Blog

  • கதை வடிவில் பழமொழி நானூறு – 6

    கதை வடிவில் பழமொழி நானூறு – 6

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 13

    அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
    நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
    கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
    அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு‘.

    பழமொழி- அம்பு விட்டு ஆக்கறக்குமாறு

    அப்பா இந்த செய்தித்தாளப் பாத்தீங்களா. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைனு போட்டிருக்கு. பத்தாம் வகுப்பு படிக்கும் என்மகன் செல்வனின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

    முன்பெல்லாம் இந்தமாதிரி செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லதான். பத்தோடு பதினொன்றாக வாசித்துவிட்டு மறந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் இந்தமாதிரி செய்திகள் மனச உலுக்குது.

    எங்க முழுச்செய்தியையும் வாசி மகனுக்குக் கட்டளையிட்டுவிட்டு முகச்சவரம் செய்ய கண்ணாடி முன் அமர்ந்தேன்.

    செல்வன் வாசிக்க ஆரம்பித்தான். ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தற்கொலை செய்துகொண்டான். ராஜஸ்தான் மாநிலம் ரேவடி எனும் கிராமத்தில் வசிப்பவர் சதீஷ் சவுகான். அவர் தன் மகனை ஐ.ஐ.டியில்படிக்கவைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் சிறிதுசிறிதாகப் பணம் சேர்த்து கோட்டா நகரின் அருகேயுள்ள மனஸ்வாத் எனும் பெயர் போன பயிற்சிப்பள்ளியில் தன் மகனைச் சேர்த்துவிட்டார்.  பத்தாம் வகுப்பிற்குப் பின்அங்கு சேர்ந்த ஹேப்பி என்ற பெயர்கொண்ட அம்மாணவன் பதினொன்றாம் பன்னிரெண்டாம் வகுப்புடன் சேர்த்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்தார். நுழைவுத் தேர்வு முடிவுகள் எந்த நேரமும் வெளியிடப்படும் எனும் அறிவிப்பைக் கேட்டதிலிருந்து ஹேப்பி சரியாக உணவு உண்ணாமலும் நண்பர்களுடன் பேசாமலும் இருந்திருக்கிறார். கடைசியில் மன அழுத்தம் அதிகமாகி இம்முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணைப்படி அம்மாணவன் அமைதியானவர், ஒழுக்கமானவர். கடுமையாக முயற்சித்துப் படிப்பவர் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டதாகவும், சகமாணவர்கள் அவர் பரோபகாரி. கோபப்படவே மாட்டார் எனப் பாராட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் இப்படி ஒரு கொடுமையான முடிவை எடுக்கக் காரணம் என்ன?

    அவர் கடைசியாக எழுதி வைத்திருக்கும் டயரி குறிப்பில் முன்பெல்லாம் பாசமாக இருந்த என் அப்பா  நான் என்ன மதிப்பெண் எடுத்தாலும் இன்னும் முயற்சி வேண்டும் எனக் கடுமையாகவே பேசுகிறார். வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை. என் உயிரே போனாலும் கடுமையாக முயற்சித்து ஐ.ஐ.டி க்குள் நுழைந்து என் அப்பாவின் அன்பை மீண்டும் பெறுவேன் என்று எழுதியுள்ளார்.

    செல்வன் வாசித்துமுடித்தவுடன் என் மனம் கனத்தது. அந்தத் தவறை நான்  செய்யக்கூடாது என எனக்குள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே வெளியில் பேசலானேன்.

    கன்னுக்குட்டிய குடிக்கவிட்டுட்டு பாலக் கறந்தாதான் பசுமாடு நல்லா பால் கொடுக்கும். அது இல்லாம அது மேல அம்ப விட்டு துன்புறுத்திப் பால் கறந்தா எப்டி இருக்குமோ அப்படித்தான் ஹேப்பியோட வாழ்க்கையில அவங்க அப்பா செஞ்ச வேல. அன்பா பேசி ஊக்குவிச்சிருந்தா இந்த நெலமை வந்திருக்குமா. பாவம் அந்தப்பையன். நான் இப்போ சொன்னது உன் தமிழ் பாடத்துல பழமொழி நானூறுல இருக்குற பழமொழிதான். அம்பு விட்டு ஆக்கறக்குமாறு.

    சொல்லிவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.

    பாடல் 14

    முயலலோ வேண்டா; முனிவரை யானும்
    இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
    கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
    அயலறியா அட்(டு)ஊணோ இல்‘.

    பழமொழி – அயலறியா அட்டூணோ இல்

    செண்பகம் உன்னைய இத்தன வருசத்துக்குப் பிறகு பாத்ததுல ரொம்ப சந்தோசம். நம்ப ரெண்டுபேரும் பக்கத்துப்பக்கத்து வீட்ல இருக்கறப்போ உம் பிள்ள சுரேஷ் எங்க வீட்லயே கெடயா கெடப்பான். இப்போ எப்படி இருக்கான்? நான் ஆரம்பித்தேன்.

    என் புள்ளயா?  சென்னையில கல்யாணத்துக்கு உதவற கம்பெனி வச்சு நடத்தறான். வருமானம் நல்லா வந்துக்கிட்டுருக்கு. வயசுதான் ஏறிக்கிட்டே போகுது. ஏதாவது தெரிஞ்ச வரன் வந்தாச் சொல்லு. அவன் எவ்ளோ சாதுனு உனக்குத் தெரியுமே. இப்பவும் அந்தக் குணம் மாறல. யார்கிட்டயும் அதிகம் பேசமாட்டான். தான் உண்டு தன் வேல உண்டுனு இருக்கான். இது செண்பகம்.

    ஆச்சர்யமா இருக்கே. அவன் குணத்துக்கு அந்த வேலய அவன் எப்டிப் பாக்கறான். ஒரு ஜோடியச் சேத்து வைக்கறதுன்னா சும்மாவா. எவ்ளோ பேச்சு பேசணும்.

    சரி அந்த வேல பாக்கற அவனுக்குத் தனக்கு ஒரு பொண்ணு பாத்துக்க முடியாமலா போச்சு. ஒண்ணும் சரியா பிடிபடல. உங்கிட்ட அவன் ஏதொ மறைக்கறான்னு மட்டும் தெரியுது. இது நான்.

    என்ன நீ வார்த்தைக்கு வார்த்த அந்த வேல அந்த வேல ங்கற படபடக்கத் தொடங்கினாள் செண்பகம். அவன் என்ன மாமா வேல பாக்கறானா இல்ல தரகர் வேல பாக்கறானா. ஒரு அறைக்குள்ள கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து பாக்கற வேல. அதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு.

    கல்யாணம் பண்ணிக்க விரும்புற பெண்ணோ அல்லது ஆணோ மத்தவங்களப்பத்தி சரியான தகவலத் தெரிஞ்சிக்கிறதுக்காக இவன் கம்பெனிக்கு வருவாங்க.

    இப்பல்லாம் முகநூல், ட்விட்டர் இந்த மாதிரி சோஷியல் மீடியாக்கள் இருக்குல்ல. அதுல அவுங்க எழுதற தகவல்கள் சரியானதானு ஒத்துப் பார்ப்பான். அந்த நபருக்கு எந்த மாதிரி நண்பர்கள் இருக்காங்க அவங்களோட பொழுது போக்கு என்ன இதையெல்லாம் தொடர்ந்து ஒருமாதம் கண்காணிச்சுச் சொல்லுவான். தேவைப்பட்டா அந்த நபரையோ அவருடைய நண்பர்களையோ பின் தொடர்ந்தும் கண்காணிப்பாங்க. இதிலேந்து வேலை பாக்கற அலுவலகம். மாதச் சம்பளம், பொழுதுபோக்கு, இதையெல்லாம் தெரிஞ்சுக்க முடியறதோட மட்டுமில்லாம நண்பர்கள் குழுவ வச்சு பொறுப்பான நபரா அல்லது ஊதாரியா, ஒழுக்கமுள்ளவராங்கற தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம்.

    ‘அயலறியா அட்டூணோ இல்‘ ங்கற பழமொழி மாதிரிதான் இந்த வேலயும். மீனைப் பக்கத்து வீட்டுக்குத் தெரியாம எப்டி சமைத்துச் சாப்பிட முடியாதோ அது மாதிரி நண்பர்களப் பாத்தா போதும் ஒருத்தங்களோட இயல்பு எப்டினு கணிச்சிடலாம்னு அப்டிப் பண்றாங்க.

    ஓ இதுல இப்டி வேற ஒரு விசயம் இருக்கா. மீன்வாசத்துக்கு இப்படி ஒரு பழமொழியா. நம்ம முன்னோர்கள் அறிவுரை சொல்லணும்னாலும் சாப்பாட்ட வச்சிதான் பேசுவாங்க போல.

    புதிய விசயம் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் செண்பகத்திடமிருந்து விடைபெற்றேன் நான்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-33

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-33

    தி. இரா. மீனா

    இலத்தேய சோமய்யா

    ’இலத்தேய சோமய்யன’ என்பது இவரது முத்திரையாகும்.

    “காயகம் எதுவாக இருப்பினும் தன்காயகமெனக் கருதி
    குரு இலிங்கம் ஜங்கமத்தின்  முன்வைத்து
    பிரசாதம் அர்ப்பணித்து. மிஞ்சியதை எடுத்து
    நோயால் வருந்தி, வலியால் கதறி
    மூச்சு நின்றால் இறந்து போ, இதற்கேன் கடவுளின் உதவி,
    பாபு இலத்தேய சோமனே?“

    வசனபண்டாரி சாந்தராசா

    இவர் கல்யாண் நகரத்தைச் சேர்ந்த சரணர்கள் இயற்றிய வசனங்க ளைத் தொகுத்து வைத்த வசன நூல் காப்பகத்தின் [வசன பண்டாரா] மேற்பார்வையாளராக இருந்தவர். வசனங்களை எழுதிக் கொள்வதும், சேகரிப்பதும், பாதுகாப்பதும் இவரது காயகமாக இருக்க வேண்டும். அந்தணராக இருந்த இவர் பசவேசரின் தொடர்பிற்குப் பிறகு சரணரானார் என்று கூறப்படுகிறது. ’அலோக்கனாத சூன்ய கல்லினொளகாத’ இவரது முத்திரையாகும்.

    “மலத்தை அப்புறப்படுத்தலாமே தவிர
    மும்மலங்கள் அல்லாததை அகற்றுவதா ஐயனே?
    பேசமுடியுமேயன்றி சிவனை அறிய முடியுமா ஐயனே?
    பணியாற்ற முடியுமேயன்றி பகைவருடன் சேரமுடியுமா ஐயனே?
    போர் வகையைப் பேசமுடியுமேயன்றி போரிட முடியுமா ஐயனே?
    சொல் சேர்த்துப் பாடம் சொல்பவர் சிவனை அறிவாரோ?
    இச்சொல்லின் சொல்லுக்கஞ்சி
    அலோகநாத சூன்ய கல்லொளகே ஆனேன் கேளாய்”

    வீரகொல்லாளா

    இவர் இயற்பெயர் காட்டகூட்ட. இவரின் காயகம் ஆடு மேய்ப்பது. ’வீர பீரேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

     “கல் இலிங்கமல்ல, உளியின் முனையில் உடைந்தது
    மரம் கடவுளல்ல, தீயில் கருகியது
    மண் கடவுளல்ல, நீரில் கரைந்தது.
    இத்தனையும் அறிகின்ற அறிவு கடவுளல்ல
    ஐம்பொறிகளுட்பட்டு ஆற்றலிழந்தது
    எஞ்சிய மகாலிங்கம் யாதெனில்
    கண்டவர்களோடு கொண்டாடாமல்
    கொண்ட ஒழுக்கத்தில் மற்றொன்றுடன் இணையாமல்
    நம்பிக்கை பெற்று நிற்பதால் நிஜலிங்கமன்றி
    மற்றது மற்றதை அறியா நிலையில் நின்றவனே
    சர்வாங்கலிங்கன் வீரபீரேஸ்வரலிங்கத்துக்கு ஆட்பட்டவன்

    வேதமூர்த்தி சங்கண்ணா

    ’லலாம பீம சங்கமேஸ்வர இலிங்க’ இவரது முத்திரையாகும்.

    “பொழுதறிந்து குரலெழுப்பும் சேவலுக்கு எத்தகைய அறிவது?
    இனிப்பின் இடமறியும் எறும்புக்கு எத்தகைய அறிவது?
    தானுண்ணாமல் குட்டியைக்காக்கும் பன்றிக்கு எத்தகையஅறிவது?
    இத்தகு உயிரின் வித்தைகள் எல்லாம் ஞானத்துள் அடங்கும்
    அறிந்து நடப்பவன் வேதம் அறிந்தவனாவான்
    அறிந்து நடப்பவன் சாத்திரத்திற்கு உறவாவான்
    அறிந்து நடப்பவன் புராண நற்பேற்றினன்
    அறிந்து நடப்பவன் ஆகமங்களின் செல்வன்
    ஐந்தெழுத்து ஆறெழுத்திற்கு இதுவே நிலையாம்
    உலகின் மூலமானவனை அறிந்து
    சோஹம் கோஹம் அறிந்து [தானெனும் செருக்கு
    அவ்வுண்மையை மகாலிங்க உடலென உறுதி செய்து
    பேசி நடக்க முடிந்தவனே வேதமறிந்தவன் காணாய்
    லலாம பீமசங்கமேஸ்வர இலிங்கமான அடியான்“

    வைத்திய சங்கண்ணா

    ’மருள சங்கர பிரிய சித்தராமேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    “வாழைக்கு விளைச்சல் ஒன்றே; பக்தனுக்குப் பேச்சொன்றே
    பற்றற்று மீண்டும் பற்றினால் செத்த நாயின் நாற்றமது
    நித்தியக் கடன் தவறி, மீண்டும் நற்செயலாற்றி
    தீவழி நடந்து மீண்டும் செல்வம் கொடுத்து
    உயர்பக்தரிடம் தவறு திருத்திக் கொண்டேனெனும்
    அந்தணரைக் கண்டால்
    மருளசங்கர பிரியன் சித்தராமேஸ்வரன்
    இலிங்கமானாலும் சேர விரும்ப மாட்டான்“

    சங்கர தாசிம்மையா

    ’நிஜகுரு சங்கரதேவ’ இவரது முத்திரையாகும்.

    “சாதுவான மான், காகம், குயில் போலிருக்க வேண்டாமோ?
    வீணே அலைந்து திரியும் நீசரின் மாசினைப் பாராய்
    பகலிரவென அலைபவரைக் கண்டு அருவருப்பானேன்
    அறிந்தால் சரணர், மறந்தால் மனிதர்
    குப்பைக் கூளங்களை ஊர்தோறும் சுமந்து விற்கின்ற
    காவி உடுத்தியவரை விரும்பான் நிஜகுரு சங்கரதேவன்“

    சிவநாகமய்யா

    ’நாகப்பிரிய சென்ன ராமேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    “உடலில் இலிங்கமிருக்க ஈனரோடிணையக் கூடாது
    உடலில் இலிங்கமணிந்த பிறகு
    இலிங்க முதன்மையோடு செயல்பட வேண்டுமேயன்றி
    அங்கத்தை முதன்மையாக்கக் கூடாது
    இலிங்கமொடு உறவாகி அங்கத்தை முன்னிலைப்படுத்துவோர்
    இலிங்கத்துக்கு தூரமய்யா நாகப்பிரிய சென்னராமெஸ்வரனே.”

        [தொடரும்]

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 1

    பரிமேலழகர் உரைத் திறன் – 1

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விலங்குகளும் வித்தகரும் ஒன்றா?

    முன்னுரை

    காலத்தால் முற்பட்டிருப்பது எப்படி பெருமையோ அப்படியே காலத்தால் பிற்பட்டிருப்பதுமாகும். தடந்தெரியாத் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் தடங்காட்டினார் என்றால் பின்னாலே வந்த நச்சினார்க்கினியர் அத்தடத்தைச் செப்பனிடும் வாய்ப்பினைப் பெற்றார். பெறவே அப்படிச் செப்பனிடுவதற்குரிய பன்னூல் அறிவு பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. அதனால் தொல்காப்பியம், பத்துப்பாட்டு முதலிய நூல்கள்மேல் கூடுதல் ஒளி பாய்ந்தது. திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரில் இறுதியானவர் பரிமேலழகர். அதனால் தன்னுடைய முன்னோடிகள் எழுதிய ஒன்பது உரைகளையும் நோக்கியறியும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவருக்குக் கிட்டிய அந்த வாய்ப்பு ஏனையோருக்குக் கிட்டவில்லை. அது இயற்கை நியதி. கிட்டிய அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் குன்றா(க) உரையெழுதினார் பரிமேலழகர். அன்னாருடைய உரையருமையைத் துளித் துளியாகப் பதிவிடுவது நலம் பயக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடர் வடிவமைக்கப்படுகிறது.

    விளக்கத்திற்குரிய குறட்பாவும் அதிகாரப் பொருண்மையும்

    திருவள்ளுவர் மெய்யுணர்தலை அறத்துப்பால் துறவறவியலிலும் அறிவுடைமையைப் பொருட்பால் அரசியலிலும் வைத்த காரணம் பற்றிய ஆய்வு பின்னாளில் தொடரும். ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறட்பாவாக அமைந்த,

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 1

    என்னும் குறட்பாவின் உரை அருமையே இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. பரிமேலழகரின் குறளுரையருமையைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் அதிகாரம் ‘கல்லாமை’ என்னும் பெயர் தாங்கியது என்பதை நோக்க வேண்டும். ‘கல்லாமை’ என்பது ‘கற்றலைச் செய்யாமை’ என்னும் தொழிலைக் குறித்தது. ஆனால் அவ்வதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களும் கல்லாமையாகிய தொழிலைப் பற்றிப் பேசாது கல்லாமையினால் வரும் இழிவை, அதாவது கல்வியில்லாதவன் சமுதாயத்தில் படும் மானக்கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால் அதிகாரத் தலைப்பு தொழிலைக் குறிப்பதாக அமைய அதிகாரப் பொருண்மையோ அதனால்வரும் இழிவுகளைத் தொகுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அதாவது கல்லாமை கற்றலைச் செய்யாமையான் வரும் இழிவு என ஆகுபெயராய் நின்றது. குறட்பாக்களை முற்றோதிய பரிமேலழகர் இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு,

    “அஃதாவது (கல்லாமை) கற்றலைச் செய்யாமை என்றது, அதனின் ஆய இழிபினை” 2

    என்று சொல் விளக்கம் தருகிறார். அதிகாரத்தின் சொற்பொருள் விளக்கத்திலேயே பரிமேலழகரின் ‘உரைத்தாண்டவம்’ தொடங்கிவிடுவதைக் காணலாம்.

    பரிமேலழகரின் உரை விளக்கம்

    இந்தக் குறட்பாவைப் பரிமேலழகர் வழக்கம் போல் சீர்பிரித்து உரை கூறியிருக்கிறார். “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”3 என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. பரிமேலழகர் தம் உரைப்பகுதியில் யாண்டும் பதவுரை கூறும் வழக்கமிலர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    கட்டுரையாளர் விளக்கம்

    மேற்கண்ட பத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உரைப்பகுதியில் அடைப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பது பரிமேலழகர் தாம் கொண்ட கருத்திற்கேற்ப வருவித்துக் கொண்ட தொடர். இதற்கான தொடர் குறட்பாவில் இல்லை. பாட்டில் உவமங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்தியலைத்தான் பரிமேலழகர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.

    குறட்பாவின் அமைப்புச் சிக்கல்

    குறட்பாவில் விலங்கொடு மக்களை ஒப்பிட்டிருக்கும் முதற்பகுதிக்கு இணையாகக் ‘கற்றாரோடு ஏனையவர்’ என்னும் மறுபகுதி தரப்பட்டுள்ளது. குறட்பாவில் உள்ள இவ்வண்ணமே நிரல்படுத்தினால் ‘விலங்கொடு’ என்பதற்கு ‘கற்றாரோடு’ என்பதும் ‘மக்கள்’ என்பதற்கு ‘ஏனையவர்’ (கல்லாதவர்) என்பதும் பொருத்தமாக்க வேண்டியதிருக்கும். அப்படி அமைத்தால் பாட்டின் பொருள் இப்படி அமைந்துவிடும்.

    “விலங்கொடு மக்கள் இணையாவார். (அதுபோலக்) கற்றவர் கல்லாதவரோடு இணையாவார்” என்று அமைந்து ‘கற்றவர் விலங்குகள்’ என்றும் ‘கல்லாதவர் மக்கள்’ என்றும் பொருள்படும்”

    இப்படி அமைந்தால் அதிகாரப் பொருண்மையாகிய கல்லாமையது இழிவு சுட்டாததோடு முரண்பட்ட பொருளையும் தந்துவிடும் என்பதை அறியலாம்.

    நிரல் நிறை – பொருள்கோளா? செய்யுளணியா?

    நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் தொல்காப்பியம்,

    “அவற்றுள் நிரல்நிறை தானே
    வினையினும் பெயரினும் நினையத்தோன்றி
    சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல்” 4

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. செய்யுள் தொடர்பான இந்த ஆராய்ச்சி சொல்லதிகார எச்சவியலில் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இதற்கு அடுத்த நிலையில் ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோளை எட்டாக ஆராய்ந்திருக்கும் நன்னூலார் ‘நிரல்’ என்பதைப்,

    “பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
    வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
    நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே” 5

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. இந்த நூற்பாவில் தான் ‘எதிர்நிரல் நிறை’ என்னும் தொடர் பயின்று வந்துள்ளது. இந்த எதிர்நிரல் நிறையணியை (கட்டுரைப் பொருள் விளக்கத்திற்கு மட்டுமாதலின் நேர்நிரல்நிறை விளக்கம் கட்டுரையாளரால் தவிர்க்கப்படுகிறது) விளக்க வந்த சங்கர நமசிவாயர்,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு? 6

    என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் மூன்று பெயர்களும் நின்றான் இருந்தான் கிடந்தான் என முறைமாறி நிற்க, இவற்றை பெயர்ப்பயனிலைகளும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரல் நிறை என எழுதுகிறார். 7 வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என்னும் பொருத்தத்தை இதே வெண்பாவை எடுத்துக்காட்டி உரையெழுதும் தண்டியலங்கார உரையாசிரியர் சுப்ரமணிய தேசிகர் ‘நிரலே நிறுத்தி மாற்றிப் பொருள் கொள்வது’ என எழுதியமைகிறார். தண்டியலங்காரத்தில் ‘எதிர் நிரல்நிறை’ அல்லது ‘மயக்க நிரல்நிறை’ என்னும் சொல்லாட்சிகள் பயிலப்பட்டிருப்பதாக அறியக் கூடவில்லை. இன்றியமையாக் கருத்து என்னவெனின் நன்னூலில் பொருள்கோள். தண்டியலங்காரத்தில் பொருளணி.

    யாப்பருங்கலக் காரிகை நூலாசிரியர், ‘பொருள்கோள்’ என ஒருசொல் உரைத்து ஒழிய, உரையாசிரியர் குணசாகரரோ “நிரல்நிறை மொழி மாற்றம், சுண்ணமொழி மாற்றம், அடிமொழி மாற்றம், பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் என எட்டு வகையாக ஆராயப்படும் என உரையெழுதி,

    “நிரனிறை இரண்டு வகைப்படும் பெயர் நிரல் நிறை, வினை நிரல்நிறையும் என” 8

    அதன் வகைகளைப் பதிவு செய்திருக்கிறார். காரிகையாசிரியர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களைப்போல இதுபற்றி ஏதும் கூறவில்லை. நிரல்நிறை அணிகளுக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டும் குணசாகரர்,

    “இனி முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல்நிறை, மிகையெண் நிரல்நிறை, குறையெண் நிரல் நிறை என்று கொள்வாரும் உளர்” 9

    என்றும் கூறுகிறார். இங்கே இவர் காட்டிய இத்தனை நிரல் நிறைகளுக்கும் பொதுவாக இரண்டு பாடல்களை மட்டும் காட்டியதோடு பொருள்கோளைப் பற்றிய குணசாகர் தனது விளக்கத்தை முடித்துக் கொள்கிறார்.

    அணியிலக்கணம் ஆராயும் வடமொழிச் சார்பு நூலான தண்டியலங்காரத்தில் நிரல்நிறை என்பது செய்யுளுக்கான பொருளணியாகவே கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

    “நிரல்நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை யணியே” 10

    என்னும் அணியிலக்கண நூற்பாவிற்கு உரையெழுதிய தேசிகர்,

    “சொல்லையும் பொருளையும் நேரே நிறுத்தி நேரே பொருள் கொள்வது நிரல் நிறையணி என்னும் அலங்காரமாம். நிரல் நிறுத்துதல் என்னாது ‘இயற்றுதல்’ என்றமையின் மொழிமாற்றிப் பொருள் கொள்வதூஉம் கொள்க” 11

    என்று நூற்பாவிற்கு உரையெழுதி அவ்விரண்டற்கும் பின்வரும் நேரிசை வெண்பாக்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    “காரிகை மென்மொழியால் நோக்கால் கதிர்முலையால் வார்புருவத்தால் இடையால் வாய்த்தளிரால் – நேர் தொலைந்த
    கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
    வல்லி கவிர்மென் மலர்” 12

    என்னும் வெண்பாவில் மென்மொழி, நோக்கு, கதிர்முலை, புருவம், இடை, வாய் எனப் பொருட்களை முன்னர் நிறுத்தி, அவற்றுக்கு நிரலாகக் கொல்லிப்பண், நெடுவேல், கோங்கரும்பு, கரும்புவில், கொடி, மலர் என உவமங்களைப் பின்னர் நிறுத்தி, நேர் நிரல் நிறை என விளக்கம் தருகிறார்.13 அதாவது பொருளின் நிரலுக்கு ஏற்ப (வரிசைக்கு ஏற்ப) உவமங்களின் நிரலும் அமைவதால் இது நேர் நிரல் நிறை அணி என்று பெயராம். இனி,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு?”14

    என்னும் (சங்கர நமசிவாயர் காட்டிய அதே) வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் காஞ்சித் திருப்பதிகளில் வீற்றிருக்கும் பெருமாளின்  கோலங்கள் நின்றான், இருந்தான், கிடந்தான் எனக் கூறப்பட்டுள்ளன. இது முந்தைய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் கோலங்களுக்கு முரணானது. இவை வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என இருந்திருக்க வேண்டும். இவ்வாறு சொற்களை மாற்றி நிரலாக வைத்துப் பொருள் காண்பதற்கு ‘மொழிமாற்றிப் பொருள் கொள்வது’ என உரையாசிரியர் தேசிகர் எழுதுகிறார்.

    தண்டியலங்கார உரை மயக்கம்

    தண்டியலங்காரம் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது தெரியும். தலைப்பிலும் பொழிப்புரையிலும் அணி, அலங்காரம் என்னும் சொற்கள் பயின்று வந்துள்ளன. சொற்களை மாற்றி உரைகாண்கையில், ‘மொழிமாற்றிப்பொருள் கொள்வதூஉம் கொள்க’ 15 என்னும் குறிப்போடு அமைந்துவிடுகிறதேயன்றி அதற்கொரு அணிப்பெயர் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் தண்டியலங்காரத்தைப் பொருத்தவரையில் ‘நிரல்நிறை’ என்பது ஓர் அணிவகை எனவும் அது நிரலாகவும் மாறுபட்டும் அமையும் என்பதுமாகிய இரண்டு கருத்துக்கள் பெறப்படுகின்றன. மயக்க நிரல்நிறை அணி பற்றிய அல்லது பொருள்கோள் பற்றிய எந்தக் கருத்தினையும் தண்டியலங்காரத்தினின்றும் பெற இயலவில்லை.

    நிரல்நிறை அணி பற்றிய சில வரையறைகள்

    தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் ஆகிய நூல்களிலிருந்து கிட்டிய மேற்கண்ட தரவுகளால் பொருள்கோள் அல்லது அணி பற்றிய பின்வரும் கருத்துக்கள் வரையறுக்கப்படுகின்றன.

    • தொல்காப்பியம் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் ஆராய்கிறது. அணியிலக்கண ஆராய்ச்சி அங்கே இல்லை.
    • நன்னூல் ஒன்பது வகையாகப் பொருள்கோளை ஆராய்ந்திருக்கிறது.
    • காரிகையாசிரியர் ‘பொருள்கோள்’ என ஒரு சொல்லை மட்டும் குறித்து அணி பற்றி ஏதும் கூறாத நிலையில் உரையாசிரியர் குணசாகரர் ‘பொருள்கோள்’ என்பதற்கான விளக்கத்தை எட்டு வகையில் ஆராய்ந்திருக்கிறார்.
    • தண்டியலங்காரத்தில் பொருள்கோளைப் பற்றி ஏதுமில்லை. உரையாசிரியர் நிரல் நிறையணியை இரண்டாகப் பகுத்தாராய்ந்திருப்பதோடு அது நிறைவடைகிறது.
    • மயக்க நிரல்நிறை என்பது பற்றிய குறிப்போ விளக்கமோ மேற்கண்ட எந்த நூல்களிலும் எந்தப் பகுதியிலும் ஆராயப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

    இவற்றிலிருந்து ‘நிரல் நிறை’ என்பது பெரும்பாலும் பொருள்கோள்களில் ஒன்று என்பதும் அதனை அணியாகவும் அணியிலக்கணமுடையார் வரித்துக் கொள்கிறார்கள் என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பையோ விளக்கத்தையோ இந்த நூல்களில் இருந்து பெறவியலவில்லை என்பதும் பெறப்படுகின்றன.

    நிரல் நிறை அணி – திருவள்ளுவரும் அழகரும்

    பழந்தமிழ் இலக்கணம் வல்லார்க்கு அணியிலக்கணம் உடன்பாடன்று என்பதும் தொல்காப்பியம் அணியிலக்கணம் பற்றி ஏதும் கூறவில்லை என்பதும் உவமத்தையும் அது பொருட்பகுதியாகவே கருதியிருக்கிறது என்பதும் உரையாசிரியர்களில் சேனாவரையரே அவ்விலக்கணச் சுவையுடையார் என்பதும்  ஆய்வறிஞர்களால் கண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளாகும்.  திருக்குறளுக்கும் இக்கொள்கை பொருந்தும். அணியிலக்கணப் பயன்பாடு பல்கிப் பெருகிய பிற்காலத்தைச் சார்ந்த உரையாசிரியர்கள் பழந்தமிழ் நூல்களை அணியழகோடு நோக்கி உரையெழுதுவதை ஓர் உரைநெறியாகக் கொண்டதன் காரணமாகப் பரிமேலழகரின் உரைகளில் அணியிலக்கணக் குறிப்புக்கள் விரவியுள்ளன. அந்த வகையில்,

    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” 16

    என்னும் குறட்பாவிற்கு,

    “ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டல் ஆகிய அறத்தினையும்  உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்…….நிரல் நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகாவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று.” 17

    என விளக்கம் தருகிறார். இந்த விளக்கத்தில் அன்பும் அறனுமாகிய பண்புகள் எதனுடைய உடைமையெனின் அது இல்லறத்தின் உடைமை என்பது பரிமேலழகரின் நுண்ணியம். இதனை ‘இல்லறம் கடைபோகாமையின்’ என்னும் சொல்லால் குறித்தமை நோக்குக. இந்த விளக்கத்தில் பரிமேலழகர் ‘நிரல் நிறை’ எனக் குறிப்பதோடு அமைந்துவிடுகிறாரேயன்றி ‘அணி’ என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுகிறார். இந்த நெறி பல குறட்பாக்களின் இவர் உரைகளில் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாகும். “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை” 18 “இனமென்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால்” 19 என்பன காண்க. இதனால் அவர் ‘அணி’ என்னும் சொல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார் என்பது பொருளன்று. வேறு சில இடங்களில் முழுமையாக ‘அலங்காரம்’20 என்றே கூறுவதையும் காண முடிகிறது.

    பரிமேலழகர் காட்டும் மயக்க நிரல்நிறை

    ‘குறட்பாவின் அமைப்புச் சிக்கல்’ என இக்கட்டுரையில்  தொடக்கப்பகுதியில் முன்னெடுத்த கருத்துக்களின் மேல் கற்பார் கவனம் ஈர்க்கப்படுகிறது.

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 21

    என்பது குறட்பா. இந்தக் குறட்பா,

    “விலங்கொடு மக்கள் அனையர்
    கல்லாதவரோடு கற்றவர்”

    என்னுமாறு அமைந்திருந்தால் சிக்கல் எழுந்திருக்காது. முதலடியின் பொருண்மைக்கும் அடுத்த அடியின் பொருண்மைக்கும் முரண் நிலவுவதும் முன்பே சுட்டப்பட்டது.

    “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”

    என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. இந்தப் பொழிப்புரையில்தான் அவர் ‘மயக்க நிரல்நிறை’ என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முறையாக நின்றால் நிரல். முறைமாறி நின்றால் மயக்க நிரல். பாட்டின் அமைப்பு எங்கே மயக்கம் நிலவுகிறது? கருத்தில்! அது பற்றி இரண்டாது பத்தியில் ஆராயப்பட்டுள்ளது. எனவே அந்த மயக்கத்தை ஒரு புதிய கோணத்தில் கண்டு நீக்குகிறார் பரிமேலழகர். எது அந்தப் புதிய கோணம் என்றால், “தீயதை நோக்க நல்லதன் நன்மை எவ்வளவு உயர்ந்ததோ நல்லதை நோக்கத் தீயதன் தீமை அத்தனை தாழ்ந்தது! இந்த உயர்வும் தாழ்வும் ‘அத்தனை’ என்னும் அளவு சார்ந்தது. இப்போது பரிமேலழகர் உரையை நோக்கினால் ‘மயக்கநிரல்நிறை’ என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கிறார் என்பது புரியக் கூடும்.

    “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்”22

    எனவே மயக்கம் பொருள்களின் ஒப்பீட்டில் இல்லை. நன்மை, தீமை என்னும் அளவில் இருக்கிறது. முதல் ஒப்பீடு நன்மை. பின்னதில் அந்த ஒப்பீட்டு அளவு தீமை. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,

    “விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு நல்லவர்களோ அவ்வளவு நல்லவர்கள் படித்தவர்களை நோக்கப் படிக்காதவர்கள்! என்னும் கருத்தியலை (குறள் நிரலில் இப்படித்தான் ஐயம் எழும்) பரிமேலழகர் மடைமாற்றம் செய்கிறார் “இல்லை இல்லை! அவ்வளவு நல்லவர்கள் இல்லை அவ்வளவு தீயவர்கள்! என்று. இப்போது புரிகிறதா?

    எனவே மயக்க நிரல் நிறை என்றால் பொருள் மயக்கத்திற்குக் காரணமான நிரல்நிறை எனக் கருத முடியும்.

    நுண்ணியத்தின் மறுவடிவம் பரிமேலழகர்

    இந்தக் குறட்பாவிற்குத் தாம் எழுதிய பொழிப்புரைக்குச் சிறப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். நிதானம், பொறுப்பு, கூரிய நோக்கு, இலக்கண இலக்கியப் புலமை அத்தனையும் அந்த விளக்கத்தில் பொதிந்திருப்பதைக் காணலாம். அவர் விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது.

    “இலங்கு நூல் சாதிப்பெயர். விளங்குதல் – மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” 23

    விளக்கவுரையில் ஒளிந்திருக்கும் பரிமேலழகரின் உரையாளுமை

    • குறட்பாவில் ‘மக்கள்’ என்பது பன்மையாக, ‘விலங்கு’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘விலங்கு’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘விலங்குகளோடு மக்கள்’ என இருக்க வேண்டுமாம்.
    • ‘கற்றார்’ என்பது பன்மையாயிருக்க ‘நூல்’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘நூல்’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘நூற்களைக் கற்றார்’ என இருக்க வேண்டுமாம்.
    • மக்களாகிய பிறப்பே அதற்குரிய சிறப்பாகிவிடாது. மக்களாகிய சுட்டு நிகழ்வதற்குரிய காரணத்தைக் கொண்டால் மட்டுமே அவர் மக்கள் எனக் கருதப்படுவர். “மக்களாகிய சுட்டு யாதன் கண் நிகழும் அது மக்கட்சுட்டு” 24 எனச் சேனாவரையர் எழுதும் உரைப் பகுதியைக் கவனத்திற் கொண்டால் ‘மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாதலின்” என்னும் பரிமேலழகர் உரையின் சிறப்பு அறியலாம்.
    • கற்றல் நிகழ்ந்தாலேயொழிய மானுடத்தால் பயனில்லை என்பார் (கற்றலின் பேரெல்லை பிற உயிர்களின் மேல் அன்பாதலின்) “இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” என்றார்.
    • நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகுகள் பத்து. அவை “சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல்” 25 என்னும் தொடக்கத்தன. அத்தகைய அழகுடைய நூற்களையே பயில வேண்டும் என்பார் ‘விளங்குதல்’ என்னும் சொல்லுக்கு மேம்படுதல் என உரைகாண்கிறார். ‘இலங்குநூல்’ என்பதற்கு ‘விளங்கிய நூல்’ எனச் சொற்பொருள் (பதசாரம்) எழுதி ‘விளங்குதல்’ என்பதற்கு ‘மேம்படுதல்’ என உரைகாணும் நுண்ணியம் காண்க. மேம்பாடு நூலுக்கென்று உணர்க.

    நிறைவுரை

    ஏற்ற தரவுகளைக் கொண்டு இதுகாறும் செய்யப்பட்ட ஆய்விலிருந்து ‘நிரல்நிறை’ பற்றிய இலக்கணம் ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்து வருகிறது என்பதும் அது பெரும்பாலும் பொருள்கோள் வகையில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது என்பதும் அப்பொருள்கோளும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆசிரியன்மார்களால் ஒவ்வொரு வகையான எண்ணிக்கையில் ஆராயப்பட்டு வந்துள்ளது என்பதும் நிரல் நிறை என்பது பெயர் நிரல்நிறை, வினை நிரல்நிறை என்னும் இரண்டான பகுப்பிற்கும் ‘நேர்நிரல்நிறை, எதிர் நிரல்நிறை’ என்னும் வரையறைக்கும் ஆளாகியிருக்கிறது என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பும் எந்த இலக்கண நூலிலும் தெளிவாக இல்லாத சூழலில் அது பற்றிய நுண்ணிய சிந்தனை பரிமேலழகருக்கு அமைந்திருந்தது என்பதும் அந்த நுண்ணியத்தாலேயே ஆய்வுக்குரிய ‘விலங்கொடு மக்கள் அனையர்’ என்னும் குறட்பாவின் பொருள் துலக்கம் பெறுகிறது என்பதும்” ஓரளவு புலனாகலாம். பரிமேலழகர் உரையை மறுக்கின்ற வல்லாளர் பலர் உளர். ஆய்வுக்குரிய இந்தக் குறட்பாவின் நுண்ணியத்தை உணர்வார் பரிமேலழகரின் உரைப்பேராற்றலை உணரலாம்.

    (தொடரும்)

    சான்றெண் விளக்கம்

    1. திருவள்ளுவர்                           திருக்குறள்                                                      கு.எண். 410
    2. பரிமேலழகர்                            மேலது உரை
    3. மேலது
    4. தொல்காப்பியர்                     தொல்காப்பியம் எச்சவியல்            நூ.எண். 887
    5. பவணந்தியார்                         நன்னூல்                                                               நூ.எண். 414
    6. சங்கர நமசிவாயர்               மேலது உரை
    7. மேலது
    8. குணசாகரர்                                 யாப்பருங்கலக்காரிகை உரை      கா.எண். 58
    9. மேலது
    10. தண்டி                                                 தண்டியலங்காரம்                                       நூ.எண். 67
    11. சுப்பிரமணிய தேசிகர்      மேலது உரை
    12. மேலது
    13. மேலது
    14. மேலது
    15. மேலது
    16. திருவள்ளுவர்                                திருக்குறள்                                                             கு.எண். 45
    17. பரிமேலழகர்                                 மேலது உரை
    18. மேலது                                                                                                                                                கு.எண். 1
    19. மேலது                                                                                                                                                கு.எண். 306
    20. மேலது                                                                                                                                                கு.எண். 475
    21. திருவள்ளுவர்                               திருக்குறள்                                                                கு.எண். 410
    22. பரிமேலழகர்                                 மேலது உரை
    23. மேலது
    24. சேனாவரையர்                           தொல்.சொல். உரை                                          நூ.எண். 1
    25. பவணந்தியார்                             நன்னூல்                                                                        நூ.எண். 13

    துணைநூற் பட்டியல்

    1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    2. குணசாகரர் (உ.ஆ.) யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    3. சுப்பிரமணிய தேசிகர் தண்டியலங்காரம் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    4. தண்டி தண்டியலங்காரம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    5. திருவள்ளுவர் திருக்குறள் – பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம், சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    6. தொல்காப்பியர் தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    7. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    8. பவணந்தியார் நன்னூல்
    உலகத் தமிழாராயச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை
    முதற்பதிப்பு – 1999

    Share
  • அமெரிக்காவின் முதல் அணுகுண்டுப் பரிசோதனை

    அமெரிக்காவின் முதல் அணுகுண்டுப் பரிசோதனை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    ஜூலை 16, 2020 அன்று அமெரிக்கா முதல் அணுகுண்டை வெடித்துச் சோதித்துப் பார்த்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அன்று அதிகாலை ஒரு மணிக்கு அணுகுண்டுப் பரிசோதனையின் (இதை டிரினிட்டி (Trinity) என்று அழைத்தார்கள்) தலைவர் விஞ்ஞானி  ராபர்ட் ஓப்பென்ஹைமெர், ராணுவ அதிகாரி லெஃப்டினென்ட் ஜெனரல் லெஸ்லி க்ரோவெஸ்ஸை அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலுள்ள ஒரு பாலைவனத்தில்  – அணுகுண்டை வெடித்துப் பரிசோதிக்கப் போகும் இடத்தில் – சந்தித்து எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்தார்.

    அவர்கள் இருவர் மட்டுமல்ல, நிறையப் பொறியர்களும் (engineers) பௌதிகவியலாளர்களும் (physicists) அங்கு கூடியிருந்தனர்.  யாருக்கும் 13 டன் ப்ளூடோனியமும் யுரேனியமும் நிரப்பப்பட்ட ஒரு சாதனத்தை வெடிக்கப் போவதன்  பின்விளைவுகளைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை; சில விஞ்ஞானிகள் அப்படிச் செய்வதால் உலகமே வெடித்துச் சிதறிவிடுமோ என்று பயந்தனர்; இன்னும் சிலரோ இது வெடிக்காமலே போய்விடலாம் என்று பயந்தனர்.

    சரியாக 5:29 மணிக்கு அந்தச் சாதனம் வெடித்தது; 21,000 டன் எடையுள்ள டி.என்.டி.-க்குச் சமமான (TNT) சக்தியோடும் செவ்வாய் கிரகத்திலிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்கு வெளிச்சத்தோடும் அது வெடித்தது.  மனித வரலாற்றிலேயே முதல் முதலாக வெடித்த அணுகுண்டு அது.

    அமெரிக்கா முதலில் இந்த அணுகுண்டை வெடித்துப் பார்த்த பிறகு,  அமெரிக்காவும் மற்ற எட்டு நாடுகளும் 2000 தடவைக்குமேல் (அமெரிக்கா மட்டும் 1000 தடவை) இந்த அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தியிருக்கின்றன. இந்தக் குண்டு வெடித்த சமயத்தில் அதன் பின்விளைவுகள் பாதிக்கக்கூடிய தூரத்தில் –சுமார் 50 மைல் சுற்று வட்டாரத்திற்குள் – மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள்.  பின்விளைவுகளைப் பற்றிச் சரியாகத் தெரியாதாலோ அல்லது அவர்களைப் பற்றிக் கவலைப்படாதாலோ இதை வெடிக்கும் முன் இந்த டிரினிட்டி திட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அந்த மக்களை எச்சரிக்கவில்லை, வேறு இடங்களுக்கு இடம்பெயர்க்கவில்லை. அதன் பிறகு பல தலைமுறைகள் அங்கு வாழ்ந்தவர்களிடையே குழந்தைகள் இறந்துபோனதோடு பலர் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டனர். குண்டு வெடித்த அன்று எல்லா திசைகளிலும் – சுமார் 1000 சதுரமைல் அளவுக்கு – அதன் பாதிப்பு இருந்தது; வடமேற்கு திசையில் குண்டின் சாம்பல் 15 மைல் தூரத்திற்குச் சென்று அங்கிருந்த கால்நடைகளைப் பாதித்தது; வட கிழக்கில் 20 மைல் தூரத்திற்குச் சென்று பல குடும்பங்களின் வீடுகளின் கூரைகளையும் தண்ணீர்த் தொட்டிகளையும் நச்சுப்படுத்தியது; தென்கிழக்கில் 35 மைல் தூரம் கதிரியக்க சாம்பல் அங்கு கொடிகளில் காயப்போட்டிருந்த துணிகளைக் கருப்பாக்கியது.  மனிதனுக்குக் கேடுவிளைவிக்காத கதிர்வீச்சின் அளவைவிட 10,000 மடங்கு அதிமான சக்தியோடு அன்றைய கதிர்வீச்சு இருந்தது.

    1939-1945 வரை இரண்டாவது உலகப்போர் நடந்தது. குண்டு வெடித்த சமயம் ஜெர்மனி சரணடைந்துவிட்டாலும் ஜப்பான் சரணடைவதாக இல்லை.  ஜப்பானைச் சரணடையவைக்க ஒரு அழிவுசாதனத்தை உருவாக்கி அதை ஜப்பானின் மீது பிரயோகிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. அந்த சாதனத்தை உருவாக்க அரசு விஞ்ஞானிகளையும் பௌதிகவியலாளர்களையும் பணித்தது. முதலில் அந்தத் திட்டத்திற்கு ஒதுக்கிய தொகை 6000 டாலர்கள்; பின்னால் அதுவே இரண்டு பில்லியன் டாலர்களாக உயர்ந்தது; இன்றைய மதிப்பில் அது 28 பில்லியன்களுக்குச் சமம்.  (இன்றைய இந்திய ருபாயில் 209 கோடி)  இந்தக் குண்டைப் போட்டு ஜப்பானைப் பணியவைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவுசெய்தது. போர் நீண்டுகொண்டே போனாலும், கடைசியில் அமெரிக்கா எப்படியும் ஜப்பானை வென்றுவிடும் என்று கணிக்கப்பட்டாலும் அது பல அமெரிக்க வீரர்களின் உயிரைப் பலிகொண்ட பிறகுதான் சாத்தியம் என்று முடிவுசெய்யப்பட்டு அணுகுண்டை ஜப்பான் மீது வீச அமெரிக்கா முடிவுசெய்தது. இதனால் பல ஜப்பானிய குடிமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தாலும், ஜப்பான் குடிமக்களின் உயிர்களைவிட அமெரிக்க வீரர்களின் உயிர்கள் மேலானவை என்று கருதியது அமெரிக்க அரசு. முதலில் குண்டை வெடிக்கும் பரிசோதனையின்போது அது ஏற்படுத்திய அழிவைக் கண்ட 70 விஞ்ஞானிகள் குழு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியது.  அதில் கூறப்பட்டிருந்ததாவது: கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அழிவை உண்டாக்கக் கூடிய இந்தச் சாதனத்தை முதல் முதலாக உபயோகித்த அவப்பெயர் அமெரிக்காவுக்கு வருமாதலால்,  இதை ஜப்பான் மீது பிரயோகிப்பது பற்றி நன்றாக யோசனை செய்யவும்.  இந்த விண்ணப்பத்திற்கு முன்னாலும் டிரினிட்டியில் பங்குகொண்ட ஒரு ஹங்கேரி விஞ்ஞானியும் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஒரு ஜெர்மன் விஞ்ஞானியும் ட்ரூமனுக்கு ‘எங்களிடம் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தும் ஒரு சாதனம் இருக்கிறது என்று ஜப்பானிடம் ஒரு முறை சொல்லி எச்சரித்துப் பார்த்த பிறகு குண்டு போடுவது பற்றி யோசிக்கலாம்’ என்று செய்தி அனுப்பினர்.  இரண்டு செய்திகளையும் ட்ரூமன் பார்த்த மாதிரியே தெரியவில்லை.  எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் ஜப்பான் சரணடைய வேண்டும் என்று விரும்பியதோடு எவ்வளவு சீகிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஜப்பனைச் சரண்டையவைக்க வேண்டும் என்பதிலும் ட்ரூமன் குறியாக இருந்தார். ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமா மேல் அமெரிக்கா ‘சின்னப் பையன்’ (little boy) என்று ‘செல்லப்’ பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசிய பிறகு ஜப்பான் சரணடையும் வாய்ப்பு இருந்ததால்,  மறுபடி நாகசாகிமீது ‘தடித்த மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டப்பட்ட இன்னொரு குண்டைப் போடுவதை அமெரிக்கா தவிர்த்திருக்கலாம்.  ஆனால். செய்யவில்லை.

    தன்னுடைய ராணுவ பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்கா செய்த மிகப் பெரிய கொடுமை இது.  இரண்டு குண்டு வீச்சுகளிலும் இறந்த ஜப்பானிய மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சம்; இதற்குமேல் காயம்பட்டவர்கள், அதன் பிறகு பல காலம் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அங்கஹீனமுற்றவர்கள், குறையோடு பிறந்த குழந்தைகள் ஆகியோரின் எண்ணிக்கை பல மடங்கு.   நாங்கள் 1996-இல் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது ஹிரோஷிமாவில் குண்டால் பாதிக்கப்பட்ட இடங்களையும் அதையடுத்து உள்ள மியூசியத்தையும் பார்த்தோம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டுபவையாக இருந்தன. இரண்டாவது குண்டையாவது அமெரிக்கா தவிர்த்திருக்கலாம் என்ற நினைப்பு அமெரிக்காவின்மீது மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

    டிரினிட்டி திட்டத்திற்குத் தலைவராகயிருந்த ஓப்பன்ஹைமெர் ஜனாதிபதி ட்ரூமனிடம் ‘என் கைகள் ரத்தக்கறை படிந்த கைகள்’ என்று கூறினாராம்; இறக்கும்வரை குண்டினால் ஏற்பட்ட விளைவுகள் அடிக்கடி அவர் மனதில் தோன்றி அவரைத் துன்புறுத்திக்கொண்டிருந்தனவாம்.

    வியட்நாமில் அணுகுண்டைப் போடும்படி ஜனாதிபதி ஜான்ஸனுக்கு யோசனை கூறப்பட்டும், நல்ல வேளையாக அவர் அப்படிச் செய்யவில்லை; அணுகுண்டின் அழிவைப் பார்த்த பிறகு வியட்நாமிலும் பிரயோகிக்கும்படி யோசனை கூற யாருக்கு மனம் வந்ததோ தெரியவில்லை.

    நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள், பிறர் துயரத்தை உணராதவர்கள் எல்லாக் காலங்களிலும் இருப்பார்கள் போலும். அமெரிக்கா ஜப்பானில் அத்தனை சேதம் விளைவித்தாலும் சொந்த நாட்டிலேயே 1000 முறை அணுசோதனை செய்ததன் மூலம் தன் சொந்த நாட்டிலும் எத்தனையோ கெடுதல்கள் புரிந்திருக்கிறது. 1963-க்குப் பிறகு தரைக்கு மேல் அனுகுண்டு சோதனை செய்வதில்லை என்று அமெரிக்க அரசு முடிவுசெய்தது; பூமிக்குக் கீழே மட்டுமே அப்போதிலிருந்து சோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.  ஆனால் இப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடனேயே தேவையென்றால்  அணு ஆயுதப் பரிசோதனைகளை விரிவுபடுத்தப் போவதாகவும் பூமிக்கு மேலேயும் சோதனைகளை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த வக்கிரம் பிடித்த மனிதனை சீக்கிரமே பதவியிலிருந்து இறக்க வேண்டும். அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே அப்போதுதான் நல்ல காலம் பிறக்கும்.

    கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸால் இத்தனை மனித உயிர்களைக் கொல்ல முடிகிறது; அதைத் தடுத்து நிறுத்த மனிதனால் முடியவில்லை. அணுகுண்டு போன்ற ஆயுதங்களைக் கொண்டு மனித உயிர்களைக் கொல்லாமல், துன்புறுத்தாமல்  இருக்கவாவது செய்யலாம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    மீனாட்சி பாலகணேஷ்

    (பாவை விளையாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பாவைகளை வைத்து, அவற்றைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றிற்குப் பாலருத்துவித்தும், நீராட்டியும், உணவூட்டியும், உறங்கவைத்தும் சிறுமியர் விளையாடுவது வழக்கம். இவையனத்தும் உளவியல் தொடர்பான நிகழ்வுகள். சிறுமியின் உடலுடன் உள்ளமும் வளர்ந்து வருங்காலை, அன்பான குடும்பங்களில் தாய்மார் செய்வதுபோன்றே, சிறுகுழந்தைகளை அவள் சீராட்டுவது போன்றும், தனது விளையாட்டுப்பாவைகளை சிறுகுழந்தையாகப் பாவித்து ஏழெட்டு வயதுச்சிறுமி விளையாடுவாள். அவளுடைய அன்றாட வாழ்வின் இன்றியமையாத செயல்கள் இவை! வளர்ந்து, ஆடிக்களித்து, பருவமங்கையாகி, களவும் கடிமணமும் புரிந்து வாழப்போகும் பெண்மையின் உணர்வுகள் விழித்தெழுந்து உள்ளத்தில் வேரூன்றும் சிறுபருவம். தங்கமதலையரை ஈன்றெடுத்து அமுதூட்டி நன்மக்களாக வளர்க்கப் போவதன் முன்னோட்டம் இதுவல்லவா?

    இதனைக் ‘குழமணம் மொழிதல்’ என்ற ஒருசெயலை மட்டுமே வைத்து ஒரு பருவமாகக் கூறியுள்ளது பிங்கலநிகண்டு. அதாவது, தமது பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, அதனை நிகழ்த்தி, விருந்துண்டு மகிழ்வது எனும் பிள்ளை விளையாட்டே இதுவாகும். மேற்கூறிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய செய்திகளாதலின் இதனுள் அடங்கும் என நாம் கொள்ள வேண்டும். ‘உலா’ எனும் சிற்றிலக்கிய இலக்கணப்படி, 4-8 வயது சிறுமி பேதை எனப்படுவாள். ‘அவளுக்குரியதே சிற்றில் விளையாட்டும் அதன் பல அங்கங்களும்,’ என்பது தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்கள் கூற்று1.

    பாவைகள் பலவகைப்படும். பாவைநோன்புக்கான பாவைகள் ஆற்றுமணலினால் செய்யப்படும் என அறிகிறோம். ஆனால் இது பாவை விளையாட்டு. சிறுமியர் தம் கையாலெடுத்துச் சீராட்டிப் பாலூட்டி, உறங்கவைக்க பாவைகள் உறுதியாக இருக்க வேண்டுமன்றோ? இவை சிவந்த சந்தனமரத்தினால் செய்யப்படும். ‘மரப்பாச்சி’ என்று கூறுவர். இவற்றிற்குச் சிறுமியர் ஆடைகள் உடுத்தி, தாம் வேண்டும்விதம் அழகுசெய்து விளையாடுவர். இன்றும் இப்பொம்மைகள் புழக்கத்தில் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவை இல்லாதபோது, பாவைகள் பழந்துணிகளாலும் தென்னோலையாலும் செய்யப்படுவதும் உண்டு.

    ‘பாவைவிளையாடல்’ என்பதனை ஒரு பருவமாக மூன்று பாடல்களுடன் நாம் காண்பது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லைச்சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே ஆகும். ஆயினும் பாவை விளையாடலின் தொடர்பான கூற்றுக்களை மற்றுமுள்ள பல பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பருவங்களில் குறிப்பிடக் காண்கிறோம். சிலவற்றை இங்கு நினைவுகூர்தல் நன்மை பயக்கும்.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் தமது சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவனான குமரப்பெருமானிடம் அச்சிற்றிலை இழைத்த சிறுமியர் வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்:

    “நாங்கள் உலைப்பெய்து சமைத்த உணவு, அதனை வைத்த பெரும் சிப்பிகள் (நந்தின் கடம்), அடுப்பென எரியும் மாதுளைமலர்கள் ஆகியன அழிந்துபடுமே!

    “நாங்கள் திருமணம் என்று கூறிக் கொண்டுவந்த சிறுவிருந்தும் வீணாகிப் போகாதோ?”

    ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் நாம் கண்டதொரு காட்சியின்படி (இத்தொடரின் பாகம் 8.1) இவர்கள் உலையேற்றிச் சமைப்பது ஒரு பாவனை விளையாட்டே. பாவைத் திருமண விருந்திற்கு அவரவர்கள் இல்லங்களிலிருந்து தாய்மார்களிடமிருந்து உண்மையான சுவையூறும் தின்பண்டங்களை முறைவைத்துக்கொண்டு பெற்று வருவர்; பகிர்ந்துண்ணுவர் என அறிகிறோம். (எம் தலைமுறையைச் சேர்ந்த பெண்மணிகள் தம் பிள்ளைப்பருவத்தில் இவ்விளையாட்டை விளையாடியிருப்பதனால் அறிவர்!!)

                 நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                       நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             ………………………………………………………………….. அடியேம் வதுவையெனச்
                       சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ2

    அடுத்த வரிகள் பெண்குழந்தையின் கவனிக்கும், உய்த்துணரும் திறனை நமக்கு உணர்த்துகின்றன. தம் தாய்மார்கள் பச்சிளம் குழவியர்க்கு முலைப்பால் அருத்துவிப்பதனைக் கண்டிருக்கும் இவர்கள் தாமும் தம் பாவைகளுக்கு அவ்வாறு செய்ய முற்படுகின்றனர். முகைப்புண்டரிகம் எனும் தாமரைமொட்டுக்களை இன்னும் வளர்ச்சியடையாத தம் மார்பில் கட்டிக்கொண்டு (உரம் பிணித்து), அதனை முலை என்று பாவித்துக்கொண்டு பாவைகளுக்குப் பாவனையாக முலைப்பால் கொடுக்கின்றனர். ஐந்தாறு வயதுச் சிறுமியரின் உய்த்துணரும் திறன் வியக்கத்தக்கதாம். ‘சிற்றிலைச் சிதைத்தால் இவ்வாறு பால்கொடுத்துப் பின் உறங்கவைத்த அக்குழவி கண்விழித்தெழுந்து அழாதோ?’ எனவும் கேட்கின்றனர்.

                முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                       மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
                       சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே2.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவப்பாடல் இன்னொரு நயத்தை விரிக்கின்றது. திருமணம் என்பது ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ எனப் பெரியோர் கூறுவதனைக் கேட்டுள்ள சிறுமியர், தாமியற்றும் பாவை மணமும் ‘பலவாறு முயன்று அலைந்து திரிந்து’ நடத்தும் மணவினை என்பதாகக் கூறுவது வியப்பையும் நகையையும் ஒருசேரக்கூட்டுகின்றது.

    “உன் தந்தையான சிவபிரான் முன்பு புத்தூரைச் சேர்ந்த பாவை ஒருத்தியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காரணத்தால் பின்னொருநாள் இருகால்களும் நோகும்படி, திருவாரூர் வீதியெங்கும் இரவில் பலமுறை நடந்தலைந்ததனை நீ அறியாயோ?”

    புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுடனான சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, அவரைத் தன்னடிமையாக்கி ஆட்கொண்டான் சிவபிரான். பின்பு அந்த சுந்தரருக்காகவே, அவரிடம் பிணக்கு கொண்ட அவருடைய மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் பலமுறை திருவாரூர் வீதிகளில் திரிந்தலைந்து தூது சென்றான் அவ்வீசன். இதனைச் சிறுமிகள், ‘அவன் முதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பாவத்திற்காகத்தான் இங்ஙனம் திரிந்தலைந்தான்,’ என்று கூறுகின்றதாகப் புலவர் அமைத்துள்ள நயம் வியக்கத்தக்கதாம்.

    “அதுபோன்று நீயும் எம் பாவையின் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவையாயின், உன் மலர்ப்பாதங்கள் நோகும்வண்ணம் எத்துணை பெண்களிடம் தூதாக நடக்க வேண்டிவருமோ?” எனவும் இகழ்ச்சியாகக் கூறுகின்றனர்.

                ‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
                       ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
             முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
                       முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
             வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
                       மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ3?’ என்பது பாடல்.

    மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்து இனிய பாடலொன்று பாவைவிளையாட்டின் மற்றுமொரு சுவையான காட்சியைக் கண்முன் விரிக்கின்றது.

    தமது சிற்றிலை அழிக்க ஓடோடிவரும் சிறுவனான தென்பேரைநாதனிடம் சிறுமியர் கைகூப்பி வேண்டுகின்றனர்: “அன்பாக அணைத்து, முலைப்பால் ஊட்டி, புனலில் நீராட்டி, அருமையாகக் கண்களுக்கு மையிட்டு அலங்கரித்து, ஆரங்களை அணிவித்து, பட்டாடை உடுத்தி வைத்துள்ள என் மகவுக்கு (பாவைக்கு) உனது திருப்பெயரையே சூட்டுவேன். தயவுசெய்து எமது அழகான சிற்றிலை அழிக்கவேண்டாம்,” என்கின்றனர்.

                அன்போடணைத்து முலைகொடுத்தின்
                      னமுதூற்றறிருக்கும் புனலாட்டி
             அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
                       ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
             உன்பே ரிடுவே னென் குழவிக்கு4
                       …………………………….

    வீட்டுப் பெரியவர்கள் பெயரையோ தெய்வங்களின் பெயரையோ சிறுகுழந்தைகளுக்கு இடும் வழக்காற்றை இச்சிறுமிகள் கண்டு உணர்ந்துள்ளனர் என்பது இதனாற் புலனாகின்றது அல்லவோ?

    பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும்!

    இதுபோன்று பலவிதமான நயமிகுந்த பாடல்கள் இவ்விலக்கியம்தோறும் விரவிக் கிடப்பதனைக் காணலாம்.

    இனி பாவைவிளையாடல் எனும் பருவத்தில் உள்ள பாடல்களைக் கண்டு களிப்போமா?

    தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழினை இயற்றியவர் ஒரு சக்தி உபாசகர். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான அவருக்கு அன்னை சிறுமியாய் விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்துமே அகக்கண்ணில் அவளுடைய திருவிளையாடல்களாகக் காண்கின்றன.

    தெய்வங்களின் பாவைகள், மானிடர் வடிவங்கள், விலங்குகள், கடலில்வாழும் உயிர்கள் இவற்றின் பாவைகள், பறவைகளின் பாவைகள், தரையில் ஊர்ந்துசெல்லும் புழுபூச்சிகளின் பாவைகள், மரம், செடி, கொடி எனும் அனைத்துப் பாவைகள் என ஓரறிவு உயிர்முதல் ஐந்தறிவு, ஆறறிவு படைத்த உயிர்கள்வரை அனைத்துமே பராசக்தி தன் விளையாட்டிற்காக உருவாக்கி வைத்துள்ள பாவைகளாம். இந்தப்பாவைகளை எல்லாம் எண்பத்து நான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களில் இவளே செய்கிறாளாம்.

              “வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும் (ஒல்லை- விரைவு)
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
              ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப் (ஒருபொறி- ஓரறிவு)
             பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்5
    …………………………………………” என்பன பாடல் வரிகள்.

    இப்பாடலில் உட்கருத்தாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் பொதிந்துள்ளதனைக் காணலாம். ஓரறிவு படைத்த உயிர்களான புல், மரம் ஆகிய தாவரப் பாவைகள், ஈரறிவுயிர்களான சிப்பி, கிளிஞ்சல் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், மூவறிவு படைத்த உயிர்களான ஊர்ந்து செல்லும் எறும்புகள் முதலியனவும், நான்கறிவு கொண்டவையான நெளிந்து ஊர்ந்து செல்லும் சிலவகைப் புழுபூச்சியினங்களும், ஐந்தறிவு கொண்ட உயிர்களான பறவை இனங்களும், பஞ்சபூதங்களாலான உடல்களில் ஒன்றன்பின் ஒன்றாகப் படைக்கப் பட்டிருப்பதனை பாடல் வரிசைக்கிரமமாக விளக்குகிறது. மானிடர் ஆறறிவு படைத்த உயிர்களாகக் கருதப்படுவர்.

    இவற்றை அன்னையின் விளையாட்டாகக் கொள்வது அடியார்களின் நோக்கு. ‘இயற்கை நிகழ்வு’ என நாம் பல காலங்களாகப் பயின்றுவரும் பரிணாம வளர்ச்சி எனும் அறிவியல் சிந்தனை, அவ்வியற்கையையும் இயக்கும் இறைத்தத்துவமாக அடியார்கள் சிந்தையில் பதிந்துள்ளது என்பதனை நாம் கண்டு சிந்திக்கத்தக்கதாகும்.

    அடுத்துக்காணும் பாடலில் அன்னையை இளம் சிறுமியாகக் கண்டு மகிழ்வார் புலவர். சிறுமியர் விளையாடும் சிற்றில் எனும் சிறுவீடமைத்தல், சிறுசோறடும் விளையாட்டு, பாவைவிளையாட்டு ஆகியன அழகிய இப்பாடலில் ஒருசேரக் கூறப்பட்டுள்ளன.

    மணமாகாத இளமைப்பருவத்தில் சிறுமியர் சிலபொழுது தமக்குள் ஒருவரையொருவர் மணப்பெண் – மணவாளன் என்று முறைப்படுத்திக்கொண்டு மணமாலை சூட்டி திருமணச் சடங்கு செய்து விளையாடுவர். பின்பு தோழியர் புது மணப்பெண்ணுக்குச் சட்டுவம் பிடித்துச் சமையல்செய்யப் பழக்கித் தருவர்! பின்பு, ஒரு சிறுமகவைப் பிள்ளையாக்கி வைத்து அழும் அப்பிள்ளையின் அழுகையை நிறுத்தி, சேலையால் கட்டிய தூளியில் (ஏணையில்) இட்டுத் தாலாட்டவும், ‘நீ அழவேண்டா’ என்று கையிலெடுத்துப் ‘பால் உண்ணுக’ என்று முத்தமிட்டும், பிறர்காணாதபடி மறைவாக மார்பிலணைத்து முலைப்பால் கொடுத்தும் (கொடுப்பதுபோல் நடித்தும்), அதற்காக நாணங்கொண்டு தலைகவிழ்ந்தும் நிற்கும்வண்ணம் நீ பொற்பாவைகளைவைத்து விளையாடுக! என வேண்டும் பாடல்.

                கன்னியில் மணற்சிற்றில் விளையாடும்போது
                       முக்கண்ணி நீ தேவியெனவும்
             கடவுள் மணவாளனென மணமாலை
                       சூட்டவும்……………………..
             …………………………………………..
             ……………………………… ஊறுபால்
                       உண்ணுக என மணிவாயில் முத்தமிட்டு
             மார்பத்து எடுத்து அனைத்தும் பால்
                      கொடுத்து அயலின் மற்று நாணிக் கவிழ்த்தும்
             ………………………………………
             பரம சிவகாம சுந்தரி அம்மை
                      இனிய பொற்பாவை விளையாடி அருளே6!

    இதில் பொய்தல் விளையாட்டின் அனைத்துச் செயல்களையும் அழகுற விவரித்துள்ளதனைக் காணலாம்.

    இம்மூன்று பாடல்களில் ஒன்று பரிணாம வளர்ச்சி தொடர்பான இறைத் தத்துவத்தினையும், இன்னொன்று சிறுமியர் விளையாட்டைப் பூரணமாக அதன் சிறுநிகழ்வுகளுடன் சுவைபடவும் விவரிக்கின்றது. மூன்றாம் பாடலில் புலவரின் கவிதைத் திறனையும் அது பொதிந்துதரும் பல இனிய செய்திகளையும் கண்டு களிக்கலாம்.

    பாவை எனும் சொல்லை இப்பாடலில் திரும்பத்திரும்ப ஒன்பதுமுறை பயன்படுத்தி வெவ்வேறு கருத்துக்களைக் கூறுகின்றார்.

    உலகிற்குத் தலைவியாக விளங்கும் அம்மையான இவள் பாம்புகளாலான அணிகளையும், செம்பொன் நவமணிகளால் இழைத்த மாலைகளையும் அணிந்து விளங்கும் பாவை!

    உலகங்கள் அனைத்தையும் ஒருசேர ஆளவந்த பாவை!

    கிட்டுவதற்கே அரிதான குடிலை எனப்படும் பிரணவ மந்திரம் உலகத்தோருக்குக் கிடைக்கும்படி அருள் செய்யவந்த பாவை!

    உலக அதிசயம் எனக் கூறப்படும் கொல்லிப் பாவையும் இவளே!

    (கொல்லிப்பாவை என்பது அதிசயமானதொரு செய்தி! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் உறையும் இக்கொல்லிப்பாவை ஒரு பெருநிலையான தெய்வமாவள். கொல்லிமலைக் குடவரையில் விளங்கும் இப்பாவைபற்றி கொங்குமண்டல சதகம் எனும் நூலில் சுவையானதொரு விளக்கம் காணலாம்).

    வணங்கிப் போற்றத்தக்கதொரு தெய்வப்பாவை!

    பல உயிர்களுக்கும் வீடுபேற்றை அருளக்கூடிய தாயாகிய சித்திரப்பாவை!

    விந்து, மோகினி, மான் எனக் கூறப்படும் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி எனப்படும் மாயைகள் ஊழிக்காலத்தில் தன்னுள் அடங்கிவிடும் ஆதாரமான பாவை.

    மெய்ப்பொருளான தெய்வத்தைப் பரவி வழிபடுபவர்களும், பாடுவோரும்  அடைகின்ற சித்தி, முத்தி ஆகியவற்றின் வடிவான பொற்பாவை!

    ‘சிவகாமசுந்தரி அம்மையே, நீ பலவகையான பொற்பாவைகளை வைத்து விளையாடியருளுக!’ என வேண்டும் பாடலிது.

                  ‘நாடரும் சருப்பப்பூண் அணி செம்பொன்
                       மாலையுடன் நவமணி அணிந்த பாவை
             …………………………………………………….
                       …… குவலயத்து அதிசயம் எனாக்
             கொல்லியம் பாவையும் கும்பிடும் பசும்
                       பாவை குலவு பல்லுயிர்கட்கு எல்லாம்
             வீடருள் நற்றாய் எனும் சித்திரப்பாவையும்
                       ………………………………………..
             பாடவந்தவர் சித்தி முத்தி வடிவான
                       பொற்பாவை விளையாடி அருளே7!
             ……………………………………………………’ என்பது பாடல்.

    இவ்வாறு பொய்தல் விளையாட்டின் பல கூறுகளும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாகப் படைக்கப்பட்டது தமிழின் தனிச் சிறப்பன்றோ?

    இனித் தொடர்ந்துவரும் பகுதிகளில் பெண்குழந்தைகளின் மற்ற விளையாட்டுகளைக் காணலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா- முன்னுரை

    2. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    3. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    4. மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    5, 6, 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-பாவை விளையாடல் பருவம்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 6 (ஏவலிளையர்)

    ச.கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் ஒருமை விகுதி பெறும் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. அகஇலக்கியம் மட்டுமின்றிப் புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது.

    இருவேறுபொருள் தரும் ‘இளைய-’ எனும் சொல்தொகுதி

    தொகைநூல்களில் இளையர் என்னும் சொல் இரண்டு பொருட் பரிமாணங்களுக்கு உரியதாகக் காணப்படுகிறது. வயதில் மூத்தவரோடு உறழ்ந்து சுட்டப்படும் ‘இளையர்’, ‘இளமையை’, ‘இளையோர்’ ஆகிய பெயர்ச்சொற்கள் உள்ளன (பெரும்.- 268; பொருநர்.- 187; சிறு.- 232; புறம்.- 213, 254; பரி.- 6- அடி- 27; 10; நற்.- 111, 207; அகம்.- 30, 348; குறுந்.- 61, 246; ஐங்.- 198; கலித்.- 83). உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியை;

    “இளையோன் சிறுவன்” (பொருநர்.-அடி- 130)

    என்று குறிப்பிடுகிறார் புலவர். அகப்பாடல் தலைவனும் தன் இளமை காரணமாக இளையோன் என்று அழைக்கப்படுவது உண்டு (அகம்.- 203). வயதால் இளைய பெண்பாலினரைச் சுட்டும் ‘இளையள்’, ‘இளையோள்’ ஆகிய சொற்கள் அக இலக்கியத் தலைவியைக் குறிப்பதாகப் பயின்று வருகின்றன (நற்.- 143, 201; ஐங்.- 256; குறுந்.- 119; அகம்.- 193, 314, 319; ). பரத்தையைச் சுட்டும் ‘இளையோள்’ என்ற சொல்லும் உளது (நற்.- 320). புறநானூற்றுத் தலைவரின் மனைவியரும் ‘இளையோய்’ என்றும் ‘இளையோள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர் (பா.- 144, 340, 350). ‘இளையோர்’ என்னும் சொல் தலைவியையும் அவளது தோழியர் கூட்டத்தையும் ஒருங்கே குறிப்பதாக அமைந்துள்ளது (நற்.- 68; அகம்.- 90, 254, 370). குறிஞ்சிப்பாட்டின் தலைவன்; தலைவியையும், தோழியையும் ஒருங்கு ‘இளையீர்’ என்று அழைக்கிறான் (அடி- 141).

    இத்தரவுகளினின்று மாறுபட்டு ஏவலர்களைக் குறிக்கும் ‘இளையர்’ மட்டுமே இங்கு கட்டுரைப்பொருள்  ஆகின்றனர் .

    புறப்பாடல்களில் ஏவல் இளையர்

    பாணர் குழுவில் இளையர் என்றே அழைக்கப்படும் ஏவலர் இருந்தனர் (சிறு.- 33; பதிற்.- 40, 41, 48, 51). வையைப் புதுப்புனலில் ஆட எழுந்த கூட்டத்திற்குள் முண்டியடித்துச் செல்ல இயலாத ஏவலரே அப்பாட்டில்

    “சேரி இளையர் செலவரு நிலையர்” (பரி.- 6- அடி- 38)

    என்று விதந்து சொல்லப்படுகின்றனர்.

    வீரரைக் குறிக்கும் ‘இளையர்’, ‘இளையோர்’ என்ற பயன்பாடும் உள்ளன. (புறம்.- 57, 150,  242, 253, 254, 263, 286, 353; பதிற்.- 54, 71). அவ்வாறு அழைக்கப்பட்ட காரணம் அவர்கள் தலைவருக்கு அடங்க வேண்டியவராய் இருந்தமை எனலாம். அதனால்தான்

    “ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும்” (பதிற்.- 54)

    என்று பாடப்பட்டுள்ளது.

    “யான் கண்டனையர் என்இளையரும் வேந்தனும்” (புறம்.- 191)

    என்ற பிசிராந்தையார் கூற்றில் இளையர் ஏவலரையே குறிக்கிறது.

    அகப்பாடல்களில் இளையர்

    “ஏவல் இளையர்” (அகம்.- 342; நற்.- 389)

    என்ற தொடரில் இளையர் ஏவலுக்கு உரியவர் என்ற செய்தி வெளிப்படை.

    பலதிறத்தினராகிய இளையர்

    இளையர் வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணியமர்த்தப்பட்ட காவலரும் இளையரே.

    “ஏவல் இளையர் தலைவன்” (அகம்.- 342)

    எனப் பாண்டியனும் அவனிடம் பணியாற்றிய ஏவலரும் சுட்டப்  படுகின்றனர்.

    சோழவேந்தன் அழிசி ஏவலர் கூட்டத்தை உடையவன் ஆதலால்;

    “நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்” (குறுந்.- 258)

    என்று சுட்டிப் பாடுகிறார் புலவர்.

    “வல்வில் இளையர் பெருமகன் நள்ளி” (அகம்.- 152)

    என வேளிர்குலத் தோன்றலாகிய நள்ளியும் அவனது ஏவலரும் பாடலில் இடம்பெறுகின்றனர்.

    வேட்டையைத் தவிர வேறேதும் தெரியாததால் புல்லியின் ஏவலர் கல்லா இளையர் என்று அழைக்கப்பட்டனர்.

    “கல்லா இளையர் பெருமகன் புல்லி” (அகம்.- 83)

    எனக் குறிப்பிடப்படுவது காண்க.  மழை பொய்த்த மூங்கில் காட்டுவழியாகச் செல்லும் வணிகச்சாத்துகளைக் கொன்று; கொள்ளையில் ஈடுபடும் கொடுமையான வாழ்க்கை உடைய பாலைநிலத்து மறவரை இளையர் என்றும்; அவரது தலைவரை;

    “வல்வில் இளையர் தலைவர்” (அகம்.- 245)

    என்றும் பாடியுள்ளமை காண்க. அணிகலன்கள் இல்லையெனினும் வழிச்செல்வோரைக் கொன்று பறவைகளுக்கு இரையாக்கும்;

    “கல்லா இளையர் கலித்த கவலை” (அகம்.- 375)

    என்ற பாடலடியிலும் ஆறலைக் கள்வர் இளையர் என்றே அழைக்கப்  படுகின்றனர்.

    இரவுக்குறியின் ஏதத்தை எடுத்துரைக்கும் தலைவி;

    “துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்
    இலங்குவேல் இளையர் துஞ்சின்” (அகம்.- 122)

    நாய் குரைக்கும் என்கிறாள். தூங்காத ஊர்காவலரை வேலேந்திய இளையராகக் காட்டுகிறது இப்பாடல்.

    இளையரும் ஆயுதமும் 

    இளையர் ஆயுதமேந்தியவராகவே அகப்பாடல்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.

    “வெல்வேல் இளையர்” (அகம்.- 64, 104),

    “ஒள்வாள் இளையர்” (குறுந்.- 258),

    “வல்வில் இளையர்” (குறுந்.- 275; அகம். – 152, 245),

    “இலங்குவேல் இளையர்” (அகம்.- 122),

    “திருந்துவேல் இளையர்” (அகம்.- 345)

    என; ஆயுதத் தொடர்போடு அவர்களது பணி இருந்தது என்பதை நிறுவுதற்கேற்ற தொடர்கள் பலவாக உள்ளன.

    இளையரின் பணி

    தலைவர்களிடம் மெய்க் காப்பாளராய்ப் பணியாற்றி; அவருடன் வெட்சிப் போரிலும், கரந்தைப் போரிலும் ஈடுபட்டனர் இளையர்.  காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

    “……………………..பொறாஅர்
    விண்பெறக் கலித்த திண்பிடி ஒள்வாட்
    புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
    தொகுபோர்ச் சோழன் ” (அகம்.- 338)

    எனும் பாடலடிகளில் சோழனுக்காக அவனது இளையர் பொறுக்க மாட்டாதவராய்ப் பகைப்புலத்தினின்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்தமை விளக்கம் பெறுகிறது. எனவே அவர்கள் வெட்சி வீரர்கள்.

    தலைவன் சென்றிருக்கும் காட்டுவழி பற்றிக் கவலும் தலைவி; பெண்யானை துயில்வது போல் தோற்றமளிக்கும் சிறுகுன்றுகளின் மருங்கில்; நடப்பட்டவை போலக் காட்சியளிக்கும் இயற்கையான நெடுங்கற்களின் பரந்த இடத்தில்; நிரை கவர்ந்த வெட்சி வீரருடன் நடந்த போரில்  வீரமரணமடைந்தவர்களின் பெயர்களை எழுதி; மணமிகுந்த அரைத்த மஞ்சளைப் பூசி வழிபட்டு; சிவந்த கரந்தைப் பூக்களைத் தம் அம்புகளால் அறுத்தெடுத்த ஆத்தி நார்களில் கட்டிக் கண்ணியாக அணிந்து; வண்டுகள் ரீங்காரத்துடன் மொய்க்கக்; கழலணிந்து; நிரைமீட்கும்

    “இளையர் பதிபெயரும் அரும்சுரம்” (அகம்.- 269)

    என்கிறாள். எனவே இங்கு சுட்டப்படும் இளையர் கரந்தைவீரர் ஆகின்றனர்.

    இரவுக்குறியின் ஏதத்தைச்  சிறைப்புறமாக நின்ற தலைமகனுக்குச் சொல்லுவாளாய்த் தலைவி; பெண்பன்றி தன் குட்டிகளை வேட்டுவரிடம்  இருந்து காத்துச் சென்றமையை;

    “இளையர் எய்துதல் மயக்கி கிளையொடு” (அகம்.- 248)

    போனது என்கிறாள். இதனால் இங்கு இளையர் வேட்டுவர் என்பது தெளிவு. வேட்டுவர் எழுப்பிய ஆரவாரத்தில் மிரண்டு காட்டிலிருந்து ஒதுங்கிய ஆமான்கன்று; சிறுகுடியுள் நுழைந்து; அங்கிருந்த இளையரால் பேணப்பட;  அவரோடு கலந்துவிட்டது என்று சொல்லும் பாடலில்;

    “இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து” (குறுந்.- 322)

    உறைந்தது என்பதால் இளையர் வேட்டுவச் சிறுகுடியினர் எனப்பெற்றோம். இனிய பலாச் சுளைகளில் விளைந்த தேனைப் பருகிச்; சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பினைச் செலுத்தும் ஏவலருடன் சேர்ந்து முள்ளம்பன்றியை வீழ்த்தும் வேட்டுவனை;

    “வீளை அம்பின் இளையரொடு மாந்தி” (அகம்.- 182)

    எனக் காட்சிப்படுத்துகிறது பாடல். இவ்இளையர் வேட்டுவனின் ஏவலர் ஆவர். இவ்வாறு வேட்டுவனுக்கு அமைந்த ஏவலர் பற்றி நற். 389ம் பாடலும் கூறுகிறது.

    அகப்பாடல் துறைகளும் இளையரும்

    முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப்  பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு.

    தலைவி ஆயத்துடன் வண்டல்மனை இளைத்து ஆடிக் கொண்டு இருந்த போது தேரில் வந்த தலைவன்; ஏவலருடன் தேரைத் தூர நிறுத்தி விட்டுத் தலைவியின் அருகே வந்து அம்மனையைப் பாராட்டி; அவள் பதில் சொல்லாதிருக்க மீண்டு சென்றான்.

    “கொடுஞ்சி நெடுந்தேர் இளையரொடு நீக்கி” (அகம்.- 250)

    அவன் தலைவியுடன் சொல்லாடியமை நோக்கத்தக்கது.

    குறியிடத்துத் தலைவியைக் காணவரும் போது;

    “கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
    பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்” (நற்.- 307)

    எனத் தலைவனின் தேர்மணி ஓசையுடன்; ஏவலரின் கலகலப்பான பேச்சொலியும் கேட்பது பற்றித் தலைவியிடம் உரைக்கிறாள் தோழி.

    தலைவியைப் பெண்கேட்டு வரும் தலைவன் ஆரவாரம் செய்யும் ஏவலரோடு தேரேறிப் பகலில் வந்துள்ளான்; அதனால் இனி ஊராரின் வாயிலிருந்து அலர் எழாது என்பதை;

    “ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய்” (அகம்.- 160)

    என்று தொடர்கிறாள் தோழி.

    வினைவயிற் பிரிந்த தலைவனுக்காகக் காத்திருக்கும் தலைவியிடம்;

    “நின் பல்லிருங் கதுப்பின்
    குவளையொடு தொடுத்த நறுவீ முல்லை
    தளையவிழ் அலரித் தண்ணறுங் கோதை
    இளையரும் சூடி வந்தனர் நமரும்
    விரியுளை நன்மா கடைஇப்
    பரியாது வருவர் இப்பனிபடு நாளே” (நற்.- 367)

    என்று தோழி இளையர் முதலில் வந்து சேர்ந்து விட்டதை உரைக்கிறாள். குவளையும், முல்லையும், அலரியும் விரவி நீ சூடியிருப்பது போலவே ஏவலரும் சூடிக்கொண்டு வந்துவிட்டனர் ஆதலால்; இனித் தலைவன் வந்துசேர்வது ஒருதலை என்பது பொருள். இது போன்ற சூழலில் ஏவலிளையர் இடம் பெறும் பாடல்கள் பல உள (அகம்.- 104; குறுந்.- 275)

    பொருளுக்காகப் பிரிந்து செல்லும் தலைவனுடன் ஏவலரும் செல்வதைத்;

    “……………………………………..தம்மொடு
    திருந்துவேல் இளையர் சுரும்புண மலைமார்” (அகம்.- 345)

    என்று எடுத்துக்கூறுகிறாள் தலைவி. ஏவலர் தம் தலையில் தரித்துக் கொள்ள ஏதுவாக நுணாமரக் கொம்புகள் தளிர்க்கும்படி மழை பெய்து குளிர்ச்சி நிலவட்டும் என்பது அவளது எண்ண வெளிப்பாடு.

    மடலேறி வெற்றிகரமாகத் தலைவியை மணந்த தலைவன் தானுற்ற காதல்நோய் பற்றிப் பின்னர் உரைக்கும் போது;

    “இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
    உற்றது உசாவும் துணை” (கலித். – 138)

    என்றிருந்த தன் நிலையை எடுத்துரைக்கிறான். தன் மனவுளைச்சலை இளையரிடம் எடுத்துச் சொல்லி ஆற்ற முற்பட்டமை இப்பாடலடியில் புலனாகிறது.

    தலைவன் இளையரை ஏவும் முறை

    வினைமுடித்து மீளும் தலைவன் உடன்வரும் இளையரை மூன்று நிலைகளில் ஏவுகின்றான். தனக்கு முன்னரே சென்று தலைவியிடம் தன் வருகையை உணர்த்த விரைந்து செல்லச் சொல்வதுண்டு.

    “ஏகுமின் என்ற இளையர் வல்லே ” (நற்.- 42)

    விரைந்து சென்று தலைவிக்குத் தலைவன் வருகையை  அறிவித்ததால்; அவள் தன் கூந்தலைப் புனைந்து; ஒப்பனை செய்து கொண்டு காத்து  இருந்தாள் என்று முன்னர் நடந்ததை நினைவு கூரும் தலைவன் மீண்டும் அதுபோலவே ஏவலரை முன்னனுப்ப முடிவு செய்கிறான்.

     தானும் தன் இளையரும் ஒருங்கு இணைந்து ஊர் திரும்புவதும் உண்டு. “இளையர் ஏகுவனர் பரிப்ப வளைஎனக்” (நற்.- 161) காட்டுவழியில் தம் வீரர் ஆங்காங்குத் தங்கிச் செல்லத் தலைவனும் அவருடன் சேர்ந்தே வந்தான் .

    ‘இளையர் தேருக்கு முன்னர் ஓடிச் செல்ல வேண்டியிருப்பதால்; அவர்கள் இடையிடையே காலாற அமர்ந்து இளைப்பாறி வரட்டும். நீ தேரை விரைந்து செலுத்து; நாம் முன்னர் சென்று சேர்வோம்’ எனத் தலைவன் தான் முதலில் தலைவியிடம் சேர முனைவதும் உண்டு.

    “விரைபரி வருந்திய வீங்குசெலல் இளையர்
    அரைசெறி கச்சை யாப்பு அழித்து அசைஇ” (நற்.- 21)

    என்ற பாடல் வரிகள் வேகமாக ஓடிவந்த ஏவலர் தம் அரைக்கச்சையை நெகிழ்த்துவிட்டு மூச்சிரைக்க ஓய்வெடுக்க முனைவதைக் காட்சிப்படுத்துகிறது.

    ஏவல் இளையர் பாத்திரத்தின் பயன்பாடு தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது.

    தலைவியைச் சந்திக்கும் போதெல்லாம் தேரையும் ஏவலரையும் சேய்மையில் நிறுத்திவிட்டு வரும் தலைவனின் பண்பைத் தோழி பாராட்டுகிறாள்.

    “கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற” (அகம்.- 310)

    நாகரிகம் அவனது பாத்திரப்படைப்பை உயர்த்திக் காட்டுகிறது. உடன்போக ஊக்கும் தோழி; பிற்றைநாளில் உனக்கு மனைவியான  இவளோடு; ஏவலரும் குதிரையும் ஒருங்கே எம் இல் வந்து விருந்துண்டு செல்க என்கிறாள் (அகம்.- 300). அங்ஙனம் விருந்துண்ணுங்கால் ஏவலரை முதலில் உண்ணவைத்து அதன் பின்னர் அவன் விருந்துண்பான் என்று கற்பனை செய்து கூறுகிறாள்.

    “இளையர் அருந்த பின்றை நீயும்” (அகம்.- 394)

    விருந்தயரலாம் என்பது  தோழியின் கூற்றாயினும் தலைவனின் பெருந்தன்மை அறிந்து அவள் பேசுவதாகக் கொள்வதில் தவறில்லை.

    தலைவிமேல் அவனுக்கு இருந்த வேட்கையால் தான்; காட்டுவழியில் தேருக்கு முன்னால் ஓடிச்செல்லும் ஏவல் இளையரைக் கண்டு இரக்கம் மேலோங்கினும்;

    “இளையர் ஏகுவனர் பரிய விரிஉளை”க்  (அகம்.- 375)

    குதிரையின் கடிவாளத்தைத் தேர்ப்பாகன் வலிந்து பிடித்துச் செலுத்த விரைகிறான்.

    முடிவுரை

    இளையர் எப்போதும் ஆயுதமேந்தி வேந்தரிடமும், வேளிரிடமும், திணைமாந்தரிடமும் பணியாற்றினர். ஆறலைக்கள்வரும் இளையராக மறவர் தலைவருடன் சேர்ந்து பணியாற்றினர். ஊராட்சியில் பணிசெய்த காவலரும் இளையரே. தலைவர்க்கு உறுதுணையாய் வெட்சிப்போரிலும், கரந்தைப்போரிலும் ஈடுபட்டனர் இளையர். காட்டகச் சிறுகுடியினர் ஏவல் இளையராய்த் தலைவருடன் வேட்டைக்குச் சென்றனர்.

    முதன்முதலில் தலைவியைச் சந்திக்கும் போதும், குறியிடத்தில் அவளைச் சந்திக்கச் செல்லும் போதும், வரைதல் வேண்டித் தலைவியின் தமரைப் பார்க்கச் செல்லும் போதும், கற்புக் காலத்தில் வேந்தர்க்காக வினைவயிற் பிரிந்து செல்லும் போதும், பொருள் வயிற்பிரியும் போதும் தலைவனுடன் இளையர் செல்வதுண்டு. தலைவியின் அன்பு கிடைக்கப் பெறாத தலைவன் மடலேறித் தன் வேட்கையை ஊரார்க்குப் புலப்படுத்தும் முன்னர் தன் இளையரிடம் புலம்பித் தெரிவிப்பதுண்டு. வினைமுடித்து மீளும் தலைவன் இளையரைத் தனக்கு முன்னரோ; தன்னுடன் சேர்ந்தோ அல்லது தனக்குப் பின்னரோ வரச்சொல்லி ஏவுவதுண்டு. தலைவனின் பெருந்தன்மையையும், நாகரிக மேம்பாட்டினையும் புலப்படுத்தவும், அவனுக்குத் தலைவிமேல் இருந்த காதலின் மிகுதியைப் புரியவைக்கவும் இளையர் பாத்திரம் கருவியாகப் பயன்பட்டுள்ளது

    ஏவல் இளையர் என்னும் குழுப்பாத்திரம் ஒருமை விகுதிபெற்றுத் தனிப்பாத்திரமாக இடம்பெறுவதில்லை. புறஇலக்கியத்திலும் இப்பாத்திரம் பற்றிய குறிப்புகளைக் காண இயல்கிறது. தலைவனின் முழுமையான பாத்திரப்படைப்புக்கு ஏவல்இளையர் எனும் பாத்திரம் இன்றியமையாதது.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 5

    கதை வடிவில் பழமொழி நானூறு – 5

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 11

    அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
    பிறிதினால் மாண்டது எவனாம்? – பொறியின்
    மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
    அணியெல்லாம் ஆடையின் பின்.

    பழமொழி-  அறிவு ஆடை போன்றது!

    புது ப்ளசர்காரெல்லாம் வந்துநிக்கு. யாரும் பெரிய ஆளுங்க வந்திருக்காவளோ. இங்ஙன பண்ணயார் வீட்டுக்கு வாராம தெருமுக்குல ஏன் நிக்கு. ஏன் தாயி ஏதும் சேதி தெரியுமா. கேட்டுக்கொண்டே வந்தாள் வெள்ளைச்சீலை ஆச்சி.

    நம்ம ஊருக்கு புது ஜட்ஜம்மா குடி வந்திருக்காங்களாம். இங்கேருந்து தான்தினம் டவுண் கோர்ட்டுக்கு போயிட்டு வருவாக போல. நம்ம பெட்டிக்கட கணேசு மாமா தம்பி மக தான் அந்த ஜட்ஜம்மானு பேசிக்கிறாக. அதனால பண்ணையாருக்கு மறுப்பு ஒண்ணும் சொல்லமுடியல.போல. இனி ஒவ்வொருமட்டம் ஊர்ப்பஞ்சாயத்துல தீர்ப்புகொடுக்கையிலயும் யோசன பண்ணிக் குடுக்கணும். ஏதும் தப்புகிப்பு வந்திச்சு முன்னமாதிரி இல்ல. அந்தம்மா நம்மளப்பாத்து சிரிப்பாச் சிரிச்சுபோடும். என்னதாயி நான்சொல்லறது. இது ஆச்சி.

    அட போங்க ஆச்சி. நம்ம பண்ணயாரு அவுகளக் கலந்து முடிவெடுப்பாரோ என்னவோ. விடியக்காலையில நமக்கெதுக்கு இந்த வம்பு. அதுவும் பண்ணையார்வீட்டு நெலவாசல் முன்ன நின்னுக்கிட்டு. யாரும் பாத்துற கீத்துற போறாக. போய் மாட்டுத் தொளுவத்தச் சுருக்க  தூத்து சுத்தம் பண்ணுங்க.  நான் நாலுவீட்டுலேந்து உளுந்தும் அரிசியும் களைஞ்சுஊத்தின கழனித்தண்ணி எடுத்துட்டு வாரேன். அடிக்குத வெயில்லமாட்டுக்கு நாக்கு ஒலந்து போவுமில்ல. பேசுகிற ஜோரில் ஆச்சியும் பேத்தியும் பண்ணையாரின் சம்சாரம் வீட்டு நடைக்கதவின் பின்னால் நிற்பதைக் கவனிக்கவில்லை.

    சொல்லிவைத்தார்ப்போல் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்குள் வந்த பண்ணையாரும் லட்சுமி ஒரு நல்ல சேதி. இனிமே பஞ்சாயத்துல என் வேல சுளுவா முடியும். நம்ம கணேசு தம்பி மவ நீதிபதியாம்ல.  அதுகிட்டதான் பேசிட்டு வாரேன். என்னா சூட்டிப்பு. புள்ள பாக்கவும் லட்சணமா இருக்கு. சொல்லுதசொல்லு ஒண்ணொண்ணுலயும் தைரியம் தெரியுதே. பண்ணையார் சொல்லிக்கொண்டே போக மனைவி லட்சுமிக்கு அடிவயிறுகலங்கியது.

    இத்தன நாள் போடாம வச்சிருந்த காசு மாலயும் இனி தெனைக்கும் போடணும். கழுத்தோட ஒட்டி ஒரு அட்டியலும், மொகப்பு வச்ச நாலு வடம் சங்கிலியும் தெனைக்கும் போட்டாப் போதும்னு இந்த மனுசன் சொன்னதால மிச்சத்த உள்ளார வச்சேன். இம்புட்டு நாளும் என்னய என்வீட்டு மகாலட்சுமினு சொன்னவுக இன்னிக்கு வேற ஒரு செருக்கிய லட்சணமா இருக்கானு சொல்லுதாக. இன்னும் என்னேன்ன நடக்குமோ.

    கோத்துவாங்கின கோபுரம் பார்டர் பட்டுச்சீலயத்தான் இனி தெனைக்கும் கட்டிக்கிடணும். தீர்மானித்தவுடன் கொஞ்சம் மன அழுத்தம் குறைந்தது.

    எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். வெத்தலைச்சீவலை மென்றுகொண்டே பண்ணையாரின் அம்மா தன்பங்குக்கு ஏற்றி விடுகிறாள்.

    பஞ்சாயத்துப்பிரச்சினைய பெத்த ஆத்தா எங்கிட்ட எப்பமும் பேசி இருப்பானா அல்லது உங்கிட்டதான் சொல்லியிருப்பானா. இப்பம் வந்த செருக்கி பஞ்சப்பொழப்பு பொழைக்குதமாரி பருத்திப்பொடவ கட்டிக்கிட்டு இணுக்குத் தோடு காதுல மாட்டியிருக்கா. அவளுக்கு என்ன பவுசுனு இவன் பின்னால போறான். நீ ஒண்ணும் கவலப்படாததாயி நம்ம பள்ளிக்கூட வாத்தியார்கிட்ட இன்னைக்கு பேசுதேன். பஞ்சாயத்துக்கு என்ன பிரச்சினை வந்தாலும் எங்கிட்டயும் சொல்லச்சொல்லுதேன். நம்மளும் அந்தப் பிரச்சினைக்கு முடிவு எடுத்து பொறவு எம்மவன்கிட்ட சொல்லலாம்.  நேரடியா இப்பஞ்சொன்னா சரிப்பட்டு வராது.

    பள்ளிக்கூட வாத்தியார் அழைக்கப்பட்டு நிலைமை விளக்கப்பட்டது. தலையெழுத்து இந்த வீட்ல வந்து நான் மாட்டிக்கிட்டேன். அணியெல்லாம் ஆடையின் பின் அப்டின்னு பழமொழி சொன்னா இந்த ரெண்டு பெரிய மனுஷிகளுக்கும் புரியவா போகுது. அந்தம்மா படிச்சவங்க. அவங்களுக்கு அறிவால பெரும.  ஆடைக்கு மேல நக நட்ட அணிஞ்சாதானே அதுக்கு அழகு. அறிவும் ஆடை மாதிரிதான். அது இல்லாத இவங்ககிட்ட இப்போ இதச் சொன்னா உசிரோட வீடுபோய்ச் சேரமுடியாது. இப்ப என்ன சொல்லிச் சமாளிக்கலாம். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கீழே உட்கார்ந்துயோசிக்க ஆரம்பித்தார் வாத்தியார்.

    பாடல் 12

    தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
    பரியாதார் போல இருக்க! – பரிவுஇல்லா
    வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே,
    அம்பலம் தாழ்க்கூட்டு வார்‘.

    பழமொழி- அம்பலம் தாழ் கூட்டுவார்

    என்ன தீபா காபி டம்ளர் வச்சு ஒருமணிநேரம் ஆச்சு. இன்னும் குடிக்காம அப்டி என்ன அந்த கம்ப்யூட்டர்ல. படிக்குற காலத்தில தான் என்ன சொன்னாலும் கேக்காம நாள் முழுக்க இது முன்னாடி உக்காந்திருந்த. இப்ப வேலைக்குப் போகும்போதும் அப்டியேதான்னா இது சரியில்ல. நாலு பேர் பாத்தா என்ன நினைப்பாங்க. அம்மாவின் பேச்சு நீண்டுகொண்டே போனது.

    அம்மா அந்த நாலுபேர்னுசொன்னியே அவுங்க தொல்லதான் தாங்கமுடியல. நின்னா குத்தம் ஒக்காந்தா குத்தம். எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்கறாங்க. இது நான்.

    நான் சொன்னத வச்சே என்ன மடக்கிடு. நான் சொன்ன நாலு பேரும் அக்கம்பக்கத்து வீட்டு மனுசங்க. தலையெடுக்காம கம்ப்யூட்டரையே பாக்கற உனக்கு அவங்களப்பத்தி என்ன தெரியும். ஒருநாள் கூட நீ அவுங்ககிட்ட பேசினது கிடையாது. சும்மா என்னய வம்புக்கு இழுக்காத. சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா.

    எண்பது வீடுகள் கொண்ட நாங்கள் வசிக்கும் அந்தச் சிறிய சொசைட்டியில் போனவாரம்தான் முகநூல் குழுமம் ஒன்று ஆரம்பித்தோம். அவரவர்களின் பிரச்சினைகளை எளிதாகப் பகிரவும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைக் கலந்தாலோசிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட அக்குழுவில் வீட்டிற்கு ஒருநபர் கட்டாயம் இணைய வேண்டும் என நானும் பக்கத்து பிளாக் உமாவும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றுவிட்டோம். இப்போது என்னவென்றால் புது பிரச்சினை. தினமும் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட செய்திகளைப் பகிருகிறார்கள். வாசித்தால் உருப்படியாக ஒன்றுமில்லை.

    எ பிளாக் நாய் சி பிளாக்கில் சிறுநீர் கழித்துவிட்டது அதற்காக பதினைந்து பேர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மற்றொருவர் தங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக அழைப்பிதழ் அனுப்புகிறார். சுகன்யா ஆன்ட்டி மீந்துபோன சப்பாத்தியில் பக்கோடா எப்படிச்செய்வது என புதுவித ரெசிபியை நேற்றுஇரவு பகிர காலையில் சலீம் அங்கிள் கடும் கண்டனம் தெரிவித்து நாங்கள் மீந்த சப்பாத்தியை நாய்களுக்குப் போட்டு விடுவோம். எங்களுக்கு உங்கள் ஆலோசனை தேவையில்லை என எழுதியதால் அவரைப்பற்றிய பலரின் கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது. இடையில் என்னையும் உமாவையும் கண்டித்து நீங்கள் செய்திருக்கும் இந்த வேலையால் அமைதியாக இருந்த இந்த சொசைட்டியில் பிரச்சினைகள்தான் அதிகரித்துள்ளன. இதற்கு நீங்கள் இருவரும் பொறுப்பேற்று விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்கிறார்கள். இதை எப்படிச் சரிசெய்வது புரியவில்லை. முதலில் அம்மாவிற்கு விளக்கிச் சொல்லவேண்டும். இன்றுமுழுவதும் இதில் வேலை இருக்கும். இந்தக்குழுமத்திற்கென வரையரைகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்கவேண்டும்.

    அம்மாவை அழைத்து அனைத்தையும் சொன்னேன்.

    நிதானமாக அம்மா ஆரம்பித்தாள். மற்றவர்களின் நன்மைக்காக என்று நினைத்து நீங்கள் செய்யும்போது அதைப் புரிந்துகொள்ளாதவர்கள் பழிதூற்றத்தான் செய்வார்கள். எல்லாருக்கும் விளக்கமளித்துக்கொண்டே இருந்தால் எதற்காகத் தொடங்கினீர்களோ அந்நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடும். அவர்களின் வாய்க்கு நீங்கள் பூட்டுபோடவே முடியாது. இதைத்தான் நம்ம தாத்தாபாட்டி அம்பலம் தாழ் கூட்டுவார்னு பழமொழியாச்சொல்லுவாங்க. அதோட பொருள் ஊர்வம்ப அடக்க முயற்சிசெய்யறது ஊர்ப் பொதுவிடத்த பூட்டுபோட்டு காவல் காக்கறதுக்கு சமானம்னு. ரெண்டுமே முடியாத காரியம். எல்லாத்தையும் மறந்துட்டு உன் காரியத்தப் பாரு. அம்மா ஊக்கமளித்தாள்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(310)

    குறளின் கதிர்களாய்…(310)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(310)

    மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
    ஏதம் பலவுந் தரும்.

    – திருக்குறள் – 884 (உட்பகை)

    புதுக் கவிதையில்...

    புறத்தில்
    நட்புக்கொண்டதுபோல் நடித்து
    அகத்தில் நட்பிலா
    உட்பகை கொண்டோர் நட்பு
    அரசனுக்குக் கிடைத்தால்,
    அவனுக்குத் தன்
    சுற்றம் சேரா வகைக்குக்
    குற்றங்கள்
    பலவற்றைத் தந்திடுமே…!

    குறும்பாவில்...

    நட்புடன் புறத்தே நடித்து,
    உட்பகை அகத்திலுளோர் நட்பு அரசனுக்குச்
    குற்றம்தரும் சுற்றம்சேரா வகையிலே…!

    மரபுக் கவிதையில்...

    புறத்தே நட்பது உள்ளதுபோல்
    பொய்யாய் நடித்தே அகத்தினிலே
    மறைத்த உட்பகை கொண்டோரை
    மன்னன் நட்பாய்க் கொண்டாலே,
    சிறந்த சுற்ற மதனுடனே
    சேரா வகையி லவனுக்கே
    நிறைய வந்திடும் குற்றங்கள்
    நிம்மதி தன்னைக் கெடுத்திடுமே…!

    லிமரைக்கூ..

    நட்புபோல் நடிப்பர் முன்னே,
    உட்பகை உளம்கொண்டோர் நட்புடை வேந்தன்
    கெட்டிடக் குற்றம்வரும் பின்னே…!

    கிராமிய பாணியில்...

    தெரிஞ்சக்கோ தெரிஞ்சிக்கோ
    உட்பகயத் தெரிஞ்சிக்கோ,
    ஒறவழிக்கும்
    உட்பகய அறிஞ்சிக்கோ..

    உட்பகய உள்ளவச்சி
    நட்புபோல நடிப்பவங்கிட்ட
    ஒறவு வச்சா,
    நாடாளுற ராசாண்ணாலும்
    அவனுக்கு
    ஒறவோட சேரமுடியாம
    குத்தங் கொறயெல்லாம்
    கூட வந்துடுமே..

    அதால
    தெரிஞ்சக்கோ தெரிஞ்சிக்கோ
    உட்பகயத் தெரிஞ்சிக்கோ,
    ஒறவழிக்கும்
    உட்பகய அறிஞ்சிக்கோ…!

    Share
  • (Peer Reviewed) தென் பொதிகையின் பெண் ஞானியர்கள்: செங்கோட்டை ஆவுடை அக்காளும் தென்காசி ரசூல் பீவியும் – ஓர் ஒப்பீடு

    (Peer Reviewed) தென் பொதிகையின் பெண் ஞானியர்கள்: செங்கோட்டை ஆவுடை அக்காளும் தென்காசி ரசூல் பீவியும் – ஓர் ஒப்பீடு

    முனைவர் ரமேஷ் தங்கமணி, M.Sc., PhD., SET., DIBT., DMLT., DOA., DDTP., MZSI., MIAES
    உதவிப் பேராசிரியர்
    முதுகலை மற்றும் ஆராய்ச்சி – உயிர்த்தொழில்நுட்பவியல் துறை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, படூர்,
    கேளம்பாக்கம் – 603103
    அலைபேசி: 8056083656
    மின்னஞ்சல்: drramesht.bt@gmail.com

    முகவுரை

    சங்க இலக்கியம் தொடங்கி, பக்தி இலக்கியம்வரை உள்ள பழந்தமிழர் இலக்கியங்களில் பெண்களுடைய பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சங்ககாலத்தில் பெண்பாற் புலவர்கள் காதல், பிரிவு, பிரிவின் துயரம், பரத்தமை, பொருளீட்டல், போர் மற்றும் வீரம் போன்றவற்றை மையப்படுத்தியே பாடல்கள் இயற்றினர். பக்தி இலக்கியக் காலத்தைச் சார்ந்த பெண்கவிகளோ தமது பாடல்களில் இறைவன், இறைவன்மீது கொண்ட காதல் மற்றும் முக்தி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளனர். காலமாற்றத்தில் பெண்கவிஞர்களுடைய கற்பனையின் புழங்குவெளி மற்றும் பாடுபொருட்களில் ஏற்பட்ட பெரிய மாற்றம் கூர்ந்து ஆராயத்தக்கது. இத்தகைய மாற்றம் காலச்சூழ்நிலையின் அடிப்படையில் மட்டுமின்றிப் பண்பாட்டுப் படையடுப்பு மற்றும் பெண்கள் மீதான சமூக அடக்குமுறையின் காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். மாற்றத்திற்கான காரணம் எதுவாக இருப்பினும் பக்தி இலக்கியப் பாடல்களில் வெளிப்படும் பெண்கவிகளின் கவித்திறன் மற்றும் இறைத்தன்மையின் மீதான உயர் விருப்பம் போன்றவை போற்றுதலுக்குரியன.

    தென்பொதிகையின் சாரலைப் பெறும் சிறு நகரங்களான தென்காசி மற்றும் செங்கோட்டையில் வாழ்ந்த இரு பெண் ஞானியர்கள் செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல் பீவி ஆவர். இவ்விரு ஞானியர்களும் இயற்றிய அத்வைதச் சிந்தனை நிறைந்த கவிப்பாடல்கள் பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாக விளங்குபவையாகும். பெண் ஞானியர்கள் தத்தமது சமயம், வாழ்வியல் முறை மற்றும் சமூகநிலை போன்றவற்றால் வேறுபட்டாலும் தம்முடைய ஞானப்பாடல்களில் மிளிரும் தத்துவ நோக்கில் ஒன்றுபட்டே விளங்குகின்றனர். இத்தகைய பெண் ஞானியர்களின் காலம், வாழ்வு, குரு பக்தி, தத்துவம், இயற்றிய பாடல்கள் மற்றும் முக்தி போன்றவைகளுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் முரண்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

    அத்வைதமும் சூபியிசமும்

    பாரதத்தின் தொன்மையான தத்துவ நெறிகளில் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட அத்வைதமும் ஒன்று. இருமைத்தன்மையற்ற ஒரே நிலை என்பதே அத்வைதம் (அ-இல்லை + த்வைதம்-இரண்டு) என்பதன் பொருள். ஜீவாத்மாவும் (வணங்குபவர்) இறைவனும் (வணக்கத்திற்குரியவர்) வேறல்ல ஒன்றுதான் என்றும் உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் அம்சமே என்றும் இத்தத்துவம் கூறுகிறது. பெரும்பாலும் சைவர்களால் பின்பற்றப்படும் அத்வைதத் தத்துவமானது இந்துத் தத்துவ மரபில் முதன்மையானதாக விளங்குகிறது.

    அரேபியத் தீபகற்பத்தில் உருவான இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் தலையாயது “ஓரிறைக் கொள்கையாகும் (அரபி – தவ்ஹீத்)”. வணக்கத்திற்குரியவர் அல்லாஹ் ஒருவனே என்பதே ஓரிறைக் கொள்கையாகும். மதத்தைக் கடைபிடிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தில் உண்டான பல பிரிவுகளில் சூபியிசமும் (அரபி – தசவ்வுப்) ஒன்றாகும். இறைவனைத் தன்னுள்ளும், இறைவனுக்குள் தன்னையும் (அரபி – வஹ்ததுல் வுஜுத்) காணும் உள்ளார்ந்த ஆன்மீகப் பார்வையை சூபித் தத்துவம் கூறுகிறது. உலகில் உள்ள அனைத்திலும் இறைவனைக் காணும் உயர்ந்த ஆன்மீக உணர்வுநிலையே சூபியிசம். அத்வைதமும், சூபியிசமும் பல பரிமாணங்களில் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கும் தத்துவ நெறிகள் ஆகும். இதனைத் தமிழ் சூபிப்பாடல்களில் காணப்படும் அத்வைத மற்றும் சைவ சமயக் கருத்துக்களின் தாக்கத்தைக் கொண்டு அறியலாம். இவ்விரு பெரும் தத்துவ நெறிகளில் செங்கோட்டை ஆவுடை அக்காள் அத்வைதத்தையும், தென்காசி ரசூல் பீவி அத்வைதம் கலந்த சூபி தத்துவத்தையும் பின்பற்றிப் பாடல்கள் இயற்றினர்.

    ஊரும் உறவும்

    செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல் பீவி ஆகிய இருவரையும் அவர்கள் வாழ்ந்த ஊரின் பெயரை முன்னொட்டாக வைத்தே அடையாளப்படுத்துகின்றனர். மேலும் அக்காள் மற்றும் பீவி (உருது: பீவி – மனைவி) என்கின்ற உறவுமுறைச் சார்ந்த சொல்லே இருவருடைய பெயரின் பின்னொட்டாக அமைந்துள்ளது. ஆவுடை என்பது இறைவனையும், ரசூல் என்பது இறைவனின் தூதரையும் குறிக்கும் சொற்களாகும். பெயரில் காணப்படும் இத்தகைய பொருத்தங்களும் முரண்களும் வெகுமக்கள் பார்வையில் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன.

    காலமும் கற்பிதமும்

    ஆவுடை அக்காள் வாழ்ந்த காலம் பற்றிய முரணான கற்பிதங்களே காணக்கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் ஆவுடை அக்காள் பற்றி வாய்மொழியாகப் பெறப்பட்ட வாழ்க்கைக் குறிப்புகளை நான்கு பேர் பதிவு செய்துள்ளனர். முதன் முதலில் அக்காளின் வாழ்க்கைக் குறிப்பானது, 1910ஆம் ஆண்டு தஞ்சாவூரைச் சேர்ந்த நா. வைத்தியநாத பாரதி அவர்களால் பதிப்பிக்கப்பட்ட “பிரம்ம மேகம்” எனும் சிறு பாடல் புத்தகத்தில் வெளியிடப்பட்டது. அந்நூலில் அக்காள் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன் (1810) வாழ்ந்தவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஆய்குடி வெங்கடராம சாஸ்திரிகளால் 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சிறு பாடல் புத்தகத்தில், அக்காள் அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் (1553) வாழ்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக “ஸ்ரீ ஆவுடையக்காள்” எனும் தலைப்பில் கோமதி ராஜாங்கம் (1954-ல்) எழுதிய கட்டுரையினை 1964 ஆம் ஆண்டு “ஸ்ரீ சங்கர க்ருபா” பத்திரிக்கையில் வெளியிட்டார். அக்கட்டுரையில் அக்காள் அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன் (1704) வாழ்ந்தவர் எனக் குறிப்பிடுகின்றார். நான்காவதாக நித்யானந்தகிரி ஸ்வாமிகள் 2002 ஆம் ஆண்டு பதிப்பித்த “செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு” எனும் நூலின் முன்னுரையில் (ஸமர்ப்பணம்) அக்காள் அவர்கள் 350 ஆண்டுகளுக்கு முன் (1652) வாழ்ந்தவர் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலே கூறப்பட்ட காலக் குறிப்புகளை ஆராயும்போது ஆவுடை அக்காள் அவர்கள் 1553, 1652, 1704, மற்றும் 1810 ஆகிய காலகட்டங்களில் வாழ்ந்திருக்கலாம் என்கின்ற முரண்பட்ட முடிவே கிடைக்கின்றன.

    ஆவுடை அவர்கள் வாழ்ந்த காலத்தினைப் பற்றி நிலவும் முரணான கற்பிதங்களைக் களைந்து ஓரளவு சரியான காலகட்டத்தை அறிந்து கொள்வதென்பது, ஆவுடை அவர்களின் மறுவாழ்விற்கு வித்திட்ட ஆன்மீக குருவான திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாளின் வாழ்க்கையை அறிந்து கொண்டதன் மூலம் சாத்தியப்பட்டது. 1635 ஆம் ஆண்டில் மைசூரில் பிறந்த அய்யாவாள், அங்கேயே திருமணம் செய்து தன்னுடைய தந்தையின் மரணம் வரை அங்கு வாழ்ந்து வந்தார். பின்பு ஆன்மீக வாழ்வினை மேற்கொண்ட அய்யாவாள் மைசூரிலிருந்து திருச்சி வந்தடைந்து சிலகாலம் தங்கினார். அதன்பின்பு திருச்சியிலிருந்து (கிட்டத்தட்ட 49 வது வயதிற்கு மேல்) இடம்பெயர்ந்து ஷாஹாஜி II அவர்கள் ஆண்டுகொண்டிருந்த (1684–1712) தஞ்சாவூருக்கு உட்பட்ட திருவிசைநல்லூரில் வந்து தாங்கினார். பல ஆன்மீகத் தலங்களுக்கும் நடைபயணமாகச் சென்று வந்த அய்யாவாள் இறுதியாகத் திருவிசைநல்லூரில் 1720 ஆம் ஆண்டு தனது 85 ஆம் அகவையில் முக்தியடைந்தார் என்பது தகவல். மேலும் அய்யாவாள் அவர்கள் சங்கரமடத்தின் 59 ஆம் பட்டமான ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர சரஸ்வதி (1638–1692) அவர்களுக்கும், அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை வல்லுநருமான சதாசிவப் பிரம்மேந்திரரின் (????–1753) சமகாலத்தவர் என்ற தகவலும் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேற்கூறிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயும் போது, தன்னுடைய 49 வயதிற்கு மேல் திருவிசைநல்லூர் கிராமத்தில் குடியேறிய அய்யாவாள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார். அய்யாவாளின் ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் தென்காசி, குற்றாலம் வழியாக நடைபயணமாக வேணாட்டு அரசர்களின் ஆட்சிக்குப்பட்ட செங்கோட்டைக்கு வருகை புரியும்போது அவர் ஏறக்குறைய 50லிருந்து 75 வயதிற்குட்பட்டவராக (கிட்டத்தட்ட 1685 க்கு மேல்) இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். இந்தக் கணிப்பானது, கோமதி ராஜாங்கம் அவர்கள் ஸ்ரீசங்கர க்ருபா பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் வயது முதிர்ந்த நிலையில் இருந்த அய்யாவாள் செங்கோட்டைக்கு வருகை தந்தார் எனும் தகவலுக்கு வலுச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஆவுடை அவர்கள் பருவமடைந்த இளம் விதவையாகவே இருந்தபோதுதான் முதன்முதலாக தன்னுடைய ஞான குருவான அய்யாவளைச் சந்தித்ததாக ஆய்குடி வெங்கடராம சாஸ்திரி மற்றும் கோமதி ராஜாங்கம் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் 50 வயதுக்கு மேற்பட்ட அய்யாவாளை, இளம் கைம்பெண்ணான ஆவுடை அவர்கள் தன்னுடைய 15 மற்றும் 30க்கு உட்பட்ட வயதிற்குள் சந்தித்திருக்கவே வாய்ப்புள்ளது. மேற்கூறிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்பொழுது ஆவுடை அவர்கள் கிட்டத்தட்ட கி.பி. 1655–1695 இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதலாம்.

    ரசூல் பீவி அவர்கள் வாழ்ந்த காலம் மற்றும் வாழ்க்கை வரலாறு பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும் ரசூல் பீவி அவர்களைப் பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள் அவருடைய பாடல்களில் அகச்சான்றாகக் காணக்கிடைக்கிறது. மேலும் ரசூல் பீவி அவர்கள் வாழ்ந்த காலகட்டம் 1910 என்று முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதேசமயம் 1910 ஆம் ஆண்டு, ரசூல் பீவியினுடைய மகன் முகம்மதப்பா சாஹிப் அவர்கள் தன்னுடைய பெற்றோர்கள் இயற்றிய ஞானப்பாடல்களைத் தொகுத்து பரிமளத்தார் பாடல் எனும் தலைப்பில் நூலாக தென்காசி ராமானுஜம் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார் என்றும், ரசூல் பீவி அவர்கள் இயற்றிய ஞானாமிர்த சாகரம் எனும் ஞானப்பாடல்கள் அடங்கிய தொகுப்பானது, பரிமளத்தார் பாடல் என்ற அந்த நூலின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளதாகவும் இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் எழுதிய சூஃபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும் எனும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேற்காணும் தகவல்களின் அடிப்படையில் நோக்கும்பொழுது ஞானாமிர்த சாகரம் எனும் நூலினைப் பதிப்பிக்கும்பொழுது முகம்மதப்பா அவர்களின் வயதானது தோராயமாக 20க்கு மேல் 70க்குள் இருக்கக்கூடிய பட்சத்தில் ரசூல் பீவி அவர்கள் 1822க்கு மேல் 1872க்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    மேற்கண்ட ஆய்வின் வழியாக, ஆவுடை அக்காள் அவர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வேணாட்டு மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட செங்கோட்டையிலும், ரசூல் பீவி அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி அல்லது பிரித்தானிய இந்தியப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட தென்காசியிலும் பிறந்திருக்கலாம் என்பது புலனாகிறது.

    கைம்மை நோன்பும் காதல் வாழ்வும்

    பழமைவாதத்தின் பாசறையாக விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், கேரள வேணாட்டு மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த சிறுநகரமான செங்கோட்டையில் வாழ்ந்த ஓர் அந்தணர் குடும்பத்தில் பிறந்த பெண் ஆவுடை. அறிவார்ந்த சிறுமியான ஆவுடை குழந்தைப் பருவத்திலேயே திருமணமாகிக் கைம்பெண்ணானவர். ஆவுடை அவர்களின் தாயார் தாம் சார்ந்திருந்த சமூக வழக்கத்திற்கு மாறாக ஆவுடை அவர்களுக்கு அடிப்படைக் கல்வி புகட்டியும் கைம்மை நோன்பை ஏற்கவிடாமலும் வளர்த்தார். இருப்பினும் ஆவுடை பருவமடைந்த பின்பு சமூக நெருக்கடியின் காரணமாக தன்னுடைய தலை முடியயை மழித்து கைம்மை நோன்பினை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் கைம்பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக ஆவுடை அவர்கள் உளவியல் ரீதியாகப் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.

    ரசூல் பீவி அவர்களின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அவரது பாடல்களில் காணக்கிடக்கின்றன. ரசூலின் பாடலின் வழியாக அவருடைய தந்தையார் நயினார் முகமது என்றும் கணவர் பரிமளத்தார் என்று அழைக்கப்படும் புலவர் ஞானி முகமது காசிம் சாகிபு என்றும், மகன் முகம்மதப்பா சாஹிப் என்றும் அறியமுடிகிறது. ரசூல் பீவி மட்டுமின்றி அவரது கணவரும் ஒரு சூபி ஞானியாகத் திகழ்ந்தார். மேலும் இருவரும் இணைந்தே ஆன்மீகச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டனர். பீவி தன்னுடைய கணவர் பரிமளத்தாரோடு வாழ்ந்த காதல் வாழ்வினை மரணத்துக்குப் பின்பான மறுமையிலும் தொடரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதாகக் கீழ்வரும் பாடலில் பதிவு செய்துள்ளார்;

    ‘மயில் குயில்போல் கூடினமே மாநிலத்தில் மனமே
    மறைந்தாலும் இதுபோலே மண்ணறையில் இருக்க
    துயிலுடைந்து எழுந்ததுபோல் துணைமஹூலில் இருக்க
    துலக்கும் ரஹ்மான் ஆணை துய்யோன் பரிமளமே’

    மேலும் ரசூல் பீவியை புகழ்ந்து அவருடைய மகன் பாடல் இயற்றியதோடு மட்டுமல்லாமல் பீவியினுடைய பாடல்களைப் புத்தகமாகப் பதிப்பித்திருப்பதையும் காணும்பொழுது ரசூல்பீவி அவர்கள் மனநிறைவான காதல் வாழ்க்கையின் வழியே ஆன்மீக வாழ்வினை வாழ்ந்தார் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

    ஆவுடை அக்காள் மற்றும் ரசூல் பீவி ஆகியோருடைய வாழ்வினை ஒப்புநோக்கும்பொழுது கைம்பெண்ணான அக்காளுக்கு ஏற்பட்ட சமூக அழுத்தம் எனும் சிறையில் இருந்து மீள்வதற்கு ஆன்மீக விடுதலையை நோக்கிப் பயணித்ததை உணரலாம். இதற்கு மாறாக ரசூல்பீவி அவர்கள் இல்லற வாழ்க்கை வாழ்ந்து கொண்டே ஆன்மீக மெய்ஞான நிலையை நோக்கிப் பயணித்தார் என்பது புலனாகிறது.

    குருவருளும் திருவருளும்

    ஆவுடை அவர்கள் சமூக அடக்குமுறையின் காரணமாக மனமுடைந்திருந்த சமயத்தில், தஞ்சை மராத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட திருவிசைநல்லூர் என்ற கிராமத்தில் இருந்து ஸ்ரீதர வெங்கடேச தேசிக அய்யாவாள் என்கிற மகான் செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். கைம்பெண்ணான ஆவுடை அவர்கள் சமூக கட்டுப்பாட்டையும் மீறி ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாளை அரிஹர நதிக்கரையில் அமைந்த மண்டபத்தில் சந்தித்து, அவரை தன்னுடைய ஞானகுருவாக ஏற்றார். இதன் காரணமாக சமூக நிந்தைக்கும் ஆளானார். இந்தச் சந்திப்பே ஆவுடை அவர்களின் வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. குருவினுடைய திருவருளால் அத்வைத ஞானமார்க்கத்தைப் பின்பற்றி மெய்ஞானத் தெளிவடைந்து தன்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருந்த சமூக அடக்குமுறையினைத் தகர்த்தெறிந்தார். மேலும் இப்பூவுலகில் தனக்கு ஏற்பட்ட பற்றினை அகற்றி இறைவனோடு தன்னை ஒன்றச் செய்த குருநாதருக்கு தனது நன்றியைக் கீழ்காணும் பாடல் வழியே சமர்பிப்பதன் மூலம் அக்காளுடைய குரு பக்தி புலனாகிறது.

    “பாசமகற்றிப் பதிதன்னில் சேர்த்து வைத்த பண்டிதனே! – குருநாதா!
    தேசமெங்கும் புகழ் ஸ்ரீ வெங்கடேசுவர தேசிகரே! – குருநாதா!”

    அத்வைத மெய் ஞான ஆண்டி, பக்: 10

    “குருநாதனைப் பூஜித்தால் தாண்டி உனக்கு நன்மைவரு மென்றாண்டி
    கும்பிக்குச் சோறிடு என்றாண்டி – அவன் கூடைக்கு முத்திடு என்றாண்டி”

    குரு, பக்: 85

    ஒரு ஆன்மீகக் குருவின் ஞான வழிகாட்டுதலின் வழியாகவே ஒரு சூபி தன்னுடைய ஆன்மீக மெய்ஞான நிலையினை அடைய முடியும். மேலும் எவருக்கு ஷைகு (குரு) இல்லையோ அவருக்கு ஷைத்தான்தான் ஷைகு என்பது சூபிக்கள் மத்தியில் வழக்கிலுள்ள பழமொழியாகும். குரு வழங்கக்கூடிய ஆன்மீக அறிவுரைகளும் அங்கீகாரமும் (இஜாஸா) சூபியின் வாழ்வில் தவிர்க்க இயலாத அங்கங்களாகும். இத்தகைய குரு – சீட உறவு எனும் நெடிய உடைபடாத சூபியிச சங்கிலித் தொடரின் இரு கண்ணிகளாக விளங்கியவர்கள்தான் சூபி ஞானி ரசூல் பீவி அவர்களும் அவருடைய ஆன்மீக குருவான ஷெய்கஃப்துல் காதர் ஷாஹன்ஷா அவர்களும் ஆவர். ஆன்மீகக் குருவினுடைய திருவருட் துணையால் பீவி அவர்கள் பல அத்வைத மெய்ஞான ஒளிவீசும் பாடல்களை இயற்றினார்.

    அத்வைத மற்றும் சூபி தத்துவ மரபின்படி ஞானவாழ்வுப் பயிற்சி செய்பவர்களுக்கு குருவழிகாட்டுதல் மிகவும் அவசியமானது. ஆவுடை மற்றும் ரசூல் பீவி ஆகிய இருவரும் தத்தமது குருவின் ஞான வழிகாட்டுதலின்படி ஆன்மீக சாதனைகளை மேற்கொண்டனர் என்பதை அவர்களின் பாடல்களின் வழியே அறிய முடிகிறது.

    பக்தியும் பாடலும்

    குருவினுடைய திருவருளால் ஆன்மீக சாதனைகளை மேற்கொண்ட ஆவுடை அவர்கள், நடைபயணமாகப் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று இறுதியாக, செங்கோட்டை வந்து தங்கினார். செங்கோட்டையில் பல ஆண்டுகள் வாழ்ந்த ஆவுடை அவர்கள் அத்வைதச் சிந்தனை மிளிரும் பல பாடல்களை இயற்றினார். வாய்மொழியாகப் பரவிய ஞானப்பாடல்களில் சேகரிக்கப்பட்டவை சொற்பமே. அவற்றில் சில:

    1. வேதாந்த குறவஞ்சி நாடகம்

    2. வேதாந்த வித்யா சோபனம்

    3. வேதாந்த அம்மானை

    4. வேதாந்தப் பள்ளு

    5. வேதாந்த ஆண்டி

    6. வேதாந்த வண்டு

    7. வேதாந்த ஆச்சே போச்சே

    8. ப்ரும்ம ஸ்வரூபம்

    9. “அன்னே பின்னே” என்னும் வேதாந்த ப்ரத்தியோத்திரகும்மி

    10. ப்ரும்ம மேகம்

    11. தக்ஷிணாமூர்த்தி படனம்

    12. வேதாந்தப் பல்லி

    13. பகவத்கீதா ஸாரசங்கிரஹம்

    14. வேதாந்தக் கப்பல்

    திருநெல்வேலிச் சீமையிலுள்ள அந்தணப் பெண்கள் மத்தியில் ஆவுடை அவர்களின் பாடல்கள் வெகுவாகப் பாடப்பட்டு வந்தன. இதுவரையிலும் ஆவுடை அவர்களை நிந்தனை செய்த சமூகம் அவருடைய ஞானப் பாடல்கள் மற்றும் ஆன்மீகப் பணியின் காரணமாக அவரை ஆவுடை அக்காள் என்று போற்றியழைத்து மரியாதை செலுத்தியது.

    ரசூல் பீவி அவர்கள் இயற்றிய ஞானாமிர்த சாகரம் எனும் ஞானப் பாடற் தொகுதியில்:

    1. காப்பு – கடவுள் வாழ்த்து
    2. பொருள் வினா விடை
    3. கண்மணிப்பதிகம்
    4. பரிமளக் கண்ணி, வெண்பா
    5. கண்ணிகள்
    6. மாக்கொடிக்கண்ணி
    7. வெண்பா
    8. என் தாய்க் கண்ணி
    9. முச்சுடாக் கண்ணி
    10. றகுமான் கண்ணி
    11. பரமானந்தக்கண்ணி
    12. பீர்முறாதுக்கண்ணி
    13. என்னாட்கண்ணி
    14. குருபரக்கண்ணி
    15. கண்மணிக்கண்ணி
    16. வேகுதேகக் கண்ணி
    17. காணேனோ
    18. வாழ்வோமே
    19. காண்பேனே
    20. ஆகாதோ
    21. நெஞ்சோடு புலம்பல்
    22. வெண்பா
    23. இரட்டை ஆசிரிய விருத்தம்
    24. காட்சிப்படலம்
    25. கோட்டைப்படலம்
    26. விருத்தம்
    27. சந்தவிருத்தம்
    28. முகிய்யிதீனே
    29. பேரின்பத் திறவுகோல் படலம்
    30. கொச்சகம்
    31. அம்மானை
    32. பைத்து அல்லாகூ
    33. முனா ஜாதது
    34. இலாஹி என முடியும் தந்நிலையின் ஆனந்தக் கும்மி
    35. ‘தானே நீ தானல்லா தானே குனறூகல்லா’ ‘தானே றசூலுல்லா தானே இன்ஷானல்லா’ எனும் பாடல்
    36. கப்பல் சிந்து
    37. தாய் மகனேசல்

    போன்ற தலைப்பில் ஞான ஒளி வீசும் பாடல்கள் அடங்கியுள்ளன.

    அக்காளும் பீவியும் தமது ஆன்மீக மெய்யுணர்வின் வெளிப்பாடாக அமைந்த ஞானப் பாடல்களை, அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எளிமையான நாட்டுப்புறப் பாடல் வடிவிலேயே இயற்றினார்கள். எளிமையான கண்ணிகளும், முடுகுகளும், சிந்துகளும், கப்பற்பாடல்களும் எளியவரும் மனனம் செய்யும்படி இருந்ததால், வாய்மொழியாகவே பரவ ஏதுவாய் இருந்தது. அக்காளின் ஞானப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட அநேகர் அவருடைய சீடர்களாக மாறினர் என்று கோமதி ராஜாங்கம் அவர்கள் பதிவு செய்துள்ளார். இதேபோன்று ரசூல் பீவியினுடைய ஞானப் பாடல்கள் அவருக்கு அநேகம் பிறசமயத்தைச் சார்ந்த சீடர்களைப் பெற்றுத்தந்தது. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் பாளையம்கோட்டை எம். சுப்பையா பிள்ளை, தென்காசி பாடலிங்க முதலியார் மற்றும் தென்காசி கிருஷ்ணம்மாள் சந்நியாசி ஆகியோர் ஆவர்.

    முழுமையும் முக்தியும்

    ஆவுடை அவர்களின் மரணம் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. ஆன்மீக முழுமையடைந்த ஆவுடை அவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று குற்றாலத்தில் நீராடிவிட்டு, தனது புடவைப்பெட்டியோடு பொதிகை மலைமீது ஏறிச்சென்றவர் பின்பு திரும்பவே இல்லை என்ற செவிவழிச் செய்தியைக் கோமதி ராஜாங்கம் அவர்கள் பதிவுசெய்துள்ளார். அதேசமயம் அனுபோக ரத்னமாலை எனும் இரங்கற்பாடலை, கி.பி. 1720ஆம் ஆண்டில் மறைந்த ஸ்ரீதர அய்யாவாளுக்காக ஆவுடை அவர்கள் இயற்றியுள்ளார். இதனடிப்படையில் நோக்கும்போது ஆவுடை அக்காள் அவர்கள் 1720க்கு பின்னர்தான் இறந்திருக்க வேண்டும் என்பதனை  அறிய முடியும்.

    ரசூல் பீவி அவர்கள் மரணித்த வருடம் பற்றிய சரியான குறிப்புகள் இல்லை. இருப்பினும், தாயம்மாள் அறவாணன் அவர்களின் கருத்தின்படி ரசூல்பீவி 1910ஆம் ஆண்டுக்குப் பின்புதான் இயற்கை எய்தி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ரசூல்பீவி 1910க்கு முன்பே மரணித்து இருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கருதலாம்.

    முடிவுரை

    செங்கோட்டை ஆவுடை அக்காள் மற்றும் தென்காசி ரசூல்பீவி ஆகிய இருவரும் தென்பொதிகையின் சாரலின் இருவேறு பகுதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலம், வாழ்க்கை, குரு பக்தி, இயற்றிய பாடல்கள் மற்றும் மரணம் போன்றவற்றில் பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் காணப்படுகின்றன. ஆவுடை அக்காள் மற்றும் ரசூல் பீவி ஆகிய இருவரும் வாழ்ந்ததற்கான கால இடைவெளி அதிகபட்சமாக 200 ஆண்டுகளேனும் இருக்கலாம். ஆவுடை அவர்களின் பதின்ம வயதிலிருந்து மரணம் வரை தாம் சந்தித்த இன்னல்களையும் அடக்குமுறைகளையும் ஞானவாழ்வினை ஆயுதமாக ஏந்தியே எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தது. இதற்கு மாறாக ரசூல்பீவி அவர்கள் கணவனோடு இணைந்து இனிமையான இல்லற மற்றும் ஞானவாழ்வினை மேற்கொண்டார் என்பதும் புலனாகிறது. குருவினுடைய வருகையும் அருளும் ஆவுடை அவர்களின் வாழ்க்கையில் பெரும் மாறுதலையும் ஆறுதலையும் தந்தது. குருவினுடைய அருளுளோடு இணைந்து கணவருடைய ஆன்மீக வழிகாட்டுதலும் ரசூல் பீவி அவர்களை வழி நடத்தியது எனலாம். ஆவுடை அவர்கள் தன்னுடைய பாடல்களில் துயரத்தின் வலியையும், உலக வாழ்வின் உள்ளீடற்ற தன்மையையும், மதசம்பிரதாய எதிர்ப்பினையும் அத்வைத சிந்தனை கலந்து பாடியுள்ளார். ரசூல் அவர்களின் பாடல்களில் இஸ்லாமியச் சிந்தனைகளோடு சைவ சமயச் சொல்லாடல்களும், அத்வைதச் சிந்தனைகளும் விரவிக் காணப்படுகின்றன. மேலும் ரசூல் அவர்களின் பாடல்களில் ஆவுடை அவர்களின் பாடற் கருத்துக்களின் தாக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. உதாரணமாக, கண்ணிகள், முடுகுகள் மற்றும் கப்பல் சிந்து போன்ற பாடல்களில் இந்த ஒற்றுமையை அறியலாம். இரும்புப் பாதையின் இரு தண்டவாளங்களைப் போன்று இருவரின் மத நம்பிக்கையும் வாழ்வும் இருந்தாலும் அவர்கள் வெளிப்படுத்திய ஞானக் கருத்துக்களும் அதன் சாரமும் ஒன்றே, இறுதியாக அவை சேரும் இடமும் ஒன்றே. மத சகிப்புத்தன்மை அருகிவரும் இக்காலகட்டத்தில் இவ்விரு ஞானியரின் வாழ்வும் ஆன்மீகப் பங்களிப்பும் அனைவரும் படித்து உணர வேண்டியது என்றால் அது மிகையில்லை.

    ஆய்வுக்கு உதவிய சான்றுகள்:

    1. பதிப்பாசிரியர் நித்யானந்த கிரி ஸ்வாமிகள் (2002). செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு. ஸ்ரீ ஞானானந்த நிகேதன், விழுப்புரம்.
    2. நாஞ்சில் நன்மொழியோன் (1981). தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: பெண்பாற் சூஃபி தென்காசி ரசூல் பீவி. தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா, வெளியீடு: மீரா பவுண்டேஷன், சென்னை. பக். 125–137.
    3. இரா. முத்துக்குமாரசாமி (1981). தமிழில் இஸ்லாமிய மெய்ஞான இலக்கியங்கள்: சூஃபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும். தொகுப்பாசிரியர் மணவை முஸ்தபா, வெளியீடு: மீரா பவுண்டேஷன், சென்னை. பக். 207.
    4. முனைவர். அ. ஸ்ரீவித்யா (2017). பல்துறை ஆய்வுக் களஞ்சியம் (மகளிர் தினக் கருத்தரங்கம்): செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். பக். 380–382.
    5. நாஞ்சில் நாடன் (2010). கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு – நூல் அறிமுகம், சொல்வனம் (23-08-2010) – இதழ் 32.
    6. முனைவர். தாயம்மாள் அறவாணன் (2017). கட்டுரை: இஸ்லாமியப் பெண் ‘ஞானி’கள்! தினமணி (04-03-2017)
    7. ரா. கணபதி (2018). தெய்வத்தின் குரல்: அத்வைதம்: (முதல் பகுதி) – ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், வானதி பதிப்பகம். பக். 19-27.
    8. வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் (2010). சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள். விகடன் பிரசுரம். பக்கம் 18.
    9. மௌல்வி முஹம்மது அப்துர் ரஹ்மான் ஸாஹிபு (1962). முஸ்லிம் அத்வைத மூலமொழி-துஹ்பத்துல் முர்ஸலா, ஷாஹுல் ஹமீதிய்யா பிரஸ், திருவல்லிக்கேணி, சென்னை.
    10. ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய சரித்திரச் சுருக்கம். வெளியீடு: ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம். கோவிந்தபுரம், ஆடுதுறை.
    11. Kanchana Natarajan (Translator) (2012). Transgressing boundaries: The songs of Shenkottai Avudai Akkal. Zubaan an Asso. of Kali for Women; 2012 edition, eBook ISBN: 9789383074464.
    12. Larrie Benton Zacharie (Ed.) (2013). Sridhara Venkatesa Ayyaval, Verpublishing, United States, ISBN10 6139223547 / ISBN13 9786139223541
    13. Th. Emil Homerin (2014). The Principles of Sufism. New York University Press, New York and London.

    இணையச் சுட்டிகள்:

    1. https://www.britannica.com/place/Kerala/History
    2. https://www.hindutamil.in/news/spirituals/192752–2.html
    3. http://www.sriayyaval.org/lsdetail.html
    4. http://sriayyaval.org/history/sridhara1.htm
    5. https://serfojimemorialhall.com/maharajah-shahaji-II.html
    6. https://www.vikatan.com/spiritual/temples/83043-
    7. https://www.sufimanzil.org/tag/sufism-tamil-books/
    8. https://www.urdupoint.com/dictionary/urdu-to-english/biwi-meaning-in-english/97417.html
    9. http://www.mailofislam.com/sufism_tamil.html

    கட்டுரை ஆசிரியர் 

    முனைவர். ரமேஷ் தங்கமணி


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    தமிழகத்தின் தென்பகுதியாகிய தென்காசி மற்றும் செங்கோட்டையில் வாழ்ந்த இரு பெண் ஆளுமைகளின் வாழ்வியலை ஒப்பிட்டுச் செய்யப்பட்டுள்ள ஒப்பீட்டாய்வாக இக்கட்டுரை அமைகிறது. இருவர்தம் படைப்புகளில் உள்ள அத்வைத சூபியிசக் கோட்பாட்டு ஒற்றுமையைப் புலப்படுத்தியிருப்பது கட்டுரைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது. அதைப் போலவே இருவர்தம் கால ஆராய்ச்சியும் தகுந்த சான்றுகளால் நிறுவப் பெற்றுள்ளது.

    இம்மையில் போராடிய ஒருவரும் மறுமைக்குப் பேறு வேண்டிய மற்றொருவருமாக குருவருளையும் திருவருளையும் வேண்டிப் பாடிய இருவருடைய வாழ்வியலைப் ஆய்வுக்கு உட்படுத்த ஒப்புமையும் பகுப்புமையுமாக விளங்கும் உத்தி நன்று. பாடல் மேற்கோள்கள், நூல்களின் பட்டியல், மேலும் பல ஆய்வுகளுக்கு வழிகோலும். இருநூறு ஆண்டுக்கால இடைவெளியில் ஒரே பகுதியில் ஒன்றியும் மாறுபட்டுமான வாழ்வியலைக் கொண்டிருந்த இருவர்தம் படைப்புகளும் ஒத்துக் காணப்பட்டுள்ளதை இந்தக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.


    Share
  • வைரமுத்து பிறந்தநாள் – ஒரு வரலாற்றுப் பிழை

    வைரமுத்து பிறந்தநாள் – ஒரு வரலாற்றுப் பிழை

    வித்வான், முனைவர் ச.சுப்பிரமணியன்

    இரண்டு நாள்களாக நன்கு சிந்தனை செய்து இந்தப் பதிவினை இடுகிறேன். ஆனால் வருத்தத்தோடு இடுகிறேன்!

    தமிழன் வரலாற்றைப் பதிவு  செய்யத் தெரியாதவன் என்பது நீண்ட  நெடுங்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. சரி!

    வைரமுத்து பிறந்தநாள் என்று கட்டற்ற தகவல் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நாள்  13/07/1953

    இதனைவிட ஓர் அகச்சான்று, அவர் எழுதிப் பதிப்பித்த கவிதை நூல்களுள் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’  என்ற நூலின் இறுதிக் கவிதைத் தலைப்பு ‘உயில்’

    அந்த உயிலில்

    “என் கல்லறையில்
    தோற்றம் எழுதுங்கள்!
    13/07/1953”

    இது அவர் கைப்பட எழுதிய வரிகள்!

    காவ்யா சண்முகசுந்தரம் 2013-இல் வைரமுத்து அவர்களுடைய 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பணியைச் செய்தார்.

    அந்தப் பணி என்னவென்றால், தமிழகப் பல்கலைக்கழகங்களில் வைரமுத்து அவர்களுடைய படைப்புகளைப் பற்றிய ‘ஆய்வியல்நிறைஞர்’, முனைவர் ஆகிய பட்டங்களுக்காகப் பணிந்தளிக்கப்பட்ட ஆய்வேடுகளில் இருந்து அறுபது சிறந்த கட்டுரைகளைத் (இயல் பகுதிகளை) தொகுத்து “வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம்” என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். அந்தத் தொகுப்பில் என்னுடைய மேற்கண்ட இரண்டு பட்டங்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்தச் சான்றுகளால் வைரமுத்தின் பிறந்தநாள் 13/07/1953 என்பது உறுதிப்படுகிறது!.

    அப்படியென்றால் 13/07/2020 அன்று அவருக்கு அகவை என்ன?

    நிறைவான அகவையைச் சொல்ல வேண்டுமானால் 67 என்று சொல்லியிருக்க வேண்டும்.

    தொடங்குகின்ற அகவையைச் சொல்ல வேண்டுமானால் (இதுதான் முறை) 68 என்று சொல்லியிருக்க வேண்டும்.

    இரண்டுமில்லாமல் 66 என்றே அத்தனை ஊடகங்களிலும் “வைரமுத்து 66’ என்றே லோகோ போட்டுக் காட்டினார்கள்.

    ஸ்டாலின், ‘அவருக்கு வயது 66, அவர் கவிதைக்கு வயது 16’ என்றும் கூறியிருந்தார்.

    இன்றைக்குத் தமிழகச் சமுதாயச் சூழலில் இதுபோன்ற பதிவுகள் எந்த மனிதரின் தனிமனித வாழ்விலும் எந்த வளர்நிலை மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

    இருந்தாலும் நாடறிந்த கவிஞர் ஒருவரின் பிறந்தநாள் பற்றிய தெளிவான பதிவைக்கூட நாம் செய்ய இயலாதபோது நம் முன்னோர்களைக் குறைசொல்வது என்ன நியாயம்?

    செய்வன திருந்தச்செய்! இது எல்லாருக்கும் பொருந்தும், வைரமுத்து உட்பட!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 25

    பழகத் தெரிய வேணும் – 25

    நிர்மலா ராகவன்

    (நல்லதையே நினைக்கலாமே!)

    ‘நான் சரியாகவே படிக்கவில்லை. பரீட்சையில் பாஸாகப் போவதில்லை,’ என்று சொன்னால், தேவதைகள் ‘ததாஸ்து!’ என்று வாழ்த்தி, அது பலிக்கும்படிச் செய்துவிடுமாம். அதனால் என்ன பேசுவது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

    நம் எண்ணம்போல் எதுவும் நடக்கும் என்றால், நல்லதையே நினைப்போமே! மனமும் அமைதியாக இருக்கும்.

    ஆனால், எப்போதுமே மகிழ்ச்சியாகவோ அமைதியாகவோ காணப்பட வேண்டும் என்பதும் நடக்கிற காரியமல்ல. அவ்வப்போது கோபம், வருத்தம், ஏமாற்றம் எல்லாம் எழத்தான் செய்யும். ஆனால், இந்த உணர்ச்சிகள் ஒருவரை எப்போதுமே அலைக்கழித்துக் கொண்டிருப்பதுதான் தவறு.

    கதை

    ஓய்வுபெற்ற ஒருவர், “போன மாதம் விளக்குக்காசுக்கான ரசீது முதலிலேயே வந்துவிட்டதே! இந்த மாதம் இன்னும் வரவில்லையே! மின்சாரத்தை வெட்டி விடப்போகிறான்!” என்று வீட்டிலுள்ளவர்களை நச்சரிப்பார். அதனால் உடன் இருப்பவர்களையெல்லாம் தொல்லைப்படுத்துகிறார்.

    ஓரிரு நாட்கள் தாமதமாகும் என்று அவருக்குத் தெரியாதா, என்ன!

    விளக்கிச்சொன்னாலும் புரிந்துகொள்ள மறுப்பார். பொழுது போயாக வேண்டுமே! தனது அதிகாரத்தை வேறு எப்படித்தான் காட்டிக்கொள்வது!

    அவரைப் போன்றவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களால்தான் பலம்.

    யோசித்துச் செயல்படுவது

    நாம் எதையாவது பேசுமுன்னரோ, எழுதுமுன்னரோ, நம் கருத்தால் பிறருக்கு ஏதாவது பயன் இருக்கிறதா, யாரையாவது நோகடிக்கிறோமா, அவசியமானதா என்றெல்லாம் சற்றே யோசிக்க வேண்டுவது அவசியம்.

    கதை

    ஓர் ஆங்கில தினசரியில் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் விமரிசகராக நான் பணிபுரிந்தேன்.

    நான் அப்பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது, “நீங்கள் நேர்மையானவர்!” என்று, அப்பகுதியின் ஆசிரியை நான் எவ்வளவு கடுமையாக எழுதினாலும் அதை அப்படியே பிரசுரிப்பாள்.

    ஒரு முறை, புகழ்பெற்ற ஒரு நடனக் கலைஞர் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தபோதே, மேடையில் மல்லாக்க விழுந்துவிட்டார். சமாளித்து எழுந்தபோது, அவர் முகம் வெளிறியிருந்தது.

    உண்மையாகவே இருந்தாலும், இதைப்பற்றி நான் எழுதியிருந்தால் ஆயிரக்கணக்கானோர் அதைப் படித்துவிட்டு, அவரைப் பற்றி ஏளனமாகப் பேசிச் சிரிக்க வழி வகுத்தவளாவேன். பரதக்கலை நாட்டில் பரவ எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருந்தவரின் மனம் நோகும்.

    விமரிசனம் தினசரியில் வெளியாகும் நாள்வரை அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்!

    அவருடைய நிலை குலைந்ததைப்பற்றி நான் மூச்சு விடவில்லை. அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்.

    குறை கூறினால் கோபம்

    முன்னுக்கு வருபவர்கள் மாறத் தயாராக இருப்பவர்கள். தம் குறைகளைப் பிறர் எடுத்துச்சொல்லும்போது, அதிலிருக்கும் உண்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டுத் தம்மைத் திருத்திக்கொள்வார்கள். ஆனால், இத்தகையவர்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது.

    நாம் யார்மீதாவது குற்றம் கண்டுபிடித்தால், அது சரியானதாகவே இருந்தாலும், விரோதம் பாராட்டுகிறவர்கள்தாம் அதிகம்.

    கதை

    சமீபத்தில் ஒரு தொகுப்பிலுள்ள கதைகளுக்கு விமரிசனம் எழுதவேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.

    “உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன். இப்படிப் பட்டும்படாததுமாக எழுதுகிறீர்களே!” என்று தொகுப்பாசிரியை என்னிடம் குறைப்பட்டார்.

    சிறுவர்களைக் கண்டித்தால் மாறலாம். ஆனால், நாற்பது வயதுக்குமேல் ஆனவர்களை மாற்றுவது கடினம்.

    அவரவர் வாழ்க்கைப் பின்னணி, அனுபவம் இவற்றைக்கொண்டுதான் எழுதுகிறார்கள். அவர்கள் கதை, தற்காலத்திற்கு ஒவ்வாத கருவைக் கொண்டிருக்கலாம். அதை லேசாகச் சுட்டிவிட்டுப் போகவேண்டியதுதான்.

    இல்லாவிட்டால், ‘தாறுமாறாக எழுதியிருக்கிறாளே! தான் ரொம்ப நன்றாக எழுதுவதாக எண்ணமோ?’ என்று குமைவார்கள்.

    சிந்தனையை மாற்று

    ‘உன்னால் முடியாது!’ என்று பிறர் சொல்வது நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, செய்ய ஆரம்பித்த காரியத்தில் கவனம் குறைந்துவிடும்.

    பிறகு என்ன! தோல்விதான்.

    எதிர்மறைச் சிந்தனைகள் எழுகையில், அவற்றை நேர்மறையாக மாற்றுவது ஒரு நல்ல உத்தி.

    பிறரது பயமுறுத்தலை நம்பி, ‘என்னால் முடியாது!’ என்று பயந்து விலகுவதைவிட, அவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தலாமே! நம் திறமை நம்மைவிடப் பிறருக்கு அதிகம் தெரியுமா?

    ‘என்னால் முடியும். எங்கு ஆரம்பிக்கலாம்?’ என்று கேட்டுக்கொண்டால், அச்சத்தை விளைவிக்கும் காரியத்தை ஆரம்பிக்கும் துணிவு பிறக்கிறது.

    எதிர்மறையான ஆசிரியர்கள்

    பல சிறுவர்கள் தம் முன் உட்கார்ந்து, தாம் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருப்பதால் ஆசிரியர்களுக்குப் பெருமிதம் ஏற்படும்.

    கதை

    கடந்த ஜூன் மாதம் சீனாவில் நடந்த சம்பவம் இது.

    பள்ளி முடிந்ததும் ‘விசேட வகுப்பு’ என்று நடத்தி, அதற்காகப் பணமும் வசூலித்திருக்கிறாள் ஓர் ஆசிரியை.

    அப்போது, பத்து வயதுச்சிறுமி ஒருத்தி எழுதிய கட்டுரையில் பல பகுதிகளை அடித்துவிட்டு, கண்டபடி திட்டியிருக்கிறாள்.

    எப்படி எழுதவேண்டும், திருத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை.

    மனமுடைந்த அம்மாணவி பள்ளிக்கூடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.

    ‘ஒரே குழந்தை’ என்று அருமையாக வளர்த்திருப்பார்கள். ஆசிரியையின் கடுமையான வார்த்தைகளை அச்சிறுமியால் ஏற்கமுடியாமல் போய்விட்டது.

    அறிவுக்கூர்மை இல்லாதவர்களை மட்டம் தட்டி, அதனால் தாம் உயர்ந்துவிட்டதாக எண்ணுகிறவர்கள் இத்தொழிலுக்கு வரலாமா?

    ஆசிரியர்களை விடுங்கள். பெற்றோர் சிலரே குழந்தைகளை இப்படித்தானே நடத்துகிறார்கள்!

    கதை

    முன்கோபியான சந்தானம் ஐம்பது வயதுக்குள் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் சண்டை போட்டுவிட்டு, பதவியிலிருந்து விலகினார்.

    ஓரிரு வருடங்கள் கழிந்தது. `நான் எதற்கும் லாயக்கில்லாதவன்!’ என்று தோன்றிப்போக, அச்சிறுமை உணர்ச்சி பதின்ம வயதான முரளியிடம் திரும்பியது.

    “நீயும் என்னை மாதிரி உருப்படாதவனாக ஆகப்போகிறாய்!” என்று மந்திரம்போல் தினமும் சொல்ல ஆரம்பித்தார்.

    ‘என்னைப்போல் ஆகிவிடாதே!’ என்று கூறியிருந்தாலும் பிரயோசனமில்லை. எதிர்மறையான அறிவுரைகளால் பயனிருக்காது.

    அத்தந்தை தன்னைப் பற்றியே நினைத்து மருகாது, மகனுடைய படிப்பில் அக்கறை காட்டி இருக்கலாம்.

    மகன் நல்ல நண்பர்களுடன் பழகுகிறானா, விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவும், மனத்தைத் தெளிவாகவும் வைத்திருக்கிறானா என்று கண்காணித்திருக்கலாம்.

    தன் முன்மாதிரியான தந்தை சொல்வதை அப்படியே நம்பினான் முரளி. சுயநம்பிக்கையை இழந்ததால், பிறருடன் சரிசமமாகப் பழகவே முடியாது போயிற்று.  அவன் எல்லாவற்றிலும் தோல்வியே அடைந்தபோது, “நான்தான் அப்போதே சொன்னேனே!” என்று பெருமைப்பட்டுக்கொண்டார் சந்தானம்.

    முரளிக்கு நேர் எதிர் என் மாணவன் அமீர். “போன வருடம் எங்கள் வகுப்பிற்கு எல்லா இன ஆசிரியைகளும் வந்தார்கள். இப்போது நீங்கள் மட்டும்தான்!” என்று குறையுடன் சொல்வான்.

    அமீர் மட்டும் பிற மலாய் மாணவர்களிடமிருந்து வித்தியாசமாக — அறிவுடன் பணிவுமாக — இருந்தான்.

    அதிசயப்பட்டு விசாரித்தபோது, “என் தந்தை தினமும் கேட்பார், பள்ளிக்கூடம் எப்படி இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தாயா என்று. எல்லாரையும் மதித்து நடந்துகொள் என்று கூறுவார்,” என்றான்.

    அமீரின் தந்தைக்கு வாழ்க்கையில் இடர்களே இருந்திருக்காதா?

    அவற்றையே எண்ணி, தன்னுடையது மட்டுமின்றி தன்னை நம்பியவர்களின் வாழ்க்கையையும் பாழடிக்காத நல்ல மனிதர் அவர்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 4

    கதை வடிவில் பழமொழி நானூறு – 4

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 9

    எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
    செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் அந்நெறி
    மான்சேர்ந்த நோக்கினாய்! – ஆங்க அணங்காகும்
    தான்செய்த பாவை தனக்கு‘.

    பழமொழி –  அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு

    என்னப்பா உன் ரிடையர்மெண்ட் வாழ்க்கை எப்படிப் போகுது. கேட்டுக் கொண்டே வருகிறான் என் நண்பன் பாலன்.

    உனக்கென்ன. வீடு வாசல் எல்லாம் வாங்கியாச்சு. துபாய்ல வேல பாத்ததால அடுத்த தலைமுறைக்கும் சேத்து சொத்து சேத்திருப்ப. எங்கள மாதிரியா. நானும் மெய்யப்பனும் அடிக்கடி உன்னயப் பத்தி பேசறதுண்டு. நானும் இந்த மாசமே ஓய்வு எடுத்துறலாம்னு இருக்கேன். பொண்ணுக்கு வரன் பாத்து நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக்குடுக்கணும். அவ்வளவுதான் அப்பறம் என் கடமை முடிஞ்சிடும். உங்க ரெண்டு பேருக்கும்தான் பசங்க. அவங்க நல்லா செட்டில் ஆனா தான் கல்யாணம் பண்ணமுடியும். ஆமா. உம் பையன் எங்க. உள்ளூர்லதான் வேலயா. இல்ல அவனயும் உன்னய மாதிரி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிச்சிட்டியா.

    அவனின் அடுக்கடுக்கான கேள்விகளை என்னால் சமாளிக்க முடியவில்லை. நல்ல வேளை என் மனைவி காபியுடன் வந்துவிட்டாள். பேச்சு கொஞ்சம் திசைமாறும்.

    அவளின் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் மீண்டும் தொடர்கிறான்.

    உன் மனைவிக்கு உடம்பு சரியில்லயா. ஏன் ரொம்ப சோகமா இருக்காங்க.

    இனிமேல் முடியாது. சொல்லிவிட வேண்டியதுதான்.

    கொஞ்சம் நீ அமைதியா இருந்தா நான் சொல்றேன். ஆரம்பித்தேன். நான் துபாய்ல போய் நல்லா சம்பாதிச்சது என்னவோ உண்மைதான். என் பையன் சின்னவயசில என்ன கேட்டாலும் வாங்கி அனுப்புவேன். என் மனைவியும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்ததால அவன் நினைச்சதெல்லாம் நடந்தது. கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சவொடனே நண்பர்களோட சேந்து ஊதாரித்தனமா செலவழிச்சு ஊர்சுற்ற ஆரம்பித்தான். வீட்ல நாங்க சரியா கண்காணிக்க முடியாததால எங்ககிட்ட பல பொய்களச் சொல்லிச்  சமாளிச்சான். கடைசியில போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிட்ட அவனக் கல்லூரிய விட்டு நீக்கிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு உறைத்தது. அதோட விளைவு இப்போ நானும் எம் மனைவியும் சம்பாதிச்சது போதும்னு முடிவுக்கு வந்து வேலைய விட்டுட்டு அவனுடைய மறுவாழ்வுக்காக போராடிட்டு இருக்கோம். உள்ளதான் படுத்துட்டு இருக்கான். போய்ப் பாரு.

    அவனைப் பார்த்துவிட்டு வந்தஎன் நண்பனின் கண்களில் கண்ணீர்.

    நேத்தைக்குத் தான் நான் மெய்யப்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனுடைய மகனப்பாத்த பிறகு நான் சொன்ன அதே பழமொழிய இப்பவும் சொல்றேன்.

    அணங்காகும் தான் செய்த பாவை தனக்குஎன்பதுதான் அந்தப் பழமொழி. ஒரு சிற்பிக்குஅவன் தன் கையால செஞ்ச சிலையே ஒருநாள் அவனுக்கு முன்ன வணங்குற தெய்வமா நிக்குமாம். அணங்குங்கறதோட இன்னொரு பொருள் பேய் அப்டின்னும் கேள்விப்பட்டிருக்கேன்.  எதுக்குச் சொல்றேன்னா நாம நம்ம பிள்ளைகள எப்படி வளக்கறோமோ அப்படித்தான் அவங்க வளருவாங்க. ஏதோ எம் மனசுல பட்டதச் சொன்னேன். தப்பா எடுத்துக்காத.

    நேத்தைக்கு மெய்யப்பன் எம்பிள்ளை எனக்கு தெய்வம் மாதிரி. எம் மனைவிக்கு திடீர்னு நோய் வந்தப்போ கூட கவலைப்படாதீங்க அப்பா நான் இருக்கேன்னு ஆறுதலா இருந்தான். இப்போ என்னையும் மனைவியையும் ஒருகுறைவுமில்லாம உக்காத்தி வச்சு சோறு போடறான்னு பெருமையாச் சொன்னான். குறைந்த வருமானம்னாலும் மெய்யப்பன் கூடவே இருந்து கண்காணிச்சு தம் பிள்ளைய நல்லா வளத்ததினால அவன் சமூகத்திலஇருக்கற நல்லது கெட்டத எளிதா தெரிஞ்சிக்க முடிஞ்சது. பாவம் உன் பையனால அதத் தெரிஞ்சுக்க முடியாம கெட்டநண்பர்கள நம்பி ஏமாந்துட்டான். இனியாவது அவன நல்ல முறையில பாத்துக்கோ. என நண்பன் அறிவுரை கூறி எழுந்துசென்றபின் அவன் கூறியபழமொழியை அசைபோடத் தொடங்கினேன்.

    எவ்வளவு உண்மை. நல்லவேளை இந்தமட்டும் என் மகன்தப்பித்தானே. இனிமேல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிவெடுத்தேன்.

    பாடல் 10

    தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
    அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
    அமையாகும் வெற்ப! அணியாரே தம்மைத்
    தமவேனும் கொள்ளாக் கலம்‘.

    பழமொழி – அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்

    உங்கப்பா எங்கடா. கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறார் என் சித்தப்பா.

    வாங்க வாங்க. நானும் அவரத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன். போஸ்ட் ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு இதோ வந்துடறேன்னு போனவரு. மூணு மணிநேரம் ஆச்சு இன்னும் வரக்காணல. வண்டியிலதான் போயிருக்கார். நானே மணிகிட்ட சொல்லிவிடணும்னு நெனச்சேன். அவன் வேற நாளைக்கு தமிழ் பரீட்சைனு படிச்சிட்டு இருக்கான். உங்கண்ணனுக்கு போனா போன இடம். வந்தாவந்த இடம். நேரங்காலமே கெடையாது. கொஞ்சம் ஒரு எட்டு சைக்கிள் எடுத்துட்டுப்போயி பாத்துட்டு வந்திருங்களேன்.

    அம்மா கேட்டுக்கொண்டதிற்கிணங்க சித்தப்பா எழுந்துபோய் விட்டார். நான் படிக்க ஆரம்பிச்சேன். முதல்ல பழமொழிகளப் படிச்சிருவோம். தீர்மானித்துப் படிக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் அப்பாவும் சித்தப்பாவும் வந்து விட்டார்கள். இனி படிச்சாமாதிரிதான். அம்மாவோட பஞ்சாயத்து தொடங்கிடும். கொஞ்சநேரம் வாயப்பாத்துட்டுதான் படிக்கத் தொடங்கணும்.

    என்னவாம் உங்கண்ணனுக்கு. அம்மா ஆரம்பித்தாள்

    முதல்ல கொஞ்சம் தண்ணி குடுங்க. அண்ணன் பாவம் அரை கிலோமீட்டர் நடந்தே வந்துட்டாரு. அப்பறம்தான் நான் சைக்கிள்ல கூட்டிக்கிட்டு வந்தேன்.

    ஒரு சொம்பு தண்ணியக் குடித்தவுடன் அப்பா பேச ஆரம்பித்தார்.

    வேலையெல்லாம் அப்பவே முடிஞ்சிபோச்சு. திரும்பலாம்னு நெனைக்கும்போது நம்ம சந்தானத்தப் பாத்தேன். பஸ் பிரேக்டவுண் போல. குடும்பத்தோட வெயில்ல நின்னுட்டு இருந்தான். என்ன ஏதுன்னு கேக்கலாம்னு நிப்பாட்டினேன்.

    அண்ணே உங்கள மாதிரி நல்லவங்களப் பாக்கறது கஷ்டம். அப்டி இப்டினு புகழ ஆரம்பிச்சிட்டான். கேக்க பெருமயா இருந்திச்சு. அவன் மனைவியும் நின்னுக்கிட்டு இருந்ததால வற்புறுத்தி என் வண்டியக் குடுத்து எடுத்துட்டுப்போ நான் பஸ் புடிச்சு வந்துப்பேன்னு சொல்லிட்டேன். அப்புறந்தான் ஞாபகம் வந்துச்சு. போஸ்ட் ஆபீஸ் பியூன்

    ஐயா கடனா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுங்க. நான் எல்லார்கிட்டயும் கேக்க மாட்டேன். உங்களப் பாத்தவொடனே கேக்கணும்னு தோணிச்சுன்னான். சரி வண்டியிலதானே வந்திருக்கோம்னு இருந்தநூறு ரூபாயையும் அவன்கிட்ட குடுத்துட்டேன். அதான் நடந்து வந்திட்டு இருந்தேன். ரெண்டுகிலோமீட்டர் தூரங்கறதால நேரமாகிப்போச்சு.

    கேட்டுக்கொண்டே இருந்த அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.

    கேக்கணுமா உங்கண்ணனுக்கு. யாரும் முகத்துக்கு நேரா புகழ்ந்தாப் போதுமே. கட்டியிருக்குற வேட்டியக்கூட அவுத்துக்குடுக்கத் தயங்க மாட்டாரு. அவ்ளோ தாராளம்.

    இவருக்கு எப்டித்தான் புத்தி சொல்றதோ தெரியல.

    அம்மா அது வேற ஒண்ணுமில்லம்மா.  அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்ங்கற பழமொழிமாதிரி.

    அட போடா. நீ வேற படிச்சத ஒப்பிச்சிக்கிட்டு அம்மா அங்கலாய்க்கிறாள்.

    நான் படிச்சத ஒப்பிக்கலம்மா. அந்தப் பழமொழியோட பொருள் தன்னோடதுதான்னாலும் பொருத்தமில்லாத நகைய யாராவது அணிவாங்களா.. அப்டித்தான் நாம நல்லவங்களா இருந்தாலும் அடுத்தவங்க முகத்துக்கு நேராப் புகழ்ந்தாங்கன்னா அதுக்காக சந்தோசப்படக்கூடாது. அத மனசுலேந்து நீக்கிட்டு என்னசெய்யணும்னு யோசிக்கணும். இல்லையினா பிரச்சினை தான் வரும்.

    அம்மாவும் அப்பாவும் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

    பலே பலே. நாளைக்குப் பரீட்சைக்கு நல்லா படிச்சிருக்க போல சித்தப்பா பேச்சை திசைதிருப்புகிறார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 267

    படக்கவிதைப் போட்டி – 267

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 266இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 266இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நேரிய பார்வையும் கூரிய சிந்தனையும் கொண்டிருக்கும் இந்த முதுமகளைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இப்படத்தைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விரு நங்கையர்க்கும் என் நன்றிகள்!

    நரை திரை மூப்பு கண்டுவிட்டாலும் உள்ள உறுதிக்குக் குறைவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன இவ் அம்மையாரின் விழிகள்.

    ”…கடிது இவள் துணிவே
    மூதின் மகளிர் ஆதல் தகுமே”
    (புறம்: 279) என்று அன்றைய மறக்குடி மகளிருக்கு ஒக்கூர் மாசாத்தியார் கூறிய மொழிகள் இப்பெண்மணிக்கும் பொருந்துவனவாகவே எனக்குத் தோன்றுகின்றன.

    இனி கவிஞர்களின் முறை. வருக கவிஞர்களே! உம் கவிப்பெட்டகத்தைத் திறந்து அரிய கருத்துக்களை அள்ளித் தருக!

    *****

    சென்னையிலிருந்து(ம்) அன்னையைப் பார்க்க வரமுடியாத சூழலிலிருக்கும் தனயர்களுக்காக வருந்தி அவர்கள் வரவை எதிர்பார்த்திருக்கும் தாயைக் காண்கின்றோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    எப்போது…

    வேலை பார்க்கப்
    பிள்ளைகள்
    வெளிநாடு செல்லவில்லை,
    சென்னையிலிருந்து இங்கே
    அன்னையைப்
    பார்க்க வர
    பாஸ் கிடைக்கவில்லையாம்…

    என்ன கொடுமையிது,
    எல்லாம் அந்த
    இறக்குமதி உயிர்க்கொல்லியால்
    வந்த இடர்ப்பாடு…

    உறவுச் சங்கிலிகள் அறுந்து
    ஒட்டமுடியாமல்
    தேங்கிக் கிடக்கின்றன
    ஆங்காங்கே,
    தாங்கிக்கொண்டே காத்திருக்கிறாள்
    தாய் இவளும்…

    எப்போது மாறுமிந்த
    இயலா நிலை…!

    *****

    ”வாழ்ந்த காலத்தின் வசந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வயோதிகமே! வருங்காலச் சந்ததியரின் நிலையெண்ணிக் கலங்காதே! காலம் மாறும்” என்று நம்பிக்கையூட்டுகின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.  

    வயோதிகக் கனவு

    வாரிசுகளின் வருகைக்காய்
    வாசலில் அமர்ந்து
    வழி மேல் விழி வைத்துக்
    காத்திருக்கும் வயோதிகமே!
    வாழ்ந்த காலத்தின்
    வசந்தகால நினைவுகளை
    எண்ணிப் பார்க்கின்றாயோ!?
    வருங்காலச் சந்ததிகள்
    வந்திருக்கும் நோயால்
    வாழ்வாதாரமின்றி
    வீழ்ந்திடுவார்களோயென்று
    வேதனைப்படுகின்றாயோ!
    காலங்கள் மாறும்போது
    காட்சிகளும் மாறும்!
    நாட்டு நடப்புடன்
    நாமும் இணைந்து
    நல்லது நடக்கும்
    நாளை என்னும்
    நம்பிக்கை வனர்ப்போம்!

    *****

    யாரை எதிர்பார்த்து இந்தக்கூரிய பார்வை என்று வினாத்தொடுக்கும் திருமிகு. சுதா மாதவன், பட்டாளத்து மகன் வருவானென்றா? பள்ளி சென்ற பேரக்குழந்தைகள் வருமென்றா? என்றொரு பட்டியலையும் தம் பாட்டில் தந்திருக்கின்றார்.

    யாரை எதிர்ப்பார்த்து
    இந்தக் கூரிய பார்வை?

    பட்டாளத்து மகன் வருவானென்றா?
    பள்ளி சென்ற பேரக்குழந்தைகள் வருமென்றா?
    பாசமிகு மகள் மருமகள் வருவாளென்றா?
    மலர்மிகு பாசத்தோடே உன் சுற்றம் வருமென்றா?

    வயல்வெளியில் வேலையில்லையா?
    பொருள் வாங்கிவர கடைகளில்லையா?
    தாக்கி வரும் நோய் எப்போ ஓயுமென்றா?
    எதை எதிர்பார்த்து இந்தக் கூரிய பார்வை?

    பழைய நினைவுகள் மனதில் பயணமா?
    புதுக்கனவுகளை வரவேற்கும் எண்ணமா?
    பொக்கை வாயின் சிரிப்பு
    உன் உதட்டில் நிரந்தரம்
    கறுப்பு வைரமாய்
    காலம் கோடி வாழத்தான் போகிறாய்
    கார் நிறத்தழகியே
    அதே பார்வை கூரிய பார்வையோடே

    *****

    ”சீனாக்காரனை ஒரு கை பார்க்கும் வரையில் என் ஏக்கம் குறையப் போவதில்லை; தேசத்திற்கான குடும்பம் என்பதில் இருக்கிற பெருமை எதிலும் இல்லை” என வீரமுழக்கமிட்டு இந்திய இராணுவத்தில் சேரத்துடிக்கும் மறக்குல முதுமகளை நம் கண்முன் நிறுத்துகின்றார் திரு. சீ.காந்திமதிநாதன்.

    தேசியத் தாய்

    இந்தியா விடுதலை பெற்ற நாள்
    இந்திய மண்ணில் பிறந்த நாள்
    சுதந்திரப் போராட்ட வீர்ர் தந்தை
    சுதந்திரம் எனப் பெயரிட்டார்

    அண்ணன் இருவர் சேர்த்தார்
    இந்திய இராணுத்தில் பூரிப்பில்
    அத்துடன் நிறுத்தினாரா பற்றை
    இராணுவ மாப்பிள்ளையை நிறுத்தி
    நீட்டு கழுத்தை என்றார்
    தந்தை சொல்மிக்க மந்திரமுண்டோ

    என் மகன்கள் இருவர் இராணுவத்தில்
    பேரன் இருவர் விமானப் படையில்

    சீனாக்காரனை
    ஒரு கை பார்க்கும் வரையில்
    என் ஏக்கம் குறையப் போவதில்லை
    தேசத்திற்கான குடும்பம் என்பதில்
    இருக்கிற பெருமை எதிலும் இல்லை

    முதலில் இந்தியன்
    அடுத்து நான் ஓர் தமிழச்சி
    அதுவும் ஓர் வீர தமிழச்சி

    வயதாகிப் போய் விட்டதாம் எனக்கு
    இராணுவத்தில் எடுக்க மாட்டார்களாம்
    ஏ,கே 47 என்ன அவ்வளவு எடையா
    எனது லட்சிய வேட்கைமுன்

    இந்திய எல்லை நமது எல்லை
    எவனாவது தந்தால் தொல்லை
    உடைப்போம் அவனது பல்லை
    முறிப்போம் அவனது இராணுவ வில்லை!

    *****

    ”வாழ்வின் சுவடுகள் முகம் முழுதும் எழுதிய கவிதை வரியால் நிறைந்த
    அனுபவப் புத்தகம்” என்று முதுமையைப் புதுமையான வரிகளால் வருணிக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    முதுமை

    தட்டில் சோறு வைத்திட்டு – வீதியை
    எட்டிப் பார்த்துச் சொந்தங்கள் தேடும்
    வீட்டுப் படிகளே நாற்காலியென
    வாட்டம் காட்டிடும் பருவம்…

    வாழ்வின் சுவடுகள்
    முகம் முழுதும் எழுதிய
    கவிதை வரியால் நிறைந்த
    அனுபவப் புத்தகம்…

    காலமெல்லாம் கடந்தும்
    பட்ட கட்ட நட்டங்கள்
    அட்ச தீர்க்க ரேகைகளாய்
    அலைமோதும் ஜீவகோளம்…

    கடந்ததை எண்ணித் தேங்கிடாமல்
    வருவதை எதிர்பார்த்துக் காத்திராமல்
    இருப்பதை வைத்து இயல்பாய்
    நாட்களைக் கடத்துவதே முதுமை…

    *****

    ”தனிமை, யாரிடமும் பேச்சுவாங்காமல் இருப்பதால் அழகானதாகவும், யாருமில்லை என்ற உணர்வால் கொடுமையானதாகவும் இருக்கின்றது” என்று அதன் இருவேறுபட்ட முகங்களை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார் திருமிகு. கி. அனிதா.

    தனிமை தனிமை மிக அழகானது
    ஏன் என்றால் யாரிடமும் பேச்சுவாங்காமல் இருப்பதால்…
    தனிமை சில நேரத்தில் கொடுமையானது….
    எனக்கு என்று யாரும் இல்லை என நான் உணரும் பொழுது…
    நான் இருப்பது தனிமையில்…
    என் பாசமும் தனியே சென்று விட்டது …
    இனி என் வாழ்நாள் முழுவதும் தனிமையே என் சொந்தம்…
    இதை நான் தானே ஏற்கவில்லை …
    ஏற்படுத்தித் தந்தவருக்கும் இந்நிலை வரும் என உணரவில்லை…
     ஏன் என்றால் இன்றும் என்னால் நேசிக்கப்படுவதால்…

    *****

    வாழ்க்கை அனுபவமிக்க இந்த அம்மையாரை வைத்து இனிய கவிதைகளை உருவாக்கித் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    போனவரைக் காணலியே!

    போனவரைக் காணலியே பொழுதுபட்டுப் போகிறதே!
    ஆரைவிட்டுத் தேடுறது? அவர் பசங்க வீடுவர
    நேரம் போய்விட்டதுண்ணா நெலமையது என்னாகும்?
    வெத்தில பத்தாதெண்ணு வெரட்டிவிட்டேன் வாங்கிவர
    சுத்திக்கிட்டுத் தெருவெல்லாம் சோர்ந்து எங்க நிக்காரோ?
    காலணா வெத்திலைக்குக் காசுகொண்டு போனவரு
    மூலக்கடைய விட்டு முச்சந்தி போனாரோ!
    முச்சந்தி போயி முழிபிதுங்கி நின்னவரு
    வந்ததெருமறந்து பஸ்ஸேறிப் போனாரோ!
    தேசமெங்கும் போற பஸ்ஸில் தெசமறந்து போனவரை
    காசில்லையென்று கண்டக்டர் எறக்கிவிட
    கூசிக்குறுகிமனங் குழம்பிப்போய் நிக்காரோ?

    எம்புள்ள வீடுவர இரவாகிப் போயிடுமே!
    கொப்பனக் காணமடா கூட்டிவர வேணுமின்னா
    எப்படி நீதொலச்சே ஏன்தொலச்சே எம்பானே?
    வெத்தலை நீ போடாட்டி விடியாமப் போயிடுமோ!
    எத்தனை நாள் சொல்லிருக்கேன் ஏன் நீ அனுப்பிவச்சே
    கண்பஞ்சடைந்ததென்றும் காதுமந்தமானதென்றும்
    எண்ணாமல் அக்கிழத்தை ஏனனப்பி வைத்தாய் நீ?
    என்று குதிப்பானே எனை வைது தீர்ப்பானே!

    என்ன அது ஏதோ இருட்டில் அசைகிறதே
    பூனையல்ல காட்டுப் புலிபதுங்கும் வீரநடை!
    ஆஹா அவர்தான் என் ஆண்டவனே காத்தாய் நீ.
    போகாம எங்குமவர் பொழுதோட சேர்த்தாய் நீ.

    வெளியில் சென்ற தன் முதிய கணவனைக் காணாது அலைபாயும் மனத்தோடு இந்த மூதாட்டி,
    ”காலணா வெத்திலைக்குக் காசுகொண்டு போனவரு
    மூலக்கடைய விட்டு முச்சந்தி போனாரோ!
    முச்சந்தி போயி முழிபிதுங்கி நின்னவரு
    வந்ததெருமறந்து பஸ்ஸேறிப் போனாரோ!”

    என்றெல்லாம் எண்ணிக் கலங்குவதையும் இறுதியில் அம்முதியவரின் நடையொலிகேட்டு நிம்மதி பெறுவதையும் உணர்ச்சிமிகு சிறுகதையாய்க் கவிதையில் தவழவிட்டிருக்கும் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • “கந்தர்  சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

    “கந்தர் சஷ்டி கவசம்” விவகாரம் பற்றி நடிகர் ராஜ்கிரண்

    நடிகர் ராஜ்கிரண்

    ஒவ்வொரு மனிதனுக்கும்,
    எந்த வகையிலேனும்,
    தனக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ள
    உரிமை இருக்கிறது.

    அது, அவனது சுதந்திரம்.

    முருகப் பெருமானை நம்புவோர்க்கு,
    “கந்தர் சஷ்டி கவசம்” என்பது,
    “ஒரு பாதுகாப்பு அரண்”.

    இதை ஆழ்ந்து படித்தால்,
    அறிவியல்பூர்வமான,
    மனோதத்துவரீதியான
    ஆத்ம பலன்கள் இருக்கின்றன…

    இறைவனை நம்பாதோர்க்கு,
    “நம்பாமை” என்பது,
    அவர்களின் சுதந்திரம்.

    நம்பிக்கை கொண்டோர்க்கு,
    “நம்புதல்” என்பது,
    அவர்களின் சுதந்திரம்.

    இதில், அவரவர் எல்லையோடு
    அவரவர் நின்றுகொள்வது தான்,
    மேன்மையானது.

    தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
    புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
    மிகவும் கீழ்மையானது…

    இந்த கொடிய கொரோனா காலக்கட்டத்தில்,
    நோயோடும், நோய் பயத்தோடும்,
    பொருளாதாரச் சீர்கேட்டோடும்,
    உண்ண உணவின்றி
    கோடிக்கணக்கான நம் மக்கள்
    தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,

    இப்படி ஒரு பிரச்சினைக்குத் தீ மூட்டுவதில்,
    யாருக்கோ, ஏதோ, உள்நோக்கம்
    இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது…

    Share