Blog

  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)

    ச. கண்மணி கணேசன் (ஓய்வு)
    முதல்வர் & தமிழ்த்துறைத்  தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. 

    முன்னுரை

    அக இலக்கியச் சிறுபாத்திரங்களுள் தலைவியுடன் பெரிதும் தொடர்புறும் நெருக்கமான குழுப்பாத்திரம் ‘ஆயம்’ ஆகும். ஆயம் பற்றிய குறிப்புகள் புறப்பாடல்களிலும் காணப்படுகின்றன.

    ஆயம் என்னும் சொல்லின் பொருட்பரிமாணம்

    ஆயம் எனும் சொல் ‘நெருங்கிய சுற்றம்’ எனப் பொருள்படும். இது  உயர்திணை, அஃறிணை; ஆண்பால், பெண்பால், பலர்பால் அனைத்திற்கும் பொதுவானது.       .

    தொகை நூல்கள் ஆநிரையை ஆயம் என்கின்றன (புறம்.- பா- 224, 230, 258, 386; அகம்.- 54, 79, 291; நற்.- 37; மதுரைக்.- அடி- 692). ஆட்டுக் கூட்டம்  ‘சிறுதலை ஆயம்’ எனப்படுவது உண்டு (புறம்.- 54). பிடியும், கன்றும் கூடிய களிற்றுக் கூட்டமும் ‘ஆயம்’ ஆகும் (மதுரைக்.- அடி- 101).

    மகளிர் கூட்டத்தை ‘ஆயம்’ என்பர் (மதுரைக்.- அடி- 264). கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இறந்த போது அவனது மகளிரை ‘ஆயம்’ என்றழைக்கிறார் (புறம்.- 229). பாணர் குழுவின் விறலியர் ஆயம் எனப்படுவர் (சிறு.- அடி- 176). வண்டல் ஆடும் மகளிர் ஆயம் என்றழைக்கப்  படுகின்றனர் (பெரும்.- அடி- 311). பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கட்  கூட்டமும் ‘பல்லாயம்’ என்றழைக்கப்படும் (பட்டினப்.- அடி- 213). கரிகாற் பெருவளத்தானுக்குத் துணையாக இருந்த வீரர் ‘ஆயம்’ என்றே சுட்டப் படுகின்றனர் (புறம்.- 224). அவனது அவையத்து ஆயம் பற்றி ஆற்றுப்படை குறிப்பிடுகிறது (பொருநர்.- அடி- 123). நல்லியக்கோடனின் அவையில் ஆயம் சூழ்ந்திருந்தது (சிறு.- அடி- 220). வெளிமான் இறந்த பின்னர் அவனது பெண்டிர் ‘பேஎ யாயம்’ ஆகின்றனர் (புறம்.- 238). தொடித்தலை விழுத்தண்டினார் இளமையில் தன்னோடு சேர்ந்து ஆடிய நண்பர் கூட்டத்தை ‘ஆயம்’ எனச் சுட்டுகிறார் (புறம்.- 243).

    ஆயத்தார் எனப் பன்மை விகுதியுடனும் குறிப்பிடக்  காண்கிறோம் (பரி.- 16; கலித்.- 76, 114, 142).

    தலைவியின் ஆயம் = விளையாட்டுச் சுற்றம்

    தலைவியுடன் விளையாடும்; அவளை ஒத்த நெருங்கிய சுற்றம் ஆயம் ஆதலால்; ‘கலிகொள் ஆயம் (அகம்.- 11), ‘அலமரல் ஆயம்’ (அகம்.- 7) ‘கணங்கொள் ஆயம்’ (அகம்.- 250), ‘தன்னோரன்ன ஆயம்’ (அகம்.- 385), ‘விளையாட்டு ஆயம்’ (அகம்.- 254, 230; நற்.- 68, 172) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

    நெய்தல் நிலத்தலைவி ‘கானல் ஆய’த்துடன் சேர்ந்து (அகம்.- 220; நற்.- 72, 123) கழங்கு ஆடுவாள் (அகம்.- 17, 66); நண்டுக்குழிகளைக் கிண்டி; ஊஞ்சல்  ஆடிக்; குரவை அயர்ந்து; கடல்நீரில் ஆடுவாள் (அகம்.- 20, 110; நற்.- 90). மண்ணில் ஆடுவதால் ‘வண்டல் ஆயம்’ என்றழைக்கப்பட்ட அவர் (அகம்.- 60; நற்.- 127); பந்தும் ஆடுவர் (அகம்.- 153, 180& 219; நற்.- 140). உணங்க வைத்த மீன் குவியலுக்குக் காவலாக இருந்துகொண்டு உப்பு வண்டிகளை எண்ணுவர் (நற்.- 331). காலையில் உப்புக் குவியலில் ஏறி; மீன்பிடித்து மீண்டு வரும் திமில்களுள் ‘இது என் தந்தை திமில்; அது உன் தந்தை திமில்’ என்று அடையாளம் கண்டு எண்ணுவர் (அகம்.- 190). பன்றி கிண்டிய இருஞ்சேற்றைக் கிளறி; ஆமை முட்டையையும், இனிய ஆம்பல் கிழங்கையும் பெறுவர் (புறம்.- 176).

    குறிஞ்சி நிலத் தலைவி ஆயத்தோடு சேர்ந்து தழல் ஒலித்து; தட்டை முழக்கி; அசோகந் தளிரால் தழையாடை தைத்து உடுத்து; தினைப்புனம் காப்பாள் (அகம்.- 188); சுனை நீராடிக் (அகம்.- 358); குவளைப் பூக்களைப் பறிப்பாள் (நற்.- 317). அருவி ஆடுவதும் உண்டு (நற்.- 44).

    மருதத் திணைத் தலைவி ஆயத்தோடு சேர்ந்து பொய்கையில் பூப் பறித்து விளையாடுவாள் (நற்.- 115). மன்னன் மகளாகிய தலைவிக்கு விளையாட்டின் இடையில் சினம் வந்தால் ஆயம் அவளைக் கைதொழுது இரந்து நிற்பதுண்டு (நற்.- 300).

    தாய் தனது பெதும்பைப் பருவத்து மகள் ஆயத்தோடு விளையாடும்  பொழுதெல்லாம் அவளைத் தொடர்ந்து கண்காணிக்கிறாள் என்பது அவளது வாய்மொழியாகவே இடம் பெறுகிறது (அகம்.- 49; நற்.- 68, 143).

    தலைவி ஆயத்தின் தோற்றம்:

    தலைவியோடு ஒத்த வயதினர் ஆகையால்; அவரது தோற்றமும் ஒத்த தன்மை உடையதாக வருணிக்கப்பட்டுள்ளது. “வடிக்கொள் கூழை ஆயம்” (நற்.- 23) என வாரிக் கட்டிய அவரது தலைமுடி புனைவு பெற்று உள்ளது. ஐந்துவகையாக ஒப்பனை செய்யக்கூடிய ஐம்பாலெனும்  தலைமுடியை மயிர்ச்சாந்தம் பூசி அழகுறுத்த; அச்சாந்தம் புலர்ந்து  உதிர்ந்தது;

    “சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம்
    வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
    புலர்விடத்து உதிர்ந்த துகள்படு கூழைப்
    பெருங்கண் ஆயம்” (நற்.- 140)

    என விரிவாகவே ஆயத்தின் தோற்றம் இடம்பெற்று உள்ளது. “இழையணி ஆயம்” (நற்.- 80) என்றும் “ஆயத்து ஒண்டொடி மகளிர்” (புறம்.- 176) என்றும் அவர்கள் அணிந்த கலன்களும் அவருடன் சேர்த்துப் பேசப்பட்டுள்ளன.

    ஆயத்தின் உணர்வுச் சித்தரிப்பு 

    ஆயத்திற்கு கூற்று நிகழ்த்தும் உரிமையில்லை. இரவுக்குறிக்குத் துணைசெய்யும் தோழி ஆயம் அறியாவாறு இருவரையும்  சந்திக்க வைக்கிறாள் (நற்.- 323).

    தலைவி உடன்போகிய பின்னர் ஆயத்தார்  எவ்வாறு துன்புற்றனர் என்று மகட்போக்கிய தாய் கூறுகிறாள்.

    “ஆயமும் அணியிழந்து அழுங்கின்று” (அகம்.- 165; நற்.- 295).

    அவர் வாடி அழுததோடு விளையாட்டையும் மறந்தனர் (அகம்.- 369).

    உடன்போக்கில் தலைவனோடு செல்லத் தயங்கும் தலைவி பற்றித் தோழி அவனிடம் பேசுங்கால் ஆயத்தையே காரணம் காட்டுகிறாள்.

    “வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
    அரியமை சிலம்பு கழீஇ பல்மாண்
    வரிபுனை பந்தொடு வைகிய செல்வோள்
    இவை காண்தொறும் நோவர் மாதோ
    அளியரோ அளியர் என் ஆயத்தோர் என”ப் (நற்.- 12);

    பொழுது புலருமுன் தன்னை மறைத்துக்கொண்டு; ஒலி எழாதவாறு செல்ல ஏதுவாகக் கால்களில் அணிந்திருந்த சிலம்பினை நீக்கியவள் அழகாகப் புனைந்த பந்தினைக் கண்டவுடன்; ‘என் விளையாட்டுத் தோழியர் இதைக் கண்டு மனம் வருந்துவர் அன்றோ’; எனப் பின்வாங்கியதாக   விவரிக்கும் சூழலில் ஆயத்தோடு தலைவிக்கிருந்த உணர்வு பூர்வமான நெருக்கம் புலப்படுகிறது. அடக்க மாட்டாமல் அழுத தலைவி என்பதால் ஆயத்திற்கும் தலைவிக்கும் இடையிலான அன்பின் பிணைப்பு தெரிகிறது. நிலைமை தலைவனுக்குச் சொல்லப்படுவதால்; அவன் நேரில் வந்து அவளைப்  பெண்கேட்டு மணக்க வேண்டும் என்று குறிப்பாகக் கூறுகிறாள் தோழி. குறிஞ்சியின் கூடல் நிமித்தமாகிய வரைவு கடாஅதலைச் செயல்படுத்த ஆயம் பயன்பட்டுள்ளது.

    மகட்போக்கிய தாய் ‘ஆயமும் உள்ளாள்’ எனத்; தன்மகள் நெருங்கிய விளையாட்டுச் சுற்றத்தைக் கூட நினைத்துப் பார்க்காமல் போய்விட்டாள்  என அழுது புலம்புவதற்கு (அகம்.- 117) அவர்க்கு இடையில் இருந்த அன்புப் பிணைப்பே காரணமாகும்.

    ஆயத்தைக் காணும் தாயின் உணர்வு 

    மகள் பிரிந்து சென்ற பின்னர் பூங்கண் ஆயத்தைக் கண்ட பொழுதெல்லாம் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறாள் தாய் (நற்.- 143, 293).

    கற்புக்காலத்தில் ஆயம் கொண்ட அக்கறை

    புறத்தொழுக்கத்தால் ஊடல் கொண்ட தலைவி தன் கணவனை;

    “ஆயமும் அயலும் மருள” (அகம்.- 116)

    வாயில் மறுத்தாள் என்னுமிடத்து; மருட்சியின் காரணம் தலைவியது நலவாழ்வின் மேல் ஆயம் கொண்டிருந்த அக்கறை என்பது புலனாகிறது.

    தலைவன் இன்னொரு பெண்ணின் மேல் விருப்பு மீதுற்று ஒழுகினான் என்பதை ஆயத்துள் பேசத் தலைவியும் தோழியும் அறிந்து கொள்கின்றனர். ஆயம் பேசியதாகத் தோழி கூறுகிறாள்.

    “ஒண்டொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
    கொண்டனை என்ப ஓர் குறுமகள்” (அகம்.- 96)

    இவ்விடத்து ஆயம் நடப்பு உண்மையைத் தெரிவிக்கும் கருவி ஆகப் பயன்கொள்ளப் பட்டுள்ளது. மருதத்திணை உரிப்பொருளாகிய  ஊடல் நிமித்தத்திற்கும் ஆயம் காரியப்பொருள் ஆகிறது.

    ஆயத்தால் தலைவனின் அச்சமும் தலைவியின் ஐயமும்

    தலைவியோடு கூடியிருக்கும் வேளையில் தலைவன் ஆயத்தைக் காரணம் காட்டி; ‘அவர்க்குத் தெரிந்தால் கூட அலர் ஆகிவிடுமன்றோ’ எனத் தயங்கி விலகினான். தலைவிக்கு அவனது இச்செய்கை ஐயத்தை ஊட்டியது. தலைவியே அவன் பேசியதாகத் தோழியிடம் கூறுகிறாள்.

    “கானல் ஆயம் அறியினும் ஆனாது
    அலர் வந்தன்றுகொல் என்னும் அதனால்
    புலர்வது கொல் அவன் நட்பு எனா
    அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே” (நற்.- 72)

    சிறைப்புறமாக நின்ற தலைவன் காதில் விழும் வண்ணம் நிகழும் கூற்று இது. தலைவனின் அன்பு சுருங்கியதோ என்று ஐயுற்ற தலைவிக்கு அந்த அன்பை அளந்து காட்டும் கருவி என்ற நிலையில் ஆயம் என்னும் சிறு  பாத்திரம் பயன்பட்டுள்ளது.

    தாயின் ஆயம்

    குடும்பத்தின் சொந்தபந்தம் தாயின் ஆயமாகும். உடன்போக்கின் பின்னர் தலைவியைத் தேடிச் செல்லும் ஆயம் பற்றி;

    “செய்போழ் வெட்டிப் பெய்தல் ஆயம்
    மாலைவிரி நிலவில் பெயர்பு புறம் காண்டற்கு” (நர்.- 271)

    என அவரது தொழிலும் செய்கையும் தோன்றத் தாய் விவரிக்கிறாள்.

    பனங்குருத்தைக் கீண்டு பதனிடப் போடும் மாலைப் பொழுதில் நிலவின்  ஒளியில் தாயின் ஆயம் தலைவியை மீட்கச் சென்றதென்கிறாள்.

    பரத்தையின் ஆயம்

    தலைவி மட்டுமின்றிப் பரத்தையின் சுற்றமும் ஆயம் என்றே அழைக்கப்படுகிறது. தலைவனோடு பரத்தை புனலாடியதை அவளது ஆயம் மறைக்க முற்பட்டது (அகம்.- 256)

    முடிவுரை

    நெருங்கிய சுற்றமாகிய ஆயம் தொல்காப்பிய அகப் பாத்திரங்களான  தலைவி; தாய், பரத்தை ஆகியோர்க்கு உண்டு. தலைவியின் ஆயம் ஒத்த வயதுடைய விளையாட்டுச் சுற்றம் ஆகும். தாயின் ஆயம் குடும்பத்தின் சொந்தபந்தம் ஆகும். பரத்தையின் ஆயம் அவளது செயல் தலைவிக்குத்  தெரியாதவாறு மறைத்துக் காப்பாற்ற முனையும். தலைவியும் ஆயமும் ஒத்த தோற்றத்தினாராக வருணிக்கப்பட்டு உள்ளனர். குழுப் பாத்திரமாகிய ஆயத்திற்கு பாடலில் நேரடியாகக் கூற்று நிகழ்த்தும் உரிமை இல்லை; கூறியதாகத் தோழி கூறுகிறாள். இரவுக்குறியில் தோழி ஆயம் அறியாவாறு இருவரையும்  சந்திக்க வைக்கிறாள். தலைவி உடன்போகிய பின்னர் ஆயம் மிகவும் துன்புறும். அவர்கட்கு இடையே அன்புப்பிணைப்பு இருந்தது. குறிஞ்சியின் கூடல் நிமித்தமாகிய வரைவு கடாஅதலைச் செயல்படுத்த ஆயம் பயன்பட்டது. மகள் பிரிந்து சென்ற பின்னர் தாய்  ஆயத்தைக் கண்ட பொழுதெல்லாம் துன்பத்திற்கு ஆளாகிறாள். தலைவியது நலவாழ்வின் மேல் ஆயத்திற்கு அக்கறை இருந்தது. ஊடலுக்கு ஆயம் காரியப்பொருள் ஆகிறது. ஆயம் தலைவனின் அன்பை அளக்கும் கருவியாகப் பயன்பட்டுள்ளது.

    Share
  • அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி?

    அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2500 ஓய்வூதியமும் ரூ.500 மருத்துவப் படியும் வழங்குகிறது. மேலும் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பதற்கான சலுகையையும் வழங்குகிறது. இவை அவரது ஆயுள் நிறையும் வரை வழங்கப்பெறும். அவருக்குப் பிறகு அவரது மரபுரிமையருக்கும் இதே உதவிகள் தொடரும். இந்த நிதியுதவியைப் பெறுவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.

     

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காம யோகா – 3

    காம யோகா – 3

    சி. ஜெயபாரதன், கனடா

    (பச்சை விளக்கு)

    பச்சை விளக்கு காட்டாமல்
    இரயில் எஞ்சின்
    நிலையத்தில்  நுழைந்தால்
    நேரும் விபத்து!
    இச்சைக் கொடி காட்டும்
    மாதின்மேல்
    இசை வீணை மீட்டு!
    கனிந்துருகும்
    கண்களை  உற்றுப் பார் .
    பெண்ணின்
    காந்த உடலைப் பார்,
    தளரும்
    அன்ன நடையைப் பார்!
    வண்ண
    உடையைப் பார்!
    பொங்கி எழும்  மார்பைப் பார்.
    சமிக்கை பளிச்செனத்
    தெரிகிறதா?

    காம சுரப்பிகள்  ஊற்றில்
    சேமிப்பாகித்
    தாமாய்ப் பொங்காமல்
    காம முறுதல் தீது
    காரிகை மீது !
    பெண் மனதைத்
    தேனாய் ஆக்குவதும்,
    வீணையாய் இசைக் கானம்
    மீட்டுவதும்
    ஆடவன் வாயும் விரல்களே!
    தேளாய்,
    தேனீயாய்க் கொட்டச்
    செய்வதும்
    ஆடவன் மூடச் செயல்களே!

    தனக்கெனத் தேடி வரும்
    தேனிலவை,
    உனக்கென நாடிவரும்
    இணக்க மாதை
    இரு கைகளில் அள்ளிக்
    காற்று
    இடைவெளி யின்றி
    கட்டி அணைத்துக் கொண்டு
    பிறவிப் பயன்
    பெறுவது, இன்பம் அளிப்பது
    காமயோகா!

    ஆண் பெண்  ஆத்ம
    நேச நெறிப்  பாலுறவு
    நீடித்து இருவரை இணைக்கும்
    ஆன்மீகப் பாலம்.
    ஈருடல் தழுவிக் கொண்டு
    தேனூறும்
    பலாச்சுளையின்
    காமதேனு ஆலயத்தில்
    புல்லாங்குழல் இசை பாடல்,
    தாய் உயிர் ஈன்று
    பிறவி பெருக்கும் இன்பம்
    காமயோகா.

    Share
  • நாலடியார் நயம் – 38

    நாலடியார் நயம் – 38

    நாங்குநேரி வாசஸ்ரீ

    38. பொது மகளிர்

    பாடல் 371

    விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
    துளக்கற நாடின்வே றல்ல; – விளக்கொளியும்
    நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
    கையற்ற கண்ணே அறும்.

    விளக்கின் ஒளியும் பொதுமகளிரின் அன்பும்
    வகையாய் ஆராய்ந்தால் வெவ்வேறல்ல
    விளக்கின் ஒளி எண்ணெய் வற்றுங்கால் நீங்கும்
    வைத்திருக்கும் கைப்பொருள் நீங்கும் நேரம்
    விலகும் பொதுமகளிரின் அன்பு.

    பாடல் 372

    அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
    செங்கோடு பாய்துமே என்றாள்மன்; – செங்கோட்டின்
    மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
    காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.

    அழகிய பக்கங்களுள்ள அகன்ற அல்குலையுடைய
    ஆய்ந்தெடுத்த அணிகளையணிந்த பொதுமகள் எம்மோடு
    உயர்ந்த செம்மலையுச்சியினின்று சேர்ந்து வீழ்வோமென
    உறுதியாய்ச் சொல்லி பணமில்லையென்றதும் சேராது
    உடன் ஒழிந்தாள் காலிலுள்ள நோயைக் காட்டி அழுது.

    பாடல் 373

    அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
    செங்கண்மா லாயினும் ஆகமன்; – தம்கைக்
    கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
    விடுப்பர்தம் கையால் தொழுது.

    அழகிய இடமகன்ற  தேவருலகில்
    அவர்களால் தொழப்படும் சிவந்த
    அழகிய கண்களுடைய திருமாலேயாயினும்
    அவர்தம் கையில் கொடுக்கப் பொருளில்லையெனில்
    ஆய்ந்து எடுக்கத்தக்க இளந்தளிரையொத்த மேனியுடை
    அப்பொதுமகளிர் தம்கையால் கும்பிட்டுத் திருப்பியனுப்புவர்.

    பாடல் 374

    ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
    காணமி லாதார் கடுவனையர்; – காணவே
    செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
    அக்காரம் அன்னர் அவர்க்கு.

    அன்பில்லாத  நெஞ்சத்தையும் நீலநிற
    அழகிய குவளையொத்த கண்ணையுமுடைப்
    பொதுமகளிர்க்குச் செல்வமில்லாதார் விடம்போன்றோர்
    பலரும் காணச் செக்காட்டுவோர் அதிகப்பொருள்
    பெற்றிருப்பின் சர்க்கரைபோலும் இனியவராய்க் கருதுவர்.

    பாடல் 375

    பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
    தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
    மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
    விலங்கன்ன வெள்ளறிவி னார்.

    தேன்போலும் இனிமைமிகு
    தெளிந்த நீருள்ள பொய்கையில்
    தன் தலையை ஒருமுறை பாம்புக்குக்காட்டி
    திரும்பி மீனுக்குக் காட்டும் விலாங்குமீன்
    தம்மையொத்து ஆசைகாட்டி மோசம் செய்யும்
    தீய செய்கையுடைப் பொதுமகளிரின்
    தோள்களை மிருகம் போலும் அறிவற்றவர்
    தழுவுவர் எப்போதும் விரும்பி.

    பாடல் 376

    பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
    நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
    பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
    நிற்றியோ போதியோ நீ.

    நூலும் அதில் கோத்த மணியும் போல்
    நாளும் இணைபிரியா அன்றிற் பறவைகளையொத்து
    நாளும் நம்மைப் பிரியோம் எனச் சொன்ன
    நற்பொன் வளையை உடையாளும் போர்
    நாடும் ஆட்டுக்கடாவின் முறுக்கேறிய கொம்புபோல்
    நற்குணம் மாறினாளாதலில் நல்ல மனமே!
    நீ ஆசைகொண்டு அவளுடன் நிற்கின்றாயா? வருகின்றாயா?

    பாடல் 377

    ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
    சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
    ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
    தாமாம் பலரால் நகை.

    காட்டுப் பசுவினைப்போல் இன்பம் உண்டாகத் தழுவி
    கைப்பொருளெயெல்லாம் கவர்ந்து பின் எருதுபோல்
    குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைக்
    கண்டு தமதென ஏமாந்து மயங்கி எமதேயென்றிருப்பவர்
    கட்டாயமாய்ப் பலரால் எள்ளிநகையாடப்படுவார்.

    பாடல் 378

    ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
    தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் – மானோக்கின்
    தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
    செந்நெறிச் சேர்தும்என் பார்.

    நாடி வந்தவர் தம்மழகில் மயங்கியபோது
    நன்கு பொருளைப் பறித்து பின் அவர்
    நிலை தாழ்ந்ததும் ஆட்டுக்கிடாவின் கொம்புபோல்
    நிலைமாறும் குணத்துடன் கூடிய மான்போலும்
    பார்வையுடைப் பொதுமகளிரின் கொங்கைகளைப்
    பண்பட்ட அறநெறி வழிசெல்லும் சான்றோர் விரும்பார்.

    பாடல் 379

    ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
    தேற மொழிந்த மொழிகேட்டுத் – தேறி
    எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
    தமரல்லர் தம்உடம்பி னார்.

    ஒளிவீசும் நெற்றியுடைப் பொதுமகளிர் தம்மெண்ணங்களை
    ஒளித்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி ஏமாந்து
    இவள் எமக்குரியள் என நினைக்கும் எவ்வகைப்பட்ட
    இனத்தாருக்கும் உரியரல்லரவர் தமக்கே உரிய உடம்பினரவர்.

    பாடல் 380

    உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
    கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் – தெள்ளி
    அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
    செறிந்த உடம்பி னவர்.

    ஒளி பொருந்திய நெற்றியுடைப் பொதுமகளிரின் மனம்
    ஒருவரிடத்தேயிருக்க  மற்றொருவரிடம் காமுற்றது போல்
    கள்ளத்தினால் செய்யும் செய்கைகளெல்லாம் தெளிவாகக்
    கண்டுணர்ந்த பின்னும் பாவம் நிறைந்த உடம்புடையோர்
    கைவிட்டு ஒழிதலை அறிய மாட்டார்.

    Share
  • நண்பர் திலகம் பக்தவச்சலம்!

    நண்பர் திலகம் பக்தவச்சலம்!

    முனைவர் ஔவை நடராசன்

    பதறிப் பதறிப் கதறிப் புலம்பினாலும் பக்தவச்சலம் இனி மீளப் போவதில்லை. அறுபதாண்டுகளுக்கு மேலாக என் உயிரில் கலந்த நண்பராகத் திகழ்ந்த திலகம் பக்தவச்சலம்.

    என் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் அவர் பங்கு பெற்றவர். ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிதும் மனம் குலையாமல் எனக்கு ஆறுதல் சொல்லிப் பேசினார்.

    தாமரையால் இத்துயரத்தைத் தாங்கவே முடியாது. இலைகள் உதிர்வது இயல்பு. மலையா இப்படிச் சாய்வது? என் மனக் கலக்கத்தை எழுத முடியவில்லை.

    எண்ணினால், எண்பது பேருக்கு மேல் “எங்கே உங்கள் பக்தவச்சலம் எப்படி நீங்கள் இனி அவர் துணையில்லாமல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள்?“ என்று கேட்டு என் மனத்தை வாட்டியபடி இருக்கிறார்கள்.

    அவர் மறைந்தார் அல்லர். கவிப்பேரரசு ஆறுதல் கூறியது போல, அவர் வாழ்வில் நிறைந்தார். நினைவில் நினைத்தபடி இருப்பார். கண்ணை மூடினால் அவர் தோற்றம்தான் தெரிகிறது.

    தொட்டுத் தொட்டு அன்பைக் கொட்டிக் கொட்டிப் பழகியவர். தன் மனத்துயரை மற்றவரிடம் அவர் பகிர்ந்ததேயில்லை. அவர் எது சொன்னாலும் நான் முரண்பட்டதில்லை.

    ஒய்.எம்.சி.ஏ. அரங்கம் ஓவென்று கதறுகிறது. எண்பதாம் ஆண்டு விழா இப்படிதானா நடப்பது? ஊரடங்கு உலகத்தையே கலக்கும்போது, பக்தவச்சலம் அடங்கியிருப்பது விழிமேல் இடிவிழுந்ததாக இருக்கிறது.

    தாமரையின் தடந்தோள்களை இங்கிருந்தபடியே தழுவிக்கொள்கிறேன். பட்டிமன்றத்தைச் சொற்கட்டி மன்றமாக நடத்திய வரலாற்றினைத் தாமரைதான் தொடர்ந்து எழுத வேண்டும்.

    என் ஏக்கத்துக்கு எல்லையில்லை.
    அழுவதற்குக் கண்ணீரில்லை.
    தேம்புகிற நெஞ்சத்துக்குப் போதிய உரமில்லை.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 265

    படக்கவிதைப் போட்டி – 265

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (05.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 264இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இராமலக்ஷ்மியின் ஒளி ஓவியத்தில் நாம் காணும் வண்ணத்துப்பூச்சியும் அது ஒயிலாக அமர்ந்திருக்கும் செடியும் நம் எண்ணத்தைக் கவர்கின்றன. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டிருக்கின்றது இந்தப் படம். ஒளி ஓவியருக்கு என் உளமார்ந்த நன்றி!

    வண்ணத்துப்பூச்சியை அஞ்சிறைத் தும்பி என்று ஆசையாய் விளித்து, ”எம் அரிவை கூந்தலினும் நறிய மலரை நீ அறிவாயோ?” என்று தலைவன், காதல் பித்தம் தலைக்கேறி, தலைவியின் நலம்பாராட்டும் குறுந்தொகைப் பாடல் நம் அகத்திரையில் வலம் வருகின்றது. அதனைப் புறத்தே விடுவோம்!

    கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறியெயிற் றரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீயறியும் பூவே.
    (குறுந்தொகை: 2 – இறையனார்)

    கற்பனைவானில் சிறகுவிரித்துப் பறக்கும் வித்தகம் கைவரப்பெற்ற நம் கவிஞர்கள் நல்ல கருத்துக்களைத் தம் கவிதைகளில் ஏற்றித்தரக் காத்திருக்கிறார்கள்; அவர்களைப் போற்றி அழைப்போம்!

    *****

    ”வண்ணத்துப்பூச்சியே! உன் கறுப்பு வெள்ளை நிறங்கண்டு வெறுப்புற்ற உன் சொந்தங்கள் உன்னை விரட்டினரோ? மனித மனங்கள் நிறபேதம் பார்த்தாலும் மலர்கள் அவ்வாறு பார்ப்பதில்லை; உனக்கு உணவளிக்க மறுப்பதில்லை. எனவே நம்பிக்கையோடிரு!” என்று வண்ணத்துப்பூச்சிக்கு ஆறுதலளிக்கிறார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

    தன்னம்பிக்கை

    வண்ணமில்லா
    வண்ணத்து.பூச்சியே,
    உன் எண்ணம் நானறிவேன்!

    உன்
    கறுப்பு வெள்ளை
    நிறம் கண்டு
    வெறுப்புற்ற உறவுகள்
    விரட்டி விட்டார்களேயென்று
    விரக்தி அடையாதே!

    கடவுளின்
    படைப்பினிலே
    வண்ணங்களில்
    பேதங்களில்லை.

    தேன் சிந்தும்
    மலர்கள் உன்னைத்
    தீண்டாதே என்று‌ சொல்வதில்லை.

    உன்னைப் படைத்த
    இறைவன்
    நீ உயிர் வாழ
    உணவளிப்பான்.
    என்னும்
    தன்னம்பிக்கையையும்
    தைரியத்தையும்
    நீ இழக்காத வரை
    உன்னை யாரும்
    தனிமைப்படுத்தித்
    தவிக்கவிட முடியாது!

    *****

    ”பிரம்மன் படைப்பின் அதிசயமான என் தாவர நட்பே வா! நட்பெனும் நம் கைகுலுக்கலில் பூத்துக் குலுங்கும் பூக்கள் எல்லாம் காயாகிக் கனியாகி நம் பிறப்பைச் சரிசெய்யும்!” என்று வண்ணத்துப்பூச்சியை வாஞ்சையாய் அழைக்கிறது மலர், திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

    பூவின் குணம்

    வண்ணத்துப் பூச்சியே
    வண்ணங்களில் மயங்கி
    வனப்பில் கிறங்கித்
    தேனினைத் தரலை

    படைப்பின் உண்மை
    பசியென வந்தால்
    உணவு பரிமாறு

    என்னுள் உள்ள தேன்
    உன்னுள் கலந்து
    உன் கால் பட்டு
    இன்னொரு பூவில்
    நீ அமர்கை
    இயற்கையே

    அதன் நிகழ்வே
    மகரந்தச் சேர்க்கை
    படைப்பின் பிரமிப்பு

    பூவாகிப் பிஞ்சாகிக்
    காயாகிக் கனியாகி
    என் பிறப்பு!

    நீ ஒரு கருவி
    சாதாரண
    வண்ணத்துப் பூச்சியல்ல நீ
    பிரம்மன் படைப்பின்
    அதிசயம் நீ

    வா தேனை எடு
    திகட்டத் திகட்ட எடு

    எனக்கு வலிக்குமென
    எண்ணக் கூடாது நீ

    என் மீது உன் ஸ்பரிசம்
    நான் வளரவே

    வா வா தாவர நட்பே
    நட்பெனும் நம்
    கைகுலுக்கலில்
    பூத்துக் குலுங்கும்
    பூக்கள் எல்லாம்
    காயாகிக் கனியாகி
    நம் பிறப்பைச்
    சரி செய்யவே

    நட்புக்கும் காதலுக்கும்
    புரிதல் அறியாதவர்கள்
    நம்மைக் கண்டாலே
    காதலெனக் கற்பனையில்…

    வண்ணத்துப் பூச்சியே
    நீ ஒரு இனம்
    நான் ஒரு இனம்
    இதை எப்படிக்
    காதல் என கற்பனையில்?

    இயற்கையின் இயல்பை
    இயல்பாகப் பாருங்கள்!

    *****

    ”கூட்டுப்புழுவாய்ப் பிறந்திட்டு வண்ணத்துப் பூச்சியாய் வளர்ந்திட்டுப் பார்ப்பவர் மனத்தைக் கொள்ளையடிக்க உருக்கொண்டேன் நானே!” என்று தன் வரலாறு கூறும் வண்ணத்துப்பூச்சியைக் காண்கின்றோம் திருமிகு. சுதா மாதவனின் கவிதையில்.

    வண்ணவண்ண நிறத்தில்
    தாவித்தாவிப் பறந்திட்டு
    அள்ளஅள்ளக் குறையாத
    தேனைத் தான் பருகுவேனே!

    கூட்டுப்புழுவாய்ப் பிறந்திட்டு
    வண்ணத்துப் பூச்சியாய் வளர்ந்திட்டு
    பார்ப்பவர் மனதைக் கொள்ளையடிக்க
    உருக்கொண்டேன் நானே!!

    மகரந்தச் சேர்க்கை
    என் வாழ்வியல் முறையிலொன்று
    மணத்தோடு மலர்கள் ஆயிரமாயிரம்
    கொட்டிக்கிடக்க ஆனந்தம் தானே!!

    பட்டுப்பூச்சிப் பருவத்திலே
    எங்களையெல்லாம் கொன்றுவிட்டுப்
    பட்டாடை உருவாக்கி
    அதைப் பகட்டாகக் கட்டிக்கொள்ளும்
    பாரில் நிரம்ப மனிதருண்டே!

    எம் இனச் சுழற்சி தொடரத்தான் செய்யும்
    உலகச் சுற்றுலா சென்றிட்டே
    பசுமையாய் உலகிருக்க
    பறந்திடவே நாங்கள் கிளம்பிட்டோம்
    வண்ணவண்ண நிறத்தினிலே
    தாவிதாவிப் பறந்திட!!!

    *****

    ”பூக்களின் இதயத் துடிப்பைச் சிறகினில் புலம்பெயர்த்த சித்துவித்தைக்காரன் நீ; சருகாகும் பூக்களின் வண்ணங்களை வார்த்து அவற்றுக்குப் புனர்ஜென்மம் கொடுக்கும் பிரம்மனின் தூரிகை நீ” என்று வண்ணத்துப்பூச்சியின் புகழ்பாடுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    பிரம்மனின் தூரிகை

    மைபூசித் திருடும் கள்வன்போல்
    கார்வண்டு தேன் எடுத்துச் சென்றுவிட
    வெள்ளந்தியாக பூவண்ணம் மேனி பூசி
    ‘வெண்ணெய்’ப் பூச்சியாக நிற்கும் பேதை நீ…

    பூக்கடைக்கு விளம்பரம்
    தேவையில்லை என்றாலும்
    பூவழகைப் புவனிக்குக்
    கொண்டு சேர்க்கும் தூதுவன் நீ…

    காதலியின் கண் துடிப்பைக்
    கண்டுணரும் காதலன்போல்
    பூக்களின் இதயத் துடிப்பை – சிறகினில்
    புலம்பெயர்த்த சித்துவித்தைக்காரன் நீ….

    வாடிச் சருகாகும் பூக்களின்
    வண்ணத்தை வார்த்தெடுத்து
    புனர்ஜென்மம் கொடுத்துவிடும்
    பிரம்மனின் தூரிகை நீயன்றோ!

    *****

    சுவைக்கத் தெவிட்டாத கற்பனைத் தேனைத் தம் கவிதைகளில் கலந்து கொடுத்திருக்கும் கவிஞர்களை நெஞ்சினிக்கப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுபெற்றிருப்பது…

    சிரிப்பூ…

    பூவில் தேனெடுக்கப்
    புதிதாய்ப்
    பழகும் பட்டாம்பூச்சி
    புறப்பட்டது தேனைத் தேடி…

    பூவில்லாப் பூச்செடியில்
    போய் அமர்ந்தது,
    மொட்டுகள் மட்டுமே
    நிறைந்த செடியில்
    கிட்டவில்லை
    தேன் அதற்கு,
    தேடிச் சென்றது
    வேறிடத்தை…

    எட்டிப் பார்த்த
    பூ மொட்டுக்கு
    வந்த
    அடக்கமுடியாச் சிரிப்பை
    அடக்கிக்கொண்டது!

    அடுத்த நாள்தான்
    சிரித்தது–
    அழகுப் பூவாய்…!

    தேனெடுக்கப் புதிதாய்ப் பழகும் பட்டாம்பூச்சி, மொட்டிலே தேனெடுக்கப் பட்டபாட்டையும் அதுகண்டு மொட்டு மலர்ந்து சிரித்த கதையையும் தம் பாட்டில் சுவையாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • தடை அதை உடை!

    தடை அதை உடை!

    அண்ணாகண்ணன்

    வேலிக்குள் அடைபட்டாலும்
    விடாமல் முயற்சி செய்!
    மூலைக்குள் முடங்கிடாமல்
    முழுவீச்சில் பயிற்சி செய்!
    மலைபெயர்க்க வேண்டாம்! நீ
    மனம்விழித்தால் போதும்! நீ
    தலையெடுத்து வந்தால்ஓர்
    தலைமுறையே தலையெடுக்கும்!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-30

    தி. இரா. மீனா

    மல்லிகார்ஜூனபண்டிதராத்திய

    ஆந்திராவைச் சேர்ந்தவர். பசவேசர் அனுப்பி வைத்த திருநீற்றின் மகிமையால் இவர் கன்னடம் கற்றார் என்றும் பசவேசரைப் பார்க்கப் போகும் வழியில் பசவேசர் இறைவனிடம் ஐக்கியமானார் என்ற செய்தி கேட்டு தன் இஷ்டலிங்கத்தில் அந்த காட்சியைக் கண்டு ஆறுதலடைந்தார் என்றொரு கதையுண்டு. ’மல்லிகார்ஜூனா’ இவரது முத்திரையாகும்.

     “இளமை செல்வம் உள்ளவரையில் சிவனை வணங்கமாட்டார்
    மனிதனே நினை நினை, நீ கெடுவதற்கு முன்னால்
    இளமை நிலைக்காது செல்வம் நிலைக்காது
    நீ கெடுவதற்கு முன்னால் மல்லிகார்ஜூனனை
    நினைப்பாய் நினைப்பாய்“

    மளுபாவிய சோமண்ணா

    ’மளுபாவிய சோம ’என்பது இவரது முத்திரையாகும்.

    “சமயத்திற்குக் கிடைக்காத செல்வம்,
    ஆயுளற்ற வாழ்க்கை, சுகமற்ற சம்சாரம்,
    பலம்குறைந்த உடலின் நட்பு,
    சோர்வடையச் செய்யும் உயிர்தன்மை
    இத்துணை கொந்தளிப்புகள் அழிந்தாலொழிய
    மளுபாவி சோமனை அறியமுடியாது”

    மாதர சென்னய்யா

    தொடக்க காலத்தில் அரசின் குதிரைக்குப் புல் வைக்கும் காயகம் இவருடையதாக இருந்தது. சோழ நாட்டைச் சேர்ந்த இவர் கல்யாண் நகருக்கு வந்தபிறகு சரணர்களின் சிறப்பு மரியாதைக்கு ஆளானவர். கல்யாணில் மிதியடி செய்யும் தொழில் செய்தவர். இறைப் பெயர் மற்றும் தன் குலத் தொழிலான செருப்புத் தைக்கும் தொழில் பற்றிய பேச்சு வழக்குகளை பயன்படுத்தியவர். ’நிஜாத்ம இராமைராமன்’ இவரது முத்திரையாகும்.

    “சொல் செயல் சித்தாந்தத்தில் தூய்மை மாசு தீட்டில்லை
    சொல் நன்று செயல் தீதெனில்
    அதுவே முக்தியில்லாத மாசுடையது
    களவு விபச்சாரத்தில் மாசறியாமல்
    செயல் கெட்டபின்பு நற்குல உடலுடையோருண்டோ?
    இரு ஒழுக்கம் நிலையறிய வேண்டும்
    தோல் தைக்கும் ஊசி,கத்திரி,கல்லுக்கு அடிமையாக வேண்டாம்
    அறிவாய் நிஜாத்ம இராமைராமனை“

    மாதார தூளய்யா

    மிதியடி தைப்பது இவரது காயகம்.அந்தணன் ஒருவனின் தொழுநோய் போக்கியவன் என்ற செய்தி இவரது வரலாற்றில் சொல்லப்படுகிறது ’காமதூம தூளேஸ்வர’ இவரது முத்திரையாகும்

    1. “விதையின் எண்ணெய், பழத்தின் சாறு
    தங்கத்தின் நிறம், இறைச்சியுள் பால்
    கரும்புச் சாற்றின் இனிப்பு
    உள்ளிருப்பது வெளியாகவில்லையெனில் குலத்தீட்டு விடாது
    கடவுளிடம் காட்டும் நம்பிக்கை தெரிவதன்றி
    கல்லின் குலத்தீட்டு விடாது
    விட்டொழிக்கும் வரையில் ஞானசூன்யமில்லை
    காமதூம தூளேஸ்வரனே“

    2. “கானல்நீர் பருகியவருண்டோ?
    வானவில்லேந்தி இழுத்தவருண்டோ?
    நீர்மணிக்கு நூல் கோத்தவருண்டோ?
    வெட்டவெளியில் அடக்கம் பிரம்மன்,
    கல்லுள் அடங்கிய நீரின் நிலையறியாத மாசுடையவர்களுக்கு
    மேன்மையின் பாதையேன் காமதூம தூளேஸ்வரனே?

    3. “சுழல் காற்றிற்கு உடலெல்லாம் கை
    சுடும் நெருப்பிற்கு செயலனைத்தும் வாய்
    பாயும் நீருக்கு தன் உடலெங்கும் கால்கள்
    அறியாமல் மறக்காமல் தொட்டவர்க்கு
    முதல் இடைகடையென அர்ப்பணமில்லை
    இல்லையெனும் சூதகத்திற்கு ஆதியில்லை
    காமதூம தூளேஸ்வரனே“

    மாரேஸ்வரொடையா

    ’மாரேஸ்வரன் ’ இவருடைய முத்திரையாகும்.

    “ஊட்டினால் உண்ணாமல் உடனே பதில் சொல்லாமல்
    பார்க்காமல், பேசாமல், யாசிக்காமல், துன்புறுத்தாமல்
    காட்டு வரட்டியைக் கையில் கொடுத்து
    சொல்லாமல் சென்றாயே மாரேஸ்வரனே“

    முக்தாயக்கா

    அஜகணன் என்னும் சிவயோகியின் தங்கை முக்தாயக்கா. முக்தாயக்கா இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட வசனங்களை எழுதியுள்ளாள் இளம்வயதில் பெற்றோர் இறந்துவிட அஜகண்ணன் அவளுக்குத் தந்தையாகவும், குருவாகவும் இருக்கிறான். திடீரென்று அவன் இறந்துவிட அந்தச் சோகம் அவளை வாட்டுகிறது. எதிலும் விருப்பமின்றி எந்தநேரமும் வருந்திக் கொண்டிருக்கும் அவளை வசனகார மும்மூர்த்திகளில் ஒருவரான அல்லமாபிரபு பார்க்கிறார். அவளை மாற்ற விரும்பி ஒருவரின் முயற்சியாலும், பயிற்சியாலும்தான் மெய்யுணர்வு பெறமுடியும் என்கிறார். அந்த நேரத்திலும் அவள் அல்லமபிரபுவுடன்  வாதம் செய்வது குறிப்பிடத்தக்க தாகும். சரியான பயிற்சிசெய்ய ஒருவருக்கு கண்டிப்பாக ஒரு குருதேவை என்கிறாள். வழிநடத்திய  தனது ஆசானும், அண்ணனும் இல்லாத வருத்தத்தை வாதமாக்குகிறாள். சிறிது காலகட்டத்திற்குப் பிறகு ஓரளவு ஆறுதலடைந்து வீரசைவப் பணிகளில் ஈடுபடுவதாக அவள் வரலாறு அமைகிறது. வேதாந்தமும், அதோடு மனித மனநிலையும் பொருத்தப்படுவதாக அவள் வசனங்கள் அமைந்துள்ளன. ’அஜகண்ணா’ அவளது முத்திரையாகும்.

     1. “நான் பேசமாட்டேன் என்னும்போதே
    அதில் பேச்சிருக்கிறது
    நான் செயல்படமாட்டேன் என்னும்போதே
    அதில் செயலிருக்கிறது
    நான் சிந்திக்கமாட்டேன் என்னும்போதே
    அதில் சிந்தனையிருக்கிறது
    எனக்குத் தெரிந்தது மறந்துபோனது என்னும்போதே
    அதில் அறிவும் மறதியும் தெரிகிறது
    உடலைத் துறந்தேன் என்னும்போது
    உடலோடான நெருக்கம் அதிகமாகிறது
    நான் நான் என்னும்போதே
    அது ஆன்மாவிற்கு மறுப்பாகிறது.
    ஓ..அஜகண்ணா!

    2. “தீய சொற்களைப் பேசக் கூடாது;
    தீயவழிகளில் நடக்கக் கூடாது.
    பேசினால் என்ன ஆகும்,பேசாவிட்டால் என்ன ஆகும்?
    உறுதிமொழியை மீறாமல் செயல்படுவதே
    அறிவின் பயிற்சியில்தான்
    ஓ..அஜகண்ணா! “

     3. “இருமையை ஒழித்து விட்டோம்
    ஒருமையை நிறுவியிருக்கிறோம் என்று சொல்பவர்கள்
    கனவு காணும் குழந்தைதான்
    அவர்கள் அதைப்பற்றிப் பேசும்வரை
    இருமையாளர்கள் அன்றி வேறென்ன?
    ஒ..அஜகண்ணா!“

    4. “தன்னைத் தானறிந்தவனுக்கு அறிவே குருவாம்
    அறிவு மறைந்து மறதியழிய
    அடையாளமே குருவாம்.
    அடையாளமழிந்து தானே குருவாக
    யாரும் வழிகாட்டவில்லையெனில் என்ன?
    உண்மையை  நிலைநாட்டி உறுதியில் நின்றவனே
    குருவாம் காணாய் !
    தானே குருவாயினும் தனக்கொரு குரு வேண்டும்
    எந்தை அஜகண்ணனைப் போல“

    5. “நீர்பொம்மைக்கு காணாத சலங்கை கட்டி
    வெட்டவெளியெனும் பொம்மை கொடுத்து
    கொஞ்சி விளையாடினானய்யா !
    கற்பூர பொம்மைக்கு நெருப்பின் சிம்மாசனமிட
    நெருப்பு கரைய கற்பூரம் நிலைத்தது கண்டு
    வியந்தேனய்யனே அஜகண்ணனின் யோகம் கண்டு”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)

    சேக்கிழார் பாடல் நயம் – 87 (ஆரம் என்பு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆரம்என்பு புனைந்த  ஐயர்தம்   அன்பர் என்பதோர்  தன்மையால்
    நேர வந்தவர்  யாவராயினும்   நித்த   மாகிய   பக்திமுன்
    கூர வந்தெதிர்   கொண்டு கைகள்  குவித்து நின்று  செவிப்புலத்து
    ஈர மென் மதுரப்பதம் பரிவெய்த  முன்னுரை செய்தபின்

    உரை:

    ஆரமும் எலும்பும் அணிந்த ஐயர்தம்   அன்பர்கள் என்ற ஒரே தன்மையினை எண்ணி, அதனையே காரணமாக வைத்து, அடியார்களை நோக்கி , முன்னே வந்தவர்கள் யாவரேயாயினும்,  உறுதியாகி நிலைத்த பத்தி கூர வந்து எதிர் கொண்டு  வாயார அழைத்துக் கை குவித்து எதிரே வணக்கமாக நின்று அவர்கள் கேட்குமாறு குளிர்ந்த அன்பான இனிய மொழிகளை அவர்கள் அன்புகொள்ளுமாறு சொல்லி அதன் பின்,  (அடுத்த பாடலுடன்  பொருள் முடியும்)

    விளக்கம்:

    கழுத்து மாலையாக  எலும்பை   அணிந்தவர் சிவபிரான். இவரை இப்பாடல் ‘’ஆரம் என்பு புனைந்த  ஐயர்‘’ என்று பாடுகிறது.  உலகம் அழியும் காலத்தில் இறந்து விட்ட பிரமன், திருமால் ஆகியோரின் எலும்புகளை அணிந்து சங்கார  நடனம் ஆடியவர் அவர். படைப்புக் கடவுளும், காக்கும் கடவுளும், தேவர்களும்  அழிந்தபின்னும்,  நித்தியராய் உள்ளவர் அவர். அவரே தலைவர் என்பதை ஐயர் என்ற  சொல் குறித்தது! இதனைத்   திருவாசகம்,

    ‘’கண் நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
    எண் இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
    மண் மிசை மால் பலர் மாண்டனர் காண்‘’

    என்றும்,

    நங்காய் இது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து
    கங்காளம் தோள் மேலே காதலித்தான் காண் ஏடீ
    கங்காளம் ஆமா கேள் காலாந்தரத்து இருவர்
    தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

    என்றும், பாடுகின்றது. திருமந்திரம்

    “எலும்புங் கபாலமு மேந்தில னாகில்,
    எலும்புங்கபாலமு மிற்றுமண் ணாமே“

    என்றவாறு, இவர் ஏந்திப் புனைந்ததனால் அவை இற்றுப்போகாது நின்றன. நித்தராகிய இவர் அன்பர்களும் தாமும் நித்தராவார்; தம்மை அடைந்தாரையும் நித்தர்களாக்குவார்; ஆதலின் அன்பர் என்பதோர் தன்மையை நாடினார் என்பது குறிப்பு.  அன்பர் என்ற ஒரே தன்மையினாலே  வேடம், பாவனை, செயல் என்பனவும் கொள்ளப்பெறும்.

    ‘’பத்திமுன்கூர’’  என்ற தொடர்  – தம்மிடத்திலே நித்தியமாய் – இயல்பாய் – அமைந்த அடியார் பத்தி முன்னே சிறப்பாய்க் கூர்ந்து கூடிற்று.

    அடியார்களை வந்து எதிர்கொண்டபின், அவர் செவியில் அன்பு கலந்த மெல்லிய சொல் கூறினார். இவ்வாறு பரிவெய்த – அன்பர்கள் தம்மிடத்துக் கருணை கூரும்படி. முன்உரை செய்த பின் – முன் – அவர்கள் முன்பு. எதிர்கொண்டு  கைகுவித்து நிற்றலுக்குமுன் என்றலுமாம். வாக்கு இன்னுரை முன் சொல்லிக்கொண்டே செல்ல, அதனுடன் எதிர் கொள்ளுதலும் கைகுவித்தலும் நிகழ்ந்தன. ஆயினும் அன்பர்கள் கண்ணுக்கு அச்செயல்கள் முன்னர்த் தோன்றின; மொழிகள் பின்னரே கேட்டன. காட்சிப் புலப்படுக்கும் ஒளியலைகள் வேகத்தால் மிக்கனவும், செவிப்புலப்படுக்கும் ஓசையலைகள் வேகத்தால் அவற்றினும் மிகக் குறைந்தனவுமா மென்பர் விஞ்ஞான நூலார். ஆதலின் அம்முறையே கண்ட செயலை முன்னர்க் கூறிக் கேட்ட சொல்லைப் பின்னர்க் கூறினார்.

    அடியார்களைக்ள் கண்டபோதே விரைந்து எதிர் செல்லுதலும், அவர்முன் நின்று மென்மையான சொற்களைக் கூறுதலும் விருந்தோம்பலின் செயல்கள் ஆகும்.  இப்பாடலுடன் அடுத்த பாடலையும் பொருளுணர்ந்து கூற வேண்டும்.

    இப்பாடல் சைவ நன்மக்கள் நிகழ்த்தும் சங்கம வழிபாட்டின் அங்கமாகிய  மாகேசுர பூசையின் சிறப்பைக் காட்டுகிறது. இத்துடன் அடுத்த திருப்பாடலையும் சேர்த்துப் பாடுவது மாகேசுர பூசையில்  எப்போதும் நிகழ்வதாகும். அடியார்களை  வரவேற்கும் முறை இங்கே கூறப்பெறுகிறது.

    Share
  • நாலடியார் நயம் – 37

    நாலடியார் நயம் – 37

    நாங்குநேரி வாசஸ்ரீ

    37. பன்னெறி

    பாடல் 361

    மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
    இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? – விழைதக்க
    மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
    காண்டற்கு அரியதோர் காடு.

    மேகம் தவழும் மாடி உள்ளதாய்
    மேன்மைமிகு காவல் உடையதான வீட்டில்
    மின்னும் அணிகளே விளக்காய் ஒளிவீசினும்
    மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெறாதவனின்
    மனை பார்க்கக் கூடாத சுடுகாடேயாம்.

    பாடல் 362

    வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
    இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் – இழுக்கெனைத்தும்
    செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
    கையுறாப் பாணி பெரிது.

    தளர்வில்லா வாளின் காவலிருந்தும்
    தம்ஒழுக்கம் தவறி மகளிர் நடப்பாராயின்
    சில சொற்களே பேசும் அவர்தம் குற்றம்
    செய்யாக்காலம் சிறிதேயிருப்பினும் ஒழுக்கத்தைப்
    பெறாத காலம் பெரிது ஆகும்.

    பாடல் 363

    எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
    அட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனை
    உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
    கொண்டானைக் கொல்லும் படை.

    கணவனை அடிக்கச்சொல்லி எதிர்நிற்பவள்
    கொண்டவனுக்கு எமன் போன்றவள்
    காலையில் சமையலறைக்குள் புகாதவள்
    காலத்துக்கும் போக்க முடியா நோய்
    கணவனுக்குச் சமைத்த உணவைத் தராதவள்
    கொண்டவன் வீட்டிலுள்ள பிசாசு
    கணவனைக் கொல்ல உதவும் படையொத்த
    கொலைக் கருவிகளாம் இம்மூவரும்.

    பாடல் 364

    கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
    ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; – பேர்த்துமோர்
    இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
    கற்கொண்டு எறியும் தவறு.

    இல்வாழ்வை நீக்கச் சொல்லிப் பெரியோர்
    இயம்பியும் நீக்காது தலையே வெடிக்குமளவு
    இறப்பில் பறை ஒலிக்கக் கேட்டும்
    இல்வாழ்க்கை நிலையில்லாதது என
    இருக்காது மறுபடியும் திருமணம் புரிந்து
    இன்புற்றிருக்கும் மயக்கம் ஒருவன் கல்லை
    இயல்பாய் எடுத்துத் தன்மேல் எறிந்துகொள்ளும்
    இன்னாச் செயல் போலும் குற்றமாம்.

    பாடல் 365

    தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
    இடையே இனியார்கண் தங்கல் – கடையே
    புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
    உணரார்பின் சென்று நிலை.

    தவத்துக்குரிய செயலில் முயன்று வாழ்தல்
    தலையாய நிலையாம் இனிய குணமுள்ள
    தம் மனைவியுடன் வாழ்தல் இடைப்பட்ட நிலை
    தனக்குக் கிட்டாதெனினும் பொருளாசையால்
    தம் பெருமையுணராரைத் தொடர்தல் கடையாய நிலை.

    பாடல் 366

    கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
    துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
    இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
    முனிவினாற் கண்பா டிலர்.

    நல்ல நூலைக் கற்று வாழ்நாளை
    நல்ல பயனுடையதாய்க் கழிப்பர்
    நல்லறிவுடைத் தலைமையான அறிவினர்
    நல்லபொருளை அனுபவித்துத் தம் வாழ்வை
    நடத்துவர் இடைப்பட்டவர், கீழ்மக்களோ உண்ண
    நல்லுணவு கிட்டவில்லையே, செல்வத்தை மிகுதியாய்
    நாம் பெறமுடியவில்லையே என வருந்தி
    நல்லுறக்கமின்றி நாளும் கழிப்பர் தம் வாழ்வை.

    பாடல் 367

    செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
    செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
    வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
    மகனறிவு தந்தை அறிவு.

    நல்ல நெற்களால் உண்டான நல்விதைகள்
    நற்செம்மை நெல்லாகவே விளைவதால்
    நிறைந்த வயல்சூழ் நாட்டின் வேந்தனே!
    நல்லறிவு தந்தைக்கு வாய்க்கப்பெற்றாலந்த
    நல்லறிவு மகனுக்கும் இருக்கும்.

    பாடல் 368

    உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
    புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
    கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
    கீழ்மேலாய் நிற்கும் உலகு.

    பெருஞ்செல்வரும் சான்றோரும் தம்நிலை தாழ்தலும்
    புறப்பெண்டிரின் மக்களும் கீழ்மக்களும் உயர்வெய்தலும்
    காலருகே இருக்கவேண்டியது தலைப்புறமாகி
    குடையின் காம்புபோல் உலகம் கீழ்மேலாய்
    கிடக்கும் நிலையற்ற தன்மை கொண்டது.

    பாடல் 369

    இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
    தணியாத உள்ளம் உடையார்; – மணிவரன்றி
    வீழும் அருவி விறன்மலை நன்னாட!
    வாழ்வின் வரைபாய்தல் நன்று.

    இரத்தினங்களை வாரிக்கொண்டு விழும்
    இனிய அருவிகளுடை மலைநாட்டு மன்னனே!
    தம் நண்பர்கள் மனத் துன்பத்தைக்கூற அதைத்
    தீர்க்க நினையாக் கல்நெஞ்சம் உடையோர்
    வாழ்வதை விட மலை மேலேறிக் குதித்து
    வீழ்ந்து உயிர்விடுதல் நல்லதாம்.

    பாடல் 370

    புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
    விதுப்புற நாடின்வே றல்ல; – புதுப்புனலும்
    மாரி அறவே அறுமே, அவரன்பும்
    வாரி அறவே அறும்.

    புது வெள்ளத்தால் வந்த நீரும்
    பொதுமகளிரின் நட்புமாகிய இரண்டும்
    பொறுமையாய் ஆராய்ந்தால் வேறல்ல.
    புதுநீர் நீங்கும் மழைநின்றால்
    பொதுமகளிரின் அன்பு நீங்கும்
    பொருள் வரவு நீங்கின்.

    Share
  • ஒய்எம்சிஏ பக்தவத்சலம் விடைபெற்றார்!

    ஒய்எம்சிஏ பக்தவத்சலம் விடைபெற்றார்!

    பக்தவத்சலம் அவர்கள், என் மீது தனித்த அன்பு கொண்டவர். என் நூல்களை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அமுதசுரபி வெளியிட்ட நூல்களை இங்கே அறிமுகப்படுத்தினார். அதில் ஒரு நூலைக் கவிஞர் வைகைச்செல்வன் அறிமுகப்படுத்திப் பேசினார். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் ஒரு வார நிகழ்வுக்கு புறநானூறு தொடர்பாக, ஔவை நடராசனார் உரையாற்ற, ஔவை பணித்தபடி அந்த அமர்வுக்கு நான் தலைமை தாங்கினேன். தொடர்ந்து இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை அனுப்பி, தொலைபேசியிலும் எனக்கு அழைப்பு விடுப்பார். சரியான நேரத்தில் நிகழ்வைத் தொடங்கி, குறித்த நேரத்தில் நிறைவு செய்வார். நற்றமிழில், செறிவாக உரையாற்றும் பாங்குடையவர். நிகழ்வுக்கு வரவேற்புரை ஆற்றுவதுடன், பேச்சாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தி, பேசிய பிறகு அதன் சுருக்கத்தையும் எடுத்துரைத்துப் பாராட்டுவார். பண்பாளர் பக்தவத்சலம் அவர்களின் மறைவுக்குத் தனிப்பட்ட முறையிலும் வல்லமை சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னார் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். – அண்ணாகண்ணன்

    இலக்குவனார் திருவள்ளுவன்

    செவ்வாய்தோறும் சென்னையில் தமிழ்க்கூடலை நிகழ்த்தி வந்த பொறியாளர் கெ. பக்தவத்சலம் இன்று (ஆனி 16, 2051/30.06.2020) காலை 8.30 மணியளவில் அயராது ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளில் இருந்து விடைபெற்றார்.

    கிறித்துவ இலக்கியக்கழகத்தின் (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்றம் என்றதும் அறியாதார் கிறித்துவ அமைப்பின் வாதுரை மன்றம் என எண்ணுவர். ஆனால் தமிழ்வளர்க்கும்  தமிழ் ஆர்வலர்களின் சங்கமம் இது என்பதைத் தமிழன்பர்கள் அறிவர். சொல்லின் செல்வர் இரா. பி. சேது (பிள்ளை) அவர்களை முதல் தலைவர்களாகக் கொண்டு 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. இதில் 1966ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து செயலராகத் திறம்படச் செயலாற்றி வருகிறார்.

    தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் அமைப்பு ஒன்றின் செயலராகத் தொடர்ந்து 54 ஆண்டுகள் தொண்டாற்றுவது அருவினைச்செயலாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் முதல்நிலைத் தமிழறிஞர்களும் வளர்நிலைத் தமிழாசிரியர்களும் மலர்நிலை தமிழ் ஆய்வாளர்களும் பங்குபெற்றுள்ளனர். அவ்வாறு பங்கேற்கா அறிஞர் யாருமிலர் எனலாம். இவரது செவ்வாய்க்கிழமை நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதும் சூழலை இவர் உருவாக்கினார்.

    1958இல் இளநிலைப்பொறியாளராகத் தம் பணி வாழ்வை சென்னை மாநகராட்சியில் தொடங்கினார். பொறியியல் சான்றிதழ்க் கல்வியை முடித்தவர் தணியாத் தமிழார்வத்தால் குமுகவியலில் இளங்கலைப் பட்டத்தையும் அரசறிவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். என்றாலும் பள்ளிப்பருவத்தில் தமிழில் மிகுதியாக மதிப்பெண் பெற்ற இவர் நாட்டம் முழுமையும் தமிழில்தான் இருந்தது.  தம் வீட்டிற்கே ‘தமிழ் இல்லம்’ என்று பெயர் சூட்டியவர் தமிழை எங்ஙனம் மறக்க இயலும்? மாணவப் பருவத்திலேயே ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் தனிஅரசு, சி.பி.சிற்றரசுவின் தீப்பொறி, கவியரசு கண்ணதாசனின் தென்றல், நாரண துரைக்கண்ணனின் பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். பணிவாழ்க்கையில் இணைந்தாலும் தமிழ் வாழ்வாக மாற்றிக் கொண்டார்.

    நித்திலக்கோ’ என்னும் புனைபெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இளந்தமிழன், தாமரை, ஓம் சக்தி வாசகர்கள் இவரை நன்கு அறியும் வகையில் அவற்றில் சிறப்பான கட்டுரைகளைப் படைத்து வந்தார்.

    கி.இ.க. (ஒய்.எம்.சி.ஏ.) பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிஞர்களின் உரைகளைக் குறிப்பெடுத்து இலக்கிய இதழ்களுக்கு அனுப்பி வந்தார்.

    தமிழக அரசின் திருக்குள்நெறி பரப்பு மையம் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ விருதும், பெரியார் நூலக வாசகர் வட்டம் ‘பெரியார் விருது’ம் வழங்கியுள்ளன. உலகத்திருக்குறள் பேரவை, வில்லிவாக்கம் திருக்குறள் வாழ்வியல் சங்கம், வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம், சென்னை நண்பர்கள் கழகம் முதலான தமிழ் அமைப்புகளும் இவருக்கு விருதுகளும் பாராட்டிதழ்களும் அளித்துச் சிறப்பித்துள்ளன. முகம்மாமணி, கவிதை உறவு முதலான இதழ்கள் இவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

    வேதநாயகர், அறம் வளர்த்த ஆன்றோர்கள், புகழாளர்கள் முதலான நூல்களை எழுதித் தமிழான்றோர்களை இக்காலத்தலை முறையினர் உணரச்செய்தார். இலக்கியக்கூட்டங்களில் இவர் ஆற்றிய பொழிவுகளும் வானொலி, தொலைக்காட்சி உரைகளும் மென்மையும் நுண்மையும் மிக்கன. இச்சிறப்பின் காரணமாகத்தான் ‘சன்’தொலைக்காட்சியில் இவர் ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சியில் இருமுறை பங்கேற்றார்.

    மேதை வேதநாயகம் மீது பற்று கொண்டு அவரது நினைவு மலரைச் சிறப்பாகத் தொகுத்து தந்தார். அம்பத்தூர் இலக்குவனார் இலக்கியப் பேரைவயில் அவர் குறித்துச் சிறப்பாகப் புகழுரை வழங்கினார்.

    வாசுதேவ(பிள்ளை) அறக்கட்டளையின் அறங்காவலராகத் திகழ்ந்தும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், வானவில் பண்பாட்டு மையம் ஆகிய அமைப்புகளில் செயற்குழு உறுப்பினர் பொறுப்பேற்றும் ‘கருணீகர் நல்வாழ்வு’ இதழின் சிறப்பாசிரியராக இருந்தும் பிற பொதுவாழ்விலும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

    இலக்கிய உரைகள், கவிதைகள், தொடர் சொற்பொழிவுகள், இலக்கியத் திறனாய்வுகள் என அறுநூற்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளால் ‘செவ்வாய்தோறும் செந்தமிழ்‘ எனத் தமிழன்னைக்கு வாரந்தோறும் தமிழ்மாலை அணிவித்து வந்த செம்மல் தம் பணிகளில் இருந்து விடை பெறுகிறார். இவற்றில் குறிப்பிடத்தகுந்தது, பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் வாழும் கவிஞர்கள் குறித்து ஆற்றிய 200 தொடர் சொற்பொழிவுகளாகும்.

    கணிணிவழிக் கிரந்தத்திணிப்பு எதிர்ப்பிற்காக “மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா” என நிகழ்ச்சி நடத்தி என்னைச் சிறப்புரையாற்றச் செய்தார். என் தலைமையில் இவர் வள்ளலார்பற்றி ஆற்றிய உரை, வள்ளலார் குறித்த சிறந்த இலக்கிய ஆய்வாகும்.

    ஆட்சித்துறையினர், நீதித்துறையினர், திரைத்துறையினர், இதழியல்துறையினர், கலைத்துறையினர், முதலான எத்துறையில் இருந்தாலும் தமிழ் ஆர்வலர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது இவரின் தனிச்சிறப்பு. அயல்வாழ் தமிழறிஞர்கள் இங்கு வரும்பொழுது அவர்களை அழைத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவார்.

    அறிஞர்களின், கவிஞர்களின் பிறந்தநாள் விழாக்கள், நினைவு விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றைச் சிறப்புடன் நடத்துவதும் இவரின் செயற்சிறப்பு. தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நடத்தியதுடன் அதற்கு முன்பும் பின்புமாகத் தொடர்ந்து 35 ஆண்டுகள் இலக்குவனார் நினைவரங்கம் நிகழ்த்தி அவர் மீதான அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தியுள்ளார். எந்த ஓர் அமைப்பும் எந்தத் தமிழறிஞருக்கும் இவ்வாறு தொடர்நினைவரங்கம் நிகழ்த்தியதில்லை!

    இவருக்குத் தோன்றாத் துணையாக விளங்கிய மனைவி திருவாட்டி வசந்தா பக்தவத்சலம் ஈராண்டுகளுக்கு முன்னர் மறைந்து அவருக்குப் பெருந்துயரம் தந்தார். இன்றோ இவரே மறைந்து தம் வழியில் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றப்பணிகளில் ஈடுபட்டுத் துணைச்செயலராகத் திகழும் மகன் பேரா. தாமரைக்கண்ணன், பெண் மக்கள் திருவாட்டி கல்யாணி, திருவாட்டி சுமதி, பெயரர்கள், தமிழ்ச்சுற்றத்தார் துயருற நம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டார்

    வாழும் பொழுது ஓய்வு எடுக்காமல் பணியாற்றியதால் வாழ்வில் இருந்து பெறும் ஓய்வே தமிழ்ப்பணிக்குமான ஓய்வானது.

    அண்மையில் உடல் நலமுற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அலைபேசி வழி உரையாடினார். மகுடைத் தொற்றால் நிகழ்ச்சிகள் நடத்த முடியாதது குறித்து வருந்தினார். அவருக்கான ஓய்வுக்காலமாகக் கருதுமாறும் வரும் தைத்திங்களில் பட்டிமன்ற நிகழ்ச்சி, பட்டிமன்ற முத்துவிழா, தமிழர்திருநாள் எனச் சிறப்பாக  நடத்தலாம் என்றும் அமைதிகாக்குமாறும் தெரிவித்தேன். திசம்பரில் வரும் அவரின்பிறந்தநாள் பெருமங்கலத்தையும் அப்பொழுது இணைத்துக் கொண்டாட வேண்டும் என்றேன். ஆனால், காலன் அதற்கான வாய்ப்பை நல்கவில்லையே!

    தமிழ்க்காப்புக்கழகம், தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள், இலக்குவனார் இலக்கிய இணையம் இலக்குவனார் இலக்கியப்பேரவை, அம்பத்தூர், அகரமுதல இதழ் ஆகியவற்றின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

    இனியும் கி.இ.க.பட்டிமன்றத்தில் “செவ்வாய்தோறும் செந்தமிழ்” முழங்கும். ஆனால், அங்கே தமிழ்த்தாய் இவரைத் தேடுவார்!

    நன்றி: அகரமுதல

    Share
  • அப்பா

    அப்பா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேரிலே சாமிவந்தால் தோளிலே தூக்கிவைத்து
    பாரடா என்றுகாட்டும்  பாங்கினை மறக்கமாட்டேன்
    ஊரிலே யுள்ளார்எல்லாம் உன்மகன் உதவானென்று
    நேரிலே வந்துசொன்னால்  நிமிர்ந்தொரு பார்வைபார்ப்பார்

    கவலைகள் படவும்மாட்டார் கண்டதை உண்ணமாட்டார்
    தெருவிலே சண்டைவந்தால்  திரும்பியே பார்க்கமாட்டார்
    அடிதடி வெறுத்துநிற்பார் ஆரையும் தூற்றமாட்டார்
    உரிமை யாயுதவி நிற்பார்  ஊரிலே எங்களப்பா

    பொய்யவர்க்குப் பிடிக்காது புளுகுவதை வெறுத்திடுவார்
    மெய்பேசி நின்றுவிட்டால்  விரும்பியவர் அணைத்திடுவார்
    உண்மையே பேசென்பார்  உழைப்பையே நம்பென்பார்
    எண்ணமெலாம் இனிதாக இருக்கவே வேண்டுமென்பார்

    அன்பாக இருவென்பார் அனைவர்க்கும் உதவென்பார்
    அசடனாய் வாழாதே அறிஞனாய் உயரென்பார்
    பலகதைகள் ஊடாகப்  பண்புகளை வளர்த்திட்டார்
    பாரில் வாழநான் பாதையே அப்பாஅப்பா

    Share
  • காலமையா காலம்!

    அண்ணாகண்ணன்

    இந்தப் பாடலை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்.

     

    காலமையா காலம் ஐயா – ஆல
    காலமையா ஐயா ஐயா
    கோலமையா கோலம் ஐயா – அலங்
    கோலமையா ஐயா ஐயா

    நோவெழுந்து நிற்பதனால்
    நாவிழந்து நிற்கின்றோமே
    சாவெழுந்து நிற்பதனால்
    வாழ்விழந்து நிற்கின்றோமே

    தாக்கமையா தாக்கம் ஐயா
    தேக்கமையா தேக்கம் ஐயா
    ஏக்கமையா ஏக்கம் ஐயா
    ஆக்கமெங்கே ஐயா ஐயா

    நடுக்கமிங்கே ஐயா ஐயா
    கடுக்குதிங்கே ஐயா ஐயா
    இடுக்கணிங்கே ஐயா ஐயா
    தடுப்பதெங்கே ஐயா ஐயா

    நாதியில்லே ஐயா ஐயா
    நீதியில்லே ஐயா ஐயா
    ஜோதியில்லே ஐயா ஐயா
    சேதியில்லே ஐயா ஐயா – நல்ல
    சேதியில்லே ஐயா ஐயா

    பாரமையா ஐயா ஐயா – எல்லாம்
    தூரமையா ஐயா ஐயா
    ஈரமெங்கே ஐயா ஐயா
    சாரமெங்கே ஐயா ஐயா

    வாருமையா வாரும் ஐயா
    பாருமையா பாரும் ஐயா
    கேளுமையா கேளும் ஐயா – கதை
    நீளுமையா நீளும் ஐயா

    போதுமையா போதும் ஐயா
    ஏதும் செய்யலாமோ ஐயா
    தீதுவரும் பாதை மாறி
    தோதுவர வேணும் ஐயா

    துக்கமிங்கே ஐயா ஐயா – வலி
    பக்கமிங்கே ஐயா ஐயா
    மிக்கதுயர் ஐயா ஐயா
    தக்கவழி தாரும் ஐயா

    தாருமையா தாரும் ஐயா – வழி
    கூறுமையா கூறும் ஐயா
    சேருமையா சேரும் ஐயா – இடர்
    தீருமையா தீரும் ஐயா

    ஒல்லும்வழி காட்டும் ஐயா
    நல்லவழி காட்டும் ஐயா
    வல்லவழி காட்டும் ஐயா
    வெல்லவழி காட்டும் ஐயா

    Share
  • கருப்பு வெள்ளை (சிறுகதை)

    கருப்பு வெள்ளை (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு பின்னர் அந்தப் புகைப்பட நிலையத்திற்குள் நுழைந்தேன். அன்று இருந்த அதே வாசனை. உள்ளே பெரியவரின் படம், கருப்பு வெள்ளையில். பார்த்துக்கொண்டே நின்ற போது அவர் மகன் “வாங்கோ” என்றார். பெரியவரே உள்ளே சென்று சின்னவராகத் திரும்பியது போல ஒரு தோற்றம்.

    “ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறோம். இந்த ஊர்தானா?” எனக் கேட்டார்

    “ஆமாம்” என்றேன்.

    “அன்னிக்கு பார்த்த மாதிரியே இருக்கு ஸ்டுடியோ” என்றேன்.

    “இது எங்க சொத்து. அவர் விட்டுச் சென்ற எதிலும் நாங்க கை வைக்கவில்லை. இந்த ஸ்டாப்ளர், போன் எல்லாம் அப்பிடியே இருக்கு. புது போன் ஐந்நூறு ரூபாய். ஆனா நான் பழசை ரிப்பேர் பண்ணி இன்னிக்கும் வச்சிருக்கேன். சில பேர் கிண்டல் பண்றாங்க. நான் அதைக் கண்டுக்கிறதில்ல. கிட்டத்தட்ட இந்த சின்ன ரூமுக்கு எங்க வயசு.”

    “ஆமாம். டைம் மிஷின்ல பின்னாடி போற மாதிரி இருக்கு. இங்க தான் அப்பாகிட்ட பாஸ்போர்ட் எடுத்துண்டு  கல்லூரியில் சேர்ந்தேன். ரெண்டு நாள் கழிச்சு பஸ் பாஸுக்கும் வந்தேன். அன்னிக்கு இருந்த அதே வாசனை. இன்னிக்கும் இருக்கு. எப்படி இதைப் பராமரிக்கிறீங்க?”

    “நாங்க ஒன்னும் செய்யாம இருந்தால் அதுவே நல்ல விஷயம். எந்த ஒரு மாற்றமும் பழசைக் குலைச்சுப் போட்டுடும்.”

    “நீங்க நவீனத்துவத்துக்கு எதிரானவரா?”

    “இல்லை சார். ஆனா அது இங்க வேணாம்.”

    “ஏன் சார்?”

    “எங்க அப்பா. அவர் நினைவை போற்ற எங்களால் முடிந்த அளவு சேவை – எல்லாமே இங்க எங்க அப்பா தான்.”

    “இங்க பாருங்க” என்றார் .

    சின்ன கண்ணாடிப் பெட்டியில் அவர் போட்ட மூக்கு கண்ணாடி, கட்டிய வேஷ்டி, பொடி டப்பா, ரிஸ்ட் வாட்ச்.

    “எப்படி சார் இந்த அர்ப்பணிப்பு. எனக்கு எங்க அப்பா திவச தேதியே நினைவில்லை.”

    “ரொம்ப பெரிய விஷயமில்லை சார். எனக்குப் பணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இது எல்லாமே இயல்பாக வந்துவிட்டது.”

    “ஆனாலும் இது பெரிய விஷயம்தான்” என்றேன் .

    “இந்தப் பாராட்டு கூட எங்க அப்பாவுக்குத்தான் போய்ச் சேரணும். அவர் ரொம்ப எளிமை. கடைசி வரைக்கும் சைக்கிளிள்தான் போவார் – வருவார்.”

    கை கொடுத்தேன். அப்பாவைப் போல இவருக்கும் அதே தொளதொள பேண்ட். ஒரு வேளை இது அவர் அப்பா உடுத்தியிருந்ததாகக் கூட இருக்கலாம்.

    வெளியே வந்த பிறகும் அந்த பவுடர்  வாசனை போகவில்லை.

    Share