வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35

0

தி. இரா. மீனா

சத்தியக்கா

சரணர்களின் வீட்டுமுற்றத்தைப் பெருக்கித் தூய்மைப்படுத்துவது இவரது காயகமாகும். ’சம்பு ஜக்கேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

1. “மலர்தூவி வணங்குவது நியமமில்லை
மந்திரம் தந்திரம் நியமமில்லை
தூபம் தீபாரதனை நியமமில்லை
பிறர் பணம்,பிறன் மனை,பிறதெய்வங்களை
விரும்பாததுவே நியமம்
சம்பு ஜக்கேஸ்வரனில் காண்பீர் நித்தியநியமம்”

2. “காதலனுக்கு வேட்கையில்லை எனக்கும் பொறுமையில்லை
மனதின் வேட்கையறியும் தோழியரில்லை என்ன செய்வேன்?
மன்மத பகைமையின் அனுபவத்திற்குள் மனம் உள்ளது.
என்ன செய்வேன்? நாட்கள் வீணாவதால் இளமை கழியுமுன்
சம்பு ஜக்கேஸ்வரனோடு இணைத்து விடு தாயே.”

3. “முலையும் கூந்தலுமிருப்பதால் பெண்ணென மெய்ப்பிக்கமுடியாது
தாடிமீசை கத்தியிருப்பதால் ஆணென மெய்ப்பிக்க முடியாது
அது உலகின் கண்ணோட்டம், அறிந்தவரின் நீதியன்று.
கனி எதுவானாலும் இனிப்பே காரணம்
அழகற்ற மலருக்கு நறுமணமே காரணம்
இதன் வகையை நீயேயறிவாய் சம்பு ஜக்கேஸ்வரனே“

சித்தபுத்தய்யாவின் பூண்னியஸ்திரி காளவ்வே 

“பீமேஸ்வரா“ இவரது முத்திரையாகும்.

“விரதக் கேடுடையோன் இலிங்கமற்றவனைக் காண்பது
இறந்த ஞமலியைக் காகம் பார்ப்பது போலாம்
அவனுடன் தொடர்பு வேண்டாம் பீமேஸ்வரனே“

சித்தராமா 

சித்தராமேஸ்வரா பன்னிரண்டாம் நூற்றாண்டின் முதல் வரிசை வசனக்காரர்களில் இவரும் ஒருவர். சிறுவனாக இருந்தபோதே அறியாமை உடைய பக்தராக இருந்தவர் மாடு மேய்ப்பது இவரது காயகம். ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ச்சுனரைக் கண்டார். பின்னர் சொன்னலிகே வந்து கோயில் கட்டினார். அதற்கு ’யோகரமணீய திருத்தலம்’ என்று பெயரிட்டார். இலிங்கம் நிறுவுதல், குளம், ஏரிகள் அமைப்பது ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு செயல் பட்டதால் ’கர்மயோகி’ எனப் போற்றப்பட்டார். அல்லமாபிரபு இவரைக் கல்யாணுக்கு அழைத்து வந்து பசவேசரிடம் ’இலிங்கதீட்சை ’பெற வைத்தார். கல்யாண் புரட்சிக்குப் பிறகு ’சொன்னலிகே’ சென்று இறைவனோடு ஐக்கியமானார். ’கபிலசித்த மல்லிகார்ஜூனா’  இவரது முத்திரையாகும்.

1. “அங்கத்திற்கு இன்பம் அளித்தவரைக் கண்டேனேயன்றி
இலிங்கத்துக்கு கொடுத்தவரைப் பார்க்கவில்லை.
இலிங்கத்துக்குப் பதினாறு வகையில் உபச்சாரங்கள்
செய்தவரைப் பார்த்தேனேயன்றி
உள்ளம் கொடுத்தவரைக் காணேன்.
உள்ளம் கொடுத்தவரைக் கண்டேனேயன்றி
உள்ளமே இலிங்கமானவரைக் காணவில்லை,
கபிலசித்தி  மல்லிகார்ஜூனனே“

2. “ஐயனே! நீரை இரும்பு உட்கொண்டதைப் போல
ஒலியை அமைதி உட்கொண்டதைப் போல
கானல்நீரை வெட்டவெளி உட்கொண்டதைப் போல
என்னை எப்போதும் ஆட்கொள்வாய்
கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

3. “அறிந்தவன் எப்படி இறந்தான்?
அறிந்தவன் எப்படிப் பிறந்தான்?
அறிந்தவன் எப்படிக் கொடிய தளையில் சிக்கினான்?
அறிந்தவனே சிரஞ்சிவியாம் பாராய்
கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

4. “நீரெல்லாம் ஒன்றாம் ;
பனைமரத்தில் நிலைத்து மதுவென்றானது,
கற்பகத் தருவில் நிலைத்து அமுதமானது.
தேகமெல்லாம் ஒன்றே;
பெண்ணுள் நிலைத்துப் பிறவிக்கு மூலமானது,
இலிங்கத்துள் நிலைத்துப் பிறவிக்குக் காட்டுத் தீயானது பாராய்
கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

5. “செதுக்கிய கல் இலிங்கமென்றானது
செதுக்காத கல் வெறுங்கல்லென்றானது;
வழிபாடு செய்பவன் பக்தனென்றானான்;
வழிபாடு செய்யாதவன் மனிதனென்றானான்;
கல்லானாலென்ன, பக்திக்குதவியது
மனிதனானாலென்ன, பக்திக்குக் காரணமானான்;
கல் இலிங்கமல்ல, இலிங்கம் கல்லல்ல  பாராய்,
கபிலசித்தி மல்லிகார்ஜூனனே.”

6. “கற்பக விருட்சத்தை மரமெனலாமா?
காமதேனுவைப் பசுவெனலாமா?
பரிசவேதியைக் கல்லெனலாமா?
நம் கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் அடங்கியோர்
அனைவரையும் மனிதரெனலாமோ?

7. “பார்க்கலாம் கைக்குள் கிடைக்காது
அறியலாம் அடையாளப்படுத்த முடியாது
உணரலாம் இணையமுடியாது
உவமையற்ற இத்தகு மேன்மையை
கபிலசித்த மல்லிகார்ஜூனனே, உன் சரணர் அறிவார்.”

8. “பக்தர்கள் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்
திருமணத்தில் இணைகின்றனர்.
பக்தர்கள்  மண்மீது காதல்கொள்கின்றனர்
வாங்கி வீடுகட்டுகின்றனர்
பக்தர்கள் சொத்தின்மீது காதல் கொள்கின்றனர்
வேதனைக்குள்ளாகின்றனர்
கபிலசித்த மல்லிகார்ஜூனா!”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.