புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
தஞ்சை மாவட்டம் – 613006.                
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

உலகின் காரணம் கடவுளா? கடவுளின் காரியம் உலகமா?

முன்னுரை

‘பார்வை’, ‘நோக்கு’ இவற்றிடையே வேறுபாடு உண்டு. ‘பார்வை’ என்பதைத் திருவள்ளுவர் ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு’ என்று விளக்கிக் காட்டுவார். கண்ணின் வினையாக மட்டும் நிகழும்போது அது பார்வை. மனமும் அறிவும் இணைந்து கண்வழிச் செயல்படுவது நோக்கு. இதனையும் திருவள்ளுவர் ‘குறிக்கொண்டு நோக்குதல்’ என்னும் தொடரால் குறிப்பர். பரிமேலழகர் அத்தனைக் குறட்பாக்களையும் படித்து அல்லது பார்த்து உரையெழுதாமல் ‘நோக்கியே’ உரையெழுதியிருக்கிறார். இதனை நூலின் முதற் குறட்பா உரையிலேயே அறிய முடியும். “திருவள்ளுவர் என்ன கருதி இப்படி எழுதியிருக்கிறார்?” என்னும் பெருங்கவலை கொண்டவர் பரிமேலழகர். அப்படி அவர் கவலைப்பட்டு உரையெழுதிய குறட்பாக்களில் ஒன்றின் உரையருமையை இம்மூன்றாவது கட்டுரையில் காணலாம்.

திறனானறியும் குறட்பாவும் உரையும்

திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற் குறள்,

“அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்பதாகும். இதற்குப் பரிமேலழகர்,

  • “எழுத்தெல்லாம் அகரம் முதல” — எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன
  • “உலகு ஆதி பகவன் முதற்று” — உலகம் ஆதி பகவனாகிய முதலை உடைத்து

எனப் பொழிப்புரை எழுதியிருக்கிறார். குறட்பாவின் கிடக்கை நிலை மாறாது  உரைநடைப் பாங்கிற்காகச் சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப்  பொழிப்புரை கண்டிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்கான விளக்கவுரை பின்னாலே இப்படி அமைந்திருக்கிறது.

பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

“இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும் ஆதிபகவற்குத் தலைமை, செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி ‘எல்லாம்’ என்றார். ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகன் என்பது கருத்தாகக் கொள்க! ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

விளக்கவுரையில் காணப்படும் உரையருமை

இனிப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கவுரையை ஒவ்வொரு தொடரையும் சிந்தனைக்குட்படுத்தினால் அவ்வுரை எழுதுவதற்கு அவர் எவ்வளவு காலம் தம் சிந்தனையைச் செலவழித்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தொடராய்வு தொடர்கிறது.

  1. “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு. ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார்.  அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று. எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர்.
  2. அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார் என்பதாம். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.
  3. “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார்.
  4. “ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார். வரிவடிவம் செயற்கை. நாத வடிவம் இயற்கை. அகரத்திற்குத் தலைமை நாதவடிவினால் எல்லா எழுத்துக்கள் உள்ளும் கலந்து நிற்பது. இறைவன் உலக உயிர்களை அறிவது செயற்கை உணர்வால் அன்று. இயற்கை உணர்வால் முற்றும் அறிகின்ற பேராற்றல் உடையவன். ‘காத்தும் படைத்தும் கரந்தும்’ என்பர் அடியார். தனித்தும் கலந்து நிற்பது இறையியல்பு. ‘ஏகன் அநேகன்’ என்பது திருவாசகம்.
  5. ‘ஆதிபகவன் என்னும் இருபெயரோட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு” என்று எழுதுகிறார். ஆதிபகவன் என்பது தமிழாயின் ஒற்று மிகுந்திருக்க வேண்டும். மிகாமையின் அது வடமொழியாயிற்று எனத் தம் இலக்கணப் புலமையைக் காட்டுகிறார். ஆதிபகவன் ஒரு சொல் என்பது கருத்து.
  6. “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி எல்லாம் என்றார்” என்று தமது கூரிய நோக்கினைப் புலப்படுத்துகிறார். எழுத்து அகர முதல என்றாலே போதும். “எழுத்தெல்லாம் அகர முதல” எனச் சொல்வானேன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அவர் காலத்தில் தமிழோடு ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வடமொழியையும் உட்கொண்டு எழுதுகிறார். இங்கே ஒரு கருத்து சிந்தித்தற்குரியது. வாயைத் திறந்தாலே வரும் ஒலி அகரமேயாதலின் உலகின் எல்லா மொழிக்கும் அவ்வொலி தலைமையொலி என்பது உணரப்படவேண்டும். இன்றைக்குப் பரிமேலழகர் உரையெழுதியிருந்தால் அகரவொலியை உலகின் அனைத்து மொழிக்கும் தலைமையொலி என்றுதான் எழுதியிருப்பார். (இது கடடுரையாளர் அனுமானம்.)
  7. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது” என எழுதுகிறார்.  தமிழில் ‘உலகு’ என்னும் சொல் ஆகுபெயராகாது. உலகு என்பது பலபொருள் ஒருசொல். ‘உலகு சிரித்தது’ என்னும்போது அது மக்களைக் குறிக்கும். ‘உலகு செழித்தது’ என்கிறபோது அது மண்ணைக் குறிக்கும். இந்த விளக்கத்தைக் “காலம் உலகம்” என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா ஆராய்கிறது. பரிமேலழகர் எந்த இடத்திலும் உலகு என்பதை ஆகுபெயராக்கி உரையெழுதினார் இலர். ‘புல்லாகிப் பூடாகி’ எனவரும் அனைத்துயிர்களுக்கும் இறைவன் முதலானவன் என்பது கருத்து.
  8. ‘ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது என்று எழுதுகிறார்.
  9. “இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது”. என எழுதுகிறார். முதற்கடவுள் என்பதனால் இரண்டாவது, மூன்றாவது கடவுள் இருப்பதாகப் பொருளில்லை. சொரூபம், அருவம், அருவுருவம், உருவம் என இறையுணர்நிலை நான்கு என்பது ஆன்றோர் கருத்து. ‘சொரூபம்’ என்பது அறிவுக்கும் நினைவுக்கும் உணர்வுக்கும் எட்டாத நிலை. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்பது பெரியபுராணம். அந்த நிலைக்கு இறைவனின் தலைநிலை அல்லது முதல் நிலை என்பது பெயர். அந்த நிலையை அறிவதற்குப் படிநிலைகள் பல உள. சொரூப நிலையில் உள்ள கடவுளையே முதற்கடவுள் என்று பரிமேலழகர் கூறுகிறார். விரிக்கின் பெருகும்.

பரிமேலழகர் உரை அருமை

இந்தக் குறட்பாவின் கிடக்கைநிலை உரை மேலே சொல்லப்பட்டது.  “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கைநிலைப் பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காண முடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக் கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

“காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் திருவள்ளுவர் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக் காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

பரிமேலழகரைத் தொடர்ந்த நச்சினார்க்கினியர்

இலக்கிய உரையாசிரியர்களில் பரிமேலழகருக்கு இணையாகவும் எண்ணிக்கையில் பெருமளவு இலக்கியங்களுக்கு உரையெழுதியவராகவும் கருதப்படுகிறவர் நச்சினார்க்கினியர். இலக்கிய இலக்கணங்களுக்கு உரையெழுதி உரைமுடி கண்டவர். அவர்,

  • ‘எழுத்தெனப்படுப’ எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவின் விளக்கவுரையில் “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார் என்பது உணர்த்தற்கு ‘னகர இறுவாய்’ என்றார் என எழுதுகிறார். “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்கும்” என்னுந் தொடர் பரிமேலழகரின் “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி” என்னும் உரைத்தொடரை அப்படியே உள்வாங்கி யமைந்திருப்பது காண்க.
  • “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில் அவருடைய விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது. “இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம் அதுபோல இறைவனாகிய முதலை உடையது உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க”

என்று எழுதிக்காட்டும் நச்சினார்க்கினியர் “இறைவனாகிய முதலை உடையது உலகம்” என்னும் தொடரில் திருக்குறளின் கிடக்கைநிலை உரையைக் கருத்திற் கொள்ளாது பரிமேலழகர் உரைவிளக்கத்தைப் போற்றிக் கொள்கிறார். இதனால் பழந்தமிழ் உரையாசிரியர்கள் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி வந்த புலமை மாண்பு வெளிப்படுவதைக் காணலாம்.

நிறைவுரை

‘உலகம் இருப்பதால் இறைவன்’ என்னும் அனுமானத்தால் ஏற்படும் மயக்கத்தைத் தம் புலமையால் மாற்றி ‘உலகத்திற்கு முதல்வன் இறைவன்’ என்னும் உண்மையைக் கண்டறிந்து கூறியதே இந்தக் குறட்பாவில் அழகரின் உரையருமை எனலாம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.