Blog

  • காம யோகா – 4

    காம யோகா – 4

    சி. ஜெயபாரதன், கனடா

    (பாவை விலக்கு)

    ஆணும் பெண் இருபாலாரும்
    பேணுவது சமத்துவம்
    சட்ட விதிப்படி!
    கட்டமைப்பில்,  உடல் உறுப்பில்,
    உள்ளத்து இயக்கத்தில்
    சிந்தனையில், செயலில்,
    ஆண் வேறு! பெண் வேறு!
    மாறுபடுவையே.

    கல்விக் கூடத்தில் மாணவர்
    ஒரு விரல் காட்டினால்
    சிறுநீர் கழிப்பு.
    இரு விரல் காட்டினால்
    மலநீர்க் கழிப்பு.
    மூவிரல் காட்டினால்
    மாத விலக்கு! மன விலக்கு!
    மாணவிக்கு!
    பருவப் பெண்ணுக்கு அப்போது
    தனிமை தேவை
    தனிச் சலுகை தேவை.

    ஓய்வு தேவை
    பருவ மங்கைக்கு.
    தாய்மைச் சுரப்பி தரும் துயர்!
    தனிமை விலக்கு
    பெண்ணுக்குப் புரியாத,
    ஆணுக்கும் தெரியாத
    உடல் தளர்ச்சி அது
    பாவை விலக்கு அது!
    சிவப்பு விலக்கு!

    பருவ மங்கைக்கு
    மாதா மாதம் தவறாது மீளும்
    தவிர்க்க முடியாத
    உடலியல்  இயற்கை நிகழ்ச்சி!
    கடமை விலக்கு.
    தாய்மைப் பொறுப்பு,
    வேதனை! வேதனை!
    மூன்று நாள் படும் வேதனை!
    ஓய்வு தேவை.

    மூன்று நாள் வெளியே
    தனிமைக் குடிலில் அடைபட்ட
    வனிதாவுக்கு மரணம்
    பாம்பு கடித்து!
    நடந்த மெய்க்கதை இது!
    எச்சரிக்கை
    இப்போது ஆணுக்கு!
    உடல் உறவுத் தடுப்பை
    ஏற்றுக்கொள்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 266

    படக்கவிதைப் போட்டி – 266

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 265இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பளிச்சென்று முகங்காட்டும் செயற்கை மலரை நுட்பமாய்ப் படமெடுத்திருப்பவர் திருமிகு. வனிலா பாலாஜி. படக்கவிதைப் போட்டிக்குத் தகுந்த படமிது என்று இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சொற்பமே வாழ்நாள் எனினும் மணம் பரப்பும் நற்குணத்தை மலர்கள் விடுவதில்லை. மலரின் குணம் மானுடர்க்கிருந்தால் வையம் சிறக்காதோ?

    இந்த மலருக்கு நம் கவிஞர்கள் தீட்டவிருக்கும் எழுத்தோவியங்களைக் காணும் ஆவலில் அவர்களை அழைக்கின்றேன் அன்போடு!

    *****

    ”பூவே! நீ பெண்ணின் தலைக்குப் போனாலும் சரி, உயிரற்ற சிலைக்குப் போனாலும் சரி புன்னகைக்க மறுப்பதில்லை. மனிதா பூவிடம் கற்பாய் இப்பாடத்தை!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    புன்னகை…

    காட்டுப் பூவின் சிரிப்பினிலே
    காணும் பொருளே வேறுவேறே,
    வீட்டுப் பெண்ணின் தலையதிலோ
    விதியே முடிந்த பிணத்தினிலோ,
    போட்டுக் கழற்றும் சிலையினிலோ
    போவ தெங்கோ தெரியவில்லை,
    காட்டும் மாறாப் புன்னகையே
    கற்பாய் மனிதா பூவிடமே…!

    *****

    ”புத்தம்புது மலரென்று உன்னைப் புகைப்படமெடுத்து வலைத்தளங்களில் போட்டுவிட்டால் தேன்தேடும் வண்டு உன்னை நாடிவரும் என்று சிரிக்கிறாயோ?” என வெண்பூவிடம் வினாத்தொடுக்கின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

    ஒரு மொட்டின் சிரிப்பூ…

    புத்தம் புது மலரென்று
    புகைப்படக்காரர்
    புகைப்படமெடுத்து
    வலைத் தளங்களில்
    போட்டு விட்டால்
    தேனைத் தேடும் வண்டு
    தேடி வரும் நம்மையென்று
    மொட்டுக்களின் கூட்டத்திலே
    முந்திக் கொண்டு
    மொட்டு விரித்துச் சிரிக்கின்றாயோ
    வெண் பூவே!
    நீ கெட்டிக்காரி தான்!

    *****

    ”கண் படுமென்று ’மை’யால் திருஷ்டிப்பொட்டு வைப்பதுதானே வழக்கம்? ஆனால் இந்த நிழற்பட நிபுணரோ பூவை வைத்திருக்கிறாரே” என்று வியப்போடு கேட்டுவிட்டு, இவ் வெள்ளைப்பூவின் இயல்புகளை விண்டுரைக்கிறார் திருமிகு. சோமசுந்தரி.

    கண்படுமென்று
    கண் ‘மை’ கொண்டு
    திருஷ்டிப் பொட்டு
    வைப்பது தானே வழக்கம்?
    தான் பிடித்த புகைப்படத்திற்குக்
    கண்படுமென்று
    வனிலா பாலாஜி
    ஒரு அழகிய பூவை
    வைத்தது அதிசயமே!
    இந்த வெள்ளைப் பூவானது
    சூதும் வாதும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “வெள்ளந்திப்பூ”
    சண்டையும் பூசலும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “சமரசப்பூ”
    ஏற்றமும் தாழ்வும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “சமத்துவப்பூ”
    தூசும் மாசும்
    நிறைந்த பூமியிலே
    பூத்திட்ட “தூய்மைப்பூ”

    *****
    ”மலர்களைக் காணக் காணக் கோடியின்பம்; மாயாஜாலம் செய்யும் பூக் கூட்டங்கள் நம் மனநாட்டங்கள்!” என்று மலர்களை எண்ணிப் பூரிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    விண்கற்களாய்த் தெரிகிறதே
    இந்த மலர் வெளிர்நிறத்தில்
    ஆயிரமாயிரம் வண்ணங்கள்
    இந்த மலர்களின் வகையினிலே

    ஒவ்வொன்றும் ஓர் அழகு
    ஒத்துப் போகும் அதன் நிறத்தோடே
    வாசமுண்டு வாசமில்லை
    வகையறாக்கள் வெவ்வேறே

    தவழ்ந்து வரும் தென்றலில்
    வாசமிகு வண்ண மலர்கள்
    மனதை வருடும் மாயத்தைச்
    செய்யும் பணியே அதீதம்

    காலை மாலை நேரமில்லை
    காணக்காணக் கோடியின்பம்
    மாயஜாலம் செய்கின்ற
    பூக்கூட்டங்களே நம்மன நாட்டங்களே!!

    *****

    ”மலரே! உன்னை வலிக்காமல் பறிக்க என் விரல்கள் காத்துக்கொண்டிருக்க, உன் ஒருநாள் வாசத்துக்குக் குடையாகிறதே அந்த நிலவு!” என்று சுவையாகக் கவிதை படைத்திருக்கிறார் திருமிகு. கி. அனிதா.    

    நீ என்று மலர்வாய் என உனக்கு வலி தெரியாமல்
    பறிக்கக் காத்து கொண்டிருக்கும் என் கை விரல்…
    நீ மலரும் நேரம் சூரியன் மறைகின்றான்…
    நீ பரப்பிய வாசனை அறிந்து பட்டாம்பூச்சி உன்னைச் சுற்றும் …
    நீ ஒருநாள் மட்டுமே மண்ணில் வாசம் செய்ய
    நிலவு குடையாகிறதே.!!!….

    *****

    பளீரெனச் சிரிக்கும் மணமிலா இச் செயற்கை மலருக்கும் தம் அழகிய கவிதைகளால் மணமூட்டியிருக்கின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருகின்றது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

    மொட்டு மலரட்டும்!

    கிட்டிய நாளையெல்லாம்
    எட்டிக்காய் என்றெண்ணி
    வெட்டியாய்க் கழித்து – ஞானப்
    பட்டினியில் வாழ்ந்திருப்போம்…

    ஒரு நாளில் கருவுற்று
    மறுநாளில் சருகாகி
    உயிர்நீங்கி மறைந்தாலும்
    வாட்டம் முகம் காட்டவில்லை…

    வண்டுவந்து தீண்டிடுமோ
    மகரந்தம் சேர்ந்திடுமோ
    விருட்ச விதை விளைந்திடுமோ
    என்றெண்ணி வாழ்வதில்லை…

    புவியெங்கும் மணம்வீசி
    அமிழ்தத் தேன் கொடுத்து
    மகிழ்ச்சிப் புன்னகை உயிர்ப்பித்து
    மலர்ந்திருக்க மறப்பதில்லை…

    மனவாட்டம் தனை விடுத்து
    மனிதநேயம் தனை வளர்த்து
    வாழ்வதனின் பலன் வளர்க்க – நம்
    மனமொட்டு மலரட்டும்!

    ”ஒருநாள் வாழ்க்கைதான் என்றபோதும் மலர்கள் வாட்டமடைவதில்லை; புவியெங்கும் மணம்வீசிப் புன்னகைக்க மறப்பதில்லை. ஆதலால் மனவாட்டம் விடுத்து மனிதநேயத்தோடு வாழ நம் மனமொட்டு மலரட்டும்!” என்ற உயர்ந்த சிந்தனையைக் கவிதையில் சிறப்பாய்ச் சொல்லியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 3

    -மேகலா இராமமூர்த்தி

    ஒரு நாடு மேன்மையுற அந்நாட்டு மக்கள் புலனொழுக்கம் மிக்கவர்களாய் இருத்தல் இன்றியமையாதது என்பதைக் காப்பியத்தின் தொடக்கத்திலேயே வலியுறுத்திய கம்பர், அடுத்து அந்நாட்டை ஆளுகின்ற மன்னன் எவ்வாறிருக்கவேண்டும் என்பதையும் கோசலநாட்டு மன்னனான தயரதனை வைத்து விளக்குகின்றார்.

    தாய்ஒக்கும் அன்பில் தவம் ஒக்கும் நலம் பயப்பில்
    சேய்ஒக்கும் முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
    நோய்ஒக்கும் என்னின் மருந்துஒக்கும் நுணங்கு கேள்வி
    ஆயப்புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் அன்னான்.
    (கம்ப: அரசியற் படலம் – 171)

    தயரதன் குடிமக்களிடம் அன்புகாட்டுவதில் தாயைப் போன்றவன். மக்களுக்கு வேண்டிய நன்மைகளையெல்லாம் அளிப்பதில் தவம் போன்றவன் என்று அவன் பண்புகளை விவரிக்கத் தொடங்குகின்றார் கம்பர்.

    தவத்தைச் செய்வோரின் நோக்கமே ஏதேனுமொன்றைப் பெறவேண்டும் என்பதே. அதனால்தான் வள்ளுவப் பேராசானும்,

    ”வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்”
    (265) என்று அதன் இயல்பை விளம்புவார்.

    தயரதனும் வேண்டியதைத் தரும் தவத்தை ஒத்தவனாக மக்களுக்கு விளங்கியிருக்கின்றான். அடுத்து அவன் சேயைப் போன்றவன் என்கிறார் கம்பர். மக்கள் பிள்ளைகளைப் பெறுவதன் நோக்கம், தமக்குத் துன்பம்வந்த காலத்தில் அவர்கள் உதவுவார்கள்; முதுமைக் காலத்தில் அவர்கள் தம்மை அரவணைப்பார்கள் என்பதே!

    சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
    மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடி – 197)

    கறையான்களால் அரிக்கப்பட்ட (முதிய) ஆலமரத்தை அதன் விழுது வீழாது தாங்குவதுபோல், முதுமைவந்து குதலைமை தோன்றிவிட்ட தந்தையைப் புதல்வன் தாங்கினால் தந்தையின் துயரம் மறையும் என்று நாலடியார் அறிவுறுத்தியிருப்பது ஈண்டு எண்ணிப்பார்க்கத் தக்கது.

    அப்படிப்பட்ட நன்மகனாய்த் தயரதனும் தன் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு இருந்திருக்கின்றான்.

    அடுத்து, மக்களுக்கு ஏதேனும் நோய் எனில் அதனைத் தீர்க்கும் மருந்தாகத் தயரதன் இருந்தான் என்கிறார் கம்பர். எனவே மக்களுக்குச் சங்கடங்கள் நேரும் காலத்தில் ஓர் அரசனானவன் அதற்குத் தீர்வாக இருக்கவேண்டுமே தவிர தானே சங்கடத்தைத் தருபவனாக – சிக்கல்களை உருவாக்குபவனாக இருக்கக்கூடாது என்பதையும் இதன்மூலம் நாம் உய்த்துணரமுடிகின்றது. இதனை இந்நாளைய ஆட்சியாளர்களும் உளங்கொள வேண்டும். அதுபோல் அரசனென்பவன் நுண்ணிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர்க்கு உதவும் அறிவுபோன்றிருக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றார் கவிச்சக்கரவர்த்தி.

    எனவே, அரசப்பதவி என்பது மரபுவழியாக வருவது; அப்பதவியில் அமர்வதற்கு அரசமரபில் உதித்தவனாக இருத்தலே போதுமானது என்ற நடைமுறை விதிகளைத் தாண்டி, அரசனென்பவன் அப்பதவியை வகித்தற்குரிய தகுதியும் திறனும் படைத்தவனாகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத்தரக்கூடிய அனைத்து உயர்குணங்களும் கொண்டவனாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயத்தைச் சூரியகுலத் தோன்றலான தயரதன்வழி நமக்கு அறியத்தருகின்றார் கம்பர்.

    நாட்டு மக்களைத் தயரதன் எப்படிப் பாதுகாத்தான் என்பதை இன்னொரு பாடலின் வழியாக நமக்குத் தெளிவாக்குகின்றது இராமகாதை.

    வயிரம் முதலிய அணிகலன்களை அணிந்தவனும், சிங்கம்போன்ற ஆற்றலுடையவனுமான தயரதன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர்போல் காத்துவரும் இயல்பினைக் கொண்டிருத்தலால், குற்றமற்ற இவ்வுலகின்கண் உள்ள இயங்குகின்ற, இயங்காது நிலையாயிருக்கின்ற அனைத்து உயிர்களும் உறைகின்ற உடம்பாயினான் என்கிறது இப்பாடல்.

    வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான்
    உயிர்எலாம் தன்உயிர் ஒக்க ஓம்பலால்
    செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ்
    உயிர்எலாம் உறைவதுஓர் உடம்பு ஆயினான்.
    (கம்ப: அரசியற் படலம் – 177)

    இங்கே அரசனை உயிர்களுக்கு உடம்பு போன்றவன் எனும் கம்பரின் சிந்தனை அதுவரைத் தமிழ்ப்புலவோர் சொல்லாத புதுமையான ஒன்று. ஆம்! ”மக்களுக்கு உணவாகும் நெல்லோ நீரோ அவர்கட்கு உயிராகா; அகன்ற உலகத்தையும் அதன்கண் வாழுகின்ற மக்களையும் காக்கின்ற அரசனே அவர்கட்கு உயிர்போன்றவன். எனவே அதனை உணர்ந்து அதற்குத்தக்க வகையில் நடத்தல் வேந்தற்குக் கடன்” என்கிறது மோசிகீரனாரின் புறநானூற்றுப் பாடல்.

    நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே
    மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்
    அதனால் யானுயி ரென்ப தறிகை
    வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
     (புறம் – 184)

    ஆனால் கம்பரோ அரசனே நாட்டுக்கு உயிர்போன்றவன் என்ற சங்கச் சிந்தனையை மறுக்கின்றார். நாட்டிலே மக்களே முதன்மையானவர்கள்; நாட்டுக்கு உயிர்போன்றவர்கள். அந்த உயிர்களைப் பாதுகாக்கின்ற உடல்போன்று – கவசம்போன்று இருப்பதுதான் ஒரு நல்ல அரசனுக்கு அழகு என்ற மாற்றுச்சிந்தனைக்கு அவர் தோற்றுவாய் செய்திருப்பது, மக்களை முதன்மைப்படுத்தும் மக்களாட்சித் தத்துவத்தில் அவருக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. அவ்வகையில் கி.பி. 9 அல்லது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் கம்பர் மக்களாட்சி குறித்து அப்போதே சிந்தித்த முன்னோடிச் சிந்தனையாளராகக் காட்சியளிக்கின்றார்.

    மக்களைத் தாயாகவும் சேயாகவும் காத்துவந்த தயரத மன்னனுக்கு நெடுங்காலம் மக்கட்பேறில்லை. தவமாய்த் தவமிருந்து அவன்பெற்ற புதல்வர்கள் இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன் ஆகிய நால்வர்.

    தம்முடைய காப்பியத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிக் குவித்திருக்கும் கம்பர், தயரதனின் பிள்ளைகளைப் போற்றிப் பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் சிலவேனும் பாடியிருந்தால் காப்பியச்சுவை மேலும் கூடியிருக்கும். ஏனோ அவர் அதைச் செய்யவில்லை. தம்முடைய மகன் அம்பிகாபதியை அகாலத்தில் பறிகொடுத்த துக்கமே கம்பரைப் பிள்ளைத்தமிழ் பாடவியலாத மனநிலைக்குத் தள்ளிவிட்டது என்பர் சிலர். அதன் உண்மைத்தன்மையை அறியக்கூடவில்லை!

    தயரதப் புதல்வர்கள் நால்வருமே குணத்திலும் வீரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். அதிலும் மூத்தவனான இராமன் மக்கள் கொண்டாடும் கல்யாண குணங்கள் பலவும் கொண்டவனாய்த் திகழ்ந்தான்.

    ஒருநாள் தயரதனின் அவைக்கு வந்த விசுவாமித்திர முனிவர்,

    ”தயரதா! காட்டில் நான் செய்யவிருக்கும் தவ வேள்விக்கு அரக்கர்கள் பெரும் இடையூறு செய்யக் காத்திருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து என் வேள்வியைக் காத்துத்தர நின் புதல்வர்களில் கரிய செம்மல் ஒருவனைத் தருதி!” என்று கேட்கின்றார். கரியசெம்மல் என்றதுமே அவர் இராமனைத்தான் கேட்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட தயரதன் பெருங் கலக்கம் அடைகின்றான்.

    அப்போது அவனடைந்த துயரத்தை,

    எண்இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
       மருமத்தின் எறிவேல் பாய்ந்த
    புண்ணில் ஆம்பெரும் புழையில் கனல் நுழைந்தா
       லெனச் செவியில் புகுதலோடும்
    உள்நிலாவிய துயரம் பிடித்து உந்த
       ஆர்உயிர் நின்று ஊசலாட
    கண்இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
       கடுந் துயரம் கால வேலான்.  (கம்ப: கையடைப் படலம் – 328) 

    என்கிறார் கம்பர்.

    எண்ணருந் தவங்களை மேற்கொண்டவரான விசுவாமித்திரர் சொன்ன இந்தச் சொற்களானது, மார்பின்மேல் எறிந்த வேல்பாய்ந்த புண்ணாகிய புழையிலே, கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போலத் தயரதன் காதுகளில் புகுந்தது. அப்போது அவன் உள்ளத்திலே நிலைத்திருந்த துயரமானது உயிரை வெளியே தள்ள, அவனுடைய ஆருயிர் ஊசலாட, கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தான் எனக் கூறும்படித் தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினால் வருந்தினான் என்பது கம்பர் தீ(கா)ட்டும் தயரதனின் உளச்சித்திரம்.

    இங்கே இரண்டு உவமைகளைக் கையாளுகின்றார் கம்பர். வேல்பாய்ந்து குழியாகிப்போன புண்ணிலே தீ நுழைந்தது போல என்பது அவற்றில் முதலாவது. நாம் இக்காலத்தில் ”வெந்த புண்ணில் வேல்பாய்ந்தது போல” என்று சொல்வதைத்தான் ”வேல்பாய்ந்த புண்ணிலே தீ நுழைந்தது போல” என்று மாற்றிச் சொல்லியிருக்கின்றார் கம்பர் எனக் கொள்ளலாம்.

    அடுத்து, ”கண் இலான் பெற்றிழந்தான்” எனும் அரிய உவமை. கண்கள் இல்லாதவன் காலம் முழுவதுமே கண்ணில்லாமல் – பார்வையில்லாமல் இருந்துவிட்டால் பார்வையின் பயன் என்னவென்றே அவன் அறியாதிருந்துவிடுவான். ஆனால், அவனுக்கு இடையில் கண்பார்வை கிடைத்துவிட்டால் அவன் அந்தப் பார்வையின் துணையோடு பல்வேறு நற்காட்சிகளைக் காணும் பேறுபெற்றுப் பார்வையின் அருமையை அறிந்தவனாகிவிடுகின்றான். அந்தச் சமயத்தில் திடீரென்று மீண்டும் அவன் பார்வை பறிக்கப்படுவதென்பது எத்தகைய கொடுமை?

    அதுபோல்தான் நெடுங்காலம் மகப்பேறின்றி வாடிய தயரதன், பின்னர்ப் புதல்வர்களைப் பெற்று, இப்போது மீண்டும் முனிவரால் அவர்களை இழந்துவிடுவோமோ என்று அஞ்சிய நிலை இருந்தது என்கிறார் உவமைகளைப் படைப்பதில் ஒப்பற்றவரான கம்பநாடர்.

    அந்த வேதனையோடு முனிவரை நோக்கிய தயரதன், ”ஐயா! இராமன் சிறுவன்! அரக்கரை அழிக்கும் பணியோ பெரிது; அத்தோடு கடிது. ஆதலால் அப்பணியை முடித்துத்தர நானே வருகின்றேன்” என்கிறான். முனிவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. சீற்றத்தோடு தம் ஆசனத்திலிருந்து எழுகின்றார். அப்போது தயரதனைச் சமாதானப்படுத்தி இராமனை விசுவாமித்திர முனிவரோடு அனுப்பிவைக்க உடன்படச் செய்கின்றார் தயரதனின் குலகுருவும் ஆசானுமான வசிட்டர்.

    அதைத்தொடர்ந்து இராமனும் அவனைப் பிரியாத இளவலான இலக்குவனும் விசுவாமித்திர முனிவரோடு காட்டுக்குப் புறப்படுகின்றனர் தயரதன் சம்மதத்தோடு!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

     

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

    தி. இரா. மீனா

    மும்மடிக்காரியேந்திர

    மும்முடிக்காரி என்ற பெயரால் இவர் அரசராக இருந்திருக்கலாமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ’மகாகன தொட்டதேசிகார்ய குரு பிரபுவே’ என்பது இவரது முத்திரையாகும்.

     1. “பக்தியெனும் பாலை மனதுள் உறையவைத்து
    அதிலிருந்த கெட்டியான தயிரை
    உடலென்னும் பாத்திரத்தில் நிரப்பி
    தத்துவமென்னும் மத்தால் கடைந்து
    இலிங்கமென்னும் வெண்ணெய் தெரிய அதையெடுத்து
    ஞானக் கனலில் பக்குவப்படுத்தி
    இயற்கை மணத்துள் விளங்கும் நெய்யைப் பருகும்
    ஆற்றலால் ஆன்மா இலிங்கமானது பாராய்
    மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

    2. “பகலிருக்க இருளுண்டோ?
    இருளிருக்கப் பகலுண்டோ?
    விழித்திருக்க உறக்கமுண்டோ?
    துன்பமிருக்க இன்பமுண்டோ?
    தாங்கள் காட்சியளிக்க நான் காட்சியளிப்பேனோ?
    நான் காட்சிதர தாங்கள் காட்சி தருவீரோ?
    நீங்களிருக்க நானில்லை நானிருக்கத் தாங்களில்லை
    மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

    மெரேமிண்டய்யா

    ‘ஐகட்ட தூரராமேஸ்வர இலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “அங்கத்திலிருந்து அங்கை வந்தாய்
    அங்கை இருந்து அகமேன் வாராய் ஐயனே ?
    நீ கேட்டு நான் பாடேன் செவி வாய் வலியன்றோ ஐயனே
    எக்காலும் உனக்கு இறப்பில்லை எனக்கும் பிறப்பில்லை
    அடங்காது உன்னுடல் சுருங்காது என்மனம்
    செயலென்னும் பாசியில் சிக்கி
    உயர்வறியாமல் தடுமாறுகிறேன்
    ஐகடத்துக்குப் புகலிடம் சொல்வாய்
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமே“

    2. “உணவாசைக்கு ஒழுக்கம் கெட்டு
    ஐம்புலனாசைக்குப் பற்றினை விட்டு
    அனைவரின் நட்பால் ஏமாற்றம் தொட்ட
    வினைப்பயனின் உடலுடையோர்க்குண்டோ உயர்பக்தி
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கம் அறியும் வரையில்?”

     3. “சத்திரியன் சூத்திரன் வைசியன் பிராமணனெனும்
    தொழில் எதுவானாலும்
    ஆற்றுவதில் பொய்யாமை வேண்டும்
    சிவனின் எழுத்தது, பசுபதியின் நிலையது
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமது.”

    4. “தன்னைத் தானறியின் தன்னறிவே குரு
    தானே இலிங்கம், தன்னுறுதியே ஜங்கமம்
    இவ்வகை மூன்றும் ஒன்றாயின்
    ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமாம்.”

    மேதர கேதய்யா:

    கூடை பின்னுவது இவரது காயகம். ’கவரேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    1. “பக்தனுக்கு இன்பமும் ஒன்றே,துன்பமும் ஒன்றே,
    வறுமை செல்வம் இரண்டும் ஒன்றே,
    நினைக்காதிருந்தால் சரணருக்கு அதுவே கேடு
    ஜங்கமனென உறுதியெடுத்து,
    தன்னெதிரில் பிறரை அழிப்பதற்குத்
    தன்னுடலைக் காப்பாற்றினால்
    அன்றே தீர்த்தப் பிரசாதத்திற்கு தூரம், கவரேஸ்வரனே”

    2.  “முதலில்லாமல் இலாபமுண்டோ?
    எதிர்பார்ப்பின்றித் தேர்வுண்டோ?
    குருவின்றி இலிங்கமுண்டோ?
    இப்படி,பொய்யான வாக்குறுதிக்கு வெட்கினேன் கவரேஸ்வரனே“

    மைத்துன ராமய்யா

    ஆந்திர மாநிலதைச் சேர்ந்த இவர் அப்பாவியான இயல்புடையவர். கல்யாண் நகர் வந்து சரணர்களோடு கலந்து தன் அறியாமையால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். சிவ -பார்வதியைத் தன் அக்கா மாமனாக எண்ணி ’மைத்துனன் ராமையா’ என்று தன்னை அழைத்துக் கொண்டதாகச் செய்தியுண்டு. ’மகாலிங்க சென்னராம’ இவரது முத்திரையாகும்.

    1. “சரணர் வரவுகண்டு
    சிரம்தாழ்த்திக் கரம் குவிக்கவேண்டும்
    சரணமெனில் மனம் ஒப்பாது
    அன்றைய இன்றைய பயன், இலாபம், பக்தியறியாமல்
    சரணமெனில் உள்ளம் ஒப்பாது.
    செல்வரென நம்பியும் நம்ப இயலாமலும்
    மகாலிங்க சென்னராமேஸ்வரன் என்னைப் பார்த்துநகைக்கிறான்.”

    மோளிகே மகாதேவி

    காஷ்மீர் அரசபரம்பரையைச் சேர்ந்த மாரய்யா மோளிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச்சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்றவரை சிவசாரணர்களுக்கு உணவுபடைத்து அன்புகாட்டி வாழ்ந்தனர். ‘என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா’ இவரது முத்திரையாகும்.

    1. “அம்பெய்தியவரை அறிவேன்
    எய்த அம்பு திரும்பும்படி செய்தவரையறியேன்
    வழிபாடு செய்தவரையறிவேன்
    வழிபாட்டு இலிங்கம் அங்கத்தில் ஊடுருவியதறியேன்
    சொல்லுக்குச் செயல்,செயலுக்குச் சொல்லெனும்
    இவ்விரண்டும் ஒன்றானவரையறியேன்
    இவ்விரண்டும் சித்தியடைந்து சித்தானந்தமானால்
    என்னய்யப் பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜூனன்
    ஞானச் செயலில் உறுதியுடையோனுக்கன்றி
    பிறருக்கு அருள்வதில்லை”

    2. “பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
    மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
    முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
    அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
    செயல்படுதலும் அறிவும் இணையானவை
    இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
    என்னையப்பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜுனா”

    [தொடரும்]

    Share
  • வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    வனப்பிரதேசம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    மாலை வேளை

    டௌனில் உள்ள மிகவும் நல்ல பேக்கரியிலிருந்து தனியாக செய்யச்சொல்லிச் தயாரிக்கப்பட்ட பெரிய கேக் நாலு மெழுகுவர்த்திகளுடன் மேசை மேல் இருந்தது.

    மின்னுகின்ற ரிப்பன்களும், பல வண்ணங்களிலும் வடிவங்களிலுமுள்ள பலூன்களும் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

    நாங்க எங்க பொண்ணோட பிறந்த நாளக்கொண்டாடறோம்.

    விருந்தினர் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் முன்கதவு சாத்தவில்லை. அறையின் பலூன்களையும், ரிப்பன்களையும் அசைத்துக்கொண்டு  இளம்காற்று மட்டும் அடிக்கடி வீசியது.

    வீடு சிறியதுதான். ஆனால் எங்க நாலுபேருக்கு வசிக்க இதைவிடப் பெரியவீடு தேவையில்ல. அலீனா வாழ்க்கையில் திருப்தியடைந்தாள். கிறிஸ்ஸேக்ரட், ஃபார்ட் ஸ்கூலில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான். ஸ்வீட்டி அதற்குப் பக்கத்தில் உள்ள கிண்டர்கார்டனில் படிக்கிறாள். அவர்களுடைய படிப்பை கவனித்துக்கொள்வது அலீனாதான். என்னோட வேலயெல்லாம் அவங்களக் கூட்டிட்டு டௌனுக்குப் போவதோ, பீச்சில் போய் உட்காருவதோ, சினிமாவுக்குக் கூட்டீட்டுப் போவதோதான். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் எனக்கு அதற்கு வாய்ப்பு கிடைக்கும். அன்றைக்கு நான் சீசன் டிக்கெட்டையும் எடுத்திட்டு இரயில் நிலையத்துக்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. அதற்காக வெயிலின் சூடு வரும்வரை படுத்து உறங்கவும் மாட்டேன். நாங்கள் குர்பானாவுக்காக பத்ராசனப் பள்ளிக்குப் போவோம். அது முடிந்தால் இறைச்சியோ மீனோ வாங்க டௌனுக்கு நான் மட்டும் போவேன். சாப்பாட்டுக்கப்பறம் நான் கொஞ்சநேரம் தூங்குவதும் ஞாயிற்றுக்கிழமைதான். ஞாயிற்றுக்கிழமையை நானும், அலீனாவும் மக்களும் ஒரே போல் விரும்புவோம். அன்று கடவுள் இக்குடும்பத்தை ஆசீர்வதிக்கவும் தூய்மைப்படுத்தவும் செய்வார்.

    இந்த வருடம் ஸ்வீட்டியின் பிறந்ததாள் ஞாயிற்றுக்கிழமையில் வந்தது ஒரு அதிர்ஷ்டம்தான். குர்பான முடிந்து நான் போய் ஒரு சேவல்வாத்தை வாங்கிவந்தேன். சைக்கிளில் மீன்கொண்டு வருகின்ற டொமினிக்கிடமிருந்து திருத மீனும் நெத்தலியும் வாங்கினோம். மீன்வறுவல் போலவே கூர்க்கையின் (கேரளாவில் சமைக்கப் பயன்படுத்தப்படும் கிழங்கு வகை) வறுவலும் எங்க அனைவருக்கும் பிடிக்கும். கூர்க்கையை தோல் களைந்து பாகப்படுத்தியது நானும் மக்களும்தான். அலீனா வாத்தையும், மீனையும் எங்களைத் தொடவிடவில்லை.

    உணவிற்கு முன்பாக அலீனா வைன் க்ளாஸ்களில் சிவப்பு திராட்சை ரசம் தந்தாள். வைன் டம்ளர்களை உயர்த்தி நாங்கள் இருவரும் பாணீய உபசாரம் செய்துகொண்டோம்.

    சாப்பிட்டு முடிச்சு நா கொஞ்சம் தல சாய்ச்சே. மக்கள் விளையாடீட்டிருந்தாங்க. அவங்ககிட்ட அலீனா வெளில எங்கயும் போகக்கூடாது என்றாள். பிறகு அவளும் மதிய தூக்க மயக்கத்திலாண்டாள். மயக்கத்திற்கிடையிலும் ஏதோ சில சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது.

    உறக்க மயக்கம் தீர்வதற்கு முன்பு பேக்கரி வேலைக்காரன் ஒருவன் பிறந்தநாள் கேக்கும் எடுத்துக்கொண்டு வந்தான்.

    மாலையானது.

    குழந்தைகள் மாலைப்பொழுதிற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

    அவர்கள் புதிய ஆடை அணிந்தனர். அவர்களுடைய விளையாட்டும் சிரிப்பும் வீட்டை முழுவதும் உற்சாகப்படுத்தியது. பலூனும் வண்ண நாடாவும் வைத்து அவர்களே அறையை அலங்கரித்தனர். நானும் அலீனாவும் அவங்களோட ஒவ்வொரு சலனங்களையும் ஒவ்வொரு விளையாட்டுகளையும் பார்த்து சந்தோஷப்பட்டோம்.

    மெழுகுவர்த்தி ஊதி அணைப்பதற்கும் ஸ்வீட்டிக்குப் பிறந்ததாள் வாழ்த்துகள் கேட்டு கேக் வெட்டுவதற்கான நேரம் நெருங்கியது. பிள்ளைகள் அதற்காகத் தயாராயினர். அலீனா மெழுகுவர்த்தி பத்த வைத்தாள். ஸ்வீட்டி அதற்கு நேராகக்குனிந்தாள்.

    என்னோட தொண்ட வரளுது, நெஞ்சு வலிக்குது. அதொரு கெட்டக்கனவாக இருக்கட்டுமென்று நிம்மதியடையலாம் என்று ஆசைப்பட்டு சுற்றும் முற்றும் பார்க்கும்போது காண்பது சிதறிக்கிடக்கின்ற கேக் துண்டுகள், உடைந்த பலூன்கள், விழுந்து கிடக்கின்ற  ரிப்பனுகள்… பிறகு ஏதோ துவம்ச மிருகத்தினுடையது போன்ற மணம்.

    வீட்டுக்குள்ள அவன் விரிச்சுப்புடிச்ச கத்தியை கையிலேந்தி பாய்ந்து வந்தான். கடுமையான ஒரு அலறல் முழங்கியது. என்ன பண்றதுன்னு தெரியாம நான் முழிச்சே அலீனா பயந்து நடுங்கிய மக்களைச் கட்டிப் பிடித்திருந்தாள்.

    “யா… ர… து?” ………………நான் விக்கி விக்கிக்கேட்டேன்.

    அவன் கத்தியை என் கழுத்தில் வைத்து அதன் நுனியை தொண்டைக்குழியில் ஆழ்த்தி நசுக்கினான். ரத்தமே வந்திருக்கும்.

    “பேசாம போய் இருக்கறப் பணத்த எடுத்திட்டு வா!”. அவன் மிரட்டினான். நான் உதவுவோரற்று பின்னால் நகர்ந்தேன். அவன் கத்தியை அலீனாவுக்கு நேராகப் பிடித்தான்.

    “செயினயும் கம்மலும் கழட்டு. இந்தக் கொழந்தையோடதயும்…”

    ஸ்வீட்டி காற்றில் ஆடும்  இலைபோல நடுங்கிக்கொண்டிருந்தாள்.

    “ம்ம்… சீக்கிரம்…”

    அவன் அவசரப்படுத்தினான்

    “மறுபடியும் வருவே………..”

    சுட்டெரிக்கின்ற ஒரு பார்வையை அலீனா மீது பதித்துவிட்ட அவன் சொன்னான். அவள் பயந்து வெளிறினாள். ஏதோ வதை செய்யும் விலங்கின் வாசத்தைப் போன்ற கடுமையான வாசத்தை அறையில் விட்டுவிட்டு அவன் வேகமாக வெளியில் நடந்தான்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)

    சேக்கிழார் பாடல் நயம் – 88 (கொண்டு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கொண்டு வந்து மனைப்புகுந்து  குலாவு பாதம் விளக்கியே
    மண்டு  காதலின்  ஆச  னத்திடை  வைத்த  ருச்சனை செய்தபின்
    உண்டி  நாலுவி  தத்தில்  ஆறுசு  வைத்தி   றத்தன   ஒப்பிலா
    அண்டர்  நாயகர்  தொண்டர் இச்சையின்  அமுது செய்ய அளித்துளார்

    உரை

    அவர்களைத் தமது மனைக்குள்ளே, அழைத்துக் கொண்டு வந்துபுகுந்து, குலவுகின்ற அவர்களது திருவடிகளை விளக்கி, மிகுந்த ஆசையினாலே ஆசனத்தில் எழுந்தருளுவித்து, அருச்சித்து, அதன்பின் நான்கு விதத்தில் இயன்ற ஆறுசுவை யுணவுகளையும், ஒப்பில்லாத சிவபெருமான் அடியவர்கள்  இச்சையில் அமுது செய்தருளுமாறு கொடுத்துள்ளார்.

    விளக்கம்

    ‘’கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே’’ என்ற அடி, அடியாரைத்தம் இல்லத்துக்கு  அழைத்துக் கொண்டு வந்து அவர்தம் திருப்பாதங்களை நீரிட்டு அலம்புதலைக் குறித்தது. இதனை  பாத்தியம் என்ற  வரவேற்பு  நிகழ்ச்சியாகும்.

    குலாவு பாதம் – மோட்ச சாதனமாகக்   கொண்டாடப்பெறுகின்ற பாதம்  விளங்குகின்ற பாதம் என்றலுமாம். இறைவனைப் பூசையில் எழுந்தருளச் செய்யும் போதும், அடியார்களுக்கு விருந்தளிக்கும் போதும்   பாத்தியம் அர்க்கியம் – ஆசமனம் – அருச்சனை முதலியன வழிபாட்டின் அங்கங்களைக் கடைப்பிடித்தல். இவை  சிவபூசைக்குரியவை  அடியார் பூசையாகிய மாகேசுவர பூசைக்குமாம்.இவை சோடசோபசார மென்பர். அடியார்க் கமுதளிக்கும் பூசையிற் பாதம் விளக்கும் நியதியும் அது காரணமாகப் பெற்றபேறும் திருப்பெண்ணாகடத்துக் கலிக்கம்ப நாயனார் சரிதத்திற் கூறப்பெறும்.

    இப்பாடலின் ‘’மண்டு காதலின்’’ என்ற தொடர், நூல்களில் விதித்தபடி இயற்றுவது என்றமட்டில் அமைந்துவிடாது மனத்திலே மிக்கெழுந்த ஆசையினாலே என்பதைக் குறித்தது.

    ‘’உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத்திறத்தினில் – நாலு  விதத்திலும் ஆறுசுவைத் திறத்திலும் இயன்ற உண்டி என்க. நாலு வித உண்டி – உட்கொள்ளும் வகைக்குத் தக்கவாறு உண்டி நான்கு வகையாகப் பிரிக்கப்படும். அவை – உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன என்பவையாம்.

    ஆறுசுவை – கைப்பு, புளிப்பு, இனிப்பு,துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்பவை. மருந்துநூல் முறைப்படி உடற்கூற்றின் பற்பல தாதுக்களின் சத்துக்களுக்கும் பலவேறு வகைச் சுவைகள் வேண்டப் பெறுவன என்பர். உடல் நலத்துக்கேற்ற உணவு வகைகளை அன்புடன் சமைத்து ஆசையுடன் இடுதல் வேண்டும்.

    ‘’ஒப்பில்லாத தொண்டர் இச்சையின்‘’ என்ற தொடர் ஒப்பில்லாத நாயகர் தொண்டர் எனவும், ஒப்பில்லாத   தொண்டர் எனவும்,  ஒப்பிலா இச்சை எனவும் கூட்டி  மூவகை  உரை  பெற்றது.

    தம்மிச்சையின்படி உணவிடாமல், தொண்டர்களின் விருப்பம், மனப் பக்குவம், மூப்பு ஆகியவற்றுக்கு  ஏற்ப,   அவர்கள்  தமது இச்சையின்படி அமுதுசெய்ய என்று பொருள். தொண்டர்களது இச்சையிலே நாயகர்நின்று விருந்தோம்பும் படி என்றலுமாம். நாயகரும் தொண்டரும் அமுதுசெய்ய என்றும்  பொருள் தரும். இச்சையின்படி அமுதுசெய்ய  அளித்தலாவது – அவ்வவரும் வேண்டியன வேண்டியவாறே பெற்றுண்ண அளித்தல். அளிந்துளார் – அன்புடன் கொடுத்து அவரன்புக்கு ஏற்ப  உளராயினார் என்றது குறிப்பு.

    இப்பாட்டால் அடியார்களை உபசரித்து மாகேசுவர பூசை  செய்யும் முறை கூறப்பெற்றது. முன்பாடலில் கூறிய ‘’ஈரமென் மதுரப்பதம் பரிவெய்த முன் உரைசெய்த பின்’’  செய்யவேண்டுவன இவை என்க. இன்றைக்கும் மாகேசுவர பூசைகளிலே இத்திருப்பாட்டினையே பெரும்பாலும் ஓதித் துதித்துப் பூசிக்கும் வழக்கமும் காண்க. இவ்வாறு பூசிக்கப்பெற்ற அடியார்களான மாகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதமும் அதன் பயனும்  அடுத்த பாடலில் கூறினார்.

    மல்கி எழுகின்ற சீரினைச் செய்யும் இப்பூசைக்குரியயாப்பாக ஆசிரியர் இப்பகுதியை எழுசீர் விருத்தத்தாற் பாடியருளிய அழகும் காண்க.

    Share
  • நாலடியார் நயம் – 40

    நாலடியார் நயம் – 40

    நாங்குநேரி வாசஸ்ரீ

    40. காம நுதலியல்

    பாடல் 391

    (தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது)

    முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; – வயங்கு ஓதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு..

    கடலலைகள் நில்லாமல் மோதும் நீண்ட
    கழிகளின் குளிர்கரையுடை அரசனே!
    கணவனுடன் புணராவிடின் பசலை படரும்
    காதல் சுவையற்றுப்போகும் ஊடிவருந்தாவிடின்,
    கூடிப்பின் ஊடுதலே காதல் நெறி.

    பாடல் 392

    தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
    விம்ம முயங்கும் துணையில்லார்க்கு – இம்மெனப்
    பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
    நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

    தம்மால் விரும்பப்பட்ட தலைவரின் மாலை
    தரித்த அழகிய மார்பைப் பூரிக்கத் தழுவும் அத்
    தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, ‘இம்’ எனும்
    தொனியுடன் மேகம் நீரைப் பொழிய
    திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை
    தீய சாப்பறையை ஒத்திருந்தது.

    பாடல் 393

    (தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.)

    கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
    மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
    கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
    இம்மாலை என்செய்வ தென்று.

    வருந்தி வேலைசெய்யும் கம்மாளரும்
    வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து
    வைக்கும் மயக்கம் தரும் மாலையில் மலர்களை
    வகையாய் ஆய்ந்தெடுத்து மாலையாய்த் தொடுத்து
    வைத்து தலைவன் இல்லா மகளிர்க்கு இம்மாலை
    வழங்கும் பயன்தான் என்ன? எனக் கலங்கி அழுதாள்.

    பாடல் 394

    (வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது)

    செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
    மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் – மெல்விரலின்
    நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
    தோள்வைத்து அணைமேற் கிடந்து.

    சூரியன் மறையும் மாலை நேரம் கண்டு வருந்தி
    செவ்வரி பரந்த கண்களின் நீரை மெல்விரலால்
    எடுத்தெறிந்து விம்மி அழுது தன் மெல்விரலால்
    எமைப் பிரிந்த நாட்களைக் கணக்கிட்டுப்
    படுக்கையில் தன் தோளையே தலையணையாய் வைத்துப்
    படுத்து நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ?

    பாடல் 395

    (தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது)

    கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
    பின்சென்றது அம்ம சிறுசிரல்; – பின்சென்றும்
    ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
    கோட்டிய வில்வாக்கு அறிந்து.

    எம் தலைவியின் கண்களைக் கயல் மீனென
    எண்ணிப் பின்தொடர்ந்த சிறிய மீன்கொத்தி
    வகையாய் ஊக்கத்துடன் முயன்றும் ஒளிரும்புருவத்தை
    வில்லின் வளைவென எண்ணியதால் கொத்தாமல்
    விட்டுச் சென்றது அவ்விடம் நீங்கி.

    பாடல் 396

    (மகளைப் போக்கிய தாய் இரங்கியது)

    அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
    பரற்கானம் ஆற்றின கொல்லோ; – அரக்கார்ந்த
    பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
    அஞ்சிப் பின்வாங்கும் அடி.

    செவ்வாம்பல் போலும் வாயும் அழகிய இடையுமுடைச்
    சிறு மகள் செம்பஞ்சுக்குழம்பைப் பாதத்தில் பஞ்சினால்
    தடவினும் மெல்ல எனச் சொல்லி பின்னுக்கு இழுப்பாள்
    அப்பாதங்கள் பரற்கற்கள் நிறை பாலை வழியின்
    ஆறாக்கொடுமையை எவ்வாறு தாங்கும்?

    பாடல் 397

    (தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.)

    ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
    மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
    மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
    கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து..

    ஓலையில் எழுதும் கணக்கரின் ஓசை
    ஒழியும் மாலை நேரம் தலைவன் பிரிதலை
    நினைத்து மாலையைக் கழற்றி வீசியெறிந்து
    நல்லழகிய கொங்கைகளில் பூசிய சந்தன
    நறுங்குழம்பை உதிர்த்துத் துன்புற்று அழுதாள்.

    பாடல் 398

    (உடன்போக்குப் பொருந்தின தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

    கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
    நடக்கவும் வல்லையோ என்றி; – சுடர்த்தொடீஇ
    பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
    கற்றான் அஃதூரும் ஆறு.

    ஒளிவீசும் வளையல் அணிந்தவளே!
    கடந்து போவதற்கு அரிய பாலை வழியில்
    காளையொத்த நின் காதலனுடன் நாளை நடந்து
    கடக்கும் ஆற்றல் உடையாயோ? எனக்
    கேட்கின்றாயோ? ஒருவன் குதிரையைப் பெறும்
    பொழுதே அதில் ஏறிச்செல்லும் முறையையும்
    பயில்பவனாவான் எனவே காதலனைப்
    பின் தொடர்தல் அரிதன்று.

    பாடல் 399

    (இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது)

    முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
    இலக்கணம் யாதும் அறியேன் – கலைக்கணம்
    வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
    பூம்பாவை செய்த குறி.

    முலைக்காம்பும் முத்துமாலையும் உடல்
    முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன்
    காரணம் யாதையும் அப்போது யான் அறியேன்
    காதலனுடன் மான்கூட்டம் புலிக்கு அஞ்சும்
    பாலை வழியில் எனைப் பிரிந்து செல்லத்தான்
    பாசமாய்த் தழுவிக்கொண்டாளோ?

    பாடல் 400

    (தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது)

    கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என்ஈன்ற யாயும் பிழைத்ததென் – பொன்னீன்ற
    கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி.

    மன்மதனை முழுதும் எறிக்காது விட்ட
    முக்கண்ணனாம் சிவனும் தன்கூட்டில்
    பொரித்த குயில்குஞ்சைக் கொத்தாமல்
    பாதுகாப்பாய் வளர்த்த காகமும்
    சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த
    சர்ப்பமும் தன்னைப் பெற்றபோதே
    கொல்லாது விடுத்த தன்தாயும் ஒரு
    குற்றமும் செய்யவில்லை, எனக்குக்
    குற்றம் செய்தது பொருள் தேடத்
    தலைவன் பிரிந்த வழியே.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)

    ச. கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ஒரே ஒரு பாடல் காட்சியில் நேரடியாகத் தோழியின் முன்னர் நின்று அவள் பேச்சைக் கேட்பதன் மூலம்; உழவன் சிறுபாத்திரம் என்ற தகுதியைப் பெறுகிறான். இடப்பின்புலத்திற்குத் துணைசெய்யு முகத்தான் உழவனும் அவனது செயல்களும் காட்சிப்படுத்தப்படும் பாடல்களைத் தவிர்த்து சொல்லாடலில் இடம்பெறும் உழவனைச் சிறுபாத்திரம் என்று கொள்வதே ஏற்புடைத்து ஆகிறது.

    நற்றிணைப் பாடற் செய்தி

    தலைவி இற்செறிக்கப் படுகிறாள். இது தலைவனுக்குத் தெரியாது. அவள் உழுவிக்கும் வேளாளன் மகள். அவன் தலைவியைச் சந்திக்கப் பகற்குறியில் வயல் வெளியின் சிறைப்புறமாக வந்து நிற்கிறான். தோழி அவனிடம் நேரடியாக நிலவரத்தைச் சொல்ல முடியாது. எனவே நாற்று நட வந்திருக்கும் உழவனிடம் பேசித் தலைவனுக்குப் புரிய வைக்கிறாள். உழவன் கழிக்கவிருக்கும் ‘நெய்தல், கோரை முதலியவற்றைத் தூர எறியாதே; அவை தாம் தலைவிக்கு வளையாகவும், ஆடையாகவும் பயன்படக் கூடியன’ என்று சொல்வதன் மூலம்; ‘இனித் தலைவி வீட்டை விட்டு வேறெங்கும் செல்ல இயலாது; இவற்றை அவளுக்குக் கொண்டு போய்த்தான் கொடுக்க வேண்டும்’ என்று பொருள்படும்படிக் கூறுகிறாள். தோழி சொல்வதை எல்லாம் உழவன் கேட்கிறான்; ஆனால் பதிலுரைக்கும் உரிமையைப் புலனெறி வழக்கு தரவில்லை.

    விடியுமுன்னர் உழவன் மனைவியரோடு வயலுக்குக் கிளம்புகிறான்.   கிளம்பும் முன்னர் வயிறார உண்கிறான். ஏனெனில் அன்று அவன் நாற்று நடவேண்டும். வேலையைத் தொடங்கினால் வெயிலேறும் வரை ஓய்விற்கும் உணவிற்கும் வழியில்லை.

    “மலைகண் டன்ன நிலைபுணர் நிவப்பின்
    பெருநீர் பல்கூட் டெருமை உழவ
    கண்படை பெறாது தண்புலர் விடியல்
    கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
    புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
    கவர்படு கையை கழும மாந்தி
    நீருறு செறுவில் நாறுமுடி அழுத்தநின்
    அடுநரோடு நீ சேறியாயின் வண்
    சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மில்
    மாயிருங் கூந்தல் மடந்தை
    ஆய்வளைக் கூட்டும் அணியுமார் அவையே“(பா- 60)

    எனப் பாடியுள்ளார் தூங்கலோரியார்.

    பாடலின் முதலடியில் இருப்பது உவமை. ‘மலை நிமிர்ந்து நின்றாற் போலத் தோன்றும் மிகுந்த நெல்லின் நாற்றுக்கட்டுக் குவியலை  நடவிருக்கும் உழவனே’ என்று அழைக்கிறாள்.

    பணிப்பளு காரணமாக அவனால் தூங்க இயலவில்லை என்பது மூன்றாம் அடியில் தொடர்கிறது. எனவே குளிர்ந்த காலைப் பொழுதில் எழுந்து; நீரில் ஊறிய நெல்லரிசிச் சோற்றைப்; பருத்த வரால்மீன் குழம்புச் சொட்டானத்தை ஊற்றிக் கைகளில் நீர் வழிய உண்டு; மீந்த நீராகாரத்தைக் குடித்து விட்டுத் தன் பெண்டிரோடு வயலில் நாற்றுநட வந்து சேர்ந்தான்.

    அவனை ‘எருமை உழவ’ என்று அழைப்பது அங்கதச்சுவைக்காக எனலாம். இங்கே நையாண்டிக்கு உரியவன் உழவன் அல்லன். அவன் எருமையை உடையவன்; அவ்வளவே. உழவனிடம் பேசுவது போலத் தலைவனிடம் பேசுகிறாள் ஆதலால்; இவ்விளி தலைவனைக் குறிப்பாகச் சுட்டுகிறது. தலைவியை மணந்து கொள்வதில் அவன் மந்தமாக எருமை போலச் செயல்படுகிறான் என்று உணர்த்துகிறது.

    தோழியின் அடுத்த செய்தி; உழவன் எவ்வாறு உலக வாழ்வைத் துய்க்கிறான் என்பதாகும். பாடல் சுட்டும் அடுநர்; உழவனுக்காகச் சமைத்த அவனது மனைவியர். பாடுபடுவதற்காகக்; குளிர்ந்த காலைப் பொழுதில் வயலுக்குக் கிளம்பியவன்; வயிறு முட்ட முந்தைய நாளில் வைத்த மீன்குழம்பும் பழைய சோறும் உண்டு விட்டுக் கிளம்புகிறான். பாடலின் ஏழாவது அடியிலுள்ளது இறைச்சிப் பொருள். நடவுக்குத் தயாராக இருக்கும் நீர் நிறைந்த வயலில் நாற்று முடிச்சினை அழுந்த ஊன்றிச் சுறுசுறுப்புடன் உழவன் செயலாற்றுகிறான். ஆனால் தலைவன்  இன்னும் தலைவியை மணந்து கொள்ளவே இல்லை.

    இல்லறத்தின் இன்பத்தை முழுவீச்சில் அனுபவித்து நிறைவு 

    அடைபவனாக உழவன் காட்டப்படுகிறான். தென்தமிழகத்தில் இன்றும் நடைமுறையிலிருக்கும் ஒரு சமூக வழக்கம் இங்கு நினைவுகூரத் தக்கது. திருமணத்திற்கு முந்தையநாள் மாலை ‘உறுதி பேசும்’ சடங்கு முடிந்ததும்; மணமகனின் சகோதரி அல்லது குடும்பத்தின் மூத்த சுமங்கலி மணமகளை அழைத்துக்கொண்டு அடுப்படிக்குச் சென்று; அடுப்புமேட்டில் மண்ணைக் குழைத்துச் சிறிய ‘அடுப்பும் திண்ணையும்’ போட்டு வருவர். என்ன தான் பகலில் பாடுபட்டாலும் கணவனும் மனைவியும் பசியாற அடுப்பில் ஆக்கி  உண்டு; திண்ணையில் ஓய்வெடுக்கும் போது களைப்பு நீங்கி இன்பமாக இல்லறத்தை அனுபவிக்கலாம் என்பதே இதன் பொருள் என்பர். இங்கே உழவன் அதைத்தான் செய்யக் காண்கிறோம். அவன் நாவிற்கு ருசியைப் பொம்மலும் மிளிர்வையும் தருகின்றன. அவனுக்குப் பொங்கிப்போட மனைவியர் உள்ளனர். அவனது பசி நீங்கி வயிறு குளிர்கிறது. மகளிரோடு  அவன் அனுபவிக்கும் இல்லறசுகத்தை இறைச்சி கூறாமல் கூறுகிறது. தலைவனோ இன்னும் தலைவியைப் பெண் கேட்கக்கூட  இல்லை; நீ உலக வாழ்வைத் துய்க்க வேண்டுமெனின் உடன் வரைதல் வேண்டும் என்பது குறிப்பான அறிவுரை.

    இவ்வாறு உழவன் நிலையையும், தலைவன் நிலையையும் அழகுற முரண்படுத்திக் காட்டி; அங்கதத்துடன் இறைச்சிப் பொருளும் இணைய; உலகியலான வாழ்க்கைத் தத்துவத்தைத் தெளிவுறுத்தி; குறிப்பாகத் தலைவனைத் திருமணத்திற்குத் தூண்ட உழவனெனும் சிறுபாத்திரத்தைப் பயன்கொண்டிருப்பது பாடலின் சிறப்பு.

    முடிவுரை

    கூடல் நிமித்தமாகிய திருமணத்திற்குத் தலைவனைத் தூண்ட மருதநிலக் கருப்பொருளான உழவன் எனும் சிறுபாத்திரம் உதவி உள்ளது.

    Share
  • எளிய தீர்வுகள் மூன்று!

    எளிய தீர்வுகள் மூன்று!

    அண்ணாகண்ணன்

    சிந்தனையே மனிதனை உருவாக்கியது. சிக்கல்களை அவன் அணுகும் விதமே அவனை மேம்பட்டவனாக ஆக்கியது. தனது சிக்கல்களைத் தானே தீர்த்துக்கொள்ளும் வல்லமை அவனுக்கு உண்டு. இதோ இங்கே சிலர், தங்கள் புதிய யோசனைகளைச் செயல்படுத்தியுள்ளார்கள். நான் நேரில் கண்ட அந்த எளிய தீர்வுகளை இங்கே பாருங்கள்.

    தீர்வு – 1 | A simple idea – 1

    தீர்வு – 2 | A simple idea – 2

    தீர்வு – 3 | A simple idea – 3

     

    நீங்களும் இத்தகைய எளிய தீர்வுகளைக் கண்டதுண்டா? உங்களிடமும் இத்தகைய யோசனைகள் உண்டா? அவற்றைக் காணொலியாகப் பதிந்து நமக்கு அனுப்புங்கள். வல்லமையில் வெளியிடுவோம்.

    Image courtesy: https://www.maxpixels.net

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாலடியார் நயம் – 39

    நாலடியார் நயம் – 39

    நாங்குநேரி வாசஸ்ரீ

    39. கற்புடை மகளிர்

    பாடல் 381

    அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
    பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப்
    பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
    நறுநுதலாள் நன்மைத் துணை.

    பெறுதற்கரிய கற்பினையுடை இந்திராணியையொத்த
    பெரும்பெயர் பெற்ற மகளிரேயாயினும்
    தன்னைச் சேர நினையும் ஆசையால்
    தன்பின்னே ஆடவர் நில்லா முறையில்
    தம்மைக்காக்கும் நல்லொழுக்கமுடையாளே
    தம்கணவனுக்கு நல்மனைவி.

    பாடல் 382

    குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
    கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
    கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
    மாதர் மனைமாட்சி யாள்.

    குடத்துத் தண்ணீரைக் காய்ச்சிக்குடிக்கும்
    கொடும் வறுமை வரினும் பருகினால்
    கடல் நீரே வற்றுமளவு சுற்றத்தார் வரினும்
    கடமையாகிய குணத்தை ஒழுக்கமாகக்
    கொண்ட இன்மொழி பேசும் பெண்
    கொண்ட இல்வாழ்விற்க்கு மேலானவள்.

    பாடல் 383

    நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
    மேலாறு மேலுறை சோரினும் – மேலாய
    வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
    இல்லாள் அமர்ந்ததே இல்.

    சுவர்கள் இடிந்தமையால் நால்பக்கமும் வழியாகி
    சிறியதாகி எப்புறமும் கூரையின் மேலிருந்து
    மழைநீர் வீழினும் இல்லற நெறியில் வல்லவளாய்
    மேன்மைமிகு கற்புடன் ஊர்புகழத் திகழும்
    மனைவியுடை இல்லமே சிறந்த இல்..

    பாடல் 384

    கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
    உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; – உட்கி
    இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
    மடமொழி மாதராள் பெண்.

    அன்புடைக் கண்ணுக்கு இனியவளாய் கணவன்
    ஆசையுறுமாறு அலங்கரித்துக்கொள்பவளாய்
    அச்சம் உடையவளாய் ஊர்ப்பழிக்கு நாணுபவளாய்
    அன்புக்கணவனுடன் சமயமறிந்து ஊடல் கொண்டு
    அவன் மகிழுமாறு ஊடல்நீங்கி இன்பந்தரும்
    அக்கபடமில்லாப் பேச்சுக்களுடையவளே நற்குலப்பெண்.

    பாடல் 385

    எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
    அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; – எஞ்ஞான்றும்
    என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
    பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

    நாளும் எம் கணவர் எம் தோளைத் தழுவி
    நீங்கினும் முதல் நாளின் நாணம் போலவேயின்றும்
    நாணம் கொள்கின்றோம் என்றிருக்க பொருளாசையால்
    நாணமின்றிப் பலரின் மார்பைப் பொதுமகளிர் எப்படி
    நாடித் தழுவுகின்றனரோ?

    பாடல் 386

    ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
    வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; – தெள்ளிய
    ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
    நாணுடையாள் பெற்ற நலம்.

    நல்ல கொடையுள்ளம் கொண்டவனின் செல்வம்
    நுண்ணறிவாளன் கற்றகல்வி போல் பயன்
    நல்கும் எல்லோருக்கும்,  நாணமிகு பெண்ணின்
    நல்லழகோ தெளிந்த அறிவுடையோன் கைக்கூர்வாள்
    நெருங்குதற்கு அரியதுபோல் அரியதாம்.

    பாடல் 387

    கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
    ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; – ஒருங்கொவ்வா
    நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
    என்னையும் தோய வரும்.

    தாழ்ந்த கருங்கொள்ளையும் உயர் செங்கொள்ளையும்
    தராதரமின்றி பணத்துக்கு ஆறுமரக்காலென வாங்கினானொரு
    சிற்றூரான் அதுபோல் எம்மோடு ஒப்பில்லா அழகிய
    சிறு நெற்றியுடைப் பொதுமகளிரைத் தழுவிய மலைமார்பன்
    குளிக்காது என்னையும் தழுவ வருகின்றான்.
    (தூணி- நான்கு மரக்கால், பதக்கு-  இரண்டு மரக்கால், தூணிப் பதக்கு- ஆறு மரக்கால்)

    பாடல் 388

    கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
    அடிபைய இட்டொதுங்கிச் சென்று – துடியின்
    இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
    வலக்கண் அனையார்க்கு உரை.

    கொடிய சொற்களைக் கூறாதே பாணனே!
    காரணம் நாங்கள் தலைவனுக்கு உடுக்கையின்
    இடப்புறம்போல் பயனற்று உள்ளொம், அச்சொல்லை
    இங்கிருந்து விலகிச்சென்று உடுக்கையின் வலப்பக்கம்
    போலும் அவருக்குப் பயன்தரும் பொதுமகளிருக்குச் சொல்!

    பாடல் 389

    சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
    ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; – தீப்பறக்கத்
    தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
    நோக்கி இருந்தேனும் யான்.

    கோரைப்புல் பறித்த இடத்தில் நீர்சுரந்த
    குளிர்வயல்சூழ் ஊரிலுள்ள எம்தலைவன் மேல்
    ஈ பறந்தாலும் கண்டு வருந்தியவள் நான்
    இப்போது தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின்
    கொங்கைகள் மோதப்பெற்று சந்தனம்
    கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு
    கண்டு கொண்டிருப்பவளும் நானே.

    பாடல் 390

    அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
    பெரும்பொய் உரையாதி, பாண; – கரும்பின்
    கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
    இடைக்கண் அனையார்க்கு உரை.

    மலரும் அரும்புகள் நிறை
    மாலைகள் அணிந்த தலைவன்
    எமக்கு அருள்புரிவாரெனும் பொய்யை
    எப்போதும் சொல்லாதே பாணனே!
    நல்ல கரும்பின் கடைக் கணுக்களுக்கு
    நிகரானவர் யாம், ஆதலில் கரும்பின்
    இடைக்கணுக்களை ஒத்த பரத்தையிடம்
    இப்பேச்சைப் போய்ச் சொல்!

    Share
  • குறளின் கதிர்களாய்…(308)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(308)

    கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.

    – திருக்குறள் -925 (கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்...

    தன் கைப்பொருளைக்
    கொடுத்து வாங்கி மதுவைக்
    குடித்துத்
    தன்னுடலைத் தானறியா வகையில்
    தள்ளாடி விழும்நிலை யடைதல்,
    தன்னிலை மறந்து
    செய்வதறியார் செய்யும்
    அறிவற்ற செயலாம்…!

    குறும்பாவில்...

    கைப்பொருள் கொடுத்துவாங்கிக்
    கள்குடித்துத் தன்னுடலைத் தானறியா நிலையடைதல்,
    செய்வதறியாரின் அறிவிலாச் செயலே…!

    மரபுக் கவிதையில்...

    தன்கைப் பொருளைக் கொடுத்தேதான்
    தடையே யிலாமல் வாங்கிவந்து
    நன்மை தராத கள்குடித்தே
    நகர முடியா வகையினிலே
    தன்மெய் யறியா நிலையடைதல்,
    தனது நிலையை மறந்தேதான்
    என்செய் வதென்றே யறியாதே
    ஏதும் செய்வோர் செயலாமே…!

    லிமரைக்கூ..

    வாங்கிக் குடிப்பர் மது,
    தன்னுடலறியா நிலையறியார் செயலதுவே,
    தனைமறந்த அறிவிலார்செய்வ தது…!

    கிராமிய பாணியில்...

    வேண்டாம் வேண்டாம்
    கள்குடி வேண்டாம்,
    கொணத்தக் கெடுத்துக்
    குடியக்கெடுக்கும் கள்ளு
    வேண்டவே வேண்டாம்..

    கைக்காசக் குடுத்துக்
    கள்ள வாங்கிக் குடிச்சி,
    போதயில
    ஓடம்புல துணி
    போறது தெரியாம
    உழுந்த கெடக்கிறத
    ஒழுங்குள்ளவன் செய்யமாட்டான்..

    தன்நெலம தெரியாத
    தன்ன மறந்த
    அறிவே இல்லாதவந்தான்
    அப்புடிச் செய்வான்..

    அதால
    வேண்டாம் வேண்டாம்
    கள்குடி வேண்டாம்,
    கொணத்தக் கெடுத்துக்
    குடியக்கெடுக்கும் கள்ளு
    வேண்டவே வேண்டாம்…!

    Share
  • மழை – நான்கு காணொலிகள்

    மழை – நான்கு காணொலிகள்

    அண்ணாகண்ணன்

    தாம்பரத்தில் மிதமான மழை 

    தாம்பரத்தில் 03.07.2020 அன்று பெய்த மழையின் போது எடுத்த காட்சிகள்.

     

    மழையின் இசை நாட்டியம்

     
     

    மழை வரைந்த வட்டங்கள் | Rainmade Circles

    சென்னை, தாம்பரத்தில் சற்று முன், மழை வரைந்த வட்டங்கள்!

     

    மழைத் துளிகள் | Rain drops

    இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தையைப் போல், இலை நுனியிலும் கொடிக் கம்பியிலும்… நீண்ட நேரமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது மழைத் துளி. (அகமொழி 830)

     

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சென்டாரஸ் உடுத் தொகுப்பு

    சென்டாரஸ் உடுத் தொகுப்பு

    வெ. சுப்ரமணியன்

    எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான இராசி விண்மீன் தொகுப்புகளை நட்ட நடுவில்  மேஷம், இரிஷபத்துடன் நிறுத்தி  விட்டுத் திடீரென்று, “எல்லாம் கிடக்க கிழவனைத் தூக்கி மனையில் வை” என்பது   மாதிரி சென்டாரஸ் உடுத் தொகுப்பை நான் ஏன் இப்போது எடுக்க வேண்டும் என்ற வினா உங்கள் மனதுக்குள் கண்டிப்பாக இருக்கும்.

    தற்போது இரவு சுமார் 8.00 மணி முதல்  தென்கிழக்கு அல்லது தெற்குத் திசையில் கிழக்கு மேற்காக அருகருகில் அமைந்த இரு பொலிவான உடுக்களை வெறும் கண்களால் தொலைநோக்கி அல்லது இருகண் நோக்கி போன்ற கருவிகளின் உதவியின்றி  நம்மால் எளிதில் காண இயலும். அந்த இரு உடுக்கள் ஆல்பா சென்டூரியும் (α-Centauri) பீட்டா சென்டூரியும் (β-Centauri) ஆகும் .

    சென்டாரஸ் உடுத் தொகுப்பு தெற்கு வான் அரைகோளத்தில் இருப்பது. ஆகவே நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அதிக அட்சங்களில் இருப்பவர்களுக்கு இதனைக் காணும் வாய்ப்பு இல்லை. ஆனால்  நம் சென்னை 12° 59′ முதல் 13° 9′ வரையான வடக்கு அட்சத்தில்) நில நடுக்கோட்டுக்கு அருகில் இருப்பதால் குறிப்பிட்ட சில காலங்களில் நமக்குக் கட்புலனாகும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தற்போது சென்னை வானில் இரவு நேரத்தில் இவ்விரு உடுக்களையும் காண இயலும் என்பதால் இப்போது இவை இடம் பெற்றுள்ள  சென்டாரஸ் உடுத் தொகுப்பு (Centaurus constellation) குறித்த தகவல்கள் முடிந்தவரையில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. பிராக்சிமா சென்டூரி (Proxima Centauri) விண்மீன் அல்லது உடுதான் நம் பூமிக்கு மிக அருகில் அமைந்த உடு. பூமிக்கு அருகில் அமைந்த உடு என்றால் நம் நில விற்பனை விளம்பரங்களில்

    “சென்னைக்கு மிக அருகே” என்று சொல்வது போன்ற அருகில் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் புவியிலிருந்து பிராக்சிமா சென்டூரி சுமார் 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இப்போது நமக்கு இரண்டு ஐயங்கள் வர வேண்டும். முதலாவது ஆல்ஃபா சென்டூரி உடுவுக்கும் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் பிராக்சிமா சென்டூரிக்கும் என்ன தொடர்பு? அடுத்தது தூரத்தை  ஒளி ஆண்டு என்றால் என்ன என்பது.

    முதல் ஐயத்திற்குப் பதில் ஆல்பா சென்டூரி (α – Centauri) உடுவானது  மூன்று உடு அமைப்பு. அதில் மொத்தம் மூன்று உறுப்பினர்கள். ஆல்பா சென்டூரி A , ஆல்பா சென்டூரி B மற்றும் பிராக்சிமா சென்டூரி.

    அடுத்தது ஒளி ஒரு வினாடியில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும். அத்தகைய வேகத்தில் சுமார் 4.2 ஆண்டுகள் விடாமல் பயணித்தால்தான் பிராக்சிமா சென்டூரியை அடைய முடியும்.

    தவிரவும் பிராக்சிமா சென்டூரிக்கு  அருகில் பூமியைப் போன்று ஒரு கோள் இருப்பது கடந்த 2016 ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 09.06.2020 அன்று கூடுதலாக இன்னுமொரு கோள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பான செய்தியாகக் கடந்த சில நாட்களுக்கு முன்வெளியானதும் பிறிதொரு காரணமாக அமைந்துள்ளது.

    இரவு வானின் பொலிவான முதல் இருபத்தைந்து (25) உடுக்களை எடுத்துக் கொண்டால் அதில் மூன்றாம் (3) இடத்தில் ஆல்பா சென்டூரியும் (α – Centauri), பதினோராவது (11) இடத்தில் பீட்டா சென்டூரியும் (β – Centauri) உள்ளன.

    ஆல்பா சென்டூரி (α Centauri) பாரம்பரியப் பெயர்களான ரிகில் கென்டாரஸ் (Rigil Kentaurus), ரிகில் கென்ட் (Rigil Kent) மற்றும் டோலிமான் (Toliman) என்றெல்லாம்   அழைக்கப்படுகிறது. இதில் ரிஜில் கென்டாரஸ் என்பது அரபு சொற்றொடரான ரிஜ்ல் குவான்டாரிஸிலிருந்து (Rijl Qantūris) பெறப்பட்டது. சென்டூரின் பாதம் (foot of the centaur) என்ற பொருள் கொண்டது. டோலிமான் என்ற பெயர் அரபு அல் – ஜூல்மான் (al-Zulmān) என்பதிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இதன் பொருள் தீக்கோழிகள் (ostriches).

    பீட்டா சென்டூரி (β Centauri) உடுவின் பாரம்பரியமான பெயர்  ஹதர் (Hadar) அல்லது ஏஜெனா (Agena). ஹதர் (Hadar) அரபு வார்த்தையான தரை என்பதிலிருந்து உருவானது, அதே நேரத்தில் ஏஜெனா (Agena) லத்தீன் வார்த்தையான முழங்கால் (knee) என்பதிலிருந்து வந்தது.

    இன்று (24.06.2020) இரவு 07.54.29 மணியளவில் சென்னை வானில் காணப்பட்ட உடுத் தொகுப்புகளின் படத்தைக் கீழே காணலாம். படம் Sky Wiki என்னும் கைபேசிச் செயலி மூலம் பெறப்பட்டது. வானம் சற்று மேகம் பூசியது போலிருந்தாலும் சிவப்புக் கட்டமிட்டுச் சுட்டிக் காட்டப்பட்ட உடுக்கள் ஓரளவு தெளிவாகவே தெரிந்தன.

    சென்டாரசும்  கிரேக்க வானியலாளர் தாலமியால் (Ptolemy) அட்டவணைப் படுத்தப்பட்ட நாற்பத்தெட்டு (48) உடுத் தொகுப்புகளில் ஒன்றே. இருப்பினும் அதற்கு முன்பாகவே வானியலாளர் யூடோக்ஸஸ் (Eudoxus) மற்றும் கவிஞர் அராடஸ் (Aratus) ஆகியோரின் கிரேக்க நூல்களிலும் சென்டரஸ் குறித்து சொல்லப்படுள்ளது.

    சென்டாரஸ் உடுத் தொகுப்பு தெற்கு வான் அரைக்கோளத்தில் (Southern hemisphere) அமைந்துள்ளது. 1060 சதுர டிகிரி பரப்பளவைக் கொண்ட சென்டாரஸ் வானத்தில் ஒன்பதாவது (9) பெரிய விண்மீன் தொகுப்பாகும் . இது தெற்கு அரைக்கோளத்தின் (SQ3) மூன்றாவது காற்பகுதியில் அமைந்துள்ளது மற்றும் + 25 ° மற்றும் – 90 ° இடையிலான அட்சரேகைகளில் காணலாம். கோகுலத்தில் கண்ணனைச் சுற்றிலும் கோபியர்கள் இருந்தது போல இந்த உடுத் தொகுப்பைச் சுற்றிலும் அன்ட்லியா(Antlia), கரினா(Carina), சர்க்கினஸ் (Circinus), க்ரக்ஸ் (Crux), ஹைட்ரா (Hydra), துலாம் (Libra), லூபஸ் (Lupus), மஸ்கா (Musca), மற்றும் வேலா (Vela)  என்று ஏகப்பட்ட பிற உடுத் தொகுப்புகள் கூடிக் கும்மியடிகின்றன. இது கிரேக்க கிரேக்க உடுத் தொகுப்புகளில் ஒன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. “ஆளவந்தான்” என்ற திரைப்படத்தில் “ கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்” என்று ஒரு பாடல் வரி வரும். ஆதுபோல் இங்கு சென்ட்டூர் (Centaur) என்பது “மனிதன் பாதி குதிரை பாதி கலந்து செய்த கலவையான உயிரினம்”. அதாவது மேல் பாதி மனித வடிவத்தையும் கீழ்ப்பாதி குதிரை வடிவமும் கொண்டகிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்களில் சொல்லப்படும் விசித்திரமானதோர் உயிரினம்.

    பண்டைய கிரேக்க – ரோமானிய தொன்மங்கள், சென்டாரஸை பெரும்பாலும் சிரோனுடன் (Chiron) சென்ட்டூருடன் தொடர்பு படுத்துகின்றன. டைட்டன் (Titan) மன்னர் குரோனஸின் (Cronus) மகனான சிரோன் மேற்பாதி மனித வடிவமும் கீழ்ப் பாதி குதிரை குதிரை வடிவமும் கொண்ட விசித்திரமான படைப்பாக இருந்தார். இவர் மிகுத்த அறிவாற்றல் கொண்டவர் என்பதால் ஹெர்குலஸ் (Hercules) மற்றும் ஜேசன் (Jason) ஆகிய இருவருக்கும் ஆசிரியராக இருந்தார்.

    இந்த சென்ட்டூர் (Centaur) உயிரினங்கள் காட்டுமிராண்டித்தனத்தையும் கட்டுக்கடங்காத குழப்பத்தையும் சித்தரிப்பவையாகவே இருக்கின்றன.  அவை கிரேக்க கட்டடக்கலை, சிற்பம் மற்றும் மட்பாண்ட அலங்காரங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. பொதுவாகச் சென்ட்டூர்கள்  மிருகத்தனத்திற்கும், காம இச்சைக்கும் பெயர் பெற்றிருந்த இருந்தபோதிலும், சில சென்ட்டூர்கள் தொன்மக் கதைகளில் மதுப்போதையின் பிடியில் இருந்தாலொழிய கொடியவையாகச் சித்தரிக்கப்படவில்லை. ஒருகால் நாமும் நம்முடைய நாகரிகத்தை மறப்பதால் இந்திரியங்களும் மனமும் கடிவாளம் இல்லாத குதிரையாக நமது கட்டுப்பாட்டை இழக்குமானால்  நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுக்கு அவை ஒரு எச்சரிக்கை உருவகமாகக் (metaphor) கூட இருக்கலாம்.

    தெசலியின் (Thessaly) பண்டைய பழங்குடியினரான லாபித்ஸ்களின் (Lapiths) அரசன் இக்ஸியன் (Ixion).  இவன் ஃபிளெகியாஸின் (Phlegyas) மகன். ஈயோனியஸின் (Eioneus) மகள் தியாவைத் (Dia) திருமணம் செய்து கொள்வதாக அவன் உறுதியளித்திருந்தான். ஆனால் அவன் தியாவின் தந்தைக்குத் தருவதாக வாக்குறுதியளித்திருந்த அழகான விலையுயர்ந்த திருமணப் பரிசுகளை எப்படியாவது தவிர்க்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தான். அதனால் ஈயோனியஸை வஞ்சகமாகக் கொல்ல முடிவு செய்தான். தன் சதிவலையில் ஈயோனியஸைச் சிக்க வைக்க லாபித் அரண்மனையில் பெரும் விருந்துக்கு ஒன்றை ஏற்பாடு செய்து  அதில் கலந்து கொள்ள அவரை அழைத்தான்.  அவரை அமர வைக்கப் போகும் இடத்திற்குக் கீழே ஆழமான குழியைத் தோண்டி அதில் கரியைப் பயன்படுத்தி நெருப்பு வளர்த்துத் தணலை மூடி மறைத்து வைத்திருந்தான் இக்ஸியன். முறையாக விருந்தழைப்பு நடந்தேற, ஈயோனியஸ் அவனைச் சந்தேகப்படவில்லை. இக்ஸியனின் திட்டப்படி குழிக்குள் ஈயோனியஸ் தவறி விழுந்து முற்றிலுமாக எரிந்து போனார்.  இந்தக் கொடூரமான செயலால் கடவுளர்கள் கோபமடைந்தனர். ஆனால் ஜீயஸ் (Zeus), என்ன  காரணத்தாலோ, இக்ஸியான் மீது பரிதாபப்பட்டு,  குற்றத்திலிருந்து அவனை விடுவிக்க முன்வந்தது மட்டுமல்லாமல் கூடவே ஒலிம்பஸ் மலைக்கு விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.

    ஜீயஸின் விருந்தினராகச் ஒலிம்பஸுக்குச் செல்வதில் இக்ஸியன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், ஆனால் இயல்பிலேயே முற்றிலும் மிக மோசமான எண்ணம் கொண்டவனாக இருந்ததால், ஒருமுறை தவறு செய்து மன்னைப்பு வழங்கப்பட்ட பின்னரும் அவன் நடத்தையில் சிறிது கூட மாற்றமில்லை. தமிழில் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தல் என்று சொல்வார்கள் அதுபோலத் தெய்வங்களின் அரசியும் ஜீயஸின் மனைவியுமான ஹேராவை (Hera) எப்படியாவது கவர்ந்து கொள்ளும் திட்டத்தில் அவன் இருந்தான்.

    ஜீயஸ், அனைத்தையும் அறிந்தவர் என்பதால் ஹேராவைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு மேகத்தை உருவாக்குவதன் மூலம் இக்ஸியனின் மோகத்தை முன்கூட்டியே தூண்டினார். அவரது தந்திரச் செயலுக்கு  வீழ்ந்த இக்ஸியன்   மேகத்தை  முரட்டுத்தனமாக இச்சித்துக் கூடினான். அந்தக் கூடலில் முதல் சென்டார் பிறந்தது. பின்னர் அவரால் சென்டார்களின் இனம் உருவானது.

    மனிதர்களின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, தெசலியின் காடுகளில் இந்த சென்டார்கள் வாழ்கின்றன என்று நம்பப்பட்டது. தெசலியில் குதிரையின் மீது ஆரோகணித்தவாறு காளைகளை வேட்டையாடும்  ஒரு பாரம்பரியம் இருந்ததால் இந்தத் தொன்ம உயிரினங்கள் உண்மையில் ஒரு அடிப்படையைக் கொண்டிருந்திருக்கலாம்.  மேலும் சென்டார் என்ற வார்த்தை “காளையைக் கொல்பவன்’ (bull-killer)  என்ற பொருள்படும். ஒருவேளை தெசலியின் மிகவும் திறமையான குதிரை வீரர்கள் குதிரையைத் தங்களது ஒரு அங்கமாகவே எண்ணிப் பார்த்திருக்கலாம். அதிலிருந்து சென்டார் உயிரினத்தின் கட்டுக்கதை பிறந்திருக்கவும் கூடும்.

    தொன்மத்தின்படி டைட்டன்களின் மன்னரான குரோனஸ் கடல் தேவதையான பிலிராவை (sea nymph Philyra) மயக்கி அவளுடன் தகாத உறவு கொள்ளும் போது எதிர்பாராத விதமாக  குரோனசின் மனைவியான ரியா (Rhea) இடையில் வந்து விட,  ரியாவிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் பொருட்டு குரோனஸ் குதிரையாகத் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டார்.  இதன் விளைவாகப் பிலிரா ஒரு கலப்பின மகனைப் பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிலிரா பிறந்த மகனை அநாதையாக விட்டுச் சென்றாள்.

    சென்டார் சிரோன் அல்லது சீரோன், அவரது சிறந்த ஞானத்துக்காகவும், மருத்துவக் கடவுளான அஸ்கெல்பியோஸ் மற்றும் பராக்கிரமிக்க வீரர்களான ஹெர்குலஸ், அகில்லெஸ், ஜேசன் மற்றும் அவரது மகன் மீடியஸ் ஆகியோரின் ஆசிரியராகவும் அறியப்பட்டதால் மிகவும் பிரபலமானவர் . மருத்துவம், வேட்டையாடுதல், இசை ஆகியயவற்றில் ஞானமுடைய ஆசானாக நன்கறியப்பட்டிருந்ததாகத் தொன்மக் குறிப்புகள் உள்ளன. இருந்த போதிலும் தொன்மங்களில் சிரோன் ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே என்பதால் அவர் குறித்த விவரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. தொன்மங்களில் ஒரு நிழல் உருவம் கொண்டவர் மற்றும் அவர் பிலிராவின் மகன் (டைட்டன் ஓசியனஸின் மகள்) என்றும் அவர் சாரிக்லோ(Chariklo) என்ற தேவதையை  மணந்தார் என்பதும் கிமு 700 ஆம் ஆண்டில் வாழ்ந்த கவிஞர் ஹெசியோட்டின் (Hesiod) படைப்புகளிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.  பெலியன் (Pelion) மலைக் குகையில் சிரோன் வாழ்ந்ததாகவும் நம்பப்படுகிறது.

    சிரோன் பொதுவாக உடற்பகுதியிலும் பின்னிரு கால்களிலும் மற்ற சென்டார்களைப் போலிருந்தாலும் அவரது முன் கால்கள் மனிதர்களின் கால்களைப் போலக் குறைவான உரோமங்களுடன் காணப்படுகின்றன. இதனை அவர் நாகரீகமான சென்டார் என்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சிரோன் பீலியஸின் (Peleus) ஆலோசகராகவும், தீடிஸுடனான (Thetis ) மன்னர்  பிலியஸின்  திருமணத்தில் தொடர்புடையவராகவும் இருந்தார்.  இந்த  அரசத் தம்பதிகளின் மகன் அகில்லெஸ் (Achilles) தனது இளம் பருவத்தில் குருகுலக் கல்வி கற்ற புத்திசாலியான சிரோன் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

    பெரும் பராக்கிரமசாலியான அகில்லெஸிக்கு, சிரோன் பெலியஸுக்கு கொடுத்த பெலியனின் சாம்பலிலிருந்து (Pelian ash) தயாரிக்கப்பட்ட ஒரு வல்லமைமிக்க ஈட்டியும் மரபு வழியில் கிடைத்தது. இந்த ஈட்டி மிகவும் பெரியதாகவும், கனமாகவும் இருந்தது. அதைக் கொண்டு போரிட அகில்லெஸ் மட்டுமே போதுமான வலிமையும் திறமையும் கொண்டவராக இருந்தார், ஹோமரின் (Homer) இலியாட்டில் (Iliad)  ட்ரோஜன் போரைப் (Trojan war) பற்றிய  விளக்கத்தில் அகில்லெஸின் தீரம் குறித்துச் சொல்லப்படும் இடத்தில்  சிரோனின் பரிசான ஈட்டி பற்றி இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

    இறுதியில் ஹெராக்கிசின் (Heracles) விஷம் தோய்ந்த அம்பு ஒன்றால் தற்செயலாக தாக்கப்பட்டதில் காயமடைந்த அவர் அழியாத பிறவியான குரோனஸின் மகனாக இருந்ததால் அவருமே அழியாத பிறவி எடுத்தவராக இருந்தார். ஆகவே இறக்க வழியின்றிப் பயங்கரமான நரக வேதனையை அனுபவித்தார். ஜீயஸ் இறுதியில் சென்டார் சிரோனின் மீது பரிதாபப்பட்டு அவரை இறவாவரம் மற்றும் உடல் வாதைலிருந்து விடுவித்து, அவரை இறக்க அனுமதித்து, அவரை வானில் நட்சத்திரங்களுக்கிடையில் வைத்தார்.

    கி.மு. 2600-1900 வரை தேதியிட்ட கலிபங்கன் உருளை முத்திரைகள் (Kalibangan cylinder seal) சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த அகழாய்வுத்தலத்தில் கிடைத்தன. செண்டார் போன்ற உயிரினங்களின் முன்னிலையில் பெண்ணின் பொருட்டு இரு ஆண்களுக்கு இடையிலான வாட்போரைக் காட்டுகிறது. பிற ஆதாரங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உயிரினங்கள் உண்மையில்  அரை மனித மற்றும் அரைப் புலிகள் என்று கூறுகின்றன, பின்னர் அவை இந்துப் போர் தெய்வமாக உருவாகின்றன.  இந்த முத்திரைகள் கிமு 3 நூற்றாண்டில் சிந்துச் சமவெளி – மெசொபடோமியா உறவுகளுக்கு சான்றாக விளங்குகிறது.

    படம்; நன்றி https://www.harappa.com/blog/indus-cylinder-seals

    திருவனந்தபுரத்தில் உள்ள பழைய ஸ்ரீகாந்தேஸ்வரம் கோயிலுடன் தொடர்புடைய  பிரபலமான ஒரு தொன்மக்கதையில், அழகான யாதவ இளவரசனுக்குத் துறவியொத்த ஒரு பிராமணரால் இடப்பட்ட சாபம், குதிரையின் உடலையும், குதிரையின் தலை மற்றும் கழுத்துக்குப் பதிலாக இளவரசனின் தலை, கைகள் மற்றும் உடற்பகுதியையும் கொண்ட ஒரு உயிரினமாக மாற்றியது என்று சொல்லப்படுகிறது.

    இந்தியப் புராணங்களிலும், ​​இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு பண்டைய நூல்கள், கலைகள் மற்றும் சிற்பங்களிலும் இன்னொரு அரை மனிதன், அரைக் குதிரை புராண உயிரினமான கின்னரர்கள் (Kinnaras) காணப்படுகிறது. இது குதிரையின் தலை இருக்கும் ஒரு மனிதனின் உடற்பகுதியுடன் கூடிய குதிரையாகக் காட்டப்படுகிறது, இது கிரேக்க சென்டார்களை ஒத்ததாகும்.

    பட :நன்றி https://www.pinterest.co.uk/pin/255368241341065845/

    சென்டாரஸின் தோற்றம்  காட்டெருமை மனிதன் (Bison-man – MUL.GUD.ALIM) என்று அறியப்பட்ட பாபிலோனியர்களால் உடுக் கூட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. பாபிலோனியர்கள்  சென்டாரஸ் உடுக் கூட்டத்தை (Centaurus constellation)  மனிதனின் தலையுடன் கூடிய  நான்கு கால் காட்டெருமை அல்லது  மனித தலையும் உடலும்  காட்டெருமை அல்லது காளையின் பின்புற கால்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உயிரினமாகச் சித்தரித்தனர். பாபிலோனியர்கள் இந்த உயிரினத்தைச் சூரியக் கடவுளான உட்டு – ஷமாஷ்  (Utu – Shamash )  உடன் தொடர்புபடுத்தினர்.

    காட்டெருமை மனிதன்

    படம்: நன்றி https://www.pinterest.at/pin/734649757937219075/

    சென்டாரஸ் உடுக் கூட்டத்தின் (Centaurus Constellation), அருகிலுள்ள லூபஸ் (Lupus) உடுக் கூட்டமான முயலைச் (Hare) சென்டார் (Centaur) தன் கூரான் ஈட்டியால் ஆரா (Ara) உடுக் கூட்டத்தின் பலிபீடத்தில் (Altar) தெய்வங்களுக்குப் பலியிடுவதாக அரேபியர்களால் சித்தரிக்கப்படுகிறது. சென்டாரின் முன் கால்கள் வானத்தில் பிரகாசமான இரண்டு நட்சத்திரங்களால் குறிக்கப்படுகின்றன, ஆல்பா மற்றும் பீட்டா சென்டூரி, இவை முறையே ரிகில் கென்டாரஸ் (Rigil Kentaurus), ஹதர்  (Hadar) என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு நட்சத்திரங்களும் திரிசங்கு அல்லது சதர்ன் கிராஸ் (Southren Cross) உடுத் தொகுப்பின் சுட்டிகளாக செயல்படுகின்றன, இது திரிசங்கு உடுத் தொகுப்பு சென்டாரஸின் பின்புற கால்களுக்குக் கீழ் உள்ளது.

    இனி மீண்டும் வானியலுக்கு வருவோம்.

    சென்டாரஸ் பதினோரு (14) முக்கிய ஊடுக்கள்கள், ஒன்பது (9) பொலிவான உடுக்கள் மற்றும் பேயர்/ஃபிளாம்ஸ்டீட் பெயர்களைக் (Bayer/Flamsteed designations) கொண்ட அறுபத்தொன்பது (69) உடுக்களைக் கொண்டுள்ளது.

    (1) ஆல்பா சென்டாரி  என்ற ரிகல் கென்டாரஸ் (Alpha Centauri – Rigel Kentaurus) அதன் முதல் மிகப் பொலிவான உடு.  ஆல்பா சென்டூரி சூரிய மண்டலத்திற்கு மிக நெருக்கமான நட்சத்திர அமைப்பு. ஆல்பா சென்டூரி அமைப்பில்ஒரு வேளை யாராவது பார்வையாளர்கள் இருப்பார்களேயானால், நாம் பார்க்கும் வானத்தின் அதே உருவத்தை ஆனால் சென்டரஸின் பொலிவான உடுவான ஆல்பா சென்டூரியைத் தவிர்த்து அவர்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் பார்வையில் காசியோபியா (Cassiopeia constellation) உடுத் தொகுப்பில் நம்முடைய சூரியன் + 0.5 தோற்றப் பொலிவெண் மதிப்புடைய உடுவாகத் தெரியும்.

    இது ஒரு மூன்று உடு அமைப்பு (Tri star system).  சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் உள்ளது.  பூமியிலிருந்து வெறும் 4.365 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பல்லுறுப்பு உடு அமைப்பில் (multiple star system ),  ஆல்பா சென்டூரி – A (Alpha Centauri A) நிறமாலை வகையில் G 2 V மஞ்சள் வெள்ளை பிரதான வரிசை உடுவாகவும்  ஆல்பா செண்டூரி B  (Alpha Centauri B) நிறமாலை வகை K1V உடுவாகவும் உள்ளன. இந்த நட்சத்திர அமைப்பின் மூன்றாவது உறுப்பினராகக் கருதப்படுவது நிறமாலை M5Ve வகைச் சிவப்பு குள்ள அமைப்பான (Red dwarf system) ஆல்பா சென்டூரி – C  (Alpha Centauri C) என்னும் ப்ராக்ஸிமா சென்டூரி (Proxima Centauri) உடு. இந்த உடுவானது ஆல்பா சென்டூரி A மற்றும் ஆல்பா செண்டூரிசோடியிலிருந்து  சுமார் 0.24 ஒளி ஆண்டுகள்  தொலைவில் அமைந்துள்ளது.  ப்ராக்ஸிமா சென்டூரி உடு அமைப்பு  பூமியிலிருந்து 4.2 ஒளி ஆண்டுகள்  தொலைவில் உள்ளது.  ஆகவே இதுதான் நம் பூமிக்கு மிக அருகில் உள்ள உடு.

    இந்த அமைப்பின் பொலிவான அங்கத்தினரான ஆல்பா சென்டூரி  A, இரவு வானத்தில் சுவாதி என்ற ஆர்க்டரஸுக்கு (Arcturus) அடுத்து தனிப்பட்ட வகையில் நான்காவது பொலிவான  உடு. ஆல்பா சென்டூரி B  வானத்தில் 21 வது தனிப்பட்ட வகையில் பொலிவான உடுவாகும். இருப்பினும் இரண்டு உடுக்களையும் ஒரு சேரக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவை ஆர்க்டரஸை விடப் பொலிவானவையாக உள்ளன. ஆகவே பொலிவான  உடுக்களின் அமைப்பில் சிரியஸ் (Sirius) மற்றும் அகஸ்தி என்ற கனோபஸுக்கு (Canopus) அடுத்ததாக மூன்றாவது (3) இடத்தில் உள்ளன. இரண்டு உடுக்களுக்கும் ஏறக்குறைய சமவயது. அவை  சுமார் 4.85 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது,  அவை நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ளன.

    24 ஆகஸ்ட் 2016  அன்று  ஆல்பா சென்டூரி பல்லுறுப்பு உடு அமைப்புக்கு (multiple star system) ப்ராக்ஸிமா சென்டூரி b (Proxima Centauri  b) என்ற ஒரு கோள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டது.   பூமிக்கு மிக நெருக்கமான புவியொத்த கோளான ப்ராக்ஸிமா சென்டூரி b (Proxima Centauri  bஆல்பா சென்டூரி C உடுவைச் சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டது. இது பூமியை விட சற்றே பெரியது, மேலும் அதன் வாழக்கூடிய மண்டலத்தில் ப்ராக்ஸிமா சென்டூரியைச் சுற்றி வருகிறது. ப்ராக்ஸிமா செண்டூரி b  வேறுவகையில் ஆல்பா சென்டூரி Cb என்றும் அழைக்கப்படுகிறது. இக் கோளின் மதிப்பிடப்பட்ட நிறை பூமியைப் போல 1.3 மடங்காக உள்ளது. இக் கோள் ஆல்பா சென்டூரி C உடுவைச்  சுமார் 11.2 புவி நாட்கள்  கொண்ட சுற்றுக் காலத்துடன் சுமார் 0.05 வானியல் தொலைவில் (AU) அதாவது 7.5 மில்லியன் கிமீ தூரத்தில் சுற்றி வருகிறது.

    மீண்டும் தற்போது கடந்த  2 ஜூன் 2020 அன்று மெக்டொனால்டு வானியல் ஆய்வகத்தில் (McDonald Observatory) உள்ள வானியலாளர்கள் இரண்டாவது கோளை உறுதிப்படுத்தியுள்ளனர். இது பூமியை விட ஏழு (7) மடங்கு பெரியது.  இதற்கு ப்ராக்ஸிமா சென்டூரி c (Proxima Centauri  cஅல்லது ஆல்பா சென்டூரி Cc என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ப்ராக்ஸிமா செண்டூரிக்கான இந்த இரண்டாவது கோள் பூமியை விட மிகப் பெரியது மற்றும்  1,907 நாட்களில் அதனுடைய தாய் உடுவான ப்ராக்ஸிமா சென்டூரியைச் சுற்றி வருகிறது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் தொலைவை போல் அதனுடைய உடுவைச் சுமார் 1.5 மடங்கு தூரத்தில் சுற்றுகிறது.  இதனை ஒரு முக்கியமான வேறுபாடு என்று கருத இயலாது என்றாலும் ப்ராக்ஸிமா செண்டூரி ஒரு சிவப்புக் குள்ள உடு ((Red dwarf star). நமது சூரியனை விடச் சிறியது மற்றும் குளிரானது, எனவே அந்த தூரத்தில், கோளானது பூமியை விடக் கணிசமாக அளவுக்குக் குளிராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய இந்தக் கோள் குறித்த கட்டுரையை விரிவாகப் பின்னர் எழுதுகிறேன்.

    (2) பீட்டா சென்டூரி (β Centauri) என்ற ஹதர் (Hadar) அல்லது ஏஜெனா (Agena) 

    பீட்டா சென்டூரி (β Centauri) ஒரு நீல – வெள்ளை ராட்சத உடு (giant star), 348.83 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன்  தோற்றப் பொலிவு எண் + 0.6 மதிப்புடையது. இது இரவு வானத்தில் பதினோராவது (11) பொலிவான உடுவாகும். இது நிறமாலை வகுப்பு B1III ச் சேர்ந்தது.

    பீட்டா சென்டூரி ஒரு இருமை உடு, பொலிவான கூறிலிருந்து துணை உடுவானது 1.3 வில் விநாடிகளால் (Arc seconds) பிரிக்கப்பட்டுள்ளது. பொவிவான உடு ஹதர் A (Hadar – A) அல்லது பீட்டா சென்டூரி A ஒரு நிறமாலை இருமை உடு (Binary Star). ஹதர் A யானது, 357 நாட்கள் சுற்றுக் காலத்தைக் கொண்ட ஒரு ஜோடி ஒத்த நட்சத்திரங்களைக் கொண்டது. இந்த இரு உடுக்களில் குறைந்தது ஒன்று பீட்டா செஃபி வகை (Beta Cephei type variable) மாறியாக இருக்க வேண்டும். அதன் மேற்பரப்பின் துடிப்புகளின் விளைவாக அதன் பொலிவு  மாறுபடும். ஹதர் B (Hadar – B) முதன்மைச் சோடியை 250 நாட்கள் காலத்தில் சுற்றி வருகிறது.

    அடுத்துவரும் உடுக்கள் நமக்கு அத்தனை முக்கியமானவை இல்லை என்றாலும் கட்டுரையின் முழுமைக்காகக் குறிப்பிட்ட சில உடுக்கள் குறித்துக் குறைவான  விவரங்களே தரப்பட்டுள்ளன.

    (3) மென்கென்ட் (Menkent) அல்லது ஹரடன் (Haratan) என்னும் தீட்டா சென்டூரி (θ Centauri)

    மென்கென்ட் அதாவது சென்டூரின் தோள்  என்று பொருள் தரும் பாரம்பரிய அரபிப் பெயரைக் கொண்ட தீட்டா சென்டாரி சில நேரங்களில் ஹரடன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆரஞ்சு K – வகை ராட்சத (Giant) உடுவாகும். சுமார் 60.9 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதனுடைய நிறமாலைப் பிரிவு  K0IIIb. இந்த உடுவின் தோற்றப் பொலிவெண் +2.06.

    (4) முஹ்லிஃபைன் (Muhlifain) என்ற காமா சென்டூரி (γ Centauri)

    காமா சென்டூரி என்பது ஈருமை உடுவாகும், இது நிறமாலை வகை A0 ஐச் சேர்ந்த இரண்டு உடுக்களைக் கொண்டது, ஒவ்வொன்றின் தோற்றப் பொலிவெண் மதிப்பு +2.9. இந்த அமைப்பு பூமியிலிருந்து 130 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, மேலும் இது 2.2 அளவைக் கொண்டுள்ளது. இரண்டு உடுக்களின் இணைந்த தோற்றப் பொலிவெண்ணின் மதிப்பு +2.2.  ஒன்றையொன்று 83 வருடங்களுக்கு ஒரு முறை   சுற்றி வருகின்றன.

    (5) எப்சிலன் சென்டூரி (ε Centauri) 

    எப்சிலன் சென்டூரி சுமார் 380 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது  நிறமாலைப் பிரிவு  B1III ஐச் சேர்ந்த ஒரு நீல – வெள்ளை ராட்சத உடுவாகும்.. இது ஒரு பீட்டா செஃபி (Beta Cephei type variable)  வகை மாறி நட்சத்திரம். அதன் மேற்பரப்பின் துடிப்புகளின் விளைவாக பொலிவில் மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. பொலிவு மதிப்பு 2.29 முதல் 2.31 வரை மாறுபடும். இதன் சராசரி தோற்றப் பொலிவின் மதிப்பு 2.29    .

    (6) ஈட்டா சென்டூரி (η Centauri)

    ஈட்டா சென்டாரி 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தோற்றப் பொலிவெண் மதிப்பு + 2.33  கொண்டதோர் உடுவாகும். ஈட்டா சென்டூரி மிகவும் சூடான  B வகைக் குள்ளன் (Dwarf), 20 மில்லியன் ஆண்டுகளுக்கு குறைவான வயதுடையது. இது ஒரு B (e) வகையான நட்சத்திரம், அதாவது  மாறக் கூடிய நிறமாலை வரிக் கோட்டு உமிழ்வை அதன் ஹைட்ரஜன் நிறமாலைக் கோடுகளில் வெளிப்படுத்துகிறது. இது காமா காசியோபியா (Gamma Cassiopeiae type variable) வகை மாறி அல்லது கூடுவகைஉடு என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இது தனது நடுக்கோட்டில் (equator) அதைச் சுற்றியுள்ள வாயு வட்டுடன் வேகமாகச் சுழலும் உடு என்று சொல்லலாம். இந்த உடு நடுக்கோட்டில்  வினாடிக்கு 310 கிலோமீட்டர் வேகத்துடன் சுழலும்.  அதன் சுழற்சிக் காலம் ஒரு நாளுக்கும் குறைவாகவே இருக்கும்.

    (7) அல்னைர் (Alnair) என்னும் ஜீட்டா சென்டூரி (ζ Centauri) 

    தோற்றப் பொலிவெண் மதிப்பு +2.55 கொண்டஜீட்டா சென்டூரி ஒரு நிறமாலை இருமை உடுவாகும். இது சுமார் 385 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. உடுவின் பாரம்பரிய பெயர், அல்னைர் (Alnair), அரபு சொற்றொடரான ​​நயீர் பதான் குவாண்ட்ரிஸிலிருந்து (Nayyir Badan Qanṭūris) பெறப்பட்டது, இதன் பொருள் “சென்டாரின் உடலின் பொலிவானஉடு” (bright star of the body of the Centaur) என்பதாகும். அல்னெய்ரின்  நிறமாலைப் பிரிவு B 2.5 IV . இது எட்டு நாட்களுக்கு சற்று அதிகமான சுற்றுக் காலத்தைக் கொண்டுள்ளது.

    (8) மா வீ  (Ma Wei)  என்ற டெல்டா சென்டூரி (δ Centauri) 

    டெல்டா சென்டூரி சுமார் 395 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது காமா காசியோபியா வகை மாறி (Gamma Cassiopeiae type variable) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொலிவு 2.51 மற்றும் 2.65 க்கு இடையில் மாறுபடுகிறது. ஒரு B(e) வகையான உடு. B – வகையைச் சேர்ந்த நட்சத்திரமான இது B 2 IV வகுப்பைச் சேர்ந்தது, மா வீ என்ற பெயர் சீனப் பெயரான மா வீ சான் (Ma Wei san) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் “குதிரையின் வாலின் மூன்றாம் நட்சத்திரம் (Third Star of Horse’s Tail). இது டெல்டா செண்டூரி G மற்றும் ரோ (Rho) சென்டூரியுடன் சேர்ந்து ஒரு வானியல் தோற்றக் (asterism) குறிப்பைத் தருகிறது.

    (9) நு சென்டூரி (ν Centauri) 

    நு சென்டூரி பூமியிலிருந்து சுமார் 475 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நட்சத்திரம் பீட்டா செஃபி வகை மாறி என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதன் மேற்பரப்பின் துடிப்புகளுக்கு ஒளிர்வு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. என்பது நீல – வெள்ளைத் துணைக் குள்ளன் (sub giant) நிறமாலை வகை B 2 IV ஆகும்.

    இது ஒரு சுழலும் நீள்வட்ட மாறி நட்சத்திரம் (rotating ellipsoidal variable star) என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இதன் சராசரி தோற்றப் பொலிவெண் 3.41 ஆகும். இதன்பொலிவு 3.38 முதல் 3.41 வரை 2.62 நாட்கள் மாறுபடும். இது ஒரு நெருக்கமான இருமை உடு. இதன் கூறுகள் நீள்வட்டமாக உள்ளன, பார்வையாளருக்கு தெரியும் ஒளி உமிழும் பகுதியின் அளவின் மாற்றங்களின் விளைவாகப் பொலிவில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. கன்னி ராசியில் பிரகாசமான நட்சத்திரமான சித்திரையும் (Spica) வானத்தில் பிரகாசிக்கும் சுழலும் நீள்வட்ட நட்சத்திரமாகும்.

    (10) கே குவான் (Ke Kwan) என்னும் கப்பா சென்டூரி (κ Centauri)   

    கப்பா சென்டூரி சுமார் 540 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு இருமை உடு.  இது நிறமாலை வகை B 2 IV க்கு உரியது. பொலிவான கூறு ஒரு நீல-வெள்ளை  B – வகை துணை இராட்சத (sub giant) உடு ஆகும். இது தோற்றப் பொலிவெண் + 3.13 ஆகும். இதன் ஒரு நிறமாலைத் துணை 0.12 வில் விநாடிகள் (arc seconds) தொலைவில் அமைந்துள்ளது.

    கப்பா சென்டாரி சில சமயங்களில் அதன் சீனப் பெயரான கே குவான் (Ke Kwan) என்பவரால் அறியப்படுகிறது, இது கு குன் சான் (Qí Guān sān) என்ற சொற்றொடரிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் மேன்மை பொருந்திய காவலர்களின் மூன்றாவது உடு (Third Star of Imperial Guards) என்பதாகும்.

    இது தவிர 225 ஆழ் வான் பொருட்கள் (Deep Sky Objects) சென்டரஸ் உடுத் தொகுப்பில் காணப்படுகின்றனஆழமான வானப் பொருள்கள்  அல்லது ஆழ் வான் பொருட்கள் என்பவை நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் வானப் பொருள்கள். ஆழமான வான பொருட்களின் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை நெபுலாக்கள் (Nebulae),  திறந்த மற்றும் கோளக உடுக் கொத்துகள் (Open and Globular star clusters ) மற்றும் விண்மீன் திரள்கள் (Galaxies) ஆகும்அவற்றில் 20 ஆழ் வான் பொருட்கள் பொலிவானவை. அவற்றின் பட்டியல் கடைசியில் தரப்பட்டுள்ளது.

    நெபுலா என்பது விண்வெளியில் தூசி மற்றும் வாயுவால் ஆன பெரிய மேகம். சில நெபுலாக்கள் (ஒன்றுக்கு மேற்பட்ட நெபுலாக்கள்) ஒரு சூப்பர்நோவா போன்ற இறக்கும் நட்சத்திரத்தின் வெடிப்பால் வெளியேற்றப்படும் வாயு மற்றும் தூசியிலிருந்து வருகின்றன.

    திறந்த மற்றும் கோளக உடுக் கொத்துகள் (Open and Globular star clusters ) 

    திறந்த உடுக் கொத்துகள்  (Open star clusters ) கோளக கொத்துக்களை (Globular star clusters ) விட மிகவும் வயதிலும், எண்ணிக்கையிலும் குறைந்தவை. அவை தூசி மற்றும் வாயு மேகங்களிலிருந்து உருவாகும் புதிய உடுக்களின் சமீபத்திய பிறப்பிடங்களாகும். மேலும் அவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான உடுக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஒரு திறந்த உடுக் கொத்தில் உள்ள உடுக்கள்  அனைத்தும் ஒரே பொருளிலிருந்து ஒன்றாக உருவாகியிருப்பினும் அவை காலப்போக்கில் ஈர்ப்பு விசையுடன் பிணைக்கப்பட்டு பரவுவதில்லை. ஆகவே அவற்றின் உடுக்கள் வெகுதூரம் சிதறிக் கிடக்கின்றன. அவை ஈர்ப்பு விசையில் பிணைக்கப்படாததால், திறந்த உடுக் கொத்துகள் சீரற்ற மற்றும் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டிருக்கலாம். அவை நமது  பால்வீதி உடுத் திரளின் தளத்தில், உள்ள வாயு மற்றும் தூசி இருக்கும் சுழல் கரங்களில் காணப்படுகின்றன. திறந்த உடுக் கொத்துகள் இளமையானவையாகவும், குறைந்த ஆயுட்காலம் கொண்டவையாக இருப்பதால், வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்தில் பொருட்கள் எவ்வாறு பரவுகிறது என்பதற்கான இயக்கவியலை அறியவும் மற்றும் இளம் உடுக்களையும், உடு உருவாக்கத்தின் செயல்முறைகளையும் ஆய்வு செய்யவும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

    கோள உடுக் கொத்துகள் என்பவை வயதான உடுக்களின்  கொத்துக்கள். இவை ஈர்ப்பு விசையால் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொத்துகள் பொதுவாகத் தோராயமாக கோள வடிவமாக இருக்கும், இவற்றின் எண்ணிகை சில ஆயிரம் முதல் ஒரு மில்லியன் நட்சத்திரங்கள் வரை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகவே அவை மேலே, கீழே, மற்றும்  தட்டையான, வட்டு வடிவ பால்வீதியின் தளத்தில் பரவியுள்ளன. கோளக உடுக் கொத்துகளின் வயது பொதுவாகச் சுமார் 13 பில்லியன் ஆண்டுகள் என்ற அளவில் உள்ள பழம் பெருச்சாளிகள். அதாவது கோளக உடுக் கொத்துகள் நமது பால்வழி உடுத் திரளின்  மிகப் பழமையான சில உடுக்களைக் கொண்டுள்ளன. கோளக உடுக் கொத்துகள் உருவாகும்போது பால்வழி உடுத் திரள் எப்படி இருந்தது என்ற நமது  உடுத் திரளின் ஆரம்பகால வரலாற்றை அறிந்து கொள்ள. வானியலாளர்கள் கோளக உடுக் கொத்துகளைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

    எளிய வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லப் போனால் திறந்த கொத்துகள் என்பவை இளைஞர் விடுதிகள் (Youth Hostels). கோளகக் கொத்துகள் முதியோர் இல்லங்கள் (Old age homes). வயதானவர்களைக் கூட்டமாக அதிக எண்ணிகையில் நாம் பொதுவாக கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில், ஆன்மீகக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் காண முடியும். அவர்களைக் கஃபே காஃபி டே Cafe coffee Day) அல்லது பப்களில் (Pub) காண இயலாது. அதே போல் இளைஞர்களைக் கூட்டமாகச் சத்ஸங்கங்களிலோ அல்லது ஆலயங்களிலோ காண்பது அரிது. ஆனால்அவர்களைச் சிறு சிறு குழுக்களாகக் கஃபே காஃபி டே Cafe coffee Day) அல்லது பப்களில் (Pub) காண  முடியும். அது போலக் கோளக உடுக் கொத்துகள் நமது உடுத் திரளின் உப்பலான (Bulged) ஒளிவட்ட(Halo) நடுப்பகுதியில் காணப்படுகின்றன. பால்வீதி உடுத் திரளின் தளத்தில், உள்ள வாயு மற்றும் தூசி இருக்கும் சுழல் கரங்களில் திறந்த உடுக் கொத்துகள் காணப்படுகின்றன.

    உடுத் திரள்கள்  என்பவை உடுக்கள், தூசி மற்றும் வாயுக்களின் மிகப்பெரிய தொகுப்பாகும். உடுத் திரள்கள் பொதுவாகப் பல மில்லியனிலிருந்து ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான உடுக்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் அளவு சில ஆயிரம் முதல் பல லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கும். அண்டத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன் உடுத் திரள்கள் உள்ளன. உடுத்திரள்கள் பல அளவுகளில், வடிவங்கள் மற்றும் பொலிவுகளில் காணப்படுகின்றன. உடுக்களைப் போலவே இவையும் தனியாகவும், சோடிகளாகவும் அல்லது கொத்துகள் எனப்படும் பெரிய குழுக்களாகவும் காணப்படுகின்றன. சுருள் வடிவ, நீள்வட்ட மற்றும் ஒழுங்கற்ற உடுத் திரள்கள் என்று அடிப்படையாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

    (1) IC 2944 லாம்டா சென்டூரி நெபுலா (Lambda Centauri Nebula)

    (2) NGC 3766 பேர்ல் கொத்து – திறந்த உடுக் கொத்து (Pearl Cluster – Open Cluster)

    (3) NGC 5139 ஒமேகா சென்டூரி – கோளக உடுக் கொத்து (Omega Centauri – Globular Cluster)

    (4) NGC 5138 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (5) NGC 5662 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (6) NGC 5460 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (7) NGC 5281 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (8) NGC 5316 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (9) NGC 5617 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (10) NGC 5128 சென்டரஸ் -A (Centaurus A) – இருகுவி வில்லை வடிவ உடுத் திரள் ( Lenticular Galaxy)

    (11) NGC 3680 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (12) NGC 5606 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (13) NGC 3918 –  கோள் நெபுலா (Planetary Nebula)

    (14) NGC 3960 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (15) NGC 5286 – கோளக உடுக் கொத்து (Globular Cluster)

    (16) NGC 4852 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (17) NGC 5168 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (18) NGC 4230 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    (19) NGC 5102 – நீள்வட்ட/ சுருள் உடுத்திரள் (Elliptical/Spiral Galaxy)

    (20) IC 4291 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

    மீண்டும் சந்திப்போம்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 23

    பழகத் தெரிய வேணும் – 23

    நிர்மலா ராகவன்

    (அழகு எதில்?)

    ‘நான் பார்த்ததிலேயே அவள்தான் பேரழகி!’

    தாய்லாந்துக்கு வந்தபோது அந்நாட்டுப் பெண் ஒருத்தியைக் கண்டபோது, ஓர் அயல்நாட்டுக்காரருக்கு இப்படித் தோன்றியதாம். பெருமுயற்சியுடன் அவளை மணந்துகொண்டார்.

    இதைப் படித்த நான் பேராவலுடன் பக்கங்களைப் புரட்டினேன், அவள் புகைப்படம் இருக்கிறதா என்று பார்க்க.

    ‘இவளையா அழகி என்றார்!’ என்ற வியப்புதான் எழுந்தது.

    நான் அவளது தோற்றத்தை வைத்து எடைபோட்டேன். அவரோ, அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்.

    உடலழகு எத்தனை காலம் நீடிக்கும்?

    முன்பெல்லாம் யாராவது ஒரு கல்யாணத்திற்குப் போய்வந்தால், பிற பெண்கள் அக்கறையாக விசாரிப்பார்கள்: ‘பொண்ணு அழகா இருக்காளா?’

    (அழகாக இல்லாவிட்டால் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாதா?)

    ஒரு பிள்ளை பெற்றதுமே சிலர் பருமனாகி விடுகிறார்கள். ‘அழகு!’ என்று அவளை மணந்தவன் ஏமாற்றத்துக்கு ஆளாகலாம். ஒரு சிலர், அவள் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் பரிவும் காட்டுவதைக் கண்டு சமாதானம் அடைவதும் உண்டு.

    கதை

    மிஸ். ஹோ தன் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உச்சரிப்பாள். அதிநாகரீகமாக வெட்டப்பட்ட தலைமுடி, முக ஒப்பனை, உடற்கட்டு ஆகியவைகளிலும் அவள் எடுத்துக்கொள்ளும் பிரயாசை பிற இளம்பெண்கள் பொறாமையுடன் வெறிப்பதிலிருந்து புரியும். அதனால் அவளுடைய கர்வம் ஓங்க, தோற்றத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்துவாள்.

    தன் புற அழகில் மிகுந்த அக்கறை செலுத்தியவளுக்கு தன்னைவிடச் சிறந்த யாரையாவது பார்க்க நேர்ந்தால் பொறாமை கிளர்ந்துவிடும்.

    அந்தப் பெண் வேறு ஏதாவது துறையில் இருப்பாள். ஆனாலும், அழகில் தன்னைவிட மிகச் சுமார் என்று மதிப்பிட்டுவிட்டு, `அவளுக்கு இவ்வளவு கௌரவம் கிடைக்கிறதே!’ என்று மாய்ந்துபோவாள்.

    பொறாமை அழகைக் கெடுக்கும்.

    ‘சின்ன வயசில பன்னிக்குட்டிகூட அழகாத்தான் இருக்கும்!’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள். அந்த வயதில் மனதில் களங்கமிருக்காது. அதுவே அழகாகத் தோன்றும்.

    வயது ஏற ஏற, எதற்கெடுத்தாலும் போட்டி, பொறாமை என்று பல குணங்கள் எழுந்துவிடுகின்றனவே! அவைகளை அடக்காதவர்களின் கண்களில் அழகு குறைந்து காணப்படும்.

    அழகிற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை.

    சில முதியவர்களைக் கண்டு, ‘இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார்களே!’ என்று ஆச்சரியப்படுகிறோம்.

    அவர்களுடைய அழகின் ரகசியம் என்ன?

    அன்பும் நேர்மையும் கொண்டவர்கள் என்றும் அழகாகத் தோற்றமளிப்பார்கள். அவர்கள் பல தோல்விகளை, துயரங்களைத் தாண்டி வந்திருப்பார்கள். அவைகளால் ஒரேயடியாக இடிந்துபோகாது, `பிறரும் நம்மைப்போல் இதையெல்லாம் அனுபவிக்கவில்லையே!’ என்று எண்ணி வருத்தமோ, ஆத்திரமோ கொள்ளாது எல்லோரிடமும் கருணை காட்டுவார்கள்.

    இயற்கையை ரசிப்பதற்கும் இத்தகைய நுண்ணிய உணர்வு வேண்டும். பரபரப்பான உலகில் வாழ்கிறவர்களின் எண்ணப்போக்கு இப்படி இருக்கும்: ‘சூரியன் தினமும்தான் உதிக்கிறது, மறைகிறது. சூரியோதயத்திலும், அஸ்தமனத்திலும் அப்படி ரசித்துப் பார்க்க என்ன இருக்கிறது?’

    கோலாலம்பூர் ஜனசந்தடியில் வாழ்ந்து பழக்கப்பட்ட இரு இளம்பெண்கள் அண்டைநாடான தாய்லாந்திலுள்ள ஒரு தீவிற்குப் போனார்கள்.

    ‘இங்கு கார் சத்தமே கேட்கவில்லையே! எதையோ இழந்தது போலிருக்கிறது,’ என்று ஒருத்தி அங்கலாய்க்க, அவள் தோழியும் ஒத்துக்கொண்டாள்.

    கடலும், அதைச் சுற்றியிருந்த அழகும் இவர்கள் கண்களில் தென்படவில்லை.

    பிறர் பார்த்து ரசிக்காததால் இயற்கைக் காட்சிகள் அழகற்றவை என்றாகிவிடுமா?

    நம்மைப் பிறர் ‘அழகு’ என்று புகழ்ந்தால்தான் அழகானவர்களா?

    தன் குஞ்சு பொன்குஞ்சு என்று காக்கை நினைக்குமாம். மனிதத் தாய்மார்கள் அனைவரும் அப்படி இருப்பதில்லை.

    கதை

    என் சக ஆசிரியை மிஸஸ் சாங் நீண்ட விடுமுறை நாட்களிலும் வேலையை இழுத்துப் போட்டுக்கொள்வாள் – பிற பள்ளிகளில் நடக்கும் தேர்வுக்கூட கண்காணிப்பு என்ற பெயரில்.

    மற்ற ஆசிரியைகளோ, அத்தொல்லையிலிருந்து எப்படித் தப்பலாம் என்று வழிகளைத் தேடுவார்கள்.

    அதனால் நான் ஆச்சரியப்பட்டு கேட்டபோது, “என் தந்தை தன்னைப் பார்க்க வரும்படி அழைப்பார். அதைத் தவிர்க்கத்தான்!” என்றாள் மிஸஸ் சாங்.

    அவளுடைய பெற்றோர் வேறு ஒரு ஊரில் வசித்தார்கள்.

    “என் அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது. சிறுவயதிலிருந்தே என்னை, `அவலட்சணமாக இருக்கிறாய்!’  என்று கரித்துக்கொட்டுவாள். என் தங்கை அழகு என்று அவளைத்தான் பிடிக்கும்,” என்று உணர்ச்சியற்ற குரலில் தொடர்ந்தவளுக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கும்.

    “இன்றும், என் மகளைவிட தங்கையின் மகளைத்தான் பிடிக்கும். என்னைத் திட்டுவதையும், ‘அழகில்லை’ என்று பழிப்பதையும் நிறுத்தவில்லை. அதனால் எனக்கு அங்கு போகப் பிடிப்பதில்லை. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல முடியுமா? ‘வேலை வந்துவிட்டது’ என்று சொல்லி தப்பித்துக்கொள்வேன்”.

    சராசரி சீனாக்காரிகளைப்போல் மூக்கு சப்பையாக, சிறிய கண்களுடன் இருப்பாள் மிஸஸ் சாங். ஆனால், தாயின் பழிப்பு மனதில் தேங்கிவிட, ‘இவள் விகாரமாக இருக்கிறாள்’ என்று ஒரே பார்வையில் பிறர் எடைபோடுவதைக் கேட்டிருக்கிறேன்.

    தாய் ஏற்காததால் அவளுக்குத் தன்னைத்தானே ஏற்க முடியவில்லை. தன்னம்பிக்கை குறைய, பார்ப்பவர்கள் அனைவரைப்பற்றியும் இளக்காரமாக எண்ணிப் பேசுவாள்.

    இதற்கு நேர் எதிரானவள் குழந்தை சமந்தா.

    அவளுக்கு நான்கு வயதானபோது, `நீ ரொம்ப அழகு!’ என்று எல்லாரும் புகழ, ‘நான் ரொம்ப அழகு. இல்லே?’ என்று திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தாள்.

    இது கர்வமில்லை. நல்லதோ, கெட்டதோ, தன்னைப்பற்றி பிறர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்பது குழந்தைகளின் வழக்கம்.

    அழகிற்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காது, புத்திசாலி! சமத்து!’ என்று நற்குணங்களைப் பாராட்டிப் பாருங்கள், அப்படியே நடப்பார்கள்.

    புற அழகைப் பாராட்டிக்கொண்டே இருந்தால், அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றும்.

    ‘அழகு’ என்று பலரிடமிருந்தும் பாராட்டு கிடைத்துவிட்டால், அதிலேயே திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. ‘கஷ்டப்பட்டு அறிவை வளர்த்துக்கொள்வானேன்!’ என்று தோன்றிவிட, இப்படிப்பட்ட மாணவிகள் படிப்பில் சோடையாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

    ஒரு துணுக்கு

    அவள் அழகு அவளுடைய தந்தையிடமிருந்து வந்தது.

    அடேயப்பா! அவ்வளவு அழகா அவர்?

    இல்லை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்பவர்.

    வயதாகிவிட்டதால் காணாமல் போய்விட்ட புறஅழகை அறுவைச்சிகிச்சைமூலம் திரும்பக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள் நடிகையர்.

    “பணக்காரராகப் பிறந்து, ஏழையாகப் போவதுபோல்தான் அழகும்!” என்று அழகின் நிலையாமையை அலசுகிறார் அமெரிக்க நடிகை ஜோன் காலின்ஸ்.

    அறிவுதான் எந்த வயதிலும் அழியாதது.

    இது புரிந்து, ‘மூக்கும் கண்ணும் இயற்கையில் அமைந்தது. இதில் நான் பெருமைப்பட என்ன இருக்கிறது!’ என்ற மனப்பாங்கை வளர்த்துக்கொண்டால் அகமும் அழகாகும்.

    Share