Blog

  • நாலடியார் நயம் – 36

    நாலடியார் நயம் – 36

    நாங்குநேரி வாசஸ்ரீ

    36. கயமை

    பாடல் 351

    ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
    காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
    தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
    போத்தறார் புல்லறிவி னார்.

    நிறைந்த அறிவுள்ளவர் சிறியவராயினும்
    நல்லொழுக்கத்துடன் தம் புலனடக்கி இருப்பர்
    நல்லறிவில்லாக் கயவரோ முதியவராயினும்
    நெறிகெட்ட செயலிலே உழன்று கழுகுபோல்
    நடந்து குற்றம் நீங்கப் பெறார்.

    பாடல் 352

    செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
    வழும்பறுக்க கில்லாவாம் தேரை; – வழும்பில்சீர்
    நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
    தேர்கிற்கும் பற்றி அரிது.

    நீர்நிறை பெரிய குளத்தில் வாழ்ந்தாலும்
    நாளும் தவளை தம்மேலுள்ள வழவழப்பான
    அழுக்கை நீக்காததுபோல் குற்றமற்ற
    அரும்பெரும் நூல்களைக் கற்பினும் நுண்ணறிவு
    அற்றவர் அந்நூல்களின் பொருள் உணரார்.

    பாடல் 353

    கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
    குணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்
    குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
    எற்றால் இயன்றதோ நா.

    கூட்டமான மலைகள்நிறை நாட்டின் அரசனே!
    கண்ணெதிரில் ஒருவர் நின்றாலும் அவரின்
    குணங்களைக் கூறுதற்கே நா எழுதல் அரிதெனும்போது
    குற்றத்தை மட்டுமே கூறி குணம்கெடும்படி செய்யும்
    கயவனின் நாக்கு எப்பொருளால் செய்யப்பட்டதோ?

    பாடல் 354

    கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
    சேடியர் போலச் செயல்தேற்றார்; – கூடிப்
    புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
    மதித்திறப்பர் மற்றை யவர்.

    பக்கங்கள் உயர்ந்தகன்ற அல்குலையுடை நற்குலப்
    பெண்டிர் விலைமகளிர் போல் தம்
    பெண்தன்மையை ஒப்பனை செய்ய அறியார்
    பொதுமகளிரோ புதுவெள்ளம் போல் ஆடவருடன்
    பழகிக் கலந்து தம் பெண்தன்மை மேம்பட
    பாங்காய் அலங்கரித்துப் பொருளைக் கவர்ந்து செல்வர்.

    பாடல் 355

    தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
    உளிநீராம் மாதோ கயவர்; – அளிநீரார்க்கு
    என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
    இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

    தளிர்மேல் நிற்பினும் ஒருவர் தட்டித்
    தள்ளாமல் போகமாட்டாத உளியின்
    தன்மையுடை கயவர் இரங்கும்
    தன்மையுடை மென்மையானவர்க்குத்
    தேவையான உதவி செய்யார் தம்மைத்
    தாக்கித் துன்புறுத்தும் கொடியவருக்கு
    தேடிச் சென்று செய்வர் எத்தகு உதவியும்.

    பாடல் 356

    மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
    விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
    செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
    வைததை உள்ளி விடும்.

    வாழும் மலைவளத்தை நினைத்து மகிழ்வான் குறவன்
    விளையும் நிலத்தை நினைத்து உவப்பான் உழவன்
    வாழ்வில் பிறர்செய்த நன்மையை நினைப்பர் சான்றோர்
    வெறுப்புடன் பிறர் இகழ்ந்ததையே நினைத்திருப்பான் கயவன்.

    பாடல் 357

    ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
    பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; – கயவர்க்கு
    எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
    எழுநூறும் தீதாய் விடும்.

    தமக்கொரு நன்மை செய்தவர் பின்
    தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்யினும்
    தளராது பொறுப்பர் சான்றோர் கயவரோ
    தமக்கு எழுநூறு நன்மைகள்செய்து
    தவறுதலாய் ஒன்று தீமையாய் ஆகிவிடின்
    தமக்குச் செய்த எழுநூறு நன்மைகளையும்
    தள்ளி நீக்கி தீமையையே நினைத்திருப்பர்.

    பாடல் 358

    ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
    மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; – கோட்டை
    வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
    செயிர்வேழம் ஆகுதல் இன்று.

    வாள் போலும் கண்ணுடையவளே! பன்றிக்கொம்பில்
    வயிரம் இழைத்த பூணைப்பூட்டினும் அது
    வீரம் மிகுந்த யானை ஆகாததுபோல் நற்குடிப்பிறந்தார்
    வறுமையுற்றபோது செய்யும் உதவியையும் மூடர்
    வளமான செல்வம் மிக்க காலத்தும் செய்யார்.

    பாடல் 359

    இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
    நின்றாதும் என்று நினைத்திருந்து – ஒன்றி
    உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
    மரையிலையின் மாய்ந்தார் பலர்.

    இன்று செல்வமுடையவர் ஆவோம்
    இப்பொழுதே ஆவோம்
    இன்னும் சிலநாட்களில் ஆவோம் என
    இடைவிடாது சிந்தித்துச் சொல்வதிலேயே
    இன்புற்று பின் தம் உள்ளம்நொந்து தாமரை
    இலைபோல் தாமிருந்த இடத்திலேயே
    இன்பக் கற்பனையில் திரிந்து இறப்பவர் பலர்.

    பாடல் 360

    நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
    ஈரங் கிடையகத் தில்லாகும்; – ஓரும்
    நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
    அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.

    நீரில் தோன்றி பசும்
    நிறத்துடன் இருப்பினும்
    நெட்டியின் உட்புறம் ஈரத்தால்
    நனையாதது போல் செல்வம்
    நிறைந்திருப்பினும் பெருங்கல் போலும்
    நெஞ்சமுடை மனிதரும் இவ்வுலகில்
    ஈரமற்ற நெஞ்சுடன் உள்ளனர்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(307)

    குறளின் கதிர்களாய்…(307)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(307)

    உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்.

    – திருக்குறள் -933 (சூது)

    புதுக் கவிதையில்...

    உருளும் சூதாடு கருவியால்
    வருகின்ற வெற்றிப் பொருளை
    இடைவிடாது கூறி
    எப்போதும் சூதாடுவானாயின்,
    அரசனுக்கு
    முன்னுள்ள பொருளும்
    பின்னால் அது வரும்வழியும்
    அவனை விட்டு நீங்கிப்
    பகைவரையே சேரும்…!

    குறும்பாவில்...

    சூதாடுகருவியின் சுழற்சியில்வரும் பொருளைச்
    சொல்லியே சூதாடுபவன் சேர்த்த செல்வமும்
    வழியும் நீங்கிப் பகைவரைச்சேரும்…!

    மரபுக் கவிதையில்...

    உருளு கின்ற சூதாட
    உதவும் கருவி யதன்மூலம்
    வரும்பொருள் தன்னைச் சொல்லியேதான்
    வழக்கமாய்ச் சூதினை யாடுமரசன்
    திருவது தேடி வைத்ததுவும்
    திரும்பத் தேடிடும் வழியதுவும்,
    இருக்கா தவனை நீங்கிவிடும்
    எதிரி யிடமது சேர்ந்திடுமே…!

    லிமரைக்கூ

    உருளும் கருவியால் சூது
    வருபொருள் சொல்லி யாடுவோன்பொருள் பகைவர்க்கே,
    அவனிடம் செல்வமினி யேது…!

    கிராமிய பாணியில்...

    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    அதிகமாக் கெடச்சாலும்
    அதுவேணாம் போகாத..

    சுத்தி வருகிற
    சூதாடுற கருவியால
    சேரும் செல்வமுண்ணு
    சொல்லிச் சொல்லியே
    சூதாடுறவன் ராசாண்ணாலும்,
    அவன்
    சேத்துவச்ச செல்வத்தோடே
    சேக்கிற வழியெல்லாமே
    அவன உட்டுட்டு
    எதிராளிகிட்ட போயிடுமே..

    அதால
    ஆடாத ஆடாத
    சூதாட்டம் ஆடாத,
    அதிகமாக் கெடச்சாலும்
    அதுவேணாம் போகாத…!

    Share
  • பிரம்ம கமலம் – அபூர்வ மலர்

    பிரம்ம கமலம் – அபூர்வ மலர்

    பிரம்ம கமலம், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து, ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும். இந்தத் தாவரத்தின் இன்னொரு சிறப்பு, இதன் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிரம்மன் வீற்றிருப்பது போலவே இதன் அமைப்பு இருப்பதால், பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டாகும் என்று நம்பப்படுகிறது. இந்த அபூர்வ மலரை இங்கே பாருங்கள்.

    நம் நண்பரின் நண்பர் ஸ்ரீமதி, இதனைப் பெங்களூரிலிருந்து அனுப்பியுள்ளார். நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 2 (அறிவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 2 (அறிவன்)

    ச. கண்மணி கணேசன் (ஒய்வு),
    முதல்வர் & தமிழ்த்துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி 

    முன்னுரை:

    சிறுபாத்திர வரிசையில் இரண்டாவதாக இடம்பெறக் கூடியது அறிவன் எனும் பாத்திரம். இப்பாத்திரம் யாரைக் குறிக்கிறது? என்பது பற்றியும்; தொகை நூல்களில் இப்பாத்திரம் பெறும் பரிமாணத்தையும் கூர்ந்து நோக்குவது இக்கட்டுரையின் மையப் பொருளாகும்.

    இலக்கண நூல்களில் அறிவன்:

    தொல்காப்பியர் சொல்லும் அகப்பொருள் இலக்கணம் ‘அறிவர்’ கூற்றிற்கு உரியவர் எனக் கற்பியலில் பேசுகிறது (நூற்பா.- 12&13). ஒரு துணைப்பாத்திரம் என்று சொல்லத்தக்க வகையில்; ‘முக்காலத்திற்கும் வழிவழியாக வரும் நல்லனவற்றை உரைத்தலும்; தீயனவற்றை விலக்கலும் செவிலிக்குரிய கூற்றாவது போல அறிவர்க்கும் உரியன’ என்கிறார் தொல்காப்பியர். இதனால் அறிவர் இல்லறத்தார்க்கு உரிய உறுதிப் பொருட்களை தக்க நேரத்தில் அவர்க்கு அறிவுறுத்துவர் என்பது பெறுகிறோம்.

    இது ‘அறிவர்’ என்று பன்மைப்படுத்தப்பட்ட பாத்திரத்திற்கு உரியதெனக் கூறப்படினும்; அறிவன் என்னும் தனிப்பாத்திரத்திற்கு உரிய இலக்கணமாக ஏற்றுக் கொள்வதிலும் தயக்கம் ஏற்பட வழியில்லை. தொல்காப்பியப் புறத்திணையியலும்;

    “மறுவில் செய்தி மூவகைக் காலமும்
    நெறியின் ஆற்றிய அறிவன்” (நூற்பா- 20)

    என அகத்திணையியல்  செய்தியோடு ஒத்துச் செல்வதைக் காண்கிறோம். .      புறப்பொருள் வெண்பாமாலையும் வாகைத்திணைத் துறைகளுள் ஒன்றான ‘அறிவன் வாகை’ பற்றிப் பேசும்போது;

    “புகழ் நுவல முக்காலமும்
    நிகழ்பு அறிபவன் இயல்புரைத்தன்று”

    என்பதால் அறிவன்  மூன்றுகால நிகழ்ச்சிகளையும் அறிந்துணர்ந்து கூறக்கூடியவன் என்பது  உறுதிப்படுகிறது.

    தொகைநூல்களில் உள்ள  புலனெறி வழக்கு:

    அறிவன் பேசுவதாகத் தொகைநூல்களில் பாடல்கள் இல்லை. ஆனால் சிறுபாத்திரம் என்னும் தகுதியுடன் ஒரு பாடலில் நேரடியாக (கலித்தொகை- 39) இடம்பெறுகிறான். அப்பாத்திரம் பெறும் சிறப்பிடத்தைக்  காணலாம்.

    கலித்தொகையில் அறிவன்:

    ஆற்று வெள்ளத்திற்கு ஆற்றாமல் இழுத்துச் செல்லப்பட்ட தலைவியை; அவ்வெள்ளத்துட் பாய்ந்து; உய்வித்துத் தன் மார்போடு தழுவிக் கரையேறினான்  தலைவன். பால்வயத்தான் ஏற்பட்ட உறவில் தலைவி அவனுக்குக் கற்புக்கடம் பூண்டாள். ஊரார் தூற்றினர்; தமர் வெகுண்டெழுந்தனர்; தோழி அறத்தொடு நின்றாள். தாய் தமரை உய்த்துணர வைத்தாள்; இருவரிடத்தும் குற்றம் இல்லை என்று தெளிந்து சீற்றம் அடங்கினர். ஊரறி நன்மணம் நிகழ வரையுறைத் தெய்வத்திற்குக் குரவை அயர்ந்தனர் தோழியர். இந்தச் சூழலில்;

    “நெறிஅறி செறிகுறி புரிதிரிபு அறியா அறிவனை முந்துறீஇத்
    தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக ………..
    சேயுயர் வெற்பனும் வந்தனன்….”

    என்கிறார் கபிலர். ‘நூல் நெறி அறிந்து; தான் குறித்துச் சொல்லும் நல்ல நேரம் ஒருபோதும் தப்பாத பெருமையுடைய கணியனை முற்பட அழைத்துக் கொண்டு; இருவரும் மணமுடித்துக் கூடுதற்கு ஏதுவான நல்ல முகூர்த்தத்தை முடிவு செய்ய; தம் இனத்துப் பெரியோராகிய சான்றவரோடு தலைவன் வந்தான்’ என்பது பொருள். இங்கே புலவர் அறிவன் காலத்தைக் கணிப்பவன் என்ற பொருள் விளக்கத்திற்கேற்பப் பாடியுள்ளார்.

    பாடலில் அறிவன் ஏதும் பேசவில்லை; எனினும் அவனது பாத்திரம் கூடல்நிமித்தம் எனும் குறிஞ்சி ஒழுக்கமாகிய உரிப்பொருளுக்கு ஏற்ற வழிவகை செய்யும் தனிச் சிறுபாத்திரம் ஆகும். அவனது கணிப்பு தப்பாது என்னும் பெருமை சான்ற புகழ்மொழி நோக்கத்தக்கது.

    இன்னொரு அறிவன்:

    குறுந்தொகை 277ம் பாட்டு தலைவி கூற்றாக அமைந்துள்ளது; எனினும் முன்னிலையார் யார் என்னும் செய்தி வெளிப்படையாக இல்லை. ஆனால் பாட்டின் பொருளை ஒட்டி முன்னால் நின்று கேட்பவன் அறிவன் என்று சொல்ல வழியேற்படுகிறது. அத்தலைவி;

    “மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
    எக்கால் வருவது என்றி
    அக்கால் வருவர் எம் காதலோரே”

    எனத் தன் கணவன் வருவதாகச் சொல்லிச் சென்ற மழைக்கால முடிவின் வாடைக்காலம் எப்போது வரும் எனக் கேட்கிறாள்.

    ஓரில் பிச்சையார் என்று தொகுத்தோர் பெயரிட்ட புலவர்; தலைவி தன் முன்னின்றவரை வாழ்த்தும் முறையில் தனிச்சிறப்பு பெறுகிறார். ‘நாய் இல்லாத குற்றமற்ற அகன்ற தெருவில் ஒரு வீட்டிலேயே உன் வயிறு நிரம்பும் படியாக செந்நெல் வெண்சோறும் வெண்ணெயும் கிடைத்து நீ பசியாறுவாயாக; அத்துடன் இம்மழைக்காலக் குளிரினை எதிர்கொள்ளும் பொருட்டு விரும்பத்தக்க வெப்பநீரை உம் சேமச்செப்பு நிறையப் பெற்றுப் பயன் பெறுவீராக’ எனும் வியங்கோள் மூலம் தன் கணவன் வரும் காலத்தைக் கணக்கிட அறிவனின் உதவியை அவள் நாடுகிறாள் என்பது பொருத்தமாகப் படுகிறது. குறுந்தொகையைத் தொகுத்தோர்  தலைவி அறிவனிடம் பேசுவதாகவே கூறியுள்ளனர். இப்பாடலிலும் அறிவன் கூடல் நிமித்தத்திற்கு ஏற்ற வலுவூட்டும் பாத்திரமாகக் காணப்படுகிறான்.

    உதவி கேட்ட அவள் அவனுக்குப் பிச்சை இடவில்லை; மாறாக நாயில்லாத தெருவில் பிச்சையேற்று அவன் வயிறு நிறைய வேண்டும் என்று வாழ்த்துவது அக்காலச் சமூகநிலையையும் தெளிவுறுத்துகிறது. அறிவன் அந்தணர் இல்லத்தில் பிச்சையேற்று உண்பவன் என்பதே புலப்படும் குறிப்புப்பொருள்.

    பெரும்பாணாற்றுப்படை விவரிக்கும்; சாணம் மெழுகிய, கோழியும் நாயுமற்ற; மறைகாப்பாளர் உறைவிடத்தைக் (அடி.-  298- 301) குறுந்தொகைத் தலைவி குற்றமற்ற தெரு என்று சொல்வதாகக் கொள்வது பொருத்தமே. பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் இதே கருத்தைக்  கூறிச் செல்கிறார். செவ்விலக்கியக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிவேறுபாடு ஓரில் பிச்சையாரின் பாடலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

    முடிவுரை:

    தொல்காப்பியர் அறிவனைத் துணைப்பாத்திரம் எனும் தகுதிக்கு உரியனாகக் கூறினாலும்; தொகைநூல்களில் அவன் சிறுபாத்திரமாகவே காணப்படுகிறான். அறிவன் காலத்தைக் கணிப்பவன் ஆவான். கூடல்நிமித்தம் எனும் குறிஞ்சி உரிப்பொருளுக்கு வழிவகை செய்யும் தனிப் பாத்திரமாகக் காணப்படுகிறான். அறிவர் அந்தணர்களின் இல்லத்தில் பிச்சையேற்று உண்டனர்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 22

    பழகத் தெரிய வேணும் – 22

    நிர்மலா ராகவன்

    (நீங்கள் ஆமையா, முயலா?)

    ஒரு சிறுவன் தன் பொம்மைக்காரில் பேட்டரியைப் பொருத்தப் படாத பாடுபட்டான். முதலில் முடியவில்லை. அழுதபடியே மீண்டும் முயன்றான்.

    இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

    ‘பாவம், குழந்தை! அழுகிறானே!’ என்று அவன் கையிலிருப்பதைப் பிடுங்கி, நீங்களே உதவ நினைக்கிறீர்களா?

    அது அன்பான செயல் என்று நீங்கள் நினைக்கலாம்.

    ஆனால், அவனுடைய அழுகை பலக்கிறது. ஏனெனில் அவன் கையாலாகாதவன் என்று பிறர் நினைக்கிறார்கள். அது அவனுடைய தன்னம்பிக்கைக்குச் சவால்.

    நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அவன் எடுத்த காரியத்தில் வெற்றி அடைகிறான். பேட்டரி சரியான இடத்தில் அமர, கார் ஓட ஆரம்பிக்கிறது.

    ‘நான் கெட்டிக்காரன்!’ என்ற பெருமிதம் எழுகிறது. அப்போது சிறுவன் முகத்தில் தோன்றும் களிப்பே தனிதான்.

    “தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் பயந்து, பாதியில் நிறுத்திவிடுவதுதான் தவறு” (உளவியலாளர் ஸ்கின்னர்).

    பொதுவாகவே, குழந்தைகள் பாடும்போதோ, வாய்ப்பாடு ஒப்பிக்கும்போதோ கடைசி ஓரிரு வார்த்தைகளை அல்லது எண்களை அதிவேகமாகச் சொல்லி முடிப்பார்கள். அவர்களுக்கு எப்படியாவது முடிவை அடையவேண்டும் என்ற வெறி.

    வாழ்க்கையில் வெற்றி பெற அப்படி அவசரப்படுவது தகாது. பொறுமையும் நிதானமும் அவசியம். குறுகிய காலத்தில் சாதிக்க நினைத்தால் எந்தக் காரியமும் அரைகுறையாகத்தான் முடியும்.

    மேரி க்யூரி (MARIE CURIE) தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த அறிவுரையாகக் கருதுவது: “முன்னேறுவது என்பது எளிதானதோ, விரைவாகக் கிடைப்பதோ அல்ல”.

    இந்த உண்மை புரிந்துதான் இருமுறை நோபல் பரிசு வாங்கியிருக்கிறார் — பௌதிகத்திலும், ரசாயனத்திலும்.

    இதைத்தான் ‘ஆமையும் முயலும்’ கதைவழி சிறுவர்களுக்குப் போதிக்கிறோம்.

    எந்தக் காரியமும் செய்வதற்குமுன் கடினமாக, நம்மை அயர்ச்சி அடையவைப்பதாகத்தான் இருக்கும். அதற்காக, கனவுடனேயே திருப்தி அடைந்துவிடலாமா?

    கதை

    ராஷ்டிரகூட அரசனாகிய முதலாம் கிருஷ்ணனுக்கு ஒரு கனவு இருந்தது. ஔரங்காபாத் அருகிலிருக்கும் எல்லோராவில் ஒரே கல்லில் கைலாசநாதர் கோயில் கட்டவேண்டும் என்பதுதான் அது. அதனைக் கட்டி முடிக்க இருபத்தாறு ஆண்டுகள் ஆயிற்று.

    ‘நல்ல வேளை, ஆரம்பித்தபின்னர் மனம் தளர்ந்து, இது நடக்கிற காரியமா!’ என்று அரசன் யோசித்து, எடுத்த முயற்சியைக் கைவிடவில்லை.

    ‘ஒரே கல்லைக் குடைந்து, இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டுவது மனிதனால் முடிகிற காரியமே இல்லை. வேற்று கிரகவாசிகள் செய்ததாக இருக்கும்,’ என்று அயல்நாட்டவர்கள் ஆற்றாமையுடன் ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிற அளவுக்கு அசாதாரணமான சின்னமாக எல்லோரா குகைக்கோயில் ஆகியிருக்காது.

    கஜினி முகமது

    ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெறாவிட்டால் என்ன! அதிலும் ஒரு சௌகரியம். மீண்டும் செய்யும்போது முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை.

    ஒரு மாணவன் பல முறை பரீட்சையில் தோல்வியுற்று, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் அவனை கஜினி முகமது என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.

    உண்மையில், அவன் பாராட்டுக்கு உரியவன். மனம் தளராது எடுத்த காரியத்தை முடிப்பது என்று உறுதியாக இருக்கிறான், அல்லவா?

    ‘இது என்ன பிடிவாதம்? முடியவில்லை என்றால் விட்டுவிடேன்!’ என்று பிறர் அவநம்பிக்கை அளிக்க முயலலாம்.

    அவனுக்கென ஓர் இலக்கு இருக்கிறது. அதை நோக்கிப் போகும்போது எவ்வகையான தடங்கல் வந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

    புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களும் இத்தகையவர்கள்தாம்.

    கால் வலிக்கிறதே, உடல் களைத்துப்போகிறதே, வேறு எதற்குமே நேரம் கிடைப்பதில்லையே என்றெல்லாம் யோசித்துப் பின்வாங்கியிருந்தால், முதல்தர விளையாட்டு வீரர்களாக ஆகியிருக்க முடியுமா?

    ‘இறுதிச்சுற்றின்போது, கண்டிப்பாக வெற்றி நமக்குத்தான்!’ என்று சற்றே அயரவும் மாட்டார்கள் இவர்கள்.

    அறிவும் பலமும் இருந்தால் மட்டும் போதாது, வெல்லவேண்டும் என்ற உறுதியுடன் விடாமுயற்சியும் அவசியம் என்று இவர்களுக்குத் தெரியும்.

    உடலும் மனமும் களைத்தபின்னரும் தொடர்ந்து செய்வதுதான் விடாமுயற்சி.

    இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, என் மாணவி ஒருத்தி இரவு பகலாக, தகுந்த ஆகாரமுமின்றி படித்ததில், பரீட்சைக்கு ஒரு மாதம் முன்னர் ‘மண்டை வலி’ என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். கோமா நிலைக்குப்போய், பரீட்சை எழுத முடியாமல் போயிற்று.

    பாடங்களைப் படிப்பதானாலும் அவ்வப்போது ஓய்வும், உணவும் அவசியம்தானே?

    நான் முன்பெல்லாம், ஒரு ஆப்பிள், குடிநீர், பால் எல்லாவற்றையும் எனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, சாப்பாட்டு மேசைமுன் அமர்ந்து கதை எழுத ஆரம்பிப்பேன். ‘பசிக்கிறதே!’ என்று பாதியில் எழுந்துபோனால் கற்பனை தடைப்பட்டுவிடும்.

    இப்போதும், எங்கள் வீட்டுக் குழந்தைகள் நாள்முழுவதும் படிக்கும்போது பழம், பிஸ்கோத்து என்று ஏதாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பேன். முனைந்து படிக்கையில், பசி தெரியாது. ஆனால் களைப்பு அதிகரிக்க, வேகம் குறைந்துவிடும். காலை, மாலை இருவேளையும் காற்றாட நடக்கவும் வேண்டும். இல்லையேல், ரத்த சோகை, மங்கலான கண் பார்வை என்று ஏதேதோ அவதிகள் வந்துவிடும்.

    கேள்வியும் பதிலும்

    பதின்ம வயது மாணவர்களுக்கான புத்தகத்தில் ஒரு கேள்வி: ‘பெரியவன் ஆனதும் என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்?’

    படிப்பில் அக்கறையில்லாத மாணவர்கள் எழுதியது: டாக்டர், வக்கீல், துப்புறவுத் தொழிலாளி.

    பெரிய இலக்கு. ஆனால் அதை அடைவதற்காக எந்த முயற்சியும் கிடையாது.

    என் மாணவிகள் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கணக்கைப் போடத் திணறினால், நான் அதை கரும்பலகையில் போட்டுக்காட்டுவேன்.

    ‘எத்தனை சுலபம்!’ என்று ஒரு குரல் எப்போதும் எழும்.

    ‘அதை நீங்களே போடுவதுதானே!’ என்று நினைத்துக்கொள்வேன்.

    எதுவானாலும், செய்து முடித்தபின்தான், ‘இதற்கா இவ்வளவு தயங்கினோம்!’ என்ற ஆச்சரியம் எழும்.

    மேடும் பள்ளமும்

    கடுமையாக உழைத்து, உச்சத்திற்குப் போனபின் பலர் அங்கேயே நிலைப்பதில்லை. கர்வம் கொண்டால் விழுவது நிச்சயம்.

    உச்சத்திலிருந்தபோது கொண்டாடியவர்கள் அப்போது காணாமல் போய்விடுவார்கள். தம் தவறு என்னவென்று கீழே விழுந்தவர்களுக்குப் புரிவதில்லை. ‘நன்றிகெட்ட மனிதர்கள்!’ என்று பிறரைப் பழிப்பார்கள்!

    எல்லை கடந்தது

    இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகளுக்கு எல்லையே கிடையாது. சில வருடங்கள் கற்றபின் மலைப்பாக இருக்கும். மெள்ள மெள்ளச் சென்றாலே போதும். கரையைக் காண முடியாவிட்டாலும் அறிவு சிறந்திருக்கும்.

    ‘நீயும்தான் இத்தனை வருடங்களாக ஒரே காரியத்தைச் செய்கிறாய்! என்ன கிழித்தாய்!’ –- இப்படிப் பலவாறாகச் சிலர் ஏன் நம்மை அவநம்பிக்கைக்கு ஆளாக்க முயல்கிறார்கள்?

    அவர்களைப் பொறாமை ஆட்டிவைக்கிறது. இதைப் புரிந்துகொண்டால், அவர்கள் சொல்வதை அலட்சியம் செய்ய முடியும். நம் மன உறுதியும் தளராது. விடாமுயற்சியுடன் செயல்படுகிறவர்களை வீழ்த்துவது கடினம்.

    எல்லோரையும் எப்போதும் மகிழ்விக்க நினைத்தால் நம் மகிழ்ச்சிதான் கெடும்.

    Share
  • திரௌபதி சுயம்வரம்

    திரௌபதி சுயம்வரம்

    ஆ. கிஷோர்குமார்

    துருபதன் மகளுக்கு
    சுயம்வர தருணம்

    சுயம்வர சபையில்
    கண்ணனும் அவன் அண்ணனும்
    அருகருகே அமர்ந்திருக்க

    வேதியர் வரிசையில்
    பாண்டவர்கள்… பார்ப்பன வேடம்
    பூண்டவர்கள்.

    சுயம் வர சபையில்
    ஓரு எழில் வரம்..
    நகை பூண்ட
    நாயகி  பாஞ்சாலி..

    திரிஷ்டத்துய்மன்
    சபைக்கு வணக்கம் அளித்துப் பின்
    விளக்கம் அளித்தான்

    வில்லைக் காட்டி..
    இதில் நாணை ஏற்றி
    அம்பைப் பூட்டி
    சுழலும் சக்கர இடைவெளியில்
    தெரியும் இலக்கை அடிப்பவர்க்கே துருபதன் மகள் துணையாக வருவாள்
    வாழ்க்கை முழுக்க
    இணையாக இருப்பாள்.

    ஒவ்வொருவராய் முயல
    எழுந்து வந்த எல்லாரும்
    வில்லை வளைக்கக் கூட வக்கில்லாமல் விழுந்து ஓடினர்..

    சிசுபாலன், சல்லியன், ஜராசந்தன் எனத்
    தோற்றவர் பட்டியல் நீண்டது
    மண்டபத்தின் மத்தியைச் சிறிது நேரம் வில்லே ஆண்டது..

    துணுக்குற்ற துரியன்
    துள்ளி எழுந்தான்
    எல்லோரையும் எகத்தாளமாய்ப் பார்த்தான்..

    சபை நடுவே சென்று
    வில்லெடுத்து இரும்பு நாணை இழுத்துக் கட்டினான்
    சின்ன இடைவெளியில் சற்றே பலமிழக்க எதிர்த்தடித்த வில்லால்
    எகிறி விழுந்தான்
    என்ன நடந்ததோ என விழித்தான்…
    வியர்வையை விரலால் வழித்தான்…
    சபை அங்கே சிரித்தது
    கண்ணால் துரியனை எரித்தது…

    அந்தணர் கூட்டத்தில்
    அர்ஜுனன் எழுந்தான்
    ஐயம் வினவினான்
    நான் மேல்வருணன்
    நான் எடுக்கலாமா இந்த நாண்?

    திரிஷ்டத்துய்மன் சற்றே முறைத்தான்
    யோசித்தபின் உரைத்தான்
    இது வீரம் பேசும்  தருணம்.
    தேவையில்லை இங்கு வருணம்.
    போட்டி பொதுவானதே..

    வில்லருகில் போனான் விஜயன்
    கண்களில் இலக்கை இறுக்கினான்
    கருத்தினில் கண்ணனை இறுக்கினான்
    வில்லில் நாணை இறுக்கினான்
    அம்பை வில்லில் இருத்தினான்.

    ஒவ்வோர் அம்பும் இலக்கை தாக்கியது
    இவனால் முடியுமா என்ற ஐயத்தை நீக்கியது..

    திரௌபதி பார்வை
    அவன் வீரம் பார்த்தது…
    நெற்றி அதை வழிமொழிந்து வியந்தது……..
    உடல் மகிழ்ச்சியில்
    தானாக வேர்த்தது …
    கையோ அவன்  கழுத்தில் மணமாலை சேர்த்தது…

    Share
  • நாலடியார் நயம் – 35

    நாலடியார் நயம் – 35

    நாங்குநேரி வாசஸ்ரீ

    35. கயமை

    பாடல் 341

    கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
    குப்பை கிளைபோவாக் கோழிபோல்; – மிக்க
    கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
    மனம்புரிந்த வாறே மிகும்.

    காலத்தே தானியத்தை வேண்டுமளவு போட்டாலும்
    குப்பைகிளறுவதை விடாது கோழி அதுபோல்
    மேன்மைமிகு நூல்களை விரிவாய் விளக்கினாலும் தன்
    மனம் விரும்பிய வழியிலே செல்வான் கீழோன்.

    பாடல் 342

    காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
    தாழாது போவாம் என உரைப்பின் – கீழ்தான்
    உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
    மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

    உறுதியான நூற்பொருளைக்  கற்பதற்கு
    உயரிய சான்றோரிடம் காலம் தாழ்த்தாது
    உடனே செல்வோம் எனச் சொன்னால்
    உறங்க வேண்டும் என்றோ வேறொரு
    உபயோகமற்ற காரணத்தையோ சொல்லி
    உடன்படாது மறுத்துச் செல்வான் கீழானவன்.

    பாடல் 343

    பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
    ஒருநடைய ராகுவர் சான்றோர்; – பெருநடை
    பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
    வற்றாம் ஒருநடை கீழ்.

    விளங்கும் மலையருவிகளுடை நல்ல நாட்டின்
    வேந்தனே! மேலோர் பெருஞ்சிறப்பு தமக்கு
    வாய்க்கப் பெற்றினும் ஒழுக்கத்தினின்று
    வழுவாது ஒரே நிலையில் இருப்பர் மாறாக
    வளமான பெருஞ்சிறப்பு கிட்டுமாயின்
    வேறாக நடந்து கொள்வர் கீழோர்.

    பாடல் 344

    தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
    பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; – பனையனைத்து
    என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
    நன்றில நன்றறியார் மாட்டு.

    விளங்கும் அருவிகளுடை நல்ல நாட்டு
    வேந்தனே! செய்த உதவி தினை அளவே
    விளங்கினும் சான்றோர் பனையளவென
    விரும்பிப் போற்றுவர் பனையளவு உதவினும்
    நன்றியில்லாதார் அதனை உதவியெனவே
    நினைக்க மாட்டார்.

    பாடல் 345

    பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
    எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; – அச்சீர்
    பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
    கருமங்கள் வேறு படும்.

    நல்ல உணவைப் பொற்கலத்தில் வைத்து வளர்க்கும்
    நாய்க்குக் கொடுத்தாலும் பிறர் எச்சில் சோற்றை
    கண் இமைக்காமல் பார்த்திருக்குமதுபோல்
    சிறப்புள்ளவனாய் மதித்துப் பெருமை செய்திடினும்
    செய்யும் செயல்களால் வேறுபட்டு நிற்பான் கீழ்மகன்.

    பாடல் 346

    சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
    எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; – எக்காலும்
    முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
    இந்திரனா எண்ணி விடும்..

    உலகம் முழுதும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும்
    உயர்ந்த செல்வம் பெறினும் வரம்புகடந்த சொற்களை
    உரையார் பெரியோர் எப்போதேனும் முந்திரி எனும்
    சிறுதொகையின்மேல் காணி எனும் அற்பத்தொகை
    சேர்ந்தால் தம்மைத் தேவலோக இந்திரனாய் நினைத்து
    செருக்குற்று நடப்பர் கீழோர்.

    பாடல் 347

    மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
    செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
    எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
    செய்தொழிலாற் காணப் படும்.

    மாசற்ற நல்ல பொன்னின் மேல்
    மாட்சிமை பொருந்திய இரத்தினங்கள்
    பதித்துச் செய்தாலும் காலில் அணிதற்கே
    பயன்படும் செருப்பு என்பதுபோல் கீழ்மக்கள்
    அதிகமாய்ச் செல்வம் பெற்றிருப்பினும்
    அவர் செய்யும் செயல்களால் கீழோரெனவே
    அறியப் படுவர் எப்போதும்.

    பாடல் 348

    கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
    இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், – அடுத்தடுத்து
    வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
    ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

    பெருமையான மலைகளுடை நல்லநாட்டைப்
    பெற்ற அரசனே! கீழ்மகன் கடும் சொல் சொல்லும்
    பழக்கம் உடையவன் எவரிடத்தும் இரக்கம்
    பாராட்டாதவன் மற்றவர் படும் துன்பத்திற்கு
    பெரிதும் மகிழ்பவன் அடிக்கடி சினம் கொள்பவன்
    பல இடங்களில் கண்டபடி திரிபவன் மற்றவரை
    பழித்துப் பேசும் இயல்பு கொண்டவன்.

    பாடல் 349

    பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
    உழையினியர் ஆகுவர் சான்றோர்; – விழையாதே
    கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
    எள்ளுவர் கீழா யவர்.

    தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மிகுந்து
    தொடர்ந்து ஒலியெழுப்பும் கடலினது
    குளிர்கரையுடை நாட்டு வேந்தனே! ஒருவர்
    தம் பின் நின்றால் பல நாள் பழகியவரென
    தகுதியுடைப் பெரியோர் அவர்களிடம் இனியராய்
    தக்கவாறு பழகுவர் கீழ்மக்களோ நிற்பவரை
    தம் நண்பராய்க் கருதாது பழிப்பர்.

    பாடல் 350

    கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
    வையம்பூண் கல்லா சிறுகுண்டை; – ஐயகேள்,
    எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
    செய்தொழிலாற் காணப்படும்.

    அரசனே கேட்பாயாக! நாள்தோறும்
    அறுக்கத்தக்க புல்லைத் தின்பதற்கு
    அறுத்துக் கொடுத்தாலும் சிறிய எருதுகள்
    அளவிற்பெரிய வண்டியை இழுக்கமாட்டா
    அதுபோல் செல்வம் பெற்றிருப்பினும் கீழோரை
    அவர் செய்யும் செயலினால் அறிய இயலும்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 264

    படக்கவிதைப் போட்டி – 264

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (28.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 263இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 263இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பச்சிலையில் இச்சையோடமர்ந்திருக்கும் வெட்டுக்கிளியைத் துல்லியமாய்ப் படமெடுத்து வந்திருப்பவர் திருமிகு. கீதா மதி. இப்படத்தை படக்கவிதைப் போட்டி 263க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விரு மங்கையர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

    உழவர்கள் பாசத்தோடு வளர்த்திடும் பயிர்களை வெட்டி நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் உழவர்களின் பகைவர்களாய் விளங்குகின்றன.

    வெட்டுக்கிளியே! பிறவற்றிற்கு இன்னா செய்யும் தீய பண்பை நீ கைவிட்டால் மன்னா உலகத்தில் மன்னுபுகழ் பெறுவாய்; மறவாதே!

    இதோ உன் செயல்குறித்துக் கருத்தாய்க் கவிபாட எம் கவிஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை வரவேற்கின்றேன்!

    *****

    ”பச்சை இலையை மிச்சமின்றி உண்ணும் வெட்டுக்கிளியைத் துச்சமாக எண்ணாது ஒழித்திடவேண்டும்” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பகையாய்…

    பச்சை இலையில் வெட்டுக்கிளி
    பார்த்திட அழகுதான் சின்னக்கிளி,
    மிச்ச மீதி வைக்காமல்
    முழுதும் இலையைத் தின்றிடுமே,
    துச்ச மாக எண்ணவேண்டாம்
    துணையுடன் கூட்டமாய் வந்தாலே
    பச்சைப் பயிரெலாம் பாழாகும்,
    பார்த்தே ஒழிப்போம் பகையிதையே…!

    *****

    ”வெட்டுக்கிளியே! பயிரை நட்ட விவசாயி பட்ட துயரை நீ அறிந்தால் கிட்ட வராமல் எட்டிச்செல்வாய்” என்று எதார்த்தம் உரைக்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

    எட்டிச் செல் வெட்டுக்கிளியே!

    வட்டிக்குக் கடன் வாங்கி
    வயல்காட்டைப் பண்படுத்தி
    சுட்டெரிக்கும் வெயிலிலும்
    சோர்வின்றித் தினம் உழைத்து
    நட்ட பயிர் வளர்ச்சிக்காய்
    நாளும் பொழுதும் பாடுபட்டுக்
    கொட்டும் நல்ல‌ விளைச்சலால்
    கிட்டும் பணம் கொண்டு
    வட்டிக் கடன் அடைத்து
    வளமாய் வாழ நினைக்கையில்
    நட்ட பயிர் இலைகளை
    வெட்டி உணவாய் உட்கொண்டு
    நட்டம் தன்னை ஏற்படுத்துதல்
    நல்லதோ சொல் வெட்டுக்கிளியே?
    நட்ட விவசாயி நாளும்
    பட்ட துயர் நீயறிந்தால்
    கிட்ட வராமல் கூட்டத்துடன்
    எட்டிச் செல்வாய் மனமிரங்கி!

    *****
    ”வெட்டுக்கிளியே! உன்னை நாங்கள் கொண்டாட வேண்டுமா? உன் வெட்டும் குணத்தை மாற்றிக்கொண்டு சுதந்தரமாய்ப் பறந்து திரி!” என்று நல்யோசனை நவில்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    இளம்பச்சை வண்ணமதில்
    அழகாய் நீ இருந்தாலும்
    உனை நான் வெறுக்கிறேன்
    வெட்டுவது உன் குணமாய்
    இருக்கையிலே வேறு என்செய?

    உலகின் கண்டம் விட்டுக் கண்டம் வந்து
    தானியங்களை அழித்து விட்டு
    நாடுகளை நாசமாக்கும் இனம்தானே நீ?

    விளை நிலங்கள் பயிரினங்கள்
    வீழ்ந்திட்ட நிலையினையே
    மறந்திட்டு உனை ரசிக்க
    ஈரமில்லை என் நெஞ்சில்!

    வந்தவழி சென்று விடு
    எம் நாட்டின் வாசலை மூடிவிட்டோம்
    நீ இருந்த இடத்திலே இருந்திட்டு
    இறுதி வரை வாழ்ந்து விடு

    வெட்டும் குணம் மாற்றிக் கொள்!
    சுதந்திரமாய்ப் பறந்து திரி
    நாங்கள் அழைப்பதற்கும் ஏதுவாக!!
    உனை ரசிப்பதற்கும் தோதாக!

    *****

    ”இன்னல் விளைத்து உழவர்களுக்குத் தொல்லைகொடுக்க இயற்கை நடத்தும் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க இங்கு யாருனை அனுப்பிவைத்தார்? பெயரைச் சொல்! அவரையும் எம் கடவுளர் வரிசையில் சேர்த்துவிடுகின்றோம்” என்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    திரும்பிச் செல்!

    இன்பமாய் அமர்ந்திருக்கும் நீ எனை உண்பதுபற்றி
    இறுதிமுடிவு எடுக்குமுன் பொறுமையாய்க் கேள்!
    இலையெனும் நான் கெஞ்சிக் கேட்கிறேன்.
    இப்புவிவாழ் உழவரையெல்லாம் கதிரவன்
    இரக்கமின்றி சுட்டெரித்தான் கடவுளாய் வணங்கினர்
    இரவுபகலாய் அதிகமழைபொழிவித்து
    இடர்விளைவித்தவனையும் மழைக்கடவுளென்றனர்
    இங்குமங்கும் மரங்களைச் சாய்த்துப் பயிருக்குச் சேதம்
    இழைத்த காற்றையும் கடவுளாய் வணங்கினர்
    இதுபோன்ற கடவுளர் பல உண்டு இவர்கள் பட்டியலில்
    இருப்பதை வைத்து விதை வாங்கித் தூவி வயிற்றைக் கட்டி
    இயன்றவரை கடும் உடலுழைப்பால் எமை உருவாக்கி
    இயற்கை நடத்தும் நாடகமாம் புயல், மழை வறட்சியினின்று
    இந்நேரம்வரைக் காத்த எம் உழவர்கூட்டத்தை நினைத்துப்பார்!
    இன்னல் விளைத்து உழவர்களுக்குத் தொல்லைகொடுக்க
    இயற்கை நடத்தும் நாடகத்தில் பாத்திரமேற்று நடிக்க
    இங்கு யாருனை அனுப்பிவைத்தார்? பெயரைச் சொல்!
    இடர் விளைவித்தவரையெல்லாம் கடவுளாக்கிச் சுடர் ஏற்றி வழிபட்டு
    இம்மியளவும் தளரா எம் உழவர் பெருமக்கள் உன்னை அனுப்பியவரையும்
    இனிமேல் கடவுளர்கள் பட்டியலில் கண்டிப்பாகச் சேர்த்துவணங்குவர்
    இப்பூவலக மக்களெல்லாம் நல்லவர்கள் இவர்களுக்கு
    இயற்கை வழிபாடு ஒன்றும் புதிதல்ல புரிந்துகொள்!
    இப்போதுவரை வயிறுபெருத்த உன்கூட்டம் உலகத்துப் பயிரை
    இடைவிடாது விழுங்கியது போதும் திரும்பிச்செல்!
    இவ்வுலகத்தவர் வயிற்றை நிரப்பி நன்றிசெலுத்த எமக்கும் வாய்ப்புகொடு.

    *****

    ”வெட்டுக்கிளியே! கிளி என்றால் நேசம்! அது உனக்கு இல்லாததால் எம் பயிர்கள் நாசம்! காந்தி தேசத்தில் இனி நாங்கள் காட்டப்போவதில்லை இரக்கம்; வெட்டி வீழ்த்தப்போகிறோம் உன் இறக்கைகளை!” என்று சினந்துரைக்கின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    வெட்டுக்கிளியே எச்சரிக்கை
    முதலில் உனது பெயரை
    மாற்றி எழுத வேண்டும்
    நீ வெட்டுக்கிளி அல்ல
    நீ பாயும் புலி!

    கிளி என்றால் அழகு
    கிளி என்றால் நேசம்
    இரண்டுமே இல்லாததால்
    பயிர்களோ நாசம்!

    கண்டம் விட்டுக் கண்டம்
    பறவைகள் தான் வருகிறது
    இரண்டகம் உன்போல் செய்யலையே!

    உழைக்காமல் உண்பவனே
    உண்ணும் உணவை அழிப்பவனே
    பூச்சி இனம் தானே
    கண்ணாமூச்சி உன் இனத்திடமே

    பயிர்களை நாசம் செய்யச் செய்ய
    உன் அழிவு நீ தேடியதே!

    விவசாயிகளை வாட்டாதே
    படையெடுப்புக் கொழுப்பே!

    பல்முனைத் தாக்குதல்
    பாரதம் எப்படிச் சமாளிக்க?

    ஒருபுறம் கொரானா
    மறுபுறம் சீனா சனியன்
    நடுவினில் நீயா?
    நாங்கள் என்ன வீணா?

    பார்த்து விடுவோம் ஒருகை
    காந்தி தேசத்தில்
    உனக்கில்லை இரக்கம்!
    உன் இறக்கை வெட்டப்படும்!
    விவசாயிப் பயிர்
    இருக்கை காக்கப்படும்!

    *****

    இந்தியப் பயிர்களை வெட்டித் தள்ளிய வெட்டுக் கிளிகள்மீது சீற்றத்தைக் காட்டி நம் கவிஞர்கள் எழுதியிருக்கும் கவிதைகள், நாட்டு வளத்திலும் உழவர் நலத்திலும் அவர்களுக்கிருக்கும் அளவற்ற அக்கறையைக் காட்டுகின்றன. பாராட்டுக்கள் நம் கவிஞர்களுக்கு!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுபெற்றிருப்பது…

    உயிர் சுழற்சி

    பேரிச்சைப் பாலை விட்டு 
    நெல்இச்சைக் கொண்டு வந்து
    உரம்பாய்ச்சி வளர்த்து வைத்த
    கதிரழித்த வெட்டுக்கிளி…

    நாடுவிட்டு நாடுசென்று
    ஏவுகணை போலத் தாக்கி
    பாடுபட்டு வளர்த்த பயிர்
    காவுகொண்டு போனதிங்கே….

    பூச்சியினம் ஊர்வன உண்ணும்
    ஊர்வனவற்றை விலங்கு உண்ணும்
    விலங்கினங்கள் காட்டில் வாழும்
    உயிர் சுழற்சிப் பாடம் கண்டோம்…

    உயிர் சுழற்சி இயற்கையை – நாம்
    முறைதவற வைத்துவிட்டு
    சிற்றுயிரிப் பூச்சியினைக்
    குற்றஞ்சொல்லி ஏது பயன்?

    ”உயிர்சுழற்சி இயற்கையை மனிதர்களாகிய நாம் முறைதவற விட்டுவிட்டு, வெட்டுக்கிளிகளையும் இன்னபிற சிற்றுயிர்களையும் குற்றஞ்சொல்லி என்ன பயன்?” என்று வினாத்தொடுத்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 2

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 2

    -மேகலா இராமமூர்த்தி

    மானுடம் வெல்லவேண்டுமாயின் அது புலனொழுக்கத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்று விரும்பிய கம்பநாடர், தம் காப்பியத்தின் தொடக்கமாக அமைந்த பால காண்டத்தின் முதற்படலமான ஆற்றுப் படலத்திலேயே கோசலநாட்டு மக்களின் ஒழுக்கத்தைப் பற்றித்தான் பேசுகின்றார்.

    ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
    காசு அலம்பும் முலையவர் கண் எனும்
    பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
    கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்
    (கம்ப: ஆற்றுப்படலம் – 12)

    பொதுவாக மனிதர்களைத் தம் ஒழுக்கத்திலிருந்து விலகச் செய்யும் ஐம்பொறிகள் எனும் அம்புகளும், பெண்களின் கண்களாகிய அம்புகளும் ஒழுக்கநெறியினின்று விலகிச் செல்லாத கோசல நாட்டை அணிசெய்கின்ற சரயு என்ற ஆற்றின் அழகினை நான் இப்போது கூறுகின்றேன் என்று ஆரம்பிக்கும் கம்பர், ஆற்று வருணனையைச் சாற்றுவதற்கு முன்பாகவே கோசல நாட்டு மக்களின் நல்லொழுக்கத்தைப் பேசுவதைக் காண்கையில் நிலவளத்தைவிடவும், நீர்வளத்தைவிடவும் மக்களின் குற்றமற்ற மனவளத்தையே பெரிதும் போற்றும் பெற்றியுடையவராய் அவர் திகழ்ந்தார் என்பது புலனாகின்றது.

    இவ்விடத்தில் பாட்டரசி ஔவையின் சங்கப் பாடலொன்றை நாம் பொருத்திப் பார்க்கலாம்.

    நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே.
    (புறம்: 187– ஔவையார்)

    ”நிலமே நீ ஓரிடத்தில் நாடாகவும், மற்றோர் இடத்தில் காடாகவும், வேறோர் இடத்தில் கடலாகவும், பிறிதோர் இடத்தில் மலையாகவும் தோற்றமளிக்கின்றாய். ஆனால் நிலஅமைப்பின் அடிப்படையிலா நீ பெருமை பெறுகின்றாய்? இல்லை! எந்நிலத்து ஆடவர் நல்லவரோ அவ்விடத்தில் நீயும் சிறப்படைந்துவிடுகின்றாய்” என்கிறார்.

    பாட்டரசி, ஆடவரின் ஒழுக்கத்தாலேயே நிலம் சிறக்கும் என்று செப்ப, கவிச்சக்கரவர்த்தியோ இன்னும் ஒருபடி மேலேபோய் எங்கே ஆடவர் பெண்டிர் இருதிறத்தாரும் புலனொழுக்கத்தில் சிறந்திருக்கின்றனரோ அந்நிலமே சிறக்கும் என்றுரைத்து நிலத்தைச் சிறப்படையச் செய்வதில் பெண்டிருக்கும் பங்குண்டு என்பதைத் தெளிவுபடுத்திவிடுகின்றார்.

    அடுத்து, கோசலத்தை அணிசெய்யும் மாசற்ற சரயு எனும் ஆற்றின் தன்மை குறித்துப் பேசத் தொடங்குகின்றார்.

    இரவிதன் குலத்து எண்ணில் பல் வேந்தர்தம்
    பரவுநல் ஒழுக்கின் படிப் பூண்டது
    சரயு என்பது தாய் முலை அன்னது இவ்
    உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். 
    (கம்ப: ஆற்றுப்படலம் – 23)

    சூரிய குலத்தை ஆண்ட வேந்தர்கள் கணக்கற்றோர். அவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட பொதுப்பண்பு, உலகம் போற்றும் ஒழுக்கநலம் வாய்ந்தோராய் அவர்கள் அனைவருமே விளங்கியமையாகும். அவர்களைப் போன்றே போற்றத்தக்க நல்லொழுக்கினை மேற்கொண்ட சரயுவானது, கோசல நாட்டின் உயிரினங்கள் அனைத்திற்கும் பாலூட்டி வளர்க்கின்ற தாயின் முலைபோன்றதாகும். தாய்முலையானது பால்சுரந்து குழந்தைகளைப் பேணிவளர்ப்பது போன்றே சரயுவும் நீர்சுரந்து கோசல மக்களைப் புரக்கின்றது என்பது கம்பர் காட்டும் உவமை.

    ஒழுக்கு என்ற சொல் இங்கே இருவேறு பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது. அரசர்களுக்கு அஃது இடையறாத ஒழுக்கப் பண்பையும், ஆற்றுக்கு இடையறவுபடா நீர் ஒழுக்கினையும் குறிப்பதாக அமைகின்றது.

    கம்பரைப் பொறுத்தவரை அவர் தமிழகத்தைத் தாண்டி வேறெங்கும் சென்றதாகத் தகவல்கள் இல்லை. அவர் பார்த்ததெல்லாம் சோழநாட்டையும் அதனை வளப்படுத்தி, சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையவைத்த, காவிரியையும்தான்! எனவே சரயுவின் இயல்புகளாகக் கம்பராமாயணத்தில் அவர் குறிப்பிடுவதெல்லாம் ’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி’யின் இயல்புகளாக அவர் கண்டவற்றைத்தாம்!

    சரயுவை எப்படித் தாய்முலைக்குக் கம்பர் ஒப்பிடுகின்றாரோ அதுபோன்றே ’ஈன்றணிமை தீர்ந்த குழந்தையைத் தாய்முலைப்பால் காப்பதுபோல் தன்னுடைய நீர்வளத்தால் சோழநாட்டைக் காக்கின்றது காவிரி’ என்று காவிரியைத் தம் புறநானூற்றுப் பாடலில் போற்றுகின்றார் புலவர் கோவூர்கிழார்.

    புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
    சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
    மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்…
    (புறம் 68 – கோவூர் கிழார்)

    எனவே கம்பரின் சரயு குறித்த கற்பனைக்குக் கோவூர் கிழாரின் இந்தப் பாடலடிகள் அடிப்படையாக அமைந்திருக்கக்கூடும்.

    நாட்டு வளத்தைப்பற்றிப் பேசுமிடத்து மீண்டும் கோசலநாட்டு மக்களின் பண்பு நலன்களைப் பரக்கப் பேசுகின்றார் கம்பர்.

    கோசல நாட்டில் வறுமையில்லாததால் அங்கே வள்ளன்மைக்கு வேலையில்லை; அங்குள்ளவர்களிடையே பகைமை இல்லாத காரணத்தால் வலிமையானவர் யார் எனும் ஆராய்ச்சிக்கு வழியில்லை. கோசலத்தில் அனைவருமே உண்மைவிளம்பிகளாய், அரிச்சந்திரனின் வாரிசுகளாய் விளங்கியமையால் உண்மைக்கென்று தனித்த மதிப்பில்லை. அம்மட்டோ? அங்குள்ளோர் அனைவரும் கல்வி கேள்விகளில் மிக்கோராய்த் திகழ்ந்தமையால் அறியாமைக்கும் இடமில்லாமற் போய்விட்டது என்பது கம்பர் தீட்டும் கோசலத்தின் கவினார் சித்திரம்.

    வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
    திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
    உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
    வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.
    (கம்ப: நாட்டுப்படலம் – 84)

    ”எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ எனும் சமதர்மச் சமுதாயத்தை தம் பாடலில் படைத்துக் காட்டியிருக்கின்றார் கம்பர்.

    கிபி 15/16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த தத்துவவியல் அறிஞரும், மனிதநேயவாதியுமான தாமஸ் மூர் (Thomas More) தம்முடைய உட்டோப்பியா (Utopia) நூலில் கட்டமைத்த, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாட்டாளி மக்களின் பிதாமகரான கார்ல்மார்க்ஸ் கனவுகண்ட, ஏற்றத்தாழ்வற்ற ஓர் உயர்ந்த சமூகத்தை, 12ஆம் நூற்றாண்டிலேயே தம் காப்பியத்தில் காணச்செய்திருக்கும் கம்பநாடரைப் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் முன்னோடி என்று நாம் பெருமையோடு கருதலாம்.

    கோசல மக்களின் மேன்மைப் பண்புகளை மேலும் சில பாடல்களிலும்  விதந்தோதுகின்றார் கம்பர். அவற்றுள் ஒன்று!

    கூற்றம் இல்லை ஓர் குற்றம் இல்லாமையால்
    சீற்றம் இல்லை தம் சிந்தனையின் செம்மையால்
    ஆற்ற நல் அறம் அல்லது இல்லாமையால்
    ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே.
    (கம்ப: நாட்டுப்படலம் – 70)

    கோசல நாட்டில் குற்றங்களே நிகழாமையால் கூற்றுவனுக்கு அங்கே வேலையில்லை என்கிறார் கம்பர். அப்படியானால் கோசலத்தில் யாருமே இறக்கவில்லை என்று பொருளா?

    அப்படியில்லை! மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். எனவே கூற்றமில்லை என்பதைக் கோசலமக்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்தார்கள் என்று பொருள்கொள்ளாமல், மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமையால் சமூகக் குற்றங்களினால் நிகழும் கொடூரக் கொலைகள், அகால மரணங்கள் கோசலத்தில் இல்லை என்றே நாம் பொருள்கொள்ள வேண்டும். மக்களின் சிந்தனை செம்மையாக இருந்தமையால் யார்மீதும் யாருக்கும் சீற்றமோ சினமோ இல்லை. நல்லறங்களைத் தவிர பொல்லாச் செயல்களில் மக்கள் ஈடுபடாமையால் கோசலத்தில் ஏற்றமிருந்ததே தவிர இழிவில்லை என்பது கம்பரின் வாய்மொழி.

    இப்படியோர் பண்பட்ட மக்கட் சமுதாயம் எங்கிருந்தாலும் அந்த நாடு நலமும் வளமும் பெற்றுச் சிறப்பதில் வியப்பில்லைதானே?

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-29

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-29

    தி. இரா. மீனா

    மடிவாள மாச்சிதேவர சமயாச்சாரதா மல்லிகார்ச்சுனா

    இவர் மடிவாள மாச்சிதேவரைப் பின்பற்றியவர். ’பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்த மல்லிகார்ஜுனா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “கரலிங்கம் விட்டு
    மண்மீதுள்ள  சிலை வணங்கும்
    நரகின் நாய்களை என்னென்பேன் ஐயனே
    பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே“

    2. “இல்லாளைக் கண்டு மகிழ்ந்து
    மக்களைப் பார்த்து மகிழ்ந்து
    கூரறிவால் மெய்ம்மறந்து உறங்கி
    சதிசுதனெனும் சம்சாரத்தில் அறிவிழந்து
    மூடனானேன் என்னவென்பேன்
    பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே “

    மதுவய்யா

    ’அர்க்கேசுவரலிங்க’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “சோறு பசித்து மகிழ்வுடன் உண்டதை யாருமறியார்
    நீரன் தாகத்திற்கு பூமி பருகியதை யாருமறியார்
    இறைவன் மனித உடலடுத்து பிறர் போல
    துன்பப் படுவதை யாருமறியார்
    மனித உடலடுத்து இறைவன்
    எல்லோருக்குள்ளும் துன்பப்படுவதை யாருமறியார்
    அரகேஸ்வரலிங்கன் அடையாளத்தின் வடிவமடுத்தது
    இயற்கைக்கு அப்பாற்பட்டது“

    2. “மரவுச்சியின் காக்கை போல
    உயிர் எப்பக்கம் விரும்பினாலும்
    ஆசையெனும் வீடு வந்தவர்கள் அனைவரும் முடிவறிவார்களா?
    பிடிசோற்றின் துன்பத்திற்கு வேடம் போடும்
    மனமும் ஆத்மாவும் தூய்மையற்றவரை ஏற்பதில்லை
    அர்கேஸ்வரலிங்கன்“

    3. “உடல் நிர்வாணம் – மனம் சம்சாரம்
    பேச்சு பிரம்மம் – நீதி கீழ்மை
    கொலைஞன் கைகத்தி போல எத்தகைய அறிவு?
    அர்கேஸ்வரலிங்கமறிய பொருந்தாது இது.“

    4. “முளை தோன்ற விதையழிவது போல
    சுயம்பு தோன்ற கர்வமழிவது போல
    இலிங்கமறிந்து அங்கமழிய வேண்டும்
    அதுவே அர்கேஸ்வரலிங்கமறிந்த அன்பின் அடையாளம்“

    மனசந்த மாரிதந்தே

    ’மனசந்தித்து மாரிதந்தே ’இவரது முத்திரையாகும்.இலிங்க-அங்க சமன்பாட்டைப் பற்றிப் பேசவதாக வசனங்கள் அமைகின்றன.

    1. “இட்டலிங்கம் பிராணலங்கமென
    வெவ்வேறு  நியமங்கள் வேண்டுமா?
    விருட்சம் விதையிலடங்கி
    விதையும் விருட்சத்தை விழுங்கியது போல
    இட்டலிங்கம் பிராணலிங்கம் இரண்டறக் கலக்கவேண்டும்
    மழைத்துளி முத்தாவது போல ,இரண்டின் அடையாளம்
    மனசந்தித்து மாரேஸ்வரனே“

    2. “புகழுக்கும் ஆதாயத்திற்கும் செய்கின்ற பூசை
    செல்வமழியக் காரணமானது.
    பாசாங்கின் விரக்தி மூன்றிற்கு இடமளித்தது.
    பொறாமை,  இருநிலைவாதம்
    வெற்றி தோல்விக்கு இதயத்தைக் கல்லாக்கியது
    இதையறிந்து உண்டு இல்லை என்பதிலேயே
    மனசந்தித்து மாரேஸ்வரனே“

    3. “பசுவதை செய்தே பசுதானம் செய்தால்
    கொன்றதற்கும் ,கொடைக்கும் இணையாகுமோ?
    ஒழுக்கம் கேடு இரண்டிற்கும் பதிலுண்டோ?
    நியமத்திற்குக் கேடு ஏற்பட்டால்
    கேட்டிற்கு முன்பு மனசந்தித்து மாரேஸ்வரனே”

    4. “வேதம் கற்றால் படிப்பாளியே தவிர ஞானியல்ல
    சாத்திரம் புராணம் படித்தால் பண்டிதனன்றி ஞானியல்ல
    விரதம் ஒழுக்கம் சடங்குகளில் பூசாரியாகியென்ன?
    உயர் ஞானத்தின் தடமறிய வேண்டும்
    இப்பேதங்களின் அறிவைத் தெளிந்தால்
    மனசந்தித்து மாரேஸ்வரனே“

    மதுமுனி கும்மட்டதேவா

    இவர் முதலில் சமணராயிருந்து பின்பு சிவசரணரானவர். ’குடிய கும்மட்டனொடைய அகமேஸ்வரலிங்க’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “அமுதம் பருக மறந்து
    கூழ் விரும்புவது போல
    தன்னுள் சிவனிருக்க
    சாதி ஆதரவில் செல்பவனுக்கு
    குடிய கும்மட்ட நாத அகமீஸ்வர இலிங்கம்
    இல்லை அவருக்கு என்றேன்.“

    2. “வழிகாட்டிகள் அனைவரும்
    பயத்திற்குப் பயப்படாதவராவாரோ?
    வேதசாத்திரம் புராண ஆகமம் சொல்வோர் அனைவரும்
    உணர்வரோ உண்மைத் தத்துவம்?
    பேடியின் அழகு, வெய்யோனின் வெப்பம்
    மூடனின் நட்பென விடு,
    குடிய கும்மட்ட நாத அகமீஸ்வர இலிங்கத்துடன்
    இடைவிடாமல் கலந்துறவாடு.”

    மருளசங்கரதேவா

    ’சுத்த சித்த பிரசித்த பிரசாதி பிரசன்ன பிரபுவே சாந்த மல்லிகார்ச்சுனா ’என்பது இவரது முத்திரையாகும்.பக்தி தத்துவத்தற்கு அதிக முக்கியத்து வம்  கொடுத்துள்ளார்.சரணசதி இலிங்கபதி பாவனையாக்கி இலிங்கத்திற் கும் தனக்குமுள்ள தொடர்பை விளக்குகிறார்.

    “சாமான்யப் பெண்ணிற்கு அரம்பையின் நிலையுண்டோ?
    வறண்டுபோன மெருகிற்கு நவரச காந்தியுண்டோ?
    சேவகனுக்குச் சம்பிரதாய மோகமுண்டோ?
    பரிசமணியின் உறவால் கல்லின் குலமழிந்தது போல
    தாங்கள் வந்தீரல்லவா?
    சுத்தசித்த  பிரசித்த பிரசன்ன பிரபுவே
    சாந்த மல்லிகார்ஜுன தேவரீர்
    பிரபுதேவரின் கருணையால் வாழ்கிறேன்“

    [தொடரும்]   

    Share
  • IFSC குறியீட்டைக் கண்டறிவது எப்படி?

    IFSC குறியீட்டைக் கண்டறிவது எப்படி?

    உங்கள் வங்கிக் கணக்கின் IFSC குறியீட்டைக் கண்டறிய, இதோ சில எளிய வழிகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Image courtesy: https://www.maxpixels.net

    Share
  • அழகான ராட்சஸி (சூர்ப்பனகை)

    அழகான ராட்சஸி (சூர்ப்பனகை)

    ஆ. கிஷோர்குமார்

    தயரதன் மகனைத்
    தன்வயம் இழுக்க
    சூர்ப்பனகையவள்
    சூளுரை எடுத்தாள்
    பேய் போல் இருந்தவள்
    பேரெழில் கொண்டாள்

    திங்கள் முகம்
    செவ்வாய் இதழ்கள்
    ஏற்ற இறக்கங்களுடன்
    ஏற்புடை உடற்கட்டு.

    அவள் மென்னடை விரும்பி
    மெதுவாய்ச் செல்கையில்
    ஏழு கோள்களும்
    ங்கி நோக்கின

    மெல்லினமான வல்லினக்காரி
    இடையினம் கண்டு இமயம் சரிந்தது

    இமயத்தின் நிலையே
    இதுதான் என்றால்..
    தன் நிலை எண்ணிக்
    குமரியும்  குழைந்தது

    காமக் கண்ணுடன்
    ராமனைக் காணும் முன்
    இளைய பெருமாள்
    எதிர்ப்பட நின்றாள்

    இவனே ராமனோ
    என மனம் கருதி
    வார்த்தை வலையினை
    வாயால் விரித்தாள்

    இனம் கண்டு கொண்ட
    இலக்குவன் அவனும்
    சினம் கொண்டு வாளுக்குக்
    கட்டளை கொடுத்தான்

    வெகுண்டு எழுந்த
    வெங்கதிர் வாளோ
    பேசிய பெண்ணின் நாசி அறுத்து
    காதிரண்டயும் வீசி எறிந்தது…

    ஒப்பனை கலைந்து
    பேய் உரு நிலைத்து
    விகாரக்காரி
    விலகி ஓடினாள்
    விதி பின்னால் துரத்த
    தமையனை நாடினாள்…

    Share
  • விண்ணேறு!

    விண்ணேறு!

    ஏறன் சிவா

    எத்தடை வரினும் முன்னேறு — மன
    இடரினைக் கிழித்தே விண்ணேறு! — கடல்
    முத்தினைப் போலே ஒளிவீசு! — நீ
    மூடரைச் செதுக்கும் உளிவீசு!

    கத்தியின் மீதும் நடைபழகு — சில
    கயவரை ஒழிக்கும் படைபழகு! — உன்
    முத்திரை பதிப்பாய் காலடியில் — கொஞ்சம்
    முயன்றால் அடைவாய் நாலடியில்!

    புல்லையும் வில்லாய் நீமாற்று — வரும்
    புயலிலும் அணையாத் தீஏற்று! — பெருங்
    கல்லையும் நொறுக்கும் வலிமைபெறு — எவரின்
    கண்களின் முன்னும் எளிமைபெறு!

    முல்லையைப் போலே மணம்பரப்பு! — பொய்
    மூச்சினர்க் கெதிராய்ச் சினம்பெருக்கு!
    சொல்லிய சொல்லில் பொலிவுபெறு — நீ
    சொல்கிற சொல்லில் தெளிவுபெறு!

    தாள்களை வேல்போல் கூராக்கு! — இத்
    தரையினை முயன்றே நேராக்கு!
    தோள்கள் இரண்டை நீநிமிர்த்தி — இனித்
    தொடங்குக வாழ்க்கைப் பெரும்போரை!

    சேற்றினுள் உன்னைப் புதைத்தாலும் — நற்
    செந்தா மரைபோல் வெளியெழுவாய்!
    ஆற்றினில் தூக்கி எறிந்தாலும் — ஒரு
    அழகிய படகாய் நீமிதப்பாய்!

    பெருஞ்சுடர் நடுவே எரிந்தாலும் — உனைப்
    பெரும்புவி நினைவில் கொள்ளும்படி,
    அரும்பெருஞ் செயலே நீசெய்வாய் — அதில்
    அடையுமிவ் வுலகம் நற்பேறே!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 86 (ஏரின்)

    சேக்கிழார் பாடல் நயம் – 86 (ஏரின்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஏரின்   மல்கு  வளத்தி  னால்வரும்   எல்லை  யில்லதோர்   இன்பமும்
    நீரில்   மல்கிய   வேணி   யார்அடி  யார்தி   றத்துநி   றைந்ததோர்
    சீரின்   மல்கிய  அன்பின்  மேன்மை  திருந்த  மன்னிய  சிந்தையும்
    பாரின்  மல்க  விரும்பி  மற்றுஅவை  பெற்ற  நீடு  பயன் கொள்வார்.

    உரை :

    ஏர்த்தொழிலால் நிறைந்து பெருகும்உழவு வளங்களினாலே வரும் உணவும், அவை கொண்டு ஆக்கப் பெறும் அளவில்லாத பிற செல்வமும், கங்கை தங்கிய சடையார்  அடியவர்கள் திறத்திலே நிறைந்த மிக்க அன்பினது மேன்மை திருந்தும்படி நிலைத்த மனமும், உலகிலே வளர்ந்து நிலவுமாறு விரும்பி, அவைகளைத் தாம் பெற்றதனா லாகிய நீடிய பயனை அடைந்த வராய், மாறனார்  விளங்கினார்.

    விளக்கம் :

    இப்பாடலில்  ‘ஏரின் மல்கு  வளம் என்ற தொடர்’  ஏர்த்தொழிலாகிய வேளாண்மையால் மிகுதியாய்   விளைந்த விளைச்சலையும், அந்த விளைவினாலே பெருகிய பலவகை உணவுப்பொருள்களையும்,  அதனால் வந்து சேரும் எல்லாவகைச் செல்வங்களையும்  குறித்தது.

    ‘எல்லையில்லதோர்’  என்ற தொடர்,  (ஏரின்றெனில் விளைவு-உணவு இல்லை; அஃதின்றேல் உயிரில்லை என்பர்;  ஆதலின்) எல்லாவகை நலமும்   அடங்க மல்கு வளம் என்ற  பொருள் தந்தது.

    ‘’ஓர்’’ என்ற சொல் ஒப்பற்ற என்ற பொருள் பெற்றது. உழுதொழிலுக்கு இணை ஏதுமில்லை  என்பதை,

    “உழுவார்  உலகத்தார்க்கு  ஆணி   அஃதாற்றாது
    எழுவாரை  எல்லாம்  பொறுத்து“,

    “சுழன்றும்  ஏர்ப்பின்னது  உலகம்அதனால்
    உழந்தும்    உழவே  தலை“,

    “பலகுடை நீழலுநம்  தம்குடைக்கீழ்க்   காண்பார்,
    அலகுஉடை   நீழல்  அவர்“

    ஆகிய  திருக்குறட் பாக்கள்  விளக்குகின்றன. ஏரின் வளத்தாலே உலகம் இயல்கின்றது. பொன் முதலிய வேறு எவ்வகையிற் சிறக்கினும் உழவில்லையேல் உலகம் உணவின்றி இறக்கும். இவ்வுண்மையை இந்நாள் உலகம் மறந்து அலைந்து பேய் போல்  பிறவற்றின் பின்னே திரிகின்றது; ஏருக்குத் தீமையும் புரிகின்றது; இதனால் ஏர்வளம் சுருங்கவும், அது பிற வளங்களைத் தரமாட்டாது வாடவும் வைக்கும் இந்நாள் உலக நிலை பெரிதும் வருந்தத்தக்கது. உலகம் ஏர்க்கண்ணே திரும்பித் திருந்தி யுய்வதாக.

    இனி, இப்பாடலில்  ‘’நீரின்மல்கிய வேணியர்’’ என்ற தொடர், நீராகிய கங்கை, மல்கிய நீரின்  வேணி என மாற்றிக் கொள்க. நீரின்மல்கிய- உலகத்திற்கு ஆதரவாக முன்னே கூறிய ஏரின் வளத்திற்கு  ஆதரவாகிய நீரின் மல்கிய என்று குறிப்பார்,  இதனை அடுத்துவைத்த அழகு காண்க.உலகினர் பசி போக்கும் உழவுத்தொழிலுக்கே உரிய நீரைப் பெட்ரா கங்கையைத் தம் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்சிவபிரான் என்கிறார் கவிஞர்.அந்நீருக்கும் ஆதரவு இறைவன தருளே என்பது குறிப்பாம்.

    “ஏரின்  உழாஅர்   உழவர் புயலென்னும்,
    வாரி வளங்குன்றிக் கால்“

    எனத்திருவள்ளுவர்கூறுவதைக்  காண்க. இப்பொருத்தங்களை இம்முறையே,

    “பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
    பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியி னின்ற
    நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
    பேரவன்காண்….“

    என்று அப்பர் பெருமான் அருளியிருப்பதும் காண்க. (இங்குப் பரிசாக நிலவேந்தர் நினைவுறுதலாவது தமது நீதி முறைக்காக இறைவன் கருணை கூர்ந்து வானம் வழங்கச் செய்து தம் கீழ்உள்ள உயிர்களை வாழுமாறு செய்கிறானென்று  நிலவேந்தர்  எண்ணுகின்றனர் )

    அடுத்து, ‘வேணியர் அடியார் திறத்து’  என்ற தொடர், வேணி என்பது ஒன்றோடொன்று கூட்டிக்கொண்டிரும்  கூந்தல். வேணியாரது அடியார்களின் திறத்திலே  திருத்தமாக இருக்கும்படி, என்பது பொருள்.

    அடுத்து ‘பாரின் மல்க விரும்பி’  என்ற தொடர், “யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்“ என்றபடி உலகினரும் செல்வமும் சிவசிந்தையும் பெற்று என்றும் பெருகி நீடுக என்று விரும்பி. என்ற பொருள் தரும்.  செல்வம் பெற்றோர்க்கு  அதனை வழங்கும் சிந்தனை உண்டாக வேண்டும்.

    “பூதபரம்பரை பொலிய“,

    “மன்றுளா ரடியாரவர் வான்புகழ்,
    நின்ற தெங்கு நிலவி யுலககெலாம்“

    என்ற பெரிய புராணத் திருவாக்குகள் காண்க. இதனானே, இம்பர் ஞாலம் விளக்கினார் என மேற் பாட்டிற் கூறியதும் காண்க.

    அடுத்து, ‘மற்றவை பெற்ற நீடு பயன்’ என்ற தொடர், மற்று அந்தச் செல்வமும் சிந்தையும் தாம் பெற்றதனால் உளதாகிய நீடிய பயனைக் குறித்தது,“கற்றதனாலாய பயன்“ என்றாற்போல் பொருள்   கொள்வது சிறப்பு. நீடுபயன் – தம்மோடொழியாது பின்னரும் வழிவழி நீடி வருவதாகிய பயன். அவை பெற்ற பயன் தாம் அடியவர்களைப் பேணுவதனோ டொழியின், அது தம்மோடு நின்றுவிடும். தாம் பேணுவது போலப் பாரில்  வாழும்  பிறரும் பேணுவாராயின் அப் பயன் நீடி வரும் – என எண்ணி, உலகில் யாவரும் செல்வமும்,  சிவசிந்தையும் பெற்று அடியாரைப் பேணி ஒழுகி உய்ய  வேண்டும்   என்றதனையே  நாயனார் விரும்பினார் .

    இவ்வாறு பாரின் மல்க விரும்பி வந்தமை காரணமாகவே, பின்னர், இவர் சிவப்பேறு எய்திய காலத்து

    “இருநிதிக் கிழவன்தானே,
    முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி யேவல்கேட்ப
    இன்பமார்ந் திருக்க“

    என்று இறைவன் அருளினன் என்று சேக்கிழார் கூறினார். செல்வமும் சிவசிந்தையும் தாம் பெற்றதன் நீடுபயன் கொண்டவர் அப்பயனை  உலகமும் பெற்று மல்க விரும்பிய நாயனாரது மனத்தின் சிறப்பை  இப்பாட்டாற் கூறினார். (அவ்வாறு எண்ணிய மனத்தோடு உபசரித்த வாக்கின் தொழில், அடுத்து வரும் பாட்டாலும், பாதம் விளக்கி அருச்சித்து அமுதூட்டுவதாகிய காயத்தின் தொழில் அதன்மேல் வரும் பாட்டானும் கூறுகின்றார்.)

    சிவபூசை அடியார் பூசைகளில் மன முதலாயின முக்கரணங்களும் ஒன்ற வழிபடும் முறையும், மகேசுவர பூசை முறையும் வகுத்துக் காட்டியவாறுமாம். மகேசுவர பூசையிலே மகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதத்தின் பலனாலே உலகிலே செல்வமும்,  சிவசிந்தனையும் பெருகி நிலவும். நீடுபயன் – காலத்தால் நீடுவதன்றி அளவினாலும் நீடுவதாம் – பெரியதாம். அரன் பூசையினும் அடியார் பூசை இரட்டைப் பயனுடைய தென்பது ஆகமங்கள் மொழிந்த உண்மை,

    “படமாடக்கோயிற் பகவற் கொன்றீயின்,
    நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு   ஆகா;
    நடமாடக் கோயில்  நம்பர்க்கொன்று  ஈயின்,
    படமாடக் கோயில்  பகவற்கு  அதாமே“

    என்பது திருமூலர் திருமந்திரம்.

    “கபாலீச்சரம்  அமர்ந்தான்,
    ஒட்டிட்ட பண்பின்  உருத்திர பல்கணத்தார்க்கு,
    அட்டிட்டல் காணாதே போகியோ பூம்பாவாய்“

    என்ற ஆளுடைய பிள்ளையார் திருமயிலைத் தேவாரத்தையும், அதனை வடித்தெடுத்துக் காட்டிய

    “மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்,
    அண்ணலார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்,
    கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்,
    உண்மையாம்  எனில் உலகர்முன் வருக“

    என்ற புராணத் திருவாக்கும்,

    “வேத உள்ளுறை யாவன விரிபுனல் வேணி,
    நாதர் தம்மையும்  அவரடி யாரையும்  நயந்து,
    பாத அர்ச்சனை புரிவதும் பணிவதும்  என்றே,
    காத லால் அவை இரண்டுமே செய்கருத்து உடையார்“

    என்ற (திருநீலநக்கர்) புராணமும் இங்கு நினைவுகூரத் தக்கன. ஆகவே நாயனார் பெற்ற செல்வத்தையும்   அதனைப் பிறர்க்குப் பகிர்ந்தளிக்கும்   சிவசிந்தையையும், அவரைப் போலவே உலகமும்  பெற்று ஒங்க வேண்டும் என்பது சேக்கிழாரின் உள்ளக்  கிடக்கை. செல்வம் பெற்றார் அதனை வழங்கும் சிந்தையும் பெறுதல் வேண்டு மல்லவா?

    Share