Blog

  • படக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 269இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு நித்தி ஆனந்தின் கைத்திறனில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. படமெடுத்தவர், தேர்வுசெய்தவர் இருவரும் என் நன்றிக்குரியவர்கள்.

    உப்பு, தமிழர் வாழ்வில் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடாய்த் திகழ்ந்துவருவது. நீரை அமுதம் என்று தமிழர்கள் கருதியது போலவே, உணவுக்குச் சுவையூட்டும் உப்பையும் அமுதமெனக் கருதினர் என்பதற்குச் சங்கப் புலவரான நல்லந்துவனார் ‘கடல்விளை அமுதம்’ என்று நற்றிணையிலும் (88), சேந்தன் பூதனார் எனும் புலவர்  ‘வெண்கல் அமிழ்தம்’ என்று அகநானூற்றிலும் (207) உப்பைக் குறிப்பிடுவது சான்றுகளாகின்றன.

    வண்டிகளில் உப்பு மூட்டைகளை ஏற்றிச்சென்று விற்கும் வணிகர்களுக்கு அந்நாளில் உமணர்கள் என்று பெயர்.

    மாட்டுவண்டிகளில் உப்பைக் கொண்டுசென்று விற்ற காலம்போய் மிதிவண்டிகளில் வணிகர்கள் உப்புவிற்கும் காலமும் வந்தது. இதோ இந்தப் பெரியவரோ தம் தலைமீதுள்ள கூடையில் அந்தக் கடல்விளை அமுதத்தைச் சுமந்து செல்கின்றார். 

    இக்காட்சி நம் கவிஞர்களிடம் எத்தகைய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கண்டுவருவோம்!

    *****

    ”தலைக்கனமில்லா உழைப்புடன் தலையில் கனம் வைத்திருக்கும் காளையே! இன்றைய உன் சுமைகள் நாளைய சுகங்களாகும்” என்று இம்மனிதருக்கு நம்பிக்கையூட்டுகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    சுமை

    உச்சி வெயில்
    உச்சம் தொடும் வேளை
    உச்சந்தலையில் கூடைச்சுமை
    வச்சு நடக்கும் காளையே!
    தலைச்சுமைகளைத்
    தாங்கித் தாங்கித்தான்
    தலையாயக்
    குடும்பச் சுமையைக் குறைக்கின்றாயோ!
    தலைச்சுமைகள்
    தாங்கும் உழைப்பே
    தலைவிதியென்று
    தளர்ந்து விடாதே!
    தலைச் சுமை தாங்கும்
    உடல் பலம் உள்ளதேயென்று
    உவகை கொள்.
    தலைக்கனமில்லா
    உழைப்புடன்
    தலைமேல் கனம்.
    அது
    தன்னம்பிக்கையின்‌ அடையாளம்!‌.
    இன்றைய‌
    சுமைகளே
    நாளைய
    சுகங்கள்!

    *****

    ஆறாப் பெருவிரல் காயங்களுடன் ஒற்றைக்கூடையில் யார் யார் வீட்டு உப்புக்கற்களையோ சுமந்தபடி நடந்துசெல்லும் இந்த எளிய மனிதருக்காக இரங்குகின்றார் திருமிகு. ரா. விஜயகுமாரி.

    நெய்தல் நிலம்

    சுட்டெரிக்கும் சூரியக்கோடை
    இவன் பிரத்யேகம்.
    உவக்கும் சொட்டுகளை
    வெள்ளை பூக்களாக்கும்
    மந்திரத் தொழில் இவனது.

    ரெண்டு நாளாய்
    நல்ல மழை.
    காகிதம் போல்
    காய்ந்த குடிசை
    போனது கடல் நோக்கி.
    வேறெங்கு போக?
    கதியே கடல்.

    வேலைக்குத் திரும்பினான்.
    பாத்தி பாத்தியாகப்
    பங்கிடப்பட்டு கிடந்தது
    இவன் வாழ்வு!

    நடக்கிறான்…உழைக்கிறான்…
    ஆற வாய்ப்பில்லா
    தன் பெருவிரல்
    கீறல் காயங்களுடன்
    ஒற்றைக்கூடையில்
    ஒட்டுமொத்தமாய்
    யார் யார் வீட்டு
    உப்புக்கற்களையோ சுமந்தபடி.

    *****

    ”உச்சிவெயிலில் உப்புச்சுமை தூக்கி உழைப்பதெல்லாம் பச்சிளம் பிள்ளையின் பசிபோக்கவே” என்று வருந்தியுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    துணிவும் அச்சமும்…

    உச்சி வெயிலில் வேர்த்தொழுக
    உப்புச் சுமையை ஏற்றியேதான்
    துச்சமாய்த் துன்பம் துடைத்திடவே
    துணிந்தே பணியைச் செய்வதெலாம்,
    பச்சிளம் பிள்ளையும் பசியாறப்
    பொருட்கள் வாங்கிச் சென்றிடத்தான்,
    அச்சமும் உண்டு மழைவந்தால்
    அந்தப் பிழைப்பும் போய்விடுமே…!

    *****

    ”தேக்குமரக் கைகள் தாங்கிப் பிடிக்கும் கூடையோடு வானத்தையே நீ விற்கிறாயோ? அழுக்கேறிய உன் தலைப்பாகையும் உனக்கோர் அழகுதான்!” என்று இம்மனிதரை இரசனையோடு வருணிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    தேக்குமரக்கைகள் தாங்கிப் பிடிக்கும் கூடை
    தேகம் பலமென்று தெரிவித்ததே
    வானத்தை நீ விற்கிறாயோ?
    வாரி வாரிக் கூடை வழியத்
    தெருத்தெருவாய்ச் சுற்றி விற்பவரோ
    தெரிந்தவர்க்கு மட்டும் கொண்டு சேர்ப்பவரோ
    அழுக்கேறிய உன் தலைப்பாகை
    அதுவும் உனக்கோர் அழகுதான்
    வியர்வையிலே துவைத்தெடுத்து
    விண்ணில் பறக்க விடுவாயோ
    பதிலைச் சொல்லு முதியவரே
    வழி நெடுக நடப்பவரே
    பெருத்த வியாபாரம் செய்வீர்
    வசதியாய் வளர்ந்து வாழ்வீர்!!!

    *****

    ”இந்தத் தலைச்சுமை உழைப்பாளி, நியாயமான ஊதியம் காணாத ஏமாளி! வெள்ளைக்கூட்டம் போனபின்னும் வாழும் கொள்ளைக்கூட்டத்தால் இவன் உழைப்பு உறிஞ்சப்படுகிறதே” என்ற தன் வேதனையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. காந்திமதிநாதன்.

    மாறாத விதி

    தலைச்சுமை உழைப்பாளி
    வியர்வையின் முதலாளி
    நியாயமான ஊதியம்
    காணாத ஏமாளி
    யார் அறிவார் அவன் வலி?

    மூன்றில் ஒரு பங்கு ஊதியமே
    தருவதில் இல்லை நியாயமே
    மீதமுள்ள இரண்டு பங்கு
    செல்லுமிடம் வேறு எங்கு?

    நேற்று இன்றா இந்தச் சுரண்டல்?
    தொன்றுதொட்டு வரும் பிறாண்டல்!
    உப்பு மீது வரி
    தப்பு என்று
    கண்டித்துத் தானே
    தண்டி யாத்திரை
    ஐம்பதாய் ஆரம்பத்தில் ஆசிரம சீடர்கள்
    லட்சம் தாண்டி லட்சியத்தில் இறுதியில்!

    உப்பு மூலம் உருவான சுதந்திரப் போராட்டம்
    தப்புக்குத் தடை போடும் சுதந்திரம் வரட்டும் விரட்டும்
    எதிர்பார்த்த கூட்டம் ஏமாற்றத்தின் உச்சகட்டம்
    அந்தக் கூட்டத்தின் ஒருவன் இவன் தலையில் அதே உப்பு
    அந்த வெள்ளைக்கூட்டத்தை மிஞ்சுகிறதே கொள்ளைக்கூட்டம்

    சுதந்திரக் காற்று சுவாசித்த போதும்
    உழைப்பை உறிஞ்சிம் நச்சுக் காற்று
    அனல்காற்றாய் வீசும்நிலை இந்த நிலை

    உலகிலேயே முதல் அயோக்கியத்தனம்
    வியர்வை சிந்தும் உழைப்பு
    உரிய ஊதியம் அரிதாகப் போவதே!

    அயோக்கியத்தனத்தில் முதலிடமா
    அன்னை பாரதமே

    உழைப்பவன் வியர்வை
    கேட்கிற பார்வை
    தீர்வைக் கண்டால்
    நியாத்தின் சத்தியத்தின்
    போர்வையில் பயணிக்கிறாய்…..

    *****

    ”உப்பளத்தின் வெப்பத்தில் கொப்புளம் கண்ட கால்களோடு அலையும் இவருக்கு உழைப்பு ஒன்றே சொந்தம்; கூடைகூடையாய்த் திட்டம்போட்டும் ஏமாற்றமே மிச்சம்” என்று உண்மை விளம்புகின்றார் திரு. வெங்கட ஸ்ரீநிவாசன்.

    ஏமாற்றம்

    உப்பளத்தின் வெப்பத்திலே
    கொப்புளம் கொண்ட கால்கள்!
    அப்பளமாய்க் காய்ந்துவிட்டப்
    பொத்தலான தேகம்…

    சொத்துபத்து ஏதுமில்லை
    உழைப்பு ஒன்றே சொந்தம்
    ஓயாமல் உழைத்த போதும்
    மழையில் கரைந்த உப்பாய்
    ஊதியமும் கரைந்து போகும்
    விலைவாசியெனும் முகிலால்

    கூடைகூடையாகத் திட்டம்
    கூவிக்கூவிச் சொன்னார்
    ஏழைக் கூடை ஏறவில்லை
    ஏமாற்றம் மட்டும் மிச்சம்…

    *****

    உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு உப்பு விற்கும் இந்த எளிய மனிதரை அவரவர் கோணத்தில் எதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள் நம் கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    கல்லுப்புக் காயங்கள்…!

    கல்வியைவிடக் கல்லுப்பு
    கடிதென அறியவில்லை!

    காலமோடினாலும் கட்டைவிரல்
    காயங்கள் ஆறுவதேயில்லை!

    உப்பளங்களில் தொலைந்த
    வைரக்கல் மின்னுவதேயில்லை!

    எட்டாக வளைந்தாலும்
    ஏழையை எழவிடுவதில்லை!

    சட்டையில்லா உடம்பில்
    கல்லுப்பை மட்டுமில்லை

    கடலையே சுமந்தாலும்
    வறுமையே வாழ்வினெல்லை…!

    ”கல்வியைவிடக் கல்லுப்பு கடிதென அறியவில்லை; சட்டையில்லா உடம்பில் கல்லுப்பை மட்டுமில்லை…கடலையே சுமந்தாலும் வறுமையே வாழ்வின் எல்லை” என்று இந்தப் பாட்டாளியின் வருத்தத்தை நம் நெஞ்சைத் தொடும் வகையில் கவிதையில் வெளிப்படுத்தியிருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

     

     

    Share
  • இராமாவதாரம்

    இராமாவதாரம்

    ஆ. கிஷோர் குமார் 

    அயோத்தி 

    அணி நகரமாய் விளங்கிய
    ஒரு மணி நகரம்..
    குறையே இல்லாத
    ஒரு தனி நகரம்.
    செழிப்பிலும் களைப்பிலும்
    நிறை நகரம்..

    அறுபதாயிரம் ஆண்டுகளாய்
    அலுக்காமல் ஆண்டு
    கொற்றக்குடையை விரித்து
    வீரத்தில் ஆரமாய்
    வீற்றிருக்கும்
    தசரதன் பெயர் கொண்ட மன்னன்
    அதன் காரணம்..

    தயரதனின்  ஆளுகையில்
    அயோத்தியே மின்னியது.
    அரண்மனையை
    அந்த  ஒளிச்சிதறல் பின்னியது…

    அரசனின்
    அலங்கரிக்கப்பட்ட
    அரண்மனையில்
    ஆயிரமாயிரம் நெய் விளக்குகள்..
    அவற்றில் மூன்று
    தசரதனின் முத்து விளக்குகள்..
    கோசலை கைகேயி சுமித்திரை
    என்ற பெயர் பூண்டு ஒளிர்ந்த
    தசரதனின் ஒளி  விளக்குகள்..
    அவை நெய் விளக்குகள் அல்ல..
    தயரதன் அணைப்புக்காக  எரியும்
    மெய்   விளக்குகள்..

    தகவுடன்  நாடாண்ட  மன்னன்
    மகவு இல்லாமல்
    மனக்குறையில் தவித்து தளர்ந்தான்  ….
    தன் குலகுரு வசிட்டரிடம்
    கொட்டினான் அவன் குறையை..

    வசிட்டர் 

    இவர் மலையளவு கற்றவர்
    இவர் வேள்வி வளர்த்தால்
    வேதமே விரும்பி இவர்
    வாயருகே சென்றமரும்..
    இவர் தசரதனின் குலகுரு..

    குருவின் கட்டளையின்றி
    செருவுக்கும் செல்லமாட்டான் தசரதன்..

    அவன் கண்ணில் தெரிந்த
    கவலையும் திவலையும்
    வசிட்டர் அறிந்தார்..
    பின் வரிந்தார்..

    தசரதனே
    மான்கொம்புடன் கானகத்தில் பிறந்த
    ரிஷ்ய ஸ்ருங்கர் எனும்
    கலைக்கோட்டு முனிவரை
    வணங்கி அழைத்து வா.
    அவர் தலைமையில்
    புத்ர காமேஷ்டி யாகம் நடத்து.
    யாகம் முடிகையில்
    உன் சோகம் தீரும்…

    குருவின் கட்டளையைச்
    சிரமேல் கொண்டான்..
    கலைக்கோட்டு முனியைத்
    தலைமை தாங்க வருமாறு
    தண்டனிட்டு அழைத்து வந்தான் தயரதன்…

    கலைக்கோட்டு முனி 

    இவர் பிரம்மனின் பேரன்..
    பெண் வாசனை அறியாப் பெருமுனி..
    வேதமே இவர் புசிக்கும் சாதம்…
    இவர் பாதம் பட்டால்
    பாலை நிலத்திலும் பெய்யெனப் பெய்யும்.
    அந்த அருமுனி தலைமையில்
    யாகம் துவங்கியது.

    காமத்தீ அழித்த பெருமுனி கை
    ஓமத்தீ வளர்த்தது..
    முனிவனின் மந்திர தாகத்தில்
    வளர்ந்த நெருப்பு…
    நெய்யைத் தண்ணீராய் விழுங்கி
    வளர்ந்தது வான் வரை..

    வேள்வியை வளர்த்தது வேதம்..
    அதிலிருந்து வெளிப்பட்டது பூதம்..
    பூதத்தின் கையில் தங்க வட்டில்..
    வட்டிலில் இருந்தது ஒரு தெய்வ அமுது..

    முனிவர் உரைத்தார்…
    மன்னா வட்டிலில் இருப்பதை எடு..
    உன் மனைவிகளுக்குப் பகிர்ந்து கொடு..
    உன் வம்ஸத்திற்கு கிடைக்கும் வடு..
    முனிவர் உரைக்க
    மன்னன் பணிந்தான்

    வட்டில் அமுதில் பாதியை அவன்
    கோசலைக்குக் கொடுத்தான்..
    மீதியில் பாதியைக்
    கைகேயிக்கும் சுமித்திரைக்கும்
    பகிர்ந்து கொடுத்தான்..

    வெற்றி பெற்றது வேள்வி.
    விடை பெற்றது
    மன்னனின் சோகம்..
    நால்வர் பிறந்தனர்
    அரசிகள் மூவருக்கும்..

    அகிலம் வணங்கும்
    அரங்க நகரப்பன்
    கோசலை வயிற்றில்
    குழந்தையாய்ப் பிறந்தான்..
    ராமன் எனும் நாமம் கொண்டான்

    மற்றைய தினம் போல
    அற்றைய  தினம் இல்லை
    அது பகலவன் தன் கதிர்களை
    அங்குமிங்கும் சிந்திக்கொண்டிருந்த
    பங்குனி மாதம்
    வளர்பிறையன்று
    நவமி திதியில்
    புனர்பூசத்தில்
    நான்காம் பாதம்

    வேதமாய் வந்து
    பரப் ப்ரம்மம் பிறக்கையில்
    ஐந்து கிரகங்களும்
    உச்சத்தில் இருந்தன.
    அச்சுதனை வணங்கி
    அச்சத்தைத் துறந்தன..

    வரதனின் அன்புக்குப்
    பாத்திரமான பரதன்
    அவன் கைகேயிக்குப் பிறந்தான்.
    இலக்குவனும் சத்ருக்கனனும்
    சுமித்திரைக்குப் பிறந்தனர்..
    பார் புகழச் சிறந்தனர்..

    சுபம்

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7

    -மேகலா இராமமூர்த்தி

    கூனியின் துர்ப்போதனைகளால் தூய உள்ளம் திரிந்த கைகேயி இராமனின் பட்டாபிடேகத்தைத் தடுத்துநிறுத்த என்ன வழி என்று அவளிடமே யோசனை கேட்க, பல்லாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பராசுரப் போரையும் அதில் கைகேயி துணிச்சலாய்த் தேர்நடத்தித் தயரதனின் உயிரைக் காத்ததையும்; அதனால் மகிழ்ந்த அவன் அவளுக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாய் வாக்களித்ததையும் நினைவூட்டிய கூனி, அவ்வரங்களைக் கேட்டுப்பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்றாள்.

    கூனி குறிப்பிடுகின்ற சம்பராசுரப் போர் பற்றிய விவரணை வால்மீகியின் மூலநூலில் அயோத்தியா காண்டம் 9ஆம் சருக்கத்தில் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அவ்வளவு விரிவாக அதனைக் கூனி கைகேயி விவாதத்திற்கிடையே வைப்பது கதையோட்டத்திற்குத் தடையேற்படுத்தும் என்று கருதிய கம்பர், ஒரே ஒரு பாடலில் அந்நிகழ்வைச் சுருக்கமாகப் பாடி முடித்துவிட்டார்.

    நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்
         நளிர் மணி நகையாய்
    தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
         தொலைவுற்ற வேலை
    ஆடல் வென்றியான் அருளிய வரம்
         அவை இரண்டும்
    கோடி என்றனள் உள்ளமும்
         கோடிய கொடியாள். (கம்ப: மந்தரைசூழ்ச்சிப் படலம் – 1576)

    கூனியின் கருத்தைக் கேட்டு ”ஆகா நல்ல யோசனை!” என்று கைகேயி மகிழ்ச்சியோடு கூறவும், ”மீதியையும் கேள்” என்று தொடர்ந்த கூனி,

    “அவ்விரு வரங்களில் ஒன்றின்படி உன்மகன் பரதனுக்கு நாடாளும் உரிமையைப் பெறு! மற்றொன்றின்படி இராமனைப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் திரியவிடு! பிறகென்ன…? தீர்ந்தது தொல்லை! அதன்பின் உன் மகன் பரதனுக்கு நாடாளுவதில் போட்டியும் இல்லை!” என்று கூனி உரைத்த கொடுமொழிகள் கைகேயியின் செவிகளில் தேனாய்ப் பாய்ந்தன.

    கூனியைக் கட்டித்தழுவி நிறைய பரிசுப்பொருட்களை அள்ளி வழங்கிய கைகேயி, ”உண்மையில் பரதனுக்குத் தாய் நானில்லை; நீதான்!” என்று பாராட்டுமொழிகள் உரைத்து, இனி பரதனுக்கு ஆட்சியைப் பெற்றுத்தருவது என் பொறுப்பு; நீ கவலையின்றிப் புறப்படு!” என்று கூனிக்கு விடைகொடுத்தாள்!

    வந்த வேலையைக் கச்சிதமாக முடித்த மகிழ்ச்சியில் விடமன்ன கூனியும் அவ்விடம் விட்டு நீங்கினாள்!

    கூனி சென்றதும் கைகேயி தன் கபட நாடகத்தைத் தொடங்கினாள். தன் ஒப்பனையைக் கலைத்தாள்; அணிகலன்களைக் கழற்றி தரையெங்கும் வீசினாள். நெற்றித் திலகத்தை முற்றிலும் அழித்தாள்.  பூவில்லாக் கொடிபோல் புவிமிசை புரண்டாள். இராமனுக்கான பட்டாபிடேக ஏற்பாடுகளை முடித்துவிட்டுக் கைகேயியின் அரண்மனைக்கு மகிழ்வோடு வந்த தயரதன் கைகேயியின் அலங்கோல நிலைகண்டு அதிர்ந்தான்.

    ”என்ன நிகழ்ந்தது? உனக்கு யார் என்ன தீங்கு செய்தது? சொல்! அவர்களை இப்போதே மாய்க்கிறேன்!” என்று அவன் சினந்துகூறவும், “மன்னவ! முன்பு தாங்கள் தருவதாகச் சொன்ன இருவரங்களை இப்போது எனக்குப் பரிந்து அளிப்பீரா?” என்று போலி வினயத்தோடு வினவினாள் கைகேயி.

    ”பூ…இவ்வளவுதானா? இதற்குத்தானா இத்தனை சோகமும் அலங்கோலமும்?” என்று நகைத்த தயரதன், “கேள் வரங்களை! தருகிறேன் உடனே! இது உன் புதல்வன் இராமன்மேல் ஆணை!” என்றான் கைகேயியின் வஞ்ச நெஞ்சம் உணராமல்!

    ”அரசே! அந்த இரண்டு வரங்களில் ஒன்றின்படி என்னுடைய சேய் பரதன் நாடாள வேண்டும்; இன்னொன்றின்படி சீதை கேள்வனான இராமன் சென்று காடாள வேண்டும்” என்றாள் கொடிய மனத்தினளாய் மாறிப்போன கைகேயி.

    இதுவரை இராமனைத் தன் மகன் என்று பெருமிதத்தோடு அழைத்துவந்தவள், ’சீதை கேள்வன்’ என்று பிரித்துப் பேசுவதிலிருந்தே அவள் மனமாற்றத்தை நமக்கு நயமாய் உணர்த்திவிடுகின்றார் கம்பர்.

    கைகேயியின் சொற்களைக் கேட்டதும் தலை கிறுகிறுத்தது தயரதனுக்கு! இத்தகைய பயங்கரமான வரங்களை அவளிடமிருந்து எதிர்பார்க்காத அவன், இவை வேண்டாமென்று கைகேயியிடம் அழுகிறான்; தொழுகிறான். உன் மகனுக்கு ஆட்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்; இராமனைக் காட்டுப் போகச் சொல்லாதே என்று கெஞ்சுகிறான்.

    தயரதனின் பரிதாப நிலையைப் பார்க்கும்போது, வரங்களாகக் கைகேயி கேட்க விரும்புபவை யாவை என்பவற்றை அறிந்தபின்பு அவன் அவற்றிற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மனைவி மீதிருந்த அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் அவன் அறிவைக் குருடாக்கிவிட்டன.

    தயரதனின் மன்றாட்டைக் கைகேயி ஏற்றுக்கொள்ளவில்லை. ”வரங்களைத் தருவதாக இருந்தால் சொல்லுங்கள்! இல்லையேல் நான் தீயில் விழுந்து உயிரை மாய்ப்பேன்” என்று அவள் எச்சரிக்கவும், அவள் உள்ளத்து உறுதியை அறிந்த தயரதன், அரிச்சந்திரன் தோன்றிய இரவிகுலத்து வாய்மை தன்னால் பழுதுபடவேண்டாம் என்றெண்ணியவனாய், “நீ கேட்ட வரங்களைத் தந்தேன்” என்றான் வெறுப்போடும் வேதனையோடும்!

    தொடர்ந்து பேசியவன்…”என் மகன் வனமாளுவான்; நான் உயிரைவிட்டு வானாளுவேன்; நீயும் உன் மகனும் மக்களின் வசை என்னும் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருங்கள்” என்று சபித்துவிட்டுச் சோர்ந்து வீழ்ந்தான். 

    கங்குல் மங்கி மறைய வைகறை மெல்ல எட்டிப் பார்த்தது. கோழிகள் கூவத் தொடங்கின. அப்போது அவற்றின் சிறகுகள் படபடப்பது, தயரதனின் துயர்கண்டு ஆற்றாத அக் கோழிகள் தம் சிறகுகள் எனும் அழகிய கைகளால் தம் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவது போன்றிருந்தது என்று அவலச்சுவையைப் பறவைகளிடத்தும் தற்குறிப்பாய் ஏற்றிப் பாடுகின்றார் கவிவலார் கம்பர்.

    எண் தரும் கடை சென்ற
         யாமம் இயம்புகின்றன ஏழையால்
    வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
         மயங்கி விம்மியவாறு எலாம்
    கண்டு நெஞ்சு கலங்கி அம்சிறை ஆன
         காமர் துணைக் கரம்
    கொண்டு தம்வயிறு எற்றி எற்றி விளிப்ப
         போன்றன கோழியே. (கம்ப: கைகேயி சூழ்வினைப்படலம்: 1630)

    இதே போன்ற கருத்தமைந்த பாடலொன்றை நாம் புகழேந்திப் புலவரின் நளவெண்பாவிலும் காணமுடிகின்றது. அங்கும் ஓர் அவலக் காட்சி!

    நடுக்காட்டிலே காரிருள் வேளையிலே உறங்கிக்கொண்டிருந்த மனைவி தமயந்தியைத் தமியளாய் விட்டுச்சென்றுவிடுகின்றான் நளன். கண்விழித்த தமயந்தி கணவனைக் காணாது துயருறுகின்றாள். அவள் துயர்கண்டு பொறாத கோழிகள் தம் இறகுகளால் வயிற்றிலடித்துக்கொண்டு, விரைந்து தேரேறி வருகவெனச் சூரியனை அழைப்பதுபோல் கூவின என்கிறார் புகழேந்தியார்.

    தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
    கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் – வெய்யோனை
    வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
    கூவினவே கோழிக் குலம்.
    (நளவெண்பா – 280)

    பொழுது நன்கு புலர்ந்ததும் இராமனை அழைத்துச்செல்ல சுமந்திரன் இராமனின் அரண்மனைக்கு வருகின்றான். தேரில் ஏறிய இராமனைக் கைகேயியின் அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றான். அங்கே இராமனின் கண்கள் தந்தை தயரதனைத் தேடின. ஆனால் தந்தையைக் காண முடியவில்லை; சிற்றன்னை கைகேயியே எதிர்ப்பட்டாள்!

    இராமன் எதிரில் வந்தவள், முகத்தில் எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல், ”மைந்த! ஆழிசூழ்ந்த இந்த உலகையெல்லாம் பரதன் ஆளவேண்டும் என்றும், நீ சடாமுடி தரித்து, தவக்கோலம் மேற்கொண்டு, கானகம் சென்று அங்குள்ள புண்ணிய நீர்நிலைகளிலெல்லாம் ஆடிவிட்டுப் பதினான்கு ஆண்டுகள் கழித்து மீண்டுவர வேண்டும் என்றும் அரசர் உரைக்கச் சொன்னார்” என்றாள் நிதானமாக.

    ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனேஆள நீபோய்த்
    தாழ்இருஞ் சடைகள்தாங்கி தாங்கருந் தவம்மேற் கொண்டு
    பூழிவெங் கானம்நண்ணி புண்ணியத் துறைகள்ஆடி
    ஏழ்இரண்டு ஆண்டின்வா என்று இயம்பினன் அரசன் என்றாள்
    (கம்ப: கைகேயி சூழ்வினைப் படலம் – 1690)

    தன்மீது பழிவரா வண்ணம் தப்பித்துக்கொள்ளவே இஃது அரசனின் விருப்பம் என்று கூறுகின்றாள் கைகேயி.

    அதைக்கேட்ட இராமனின் முகத்தில் சினம் தோன்றியதா? இல்லை! இச்செய்திகேட்டு, ”அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதுபோல் மலர்ந்தது செப்பருங் குணத்து இராமனின் திருமுகம்” என்கிறார் கம்பர்!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.
    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

    தி. இரா. மீனா

    சத்தியக்கா

    சரணர்களின் வீட்டுமுற்றத்தைப் பெருக்கித் தூய்மைப்படுத்துவது இவரது காயகமாகும். ’சம்பு ஜக்கேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    1. “மலர்தூவி வணங்குவது நியமமில்லை
    மந்திரம் தந்திரம் நியமமில்லை
    தூபம் தீபாரதனை நியமமில்லை
    பிறர் பணம்,பிறன் மனை,பிறதெய்வங்களை
    விரும்பாததுவே நியமம்
    சம்பு ஜக்கேஸ்வரனில் காண்பீர் நித்தியநியமம்”

    2. “காதலனுக்கு வேட்கையில்லை எனக்கும் பொறுமையில்லை
    மனதின் வேட்கையறியும் தோழியரில்லை என்ன செய்வேன்?
    மன்மத பகைமையின் அனுபவத்திற்குள் மனம் உள்ளது.
    என்ன செய்வேன்? நாட்கள் வீணாவதால் இளமை கழியுமுன்
    சம்பு ஜக்கேஸ்வரனோடு இணைத்து விடு தாயே.”

    3. “முலையும் கூந்தலுமிருப்பதால் பெண்ணென மெய்ப்பிக்கமுடியாது
    தாடிமீசை கத்தியிருப்பதால் ஆணென மெய்ப்பிக்க முடியாது
    அது உலகின் கண்ணோட்டம், அறிந்தவரின் நீதியன்று.
    கனி எதுவானாலும் இனிப்பே காரணம்
    அழகற்ற மலருக்கு நறுமணமே காரணம்
    இதன் வகையை நீயேயறிவாய் சம்பு ஜக்கேஸ்வரனே“

    சித்தபுத்தய்யாவின் பூண்னியஸ்திரி காளவ்வே 

    “பீமேஸ்வரா“ இவரது முத்திரையாகும்.

    “விரதக் கேடுடையோன் இலிங்கமற்றவனைக் காண்பது
    இறந்த ஞமலியைக் காகம் பார்ப்பது போலாம்
    அவனுடன் தொடர்பு வேண்டாம் பீமேஸ்வரனே“

    சித்தராமா 

    சித்தராமேஸ்வரா பன்னிரண்டாம் நூற்றாண்டின் முதல் வரிசை வசனக்காரர்களில் இவரும் ஒருவர். சிறுவனாக இருந்தபோதே அறியாமை உடைய பக்தராக இருந்தவர் மாடு மேய்ப்பது இவரது காயகம். ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ச்சுனரைக் கண்டார். பின்னர் சொன்னலிகே வந்து கோயில் கட்டினார். அதற்கு ’யோகரமணீய திருத்தலம்’ என்று பெயரிட்டார். இலிங்கம் நிறுவுதல், குளம், ஏரிகள் அமைப்பது ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு செயல் பட்டதால் ’கர்மயோகி’ எனப் போற்றப்பட்டார். அல்லமாபிரபு இவரைக் கல்யாணுக்கு அழைத்து வந்து பசவேசரிடம் ’இலிங்கதீட்சை ’பெற வைத்தார். கல்யாண் புரட்சிக்குப் பிறகு ’சொன்னலிகே’ சென்று இறைவனோடு ஐக்கியமானார். ’கபிலசித்த மல்லிகார்ஜூனா’  இவரது முத்திரையாகும்.

    1. “அங்கத்திற்கு இன்பம் அளித்தவரைக் கண்டேனேயன்றி
    இலிங்கத்துக்கு கொடுத்தவரைப் பார்க்கவில்லை.
    இலிங்கத்துக்குப் பதினாறு வகையில் உபச்சாரங்கள்
    செய்தவரைப் பார்த்தேனேயன்றி
    உள்ளம் கொடுத்தவரைக் காணேன்.
    உள்ளம் கொடுத்தவரைக் கண்டேனேயன்றி
    உள்ளமே இலிங்கமானவரைக் காணவில்லை,
    கபிலசித்தி  மல்லிகார்ஜூனனே“

    2. “ஐயனே! நீரை இரும்பு உட்கொண்டதைப் போல
    ஒலியை அமைதி உட்கொண்டதைப் போல
    கானல்நீரை வெட்டவெளி உட்கொண்டதைப் போல
    என்னை எப்போதும் ஆட்கொள்வாய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    3. “அறிந்தவன் எப்படி இறந்தான்?
    அறிந்தவன் எப்படிப் பிறந்தான்?
    அறிந்தவன் எப்படிக் கொடிய தளையில் சிக்கினான்?
    அறிந்தவனே சிரஞ்சிவியாம் பாராய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    4. “நீரெல்லாம் ஒன்றாம் ;
    பனைமரத்தில் நிலைத்து மதுவென்றானது,
    கற்பகத் தருவில் நிலைத்து அமுதமானது.
    தேகமெல்லாம் ஒன்றே;
    பெண்ணுள் நிலைத்துப் பிறவிக்கு மூலமானது,
    இலிங்கத்துள் நிலைத்துப் பிறவிக்குக் காட்டுத் தீயானது பாராய்
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    5. “செதுக்கிய கல் இலிங்கமென்றானது
    செதுக்காத கல் வெறுங்கல்லென்றானது;
    வழிபாடு செய்பவன் பக்தனென்றானான்;
    வழிபாடு செய்யாதவன் மனிதனென்றானான்;
    கல்லானாலென்ன, பக்திக்குதவியது
    மனிதனானாலென்ன, பக்திக்குக் காரணமானான்;
    கல் இலிங்கமல்ல, இலிங்கம் கல்லல்ல  பாராய்,
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

    6. “கற்பக விருட்சத்தை மரமெனலாமா?
    காமதேனுவைப் பசுவெனலாமா?
    பரிசவேதியைக் கல்லெனலாமா?
    நம் கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் அடங்கியோர்
    அனைவரையும் மனிதரெனலாமோ?

    7. “பார்க்கலாம் கைக்குள் கிடைக்காது
    அறியலாம் அடையாளப்படுத்த முடியாது
    உணரலாம் இணையமுடியாது
    உவமையற்ற இத்தகு மேன்மையை
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே, உன் சரணர் அறிவார்.”

    8. “பக்தர்கள் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்
    திருமணத்தில் இணைகின்றனர்.
    பக்தர்கள்  மண்மீது காதல்கொள்கின்றனர்
    வாங்கி வீடுகட்டுகின்றனர்
    பக்தர்கள் சொத்தின்மீது காதல் கொள்கின்றனர்
    வேதனைக்குள்ளாகின்றனர்
    கபிலசித்த மல்லிகார்ஜூனா!”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)

    சேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மாது கூறுவள்  “மற்றொன்றுங் காண்கிலேன்;
    ஏதி   லாரும்    இனித்தரு வாரில்லை;
    போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை;
    தீது செய்வினை யேற்கென் செய?“ லென்று;

    அதற்கு அம்மையார் விடை கூறுவாராய் “அதனுக்கு வழி வேறொன்றுங் காண்கிலேன்; பிறர் எவரும் இனிக் கொடுப்பவர்களில்லை; காலமும் கழிந்து நள்ளிரவாயிற்று; மற்றும் சென்று தேடக்கூடிய பிற இடங்களும் ஒன்றுமில்லை;தீவினையேனுக்கு  இனி யென்ன செயலுளது?“ என்று சொல்லிப் பின்னரும்.

    விளக்கம்: மற்றொன்றுங் காண்கிலேன் – மற்று ஒன்றும் -என்றதனால் ஒன்று உள்ளது; அதனைத் தவிர வேறு ஒன்றும் – என்பது, அவ்வொன்று வரும்பாட்டிற் கூறுகின்றார். அவ்வொன்றினையன்றி மற்ற வழிகளாக எண்ணக்கூடியவற்றை எல்லாம் இப்பாட்டில் தனித்தனி கூறிக் கழித்து அவ்வொன்றினையே முடிபாகக் கூறும் காரணமும் காட்டிய அழகு காண்க.

    ஏதிலார் – அயலார். வேறு ஏதும் தொடர்பு இல்லாதவர். இனி – இதுவரைத் தன்னை மாறி யிருக்க உள்ள கடன்கள் தக்கனவுங் கொண்டு (446) விட்டமையின் இனிக் கடன் வாங்க இயலாமை குறித்தவாறு.

    போதும் வைகிற்று – வைகுதல் இங்கு நீட்டித்து விட்டமை குறித்தது. போது – பொழுது. அகாலமாயினமை வேறிடம் போகக்கூடாமைக்குக் காரணமாம். இடம் வேறு – இவ்வூரன்றிப் பிற ஊறினும் என்ற குறிப்புமாம்.

    தீதுசெய் வினையேற்கு என் செயல்? – தாமும் தம் நாயகரும் மனத்தில் எண்ணியபடி அடியார் பூசைக்கு அமுதமைக்க இயலாமையின், இல்லாளின் கடமையாகிய இதற்குரிய தாம் செய்த தீவினையின் பயனாகவே கருதி மனைவியார் வருந்துகிறார்.

    மேம்போக்காக இப்பாடலின் பொருள், ஓர் எளிய இல்லறத்தலைவி தம் நிலைமையைக்  கூறுதலும், வருந்துதலும் எனஅமையும்! ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால்  நம்மை வியப்பின் எல்லைக்கே  கூட்டிச் சென்று விடும்!

    ‘’பெண்ணுக்கு  ஞானத்தை வைத்தான்! – புவி
    பேணி   வளர்த்திடும் ஈசன் !’

    என்பார் மகாகவி பாரதியார்! இந்த ஞானம் மிக்க பெண்ணின் பேச்சு அவர்தம் அறிவின் எல்லையை நமக்குக்  காட்டுகிறது. இராமாயணத்தில் சீதையைக் கண்டு அவர் பேச்சிக்கு கேட்ட அனுமன் அடைந்த வியப்பை இங்கே  நினைவு கூரவேண்டும்.

    ‘’வெங்கனல் வீக்கியும்   புனலின் மூழ்கியும்
    நுங்குவ   அருந்துவ   நீக்கி  நோற்பவர்
    எங்குளர்? கற்பின்  வந்து இல்லின் மாண்புடை
    நங்கையர்  மனத்தவம்  நவிலற்பாலதோ?

    என்ற அனுமன் வாக்கிலே, கற்புடன் இல்லறம் நடத்தி அதனையே தவமாகச் செய்யும் சிறப்பு, பெண்களுடையது! என்கிறான். மேலும் கனலில் நின்றும், புனலில் நீராடியும், உண்பன, அருந்துவனவற்றை  நீக்கியும்  காட்டில்  நோற்கின்ற ஆடவர் தவம், இச்சீதையின் மனத்தவத்தின் முன் எளிதே என்கிறான்!

    கொங்கணவன் என்ற ஒரு முனிவன் தவம் செய்து கொண்டிருந்த  போது. அவன் தலைமேல் ஒரு கொக்கு எச்சமிட்டு விட்டது. சற்றே சினத்துடன் அவன் மேலே பார்த்தான்; உடனே கொக்கு எரிந்து விழுந்து விட்டது! தம் தவத்தின் வலிமை இதுவோ? என்றெண்ணிய அவன் . ஒரு வீட்டில் வந்து ‘’பவதி  பிட்சாந்தேகி!‘ என்று கேட்டான். உள்ளிருந்து, ‘’சற்றே பொறுங்கள். என்கணவனுக்குப் பணிவிடை செய்து விட்டு வந்து உணவிடுகிறேன்‘’ என்று ஓர் இல்லத்தரசி  கூறினாள். சற்றே கோபமடைந்த முனிவன், அவள்  வெளியே வந்தவுடன், அந்தக் கொக்கை நினைத்து, அப்பெண்ணை வெகுண்டு நோக்கினான்!. அந்த இல்லத்தரசியின் தவமோ இந்த முனிவனின் தவத்தை விட மேலானது. அவள் அமைதியாகக்  ‘’கொக்கென்று நினைத்தாயோ , கொங்கணவா?’’ என்றாள். முனிவன் திடுக்கிட்டான். என்னை அந்தக் கொக்கு போல் எரித்து விடலாம் என்று நினைத்தாயோ? என்ற அப்பெண்ணின் மனத்  தவம் எத்தகையது? என்று வியந்தானாம்!

    இங்கே ஏதுமறியாத மாறனார் மனைவியார் கூறிய எளிய சொற்கள் சிறந்த ஞானத்துடன் நிகழ்ந்ததை நாம் காண்கிறோம்! மாது கூறுவள் – அந்த இல்லத்தரசி கூறுகிறாள். மற்று ஒன்றும் காண்கிலேன் – இங்கு வேறெந்த அருட்செயலையும் காண்கிலேன்!  ஏதிலாரும் – வேறே எவரும் . இனித் தருவார் இலர் – நமக்கு  நற்கதி அளிப்பார் இலர்; இவரே தருவார்!  போதும் வைகிற்று – நமக்கு நற்பேறடையும் காலமும் வந்து விட்டது! போமிடம்  வேறிலை – நாம் செல்லும் இடம் கைலாயமன்றி வேறில்லை! தீது செய்  வினையேற்கு  இனி என் செயல்? ‘’நமக்கு தீமைபுரியும் வினைகள் இனி இல்லை!‘’ என்கிறாள்! ஞானத்தின் திருவுருவாக விளங்கிய அம்மையாரின் அருளுரை நம்மை வியந்து  போற்ற வைக்கிறது.

    இவ்வாறு ஞானவழியில் விளங்கிய அம்மையாரின் சொல், எளிய இல்லத்தரசி,  மனத்தவத்தால் பெற்ற  பெரு ஞானத்தை  நமக்குக்  காட்டி அவர்களின் பெருமையை  உயர்த்துகிறது. சேக்கிழார் பெருமானின் பாடல் நயம் இத்தகையது!

    Share
  • கோபால் பல்பொடி

    கோபால் பல்பொடி

    பாஸ்கர் சேஷாத்ரி

    “என்னம்மா கேஸ் இது?”

    “சின்ன பையன் சார். பல்பொடி எடுத்து தின்ன மேலே ஏறினவன் கீழே விழுந்துட்டான். பக்கத்துல்ல கை பம்ப் ஆணி வேற . கன்னத்தில குத்தி ஒரே ரத்தம்.”

    “எப்படா விழுந்தே?”

    “கார்த்தாலே சார்”

    “ஸ்கூலுக்கு போலயா?”

    “ஹால்ப் யியர்லி சார்.”

    “டாக்டர்னு சொல்லு” – சிஸ்டர்

    “ஏன்டா பத்து மணிக்கா பல் தேய்ப்பே?:

    “டாக்டர். அவன் கோபால் பல்பொடி திங்க மேல ஏறினான்”

    “என்ன க்ரூப் சிஸ்டர்?”

    “ஏ பாசிடிவ்”

    “பேரு என்ன? கோபாலா?”

    சிரிக்க முடியவில்லை. “பாஸ்கர் சார்.”

    “பேசவே முடியலே”

    “ரொம்ப வலிக்குதா?”

    “ஆமா டாக்டர்?”

    “சரி” என்று முதுகை தட்டினார்.

    “ஸ்டிச்சுங்குக்கு சொல்லு. லோக்கல் தான். டோஸ் பாத்துக்கோ.:

    “சரிங்க டாக்டர்”

    டாக்டர் எழுந்து போகும் போது தலையை கோதி விட்டு “குட் பாய்” என்றார்.

    “இதென்ன பெட் பூரா ஒரே உடச்சகடலை?”

    “அதெல்லாம் பையன் டிராயர் பாக்கெட்லேந்து கொட்டித்து டாக்டர்.”

    “ப்ரைட் பாய்.”

    “டாக்டர் இனிமே சாப்பிட முடியாதா?”

    “சாப்பிடலாம். பல்பொடி இல்லை.”

    உன் வயசுல எனக்கும் கோபால் பல்பொடி பிடிக்கும் என்றார் .

    சிரித்தேன். வலித்தது. ஆனாலும் சிரித்தேன்.

    Share
  • உய்

    உய்

    அண்ணாகண்ணன்

    எய்யப் பிறந்தாய் எழுவாய்! செயற்கரிய
    செய்யப் பிறந்தாய் செலுத்துவாய் – மெய்யமுது
    உய்யப் பிறந்தாய் உயிர்ப்பாய்! அதியுலகு
    நெய்யப் பிறந்தாய் நிகழ்த்து!

    ==============================

    Pic courtesy: https://www.maxpixel.net

    Share
  • புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்

    புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran.ta@gmail.com.

    “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக”.   (குறள் 391)

    எந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாபெறும் ஏமாற்றத்தின் மனித இயலாமையின் மொத்த வடிவமாக விளங்கி வருவது இக்குறள். மனிதனைச் சுயச்சார்போடு சமூக இணைவோடு மனித வளத்தோடு வாழ்விக்க சமூக அமைப்புகள் முயன்ற அனைத்து முயற்சிகளும் நிறைவடையாத ஓவியமாக நிற்பாதைக் காணலாம்.

    இந்தியாவில் முதல் தேசிய கல்விக் கொள்கை பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1968 இல் கொண்டு வரப்பட்டது. பிறகு இரண்டாவது தேசிய கல்விக் கொள்கை பிரதமர் ராஜிவ் காந்தி ஆட்சியில் நீண்ட போராட்டங்களுக்குப் பின் 1986 இல் கொண்டு வரப்பட்டது. பின்னர் நரசிம்மராவ் காலத்தில் 1992 இல் பல திருத்தங்கள் செய்யப்பட்டது. உலக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த 1990க்கு பிறகு இந்தியாவிலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது. உலகமயம். தனியார்மயம், தாராளமயம், என்ற கொள்கை உலகத்தின் அமைப்பு முறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தியது. கல்வி சேவைத் துறையில் இருந்து வணிகத் துறைக்குத் தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கியது. இதன் பிறகு பெரும் பாய்ச்சலாக இந்தியா முழுவதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும் மூலதனத்தில் கல்வியை வழங்க முற்பட்டன. பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பரவலாக்கப்பட்டது. அரசு தனது கல்விப் பணியின் பங்களிப்பைக் குறைத்துக் கொண்டு தனியாரின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தியது. உயர் கல்வியின் கட்டுப்பாடுகள் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டன. பாடத்திட்டம் தயாரித்தல், தேர்வு நடத்துதல், பட்டம் வழங்குதல், கல்லூரிக்கு அனுமதி வழங்குதல் என்று தனது செயல்பாட்டின் மூலம் பொருளாதாரப் பலத்தைப் பெற்றுக் கொண்டது. இது மாபெரும் ஊழலுக்கு வித்திட்டது. பல்கலைக்கழகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்றம் பெற்றன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பொறியியல், கலை அறிவியல், மருத்துவம் ஆகியவை தனியாரின் உள்ளங்கைக்குள் சென்று விட்டன. பெரும் லாபம் ஈட்டும் தொழிலாகக் கல்வி மாற்றப்பட்டது. கல்வியின் செயல்பாடு பரவலாக்கப்பட்டதோடு எளிமையாக்கபட்டது.

    அந்த வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையின் எதிர்ப்பார்ப்புகளும் செயல்பாடுகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இஸ்ரோவின் தலைவராக இருந்த கே. கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டவை ராமர் கோவிலும் புதிய கல்விக் கொள்கையும் தான்.

    இந்தத் தேர்தல் அறிக்கை பல ஜனநாயகவாதிகளைத் தூங்க விடாமல் தவிக்கச் செய்தது. அவர்களின் கனவில் சமஸ்கிருத அசுரனின் வடிவம் பயத்தை உருவாக்கி வந்தது. அவர்களின் ஓயாத ஓலத்தின் மூலம் இன்று மும்மொழிக் கொள்கை சற்று ஆசுவாசத்தை அனைவருக்கும் அளித்துள்ளது. மேலும் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவமும் பேணப்பட்டுள்ளது. இம் மாறுபாடுகள் உலகலாவிய சிந்தனையின் தாக்கத்தில் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.

    பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சியில் அமைச்சரவை செயலராக இருந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இப்புதிய தேசிய கல்விக் கொள்கை இன்று (29.07.2020) நடைமுறைக்கு வந்துள்ளது.

    • நடைமுறையில் இருந்து வரும் 10 +2 என்ற முறை மாற்றப்பட்டு  5+ 3 + 3 + 4 என்ற அமைப்பைப் பெறுகிறது.
    • 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
    • 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படுகிறது. தற்போது 3 1/2 வயது இருந்து வருகிறது.
    • 6 ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை மற்றும் தொழிற் பயிற்சி பாடங்கள்.
    • 8 ஆம் வகுப்பு வரையிருந்த கட்டாயக் கல்வி 12 ஆம் வகுப்பு வரை மாற்றப்பட்டுள்ளது.
    • இணைவுப் பெற்ற கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகவும் பிறகு பல்கலைக்கழகமாகவும் மாற்றப்படும்.
    • ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியியல் B.Ed படிப்பு வழங்கப்படும். (B.A, B.Ed ., B.Sc,B.Ed).
    • உயர் கல்வியில் மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் ஓரிரு ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு கல்வியைத் தொடரலாம்.
    • மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும். (NTA)
    • உயர் கல்வியில் சேருவோரின் சதவீதம் 26.3% யில் இருந்து 50% ஆக 2035 ஆம் ஆண்டுக்குள் உயர்த்துதல்.
    • நாட்டின் மொத்த உற்பத்தியில் 6% கல்வி நிதி ஒதுக்குதல்.
    • சிறப்பு கல்வி மண்டலங்கள்
    • எம் ஃபில் படிப்பு நிறுத்தம்
    • வெளிநாடுகளில் இந்தியக் கல்வி நிறுவனங்களின் கல்வி வளாகங்களைத் தொடங்குதல்.
    • IIT,IIM போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக பல்துறை மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள் (MERU) அமைக்கப்படும்.

    மேலும் இவற்றை நடைமுறைப்படுத்த பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை,

    • ஒற்றை ஒழுங்கு முறை ஆணையம்
    • தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (கல்வி வளர்ச்சி)
    • மாதிரி பொது பல்கலைக்கழகம்
    • சர்வதேச மாணவர் அலுவலகம்
    • மத்திய கல்வி அமைச்சகம்
    • இந்திய உயர் கல்வி கவுன்சில் (மாணவர் சேர்க்கை)
    • தேசிய தேர்வுகள் முகமை (NTA) (நுழைவுத் தேர்வு)

    இவ்வாறு 2019 ஆம் ஆண்டு பொது மக்களின் கருத்துக் கேட்பு பொது தளத்தில் 2 லட்சம் கருத்துக்கள் பெறப்பட்டன. (குறிப்பாக மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படும் செயல்பாடு பற்றி) இப்போது பல மாறுதல்களுடன் இக்கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது சுட்டுரையில் ” நீண்ட நாட்களாக மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, லட்சக்கணக்கானோரின வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். கல்வி நமது தேசத்தை ஒளி நிறைந்ததாகவும் வளம் மிகுந்ததாகவும் மாற்றட்டும். புரியன கற்றல், புதிய ஆராய்ச்சி. புதுமை கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த சகாப்தத்தில் புதிய கல்விக் கொள்கை, இந்தியாவை அறிவுசார் மையமாக மாற்றும்” என்று கூறியுள்ளார்.

    நரேந்திர மோடி அவர்களின் சிந்தனை எதிர்ப்பார்ப்பும் வள்ளுவரின் சிந்தனை எதிர்ப்பார்ப்பும் நீண்ட நெடிய கனவு நிலைகளாக மட்டுமே இருப்பதை மனித சமூக வாழ்வியல் யதார்த்தம் நமக்கு உணர்த்த தவறுவதில்லை. சமூகத்தில் மனித ஏற்றத்தாழ்வுகள் மிகவும் நிரப்பமுடியாத இடைவெளியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் இக்கல்விக் கொள்கை எந்த வகை மாற்றங்களை உருவாக்கும் என்று ஆழமாகச் சிந்திக்க வேண்டியத் தேவை  ஏற்படுகிறது. 1986 யில் உருவாக்கப்பட்ட நோக்கம் மேட்டுக்குடி மக்களின் கனவுகளுக்கு அடிப்படையாகவும் பரந்த உழைக்கும் மக்களுக்கு  ஏமாற்றமாகவும் அமைந்ததைப் போல இக்கல்விக் கொள்கை மாறாமல் இருக்க சில கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மூன்று வயதில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புதல் என்பது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய செயலாக உள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சுமையில் இருந்து விடுபடுவதாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் கீழ் நடுத்தர வர்க்கம், உழைக்கும் மக்கள் இதனைச் செயல்படுத்துவது என்பது நடைமுறை சிக்கல்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணரலாம். மூன்று வயதில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் அடிப்படை கட்டமைப்பு இந்திய கிராமச் சமுகத்தில் பெரும்பாலும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

    மாணவர்களுக்கு காலை உணவும் மதிய உணவும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது சிறந்ததாகும். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல் சொல்லி மாளாது. உணவு தரமாகவும், உரிய நேரத்தில் வழங்கப்படுதலும், உணவு பரிமாறுதலில் கவனமும் மிகவும் உளவியல் சார்ந்த கூறுகளைக் கொண்டது. இளம் சிறார்களின் மன வளத்தைப் பாதிக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இக் கல்வி முறை நோய்க்கூறு கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கி விடும் ஆபத்து இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு NCERT க்கு வழங்கப்பட்டுள்ளது. NCERT உருவாக்கும் பாடத்திட்டம் உலகிலேயே சிறந்த அறிவார்ந்த பாடத்திட்டமாகவே இருந்தாலும் சமூக பொருளாதார சாதிய மத ஏற்றத்தாழ்வுகள் கொண்ட மேடு பள்ளமான ஒரு சமூகத்தில் இது சமமான விளைவை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை. அது மட்டுமல்லாமல் இது அறிவு ஏற்றத் தாழ்வை மேலும் அதிகரிக்க உதவுமே அல்லாமல் சமச்சீர் வளர்ச்சிக்கு வித்திடாது. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பது பல முன் தயாரிப்புகளை எதிர்நோக்கி இருக்கிறது. முதலில் சமூக பொருளாதார ரீதியில் ஒரு பொது நிலை சமூகத்தை நாம் உருவாக்கியிருந்தால் இது போன்ற ஒற்றைத்தன்மை கல்வி முறை பலன் தரக்கூடியதாக இருக்கும். ஆனால் உச்ச வளர்ச்சியும் உச்ச வீழ்ச்சியும் கொண்ட எதிர் எதிர் துருவங்கள் அமைந்துள்ள சமூகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பாடத்திட்டம் ஒருவருக்கு வரப்பிரசாதமாகவும் மற்றவர்களுக்குச் சாபமாகவும் அமைந்துவிடக் கூடும்.

    அரசியல் சமூக பொருளாதார சாதிய மத ஏற்றத்தாழ்கள் சிக்கல்கள் கவனத்தில் கொள்ளப்படாத எந்தப் புதிய கல்விக் கொள்கையும் ஒட்டு மொத்த சமச்சீரான சமூக அறிவுசார் வளர்ச்சிக்கு வித்திட வாய்ப்பே இல்லை. 2020 ஆம் ஆண்டோ, 2047 இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டோ வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாத ஒரே எதிர்ப்பார்ப்பை முன்வைக்கக் கூடிய விளைவையே ஏற்படுத்தக் கூடும்.

    இன்னும் ஐம்பது ஆண்டுகள் சென்ற பிறகும் வள்ளுவனைத் தாண்ட முடியாத சமூகமாகத் தான் நாம் “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” (குறள் 391) என்று சொல்லிக் கொண்டிருக்க மட்டுமே அதிக வாய்ப்புள்ளது.

    Share
  • ‘விதிமீறல்’ – ஒரு விளக்கம்

    ‘விதிமீறல்’ – ஒரு விளக்கம்

    ச.சுப்பிரமணியன்

    (தொல்காப்பிய விதி நெறி பற்றிய ஆய்வுப் பார்வை)

    முன்னுரை

    ‘காரண காரிய தொடர்ச்சி’ என்பது பழந்தமிழ் உரைகளில் காணப்படும் ஒரு தொடர். ஒன்றுக்குக் காரணமாக இருப்பது மற்றொன்றின் காரியமாக இருக்கும். அதே காரியம் வேறொன்று தோன்றுவதற்குக் காரணமாயிருக்கும். இது இரண்டு பொருள்களுக்குள்ளே சுழற்சி முறையில் நிகழ்வதும் உண்டு. மேகம் மழையாகிக் கடல் நீராகும். கடல் நீர் ஆவியாகி மேகமாகும். இந்தக் காரண காரிய தொடர்ச்சி இருபொருளுக்குள்ளேயே அமைந்துவிடும். பால் தயிராகும்., மோராகும்., வெண்ணெயாகும்., நெய்யாகும். ஆனால் நெய் அவைபோல மீளுருவம் அடைய இயலாது. ஆய்வு என்பதும் இவ்வாறு பல நிலைகளைக் கொண்ட ஒருவழிப் பாதையே. அந்தமில்லாமல் நீண்டு கொண்டே செல்வதுதான் அதற்குப் பெருமை. அதனால்தான் ஆய்வினைத் ‘தொடரோட்டம்’ என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அண்மையில் ‘கடிதொடர் இல்லை:  தற்காலத் தொடரிலக்கண மீறல்களும் காரணங்களும்’ என்னுந் தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் திரு.தி.மோகன்ராஜ் என்பார் எழுதிய கட்டுரையொன்று வல்லமையில் வெளியாகியிருந்தது. அக்கட்டுரையைப் பலமுறை நோக்கியுணர்ந்து ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. ஆய்வாளரின் அந்தக் கட்டுரையின் கையைப் பிடித்துக் கொண்டு இந்தக் கட்டுரை நடைபயில்கிறது.

    பின்னூட்டம் போதாதா?

    மேற்கண்ட கட்டுரை பற்றிய நம்முடைய கருத்துக்களைத் தொடக்கத்தில் பின்னூட்டமாகவே பதிவு செய்துவிடலாமென எண்ணியிருந்தோம். கருத்துக்கள், எடுத்துக்காட்டுக்கள் ஆகியவற்றை வகைப்படுத்துவதில் பின்னூட்டம் அவ்வளவாகப் பயன்தராது பின்னூட்டத்தில் குறைநிறைகளைச் சுட்டுகிறபோது போதிய தெளிவு அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. அதனால் இந்தத் தனிக்கட்டுரை. இந்தக் கட்டுரைக்குக் காரணமானது அந்தக் கட்டுரை. அதற்குரிய பாராட்டுக்களை முதலில் சொல்லி நம் கருத்துக்களைப் பின்னர்ப் பதிவு செய்யலாம். இது வயதில் மூத்தவன் (75) என்ற முறையில் நம் கடமையாகும்.

    • இந்தத் தலைமுறை ஆய்வாளர் ஒருவர் பழந்தமிழ் இலக்கணத் துறையைத் தமது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்த பெருந்துணிச்சலை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.
    • எண்பொருளவாகச் செலச்சொல்லிஎன்பார் வள்ளுவர். கடினமான பொருளை எளிய சொற்களால் வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அரிய சான்றாக அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.
    • பால்காட்டாது என்னும் முன்னிலை விகுதிகளுக்கு மாற்றாகப் பொருத்தமான வழக்குச் சொற்களைத் தேடித் தொகுத்திருக்கும் ஆய்வுழைப்பு போற்றத்தகுந்தது.
    • பத்திகளில் நிரல்பட ஆய்ந்த பொருண்மைகளை எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது ஆய்வு நெறியில் ஆய்வாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    மறுப்புரையன்று

    இளம் ஆய்வாளர்களை ஊக்கப்படுத்துவதுதான் நம்முடைய நோக்கம். மாணவப் பருவத்தலிருந்தே விவாதங்களில் நமக்கு நம்பிக்கை கிடையாது. எதிலிருந்தும் ஏதாவது பெறமுடியும் என்பதே நம் நிலைப்பாடு. ‘பால்காட்டாத சில வினைகள் மக்கள் வழக்கில் தற்போது  பால்காட்டுகின்றன’ என்னும் ஒருவரிக் கருதுகோளை அடிப்படையாக வைத்து ஆய்வாளர் படைத்திருக்கும் ஆய்வுக்கட்டுரையின் பொருண்மையில் நமக்கு மாறுபாடு இல்லை. அதற்கான உரிமையும் எனக்கில்லை. அது அவரைச் சார்ந்தது. அவருக்குரியது. தரவுகளைக் கருதுகோளோடு பொருத்திக்காட்டுவதும் விளக்கமளிப்பதும் அவர் பணியே. முன் மதிப்பீடு என்பது பெரும்பாலும் கட்டுரையின் புறக்கட்டுமானத்தைப பற்றியதேயாதலின் அதுபற்றியும் நாம் ஏதும் சொல்வதற்கில்லை. எனவே ஆய்வுக்கான கருதுகோள், ஏற்ற தரவுகள், அவற்றுக்கான விளக்கம், பொருண்மை தொடர்பான முந்தைய ஆய்வுக் கருத்துக்கள், தொடர் விவாதம், முடிவு என்பன யாவும் ஆய்வாளரின் தனியுடைமை. எனவே இவைபற்றிய எதிலும் நம் கருத்துக்கு இடமேயில்லை.

    இந்தக் கட்டுரையின் இப்போதைய தேவை

    மேற்படிக் கட்டுரையின் தலைப்பில் காணப்படும் ‘விதிமீறல்’ என்னும் சொல்லே இக்கட்டுரைக்குத் தலைத்தூண்டுதலாகும்.  இரண்டு. அவர் காட்டியிருக்கும் செயற்கையான எடுத்துக்காட்டு. மூன்றாவது வடமொழிப் பயன்பாடு. இந்த மூன்றும் ஆய்வாளர் எழுதியிருக்கும் கட்டுரைப் பொருண்மை பற்றியதன்று என்பது தெளிவாகும். ஆய்வின் அணுகுமுறையில் அளவுக்கு மீறிய தெளிவு வேண்டும். எடுத்துக்காட்டுக்களில் மயக்கம் நிலவக்கூடாது. பழந்தமிழ் இலக்கணம் மற்றும் மக்கள் வழக்காற்றியல் பற்றிய கட்டுரையொன்றில் தேவையற்ற நிலையில் வடமொழிப் பயன்பாடு ஏற்கத்தக்கதன்று. ஆய்வுப் பொருண்மையின் ஆழத்தையும் வெளிப்பாட்டுச் சிறப்பினையும் பாதிக்கின்ற அல்லது எள்ளளவும் கட்டுரைக்குப் பெருமை சேர்க்க இயலாத ‘சரிகைச் சொற்கள்’ ஆய்வுக்கட்டுரைகளில் இடம் பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அல்நெறி களைந்து நன்னெறி காட்டுவது நெறியாளர்கள் கடமை. இந்த நம் கொள்கைகளைத் தமிழியல் ஆய்வு நலம் கருதிப் பொதுவெளியில் பதிவிட வேண்டும் என்னும் நம் துடிப்பே இந்தக் கட்டுரைக்குக் காரணமாகும். எனவே அக்கட்டுரைக்கு இந்தக் கட்டுரையை ஒரு பின்னிணைப்பாகக் கொள்ளலாமேயன்றி எந்த நிலையிலும் மறுப்பாகக் கொள்ளுதல் வேண்டா என வேண்டப்படுகிறது. 

    மக்கள் மொழிக்குத்தான் நூலிலக்கணம்

    மொழி என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மக்களுக்குப் பகிரப்படும் பொருள்களில் ஒன்றன்று. அது ஒரு இனத்தின் பண்பாட்டுக் கூறு. ‘தமிழ்’ என்ற சொல் மொழியைக் குறிக்கும் போது ஒரு இனத்தின் அடையாளமாக அதாவது அவ்வினத்தின் நாகரிகம், பண்பாடு, கலை, வரலாறு ஆகியவற்றின் அடையாளமாகத்தான் கருதப்படும். தமிழ் பேசுவதால் ஒருவன் தமிழனாக முடியாது. தமிழன் பேசுவதால்தான் அது தமிழ். அதனால் அம்மொழியிலக்கணமும் அவர்தம் வாழ்வியலில் பயன்படுத்திய மொழிக் கூறுகளை ஆராய்வதாகத்தான் இருக்க முடியும்.   ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ என்னும் தொடரில் ‘வழக்கு’ என்பது நடப்பியல். ‘செய்யுள்’ என்பது தொல்காப்பியருக்கு முன்னிருந்த வழக்காறு உள்ளிட்ட செய்யுளும். இருந்தவற்றைக் கொண்டு இலக்கணம் செய்த தொல்காப்பியர் சமகாலச் சமுதாயத்தில் காணப்படும் மாற்றங்களையும் பதிவு செய்திருக்கிறார். எதிர்கால நோக்கோடு செய்யப்பட்டனவையே புறனடை. சுருக்கமாகச் சொன்னால் இருந்த நிலை அறிந்து இருக்கின்ற நிலையைச் சுட்டி எதிர்வரும் நிலையை அனுமானிப்பதுதான் இலக்கணம். ‘மக்கட் பெருங்கடல்’ நாளும் பயன்படுத்தும் சொற்களை நோக்க இப்பணி முற்றுப்பெற இயலாத பணி. ஆனால் அரிய பணி. ஒரு மொழியில் எல்லாக் காலத்திலும் நிலவிய அனைத்துக் கூறுகளையும் ஒரு வரையறுக்கப்பட்ட இலக்கணம் ஆராய்ந்துவிட முடியும் என எண்ணுவது நெறியன்று. வழிநூல் தோன்றுவதற்கு அதுதான் காரணம். இந்த அடிப்படையில் தொல்காப்பியத்தில் காணப்படும் விதிகளுக்கு மூலம் மக்கள் வழக்கே என்பதற்கான சில சான்றுகளைப் பின்வரும் பத்திகளில் காணலாம்.

    “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
    செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
    முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
    புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்”

    என்னும் நூற்பாவை நோக்கினால்,

    1. செந்தமிழ் நாட்டு மக்கள் வழக்கொடு ஆராய்ந்தார்
    2. முன்னோர் செய்த நூல்களை ஆராய்ந்தார்
    3. முறைப்பட முரணாகா வகையில் சிந்தித்தார்
    4. புலமைத் திறத்தோடு ஆராய்ந்தார்
    5. பிறர் குறை கூறா வண்ணம் கட்டமைப்புச் செய்தார்.

    என்னும் தொல்காப்பியர் இலக்கணம் செய்த நெறிமுறைகளை அறிந்து கொள்ள இயலும். ‘செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்’ என்னும் தொடர் சிந்தனைக்குரியது. தமிழின் நிலைத்தன்மைக்கு அதுதான் தலையாய காரணம். எல்லா மொழிக்கும் இது பொது. மொழியின் அழிவுக்கு அல்லது மறைவுக்கு மக்கள் நடப்பியல் பயன்பாடு குறைவே காரணமாகும். எந்தப் பொருளும் புழங்கினால்தான் துரு பிடிக்காது. அம்மியிலிருந்து ஆட்டாங்கல்வரை இதுதான் நிலை!

    குரங்கு குற்றியலுகரமா?

    ‘குடகு’, ‘குரங்கு’ என்னும் சொற்களின் ஈறு உகரம் குறைந்தொலிப்பதால் குற்றியலுகரம் என இலக்கணம் சொல்லுவதாகக் கருதுவது பிழை. மக்கள் அப்படி அந்தச் சொற்களை உச்சரிக்கிறார்கள்.

    “நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
    குற்றிய லுகரம் வல்லாறு ஊர்ந்தே”

    எனத் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார் என்பதற்காக மக்கள் பேசவில்லை. அவர்கள் அந்தச் சொற்களில் மொழிமுதல் ககர உகரத்தை முழுமையாகவும் மொழியிறுதி உகரத்தைக் குறைந்தும் (குறைத்து அல்ல)   உச்சரிக்கிறார்கள். ‘புணர்மொழியிடை இன்னும் குறுகுவதற்கும்’ மக்கள் வழக்கே காரணம். இவற்றை நுட்பமாக நோக்கி இலக்கணம் செய்ததுதான் தொல்காப்பியரின் அரும்பணி. இது அரும்பணி என்பதாலேயே அவர் மக்களுக்கு இலக்கண விதிகளைப் போதித்தார் எனக் கருதலாகாது.

    நெடிலுக்கு மாத்திரை இரண்டா?

    மாத்திரை பற்றி இலக்கணம் என்ன சொல்லியது? நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்று சொல்லியது. ஆனால் உண்மை நிலை என்ன? ‘ஐ’ என்னும் உயிர்நெடில் மெய்யோடு கலந்து ஒலிக்கின்ற நிலை உட்பட எந்த நிலையிலும் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கப்படவில்லை. அப்படி இரண்டு மாத்திரையளவு ஒலிக்கப்படும் சொல் தமிழ்மொழியிலேயே இல்லை. ‘நெடிலுக்கு இரண்டு மாத்திரை’ என்று எழுதியதற்கு மக்கள் வழக்கு தெரியாமற் போனதும் ஏனைய நெட்டெழுத்துக்களின் மாத்திரை ஒப்புமை நோக்கியதுமே காரணம் எனலாம். வழக்கறிந்த நிலையில் வரையப்பட்ட இலக்கணம்தான்,

    “ஓரள பாகும் இடனுமா ருண்டே
    தேருங் காலை மொழிவயினான” (எழுத்து – 57).

    ‘ஐப்பசி’ ‘கைப்பை’ ‘இடையன்’ ‘குவளை’ என்னும் சொற்களில் எல்லாம் ஐகாரம் முழுமையாகப் ஒலிக்கப்படுவதில்லை என்ற வழக்கினை அறிந்தவுடன் ‘நெடில் இரண்டு மாத்திரை’ என்னும் விதி தளர்ச்சியடைந்து விடுவதை அறிதல் வேண்டும். அது மட்டுமன்று ‘கை, பை’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிகள் இரண்டு மாத்திரையினின்றும் குறுகி ஒலிக்கும் என்னும் வழக்குண்மையைத் ‘தேருங்காலை என்னும் மிகையினால் உரையாசிரியர்கள் தழுவிக் கொள்கிறார்கள் என்பதையும் அறிதல் வேண்டும். குற்றியலுகர இலக்கணம் முழுமையுமே வழக்கை நோக்கித்தான் அமைந்திருக்கிறது. ‘குடகு’ என்ற சொல்லில் அமைந்துள்ள இரண்டு உகரங்களை வெவ்வேறு அளவினவாக உச்சரிப்பது மக்கள் வழக்கே தவிர தொல்காப்பியத்தின் விதியைப் பின்பற்றி அல்ல.

    வழக்குக்கு வாழ்க்கைப் பட்ட தொல்காப்பியம்

    ‘மரப்பெயர்’ப் புணர்ச்சியில் வருமொழியோடு இணையுங்கால் ‘அம்முச்’ சாரியை பெறும் என்பது விதி. ஆனால் மக்கள் ‘அம்’ என்பதைத் தனித்து உச்சரிப்பதில்லை. ‘புளி அம் கோடு’ என்னாது ‘புளியங்கோடு’ என்றுதான் சொல்லுகிறார்கள். ‘அம்’ மின் ஈறு மகரமாக இருப்பினும் அது திரியும் என்பது வழக்கு. ஒரே வகையான புணர்ச்சிக்கு எத்தனை வகையான திரிபு என்பதை அறிந்து கொண்டால் மொழியிலக்கணத்தில வழக்கின் ஆதிக்கம் புரியக் கூடும்.

    “அம்மின் இறுதி கசதக் காலை
    தன்மெய் திரிந்து ஙஞந ஆகும்” (எழுத்து – 129)

    புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல் (மக்கள் வழக்கு) நுட்பமாகச் சொன்னால் ‘புளியங்கோடு’ என்னும் சொல் வழக்கு. தொல்காப்பியம் கண்டறிந்த சொல் அன்று. அந்த வழக்குச் சொல்லை ஆராய்ந்த தொல்காப்பியம் அதில் இரண்டு பெயர்ச்சொற்களை ஒரு சாரியை இணைக்கிறது என்பதையும் அச்சாரியை வருமொழி எழுத்திற்கேற்பத் திரியும் (இன எழுத்தாக மாறும்) என்பதைக் கண்டறிந்து கூறுகிறார். இங்கேயும் அவர் மக்கள் வழக்குக்குத்தான் முன்னுரிமை தருகிறார்.

    எய்தியது விலக்கல் ஏன்?

    அளவுப்பெயர்கள் ஏகாரச் சாரியைப் பெற்று முடியும் எனக் கூறும் தொல்காப்பியம் “உயிரும் புள்ளியும் இறுதியாகி அரையென வரூஉம்” (164) என்னும் நூற்பாவில் சாரியை இல்லாத சொற்களைப் (உழக்கரை, செவிட்டரை) பட்டியலிடுகிறது.

    வளமோடு வாழ்வது சரியா?

    மகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபு ஏற்குங்கால் சாரியை பெறும் என்பது விதியன்று, மக்கள் வழக்கு. வழக்கு நோக்கிய தொல்காப்பிய விதி. முறத்தில் அரிசி பொறுக்கும் பாட்டிகள் உண்டு. முகத்தில் முகம் பார்க்கும் கன்னிகள் உண்டு. மரத்தில் ஏறிப் பழத்தைப் பறித்தவர்கள் உண்டு. இத்தனைச் சொற்களையும் கண்ட தொல்காப்பியம்

    “மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை” (185)

    என விதி செய்கிறது. ஆனால் இங்கே நடப்பது என்ன? நாம் படித்தவர்கள். முனைவர்ப் பட்டம் பெற்றவர்கள். ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறவர்கள். கல்வி நிலையங்களில் பேராசிரியர்கள். என்ன செய்கிறோம்! இந்த வழக்கை மறுதலிக்கிறோம் “அளவோடு பெற்று வளமோடு வாழ்கிறோம்”. ‘வளத்தோடு’ என்பதுதான் வழக்கு என்பதைக்கூட நாம் தெரிந்தே மறுதலிக்கிறோமே? இதனால் ஒரு பண்பாட்டுக்கூறு சிதலமடைவது தெரியவில்லையா? ஒரு மாணவன் மரமில் ஏறிப் பழமைப் பறித்தேன் என்று எழுதினால் அதனை ஏற்றுக் கொள்வார்களா? இது விதிமீறலா இல்லையா? திட்டமிட்ட மீறல்! மொழியழிக்கும் சதி!. ஒரு நூலின் இலக்கண விதி மக்கள் வழக்கில் இயல்பாக மாறி வழங்குவதை விதிமீறல் என்றால் ஒட்டுமொத்த சமுதாயத்தையே மறுதலிக்கும் இச்செயலை என்னவென்பது?

    வழக்கோடு போராடித் தோற்கும் இலக்கணம்

    ‘பல’, ‘சில’ என்னும் சொற்கள் தமக்குள் புணருமாயின் லகரம் றகரமாகத் திரிந்து புணரும் என்று விதிசெய்கிறது தொல்காப்பியம்,

    “தொடரல் இறுதி தம்முன் தாம் வரின்
    லகரம் றகர ஒற்று ஆகலும் உரித்தே” (எழுத்து – 214)

    ‘பற்பல’, ‘சிற்சில’ எனப் புணரும் என விதித்த அந்த விதி அடுத்த சில நொடிகளில் மாற்றம் பெறுகிறது. காரணம் வழக்கு வேறுமாதிரியாகவும் அமைந்து விடுகிறது. எப்படி அமைந்து விடுகிறது?. ‘பலப்பல, சிலச்சில’ என அமைந்தவுடன் தொல்காப்பியம் இலக்கணவிதியின் பரப்பளவை இன்னும் விரிவு செய்து கொள்கிறது.

    “வல்லெழுத்தியற்கை உறழத் தோன்றும்” (எழுத்து – 215)

    என்று எழுதுகிறது. அதனை எழுதிய பிறகும் அதாவது மக்கள் வழக்கின் பெரும்பரப்பின் எல்லை கண்ணுக்குத் தெரியவில்லை. பலபல, சிலசில, பல்பல, சில்சில எனவும் வழங்கப்படுவது அறிந்த நச்சினார்க்கினியர் என்ன செய்கிறார். தொல்காப்பிய விதிகளுக்குள் அடைத்து அதற்குப் பெருமை சேர்க்க எண்ணுகிறார். எண்ணி என்ன செய்கிறார்? மிகையினால் தழுவிக் கொள்கிறார்!. மேலும் பல் என்னும் சொல் புணர்ச்சியில் ‘பன்’ எனத் திரிவதையும் ஆய்தமாக மாறுவதையும் இதற்கெல்லாம் தொல்காப்பியத்தில் விதி இல்லை எனத் தெரிந்து கொண்டு இப்படி எழுதுகிறார்.

    “இயற்கை என்றதனான் அகரம் கெடத் திரிந்தும் திரியாதும் உறழ்ந்து முடிதலும் கொள்க. தோன்றும் என்றதனான் அகரம் கெட லகரம் மெல்லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்துமுடிதலும் கொள்க”

    ஐந்து வகையான வழக்குகளுக்கு ஒரு வழக்கிற்குத்தான் ‘தீர்ப்பு’ எழுதப்படுகிறது. மற்றவற்றை உரையாசிரியர் மிகையில் அடக்குகின்ற முயற்சிதான் தொல்காப்பியத்தில் நடந்தேறியிருக்கிறது. மக்கள் விதியை மீறியிருக்கிறார்கள் என்றால் எந்த இடத்தில் மீறியிருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமல்லவா?

    ‘மகவின்கை, மகவின் செவி’ என்பன போன்ற சொற்களைக் கண்டு, ‘மகப் பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை’ (218) என விதி செய்த தொல்காப்பியம் அது அத்துச் சாரியைப் பெற்றும் முடியலாம் என்பதைக் கண்டவுடன் அடுத்த நூற்பாவிலேயே “அத்தவண் வரினும் வரைநிலை இன்றே” (219) என வழக்குக்கு வளைந்து வழிகொடுப்பதைக் காணலாம்.

    ‘ஒன்பது’ என்ற எண்ணுப்பெயர் ‘நூறு’ என்னும் எண்ணுப்பெயரோடு இணைகிறபோது ‘தொள்ளாயிரம்’ என வழங்கப்படுவது மக்கள் வழக்கு. ‘நூறின் மடங்கு எப்படி ஆயிரம் ஆனது?’ என்னும் வினா எழுவது சரியே. இன்றைக்கும் மக்கள் வழக்கில் ஒன்றினைக் காணமுடியும். ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மேல் சென்றால் அதனை முழுமையாகச் சொல்லாமல் அதனை முன்னிறுத்திச் சில்லரையைச் ‘சொச்சம்’ என்பர். சான்றாக ஆயிரத்து இருபது (1020) என்றால் அதனை முழுமையாகச் சொல்லாமல் ‘ஆயிரத்துச் சொச்சம்’ என்பர். இந்த அளவு ஆயிரத்துக்குக் குறைவாக அமையுமானால் அப்போது ‘இருபது குறைய ஆயிரம்’ என்பார்களே தவிர ‘தொள்ளாயிரத்து எண்பது’ எனச் சொல்வது வழக்கன்று.

    “மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தும்
    இரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது” 103

    முதலிய நூற்பாக்களால் தொல்காப்பியமே மக்கள் வழக்காகிய இதனைப் பின்பற்றியிருக்கிறது. இந்த நெறியைப் பின்பற்றித்தான் ஆயிரத்துக்கு நூறு குறைவாக இருக்கிறபோது அதனை ‘ஒன்பது நூறு’ என வழங்காமல் தொள்ளாயிரம் என வழங்கியிருக்க வேண்டும். இது அனுமானமே. ஆனால் தொல்காப்பியம் என்ன விதி சொல்கிறது தெரியுமா?

    “ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்றே
    முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்
    நூறென் கிளவி நகாரம் மெய்கெட
    ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப!
    ஆயிடை வருதல் இகர ரகாரம்
    ஈறு மெய்கெடுத்து மகரம் ஒற்றும்”

    இல்லாத ஊருக்குப் போகாத பாதையைத்தான் தொல்காப்பியம் காட்டுவதாகக் கட்டுரையாளர் உணர்கிறார்.

    1. ‘ஒ’ ‘தொ’ ஆகும் (ஆகுமா?)
    2. ‘ன்’ ள் ஆகி இரட்டும் (எப்படி இரட்டும்?)
    3. நூறு என்பதிலுள்ள நகரம் கெடும் (ஏன் கெடவேண்டும்)?
    4. ‘ஊ’” (நூ) ஆ ஆகும். எப்படி ஆகும்?
    5. ‘இ’ ரகாரம் ஆகுமாம். எப்படி?

    மக்கள் வழக்கு என்பது கடல். இலக்கண வரையறை என்பது கரை. கடல்தான் கரையுடைக்குமேயன்றிக் கரை கடலை ஒன்றும் செய்ய இயலாது. எல்லா வழக்குச் சொற்களுக்கும் இலக்கணம் கூறிவிடலாம் என எண்ணியதன் விளைவாகக் கூட இந்த நூற்பா அமைந்திருக்கலாம். ஏனைய எண்ணுப்பெயர் புணர்ச்சிகளை நிரலாகக் கூறி வந்த தொல்காப்பியம் தொள்ளாயிரத்தைப் புறனடையில் அடக்கியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்காது. அவ்வாறின்றி விளக்கமுறை இலக்கணம் கூறியது அவ்வளவு சரியானதன்று என்பது போல அறிஞர் தமிழண்ணல் இந்த நூற்பாவிற்குச் “சுற்றி வளைத்து விதி கூற வேண்டியதில்லை” என எழுதுகிறார். இந்தச் சான்றிலிருந்து தொல்காப்பியத்தை விஞ்சியது தழிழர்களின் பண்பாட்டு வழக்கு என்பது பெறப்படும். மொழியின் கட்டமைப்புக்கு (புலனெறி வழக்கத்தின் அடிப்படையில்) முறையான இலக்கணம் கூறி வழிநடத்திய தொல்காப்பியம் வழக்குச் சொற்களுக்கு இலக்கண விதிகளை வகுப்பதில் மாபெரும் வெற்றியடைந்ததாகக் கூறமுடியாது.

    குற்றியலுகரச் சிறப்புப் பெயர்களில் உகரம் கெடாமை

    விதிமீறல்களுக்கான எடுத்துக்காட்டொன்றில் உடம்படுமெய் பெறுவதற்குப் பொதுப்பெயர், விரவுப்பெயர் என்னும் நிலைப்பாட்டைக் கட்டுரையாளர் சுட்டுவது தெளிவுறவில்லை. வல்லினம் மிகுவதற்கும் மிகாமைக்கும், உடம்படுமெய் பெறுவதற்கும் பெறாமைக்கும் எந்தவிதியில் விரவுப்பெயர், பொதுப்பெயர் என்பன அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டுரையாளர் சுட்டியிருக்க வேண்டும். இனி,

    “நான் முத்தை வாங்கினேன் / நான் முத்துவைப் பார்த்தேன்.”

    என்னும் எடுத்துக்காட்டால் ஒன்று பொதுப்பெயர் என்றும் மற்றொன்று சிறப்புப்பெயர் என்பதும் சற்றும் பொருந்தாது. இரண்டு காரணங்கள். ஒன்று, உடம்படுமெய் தோன்றுவதற்குப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் என்னும் வரையறை இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்த எடுத்துக்காட்டில் உள்ள இரண்டு முத்துக்களுமே குற்றியலுகரமே!. முத்தை வாங்கியவன் முத்தைப் பார்த்திருக்க இயலாதா? இல்லை முத்துவைப் பார்த்தவன் முத்துவை வாங்கியிருக்கக் கூடாதா? இரண்டு, தொடர்களிலும் எள்ளின் முனையளவும் வேறுபாடு இல்லை. பூங்கொத்து மற்றும் இலக்கணக்கொத்து என்னும் இரண்டு தொகைச் சொற்களையும் பொருளில் வேறுபடுத்திக் காட்டுவதில் தெளிவில்லை. சொற்கள் வினைகளால் வேறுபட்டு நிற்கும். அவ்வளவுதான்!. கட்டுரையாளர் தந்திருக்கும் விளக்கம் மேலாய்வுக்கு உரியது.

    வலிமையில்லாத சான்றுகள்

    ஆய்வுக்கான வலிமையான கருதுகோளை உருவாக்கிக் கொள்வதும் எடுத்துக் கொள்வதும் பாராட்டக் கூடியதுதான். ஆனால் சிக்கல் எங்கே தோன்றும் என்றால் அக்கருதுகோளை நிறுவுவதற்கான தரவுகள் அதனினும் வலிமையாக அமைதல் வேண்டும். சான்றுகள் தரவுகளுக்குத் துணை நிற்பதாக அமைதல் வேண்டும். இந்தக் கட்டுரையில் அவை  முழுமையாக அமைந்திருக்கிறதா என்பது நோக்கத்தக்கது. சில எடுத்துக்காட்டுக்கள்,

    1. தமிழில் சொற்களின் மீநிலைப் பகுப்புஎன்கிறார் ஆசிரியர். இந்தத் தொடரில்மீநிலைஎன்னும் சொல்லாட்சி இனம் சுட்டியதா? இல்லையெனின் இது வெற்றெனத் தொடுத்தல் ஆகாதா? தமிழ்ச் சொற்களின் பகுப்பு என்றாலே அமையாதா?
    2. ‘வான் பான் பாக்கு’ முதலியவை இலக்கிய வழக்குகள். மக்கள் வழக்கு என்பதற்குச் சான்றுகள் இல்லை.
    3. ‘தொன்மைத்தாகலின்’ எனத் தனித்தமிழ் பேணும் ஆசிரியர் ‘வாசித்து’ என்று எழுதுவது ஏன்? ‘மரியாதை ஒருமை’ என்னும் பயன்பாடு தமிழில் உண்டா? ‘வழக்கின் ஆகிய உயர்சொற்கிளவி’ என்னும் தொல்காப்பியம் கடினமாக இருக்கிறதா என்ன?
    4. ‘தொடர்’ என்றால் புரியாதா? வாக்கியம் என்றால்தான் புரியுமா? ‘தொடரையே’ புரிந்து கொள்ளாத புறத்தேர்வாளர் ஆய்வேட்டை எப்படி மதிப்பிட இயலும்? ‘தமிழ்ச்சமுதாயம்’ என்றால் அது தமிழ்ச்சமூகத்தைக் குறிக்காதா? பாரத சமுதாயம் வாழ்கவே எனப் பாரதியார் பாடவில்லையா? இருபத்தோராம் நூற்றாண்டிலும் இவ்வாறு எழுதிக்கொண்டிருந்தால் மொழித்தூய்மை பற்றியும் 75 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மொழிப்போர் பற்றியும் கட்டுரையாளரின் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படுகிறது.
    5. ‘பற்றாக்குறை’ போதாமையாவதால் கட்டுரைப் பொருள் சிறந்துவிடுமா? இது பயண இலக்கியத்தைப் பிரயாண இலக்கியம் எனச் சொல்லுவதுபோல் இருக்கிறது. இந்தப் பயன்பாடே அடிப்படை தவறு. வரையறை இல்லாத ஒன்றுக்குப் போதாமை எப்படி வரும்? ‘பிறமொழித்தாக்கம்’ என்பதைப் ‘புறமொழித்தாக்கம்’ என மாற்றியுரைப்பதன் பயன் என்ன? ‘பொதுமக்கள்’ என்பதை ‘வெகுமக்கள்’ என்பதால் என்ன பயன்? பயனற்ற மாற்றத்தால் யாருக்கு என்ன பயன்?
    6. தற்காலத்தில் தமிழ்மொழியில் வழங்கப்படும் இலக்கண முறைப்படி அமையாத தொடர்கள்’ என்று ஒரு தொடர் வருகிறது. வழக்கு இலக்கண முறையின்படிதான் அமைய வேண்டும் என விதியேதும் உண்டா? 
    7. ‘இலக்கணங்களில் இவை வரையறுக்கப்படாத நிலையில் இம்மாற்றம் இலக்கண மீறல் ஆகும்’ எனவும் ஒரு தொடர் வருகிறது. இலக்கணம் வரையறுக்கப்படாத நிலையில் வழங்கப்படும் மாற்றம் எப்படி மீறலாக முடியும்?
    8. ‘அவனுங்க வந்தானுங்க’ என்பதன் செம்மையான வடிவம் ‘அவன்கள் வந்தான்கள்’ என்பதும் ‘அவளுக வந்தாளுக’ என்பதன் செம்மையான வடிவம் ‘அவள்கள் வந்தாள்கள்’ என்பதும் என எழுதுகிறார் ஆசிரியர். இவை செம்மையான வடிவம் என்பதற்கான அளவுகோல் எது? அல்லது எந்த நூல்? சிக்கலே பலர்பால், ‘இருபால் பன்மை’ காட்டாது என்பதுதானே? செம்மையான வடிவமே இல்லாத போது அதனை ஊகம் செய்வது நெறியன்று செம்மையான வடிவத்திற்குக் கட்டுரையாசிரியர் சான்று தந்திருக்க வேண்டும்! (பால் காட்டும் முன்னிலை விகுதிகளுக்குப் பாரதியையும் பாரதிதாசனையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் இதற்கும் எடுத்துக்காட்டு தந்திருக்க வேண்டும் அல்லவா? படர்க்கைப் பலர்பால் பால் காட்டும் நிலையில் அடைந்திருக்கும் வழக்கு மாற்றங்களை மட்டுமே கட்டுரையாளர் சுட்டியிருந்தால் இந்த வினா எழுந்திருக்காது.
    9. ‘முத்தழகைப் பார்த்தேன்’ ‘முத்தழகுவைப் பார்த்தேன்’ என்பதெல்லாம் கட்டுரைக்காக உருவாக்கப்பட்ட செயற்கையான எடுத்துக்காட்டுக்களாகத் தோன்றுகின்றனவேயன்றி உண்மையான வழக்காகத் தோன்றவில்லை. இத்தகைய கருத்தினை நிலைநாட்ட கட்டுரையாளர் விரும்பியிருந்தால் “விமானம் கொழும்புவில் தரையிறங்கியது’, ‘வைரமுத்துவைக் கண்டேன்’, ‘பெங்களூருவில் கலகம்” என்பன போன்ற எடுத்துக்காட்டுக்களைக் காட்டியிருக்கலாம்.
    10. ‘அரசிடம் முறையிட்டேன்’ என்று எழுதுபவர் யார்? ‘அரசுவிடம் முறையிட்டேன்’ என்று எழுதுபவர் யார்? இரண்டுக்குமான பொருள் வேறுபாடு என்ன?
    11. ‘முத்தழகு என்பது குற்றியலுகரச் சிறப்புப் பெயராக இருக்கும் நிலையிலும்’ என்னுந் தொடரில் கட்டுரையாசிரியர் முத்தழகு என்னும் சொல்லைக் குற்றியலுகர ஈறாக நோக்குகிறாரா? சிறப்புப்பெயராக நோக்குகிறாரா? மரப்பெயர், எண்ணுப்பெயர் முதலிய குற்றுகர ஈறுகளைப் பற்றி ஆராயும் எழுபத்தெட்டு நூற்பாக்களைக் கொண்ட தொல்காப்பியக் குற்றியலுகரப் புணரியலில் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் புணர்ச்சி ஆராயப்பட்டுள்ளதா? குற்றியலுகரத்தில் அத்தகைய பகுப்பு உண்டா?
    12. வழக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கான களம் பொதுப்பெயர், சிறப்புப்பெயர் பயன்பாடா? குற்றியலுகரம் பற்றியதா? அல்வழி வேற்றுமைப் பொருளா என்பதில் கட்டுரையாளர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஆய்வுக்களத்தின் பொருள் வரையறை இன்னும் செப்பமாயிருந்திருக்கக்கூடும்.

    நிறைவுரை

    பொதுவெளியில் செய்யப்படும் பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் பாராட்டுக்கள் மறுப்புக்கள் என்ற அளவில் அமைவது இயற்கை. இந்தக் கட்டுரை அவ்விரண்டோடும் ஆய்வு நெறிகளையும் ஆய்வுக்கட்டுரைகளில் பின்பற்றப்பட வேண்டிய மொழித்தூய்மையையும் சுட்டிக் காட்டுகிறது. ஆய்வேடுகளில் பின்பற்றப்பட வேண்டிய மொழித்தூய்மையை அறிஞர் மு.வ. நூல்களிலும் மொழிஞாயிறு பாவாணர் ஐயா நூல்களிலும் பரக்கக் காணலாம். கருதுகோளுக்கான தரவுகளைத் திரட்டுங்கால் கையில் அகப்படுகிற தரவுகளையெல்லாம் கருதுகோளில் திணித்துவிடலாம் என எண்ணுதல் இயற்கையே. கருதுகோள் வலிமை பெறுவது தரவுகளின் எண்ணிக்கையால் அல்ல. தரத்தால். எடுத்துக்காட்டுக்கள் இயல்பாக இருக்க வேண்டுமேயன்றி நாமே இட்டுக்கட்டியதாக ஆகிவிடக் கூடாது. மொழி மக்கள் சமுதாயத்தின் மாபெரும் உடைமை. இலக்கண ஆசிரியர்கள் அதற்குக் காப்புரிமை கோர இயலாது. தொல்காப்பியம் தனக்கு முந்தைய கால வழக்குகளையும் தன்கால வழக்குகளையும் புலனெறிவழக்கத்தோடு ஆராய்ந்திருக்கிறது. அவர் நூலெழுதிய பிறகு உண்டான மாற்றங்களை உரையாசிரியர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்த வகையில் சொல்லதிகாரத்தின் உரியியல் நச்சினார்க்கினியர் உரை சேனாவரையரைப் பின்னுக்குத்தள்ளி விடுவதைக் காணலாம். எனவே ‘விதிமீறல்’ என்பதற்கே இடமில்லை. கருத்துப் பரிமாற்றங்களின் தேவை கருதி வழக்கு மொழியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் ‘விதிமீறல்’ என்றால் முனைவர்ப் பட்டம் பெற்று துறைத்தலைமை பீடத்தை அணிசெய்யும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஏனைய கல்வி நிலையங்களில் பணியாற்றும் தமிழாசிரியப் பெருமக்களும் தெரிந்தே செய்கின்ற பிழைகளை எச்சொல்லால் சுட்டுவது?

    குறிப்பு:  இக்கட்டுரையின் ஒவ்வொரு அசைக்கும் நாமே பொறுப்பு. எவரும் எதற்கும் தொடர்பு கொள்ளலாம். (sangilisubramanian46@gmail.com)

    Share
  • சா.கந்தசாமியும் எனது நினைவுகளும்

    சா.கந்தசாமியும் எனது நினைவுகளும்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்
    ramachandran.ta@gmail.com.

    மதுரை தியாகராசர் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் படிக்கும்போது சா. கந்தசாமி எனக்கு அறிமுகம் ஆனார். தமிழ்த்துறை நூலகம் பல அரிய புத்தகப் பொக்கிஷங்களைக் கொண்டதாக இருந்தது. பேராசிரியர்கள் பேச்சிமுத்து, அருணகிரி, கு.ஞானசம்பந்தம் போன்றவர்களின் ஊக்கத்தால் வாசிப்புப் பழக்கம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. சா.க வின் கதைகளைக் கைகளில் வைத்துக்கொண்டு கல்லூரியின் ஆற்றங்கரையோரத் தென்னந்தோப்புப் பகுதியில் படித்துத் திரிந்தது நினைவுக்கு வருகிறது. ஆலமர நிழலும் அரசமர இலையோசையும் இதம் தர இவரின் கதைகளோடு பயணித்தக்  காலம் அது. தெப்பக்குளம் நடு மண்டபத்தில் சாயங்காலம் வரை இவரின் கதைகளோடு உறவாடிய தருணங்கள் அற்புதமானவை.

    சாயாவனம், விசாரனைக் கமிஷன், அவன் ஆனது, தக்கையின் மீது நான்கு கண்கள், ஆறுமுகச்சாமியின் ஆடுகள் போன்றவை இவரின் முக்கிய படைப்புகளாக விளங்கின. மேலும் கனடா குறித்த தனது பயண அனுபவங்களை இரண்டு நூல்களாக எழுதியுள்ளார். இவற்றைக் கவிதா பதிப்பகம் செம்மையாகப் பதிப்பித்துள்ளது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் சாயாவனத்தை வெளியிட்டுள்ளது.

    இலக்கியத்தளத்தில் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களிலும் (சாகித்ய அகாதெமி) இவரின் சமரசமற்ற பங்களிப்புப் போற்றத்தக்கது. ‘அவன் ஆனது’ என்ற நாவலைப் படித்து பெரும் வியப்பிற்கு உள்ளானேன். எளிய மனிதர்கள் சமூக அவலங்களில் சிக்கியடையும் அனுபவங்களின் தொகுப்பாக இந்நாவல் விளங்கியது. சமூக இயக்கத்தில் தன்மை இணைத்துக் கொள்ள முடியாதவனின் அவல வாழ்க்கை இந்நாவல். இவரின் நாவல்களில் கதைக் கூறும் முறையும் கதை இயங்கிச்செல்லும் போக்கும் மிகவும் யதார்த்தத் தளத்தை அடைந்து விடுகிறது. அழகியல் கூறுகளோ கலைத்தன்மையை நோக்கிய எத்தனிப்புகளோ இல்லாமல் கதைகள் நகர்ந்து செல்கின்றன.

    தமிழ்ப் படைப்பாளி என்ற தோரணையில் இருந்து விடுபட்டு ஒரு கம்பிரமான மிடுக்கான தோற்றத்தில் வலம் வரும் ஆளுமையாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவர். சமரச மற்றவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் பொதுநிலையிலிருந்து மீறி தனது இருத்தலை மிகவும் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டவர் சா.க அவர்கள்.

    இந்திய அளவில் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ப் படைப்பாளிக்கும் மிகப் பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தவர் சா.க என்னும் கம்பீரமான ஆளுமை. தமிழ் இலக்கியச் சமூகம் இவரின் இழப்பை மனக் கனத்தோடு கடந்து செல்கிறது.

    ஒரு படைப்பாளிக்கு ஒரு சமூகம் செய்யும் உண்மையான நினைவேந்தல் என்பது அவரின் படைப்புகளைப் புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதும் பரவலாக்குவதும் தான். பல விருதுகளைப் பெற்றுள்ள, பலருக்கு  விருதுகள் கிடைக்க காரணமாக இருந்துள்ள இவரின் படைப்புகளைப் போற்றுவோம். அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.  ஓர் இலக்கிய முன்னோடியை நினைவு கூர்வோம்.

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 3

    பரிமேலழகர் உரைத் திறன் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகின் காரணம் கடவுளா? கடவுளின் காரியம் உலகமா?

    முன்னுரை

    ‘பார்வை’, ‘நோக்கு’ இவற்றிடையே வேறுபாடு உண்டு. ‘பார்வை’ என்பதைத் திருவள்ளுவர் ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு’ என்று விளக்கிக் காட்டுவார். கண்ணின் வினையாக மட்டும் நிகழும்போது அது பார்வை. மனமும் அறிவும் இணைந்து கண்வழிச் செயல்படுவது நோக்கு. இதனையும் திருவள்ளுவர் ‘குறிக்கொண்டு நோக்குதல்’ என்னும் தொடரால் குறிப்பர். பரிமேலழகர் அத்தனைக் குறட்பாக்களையும் படித்து அல்லது பார்த்து உரையெழுதாமல் ‘நோக்கியே’ உரையெழுதியிருக்கிறார். இதனை நூலின் முதற் குறட்பா உரையிலேயே அறிய முடியும். “திருவள்ளுவர் என்ன கருதி இப்படி எழுதியிருக்கிறார்?” என்னும் பெருங்கவலை கொண்டவர் பரிமேலழகர். அப்படி அவர் கவலைப்பட்டு உரையெழுதிய குறட்பாக்களில் ஒன்றின் உரையருமையை இம்மூன்றாவது கட்டுரையில் காணலாம்.

    திறனானறியும் குறட்பாவும் உரையும்

    திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற் குறள்,

    “அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”

    என்பதாகும். இதற்குப் பரிமேலழகர்,

    • “எழுத்தெல்லாம் அகரம் முதல” — எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன
    • “உலகு ஆதி பகவன் முதற்று” — உலகம் ஆதி பகவனாகிய முதலை உடைத்து

    எனப் பொழிப்புரை எழுதியிருக்கிறார். குறட்பாவின் கிடக்கை நிலை மாறாது  உரைநடைப் பாங்கிற்காகச் சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப்  பொழிப்புரை கண்டிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்கான விளக்கவுரை பின்னாலே இப்படி அமைந்திருக்கிறது.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும் ஆதிபகவற்குத் தலைமை, செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி ‘எல்லாம்’ என்றார். ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகன் என்பது கருத்தாகக் கொள்க! ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

    விளக்கவுரையில் காணப்படும் உரையருமை

    இனிப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கவுரையை ஒவ்வொரு தொடரையும் சிந்தனைக்குட்படுத்தினால் அவ்வுரை எழுதுவதற்கு அவர் எவ்வளவு காலம் தம் சிந்தனையைச் செலவழித்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தொடராய்வு தொடர்கிறது.

    1. “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு. ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார்.  அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று. எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர்.
    2. அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார் என்பதாம். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.
    3. “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார்.
    4. “ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார். வரிவடிவம் செயற்கை. நாத வடிவம் இயற்கை. அகரத்திற்குத் தலைமை நாதவடிவினால் எல்லா எழுத்துக்கள் உள்ளும் கலந்து நிற்பது. இறைவன் உலக உயிர்களை அறிவது செயற்கை உணர்வால் அன்று. இயற்கை உணர்வால் முற்றும் அறிகின்ற பேராற்றல் உடையவன். ‘காத்தும் படைத்தும் கரந்தும்’ என்பர் அடியார். தனித்தும் கலந்து நிற்பது இறையியல்பு. ‘ஏகன் அநேகன்’ என்பது திருவாசகம்.
    5. ‘ஆதிபகவன் என்னும் இருபெயரோட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு” என்று எழுதுகிறார். ஆதிபகவன் என்பது தமிழாயின் ஒற்று மிகுந்திருக்க வேண்டும். மிகாமையின் அது வடமொழியாயிற்று எனத் தம் இலக்கணப் புலமையைக் காட்டுகிறார். ஆதிபகவன் ஒரு சொல் என்பது கருத்து.
    6. “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி எல்லாம் என்றார்” என்று தமது கூரிய நோக்கினைப் புலப்படுத்துகிறார். எழுத்து அகர முதல என்றாலே போதும். “எழுத்தெல்லாம் அகர முதல” எனச் சொல்வானேன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அவர் காலத்தில் தமிழோடு ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வடமொழியையும் உட்கொண்டு எழுதுகிறார். இங்கே ஒரு கருத்து சிந்தித்தற்குரியது. வாயைத் திறந்தாலே வரும் ஒலி அகரமேயாதலின் உலகின் எல்லா மொழிக்கும் அவ்வொலி தலைமையொலி என்பது உணரப்படவேண்டும். இன்றைக்குப் பரிமேலழகர் உரையெழுதியிருந்தால் அகரவொலியை உலகின் அனைத்து மொழிக்கும் தலைமையொலி என்றுதான் எழுதியிருப்பார். (இது கடடுரையாளர் அனுமானம்.)
    7. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது” என எழுதுகிறார்.  தமிழில் ‘உலகு’ என்னும் சொல் ஆகுபெயராகாது. உலகு என்பது பலபொருள் ஒருசொல். ‘உலகு சிரித்தது’ என்னும்போது அது மக்களைக் குறிக்கும். ‘உலகு செழித்தது’ என்கிறபோது அது மண்ணைக் குறிக்கும். இந்த விளக்கத்தைக் “காலம் உலகம்” என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா ஆராய்கிறது. பரிமேலழகர் எந்த இடத்திலும் உலகு என்பதை ஆகுபெயராக்கி உரையெழுதினார் இலர். ‘புல்லாகிப் பூடாகி’ எனவரும் அனைத்துயிர்களுக்கும் இறைவன் முதலானவன் என்பது கருத்து.
    8. ‘ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது என்று எழுதுகிறார்.
    9. “இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது”. என எழுதுகிறார். முதற்கடவுள் என்பதனால் இரண்டாவது, மூன்றாவது கடவுள் இருப்பதாகப் பொருளில்லை. சொரூபம், அருவம், அருவுருவம், உருவம் என இறையுணர்நிலை நான்கு என்பது ஆன்றோர் கருத்து. ‘சொரூபம்’ என்பது அறிவுக்கும் நினைவுக்கும் உணர்வுக்கும் எட்டாத நிலை. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்பது பெரியபுராணம். அந்த நிலைக்கு இறைவனின் தலைநிலை அல்லது முதல் நிலை என்பது பெயர். அந்த நிலையை அறிவதற்குப் படிநிலைகள் பல உள. சொரூப நிலையில் உள்ள கடவுளையே முதற்கடவுள் என்று பரிமேலழகர் கூறுகிறார். விரிக்கின் பெருகும்.

    பரிமேலழகர் உரை அருமை

    இந்தக் குறட்பாவின் கிடக்கைநிலை உரை மேலே சொல்லப்பட்டது.  “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கைநிலைப் பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காண முடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக் கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் திருவள்ளுவர் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக் காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

    பரிமேலழகரைத் தொடர்ந்த நச்சினார்க்கினியர்

    இலக்கிய உரையாசிரியர்களில் பரிமேலழகருக்கு இணையாகவும் எண்ணிக்கையில் பெருமளவு இலக்கியங்களுக்கு உரையெழுதியவராகவும் கருதப்படுகிறவர் நச்சினார்க்கினியர். இலக்கிய இலக்கணங்களுக்கு உரையெழுதி உரைமுடி கண்டவர். அவர்,

    • ‘எழுத்தெனப்படுப’ எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவின் விளக்கவுரையில் “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார் என்பது உணர்த்தற்கு ‘னகர இறுவாய்’ என்றார் என எழுதுகிறார். “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்கும்” என்னுந் தொடர் பரிமேலழகரின் “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி” என்னும் உரைத்தொடரை அப்படியே உள்வாங்கி யமைந்திருப்பது காண்க.
    • “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில் அவருடைய விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது. “இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம் அதுபோல இறைவனாகிய முதலை உடையது உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க”

    என்று எழுதிக்காட்டும் நச்சினார்க்கினியர் “இறைவனாகிய முதலை உடையது உலகம்” என்னும் தொடரில் திருக்குறளின் கிடக்கைநிலை உரையைக் கருத்திற் கொள்ளாது பரிமேலழகர் உரைவிளக்கத்தைப் போற்றிக் கொள்கிறார். இதனால் பழந்தமிழ் உரையாசிரியர்கள் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி வந்த புலமை மாண்பு வெளிப்படுவதைக் காணலாம்.

    நிறைவுரை

    ‘உலகம் இருப்பதால் இறைவன்’ என்னும் அனுமானத்தால் ஏற்படும் மயக்கத்தைத் தம் புலமையால் மாற்றி ‘உலகத்திற்கு முதல்வன் இறைவன்’ என்னும் உண்மையைக் கண்டறிந்து கூறியதே இந்தக் குறட்பாவில் அழகரின் உரையருமை எனலாம்.

    (தொடரும்)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 10

    கதை வடிவில் பழமொழி நானூறு – 10

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 21

    இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
    உணர்பவர் அஃதே உணர்ப; – உணர்வார்க்கு
    அணிமலை நாட! அளறாடிக் கண்ணும்
    மணிமணி யாகி விடும்‘.

    அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்

    சங்கீதவக் கல்லூரி விடுதி வரை கொண்டு விட்டாச்சு. இன்னிக்கு சாயங்காலம் ரயிலில கிளம்பிற வேண்டியதுதான். நாமக்கல்லிலிருந்து பேசும் அப்பாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தேன். அவர் விட்டபாடில்லை.

    சாப்பாடு எல்லாம் சரியா இருக்கா இல்ல வெளியில ஏதாவதுநல்ல சாப்பாடு கிடைக்குதா இதையெல்லாம் பாத்து ரெண்டு நாள் தங்கி மெதுவா வரதுதானே என்ன அவசரம்? தொடர்ந்து கொண்டிருந்தார்.

    ஆமாம் இவருக்கென்ன? இவர் பாட்டன் வீட்டு நிறுவனத்திலயா நான் வேலை பாக்கறேன். ஏற்கனவே நாலு நாள் லீவு எடுத்தாச்சு. இனிமேஎடுத்தா சீட்டு கிழிஞ்சுரும். இதையெல்லாம் சொன்னா அவருக்குப் புரியப் போறதில்லை.

    கவலைப்படாதீங்கப்பா. காசியில எல்லாரும் நல்லாத்தான் பழகுறாங்க. ஹாஸ்டல் சாப்பாடு ஒத்து வரலைன்னா பக்கத்துல ஒரு அம்மா எடுப்பு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கறாங்க. உடனே மெனு கேக்க ஆரம்பிச்சிடாதீங்க. எனக்கு நேரம் ஆகுது. எல்லாம் சங்கீதா பாத்துப்பா அப்புறம் சென்னைக்கு வந்தப்புறம் விவரமா போன்ல சொல்றேன். எனக்கு நன்றாகத் தெரியும் அவருக்கு மனம் ஒப்பாது என்று.

    அவரின் செல்லப் பேத்தியில்லயா. அம்மாவும் அப்பாவும் இவளின் அட்மிஷனுக்கு வருவதாகத்தான் இருந்தார்கள். சங்கீதாதான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். உங்க காசி யாத்திரையெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க. நான் முதல்ல விஸ்வஹிந்து பல்கலைக் கழகத்துல சேந்து படிக்க ஆரம்பிக்கறேன். மெதுமெதுவா ஒவ்வொருத்தரா வந்துபாக்கலாம். இப்போ அப்பா மட்டும் வந்தாப் போதும். அவளே முடித்துவிட்டாள்.

    அவசரமாகச் சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டு சங்கீதாவிடம் விடைபெற்று சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தேன். அப்பப்பா எவ்வளவு லாவகமாக ஓட்டுகிறான். இருக்கிற எல்லா சந்துபொந்துகளிலும் நுழைந்துவெளியே வந்து ஒருவழியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தாச்சு. எங்க பாத்தாலும்கூட்டம். மக்களுக்கு கடவுள் பக்தி இவ்வளவு முத்திப்போச்சா. அல்லது வாழ்க்கையில் பயம் அதிகரித்ததால் இறையைத் தேடி ஓடுகிறார்களா தெரியவில்லை.

    எப்படியோ காசியிலிருந்து வந்து ஒருவாரம் ஓடிவிட்டது. நேரம் கிடைக்காததால் அப்பாவிடம் பேசவில்லை. சேர்த்து வைத்து சங்கீதா அனுப்பின அத்தனை போட்டோவையும் வாட்ஸப்பில் பகிர்ந்து பேசிவிடவேண்டும் தீர்மானித்துக்கொண்டே படுத்திருந்தேன். கைபேசி மணி ஒலிக்கிறது. சங்கீதா கூப்பிடுகிறாளோ.

    என்ன அதிசயம். அப்பாதான் கூப்பிடுகிறார். ராத்திரி ஒன்பது மணிக்கு ஏன் கூப்பிடுகிறார். மனசில் ஒரு பதட்டம்.

    என்னடா அதுக்குள்ள தூங்கிட்டயா. எவ்வளவு ரிங் அடிச்சேன். சரி விசயத்துக்கு வரேன். சங்கீதா சொன்னாளா என் நண்பனைப் பத்தி.

    இல்லையே. என்ன சொல்ல வரீங்கனு புரியல. நான் முடிப்பதற்குள் சங்கீதா ஒரு போட்டோ அனுப்பினாளே. ஒரு தமிழ் ஆண்ட்டி கிட்ட ராத்திரி சாப்பாடு வாங்கிச் சாப்பிடறேன்னு.  அவங்க வீட்டு சோபால அந்தம்மா கூட உக்காந்த மாதிரி.  அத நல்லாப் பாரு. அவங்க பின்னால சுவத்துல ஒரு போட்டோ மாட்டிருக்குல்ல. அவருதான் நம்ம தியாகு. என்கூட சுதந்திரப்போராட்டத்துல கலந்துக்கிட்டவரு. அப்ப நாங்க சின்னப் பசங்களா இருந்தாலும் இளைஞர் அணியில இருந்தோம். ஒண்ணா சிறைச்சாலையும் போனோம். சுதந்திரத்துக்குப் பிறகும்நாங்க பல வருசங்கள் தொடர்புலயே இருந்தோம்.  என் கல்யாணத்துக்குக் கூட அவன் வந்தான். அப்புறம் பிழைப்புக்காக வடக்க போனான்.

    இப்பதான் தெரிஞ்சது உலகத்த விட்டே போயிட்டான்னு. அப்பாவை இடை மறித்து அப்பா நீங்கபாட்டு ஒரு முடிவுக்கு வராதீங்க. வாட்ஸப் போட்டோவ நானும் பாத்தேன். அவ்ளோ கிளியரா இல்லயே.

    திடீர்னு இந்தமாதிரி விசயத்தயெல்லாம் கேக்கக் கூடாது. ஒருமாசம் போகட்டும் நான் சங்கீதாவ உட்டு அவங்க யாருனு கேட்டுச் சொல்லச் சொல்றேன்.

    அட போடா. நான் நேரா சங்கீதாவுக்கு போனப்போட்டு பேசியாச்சு. அவளும் அந்தம்மா வீட்டுக்குத் திரும்பப் போயி நேத்திக்கு என்கிட்ட பேசவச்சா. நான் நினைச்சது சரிதான். இப்போ தியாகி பென்சன் வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்களாம். குழந்தைகுட்டி இல்லைபோல. நம்ம சங்கீதாவப் பத்தி கவலைப்படாதீங்கனு சொன்னாங்க. அடுத்தமுறை சங்கீதா வரும்போது அவங்களக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.

    அப்பா பேசப்பேச என் மனம் வெட்கியது. அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும்‘. அப்டிங்கற பழமொழி ஞாபகத்துக்கு வருது. சேத்துல கிடந்தாலும் மணியோட தன்மை தெரிஞ்சவங்க அத மணியாத்தான் பாப்பாங்களாம். அதுபோலத்தான் உயர்ந்தவர்களோட கண்ணுக்குத்தான் உயர்ந்தவங்க தெரியுவாங்க.

    அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத்தியாகி. அதனால தான் அவரால இன்னொரு தியாகிய அடையாளம் காண முடிஞ்சது. என்னய மாதிரி பஞ்சப் பொழப்பு பொழைக்கிறவங்க கண்ணுக்கு அவங்க சாப்பாடு குடுக்கற ஒரு சாதாரண அம்மாவாத்தான் தெரிஞ்சாங்க.

    பழமொழி -22

    வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
    கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
    புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
    அள்ளில்லத்(து) உண்ட தனிசு‘.

    அள்ளில்லத்(து) உண்ட தனிசு

    ரொம்பநாள் கழிச்சு இன்னிக்குதான் ரெண்டுபேரும் வாக்கிங் போரோம். அப்டி என்ன மலையப்பொரட்டற யோசன என் பத்து வருடத் தோழி பவானி கேட்கிறாள்.

    இல்ல. இப்போ கொஞ்ச நேரம் முன்ன என்னோட ஓரகத்திகிட்டேருந்து போன் வந்தது. அவ எப்போதும்போலத்தான் பேசினா. அதத்தான் யோசிச்சுக்கிட்டே வரேன்.

    என்ன ஏதாச்சும் பிரச்சினையா? இது பவானி.

    அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவ ஒருத்திதான் என்கிட்ட பேசிக்கிட்டிருக்கா. அப்பப்ப நடக்கற விசேசம் தொடங்கி எல்லாம் அவ சொல்லிதான் நான் தெரிஞ்சுக்குறேன்.

    அப்டி இப்ப அவ என்னதான் சொன்னா. கொஞ்சம் சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கறேன். ஆர்வம் காட்டினாள் பவானி.

    போன வாரம் எங்க மாமியாரோட ஒண்ணுவிட்ட நாத்தனார் பொண்ணுக்குக் கல்யாணமாம். எல்லாரும் ஒண்ணா கும்பகோணம் போயிட்டுவந்தாங்களாம். போற வர வழி முழுக்க என்னயப் பத்திதான் என் நாத்தனாருங்க பேசிக்கிட்டே வந்தாங்களாம். உன்னயப் பத்தி எப்பவுமே அவுங்களுக்கு தப்பு அபிப்பிராயம்தான். உனக்கு சமைக்கவே தெரியல. ருசியா சாப்பாடு போடாததால அவங்க தம்பி கஷ்டப்படறானாமா. அடிக்கடி அக்காக்களுக்கு போன் போட்டு என்ன செய்ய? என் தலையெழுத்துனு நொந்துக்கறாராமா.

    அப்படியா ஆச்சரியமா இருக்கே. நீ பாம்பே குடி வந்தே பத்து வருசம் ஆச்சே. ஒருதடவ கூடவா உன் புருசன் உன்கிட்ட நேர்ல குறை சொல்லல.

    இல்லயே. ஒருதடவ கூட சொன்னதில்ல. என் ஓரகத்தியும் ஒவ்வொரு போன் கால்லயும் என் சாப்பாட்டப் பத்தி மாமியார் குறை சொன்னதாவும், நாத்தனார்கிட்ட சொன்னதாவும் சொல்லறா. நான் அத விசாரிக்கப் போனா இவர் தேவையில்ல உங்க டைம்பாஸ் வம்புல எல்லாம் என்னய மாட்டி உடாதனு ஒத்தவரியில பதில் சொல்லிடுவாரு.

    நானும் முயற்சியெடுத்து ஒருதடவை நாத்தனாருக்கு போன் போட்டு பேச ட்ரை பண்ணினேன். அவங்க என் தம்பி இருக்கும்போது பேசு. நீ மாத்தி மாத்தி பேசற ஆளு. எங்க குடும்பத்து மேல உனக்கு எந்த அக்கரையும் இல்ல. உன்கிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லனு சொல்லிட்டாங்க. அதான் ஆச்சரியமா இருக்கு. இதுவரை என்னோட மாமியார்வீட்ல யார்கிட்டயும் நான் ரெண்டு நிமிசத்துக்கு மேல பேசினது கிடையாது. யாரும் எங்க வீட்டுக்கு வந்து தங்கி இருந்ததும் கிடையாது. அவங்க யாரும் அதிகமா பேச மாட்டாங்க அதனால எனக்கும் பேச டாபிக் இல்லனு நான் விட்டது இப்ப எப்படி இவ்வளவு வெறுப்பா ஆச்சு.

    ஓ. இதுதான் விசயமா. உன்கிட்ட அடிக்கடி போன்ல பேசுதே ஓரகத்தி. அதோட டைப் எப்படி?

    அதுவும் எனக்குத் தெரியாது. நல்லா பேசும். அட்லீஸ்ட் பேச ஒரு ஆளாவது இருக்கேனு நானும் எல்லா விசயத்தையும் சொல்லிக்கிட்டிருக்கேன்.

    அதான் தப்பு. அந்த அம்மா உன்கிட்டேந்து எல்லா விசயத்தையும் கறந்து உன்னயப்பத்தி எல்லா சொந்தக்காரங்ககிட்டயும் தப்பான அபிப்பிராயத்த உண்டுபண்ணிருச்சு.

    அவுங்களும் அவ அடிக்கடி உன்கிட்ட பேசறதால உன்னயப்பத்தி அவளுக்கு நல்லாத் தெரியும்னு நெனச்சிருப்பாங்க.

    மொதல்ல அந்தம்மாட்ட பேசறத நிறுத்து. உன் ஹஸ்பெண்ட் சொல்றமாரி அது நல்லா டைம் பாஸ் பண்ணிக்கிட்டிருக்கு. எனக்கென்னவோ உன் ஓரகத்தி மேலதான் மொத்த சந்தேகமும். எல்லாரையும் தனித்தனியா நம்ப வச்சு குடும்பத்துக்குள்ள சண்டமூட்டி உடுது. இதத்தான் அள்ளில்லத்து உண்ட தனிசுனு பழமொழி நானூறு சொல்லுது. இதோட அர்த்தம் இந்த மாதிரி போலித்தனமான ஆட்களோட நட்பு ஒருவீட்டுக்குள்ளயே கடன்பட்டது போல பெரிய வேதனையைக் குடுக்கும்ங்கறதுதான்.

    பவானி முடித்தவுடன் நான் யோசிக்க ஆரம்பித்தேன். அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று.

    Share
  • பீ. எஸ். ராமச்சந்திரன் சார்

    பீ. எஸ். ராமச்சந்திரன் சார்

    பாஸ்கர் சேஷாத்ரி

    இது நடந்து சுமார் நாற்பது வருஷங்கள் இருக்கும்.

    அவர் பீ. எஸ். ராமசந்திர அய்யர். எனக்கு பள்ளியில் ஆங்கில வாத்யார். அச்சு போல கையெழுத்து. நடுத்தரமான உசரம். வெள்ளை கதர் ஜிப்பா. வேட்டி– அதனை துவைத்தால் காய்வதற்கே ரெண்டு நாளாகும். கொஞ்ச நாள் தாச்சி அருணசாலம் தெருவில் இருந்தார். ரொட்டிக்காரன் தெரு என்றால் பழைய மயிலாப்பூர் வாசிகளுக்கு தெரியும்.

    சமயத்தில் வகுப்புக்கு பிரம்பு குச்சி கொண்டு வருவார். அவ்வப்போது மாறும் என்றால் எத்தனை கையை பதம் பார்த்திருக்கும். அவரை பார்த்தால் கொஞ்சம் பயம் வரும். அந்த அடிக்காகா அல்ல. அவர் கண்கள். கொஞ்சம் பெரிசு. அதை பார்த்தால் தப்பு செய்யாதவன் கூட மன்னிப்பு கேட்பான். கொஞ்சம் அவ்வபோது கண்களில் நீர் கசியும்.

    மகா கோபக்காரர் – என்னை போல மக்கு எல்லாம் நாலாவது வரிசை.. என் நேரம். அந்த வரிசைக்கு தான் அவர் கண்கள் போகும். சரியாக சிக்குவேன்.

    நோட்டில் எழுதாமல் எதோ வரைந்ததை பார்த்து என் காதை பிடித்து அடிக்கடி திருகுவது விசேஷம். எனக்கு தொன்னை காது. எந்த குட்டி கைக்கும் என் காது லாவகம், அதுவும் அவர் திருகும்போது நானே பிள்ளையார் மாதிரி சுற்றுவேன். அந்த சுற்று சுற்றினால் தான் வலி கொஞ்சம் குறையும். ஆனால் அப்போது அந்த திருகு புரியாது. மூன்று மணி நேரம் கழித்து வலிக்கும்.

    அவர் வீட்டை கண்டு பிடித்து விட்டேன். எனக்கு தெரிந்த தாடி கண்ணனை பிடித்து விலாசம் வாங்கி இதோ அவர் முன்னே ….

    “சார் … நான் உங்க பழைய மாணவன்..” அவர் காதில் விழவில்லை.

    மெல்ல அவர் பக்கம் உரக்க சொன்னேன் “…..ஐ அம் யுவர் ஓல்ட் ஸ்டுடென்ட் ..”

    கட்டிலில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் தெம்பு இருந்தால் வகுப்பு எடுக்க தயாராகி விடுவார். கொஞ்சம் சிரித்தார். அவர் கைகளை ஆதரவாய் பற்றினேன். மொத்த எலும்புகளும் நரம்புகளும் தெறித்து கொண்டு வெளி வர துடிக்கும் கனிந்த வாழ்க்கை.

    “யு டுக் இங்கிலீஷ்…” என் ஆங்கிலம் சரியா.. கொஞ்சம் பயமாக இருந்தது. திரும்பவும் காதை பிடித்து கிள்ளுவாரோ?

    “யு வேர் மை இங்கிலீஷ் டீச்சர் டூ … சாரி … அய் வாஸ் யுவர் இங்கிலீஷ் ஸ்டுடென்ட் …..”

    மெல்ல அவர் பாதங்களை பிடித்து அமுக்கி விட்டேன் . எப்படியா உலகில் அன்பை சொல்லுவது?

    அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருக்கும் என்னை போல நெகிழ்ச்சி இருந்திருக்குமோ என தெரியவில்லை .

    எத்தனை காது திருகல்கள். எவ்வளவு பிரம்படி இந்த கரங்களால் …

    எத்தனை சாக்பீஸ் எழுத்துக்கள் இந்த கருப்பு திரையில்?

    கொஞ்சம் இறுக்கமான அந்த வீடு திடீரென மங்களமாய் ஆனது.

    “நான் உங்களையெல்லாம் கொஞ்சம் ஸ்ரமபடுதிட்டேன்..” என் மன்னிப்பு.

    “அதெல்லாம் ஒன்னுமில்லை …….”

    “தாத்தாவை பார்க்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்…..”

    “ரெண்டு மாசத்தில் அவர் திருநக்ஷதரம் வரது. அவசியம் சொல்றேன். நீங்க வாங்கோ.”

    “சாருக்கு இப்ப என்ன வயசு?”

    “நவம்பர் தாண்டினா நூத்தி மூணு …….”

    நான் பள்ளியில் படிக்காது போனது, கிளாஸ் கட் செய்தது, மக்காய் இருந்த நாட்கள் எல்லாம் அவரை பார்த்த பின் தப்பாக படவில்லை.

    அவர் எனக்கு மந்தவெளி பாபநாசம்.

    (கடந்த வருட ஆரம்பத்தில் அவர் காலமானார்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(312)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(312)

    பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
    பொருத்தலும் வல்ல தமைச்சு.

    -திருக்குறள்  – 633 (அமைச்சு)

    புதுக் கவிதையில்...

    பகைவருடன் சேர்ந்து
    உறவு கொண்டோரை
    அங்கிருந்து பிரிப்பதும்,
    தம்முடன் இருப்பவரைப்
    பேணிக் காப்பதும்,
    முன்பு தம்மிடமிருந்து பிரிந்து
    சென்றவரை மீண்டும்
    சேர்த்துக் கொளவதுமாகிய
    செயல்களில் வல்லவனே
    நல்ல அமைச்சனாவான்…!

    குறும்பாவில்...

    பகைவருடன் சேர்ந்தோரைப் பிரித்து
    உடனிருப்போரைப் பாதுகாத்து முன்பு பிரிந்தோரைச்
    சேர்த்துக்கொள்ளும் ஆற்றலுள்ளவனே அமைச்சன்…!

    மரபுக் கவிதையில்...

    பகைவர் தம்முடன் சேர்ந்தோரைப்
    பாதகம் செயுமுன் பிரித்தெடுத்தும்,
    வகையாய் உதவி செய்தேதான்
    வந்து தம்முடன் உள்ளோரை
    மிகையாய்ப் பேணிப் பாதுகாத்தும்,
    மெத்தனப் புத்தியால் முன்பிரிந்தே
    பகைவரை நாடியோர் சேர்த்தலுமாம்
    பணிகளில் வல்லவன் நல்லமைச்சே…!

    லிமரைக்கூ

    பகைவர் தம்முடன் சேர்ந்தோர்
    தமைப்பிரித்தே உடனுளோர் பேணி முன்பிரிந்தோரைச்
    சேர்ப்போரே அமைச்சுப்பணி தேர்ந்தோர்…!

    கிராமிய பாணியில்...

    மந்திரி மந்திரி
    மதிநெறஞ்ச மந்திரி,
    மதிப்புமிக்க மந்திரி..

    எதிராளிக்கிட்டப் போய்ச்சேந்தவன
    எப்புடியாவது பிரிச்செடுத்து,
    கூட இருக்கவங்களப்
    பேணிப் பாதுகாத்து,
    முன்னால பிரிஞ்சி போனவன
    மன்னிச்சித்
    திரும்பச் சேக்கத் தெரிஞ்சவந்தான்
    தெறமயான மந்திரி..

    அவருதான்
    மந்திரி மந்திரி
    மதிநெறஞ்ச மந்திரி,
    மதிப்புமிக்க மந்திரி…!

    Share
  • Q&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்

    Q&A: மின்னிதழ்களில் விளம்பர வருவாய் வாய்ப்புகள்

    அண்ணாகண்ணன்

    என் யூடியூப் அலைவரிசையில், அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறேன். நண்பர் பாரதியின் கேள்விகளுக்கு எனது பதில் இங்கே.

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால், எனக்கு எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ ஒளி வடிவிலோ அனுப்புங்கள்.

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share