வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-31

0
1

தி. இரா. மீனா

மும்மடிக்காரியேந்திர

மும்முடிக்காரி என்ற பெயரால் இவர் அரசராக இருந்திருக்கலாமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ’மகாகன தொட்டதேசிகார்ய குரு பிரபுவே’ என்பது இவரது முத்திரையாகும்.

 1. “பக்தியெனும் பாலை மனதுள் உறையவைத்து
அதிலிருந்த கெட்டியான தயிரை
உடலென்னும் பாத்திரத்தில் நிரப்பி
தத்துவமென்னும் மத்தால் கடைந்து
இலிங்கமென்னும் வெண்ணெய் தெரிய அதையெடுத்து
ஞானக் கனலில் பக்குவப்படுத்தி
இயற்கை மணத்துள் விளங்கும் நெய்யைப் பருகும்
ஆற்றலால் ஆன்மா இலிங்கமானது பாராய்
மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

2. “பகலிருக்க இருளுண்டோ?
இருளிருக்கப் பகலுண்டோ?
விழித்திருக்க உறக்கமுண்டோ?
துன்பமிருக்க இன்பமுண்டோ?
தாங்கள் காட்சியளிக்க நான் காட்சியளிப்பேனோ?
நான் காட்சிதர தாங்கள் காட்சி தருவீரோ?
நீங்களிருக்க நானில்லை நானிருக்கத் தாங்களில்லை
மகாகன தொட்ட தேசிகார்ய குருபிரபுவே“

மெரேமிண்டய்யா

‘ஐகட்ட தூரராமேஸ்வர இலிங்கா’ இவரது முத்திரையாகும்.

1. “அங்கத்திலிருந்து அங்கை வந்தாய்
அங்கை இருந்து அகமேன் வாராய் ஐயனே ?
நீ கேட்டு நான் பாடேன் செவி வாய் வலியன்றோ ஐயனே
எக்காலும் உனக்கு இறப்பில்லை எனக்கும் பிறப்பில்லை
அடங்காது உன்னுடல் சுருங்காது என்மனம்
செயலென்னும் பாசியில் சிக்கி
உயர்வறியாமல் தடுமாறுகிறேன்
ஐகடத்துக்குப் புகலிடம் சொல்வாய்
ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமே“

2. “உணவாசைக்கு ஒழுக்கம் கெட்டு
ஐம்புலனாசைக்குப் பற்றினை விட்டு
அனைவரின் நட்பால் ஏமாற்றம் தொட்ட
வினைப்பயனின் உடலுடையோர்க்குண்டோ உயர்பக்தி
ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கம் அறியும் வரையில்?”

 3. “சத்திரியன் சூத்திரன் வைசியன் பிராமணனெனும்
தொழில் எதுவானாலும்
ஆற்றுவதில் பொய்யாமை வேண்டும்
சிவனின் எழுத்தது, பசுபதியின் நிலையது
ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமது.”

4. “தன்னைத் தானறியின் தன்னறிவே குரு
தானே இலிங்கம், தன்னுறுதியே ஜங்கமம்
இவ்வகை மூன்றும் ஒன்றாயின்
ஐகடத்தூர் இராமேஸ்வர இலிங்கமாம்.”

மேதர கேதய்யா:

கூடை பின்னுவது இவரது காயகம். ’கவரேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

1. “பக்தனுக்கு இன்பமும் ஒன்றே,துன்பமும் ஒன்றே,
வறுமை செல்வம் இரண்டும் ஒன்றே,
நினைக்காதிருந்தால் சரணருக்கு அதுவே கேடு
ஜங்கமனென உறுதியெடுத்து,
தன்னெதிரில் பிறரை அழிப்பதற்குத்
தன்னுடலைக் காப்பாற்றினால்
அன்றே தீர்த்தப் பிரசாதத்திற்கு தூரம், கவரேஸ்வரனே”

2.  “முதலில்லாமல் இலாபமுண்டோ?
எதிர்பார்ப்பின்றித் தேர்வுண்டோ?
குருவின்றி இலிங்கமுண்டோ?
இப்படி,பொய்யான வாக்குறுதிக்கு வெட்கினேன் கவரேஸ்வரனே“

மைத்துன ராமய்யா

ஆந்திர மாநிலதைச் சேர்ந்த இவர் அப்பாவியான இயல்புடையவர். கல்யாண் நகர் வந்து சரணர்களோடு கலந்து தன் அறியாமையால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். சிவ -பார்வதியைத் தன் அக்கா மாமனாக எண்ணி ’மைத்துனன் ராமையா’ என்று தன்னை அழைத்துக் கொண்டதாகச் செய்தியுண்டு. ’மகாலிங்க சென்னராம’ இவரது முத்திரையாகும்.

1. “சரணர் வரவுகண்டு
சிரம்தாழ்த்திக் கரம் குவிக்கவேண்டும்
சரணமெனில் மனம் ஒப்பாது
அன்றைய இன்றைய பயன், இலாபம், பக்தியறியாமல்
சரணமெனில் உள்ளம் ஒப்பாது.
செல்வரென நம்பியும் நம்ப இயலாமலும்
மகாலிங்க சென்னராமேஸ்வரன் என்னைப் பார்த்துநகைக்கிறான்.”

மோளிகே மகாதேவி

காஷ்மீர் அரசபரம்பரையைச் சேர்ந்த மாரய்யா மோளிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச்சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்றவரை சிவசாரணர்களுக்கு உணவுபடைத்து அன்புகாட்டி வாழ்ந்தனர். ‘என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா’ இவரது முத்திரையாகும்.

1. “அம்பெய்தியவரை அறிவேன்
எய்த அம்பு திரும்பும்படி செய்தவரையறியேன்
வழிபாடு செய்தவரையறிவேன்
வழிபாட்டு இலிங்கம் அங்கத்தில் ஊடுருவியதறியேன்
சொல்லுக்குச் செயல்,செயலுக்குச் சொல்லெனும்
இவ்விரண்டும் ஒன்றானவரையறியேன்
இவ்விரண்டும் சித்தியடைந்து சித்தானந்தமானால்
என்னய்யப் பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜூனன்
ஞானச் செயலில் உறுதியுடையோனுக்கன்றி
பிறருக்கு அருள்வதில்லை”

2. “பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
செயல்படுதலும் அறிவும் இணையானவை
இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
என்னையப்பிரியன் இம்மடி நிக்களங்க மல்லிகார்ஜுனா”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.