Blog

  • படக்கவிதைப் போட்டி – 263

    படக்கவிதைப் போட்டி – 263

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதாமதி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (21.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 262இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 262இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கூடையிலிருந்து கொட்டுவது உப்பா வெண்முத்தா என்று ஐயுறும் வண்ணம் ஒளிவீசும் உப்புக் குவியலையும் அதனை அளவாய்க் கொட்டிக்கொண்டிருக்கும் மனிதரையும் நிழற்படமாக்கித் தந்திருக்கின்றார் திருமிகு. நித்தி ஆனந்த். இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 262க்கு வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் சென்று சேரட்டும்!

    அப்பிலே(நீர்) தோன்றி உணவுக்குச் சுவைகூட்டும் ஒப்பிலா உயர்பொருள் உப்பு. ’மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்ற வள்ளுவக் கருத்து  உப்புக்கும் ஒப்பும்!

    பல்வேறு சிந்தனைகளைக் கிளறும் இந்த உப்பளச் சூழலுக்குப் பொருத்தமாய்ப் பாட்டெழுத நம் கவிஞர் குழாத்தைக் கனிவோடு அழைக்கின்றேன்.

    *****
    ”ஏழ்மை நிலையிலேயே வாழ்வை வைத்திருந்தாலும் பிழையில்லாத் தொழில் இந்த உப்பளத் தொழில்; இயற்கையோடு இயைந்த தொழில்” என்றுவக்கும் உப்பளத் தொழிலாளியைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

    உப்பளத் தொழிலாளி பெருமிதம்

    கடல் அன்னையின் தண்ணீர்
    இட நிலத்தில் இடும் பன்னீர்
    திடமாய் நீக்கிடும் கண்ணீர்
    சூரிய பகவான் பார்வை படப்பட
    வீரியச் சமையல் உப்பு சுடச்சுட
    உப்பிட்டவரை உள்ளளவும் நினை
    உப்பு தருவோரை
    உச்சிமுதல் கால்வரை நினை
    இயற்கையோடு இயைந்த தொழில்
    இயற்கைமீறி எதுவும் இல்லை
    வருண பகவானால் விடுமுறை
    வரவுக்கு மாற்றுத் தொழில்
    பிழையில்லாத தொழில்
    ஏழையாகவே வாழ்வாதாரம்
    ஏழ்மை நிலை வாழ்க்கைக்கே
    மனதிற்கு இல்லையே!

    *****

    ”உப்பளத் தொழிலையே வயிற்றுப் பிழைப்பாக வைத்திருக்கும் தொழிலாளியின் வயிற்றிலடித்துவிடுகின்றதே இந்த மழை!” என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உப்பளத்தில்…
    வெயிலால் வந்திடும் விளைச்சலிது
    வேர்வைச் சுவைதான் உப்புயிது,
    பயிர்போல் விளையும் வயலினிலே
    படிகமாய் மாறிடும் கடல்நீரே,
    வயிற்றுப் பிழைப்புப் பலர்க்கிதுவே
    வயிற்றி லடித்திடும் மழைவந்தே,
    கயிற்றில் நடப்பதாய் வாழ்க்கையிது
    காணீ ராங்கே உப்பளத்திலே…!

    *****

    ”தூத்துக்குடிக் களஞ்சியமே! நீயின்றிச் சுவையில்லை; ஆதலால் உனைத் துறக்கவும் முடியவில்லை. உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்தது அன்று; உடனேயே மறப்பது இன்று!” என்று வருந்தி விளம்புகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    தூத்துக்குடிக் களஞ்சியமே!
    நீ இல்லாவிடில் இதயம் துடிதுடிக்கும்
    அது நிஜமே
    நீ உணவில் குறைந்தாலும் குற்றம்
    மிகையானாலும் குற்றம்
    உனைத் துறக்கத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
    அதனால் தானோ நீ
    ஏழேழ் கடல் முழுதும் கலந்து விட்டாய்
    தண்ணீரோடு இணைந்து விட்டாய்
    நீயின்றிச் சுவையில்லை
    நீரின்றி உலகில்லை
    உப்பிட்டவரை உள்ளளவும் நினை
    அது அன்றைய பழமொழி
    உப்பிட்டவரை உள்ளளவும் மற
    இது இன்றைய பழமொழி
    இதுவே காலத்தின் பாடம்

    *****

    ”சேற்றினில் விளைந்த உப்பெனும் வெண்படிகம் சோற்றினைச் சுவைத்திட உதவிடும். உப்பளத் தொழிலாளி காலிலன்றோ மக்களின் நாச்சுவை மண்டியிட்டு வாழ்கின்றது” என்று சுவைபடப் பாப்புனைந்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    கடல்விளை அமுதம்

    நெல்வயல் காய்ந்துவிட்டால்
    விவசாயி வயிறு காயும்
    நெய்தல் நிலம் காய்ந்துவிட
    வெண்ணமுது விளைந்துவரும்
    சேற்றினில் விளைந்த வெண்படிகம்
    சோற்றினைச் சுவைக்க உதவிடும்
    உப்பளத் தொழிலாளி காலினிலே
    மக்களின் நாச்சுவை வாழும்…
    அகிம்சைப் போராட்ட நாயகனின்
    அறநெறித் தத்துவ வழிமுறைகள்
    கடல்விளை அமுதத் துகளாக – சோற்றுக்
    களம்வழி உயிரில் புகுத்திவிடும்….

    *****

    உப்பின் மதிப்பை, உப்பளத்தொழிலாளி வாழ்வின் உண்மை நிலையை உள்ளபடி உரைத்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் உளமாரப் பாராட்டுகின்றேன்.

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

    உழைப்பில் விளைந்த உப்பு

    உச்சிவேளை சுடும் வெயில்‌
    ஒதுங்க இல்லை மர நிழல்
    உப்புக் கரிக்கும் நீர்
    உடல் முழுதும் வழிந்தோடக்
    கடல் நீரின் உப்புக்காய்‌க்
    கடின உழைப்பை விதைக்கின்ற உழைப்பாளியே!
    உப்பளங்கள் உன் உழைப்பை உதாசீனம் செய்தாலும்
    ‘உப்பில்லாப் பண்டம்
    குப்பையிலே‘ என்னும்
    செப்பு மொழியறிந்து
    உப்பிட்டு உண்ணும்
    ஊரார் நாங்கள்
    ஒருநாளும் மறக்காமல்
    உளமார நன்றி சொல்வோம்!

    ”உச்சிவேளை உச்ச வெயிலில் உப்புநீர் உடலெங்கும் வழிந்தோட உழைக்கும் உப்பளத் தொழிலாளியே! உப்பின் மதிப்பறிந்து உண்ணும் நாங்கள் நன்றிசொல்வோம் என்றும் உமக்கு உளமார!” என்று நெகிழ்ந்துரைக்கும் இக்கவிதையின் ஆசிரியர் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • Q&A: இரண்டு கட்டுரைகளை ஒப்பிடுவது எப்படி? | How to compare two articles?

    Q&A: இரண்டு கட்டுரைகளை ஒப்பிடுவது எப்படி? | How to compare two articles?

    முனைவர் ம.ரமேஷ் அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    உங்கள் கேள்விகளை annakannan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் வழியாக அனுப்புவோர், +91-9841120975 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 1

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 1

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழில் இயற்றப்பட்ட ஒப்பற்ற பெருங்காப்பியமாகவும் பேரிலக்கியமாகவும் திகழ்வது கம்பராமாயணம்.

    “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
    வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
    உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை
    ” என்று மகாகவி பாரதியால் போற்றிக் கொண்டாடப்பட்ட புலவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த கம்பரால் எழுதப்பட்ட காப்பியம் இது.

    கம்பராமாயணம் ஒரு முதனூலன்று; வடமொழியில் இயற்றப்பட்ட, ஆதி காவியம் என்று அழைக்கப்படுகின்ற, வால்மீகி இராமாயணத்தை அடியொற்றி எழுதப்பட்ட ஒரு வழிநூலாகும்.

    தேவபாடையின் இக் கதை செய்தவர்
    மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
    நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
    பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ.
    (பாயிரம் – 10)

    தேவ பாடை(பாஷை) என்றழைக்கப்படும் சமஸ்கிருதத்தில் இராமன் கதையைச் செய்தவர்கள் வால்மீகி, வசிட்டர், போதாயனர் எனும் மூவர். இவர்களுள் முந்தியவரான வால்மீகி தம் நாவால் உரைத்தவண்ணமே தமிழ்ப்பாவில் நான் இக்கதையை அமைத்துள்ளேன் என்று கம்பரே தம் பாயிரத்தில் இக்கருத்தை உறுதிசெய்திருக்கக் காண்கின்றோம்.

    வழிநூலாக இருப்பினும் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பாகத் தம் காப்பியத்தைக் கம்பர் படைக்கவில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். வால்மீகி தம்முடைய இராமாயணத்தில் விரிவாகப் பேசிய சில கருத்துக்களைச் சுருக்கமாகவும், சுருக்கமாகப் பேசிய கருத்துக்களை விரிவாகவும் கம்பராமாயணம் பேசுகின்றது.

    வால்மீகி இராமாயணத்தில் காணப்படாத இரணியன் வதைப்படலம், மாயா சனகப் படலம் ஆகியவை கம்பராமாயணத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 176 பாடல்களைக் கொண்ட இரணியன் வதைப்படலம் ஒரு தனிக் காப்பியம் என்றெண்ணத்தக்க வகையில் பொலிவோடும் வலிவோடும் கம்பரால் படைக்கப்பட்டுள்ளது. இதனைக் காப்பியத்துள் அமைந்த குறுங்காப்பியம் என்றே போற்றுகின்றார்கள் பல்கலைச் செல்வர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரும், கம்பரை மேனாட்டுக் கவிவலாருடன் ஒப்பிட்டு மகிழ்ந்த கம்பர் திறனாய்வாளரான வ.வே.சு. ஐயரும்!

    வால்மீகியின் காவியத்தில் இராமன் சனகரின் அரண்மனையில் இருந்த அரன் வில்லை (சிவ தனுசு) வளைத்துச் சீதையை மணந்துகொண்டான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  பண்டைய மன்றல் முறைகளாகக் குறிப்பிடப்படும் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் எனும் எட்டனுள் இஃது ஆசுர மணத்தைச் சேர்ந்தது. ஆசுர மணத்தைப் பொறுத்தவரை அதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மன ஒப்புதல் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. வில்லை வளைத்து நாணேற்றுபவர் எவரும் அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம்; கிழவனாக இருந்தாலும்!

    தமிழ் அகப்பொருள் மரபில் திளைத்தவரான கம்பருக்கு இம்மணமுறையில் உடன்பாடில்லை. எனவேதான் மணத்துக்கு முன்பே இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டனர் எனும் அமைப்பில் கதையை மாற்றுகின்றார். மிதிலையின் அரசவீதியில் முனிவரோடும் இளவல் இலக்குவனோடும் நடந்துவருகின்ற இராமனைக் கன்னிமாடத்தில் நின்றிருக்கும் சீதை குனிந்து காண்கின்றாள். மேலே நிமிர்ந்துபார்க்கும் இராமனும் அவளை நோக்குகின்றாள். அப்போது நிகழ்ந்த இரசவாதத்தைத் தம் கவிதையில் ஓவியமாய்த் தீட்டி நம் உள்ளத்தில் பதித்துவிடுகின்றார் கம்பநாடர்.

    எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
    கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
    உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
    (கம்பராமாயணம்: மிதிலைக் காட்சிப் படலம் – 598)

    இவ்வாறே நிறைகுணங்களின் உறைவிடமாய் விளங்கிய கேகயன் மட மானான கைகேயியின் தூயசிந்தை திரிந்தமைக்குத் தீய மந்தரையின் சூழ்ச்சியை மட்டும் காரணமாய்க் காட்டாமல், அரக்கர் பாவத்தையும் அல்லவர்செய் அறத்தையும் கூடுதல் காரணங்களாய்க் காட்டுவதும், இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச்சென்றான் என்று மொழியாது, அவள் வசித்துவந்த பர்ணசாலையோடு பெயர்த்தெடுத்துச் சென்றான் என்று புனைந்திருப்பதும் வான்மீகத்திலிருந்து கம்பர் மாறுபடும் இடங்களாகும்.

    மூலநூலான வால்மீகி இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சனகர், விசுவாமித்திரர், அசமஞ்சன், கங்கை போன்றோரின் வரலாறுகளைக் கம்பர் தம் காப்பியத்தில் பாடாமல் நீக்கியுள்ளார். வான்மீகத்தில் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ள சம்பராசுரப் போரை, அது கூனி கைகேயி விவாதத்தின் ஓட்டத்தைத் தடைப்படுத்தும் என்று கருதி, ஒரே ஒரு பாடலில் சுருங்கக் கூறி முடித்துவிடுகின்றார் கம்பர்.

    நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்
         நளிர் மணி நகையாய்
    தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
         தொலைவுற்ற வேலை
    ஆடல் வென்றியான் அருளிய வரம்
         அவை இரண்டும்
    கோடி என்றனள் உள்ளமும்
         கோடிய கொடியாள். (கம்பராமாயணம்: மந்தரை சூழ்ச்சிப்படலம் – 1576)

    இவ்வாறு மூலநூலினும் விஞ்சிய பல்வேறு சிறப்புக்களைக் கொண்டதாய், காலத்தால் அழியாத புத்தாக்கப் படைப்பாய் (recreation) கம்பரால் உருவாக்கப்பட்டுள்ள இராமனின் கதைக்குக் கம்பர் தேர்ந்தெடுத்த பெயர் ’இராமாவதாரம்’ என்பதாகும். இதனைக் காப்பியத்தின் பாயிரச் செய்யுள் பகர்கின்றது.

    நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
    இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
    தொடை நிரம்பிய தோம்அறு மாக்கதை
    சடையன் வெண்ணெய்நல் லூர்வயின் தந்ததே
    (கம்பராமாயணம்: பாயிரம் – 11) ஆனால் கம்பராமாயணம் என்ற பெயரே கால ஓட்டத்தில் நிலைத்துவிட்டது.

    அளப்பரிய கவியாற்றலும் வியத்தகு சிந்தனைத் திறனும் வாய்க்கப்பெற்ற கம்பர் புதிதாகவே ஒரு நூலைப் படைத்திருக்கலாமே? எதற்காக வால்மீகி வடமொழியில் எழுதிய இராமனின் வரலாற்றைத் தூசுதட்டியெடுத்துத் தமிழில் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்றொரு வினாவும் இத்தருணத்தில் நமக்கு எழுதல் இயல்பே.

    ஒரு சமுதாயம் சிறந்துவிளங்க வேண்டுமானால் அதற்கு முதன்மையான தேவை அங்குவாழும் மக்களின் புலனொழுக்கமே என்று கருதிய கம்பர், இன்றியமையா மக்கட் பண்பாகிய அப்புலனொழுக்கம் வழுவி நடப்பவர் எதிர்கொள்ளும் தீங்குகளையும் அவர்கள் பெறும் தண்டனைகளையும் விளக்கமாக அறிந்தால் இச்சமுதாயம் நன்னெறியில் நின்றொழுகும் என்று திண்ணமாய் நம்பினார். அக்கருத்தை விளக்குதற்குப் புதிதாகத் தாம் ஒரு கதையை உருவாக்குவதைவிடவும், தமிழ்மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்த – அவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த, நடையில் நின்றுயர் நாயகனான, இராமனின் கதை பயன்படும் என்றெண்ணியே அதனை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் அவர் இறங்கியிருக்க வேண்டும் என்பது கம்பரில் தோய்ந்து, கம்பராமாயணத்தைத் தீர ஆய்ந்தவரான பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் கருத்தாகும்.

    புலனொழுக்கத்தை வலியுறுத்துவதோடல்லாமல், அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்பதையும் இக்காப்பியம் விளக்குகின்றது. இவையன்றி, இன்னும் எத்தனையோ அறக்கருத்துக்களையும் வாழ்வியல் விழுமியங்களையும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நமக்கு விண்டுரைக்கும் பணியையும் கம்பரின் காப்பியம் குறைவறச் செய்திருக்கின்றது.

    பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களைக் கொண்ட இக்காப்பியத்தில், சென்னை கம்பன்கழகப் பதிப்பின்படி 10368 பாடல்கள் உள்ளன.

    கம்பர், தமிழ்க்கடலின் ஆழத்தைக் கண்டுணர்ந்த அறிஞர்; முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வித்தகக் கவிஞர்; தமிழ் மரபுகளில் ஊறித் திளைத்த நற்றமிழர். தம் பேரிலக்கியத்தில் இராமனைக் குறிப்பதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும், ”தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்” (கம்பராமாயணம்: நகர்நீங்கு படலம்-1741) என்ற சொற்கள் தென்மொழியாம் தமிழிலும் வடமொழியிலும் பெரும்புலமை பெற்றிருந்த கம்பருக்கும் பொருந்துவனவாகவே உள்ளன.

    இத்தகு பேராற்றலும் பெரும்புலமையும் வாய்ந்த கம்பரின் கவிதை வாரிதியாம் கம்பராமாயணம் தமிழுக்குத் தகைசால் அணியாய்த் திகழ்கின்றதெனில் மிகையில்லை. இவ்வாரிதியில் அள்ள அள்ளக் குறையாத முத்தான கருத்துக்கள் வித்தாரமாய்க் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றையேனும் நாம் அறிந்துகொள்வது தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்மை பயக்குமென நம்புகின்றேன்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    2. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    3. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

     

    Share
  • கிரகணங்கள் – ஒரு பார்வை

    கிரகணங்கள் – ஒரு பார்வை

    வெ. சுப்ரமணியன்

    பூமி சூரியனைச் சுற்றும் அதே பாதையில் சந்திரனும் பூமியைச் சுற்றி வந்தால் இரண்டின் சுற்றுப் பாதைகளும் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். அந்த மாதிரியான நிலையில் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணமும், ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணமும் நிகழும். காரணம் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே அச்சில் நேராக அமையும் போது கிரகணம் நிகழ்கிறது.

    பூமியின் சுற்றுப்பாதையும், சந்திரனின் சுற்றுப்பாதையும் நீள்வட்டமாக உள்ளன. மேலும் சந்திரனின் சுற்றுப்பாதை 5.1o  கோணம் புவியின் சுற்றுப்பாதைக்குச் சாய்வாக அமைந்துள்ளது. ஆகவே கிரகணத்தளமும், சந்திரனின் சுற்றுத் தளமும் ஒன்றாக இல்லை. இதனால் இம் மூன்றும் ஒர் அச்சில் நேராக அமைவது 34.5 நாட்கள் இடைவெளிக்குள் மட்டுமே நிகழ இயலும். இதையே கிரகணப் பருவம் என்கிறோம்.  கிரகணம் கிரகணப் பருவங்கள் (Eclipse seasons) என்பவை வானில் திரும்பத் திரும்ப நிகழும் சுழற்சிகளில் ஒன்றாகும். கிரகணப்பருவங்கள் ஆறு நாட்காட்டி மாதங்களுக்குச் (Calendar months) சற்றுக் குறைவாக 173.3 நாட்கள் சுழற்சிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.   எனவே பெரும்பாலான நேரங்களில் புது நிலவு (New moon) அதாவது அமாவாசை அல்லது முழு நிலவு(Full Moon) அதாவது பௌர்ணமி கிரகணம் நிகழும் கிரகணப் பாதைக்கு (Ecliptic path) வெகுதூரம் வடக்கே அல்லது தெற்கே விலகி நகர்ந்திருக்கும். எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டில், நமக்கு 12 அமாவாசைகள் மற்றும் 13 பௌர்ணமிகள் இருக்கும் என்றாலும் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 4 சந்திர கிரகணங்கள் மட்டுமே நிகழும். இதனை எளிதாக  விளங்கிக் கொள்ள கிரகணப் பருவங்களை நாம் முதலில் புரிந்து கொள்வோம்.  கிரகணப் பருவங்களைக் (Eclipse seasons) குறித்து அறிந்து கொள்ளத் தேவையான சொற்களில் முக்கியமானவை கிரகணப் பாதை (Ecliptic path), கிரகணத் தளம் (Ecliptic plane) மற்றும் சந்திரக் கணுக்கள் (Lunar nodes) என்பவை. கிரகணப்பாதை என்பது சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப்பாதை.  கிரகணத் தளம் என்பது சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப்பாதை அமையும் தளம். அல்லது புவியின் பார்வையில் வானில் சூரியன் செல்லும் பாதையின் தளம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை, சந்திரன் பூமியைத் தனது சுற்றுப்பாதையில் வட்டமிடுகையில், பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தைச் சந்திரக் கணுக்கள் (Lunar nodes) எனப்படும் புள்ளிகளில் கடக்கிறது. அதாவது பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தை, சந்திரனின் மாதாந்திர சுற்றுப்பாதை இரு இடங்களில் வெட்டும். இந்த வெட்டுமிடங்களே சந்திரக் கணுக்கள் (Lunar nodes) என்பவை. இவ்விரு வெட்டுப் புள்ளிகளையும் இணைக்கும் நேர்கோடு கணுக்கோடு (Line of  nodes) என்று அழைக்கப்படுகிறது. கணுக்கோடு சூரியனுக்கு நேராக அமையும் போது கிரகணம் ஏற்படும்.

    ஒரு கிரகணப் பருவம் என்பது  பூமியின் பார்வையில், கிரகணம் நடக்க அனுமதிக்க சூரியன் சந்திரக் கணுவிற்கு அருகில் இருக்க வேண்டும். பௌர்ணமியில் சூரியன் ஒரு சந்திர கணுவிற்கு அருகில் இருந்தால், நாம் ஒரு சந்திர கிரகணத்தைக் காண்கிறோம். அமாவாசையில் சூரியன் சந்திர கணுவிற்கு அருகில் இருந்தால், சூரிய கிரகணத்தைக் காண்கிறோம்.இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சந்திரன் அதன் கணுக்களில் ஒன்றைக் கடக்கும்போது சந்திரன் புது நிலவாகவோ (New moon) அல்லது முழு நிலவாகவோ (Full moon) மாறினால் ஒரு கிரகணம் (Eclipse) ஏற்படுவதை நிச்சயமாகத் தவிர்க்க முடியாது.

    சந்திர மாதம் (Lunar month) என்பது அடுத்தடுத்த புதிய நிலவுகள் (அமாவாசைகள்) அல்லது அடுத்தடுத்த முழு நிலவுகளுக்கு (பௌர்ணமிகள்) இடையிலான காலம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 29.5 நாட்கள் அளவில் இருப்பதால், குறைந்தபட்சமாக, சூரியகிரகணத்தைத் அடுத்து ஒரு சந்திரன் கிரகணமோ அல்லது சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து ஒரு சூரியகிரகணமோ ஆக இரண்டு கிரகணங்கள் கிரகண பருவத்தில் நிச்சயமாக நிகழ்கிறது. அதிகபட்சம் மூன்று கிரகணங்கள் சாத்தியப்பட (சந்திர / சூரிய / சந்திர, அல்லது சூரிய / சந்திர / சூரிய), கிரகணப் பருவத்தின் முதல் கிரகணம் 29.5 நாட்கள் முடியும் முன் மூன்றாவது கிரகணத்தை அனுமதிக்க மிக விரைவாக வர வேண்டும். சூரிய கிரகணம் அமாவாசையில் மட்டுமே நிகழும். சந்திர கிரகணம் பௌர்ணமியில் மட்டுமே நிகழும். கூடுதலாக ஒரு கிரகணம் ஏற்பட  அமாவாசை அல்லது பௌர்ணமி ஒரு கிரகணப் பருவத்திற்குள் நிகழ வேண்டும். இல்லையெனில், அமாவாசை சூரிய கிரகணம் நடைபெறுவதற்கு சூரியனை விட வடக்கே அல்லது தெற்கே செல்கிறது, மற்றும் பௌர்ணமி ஒரு சந்திர கிரகணம் நடைபெறுவதற்கு பூமியின் நிழலில் வடக்கே அல்லது தெற்கே வெகுதூரம் செல்கிறது.

    சந்திரன் தெற்கிலிருந்து வடக்கே நகர்ந்து சென்றால், அது சந்திரனின் ஏறு கணு (Ascending node) என்றும், சந்திரன் வடக்கிலிருந்து தெற்கே நகர்ந்தால், அது சந்திரனின் இறங்கு கணு (Descending node) என்றும் அழைக்கப்படுகிறது. மே 24, 2020 அன்று சந்திரன் அதன் ஏறு கணுவில் கடைசியாக இருந்தது, அடுத்து ஜூன் 6, 2020 அன்று அதன் இறங்கு கணுவை அடையும்.

    நடைபெறும் இருபத்தோராம் நூற்றாண்டில் (கிபி 2001 முதல் கிபி 2100 வரையிலான நூறு ஆண்டு காலத்தில்)  224 சூரிய கிரகணங்களும் 228 சந்திர கிரகணங்களும் ஆக மொத்தம் 452கிரகணங்கள் நிகழும். பொதுவாக ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கிரகணப்பருவங்கள் (Eclipse season) இருக்கலாம். அது போலவே ஒரு கிரகணப்பருவத்தில் குறைந்தது இரண்டு கிரகணங்களும் அதிகபட்சமாக மூன்று கிரகணங்களும் நிகழலாம்.

    ஓராண்டில் நான்கு கிரகணங்கள் நடப்பது மிகவும் இயல்பானது. ஒரு கிரகணப்பருவத்தில் சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து சூரிய கிரகணமோ அல்லது சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து சந்திர கிரகணமோ நிகழ்வது மிகச் சாதாரணமான ஒன்றுதான். ஒரு கிரகணப்பருவத்தின் காலம் (Eclipse season) என்பது முப்பத்தைந்து (35) நாள் கொண்டது எனலாம். இந்த முப்பத்தைந்து நாட்களில் குறைந்தது ஒரு சூரிய கிரகணமும் ஒரு சந்திர கிரகணமும் ஆக இரண்டு கிரகணங்கள் உறுதியாக ஏற்படும். அவ்வாறான நிகழ்வு இந்த நூற்றாண்டில் எண்பத்திரண்டு (82) முறைகள் நிகழும்.

    அடுத்தது சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான ஒரு நாள்காட்டி ஆண்டில் (Calendar year) குறைவான எண்ணிக்கையில் மூன்று சூரிய கிரகணங்கள் மற்றும் அதை விடக் குறைவான எண்ணிக்கையில் நான்கு சூரிய கிரகணங்களும் அபூர்வமாக ஐந்து சூரிய கிரகணங்களும் கூட ஏற்படுவதுண்டு.

    இந்த நூற்றாண்டைப் பொறுத்தவரையில்,  2018, 2019, 2036, 2038, 2054, 2057, 2058, 2069, 2083, 2084, 2087, 2098 ஆகிய 12 ஆண்டுகளில் மூன்று முறை சூரிய கிரகணமும் ,  2011, 2029, 2047, 2065, 2076, 2094 ஆகிய ஆறு ஆண்டுகளில் நான்கு முறை சூரிய கிரகணமும் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடக்கும் 21 ஆம் நூற்றாண்டில் எந்த ஒரு ஆண்டிலும் ஐந்து (5) சூரிய கிரகணங்கள் ஏற்படும் நிகழ்வு இல்லை.

    ஆனால் அத்தகைய அபூர்வ நிகழ்வு 23 ஆம் நூற்றாண்டில் 2206 ஆம் ஆண்டில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாண்டின் சனவரி 10, ஜூன் 07, ஜூலை 07, டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 30 ஆகிய நாட்களில் சூரிய கிரகணம் ஏற்படும். பார்க்கத்தான் நாம் இருக்கப் போவதில்லை. இருப்பினும் என் சந்ததியில் யாராவது இக் கட்டுரையைப் படிக்க மிக மெல்லிய வாய்ப்பும் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

    ஒவ்வொரு நாள்காட்டி ஆண்டிலும் (Calendar year) அதாவது சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான ஆண்டுக் காலத்தில் குறைந்த பட்சமாக நான்கு (4) முதல் அதிக பட்சமாக ஏழு (7) கிரகணங்கள் நிகழக் கூடும். ஒரு காலண்டர் ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழ்வது மிகவும் அரிதானது.

    இத்தகைய நிகழ்வு கடைசியாக நடந்தது 1982 ஆகும். நடக்கும் இருபத்தோராம் நூற்றாண்டில் முன்னோக்கிப் பார்க்கும்போது, ​​2038 மற்றும் 2094 ஆண்டுகளில் இரண்டு (2) முறை மட்டுமே ஒரு நாட்காட்டி ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழும். 2038 ஆண்டில் நிகழவிருக்கும் கிரகணங்களில் 3 சூரிய கிரகணங்களும் 4 சந்திர கிரகணங்களுமாக இருக்கும் அதுவே 2094 ஆம் ஆண்டில் 4 சூரிய கிரகணங்களும் 3 சந்திர கிரகணங்களுமாக இருக்கும்.

    ஒரு காலண்டர் ஆண்டில் ஏழு கிரகணங்கள் நிகழும்  போது அதில் 5 சூரிய கிரகணங்களும் 2 சந்திர கிரகணங்களும்  நிகழ்வது மிக மிக அரிதானது. இது கடைசியாக 1935 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. மீண்டும் இத்தகைய அபூர்வ நிகழ்வு 2206 ஆம் ஆண்டு வரை நிகழாது. அதே போல ஒரு காலண்டர் ஆண்டில் 2 சூரிய கிரகணங்களும் 5 சந்திர கிரகணங்களும் கூட நிகழலாம். மிக அரிதான இத்தகைய நிகழ்வு கடைசியாக 1879 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. 2132 ஆம் ஆண்டு வரை இது போன்ற நிகழ்வு மீண்டும் நடக்காது. ஆக மேற் சொன்ன இரண்டு அபூர்வ நிகழ்வுகளுமே எதுவுமே இந்த 21 ஆம் நூற்றாண்டில் நடக்கப் போவதில்லை.

    ஆனால் அதுவே சனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என்ற கட்டுப்பாடு இல்லாமல் வெறும் 365 நாட்கள் கொண்ட ஆண்டுக்காலமாக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு ஆண்டில் 7 கிரகணங்கள் வருவது அத்தனை அரிதானது இல்லை. 21 ஆம் நூற்றாண்டில் மட்டும் எடுத்துக் கொண்டால் 365 நாட்கள் கணக்கில் 7 கிரகணங்கள் 29 முறை நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்காட்டி ஆண்டுக்கும் (Calendar year), 365 நாட்களைக் கொண்ட ஓராண்டுக்கும் (365 days year) மேற் சொன்ன கருத்தை விளங்கிக் கொள்ள நடப்பு 2020 ஆம் ஆண்டையே  எடுத்துக் கொள்ளலாம்.

    முதலில் 2020 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான நாட்காட்டி ஆண்டை எடுத்துக் கொள்ளலாம்.  இக்கால கட்டத்தில் மொத்தம் ஆறு (6) கிரகணங்கள் அதில் நான்கு சந்திர கிரகணங்களும் இரண்டு சூரிய கிரகணங்களும் அடங்கும். நான்கு (4) சந்திர கிரகணங்கள் முறையே சனவரி 10, ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 என்றும் இரண்டு (2) சூரிய கிரகணங்கள் முறையே ஜூன் 21 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளன.

    இதுவே 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 15 முதல் 2020 டிசம்பர் 14 வரையிலான 365 நாட்கள் கொண்ட ஓராண்டுக் காலத்தைக் கருதுவோமானால் மொத்தம் ஏழு (7) கிரகணங்கள். காரணம்  மேற் சொன்ன நாள்காட்டி ஆண்டின் ஆறு கிரகணங்களுடன் மூன்றாவதாக 2019 ஆண்டின் டிசம்பர் 26 ஆம் நாளில் நடந்து முடிந்த சூரிய கிரகணமும் கணக்கில் சேர்ந்து கொள்ளும். இப்போது இந்த வேறுபாடு உங்களுக்கு விளங்கியிருக்கும்.

    கடந்த 2019 ஆண்டின் முதல் கிரகணப்பருவம் சனவரி 6 ஆம் நாள் தொடங்கியது. அது ஒரு சூரிய கிரகணம். தொடர்ந்து அடுத்த 15 ஆம் நாளில் சனவரி 21 அன்று சந்திர கிரகணம். அடுத்த இரண்டாம் கிரகணப்பருவம் சூரிய கிரகணமாக ஜூலை 2 ஆம் நாள் தொடங்கியது. அதிலிருந்து 14 நாட்களில் இப்பருவத்தின் சந்திரகிரகணம் ஜூலை 16 அன்று நிகழ்ந்தது.

    2019 ஆண்டின் மூன்றாவது பருவம் மறுபடியும் ஒரு சூரிய கிரகணமாக டிசம்பர் 26 ஆம் நாள் நிகழ்ந்தது. இதற்கான சந்திர கிரகணம் அடுத்த 15 நாட்களில் நிகழ்ந்தது. அதாவது 2020 ஆம் ஆண்டின் ஜனவரி 10 ஆம் நாள் அந்தச் சந்திர கிரகணம் ஏற்பட்டது. சில ஆண்டுகளில் ஒரு கிரகணப் பருவத்தின் கிரகணம் அல்லது கிரகணங்கள் அடுத்து வரும் ஆண்டிற்குச் சென்று விடும். நிகழ்ந்து அது மூன்று கிரகணப் பருவமாக இருந்தால் தொடர்புடைய மற்ற இரு கிரகணங்களும் அடுத்த ஆண்டுக்குச் சென்று விடும். ஒரு ஆண்டின் டிசம்பர் கடைசியில் ஒரு கிரகணம் இப்படித்தான் சில ஆண்டுகளில் நமக்கு முந்தைய ஆண்டின் கிரகணப்பருவத்தின் கிரகணம் அல்லது கிரகணங்கள் அடுத்த ஆண்டில் கிடைக்கின்றன.

    நடக்கும் 2020 ஆண்டின் முதல் கிரகணப்பருவத்தின் முதல் கிரகணம் ஜூன் 5, 2020 அன்று ஜூன் பௌர்ணமியுடன் கழிந்தது. ஜூன் மற்றும் ஜூலை 2020 கிரகண பருவத்தில் மூன்று கிரகணங்கள் இடம்பெறுகின்றன.

    ஜூன் 5 – 6 தேதிகளில் (சென்னயில் ஜூன் 5 ஆம் தேதி இரவு மணி 23.15. 51 மணிக்குத் துவங்கிய கிரகணம் மறுநாள் ஜூன் 6 ஆம் தேதி அதிகாலை 02.34.03 மணிக்கு முடிவடைந்தது) அன்று சந்திர கிரகணம் நடந்து முடிந்து விட்டது. இனி வரப்போவது ஜூன் 21 அன்று சூரிய கிரகணம். அடுத்து ஜூலை 4 – 5 அன்று இந்தக் கிரகண பருவத்தின் மூன்றாவது கிரகணமாகச் சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. நடக்கும் 2020 ஆம் ஆண்டின் ஜூன் – ஜூலை  கிரகணப் பருவம் மூன்று கிரகணங்களை முறையே சந்திர கிரகணம், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற வரிசையில் கொண்டது. அடுத்து  2029 ஆம் ஆண்டில் ஜூன் – ஜூலை கிரகணப் பருவத்திலும் மூன்று கிரகணங்கள் 2020 ஆம் ஆண்டிலிருந்து சற்று மாறுபட்ட வரிசையில் முறையே சூரிய கிரகணம், சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்ற வரிசையில் ஏற்படும்.

    2020 ஆம் ஆண்டு இரண்டு கிரகணப் பருவங்களுடன் நிறைவடையும். நவம்பர் 29 – 30 தேதிகளில் சந்திர கிரகணமும், டிசம்பர் 14 அன்று சூரிய கிரகணமும் நிகழும். 2020 இல் சந்திர கிரகணங்கள் அனைத்துமே துரதிர்ஷ்டவசமாக, மங்கலான மற்றும் பார்க்கக் கடினமான புறநிழல் சந்திரக் கிரகணங்களே.


    கட்டுரையாசிரியரைப் பற்றி

    வெ. சுப்ரமணியன் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சொந்த ஊராகக் கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னையில் கோயம்பேடு பகுதியில் வசிக்கிறார். முப்பத்தாறு ஆண்டுகள் அரசு மேனிலைப் பள்ளி, மணலியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி 2015ஆம் ஆண்டில் பணி நிறைவு பெற்றார்.

    தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான நல்லாசிரியர் விருதினை 2011ஆம் ஆண்டில் பெற்றார். இவருடைய பணிக் காலத்திற்குப் பின்னர் சிறுகதைகள், வானியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை எழுதித் தமது வலைப்பூவில் வெளியிட்டு வருகிறார்.  மருத்துவம் சார்ந்த சுமார் 12 கட்டுரைகள் ஹெல்த் கேர் (தமிழ்)  என்னும் மருத்துவ மாத இதழில் வெளியாகியுள்ளன. 26 சிறுகதைகள், சிறுகதைகள்.காம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

    இவரது வலைப்பதிவு முகவரி – https://weyes57.blogspot.com/


     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-28

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-28

    தி. இரா. மீனா

    பொந்தாதேவி

    காஷ்மீரில் உள்ள மண்டாவ்பூர் அரசபரம்பரையில் வந்த பொந்தா தேவியின் இயற்பெயர் நிஜாதேவி.இளம்வயதிலிருந்தே சிவபக்தையான அவள் கல்யாண் வந்தாள். அவளுடைய பக்தியால் கவரப்பட்ட சிவன் உள்ளம் மகிழ்ந்து அவருக்கு ஒரு  போர்வை [பொந்தே] தந்ததாகவும் அது முதல் அவர் பொந்தாதேவி என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப் படுகிறது. மனிதர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். எல்லா இடங்களிலும் அலைந்து திரிபவன் என்ற பொருளில் ’பிடாடி’ என்பது இவர் முத்திரையாகும்.

    “வெற்றிடம் என்பது கிராமத்திற்குள் இருக்கிறதா?
    வெற்றிடம் என்பது கிராமத்திற்கு வெளியில் இருக்கிறதா?
    அந்தணர்பகுதி ஒரு கிராமத்திற்குள்ளா?
    தாழ்ந்தவர்பகுதி கிராமத்திற்கு வெளியிலா?
    எங்கே நீங்கள்போனாலும் வெற்றிடம் என்பது அதேதான்
    சுவரைப் பிரிப்பதால்தான்
    உள்வெற்றிடமும் வெளிவெற்றிடமும்
    எங்கிருந்து பார்த்தாலும்
    உங்கள் அழைப்புக்குச் செவிகொடுப்பது பிடாடிதான்”

    இன்றும் கன்னட மக்களால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் வசனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

    போகண்ணா

    ’நிஜகுரு போகேஸ்வரா’ என்பது இவரது முத்திரையாகும். இவர் வசனங்கள் பேச்சு மொழியில் அமைந்தவை.

    “உன் சரணர்  வாழ்க்கை சுடரின்  கைவிளக்கு
    உன் சரணர் சஞ்சாரம் காற்றின் கைநறுமணம்
    கற்பூர மன்னனை தீயின் சிம்மாசனத்தில் வைத்து
    மன்னன் சிம்மாசனத்தை விழுங்கினானா
    சிம்மாசனம் மன்னனை விழுங்கியதா என்ற வகையில்
    கண்களெனும் அரியணை மீது
    சத்குரு என்ற மன்னனை  அமரவைத்தால்
    இலிங்கம் அரியணையை விழுங்கியதா?
    அரியணை இலிங்கத்தை விழுங்கியதா?
    இவ்விரண்டையும் விழுங்கிய அதிசயத்தை
    நிஜகுரு போகேஸ்வரனே உன் சரணரில் பார்க்கலாம்.”

    மடிவாளப்பா

    ’குரு மகந்தா ’ இவரது முத்திரையாகும்.

    “என்கால் என் கை என்கண் என் நாசி
    என்வாய் என்மெய் என்மனம் என்னுயிர்
    இவைபோன்றது அனைத்தும் என்னுடையதென்பது எதுவாம்?
    இவையனைத்தும் தானானான்
    நிருபம நிராள மஹத்பிரபு மஹாந்த யோகியே“

    “வந்ததைப் புறக்கணிக்காமல் வராததை விரும்பாமல்
    அறுசுவை கலந்து சுவைத்துண்டு
    கவலை மறந்து இன்பமொடு கூடி
    நட்பு பகையை ஒன்றாக்கி,வாழ்வில் ஒளிர்ந்து
    பற்றற்ற தன்மையை வளமாக்கிக் கொள்ளாமல்
    பிறப்பு நோயின் துன்பத்தில் நிலையாகி
    செத்துச் செத்துப் போனது .காலம் பல பிறவிகள் பல
    நிருபம நிராள மஹத்பிரபு மஹாந்த யோகியே“

    மடிவாள மாச்சிதேவா

    வீராவேசமான நோன்புடையவர். சிவசரணர்களின் உடையைத்துவைத்து தூய்மைபடுத்துவது இவர் காயகம்.பிஜ்ஜளனின் மதயானையை அடக்கியது, நூலிய சந்தையனுக்கு இஷ்டலிங்கத்தின் அவசியத்தைப் பற்றித் தெளிவு படுத்தியது, கல்யாண் புரட்சிக்குப் பிறகுஉளுவிக்குச் சென்ற சிவசாரணப் படையின் தலைவனாக இருந்து பிஜ்ஜளனின் படையோடு போராடி சரணர்களையும்,சரண இலக்கியங்களையும் பாதுகாத்தது ஆகியவை  இவர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளாகும். ’கலதேவரதேவா’ இவரது முத்திரையாகும்.

    1. “அங்கமும் இலிங்கமும் உறவென்று சொல்பவரின்
    பேச்சினைக் கேட்க கூடாது
    அங்கமும் இலிங்கமும் இணைந்தென்ன
    இலிங்கமும் மனமும் இணையாத போது?
    மனம் உண்மையில் நின்ற பிறகு
    இலிங்கத்தின் உறவென்ன சொல்வாய் கலிதேவரதேவனே.”

    2. “அறிவையறிவால்  அறிந்தேனென செயலின்றி இருக்கக்கூடாது
    இனிப்புடன் இனிப்பு சேர்ந்தால் இனிப்பு குறையுமா?
    செல்வத்துடன் செல்வம் சேர்ந்தால் வறுமை வருமோ?
    செய்வது சிவழிபாட்டுச் செயலாக வேண்டும்
    இது கலிதேவதேவரோடிணைவதாகும்  நூலியசந்தையனே“

    3. “சாப்பிட்டால் பூதமென்பார்
    சாப்பிடவில்லையெனில் சகோரப் பறவையென்பார்
    வீட்டிலிருந்தால் சம்சாரியென்பார்
    காட்டிலிருந்தால் குரங்கென்பார்
    பேசினால் பாவியென்பார்
    பேசவில்லையெனில் ஊமையென்பார்
    தூங்கவில்லையெனில் திருடனென்பார்
    தூங்கினால் உயிரற்றவனென்பார்
    இந்த எண்வகையிலிருந்தும் விடுபடமுடியாது பாராய்
    கலிதேவரதேவனே“

    4. “மண்ணின்மீது கல்லெடுத்துச் சிலையாக்கினால்
    கல்லுடைப்பவன் அங்கேயே குருவானான் கல்லும் சீடனாம்
    முன்னால் சரித்திரமறியாத குரு
    எதிர்கால  நல்லுரை ஏற்காத சீடனென
    இவ்விரண்டும் கல்லுடைப்போனின் கல்போலாம்
    காணாய் கலிதேவய்யனே“

    5. “பக்தன் பக்தன் எனச் சொல்வீர்
    நீங்கள் பக்தராவது எப்படி?
    நித்தமும் பரிசுத்தலிங்கம் அங்கையிருக்க
    மண்ணின் மீதுள்ள சிலையை வணங்கும்
    பயனற்றவரை என்னென்பேன் கலிதேவய்யனே“

    6. “வசனக் கட்டுக்கோப்புப் பற்றிப் பேசி
    பொழுது போக்குவோர் பக்தராவரோ ஐயனே?
    தன் போலன்று வசனம்; வசனம்  போலன்றுதான்
    அது எப்படியெனில்
    உடல் உள்ளம் செல்வமெனப் பின்னால் வைத்துக் கொண்டு
    சொற்கோவையை முன்வைத்துக் கொண்டு
    எசமானரைக் கண்ட நாய் வாலாட்டுவது போல
    ஆனதென்றான் கலிதேவர தேவய்யன்“

     [தொடரும்]      

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 85 (அம்பொன் )

    சேக்கிழார் பாடல் நயம் – 85 (அம்பொன் )

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இளையான்குடி மாற  நாயனார் புராணம்

    இயற்பகை  நாயனாரின் செயற்கரிய  செயல் குறித்துச்  சேக்கிழார்  இயற்றிய பாடல்களின்  நயங்களை இன்று வரை படித்து மகிழ்ந்தோம்! இனி இளையான்குடி நாயனாரின் அருள் வரலாற்றைச்  சேக்கிழார் பெருமானின் கவித்திறத்தின் வழியே  காண்போம்.

    முதலில்  திருநீலகண்டக்  குயவர், அடுத்து இயற்பகையார் என்ற  கடற்கரை வாணிகர், அடுத்து சூத்திர நற்குலத்தாராகிய இளையான்குடி மாற நாயனார். இவ்வாறு அடியார்களிடையே குலவேறுபாடு  கருதாத சைவத்தின்  சிறப்பைத்   தொடர்ந்து  நம் திருமுறை  கூறுகின்றது!

    அம்பொன்   நீடிய   அம்ப   லத்தினில்  ஆடுவார்அடி   சூடுவார்
    தம்பி  ரான்அடி   மைதிறத்துஉயர் சால்பின்   மேன்மை தரித்துளார்
    நம்பு   வாய்மையின்  நீடு   சூத்திர  நற்கு  லம்செய்    தவத்தினார்
    இம்பர்   ஞாலம்  விளக்கினார்இளை  யான்கு   டிப்பதி  மாறனார்

    உரை:

    அழகிய பொன்னோடுகளால் வேயப்பெற்ற, நீடித்த பெருமையை உடைய அம்பலத்தில் கூத்தாடுவாரின் திருவடியை எப்போதும் தலைமேல் சூடிக் கொள்பவர்; சிவபிரான் அடிமைத்திறத்தில் உயர்ந்த நிறைவு பெற்று அதனையே தம்பண்பாக மேற்கொண்டு வாழ்பவர்; உயர்ந்த நம்பிக்கைக்கு உரிய  சூத்திரக் குலம்  செய்த தவத்தால் அக்குலத்தில் அவதரித்து  அந்தக் குலத்தை   புகழுடன்  விளங்கச்  செய்தவர்,  இளையான்குடி என்ற ஊரை ஆண்ட  சிற்றரசராகிய  மாறனார் ஆவார். அவர் தம்  செயற்கருஞ் செயலை  இப்புராணத்தில் காண்போம்.

    விளக்கம்:

    இப்பாடலில் ‘’அம்பொன் நீடிய அம்பலம்’’ என்ற தொடர் தில்லையம்பலத்தின் நெடிய வரலாற்றைக்  கூறுகிறது! அவ்வம்பலம் காலந்தோறும் பொன்னால் வேயப்பெற்ற  நெடிய வரலாறு கொண்டது. முற்காலத்தில் இறைவனின் திருக்கூத்தை தரிசித்த தேவர்கள் அம்பலத்திற்குப் பொன் வேய்ந்தனர்; அதன் பின் இரணியவர்மன் என்ற அரசர் அம்பலத்திற்குப்  பொற்கூரை வேய்ந்தார்; அதன்பின் அநபாயச் சக்கரவர்த்தி முதலானோர் பொன்னோடுகளால் தில்லையம்பலத்தை வேய்ந்தனர்; இன்றும் தில்லையம்பலம் பொன்னால் வேயப்பெற்று விளங்குகிறது. திருநாவுக்கரசர்,

    ‘’முழுதும்   வானுல  கத்துள  தேவர்கள்
    தொழுதும்  போற்றியும் தூயசெம்   பொன்னினால்
    எழுதி  வேய்ந்த  சிற்றம்பலக்  கூத்தன்‘’

    என்று பாடுகிறார். அவ்விறைவன் திருவடி மலர்களைத் தம் தலைமேல் சூட்டிக்கொண்ட அடியார் மாறனார் ஆவார். இறைவன் திருவடி,

    ‘’அஞ்சிப்போய்க்  கலி  மெலிய  அழலோம்பும்  அப்பூதிக்
    குஞ்சிப்பூவாய்  விளங்கும் சேவடியே கூடுதியே!’’

    என்று அப்பர் பாடுகிறார்.

    மேலும் ‘’உயர் சால்பின்  மேன்மை தரித்துளார்‘’ என்ற தொடர்,  அவர்தம் அடிமைத்   திறத்தில் நிறைந்த,

    அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு
    ஐந்து  சால்பு ஊன்றிய  தூண்!’’

    என்ற வள்ளுவர் வாக்கிக்கேற்ற ஐந்து குணங்களும் புலப்படுகின்றன! இவ்வாறு எல்லாக் குணங்களும் நாயனாரின் இறையடிமைத்  திறத்தில் குடிகொண்டன!

    மேலும் ‘’நம்பு வாய்மையின் நீடு சூத்திர  நற்குலம்‘’ என்ற தொடர் அவர் பிறந்த குலத்தின் வாய்மைத் திறத்தை உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘’வாய்மையோடு   ஐந்து சால்பு ஊன்றிய தூண்‘’ என்ற குறளில் வாய்மை யோடு  சார்ந்த  நான்கு குணங்களும்  சேர்ந்து  சால்பு   ஆயினமையை உணர்த்தியது போலவே  சேக்கிழாரும், சூத்திர நற்குலத்தை ‘’நம்பு வாய்மையின்‘’ என்று அடைமொழி கொடுத்து இங்கே உணர்த்துகிறார்.

    வாய்மைத் தன்மையிலே நீடி வருகின்ற சூத்திரன் என்ற பெயரா லறியப் பெறும் நல்ல குலம். நல் – நல்ல. நலம் – சுத்தம். “சூத்ரா சுத்த குலோத்பவா;“ என்பது சிவாகமம். சூத்திரப் பெயர் இங்கு உழுதொழிலாளரைக் குறித்தது.

    “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்“  என்று ஆசிரியர் பின்னரும் வாயிலார் நாயனார் புராணத்தில்  இக்குலப் பெருமையைச் சிறப்பித்தார். உழுதொழில்  புரிவோர்களைச் சூத்திரர் எனவும், நான்காம் வருணத்தவர் எனவும் பேசுதல் ஆசிரியர் காலத்தில் வழக்காயிருந்தது. அச்சொல்லைப் பிற்காலத்தார் இழிவு படுத்தினர். அப்பெயரால் ஏதும் இழிபு குறித்திருப்பின் ஆசிரியர் அதனை சிறப்புறக் கூறியிருக்க மாட்டார்! இங்கு, ஏர்த்தொழில் புரியுங் குலமாகவே இப்பெயராற் போந்த குலம் சுட்டப் பெற்றது. “ஏரின் மல்கு வளத்தினால் வரும்“ என்று அடுத்த பாட்டிலே தொடர்ந்து கூறுவது காண்க.

    இப்புராணத்துள்ளே மற்றும் பல நாயன்மார்களை வேளாண் குலத்தவர் எனக் குறித்த ஆசிரியர் இங்கு ஏர்த்தொழிலே செய்யும் இந்நாயனார் சூத்திர நற்குலத்தவர் என்று குறித்தலின் வேற்றுமை ஒன்றும் காணப் பெறவில்லை. வேளாளரை வாய்மையின்  மேன்மைபற்றி அறிவிப்பது ஆசிரியர் மரபு. உழுதுண்போர் – உழுவித்துண்போர் என்ற பாகுபாடு கருதி இவ்வாறு வேறு வேறாக குறிக்கப்பெற்றதோ என்று சிலர் ஐயங்கொள்வார்

    “பின்னவர் சதுர்த்தர் பெருக்களார் வன்மையர்
    மன்னுமுத் தொழிலர் மண்மகள் புதல்வர்
    உழவர்  ஏரினர்  வாணர் காராளர்
    விளைஞர் மேழியார்  வேளாளர்  என்றிவை
    தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே“

    என்று பிங்கல நிகண்டு  சொற்பொருள்  கூறுகிறது!  இப்பெயர் பற்றி இந்நாளில் எழும் பல் வகைப் பூசல்களையும் பிற்காலத்தினர் உருவாக்கினர். அக்குலம்  இவரைப் பெறத்  தவம் செய்தது என்று சேக்கிழார் கூறினார், அக் குலஞ்செய்த தவத்தின்   விளைவாக அதனில் வந்தவதரித்து இவ்வுலகை வாழ்வித்தவர் இளையான்குடி  மாறனார் ஆவார்! .

    இளையான்குடி – இது  இப்போது பரமக்குடி என்ற ஊரின் அருகில் உள்ள இளையான்தன்குடி அஃதாவது  இளையாற்றங்குடி  எனப்படும். இதனை அந்த ஊரிலேயே சென்று பேசிய பேராசிரியர் இராதாகிருஷ்ணன் குறிப்பிடுவார். மேலும் சோழநாட்டில் திருநள்ளாற்றுக்கு மேற்கே 2 நாழிகையளவில் உள்ளது என்றும், பத்தகுடி என்ற இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 3/4 நாழிகையில் மட்சாலையில் இதனை யடையலாம் என்றும் சிலர் கூறுவர். இவ்வூரில் பழைய சிவாலயமு மொன்றுண்டு. புராணத்து வரும் நாற்றங்கால் கோயிலுக்குத் தெற்கில் உள்ளது. இதனை முளைவாரிக்குட்டை – முளைவாரி

    நாற்றங்கால் என வழங்குகின்றனர். சோழமண்டல சதகமும் இப்பதி சோழநாட்டிலுள்ளதாகப் பேசுகின்றது. ஆகவே இவர் வரலாற்றின் உண்மைத் தன்மை நன்கு விளங்குகிறது.

    Share
  • நாலடியார் நயம் – 31

    நாலடியார் நயம் – 31

    நாங்குநேரி வாசஸ்ரீ

    31. இரவச்சம்

    பாடல் 301

    நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
    தம்மாலாம் ஆக்கம் இலரென்று – தம்மை
    மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
    தெருண்ட அறிவி னவர்.

    இவ்வறியவர் நம்மாலே வாழ்கிறார்
    இவர் எப்போதும் தாமே சம்பாதித்தவர்
    இலர் எனத் தம்மை மேலானவராய் மதித்து
    இன்புற்று மயங்கும் மனமுடையாரிடத்து
    இரத்தற்குச் செல்வரோ தெளிந்த அறிவுடையார்?

    பாடல் 302

    இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
    பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
    விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
    அழித்துப் பிறக்கும் பிறப்பு.

    தாழ்வதற்குக் காரணமான செய்கைகள் செய்து
    தம் வயிராற உண்பதினும் பழிதரும் அதனைத்
    தள்ளி பசியோடிருந்து இறப்பது குற்றமா? ஒருவன்
    தன்னுயிர் விடுத்தபின் பிறக்கும் பிறப்பு கண் இமைக்கும்
    தருணத்தில் நிகழுமெனவே இவ்வுடம்பு போனால்
    திரும்பவும் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினையாதீர்.

    பாடல் 303

    இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
    செல்லாரும் அல்லர் சிறுநெறி – புல்லா
    அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
    முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

    தாங்கொணா வறுமையால் இரத்தெலெனும் இழிதொழிலை
    தெளிந்து செய்தாலும் அவ்வற்ப வழியிலும் மேன்மைகருதி
    தம்மைத் தழுவிக்கொண்டு எம் வீட்டிற்கு வாருங்கள் எனத்
    தக்க முறையில் உணவுகொள்ளச்செய்பவரல்லாது வேறோரிடம்
    தலைகாட்டவும் மாட்டார் மேலோர்.

    பாடல் 304

    திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
    உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
    அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
    றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

    தம்மைச் செல்வத்தின் அன்னை இலட்சுமி கைவிட்டாலும்
    தெய்வம் கோபம் கொண்டாலும் மேலோர்
    தம் மேன்மையை நினைப்பதேயல்லாமல்
    தன் பணத்தை வீணாகச் சேர்த்துவைக்கின்ற
    தகுதியற்ற அற்பரிடம் சென்று பொருள் வேண்டி
    தலைகுனிந்து ஒருபோதும் நில்லார்.

    பாடல் 305

    கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
    இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
    உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
    கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

    தம் பொருளை மறைக்காது கொடுக்கும்
    திடமான அன்புடைய கண்போலும் இனியவரிடத்தும்
    தாம் சென்று இரவாமல் வாழ்வதே உயர்வாழ்க்கை
    தேடிச்சென்று யாசிப்போம் என நினையும்போதே
    துன்புற்று மனம் உருகிப்போகும் நிலையிலிருக்கிறதே
    தருவதைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ?

    பாடல் 306

    இன்னா இயைக இனிய ஒழிகென்று
    தன்னையே தானிரப்பத் தீர்வதற் – கென்னைகொல்
    காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
    டேதி லவரை இரவு.

    துன்பம் நம்மைச் சேரட்டும் இன்பம்
    தூர விலகட்டும் என வேண்டி
    தன் மனதை நிறைவு செய்வதால்
    தீர்ந்துபோகும் வறுமையெனில் பொருளாசை
    துன்புறுத்தும் மனதுடன் அறிவழிந்து அயலாரைத்
    தேடிச் சென்று இரப்பதால் என்ன பயன்?

    பாடல் 307

    என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
    தென்று மவனே பிறக்கலான் – குன்றின்
    பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
    இரப்பாரை எள்ளா மகன்.

    மலையின் பரப்பு முழுதும் பொன் பரந்து ஓடும்படியான
    மிகு அருவிகளுடை மலைநாட்டு வேந்தனே! இவ்வுலகில்
    எக்காலத்தும் புதியமனிதர் பிறந்துகொண்டேயிருப்பினும்
    என்றும் பிறவாதவன் ஒருவன் யாரெனில் இரப்பாரை
    இகழாது ஆதரிக்கும் மனிதன்.

    பாடல் 308

    புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
    நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
    ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
    மாயானோ மாற்றி விடின்.

    தம் புற உடலை வறுமை வருத்த
    தன் அகத்தேயுள்ள மெய்யறிவை விலக்கி
    அறியாமையை நிலைநிறுத்தி செல்வந்தனை
    அண்டி யாசித்தபின் அவன் கொடுக்க மறுத்தால்
    அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானா?

    பாடல் 309

    ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
    வழிபடுதல் வல்லுத லல்லால் – பாசழிந்து
    செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
    பையத்தான் செல்லும் நெறி?

    வறியவர் மற்றொருவரைச் சார்ந்து சொன்னபடி செய்து
    வணங்கித் தாழ்தல் உலக முறைமையே அல்லாமல்
    ஏதேனும் உதவி செய்யீரோ என இரப்பதைக் காட்டிலும்
    ஏவல் செய்து சார்ந்து வாழும் வாழ்க்கை துன்பம் தருவதோ?

    பாடல் 310

    பழமைகந் தாகப் பசைந்த வழியே
    கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
    பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
    தறாஅச் சுடுவதோர் தீ.

    பழைய நட்பை ஆதாரமாகக் கொண்டு உதவி கேட்டுப்
    பெற வந்தவர்க்கு தான் யாதாகிலும் தகுந்ததைச் செய்ய
    மன நிறைவின்மையால் அதைப் பெற்றுக்கொள்ள அவர்
    மறுப்பாராயின் கொடுத்தவர் மனதில் அச்செய்கை
    நீங்காது நிலைத்து நின்று சுடும் தீ போல் வருத்தும்.

    Share
  • தாழி – இணையவழிக் கருத்தரங்கம்

    தாழி – இணையவழிக் கருத்தரங்கம்

    புதுச்சேரி கபிலன் பதிப்பகம், புதுச்சேரி தாழி அறக்கட்டளை, ஆரோவில் இளைஞர்கள் கல்வி மையம், மதுரை தாழி ஆய்வு நடுவம் இணைந்து நடத்தும் காணொளிக் கருத்தரங்கம். கருத்தரங்கத்திற்கான பொருண்மை – எதிர்கால வாழ்வியலுக்கான தமிழியல் பார்வை என்பதாகும். அதன் வகைமைகளில்   மேலாண்மை என்னும் பொதுத் தலைப்பில்

    கல்வி முறை
    கவின் கலைகள்
    எண்ணும் எழுத்தும்
    பொருள் (செல்வம்)
    சமயம்
    சமூகம், குடும்பம், தனிமனிதன்
    வணிகம்
    தொழில்கள்
    வேளாண்மை
    பல்லுயிர்ச்சூழல்
    அரசு – அரசியல்
    உணவு மருத்துவம்
    பண்பாடு, தொல்பொருள்
    விளையாட்டு வகை
    ஊடகங்கள்
    காணார், கேளார், முடப்பட்டோர், பேணுநர் இல்லோர், பிணி நடுக்குற்றோர், பெண்கள், குழந்தைகள்  நலம் குறித்த மேலாண்மை உள்தலைப்புகளாக  அமையலாம்.

    கட்டுரையாளர்கள் செய்ய வேண்டுவன

    தங்களுடைய விருப்பத்திற்குரிய உள்தலைப்பின் பொருண்மையில் தகுதிவாய்ந்த நல்ல கட்டுரையை உருவாக்குவது.

    கட்டுரையின் அளவு A4 பக்க அளவில் 20 வரிகளுக்கு மிகாமல் 4 பக்கங்களுக்குள் அமைவதாக இருத்தல் வேண்டும்.

    கட்டுரைகளை, கணினி வழியே Microsoft Word கோப்பு வடிவத்தில் ஒருங்குறி எழுத்தில் (Unicode Font) தட்டச்சு செய்து பதிவுப்படிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.

    கட்டுரைகள் வந்து சேரவேண்டிய நிறைவு நாள் 15.07.2020.

    கட்டுரை எழுதுகிற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். அறிஞர் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கு நூலாக்கம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    தெரிவு செய்யப் பெற்ற கட்டுரைகள் நூல் வடிவில் உருவாக்கப் பெறும்.

    அயலகத்திலிருந்தும் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் பொருண்மைக்குட்பட்டுக் கட்டுரைகள் அனுப்பலாம். சிறப்பான கட்டுரைகளை உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தொடர்புக்கு

    தாழி ஆய்வு நடுவம்,
    #9 – அமைதிச் சோலை,
    திருநகர், மதுரை – 625006.
    thazhikapilanilaignarkal@gmail.com
    9487849490

    முழு விவரங்களுக்கு – இணையதளம்
    https://thazhikapilanilaig.wixsite.com/kith

    Share
  • புலவர் மணியன் (1936-2020) – இரங்கற் குறிப்பு

    புலவர் மணியன் (1936-2020) – இரங்கற் குறிப்பு

    டாக்டர் கி. நாச்சிமுத்து

    மூத்த தமிழ் ஆய்வறிஞர், முனைவர், புலவர் மணியன்அவர்கள், இன்று காலை 5 மணிஅளவில் திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம் வயதில் காலமானார் என்ற துன்பமான செய்தியை முனைவர் கே. எஸ். கமலேஸ்வரன் அவர்கள் மூலம் அறிந்து சொல்லொணாத் துன்பமுற்றோம். அவர் அண்மைக்காலமாகப் புற்று நோயால் துன்புற்றுவந்தார்.

    தஞ்சை மாவட்டம் திருமயிலாடியில் மரபு வழித்தமிழ்ப்புலமைக் குடும்பத்தில் 29.04.1936 பிறந்த முனைவர் திரு புலவர் மணியன் அவர்கள் பெரும்புலவர்ச. தண்டபாணி தேசிகரிடம் தமிழ் கற்ற பெருமையினர். அவருடன் இணைந்து அக்காலத்தியேசங்க இலக்கிய அகராதியை வெளியிட்ட புலமையாளர். அவர் தொடர்ந்து சிலம்புக்கும் மணிமேகலைக்கும் அத்தகைய கருவிநூல் சமைத்தவர். தொடர்ந்து அவர்கள் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியனார் வழிகாட்டச்சங்க இலக்கிய வினை வடிவங்கள் என்ற அரிய அகராதித் தொகுப்பைச் செய்து சங்க இலக்கிய மொழிக்கு அரிய ஒரு கருவிநூலைப் படைத்துத் திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம்வழிவெளியிட்டார். தொடர்ந்து அவர் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஆதரவில் தேவாரம் சொல்லகராதி, அருட்பா அகராதி, திருமந்திர அகராதி, ஒன்பதாம் திருமுறை அகராதி, பத்தாம் திருமுறை அகராதி என்று கருவிநூல்பணியில் முனைந்து செயல்பட்டுப் பல அரிய கருவிநூல்களை வழங்கியவர். அவர் அரிதின் முயன்று தொகுத்து வெளியிட்டுள்ள கொங்குவட்டாரச் சொல்லகராதி பற்றியும் இங்கு விதந்து குறிப்பிடவேண்டும். அதன் திருந்திய பதிப்பொன்றைத்தான் இறக்குந்தறுவாயிலும் கவனமுடன் வெளியிட்டதை நாம் மறக்க முடியாது. அவர் தயாரித்துள்ள பதினொராந்திருமுறை அகராதி அருட்செல்வர் மகனார் திரு.ம.மாணிக்கம் அவர்கள் ஆதரவில் அண்மையில் வெளியாகியிருக்கிறது. அவர் தமிழ்ப்பணிக்காக கற்பகம் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிய சிறப்புடையவர். பல நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர் புலவர் மணியனார் அவர்கள். துணைவியை இழந்த முதுமைத் துன்பத்திலும் தமிழைத்துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

    வைணவ இலக்கிய மரபில் நாலாயிரம் முதலிய தோத்திரப்பாடல்களுக்கு உரை மரபு சைவத்தில் வேரூன்றவில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டிற்குப்பின் இந்நிலை மாற்றமடைந்தது. திருவாசகம் போன்றவற்றை போப் போன்றவர்கள் மொழி பெயர்த்த பின் தமிழர்களும் உரை முயற்சியில் இறங்கினர். பண்டித மணி கதிரேசஞ் செட்டியார், திருவாசக மணி பாலசுப்பிரமணியன் போன்றோரைத் தொடர்ந்து இத்துறையில் முயல்பவர்களைக் காணலாம். அத்துடன் செங்கலவராய பிள்ளை அவர்களின் ஒளிநெறிவரிசை ஆழமான ஒருபுலமை மரபுசைவ இலக்கிய ஆராய்ச்சியிலும் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. அப்புலமை மரபின்கான் முளையாகத் தோன்றிப் பேரா.வ.ஐ.சுப்பிரமணியம் போன்றவர்கள் வழிப்புது நெறிகளை ஏற்றுத் தமிழ்ப்புலமை மரபைச் செழுமைப்படுத்தியவர் புலவர் மணியன் என்ற மணியான புலவர்மணி அவர்கள். ஆராய்ச்சிக்கு உரிய அரிய கருவிநூல்களை உருவாக்குவது என்ற அடிப்படைத் தமிழாய்வை வளப்படுத்தியவர் அவர். நிறுவன ஆதரவு, அரசு ஆதரவு கிடைக்காமல் நல்ல தமிழறிஞர்கள் திருமடங்களையும் புரவலர்களையும் நாடிச் சென்று தம்புலமையை வெளிப்படுத்த முயன்று உரிய சிறப்புக்களைதக்க நேரத்தில் பெறாமற்போன வரலாற்றிற்குச் சொந்தக்காரர் மணியனார் அவர்கள்.

    சோழ வளநாட்டில் பிறந்திருந்தாலும் கொங்கு வளநாட்டைத் தன் தாயகமாகக் கொண்டு அவர் கொங்கு நாட்டில் விஜயமங்கலம் போன்ற இடங்களில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் பணி நிறைவில் அவர் கோவையில் குடி புகுந்து ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்து அவருக்குச் சிறப்புச் செய்வது கொங்கு மண்ணின் மாண்புக்குத்தக்கது.

    அவர் மறைவு தமிழாய்வுக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார், நண்பர்கள் ஆய்வாளர்கள் முதலிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் உயிர் இயற்கையில்கையில் அமைதியாக உறங்கட்டும்.

    Share
  • (Peer Reviewed) கவிதைக் கட்டுமானத்தில் யாப்பின் ஆளுமை

    (Peer Reviewed) கவிதைக் கட்டுமானத்தில் யாப்பின் ஆளுமை

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    முன்னுரை

    தமிழிலக்கியப் பெரும்பரப்பு கவிதைகளுக்குரியது. இருபதாம் நூற்றாண்டின் இறக்குமதிக் கவிதை வடிவமான ‘புதுக்கவிதை’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பட்டபாடு பெரும்பாடு. இந்தப் பாட்டிற்குப் பண்டிதர்கள் காரணம் என்பது சரியன்று. கவிதை பற்றிய புரிதல் தெளிவாக அமையாமற் போனதே காரணம். கவிதையை யாப்பை வைத்து அளந்ததனால் ஒரு வகை குழப்பமே நிலவியது. அது இன்றைக்கும் தொடர்வதாகவே தோன்றுகிறது. ‘யாப்பில்லாமல் போனால் அது புதுக்கவிதை’ என்னும் அளவிற்கு அதன் வடிவம் வரையறைக்குள்ளானது. அதனின்றும் வேறுபடுத்திக் காட்ட யாப்பு உள்ளவையெல்லாம் மரபுக் கவிதையானது. இதனால் ‘கவிதை என்ன ஆனது? என்பது பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  சங்கக் காலம் முதல் இன்றுவரை “யாப்பென்னும் தமிழ்க்கவிதையின் கட்டுமான மூலம் தமிழக்கவிதைகளைத் தனது செல்வாக்கோடு கூடிய அரவணைப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கிறது” என்னும் ஒருவரிக் கருதுகோளை முன்வைத்து இக்கட்டுரை அமைகிறது.

    கட்டுரைப் பரிமாணம்

    ‘கவிதைக் கட்டுமானத்தில் யாப்பின் ஆளுமை’ என்னும் தலைப்பில் அமையும் இக்கட்டுரை சங்கக் காலம் தொடங்கி இற்றை நாள்வரை தமிழின் யாப்பு தமிழ்க்கவிதைகளின்மேல் செலுத்தும் ஆளுமை பற்றிச் சுருக்கமாக ஆராய்கிறது. தொடைவிகற்பங்கள், பாக்கள், அவற்றின் இனம் முதலியன கவிதைப் பொருண்மைகளைத் துல்லியமாக வெளிப்படுத்துவதில் செலுத்தும் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அமையவே தமிழ்யாப்புக்கும் தமிழ்க்கவிதைகளுக்குமான யாப்புறவு பற்றிய புரிதல் மேலும் விரியக்கூடும்.

    இலக்கிய வடிவங்களில் கவிதை

    செய்யுள், நாடகம், சிறுகதை, புதினம் என இலக்கிய வடிவங்கள் பலவாம். அவற்றுள் செய்யுள் அல்லது கவிதையே சிறந்த வடிவம் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. ‘செய்யுள்’ என்பதற்கும் ‘கவிதை’ என்பதற்குமான நுண்ணிய வேறுபாட்டினை அறிஞர் மு.வ. ஆராய்ந்திருக்கிறார். மேலும் ‘புதுக்கவிதை’ என்பது போலப் ‘புது நாவல்’ ‘புதுச் சிறுகதை’, ‘புது நாடகம்’ என்னுமாறு யாரும் அழைப்பதில்லை. படைப்பாளியின் உணர்ச்சியனுபவத்தை நேரடியாகப் படிப்பாளிக்கும் பரிமாறும் பேராற்றல் கவிதைக்கு இருப்பதே அதன் வடிவச் சிறப்புக்கான  அடிப்படைக் காரணம் எனலாம்.

    “கலையின் வடிவமே கலைஞரின் உள்ளத்தையும் கற்பவரின் உள்ளத்தையும் தொடர்பு படுத்துவதாகும்” 1

    என்பது சிந்திக்கத்தக்க கருத்தாகும்.

    தமிழ்க்கவிதை வடிவங்கள்

    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனக் கிடந்த ஐவகைப் பாக்களும், மருட்பாவைத் தவிர்த்த பிற பாக்களுக்குரிய இனங்களும் தமிழ் நெடுங்கவிதைப் பரப்பினைத் தம் ஆளுகைக்குள் வைத்திருந்தன. இவற்றுள் அடங்காத ஆனால் இவற்றினும் நெகிழ்ச்சியினையுடைய நாட்டுப்புறக் கவிதை வடிவங்களோ இளங்கோவடிகள் முதலிய கவிஞர் பெருமக்களையும் யாப்பினை எதிர்ப்பதாகவோ மீறுவதாகவோ தமக்குத் தாமே கூறிக்கொள்ளும் இன்றைய புதுக்கவிதைகள் வரையும் தனது ஆக்டோபஸ் கரங்களை நீளச் செய்திருக்கின்றன.

    வடிவம் – வரையறை – பயன் – இன்றியமையாமை

    உணர்ச்சி, கருத்து, கற்பனை, வடிவம் என்பன இலக்கியக் கூறுகள் என்பது மேனாட்டுக் கவிதைக் கொள்கை. இது தமிழியலுக்கு எந்த அளவுக்குப் பொருந்தி வரும் என்பதற்கான ஆராய்ச்சி இன்னும் தொடங்கப் பெற்றதாகத் தெரியவில்லை. காரணம் அறிஞர் மு.வ. தொடங்கி இற்றை நாள் வரை திறனாய்வுக் கொள்கைகளை அல்லது நெறிகளை வடிவமைத்தோர் பெரும்பாலும் மேனாட்டுக் கொள்கைகளாலேயே தமிழ்ப்படைப்புக்களை அளந்தறிந்து வந்துள்ளனர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் இலக்கியக் கொள்கைகள் பற்றிய புதிய சிந்தனை கால்கொண்டதும் இங்கே கருத்தில் இருத்த வேண்டிய செய்தியாகும். கவிதைக்கு உணர்ச்சி தலையாயது என்பது உண்மையாயினும் மேனாட்டு இலக்கிய உணர்ச்சிக்கும் தமிழ்க்கவிதை உணர்ச்சிக்கும் நிலவும் நுண்ணிய வேறுபாடு நோக்கத்தக்கதாகும். இது பற்றிப் பின்னால் விவாதிக்கப்படும். கவிதைக்கு வடிவம் என்பது கவிஞனின் உணர்ச்சி அனுபவத்தை நுகர்வோனுக்குக் கொண்டு செல்லும் காட்சி ஊடகமாக இருப்பதாகும். வடிவம் இல்லையாயின் அனுபவத்திற்கான வழி இல்லாது போய்விடும்.

    “கவிஞர் தன் எண்ணத்தையும் உணர்ச்சியையும் சுவைஞருக்கு உணர்த்த முற்படும் ஆழ்ந்த முயற்சியே இலக்கிய வடிவமாகும். …………………………..இலக்கியம் அழகு பெறுவது வடிவத்தால்” 2

    உணர்ச்சிக்கும் கருத்துக்கும் இசைவில்லாவிடினோ அவற்றுள் முரணேதும் அமைந்துவிடினோ ‘படைப்புச் சிதைவு’ தவிர்க்க இயலாததாகிவிடும்.

    “ஓர் இலக்கியம் சிறந்ததா இல்லையா என்பது அதனுள் அமைந்த உணர்ச்சியின் விழுப்பத்தைப் பொருத்தது. ஓர் இலக்கிய நூல் நன்கு அமைந்ததா இல்லையா என்பது உணர்ச்சிக்குத் தரப்பட்ட வடிவத்தைப் பொருத்தது.” 3

    என்பது அறிஞர் மு.வ. அவர்களின் வடிவத்தைப் பற்றிய சிந்தனை முத்துக்களில் ஒன்றாகும்.

    கவிதையும் யாப்பும்

    கவிதைக்கு யாப்பு அடிப்படையாக அமைந்ததற்குத் தலையாய காரணம் அதன் ஒலியமைதியே. ‘இன்ன எழுத்துக்களால் இன்ன அசைகள் அமையும்’, ‘இன்ன அசைகளால் இன்ன சீர்கள் உருவாகும்’, ‘இன்ன சீர்களின் இசைவால் இன்ன தளைகள் பிறக்கும்’ என்றெல்லாம்  விதிக்கப்பட்டிருக்கும் யாப்பியல் விதிகளே மேற்கண்ட கூற்றினை உறுதி செய்யும்.  ஒலியின்பமே யாப்பின் நோக்கம்.  யாப்பே ஒலியாகாது. யாப்பு காரணம். ஒலி காரியம். இந்தப் புள்ளியில்தான் கவிதையினின்றும் உரைநடை வேறுபடுகிறது. உரைநடையில் ஒலியின்பம் பொருண்மையை நீர்த்துப் போகச் செய்துவிடும். கவிதையிலோ அதன் குழைவுக்கு மெருகேற்றி வெளிப்பாட்டு உணர்ச்சியைத் துல்லியமாகப் பதிவு செய்துவிடும். அளபெடையின் நுட்பமே இதுதான். வெறும் இடைச்சொற்களை வைத்துக் கொண்டு ‘ஒண்ணுதற் கோஓ உடைந்ததே”4 எனத் திருவள்ளுவர் கவிதைத் தொழில் செய்திருப்பதற்கும், இலக்கண நூற்பாக்களைக் கவிதைபோல அமைத்துக் காட்டியதற்கும் இதுவே தலையாய காரணம் என அனுமானிக்கலாம்.

    இலக்கணத்தையும் ஆட்கொண்ட யாப்பு

    தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைக் கட்டுமானத்தைப் பற்றிய ஆய்விலக்கணம் ஆகும் என்பது இக்கட்டுரையாளர் கருத்து. அது தனி ஆய்வுக்குரியது. பொருளதிகாரத்தில் கவிதையின் புறக்கட்டுமானத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கும் பகுதி செய்யுளியல் ஆகும். அதில் கூறப்பட்டுள்ளது பல தொடை பற்றிய இலக்கணங்கள். தமிழ் இலக்கண நூற்பாக்களைத் தம் ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளன என்பதை அறியமுடிகிறது.

    ‘கண்ணுக்கு இமைகாவல்’ என்பது போலக் கவிதைக்கு யாப்பு காவல் என்றாலும் பொருந்தும். கண்ணுக்கு வெளியே இருந்து இமை செய்யும் பணியைக் கவிதைக்கு உள்ளேயிருந்து யாப்பு செய்கிறது. ஊராட்சி உறுப்பினர் தொடங்கி நாட்டின் தலைமையமைச்சர் வரை செல்லும் மக்களாட்சிக் கட்டமைப்பும் தமிழ்க்கவிதையின் யாப்பியல் கட்டமைப்பும் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் காணலாம். எழுத்தால் அசை, அசைகளால் சீர், சீர்களால் தளை, தளைகளால் ஒலிவிகற்பம். இந்த நிரலில் அமைவதுதான் யாப்பியல் அமைந்த கவிதை. எழுத்தில் தொடங்கிப் பாக்களாலும் இனங்களாலும் வளர்ந்து நூலாக நிறைவடையும் சிறப்புடையது தமிழ் யாப்பு. விதிக்கப்பட்ட நெறியினின்று தவிர்க்க இயலாத காரணங்களினால் நெடுவழிப் பயணத்தில் தாயின் கைப்பிடியை நழுவி விலகிச் செல்லும் சிறார் போல விலகிச் செல்வனவற்றையும் பாசத்துடன் அரவணைத்துக் கொள்ளும் பாங்கு தமிழ் யாப்பிற்கு உண்டு. புறனடை, ஒழிபியல் என்றெல்லாம் தமிழ் இலக்கணம் இதுபற்றிப் பேசியிருக்கிறது.

    யாப்பின் கொடுமுடியான ஒலியமைதிக்குக் கவிதைகள் மட்டுமன்று இலக்கணநூல்களே மயங்கி நின்றிருந்ததை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஓரடி முதல் ஐம்பத்து நான்கு அடிகள் வரை  நீண்டிருக்கும்  தொல்காப்பிய நூற்பாக்களில் தென்படும் யாப்பின் ஆளுமை, இலக்கியத்திற்கு மட்டுமன்று இலக்கணக் கட்டமைப்பிற்கும் இலக்கிய அமைதிக்கும் அதன் இன்றியமையாமையை உணர்த்தி நிற்கிறது.

    இலக்கண நூற்பாக்களில் எதுகையின் ஆளுமை

    ‘எகனை மொகனை’ என்னும் வழக்காறு புலனெறிவழக்கத்தில் எதுகை, மோனை எனத் திரியும். தொல்காப்பியத்தில் நூற்றுக்கணக்கில் அமைந்துள்ள ஓரடி நூற்பாக்கள் இலக்கணத்தை ஒலியின்பத்தோடு புரிய வைப்பவையாக உள்ளன. அறிவுக்கும் செவிக்கும் ஒருசேர மகிழ்ச்சியைத் தருவனவாக அவை அமைந்துள்ளன.

    “ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப”5

    “வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய”6

    “ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே”7

    “எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார்”8

    என்பன போன்ற அமைப்புக்களையுடைய நூற்பாக்களும் இடையியல், உரியியல் ஆகியவற்றுள் அமைந்துள்ள நூற்பாக்களும் மேற்கண்ட ஒலியின்ப உண்மையை உணர்த்தக் கூடும். பிற்காலத் தமிழ் யாப்பியல் கொள்கைப்படி நாற்பத்து மூன்று தொடை விகற்பங்களுள் ‘பொழிப்பு’ என்பது ஒலியின்பத்தை மிகுத்துக் காட்டப் பயன்படுத்தப்படும் கவிதை உத்தியாகும். அப்பொழிப்பெதுகையைத் தொல்காப்பியம் மேற்கண்ட நூற்பாக்களில் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.

    முற்றெதுகைகளால் கண்ட முழுமை

    நான்கு சீர்களால் அமைந்த அடி அளவடி எனப்படும். தொடைவிகற்பங்கள் அளவடிக்கே உரியவை. அவற்றுள் ‘முற்றெதுகை’ குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றித் தற்காலப் புதுக்கவிதைகளிலும் முற்றெதுகைகள் தங்களது ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறது.

    “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை” 9

    “எத்தனை நாள்? எத்தனையாண்டு?
    எத்தனைப்போர்? எத்தனைப் பேர்?
    எத்தனைத்தோள்? இந்திக்கு எழுவதோ?
    எத்தனைப்பேச்சு எத்தனைத்தாள்?
    எத்தனைப்பாடு எத்தனைப் பாட்டு?
    எத்தனைத்தாம் எழுதிக் குவிப்பதோ?”10

    எனத் திருவள்ளுவரும் தனித்தமிழ்ப் பாவலர் பெருஞ்சித்திரனாரும் பயன்படுத்திய பாங்கு மேலே சுட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவர் எழுதியது குறள் வெண்பா. பெருஞ்சித்திரனார் எழுதியது சந்தப்பா! எடுத்துக்காட்டுக்காகச் சொல்லப்பட்டவைகள் இப்படியிருக்கக் கணிதச் சூத்திரங்களாக இருக்க வேண்டிய இலக்கணங்களைக் கவிதைக்கனிகளாக மாற்றித் தந்திருக்கும் தொல்காப்பியரின் கவிப்பாங்கு சிலவற்றைக் காணலாம்.

    “மின்னும் சின்னும் ஆனும் ஈனும்
    பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
    அன்ன இயல என்மனார் புலவர்” 11

    “நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
    அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல”12

    மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
    அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல”13

    மேற்கண்ட தரவுகளிலிருந்து இலக்கணத்தை வறட்சி வெளிப்பாடாகக் கருதாமல் செவிநுகர் கனிகளாக ஆக்கித் தரவேண்டும் என்னும் பழந்தமிழ் இலக்கண ஆசிரியர்களின் கற்பித்தல் உத்தி பெறப்படுவதாகக் கொள்ள இயலாதா? இந்த உத்திக்கு அவர்களுக்கு யாப்பியல் கூறுகளுள் ஒன்றான எதுகைதான் பயன்பட்டிருக்கிறது.

    எதுகைக்காக எதுவும் செய்யலாம்

    தொல்காப்பியப் புறத்திணைகளுள் ‘இயங்குபடை அரவம்’ என்பதும் ஒன்று. இது வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொதுவான துறை. இத்தொடரை ‘இயங்குபடை அரவம்’ எனவும் ‘படையியங்கு அரவம்’ எனவும் இருவேறு முறைகளில் தொல்காப்பியர் கையாண்டிருப்பது தெரியவருகிறது.

    “படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
    புடைகெடப் போகிய செலவே”14

    “இயங்குபடை அரசம் எரிபரந் தெடுத்தல்
    வயங்கல் எய்திய பெருமை”15

    ஐந்தே நூற்பாக்களின் இடைவெளியில் தொல்காப்பியர் ஒரு தொடரை இருவேறு நூற்பாக்களில் இருவேறு வகையாக அமைத்திருக்கும் பாங்கு எதுகையில் அவர்க்கிருந்த ஈர்ப்பையும் கவிதையில் வெளிப்படும் வடிவழகு இலக்கண நூற்பாக்களிலும் அமைதல் வேண்டும் என்னும் அவருடைய அவாவையும் ஒருசேரப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

    குற்றியலுகரமா? குன்றியல் உகரமா?

    கவிதையிலக்கணத்துள் பின்பற்றப்படும் வலித்தல் முதலிய விகாரங்களாகிய ஒலியமைதிகளைத் தொல்காப்பியர் தாம் எழுதிய இலக்கண விதிகளிலேயே பின்பற்றியிருப்பதை அறிய முடிகிறது.

    “ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த
    குன்றிய லுகரத்து இறுதியாகும்”16

    குற்றியலுகரம் என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது என உரையாசிரியர்கள் விளக்கமளிக்கும் நிலை இருந்துள்ளது.

    யாப்பு உணர்ச்சிக்குத் தடுப்புவேலியா?

    நீர்த்துப் போன எண்சீர் விருத்தங்களை எழுதிவைத்துக் கொண்டு “நாங்கள் மரபுக்கவிஞர்கள்” என்று மார்தட்டிக் கொண்டு சிலர் இருக்க ’நாங்கள் புதுக்கவிதைப் படைப்பாளர்கள்’ என்று ஒரு கூட்டம் வந்தது. இந்த அணியினரின் தலைமைப் பொறுப்பாளர்கள் சிலர் மரபு பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்கள். முறையான தமிழ்க்கல்வி பெற்றவர்கள். இவர்கள் செய்த ஒரு செயல்தான் புதுக்கவிதை கவிதையாக வளராமல் போனதற்குத் தலையாய காரணமாக அமைந்தது. அப்படி அவர்கள் என்ன சொன்னார்கள்? “யாப்பு கவிதையுணர்ச்சிக்குத் தடுப்பு வேலியாக இருக்கிறது”. இதுதான் அவர்கள் சொன்ன சேதி. இந்தச் சேதியின் நம்பகத்தன்மை பற்றிய ஆராய்ச்சி இல்லாமலேயே பின்னால் வந்தவர்கள் ‘கவிதைக்கு யாப்பே தேவையில்லை’ என்றும் முடிவுக்கு வந்து “ஏடும் எழுத்தாணியும்” கையிலிருந்தால் அவன் கவிஞன் என்னும் பெருமையைத் தாங்களாகவே சூட்டிக் கொண்டார்கள். தமிழகத்தில் கவிஞர்கள் எண்ணிக்கை வெட்டுக் கிளிகளைப்போலப் பரந்தும் கவிதைகள் அன்னப் பறவைகளைப் போலக் குறைந்தும் போனதற்குப் பத்து ரூபாய்க்குப் பால்பாயிண்ட் பேனா வாங்கியவனெல்லாம் பாட்டு எழுதியதுதான் காரணம். சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் யாப்பமைப் பாடல்களில் மானுடத்தின் அரிய உணர்ச்சியாகிய பக்தி உணர்ச்சியைத் தேனொழுகப் பாடி, ஊனுருகச் செய்திருக்கின்றனர். மிகக் கடுமையான யாப்பெனக் கருதப்படும் கட்டளைக் கலித்துறையில் அமைந்த ‘அபிராமி அந்தாதி’, பல்வகை யாப்புக்கள் அடங்கிய பாடல்களின் தொகுப்பான மணிவாசகரின் ‘திருவாசகம்’, வள்ளற்பெருமானின் திருவருட்பா முதலிய இலக்கியங்கள் எல்லாம் உணர்ச்சிப் பிழிவு என்பதை இவர்கள் ஏன் சிந்திக்கவில்லை என்பது ஒரு புதிராகவே உள்ளது. குமரகுருபரரின் அனைத்துப் படைப்புக்களும் யாப்புக்குள் செறித்து வைக்கப்பட்டுள்ள உணர்ச்சிப் பிழம்புகளே என்பதைக் கற்றார் உணர்வர். எல்லாவற்றினும் உச்சமாக யாப்பும் உணர்ச்சியும் கைகோத்த அரிய நிலையில் அருணகிரியார் பாடிய திருப்புகழ் வண்ணம் இவர்கள் அறியாததா? இன்னும் சொல்லின் விரியும். யாப்பு எந்த நிலையிலும் உணர்ச்சிக்குத் தடுப்புவேலியாக இல்லை என்பதற்கு இவையே போதுமான சான்றுகளாகலாம்.

    எதுகைக்கு வந்த வாழ்வு

    எதுகையில்லாத ஒரு பாடலை எண்ணிப் பார்க்கவே முடியாது என்ற அளவிற்குத் தமிழ்க்கவிதைகளில் அதன் ஆளுமை நிலவுகிறது.  ஒலி நயம், ஒலி ஒற்றுமை இவற்றை நோக்கமாகக் கொண்டு அமையும் அத்தகைய அமைப்பாளுமைகளை உரையாசிரியர்கள் கண்டறிந்து உணர்த்தியுள்ள பாங்கு உளங்கொளத்தக்கது. சான்றாக,

    “உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென் றைந்தும்
    அடையாவாம் ஆயம் கொளின்”17

    என்னும் குறட்பாவில் காணும் வைப்புமுறை ஒளி, கல்வி, செல்வம் ஊண், உடை என்றே இருத்தல் வேண்டுமெனினும் ‘அடையாவாம்’ என்னும் எதுகைக்கேற்ப அமைந்தது என்பதனை உரையாசிரியர் பரிமேலழகர்,

    “இச்சிறப்பு முறை செய்யுள் நோக்கிப் பிறழ நின்றது”18
    என எழுதிக் காட்டுகிறார்.

    “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்”19

    என்னும் குறட்பா விளக்கவுரையில் “மடி, நெடுநீர், மறவி, துயில்” என்னும் நிரல் பிறழ நின்றமைக்கு,

    “முன்னிற்கற்பாலதாய ‘மடி’ செய்யுள் நோக்கி இடைநின்றது”20

    என எழுதிக் கவிதைக்கு எதுகையால் அமையும் ஒலியின்பத்தைக் குறிப்பாகச் சுட்டுவார் பரிமேலழகர். ‘எழுவாய் – செயப்படுபொருள் – பயனிலை’ என்னும் உரைநடைத் தொடரமைப்பு செய்யுளில் மாறுபடலாம் என்பது நெறி. கவிதையுள் அவ்வாறு மாறுபடுவதற்கான காரணங்களுள் தலையாயது எதுகையினால் அமையும் ஒலியின்பம் என்பது கருத்து.

    கவிதையில் வலித்தலும் மெலித்தலும்

    தொடையின்பத்திற்காக எதுகை திரியும் என்றால் அதே தொடையின்பத்திற்காக வலித்தல், மெலித்தல் விகாரங்களும் எதுகையை ஆளுகின்றன என்பதையும் காணமுடிகிறது.

    “இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு”21

    என்னும் குறட்பா உரையில்,

    (இருள் நீக்கி என இருக்க வேண்டியது) ‘நீங்கி’ எனத் தொடைநோக்கி மெலிந்து நின்றது., நீங்க என்பதன் திரிபெனினும் அமையும்” 22

    என எழுதிக் கவிதையின் புறக்கட்டுமானத்தைப் பற்றிய தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் பரிமேலழகர். முதற்சீரும் நான்காம் சீரும் எதுகையால் ஒன்றுபடின் ஒரூஉ எதுகையாகலின் அது பங்கப்படக் கூடாது என்பது பரிமேலழகரின் கருத்து. நூலின் உள்ளடக்க நுண்பொருளைக் காணவேண்டிய உரையாசிரியர். அத்தோடு அதன் புறக்கட்டுமானத்தையும் இலக்கண மற்றும் தொடையமைதியையும்  நோக்கி உரையெழுதியிருப்பது கவிதையின் மேல் நிலவும் யாப்பின் ஆளுமையைக் காட்டுவதாகக் கருதலாம்.

    யாப்புக்குத் தலைவணங்கும் திருவள்ளுவர்

    கருத்து நிலைக்கு முதன்மை, ஒலியின்பம் காத்தல் என்னும் கவிதைக் கொள்கைகள் திருக்குறளில் சீராக அமைக்கப்பட்டிருந்தாலும் எந்த நிலையிலும் யாப்பமைதி சிதைந்து விடக்கூடாது என்பதையே தமது தலையாய வடிவக் கொள்கையாகத் திருவள்ளுவர் கொண்டிருந்தார் என்பதற்குப் பல சான்றுகளைக் காட்ட இயலும்.

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை”23

    என்னும் குறட்பாவைத் தமிழகப் பேருந்துகள் பலவற்றிலும் கண்டிருக்க முடியும். குறளறிந்த பலரும் இக்குறட்பாவை,

    “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வாரைப் பொறுத்தல் தலை”

    என்றே மேடைகளில் முழங்குவதையும் செவிமடுத்திருக்கலாம்.  உண்மையில் இக்குறட்பா மேடையில் முழக்கத்தில் சொல்லப்படுவதுபோல் அமையவில்லை. அப்படி அமைந்திருந்தால் யாப்பமைதியைத் திருவள்ளுவர் காக்கவில்லை என்னும் அடாத பழி அவருக்கு வந்திருக்கும். முதலடியின் முதற்சீருக்கு ஏற்ப இரண்டாவது அடியின் முதற்சீர் அமைதலே முறை என்று எண்ணியிருந்தால் அவ்வடி,

    “இகழ்வாரைப் பொறுத்தல் தலை”

    என அமைத்திருப்பார். அவ்வாறு அவர் அமைத்திருந்தால் காய்முன் நிரைவந்து வெண்பாவில் வரக்கூடாதென விலக்கப்பட்ட கலித்தளைத் தட்டுச் செப்பலோசைக்குச் சிதைவு ஏற்பட்டிருக்கும்.

    தொடக்கக்காலக் கவிதைக் கட்டுமானங்கள்

    இலக்கண நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களின் இலக்கண அமைதி கொண்டவையே. பெரும்பாலும் ஒருவரி நூற்பாவும் ஆசிரியப்பா ஒலியைக் கொண்டே அமைந்திருக்கும். சங்க இலக்கியங்கள் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சியடி விரவிய நிலையில் அமைந்த ஆசிரியப்பா என்ற அளவிலேயே கட்டுமானம் செய்யப்பட்டன. இரட்டைக்காப்பியங்ள் ஆசிரியப்பாவினால் அமைந்தாலும் சிலப்பதிகாரத்தின் கவிதைக் கட்டுமானம் வரிப்பாடல்களையும் அணைத்துச் செல்கிறது. பத்துப்பாட்டின் இறுதியிலும் சிலம்பின் ஒவ்வொரு காதையின் இறுதியிலும் காணப்படும் வெண்பாக்கள் கவனத்திற்குரியன. சீவகசிந்தாமணி யாப்பின் தளர்ச்சியைக் காட்டுவதுபோல விருத்தப்பாவில் அமைந்தது. கம்பராமாயணமும் வில்லிபாரதமும் பெரியபுராணமும் விருத்தத்தை அதன் உச்சிக்கே கொண்டு சென்றன. தொடர்ந்து வந்த பதிகங்களும் பாசுரங்களும் விருத்தங்களால் அமைந்தன. தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் யாப்பின் அனைத்துவகைக் கூறுகளையும் கொண்டிலங்கின.

    சிந்தையள்ளும் சிந்து

    தொல்காப்பியச் செய்யுளியல் தமிழ்ச் செய்யுள் உலகில் ‘வடிவக்கருவியாக’ மிக மிகக் குறைவாகவே செயல்பட்டுள்ளது.  தொல்காப்பியம் கற்றாரும் ‘செய்யுளியல் நீங்கலாகவே’ கற்றனர். இதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது அமிதசாகரரால் எழுதப்பட்ட ‘யாப்பருங்கலம்’, ‘யாப்பருங்கலக்காரிகை’ ஆகிய இரண்டு நூல்களே.  இவை தோன்றிய காலத்திற்குப் பிறகு தமிழ்க்கவிதை உலகம் பெரும்பாலும் இவற்றின் ஆளுகைக்கே உட்பட்டிருந்தமையை அறியலாம். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் சிந்து என்னும் வடிவத்திற்கான இலக்கணம் கிட்டுமாறு இல்லை. அசை, சீர், தளை என்னும் வகைபாடுகளை முற்றிலும் புறக்கணித்து ஒலியமைதியை மட்டுமே அளவாகக் கொண்ட சிந்திலக்கிய இலக்கணம் பற்றிப் புதுச்சேரி அறிஞர் முனைவர் திருமுருகன் பெருமளவில் ஆராய்ந்திருப்பதாகத் தெரிகிறது.  ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பாரதிதாசன் தனது நண்பரான சுப்பிரமணிய பாரதியைப் பாராட்டுவார். எனினும் சிந்துக்குத் தந்தை சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரே. இது இதுவரைக் கிட்டியிருக்கிற தரவுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் செய்த முடிவாகும். இருபத்து நான்கு பாடல்கள் மட்டுமே கிட்டியுள்ள ரெட்டியாரின் சிந்துக்கள் தரும் ஓலியின்பம் கேட்டு மாளாது. அடுத்த சில பத்திகளில் ரெட்டியாரின் சிந்துக்களின் தாக்கம் தமிழ்க்கவிதை உலகை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள உதவக்கூடும். சிற்றிலக்கியங்களிலும் யாப்பியல் நூல்களிலும் அறியப்படாத மக்கள் வாழ்வியலோடு தொடர்புடைய சிந்தின் கட்டமைப்பு ஒலியழகின் கொடுமுடி எனலாம்.

    சிந்துக்குத் தலைவாசல்

    அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து பின் வந்த இலக்கியங்களைப் பாதித்த வரலாற்றைப் பார்ப்பதற்கு முன் திரிகூடராசப்பக் கவிராயர் படைத்த திருக்குற்றாலக் குறவஞ்சியின் சிந்துக்களை மறந்துவிட இயலாது.

    “இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
    கொண்டையாள் – குழை
    ஏறி யாடிநெஞ்சைச் சூறையாடும் விழிக்
    கெண்டையாள்
    திருந்து பூமுருக்கி னரும்பு போலிருக்கும்
    இதழினாள் – வரிச்
    சிலையைப் போல்வளைந்து பிறையைப் போலிலங்கு
    நுதலினாள்”24

    “கல்லுப் பதித்ததங்கச் செல்லக் கடகமிட்ட
    செங்கையாள் – எங்கும்
    கச்சுக் கிடக்கினும் தித்திச்சுக் கிடக்குமிரு
    கொங்கையாள்
    ஒல்லுங் கருத்தர் மனக் கல்லுஞ் சுழிக்குமெழில்
    உந்தியாள் – மீதில்
    ஒழுங்கு கொண்டுள்ளத்தை விழுங்கு சிறிய ரோம
    பந்தியாள்”25

    என்னும் வசந்தவல்லியின் தோற்ற வண்ணனையும்,

    “சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
    நின்றாடப் – புனை
    பாடக முஞ்சிறு பாதமு மங்கொரு பாவனை
    கொண்டாட – நய
    நாடக மாடிய தோகை மயிலென நன்னகர்
    வீதியிலே – அணி
    ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
    அடர்ந்துபந் தாடினளே.”26

    என்னும் வசந்தவல்லி பந்தடித்த வண்ணனையும் சொற்கள் நேரடியாக உணர்த்தும் பொருளினின்றும் கூடுதலானதொரு உணர்ச்சியைப் பொருளாக உணர்த்தி நிற்பதைக் காணலாம். இந்த ஒலி நுட்பமே யாப்பின் கொடுமுடி. யாப்பினால் பெறப்பட வேண்டிய ஒலி நுட்பத்தை சிந்துப்பாடல்கள் வாழ்வியல் அசைவுகளிலிருந்து பெற்றிருப்பதைக் காணலாம். பா, அதன் இனங்களுக்குச் சீரிலக்கண வரையறை போலச் சிந்துக்குச் செய்து காட்ட இயலாது.  மெட்டுக்குப் பாட்டெழுதும் தற்காலச் திரையிசைப் பாடல்களின் இசைத்தொழில் நுட்பம் சிந்திலிருந்தே தொடங்குவதாகவும் கொள்ளலாம். ஒலியைத் தத்தகாரத்தில் பாடிக்காட்டுவது இதன் அடிப்படையாகலாம்.

    ரெட்டியாரின் அடிப்பொடிகள்

    குற்றாலக் குறவஞ்சியில் சிந்து தொடங்கியிருந்தாலும் சுப்பிரமணிய பாரதி ஏற்படுத்திய கவிதைத் தாக்கத்தைப் போல் சிந்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது ரெட்டியாரின் காவடிச்சிந்தே ஆகும். இன்றைய திரைப்படப்பாடல்கள் வரை காவடிச்சிந்தின் தாக்கத்தை ஆராய்கிறபொழுதே யாப்பின் உச்சமான ஒலி எவ்வாறு தமிழ்க்கவிதைக் கட்டுமானத்தைத் தன் ஆளுகைக்குள் வைத்திருக்கிறது என்பதை அறியலாம். வெறும் 24 பாடல்களே கிட்டியுள்ள ரெட்டியாரின் காவடிச் சிந்து, 24 தனித்தனி ஒலியமைதிகளைக் கொண்டது என்பதுதான் வியப்பானது. அது தனி ஆய்வுக்குரியது. ஒருசில சுட்டலாம்.

    “வன்ன மயில்முரு கேசன் – குற
    வள்ளி பதம்பணி நேசன் – உறை
    வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற –
    வாதே – சொல்வன் மாதே!”27

    “வள்ளிக்கிசைந்தமுரு கேசன் – அண்ணா
    மலைக்கவி ராசன்மகிழ் நேசன் – என்றும்
    வாழும் கழுகுமலை வாவிவளம் சொல்வன்
    மாதே! கேள்இப் போதே!”28

    “சுந்தரம் மிகுந்த குழல் மேகம்! – அவள்
    சொந்த நுதல் இந்துவிலோர் பாகம்! திருத்
    தும்புருவம் வில்லோடுசி நேகம்!
    தவயோகம்! வென்ற தேகம்! – வஞ்சம்
    துஞ்சுவிழி நஞ்சினினும் வேகம்”29

    மேற்கண்ட மூன்று பாடல்களில் முன்னிரண்டு பாடல்களின் சரணங்களின் உள்ளடக்கம் ஒன்றே. ரெட்டியார் மிக இலாவகமாகச் சந்தத்தை மாற்றியிருப்பதைக் பாடிப்பார்த்தால் உணர முடியும். வள்ளியின் தோற்ற வண்ணனையை மூன்றாவது தரவினால் அறியலாம். ஒலியின்பத்திற்காக யாப்பியலில் வகையுளியைப் பயன்படுத்துவதுபோல் இந்தப் பாடல்களில் ‘மற — வாதே — சொல்வன் — மாதே’ ‘இசைந்தமுரு — கேசன்’ ‘திருத் — தும்புருவம்’ என்றெல்லாம் ஒலியமைதிக்காகச் சீர்கள் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

    “தெள்ளுதமி ழுக்குதவு சீலன் — துதி
    செப்புமண்ணா மலைக் கனுகூலன் — ஊர்
    செழியப் புகழ்விளைத்த கழுகு மலைவளத்தைத்
    தேனே – சொல்லு வேனே”30 

    என்னும் ரெட்டியாரின் சந்தத்தில் சிந்தையிழந்த பாவேந்தர் பாரதிதாசனும் உவமைக்கவிஞர் சுரதாவும் அதே சந்தத்தில் பாடியிருக்கும் பாடல்களின் சரணம் இப்படி அமைந்திருக்கின்றன.

    “கிட்டிமர வேர்கள்பல கூடும் — அதன்
    கீழிருந்து பாம்புவிரைந் தோடும் —  மர
    மட்டையசை வால்புலியின்
    கட்டிகள் போய் தாய்ப்புலியைத்
    தேடும் – பின் – வாடும்”31

    “ஆசைகொண்டு விண்வெளியின் மீது – மதி
    ஆடையின்றியே உலவும் மாது – முகில்
    ஓசைகொண்ட மண்டலத்தில்
    ஊர்ந்துலவி வாழ்ந்து வரும்
    ஊமை! வெள்ளி ஆமை!”32

    மேற்கண்ட இரண்டு சிந்துக் கண்ணிகள் கவிஞர்களின் உள்ளத்துள் ரெட்டியார் சிந்தொலியின் ஊடுருவலை நன்கு காட்டக் கூடும்.

    எல்லையில்லாச் சந்தங்கள்

    மக்கள் உள்ள அசைவுக்கு ஏற்பவே உடலசைவு அமையும் என்பது உளவியல் நுட்பம்.  நாட்டுப்புற விழாக்களில் அல்லது இன்ப, துன்ப நிகழ்வுகளில், தொழில் சார்ந்த நிகழ்வுகளில் வகைவகையான தாளகதிக்கு ஏற்ப இளைஞர்களும் பெண்களும் ஆடிப்பாடி மகிழ்வதை இதற்குச் சான்றாக்க இயலும். நலுங்கும் ஒப்பாரியும் வேறு வேறு உணர்வுகள். எனவே வேறு வேறு இசையமைதிகள். தாளகதியும் மாறுகிறது. இந்த அடிப்படையில் பல்வகைப்பட்ட சிந்துக்கள் தமிழில் காணக்கிடக்கின்றன. அண்ணாமலை ரெட்டியாரின் இருபத்து நான்கு பாடல்களும் இருபத்து நான்கு வகை சந்தங்கள் என்பது முன்னரே சுட்டப்பட்டது.

    வள்ளி கணவன் பேரை
    வழிப்போக்கன் சொன்னாலும்
    உள்ளம் குழையுதடி – கிளியே
    ஊனும் உருகுதுடி”33

    “நீல மயில் மீதில் ஏறி
    ஆவினன்கு டியில் தோன்றும்
    நிமலனாம் குழந்தை முரு கேசன் -– அவன்
    நித்திலப்புன் முறுவல் வள்ளி நேசன் -– இந்த
    நீணீலந்தனில் அன்பு செய்திடும்
    அடியர் யாரையும் காத்து நின்றிடும்
    நித்தஜோதி வடிவமாம்பிர காசன் தூரன்
    நெஞ்சை நீங்காதென்றும் மகிழ் வாசன்”34

    முருகனருளாகிய பாடுபொருளைத் திருமுருகாற்றுப்படையும் பாடியிருக்கிறது. பரிபாடலும் பாடியிருக்கிறது. கந்தபுராணமும் பாடியிருக்கிறது. அண்ணாமலை ரெட்டியாரும் பாடியிருக்கிறார் பின்னாலே வந்தவர்களும் பாடியிருக்கிறார்கள்.  இவை அத்தனைப் பாடல்களும் யாப்பின் அரவணைப்பிலேயே படைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து கொள்ள முடியும். பெரியசாமி தூரன் எழுதிய மேலே காட்டப்பட்ட பாடலில் சந்த இன்பத்திற்காகவும் தாளகதிக்கு ஏற்பவும் வடமொழிச் சொற்கள் விரவி வந்திருப்பதைக் காணலாம். இந்த வகையில் அருணகிரியாரின் திருப்புகழை ஒத்தது இது.

    புதுக்கவிதை விடமுடியாத யாப்பு

    யாப்பினை வேலியாகக் கொண்ட வித்தகக் கவிஞர்களுக்கு இடையே பதர்கள் வந்து கலந்தது ஒரு பக்கம். ஆனால் மரபறிந்த மாகவிஞர் பலர் தொடைகளையும் விகற்பங்களையும் பின்னிப் புனைவதில் தனித்ததோர் தடம் அமைத்தனர்.

    “கொட்டும் மழையினில் வெட்ட வெளியினில்
    குடும்பம் நடத்துகிற – எங்கள்
    பட்டினித் தோழரைக் கட்டி அணைத்திட
    பாரதி வந்திருந்தான் அவன்
    தொட்ட இடமெலாம் வீரம் பிறந்தெங்கள்
    தோளைத் தழுவிடவே – நான்
    சட்டென ஓடித் தலைவன் அவன் பதம்
    நாடிச் சரண்புகுந்தேன்!”35

    என்னும் மேத்தாவின் கவிதை இதற்கொரு சான்றாகலாம். பொருண்மையடிப்படையில் அடையாளம் காணப்பட்ட புதுக்கவிதைகளிலும் யாப்பு பிறவித்தொடர்பு போல அக்கவிதைகளில் தன்னை இழைத்தே வந்திருக்கிறது.

    “ஒருவர் நினைவை
    ஒருவர் கொளுத்திக் கொண்டு
    இருவரும் எரிவோம்
    மெதுவாக!
    நான் மெழுகுத்திரியாக
    நீ ஊதுவத்தியாக”36

    இந்த உணர்ச்சி யாப்புக்குள் அடங்காது. அடக்க இயலாது. இதற்கு வடிவமே இந்தக் கற்பனைதான். இந்தக் கற்பனை எந்த அளவுக்கு மனத்தைப் பாதிக்கிறதோ அந்த அளவுக்கு மனத்துள் நின்று நிலைபெறும். இத்தகைய உணர்வுகளின் வெளிப்பாட்டிலும் யாப்பு தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டியிருக்கிறது என்பதுதான் வியப்பானது. ‘மெழுகுவர்த்தியாக’ ‘ஊதுவத்தியாக’ என்னும் முரணிலும் இயைபிலும் யாப்பு புன்னகை புரிவதைக் காணலாம்.

    “இந்த மலையூரில்
    எங்கள் நினைவுகளில்
    இங்கொருத்தி உறங்குகின்றாள்
    இங்கே வரவேண்டாம்
    இதயங்கள் அழுமென்றால்
    இங்கே வரவேண்டாம்”37

    என்னும் கவிதை வரிகள் மோனையோடு கைகோத்துக் கொண்டுள்ளதைக் காணலாம்.

    “அவன் ஒரு
    பட்டு வேட்டி பற்றிய
    கனாவில் இருந்தபோது
    கட்டியிருந்த கோவணமும்
    களவாடப்பட்டது”38

    யாப்பென்னும் உறையிலிருந்து கவனமாகக் கழற்றப்பட்டதே புதுக்கவிதை’ எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வைரமுத்து எழுதிய கவிதைதான் மேலே இருப்பது. அதனுள் யாப்பாகிய கட்டுமானம் இல்லாதிருக்கலாம். கட்டுமானத்தின் துணை மூலங்களான மோனை, எதுகை இவையெல்லாம் படிந்து போயுள்ளன என்பதைக் கற்பார் அறியலாம்.

    “சித்தத்தினால் கொண்ட
    பித்தத்தினால் கனவு
    முத்தத்தினால் வந்த
    சத்தத்தினால்
    தூக்கம் கலைந்ததடி தோழி! செத்த
    சூரியன் உதிப்பதெந்த நாழி!”39

    மேற்கண்ட எடுத்துக்காட்டுக்களால் உணர்ச்சியைத் தடுக்கின்ற யாப்பினை நாங்கள் முரித்தே தீர்வோம் என முழக்கமிட்டு வந்த புதுக்கவிதைப் படைப்பாளர்கள் தொடைவிகற்ப வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கே தெரியாது. மரபு என்றால் சொல்லித் தெரிவதன்று. படைப்பில் படிந்து போவது. எனவே புதுக்கவிதை வரை தொடரும் கவிதை இலக்கியம் யாப்பின் பேராளுமைக்கு அடங்கியே நடந்து வந்திருக்கிறது என்பது ஓரளவு புலனாம். புதுக்கவிதைக்கு அடுத்த நிலையில் மக்கள் ஊடகமாகத் திகழும் திரைப்படங்களில் வரும் பாடல்கள் அதாவது திரையிசைப்பாடல்களில் யாப்பு எவ்வாறு தனது ஆக்டோபஸ் கரங்களை நீட்டிப் பிணைத்திருக்கிறது என்பதைப் பின்வரும் பகுதிகளில் காணலாம்.

    திரையிசையில் சிந்து

    தற்கால அறிவியல் உலகின் வலிமையான ஊடகங்களில் ஒன்று திரைப்படம். சமுதாய மாற்றங்களுக்குக் காரணமாய் அமைந்துவிடும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்து வருகிறது. அதற்குப் பெருந்துணையாக இருப்பன திரையிசைப்பாடல்கள். இந்தத் திரையிசைப்பாடல்களில் அதாவது மெட்டுக்குப் பாட்டெழுதும் இந்தத் துறையிலும் யாப்பு தன் ஆக்டோபஸ் கரங்களை எப்படி நீட்டியிருக்கிறது என்பதை ஒருசில எடுத்துக்காட்டுக்களால் காணலாம்.

    “ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
    மேடைகட்டி ஆடும் எழிலோ குளிர்
    ஓடையில் மிதக்கு மலர்
    ஜாடையில் சிரிக்கும் இவள்
    காடுவிட்டு வந்த மயிலோ நெஞ்சில்
    கூடுகட்டிவாழும் குயிலோ”40

    என்னும் வரிகளை மெட்டுக்காக எழுதப்படும் சாதாரணமான திரைப்பாடல் வரிகள் என ஒதுக்கிவிட முடியாது.

    “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
    நிலவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை!
    கோலமுழு தும்காட்டி விட்டால் காதல்
    கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?” 41

    என்னும் பாவேந்தரின் கற்பனை பட்டுக்கோட்டையின் எழுதுகோலின் வேறுவடிவத்தில் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து சுவைத்தல் வேண்டும்.

    “சின்னஞ் சிறுசுகள் உள்ளம் கலங்கிட
    சிந்தையிலே புதுவெள்ளம் பெருகிட
    அன்னம் பிறப்பதன் முன்னம் பிறந்தவர்
    ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட
    நீரோடும் வைகை
    ஆத்தோர மேடையிலே
    ஆனந்தக் கூத்தாட்டம்”42

    பட்டுக்கோட்டை நிலவைப் பாடிய பாங்கு அவ்வாறெனின் கண்ணதாசன் நாட்டுப்புற விழாவை மேற்கண்ட சந்தப்பாட்டில் காட்சிப்படுத்துகிறார். சிந்தில் சந்தமாக இருந்தது திரையிசையில் மெட்டாக மாறுகிறது. இரண்டு பாடல்களின் வெற்றியும் சந்தத்தில்தான் அமைந்துள்ளது. “தண்ணிலவு தேனிறைக்க” எனத் தொடங்கும் பாடல் சரணத்தில் வரும்,

    “நெஞ்சமதில் அலை எழும்ப கஞ்சமலர் அடி கலங்க
    அஞ்சி அஞ்சி இடை துவழ
    வந்தாள் அங்கு அன்பருள்ளம்
    தனை நினைந்து நின்றாள்”43

    என்னும் பூவை செங்குட்டுவன் பாடல் மெல்லினச் சந்தத்தை மிக மென்மையாக்கித் தருவதைக் காணலாம். சிந்திசையைத் திரையிசையில் இலக்கியத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றவர் கவிஞர் கே.டி.சந்தானம் ஆவார். முதிர்ச்சியான தமிழால் இவர் எழுதியிருக்கும் திரையிசைச் சிந்துக்கள் சிந்திலக்கியத்திற்குத் தற்கால வலுவான சான்றுகள் ஆகலாம்.

    மாலை யிட்டமங்கை யாரோ? என்ன பேரோ? அந்த
    மானினியாள் எந்த ஊரோ? உங்கள்
    மனம் நாடிய சுகமேதரு மதிமேவிய வனிதாமணி
    மன்மத வேள்தென்றல் தேரோ? – திரு
    வாய்மலர்ந் தேயரு ளீரோ?”44

    “அனங்கன் அங்கதன் அன்பன்
    வசந்தன் மன்மதன் என்று
    வணங்கும் என் உயிர் மன்னவா?
    மன்னுயிர்க் கின்பம்
    வழங்கும் உன் புகழ் சொல்லவா?
    ஆடலும் பாடலும் அன்பின்
    ஊடலும் கூடலும் இன்பம்
    தேடலும் உன் செயலல்லவா?
    நீ இல்லையென்றால்
    வாடிடும் வையமல்லவா?”45

    என்னும் சந்தானத்தின் சிலவரிகள் கற்பாரைச் சிந்தொலியின் மயக்க நிலைக்கே கொண்டு செல்கின்றன எனலாம். முன்னது ஜி.இராமநாதன் அவர்கள் இசையிலும் பின்னது குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையிலும் உள்ளத்தைக் கொண்ட பாடல்கள் ஆகும்.

    திரையிசைப்பாடல்கள் தொடை விகற்பங்கள்

    அடி மோனை, அடி எதுகை, அடி இயைபு, அடி முரண், அடி அளபெடை என்னும் ஐந்தும் இணைமோனை முதலான தொடைவிகற்பங்கள் முப்பத்தைந்தும் அந்தாதித் தொடை, செந்தொடை, அளபெடைத் தொடை என்னும் ஐந்தும் ஆக 43 தொடைவிகற்பங்கள் தமிழில் உண்டு.46

    “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே!
    கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே!
    சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    மங்காத தங்கமிது மாறாத வைரமிது
    ஒன்றாகி இன்பகீதம் பாடுதே!”47

    என்ற வரிகளில் பொழிப்பு மோனையின் ஆளுமையைக் காணலாம். கற்பனை, பொருத்தமான இசை, எதுகை, மோனை, இயைபு முதலிய தொடைவிகற்பங்களின் ஆளுமை இவை அத்தனையும் இந்தப் பாடலை இனிமையாக்குகின்றன.

    திரையிசைப்பாடல்களில் முரண்

    கவிதைக்கு முரண் அழகு தரும் என்பது உலக இலக்கியங்களுக்குப் பொதுவானதொரு திறனாய்வுக் கொள்கை. ஆனால் முரணை ஓர் உத்தியாகப் பயன்படுத்தி இலக்கணம் சொன்ன மொழி தமிழ்.

    “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” உரியியல்48

    என்பது தொல்காப்பியம். தொல்காப்பியம் நினைத்திருந்தால் அதே உரியியலில் மற்ற சொற்களை விளக்கியது போன்றே இவற்றையும் தனித்தனியாக விளக்கியிருக்க முடியும். ‘ஐ’ வியப்பாகும்’ என ஒரு தொடரில் இலக்கணம் சொன்னவர் முரணில் இலக்கணம் காண்பது அதன் இலக்கியச் செல்வாக்கை உணர்ந்தே என்பது இக்கட்டுரையாளர் கருத்து.

    “செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்
    வெண்திங்களுள் வெயில் வேண்டினும்
    வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்” 49

    எனவரும் சங்க இலக்கிய வரிகள் தமிழ்க்கவிதையில் முரணின் ஆளுமையை வெளிப்படுத்த போதுமான சான்றாகலாம்.

    “கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்” 50

    என்று காப்பியங்களில் இதன் ஆளுமையைப் புரிந்து கொள்ள முடியும். இவற்றையெல்லாம் ஆண்டிருந்த முரண் திரையிசைப்பாடல்களையும் ஆண்டிருக்கிறது.

    “நான்பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
    நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே!” 51

    கண்ணதாசன் எழுதிய இந்தச் சிந்தனை முரணை ஆலங்குடி சோமு பொருள் முரணாகப் பாடியிருப்பதை,

    “இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
    உறவு வரும் பிரிவு வரும் இதயம் ஒன்றுதான்
    பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்றுதான்
    வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான்
    இளமை வரும் முதுமை வரும் உடலும் ஒன்றுதான்
    தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்” 52

    என்னும் வரிகளால் அறிய முடியும்.  இவ்விரண்டு முரண்களையும் தனது வெளிப்பாட்டு உத்தியால் திரு.டி.ராஜேந்தர் அவர்களுக்குத் தருகின்ற திரைப்பாடல் வரிகள் இப்படி அமைந்திருக்கின்றன.

    “இது குழந்தை பாடும் தாலாட்டு
    இது இரவு நேர பூபாளம்
    இது மேற்கில் தோன்றும் உதயம்
    இது நதியில்லாத ஓடம்” 53

    ‘முரண்’ என்னும் தமிழ்க்கவிதைத் தொடைவிகற்பம் தொல்காப்பியத்திலிருந்து இன்றைய திரையிசைப்பாடல் வரை தனது ஆளுமைப் பரப்பை விரிவு செய்து கொண்டிருக்கிறது என்பது புலனாகலாம்.

    திரையிசைப் பாடல்களில் அந்தாதித் தொடை

    ஒரு பாட்டின் இறுதியடி, இறுதிச் சீர், இறுதி எழுத்து தொடர்ந்து வரும் பாட்டின் தொடக்கமாக அமையப் பாடுவது அந்தாதியாகும். ஒரு பாட்டின் ‘அந்தம்’ அடுத்த பாட்டின் ‘ஆதியாக’ அமைவது என்பது பொருள். இந்த அமைப்பே தனியொரு சிற்றிலக்கியமாக வளர்ந்த மொழி தமிழ். அந்த அந்தாதிக் கூறுகளைத் திரையிசையில் வைத்துப் பாடியவர் பலர்.

    “வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
    நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

    நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
    கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்!

    மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பங்சணைகள்
    பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்

    தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
    புதுக்கலைகள் பெறுவதற்குள் பூமாலை மணவினைகள்

    மணவினைகள் யாருடனோ? மாயவனின் விதிவகைகள்
    விதிவகையை முடிவுசெய்யும் வசந்த கால நீரலைகள்”54

    “பருத்தி எடுக்கையிலே என்னப் பலநாளும் பாத்த மச்சான்

    ஒருத்தி இருக்கையிலே ஓடிவந்தாலாகாதோ?
    ஓடித்தான் வந்திருப்பேன் நான் ஒன்ன மட்டும் பாத்திருந்தா
    …………………………………………………………………………………………………………………………….
    ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தியா நான் போகையிலே
    பித்தனைப் போல் நித்தம் நித்தம் சுத்தி சுத்தி வந்தாயே!

    சுத்திச் சுத்தி வந்ததனால் சொந்தமாகிப் போனவளே
    சித்தம் குளிர இப்ப சேர்த்தணைக்கப் போறேண்டி

    சேர்த்தணைக்கும் வேளையிலே சென்றவர்கள் வந்துவிட்டால்
    பார்த்துச் சிரித்திடுவார் பழிபோட்டுப் பேசிடுவார்!
    சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்து வந்து வாழ்த்திடவே!”55

    என்னும் பாடல்களில் அந்தாதி மிகச் சிறப்பாகவும் எளிதில் புரியும் வண்ணமாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.

    திரையிசைப்பாடல்களில் அளபெடை

    சங்க இலக்கியத்திலிருந்து இன்றுவரை ஒவ்வொரு படைப்பாளருக்கும் தனித்தனி இலக்கண அமைதி என்பது இல்லை. தாய்மொழித் தமிழும் தமிழிலக்கணமும் ஒன்றே. திரையிசையின் தொடைவிகற்பங்கள் மறுதலிப்புக்குரியனவல்ல. மாறாகக் கவனத்துடன் கூடிய ஆய்வுக்குரியன. நெட்டெழுத்துக்களாலும் மெய்யெழுத்துக்களாலும் அடையாளப்படுத்தப்பட்டு அலகிடப்படும் அளபெடை திரையிசைப் பாடல்களில் வேறுவகையாகக் கையாளப்படுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் ‘ஜக்கம்மா’ 56 என்னும் பாடலின் தொடக்கமும், ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் வரும்  ‘சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே’57 என்னும் பாடலின் தொடக்கமும் வானம்பாடி படத்தில் வரும்  ‘கங்கைகரைத் தோட்டம்”58 என்னும் பாடலின் தொடக்கமும் ‘ஊட்டிவரை உறவு’ படத்தில் வரும் ‘பூ மாலையில்’59 என்னும்  பாடலின் தொடக்கமும் ‘இரயில் பயணங்களில்’ படத்தில் வரும் ‘வசந்த ஊஞ்சலிலே’60 என்னும் பாடலின் தொடக்கமும் அளபெடையை மெட்டில் காட்டும் தொழில் நுட்பம் எனத்தகும்.

    தொகுப்புரை

    மரபு மாறாதது. மண்ணிலிருந்து பிறப்பது. மண்வாசனை கொண்டது. மனத்திற்குள் படிவது. படைப்பாளர் அறியாமல் படைப்புக்குள் வந்தமையும் பாங்குடையது. ‘யாப்பு’ என்பது தமிழ்க்கவிதைகளின் உயிர்வேலியாக இருந்த காலம் ஒன்றுண்டு. இந்தக் கட்டுரையில் தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து முன்வைக்கப்படும் ஆய்வு மெய்ம்மைகள் பின்வருமாறு தொகுத்துரைக்கப்படுகின்றன.

    • தொல்காப்பியம் உட்பட்ட தமிழ்க்கவிதை பற்றிச் சிந்தித்த தமிழிலக்கண நூல் அனைத்தும் யாப்பிலக்கணத்தைக் கவிதையின் கட்டுமான வரம்பாக நிர்ணயித்துள்ளது.
    • இலக்கண நூற்பாக்களில் பல மாணவர்களின் உள்ளம் கவர்தற்பொருட்டுச் சந்தத்தை அடிப்படையாகக் கொண்டு எதுகை மோனைகளை முன்னிறுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
    • சங்க இலக்கியங்களில் ஆசிரியப்பாவின் ஆளுமையைக் காண இயலும்.
    • இரட்டைக் காப்பியங்கள் ஆசிரியப்பாவில் அமைந்திருந்தாலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம், வில்லிபாரதம் முதலியவை விருத்தங்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன.
    • விருத்தங்களின் மேலாதிக்கம் பதிகங்களிலும் பாசுரங்களிலும் எதிரொலித்தது.
    • சிற்றிலக்கியக் காலம் யாப்பின் பொற்காலம் எனக் கூறுமளவுக்கு அமைந்தது.
    • தமிழ்க்கவிதைப் பெரும்பரப்பு முழுமையும் யாப்பின் அல்லது யாப்புக்கூறுகளின் ஆளுகைக்கு உட்பட்டே அமைந்திருக்கிறது.
    • ‘யாப்பின் மந்தணம் ஓசையொழுங்கே’ என்பதை மக்கள் வாழ்வியலிலிருந்து உருவான சிந்து ஒலியமைதி காட்டுகிறது.
    • குற்றாலக்குறவஞ்சியில் தொடங்கிய சிந்தமைப்பு இன்றையத் திரையிசைப்பாடல்கள் வரை தனது பயணத்தை நீட்டித்திருக்கிறது.
    • யாப்பைப் புறக்கணித்த புதுக்கவிதை வல்லாளர்களும் எதுகை, மோனை, இயைபு முதலிய தொடைவிகற்பங்களைப் புறக்கணிக்க இயலாத அளவுக்கு யாப்பு தனது ஆதிக்கத்தைச் செலுத்தியிருக்கிறது.
    • அசை, சீர், தளை என்பனவற்றின் நோக்கம் ஒலியமைதியே என்பதனால் மெட்டுக்களாகிய ஒலியமைதிக்குப் பொருத்தமான சொற்களை இட்டு நிரப்பும் திரையிசைப்பாடலின் தொழில்நுட்பம் ஒருவகையில் மரபு சார்ந்ததே எனக் கொள்ள முடியும்.
    • இசைக்குப் பொருத்தமான சொற்களால் அமைக்கப்பட்டாலும் மரபு சார்ந்த தொடைவிகற்பங்களாலேயே திரையிசைப்பாடல்கள் கட்டுமானச் சிறப்பைப் பெறுகின்றன.

     நிறைவுரை

    எழுத்து, அசை, சீர், தளை என வந்த தமிழிலக்கணம் செப்பலோசை முதலான வகைகளைக் கண்டறிந்தும் அவ்வொலியமைதியைக் கவிதைக்கூறாகக் (செய்யுள் உறுப்புக்கள்) கொள்ளாததற்கான காரணம் புலப்படவில்லை. எழுத்திலிருந்து ஒலியென்பது இலக்கணம். ஒலியிலிருந்து எழுத்து என்பது திரையிசை. இந்தக் கட்டுரையில் கருதுகோளை நிறுவுவதற்காக எடுத்தாளப்பட்ட தரவுகள் அத்தனையும் உண்மையானவை வலிமையானவை என்பதனால் ‘தமிழ்க்கவிதையின் வடிவம் எப்படி மாறினாலும் யாப்பிலக்கணத்தின் ஏதேனுமொரு கூறு அதனுள் இடம்பிடித்து விடுகிறது என்பது உறுதியாகிறது. தரவுகளின் அடிப்படையில் கண்ட ஒரு  வரி மெய்ம்மையாகத்

    “‘தமிழ் யாப்பிலக்கணம் வந்த நாள் முதல் இந்த நாள் வரை’ தோன்றிய அனைத்துப் படைப்புக்களிலும் தன் ஊடுருவலை ஏதேனும் ஒருவழியில் நிகழ்த்தியே வந்திருக்கிறது”

    என மொழிந்து இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.!

    சான்றெண் விளக்கம்

    1. வரதராசனார் மு., இலக்கியத்திறன், ப 152
    2. அரங்கசாமி ப., இலக்கிய ஆராய்ச்சிச் சிந்தனைகள், ப 122
    3. வரதராசனார் மு., இலக்கியத்திறன், ப 180
    4. திருவள்ளுவர், திருக்குறள், கு.எண். 1088
    5. தொல்காப்பியர், தொல்காப்பியம், நூ.எண். 1275
    6. மேலது, நூ.எண். 1279
    7. மேலது, நூ.எண். 72
    8. மேலது, நூ.எண். 112
    9. திருவள்ளுவர், திருக்குறள், கு.எண். 12
    10. பெருஞ்சித்திரனார், கனிச்சாறு, ப 108
    11. தொல்காப்பியர், தொல்காப்பியம், நூ.எண். 333
    12. மேலது, நூ.எண். 371
    13. மேலது, நூ.எண். 345
    14. மேலது, நூ.எண். 1004
    15. மேலது, நூ.எண். 1009
    16. மேலது, நூ.எண். 481
    17. மேலது, நூ.எண். 491
    18. திருவள்ளுவர், திருக்குறள், கு.எண். 939
    19. மேலது, பரிமேலழகர் உரை
    20. திருவள்ளுவர், திருக்குறள்,  கு.எண். 605
    21. மேலது, பரிமேலழகர் உரை
    22. திருவள்ளுவர், திருக்குறள், கு.எண். 362
    23. மேலது, பரிமேலழகர் உரை
    24. திருவள்ளுவர், திருக்குறள், கு.எண். 151
    25. திரிகூடராசப்பக் கவிராயர், திருக்குற்றாலக் குறவஞ்சி, இணையதளம்
    26. மேலது
    27. அண்ணாமலை ரெட்டியார், காவடிச் சிந்து, பா.எண். 04
    28. மேலது, பா.எண். 06
    29. மேலது, பா.எண். 15
    30. மேலது, பா.எண்.  3
    31. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1, ப 43
    32. சுரதா,  தேன்மழை,  ப 24
    33. இணையதளம்
    34. தூரன் இணையதளம்
    35. மேத்தா. மு., கண்ணீர் பூக்கள், ப 46
    36. அப்துல் ரகுமான், பால்வீதி, ப 25
    37. காமராசன், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், ப 31
    38. வைரமுத்து,  கொடிமரத்தின் வேர்கள், ப 107
    39. வைரமுத்து, திருத்தி எழுதிய தீர்ப்புகள்,  ப 76
    40. தஞ்சை ராமையாதாஸ் அமுதவல்லி, திரைப்படப்பாடல்
    41. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 1, ப 19
    42. கண்ணதாசன், திரையிசைப்பாடல் தொகுதி 1, ப 155
    43. பூவை செங்குட்டுவன், படித்தால் மட்டும் போதுமா படப்பாடல்
    44. சந்தானம் கே.டி., அம்பிகாபதி திரையிசைப்பாடல்
    45. மேலது
    46. குணசாகரர், யாப்பருங்கலக்காரிகை உரை, ப 195
    47. ஆத்மநாதன் கே.ஏ., ‘புதையல்’ திரைப்படப்பாடல்
    48. தொல்காப்பியர், தொல்காப்பியம் உரியியல், நூ.எண். 855
    49. ஆவூர் மூலங்கிழார், புறநானூறு,  பா.எண். 38
    50. இளங்கோவடிகள், சிலம்பு. இ.வி.எ.காதை,  வரி 654
    51. கண்ணதாசன், திரையிசைப்பாடல் தொகுதி 1, ப 282
    52. ஆலங்குடி சோமு, ‘இரவும் பகலும் திரைப்படப்பாடல்
    53. ராஜேந்தர் டி., இரயில்பயணங்களில் திரைப்படப்பாடல்
    54. கண்ணதாசன், திரையிசைப்பாடல் தொகுதி 5, ப 367
    55. மேலது, ப 372
    56. பாலசுப்பிரமணயின் கு.மா., வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படப்பாடல்
    57. கண்ணதாசன், திரையிசைப்பாடல் தொகுதி 2, ப 29
    58. மேலது, ப 12
    59. மேலது தொகுதி 1, ப 230
    60. ராஜேந்தர் டி., இரயில் பயணங்களில் திரைப்படப்பாடல்

    துணைநூற் பட்டியல்

    அண்ணாமலை ரெட்டியார், அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1989

    அப்துல் ரகுமான், பால்வீதி
    அன்னம் பதிப்பகம்
    புதுத்தெரு, சிவகங்கை 623 560
    முதற்பதிப்பு 1974

    கண்ணதாசன், திரையிசைப் பாடல்கள் (ஐந்து தொகுதிகளும்)
    வானதி பதிப்பகம்
    13, தீனதயாளு தெரு
    தியாகராய நகர், சென்னை – 600 017
    முதற்பதிப்பு – 1971

    காமராசன் நா., தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்
    நர்மதா பதிப்பகம்
    81 பாண்டி பஜார்.
    சென்னை – 600 017. முதற்பதிப்பு – 1977

    குணசாகரர், யாப்பருங்கலக்காரிகை உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    சுரதா, தேன்மழை
    முல்லை நிலையம்
    9, பாரதி நகர் முதல் தெரு
    தியாகராய நகர், சென்னை – 600 017

    திருவள்ளுவர், திருக்குறள்  பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம்  சென்னை 600 001
    முதற்பதிப்பு 2009

    தொல்காப்பியர், தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    பரிமேலழகர், திருக்குறள் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    பாரதிதாசன், பாரதிதாசன் பாடல்கள்
    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
    41/B சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட்
    அம்பத்தூர், சென்னை – 600 098

    பெருஞ்சித்திரனார், கனிச்சாறு (எட்டுத்தொகுதிகளும்)
    தென்மொழி பதிப்பகம்
    மேடவாக்கம் கூட்டுச்சாலை
    சென்னை – 600 100. முதற்பதிப்பு – 2012

    மேத்தா மு., கண்ணீர்ப்பூக்கள்
    அகரம் பதிப்பகம்
    சிவகங்கை. முதற்பதிப்பு – 1974

    வைரமுத்து, கொடிமரத்தின் வேர்கள்
    சூர்யா லிட்டேரச்சர் பிரைவேட லிட்
    4வது குறுக்குத் தெரு
    டிரஸ்ட் புரம் சென்னை — 600 024  –
    ஏழாம் பதிப்பு 1996

    வைரமுத்து, திருத்தி எழுதிய தீர்ப்புகள்
    சூர்யா லிட்டேரச்சர் பிரைவேட லிட்
    4வது குறுக்குத் தெரு
    டிரஸ்ட் புரம் சென்னை — 600 024  –
    முதற்பதிப்பு 1979


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    • திரைப்படம் ஒரு வலிமையான சமுதாய ஊடகம். அத்திரைப்படப் பாடல்கள் இலக்கியமா? என்னும் சிக்கல் தொடர்ந்து நிலவி வரும் ஒரு சூழலில் கவிதைக் கட்டுமானம் பற்றிய இச்சிந்தனை கவனம் பெறுகிறது.
    • தமிழின் ஆதியந்த கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் யாப்பியல் கூறுகளைத் தாங்கியே வந்திருக்கின்றன என்னும் கருதுகோள் வலிமையான தரவுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • செய்யுள் உறுப்புகள் எட்டனுள் பந்தமாகிய தளையும் தளையடிப்படையில் தோன்றும் ஓசையும் நுண்பொருள். ஏழுவகைத் தளையை உறுப்பாகக் கொண்ட சான்றோர்கள் பன்னிரண்டு வகை ஓசையை உறுப்பாகக் கொள்ளாதது ஏன் என்னும் வினாவைக் கட்டுரையாளர் எழுப்பியிருப்பது புதிய ஆய்வுக்கு வழிவகுக்கலாம்.
    • விரும்பிய வகையில் இலக்கண விள்ககம் சொல்லும் ஆற்றல் மிக்க  இல்ககண ஆசிரியர்கள் எதுகை, மோனைகளையும் அவற்றின் விகற்பங்களையும் இலக்கண நூற்பாக்களிலும் வைத்து இலக்கணம் சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் கட்டுரையாளர் பாராட்டுக்குரியவர்.
    • ஆய்வு முடிகள் எப்படி;யிருந்தாலும் கருதுகோளுக்கான  தரவுகளைத் தொகுத்துக் காட்டியிருக்கும் கட்டுரையாசிரியரின் பன்முக உழைப்பு மதிப்புமிக்கது.
    • சிற்றிலக்கிய வகைகளில் தனிச்சிறப்புக்குரிய சிந்தின் இலக்கிய வெற்றியை அண்ணாமலை ரெட்டியார் தொடங்கி இன்றைய புதுக்கவிதை, திரையிசைப்பாடல்கள் வரையிலான தரவுகள் கொண்டு உறுதி செய்திருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
    • புதுக்கவிதைகள் எழுதுவார் கூற்றுப்படி அவை அசை, சீர்களால் வேண்டுமானால் வேறுபட்டிருக்கலாம். கவிதைக்கு இனிமை தரும் யாப்பியலின் அடிப்படைக் கூறுகளிலிருந்து அவை என்றைக்கும் விலகவே முடியாது என்பதை உறுதி செய்திருக்கிறார் கட்டுரையாசிரியர்.
    • எழுத்து  அசை சீர் தளை ஓசை என நின்று அடி, தொடை, பா, இனம் எனப் படைக்கப்படும் இயற்றமிழ் கவிதைகளிலும்  நேராக மெட்டென்னும் இசைத்தளத்திலிருந்து படைக்கப்படும் திரையிசைப் பாடல்களிலும் யாப்பியல் தொடைவிகற்பங்களின் ஆளுமையைக் கடடுரையாசிரியர் மிகச் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.
    • முரணாளுமையைத் தொல்காப்பியத்தை மேலலகாகவும் இயக்குநர் டி. ராஜேந்தர் வரிகளைக் கீழலலகாகவும் கொண்டு கட்டுரையாளர் விளக்கியிருக்கும் முறையால் கட்டுரையின்  பரிமாணம் உயர்கிறது.
    • கவிதை ஒலியால் உரைநடையினின்றும் வேறுபடுகிறது. உரைநடை கவிதையாகலாம். ஆனால் கவிதை உரைநடையாகிவிடக் கூடாது. முடியாது. ஒலிக்கு அடிப்படை எழுத்து, அசை, சீர் தளை. இந்தக் கூறுகளிலிருந்து விலகிய  அல்லது கூறுகளிலிருந்து விலக்கிய எதுவும் கவிதையாக வெளிப்பட  வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாக நிறுவும் கட்டுரை இது.
    • ஒரு முனைவர்ப் பட்ட ஆய்வேட்டுக்குரிய கருதுகோளை  சுருக்கமாகவும் ஆழமாகவும் வலிமையான தரவுகள் கொண்டு நிறுவ முயன்றிருக்கும் கட்டுரையாளர் முயற்சிக்குத் தனிப் பாராட்டுகள்.
    • இப்பொருள் பற்றிய நேர்முக அல்லது எதிர்முகப் பின்னூட்டங்களும் தொடர்பான  ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்தால் யாப்பியல ஆய்வு இன்னும் வலிமை பெறலாம்.
    • தமிழ் யாப்பியலுக்கும் ஆய்வாளருக்கும் பெருமை சேர்க்கிறது.

     

    Share
  • (Peer Reviewed) ஒன்பதாவது கிரகம் கருந்துளையா?

    (Peer Reviewed) ஒன்பதாவது கிரகம் கருந்துளையா?

    நடராஜன் ஸ்ரீதர்
    ஆற்றல் அறிவியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி
    natarajanarticles@gmail.com

    சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகமாக இருந்த புளூட்டோ குறுங்கோள் என அறிவிக்கப்பட்டு கிரகம் என்ற அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் ஒன்பதாவது கிரகத்திற்கான தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறான தேடலில் பூமியில் இருக்கும் பல்வேறு நிலை தொலைநோக்கிகள் மற்றும் பூமிக்கு வெளியே சுற்றிவரும் வானியல் தொலைநோக்கிகள் ஆகியவை தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளன. எனினும் ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்குமா என்று சில ஆராய்ச்சிக் குறிப்புகள் கேள்வியெழுப்புகின்றன. அதுபற்றிய தொகுப்பினை இக்கட்டுரை அலசுகிறது.

    மனிதர்கள் தமது விண்வெளி அறிவைப் புதுப்பிக்கையில் தொலைநோக்கிகளும், தொலையுணர்வுக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறான தொலைநோக்கிகளின் வாயிலாக சூரிய குடும்பத்தை ஆய்வு செய்யும்போது பல்வேறு அதிசய நிகழ்வுகள் கிடைத்தன. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே உள்ள விண்கற்களின் வளையம், சனி கிரகத்தின் அழகிய வளையங்கள், சனி கிரகத்திற்கு அப்பாலும் உள்ள கோள்கள் ஆகியவை தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டன.  ஒன்பதாவது கிரகமாக முன்னர் அங்கீகரிக்கப்பட்டிருந்த புளூட்டோ கிரகம் தொலைநோக்கிகள் வாயிலாகப் பார்க்கப்படும் போது கிரகம் போன்ற அமைப்பை வெளிப்படுத்தியது. எனினும் பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்பட்டபோது புளூட்டோ ஒரு கிரகம் போன்ற அமைப்பாக இல்லாமல் குறுங்கோள் போன்ற இயக்கப் பாதையை கொண்டிருக்கும் என கண்டறியப்பட்டது. ஏனெனில் இதன் சுற்றுவட்டப் பாதை வழக்கமான கிரகங்களைப் போலல்லாமல், இன்னொரு கிரகத்தின் சுற்றுவட்ட பாதைக்கு ஊடாகவும் சென்று வருகிறது. இது நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதைக்கு ஊடாகப் பறக்கிறது. இது கிரகம் என்ற அமைப்புக்கு ஏற்றதாக இல்லை. எனவே ப்ளூட்டோ என்பது ஒன்பதாவது கிரகமாக இல்லாமல் ஒரு குறுங்கோளாக அல்லது பறக்கக்கூடிய மிகப்பெரிய விண்கல் போன்றதாக இருக்குமென முடிவு செய்யப்பட்டது.

    ஆயினும் ப்ளூட்டோ குறுங்கோள் என   நிராகரிக்கப்படுவதற்கு முன்னரே அதை ஆய்வு செய்ய அனுப்பிய நியூ ஹொரைசான் செயற்கைக்கோள் புளூட்டோவை அடைந்து அதிலிருந்து தொடர்ச்சியாக படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. புளூட்டோவின் மேற்பரப்பு, அதன் காலநிலை மற்றும் அதன் இயக்கங்கள் ஆகியவற்றை நியூ ஹொரைசான் செயற்கைக்கோள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க ப்ளூட்டோவைத் தாண்டி ஒன்பதாவது கிரகம் ஒன்றிற்கான தேடல் தொடர்ந்து கொண்டே உள்ளது. என்னும் கிரகம் 10 வது கிரகம் ஒன்று இருக்கலாம் என கருதப்பட்டாலும் அதற்கான தெளிவான தகவல்கள் நம்மிடம் இல்லை.  ஒன்பதாவது கிரகத்தின் தேடல் தொடர்ந்து கொண்டே  இருக்கின்ற அதே வேளையில், அதற்கான சில மாறுபட்ட கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.

    அந்த ஒன்பதாவது கிரகம் ஒரு கருந்துளையாக இருக்கக்கூடும் என்று சில கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன [1][2][3]. அந்த ஒன்பதாவது கிரகம் சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 300 லிருந்து 500 வானியல் அலகு தொலைவில்  சுற்றி வரலாம் என்று சில ஆய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன. எனினும் அந்த கருந்துளையின் அளவானது வெகு சிறிய அளவிலேயே இருக்கும். உதாரணமாக இவ்வளவு நிறை கொண்ட கருந்துளையானது ஒரு ஆப்பிளில் கொள்ளளவைப் போலவே இருக்கக்கூடும். மேலும் அது ஒரு சாதாரண ஒரு வெள்ளைத்தாளில் ஆப்பிள் படம் வரைந்தது  போலவே பரப்பளவில் இருக்கக்கூடும். ஸ்ட்ரிங் தியரி வித்தகரான எட்வர்டு விட்டன் இந்த கருந்துளையைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒருவேளை ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்குமாயின், அதை நாம் பூமியிலிருந்தோ அல்லது பூமிக்கு மேலே நிலை நிறுத்தப்பட்டுள்ள வானியல் தொலைநோக்கிகள் வாயிலாகவோ கண்டறிவது என்பது மிக மிகக் கடினமான விஷயம். மேலும் கருந்துளைகள் எந்த ஒளியையும் வெளியிடாத சூழலில் அவற்றைக் கண்டறிவது சிரமம். மேலும் இந்த கருந்துளைக்கு அருகில் ஏற்படும் ஒளி விளைவுகளை கண்டறிய சற்றேறக்குறைய அதற்கு அருகில் சென்றால் மட்டுமே முடியும் என்று தெரிவிக்கிறார்.

    சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரையில் அந்த கருந்துளையினை ஆய்வு செய்வது பற்றி எழுதப்பட்டுள்ளது [4]. அந்த கட்டுரையானது ஹாக்கிங் கதிர்வீச்சு மூலம் ஒன்பதாவது கருந்துளையை ஆராய முடியும் என்ற விசித்திரமான ஒரு ஆய்வினை முன்வைக்கிறது. பூமியிலிருந்து சிறு சிறு செயற்கைக்கோள்கள் மூலம் ஒன்பதாவது கிரகம் இருக்கக்கூடிய தொலைவினை அடைந்து, அங்கு உள்ள சூழலை நுணுக்கமாக ஆய்வு செய்ய முடியும் என்று அந்த ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. தற்போது நானோ செயற்கைக்கோள்கள் பெருமளவு பயன்பாட்டிற்கு வருகிறது. இத்தகைய செயற்கைக்கோள்கள் மூலம் கருந்துளை இருக்கும் இடத்தை அணுகி அக்கருந்துளையில் இருந்து வெளிப்படும் ஹாக்கிங் கதிர்வீச்சை ஆய்வு செய்வதே இந்த சோதனையின் அடிப்படை. இவ்வாறு பெறப்படும் ஹாக்கிங் கதிர்வீச்சு மூலம் கருந்துளையின் இயக்கம் மற்றும் அதன் வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இந்த ஆய்வு செயலுக்கு வரும்போது மட்டுமே தெரிய வரும். ஒன்பதாவது கிரகம் எவ்வாறு இருக்கும் என்ற தேடலில்,  ஒன்பதாவது கிரகம் கருந்துளையாக இருக்கக்கூடும் என்ற ஒரு முடிவு பெறப்பட்டு அதற்கான ஆய்வுகள் துவங்கியுள்ளது. இந்த தேடல் எவ்வாறு முடிவு பெறும் என்பதைத் தொழில்நுட்பமும் காலமும் தான் முடிவு செய்யும்.

    உசாத்துணைகள்

    [1] https://astronomy.com/news/2019/10/planet-nine-may-be-a-black-hole-the-size-of-a-baseball
    [2] https://phys.org/news/2019-09-planet-primodial-black-hole.html
    [3] https://www.sciencemag.org/news/2019/09/planet-nine-may-actually-be-black-hole
    [4] Arbey, A., & Auffinger, J. (2020). Detecting Planet 9 via Hawking radiation. arXiv preprint arXiv:2006.02944.

    Image credit : NASA


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer review):

    ஒன்பதாவது கோளாய் ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோ 2006 ஆகஸ்டில் குள்ளக் கோள் வகுப்பில் தள்ளப்பட்டு, ஒன்பதாம் கோள் தகுதி இழந்து ஒதுக்கப்பட்டது.  அதன் பிறகு கால்டெக் விஞ்ஞானிகள் இருவர், கான்ஸ்டன்டின்  படிஜின் & மைக்கேல் பிரௌன்  பூமிபோல் பத்து மடங்கு பெரிய கோள்-9 புளுடோவுக்கு அப்பால் ஒளிந்து திரிவதை 2016 ஜனவரியில் மெய்ப்படுத்தினர்.  பரபரப்பான இந்தச் சூரிய மண்டலப் புதிய கோள் எண்ணிக்கை, பலரை வியப்புக்குள்ளாக்கி வரும்போது, 2017 ஜூனில் பூமி வடிவில் பத்தாவது கோளும் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று அரிசோனா பல்கலைக்கழக வானியல் நிபுணர் இருவர், காத்ரின் வோக் & ரேணு மல்கோத்ரா [Kathryn Volk & Renu Malhotra] அறிவிப்பது மேலும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.  இத்தோடு சூரிய குடும்பக் கோள்களின் எண்ணிக்கை முடிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் முடிவு செய்யக் கூடாது என்றும் அரிசோனா நிபுணர் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

    இந்த விஞ்ஞான யூகங்கள் பரவிவரும் சமயத்தில் ஆய்வாளர் நடராஜன் ஶ்ரீதர் ஒன்பதாவது கோள் ஓர் ஆப்பிள் அளவுக் கருந்துளையாக இருக்குமா என்று புதியதோர் கோட்பாட்டை நம்முன் வைக்கிறார். அந்தச் சிற்றளவு ஆப்பிள் கருந்துளை, நமது சூரியனைப் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி யுரேனஸ், நெப்டியூன் போல், வெகு தூரத்தில் சுற்றி வருவதாகவும் கூறுகிறார். இப்புதிய கோட்பாட்டை நம்பாமல் நம்பி, சொல்லியும் உறுதியாக ஏற்காமல் தயக்கத்துடன் எழுதி இருப்பவர், அனுபவ வானியல் விஞ்ஞானி கான்ஸ்டன்டின்  படிஜின். ஒரு கருந்துளை நமது சூரியனைச் சுற்றி வருகிறது என்பது உடனே நம்ப இயலாத ஒரு புதிய கோட்பாடு.

    அந்தக் கருந்துளை இருப்பைத் தற்போதுள்ள கருவிகள், தொடுவான், கெப்ளர், ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிப்பது எளிதில்லை. அதன் இடத்தை முன்னறிந்து, யுரேனஸ், நெப்டியூன் போன்ற புறச்சூரியக் கோள்களுக்கு அப்பால் விண்வெளிக் கப்பலை ஏவி உறுதிப்படுத்துவதும் எளிதில்லை. சூரியனின் ஒன்பதாம் கோள் ஓர் ஆப்பிள் வடிவுக் கருந்துளையாய் இருக்கலாம் என்பதை உறுதி செய்ய நெடுங்காலம் எடுக்கலாம்.


     

    Share
  • இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இறந்த முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல ஆசிரியர்: ஸ்டான்லி
    மூல மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

    மரணத்தின் ஈரம் முகத்தில். நான் மீண்டும் மீண்டும் உமிழ்ந்து ஈரத்தை அதிகப்படுத்தினேன். இரண்டு விபத்துகளில் மரணத்தைத் தோற்கடித்த ஆஜானுபாகுவாக நின்ற எனக்குப் பொன்னாடையும் பொருளும் பரிசாகத் தர முகமில்லாத கடவுள் கடந்து வந்தார்.

    மருத்துவமனை படுக்கை அறையில் ஒருமுறை நான் இறந்து கிடந்தேன். ஓ மன்னிச்சிருங்க. மரத்துக் கிடந்தேன். நினைவுகளைப் புதிதாகப் படைத்துக் கொண்டிருந்தேன்.

    கடவுள் விருந்தாளியாகக் கட்டிலுக்கருகில் வந்தபோது நான் ஆச்சர்யப்படவும், ஆதரவாக அவரைப் பார்த்து அருகிலுள்ள இருக்கையில் உட்காரவும் வைத்தேன். நான் அவரைப் படுக்கையில் அமர்த்தவில்லை. அது என் மனைவிக்கு மட்டும் உரிமையானது.

    பொன்னாடையும் பொருளும் எனக்குக் கொடுத்துவிட்டு துக்கத்துடன் அவர் செல்லுகையில் கட்டிலுக்கடியில் அவர் மறைத்து வைத்த பழையதும் உடைந்ததுமான முகக் கவசத்தை அவர் குனிந்தெடுத்தார். நான் நன்றியை வெளிப்படுத்தக் கையெடுத்து வணங்கியதும் அவர் என் இடுப்புக்குக் கீழே போர்த்தியிருந்த சிவப்புப் போர்வையைத் தூக்கிப் பார்த்தார். வலது காலின் தொடை எலும்பிற்கு கீழ் ஒன்றுமே இல்லாதிருப்பதைக் கண்டதும் முகக் கவசததின் இரண்டு துவாரங்கள்  வழி கொஞ்சம் நீர் சொரிந்தது.

    கையிலும் நெற்றியிலும் காய்ந்து கொண்டிருக்கும் காயங்களுடன் மனைவி கட்டிலுக்கருகில் வந்து நின்று அழுதாள். மருந்தின் வாசம் நிறைந்த சூழலில் கணவரின் ஆயுளுக்காகத் தாலியைக் கையில் பிடித்துக்கொண்டு ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சுபமுகூர்த்தத்தில் தர்ப்பைப் புற்கள் தூவி என் மனைவியாக உறுதிப்படுத்தப்பட்டது இந்த உறவு. பிறகு ஏன் இப்படியாயிற்று?

    துக்கம் விசாரிக்க வந்த, மனைவியைத் தேடி வந்த பெண்குழுக்கள், கட்டிலுக்கருகில் வரிசையாய் வந்து நின்றனர். குழுவில் குட்டையான ஒருத்தி முண்டியடித்துக்கொண்டு என் மனைவியின் கண் பார்வையில் படுமாறு வந்து நின்றாள். திரும்பச் செல்லும் போதும் பஸ் பயணச் செலவை மனைவியே ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்று வேண்டிக்கொண்டாள். மனைவி  மூக்கைச் சீந்தியதும் அனைவரும் அதேபோல செய்தனர். நான்காவதாக நின்றவள் வலதுகையால் மூக்கைச் சீந்தியதும், மூன்றாவதாக நின்றவளின் பார்வை பட்டதும் இடது கைவிரலால் மூக்கைத் துடைத்தாள். அவள் அமைதியானாள். இந்தத் துக்கங்களைப் பார்க்க முடியாமல் நான் கசடில்லாத தூய வானத்தைப் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். வானத்தில் தூய அழகு மட்டும் நிலைத்தது.

    என் கவனத்தைத் திருப்பவும் மனைவியை மகிழ்விக்கவும் மீண்டும் உரையாடல் தொடங்கியது.

    ஸ்கூட்டர்ல போனதனாலதா இப்படியொரு விபத்து ஏற்பட்டுச்சு.  சைக்கிள்ல  போயிருந்தா இப்படி நடந்திருக்காது. ஒரு வேளை தலை மட்டும் இழந்திருக்கலாம். அது இதைவிட பரவால்லையே. மாதக் கணக்கில் மருத்துவமனைல படுக்க வேண்டியிருந்திருக்காது. சாலையில இவ்வளவு ஆழத்தில குழி தோண்டக்கூடாதுதா. பைப்பு போடணும்னா வானம் வழியா போட்டிருக்கலாமில்ல. கான்ட்ராக்ட் எடுத்தவனுக்கும் உதவணும். கார்ப்பரேஷனோட ஊழல நிறுத்தணும். மனைவிக்கு நெற்றியிலும் கையிலும் அடிபட்டதிலும் வருத்தமிருந்தது. அவளுடைய தொடைக்குக்கீழே கால் இருந்ததிலும் போராட்டக்காரர்களின் தொண்டை இடறியிருக்கணும். இறுதி யாத்திரையைக் கொண்டாட முடியாமல் போனதில் வருந்தி, போராட்டக்காரர்கள் சென்றனர்.

    அவரவருடைய இறுதி யாத்திரைக்கான தாகத்தோடு சிந்தித்துக்கொண்டு கிடந்தேன்.

    “திடீர்னு இது கைக்கடியில வெச்சு நடக்க கஷ்டமாதா இருக்கும். நல்லாப் பழகணும்”

    பச்சை அறையில் ரசிகர்களின் கூட்டம். பாராட்டு மலைக்கு நடுவில் மனசாட்சிகளின் நுனிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அடர்த்தியான பௌடரை கலைக்கப் பூசப்பட்ட தேங்காய் எண்ணெய், உலர்ந்த துணியால் அழுத்தித் துடைத்தபோது முகம் வலித்தது. தொலைவிலிருந்து வந்த ரசிகர்களுக்குப் பணம் கொடுத்துச் சரியான நேரத்தில் அவர்களைத் திரும்ப அனுப்பிவைக்க வேண்டுமென்ற அறிவிப்பு மீண்டும் மீண்டும் குழுவினரால் ஒலிபரப்பப்பட்டது. வேகமாகக் கிளம்பியபோது நண்பர்கள் எப்போதுமுள்ள பார்ட்டியின் விஷயத்தைக் கூறித் தடுத்தனர். மனைவி என்ற கம்பார்ட்மென்ட் உடன் இருப்பதைக் கூறினர். மனைவியின் முகம் எதிர்பார்த்த அளவிற்குப் பொலிவுடையதாகத் தெரியவில்லை.

    ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபோதும். கொஞ்ச தூரம் சென்ற போதும் மனைவி ஒன்றும் பேசவில்லை. தேவையில்லாமல் வேணும்னே போட்ட பிரேக்கில பின்னால தள்ளி உட்கார்ந்திருந்த மனைவி நெருங்கி வந்தாள். அப்போ மெல்ல கேட்டேன்.

    ”இன்றைய நடிப்பு எப்படி இருந்துச்சு.?”

    மனைவியின் திடமான மௌனம்

    “ஓ இப்படியொண்ணும் இனிமே நடிக்க வேண்டாம். கண்ணும் காலும் இல்லாம. காலில்லாம தடி  ஊன்றி ஸ்டேஜ்ல வந்ததும் பதறிப் போச்சு…….

    என்னுள் ஏதோ உணர்வு வெளிப்பட்டது.

    “ஒரு காலு போனா என்ன, நடிப்பு நல்லா இருந்துச்சில்ல. முதல் பரிசும் கிடச்சிதில்ல”

    ஒரு சரக்கு லாரியின் தீக்கண்கள் என் கண்களை இருட்டாக்கியது. முன்னால் ஒரு பெரிய குழி இருந்ததோ……..

    ஒன்றுமே நினைவில்லை…………….

    கண்கள் திறந்தபோது மருத்துவமனை கட்டிலில் கருநாக்கால ஒண்ணும் சொல்லாதீங்க மூஸண்ணா நீலிக்கே அறிவுரை கூறுவது போல.


    ஆசிரியர் குறிப்பு

    கொச்சியில் பிறந்த மலையாளியான ஸ்டான்லி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நடிகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல துறைகளில் கால்தடம் பதித்தவர். பதினான்கு மொழிபெயர்ப்பு நூல்கள் உட்பட இருபது புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். கோவை மலையாள சமாஜத்தின் குட்டன் நாயர் நாடக விருதை ஏழு முறை பெற்ற இவர், நல்லி திசைஎட்டும் விருது, நாராயணகுரு விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    Share
  • வாழ்க்கை எப்படிப் போகிறது?

    வாழ்க்கை எப்படிப் போகிறது?

    சேஷாத்ரி பாஸ்கர்

    போன வருஷம் போட்ட சட்டை கொஞ்சம் கூடக் கிழியவில்லை
    ஒரு முறைதான் காலணியைத் தைத்தேன்
    பழைய பகை ஒன்றைச் சரி செய்தேன்
    புதிதாய் இரண்டு கிளம்பிவிட்டது
    வெற்று முகம் என்றாலும் கொஞ்சம் சிரிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன்
    உரத்துப் பேசினால் எனக்கே தலை வலிக்கிறது
    பிச்சை கேட்பவனிடம் போதனை சொல்வதில்லை .
    இரண்டு முறை சோப்பு மாற்றியாகிவிட்டது
    கவிதை முனைப்பு திருகுவலி
    கடன் சுமை கொஞ்சம் பரவாயில்லை
    போன வருடம் புரியவில்லை
    இந்த வருடம் ஒன்னுமே புரியவில்லை
    முன்பு கோபம் உடனே வரும்
    இப்போது மெல்ல வருகிறது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(305)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(305)

    நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு.

    – திருக்குறள் -995 (பண்புடைமை)

    புதுக் கவிதையில்...

    ஒன்றாய்ச் சேர்ந்து
    விளையாடும் போதும்
    ஒருவரை இகழ்தல்
    துன்பம்தரும் செயலே..

    பிறரது இயல்பினை
    அறிந்து அவரிடம் எவ்விதம்
    நடந்துகொள்ளவேண்டுமென்ற
    முறை தெரிந்தவருக்குப்
    பகைமையுள்ளும்
    பிறரை இகழா
    நற்பண்புகளே உள்ளன…!

    குறும்பாவில்...

    விளையாட்டிலும் இகழ்தல் துன்பமேதரும்,  
    பிறர் இயல்பறிந்து நடந்துகொள்ளத் தெரிந்தவருக்குப்
    பகைமையிலும் நற்பண்புகளே உள்ளன…!

    மரபுக் கவிதையில்...

    ஒன்றாய் கூடி விளையாடையில்
         ஒருவரை நேரில் விளையாட்டாய்
    நன்றா இகழ்தல் அன்னவர்க்கே
         நடுங்கும் வகையில் துன்பந்தரும்,
    என்றும் மற்றவர் இயல்பறிந்தே
         ஏற்ற வகையில் நடப்பவர்க்கே
    குன்றாப் பண்பது நல்லதுவாய்க்
         கொடிய பகையிலும் உள்ளதுவே…!

    லிமரைக்கூ..

    இகழ்தல் விளையாடும்போது ஒன்றாய்
    துன்பந்தரும், பிறர் இயல்பறிந்தொழுகுவோர்குப் பகையிலும்
    நற்பண்பதுவே மிளிரும் குன்றாய்…!

    கிராமிய பாணியில்...

    பண்புவேணும் பண்புவேணும்,
    வாழ்க்கயில
    நல்லதான பண்புவேணும்..

    வெளயாட்டாக் கூட
    வெளயாடும்போது ஒருத்தனக்
    கேவலமாப் பேசுனா
    துன்பப்படும் மனசு..

    அடுத்தவன் கொணம்தெரிஞ்சி
    அவங்கிட்டப் பழகிற
    மொற தெரிஞ்சவனுக்கு,
    பகயிலயும்
    அடுத்தவனக் கேவலப்படுத்தாத
    நல்ல பண்புதான் இருக்கும்..

    அதால
    பண்புவேணும் பண்புவேணும்,
    வாழ்க்கயில
    நல்லதான பண்புவேணும்…!

    Share