலம்கொண்டு பரப்பியது மட்டுமில்லை;  சுதேசி இந்து சமயத்தைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகப் புளுகினான் – இழித்துரைத்தான் – கேலி செய்தான் – கிண்டலடித்தான், தண்டித்தான், இந்துசமய தெய்வங்களை “Demons” பேய்கள் என்றான்,  இந்து சமயத்தில் இருப்பவர்கள் காட்டுமிராண்டிகள் – நாகரீகமற்றவர்கள் என்றான் – கோயில்களை, வழிபாட்டுத் தலங்களை இடித்தொழித்து, சர்ச்சுகளைக் கட்டினான். மக்கள் புத்தி பேதலித்தாற்போல் ஆகி, உண்மையெது பொய்யெது என்று புரியாமல் திணறலானார்கள். எனினும், ஆட்சியாளனை எதிர்த்துக்கொண்டு வாழ்வது சுலபமில்லை என்று சிலர் பய உணர்விலேயே  மதம் மாறிப் போயினர். வெகுபலரோ, ஆட்சியாளர்கள் மற்றும் கிறித்துவ மதக்கருவிகள் தந்த வெகுபல சலுகைகளினால் மதம் மாறினர், பிறரையும் மதம் மாற்றினர்.

    இந்நிலையில்தான், இந்து சமயப் பண்பாட்டு இயக்கங்கள் தோன்றுகின்றன. 1828இல் பிரம்ம சமாஜம்; 1857இல் பிரார்த்தனை சமாஜம்; 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1875இல் பிரம்ம ஞானசபை; 1897இல் ராமகிருஷ்ணா  மிஷன் என்று தொடர் சங்கிலியாய் ஒரு எழுச்சி நடக்கிறது.

    இவற்றுள், வள்ளலார் நிறுவியது: சமரச வேத சன்மார்க்க சங்கம்; 1872இல்.  சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் என்று பெயர் திருத்தம் செய்து வள்ளலார் இந்தச் சமயப்  பண்பாட்டு  இயக்கத்தை, அவ்வமயம்  நடாத்திச் செல்கிறார்.

    வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம், மஹாராஷ்டிராவில் தோன்றிய பிரார்த்தனை சபை ஆகியவற்றிலிருந்து வள்ளலாரின் சமரச வேத சன்மார்க்க சங்கம் (சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம்) எவ்வாறு வேறுபட்டது? ஏற்கெனவே இரண்டு இயக்கங்கள் எழும்பி நிற்க, அவற்றுடன் சேர்ந்து இயங்காமல், தான் தனியாக ஒரு இயக்கம் துவங்க வேண்டிய தேவை வள்ளலாருக்கு ஏன் ஏற்பட்டது என்கிற இரண்டு கேள்விகள் இப்போது நம்முள் எழுகின்றன.

    விந்திய சாத்பூரா மலைத்தொடருக்குக் கீழே தெக்கணத்தில் தோன்றிய முதல் சுதேசி சமயப் பண்பாட்டுப் புரட்சி எதுவென்று பார்த்தால்,  அது வள்ளலாருடையதுதான்.

    விந்திய சாத்பூரா மலைத்தொடருக்கு மேலே வட இந்தியாவில், மிகக் குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவில், வங்காளத்தில்,  கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) தோன்றியது பிரம்ம சமாஜம், வடமேற்கில், மகாராஷ்டிரத்தில், குறிப்பாக, பாம்பேயில் (இன்றைய மும்பை) தோன்றியது பிரார்த்தனை சமாஜம்.

    இவை இரண்டுமே நடப்பில் இருப்பதான சுதேசி சமயமான இந்துசமயப் பண்புகளை ஆதரிக்காது அவற்றை எதிர்த்தவை. இரண்டிற்குமே அரசியல் சார்பு இருந்தது.

    இதிலே, பிரம்ம சமாஜம் என்பது, முழுக்க முழுக்க ஆங்கிலேயரின் கைக்கூலி இயக்கமாகும். இதனை பிரமோ சமாஜ் என்ற பெயரில், முதலில் தொடங்கியவர் ராம் மோகன் ராய். இவர் ஒரு செல்வந்தச் சீமான். குலின் எனப்படும் அரசகுல பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி அவ்வப்போது இந்தியச் செல்வந்தர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்குவதுண்டு. ராம் மோகன் ராய் இவ்வாறு, கிழக்கிந்திய கம்பெனிக்கு  வட்டிக்குப் பணம் தந்து உதவி வந்தார்; இவ்வாறான பழக்கத்தில் தான்,  ராம் மோகன் ராயின்  கணக்குப் போடும் துல்லியத்தையும், கில்லாடிக்குக் கில்லாடியாய் அவர் நடந்துகொள்ளும்  சாமர்த்தியத்தையும்,  பேச்சுச் சாதுரியங்களையம்  கிழக்கிந்திய கம்பெனி கவனிக்கிறது. இந்தியாவில், தான் வேரூன்றி நிலைநிற்க வேண்டுமென்றால்,  இவனைக் கூட்டாளியாக்கிக் கொள்ளுவது வேண்டும் என்கிற எண்ணம் கிழக்கிந்திய கம்பெனிக்குத் தோன்றுகிறது. எனவே, ராம் மோகன் ராயை, கிழக்கிந்திய  கம்பெனியில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு வர இயலுமா எனக் கேட்க,  அவரும் ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு,   கிழக்கிந்திய கம்பெனியின் சிப்பந்தியாகிறார் ராம் மோகன் ராய்.

    ஏற்கெனவே, முகலாய அரசர், இரண்டாம் அக்பருக்கும் இவருக்கும் கொஞ்சம் நெருக்கம் இருந்து வந்தது. கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தர் பணி என்ற பதவி. கம்பெனியின் கணக்கு வேலை, வழக்குகளுக்கு எனக் கோர்ட்டுக்குத் தேவையான எழுத்துவேலை செய்வது, இந்தியர்கள் தொடர்பான பிரச்சினைகளில் வாய்ச் சவடால் செய்து பஞ்சாயத்துப்  பேசுவது, இந்துச் சட்டம் என்ற பெயரில், ஆவணங்களை எழுதி அவற்றை ஒரு சட்ட நூலாக கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களுக்கு எதிராகப் பயன்படுத்துமாறு செய்வது போன்ற வேலைகளைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக, ராய் செய்துவந்தார்.

    இத்தோடு, கிழக்கிந்திய கம்பெனியின் சொற்படி, கிறித்துவ மதத்தை உயர்த்தியும் சுதேசி மதங்களைத் தாழ்த்தியுமான நூல்கள் எழுதுவதும் அவர் வழக்கம். ஆங்கிலேயர்களும் கிறித்துவ மதமும் உயர்வானவை என்பதைத் தொடர்ந்து ருசுப்படுத்துவதற்காக, ஆங்கிலக் கிறித்துவ மதபோதகர்களோடு கூட்டு சேர்ந்து கொண்டு, அவ்வப்போது, சுதேசி மக்களிடையே மறைமுகமாக, சமய பண்பாட்டுப்  பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அவற்றிற்கு, தான் முன்னின்று, ஆங்கில அரசின் மூலம், கிறித்துவர்கள் மூலம், கிறித்துவக் கொள்கைகள் மூலம்  தீர்வு காணுவதுபோல நாடகமாடுவது என்பதெல்லாம் ராம் மோகன் ராயின் வேலைகள்.

    இவை ஒவ்வொன்றுக்கும் அவருக்கு ஆங்கிலேயர்களால் சம்பளத்தைத்  தாண்டி, கூடுதல் சன்மானம் வழங்கப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு, இந்து சமயத்தில் குழப்பம் விளைவித்து அதன் ஸ்திரத்தைக் குலைக்கமுடியுமோ முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்குச் சன்மானம் வழங்கப்பட்டது. ஏனெனில், அவ்வாறான ஒவ்வொரு நிகழ்விலும், ஆங்கிலேயர்கள் அப்பிரச்சினையில் தலையிட்டு, தீர்வு காண்பதற்கான ஒரு சூழல் ஏற்படும்; ஆங்கிலேயர்கள், புதுப் புதுச் சட்டங்கள் இயற்றி, ஒரு பக்கம் நற்பேரும் மற்றோர் பக்கம், இந்திய மக்களை ஆள – பிரித்தாள வசதியும்  ஏற்படும் – பொய் வழக்கு போட்டு அவர்களைத் தண்டித்து அடக்கி ஆள வழி பிறக்கும். கிறித்துவ மதமாற்றத்தையும் அப்படியே சுலபமாக நடத்தி விடலாம்.

    ஆக, ராம் மோகன் ராய்க்கு வழங்கும் சன்மானம் என்கிற ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்திக் கொண்டுவிட முடியும் என்பது தான் ஆங்கிலேயரின் கணக்கு.

    1803இல் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்த ராம் மோகன் ராய், அதே ஆண்டில், வேலையில் சேர்ந்த ஒரு சில மாதத்திற்குள்,  கம்பெனியின் ஆதிக்கம் ஓங்கவும், கிறித்துவ மதம் ஓங்கவும் ஓர் அற்புதமான சதித்  திட்டம் தீட்டிவிடுகிறார் – அதை நடைமுறைப்படுத்தியும் காட்டுகிறார். அதனால், ஆங்கிலேயர்களின் கிறித்துவ மதமாற்றம் செய்வோரின் மிகுந்த நம்பிக்கைக்கும் நெருக்கத்துக்கும் உள்ளாகிறார். அந்த நிகழ்ச்சிதான்  “சதி” எனும் உடன்கட்டை ஏறுதல் எனும் நிகழ்ச்சி.

    1803இல் திடீரென்று வில்லியம் கேரி என்பவர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்: “கல்கத்தாவைச் சுற்றிய  30 மைல் சுற்றுவட்டாரத்தில் 1803இல் மட்டும் 438 உடன் கட்டை ஏறுதல்கள் நிகழ்ந்திருக்கின்றன – இந்து சமயத்தில் நிகழும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது” என்று.

    இந்த வில்லியம் கேரி யாரென்று பார்த்தால், அவர் ராம் மோகன் ராயின் நண்பர்;  கிறித்துவ மதபோதகர்;  மதமாற்ற வித்தகர்; ஏற்கெனவே, இவ்விருவரும் வித்யா வாகிஷ் எனும் ஒரு சம்ஸ்கிருத பண்டிதரும் சேர்ந்து, “மஹா நிர்வாண தந்த்ரா”எனும் நூலை வடமொழியாம் சமஸ்கிருதத்தில் எழுதி வெளியிட்டார்கள் (வடமொழி அறியாத கேரி இந்நூலை எழுதியிருக்க வாய்ப்பே  இல்லை என்பது உலகோர் கருத்து – பின்னாளில் வித்யாவாகிஷ் கேரியை தம் நட்பு வட்டத்திலிருந்து விலக்கிவிட்டார் என்பதும் இந்நூலை எழுதியது வித்யாவிகாஷ்  என்பதற்குச் சான்று. இந்நூல், வித்யாவிகாஷால் எழுதவைக்கப்பட்டது என்பதும் கூடத் தகும்). வில்லியம் கேரி, கிழக்கிந்திய கம்பெனியின் தொடர்பில் 1803இலிருந்து இருந்து வந்ததையும் நாம் அறிகிறோம்.

    1803க்குப் பிறகு,  சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும், உடன்கட்டை ஏறுதல் பற்றிய சேதி, மீண்டும் வருகிறது: 1815-1818 காலக்கட்டத்தில் உடன்கட்டை ஏறுதல், வங்காளத்தில் இரட்டிப்பாகிவிட்டது என்று.

    ஆக, பொய்யுரையும், பணம் கொடுத்துத் தூண்டிவிடப்பட்ட நிகழ்வாகவும் தான் உடன்கட்டை ஏறுதல் அன்று ஆங்கிலேய ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதை நம்மால் ஊகிக்கமுடிகிறது.

    கேரியும், மோகன் ராயும், ஆங்கிலேயர்களும் நடத்திய இந்த நாடகத்தில், அடுத்த கட்ட அரங்கேற்றம் என்னவென்றால். ராம் மோகன் ராய், இவ்விஷயத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்து, இந்து சமயத்தில் இவ்வாறு நடக்கும் இழிவான செயல்களில் தலையிட்டு – அவற்றைச் சட்டத்தின்  மூலம் தடுக்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம் வருகிறது. ராம் மோகன் ராய், இந்து சமயத்தின் சீர்த்திருத்தவாதி என்று  மிகப்பெரிய புகழை அடைகிறார்.

    இவ்வாறு, ராம் மோகன் ராய், இந்தியர்கள் சார்பான விஷயங்களில், ஆங்கிலேயர்கள் தமக்கு வசதியான முடிவெடுக்க, ஆலோசனை தரும் உயர்நிலை ஆலோசகராகவும், இந்திய மக்கள் பிரதிநிதியாகவும் ராம் மோகன் ராய்,  பல விஷயங்களில் பகிரங்கமாகவே செயல்படலானார். இவற்றுள், பால்ய விவாகம் எனப்படும் குழந்தைகள் திருமணத் தடையும் அடக்கம்.

    இவையாவும், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித்  தந்திரமே தவிர, எந்த ஒரு இந்திய பிரஜையும், ராம் மோகன் ராயைத் தம் தலைவராக கிழக்கிந்திய கம்பெனியிடம் மொழிந்துரைக்கவில்லை. ஆக, கைக்குள் கையாக ஆங்கிலேயருக்காகச் செயல்பட்டவர் ராம் மோகன் ராய். அதனால் தான் அவருக்கு அத்தனைப் பெரும் புகழும் பதவிகளும் அந்தஸ்தும் செல்வாக்கும் கிடைத்தன.

    ஒரு பக்கம், கிழக்கிந்திய கம்பெனிக்கு இத்தனை நெருக்கமாக இயங்கிய அதேவேளையில், இன்னொரு பக்கம்,  இரண்டாம் அக்பருக்கும் அவர் நெருக்கமாகவே நடந்துகொள்ளலானார். கிறித்துவ மதத்தை உயர்த்திப் பேசும் நூல்களை எழுதுவது போலவே, இஸ்லாமியத்தை உயர்த்தும் சில நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டார். “மீரட் உல் அக்பர்” என்று இஸ்லாமியர்களுக்கான ஒரு செயதித்தாளையும்  பெர்சிய மொழியில் வெளியிட்டு வந்தார்.

    பிரிட்டிஷாரின் வலு பெருகப் பெருக, முகலாய மன்னர்கள் தாக்குப்பிடிக்க இயலாமல் போன நிலையில், பிரிட்டிஷாருக்கு நெருக்கமாயிருந்து  தேர்ச்சி பெற்ற  ராம் மோகன் ராயின் தயவு, இரண்டாம் அக்பருக்கு மிகவும் தேவைப்பட்டது. ராம் மோகன் ராய் அவ்வப்போது காட்டி வந்த இஸ்லாமிய வாஞ்சையும் இந்தத் தயவுத் தேவையில் அடக்கம். இரண்டாம் அக்பரிடம் ராய்க்கு இருந்த நெருக்கத்தை, கிழக்கிந்திய கம்பெனியும், இந்திய மக்களிடையே தமது “இமேஜ்” வளர, மிக அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

    சுதேசி சமயப் பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவதைக் குறைகூறும் அதிருப்தியாளர்களின் வாயை அடைப்பதற்காகத் திட்டம் தீட்டப்படுகிறது. ராம் மோகன் ராய் பிறருக்காகப் பாடுபடுவதாகக் காட்டவும், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் சமயப் பண்பாடுகளைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது என்று மக்கள் நம்புமாறும் ஒரு தந்திர அரசியல் செயல் வடிவம் பெறுகிறது.

    இரண்டாம் அக்பர், தமது பணச்செலவில், ராம் மோகன் ராயை, தமது தூதுவராக பிரிட்டனுக்கு அனுப்புகிறார். அனுப்புமுன், ராம்  மோகன் ராய்க்கு ராஜா என்ற பட்டத்தைச் சூட்டி, இவரே இந்திய நாட்டு மக்களின் மானசீக ராஜா என்பதாக,  “ராஜா ராம் மோன் ராய்” பிரிட்டன் செல்கிறார்.

    உடன்கட்டை ஏறுதலைத் தடை செய்து,  வில்லியம் பென்டிங்க் இயற்றிய Bengal Sati Regulation of 1829 மறுக்கப்படாமல் உறுதி செய்யவேண்டும் என்றும், இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையை (Stipend) அதிகரிக்க வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளுடன் பிரிட்டன் சென்ற ராஜா ராம் மோகன் ராயின் கோரிக்கைக்கு ஏற்ப, பிரிட்டிஷ் அரசும் இரண்டாம் அக்பருக்கான உதவித் தொகையில்  30,000 பவுண்டுகள் சேர்த்து அதிகத் தொகையாக அளிக்க ஆணையிடுகிறது.

    “ராஜா” பட்டத்துடன், ராம் மோகன் ராயின் புகழ் இன்னமும் பெருகுகிறது.

    ராம் மோகன் ராய் கெட்டிக்காரத்தனம்  நிறைந்த அரசியல்  தந்திரவாதி, பணம், புகழ், அந்தஸ்து மட்டுமே அவருக்கு முக்கியம், சுதேசி சமயப் பண்பாடுகளோ, நாட்டின் சுயமரியாதையோ அவருக்கு முக்கியம் இல்லை என்பதற்குப் பற்பல எடுத்துக்காட்டுகள் உண்டு. அவற்றைத் தரவுகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் கேரியுடன் அத்தனை நெருக்கமாகப் பழகினாரோ, பின்னாளில், அதே கேரியுடன் பிணக்கு ஏற்படுகிறது, கேரியின் பாப்டிஸ்ட் கிறித்துவம் தாழ்ந்தது என்றும்  “Unitarianism” எனப்படும் நவீன யூத மதமே உயர்ந்தது என்றும் கேரியைப் பழித்து அதனை ஆதரிக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனியைத் தாண்டி, ஐரோப்பியர்கள் இந்தியாவில் குடியேற்றம் செய்ய – விவசாயம் செய்யவும் ஆதரிக்கிறார். (கிழக்கிந்திய கம்பெனியில்  வேலை பார்த்த வகையில், அவர்கள் இந்தியாவில் ஈட்டிய பெரும் செல்வம் கண்டு பொறாமை பட்டவராக இதைச் செய்ததாக உணர்கிறோம்).

    குழந்தைகள் திருமணத் தடைச் சட்டத்தைக் கொண்டவர் என்ற புகழை ஈட்டுவதில் மட்டுமே அவருக்கு ஆசை இருந்தது; அதனைப் பின்பற்றும் நோக்கம் அவருக்கு இல்லை என்பதும் உண்மை. இவருடைய மகளை, குழந்தையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொடுத்தவர்.

    ஆத்மீய சபா, யூனிடேரியன் கம்யூனிட்டி ஆகியனவற்றையும் தொடங்கி பல்வேறு வகைகளில் தம்மை பிரபலப்படுத்திக்கொண்டவர்.

    இன்று, நம்மிடையே இருக்கும் பல அரசியல்வாதிகளின் தந்திரங்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாக அன்றே ராம் மோகன் ராய் பரிமளித்தார்.

    ஆக, பணம், புகழ், அந்தஸ்துக்காக, அந்நியர்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் இச்சைக்காய் எதனையும் செய்யத் தலைப்பட்டவராகவே ராம் மோகன் ராய் இயங்கி வந்தார்.  சுதேசி சமயம், சுதேசி மொழிகள், சுதேசிப் பண்பாடுகள், பற்றிய அக்கறை இல்லாத அவர்,  அந்நியரைக் குளிரவைத்து, அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவற்றை அவர்களுக்காகச் சாதித்துத் தரவேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்டவர்.  சர்ச்சுகளின் கைக்கூலியாகச் செயல்பட்டு சுதேசி சமயப் பண்பாட்டுக்கு அவர்  செய்து போந்த நாசவேலைகள் பற்பல.

    சொந்த மக்களையும், சுதேசிப்  பண்பாடுகள், மொழி, இலக்கியம், கலை, காவியங்கள், கல்வி என எதனையும் பழிக்கவும் அழித்தொழிக்கவும் அவர் துணிந்தவரானார்.

    துரதிர்ஷ்ட வசமாக, அந்நிய ஆட்சியாளர்களுக்குக் கைக்கூலியாகச் செயல்பட்டவர்கள் மட்டுமே அன்று கவுரவிக்கப்பட்டார்கள். பட்டம், பதவிகள் தந்து உயர்நிலையில் வைத்து,  ஆராதிக்கப்பட்டார்கள் என்ற நிலையில் பிரம்ம சமாஜம் மற்றும் அதனை அடுத்துத் தோன்றிய பிரார்த்தனை சமாஜம் போன்றவற்றின்  சுதேசி சமயப் பண்பாட்டுச் சேவைகள் என்று சொல்லும்படியான விஷயம் இல்லை என்பது தெளிவு.

    இங்கு தான் வள்ளலார் எனும் தனிமனிதர், ஒரு சுதேசி சமயப் பண்பாட்டுப் பாதுகாவலராக எழுகிறார். அவரது  சுதேசி சமய இயக்கம் தோன்றுகிறது. ஆன்மீக உலகில், அது ஒரு விடிவெள்ளிக் காலம்.

    (மேலும் பேசுவோம்)

    Share
  • ஏறன் தமிழ்த்தாய் வாழ்த்து!

    ஏறன் தமிழ்த்தாய் வாழ்த்து!

    ஏறன் சிவா

    சிந்தனை மிகவே தந்தும்;
    சிறுமைகள் விலகச் செய்தும்;
    நிந்தனை செய்தார் பேச்சின்
    நிலைகடந் தேற வைத்தும்;
    சந்தனம் போல் மணக்கும்
    பாடலைத் தாளில் தந்த,
    செந்தமிழ்த் தாயே நின்றன்
    திருவடி வாழ்த்து வோமே!

    அறவொளி; உயிர்கள் மீதே
    அன்பொளி; நமை வளர்க்க
    அறியாமை மறைய வைக்கும்
    அறிவொளி; நாட்டைக் காக்கும்
    மறம்திறம் இரண்டும் ஊணில்
    மனத்தினில் ஊற வைத்த
    நறுஞ்சுவைத் தமிழே நின்னை
    நாளெலாம் வாழ்த்து வோமே!

    உண்மைகள் உணர வைத்தும்;
    உரிமையை உரைக்க வைத்தும்;
    பெண்மையை மதிக்க வைத்தும்;
    பெரும்பொருள் ஆசை பற்றும்
    புன்மைகள் புதைய வைத்தும்;
    பொழுதெலாம் பயனாய்ச் செய்யும்
    வண்டமிழ்த் தாயே உன்றன்
    மலரடி வாழ்த்து வோமே!

    இலையிடை ஆட வைத்தும்;
    இசையிடைப் பாட வைத்தும்;
    மலையிடை மயங்க வைத்தும்;
    மலரிடை மணக்க வைத்தும்;
    சிலையிடை உயிரே உள்ள
    சிலைபோல நிற்க வைத்தும்;
    கலையிடைப் பணிய வைத்த
    கனித்தமிழ் வாழ்த்து வோமே!

    எத்தனை கலைச்செல்வங்கள்!
    எழில்மிகு தோற்றம் கண்டோம்!
    அத்தனை இன்பம் யாவும்
    அருளிய உமக்கெம் ஆவி
    மொத்தமீந் தாலும் சற்றும்
    முற்றாதெம் பற்றே என்று
    முத்தமிழ்த் முகையே நின்னை
    முடிதாழ வாழ்த்து வோமே!

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 10

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 10

    மீ. விசுவநாதன்

    “பக்தர்களின் பிராத்தனை”

    சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள்
    சுருண்டு தவித்த காலம்
    மொட்டுக்கள் மலர்கள் எல்லாம்
    மௌனம் காத்த நேரம்
    சிட்டுக்கள் பெரியோர்கள் கூடி
    சிருங்க கிரியின் யோகி
    பட்டுத்தாள் பணிந்த ழைக்க
    பாரதீதீர் தருமே வந்தார்! (91)

    வான்மழை வேண்டும்; மக்கள்
    மனங்குளிர வேண்டும்; பூஜை
    தேன்மலர்ச் சோலை வேண்டும்;
    தெய்வப்பெண் மீனாள் ஆட்சி
    தானெனும் சிறப்பு வேண்டும்;
    தவத்தோராம் பாதம் பட்டு
    நானெனும் அகந்தை நீங்கி
    நல்மதுரை வாழ வேண்டும்!  (92)

    மக்களின் பிராத்தனை கேட்டு
    மகானும் வழியைச் சொன்னார்!
    தக்கதோர் பூஜையும் செய்தார்;
    தட்டா வானம் கொட்ட
    திக்கெலாம் நீரது பாய
    தெரிந்த பச்சை எங்கும்
    தக்கதோர் செழிப்பினைக் காட்ட
    தரணி மகிழ்ந்த தம்மா!     (93)

    “அன்னை ஸ்ரீ மீனாட்சி தரிசனம்”

    மீனாட்சி சுந்தரர் பார்த்து
    முறையாய் தியானம் செய்தார்!
    ஆனாலும் அவருளே உள்ள
    அன்பு சிவமே பொங்கும்
    தேனாக எதிரிலே நிற்கும்
    தெய்வக் காட்சி என்று
    வானோர்கள் மெச்சிடும் யோகி
    வணங்கி வலமும் வந்தார்!   (94)

    “சொன்னபடி வாழும் யோகி”

    சொன்னால் செய்வார்; தானே
    சொன்ன வண்ணம் வாழ்வார்!
    தன்னால் முடியு மென்ற
    தலைக்க னமிலாப் பண்பால்
    பின்னால் வரும்நல் வம்சம்
    பிழைக்கே ஆளா காமல்
    முன்னோர் சென்ற பாதை
    முறையைப் போற்றி நிற்பார்! (95)

    “கற்றோரை விரும்பும் துறவி”

    தெரியா விபரம் தன்னை
    தெரிவிக்கும் மனிதர் முன்னே
    சரியாய்ச் செவிகள் தீட்டி
    தம்முள்ளே வாங்கிக் கொள்வார்!
    விரிவாய் விளக்கம் சொல்லும்
    வித்வத்மா சபையோர்க் கெல்லாம்
    அரிதாய்ப் பொருள் சொல்லி
    ஆன்றோரை மகிழ வைப்பார்!   (96)

    “குழந்தைகளின் உமாச்சித் தாத்தா”

    இந்தா மாம்பழ மென்று
    எதிரே குழந்தை கையில்
    பந்தா இன்றியே கொஞ்சி
    பச்சை மனத்தை எல்லாம்
    சொந்த மாக்கிடச் செய்வார்
    சூர்ய ஒளிபோல் தூயர்!
    இந்த பாரதீ தீர்த்தர்
    என்று சொல்லு வேனே ! (97)

    “அன்பே சிவமானவர்”

    அன்ன சாலை கட்டி
    அனைவரும் உண்ணச் செய்வார்!
    இன்னும் இன்னும் என்று
    எளியரும் கல்வி கற்கத்
    தன்னால் ஆன மட்டும்
    தரமுடை பாட சாலை
    நன்றாய் ஏற்ப டுத்தி
    நன்மையை ஓங்க வைப்பார்!  (98)

    மாணவ மணிகள் வந்தால்
    மந்திரம் சொல்லச் சொல்வார்!
    நாணமும் , பக்தி யோடும்
    மடமட வென்று கூறி
    ஆணவ மற்று நிற்கும்
    அழுக்கிலா குழந்தை யர்க்கு
    பாணதீர்த் தத்தின் நீராய்
    பாரதீ தீர்த்தர் காப்பார் !  (99)

           “மௌனம்”

    நதிநீ ராடல் இன்பம்;
    நல்லோர் நட்பு இன்பம்;
    உதிக்கும் கதிரோன் இன்பம்;
    உண்மை ஒளியே இன்பம்;
    விதியைப் பார்த்துக் கேலி
    செய்யும் துறவி கொண்ட
    மதியின் தெளிவு இன்பம்;
    மௌனம் மேலாம் இன்பம்!  (100)

    (ஸ்ரீ பாரதீ  தீர்த்த   யாத்திரை    முதல் பாகம் நிறைந்தது)

    Share
  • நாலடியார் நயம் – 27

    நாலடியார் நயம் – 27

    நாங்குநேரி வாசஸ்ரீ

    27. நன்றியில் செல்வம்

    பாடல் 261

    அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
    பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
    பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
    கருதுங் கடப்பாட்ட தன்று.

    அதிகமாய்ப் பழுத்திருந்தாலும் பொரிந்த
    அடி மரத்தையுடை விளாமரத்தை
    அருகிலுள்ளதென எண்ணி
    அண்டாது வௌவால் அதுபோல்
    அருகிலிருப்பினும் பெருமையிலாரின்
    அருஞ்செல்வம் அவரினும் வறியவர்
    அதனால் பயனுறுவர் என நினைப்பதற்கு
    அற்ற தன்மை கொண்டது.

    பாடல் 262

    அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
    கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
    செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
    நள்ளார் அறிவுடை யார்.

    அள்ளிக்கொள்ளத்தக்க சிறு
    அரும்புகள் இருப்பினும் சூடத்தக்கது
    அல்ல எனக் கள்ளிச்செடி மேல்
    ஆர்வமாய் கை வைக்க மாட்டார்
    அதுபோல் பெருஞ்செல்வம்
    அமைந்தவராயினும் அற்பரை
    அவர்தம் செல்வம் பயன்படாதென்று
    அறிவுடையோர் விரும்பிச்சேரார்.

    பாடல் 263

    மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
    வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
    செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
    நல்குவார் கட்டே நசை.

    மிகு அலைகளையுடை கடற்கரையிருப்பினும்
    மக்கள் தோண்டச் சுரக்கும் உப்புச்சுவையற்ற
    கிணற்றுநீரைத் தேடிப்பருகுவர் அதுபோல்
    மிக்க செல்வம் உடையவர் அருகேயிருப்பினும்
    மற்றவர்க்குக் கொடுக்க விரும்பாத அவரை
    விடுத்துத் தூரத்தே சென்று கொடுப்பவரிடத்தில்
    விரும்பிக்கேட்டுப் பெறுவர்.

    பாடல் 264

    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
    உணர்வ துடையார் இருப்ப – உணர்விலா
    வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
    பட்டும் துகிலும் உடுத்து.

    கடல்சூழ் இவ்வுலகில் செல்வத்தின் புண்ணியம்
    கற்ற அறிவுக்குரிய புண்ணியத்தினின்று வேறாம்
    கல்வி அறிவுடையார் ஒன்றுமில்லாது வறுமையுற்றிருக்க
    கல்வியறிவிலா பனவட்டையும் வழுதுணங்காயும்போலும்
    கீழான அற்பர் பட்டும் பருத்தியும் உடுத்தி வாழ்கிறார்களே!

    பாடல் 265

    நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
    கல்லார்க்கொன்று ஆகிய காரணம் – தொல்லை
    வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
    நினைப்ப வருவதொன் றில்.

    வேல் போலும் நீண்ட கண்ணுடையவளே!
    வையகத்தில் அறிவும் பண்புமுடை நல்லவர்
    வறியராய் இருக்கக் கல்லாமதிகெட்டோர் செல்வராய்
    வாழுதலின் காரணம் எப்படி ஆராய்ந்தாலும் பழைய
    வினைப்பயனன்றி வேறொன்றுமில்லை.

    பாடல் 266

    நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
    நீறாய் நிலத்து விளியரோ – வேறாய
    புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
    நன்மக்கள் பக்கம் துறந்து.

    நறுமணமற்ற புற இதழைப்போல
    நல்ல தாமரையில் இருக்கும்
    பொன்னின் பதுமை போலும் திருமகளே! நீ
    பொன்போலே நன்மக்களைத் துறந்து
    கீழ்மக்களைச் சேருகின்றாயதனால்
    இப்புவியில் சாம்பலாகி அழிந்துபோ!

    பாடல் 267

    நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
    பயவார்கண் செல்வம் பரம்பப் – பயின்கொல்
    வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
    நயவாது நிற்கு நிலை.

    வேல் போலும் கண்ணை உடையவளே!
    வழங்கி உதவும் குணமுள்ளோரிடமுள்ள
    வறுமை வெட்கமில்லாததோ? பிறருக்கு
    வழங்காத அற்பரிடம் உள்ள செல்வம்
    விட்டு நீங்காது ஒட்டிக்கொள்ளும் பிசினோ?
    வறுமையும் செல்வமும் ஆகிய இவ்விரண்டும்
    வழங்கும் நல்லவரிடமும் அற்பரிடமும்
    விரும்பத்தகா முறையில் நிற்கும் தன்மைகண்டு
    வியப்பு கொள்வாய் நீ.

    பாடல் 268

    வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
    கலவைகள் உண்டு கழிப்பர் – வலவைகள்
    காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
    மேலாறு பாய இருந்து.

    பேய்த்தனமில்லா மானமுடையவர் வறுமையுற்றபோதும்
    பெருந்தொலைவு நடந்து சென்று சிறுதொழில் செய்து
    பெற்ற கலவைச் சோற்றை உண்டு காலங்கழிப்பர்
    பேய்த்தனமுள்ள இழிகுணமுள்ளோர் வியர்வை
    பெருகி வழிய வீட்டிற்குள் இருந்து உழைப்பின்றி
    பொரிக்கறியுடன் கூடிய உணவைத் தாமே உண்பர்.
    (பேய்த்தனமென்பது இழிதொழில் செய்தலும் பிறரை வருத்துதலையும் குறிக்கிறது.)

    பாடல் 269

    பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
    மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
    வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
    வண்மையும் அன்ன தகைத்து.

    பொன் போலும் நிறமுடை செந்நெற் பயிர்
    பொதிந்திருக்கும் கதிர்களுடன் வாடி நிற்க
    மின்னல் விளங்கும் மேகம் அங்கே
    பொழியாது கடலுள் பெய்துவிடுமதுபோல்
    அறிவற்றார் மிக்க செல்வத்தைப் பெற்றால்
    அவர் கொடையும் அத்தன்மைத்தாம்.

    பாடல் 270

    ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
    ஓதி யனையார் உணர்வுடையார்; – தூய்தாக
    நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
    நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

    பகுத்தறிவில்லாதார் கற்றவராயினும் கல்லாதவரே
    பகுத்தறிவுள்ளோர் கல்லாராயினும் கற்றவரே
    பிறரிடம் தம் வறுமையிலும் இரவாதவர் செல்வந்தரே
    பாவப்பட்ட வறியோர்க்கு உதவாத செல்வந்தரும் வறியவரே.

    Share
  • குறளின் கதிர்களாய்…(304)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(304)

    பொருளானா மெல்லாமென் றீயா திவறும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.

    – திருக்குறள் -1002 (நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்...

    செல்வம் ஒன்றிருந்தாலே
    எல்லாம் கைகூடும்
    என்று எண்ணியே
    அதனை ஈட்டி,
    எளியவர்க்கு
    எதுவுமே ஈயாத
    பற்றுள்ளம் செய்யும்
    மயக்கத்தால்,
    ஒருவனுக்கு
    எதிலுமே நிறைவில்லாத
    பேய்ப்பிறப்புதான் உண்டாம்…!

    குறும்பாவில்...

    எதையும் செய்யலாமென்றே பொருளீட்டி
    அதையெவர்க்கும் ஈயாத பற்றுள்ள மயக்கம்,
    ஒருவனுக்கு நிறைவிலா பேய்ப்பிறப்பே தரும்…!

    மரபுக் கவிதையில்...

    செல்வம் ஒன்றே போதுமதால்
         செய்து விடலாம் எதையுமென
    எல்லா வகையிலும் பொருளீட்டி,
       எவர்க்கு மதனை ஈயாத
    பொல்லாக் குணமதைக் கொண்டேதான்
        பற்றுடன் மயக்க முளவொருன்,
    நில்லா நிறைவுடைப் பேய்ப்பிறப்பை
      நிச்சய மாகப் பெறுவானே…!

    லிமரைக்கூ..

    செல்வம் ஒன்றே சிறப்பு
    என்றே சேர்த்ததை ஈயாதவனுக்கு வருமே
    நிறைவிலாப் பேயாய்ப் பிறப்பு…!

    கிராமிய பாணியில்...

    செல்வஞ்சேரு செல்வஞ்சேரு
    நல்லமொறயில செல்வஞ்சேரு,
    அத
    நல்லவழியில செலவுபண்ணு..

    காசிருந்தா எதயுஞ் செய்யலாமுண்ணு
    கண்டபடி சம்பாதிச்சி அத
    யாருக்கும் கொடுத்துதவாத
    கொணமுள்ள ஒருவனுக்கு
    எதிலயுமே நெறவில்லாத
    பொல்லாத
    பேய்ப்பொறப்புத்தான் கெடைக்கும்..

    அதால
    செல்வஞ்சேரு செல்வஞ்சேரு
    நல்லமொறயில செல்வஞ்சேரு,
    அத
    நல்லவழியில செலவுபண்ணு…!

    Share
  • அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் 

    அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் 

    -மேகலா இராமமூர்த்தி

    கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (Prince Edward Island) ஜான் போப் (John Pope), காத்ரீன் அக்ளோ (Catherine Uglow) இணையருக்கு மகனாக 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் நாள் பிறந்தவர் ஜார்ஜ் அக்ளோ போப் (George Uglow Pope) என்ற இயற்பெயர் கொண்ட ஜி.யூ.போப். அவர் குழந்தையாக இருந்தபோதே அவருடைய குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. அங்குள்ள ஹாக்ஸ்டன் (Hoxton) கல்லூரியில் பயின்ற பிறகு, 1839-ஆவது ஆண்டு தமது 19ஆவது வயதில் கிறித்தவ மதபோதகராகத் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள சாயர்புரத்துக்கு வந்தார் போப்.  

    சாமுவெல் சாயர் எனும் போர்த்துகீசியக் கிறித்தவரது பொருளுதவியால் வாங்கப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட்ட ஊர் ஆதலின் அதற்குச் சாயர்புரம் என்ற பெயர் ஏற்பட்டதாகத் தெரிகின்றது.

    கப்பலில் பயணம் செய்த காலத்திலேயே தமிழைக் கற்றிருந்த போப், சாயர்புரம் வந்தபிறகு ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுஜக் கவிராயர் போன்றோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலும் தம் புலமையை வளர்த்துக்கொண்டார்.

    சாயர்புரத்தில் இருந்த சிறுவர்கள் நன்கு கல்வி பயிலவேண்டும், பல்துறை அறிவும் பெறவேண்டும் என விரும்பிய ஜி.யூ.போப், அவர்களுக்கென்று ஒரு கல்லூரியை அங்கே அமைத்தார். அதிலே சிறந்த ஆசிரியர்களை நியமித்து எல்லாப் பாடங்களையும் மாணவர்கள் கற்க ஏற்பாடு செய்தார். எல்லாக் கலைகளும் அங்கே போதிக்கப்பட்டதுடன், தமிழ், இலத்தீன், ஹீப்ரு, கிரேக்கம் முதலிய மொழிப்பாடங்களையும் மாணவர்கள் தினமும் கற்றனர். இவையல்லாமல் தர்க்கம், கணிதம், தத்துவம் போன்ற பாடங்களும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இவ்வளவையும் சொல்லிக்கொடுப்பதற்குப் பகல்பொழுது போதாமையால் இரவு நேரங்களிலும் வகுப்புகள் தொடர்ந்தன.

    அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடுவதைப் போல் அளவுக்கு அதிகமான பாடச் சுமையால் மாணவர்கள் திணறிப்போனார்கள். விளைவு? சொல்லாமல் கொள்ளாமல் ஒவ்வொருவராகக் கல்லூரியைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இதனால் போப்பும் ஊக்கம் குன்றியவராய்ச் சிலகாலம் வெளிநாட்டுக்கு இளைப்பாறச் சென்றார்.

    இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தமிழகம் திரும்பியவர், தஞ்சை, நீலகிரி, கர்நாடகாவிலுள்ள பெங்களூரு போன்ற பல பகுதிகளில் நெடுங்காலம் தொண்டு புரிந்தார். நீலகிரியிலுள்ள ஊட்டியில் பத்தாண்டுகள் பள்ளியொன்றை நடத்திய போப், அம்மலையில் வாழ்ந்துவந்த தோடர் இனத்தவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். தோடர்களின் மொழியில் பாட்டோ வசனமோ ஏதுமில்லை என்பதைக் கண்டறிந்த அவர், அம்மொழியை ஆராய்ந்து அதன் இலக்கணம் குறித்து நூல் எழுதினார்.

    தமிழிலுள்ள நீதிநூல்களின்பால் ஜி.யூ.போப்பின் கவனம் சென்றது. பள்ளிச் சிறுவர் முதல் பக்குவமடைந்த பெரியோர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றவகையில் பல்வேறு நீதிநூல்கள் தமிழில் நிறைந்திருப்பது கண்டு வியந்த அவர், அவற்றை ஊன்றிக் கற்கலானார். ”நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற ஆன்றோர் மொழியறிந்த அவர், திருக்குறளையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளலானார்.

    ஜி.யூ.போப் காலத்துக்கு முன்பே திருக்குறள் சில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. 1730ஆம் ஆண்டு கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) எனும் இயற்பெயர் கொண்டிருந்த வீரமாமுனிவர் திருக்குறளின் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் இலத்தீனில் மொழிபெயர்த்திருந்தார். காமத்துப்பாலை மொழிபெயர்ப்பது கிறித்தவப் பாதிரிமார்களின் தவவொழுக்கத்துக்கு ஏற்றதன்று எனக்கருதியவர் அதனை மொழிபெயர்க்காது விடுத்தார்.

    பிரெஞ்சு மொழியில், ஈ.எஸ். ஏரியல் (E.S. Ariel) என்பவரால் திருக்குறளின் ஒரு பகுதி 1848இல் மொழிபெயர்க்கப்பட்டது. கார்ல் கிரால் (Karl Graul) என்பவர் 1856ஆம் ஆண்டு திருக்குறளை ஜெர்மன் மொழியில் முற்றாக மொழிபெயர்த்திருந்தார். பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் ஆங்கிலேயர் திருக்குறளின் பதின்மூன்று அதிகாரங்களை மட்டும் மொழிபெயர்த்திருந்தார். ட்ரூ (William Henry Drew) எனும் ஆங்கிலப் பாதிரியார் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலுமாகச் சேர்த்து  63 அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு விட்டிருந்தார். இந்நிலையில் திருக்குறளை முற்றும் ஆய்ந்து அதனை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் ஜி.யூ.போப்பே ஆவார். ’The sacred kural of Tiruvalluva Nayanar’ என்ற தலைப்பில் 1886ஆம் ஆண்டு வெளியீடு கண்ட போப்பின் திருக்குறள் 436 பக்கங்களைக் கொண்டது.

    திருக்குறளை மொழிபெயர்க்கும்போது அதில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துக்களில் சில ஏசுநாதரின் இயல்பை விளக்கும் கருத்துக்களாகப் போப்புக்குத் தோன்றின.

    சான்றாக,
    ”ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
    பொன்றும் துணையும் புகழ்” (குறள்: 156)

    என்ற குறளைப் படித்தபோது, தீயவர்கள் பலர் ஏசுநாதரைத் துன்புறுத்தினார்கள்; கழியால் அடித்தார்கள்; காறி உமிழ்ந்தார்கள். அதனால் அவர்கள் பெற்ற இன்பமோ ஒருநாள் இன்பமே. ஆனால் அச்சிறுமைகளையெல்லாம் பொறுத்திருந்த ஏசுநாதருக்குக் கிடைத்த புகழோ வையமுள்ள அளவும் வாழும் அழியாப் புகழ் என்று எண்ணினார். 

    மற்றொரு குறளில்,

    ”இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்” (குறள்: 314)
    என்று வள்ளுவர் கூறியிருப்பதைக் கண்ட போப், தம்மை இரும்பு ஆணிகளால் கைகளிலும் கால்களிலும் அறைந்து பொறுக்கமுடியாத துயர்விளைவித்த கொடியவர்களிடங்கூட ஏசுநாதர் சினங்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் செய்யும் தீமையை மன்னித்து அருளவே பரலோகப் பிதாவிடம் வேண்டினார். அவ்வகையில் வள்ளுவரின் கருத்து, ஏசுநாதரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கின்றது என்று கருதினார். திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்தபோது அங்குவந்த ஏசுவின் சீடர்களான புனித தாமஸ் (Saint Thomas the Apostle) முதலியோர் செய்த போதனைகளைக் கேட்டுவிட்டே இந்தக் குறட்பாக்களை வள்ளுவர் இயற்றியிருக்கவேண்டும் எனும் பொருள்பட இக்குறட்பாக்களுக்கு விளக்கம் எழுதியிருக்கின்றார்.

    இங்கே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    சிறந்த வாழ்வியல் விழுமியங்களையும் அறக்கோட்பாடுகளையும் வலியுறுத்துகின்ற வளமான இலக்கியச் செல்வங்கள் பல செம்மொழியாம் தமிழில் கிறிஸ்து பிறப்பதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே நம்மிடமிருக்கின்றன. எனவே ஏசுநாதரின் வாழ்க்கையையும் மலைப்பொழிவுகளையும் (The Sermon on the Mount) அவர் சீடர்கள் வாயிலாக அறிந்தே வள்ளுவனார் இவைபோன்ற குறட்பாக்களை யாத்தார் என்று ஜி.யூ.போப் உரைப்பது அவருடைய கிறித்தவ மதப் பற்றின் காரணமாகவே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

    ஜி.யூ.போப், வள்ளுவரை தாமசின் சீடராகக் கருதி மகிழும் அதே வேளையில், கமில் சுவலபெல் (Kamil Václav Zvelebil) எனும் செக் (Czech) நாட்டுப் பன்மொழி அறிஞர், திருக்குறளில் பேசப்படும் கொல்லாமை, புலால்மறுத்தல் முதலிய கருத்துக்களை நோக்குகையில் இந்நூல் கிறித்தவ மத அறக்கருத்துக்களைவிட சமணக் கருத்துக்களுக்கே அதிக நெருக்கமாயிருப்பதுபோல் தோன்றுகின்றது என்கிறார்.

    தம்முடைய திருக்குறள் மொழிபெயரப்பைத் தொடர்ந்து 1893ஆம் ஆண்டு நாலடியாரை ’The Naladiyar Four hundred quatrains in Tamil’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் ஜி.யூ.போப். அந்நூலின் ஆராய்ச்சி முன்னுரையில், இந்நூல் சமண முனிவர்களால் எழுதப்பட்டது என்பதையும், இதற்கு ’வேளாண் வேதம்’ எனும் மற்றொரு பெயர் இருப்பதையும் குறிப்பிடும் போப், பல நல்ல வாழ்வியல் விழுமியங்களை அழகிய உவமைகளோடும் அரிய உண்மைகளோடும் இந்நூல் விளக்குகின்றது என்பதைப் புலப்படுத்துகின்றார்.

    இந்நூலில் காணப்படும் சிறந்த செய்யுட்களில் ஒன்றாகக்

    ”கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளிதின்
    ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து”
    (நாலடி – 135) என்பதைக் குறிப்பிடுகின்றார்.

    அத்தோடு நில்லாமல், இந்நூலின் இலக்கண அமைப்பையும் ஆராய்ந்து இதிலுள்ள நானூறு செய்யுட்களில் 300 செய்யுட்கள் நேரிசை வெண்பாவிலும், மீதமுள்ள 100 செய்யுட்கள் இன்னிசை வெண்பாவிலும் இயற்றப்பட்டுள்ளன என்பதையும் வெண்பாவிற்கான அசை, சீர், தளை ஆகியன குறித்தும் அவற்றை அலகிட்டு அறிவது எப்படி என்பது குறித்தும் மிக விரிவாக விளக்கியிருப்பதைக் காணும்போது தமிழிலக்கியத்தில் மட்டுமல்லாது இலக்கணத்திலும் போப்புக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் புலமையையும் நாம் அறியமுடிகின்றது.

    ஜி.யூ.போப் ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டுகளின் முடிமணியாகக் கருதப்படுவது அவருடைய  திருவாசக மொழிபெயர்ப்பே ஆகும். ’திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது திருவாசகத்திற்கான தனிச்சிறப்பு. அத் திருவாசகம் போப்பையும் ஈர்த்ததில் வியப்பேதுமில்லை.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த காலமது. அப்போது அவருடைய வயது 77. திருவாசகத்திலுள்ள 658 பாடல்களையும் ஆராய்ந்த போப், அதன் பக்திச்சுவையில் பெரிதும் ஈடுபட்டு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கியிருந்தார். ஒருநாள் மாலைவேளை  தம்மோடு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நண்பரிடம் திருவாசகப் பாடல்களின் சிறப்பைக் குறித்துப் போப் தெரிவித்தபோது, கண்டிப்பாக இந்த நூலை நீங்கள் முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும் என்று அந்த நண்பர்  கூறியிருக்கின்றார்.

    ”இந்த முதிர்ந்த வயதில் என்னால் அப்பணியை முழுமையாக முடிக்க இயலுமா தெரியவில்லையே நண்பரே! நான் சாகாவரம் பெற்றவனில்லையே!”  என்று வருந்திக்கூறிய போப்பை நோக்கிய அந்த நண்பர், ”அறிஞரே! ஒரு பெரிய வேலையைத் தொடங்கி நடத்துவதுதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய ஒரே வழி! அவ்வேலை முடியுமளவும் உயிர் இருந்தே தீரும்!” என்று உறுதிபடக் கூறியிருக்கின்றார்.

    அவருடைய வாக்கையே வேத வாக்காக ஏற்றுக்கொண்ட போப், மூப்பின் காரணமாகத் தம்முடல் தளர்வுறும்போதெல்லாம் நண்பரின் மொழியை நினைந்து ஊக்கமும் உற்சாகமும் பெற்று மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடலானார். தம்முடைய 80ஆவது பிறந்தநாளன்று திருவாசகத்தை வெற்றிகரமாக அச்சிட்டு வெளிப்படுத்தினார் என்பதை அறியும்போது நாம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒருங்கே அடைகின்றோம்.

    மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பாக ஜி.யூ.போப்பின் திருவாசக மொழிபெயர்ப்பு  அமைந்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை. எனினும், மாணிக்கவாசகர் தம் பாடல்களில் மிகவும் சாமானிய மானுடனின் பலவீனமான மனநிலையில் தம்மை வைத்துக்கொண்டு, வெளிப்படுத்தியிருக்கும் அனுபவங்கள் சிலவற்றை மாணிக்கவாசகரின் சொந்த அனுபவங்களாகவே கருதி ஜி.யூ.போப் மொழிபெயர்த்திருப்பது சற்று நெருடலை ஏற்படுத்தவே செய்கின்றது.

    தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த அருளாளர்களின் இயல்பை, அவர்களின் பாடல்களில் பொதிருந்திருக்கும் ஆழ்ந்த உட்பொருளை அயல்நாட்டைச் சார்ந்த ஒருவர் சிற்சில இடங்களில் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமற் போனதில் குற்றமொன்றுமில்லை. ஆதலால் போப்பின் திருவாசக உரையில் காணப்படும் இவைபோன்ற சிறிய குறைபாடுகளை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. மற்றபடி இதைவிடச் சிறந்தவகையில் திருவாசகத்தை ஆங்கிலேயர் ஒருவர் மொழிபெயர்க்க இயலாது என்றே கூறலாம்.  

    திருவாசகத்தின்மீது தீராக் காதல் கொண்டுவிட்ட போப், தமிழகத்தில் யாருக்குக் கடிதம் எழுதினாலும் திருவாசகப் பாடலொன்றை எழுதியபின்பே கடிதத்தைத் தொடங்குவதைத் தம் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் அவ்வாறு ஒருமுறை அவர் தம் நண்பருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தபோது தாம் எழுதிய திருவாசகப் பாடலின் கருத்திலே உள்ளம் உருகிக் கண்ணீர் பெருக்கிவிட, அக்கண்ணீர்த்துளிகள் கடிதத்தில் விழுந்துவிட்டதாகவும் எனினும்  அக்கடிதத்தைக் கசக்கி எறிய  மனமற்றவராய் அதனை அப்படியே தம் நண்பருக்கு அனுப்பினார் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் பலரும் அஃது எந்தத் திருவாசகப் பாடல் என்பதைக் குறிப்பிடுவதில்லை. இக்கருத்து உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு நமக்கு வேறு சான்றுகளும் கிட்டவில்லை. எனவே இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஜி.யூ.போப்பின் பிற தமிழ்ப் பணிகளில் குறிப்பிடத்தக்கவை:  புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு ஆகியவற்றைப் பதிப்பித்தமை, தமிழ் இலக்கணத்தை ’Elementary Tamil Grammar’ என்ற பெயரில் 3 பாகங்களாக எழுதியமை, தமிழ் அறிஞர்கள், தமிழ்த் துறவிகள் போன்றோர் குறித்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை போன்றவை.

    தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய ஜி.யூ.போப் 1908ஆம் ஆண்டு தம்முடைய 88ஆம் அகவையில் மறைந்தார். இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் (St Sepulchre’s Cemetery) அவருடைய கல்லறை உள்ளது.

    தாம் இறந்தபிறகு தம்முடைய கல்லறையில் ”நான் ஒரு தமிழ் மாணவன்” என்று பொறிக்கப்பட வேண்டும் என ஆசைப்பட்டிருக்கின்றார் போப். அதற்கு ஆதாரமாக, ”Whenever I die, a student of Tamil will be inscribed on my monument” என்று, ஜி.யூ.போப், ”சித்தாந்த தீபிகை” எனும் திங்களிதழின் ஆசிரியரான  நல்லசாமிப் பிள்ளை என்பவருக்கு, 1900ஆவது ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, எழுதிய கடிதம் திகழ்கின்றது. ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை.

    அதனால் என்ன?

    ஜி.யூ.போப் தமிழுக்கு ஆற்றியிருக்கும் அளப்பரிய பணிகளுக்காகவும் அருந்தமிழ் நூல்கள் மூன்றனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் பெருஞ்சாதனைக்காகவும் அவருடைய பெயரைத் தமிழ்மக்கள் தம் நெஞ்சில் எழுதிவைத்து என்றும் போற்றுவர்!

    **********************************

    கட்டுரைக்கு உதவியவை

    1. https://en.wikipedia.org/wiki/George_Uglow_Pope

    2. கிருஸ்தவத் தமிழ்த்தொண்டர் – ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல்., எஸ்.ஆர். சுப்பிரமணியப் பிள்ளை பப்ளிஷர்ஸ், திருநெல்வேலி.

    3. https://archive.org/details/tiruvalluvanayan00tiruuoft

    4. https://archive.org/details/Naladiyar/page/n13/mode/2up

    5.. https://archive.org/details/tiruvacagamorsac00maniuoft/page/xxiv/mode/2up

     

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்

    அண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்

    ஒவ்வொரு புயலின்போதும் ஏற்படும் சேதங்கள் கணக்கில் அடங்கா. முக்கியமாக, மின் கட்டுமானம் முழுவதுமாகச் சிதைகிறது. மின் கம்பங்கள் முறிந்து விழுகின்றன. மின் வடங்கள் துண்டிக்கப்படுகின்றன. மக்களும் அரசும் இதர அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். இந்தப் பின்னணியில், புயலை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான யோசனைகளை முன்பே நான் கூறியுள்ளேன். இந்தப் பதிவில், மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம் கொடுப்பதன் மூலம் புயல் சேதத்தைக் குறைக்க, என் யோசனைகளைத் தெரிவித்துள்ளேன். இது, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நுண்ணறிவு நகர்களாக மேம்படுத்தவும் பயன்படும்.

     

    இதுகுறித்து மின்பொறியாளர்களின் கருத்துகளை அறிய, ஆவலாக உள்ளேன். அன்பர்கள், இதனைப் பார்த்து, உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுகிறேன்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 19

    பழகத் தெரிய வேணும் – 19

    நிர்மலா ராகவன்

    (எனக்கு எல்லாம் தெரியுமே!)

    எல்லாம் அறிந்தவன் இறைவன் மட்டும்தான் எனில், நமக்குத் தெரியாததை எண்ணி விசனம் கொள்வானேன்! இந்த விவேகம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?

    கதை

    ‘எனக்கு எல்லாம் தெரியும்!’ என்று இறுமாப்புடன் கூறுவான் விட்டல்.

    நிறைய விஷயங்கள் அவனுக்குப் புரியாமல் இருக்கும். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் அவனுக்குக் கிடையாது.

    எப்படியோ சுமாரான பதவி ஒன்றில் அமர்ந்தபின், தன்னைவிட வித்தியாசமானவர்கள் எல்லாரையும் குறை கூறி, அதில் பெருமிதம் அடைவான்.

    பிறர் சொல்வதைக் கேட்பது விட்டலைப் போன்றவர்களுக்குப் பிடிக்காத சமாசாரம்.

    தன் அறிவை வெளிக்காட்டும்வண்ணம் தானே அதிகம் பேசுவார்கள்.

    ஒருவர் கேட்கும் கேள்வியிலிருந்து அவரது ஆற்றலைப் புரிந்துகொள்ளலாம்.

    கதை

    என்னுடன் பணிபுரிந்த பத்மா இருபது ஆண்டுகளுக்குப்பின் என்னைச் சந்தித்தாள்.

    “இப்போதெல்லாம், நீ உன் தலைமயிரைக் கடையில் perm செய்து, சுருட்டையாக்கிக்கொள்கிறாயா?!” என்று கேட்டாள்.

    “இல்லையே!”

    “இல்லை. நீ அப்படித்தான் செய்துகொள்கிறாய்!”  என்று பிடிவாதம் பிடித்தாள்.

    “இயற்கைதான்,” என்று நான் மறுத்தேன்.

    மீண்டும் சொன்னதையே சொன்னாள்.

    அவர்கள் சொல்வதுதான் சரியென்று வீண்விவாதம் புரியும் குணத்தை SPLITTING THE HAIR என்கிறார்கள்.

    ‘நான் சொல்வதுதான் சரி. எல்லாரும் அப்படித்தானே சொல்கிறார்கள்!’ என்பவர்கள், ‘நாம் சுயமாகச் சிந்தித்து, இருக்கிற சொற்ப மூளைக்கும் வேலை கொடுப்பானேன்!’ என்பதுபோல் நடப்பவர்கள்.

    பொறுமையிழந்து, “சரி. அப்படியே வைத்துக்கொள்!” என்று முடித்தேன்.

    விவேகமானவர்கள் யார்?

    1. பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனிப்பவர்கள். பிறரது கருத்து சரியென்றுபட்டால் ஏற்பார்கள். இல்லாவிட்டால், எங்கே தவறு, அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று அவர்கள் யோசனை போகும்.

    “நான் பெரிய அறிவாளி அல்ல. எனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும்வரை விலகுவதில்லை” (ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்).

    2. பிறரை மதிப்பவன்

    தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவரிடம் ஒரேயடியாகப் பணிந்து, கீழான நிலைகளில் உள்ளவர்களை அலட்சியமாக நடத்துவதும் கிடையாது. இதற்கு தன்னைத்தானே மதிக்கும் குணம் அவசியம். இப்படிப்பட்டவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

    எவ்வாறு கற்கலாம்?

    பிறருடைய தவறுகளிலிருந்து கற்பதைவிட, சொந்த வாழ்க்கையிலிருந்தே நிறைய கற்க முடிகிறது.

    வாழ்க்கைப் பாதையில் சிலர் தகாத முறையில் நம்மை நடத்தியிருப்பர். எவ்வளவோ இழிசொற்களையும் அவமரியாதையையும் தாங்க நேர்ந்திருக்கும். கடந்ததைப் பற்றியே நினைத்து, நினைத்து, வருத்தமும் ஆத்திரமும் கொண்டிருந்தாற்போல் அவை மாறிவிடுமா? அவற்றிலிருந்து கற்கலாம்.

    கதை

    ஆரம்பக்கால ஆசிரியப் பயிற்சியின்போது எனக்கு அறிமுகமானவள் ராதா. ஒருமுறை, அவள் கூறிய ஏதோ கருத்தை நான் ஏற்கவில்லை.

    அவளுக்கு வந்ததே கோபம்! கண்டபடி கத்தினாள். நான் பயந்து, விலகினேன்.

    பல வருடங்களுக்குப்பின், இன்னொரு பயிற்சியின்போது அவளும் நானும் ஒரே வகுப்பில் இருக்க நேர்ந்தது. அவளுடைய சுபாவம் புரிந்து, நான் ஒதுங்கிப் போனேன்.

    வகுப்பு நடக்கும்போது, நான் விரிவுரையாளரை ஏதாவது கேட்டால், அதைத் தடுக்க நினைப்பவளாக, `நிர்மலா!’ என்று அவளிடமிருந்து கண்டனக் குரல் எழும்.

    பல முறை பொறுத்துப் போனேன். இறுதியில், அவள் பக்கம் திரும்பி, “Shut up!” என்றேன், மெதுவாக.

    அது போதாதா அவளுக்கு! வகுப்பு முடிந்ததும், என்னுடன் சண்டைக்கு வந்தாள்.

    “என்னை Shut up என்றாய்,” என்றாள் குற்றம் சாட்டுவதுபோல்.

    “ஆமாம். சொன்னேன்,” என்றேன் அமைதியாக.

    “நான் உன்னை அப்படிச் சொன்னால்?” என்றாள்.

    “சொல்லிவிட்டுப்போ!” என்றேன் அலட்சியமாக.

    “நான் அப்படியெல்லாம் கீழ்த்தரமாகப் பேசமாட்டேன்”.

    “சரி. பேசாதே!”.

    மீண்டும் ஆரம்பத்திலிருந்து, அதே வார்த்தைகள்.

    “நீ என்னை ஷட் அப் என்று சொன்னாய்!” என்றுவிட்டு, “நீ என்னை விலக்குகிறாய்!” என்று கத்தினாள்.

    நம்மை இழிவுபடுத்தியவர்களை மீண்டும் சந்திக்க நேரும்போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று தோன்றிவிடும்.

    “இப்படியெல்லாம் வரும் என்று எனக்குத் தெரியும்,” என்றேன்.

    அவள் தன் குரலை எவ்வளவு உயர்த்தியபோதும், நான் நிதானத்தை இழக்காமல் பேசினேன்.

    இன்னும் என்ன பேசுவது என்று புரியாது, என்னைத் தாக்கிவிடுபவள்போல் மிக அருகில் வந்தாள். எங்களிருவருக்கும் இடையே இருந்த இடைவெளியைத் தன் கரத்தால் வெட்டி, அவளைத் தடுத்து நிறுத்தினார் ஒரு சீனர்.

    பிறகு, “இவள் ஏன் இப்படி தரக்குறைவாக நடந்துகொள்கிறாள்!?” என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

    நான் எதுவும் சொல்லவில்லை.

    அவள் தன்னைப் பற்றி ஒரேயடியாக அளக்க, அடிமைகளாக இருவர் அவள் பின்னால் நடந்தனர். சம்பவம் நடந்த முதல் நாள் அவர்கள் என்னுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க (நான் அழைக்காமலேயே) வந்துவிட்டதில் அவளுக்கு ஆத்திரம் – தன் தலைமைக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று.

    அதன்பின், நான் என்ன செய்தாலும் அதையே பின்பற்றினாள்!

    தூண்டப்பட்ட அறிவு

    கல்லூரிப் பயிற்சியின்போது, எப்படியெல்லாம் ஒரு நல்ல, திறமையான ஆசிரியர் இருக்கவேண்டும் என்று தினமும் சொல்லிக் கொடுத்தார்கள்.

    ஓர் இளைஞன் பொறுமையை இழந்தான். “புத்தகத்தில் படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் சொல்லிக் கொடுக்கிறபடி எல்லாம் நடக்க முடியுமா? நேரம் கிடைக்குமா?” என்று விவாதம் செய்தான்.

    விரிவுரையாளர் பொறுமையாக, “ஒருவருக்கு நல்லவராக இருப்பது எப்படி என்று கற்பித்தால், அவர் எளிதில் கெட்டுப் போகமாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்று பதிலளித்தார்.

    என்னிடம் அவர் கேட்டார்: “உங்களிடம் ஒரு மாணவன் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறான். அதற்குப் பதில் தெரியாவிட்டால், என்ன செய்வீர்கள்?”

    “தெரியாது என்று சொல்வேன்”.

    “முட்டாள் என்று உங்களை நினைத்துக்கொள்ளமாட்டானா?”

    “எப்போதுமே அப்படிச் சொல்லமாட்டேனே! பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, பிறகு சொல்வேன்”.

    பிரமிப்புடன், “நீங்கள் மிக நல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்க வேண்டும்!” என்றார்.

    பெருமையாக உணர்ந்தேன். என்னைத் திட்டித் திட்டி வழிநடத்திய ஆசிரியைகளை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

    புதிய இடங்களில், நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தால், மௌனமாக இருந்துவிட்டால் தப்பித்தோம். இல்லாவிட்டால், நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டும் வகையில் ஏதாவது உளற நேரிடும்.

    சிறக்க வேண்டுமானால், சில சமயம் சறுக்கவும் செய்வோம். அப்போது குன்றிப்போய்விடலாமா?

    (மேலும் தெரிந்துகொள்வோம்

    Share
  • தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா

    தர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது அமெரிக்கா ஜனநாயகத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது. அமெரிக்க அரசியல் ஊழல் இல்லாதது, அமெரிக்க அரசியல்வாதிகள் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள் என்ற எண்ணம் இருந்தது.  இப்போது அந்தக் காலம் மலையேறிவிட்டதுபோல் தெரிகிறது.

    நான் அடிக்கடி சொல்வதுபோல் அமெரிக்க ஜனாதிபதியாவதற்குச் சில தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர் விவாகரத்து செய்துகொண்டவராக இருக்கக் கூடாது; உலக சரித்திரம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்; நல்ல புத்தி கூர்மையுள்ளவராக இருக்க வேண்டும்; ஆலோசகர்கள் இருந்தாலும் அவர்கள் கூறுவதைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்; நாட்டை நல்ல முறையில் வழிநடத்தத் தெரிந்திருக்க வேண்டும். இப்போது ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப்பிடம் இதில் எந்தக் குணங்களும் இல்லையென்பதோடு இவற்றுக்கு நேர்மாறான குணங்கள் நிறைய இருக்கின்றன. இவருக்கு உண்மை பேசத் தெரியாது என்பதோடு பொய் பேசுவதில் வல்லவர். பதவியேற்றதிலிருந்து எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுக் கூறியிருந்தது. அது ஆயிரக் கணக்கில் இருக்கிறது.

    அமெரிக்க ஜனாதிபதி விவாகரத்து செய்துகொண்டவராக இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. டிரம்ப் மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் என்பதோடு பல பெண்களோடு வேண்டத்தகாத உறவில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ‘நீங்கள் என்னென்ன புத்தகங்கள் படித்திருக்கிறீர்கள்?’ என்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு ‘பைபிள்’ என்று பதில் சொன்னாராம். அவர் படித்ததாகச் சொன்ன ஒரே புத்தகமான பைபிளிலிருந்துகூட எதையும் சொல்லத் தெரியவில்லை.

    மே 26, 2020 அன்று ஜனாதிபதிப் பதவிக்கு வேட்பாளராக ஜனநாயகக் கட்சி தேர்ந்தெடுக்கப் போகும் பைடன் வாய் குழறி, டிரம்ப்பை ஒரு முட்டாள் என்று கூறிவிட்டார்.  அது எதில் போய் முடியப் போகிறதோ என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  அவர் சொன்னது முற்றிலும் சரி.  டிரம்ப் ஒரு முட்டாள்தான்.  நினைத்த நேரம் நினைத்ததைப் பேசும் ஒரு கோமாளி. ஒரு நாட்டின் தலைவர், அதிலும் உலகிலேயே வலிமை வாய்ந்த, பணக்கார நாடான அமெரிக்காவின் தலைவர் இப்படிப் பேசும்போது தர்மசங்கடமாக இருக்கிறது.

    டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்குத் தகுந்த மனைவி என்றாலும் ஒரு ‘முதல் பெண்’ணிற்கு (First Lady) உரிய தகுதி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.  இவர் கடந்துவந்த பாதை அப்படிப்பட்டது. மாடலாக இருந்தவர்; தன் உடலைப் பலவகையில் காட்டித் தொழில் நடத்தியவர். இவர் ‘முதல் பெண்’ என்றால் மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இப்படிப்பட்ட மனைவி உடைய ஒருவரை அமெரிக்க மக்கள் எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை. 

    இன்னும் 40% மக்களிடம் டிரம்ப்புக்கு ஆதரவு இருக்கிறது என்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவ ஆரம்பித்தபோது, ‘அது ஒன்றுமே இல்லை.  தானாக மறைந்துவிடும்’ என்று சொன்னார்.  இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பது உண்மைச் செய்தி இல்லை என்கிறார். மலேரியாக் காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் மருந்தை கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களும் உட்கொள்ளலாம் என்றார். பின் தானே அதைச் சாப்பிடுவதாகவும் கூறினார்.

    இவரை விட்டுவிடுவோம். இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் இவருக்கு இன்னும் மக்களிடையே ஆதரவு இருக்கிறதாம். அடுத்த முறையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.  இது என்ன கொடுமை என்று தெரியவில்லை. அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்களும் இவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டு இவர் பின்னால் செல்லத் தயாராக இருக்கிறார்களாம். இந்தியாவில்தான் எல்லாக் கட்சி உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் கட்சித் தலைவரின் கட்டளையை அப்படியே பின்பற்றுவார்கள். அப்படிச் செய்யாவிட்டால் அந்தக் கட்சியில் அவர்களால் இருக்கவே முடியாது. அ.தி.மு.க. உறுப்பினர்களும் அமைச்சர்களும் சந்தனப் பேழை அம்மையார் காலில் அல்லவா விழுந்தார்கள். இவர்கள் யாரும் சுயமாகச் சிந்திப்பதில்லை.

    அமெரிக்காவிலும் இரண்டு கட்சிகளுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்படிதான் உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. குடியரசுக் கட்சி இடதுசாரிக் கட்சி என்று பெயர் வாங்கியிருக்கிறது. இக்கட்சி உறுப்பினர்கள் பொதுவாக இடதுசாரிக் கொள்கைகளை உடையவர்களாக இருப்பார்கள். ஆனாலும் முழுக்க முழுக்க இடதுசாரிக் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் அவர்கள் நடுநிலைமை வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்; அல்லது வலதுசாரிக் கொள்கையுடையவர்களாகவும் இருப்பார்கள். இதே மாதிரித்தான். குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலதுசாரிக் கொள்கைகளைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை.

    இப்போது டிரம்ப் பதவிக்கு வந்த பிறகு குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் ட்ரம்ப்பின் பின்னால் போகிறார்கள்.  அவர் சொல்வது சரியென்று நினைக்கிறார்கள்.  ட்ரம்ப்பிற்கு மக்களிடம் இன்னும் ஆதரவு இருக்கிறது, அவருக்கு ‘ஆமாம் சாமி’ போடாவிட்டால் மக்களிடம் தங்களுக்கு ஆதரவு கிடைக்காது, அதனால் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது என்று நினைப்பதுபோல் தெரிகிறது. அமெரிக்க அரசியல்வாதிகள் தாங்களாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள் என்று நினைத்ததெல்லாம் இப்போது பொய்யாகிவிட்டதுபோல் இருக்கிறது.  சில சமயங்களில் தங்கள் நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்வதில் நம் இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சிவிடுவார்கள் போல் தெரிகிறது.

    டிரம்ப்பின் காலில் விழும் அளவுக்குப் போகாவிட்டாலும் அவர் சொல்வது எதையும் எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவர்களுக்குத் துணிச்சல் இல்லை; அவரைப் பதவியிறக்கம் செய்ய ஜனாதிபதிக் கட்சி கீழவை உறுப்பினர்கள் முயன்றபோது குடியரசுக் கட்சி செனட்டர்கள் யாரும் ஓட்டளிக்கவில்லை. அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஜெயிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதால்தான் இப்படிச் செய்தார்கள் என்கிறார்கள். தங்களுக்காவே வாழும் இந்த அரசியல்வாதிகளைப் பார்த்து அயர்ச்சி ஏற்படும் அதே சமயம், நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த நம் அண்ணல் காந்தி மகான் பிறந்த மண்ணில் பிறப்பதற்கு என்ன தவம் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் பிறந்து மனத்தில் சொல்லவொணாத ஆறுதல் பிறக்கிறது.

    Share
  • செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

    செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு.
    ramachandran.ta@gmail.com

    உலகச் சிறுகதை வரலாற்றில் மலரின் வாசனையாக மணந்து நிற்பவர் ஆண்டன் செகாவ். தமிழ் எழுத்தாளர்கள் க.நா.சு, தி.க.சி, பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் உள்பட மேலும் பலர் இவரைப் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ள நிலையில் செகாவின் முழு வரலாற்றையும் இலக்கியமாகக் கூறுகிறது இந்நூல். இதனை எஸ். ரா என்று அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

    ஆண்டன் செகாவின் குழந்தைப் பருவம் இயல்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவரின் பள்ளிப் படிப்பும் குடும்பச் சிக்கலும் யதார்த்த சமூகச் சூழலும் பிற்கால வாழ்க்கைச் சிந்தனையைக் கட்டமைத்தன. குழந்தைப் பருவமே ஒரு மனிதனை உருவாக்கும் என்பதற்கு இவரின் வாழ்க்கை, சிறந்த உதாரணமாகும்.

    ஆண்டன் செகாவ் தனது வாழ்க்கையை இரண்டு தளங்களில் பிணைத்துக் கொண்டார். ஒன்று அவரின் மருத்துவப் பணி. மற்றது இலக்கியப் பணி . இதனைச் செகாவ் ‘மருத்துவம் எனது மனைவி’ என்றும் ‘இலக்கியம் எனது காதலி’ என்றும் கூறியுள்ளார்.

    செகாவின் இத்தகைய வாழ்க்கையை மிகைபடாமல் யதார்த்தமாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இவரின் வாழ்வியல் தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது கூடுதல் வலிமை சேர்க்கிறது. 1890ஆம் ஆண்டுகளின் ரஷ்யாவையும் அம்மக்களின் வாழ்வியல் மாற்றங்களையும் இதனூடாகக் காண முடிகிறது. மேலும் மிகத் தெளிவான வாசிப்பு அனுபவத்தையும் வழங்குகின்றது.

    செகாவின் ஆளுமை என்பது பன்முகத்தன்மைக் கொண்டதாக இருந்துள்ளதை மிக நேர்த்தியாகக் கூறியுள்ளார். பள்ளி நாட்களில் நாடகத்தின் மேல் அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. என்றாலும் சிறுகதை எழுத்தாளராகவே அறியப்பட்டார். பிறகு நாடக முயற்சியில் ஈடுபட்டு முதலில் தோற்றாலும் பிறகு புகழ் பெற்ற நாடகங்களை எழுதி, புகழின் உச்சங்களைத் தொட்டார்.

    செகாவின் தந்தை, உலகின் விளிம்பு நிலை மக்களின் துன்பங்களை உணரும் வாழ்வியல் சிந்தனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் காரணமாக ஏழைகள், உழைப்பாளர், பணமற்றவர், விவசாயிகள் இவர்களின் மருத்துவர் என்று பெயரெடுத்து இயல்பான வாழ்க்கையில் இருந்து புறக்கணிக்கப்பட்ட சூழல் நிலையை எடுத்துரைக்கிறது இந்நூல்.

    அனைத்துச் சகிப்புத்தன்மைகளோடும் விட்டுக் கொடுத்தலோடும் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் அவமானம், ஏமாற்றம், இழப்புகள் என்று வாழ்க்கையின் வெறுமைக்கே சென்றுவிட்டவர் செகாவ்.

    காசநோயால் பாதிக்கப்பட்டாலும் அதனைப் பற்றி ஒருபோது கவலைப்பட்டதில்லை. ஆனால் வாழ்க்கையில் அவர் சந்தித்த முரண்பாடுகளும் மனைவியின் புறக்கணிப்பும் அவருக்கு மனத்தளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    சமகாலத்தில் வாழ்ந்த டால்ஸ்டாய், புனின் போன்றவர்களின இலக்கியப் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தளத்தில் இயங்கினார் செகாவ். டால்ஸ்டாய் – செகாவ் உரையாடலை அற்புதமாகப் பதிவு செய்துள்ளார் எஸ்.ரா. செகாவின் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்கள் ரஷ்யாவின் சமூக முரணையும் ஏற்றத் தாழ்வையும் மாறி வரும் சமூகப் போக்கையும் விரிவாக எடுத்துக் கூறின.

    காலரா நோயால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, ஏழை மக்களைப் பாதுகாக்கத் தீவிரமாகச் செயல்பட்ட அவரின் மனித நேயப் பண்பையும் ஷகிலின் தீவில் தண்டனைக் கைதிகள் கொடூரமாக நடத்தப்படுவதைக் கேட்டு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்து, அரசுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதியதும் இந்நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

    மனிதநேயத்தை நோக்கிய செயல்பாடாகத் தனது கதைகளை முன்னெடுத்த செகாவ், மனித குலம் இருக்கும் வரை வாழ்ந்து வருவார். உலகச் சிறுகதையின் தந்தை செகாவ், தனது எழுத்துகளால் வாழ்க்கையின் அடிநாதத்தைப் பிடித்து, அன்பெனும் பேரிசையை மீட்டிய கதை இது. அனைவரும் படிப்போம், வாழ்க்கையின் சாரத்தை உணர்வோம்.

    Share
  • கவிதை என்பது யாதெனின்

    கவிதை என்பது யாதெனின்

    சி. ஜெயபாரதன், கனடா

    சொன்னதைச் சொல்லும்
    கிளிப் பிள்ளை போல்.
    சொல்லாமல் சொல்லும்
    ஊழ்விதி போல்.
    மெல்லச் சொல்லும்
    செவிட்டுக் காதில்.
    ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும்
    நெஞ்சினில்.
    உரக்க இடிக்கும் முழக்கி
    முரசு போல்!
    அலை அலையாய்க் காதில் அடிக்கும்
    ஆலயமணி போல்.
    அசரீரி போல் சொல்லும்
    வானிலிருந்து.
    உன் எதிரே கூசாமல்
    உரைக்கும்.
    பைக்குள் இருந்து
    குரான், பைபிள், குறள் போல்
    வழிகாட்டும்.
    குத்தூசி போல் புகுந்து
    உடல் நோய்க்கு மருந்து தரும்.
    தூங்கும் ஆத்மாவை எழுப்பி
    தூங்காமல் வைக்கும்.
    ஆத்மாவின்
    ஆணி வேரை அசைக்கும்.
    சொல்லிச் சொல்லிக்
    கொல்லும்.
    சொல்லாமல் கொல்லும்
    உன்னைக்
    கொல்லாமல் கொல்லும்.
    கொன்றபின்
    உயிர்ப்பித்து எழுப்பும் உன்னை
    புதுப் பிறவியாய்!

    Share
  • நாலடியார் நயம் – 26

    நாலடியார் நயம் – 26

    நாங்குநேரி வாசஸ்ரீ

    26. அறிவின்மை

    பாடல் 251

    நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
    பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; – எண்ணுங்கால்
    பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
    கண்ணவாத் தக்க கலம்.

    பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு இழந்த
    பேடியும் கண் விரும்பிக் காணத்தக்க அணிகளை
    அணியாளோ? ஆராய்ந்தால் நுட்பமான
    அறிவின்மையே உண்மையில் வறுமையாம்
    அது உடைமையே மிகப்பெரும் செல்வமாம்.

    பாடல் 252

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
    அல்லல் உழப்பது அறிதிரேல் – தொல்சிறப்பின்
    நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
    பூவின் கிழத்தி புலந்து.

    பலவித நிறைந்த கேள்விகளின்
    பயனை உணர்ந்த நல்லறிஞர்
    தம் பெருமைகெட்டு வறுமையால்
    துன்புறும் காரணம் அறிய விரும்பினால்
    கூறுகிறேன் கேளுங்கள்! பழஞ்சிறப்புடை
    கலைமகள் வாசம் செய்தலால் பூவில் உறையும்
    திருமகள் வெறுப்புற்று அந்நல்லவரிடம் சேராள்.

    பாடல் 253

    கல்லென்று தந்தை கழற அதனையோர்
    சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் – மெல்ல
    எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
    வழுக்கோலைக் கொண்டு விடும்.

    தந்தை கல்வி கற்கச் சொல்லியும் அச்சொல்லைத்
    தள்ளி மதியாது கல்லாமல் இருந்தவன்
    பலர் முன் மெதுவாய் எழுத்தோலையைப்
    படிக்கச் சொல்லி நீட்டும்நேரம் வெகுண்டு
    தாக்கத் தடிகோலைக் கையிலெடுப்பான்.

    பாடல் 254

    கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
    நல்லறி வாளர் இடைப்புக்கு – மெல்ல
    இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
    உரைப்பினும் நாய்குரைத் தற்று.

    கல்வி கற்காமலேயே வளர்ந்த ஒருவன்
    கற்ற நல்லறிவாளர் அவைபுகுந்து
    சும்மா இருந்தாலும் நாய் இருந்தது போலாம்
    சும்மாயிராது பேசினும் நாய் குரைத்தது போலாம்.

    பாடல் 255

    புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
    கல்லாத சொல்லும் கடையெல்லாம் – கற்ற
    கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
    படாஅ விடுபாக் கறிந்து.

    அறிவோடு பொருந்தாப் புலவர்
    அவையில் புகுந்து தாம் கல்லாததையும்
    அற்பர் எடுத்துரைப்பர் தாம் கற்றதைக்கூட
    அடுத்தவர் கேட்டால் பொருளோடு பொருந்தாது
    அமைந்துவிடுமோ என எண்ணி
    ஆராய்ந்து சிந்திக்காது சொல்லார்
    அறிவுடையார்.

    பாடல் 256

    கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
    பச்சோலைக்கு இல்லை ஒலி.

    நூல்களைப் படித்து உட்பொருளை அறிந்த
    நாவினையுடைப் புலவர் பேசினால் பிழை
    நேருமோ எனப் பயந்து கண்டபடி பேசார்
    நூலறிவற்றவர் மனம்போனபடி பேசுவர்
    நன்குயர்ந்த பனைமரத்தின் உலர் ஓலைகள்
    நாளும் கலகலவென ஒலி எழுப்பும்
    நல்ல பச்சை ஓலை எப்போதும் ஒலிப்பதில்லை.

    பாடல் 257

    பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
    நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
    குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
    சென்றிசையா வாகும் செவிக்கு.

    பன்றியின் கூழ்வார்க்கும் தொட்டியில்
    பழுத்தினிக்கும் மாங்கனிச்சாற்றை ஊற்றுவது
    போலாம் நன்மையறியா மாந்தரிடம் நல்லறவழி
    பற்றிப் பேசுதல் குன்றின் மேலடிக்கப்படும்
    முளைக்குச்சியின் நுனி சிதைந்ததனால்
    மலைக்குன்றில் இறங்காததுபோல் அறவுரையும்
    அவர்தம் காதுகளின் உள் நுழையாது சிதறிப்போகும்.

    பாடல் 258

    பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
    வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
    கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
    நோலா உடம்பிற்கு அறிவு.

    பாலால் கரியைக் கழுவிப் பல நாள்
    உலர்த்தினும் வெண்மை பெறாது அதுபோல்
    உறும் கோலால் அடித்துக் கூறினும்
    உற்ற புண்ணியம் இல்லாதோன்
    உடம்பில் அறிவு புகாது.

    பாடல் 259

    பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
    இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், – இழிந்தவை
    தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
    தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.

    தேனைப் பொழிந்து நறுமணம் வீசினும்
    தேடிச் செல்லாது ஈ அத்தேனை உண்ண
    தகுதியற்ற இழிகுணம் கொண்ட மனத்தோர்க்கு
    தக்க பெரியோரின் தேன்போல் இனிக்கும்
    தெளிவான சொற்கள் தரும் பயன்தான் என்ன?

    பாடல் 260

    கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
    பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; – மற்றுமோர்
    தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
    புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.

    கற்றவர் சான்றோர் அவையில் உரைக்கும்
    குற்றமற்ற நுட்பமான கருத்துக்களைக்
    கொள்ளாது தன் நெஞ்சம் உதைத்துத் தள்ளுவதால்
    கீழ்மகன் தன் போலும் ஒரு அற்பனின் முகம் நோக்கி
    அதிகம் தெரிந்தவன்போல் தானும் பேசத் தொடங்குவான்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 261

    படக்கவிதைப் போட்டி – 261

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share