குறளின் கதிர்களாய்…(307)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(307)
உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
– திருக்குறள் -933 (சூது)
புதுக் கவிதையில்...
உருளும் சூதாடு கருவியால்
வருகின்ற வெற்றிப் பொருளை
இடைவிடாது கூறி
எப்போதும் சூதாடுவானாயின்,
அரசனுக்கு
முன்னுள்ள பொருளும்
பின்னால் அது வரும்வழியும்
அவனை விட்டு நீங்கிப்
பகைவரையே சேரும்…!
குறும்பாவில்...
சூதாடுகருவியின் சுழற்சியில்வரும் பொருளைச்
சொல்லியே சூதாடுபவன் சேர்த்த செல்வமும்
வழியும் நீங்கிப் பகைவரைச்சேரும்…!
மரபுக் கவிதையில்...
உருளு கின்ற சூதாட
உதவும் கருவி யதன்மூலம்
வரும்பொருள் தன்னைச் சொல்லியேதான்
வழக்கமாய்ச் சூதினை யாடுமரசன்
திருவது தேடி வைத்ததுவும்
திரும்பத் தேடிடும் வழியதுவும்,
இருக்கா தவனை நீங்கிவிடும்
எதிரி யிடமது சேர்ந்திடுமே…!
லிமரைக்கூ…
உருளும் கருவியால் சூது
வருபொருள் சொல்லி யாடுவோன்பொருள் பகைவர்க்கே,
அவனிடம் செல்வமினி யேது…!
கிராமிய பாணியில்...
ஆடாத ஆடாத
சூதாட்டம் ஆடாத,
அதிகமாக் கெடச்சாலும்
அதுவேணாம் போகாத..
சுத்தி வருகிற
சூதாடுற கருவியால
சேரும் செல்வமுண்ணு
சொல்லிச் சொல்லியே
சூதாடுறவன் ராசாண்ணாலும்,
அவன்
சேத்துவச்ச செல்வத்தோடே
சேக்கிற வழியெல்லாமே
அவன உட்டுட்டு
எதிராளிகிட்ட போயிடுமே..
அதால
ஆடாத ஆடாத
சூதாட்டம் ஆடாத,
அதிகமாக் கெடச்சாலும்
அதுவேணாம் போகாத…!