Blog

  • கோவை ஞானி – அஞ்சலி

    கோவை ஞானி – அஞ்சலி

    முனைவர் ம. இராமச்சந்திரன் 
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

    உள்ளங்கைக்குள் இதயம் தேடும் உன்னத ஆன்மா, அன்பெனும் பெருவெளியில் நீண்ட உரையாடலின் குரல் கோவை ஞானி. அவரோடு சேர்ந்து சுற்றும் தருணங்களைப் பெற்றவன் நான். அவரின் உள்ளங்கை குளுமை இன்றும் மானுடத்தின் பேரன்பின் வெளிப்பாடாக உணர்கிறேன்.

    எனது கைகளைப் பற்றிக்கொண்டு என்னுள் அவர் தேடும் நான் பெரும் வியப்பின் மளைப்பாக இருந்தது. அவர் இதயத்தின் அன்பை நோக்கிய பயணம் அது. கைகளோடு கைசேர்த்து நடந்த தூரங்கள் குறைவுதான் என்றாலும் அது எழுப்பிய உன்மத்த அதிர்வுகள் அதிகம்.

    ஒற்றைக் குரலாக ஒலிக்கத் துணிந்து தனது அன்பின் தென்றலால் அனைவரது இதயங்களையும் இட்டு நிரப்பியவர். மார்க்சிய ஒளி தமிழ்ச் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் தனக்கான அவதானிப்புகளுடன் காத்திரமாகச் செயல்பட்டவர் இவர்.

    புத்தகங்களின் அடுக்குகளில் ஒற்றைச் சரடாக விளங்கி தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் தமிழ்ச் சமூகத்தின் வெளிப்பாடுகளையும் தொடர்ச்சியாகத் தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியவர்.

    தமிழ்ச் சமூகம் ஒரு உன்னதமான வழிகாட்டியை இழந்து நிற்பதாகத் தோன்றுகிறது. இலை உதிர்வது உரமாகத்தான் என்றாலும் இதயத்தின் கனம் கூடத்தான் செய்கிறது.

    Share
  • ஆய்வுலகில் காகிதச் சுவடிகளின் முதன்மை

    ஆய்வுலகில் காகிதச் சுவடிகளின் முதன்மை

    முனைவர்  த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்

    சுவடி என்னும் சொல்லினைக் கேட்டவுடன் அனைவர் மனத்திலும் எழுவது ஓலைச் சுவடிகளே. அச்சு இயந்திரத்தின் வருகைக்கு முன்னர் இன்றைய அச்சுப் புத்தகங்கள் போன்று காணப்பட்டவை பனையோலைப் புத்தகங்களே ஆகும். அவையே ஓலைச் சுவடிகள் எனப்படுகின்றன. இதனை, “காகிதமும் எழுதுகோலும்  வழக்கத்திற்கு வராத காலத்திலே ஓலை நறுக்குகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட சுவடிகளே நூல்களாக இருந்து வந்தன”1 என்று மா.சு. சம்பந்தன் கூறுவதன் மூலம் அறியலாம். காகிதப் பயன்பாடு பெருகியதற்குப் பின்பு அவற்றில் எழுதத் தொடங்கினர். அவ்வாறு கையினால் காகிதங்களில் எழுதப்படுவனவற்றைக் கையெழுத்துச் சுவடி, கையெழுத்துப்படி, காகிதச் சுவடி போன்ற பெயர்களால் அழைக்கின்றனர்.

    இந்தக் காகிதச் சுவடிகள் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் பெறும் முதன்மையினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியச் சுவடிப் பதிப்பு

    தமிழில் கிடைக்கப்பெறுகின்ற நூல்களுள் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலாக இருந்தாலும் இதன் அச்சு நூல் பதிப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே கிடைக்கப்பெறுகின்றன. “பொது ஆண்டு 1847இல் தான் அச்சில் தொல்காப்பியம் ஏறியது என்பார் ச.வே. சுப்பிரமணியன். முதன் முதலாக மழவை மகாலிங்கையர், ஆகஸ்டு 1847இல் நச்சினார்க்கினியத்தை வெளியிட்டார். வரலாற்றில் தொல்காப்பியம் முதன்முதலில் அச்சில் வந்தது இப்பதிப்பு வழியாகத்தான்”2 என்று குறிப்பிடுவதன் மூலம் இதனை அறியலாம். அதே வேளை மு. சண்முகம்பிள்ளை, மா.சு. சம்பந்தன் ஆகியோர், மழவை மகாலிங்கையர் பதிப்பு 1848இல் தான் வெளிவந்துள்ளது என்கின்றனர். தொடர்ந்து 1858இல் எஸ். சாமுவேல் பிள்ளை என்பவரால் தொல்காப்பிய நன்னூல் என்னும் தலைப்பில் தொல்காப்பியம் முழுவதும் அச்சேற்றப்பட்டுள்ளது.

    “1885இல் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்த  தொல்காப்பியம் – பொருளதிகாரம் பதிப்புரையில் தமக்குக் கிடைத்த பிரதிகளைச் சொல்லும் பொழுது புரசபாக்கம் ஸ்ரீ சாமுவேற் பண்டிதரவர்கள் தமது சொந்தக் கையினாலேயே எழுதி வைத்திருந்த பிரதி ஒன்றும்”3 என்று குறிப்பிடுவதில் இருந்து சாமுவேல் பிள்ளை பதிப்புப் பணிக்குக் காகிதச் சுவடியினைப் பயன்படுத்தியுள்ளது புலனாகிறது. இந்தக் காகிதச் சுவடியினை சி.வை.தாமோதரம்பிள்ளையும் தமது பதிப்பிற்குப் பயன்படுத்தியுள்ளதும் தெரியவருகிறது.

    1933இல் வ.உ.சிதம்பரம்பிள்ளை பதிப்பித்த தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பினை அடுத்த நிலையில் குறிப்பிடலாம். இப்பதிப்பிற்குக் காகிதச் சுவடிகள் மூன்றினை அவர் பயன்படுத்தியுள்ளதும் தெரிய வருகிறது. “1933இல் வெளியிட்டுள்ள பகுதிகளுக்குத் த.மு. சொர்ணம்பிள்ளை கடிதப் பிரதியும், தி.நா. சுப்பிரமணிய ஐயரிடமிருந்து கிடைத்த கடிதப் பிரதியும், எஸ். வையாபுரிப்பிள்ளை 1912இல் தி.த.கனகசுந்தரம் பிள்ளை ஏட்டுப் பிரதியைப் பார்த்து எழுதிய கைப்பிரதியும் பயன்பட்டன”4 என்னும் வ.உ.சி.யின் கூற்றில் காகிதச் சுவடி என்பதற்கு கடிதப்பிரதி, கைப்பிரதி என்னும் சொல்லாட்சிகளைப் பயன்படுத்தியுள்ளதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் வ.உ.சி.யின் இக்கூற்று மூலம் அவரின் பதிப்பிற்குத் துணைநின்ற காகிதச் சுவடிகள் மூன்றும் ந.மு. சொர்ணம்பிள்ளை, தி.நா.சுப்பிரமணிய ஐயர், எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன என்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

    குறுந்தொகைச் சுவடிப் பதிப்பு

    குறுந்தொகையினை அச்சு நூலாகக் கொண்டு வந்தவர்களில் முதன்மை பெறுபவர் சௌரிப்பெருமாள் அரங்கன் ஆவார். இதனை அவர் பதிப்பித்தது, பொது ஆண்டு 1915இல் ஆகும். தொடர்ந்து 1920இல் நமச்சிவாய முதலியாரும், 1930இல் இராமரத்தின ஐயரும், 1933இல் சோ. அருணாசல தேசிகரும், குறுந்தொகையைப் பதிப்பித்துள்ளனர். அடுத்து 1937இல் உ.வே.சா அவர்களின் தொடக்கக் காலக் குறுந்தொகைப் பதிப்புகளில் சிறப்பான இடம், உ.வே.சாவின் பதிப்பிற்கு உண்டு. பிற நூல்களுக்கெல்லாம் அரும்பத உரை, மேற்கோள் ஒப்புமைப் பகுதி போன்றவற்றை எழுதிப் பதிப்பித்த அவர், குறுந்தொகைக்குத் தாமே முற்றிலும் புதிய உரை எழுதிப் பதிப்பித்துள்ளார். உ.வே.சா. அவர்கள், தமது குறுந்தொகைப் பதிப்பு முகவுரையில், “அப்பால் நான் ஏட்டுச் சுவடிகள் தேடிய இடங்களில் அடியிற் காட்டியபடி வேறு ஒன்பது பிரதிகள் கிடைத்தன. அவற்றில் சில பூர்த்தியாகாது  இருந்தன; சில குறையாக இருந்தன.

    1. திருநெல்வேலி ஸ்ரீ அம்பலவாண கவிராயரவர்கள் ஏட்டுப்பிரதி
    2. மந்தித் தோப்பு மடத்திற் கிடைத்த ஏட்டுப்பிரதி
    3. செங்கோல் மடத்திற் கண்ட குறையான ஏட்டுப்பிரதி
    4. திருமயிலை வித்துவான் ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள் கடிதப்பிரதி
    5. சோடசாவதானம் ஸ்ரீசுப்பராய செட்டியாரவர்கள் ஏட்டுப்பிரதி
    6. தொழுவூர் ஸ்ரீ வேலாயுத முதலியாரவர்கள் ஏட்டுப்பிரதி
    7. சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகச் சாலை ஏட்டுப்பிரதி
    8. புதுக்கோட்டை ஸ்ரீ ராதாகிருஷ்ணையரவர்கள் கடிதப்பிரதி
    9. திருக்கோணமலை ஸ்ரீ தி.த. கனகசுந்தரம் பிள்ளையவர்கள் கடிதப்பிரதி

    இவற்றில் சிலவற்றைப் பார்த்துக்கொண்டு உரியவர்களிடம் கொடுத்துவிட்டேன்”5 என்கிறார். இவற்றுள் கடிதப்பிரதி எனக் குறிப்பிடப் பெற்றுள்ள மூன்றும் காகிதச் சுவடிகளாகும். இதன்மூலம் உ.வே.சா. தமது நூற்பதிப்பிற்குக் காகிதச் சுவடிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது உறுதியாகிறது. இதேபோன்று தொடக்கக் காலப் பதிப்பாசிரியர்கள் பலரும் பதிப்பாய்வுக்குக் காகிதச் சுவடிகளைத் தகுந்த ஆதாரங்களாகக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

    வரலாற்று ஆவணங்கள்

    தாள் சுவடிகளில் வரலாற்று ஆவணங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய வணிகர்களின் பண்டக சாலைக் குறிப்பேடுகள், இயேசு சபையினரின் கடிதங்கள், அரசவை ஆவணங்கள் போன்றன பலவும் காகிதச் சுவடிகளாகக் கிடைக்கப்பெறுகின்றன.

    உதாரணமாக மோடி ஆவணங்களைக் குறிப்பிடலாம். பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூர்ப் பகுதியை ஆண்ட மராத்திய மன்னர்கள், அரண்மனை சார்ந்த ஆவணங்களை மோடி என்னும் குறியீட்டு மொழியில் எழுதி வைத்துள்ளனர். மோடி எழுத்துரு தேவநாகரி எழுத்துருவைச் சிதைத்து உருவாக்கப்பட்டதாகும். அரசாங்கக் கடிதங்கள், ஆவணங்கள் மட்டுமன்றி அரண்மனை சார்ந்த வரவு செலவு கணக்குகள் போன்றவையும் இம்மோடி எழுத்துருவிலேயே எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இவை காகிதச் சுவடிகளாகும்.  இதனை, “18, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  மராட்டிய அரசர்கள் ஆட்சி செய்த தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த குடிமக்களின் வரலாற்றை அறிவதற்குரிய மோடி ஆவணங்கள் காகிதத்தில் உள்ளமையால் அவற்றைப் போற்றிப் பேணுதல் நம் கடமையாகும்”6 என கே.எம். வேங்கடராமையா  கூறுவதன் மூலம் அறியலாம்.

    இதேபோன்று இலண்டன் – இந்திய அலுவலக ஆவணங்களும் வரலாற்றாய்வுக்கு முக்கிய பங்களிப்பினைச் செய்வனவாகும். ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவைப் படம் பிடித்துக் காட்டுவனவாக  அவை திகழ்கின்றன. ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி, இந்திய ஆட்சியாளர்கள், இலண்டன் நிர்வாகம் ஆகியவற்றிற்கு இடையேயான கடிதப் போக்குவரத்துகள், ஆங்கிலேய அதிகாரிகளின் அறிக்கைகள் போன்றவை இதில் சிறப்பிடம் பெறுகின்றன. இவை அனைத்தும் இலண்டனிலுள்ள நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தக் காகிதச் சுவடிகளை முறையாக ஆய்வு செய்தால் இந்திய வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத, வெளிப்படுத்தப்படாத அரிய தகவல்கள் பலவும் கிடைக்கக்கூடும். இதேபோன்று ஏராளமான அரிய தாள் சுவடிகள் காணக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஆய்வுக்குரிய முதன்மைச் சான்றாதாரங்களாகும்.

    ஆய்வுலகில் கல்வெட்டுகள், செப்பேடுகள், தொல்பொருள்கள், நாணயங்கள், ஓலைச் சுவடிகள் போன்றவை எத்தகைய சான்றாதாரங்களாகத் திகழ்கின்றனவோ அவற்றிற்கு இணையான முதன்மையினை உடையனவாகக் காகிதச் சுவடிகளும் திகழ்கின்றன.

    தமிழின் செவ்வியல் நூல்கள் பலவும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பட, பல்வேறு வகைகளில் காகிதச் சுவடிகள் துணைநின்றுள்ளன. இலக்கிய ஆய்வுக்கு மட்டுமின்றி வரலாற்று ஆய்விலும் காகிதச் சுவடிகள் பெரும் பங்களிப்பினைத் தருவனவாகும். மேலும் காகிதச் சுவடிகளை நுண்ணிய முறையில் ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் புதிய பல வரலாற்று முடிவுகளும் கிடைக்கக் கூடும்.

    சான்றெண் விளக்கம்

    1. சம்பந்தன், மா.சு.., அச்சும்பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1997, ப.92.
    2. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992, ப.10.
    3. சரவணன், ப., தாமோதரம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2017, ப.126.
    4. சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1992, ப.91.
    5. சரவணன், ப., சாமிநாதம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2014, ப.219.
    6. வேங்கடராமையா, கே.எம்., தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2015, ப.4.

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 2

    பரிமேலழகர் உரைத் திறன் – 2

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    புழுவைத் தேடுவதா வெயிலின் வேலை?  

    முன்னுரை

    உரைகாண்பதில் இரண்டு வகை உண்டு. செய்யுளில் உள்ள சொற்களுக்கு மட்டும் உரைசொல்லி முடிப்பது. சொன்னவனின் உள்ளத்தை அவன் சொற்களாலேயே அறிய முயல்வது. பரிமேலழகர் திருவள்ளுவரின் உள்ளம் அறிய முயன்றவர். திருக்குறள் முழுமையும் கற்றுணர ஒரு பிறவி போதாது என்பர் சான்றோர். அதற்கான பரிமேலழகர் உரையும் அத்தகையதே. திருக்குறள் காலங்கடந்து நிலைபெற்றிருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் பரிமேலழகர் உரை நிலைபெற்றிருப்பதற்கும். திருவள்ளுவர் வாழ்வியலுக்கு நூலெழுதியவர் என்றால் அந்த நூல் நிலைபெற தம் ஆழமான அகன்ற புலமையால் ‘உரைமாளிகை’ அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் எனலாம். அன்னாருடைய ஆழமான புலமை வெளிப்படும் பல இடங்களில் ஓரிடத்தை இவ்விரண்டாவது கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறளில் எட்டாவது அதிகாரமாகிய அன்புடைமை என்னும் அதிகாரத்தின் ஏழாவது குறட்பாவாக இருப்பது இது.

    “என்பிலதனை வெயில் போலக் காயுமே
    அன்பி லதனை அறம்”  77

    சொல்லுக்குச் சொல் பொருள் கூறி விளக்குவது சொற்பொருள் விளக்கம். வடமொழியில் பதசாரம் என்பர். பதம் என்றால் சொல். சாரம் என்றால் பொருள். பேச்சில் சாரமில்லையே என்பது உலக வழக்கு. “சாரமற்ற வார்த்தை நாம் சரிதை சொல்லுகின்றோம்” என்பார் பாரதியார். பரிமேலழகர் பதசாரம் சொல்லுவதை ஓர் உரைநெறியாகப் பின்பற்றவில்லை. கருத்திற்கு இசைய பொருளமைதியை முன்னர்க் கூறிப் பின் அதற்கான விளக்கத்தை விளக்கவுரையில் கூறுவார். இந்த விளக்கம் எதிர்வரும் கட்டுரைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறுவதற்குப் பொழிப்பு அல்லது பொழிப்புரை என்று பெயர்.

    • என்பு இலதனை வெயில் போலக் காயுமே –- என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்
    • அன்பிலதனை அறம் — அன்பில்லாத உயிரை அறக்கடவுள்

    இது மேற்கண்ட பாடலுக்குப் பரிமேலழகர் தந்திருக்கும் பொழிப்புரை.

    உரைநடைப் பாங்கில் (PROSE ORDER) பரிமேலழகர் பொழிப்புரை

    மேற்கண்ட பொழிப்புரையை எல்லார்க்கும் புரிதல் வேண்டி எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னுமாறு உரைநடையில் இப்படி அமைக்கலாம்.

     வெயில் என்பு இல்லாத உடம்பை காய்ந்தாற்போல
    அறக்கடவுள் அன்பில்லாத உயிரைக் காயும்

    குறட்பாவில் சொல்லப்படாது பொழிப்புரையில் காணப்படும் சொற்கள் மூன்று. ‘என்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, பொழிப்பில் ‘உடம்பு’ என இருக்கிறது. ‘அன்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, ‘உயிரை’ என இருக்கிறது. ‘அறம்’ என இருக்க, ‘அறக்கடவுள்’ என இருக்கிறது. பின்னால் அவர் எழுதப்போகும் விளக்கவுரை பொழிப்புரையிலிருந்தே தொடங்கிவிடுவதைக் காணமுடிகிறது.

    விளக்கவுரை

    பரிமேலழகர் தரும் இத்தகைய விளக்கங்கள் குறிப்பிட்ட குறட்பாவிற்கு அவரே எழுதிய பொழிப்புரைகளுக்கானவை. அதனால்தான் அவருடைய விளக்கவுரை பொழிப்புரையிலேயே தொடங்கிவிடுகிறது எனக் குறிக்கப்பட்டது.

    “என்பிலது’ என்றதனான் ‘உடம்பு’ என்பதூஉம், ‘அன்பிலது’ என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம், வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின் முன் என்பில்லது தன் இயல்பால் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின் முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் ‘காயும்’ என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார். அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு “அல்லவை செய்தாற்கு அறம் கூற்றம்” (நான்மணிக்கடிகை 83)  எனப் பிறரும் கூறினார்.

    மேற்கண்ட பகுதி மேற்காணும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புக்கு அவரே தந்திருக்கும் விளக்கவுரை.

    பரிமேலழகர் உரையாழம்

    • குறட்பாவில் ‘என்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உடம்பு’ என உரை கண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். எலும்பு உடலுக்குள்ளேதான் இருக்கும். தனியாக எலும்பு செயல்படாது. இருக்கவும் இயலாது. எனவே ‘எலும்பு இல்லாதது’ என்பதனான் உடம்பு என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.  ‘என்பு தோல் போர்த்த உடம்பு’ எனப் பின்னும் கூறுவார் வள்ளுவர்.
    • அதுபோலவே ‘அன்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உயிர்’ என உரைகண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். உயிருக்குத்தான் அன்பு. உடம்பு அன்பு காட்டாது. அன்பு உயிர்ப்பண்பு. எனவே உயிரது பண்பாகிய அன்பில்லாதது எனத் திருக்குறள் குறிப்பதால் வள்ளுவர் குறிக்க எண்ணியது ‘உயிர்’ என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.
    • எலும்பு உடம்போடு தொடர்புடையது. அன்பு உயிரோடு தொடர்புடையது. ஒருத்தி திலகம் இல்லாமல் வந்தாள் என்றால் ‘நெற்றியில்’ என்பது பெறப்படும் அல்லவா? ஒருவன் ‘செருப்பில்லாமல் வந்தான்’ என்றால் காலில் என்பது பெறப்படுமல்லவா?. அவைபோல!
    • இந்தப் பாட்டில் அமைந்துள்ள ‘வெயில் என்பிலதனைக் காயும்’ என்னும் தொடரில் ‘வெயில்’ எழுவாயாகவும் ‘என்பிலது’ செயப்படுபொருளாகவும் ‘காயும்’ என்பது வினைமுற்றாகவும் அமைகிறது. அப்படி அமைந்தால் என்ன பொருளாகும் என்றால் எலும்பில்லாத ‘உடம்பு இருக்கும் இடம் தேடிச் சென்று வெயில் அதனைக் காயும்’ என்பது போல என்றாகிவிடும். வெயில் தானாக நடந்து சென்று எலும்பில்லாத உடம்பினைத் (புழுவை) தேடுமா? வெயில் இருக்கும் இடம் தேடித்தான் புழுவந்து மடியும். அதுவும் தேடாது. சாவதற்கு அதற்கு விருப்பமா என்ன? தானாக வந்து வீழ்ந்து மடியும்.
    • அதுபோலவே அன்பில்லாத உயிர்களை அறக்கடவுள் தேடிச் சென்று அழிக்காது. அன்பில்லாத உயிர்கள் அறவலைப்பட்டு அழியும்.
    • இவ்வாறு இவர் உரைகாண்பதற்கான காரணத்தை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். வெயிலுக்கும் அறத்திற்குமான பொதுப்பண்பைச் சுட்டுகிறார். அது என்ன பொதுப்பண்பு? “வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயில்” என உவமத்தின் பண்பை விளக்கியவர் ‘அத்தன்மைத்தாய’ என்னும் சுட்டினால் அறத்தினை விளக்குவதைக் காணலாம். எனவே வெயிலோ அறமோ தானாகச் சென்று எதனையும் யாரையும் அழிக்காது. அவையிருக்கும் இடம் நாடிவந்து பிற அழியும். காரணம் அவ்வாறு வந்து வீழ்வது அவற்றுக்கு இயல்பு. அவை வீழ்வதற்குக் காரணம் வெப்பமும் அறக்கடவுளும். வெப்பத்திற்கு இரண்டு இயல்புகள். ஒன்று வெளிச்சம்! இரண்டு வெப்பம்!. வெப்பம் இல்லாத வெளிச்சம் உலகில் கிடையாது. வெளிச்சத்தை நாடி வரும் எலும்பில்லாத புழு வெப்பம் தாங்காது மடியும் என்பது கருத்து. (இக்கட்டுரையில் ‘என்பிலது’ என்பதற்குப் ‘புழு’ என உரைகண்டவர் கட்டுரையாளர் ‘என்பில்லாதது’ அதுவேயாதலின்)
    • வெப்பமும் அறமும் செயல்படவில்லை என்றால் எலும்பு இல்லாத உடம்பு மடிவதற்கும் அன்பில்லாத உயிர்கள் மடிவதற்கும் அவற்றை எப்படிக் காரணமாக்க முடியும் என்றால் பின்னிரண்டும் மடிவதாகிய உண்மையைக் கொண்டு அறியலாம். அவை மடிவதற்கு இவை காரணம். அதனால்தான் அதனைக் “காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார் என்று எழுதுகிறார்.
    • அறமாகிய பண்பினைக் ‘அறக்கடவுள்’ என்று எழுதுகிறார். அவ்வாறு தான் எழுதியமைக்குச் சான்று காட்டுகிறார். அறமாகிய பண்பைக் கூற்றுவனாக உருவகம் செய்வது இலக்கிய மரபு என்பதற்காகக்,

    “கல்லா ஒருவற்குத் தம்வாயில் சொல் கூற்றம்!
    மெல்லிலை வாழைக்குத்தான் ஈன்ற காய் கூற்றம்
    அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம், கூற்றமே
    இல்லிருந்து தீதொழுகு வாள்”

    என்னும் நாண்மணிக்கடிகைப் பாடலை எடுத்துக்காட்டித் தம் உரைக்கு வலு சேர்க்கிறார் பரிமேலழகர்.

    பரிமேலழகரின் உரை அருமை

    ‘வலை வீசி மீன் பிடித்தல்’ என்பது ஒன்று. ‘விரித்த வலையில் மீன்கள் வந்து விழுவது’ என்பது மற்றொன்று. இது உலகியல். முன்னது சென்று பிடித்தல். பின்னது வந்து விழுதல். குறட்பா வெயில் அறத்தைக் காய்வதாகவும் அறக்கடவுள் உயிரைக் காய்வதாகவும் சொல்கிறது. இது சென்றுபிடிப்பதைப் போல் உள்ளது. பரிமேலழகர் தம் நுண்ணியத்தால் (இயல்பல்லாத) அதனை மாற்றுகிறார். வெயிலும் அறமும் விருப்பு வெறுப்பு அறியாதது. ஒரே தன்மையாய் இயங்கும். அவற்றின் அந்த நடுநிலை வலைப்பரப்பில் என்பிலதும் அன்பிலதும் வந்து வீழ்ந்து மடிவதுதான் உண்மை. இந்த உண்மையைக் கண்டறிந்து கூறியவர் பரிமேலழகர்.

    சரி. வெயிலிருக்கும் இடந்தேடி வந்து வீழ்வது என்பிலதாகிய அஃறிணைக்கு வேண்டுமானால் சரியாயிருக்கலாம். மனிதனாகிய உயர்திணைக்குப் பொருந்துமா? பொருந்தும். எப்படி? தன் மனைவி கண்ணகியோடு உயிர்பிழைக்கச் சென்ற கோவலன் எந்தத் தவறும் செய்யாமல் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். சிலப்பதிகாரக் காப்பியத்தில் பரவலாக வலியுறுத்தப்படுகிற ஊழ் அல்லது விதியை இளங்கோவடிகள் இங்கேயும் காட்டுகிறார். ஆனால் எப்படிக் காட்டுகிறார் தெரியுமா? விதி புகாரில் பிறந்த கோவலனுக்கு மதுரையில் வலைவிரித்துக் காத்திருந்ததாம்! இவன் சென்று அதில் மாட்டிக் கொண்டானாம்! அடிகள் எழுதுகிறார்.

    “தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
    கோவலன் தன்னைக் குறுகினன்” (2705 -2706)

    இந்தச் ‘சென்றுபடுதலைத்தான்’ திருவள்ளுவர் என்பிலதனுக்கும் அன்பிலதனுக்கும் வினையாக்கி அந்த வினையை வெயில் மேல் ஏற்றிக் கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் உவமத்திலும் பொருளிலும் வெயிலின் வினை, அறக்கடவுள் வினை எனக் கூறியவற்றைப் பரிமேலழகர் ஒட்டுமொத்தமாக ‘விதியின் வினை’ என மாற்றிக் காட்டுகிறார். இதுவே இந்தப் பாட்டுக்கான அவருடைய உரையில் காணப்படும் நுண்ணியமாகும்.

    (தொடரும்)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 8

    கதை வடிவில் பழமொழி நானூறு – 8

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 17

    உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
    புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
    நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டு,
    கரையிருந் தார்க்கெளிய போர்‘.

    அரங்கினுள் வட்டு, கரையிருந் தார்க்கெளிய போர்

    அமெரிக்காலேந்து என் பேத்தி வரப்போறா. என்ன அவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறா. பாட்டி தன் அனைத்து பொக்கை வாய்த் தோழிகளிடமும் சொல்லியாயிற்று.

    நாலு நாட்களாக பாட்டியோட அளப்பற தாங்க முடியல. அவ வந்தா என்னவெல்லாம் பண்ணிக்குடுக்கணும்னு லிஸ்ட் வேற.

    ஒருவழியாக வந்து சேர்ந்த பேத்தி பாட்டியை விரட்ட ஆரம்பித்தாள்.

    இவ்ளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தீங்க பாட்டி.

    இப்பவாவது சரியாப் பாத்து புடவை சட்டை எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க. அங்க வாங்கவும் முடியாது. சட்டை தைக்கறதும் கஷ்டம். உங்களோட முக்கிய தேவைகளைச் சொல்லுங்க. பல்செட்டு, மூக்குக் கண்ணாடி. கோபால் பல்பொடி, சந்திரிகா சோப்பு, தலை தோட்டிக்கறதுக்கு குற்றாலத் துண்டு லிஸ்ட் நீண்டுகொண்டே போனது.  அதோடமறக்காம என்னோட முறுக்குக்குத் தேவையான உளுந்துமாவுப் பொட்டலம் இருக்கு. அத எடுத்துக்கணும். அரிசி உங்க ஊர்ல கிடைக்குமில்ல.

    இந்தப் பாட்டியத் திருத்த முடியாது பேத்தி சௌம்யா தலையில் அடித்துக்கொண்டாள். உள்ளூரில் அவள் பாட்டிக்கு முறுக்கு ஸ்பெஷலிஸ்ட் னு பட்டம் வேற. இப்ப சொன்னா கேக்கவா போறாங்க. வேற வழியில்லாம எடுத்துவைக்க வேண்டியதுதான். இருந்தாலும் சொல்லிப்பாக்கறேன். பாட்டி அமெரிக்காவுல யாரும் முறுக்க விரும்ப மாட்டாங்க. பல்லு ஒடைஞ்சுபோயிடும்னு பயப்படுவாங்க. யாருக்கு செஞ்சுகுடுக்கப்போறீங்க. இருக்கற பத்து முறுக்கு எனக்குப் போதும். ரெண்டு மாசம் கழிச்சு நீங்க திரும்ப வரும்போது செஞ்சிக்கலாம்.

    பாட்டி காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. உன்னோட அமெரிக்க ப்ரெண்ட் எல்லாம் கூட்டிட்டு வா. நான் சுலபமா கடிக்கறாமாதிரி மொறுமொறுனு தேங்காய் எண்ணெயில பொரிச்சுத்தரேன். ஒருதடவை சாப்பிட்டாங்க அப்பறம் என்ன இந்தியாக்கு திரும்பிப் போகவேண்டாம்னு சொல்லிருவாங்க.

    எப்படியோ என்னோட முறுக்குப்பாட்டியக் கூட்டிக்கிட்டு அமெரிக்காவும் வந்தாச்சு. இங்க இருக்கற இந்திய நண்பர்கள்கிட்ட பேசறதுக்கு முன்ன பாட்டியோட முறுக்குக்குத் தடை போட்டுறணும். முடிவோடு பேச ஆரம்பித்தாள் சௌமியா.

    பாட்டி முறுக்கு சுத்தறது என்ன பெரிய விசயமா. இப்பல்லாம் எப்படிச் செய்யணும்னு மொபைல்ல வீடியோ பாத்தே தெரிஞ்சுக்கலாம். என்ன அதிசயம் பாட்டி ஒன்றுமே சொல்லவில்லை. அமைதியாகப் போய்விட்டாள்.

    அடுத்தநாள் காலை எழுந்த சௌமியாவுக்கு ஆச்சர்யம். பாட்டி முறுக்கு மாவு பிசைந்து ரெடியாக வைத்திருந்தாள். என்னடா தர்மசங்கடம். வந்த ரெண்டாம் நாள்ல அதுக்குள்ள இங்க யார ப்ரெண்ட் புடிச்சிருப்பாங்க. ஒருவேள யாராவது வீட்டுக்கு வரப்போறாங்களோ.

    பாட்டி ஆரம்பித்தாள். இங்க யாரும் வரப்போறதில்ல. திருதிருனு முழிக்காத. இப்போ உனக்குதான் முறுக்கு சுத்தற போட்டி. நேத்திக்கு சொன்னையில்ல. யார் வேணும்னாலும் செய்யலாம்னு. இப்போ இந்த மாவ எடுத்து ஒடையாம மூணு வட்டம் முறுக்கு சுத்து.

    இதென்ன பெரிய விசயமான்னு உக்காந்த எனக்கு அரை மணி நேரம் ஆகியும் ஒரு முறுக்கு ஒழுங்கா சுத்த முடியல. ஒண்ணு புரி சரியான இடைவெளியில வர மாட்டேங்குது. அப்படியே புரி வந்தாலும் இரண்டாவது சுத்துலயே முறுக்கு விண்டுக்கிட்டு நிக்குது. பொறுமையா பாட்டி திரும்பத் திரும்ப கலைந்த முறுக்கு மாவை எடுத்து மீண்டும் உருட்டி எண்ணை தொட்டு என்னிடம் கொடுக்கிறாள்.

    கடைசியில் என்னால முடியல…. அப்டினுஒத்துக்க வேண்டியதாயிற்று. எங்கள் வீட்டு முறுக்கு சாம்பியன் முந்தினநாளே அரைத்துத் துணியில் நீர் வடிவதற்காகக் கட்டி தொங்கவிடப்பட்டதிலிருந்து சிறிது எடுத்துப் பிசைந்து எண்ணெய் தோய்த்து லாவகமாக வெள்ளைத் துணியின்மேல் சுற்றுகிறாள். இப்பொழுது எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. செய்யறவனுக்குத்தான் அதோட சிரமம் தெரியும். வெளியில நின்னு விமர்சிக்கறது ரொம்ப சுலபம். பழமொழி நானூறுல  அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர் இதத்தான் சொல்லுது. அரங்குல உக்காந்து பாக்கறவங்களுக்கு உள்ள வட்டாடறது எளிதாத் தோணுமாம். ஆனா உள்ள இருக்கறவனுக்குத்தான் அதப்பத்தின சிரமம்தெரியும்ங்கறது அதோட அர்த்தம். முன்னால படிச்ச ஞாபகம்.

    சரி இருந்தாலும் நான் முறுக்குப்பாட்டியின் பேத்தியாச்சே. முயற்சியோட கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறேன். மனதினுள் சொல்லிக்கொண்டே பாட்டியின்முன் உட்கார்ந்தாள் சௌமியா.

    பாடல் 18

    பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
    இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
    விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
    அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு.

    அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு

    கைபேசியின் அழைப்பு ஒலி. இப்பொழுதுதான் வீட்லேந்து கடைக்குப் போனான். அதுக்குள்ளயா கூப்புடறான். சாமான்கள ஒழுங்கா லிஸ்ட் போட்டு எழுதிட்டுப் போன்னு சொன்னா கேக்கறதே இல்ல. எல்லாத்துலயும் ஒரு அலட்சியம் இந்தப் பிள்ளைக்கு மனதில் நினைத்துக்கொண்டே வசைபாடுபவதற்காக கைபேசியை எடுத்தேன். என்ன ஆச்சர்யம். இது கடைக்குப்போயிருக்கும் என் பிள்ளை இல்ல. என் ப்ரெண்ட் விசாகாவோட அழைப்பு. பாம்பேய விட்டு வந்து ஒரு வருசம் ஆகியாச்சு. இன்னிக்குக் கூப்பிடலாம் நாளைக்குக் கூப்பிடலாம்னு நெனச்சி நாட்கள் கழிந்ததுதான் மிச்சம். எந்த பழைய ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவே இல்ல. கடைசியில அங்கு பக்கத்துவீட்டில் குடியிருந்த தமிழ்பேசும் விசாகா கூப்பிட்டே விட்டாள்.

    என்ன சுலோசனா சென்னை போனதில எங்கள எல்லாம் மறந்துட்ட போல. என்னதான் உங்க சொந்தக்காரங்க எல்லாம் அங்க இருந்தாலும் ஒருவருசமா உனக்குப் பேச நேரமே கெடைக்கலனு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

    ஆமா வீடு எங்க. கோயமேடு பஸ்டேண்ட் பக்கமா. அமக்களமான எடம். நல்ல அனுபவிக்கற போல. அங்கே ஒரு வீடு வாங்கிற வேண்டியதுதானே.

    சிறிதுநேரம் விசாகாவைப் பேசவிட்டு பின் நான் தொடர்ந்தேன். நல்ல எடம் தான் பொழுது எல்லாம் நல்லாவே போகுது. வீடுகீடு வாங்கறதப்பத்தி யோசிக்கவே முடியாது. இங்க வீடுகள்லநிறைய பிரச்சினை. முக்கியமானது கரையான். கொஞ்ச நாள் துணிமணிகள நகத்தாம வச்சா அதுலயே கரையான் பத்திக்கிது. நல்ல வேள நான் குடியிருக்கிற வீட்ல அவ்வளவா இல்ல. வாசல் கதவுல மட்டும் கரையான் அரிச்சிருக்கு. மூலையில மண்சேத்து வைக்கும். அப்பப்ப அங்க மட்டும் மருந்து அடிச்சு கட்டுப்படுத்தி வச்சிருக்கோம். அக்கம்பக்கத்து வீடுகள்ல எல்லாம் அலமாரிகள் வரை அரிச்சிடுச்சு. மொத்தமா எடுத்துட்டு திரும்ப மரவேலை பண்றாங்க.

    நான் நீண்ட நாள் பேசாததால் கோபத்துடன் ஆரம்பித்த விசாகா கரையான் எனக் கேட்டவுடன் அடப்பாவி, நீ நெனைக்கிற மாதிரி கரையான அழிக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. கட்டுப்படுத்திட்டதா நீ நினைச்சிட்டிருக்க. புதுசா மரவேலை பண்ணிட்டா திரும்ப வராதுனு உங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க நினைக்கிறாங்க. எல்லாமே தப்பு. பெஸ்ட் கன்ட்ரோல் ஆட்களக் கூப்பிட்டு வீடு முழுக்க மருந்து அடிக்க வை. அவங்க சுவரோட அடிப்பக்கத்துல குறிப்பிட்டஇடைவெளி விட்டு சின்னச் சின்ன ஓட்ட போட்டு மருந்து அடைப்பாங்க. அதனால கரையான் பரவாம அழிஞ்சு போகும். போனவாரம் பொதிகை டிவியில பழமொழி பத்தின ஒரு நிகழ்ச்சி பாத்தேன். அதுல அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு னு ஒரு பழமொழிக்கு வயல்ல கதிரை அரிந்து வச்ச அரிதாளையும் விடாம உழுது தண்ணிக்குள்ள அமிழ்த்தி அழுகச்செய்வான் உழவன். அப்டியே உட்டுவச்சா அதுலேந்து வளமில்லாத பயிர் வர ஆரம்பிச்சுடும்னு அர்த்தம் சொன்னாங்க. உண்மைதானே. அரைகுறையா எத உட்டு வச்சாலும் ஆபத்துதான்.

    சரிதான் என் தோழி சொன்னத செயல்படுத்திடவேண்டியதுதான். முடிவெடுத்தேன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(311)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(311)

    பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
    லூராண்மை மற்றத னெஃகு.

    – திருக்குறள் -773 (படைச்செருக்கு)

    புதுக் கவிதையில்...

    பகைவரிடம்
    இரக்கம் காட்டாமல்
    வீரத்துடன்
    எதிர்த்து நிற்பது
    பேராண்மையாகும்..

    அந்தப்
    பகைவர்க்குத் தாழ்வொன்று
    வருகையில்
    இரக்கம் கொண்டு
    அவருக்கு உதவிடுதல்,
    பேராண்மைக்குச்
    சிறப்பு சேர்க்கும்
    கூர்மையாகும்…!

    குறும்பாவில்...

    பகைவரை எதிர்த்தல் பேராண்மை,
    பகைவரின் தாழ்வில் இரக்கமுடன் உதவிடுதல்
    பேராண்மைக்குச் சிறப்புதரும் கருவி…!

    மரபுக் கவிதையில்...

    பகைவர் தம்மோ டிரங்காமல்
    பலத்தைக் காட்டல் பேராண்மை,
    பகைவர் தமக்கோர் தாழ்வுவரின்
    பகையை மறந்தே இரக்கத்தால்
    வகையாய் உதவி யவர்தமக்கு
    வந்த தாழ்வைப் போக்கிடுதல்
    மிகையாய்ச் சிறப்பை ஆண்மைக்கே
    மேலும் சேர்க்கும் கருவியாமே…!

    லிமரைக்கூ..

    வீரமுடன் எதிர்கொள்வார் பகை
    பேராண்மையாளர், பகைவர் தாழ்வில் உதவுதல்
    ஆண்மைக்கு மேன்மைதரு கருவி வகை…!

    கிராமிய பாணியில்...

    படச்செருக்கு படச்செருக்கு
    பெருமமிக்கப் படச்செருக்கு,
    பகைவனுக்கொதவும் படச்செருக்கு..

    எதிரிக் கிட்ட
    எரக்கம் காட்டாம
    வீரத்தோட
    எதுத்து நிக்கறதுதான்
    பேராண்மங்கிறது..

    அதுலயும் அந்த
    எதிரி துன்பப்படுறபோது
    அவனுக்கு ஒதவிசெய்யறது,
    அந்தப்
    பேராண்மக்கே பெரும சேக்கிற
    கருவியாகுமே..

    அதுதான்
    படச்செருக்கு படச்செருக்கு
    பெருமமிக்கப் படச்செருக்கு,
    பகைவனுக்கொதவும் படச்செருக்கு..!

    Share
  • (Peer Reviewed) கடிதொடர் இல்லை: தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்

    (Peer Reviewed) கடிதொடர் இல்லை: தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்

    தி. மோகன்ராஜ்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    இலக்கியத்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்

    இலக்கணமும் மீறல்களும்

    மொழியானது மாறும் தன்மைத்து. கால மாற்றம், சமூக மாற்றம், புறமொழித் தாக்கம் போன்ற பல காரணங்கள் மொழியின் மாற்றத்திற்கு வழிகோலுகின்றன. இவற்றை அகக்காரணங்கள், புறக்காரணங்கள் என்றும் நாம் பிரித்தறியலாம். இரண்டிற்கும் அடிப்படையாகப் பின்வரும் கருத்து அமைகிறது. மொழியானது மக்களின் எண்ணங்களை வெளியிட உதவும் கருவி என்னும் நிலையில், மக்கள் தாம் பேசும் மொழியில் அமைந்துள்ள மொழிக்கூறுகளைப் பயன்படுத்தியே தங்கள் கருத்துகளை வெளியிட முடிகிறது(தெ.பொ.மீ.,1985,ப.21). நுண்ணிய கருத்துகள் தோன்றும் நிலையிலும் புதிய கருத்துகள் ஏற்படும் நிலையிலும் அவற்றைத் தெளிவாக வெளிப்படுத்த இயலாத நிலையில் தம் மொழியில் காணப்படும் சில போதாமைகளைக் காலப்போக்கில் அம்மொழி பேசும் மக்கள் உணர்கின்றனர். அதன் காரணமாக, இரண்டு வகையான மாற்றங்களை மொழியில் புகுத்துகின்றனர். ஒன்று, புதிய மொழிக் கூறுகளை அறிமுகம் செய்வது. தமிழ்மொழியைப் பொறுத்தமட்டில் வான், பான், பாக்குப் போன்ற வினையெச்ச வடிவங்கள் தோன்றியமை இதற்குச் சான்றாகும். மற்றொன்று, ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்கென்று வரையறுக்கப்பட்ட மொழிக்கூறு ஒன்றினை வேறோர் இடத்திற்கும் இட்டு நிரப்புவது. தமிழில் மரியாதை ஒருமைக்குப் பலர்பால் விகுதி பயன்படுகின்றமை இதற்குச் சான்றாகும். இம்மாற்றங்கள் எழுத்து நிலை, சொல்நிலை, தொடர்நிலை, மொழிக் கட்டமைப்பு நிலை என்று மொழியின் அனைத்துக் கூறுகளிலும் காலத்திற்குக் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    தமிழ்மொழியின் தோற்றம் உறுதியாக மதிப்பிடமுடியாத தொன்மைத்து. ஆகலின், அதன்கண் காலந்தோறும் மேற்கண்ட பல நிலைகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அம்மாற்றங்களை அவ்வக் காலங்களில் தோன்றிய இலக்கணங்கள் விதிகளாக ஏற்கவும் வழுவமைதியாகக் கொள்ளவும் வழுவெனப் புறந்தள்ளவும் என ஏதோவொரு வகையில் அவற்றின் மீது அக்கறை செலுத்தியுள்ளன. இது ஒப்பியல் நோக்கில் தமிழ் இலக்கணங்களை அணுகும்போது புலப்படும் (இராசாராம், 2010, ப. 12). சார்பெழுத்துகள் மூன்று என்று தொல்காப்பியம் இயம்ப அவற்றைப் பத்து என்று நன்னூல் கொண்டது மொழியில் ஏற்பட்ட எழுத்து நிலை மாற்றமாகும். சகரக் கிளவி அகரத்துடன் மொழி முதலாகாது என்று தொல்காப்பியம் வரையறுக்க, நன்னூல் அதனை ஏற்காதது சொல்நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும். செய்யும், செய்த என்னும் இரண்டு பெயரெச்ச வாய்பாடுகளை மட்டுமே தொல்காப்பியம் சுட்டிய நிலையில் இவற்றுடன் செய்கின்ற என்னும் வடிவத்தையும் நன்னூல் பெயரெச்ச வாய்பாடாகக் கொண்டது தொடரியல் மாற்றமாகும். தன்மை இடத்தை உயர்திணையாகத் தொல்காப்பியம் கொள்ள, நன்னூல் அதனை விரவுத்திணையாகக் கொண்டது மொழிக் கட்டமைப்பு நிலையில் ஏற்பட்ட மாற்றமாகும். இவையே அல்லாமல், மொழியின் அகராதி நிலையில் சொற்கள் அடைந்த மாற்றங்களும் உள. அவற்றைச் சொற்பொருள் மாற்றம் என்று வழங்குவர் (வரதராசன், 2015, ப. 126). இக்கட்டுரை, தற்காலத்தில் தமிழ்மொழியில் வழங்கப்படும் இலக்கண முறைப்படி அமையாத தொடர்களின் அமைப்புகள் சிலவற்றை ஆராய்ந்து அவற்றுக்கான காரணங்களையும் காண முற்பட்டுள்ளது. அவை கீழ்க்காணும் தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. இவை தற்காலப் பேச்சு வழக்கிலும் இலக்கியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால், தற்கால மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களாகக் கருதப்படும் நிலையில் இவை நம் கவனத்திற்கு உரியவை ஆகின்றன.

    1. உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல்
    2. முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல்
    3. குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை
    4. உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல்
    5. அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு

    1. உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல்

    தமிழில் சொற்களின் மீநிலைப் பகுப்பு, திணைகளின் அடிப்படையில் அமைந்திருப்பது வேறெந்த மொழியிலும் காணப்படாத சிறப்புத் தன்மையாகும். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் முதல் நூற்பா இந்தப் பகுப்பினைச் சுட்டுவது இச்சிறப்புத் தன்மையினை வலியுறுத்துவதாக உள்ளது(தொல்.சொல்.1). எனினும், உயர்திணையில் ஆண்பால் மற்றும் பெண்பால் மட்டுமே வினையில் பால் பிரிப்பினைத் தெளிவாகக் காட்டும். பலர்பாலில் ஆண்களைச் சுட்டும் பலர்பால், பெண்களைச் சுட்டும் பலர்பால், இருவரையும் ஒருங்கு சுட்டும் பலர்பால் என்னும் பிரிவு இல்லை.

    வா.1 : அவர்கள் வந்தார்கள்

    மேற்கண்ட வாக்கியத்தில் வந்தவர்கள் பலர் என்பது மட்டுமே அறியப்படும் நிலையில் அவர்கள் ஆண்கள் மட்டுமா, பெண்கள் மட்டுமா இருபாலாரும் கலந்த கூட்டமா என்ற வேறுபாடு உணர்த்தப்படவில்லை. இந்நிலையில் இந்த வேறுபாட்டினைக் காட்டுவதற்கு மொழியில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆண்பால் கூட்டத்தைக் குறிப்பிட விரும்பும் நிலையில்,

    வா.2 : அவனுங்க வந்தானுங்க

    என்று வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. வட்டார வழக்குகளில் சிற்சில திரிபுகள் காணப்படினும் அடிப்படை மாற்றம் ஒன்றாகவே உள்ளது. இதன் செம்மையான வடிவம் வா.3 ஆகும்.

    வா.3 : அவன்கள் வந்தான்கள்

    பெண்பால் கூட்டத்தைக் குறிப்பிட விரும்பும் நிலையில்,

    வா.4 : அவளுங்க வந்தாளுங்க

    என்னும் வாக்கியம் பயன்படுத்தப்படுகிறது. இதன் செம்மையான வடிவம் வா.5 ஆகும்.

    வா.5 : அவள்கள் வந்தாள்கள்

    இலக்கணங்களில் இவை வரையறுக்கப்படாத நிலையில் இம்மாற்றம் இலக்கண மீறல் ஆகும். எனினும், கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்த விரும்பும் நிலையில் தமிழ்ச் சமூகத்தால் இந்த மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம், பலர்பாலில் ஆண்பால், பெண்பால் வேறுபாடு மொழியமைப்பில் இல்லாதபோது அந்த வேறுபாட்டினைக் காட்டவிரும்பும் எண்ணமே ஆகும். வா.2’உம் வா.4’உம் பலர்பால் வாக்கியங்களாக இருப்பதுடன் அவை ஆண்பால், பெண்பாலைப் பிரித்துக்காட்டுவனவாகவும் அமைந்துள்ளன.

    2. முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல்

    முன்னிலைப் பெயர்களும் வினைச்சொற்களும் திணை/பால் பாகுபாடு காட்டுவதில்லை. ஒருமை, பன்மை என்னும் எண் பாகுபாடு மட்டுமே காட்டுவன.  முன்னிலை ஒருமையில் ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடு இல்லை. பொது ஒருமையாகவே அது உள்ளது. எனினும், தன்மை இடத்திலிருந்து பேசுவோர், முன்னிலை ஒருமை இடத்திலிருக்கும் கேட்போருடன் கொண்டுள்ள உறவுநிலையை உணர்த்தவும் முன்னிலை ஒருமையில் கேட்போரின் பால் வேறுபாட்டைச் சுட்டவும் விழைகின்றனர். இதன் காரணமாகத் தற்காலத் தமிழில் இலக்கணத்தில் வரையறுக்கப்படாத மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, முன்னிலை வினைமுற்றுடன் ‘–டா’, ‘-டி’, ‘-ப்பா’, ‘-ம்மா’ போன்ற ஒட்டுகள் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம், கேட்பவர் ஆணா பெண்ணா என்ற பாகுபாடு உணர்த்தப்படுவதுடன் பேசுவோருக்கும் கேட்போருக்கும் இடையிலான உறவுநிலையும் உணர்த்தப்படுகிறது.

    நீ கேளுடா / நீ கேளுடி / நீ கேளுப்பா / நீ கேளும்மா போன்ற வாக்கியங்களில் ‘-டா’, ‘-ப்பா’ என்னும் ஒட்டுகள் சேர்வதால், கேட்பவர் ஆண் என்று அறியப்படுவதுடன் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான வயது வேறுபாடு, நெருக்கம், மதிப்பு போன்றனவும் புலப்படுகின்றன. ‘-டி’, ‘-ம்மா’ என்னும் ஒட்டுகள் சேர்வதால் கேட்பவர் பெண் என்று அறியப்படுவதுடன் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான வயது வேறுபாடு, நெருக்கம், மதிப்பு போன்றனவும் புலப்படுகின்றன. இவை முன்னிலை ஒருமையில் நிகழும் மாற்றங்களாகும்.

    நீங்க கேளுங்கடா / நீங்க கேளுங்கடி / நீங்க கேளுங்கப்பா / நீங்க கேளுங்கம்மா போன்ற தொடர்களில் முன்னிலைப் பன்மை புலப்படுத்தப்படுவதுடன் கேட்பவர்கள் ஆண்களா பெண்களா என்னும் வேறுபாடும் உணர்த்தப்படுகிறது.

    மேற்கண்ட மாற்றம், பேச்சு வழக்கில் மட்டுமன்றி இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளமையைக் காணலாம்.

    ‘கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே’

    என்னும் அடியில் எடு என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்றுடன் ‘-டா’ ஒட்டுச் சேர்க்கப்பட்டுக் கேட்பவர் ஆண்பால்(தமிழன்) என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

    ‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்’

    என்னும் அடியில் சொல் என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்றுடன் ‘-டி’ ஒட்டுச் சேர்க்கப்பட்டுக் கேட்பவர் பெண்பால் (சிவசக்தி) என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

    ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்பதும் இந்த மாற்றத்தைப் பெற்றுள்ளது. எனவே, இம்மாற்றம் வழக்கு, செய்யுள் என்று இருநிலைகளிலும் இடம்பெற்றுள்ளதை அறியலாம். மேலும், இந்த ஒட்டுகள் வினைமுற்றுடன் மட்டுமல்லாமல் சில வினாத்தொடர்களில் வினாச்சொல்லுடனும் சேர்ந்து வருகின்றன.

    நீ எதுக்குடா போன / நீ எங்கடி பார்த்த / நீ ஏன்ப்பா கொடுத்த / நீ எப்படிம்மா படிச்ச போன்ற வாக்கியங்களில் மேற்கண்ட ஒட்டுகள் வினைமுற்றுடன் அல்லாமல் வினாச்சொல்லான வினையடையுடன் இணைந்து வந்துள்ளன.

    இந்நிலையில், முன்னிலையில் பால்வேறுபாடு காட்டும் விகுதிகள் மொழியில் இல்லாத காரணத்தால் அந்த வேறுபாட்டினைக் காட்ட விழையும் நிலையில் இலக்கண மீறலாக மேற்கண்ட ஒட்டுகள் சேர்க்கப்படுகின்றன என்பதை அறியலாம்.

    3. குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை

    குற்றியலுகரச் சொற்கள் உயிரெழுத்தில் தொடங்கும் ஐ, ஆல், ஒடு போன்ற வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஈற்றில் நிற்கும் குற்றியலுகரம் கெடும் என்பது இலக்கண விதியாகும் (நன். எழு. 164).

    முத்து + ஒடு – முத்தொடு. இதில் ஈற்றில் உள்ள குற்றியலுகரம் கெட்டுள்ளது. ‘முத்தொடு முழாக் கோத்து’ என்பர் இளம்பூரணர் (தொல். சொல். 73). இந்நிலையில், குற்றியலுகரப் பெயர்கள் சிலவிடங்களில் பொதுப் பெயராக(Common Noun) இல்லாமல் சிறப்புப் பெயராகவும் (Proper Noun) வழங்கப்படுகின்றன. அப்பெயர்கள் வாக்கியத்தில் இடம்பெறும்போது, அவை பொதுப் பெயர்களாக உள்ளனவா சிறப்புப் பெயர்களாக உள்ளனவா என்பதை வேறுபடுத்திக் காட்ட இலக்கண மீறலாக மொழியில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. குற்றியலுகரப் பெயர் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையில், அது மேற்கண்ட வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது ஈற்றுக் குற்றியலுகரம் கெடாமல் ஏனைய உயிரீற்றுச் சொற்களைப் போன்று உடம்படுமெய் பெறுகிறது.

    நான் முத்தை வாங்கினேன் / நான் முத்துவைப் பார்த்தேன்.

    மேற்கண்ட வாக்கியங்களில் முதல் வாக்கியத்தில் உள்ள முத்து என்னும் சொல் பொதுப் பெயராக மணியின் ஒருவகையைக் குறிக்கின்றது. இரண்டாவது வாக்கியத்தில் உள்ள முத்து என்னும் சொல் உயிர்ப்பொருள் ஒன்றின் இடுகுறிப் பெயராக வந்துள்ளது. இதனைச் சிறப்புப் பெயர்(Proper Noun) என்று அழைப்பர். சிறப்புப் பெயர் குற்றியலுகர ஈற்றைக் கொண்டுள்ள போதிலும் இலக்கண மீறலாக அதன் உகரம் கெடாமல் உடம்படுமெய் பெற்று வந்துள்ளதைக் காணலாம். இம்மாற்றம் பொதுப்பெயர், சிறப்புப் பெயர் வேறுபாட்டினைப் புலப்படுத்த உதவுகிறது.

    நான் பூங்கொத்தை வாங்கினேன் / நான் இலக்கணக் கொத்துவை வாங்கினேன்.

    மேற்கண்ட வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தில் உள்ள இலக்கணக் கொத்து என்னும் தொகைச்சொல் ஒரு குறிப்பிட்ட இலக்கண நூலினைச் சுட்டும் சிறப்புப் பெயராக வருவதால் இங்கும் இலக்கண மீறல் நிகழ்ந்துள்ளது.

    நான் அரசிடம் முறையிட்டேன் / நான் அரசுவிடம் முறையிட்டேன் என்னும்போதும் இந்த வேறுபாட்டை அறியலாம். எனினும், இம்மாற்றம் எல்லாக் குற்றியலுகரப் பெயர்களிலும் நிகழ்வதில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது. கீழ்க்காணும் வாக்கியம் பிழை வாக்கியமாகும்.

    *நான் என் தோழி முத்தழகுவைப் பார்த்தேன்

    மேற்கண்ட வாக்கியத்தில் முத்தழகு என்பது குற்றியலுகரச் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையிலும் இலக்கண மீறல் நடைபெறவில்லை. எனவே, இந்த மாற்றம் மேலும் ஆய்விற்குரியது.

    4. உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல்

    இது மொழியில் இயல்பாகக் காணப்படும் மாற்றமாகும். உயர்திணைப் பெயர்கள் (முறைப்பெயர்கள், சிறப்புப் பெயர்கள்) வாக்கியங்களில் இடம்பெறும்போது உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் விகுதிகளைக் கொண்டு முடியாமல் சில சூழல்களில் அஃறிணை ஒன்றன்பால் விகுதிகொண்டு முடிகின்றன.

    மாமா பாட்டு பாடுச்சு (மாமா பாட்டுப் பாடியது)

    அப்பா கோவிலுக்குப் போச்சு (அப்பா கோவிலுக்குப் போயிற்று)

    அண்ணன்  சாப்பிடுது (அண்ணன் சாப்பிடுகிறது)

    மேற்கண்ட வாக்கியங்கள் உயர்திணை முறைப் பெயர்கள் ஆயினும் அவை கொண்டுமுடியும் வினைமுற்றுகள் அஃறிணை ஒன்றன் பாலாக உள்ளன. இவ்வாக்கியங்கள் இலக்கணப்படி திணை வழு வாக்கியங்களாகும். எனினும், இவை மொழி பேசுவோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

    வெண்ணிலா பாட்டு பாடுச்சு (வெண்ணிலா பாட்டுப் பாடியது)

    சுரேஷ் சாப்பிடுது (சுரேஷ் சாப்பிடுகிறது)

    மேற்கண்ட வாக்கியங்களில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பெயர்கள் உயர்திணையைச் சுட்டுவனவாக இருப்பினும் வினைமுற்றுகள் அஃறிணை ஒன்றன் பாலில் உள்ளன. இம்மாற்றத்திற்குக் கீழ்க்காணும் காரணத்தைச் சுட்டலாம்.

    பேசுபவர், கேட்பவருடனும் பேசப்படுபவருடனும் கொண்டிருக்கும் உறவுநிலையைப் பொறுத்து இம்மாற்றம் நிகழ்கிறது எனலாம்.

    ‘அண்ணன் சாப்பிடுது’ என்னும் வாக்கியம் பேசுபவர், கேட்பவருடனும் பேசப்படுபவருடனும் (அண்ணன்) நெருங்கிய உறவு உடையவராக இருக்கும் நிலையை உணர்த்துகிறது. ‘அப்பா கோவிலுக்குப் போச்சு’ என்பதிலும் இதே நிலையை உணரலாம். எனினும், பேசுபவருக்கும் பேசப்படுபவருக்கும் உறவு நெருக்கம் இருந்தாலும் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையில் உறவு நெருக்கம் இல்லாதபோது இம்மாற்றம் நிகழ்வதில்லை.

    முன்னிலையாகக் கேட்பவர் பேசுபவருக்கு யாரோ மூன்றாவது மனிதர் என்னும்போது, அண்ணன் சாப்பிடறார்/அப்பா கோவிலுக்குப் போனார் என்றே வாக்கியங்கள் அமைகின்றன. எனவே, இம்மாற்றத்திற்கான காரணம் பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் என்னும் மூவரைப் பொறுத்து அமைகிறது என்பது சிந்தித்தற்குரியது. இம்மாற்றத்திற்குத் தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை ஆகிய மூவிடங்களின் உறவுநிலைகள் காரணமாக அமைகின்றன என்றும் விளக்கலாம்.

    5. அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு

    அஃறிணைப் பன்மைப் பெயர்கள் அஃறிணைப் பன்மை விகுதிகொண்டு முடியவேண்டும் என்பது இலக்கணமாகும். எனினும், தற்போது அஃறிணைப் பன்மை விகுதி, இலக்கிய வழக்காக அல்லது மேடைப்பேச்சு வழக்காக மட்டும் கருதப்படுகின்ற நிலையில் பேச்சு வழக்கில் பன்மை உணர்த்தும் விகுதி இடம்பெறுவதில்லை. வினைப்பகுதி மற்றும் கால இடைநிலை மட்டும் காட்டும் வினைமுற்றுகளையோ (1), அஃறிணை ஒன்றன்பால் விகுதிகொண்ட வினைமுற்றுகளையோ(2), அஃறிணை ஒன்றன்பால் வினைமுற்றுடன் ‘கள்’விகுதி சேர்ந்த வினைமுற்றுகளையோ(3) அவ்வாக்கியங்கள் கொண்டுள்ளன.

    எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கு

    மேற்கண்ட வாக்கியத்தில் வினைமுற்று, வினைப்பகுதி(இரு) மற்றும் கால இடைநிலை மட்டும் பெற்றுப் பன்மை விகுதி இல்லாமல் வந்துள்ளது. அதிலும் காலம் காட்டும் இடைநிலை (கிறு/கின்று) திரிந்துள்ளது.

    எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுது

    மேற்கண்ட வாக்கியத்தில் ஓடுகின்றன என்னும் பலவின்பால் வினைமுற்றுக்குப் பதிலாக ஓடுது என்னும் ஒன்றன்பால் வினைமுற்று இடம்பெற்றுள்ளது.

    காட்டுல ஆடுங்க மேயுதுங்க / மேயுதுக

    மேற்கண்ட வாக்கியத்தில் ஒன்றன்பால் வினைமுற்றுடன் (மேயுது) ‘கள்’ விகுதி சேர்ந்து பலவின்பால் உணர்த்தப்பட்டுள்ளது.’கள்’ விகுதி திரிபடைந்திருப்பதும் உணரத்தக்கது.

    மேற்கண்ட மூன்று வாக்கியங்களும் இலக்கண நிலையில் முறையே இருக்கின்றன என்றும் ஓடுகின்றன என்றும் மேய்கின்றன என்றும் வினைமுற்றுகளைப் பெற்றிருத்தல்வேண்டும். எனினும், அந்த வாக்கியங்களில் உள்ள மற்ற கூறுகள் பேச்சு வழக்கில் இருக்கும் நிலையில், எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கின்றன என்றும் எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுகின்றன என்றும் காட்டுல ஆடுங்க மேய்கின்றன என்றும் கூறும்போது வினைமுற்று மட்டும் இலக்கிய நடை அல்லது மேடைப்பேச்சு நடையில் இருக்க மற்ற கூறுகள் பேச்சு வழக்கில் அமையும் முரண்பாடு தோன்றுகிறது. இந்த முரண்பாட்டைத் தவிர்ப்பதற்கு வினைவிகுதி மேற்கண்டாவாறு மூன்று நிலைகளில் திரிபடைகிறது.

    இதுவரை கண்ட தற்காலத் தொடரிலக்கணத்தில் காணப்படும் ஐந்து வகையான இலக்கண மீறல்களையும் அவற்றுக்கான காரணங்களையும்  கீழ்க்காணுமாறு பட்டியலிடலாம்.

    வ.எண்

    இலக்கண மீறல் காரணம் சான்று
    1 உயர்திணைப் பலர்பாலில் பால்வேறுபாடு உணர்த்தல் பலர்பாலில் ஆண்களைச் சுட்டும் பலர்பால், பெண்களைச் சுட்டும் பலர்பால் என்னும் வேறுபாட்டை உணர்த்த விரும்புதல் அவனுங்க வந்தானுங்க / அவளுங்க வந்தாளுங்க
    2 முன்னிலை வினையில் உயர்திணைப் பால்வேறுபாடு உணர்த்தல் முன்னிலை வினைகள் ஆண்பால், பெண்பால் பாகுபாடு பெறாத நிலையில் அவ்வேறுபாட்டினை உணர்த்த விரும்புதல் நீ கேளுடா /           நீ கேளுடி
    3 குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை பொதுப்பெயர் சிறப்புப் பெயர் வேறுபாட்டினை உணர்த்த விரும்புதல் நான் முத்தை வாங்கினேன் /   நான் முத்துவைப் பார்த்தேன்
    4 உயர்திணைப் பெயர்கள் அஃறிணை ஒன்றன்பால் விகுதி ஏற்றல் பேசுவோர், கேட்போர், பேசப்படுவோர் ஆகியோருக்கு இடையிலான உறவுநிலையை உணர்த்த விரும்புதல் அப்பா சாப்பிடுது / வெண்ணிலா பாட்டு பாடுது
    5 அஃறிணைப் பன்மை வினை விகுதித் திரிபு பேச்சு வழக்கினுள் இலக்கிய வழக்கு அல்லது மேடைப்பேச்சு வழக்கினைத் தவிர்த்தல் எங்கிட்ட பத்து மாடுங்க இருக்கு / எங்க ஊர்ல நிறைய ஆறுங்க ஓடுது / காட்டுல ஆடுங்க மேயுதுங்க

    நாம் மேலே குறிப்பிட்டது போன்று, மக்கள் தம் மொழியில் அவ்வப்போது உணரும் போதாமைகளால் மொழியில் சில மாற்றங்களைப் புகுத்துகின்றனர் என்பதை மேற்கண்ட ஐந்து வகையிலான தொடரிலக்கண மீறல்களின் வழியாக அறியமுடிகிறது. இவை இலக்கண மீறல்கள் என்ற போதிலும் கருத்தைத் தெளிவாக உணர்த்த விரும்பும் விழைவே இம்மாற்றங்களுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. மொழியானது இலக்கண வரம்புடையது என்றாலும் அது கருத்துப் புலப்பாட்டுக் கருவி என்னும் நிலையில் காலத்திற்கு ஏற்பப் புலப்பாட்டுத் தேவைகளால் மக்களால் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்காலத் தமிழ் மொழிக்கான இலக்கணங்களை வரையறுக்க முற்படும் நிலையில் இவை போன்ற வேறு பிற மாற்றங்களையும் அவற்றுக்கான அக மற்றும் புறக் காரணங்களையும் கண்டறிதல்வேண்டும்.

    துணையன்கள்

    1. இராசாராம். சு., ‘இலக்கணவியல்: கோட்பாடுகளும் மீக்கோட்பாடுகளும்’, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2010

    2. தெ.பொ.மீ., ‘மாற்றிலக்கணம்’, சர்வோதயா இலக்கியப் பண்ணை, மதுரை, 1985

    3. தொல்காப்பியம் சொல்லதிகாரம், இளம்பூரணர் உரை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988

    4. நன்னூல், எழுத்ததிகாரம், ஆறுமுக நாவலர் உரை, முல்லை நிலையம், சென்னை,1994

    5. வரதராசன். மு., ‘மொழிநூல்’, பாரி நிலையம், சென்னை, 2015


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer review):

    தமிழ் இலக்கணங்களில் காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்களை வரலாற்று நிலையில் விளக்கி, தற்காலப் பேச்சு வழக்கிலும் இலக்கியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற தொடர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது. குறிப்பாகத் தற்காலத் தொடரிலக்கண மீறல்களை ஐந்து பிரிவுகளாகப் பகுத்து, அவற்றிற்குரிய காரணங்களைச் சான்றுகள் மூலம் கட்டுரையாளர் மிகத் தெளிவாக விளக்குகின்றார். ஆய்வாளருக்குப் பாராட்டுகள். 


    Share
  • பழகத் தெரிய வேணும் – 26

    பழகத் தெரிய வேணும் – 26

    நிர்மலா ராகவன்

    (வாய் எதற்கு?)

    “அம்மா! ஆத்திலே நீ பேசக்கூடாதுங்கறே. ஸ்கூல்லே பேசினா டீச்சர் திட்டறா. வாய் எதுக்கு வேஸ்ட்?” வாய்கிழியக் கேட்டது என் நான்கு வயது மகள்.

    அவள் ஒன்றரை வயதிலிருந்தே ஏதேதோ பேசுவாள். கேட்பவருக்கு ஒன்றும் புரியாது. அது நிராசையில் கொண்டுவிட, சுவற்றில் முட்டிக்கொள்வாள்.

    அவளை எப்படி அடக்குவது என்றே புரியாமல், ஒரு புத்தகத்தைப் படித்துக் காட்டினேன்.

    ‘இன்னொரு தடவை, இன்னொரு தடவை,’ என்று அவள் கெஞ்ச, ஒரே கதையை பதினான்கு முறை இடைவிடாது படித்தேன். அதனால் அவளுடைய ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது.

    அதிகமாக எழுதவோ படிக்கவோ தெரியாத வயதில் மொழிவளத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரே வழி பேசுவதுதான்.

    எட்டு வயதுப் பெண்குழந்தைகள் வாய் ஓயாமல் பேசுவார்கள். அந்தப் பிராயத்தில் சற்று கண்டிக்காவிட்டால், `மௌனத்தின் எதிரி நான்!’ என்பதுபோல் ஆகிவிடுவார்கள்.

    பதினைந்து வயதில், நான் வகுப்பில் நிறைய பேசியதற்காக, நான் மட்டுமின்றி, எங்கள் வகுப்பு மாணவிகள் அனைவரும் ஒரு மணி நேரம் திறந்தவெளியில் நிற்கவேண்டும் என்ற தண்டனை அனுபவித்தோம். என்னை ஊக்குவித்து, என் பேச்சை ரசித்துக் கேட்டதற்காக அவர்களுக்கும் சேர்த்துத் தண்டனை.

    படிப்பதில் எனது ஆர்வம் பெருகப் பெருக, எதையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்தது., பேச்சு குறைந்துபோயிற்று.

    எப்போது பேசலாம்?

    ஒருவர் நமக்குத் தீமை இழைக்கிறார். அதைப் பொறுத்துப்போகலாமா? அவரை எதிர்க்க வேண்டும்.

    எவ்வளவு வதையை அனுபவித்தாலும், தமக்கே உதவி செய்துகொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மால் முடிந்தவரை பரிந்து பேசலாம்.

    உதாரணமாக, ஒரு மாணவியிடம் ஆசிரியர் முறைதவறி நடந்துகொள்வதைப் பார்த்தபின்னரும், ‘நமக்கேன் வம்பு?’ என்று ஒதுங்காது, அவரைப்பற்றி மேலிடத்தில் புகார் செய்வது.

    கணவனிடம் பல ஆண்டுகள் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் வதைபட்டு, சாகும்வரை பொறுத்துப்போக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் சில பெண்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டிருக்கும் பெண்கள்தாம் அவர்களுக்காக குரலெழுப்ப முடியும்.

    இப்படிப்பட்ட செய்கைகளால் பல துன்பங்கள் வரலாம். ஆனால், ஒவ்வொருவரும் சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஒதுங்கினால், இவ்வுலகில் தவறுகள் மலிந்துவிடாதா!

    மௌனத்தைக் கடைப்பிடி

    நமக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவரைப்பற்றியோ, அல்லது தெரியாத ஒரு சமாசாரத்தைப்பற்றியோ பேசாது இருப்பது நல்லது. நாமே நம் முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக்கொள்வானேன்!

    ஒரு முட்டாள் தலைவராக இருந்தால், அவரை எதிர்த்துப் பேசாமல் இருப்பது நமக்கே நாம் செய்துகொள்ளும் நன்மை.

    சில சமயங்களில், நேர்மையைவிட மௌனமே சிறந்தது.

    கதை

    ஒருவன், ‘என்னைக் காட்டிக்கொடுத்துவிடாதீர்கள்,’ என்று ஒரு முனிவரிடம் கெஞ்சிவிட்டு ஒளிந்துகொள்கிறான். அவனுடைய எதிரிகள், ‘இப்படி ஒருவனைப் பார்த்தீர்களா?’ என்றபோது மௌனம் சாதிக்கிறார்.

    அவர் பொய்யுரைக்கவில்லை. உண்மையை மறைக்கவே வாய்பேசாது இருந்துவிடுகிறார்.

    நாம் பேசுவதால் பிறரை நோகடிப்போம் என்றால், எதற்காகப் பேசுவது?

    பிறர் சொல்வதைக் கேட்பவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்வதைவிட தாம் அதையடுத்து என்ன கூறலாம் என்றே யோசிப்பார்கள். பிறர் பேசுவதைக் கேட்கப் பொறுமை இராது.

    உரத்த குரலில் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தால்தான் அறிவாளியா?

    அறிவாளிகள் தம் அறிவைப் பறைசாற்றிக் கொள்வதில்லை.

    ‘நீங்கள் பேசுவதேயில்லையே!’ என்று குற்றம் சாட்டுவார்கள் பலர்.

    மௌனமாக இருப்பவர்களுக்குப் பழகத் தெரியாது, அல்லது கர்வம் கொண்டவர்கள் என்பதில்லை. இவர்கள் சாதிப்பவர்கள். அவசியம் வந்தால் பேசலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள். அதனாலேயே அமைதியாக இருப்பார்கள்.

    பிறருக்கும் அவரிடம் தம் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றும்.

    கவுன்சிலர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம்: ஒருவர் தம் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்கையில், குறுக்கே பேசாது, மௌனமாக கேட்டுக்கொள்வது. அவசியம் என்றால், தெளிவு ஏற்பட சில கேள்விகளைக் கேட்கலாம்.

    நாம் மௌனமாக இருந்தாலும் நம்மைப் புரிந்துகொள்கிறவரே உற்ற துணை.

    ஏன் தனிமை?

    தனிமையில்தான் நம்மைப்பற்றி நிறைய யோசிக்கமுடிகிறது – நாம் செய்த தவறுகளை, பொறுத்த அவமதிப்புகளை, நம் எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்வது போன்ற பல விஷயங்களை. அப்போதுதான் நம்மை நாமே புரிந்துகொள்ள இயலும்.

    “ஒரு முட்டாளை அவன் பேசுவதிலிருந்து அறியலாம். புத்திசாலியை அவனுடைய மௌனத்திலிருந்து அறியலாம்” (ஒரு தத்துவ ஞானி).

    புரிதலால் அமைதி

    நமக்குப் புரியாதது ஆத்திரத்தை உண்டாக்கும். புரிந்துவிட்டாலோ அமைதியாக இருக்க முடிகிறது.

    கதை

    வீடுகள் நிறைந்த தெருவில் முன்னாலிருக்கும் கார் மிக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. பின்னால் இருக்கும் காரோட்டிக்கு ஆத்திரம் எழ, திட்ட ஆரம்பித்தார்.

    முன்னால் இருப்பவருக்குக் காது கேட்கப்போவதில்லை என்றாலும், தனக்கே அமைதி ஏற்படுத்திக்கொள்ள அவருக்குத் தெரிந்த வழி இதுதான்.

    (பெண்கள் இப்படி ஆத்திரப்படுவதில்லை).

    “ஏன் இப்படி கெட்ட வார்த்தைகளைக் கொட்டுகிறீர்கள்?” என்று நான் அவரைக் கேட்க, “எனக்கு நிம்மதி கிடைக்கிறது,” என்றார்.

    பிறரது மனநிலை புரியும்போது ஆத்திரம் எழாது.

    இப்படியும் யோசிக்கலாமே! காரோட்டி அந்த இடத்திற்குப் புதிது. யார் வீட்டையோ தேடுகிறார்.

    தனிமையும் கற்பனையும்

    கற்பனைத்திறனை வளர்த்துக்கொள்ள தனிமையைப்போல் வேறில்லை.

    “நான் 99 தடவை யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை. யோசிப்பதை விடுத்து, அமைதியாக இருந்தபோது, உண்மை தானே என்னிடம் வந்தது” (ஐன்ஸ்டீன்).

    அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனைப்பற்றி அறிவோம். பன்னிரண்டு வயதிலேயே அவர் காது செவிடாகிவிட்டதாம். தனிமைதான் துணை என்ற நிதரிசனத்தில், நிறைய பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்தது. பல ஆராய்ச்சிகளில் வெற்றிபெற்றார்.

    எழுதுவதும் ஒரு தனிமையான செயல்தான். தனிமையை ரசிக்கத் தெரியாதவர்களுக்கோ அது ஒரு தண்டனை.

    கோயிலுக்குப் போய் கடவுளை வேண்டினால் அமைதி கிடைக்கும் என்பார்கள். அங்கும் வீண்வம்பு பேசுகிறவர்கள் இல்லாமலில்லை. அதனாலேயே, சில கோயில்களில் `இங்கு அநாவசியமாகப் பேசக்கூடாது’ என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்களோ!

    பிரார்த்தனை, தியானம் – இதெல்லாம் மனதை அமைதிப்படுத்துவது. பூஜை அறையில் கண்ணை மூடி அமர்ந்துகொண்டு, வெளியில் என்ன நடக்கிறது என்று காதைத் தீட்டியபடி இருந்தால், அவ்வப்போது குரலை எழுப்பி, வெளியில் உள்ளவர்களுக்கு `ஆலோசனை’ கூறத்தான் தோன்றும். அப்புறம் மௌனமாவது, அமைதியாவது!

    மௌனமாக இருந்தால்தான் பிறரை மட்டுமின்றி, நம்மையும் நாமே புரிந்துகொள்ள முடியும்.

    வாழ்வில் வெற்றிபெற்றவர்களிடம் எப்போதும் இருப்பது: புன்னகை, மௌனம். பேசாமலிருப்பதும் ஒரு மொழிதான் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    “மௌனம் என்கின்ற மரத்தின் பழம்தான் அமைதி” என்று சரியாகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

    Share
  • அருமருந்தே  மாரியம்மா!

    அருமருந்தே மாரியம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    பல்லவி

    எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது மாரியம்மா
    மண்ணிலே நல்லவண்ணம் வாழவைக்கும் தெய்வமம்மா

                                                                                                                                 (எண்ணமெலாம்)

    அனுபல்லவி

    கண்ணாலே உனைப்பார்த்தால் கவலையெல்லாம் தீருமம்மா
    கண்மணியே மாரியம்மா காலடியைப் பற்றுகின்றோம்

                                                                                                                                                                              (எண்ணமெல்லாம்)

    சரணம்

    தீராத காதலுடன் தினமும்வரும் அடியவரை
    நோகாமல் காத்திடுவாய் நுண்ணறிவின் இருப்பிடமே
    ஆராதனை செய்து அனுதினமும் பாடுகின்றோம்
    நேராக எமைப்பார்த்து நின்னருளைத் தருவாயே

    மருதமர நிழலினலே வாழுகின்ற தாயேநீ
    உரிமையுடன் வருமடியார் உள்ளமதில் உறைந்திடம்மா
    வருவினைகள் எமையணுகா வகையினிலே காத்திடுவாய்
    அருமருந்தே மாரியம்மா அனைவருமே தொழுகின்றோம்

                                                                                                                                                                               (எண்ணமெலாம்)

    Share
  • பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி

    பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி

    நாகை ராமஸ்வாமி

    பஞ்சாஷத் பீடரூபிணீ பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி
    பஞ்சாக்க்ஷரன் நாயகி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி ஶ்ரீலலிதே

    வானின் வண்ண நிலவு வெட்கியது நின்னழகில்
    ஆதவனும் தயங்கினான் நின்னருட் பிரகாசமதில்

    நெஞ்சமதில் வாசமிட்டு நீரூற்றாய்க் குளிரவைக்கும்
    பஞ்சபூதமும் தஞ்சமடையும் கருணாகடாக்ஷி காமாக்ஷி

    கார்கொண்டு நீர்பொழிந்து தாகம் தீர்த்தாய் உன்
    பேர்சொல்லி நின்புகழ் பாடச் செய்தாய்

    ஆதியாய் பராசக்தியாய் அண்டமெலாம் சக்திதந்தாய்
    பாதியிலும் பேர்பெற்றுப் பாரெங்கும் போற்றவைத்தாய்

    உயிர்க்காற்றில் உன்நாமம் சொல்லவைத்தாய்
    பயிர்வளர்த்து உணவாக்கிப் பசிதீர்த்தாய்

    புவியதனில் பிறந்தோர் புண்ணியம்கிட்ட
    புவனேஸ்வரி புகலிடமேது நின்னடி நிழலன்றி

    பஞ்சவக்த்ராஸ்தி ஸம்ஸ்திதா பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பஞ்சாஷத் பீடரூபிணீ பஞ்சபூதேஸ்வரி நீலாயதாக்ஷி
    வஞ்சகனும் நலமுற வாழவைப்பாய் வேண்டினமே

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 7

    கதை வடிவில் பழமொழி நானூறு – 7

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 15

    சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
    பெரிய பொருள்கருது வாரே; – விரிபூ
    விராஅம் புனலூர! வேண்(டு); ‘அயிரை விட்டு
    வராஅல் வாங்கு பவர்‘.

    பழமொழி – ‘அயிரை விட்டு வரால் வாங்குபவர்’

    நம்ம செல்வம் சார் எவ்வளவு மாறிட்டார் பாத்தியா. முன்னயெல்லாம் நாம ஸ்கூல் படிக்கும்போது எச்சில் கையால காக்கா ஓட்ட மாட்டாரு. போனவாரம் நான் ஷாப்பிங் மால் ல பாத்தப்போ ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாரு. அவர் கூட அவர் வளர்ப்புப் பையனையும் கூட்டிக்கிட்டு வந்திருந்தாரு. பையன் பாக்க நல்லா லட்சணமா இருக்கான். அவருக்கு ரொம்ப பெரிய மனசு. நான்தான் இவ்ளோநாள் புரிஞ்சுக்காம என்னென்னமோ பேசியிருக்கேன். அதுக்காக இப்போ வெக்கப்படறேன். என் திருச்சி நண்பன் வருத்தப்பட்டான்.

    நீ பேசும்போது அவுங்க மனைவி கூட இருந்தாங்களா இது நான்.

    சிறிது யோசித்த என் நண்பன் தொடர்ந்தான். தொடக்கத்துல கூடதான் நின்னுட்டிருந்தாங்க அவர் பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல கொஞ்சம் தள்ளி நின்னு புடவைக் கடைய வேடிக்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆமா ஏன் கேக்கற.

    அதானே பாத்தேன். நீ திருச்சியிலேந்து இப்பதான் வந்திருக்க. நானும் ஷண்முகமும் கோயம்புத்தூரிலயே தானே இருக்கோம். அடிக்கடி சந்திச்சிகிறது தான். ஆனா நேத்தைக்கு நான் பேசினப்போதான் அவன் செல்வம் சாரப் பத்தி சொன்னான். இப்ப நாலைந்து வருசமா அவன் அவர் வீட்டுப்பக்கத்துலதான் குடியிருக்கான் போல.  அதனால அவரப் பத்தி கதையாச் சொன்னான். அவன் சொன்னதச் சொல்றேன் அப்ப உனக்குப் புரியும்.

    செல்வம் சாருக்கு குழந்தை இல்லனு எனக்குத் தெரியும்டா. பல வருசமாவே அவர் நிறைய டாக்டர்கிட்டயும்  போய்வரதக் கேள்விப்பட்டேன். அதுல ஒண்ணும் அவருக்குப் பெரிசா வருத்தம் இருந்தாமாதிரி தெரியல. தினமும் பக்கத்துல இருக்கற பார்க்குக்கு காலையில வாக்கிங் போகும்போது பேசிக்கிடறதுதான். பாக்கப் பாக்க அவங்க மனைவிதான் வேதனையில மெலிஞ்சிக்கிட்டே போனாங்க.

    அவங்க வற்புறுத்தலாலதான்  நெறைய டாக்டரப் பாத்திருக்காரு போல. அதுக்கு செலவழிஞ்சத நெனச்சிதான்  அவர் அதிகமா வருத்தப்பட்டிருக்கார். அப்பறம் திடீர்னு ஒருநாள் ஒரு வளந்த பையன தத்து எடுத்துக்கிட்டதாச் சொன்னாரு.

    பிறகுதான் தெரிஞ்சது அவரோட திட்டம். பேச்சுவாக்குல கல்லூரி முதலாமாண்டு படிக்கற பையன தத்து எடுத்து தொடர்ந்து படிக்கவைக்கறேன். அப்பதான் செலவு கம்மி ஆகும்பாரு. ஏன்னா பள்ளிக்கூடப்படிப்புக்குக் கட்டவேண்டிய பணம் மிச்சம். கொஞ்ச வருசத்துல அவன் உங்கள மாதிரி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான். அப்பறம் கைப்பிடித்தம் வராது.  மனைவிக்கும் ஒரு குழந்தை வந்ததிலே சந்தோசம். எல்லா வகையிலும் இது எனக்கு லாபம்தான்னு பெருமப்பட்டார் போல.

    நான் நிறுத்தியவுடன் என் நண்பனுக்குத் தலையே சுற்றிவிட்டது போல. முன்நெற்றியை அழுத்திவிட்டுக்கொண்டே பெருமூச்சுடன்பேச ஆரம்பித்தான்.

    நான்கூடஅவரப் பத்தி பெரிசா நெனச்சிட்டேன். சின்ன மீனைத் தூண்டில்ல கோத்துவிட்டு பெரிய மீனைப் பிடிக்கறமாதிரி இல்ல இருக்கு அவர் வேல. இதெல்லாம் ஒரு பொழப்பா. இவரப்போல மனுசங்களுக்குத்தான் அயிரை விட்டு வரால் வாங்குபவர் அப்டிங்குற பழமொழியே இருக்குபோல.

    அதச் சொல்லிக்குடுத்ததே அவர்தான். சரி அவர விடு. வேற ஏதாவது பேசலாம். தொடர்ந்தேன் நான்.

    பாடல் 16

    நல்லார் நலத்தை உணரின் அவரினும்
    நல்லார் உணர்ப; பிறர் உணரார்; – நல்ல
    மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
    அயிலாலே போழ்ப அயில்‘.      

    பழமொழி – ‘அயிலாலே போழ்ப அயில்’. 

    என்ன கைலாசம் எப்ப ஊர்லேந்து வந்த கேட்டுக்கொண்டே அவனருகே நடந்த என்னை இடைமறித்து

    ஆமா நம்ம ஊர்ல பல மாறுதல்கள் வந்துருக்கு போல. வருசம் கழிச்சு வந்ததால ஒண்ணும் சரியாப் புரியல. ஊரப்பத்தி தொலைக்காட்சி செய்தியில பாத்து தெரிஞ்சுக்கிடறதுதான். ஆரம்பித்தான் அவன். .

    தொலைக்காட்சியில எல்லாம் நம்ம ஊரப்பத்தி சொல்றாங்களா. இந்தத் தேர்தல்ல சிவசாமி ஐயா செயிச்சது எவ்வளவு நல்லதாப் போச்சு. நம்ம ஊருக்காக அவர் எவ்வளவு நலத்திட்டங்கள உருவாக்கிட்டு வராரு பாத்தியா. மாணவர்கள்லேந்து வீட்ல இருக்குற குடும்பப் பெண்கள் வரை எல்லாருக்கும் அவங்கவங்க தேவைக்கு ஏத்தமாதிரி செஞ்சிட்டுவராரு.

    மொதல்ல நம்ப ஊருக்கு மேல்நிலைப்பள்ளி கொண்டு வந்தது பெரியவிசயம். பசங்க எவ்வளவு தூரம் போய் படிச்சிட்டு இருந்தாங்க. அடுத்தது கல்லூரியும் வந்துரும். தென்னையிலிருந்து கிடைக்குற பொருட்கள உபயோகமான சாமன்களா மாத்தறதுக்காக பயிற்சியும் குடுக்கப் போறாங்களாம். அப்பறம் சின்னதா ஒரு தொழிற்சாலையும் வந்துடும். உன்னைய மாதிரி பூவிளைவிக்கிற விவசாயிகளுக்கு உள்ளூர்லயே சென்ட் தொழிற்சாலை வரப்போகுதாமே. கேள்விப்பட்டயா. நீ எங்க. சென்னைவாசி அரசாங்கச் சம்பளக்காரன்.  நிலம்தான் உன் பேர்ல இருக்கு. கஷ்டப்பட்டாதானே அது சரியாகும்போது சந்தோசமும்வரும். உனக்குத் தெரிய நியாயம் இல்ல. சரி வந்ததுலேந்து ஊர்க்கதையப்பத்தியே பேசறேன். அப்பறம்உங்க சென்னை எப்டி இருக்கு. பிள்ளைகள் எல்லாம் நல்லாப் படிக்கிறாங்களா?  .

    அட என்னப்பா நீ. நான் சொல்ல வந்ததே வேற. என்னமோ இந்த ஊர சிவசாமி ஐயா சொர்க்கபுரியா மாத்திட்ட மாதிரி இல்ல பேசிக்கிட்டிருக்க. அவர் கட்சியில கிட்சியில சேந்திட்டயா. நிறுத்தினான் கைலாசம்.

    ஏன்னா வெளியில அவரப்பத்தி நல்லமாதிரி சொல்லலயே. நம்ம தெக்குத்தெரு சொக்கன் தொலைக்காட்சிக்கு குடுத்த பேட்டிய போனவாரம் பாத்தேன். அதென்னமோ பதவி ஆசையில ஓட்டு சேகரிக்க அவர் மக்கள திசை திருப்பி விடறார்னுல சொன்னான். நீ சொன்னியே அந்த மேல்நிலைப்பள்ளியில காசு வாங்கிட்டு ஆசிரியர்கள வேலைக்கு அமர்த்தியதாவும், குடும்பப் பெண்கள மாதர் சங்கம்னு சொல்லி அப்பளம் இடற சாக்குல ஊர்வம்பப் பேசவச்சி ஊர் ஒற்றுமையக் குலைக்க முற்படறாராமே. இன்னும் என்னமோ நிறைய சொன்னார். அதப் பத்திதான் கேக்கவே ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அரசியல் மேடைப் பேச்சு மாதிரி முழ நீளத்துக்கு ஒரு பட்டியல் போட்டுட்ட அங்கலாய்த்தான் நண்பன்.

    ஓ அப்டியாசேதி. நான் என்னமோ நீ நம்ம ஊரப்பத்தி நல்லவிதமா கேள்விப்பட்டதா நெனச்சு மூச்சுவிடாம பேசிட்டேன். எப்படியிருந்தாலும் அதுதான் உண்ம. சொக்கன் சந்தர்ப்பவாதி. இடத்துக்கேத்த மாதிரி பேசுவான். தான் காரியம் நடக்கணும்னா நா கூசமா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவான். நீ கேட்டியே அரசியல்ல சேரரதப்பத்தி. அவன்தான் எதிர்க்கட்சியில சேந்திருக்கான்.

    அயிலாலே போழ்ப அயில் னு நீ கேட்டதில்லயா. இரும்பைப் பிளக்க இன்னொரு கூரிய இரும்பு தேவை.  நல்லவரப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா அவரைவிட நல்லவங்ககிட்டதான் கேக்கணும். சொக்கன் மாதிரி கெட்டவன்கிட்ட கேட்டா இப்டித்தான் ஆகும். கெட்டவனுக்கு பாக்கற நல்லவங்களும் கெட்டவங்களாத் தான் தெரியுவாங்க. என் நண்பனுக்கு உணர்த்திய பெருமிதத்தில் நான் விடைபெற்றேன்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 268

    படக்கவிதைப் போட்டி – 268

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 267இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 267இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கூரான இரும்பின்மீது ஜோராகக் காலை மடக்கி வைத்து வாழைப்பழம் உண்ணும் குரங்கினை ’க்ளோஸ்-அப்’பில் அழகாகப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படம் தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 267க்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் நன்றி!

    வாகாக உட்கார்ந்துகொண்டு வாழைப்பழத்தை வகையாக உண்ணும் இந்தக் கவி (கவி/கபி – குரங்கு) குறித்து நம் கவிகள் என்ன கருத்துக் கூறவிரும்புகின்றார்கள் என்பதை அறிந்துவருவோம்! புறப்படுங்கள்!

    *****

    ”பாடுபட்டு விவசாயி வளர்த்த வாழையைக் கேடுகெட்ட குரங்கே நீ திருடி உண்ணலாமா?” என்று உரிமையோடு குரங்கைக் கண்டிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனித விளையாட்டு…

    பாடு பட்டு விவசாயி
    பயிராய் வளர்த்த வாழையிலே
    கேடு கெட்டக் குரங்கேநீ
    கெடுதல் செய்து விட்டாயே,
    காடு சென்று தேடாமல்
    களவு செய்து தின்றாலே
    வாடுமே உழவன் குடும்பமதே
    வேண்டாம் மனித விளையாட்டே…!

    *****

    ”வானரங்களே! தருமம் செய்யாதவர்களிடம் பழங்களைத் தட்டிப்பறியுங்கள்; தருமம் செய்பவரை அன்போடு கட்டிப்பிடியுங்கள்!” என்று அழகாக ஆலோசனை சொல்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    எளிதில் கிடைக்கும் கனியென்பதால்
    உங்களுக்கும் மிகவும் பிடிக்குமா ராமா?
    அன்பால் கொடுத்தால் பெறுவீர்!
    பறித்துப் பெறாதீர்!
    இது மனிதர்க்கும் பொருந்தும்
    ஏனெனில் உங்களிடமிருந்து பிறந்தவர்கள் நாங்கள்
    இக்குணம் இருக்கத்தானே செய்யும்
    நீங்கள் திருந்தி விடுவீர்கள்
    நாங்கள் சற்றே கடினம்தான்!

    ஆலயங்களில் மரங்களில் நீங்கள்
    தர்மம் செய்யாதவரிடம் தட்டிப் பறியுங்கள்
    தர்மம் செய்பவரைக் கட்டிப்பிடியுங்கள்
    அனுமனின் ஆசியென நினைத்துக் கொள்வோம்
    ஏனெனில் நீங்கள் ராமாயணத்தில் ஒரு நாயகனல்லவோ?

    *****

    ”மானிடா! இயற்கை விவசாயம் நீ துறந்ததால் பாதிப்பைப் பழத்தின் சுவையில் காண்கிறேன்; உள்ளே போகமறுக்கும் பழத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன் ஓரத்தில்!” என்று மனிதர்க்கு நற்புத்தி கற்பிக்கும் குரங்கைக் காண்கிறோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

    குரங்கின் கேள்வி!

    மானிடா இதென்ன வாழைப் பழமா?
    இயற்கையில் பழுத்ததா
    செயற்கையில் மாறியதா?
    கனிவதற்குமுன் பொறுமை இல்லையோ?

    முன்பெலாம் கனி கனியாக இருக்கும்
    நிறம் கண்டு ஏமாறி விட்டேனடா
    சுவையில்லை
    வாய்க்குள் போக மறுக்கிறது
    ஒதுக்கி வைத்து இருக்கிறேன் ஓரத்தில்

    இயற்கை விவசாயம் நீ துறந்த தால்
    பாதிப்பைச் சுவையில் காண்கிறேன்
    எதை வைத்துப் பளபள மஞ்சள் நிறம்
    காம்பு கூட மஞ்சள் நிறமா?
    நீ உண்ணுவது பழமா விசமா?

    பழ வகைகள் உற்பத்தியில் பாரதம்
    உல அளவில் இரண்டாம் இடமாமே?!
    தர அளவில் இருக்கணும் முதலிடம்
    முன்பெலாம் பருவத்திற்குப்
    பருவமே காணலாம் பழங்களை
    இப்போதோ எல்லாப் பருவத்திலும்

    இயற்கை உரத்தில் பழங்கள் ஆரோக்கியம்
    செயற்கை முறையில் பழங்கள் துர்ப்பாக்கியம்

    *****

    ”வாக்குரிமையை விற்று, பாடுபட்டுக் கிட்டிய கனியமுதை எறிந்துவிட்டுத் தோலை வைத்திருக்கும் கழுமீதமர்ந்த இக்குரங்குபோலவே நாமும் உழல்கின்றோம்” என்று இன்றைய மக்களாட்சியில் மக்களின் அவல நிலையைத் ’தோலுரித்து’க் காட்டியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    கழு மேலமர்ந்த குரங்கு

    ஜாதிமத அபிமானத்தாலும்
    கையூட்டுப் பணத்திற்கும்
    மதுபோதை மோகத்திற்கும்
    வெற்று விளம்பரத்திற்கும்
    சிற்றின்பக் கவர்ச்சிக்கும்
    கற்றகல்வி தனைமறந்து
    பட்டறிவும் தானிழந்து
    மக்களாட்சித் தந்துவைத்த
    வாக்குரிமையை விற்றுவிட்டு
    பாடுப்பட்டுக் கிட்டிய கனியமுதை
    எட்டித் தூரம் எறிந்துவிட்டு
    தோலைமட்டும் வைத்துக்கொண்டு
    செய்வதறியாது திகைத்து நின்று
    கூர்முனைக் கழுமரம்
    மேலமர்ந்த குரங்கெனக்
    கலங்கிநின்று உழலுகின்றோம்.

    *****

    குரங்கின் செய்கைக்குப் பொருத்தமாக அருமையான கற்பனைகளையும் அழகான உவமைகளையும் இணைத்துக் கவிதை விருந்து படைத்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    பழப் பரிகாரம்!

    பசிக்கு உணவாகப்
    பழத்தினைத் தந்து
    புசிக்கையில்
    புகைப்படம் எடுத்த
    புண்ணியவானை
    விசித்திரமாகப் பார்ப்பதென்ன
    வானரமே!?

    ஐந்தறிவு உயிர்களைக்
    கூண்டில் அடைத்து
    வேடிக்கை பார்க்கும்
    ஆறறிவு மனிதர்கள்,
    மற்றவர் துயர் கண்டு
    மனமிரங்கும் மனிதராய்
    மாறிவிட்டதெப்படி என்று
    மயங்குகின்றாயோ
    மாருதியே!?

    அன்று எங்களவர்
    செய்த பாவம்
    இன்று வீடென்னும்
    கூண்டில்
    அடைபட்டுக் கிடக்க
    தொற்று நோய்
    கொரோனாக்
    கற்றுத் தந்த பாடம்!

    பழத்தினைக்
    கொடுத்துப்
    பரிகாரம் செய்கின்றோம்!
    பகைவர்கள்
    பறித்துச் செல்லும் முன்
    புசித்துப் பசியாறு!

    ”பசிக்குப் பழம் தந்து வானரம் அதனைப் புசிக்கும் வேளையில் படமெடுத்த புண்ணியவானின் தருமத்துக் காரணம், ஐந்தறிவுயிரின் பசியைப் போக்கினாலாவது ஆறறிவுயிர்கள் படும் கொரோனா துன்பத்துக்கு விடிவு கிடைக்காதா என்ற சுயநலமே” என்று மாந்த மனத்தைப் பாந்தமாகத் தம் கவிதையில் படம்பிடித்துக் காட்டியிருக்கும் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • எளிய தீர்வுகள் இரண்டு!

    எளிய தீர்வுகள் இரண்டு!

    அண்ணாகண்ணன்

    ஓர் எளிய யோசனை, முற்றிலும் புதிய பயனைத் தந்துவிடும். நாம் பயனற்றது எனப் போட்டு வைத்திருக்கும் பலவற்றுக்கும் இப்படி இன்னொரு முகம் உண்டு. அப்படி நான் பார்த்த சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

    A simple idea – 4

    A simple idea – 5

     

    நீங்களும் இத்தகைய எளிய தீர்வுகளைக் கண்டதுண்டா? உங்களிடமும் இத்தகைய யோசனைகள் உண்டா? அவற்றைக் காணொலியாகப் பதிந்து நமக்கு அனுப்புங்கள். வல்லமையில் வெளியிடுவோம்.

    Image courtesy: https://www.maxpixels.net

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 5

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 5

    -மேகலா இராமமூர்த்தி

    தேவர் தலைவனான இந்திரனுக்கு வியாழன் (பிரகஸ்பதி) குருவாக வாய்த்ததுபோல் தயரதனுக்கு வசிட்டர் வாய்த்திருந்தார். ஆசனத்தில் அமர்ந்தபடி தயரதனின் வாழ்வியல் கருத்துக்களையும், இராமனுக்கு முடிபுனைய அவன் விரும்புவதையும் அறிந்த அவர் தயரதனை நோக்கி, ”மன்னவா! உன்னுடைய குலத்தில் இதுவரை எத்தனையோ அரசர்கள் ஆட்சி செய்திருக்கின்றார்கள். அவர்கள் யாருக்கும் இராமனைப் போன்ற உயர்ந்த மகன் பிறக்கவில்லை. அத்தகு உத்தமபுத்திரனைப் பெற்ற நீ அவனுக்குச் செய்யக் கருதும் கருமம் தருமத்தின் பாலதே ஆகும். எனவே அதனைத் தயக்கமின்றிச் செய்வாய்” என்றார்.

    உயர்ந்த தவசீலரும் அறிஞருமான வசிட்டர் தன் மகனைப் புகழ்ந்துரைத்ததைக் கேட்டு தயரதன் அடைந்த மகிழ்ச்சியின் அளவைப் பிற தருணங்களில் அவன் அடைந்த மகிழ்ச்சியோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றார் கம்பர்.

    மற்று அவன் சொன்ன
         வாசகம் கேட்டலும் மகனைப்
    பெற்ற அன்றினும்
         பிஞ்ஞகன் பிடித்த அப் பெருவில்
    இற்ற அன்றினும் எறி
         மழுவாளவன் இழுக்கம்
    உற்ற அன்றினும்
         பெரியது ஓர் உவகையன் ஆனான். (கம்ப: மந்திரப் படலம் – 1440)

    வசிட்ட முனிவன் சொன்ன சொற்களைக் கேட்டவுடன் நெடுங்காலம்
    மகப்பேறு இல்லாதிருந்து வேள்விசெய்து இராமனை மகனாகப் பெற்ற அந்த நாளினும்,  தலைக்கோலமுடைய சிவபிரான் ஏந்திய, பிறரால் வளைத்தற்கு அரிய, அந்தப் பெரிய வில்லானது  இராமன் ஆற்றலுக்குப் போதாமல் கணத்தில் ஒடிந்த நாளினும்,  அரசர்களை வெட்டி வீழ்த்திய மழு என்னும் படை ஏந்திய பரசுராமன் தோல்வியடைந்த நாளினும் உற்ற உவகையைக் காட்டிலும் கூடுதல் உவகையுற்றான் தயரதன்.

    திருக்குறளில்,

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    (குறள்: மக்கட்பேறு – 69) என்பார் பேராசான் வள்ளுவர்.

    மகனைச் சான்றோன் என்றும், உயர்ந்தவன் என்றும் கேட்கும்போது தாய் மட்டுந்தானா மகிழ்வாள்? அதற்குச் சற்றும் குறையாத வகையில் தந்தையும் மகிழ்வான் என்பதை இப்பாடலில் நமக்குப் புலப்படுத்துகின்றார் பெரும்புலவர் கம்பர்.

    அமைச்சர்களும் வசிட்டரும் இராமன் முடிசூடுவதற்கு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இராமனை அழைத்த தயரதன், மகனே! அரசர்கள் அணியும் முடிபுனைந்து அரசாட்சியாகிய நல்லறத்தை வளர்த்திட நீ இசைந்திடல் வேண்டும்; இதுவே நான் உன்னிடம் வேண்டுவது என்று அவனிடம் சொல்லவும், அதைக்கேட்ட இராமன் அரச பதவியின்மீது காதலுறவும் இல்லை; அதை இகழவும் இல்லை. தாதை சொல்லை ஏற்று நடத்தல் தனயனின் கடனென அதற்கு இசைந்தான் என்கின்றார் கம்பர்.

    இராமனின் சம்மதம் கிடைத்ததும் சோதிடர்களை அழைத்து இராமன் முடிசூட நல்லநாள் சொல்லுமின் என்று தயரதன் கேட்க, நாளையே நல்லநாள் என்று அவர்கள் நன்மொழி நவின்றமையால் நனிமகிழ்ந்த தயரதன், சிட்டரான வசிட்டரை அழைத்து நாளை அரசனாகப் போகும் இராமனுக்கு அரசியல் அறங்களை உரைமின் என்று வேண்டினான்.

    தன் மகன் அரசனானால் போதும் மற்றவற்றைப் பற்றிக் கவலையில்லை என்று எண்ணாது, அவன் பார்போற்றும் நல்லரசனாக வேண்டும், ’அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’ எனும் ஆன்றோர் வாக்குக்கிணங்க அவன் ஆட்சிசெய்யவேண்டும் என்ற தயரதனின் உட்கிடையை அவன் இராமனுக்கு நல்லாட்சி நடத்தத் தேவையான அறங்களையெல்லாம் வசிட்டரிடம் பயிற்றுவிக்க முனைவதிலிருந்தே நாம் தெளிவாய்ப் புரிந்துகொள்ள முடிகின்றது. 

    வால்மீகியின் காப்பியத்தில் இளவரசுப் பட்டம் சூட்டப்படும்போது இராமனுக்குத் தயரதன் அரசியல் அறங்களை உரைப்பதாக வருகின்றது. ஆனால் கம்பர், இராமனுக்கு அரசியல் அறங்களைத் தயரதனின் குலகுருவும், ஆசானுமாக விளங்கக்கூடிய வசிட்டர் உரைப்பதாக மாற்றி அமைத்துள்ளார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    தயரதன் விருப்பத்தை ஏற்ற வசிட்டரும் ஓர் அரசன் கைக்கொள்ள வேண்டிய நன்னெறிகளை இராமனுக்கு 15 பாடல்களில் விரிவாக விளக்கத் தொடங்குகின்றார்…

    அறவுணர்வும் நடுவுநிலைமையும் அருளும் இல்லையானால் கடவுளர்களாகவே இருந்தாலும் பயனொன்றுமில்லை. எனவே இம்மூன்று குணங்களையும் தவறாது கைக்கொள்வாயாக என்று இராமனுக்கு அறிவுறுத்திய வசிட்டர் தொடர்ந்து,

    ஒரு மன்னன் எவர் ஒருவரோடும் பகை கொள்ளவில்லையானால் அவனுக்குச் சண்டை இல்லாமற்போகும்.  அதனால் புகழ் குன்றாது; நிறையவே செய்யும். அம்மட்டோ? அவனுடைய படை கெடாது. அவ்வாறு படைகெடாது வளருமாயின் அவனைப் பகைப்போர் அழிதல் என்பது தானே நடக்கும். அதாவது பலத்தால் பகைவனை வெல்லுதலைவிட நற்பண்பாகிய அன்பினால் பகைவெல்லுதலே சிறந்தது என்பது இங்கே வசிட்டர் கூற விரும்பும் கருத்தாகும்.

    யாரொடும் பகை கொள்ளலன் என்றபின்
    போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
    தன்
    தார் ஒடுங்கல் செல்லாது அது தந்தபின்
    வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ.
    (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1508)

    ”பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே
    பகைவனுக் கருள்வாய்”
    என்ற பாரதியின் பாடலிலும் கம்பனின் இக்கருத்து எதிரொலிக்கக் காண்கின்றோம்.

    நம் தமிழ் மன்னர்களும்,

    போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது
    இடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப”
    (புறம் – 8) அனைத்து நிலப்பகுதிகளையும் தாமே அடிப்படுத்தவேண்டும் எனும் எண்ணத்தைத் தவிர்த்து, தமக்கிருப்பதில் நிறைவு க(கொ)ண்டிருந்தார்களேயானால், எத்தனையோ போர்களைத் தவிர்த்திருக்கலாம். அவர்களிடம் போதுமென்ற நிறைவும், நல்ல நட்பும் இல்லாத காரணத்தினால்தான் ஒருவரோடு ஒருவர் மோதி அழிந்ததோடு அல்லாமல், தமிழகத்தைக் களப்பிரர், பல்லவர் போன்ற தமிழரல்லாத பிறர் கைப்பற்றவும் வழிவகுத்தனர் என்பதை நாம் இந்த நேரத்தில் வருத்தத்தோடு எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கின்றது.
    அவ்வகையில் வசிட்டரின் இவ் அறிவுரை மிகவும் பொருள்பொதிந்த அனுபவ மொழியாகவே இருக்கின்றது.

    எப்போது ஓர் அரசனை யாரும் வீழ்த்தமுடியாது என்ற இரகசியத்தையும் அடுத்து இராமனுக்கு விவரமாக விளம்புகின்றார் அந்த அறிஞர் பெருந்தகை.

    இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
    வினையன் தூயன் விழுமியன் வென்றியன்
    நினையும் நீதி நெறி கடவான் எனில்
    அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ
    . (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1513)

    ஓர் அரசன் இனிய சொல்லை இயம்புபவனாகவும், நல்ல கொடைத்திறம் கொண்டவனாகவும், ஆராயும் அறிவும், முயற்சியும் பெற்றவனாகவும், தூய்மையும், சிறந்த பண்புகளும், வெற்றிக்கான திறமும் கொண்டிருப்பதோடு, நீதிநெறி கடவாதவனாகவும் திகழ்ந்தால் அவனுக்குக் கேடு பயப்போர் அகிலத்தில் எவருமில்லை என்று உறுதிபடத் தெரிவிக்கின்றார் வசிட்டர்.

    வசிட்டரின் அறவுரைகளைச் செவியில் மட்டுமல்லாது சிந்தையிலும் ஏற்றிக்கொண்டான் இராமன்.

    மறுநாள் இராமன் மௌலி புனைகின்றான் என்ற மங்கலச் செய்தி அயோத்தி மாநகர் முழுவதும் வள்ளுவரால் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. அந்நற்செய்தி கேட்ட மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்; தயரதனை வாழ்த்தினர். வானவர்கள் வசிக்கும் அமராவதிப் பட்டினமோ எனும்படியாக நகரை அலங்கரித்தனர்.

    மக்களின் ஆரவார ஒலிகளைக் கேட்டு ஊரில் என்ன விசேடம் என அறியும்பொருட்டு அரண்மனையிலிருந்து வெளியே வந்தாள் ஒருத்தி.
    அவள் தோற்றம் எப்படியிருந்தது என்பதைக் கம்பரின் மொழியிலேயே காண்போம்.

    அந்நகர் அணிவுறும் அமலை வானவர்
    பொன்னகர் இயல்புஎனப் பொலியும் ஏல்வையில்
    இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்
    துன்னஅருங் கொடுமனக் கூனி தோன்றினாள்.
    (கம்ப: அயோத்தியா காண்டம் – மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1534)

    உலகிற்குத் துன்பம் செய்கின்ற  இராவணன் செய்த தீமைபோல,  அணுகுதற்கரிய கொடிய மனம் படைத்த,  கூனி என்னும் மந்தரை  வெளியில் வந்து நகரைப் பார்த்தாள். இராமன் நாளை முடிசூடப் போகிறான் எனும் செய்தியையும் அறிந்தாள். அவள் அடைந்த சினத்துக்கும் சீற்றத்துக்கும் ஓர் அளவில்லை. முகம் வெறுப்பைக் காட்ட, கண்களோ நெருப்பைக் கக்கின.

    கோசல நாட்டில் கற்றவரும் கற்றிலா தவரும் உண்ணும் நீரினும் உயிரினும் அதிகமாக உவக்கும் இராமன்மீது ஏனிந்த மந்தரைக்கு இத்தனை கோபமும் வெறுப்பும்?

    அதற்கும் ஓர் காரணம் இருந்தது!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 600 017.

     

     

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 89 (செல்வம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 89 (செல்வம்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    செல்வம்  மேவிய நாளில்  இச்செயல்  செய்வ  தன்றியும்  மெய்யினால்
    அல்லல்   நல்குரவு  ஆன போதிலும்  வல்லர் என்றுஅறி   விக்கவே
    மல்லல்   நீடிய   செல்வம்  மெல்ல   மறைந்து நாள்தொறும்  மாறிவந்து
    ஒல்லையில்வறு   மைப்ப   தம்புக   உன்னினார்  தில்லை  மன்னினார்!

    உரை :

    செல்வங்கள் மிகுந்திருக்கும் காலத்திலே இச்செய்கைகள் செய்வதன்றியும், மெய்யினாலே துன்பம் தரும் தரித்திரம் வந்த காலத்திலும் இச்செயல் செய்ய இவர் வல்லராவர் என்ற உண்மையை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டாகவே; செழித்து நீடிவந்த  அச்செல்வங்கள் மெல்ல மறைந்துபோய் நாடோறும் மாறி வந்து, பின்  விரைவிலே வறுமையாகிய நிலை வந்து சேருமாறு தில்லையில் மன்னிய இறைவனார் திருவுளஞ்செய்தனர்.

    விளக்கம்

    அடியார் பூசையின் நன்மையாற் செல்வம் வந்து பொருந்திய. அது காரணமாக (அருள் காரணமாக) வறுமை வந்து பொருந்திய காலத்திலும் செல்வமும் வறுமையும் திருவருளினாலே வந்ததென்துவன; இவற்றுள்  எது வந்தெய்தினும் தமது நிலையினின்றும் பிறழாது உண்மைக் கொள்கையில் நிற்றல் உணர்ந்தோர் கடன் என்பது நூல்   துணிபு.

    செல்வம் வந்த காலத்து அடியார் பூசை செய்வதற்கு  அடியார் திறத்து நிறைந்து திருந்திய சிந்தை வேண்டும்; நல்குரவு  வந்தபோது அது செய்தற்கு அதனினும் பெரியதோர் வன்மைவேண்டும் என்பார்,  ‘வல்லர்’ என்றார்.

    அடுத்து இப்பாடலில்  ‘’அறிவிக்கவே’’  என்ற சொல்லின் விளக்கம்

    அடியார்களுக்கு வரும் வறுமை முதலிய துன்பம்போலக் காண்பனவெல்லாம் இறைவனருளால் இவ்வாறு ஒவ்வொரு  நற்காரணம் பற்றி வருவனவேயன்றி வேறன்று.  பிராரத்த முதலியவற்றை அனுபவிப்பித்துக் கழிக்குமுகத்தானும் அல்லது அன்பினை வலிமையுடையதாக்கு முகத்தானும், இன்ன பிறவாற்றானும் வருவன. இவ்வாறு வரும் இன்னல் போன்ற  தோற்றங்களைக் கண்டு மயங்கி அடிமைத்திறத்திலே அபசாரப் படாதிருத்தல் அறிவோர் கடன் என்று குறிக்க இங்கு ‘’அறிவிக்கவே’’ என்றறிவித்தார் ஆசிரியர்.

    மல்லல் நீடிய  என்ற தொடர், வளம் பெருகி நிலைத்த என்ற பொருள் தந்தது.

    அடுத்து ‘மெல்ல மறைந்து’

    மெல்ல மறைந்து – நாடொறும் மாறி வந்து; மெல்ல மறைதலாவது மறைந்துபோம் தன்மை அறிய இயலாதபடி ஒவ்வொன்றாக மறைதல்; நாள்தோறும் மாறி – மறைந்த செல்வம் திரும்பிவருதல் என்பதின்றி நாள்தோறும் செல்வம் போய் வறுமையாய் மாற்றப்பெற்று என்பது குறித்தது. வந்து – அங்ஙனம் மாறுதல் தொடர்பாய் நிகழ்ந்தது என்றதாம்.

    ஒல்லையில் – விரைவிலே. இஃது மெல்ல என்பது முதலாகக் குறித்தவற்றோடு முரணாமோ வெனின் முரணாது; என்னை?; விரைவில் வருவது வறுமைப் பதமே யன்றி வறுமை யன்று; செல்வம்
    மறைந்த செயலுடனே சார்ந்து வறுமைப்பதமும் விரைவில் ஒட்டியே நிகழ இறைவன் நினைத்தமையே இங்குக் கூறினார். வறுமை வந்த நிலை வரும் பாட்டிற் கூறினார். வறுமைப்பதம் – செல்வஞ் சுருங்குநிலை.

    உன்னினார் தில்லை மன்னினார் – பிரபுவின் சிருட்டி காரியம் அவனது நினைப்பு யாத்திரையானே நிகழும் என்பது வேதம். ஆதலின், உன்னினார் என்றார். தில்லை மன்னினார் – அம்பலத்தில் அருளாகிய ஐந்தொழிற் கூத்தியற்றுபவர். மன்னினார் – நிலைத்துள்ளார். படைத்தல் முதல் அருளல் வரை இவ்வைந் தொழிலுமுடையானாதலின் முதலிற் செல்வம் மேவச் செய்த அவனே அச்செல்வத்தை மாறவும் செய்தனன் என்பது குறிப்பு.

    ஆரம் – என்பு புனைந்த – (442) என்ற இடத்தும் தழைத்தலாகிய ஆத்தியும் வறட்சியாகிய எலும்பும் உடன் கூறிய குறிப்பும் காண்க.

    Share