Blog

  • சிற்பி 85

    சிற்பி 85

    முனைவர் ஔவை நடராசன்

    கவியரசர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கிய நாளிலிருந்தே இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் புதுமைக்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்ட தனிப் பெருந்தகை எனப் பல முறைகள் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    சிற்பி அவர்களைப் பெரும் பேராசிரியர் என்று நினைக்கலாம். நாடறிந்த கவியரசர் என்று நாம் போற்றிப் புகழலாம். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களைத் தோள் மேல் சுமந்து அவர்களுக்கெல்லாம் ஆக்கம் தேடி, நன்மை செய்வதற்கு முன் நிற்கும் அவர் இந்திய நாட்டின் இலக்கியக் கழகமாகிய சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவராகவும் இருந்து ஆற்றி வருகிற தொண்டுகளை நாடு மறக்காது.

    அருமைப் பேராசிரியர் சிற்பி அவர்கள், அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தவர். அருட்செல்வர் பேசும்போது சொல்வார், புரட்சி, புதுமை ஆகியவற்றிற்கும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் சிற்பி அவர்கள்.  எவருக்கும் எளிதில் வளைந்து கொடுக்கமாட்டார்.  தன்னுடைய கருத்தை நேர்மை பட நின்று பேசுவதில் அவர் என்றும் சிறந்தவர்.  அவருடைய புலமை அடுக்கடுக்காக எடுத்துப் பேசுவதாகும்.

    சிற்பி அவர்களுக்கு 85 வயதா? என்று கேட்கும்போதே நான் வியப்படைகிறேன்.

    அண்மையில்கூட, கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஏழெட்டு இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு, மறுநாள் புது தில்லி சென்று அங்கு இலக்கியக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்பதை பார்க்கும் போது அந்த விரைவும் ஆற்றலும் சோர்வில்லாத திறத்தையும் கண்டு நான் வியப்படைகிறேன்.

    பேராசிரியர் சிற்பி அவர்கள் தாம் தொட்ட துறைகள் அனைத்திலும் உயரத்தைத் தொட்டவர்.

    தற்பெருமை தானறியாத தகைமையன் என்பது போல, அவருடைய அடக்கமும் ஆன்றவிந்த பெருமையும் போற்றத்தக்கவை.

    கவியரசர், சிந்தனையாளர், சீர்திருத்தவாதி என்று எல்லாத் துறைகளிலும் பெருமை வாய்ந்தவர்.

    கவியரசர் சிற்பி பல்லாண்டு காலம் வாழ்க.

    பலருக்காகத் தொண்டு செய்யும் அவரின் கைகள், உதவி செய்வதற்காக நடந்து செல்லும் அவரின் கால்கள், தளர்ச்சி இல்லாமல் ஊருக்கெல்லாம் உதவிட வேண்டும் என்று ஊற்றெடுக்கும் மாட்சி, மனம் இளமையோடு இருக்க வேண்டும்.

    அவர் வாழ்க பல்லாண்டு.

    வாழ்க சிற்பியின் சிறப்பு.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 1

    எட்டுக் கோணல் பண்டிதன் – 1

    தி. இரா. மீனா

    இராமாயணம், மகாபாரதம், மற்றும் சில உபநிடதங்களில் வணக்கத்திற்குரியவராகப் போற்றப்படும் அஷ்டவக்கிரன் தான் வாழ்ந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான ஆன்மீகச் சிந்தனையை வளர்த்தவர். அஷ்டம் என்றால் எட்டு என்றும், வக்கிரன் என்றால் கோணல் என்றும் பொருள். பிறக்கும்போதே இரு பாதங்கள், இரு கால் மூட்டுகள், இரு கைமூட்டுகள், மார்பு மற்றும் தலை ஆகியவற்றில் கோணல்கள் காணப்பட்டதால் இது அவருக்கு காரணப் பெயராகிறது. அவருடைய தந்தையின் சாபத்தால் இக்குறை அவருக்கு ஏற்படுகிறது.

    அவர் தாயின் கருப்பையிலிருந்த போது, முனிவரான அவருடைய தந்தை கஹோதா அவருக்குப் பல்வேறு வகையான பாடங்களை விவரித்துச் சொல்வார். அதனால் பிறப்பதற்கு முன்னால் கருவிலிருக்கும் போதே ’தன்னிலை’ என்பது குறித்துப் பல்வேறு விளக்கங்களை அறிந்தவராகிறார். ஒரு நாள் அவ்வகையான பாட விளக்கத்தின் போது தந்தை ஏதோ ஒன்றைத் தவறாகச் சொல்லிவிடுகிறார். அதைச் சுட்டிக் காட்டுவது போலக் குழந்தை ’ஹும்’ என்கிறது. துரதிர்ஷ்டவசமாக தந்தை  கோபமடைந்து, எட்டு விதமான ஊனத்தோடு குழந்தை பிறக்கட்டும் என்று சாபமிடுகிறார். அதனால் உடல் ரீதியான குறைகளோடு குழந்தை பிறக்கிறது.

    அவன் இளைஞனான பிறகு ஒரு முறை தன் தந்தையோடு ஜனக மன்னரால் நடத்தப்படும் மிக உயர்ந்த விவாதமொன்றிற்குப் போகிறான். ஜனகர் அரசனாக இருந்த போதிலும் மெய்யறிவு தேடுபவர். ஞானம் பெறத் துடிப்பவர். அதனால் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள அனைத்து ஆன்மீகவாதிகளையும்  தன் அவையில் ஒன்று சேர்க்கிற அளவுக்கு அரசனின் தேடல் அமைகிறது.

    தினமும் தன் அன்றாடப் பணிகளை விரைவாக முடித்து, அவையிலுள்ள அறிஞர்களின் விவாதங்களில், பேச்சுகளில் கலந்துகொள்வார். வெவ்வேறு வகையான துறைகளில் மேம்பட்டிருக்கிற அறிஞர்களின் விவாதங்கள் நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று கால எல்லையற்று நடக்கும். அவற்றில் தொடர்ந்து பங்கு கொள்வார். எனினும் அவர் தேடிய  ஞானத்தைத் தருவாரில்லை.

    ஒரு முறை அம்மாதிரியான ஒரு விவாதத்திற்கு அஷ்டவக்கிரனின் தந்தை கஹோதா அழைக்கப்பட, தந்தையோடு அவனும் செல்கிறான். விவாதம் தொடங்கி அறிஞர்கள் இடையே பெரும் சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அஷ்டவக்கிரன் எழுந்து நின்று “இவையனைத்தும் வீண் பேச்சு. இவர்கள் யாருக்குமே ’தன்னிலை’ என்பது குறித்து எதுவும் தெரியாதெனினும் எல்லோரும் அது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். எனினும், என் தந்தை உள்பட யாருக்கும் ’தன்னிலை’ பற்றி எதுவும் தெரியாது” என்கிறான்.

    ஜனகர் அவனைப் பார்த்து “நீ  சொன்னதை  உன்னால் நிரூபிக்க முடியுமா? இல்லையெனில் இந்த உடலைக் கூட நீ இழந்து விடக்கூடும்” என்கிறார்.

    “என்னால் நிரூபிக்க முடியும். ”அவன் பதில் சொல்கிறான்

    “அதற்காக உனக்கு என்ன வேண்டும்?” ஜனகர் கேட்கிறார்.

    “அதற்கு நான் சொல்வதை முழுவதுமாக நீங்கள் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு உடன்பட்டால்தான் நான் விளக்க முடியும். நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே நீங்கள் செய்தால் ’உங்களை’ நீங்கள் அறிய நான் உதவ முடியும்.”

    அவனுடைய நேர்மையைப் பாராட்டிய ஜனகர் “சரி, நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்“ என்கிறார்.

    “நான் காட்டில் வசிக்கிறேன். அங்கு வாருங்கள்“ என்று சொல்லிப் போகிறான்.

    சில நாட்களுக்குப் பிறகு ஜனகர் காட்டிற்குப்  போக, படை, பட்டாளம் தொடர்கிறது. உள்ளே செல்லச் செல்ல, காடு அடர்த்தியாகிக் கொண்டே போகிறது. நீண்ட தேடலின் போது ஜனகர் தனித்துப் போகிறார். காட்டை விட்டு வெளியேற முயலும் போது திடீரென ஒரு மரத்தினடியில் அஷ்டவக்கிரன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார். உடனே குதிரையை விட்டிறங்கும் போது, ஒரு கால் சேணை வளையத்திலும் மற்றொரு கால் மேலே தூக்கியுமிருக்க, ”நில்லுங்கள். அப்படியே நில்லுங்கள்” என்று அஷ்டவக்கிரன் சொல்ல,  ஜனகர் அப்படியே வசதியற்ற ஒரு நிலையில் ஒரு கால் மேலே இருக்க, குதிரையில் தொங்கியபடி இருக்கிறார்.

    அந்தத் தடுமாற்றமான நிலையில் நின்றிருக்கும் நிலை — அது கணப்பொழுது எனவும், நீண்ட காலமெனவும் கருத்துகள் சொல்லப்படுகின்றன. அஷ்டவக்கிரன் சொன்ன அந்த நிலையிலேயே நின்று ’தன்னிலை’ உணர்ந்திருக்கிறார். ஜனகரின் ஐயங்களையும் அஷ்டவக்கிரன் தீர்த்து வைக்க,  ஜனகர் ஞானம் பெறுகிறார். குதிரையிலிருந்து இறங்கி அஷ்டவக்கிரனின் திருவடி தொட்டு “அரண்மனையும், அரசாட்சியும் எனக்கு முக்கியமில்லை. நான் உன்னுடன் இருக்கிறேன்“ என்கிறார். ஆனால் அவனோ “ஞானம் பெற்ற அரசன், மக்களுக்கு வேண்டும்“ எனச் சொல்லி அவரைத் திருப்பி அனுப்பி வைக்கிறான். ஜனகர்,  அஷ்டவக்கிரனின் ஆசிரமத்திற்கு அடிக்கடி வருகிறார்

    ஆசிரமத்திலுள்ளவர்கள் இதை விரும்பவில்லை. அரசனான இவரிடம் நம் குரு என்ன ஆன்மீகம் கண்டார்? வாழ்வையே அர்ப்பணித்து வந்த துறவிகளான நம்மைப் புறக்கணிப்பது நியாயமானதா? எனத் தமக்குள் பேசிக்கொண்டனர். இதை உணர்ந்து கொண்ட அஷ்டவக்கிரன், அவர்களின் தவறான பார்வையைச் சரிசெய்ய முடிவு செய்கிறான். ஒருநாள் அவன் ஆசிரமத் துறவிகளோடு விவாதித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஜனகரும் வந்து கலந்துகொள்கிறார். சிறிது நேரத்தில் அங்கு ஓடி வந்த வீரனொருவன் ஜனகரை வணங்கி, “அரசனே, அரண்மனை பற்றியெரிகிறது. அனைவரும் நிலைகுலைந்துள்ளனர்” என்கிறான். கோபத்துடன் எழுந்த அரசன், “இந்தக் கூட்டத்திற்குள் வந்த குறுக்கிட உனக்கு எவ்வளவு துணிவு வேண்டும். வெளியே போ” என்று விரட்டுகிறார். அவன் அங்கிருந்து ஓட, விவாதம் மீண்டும் தொடர்கிறது.

    சிறிது நாட்கள் கழித்து, அஷ்டவக்கிரன் மற்றுமொரு திட்டமிடுகிறான். துறவிகள் கூடியிருக்க, அவன் சொற்பொழிவு நிகழ்த்துகிறான். திடீரென அங்கு ஓடிவரும் ஆசிரம உதவியாளன், “குரங்குகள், துறவிகளின் ஆடைகள் உலர்த்தியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து ஆடைகளை நாசம் செய்கின்றன” என்று பதற்றத்தோடு சொல்கிறான்.

    துறவிகள் வேகமாக எழுந்து தங்கள் ஆடைகளைப் பாதுகாக்க ஓடுகின்றனர். அங்கு சென்ற போது குரங்குகள் இல்லாததையும், அவர்களது உடைகள் அப்படியே உலர்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கின்றனர். என்ன நடந்தது என்று உணர்ந்து தலைகுனிந்து திரும்புகின்றனர். விவாதம் தொடர்கிறது. அதனிடையே “தன் அரண்மனை பற்றியெரிந்து கொண்டிருந்த போதும்  அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி, சொற்பொழிவின் போது குறுக்கிட்ட வீரன் மீது அரசன் கோபம் கொண்டான். அவன் சிந்தனை அது. துறவிகளான உங்களுக்கு உடைமை என்று எதுவுமில்லாத போதும், செய்தி கேட்டதும் ஓடினீர்கள், நான் பேசுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் எவருமே சீந்தாத அந்த உடைகளைப் பாதுகாக்க ஓடினீர்கள். உங்கள் துறவு எங்கே? அவன் அரசன், ஆனாலும் துறவி“ என்று அவர்களின் தவறான பார்வையை மாற்றுகிறான்.

    ஒரு மனிதனுக்குள்ளான வளர்ச்சியென்பது அவன் வெளியுலகில் என்ன செய்கிறான் என்பதல்ல, தனக்குள் அவன் எப்படிச் செயல்படுகிறான் என்பதில்தான் உள்ளது என்பதை அறிவித்த உயர்விது.

    தன்னிலை, மெய்ம்மை, தன்னையுணர்தல், விடுதலை ஆகியவை குறித்து அஷ்டவக்கிரனுக்கும் ஜனகருக்குமிடையே நடந்த உரையாடலை விளக்குவதுதான் அஷ்டவக்கிர கீதை. இதற்கு அஷ்ட சம்ஹிதை என்ற பெயருமுண்டு. இது பகவத்கீதையைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும் தத்துவத்தைப் பற்றி, அது முன்னிறுத்தும் பார்வை வேறுபடுகிறது.

    [தொடரும்]

    Share
  • அமெரிக்க மனைவியின் துக்கம் அனுசரிக்கும் அழகு

    அமெரிக்க மனைவியின் துக்கம் அனுசரிக்கும் அழகு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சில நாட்களுக்கு முன்னால் எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். எங்கள் திருமணத்திற்கு முன்பே அவர் என் கணவருக்குப் பரிச்சயமானவர். அமெரிக்கரான அவர் பீஸ்கோர் (peace corps) திட்டத்தில் இந்தியாவுக்கு வந்தபோது என் கணவரோடு பரிச்சயம் ஏற்பட்டது. பின் அவர் அமெரிக்கா திரும்பிய பிறகும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அதன் பிறகு நாங்கள் அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்தோம்.  என் கணவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபோது அவரும் அங்கேயே முனைவர் பட்டதிற்குச் சேர்ந்தார்.  நாங்கள் இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்து அவர்கள் நட்பு நீடித்தது.  நாங்கள் இரண்டாவது முறையாக அமெரிக்காவில் செட்டில் ஆனதும் அவரும் பக்கத்திலேயே வசிக்க ஆரம்பித்தார்.  இதற்குள் இவருக்கும் இவருடைய முதல் மனைவிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு இரண்டாவது முறையாக மணம் செய்து கொண்டிருந்தார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்திருந்தாலும் அடிக்கடி அவரைப் பற்றிப் பேசுவார். அந்த விவாகரத்திற்குக் காரணம் அவருடைய முதல் மனைவிதான். இவர் மனைவியோடு ஒத்துப்போகத் தயாராக இருந்தாலும் அவருடைய முதல் மனைவி என்ன காரணத்தாலோ இவரை விட்டுப் பிரியவே விரும்பினார்; அப்படியே பிரிந்தும்விட்டார்.

    அப்படிப் பிரிந்துபோன மனைவியை இவர் கடைசிவரை தன் மனதில் வைத்திருந்தார் என்று நான் சொல்வேன். முதல் மனைவி திரும்பித் தன்னிடம் வர மாட்டார் என்று உறுதியானதும் இவரும் இன்னொரு துணையைத் தேடிக்கொண்டார். அப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் இருவருக்கும் இடையே ஒரு பந்தம் ஏற்படவில்லையென்று நான் சொல்வேன்.  வசதிக்காக இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

    இரண்டாவது திருமணம் முடிந்து ஏழெட்டு வருடங்களிலேயே அவருக்கு ஒரு வகையான ரத்தப் புற்றுநோய் வந்தது.  அமெரிக்காவில்தான் யாரையும் எளிதில் இறக்கவிட மாட்டார்களே!  இருபது வருடங்கள் அந்த வியாதியோடு வாழ்க்கையை ஓட்டிவந்தார்.  கடைசியாக சென்ற வாரம் அவர் உயிர் பிரிந்தது.  நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அவர்கள் வசிக்கும் இடம் நாற்பது மைல் தூரம் என்றாலும் (அமெரிக்காவில் நாற்பது மைல் தூரத்தை எளிதாக நாற்பது நிமிடங்களில் கடந்துவிடலாம்.  அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை எத்தனை நேரத்தில் அந்த இடத்தை அடையலாம் என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஒரு மணி நேர தூரம் என்றால் 60 மைல் தூரம் என்று அர்த்தம்.) முதல் சில வருடங்களில் அடிக்கடி வந்து எங்களைப் பார்ப்பார்.  அவருக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும். நானும் அவர் வரும்போதெல்லாம் அவருக்குப் பிடித்த இந்திய உணவுகளாகச் சமைப்பேன். வருடத்திற்கு ஒரு முறையாவது அவர் மனைவியும் உடன் வருவார்.  அதன் பிறகு வியாதியின் தாக்கம் அதிகமாகியதால் எங்கள் வீட்டிற்கு வருவதைக் குறைத்துக்கொண்டே போனார். வியாதியின் கொடூரத்தால் எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொள்வது, மின்னஞ்சல் அனுப்புவது போன்றவற்றைக்கூட அவரால் செய்ய முடியவில்லை.  இருவருக்கும் பொதுவான லேண்ட் லைனில்தான் நங்கள் அவரைத் தொடர்பு கொள்வோம், செய்திகளை விடுவோம்.  இவரால் எங்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லையென்றால் மனைவியாவது எங்களைத் தொடர்புகொள்ளக் கூடாதா என்று நான் நினைப்பேன்.  தனக்கும் தன் கணவருக்கும் தொடர்பு எதுவும் இல்லையென்பதுபோல் மனைவி நடந்துகொண்டார்.

    ஒரு முறை அவருடைய மகள் (முதல் திருமணத்தில் பிறந்தவர்) இவரைப் பார்க்க வந்திருந்தபோது எங்கள் இருவரின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார்.  இவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்று தெரிந்துகொண்டு இவருடைய மகள் எங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டார். எங்கள் வீட்டிற்கு அவளுடைய தந்தை வர விரும்புவதாகத் தெரிவித்தார்.  நாங்கள் அப்போது இந்தியாவில் இருந்ததால் அமெரிக்கா திரும்பியதும் அவர் மகளை எங்கள் வீட்டிற்கு அவரை அழைத்துவரும்படிக் கூறினோம். 2019 நவம்பர் மாதம் மகளும் தந்தையும் வந்தனர். வழக்கம்போல் நான் இந்திய உணவு சமைத்திருந்தேன். ரசித்துச் சாப்பிட்டார்.  அதன் பிறகு மறுபடி அவரைப் பார்க்கவே முடியவில்லை.  ஒரு முறை zoom-இல் அவரையும் மனைவியையும் பார்த்துப் பேசினோம். மகள் சிகாகோவுக்கு வரும்போது மறுபடி எங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதாக ஏற்பாடு.  ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை.

    தன் கணவரின் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய ஒரு முறைகூட எங்கள் வீட்டிற்குக் கணவனை அழைத்துவர வேண்டும் என்று அவர் மனைவி நினைக்கவில்லை; ‘அவருடைய நண்பர் வீடுகளுக்கெல்லாம் என்னால் அவரைக் கூட்டிக்கொண்டு போக முடியாது’ என்று அவர் மகளிடம் சொல்லியிருக்கிறார்.  எங்கள் வீட்டிற்குக் கணவரைக் கூட்டிவருவது அப்படியொன்றும் கடினமான காரியம் இல்லை அவருக்கு.  எங்களோடு உரையாடுவதையும் எப்போதும் ரசிப்பார்.  அப்புறம் ஏன் கூட்டிவரவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். எங்கள் வீட்டிற்கு அவரை மகள் கூட்டிவரவில்லையென்றால் எங்களால் அவரைப் பார்த்திருக்க முடியாது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவர் எங்கள் வீட்டிற்கு வந்ததோடு சரி.  அதன் பிறகு அவரால் தானாக வர முடியவில்லை.  இந்த அளவுகூட கணவனின் விருப்பத்தை நிறைவேற்றிவைக்கப் பிரியப்படாத பெண்கள் இந்த அமெரிக்க மனைவிமார்கள்.

    அவர் இறந்த செய்தியைக்கூட அவர் எங்களுக்குச் சொல்லவில்லை. இன்னொருவர் மூலம்தான் எங்களுக்குத் தெரிந்தது. உடனே என் கணவர் தனக்கும் தன் நண்பருக்கும் பொதுவான நண்பர்கள், உடன் வேலைபார்த்தவர்கள் ஆகியோருக்குச் செய்தி அனுப்பினார்.  அப்படிச் செய்தி கிடைத்த எல்லோரும் என் கணவருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து என் கணவர் அவர் மனைவிக்கு அனுப்பினார். அதைப் பார்த்துத் தான் மிகவும் மனம் நெகிழ்ந்ததாகவும் ஆழ்மனதிலிருந்து நன்றி தெரிவிப்பதாகவும் மின்னஞ்சல் அனுப்பினார். கணவர் நண்பர் வீட்டிற்குப் போகப் பிரியப்பட்டபோது அவர் மனைவி அதை நிறைவேற்றிவைக்கவில்லை.  இப்போது அவர் நண்பர்கள் எழுதிய இரங்கல் செய்திகள் அவர் மனதை நெகிழவைத்ததாம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

    Share
  • Q&A: அனேகனும் அநேகனும் ஒன்றா?

    அண்ணாகண்ணன்

    என் யூடியூப் அலைவரிசையில், அன்பர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறேன். கனடாவிலிருந்து நண்பர் குமணன் எழுப்பிய கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    உங்களுக்கு ஏதும் கேள்விகள், ஐயங்கள் இருந்தால், எனக்கு எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ ஒளி வடிவிலோ அனுப்பலாம்.

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 27

    பழகத் தெரிய வேணும் – 27

    நிர்மலா ராகவன்

    (கேள்விகள் ஏன்? எப்போது?)

    பொதுக்கூட்டங்களில், சொற்பொழிவாளர், “ஏதாவது கேட்பதானால் கேளுங்கள்,” என்பார்.

    பலர் மௌனம் சாதிப்பார்கள். தம் ஐயம் மடத்தனமாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமே காரணம்.

    பள்ளி வகுப்புகளிலும் இதே கதிதான்.

    பலரும் படிப்பில் சோடை போவது ஏன் தெரியுமா?

    கேள்வி கேட்டு மாட்டிக்கொள்ள விரும்பாது, அதற்கான பதிலையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் தன்மை இல்லாததால்தான்.

    குழந்தைகள் மூன்று வயதிலிருந்து கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

    வீட்டிலிருக்கும் தாய்மார்கள் வேலை மும்முரத்தில், ;தொணதொணப்பு’ என்று திட்டி குழந்தைகளை அடக்கிவிடுவார்கள்.

    ‘கேள்வி கேட்பதே தவறு’ என்று அக்குழந்தைகள் மனதில் படிந்துவிட, புதிய சமாசாரங்களை அறிவதில் நாட்டமில்லாமல் வளர்கிறார்கள்.

    ‘அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தேன். ஏனோ இப்படி இருக்கிறாள்!’ என்று சில பெற்றோர் குறைப்படுகிறார்கள்.

    குழந்தைகளுக்காகச் செலவிடும் பணம் முக்கியமில்லை. அவர்கள் எதையாவது அறிய ஆர்வம் காட்டுவார்கள். அப்போது மேலெழும் ஆர்வத்திற்குத் தடைவிதிக்காது, அவர்களுடைய சந்தேகங்களை அவ்வப்போது தீர்த்துவைக்க நேரத்தையும் ஒதுக்கவேண்டும்.

    கதைகள்

    1. மூன்று வயதுச் சிறுமி தன் தாயின் மார்பகத்தைச் சுட்டிக் கேட்டாள், “ஏன் ஒனக்கு மட்டும் இது பெரிசா இருக்கு? நான் அப்படி இல்லியே!”

    வயதுக்கு மீறிய கேள்வி என்று கருதி, தாய் கோபிக்கவில்லை. புரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேறு என்ன வழி?

    “நீயும் பெரியவளா ஆனா, என்னைப்போல இருப்பே!” என்று சமாதானப்படுத்தினாள்.

    2. ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தன் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணைப் பார்த்து, “ஒங்க கைக்கு அடியிலே ஏன் இப்படி வளர்ந்திருக்கு?” என்று கேட்டான். (அவள் கையில்லாத ரவிக்கை அணிந்திருந்தாள்).

    தாய்க்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அதை மறைக்க, ‘ரொம்ப அசடாப் போயிட்டே!’ என்று மகனைப் பார்த்துக் கத்தினாள்.

    “குழந்தைகளுக்குத்தான் அப்படி இருக்காது. பெரியவர்களுக்கு..,” என்று அவனுக்குப் புரியும் விதத்தில் விளக்கியிருக்கலாம். ஆனால், அவளைப் பொறுத்தவரை, இதெல்லாம் கெட்ட சமாசாரம். (இயற்கை வளர்ச்சியை இப்படி மறைத்தே குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறோம்).

    3. ஏழு வயதுச் சிறுவன் தன் தாயைக் கேட்டான், “அம்மா! ஏன் சில பேர் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துகிறார்கள்?”

    அவர்கள் வீட்டில் குடியிருந்த நான் சமையலுக்கு அதைப் பயன்படுத்துவதைப் பார்த்துக் கேட்டிருக்கிறான்.

    தனக்குத் தெரியாது என்பதை ஒத்துக்கொள்ள விரும்பாத தாய், அறியும் ஆர்வம் இருந்த மகனைக் கண்டித்தாள்: “நீ கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா விடிஞ்சுடும், போ!”

    நான்தான் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஆசிரியை ஆயிற்றே! “விரைவாக வேகும்,” என்று இரண்டே வார்த்தைகளில் விளக்கினேன்.

    பையனது முகம் சுண்டிப்போயிற்று. தன் அம்மாவுக்குத் தெரியாதது வேறொரு அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறதே என்ற வருத்தம்தான்.

    ‘எங்கள் அம்மாக்கள் முட்டாள்கள். அதனால்தான் நாங்கள் இப்படி இருக்கிறோம்!’ என்று என் மாணவிகளில் சிலர் தன்னிரக்கத்துடன் கூறியிருப்பது நினைவில் எழுந்தது.

    தற்காலத்தில், நாம் அறிய வேண்டுவன எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள கணினி வழிவகுக்கிறது. அது மட்டும் போதுமா?

    முதன்முறையாக வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லுமுன் பயண ஏடுகளைப் புரட்டிப் பார்ப்போம். சென்றபின், அங்கு பார்க்கவேண்டியவை வேறு ஏதாவது உள்ளதா என்று அங்குள்ளவர்களைக் கேட்டும் தெரிந்துகொள்ளலாம்.

    ஆனால், சகபயணிகளின் உயிரை வாங்கி தம் அறிவைப் பெருக்கிக்கொள்ள நினைப்பவர்கள் பிறரது அமைதியைக் குலைப்பவர்கள்.

    கதை

    நானும் என் மகளும் கிழக்கு மலேசியா (போர்னியோ) சென்றிருந்தோம். அங்கிருந்து கடலில் படகுப் பயணம் — ஒரு காட்டுப் பகுதியில் தங்குவதற்கு.

    எங்களுடன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் படகில் இருந்தாள். அறிமுகம் முடிந்ததும், ஓயாது ஏதேதோ கேட்டபடி இருந்தாள்.

    அநாவசியமாக எதையாவது கேட்டு வைப்பவர்களுக்குப் பதிலில் அக்கறை கிடையாது. அது பொழுதைப் போக்க ஒரு வழி. அவ்வளவுதான்.

    “இந்துப் பெண்கள் கல்யாணமானதும்தான் சிவப்பு நிறப் பொட்டு அணியலாம் என்று கேள்விப்பட்டேன். அப்படியா?”

    “தைப்பூசம் எதற்காகக் கொண்டாடுகிறார்கள்?” என்று விசாரித்தபடி இருந்தாள்.

    எனக்கோ, ரம்மியமான சூழ்நிலையைப் பார்த்து ரசிக்க முடியாது போகிறதே என்ற எரிச்சல்.

    இறுதியில், பொறுக்க முடியாது போக, “Not now!” என்றேன் கறாராக.

    அதன்பின் அவள் வாயைத் திறக்கவில்லை.

    அப்படியில்லாது, ஒரு விஷயத்தில் உண்மையான ஆர்வத்துடன் கேட்பவருக்கோ பெரும்பாலும் தக்க பதில் கிடைக்கும்.

    ஆனால், நம் கேள்வியால் அவரது அறிவை எடைபோடுகிறோமோ என்று தவறாக எண்ணிவிடுபவர்களும் உண்டு.

    கதை

    நான் ஒரு காமெரா வாங்கி வைத்து, புத்தகங்களிலிருந்து புகைப்படக்கலையைக் கற்க முயன்று கொண்டிருந்தேன்.

    காதரின் என்ற அமெரிக்க மாது தன் குழுவுடன் சேர ஒரு காமெரா இருந்தால் போதும், புகைப்படக்கலையைக் கற்கலாம் என்று தினசரியில் விளம்பரப்படுத்தி இருந்தாள்.

    விடுவேனா! வாரத்தில் சில நாட்கள் அவர்களுடன் நான் கோலாலம்பூரில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்தேன்.

    மற்றவர்கள் அனைவரும் சிறு வயதிலிருந்தே ஓரிரு முறை உபயோகப்படுத்திவிட்டு எறியும் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி இருந்தவர்கள்.

    எனக்கோ எதுவும் புரியவில்லை. புத்தகங்களில் பயிலாததைப்பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டபடி இருந்தேன்.

    குழுத் தலைவி காதரின் விளையாட்டாக, “எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய்!” என்று குற்றம் சாட்டினாள்.

    “எனக்கு எதுவுமே தெரியாது. அதனால்தான்,” என்று ஒத்துக்கொண்டேன், பரிதாபகரமாக.

    ஒரு நாள் இந்துக்கோயில் ஒன்றில் படம் பிடிக்கச் சென்றபோது, எங்களுடன் இணைந்து வந்த அயல்நாட்டுக்காரர்களுக்கு – அவர்கள் கேளாமலேயே — பார்த்ததையெல்லாம் விளக்கினேன்.

    மகிழ்ந்த காதரின் என்னை அழைத்து, போட்டிகளில் பரிசுகள் வாங்கும் அளவிற்கு நிறைய கற்றுக்கொடுத்தாள். அவள் தன் நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் எங்கள் நட்பு நீடித்தது.

    என்னதான் நடந்துவிடப்போகிறது?

    நமக்குள் இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டால், இக்கட்டான சூழ்நிலைகளில் மனம் குழம்பும்போது உடனே நிம்மதி கிடைக்கும்.

    கதை

    ஒரு பெண் ‘நல்ல கலராக’ இல்லாவிட்டால் அவளைப் பெண்பார்த்துவிட்டு, நிராகரிக்கும் ஆண்களைத்தான் அந்த பாட்டி பார்த்திருக்கிறாள்.

    அதனால், தன் மகளுடைய சிறு குழந்தைகளைப் பார்த்ததும் அவளுக்குத் துக்கம் பெருகியது.

    ‘ரெண்டும் கறுப்பாப் பொறந்திருக்கே! இந்தப் பொண்களுக்கு எப்படித்தான் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறாளோ!’ என்று அவர்களைப் பெற்ற மகளுக்காக வருந்தினாள்.

    எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    அவர்களைவிட நிறம் மட்டமான ஆண் கிடைக்கலாம்.

    புற அழகைவிட அவர்களுடைய அறிவாற்றலைப் பெரிதாக எண்ணும் மாப்பிள்ளைகள் கிடைக்கலாம்.

    அவ்வளவு ஏன், பெரிய படிப்புப் படித்து, உத்தியோகமே வாழ்க்கை என்று வாழக்கூட நினைக்கலாம் அப்பெண்கள்.

    எப்போதோ நடக்கலாம் என்பதை எண்ணி இப்போதே வருந்துவானேன்!

    ‘பரீட்சையில் சரியாக எழுதவில்லையே, பாசாகித் தொலைக்காமல் இருந்தால் என்ன செய்வது!’

    பரீட்சை முடிவு வருவதற்குள் அநாவசியமாக அதைப்பற்றி எண்ணிக் குழம்புவானேன்! அப்படியே தேர்ச்சி பெறாவிட்டால், இன்னொரு முறை எழுதிவிட்டுப் போகிறது!.

    என்ன நான் சொல்வது?

    Share
  • படக்கவிதைப் போட்டி – 269

    படக்கவிதைப் போட்டி – 269

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (02.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 268இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 268இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அங்காடியில் அணிவகுத்திருக்கும் கண்ணைப் பறிக்கும் வளையல்களையும் தோடுகளையும் கவினோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ஷாமினி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 268க்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பட வித்தகருக்கும், நயமிகு தேர்வாளருக்கும் என் கனிவான நன்றிகள்!

    புறவிளக்கொளியில் மின்னும் இவ் அணிகலன்கள் மாதர்க்குத் தருபவை தற்காலிக அழகே! அணையாத அறிவொளியை அகத்தே ஏற்றும் கல்வியே அவர்களுக்கு என்றும் துணைநிற்கும் நிரந்தர அழகு!

    படத்தில் காட்சியளிக்கும் அணிகலன்களை மையமாக வைத்து மணியான கவிதைகள் புனைந்து காத்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களைத் தாமதமின்றி வரவேற்போம்!

    *****

    ”பகையாய் வந்த நுண்கிருமியாலே நங்கையர் நகையணிந்து வெளியே செல்லவும் வழியில்லை” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழும் வழி…

    நகைகள் பற்பல வீட்டி லிருந்தும்
    நல்ல நாளிலும் போட்டுச் செல்ல
    வகையே யில்லை வெளியே போக
    வந்திட விருந்தை யழைக்க வழியிலை,
    பகையாய் வந்த நுண்ணிய கிருமி
    பறித்துச் சென்றதே சுதந்திர மெல்லாம்,
    அகத்தில் ஆசையைப் பூட்டி வைத்தே
    அடங்கி வாழக் கற்றுய் வோமே…!

    *****

    ”வண்ண வளையல்களே வருந்தாதீர்கள்! கொரோனா தொல்லை நீங்கியதும் தங்கத்துக்கு நிகராக மின்னும் உங்களை நாடி நங்கையர் வருவர்” என்று வளையல்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றார் மண்ணிவாக்கம் திரு. கோ. சிவகுமார்.

    கைவளைகளின் கவலை!

    கலை வண்ணக் கைவளைகள்
    கண்கவரக் கடை விரிக்கும்
    காட்சி கண்ட கைவிரல்கள்
    கவிதை எழுதத் தூண்டியதே!

    மங்கையர்களின் கைகளிலாட
    மனங்கவரும் வடிவங்களில்
    தொங்கும் வண்ண வளையல்களே,
    உங்கள் முகங்கள் பொலிவிழந்து
    மங்கிய காரணம் நானறிவேன்.

    விண்ணில் செல்லும் ராக்கெட்டாய்
    மண்ணில் தங்கம் விலையேற்றம்
    நங்கையர் கண்டு மனம் மாறி
    உங்களை நாடி வருவார்களென்னும்
    நம்பிக்கை மனங்களில்
    இருந்தாலும்
    காட்டில் பரவும் தீயாக
    நாட்டில் பரவும் கொரோனாவால்
    வீட்டில் முடங்கிக் கிடப்பார்களோ,
    என்று தானே எண்ணுகின்றீர்?

    காலம் மாறும்
    காட்சிகள் மாறும்!
    கலங்காதிருங்கள்
    அதுவரை நாளும்!

    *****

    தங்க நிற வளையல்களும், வெள்ளை நிற வளையல்களும் ’விலைபோன’ எண்ணிக்கையின் அடிப்படையில் அரசியல்வாதிகள்போல் தமக்குள் சிறந்தவர் யார் என்று விவாதிப்பதைச் சுவையாய்க் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. காந்திமதிநாதன்.

    தங்க நிற வளையல் தொகுதி

    எண்ணிக்கையில் 11
    வெள்ளை நிறத் தொகுதி பார்த்து
    உங்களை விட ஒன்று அதிகம்
    நாங்கள் உயரத்தில்
    நீங்கள் எங்கள் கீழே!

    ஜனநாயகத்தில்
    எண்ணிக்கை வைத்தே ஆட்சி
    கொள்கைக் கோட்பாடுகளை வைத்தல்ல!

    பத்து எண்ணிக்கையில் உள்ள வெள்ளைநிறத் தொகுதி வளையல்

    நீங்களும் விற்பனைக்கு
    நாங்களும் விற்பனைக்கு
    எங்களின் ஒருவன் விற்பனையாகி விட்டான்!

    இங்கே இருப்பு
    குறையக் குறையச் சிறப்பு!

    எந்த இடத்தில் இருக்கிறோம்
    என்ன நிலையில் இருக்கிறோம்
    என்று தெரியாமல் தான்
    உன்னைப் போலப் பல பேர்

    அரசியல் பேச ஆரம்பித்தாலே
    அடிப்படை உண்மை தெரியாதோ?!

    *****

    அத்தை குழந்தைக்கு இடும் முதல் காப்பில் தொடங்கி, அம்மன் காப்பு, அரசியல்வாதியின் கைகளில் இடப்படும் இரும்புக் காப்பு, வேப்பிலைக் காப்பு என்று ஒவ்வொன்றாக விவரித்து இறுதியில் வண்ணக் கண்ணாடிக் காப்பே இந்நாளைய விலைவாசிக்கு ஏற்ற காப்பு என்று இரசனையோடு கவிதையை நிறைவுசெய்திருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கலகல சத்தம் கைகளின் வளையல்
    சலசல சத்தம் மனதில் அருவி

    பிறந்ததும் முதல் காப்பு அத்தையினுடையதே
    அடுத்து வம்சத்தோட அம்சக் காப்பு பாட்டியினுடையதே
    பருவமடைந்திட்டதும் மாமன் காப்பு
    மகவு சுமக்கையிலே கொண்டவன் காப்பு

    நாச்சியார் கையில் நாரணன் காப்பு
    ஆடித் திங்களில் அம்மன் காப்பு

    அரசியல்வாதி கயவர்கள் கையில்
    இரும்பால் காப்பு
    சட்டத்தின் தண்டனை அதுவே ஏற்பு

    காப்பு என்றாலே நம்மைக் காக்கும் காப்பு
    வேப்பிலை காப்பு வசம்பில் காப்பு மலரிலும் காப்பு அணிகலணிலும் காப்பு

    தங்கத்தில் காப்பு தாங்கொணா விலையே
    வெள்ளிக் காப்பும் அதனுடன் துணையே
    வண்ணக் கண்ணாடிக் காப்பே நிரந்தர மகிழ்ச்சி
    மனதிற்குத் தருமே தாங்கொணா நெகிழ்ச்சி

    *****

    வளைவியின் சரிதத்தை விரிவாகத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன், ”உயிரற்றப் பொருளென்ற உதாசீனம் வேண்டாம்; உணர்வுகளின் உரைகல்லாய் உலவி நிற்பது வளைவி” என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கின்றார்.

    வளைவி சொல்லும் சரிதம்!

    கடைவீதி மாடத்திலே
    குலுங்கிச் சிரிக்கும் வளைவி
    சொல்லிடுமே வளையோசை
    சிறப்பதனின் சரிதம்!

    கருவினிலே வளர்கையிலே
    தாயின் தியாகம் சொல்லும் – தூளி
    தொட்டிலிலே உறங்குகையில் – அவள்
    அண்மை காட்டிக் காக்கும்…

    கைக்குழவிக் கைகளிலே
    கருவளையாய்க் காக்கும்
    சின்னஞ்சிறு சிறுமிகளின்
    குறும்பில் துள்ளி நகைபுரியும்…

    பெண் பூவாய் மலர்கையில் – அவள்
    கைகளில் பூத்துக் குலுங்கும்
    கன்னிப் பெண்ணின் கரங்களிலே
    கணீரென்று ஒலிக்கும்…

    மணமேடை மங்கை கையில்
    மங்களமாய் முழங்கும்
    மணவாளன் தொடுகையிலே
    நாணம் கொண்டு சிணுங்கும்

    கட்டில் விளையாடலிலே
    கைகொட்டிச் சிரிக்கும்
    இடைஞ்சல் ஏதும் செய்திடாமல்
    உடைந்து உயிர் நீக்கும்

    புதுப்பிறப்பு எடுத்து மீண்டுமவர்
    பூங்கரங்கள் ஏறும்
    இல்வாழ்க்கை இன்னிசையின்
    இன்பமதைக் கூட்டும்

    உயிரற்றப் பொருளென்ற
    உதாசீனம் வேண்டாம்!
    உணர்வுகளின் உரைகல்லாய்
    உலவி நிற்கும் வளைவி…!

    *****

    வளையல்களை வைத்து மனிதர்களின் வாழ்வியலையும் அரசியலையும் ஆழமாய் அலசியிருக்கின்றார்கள் சிந்தனைவளம் செறிந்த நம் வல்லமைக் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    வளையல்

    வானவில் வண்ணங்களைத்
    தனித்தனியாகப் பிரித்தெடுத்து
    நிலா வட்டமாக்கி
    நட்சத்திரத் துருவல்
    முக்கால் பாகம் சேர்த்து
    உலர்த்தி மெருகேற்றிய
    திருவிழா தேவதைகள்,
    நாகரிக லாந்தரின்
    மேற்பார்வையில்
    ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்!

    எதெடுத்தாலும் இருபது
    கடையில்
    உத்தரம் ஆடும்
    இவர்களுக்குத் தனி விலை!

    பெண்கள் கடக்கையில்
    போட்டிப் போட்டுச்
    சிணுங்குகிறார்கள்!

    தலைவிதியோ தலைக்கனமோ
    காற்றிடம் வீரம் பேசும்
    இவர்கள்
    திருடியின் கூடைக்குள்
    விழுந்தால் மட்டும்
    சத்தமிடுவதில்லை!!

    ”வானவில் வண்ணங்களைப் பிரித்தெடுத்து, நிலா வட்டமாக்கி, நட்சத்திரத் துருவல் சேர்த்து உருவாக்கி மெருகேற்றப்பட்ட திருவிழா தேவதைகள் இவர்கள்” என்று வளையலைத் தன் அழகிய கற்பனை வார்ப்பால் மிளிரச் செய்திருக்கும் திசையன்விளை திருமிகு. ரா. விஜயகுமாரியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 6

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 6

    -மேகலா இராமமூர்த்தி

    கூனி என்றழைக்கப்பட்ட மந்தரை என்பவள் கேகய நாட்டு இளவரசியான கைகேயி தயரதனை மணமுடித்துக் கோசலத்துக்கு வந்தபோது பணிப்பெண்ணாக அவளுடன் வந்தவள். இந்த மந்தரை ஒருமுறை குடத்தில் நீரெடுத்துக்கொண்டு மற்றபெண்களோடு அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தபோது வெளியில் தன் தோழர்களோடு நின்றுகொண்டிருந்த இளம்பிள்ளையான இராமன் விளையாட்டாக ஒரு மண்ணுருண்டையை வில்லில் வைத்து இவள் முதுகில் குறிபார்த்து அடித்துவிட்டான். முதுகில் மண்ணுருண்டை விழுந்தவேகத்தில் மந்தரையின் இடுப்பிலிருந்த குடம் சரிய அதிலிருந்த நீர் சிதறியது. இதுகண்டு மற்றபெண்கள் சிரிக்க, மந்தரைக்கு அஃது அவமானமாய்ப் போய்விட்டது!

    ”யார் இந்த வேலையைச் செய்தது?” என்று அவள் பார்த்தபோது அங்கே தாமரைக் கண்ணனான இராமன் புன்முறுவலோடு நின்றிருக்கக் கண்டாள். அப்போதே அவன்மீது வெறுப்பு, பகை, பழியுணர்ச்சி முதலிய வேண்டத்தகாத தீய எண்ணங்கள் அவள் உள்ளத்தில் குடியேறிவிட்டன. அவள் நல்லபெண்மணியாக இருந்திருந்தால், ”பெரியவர்களிடம் இப்படி நடந்துகொள்வது முறையில்லை!” என்று சிறுவன் இராமனை அப்போதே அதட்டிவிட்டுச் சென்றிருக்கலாம்; அல்லது சிறுபிள்ளையின் அறியா விளையாட்டு இது என்று அதனைப் பெரிதுபடுத்தாமல் விட்டிருக்கலாம்.

    கூனியோ உள்ளமும் கோடிய கொடியாளாக இருந்தமையால் அந்தச் சம்பவத்துக்குப் பழிவாங்கக் காலம்பார்த்துக் கொண்டிருந்தாள்; இப்போது அந்தக் காலம் வாய்த்ததாகக் கருதியவள், தன் எண்ணத்தை ஈடேற்றக் கேகயன் மடமானான கைகேயியைக் கேடயமாகப் பயன்படுத்த எண்ணி அவள் அரண்மனையை நோக்கி விரைந்தாள்.

    வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் கூனியை உண்டை வில்லால் அடித்த செய்தி குறிப்பிடப்படவில்லை. பரதனுக்குப் பட்டம் கிடைக்கவேண்டும் எனும் நோக்கத்தில் அவள் இராமனுக்கு எதிராகச் செயற்படுவதாகவே காட்டப்பட்டுள்ளது என்பது இங்கே கருதத்தக்கது.  

    கைகேயியின் அரண்மனையைக் கூனி அடைந்தபோது அவள் பஞ்சணையில் தன்னுடைய கடைக்கண்கள் கருணைபொழிய உறங்கிக்கொண்டிருந்தாள் என்கிறார் கம்பர். பிறவியிலேயே இனிய இயல்பும், கருணை உள்ளமும் கொண்டவர்களாலேயே உறங்கும்போதும் அவ்வினிய இயல்புகளை முகத்தில் வெளிக்காட்ட இயலும். கைகேயியின் கண்கள் உறங்கும்போதும் அளி பொழிந்தன என்பதன் வாயிலாகக் கள்ளமற்ற அவள் வெள்ளை உள்ளத்தை நமக்குக் குறிப்பாய் உணர்த்துகின்றார் கம்பர்.

    நிம்மதியாய் நித்திரை செய்துகொண்டிருந்த கைகேயியின் சீறடிகளை அரவு தீண்டுவதுபோல் தீண்டி அவளை எழுப்பினாள் கூனி. அவள் முற்றாகத் துயில் நீங்குமுன்னே அவசரமாய்த் தன் உரையைத் தொடங்கினாள்.

    ”வருத்துகின்ற கொடிய விடப் பாம்பாகிய இராகு தன்னை நெருங்கும்போதும், தன் தண்மை சிறிதும் குன்றாமல் ஒளிவீசும் வெண்திங்களைப்போல் மிகப்பெரிய துன்பம் உன்னை வருத்திப் பிணிக்க வருகின்ற காலத்திலும் அதுகுறித்துக் கவலாமல் நீ நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறாயே!” என்றாள் கைகேயியைப் பார்த்து.

    அணங்குவாள் விடஅரா அணுகும் எல்லையும்
    குணம்கெடாது ஒளிவிரி குளிர்வெண் திங்கள்போல்
    பிணங்குவான் பேர்இடர் பிணிக்க நண்ணவும்
    உணங்குவாய் அல்லைநீ உறங்குவாய் என்றாள்.
    (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1540)

    அதைக்கேட்டு நகைத்த கைகேயி, ”உலகங்களுக்கெல்லாம் வேதம்போல் விளங்குகின்ற இராமனை மகனாகப் பெற்ற எனக்கு என்ன துன்பம் வந்துவிடும் என்று நீ அஞ்சுகிறாய்?” என்று கேட்டாள்.

    …விராவரும் புவிக்கு எலாம் வேதமே அன
    இராமனைப் பயந்த எற்கு இடர் உண்டோ என்றாள்.
    (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1542)

    “அட விவரமறியாப் பெண்ணே! உன் செல்வமும் நல்வாழ்வும் வீழ்ந்தன; கோசலை தன்னுடைய மதியினால் இனி நல்வாழ்வு பெறப்போகிறாள்!” என்று படபடத்தாள் கூனி.

    ”ஏனடி மந்தரை…ஏற்கனவே கோசலை நன்றாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! மன்னர் மன்னனாகிய தயரதன் அவள் கணவன்; பார் புகழும் பரதன் அவள் மகன். இதற்குமேல் புதிதாக அவள் பெறப்போகும் நல்வாழ்வு என்ன?” என்றாள் கைகேயி முறுவலித்தபடி.

    இராமனைத் தன் மகன் என்றும் பரதனைக் கோசலை மகன் என்றும் கைகேயி குறிப்பிடுவதிலிருந்தே மாற்றாள் மகன் என்ற வேற்றுமையின்றி அவர்கள் ஒருவர் மகனை இன்னொருவர் நேசித்திருப்பதை நமக்கு அறியத் தருகின்றார் கம்பர்.

    இதைக் கேட்டதும் கூனியின் சினம் கூடியது. ”சுத்தவீரர்கள் நகைக்கும்படி, பெண்ணென்றும் பாராமல் தாடகையை வதைத்த இராமன் நாளை முடிசூடப் போகிறான். அதனால்தான் சொன்னேன் கோசலை நாளைமுதல் புதுவாழ்வு பெறப்போகிறாள் என்று” எனச் சொன்னதுதான் தாமதம் கைகேயி மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்.

    ”அருமைத் தோழியே! செவியினிக்கும் நற்செய்தியை எனக்குச் சொல்லியிருக்கிறாய்! பிடி இந்த மாலையை!” என்று விலையுயர்ந்த இரத்தினமாலை ஒன்றைக் கூனியிடம் களிப்போடு நீட்டினாள்.

    கசந்த நெஞ்சோடு மாலையைக் கண்ட கூனியின் சினம் எல்லை கடந்தது. அப்போது அவளுடைய மெய்ப்பாடுகள் எப்படி இருந்தன என்பதைக் கம்பர் காட்சிப்படுத்தும் விதம் அருமை!   

    தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீஉக
    விழித்தனள் வைதனள் வெய்து உயிர்த்தனள்
    அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால்
    குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே. 
    (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1548)

    கொடுமனக்கூனி கைகேயியின் மகிழ்ச்சிகண்டு கோபத்தோடு சத்தமிட்டாள்; அதட்டினாள்; தன்னுடைய சிறிய கண்களில் நெருப்புப் பொறி சிதற விழித்துப் பார்த்தாள்; திட்டினாள்; வெப்பப் பெருமூச்சு விட்டாள்; தன் கோலத்தைச் சிதைத்தாள்; அழுதாள்; இறுதியில் தன் கோபத்தின் உச்சத்தைக் காட்டும்வகையில் கைகேயி தந்த இரத்தின மாலையைத் துச்சமெனக் கருதி நிலத்தில் ஓங்கியெறிந்து நிலத்தைக் குழியாக்கினாள்.

    தொடர்ந்து பேசிய கூனி, ”அடி பைத்தியக்காரி! பரதனுக்கு ஆட்சி கிடைக்காமல் இராமனுக்குக் கிடைக்கிறதே என்று சிறிதும் வருந்தாத நீ ஒரு நல்ல தாயா? பரதா! உனக்கு வாய்த்த தந்தையும் கொடியன்; தாயும் தீயள்; நீ என் செய்வாய் அப்பா!” என்று அரற்றி ஓலமிடவே பொறுமையிழந்த கைகேயி,

    ”உன் அபத்த உரைகளை நிறுத்து மந்தரை! மூத்தவன் இராமன் இருக்க இளையவன் பரதன் எப்படி முடிசூடமுடியும்? உன் மதியீனத்துக்கு ஓர் அளவில்லையா? என் தோழி என்பதால் உன்னைப் பொறுத்தேன்; இல்லையேல் இவ்வாறு பேசிய உன் நாவைத் துண்டித்திருப்பேன்! நீ இங்கிருந்து புறப்படு உடனே!” என்றாள் சினம் கொப்பளிக்க!

    கூனி அதற்கெல்லாம் அஞ்சவுமில்லை; அங்கிருந்து அகலவுமில்லை. கைகேயியின் கால்களில் விழுந்துவணங்கி, அவள் மனத்தை இளக்கி, மீண்டும் தன் துர்ப்போதனைகளைத் தொடர்ந்தாள்.

    “ஏன் மூத்தவன் இருக்கும்போது இளையவனுக்கு முடிசூட்ட முடியாது? இப்போது தயரதனையே எடுத்துக்கொள்! அவன் இராமனைவிட வயதில் மூத்தவன் தானே? அவனிருக்கும்போதுதானே அவனைவிட வயதில் இளையவனான இராமனுக்கு முடிசூட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆகவே, இராமனிருக்கும்போது ஏன் அவனைவிட வயதில் இளையவனான பரதனுக்கு முடிசூட்டக் கூடாது?” என்று கேள்விகேட்டுக் கைகேயியின் வாயை அடைத்தாள்.

    தன் குரலை சற்றுக் குழைவாக்கிக்கொண்டு பேச்சைத் தொடர்ந்த கூனி, ”கைகேயி உனக்கொன்று தெரியுமா? அருள்நிரம்பிய அறவாழ்வை மேற்கொள்ளும் தவசீலர்கள்கூடப் பெறற்கரிய செல்வத்தைப் பெற்றபிறகு எண்ணம் வேறுபட்டவர்களாக – மனம் மாறுபட்டவர்களாக ஆகிவிடுகின்றார்கள். செல்வத்தின் தன்மை அது! எனவே நாளை அரசபதவி பெற்றபின்பு இராமன் கோசலை போன்றோரின் இயல்பும் மாறிப்போய்விடும். அவர்கள் உன்னையும் உன் மகனையும் கொல்லக்கருதித் துன்புறுத்தாவிட்டாலும், நீங்களே சாகும்படிப் பல்வேறு இன்னல்களைச் செய்வார்கள் என்பது உறுதி!” என்றாள்.

    அறன்நிரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும்
    பெறல்அருந் திருப்பெற்றபின் சிந்தனை பிறிதுஆம்
    மறம்நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால்
    இறல்உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல். 
    (கம்ப: மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1565)

    ”அதுமட்டுமா? உனக்குத் தேவையானவற்றைக்கூடக் கோசலையின் அனுமதிபெற்றே நீ பெறமுடியும். நீயாக உன் விருப்பப்படி யாருக்கும் எவ்வித தான தருமங்களும் செய்யவியலாது. இனி, காலாகாலத்துக்கும் அரசுரிமை இராமனுக்கும் அவனுடைய வாரிசுகளுக்குமே போகுமே ஒழியப் பரதனுக்குக் கிட்டாது” என்றெல்லாம் கூனி தொடர்ந்து சொல்லி எச்சரிக்கவே கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது.

    விளைவு? அடுத்து என்ன செய்து இராமனின் பட்டாபிடேகத்தை நிறுத்துவது என்று கூனியிடமே யோசனை கேட்கும் நிலைக்கு வந்துவிட்டாள் கைகேயி!

    ஊழிற் பெருவலி யாவுள?

    [தொடரும்]

    *********************

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவைகம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 7 (ஏதிலர்)

    ச.கண்மணி கணேசன்,
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி.),
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திரங்களுள் ‘ஏதிலர்’ என்னும் பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும்போது ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறக்  காண்கிறோம். புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள. அகப் பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. ஏதில் தன்மை பற்றிய விளக்கம் மூலம் ஏதிலர் யாரெனப் புரிந்துகொள்ளலாம்.

    ஏதில் தன்மை

    தொடர்பேதும் இல்லாது துன்பம் அல்லது சிக்கலுக்குக் காரணமாகும் அயல் தன்மையே ஏதில் தன்மை ஆகும்.

    பிரிவை விரும்பாத தலைவியின் கோணத்தில் தலைவன் பிரியக் காரணமாகும் பொருள்பற்று தன்னைத் துன்புறுத்துவதால்;

    “ஏதில் பொருள் பிணி” (அகம்.- 43)

    ஆகிறது. இதேபோல் நம்மைக் காத்தற்கு உரியவன் இவனென்று நிழல் தேடி வந்தடைந்த குடிகளைத் தன் தலைப்பாரமாக ஏற்றுப்; புகழை விரும்பி; அயல்நாட்டில் தொடர்ந்து தங்கும் தலைவன் தன்மையும் (குறுந்.- 89) ஏதில்தன்மை என்றே பெயர் பெறுகிறது. தலைவன் திரும்பி வந்து சேரவில்லை ஆதலால்; கார்ப்பருவம் இன்னும் தொடங்கவில்லை என நம்பவிரும்பும் தலைவிக்கு இடியும் அதைக் கேட்டு ஆடும் மயிலும் ஒன்றற்கொன்று தொடர்பே இல்லாத அயலாராகத் தோன்றுவதால்;

     “ஏதில் கலந்த இரண்டற்கு” (குறுந்.- 194)

    என்கிறாள். செல்வக்குடியைச் சேர்ந்த தாயின் கோணத்தில் உடன்போன தலைவிக்குச் சிலம்புகழி நோன்பியற்றும் தலைவனின் வறியமனை;

    “ஏதில் வறுமனை” (அகம்.- 369) யாகத்

    தெரிவதன் காரணம்; தலைவியின் பிறப்பு வளர்ப்பிற்கும் தலைவன்
    வாழ்க்கை முறைக்கும் சற்றும் தொடர்பில்லை எனும் மனக்குறையாகும்.
    திணைமாந்தர் கோணத்தில் தம் ஊரைக் கைப்பற்றிய குறுநில மன்னர்;

    “ஏதில் மன்னர்” (அகம்.- 346)

    என்று சொல்லப்படுவதால்; அவர் அயலகத்திலிருந்து தம்மூர் வந்தவர் என்னும் கருத்து தெளிவாகிறது.

    ஏதிலரும் நொதுமலரும்

    முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும் அழைப்பதுண்டு. ‘நொதுமலர்’ என்ற சொல்லுக்கு ஏதிலர் என்றும்; ‘ஏதிலாளனை’  என்ற சொல்லுக்கு நொதுமல் தன்மை உடையவன் என்றும் பொருள் கூறுவர்.

    பகற்குறியில் சந்தித்து மீளும் தலைவனிடம் தோழி;

    “நொதுமலர் போலப் பிரியின்
    கதுமெனப் பிறிதொன்று ஆகலும் அஞ்சுவல்” (அகம்.- 300)

    என்கையில் தலைவி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவாளோ என்று அஞ்சுவதை விளக்கும் உரையாசிரியர் ஏதிலர் என்றே பொருள் கூறுவர்.

    “ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே” (ஐங்.- 232)

    எனும் பாடலடி சுட்டும் தலைவனை நொதுமல் தன்மை உடையவன் என்று உரைவிளக்கம் தருகிறார் பொ.வே.சோமசுந்தரனார்.

    குழுப்பாத்திரமாக ஏதிலர்

    சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர்.

    மடலேறித் தன் காதலில் வெற்றி பெற்ற தலைவன்; திருமணத்திற்கு முன்னர் கொண்ட காதல்நோய் பற்றிப் பேசுங்கால்;

    “இளையாரும் ஏதிலவரும் உளைய” (கலித்.- 138)ப்

    பேசிப் பேசித் துன்பம் தீர்ந்ததாகக் கூறுவதில் ஏவலரும், ஏதிலரும் அடங்குகின்றனர்.

    களவுக்காலத்தில் புனக்காவலுக்கு வந்து பறவைகளை ஓட்ட வேண்டிய  தலைவி; தன் பணியைச் செய்யாமல் தலைவனின் பிரிவை எண்ணி அழத்தொடங்கும் போது; உடனிருந்த தோழி அவள் அழுகையை அடக்குகிறாள்.

    “எழாஅ ஆகலின் எழில்நலம் தொலைய
    அழாதீமோ நொதுமலர் தலையே” (நற்.- 13)

    என்ற பாடலடிகளில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசும்  தோழியின் குரல்; அவளது வாயை விட்டு வெளியேறாமல் தலைவிக்கு மட்டுமே கேட்குமளவு கமுக்கமாக அமைவதன் காரணம் அயலாருக்குத் தெரிந்து விடக்கூடாது என்பது தான். பாடல் அவரை நொதுமலர் என்கிறது.

    தோழி அறத்தோடு நிற்கவும்; பின்னர் வேற்று வரைவிற்குரிய ஏற்பாடுகள் தொடங்கிய போது;

    “மீன்வலை மாப்பட்டாங்கு
    இது மற்று எவனோ நொதுமலர் தலையே” (குறுந்.- 171)

    என்று மிரள்கிறாள் தலைவி. மீனுக்காக வலை வீசிய போது மான் வந்து சிக்கியது போல; வரைபொருள் நிமித்தம் பிரிந்து சென்ற தலைவன் வருமுன்னர் பெண் கேட்டு வந்த அயலவர் இப்பாடலில் நொதுமலர் என்று சுட்டப்படுகின்றனர்.

    தனிப்பாத்திரமாக நொதுமலாட்டி

    பெண்பால் விகுதி பெற்று நொதுமலாட்டி எனப் பூவிலைப் பெண்ணைக் குறிக்கப் பயின்று வருவதுண்டு. பருவம் கண்டு ஆற்றாமல்; கணவன் தன்னை மறந்துவிட்டானே  எனத் தவிக்கும் மனைவிக்குப் பூ விற்கும் பெண்ணைப் பார்க்கும் தோறும் அடக்கமாட்டாத அழுகை வருகிறது.

    “…………..பாதிரி………..
    புதுமலர் தெருவுதொறு நுவலும்
    நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே” (நற்.- 118)

    எனுங்கால் ‘நொதுமலாட்டி’ என்ற சொல் பெண்பால் விகுதியுடன்  அயலாளைக் குறிக்கிறது.

    ஏதிலர் உள்ளேற்கும் பிற பாத்திரங்கள்  

    சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர்  ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் ஒருவராக உள்வாங்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என்று முறையே ஆண்பால், பலர்பால் விகுதி பெற்றுத் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதும் உண்டு.

    வெறியாடி முருகனைக் காரணம் காட்டும்;

    “ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)

    பூரித்துத் தலைவன் சிறைப்புறத்து இருந்து கேட்கும்படித் தோழியிடம் சிரிக்கிறாள் தலைவி. அவளது கோணத்தில் வேலன் யாரோ ஒருவன். வெறியாட்டை அஞ்சிய தலைவியும் அவனை; ‘ஏதில் வேலன்’ (அகம்.- 292) என்கிறாள்.

    தலைவனின் புறத்தொழுக்கத்திற்குத் துணை செய்யும் பாணன், இயல்பாகவே தலைவிக்கு ஏதிலன் ஆகின்றான். தலைவனின் பரத்தமை காரணமாகச் சினம்கொண்டவள்;

    “ஏதில் பெரும்பாணன் தூதாட” (கலித்.- 96)

    நிகழ்ந்த மாறுபாட்டைத் தொடர்ந்து விவரிக்கிறாள். பரத்தையிடம் இருந்து திரும்பிவந்த கணவனிடம் பரத்தையின் மணத்தை நுகர்ந்த தலைவி;

    “ஏதிலர் நாறுதி” (பரி.- 8)

    என்று விலகுகிறாள். இதேபோல் பரத்தையை ஏதிலார் என்று சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்.- 78, 80, 81, 84; பரி.- 24).

    பிரிவால் மெலிந்த தன்னைக் கண்டு அடையாளம் தெரியாமல் ஏதிலாட்டி என்று எண்ணிப் பருவம் திரும்பிப் போய்விட்டதோ எனக்  கவல்கிறாள் (நற்.- 56) தலைவி. தன் ஆயத்தோடு சேர்த்துத் தம்மை நொதுமலாளர் என்று வேறுபிரித்து உரைக்கிறாள். நெய்தல்திணை சார்ந்த தலைவிக்கு வேற்றுத்  திணை சார்ந்த தலைவன் பரிசுப் பொருளாகத் தான் வாழும் இடத்துத் தழை கொண்டு தைத்த ஆடையைக் கொடுக்க; அவள் காரணம் கூறி மறுக்கிறாள். ‘எம் நிலத்தைச் சேர்ந்த பெண்டிர் வண்டல் பாவைக்குக் கூட இங்கு கிடைக்கும் நெய்தல்தழை கொண்டு தைத்த ஆடையே புனைவர்’.

    “நொதுமலாளர் கொள்ளார் இவையே
    எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
    நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்” (ஐங்.- 187)

    எனத் தாம் அந்தத் தழையாடைக்கு அயலார் என்பதைப் புரிய வைக்கிறாள். அதைப் பெற்றுக் கொண்டு அணிந்தால்; தானே தன் களவை வெளிப்படுத்த  நேரிடும் என்பதே அவள் கருத்து.

    பூவைக்  காரணம் காட்டித் தலைவன் ஏதிலன் எனப்படுவதுண்டு (கலித்.- 107& 111). தலைவியை அழைத்துக்கொண்டு உடன்போகிய தலைவன் தாய்க்கு ஏதிலன் ஆகிறான். வேளாண் தொழிலால் செல்வம் மிகுந்த மனையை விட்டுக் காதலனுடன் சென்ற தன் மகள் ஏமாந்து விட்டதாக எண்ணிக் குமைகிறாள் தாய்.

    “ஏதிலன் பொய்மொழி நம்பி” (அகம்.- 117)யவள்;

    என்பது மகட்போக்கிய தாயின் எண்ணத்தைக் காட்டுகிறது. தன் அறியாப் பருவத்து மகள் யாரோ ஒருவனை நம்பிவிட்டாளே என்ற தவிப்பு மிகும்  போதும் (அகம்.- 17), தலைவி ஊடல்கொள்ளும் போதும் (நற்.- 50& 395) தலைவன் நொதுமலாளன் ஆகிறான். களவுக்  காலத்தில் ஊரார் அலருக்கு  இடையே பிரிந்துறையும் தலைவன் உறவும் பகையும் அல்லாதவன்;

    “நயனறத் தொடுத்தல் வல்லியோரே
    நொதுமலாளர் அது கண்ணோடாது” (அகம்.- 298)

    என்று தலைவனைப் பற்றித் தலைவி ஆற்றுவெள்ளத்திடம் ஆற்றாமல் புலம்புகிறாள். ‘உன்னைப் போலவே தலைவன் கண்டும் காணாமல் கண்ணோட்டமின்றி நொதுமலாளனாய் நடந்து கொள்கிறான்’ எனும் போது தலைவன் ஏதிலர் கூட்டத்தில் சேர்க்கப்படுகிறான். புறத்தே ஒழுகிநின்ற தலைவன் பற்றித் தோழியிடம் பேசித் தன் மனக்குறையை ஆற்றும் தலைவி ‘அவன் திரும்பி வந்தால் என்னைத் தொடாதே’ என்று மறுத்து உரைப்பேன் எனச் சாடப் பயன்படுத்தும் வசை ‘ஏதிலாளன்’ என்பதே. இதே வசையைப் புனையும் பாடல்கள் பல (ஐங்.- 34; நற்.- 74, 216). தன் மனதில் உள்ள ஏக்கத்தைத் தோழியிடம் தெருவில் விவரித்த  தலைவனின் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குபவளாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் தலைவி; ‘வாரணவாசிக்குச் செல்பவர் எல்லாம் துறக்கம் எய்துவர்’ எனும் நையாண்டியுடன்; ‘தெருவில் செல்பவர் புலம்பலை எல்லாம் என்னிடம்  வந்து சொல்லித் தொந்தரவு செய்யாதே’ எனத் தோழியை அறிவுறுத்தும் போது; ஏதிலன் என்றே விமர்சிக்கிறாள் (கலித்.- 60).

    தலைவி பாடிய உலக்கைப்பாட்டை ஆதாரமாகக் காட்டி; ஊரார் அலர் தூற்றுங்கால் தோழியின் கோணத்தில் அவர் ஏதிலராகின்றனர் (குறுந்.- 89). தோழி தலைவியிடம்;

    “உள்ளி நொதுமலர் ஏர்புரை தெள்ளிதின்” (நற்.- 11)

    ‘நீ அவன் வரமாட்டான் என்று எண்ணத் தொடங்கினால் ஏற்படவிருக்கும் ஏதத்தை எண்ணிப்பார்’ என்கிறாள். ஊரார் பழிசுமத்தி விடும் சிக்கலை முன்மொழிய; ஏதிலரின் கூட்டத்தில் ஊரார் உள்வாங்கப் படுகின்றனர். ஊரார் பேச்சைக் கேட்டுப் பொருள்வயின் பிரிய நினைக்கும் தலைவனை;

    “ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை” (கலித்.-22) என்று பிரிவுக்கு மறுக்கும் தலைவியும் ஊராரை ஏதிலார் ஆக்குகிறாள். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (கலித்.- 14). காமம் மிக்க கழிபடர் கிளவியாக நிலவைப் பார்த்துப் பேசும் தலைவி; தன் நோய்க்கு ஊராரால் தீர்வு சொல்லவோ செய்யவோ இயலாது என்பதை;

    “காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
    எல்லாரும் தேற்றார் மருந்து” (கலித்.- 145)

    எனப் பாடும் பெருந்திணைச் செய்தியும் ஊராரை ஏதிலர் கூட்டத்துள் சேர்க்கிறது. இவ்வண்ணமே கைக்கிளைச் செய்தியிலும்; ஊரார் ஏதிலர் எனப்படுகின்றனர் (கலித்.- 113)

    உவமைகளில் ஏதிலர்  

    ஆயத்தோடு ஆடிக் கொண்டிருக்கும் தலைவியைத் தழுவ விரும்பிய தலைவனுக்கு அவனது அசட்டுத்தைரியம் கைகொடுத்தது. எல்லார் நடுவிலும் புகுந்து;

    “நொதுமலர் போலக் கதுமெனத் தழுவி” (குறுந்.- 294)

    முயங்கியமை பற்றிய தலைவியின் கூற்று அவனை ஏதிலர் என உவமிக்கிறது. ஆதலால் அன்னை இற்செறித்து விட்டாள் என்கிறாள்.

    தான் வாழும் சேரிக்கு வந்தாலும் தன்னைக் கண்டுகொள்ளாமல் செல்லும் தலைவனால் சேரி;

    “ஏதிலாளர் சுடலை போல” (குறுந்.- 231)ப் பார்க்கப்பட்டது என்ற சேரிப்பரத்தையின் வாக்கு செவ்விலக்கியக் காலத்துச் சமூகநிலையையும்; தனித்தனிச் சுடலை இருந்தமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. (உரையாசிரியர் இப்பாடலைத் தலைவி கூற்று என்று சொல்வது ஏற்புடையதன்று).

    இரவுக்குறியில் தன்னிடம் வம்பு வளர்க்கும் வயோதிகப் பார்ப்பானை ‘புலியைப் பிடிப்பதற்காகச் செய்த முயற்சியில் அகப்பட்ட குறுநரி’ என்று வசை பாடும்போது;

    “ஏதில் குறுநரி பட்டற்றால்” (கலித்.- 65)

    என ஏதிலனாக உவமிக்கிறாள் தலைவி.

    செயல் திறமையும் மதிநுட்பமும் இல்லாத அரசன் நாட்டில் அயலாரின் படை நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதைப் போல இளவேனில் பருவம் தொடங்கித் துன்புறுத்தியது என்ற உவமையிலும் (கலித்.- 27) ஏதிலாளனின் பயன்பாடு உள்ளது.

    புறப்பாடல்களில் ஏதிலர்

    சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு வீற்றிருந்தமை கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்;

    “ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது” (புறம்.- 58)

    இருவரும் ஒற்றுமையுடன் தம் நட்பைத் தொடர வேண்டுகிறார். இங்கு ஏதில்மாக்கள் என்று சொல்லப்படுவோர் ‘கோள் சொல்பவர்’. இக்காலத் தமிழில் ‘வத்தி வைப்பவர்’ உரையாசிரியர் ‘குறளை சொல்பவர்’ என்கிறார். இதே கருத்து இன்னொரு பாடலிலும் உள்ளது (புறம்.- 35)

    முடிவுரை    

    சொந்தம், பந்தம், நட்பு, உற்றார், பெற்றார், ஊரார்  எனும் தொடர்பு ஏதும் இல்லாது; யாரென்று தெரியாதவரே அயலார் எனும் ஏதிலர் ஆவர். அகப்பாடல்கள் ஏதிலரைப் பற்றிப் பேசுகின்றனவே அன்றி; ஏதிலர் பேசுவது இல்லை. முன்பின் அறியாத ஏதிலரை நொதுமலர் என்றும்; பெண்பால் விகுதியோடு நொதுமலாட்டி என்றும் சுட்டுவதுண்டு. பிற தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம், சிறுபாத்திரம் முதலியோரை அவ்வப்போது உள்வாங்கி ஏதிலன், ஏதிலான், ஏதிலாட்டி, ஏதிலாள், ஏதிலாளன் என்று ஒருமை விகுதி பெறுவதையும் காண்கிறோம். சினம், அச்சம், மருட்கை, ஆற்றாமை போன்ற உணர்வுகள் காரணமாகத் தலைவன், பரத்தையர், ஊரார், வேலன், பாணன் ஆகியோர் ஏதிலர் என்னும் குழுப்பாத்திரத்துள் இணைக்கப்படுகின்றனர். நொதுமலாளன், நொதுமலாளர் என முறையே ஆண்பால், பலர்பால் விகுதியுடன் தலைவனும், ஆயத்தோடு தலைவியும், இக்குழுவிற்குள் இணைக்கப்படுவதுண்டு. ஏதிலர் உவமைகளாக  எடுத்து  ஆளப்படுவதுண்டு. புறஇலக்கியத்திலும் ஏதிலர் பற்றிக் குறிப்புகள் உள.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

    தி. இரா. மீனா

    சிவலெங்க மஞ்சண்ணா 

    பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்த இவர் கல்யாண் நகருக்கு வந்த பின்னர் சரணராகியவர். ’ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூனலிங்கம்’ இவரது முத்திரையாகும்.

    1. “உடலைக் கட்டியணைத்து நிறை கண்களால் கண்டு
    கைகள் மகிழும் வரை வணங்கி
    மனப்பூர்வமாக அறிவது, இடைவெளியற்ற இன்பம்
    ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு
    கூடுகின்ற  கூட்டமாம்“

    2. “உடல் சோர்ந்து உள்ளம் உருகி காயகம் செய்யாமல்
    பிறரை வருத்தி, நயந்து இரந்து செய்வது தாசோகமா?
    எத்தொழிலையும் மனத்தூய்மையுடன்
    செய்கிற குருஜங்கமரைச் சமமாக எண்ணும்
    இலிங்கதேகமுடையோருடன் ஒரே தன்மையில் உறவாடினால்
    ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு நிறைவாம்.”

    3. “சுவையறிய நாவாகி வந்து
    மணமறிய நாசியாகி வந்து
    உருவமறிய கண்களாகி வந்து
    ஒலியறிய செவியாகி வந்து
    உணர்வறிய தோலாக வந்து
    உடலில் நின்று ஐம்முகமாய் ஆனாய்
    ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கமே“

    சண்முகசுவாமி

    ’அகண்டேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “கல்கல்லென ஒலியெழுப்பினால் காதலன் வருவானென
    எல்லா வழியும் தேடிப் பார்க்கிறேன் அன்னையரே,
    காதலனின் சொல்லை மனமொன்றிக் கேட்கிறேன்
    அகண்டேஸ்வரன் என்னும் காதலனைக் கண்டால் மகிழ்ச்சி
    காணாமல் போயின் கடுந்துன்பமாம் அன்னையரே“

    2. “பால்குடத்தின் மீது மோர்குடம் வைத்தென்ன
    உறையாகுமா ஐயனே சரியான கலவையின்றேல்?
    அங்கம் மீது இலிங்கம் இருந்தென்ன,சிவஞானமில்லாமல்
    பொருந்தி சமரசமாகுமா  ஐயனே அகண்டேஸ்வரனே.”

    சகலேச மாதரசா

    அரசராக இருந்து சரணரானவர். ’சகலேஸ்வர தேவ’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆசையைவிடச் சிறியவரில்லை
    ஆசையின்மையை விடப் பெரியவரில்லை
    கருணையை விட தர்மமில்லை
    ஆராய்ச்சியை விட  உதவியில்லை
    அனைத்துயிருக்கும் சகலேஸ்வரனைத் தவிர தெய்வமில்லை”

    2. “ஈசனிலும் பெரியவரில்லை
    ஆசையினும் சிறியோரில்லை
    எல்லைக்கப்பால் திசையில்லை
    பிரார்த்தனைக்கப்பால் புண்ணியமில்லை
    அனைத்தின் பதியே சகலேஸ்வரதேவனே
    மெய்யுணர்வுக்கப்பால் உதவியில்லை“

    3. “ஏரி கட்டலாமே தவிர நீர் நிரப்ப முடியுமா?
    ஆயுதம் தரலாமன்றி கற்றுணர்த்த முடியுமா?
    மணமுடிக்கலாமன்றி ஆண்மைக்கு உதவமுடியுமா?
    மேன்மை காட்டலாமன்றி நினைவை நிறுத்த முடியுமா?
    படிப்பு கால்,புத்தி முக்காலெனும் பழமொழிக்கேற்ப
    குருவின் கருணையிருந்தும் சாதித்தவனல்லன்,
    சகலேஸ்வர தேவனே“

    சங்கமேஸ்வர அப்பண்ணா

    ’பசவப்பிரிய கூடல சென்ன சங்கமதேவ’ இவரது முத்திரையாகும்.

    “அன்றன்று நிரம்பியது மிகுதியெனும் எண்ணம் வேண்டும்
    முன்னோர்களை நினைக்க வேண்டும்
    ஜங்கமன் வந்தால் வஞ்சனையின்றிச் செய்ய வேண்டும்
    இதை எனக்கு வரமாக்கு
    பசவப்பிரிய  கூடல சங்கமதேவனே“

    சகரத பொம்மண்ணா

    ’சகரத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    “மலர் பறிப்பாரேயன்றி மணம் பறிப்பவருண்டோ?
    பேசுவரேயல்லாமல் பேச்சின் உணர்வைக் கண்டவருண்டோ?
    இது நீதியின் பாடம்
    ஒழுங்குடன் செயல்படும் போது
    உணர்வு தூய்மையோடிருக்க வேண்டும்.
    பேச்சறிந்து பேசும் போது
    ஒழுங்கும் புலமையும் இணைந்திருக்க வேண்டும்.
    அதுவே ஆன்ம ஐக்கியம்
    சரகத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரனே.”

    சத்திகேதாய மாரய்யா

    குடை பிடிக்கும் காயகத்துடன் சேர்ந்து மரம் வெட்டுவது,தீப்பந்தம் பிடிப்பது ஆகியவற்றையும் செய்து வந்தவர். ’ஐக்கடேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    “உதயத்தில் உற்பத்தியாகி, பகலில் நிலையாகி
    அந்தியில் அழிகின்ற உடல் சுமந்து மீண்டும்
    அமைதியில் நின்று துன்பம் நீக்கும் இடம் காட்டுவாய்
    பகலில் பசிதாகம், இரவில் புலன்களின் செயல்
    என உடல் சுமந்து
    ஐம்பொறிகளுக்கு உடலானாயன்றோ
    ஐகடேஸ்வர இலிங்கமே“

    [தொடரும்]

    Share
  • சீக்கிரம் அருள்வாய் கந்தா

    சீக்கிரம் அருள்வாய் கந்தா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கருவிலே கருணை வேண்டும்
    கல்வியில் உயர்வு வேண்டும்
    தெருவெலாம் அலையா வண்ணம்
    தினமெனைக் காக்க வேண்டும்
    ஒருமனம் கொண்டு உன்னை
    உவப்புடன் வணங்க வேண்டும்
    பெருமனம் கொண்டு என்னை
    பேணுவாய் கந்த வேளே

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    காத்திட வேண்டும் ஐயா
    வறுமையில் வாடி நாளும்
    வதங்கிடா திருக்க வேண்டும்
    தரமுடை மனத்தைப் பெற்று
    தரணியில் வாழ வேண்டும்
    சிரமதில் அகந்தை போக
    சீக்கிரம் அருள்வாய் கந்தா

    நரை திரை வந்திடாமல்
    நலமுடன் வாழ வேண்டும்
    நாளுமுன் நாமம் சொல்லி
    நானுனைப் பாட வேண்டும்
    குறையுடை வாழ்க்கை தன்னை
    குமராநீ அகற்ற வேண்டும்
    நெறியுடன்  நின்று வாழ
    நீயெனக் கருள்வாய் ஐயா

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 90 (மாரி)

    சேக்கிழார் பாடல் நயம் – 90 (மாரி)

    திருச்சி புலவர்  இரா. இராமமூர்த்தி

    மாரிக் காலத் திரவினில் வைகியோர்
    தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
    பாரித் தில்ல மடைத்தபின் பண்புற
    வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.

    (அவ்வாறு நண்ணிய காலமாகிய) மாரி … இரவினில்- மழைக்காலத்தில் ஒரு நாள் இரவிலே; வைகி – (உறக்கமின்றி) விழித்திருந்து; ஒர் தாரிப்பின்றி – வேறு ஓர் ஆதரவு மில்லாமையினாலே; பசி … பாரித்து – மீதூர்வதாகிய பசி மேலும் அதிகரிக்கப் பெற்று; இல்லமடைத்தபின் – வீட்டுக் கதவினைத் தாழிட்டு அடைத்த பின்னர்; பண்புற – உற்ற பண்பினாலே; வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன் – தேன் பொருந்திய மாலையணிந்த மாறனார் (நண்ணிய நற்றவராகிய) விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்றனர்.

    மாரிக்காலத்து இரவினில் – மழைக்கால நாட்களில் இரவு மிக்க இருள் கொண்டிருக்கும். மழையும் இருளும் கூடி, மக்கள் வெளிச் செல்லக் கூடாதபடி தடுக்கும் என்பது குறிப்பு. நாயனார் பேறடைந்த திருநாள் ஆவணி மாதத்து மக நாளாதலும் காண்க.

    வைகி – இரவினிற் படுத்துறங்க வேண்டுவோர் அவ்வாறுறங்காமல் விழித்திருந்தனர் என்பது. பட்டினி யிருந்து என்பாருமுண்டு. வைகித் தாரிப்பின்மையால் பாரிக்கப்பெற்று அடைத்தபின் – எனக் கூட்டுக. ஓர்தாரிப்பு இன்றி -ஓர் ஆதரவு மில்லாமையினாலே. இன்றி இன்மையால். தாரிப்பு – தரிப்பு – என்றது முதல் நீண்டது. தரிக்கும் ஆதரவு உதவி. தம்மைத் தாங்கக் கூடியவர் யாவருமின்றி என்க. விருந்துபசரிக்க எவ்வகையானும் உதவி பெறாமை குறித்தது. இதனைப் பசி என்றதனுடன் கூட்டி அடக்க முடியாத – தாங்க முடியாத பசி என்பாரு முண்டு. இப்பொருட்கு இன்றி – இன்றிய – இல்லாத – முடியாத என்று பெயரெச்சமாக்கிக் கொள்வர். பசிதலைக் கொள்வது பாரித்து  பாரித்து – பாரிக்க – அதிகரிக்க என்க. பசிமீதூரும் நிலை மேன்மேலும் அதிகரிக்க. செய்ய என்பது செய்து எனத் திரிந்து நின்றது. பெற்று – என ஒரு சொல் வருவித்துரைக்க.

    பாரித்தல் – அதிகரித்தல். “சைவ நெறி பாரித்தன்றி“ -இதனைப் பரித்து என்பதன் முதனீண்ட விகாரமாகக் கொண்டு, தாங்கிக் கொண்டு என்றுரைப்பாரு முண்டு. இஃது தாமே பசிமீதூரப் பெற்றார் தம்மையடைந்த விருந்தினரை ஊட்டல் அமையாதென்பது குறித்தது.

    இல்லம் அடைந்த பின் – இது நாயனார் விருந்தெதிர் கொண்ட நேரங் குறித்தது. இரவு முதிர்ந்து நள்ளிரவாகிய மிக்க அகாலத்தில் வேறு எவரும் விருந்து புறந்தரார் என்பது குறித்தது. தமது இல்லமேயன்றி ஊர் அடங்கிய நிலையும் குறிப்பிட்டபடியாம். இல்லம் அடைத்தபின் நண்ணினார் என மேற்பாட்டுடன் கூட்டியுரைப்பர் இராமநாதச் செட்டியார்.

    வேரித்தாரான் – வேரி – தேன்; தார் – இங்கு வேளாளர்க்குரிய குவளை மலராலாகிய அடையாளமாலை குறித்தது. காகிதம் முதலிய இயற்கைமண மில்லாத போலியான பொய்ம் மாலைகளை அணிந்து மகிழும் இந்நாட் போலிமாக்கள் வேரித்தாரான் என்ற இதனைக் குறிக்கொண்டு திருந்துவார்களாக. இதில் மேலும் ஒருநுட்பம் உள்ளது! தமக்கு வந்த சோதனையைத்தாங்கி வெற்றியடைந்த காட்சியைச் சேக்கிழார் பெருமான் மனக்கண்ணிற் காண்கிறார்! இவ்வாறு இளையான்குடிமாறனார்  வேரித்தாரானாய்த்  தேன் பிலிற்றும் வெற்றி மாலையை அணிந்து நிற்பதாகக் கற்பனை செய்வது கவிஞர்களின் உரிமை! கம்பராமாயணத்தில் வீடணனைத் ‘’தார்க்கோல மேனிமைந்த’’ என்துயர் தவிர்த்தியாயின் கார்க்கோல   மேனியானைக் கூடுதி’’  என்று கும்பகர்ணன் வேண்டும்போது,  வீடணன் இறுதியில் வெற்றி மாலையுடன்  காட்சியளிப்பதாகக்  கற்பனைசெய்தான் என்பர்!

    விருந்து எதிர் கொண்டனன் – இல்லக்கதவுதாழிட்டு அடைத்த பின் நண்ணிய நற்றவர், ‘பசித்து விருந்துவந்தேம்’ எனக் கதவைத் தட்டினார் எனவும், நாயனார். இத்தனை இன்னல்களுக்கு மிடையிலே கதவுதிறந்து, வந்த விருந்தினை உள்ளமும் முகமும் மலர்ந்து உரிய உண்மைவகையிலே வரவேற்று எதிர்கெண்டார் எனவும் வருவித்துரைத்துக் கொள்க. பண்புற – விருந்தோம்பலுக்கு ஏற்ற பண்பு பொருந்தும்படி. அகனமர்ந்த அன்போடு முகமும் மலர்ந்து உரிய பண்பினாலே வரவேற்றல் குறித்தது. இதன் இயல்புகளெல்லாம் நீதிநுல்களுட் காண்க.

    பண்பு உற – வீடுபெறும் பண்பு தன்மை உறும்படியாக – அத்தன்மை தம்மை உற்றதனாலே – என்ற பின்நிகழ்ச்சிக் குறிப்புமாம். இல்லம் அடைந்த பின் என்பது பாடமாயின் நண்ணிய தவசியார், ஓர் தயாரிப்புமில்லாது பசி தலைக்கொண்டு அதிகரிக்கப் பெற்றாராய் நாயனாரது இல்லத்தையடையவே அவர் பண்புற அவ்விருந்தை எதிர் கொண்டனர் என்றுரைத்துக் கொள்க. இப்பொருளில் தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது என்பன நற்றவத்தவர் நிலைகுறித்தது. இது பின்னர்த் தீரவே பசித்தார் (449) என்றதனோடும் பொருந்துமாறும் காண்க. இப்பொருள் சிறந்ததாகக் காண்கின்றது. ஆயினும் பெரும்பான்மை கொண்டுள்ள பாடத்துக் கேற்ப முன்னர் உரைக்கப் பெற்றது.

    விருந்து – புதுமை; புதியராய் வந்தார்மே னின்றது. இங்கு முன் எந்நாளும் கண்டிராத புதுநிலைமை குறித்தது. “இம்மடத்திற் காணும் படியிலாத நீர்“ – (அமர்நீதி – புரா – 10) என்றது காண்க. முன்னெல்லாம் அடியாருடன் கலந்து வந்தனரேயன்றித் தனித்துத் தாமே எழுந்தருளியதில்லையாதலின் இது புதுமை என்பார் விருந்து என்றார். எதிர்கொண்டு வரவேற்றலை ஆவாகனம் என்பது வழக்கு.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 9

    கதை வடிவில் பழமொழி நானூறு – 9

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல்—19

    தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
    பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
    விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
    அரிவாரைக் காட்டார் நரி‘.

    பழமொழி அரிவாரைக் காட்டார் நரி

    கவிதா எனும் பெயர்கொண்ட டீச்சருக்கு மனசு சரியில்லையென இந்த ஸ்டாப் ரூமே பேசிக்கொள்கிறதே. அப்டியென்ன பிரச்சினையாக இருக்கும். ஒன்றிரண்டாகக் காதில் விழுந்தவைகளை வைத்து யூகித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ஏதோ மாணவர்களால பிரச்சினைனு மட்டும் புரியுது.

    என்னவோ இன்னிக்கு நோட்புக் திருத்த மனசே வர மாட்டேங்குது. முப்பது நாப்பது நோட்டுக்களைக் கொண்டுவந்து மேசைமேல் வைத்துவிட்டு என் முன் அமர்கிறாள். ஒரு ஆசிரியை.

    ஆமாம் நீங்க இன்னிக்கு புதுசா சேர வந்திருக்கீங்க இல்ல. மிஸஸ் விமலா டிஜி.டி. ரைட்.

    ஓ இவர்களும் என் டிபார்ட்மெண்ட் போல. மனதிற்குள் நினைத்துக்கொண்டே ஆமாம். இன்னும் தலைமை ஆசிரியரப் பாக்கல என ஆங்கிலத்தில் மொழிந்தேன். தொடர்ந்து பேசுவதற்குள். வாங்க மேடம். உங்கள தலைமை ஆசிரியர் கூப்பிடறார். பியூன் அழைக்க அவரைப் பின் தொடர்ந்தேன்.

    என்ன பேச வேண்டும் என் மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டாலும் ஒரு சிறு உதறல். ஒருவேளை இந்தப் பசங்களால தலைமை ஆசிரியர் எரிச்சலா இருப்பாரோ. நாம ரொம்ப கவனமாப் பேசணும். ஆங்கில ஆசிரியையா சேரப்போரதால ஆங்கிலத்தில் சரளமா பேசி அவரோட நன்மதிப்பைப் பெற்றுடணும்.

    யோசித்துக்கொண்டே பியூனைப் பின் தொடர்ந்ததில் சட்டென அவர் அறை அடைந்தது போல் தோன்றியது.

    எதிர்பார்த்ததுக்கு மாறாக மிக அமைதியான முகம். லேசான திருநீற்றுப்பட்டை முகத்தில்.

    ஓ அவரின் அறை வாசலில் நிற்கும் இந்த மூணு பேரும்தான் கவிதா டீச்சரை தொந்தரவு செஞ்சவங்களா. ஒருவேளை இந்தப் பசங்க இன்னும் இவர்கிட்ட பேசவேயில்லையோ.

    யோசித்துக்கொண்டு இருக்கும்போதே. வாங்க மேடம் உக்காருங்க. இந்தப் பசங்கரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்காங்க. இவங்ககிட்ட பேசிட்டு உங்களக் கேக்கறேன்.

    அவர் அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன். திருவள்ளுவர் ஓவியம் அவரின் நாற்காலிக்குப் பின்னால். தமிழ்ப் பற்று மிக்கவர் போல. நேர்த்தியாக அடுக்கப்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள் அவரின் இடப்புறமிருந்த மர அலமாரியின் கண்ணாடி வழியே தெரிந்தது.

    வாங்கப்பா. மூன்று மாணவர்களையும் உள்ளே அழைக்கிறார். என்னப்பா இதுல ஷ்யாம் யாரு.

     சார்.. குனிந்த தலையுடன் கையை முன்னே உயர்த்துகிறான் ஒரு மாணவன்.

    சரி. விமல் ….துஷ்யந்த்.

    நல்லதுப்பா. இப்ப சொல்லுங்க. என்ன நடந்துதுன்னு.

    சார் நாங்க வேணுமின்னே செய்யல. அந்த அண்ணன் சொன்னாரு. தெனமும் ஒரு சைக்கிள லவுட்டித் தந்தேன்னா நான் உங்க மூணு பேருக்கும் சினிமா டிக்கெட் எடுத்துக் குடுக்கறேன்னு. ஸ்கூல் அசெம்பிளி முடிஞ்சவொடனே சைக்கிள மெதுவா எடுத்துட்டு வந்து பின் பக்கத்துல ஒடஞ்சிருக்கிற மதில் சுவத்து வழியா வெளிய போட்டிரு மத்ததநான் பாத்துக்கறேன்னு. செய்யறதுக்கு ரொம்ப த்ரில்லிங்க இருந்ததால தப்புனு தோணல.

    ரெண்டாவது நாள் அப்டி போடும்போது ரோந்து வந்த போலீஸ் எங்களப் புடிச்சிட்டாங்க. அந்த அண்ணன் ஓடிப்போயிட்டாரு. அவரு யாருனு கூட எங்களுக்குத் தெரியாது. இது உண்ம சார். துஷ்யந்த்முடித்தவுடன்

    மூணு பசங்களூம் குமுறிக் குமுறி அழுகிறார்கள்.

    என்ன ஆச்சரியம். அவர் ஏதோ பெரிசா பனிஷ்மண்ட் குடுக்கப்போறார்னு நெனச்ச எனக்கு.

    எப்போ நீங்க கண்ணீர் உட்டு வருத்தப்படறீங்களோ அப்பவே தப்ப உணர்ந்துட்டீங்கனு அர்த்தம்.  கவிதா டீச்சரும் உங்களப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னாங்க. இனிமே நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கணும்னு இல்ல. இருந்தாலும்

    நான் இப்ப சொல்லப்போற பழமொழிய அதோட அர்த்தத்தோட ஐந்து முறை எழுதிட்டு வாங்க. உங்க வகுப்புலஇருக்கற எல்லா மாணவர்களுக்கும் அதச் சொல்லிக்குடுங்க. பழமொழி இதுதான். ‘அரிவாரைக் காட்டார் நரி’

    நல்லபடியா நெல்ல அறுவடை செய்யறவங்க முன்ன அவங்க வேல கெடறமாதிரி யாரும் கவனத்த திசைதிருப்ப மாட்டாங்க.  அதுமாதிரிதான் படிக்கிற பசங்க நீங்க நல்லவங்க கூட்டத்தோடதான் சேரணும். இந்த மாதிரி மனசக் கெடுக்கற கூட்டத்துக்கூட சேர நெனைக்கவே கூடாது. இந்த விசயத்த இத்தோட உட்ருங்க. படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க. புரிஞ்சுதா.

    அதன்பிறகு என்னிடம் கேள்விகள் தொடர்கின்றன. ஒப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாலும் மனம் முழுக்க அவர் அந்தப் பசங்ககிட்ட காட்டின பரிவு நிறைந்து இருந்தது. கண்டிப்பா இந்தப் பள்ளியில பல வருசம் வேலை பார்க்கணும். தீர்மானித்தேன்.

    பாடல்- 20

    முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
    விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
    இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
    அழகொடு கண்ணின் இழவு.

    பழமொழி – அழகொடு கண்ணின் இழவு.

    நான் இங்குமங்கும் பறந்துகொண்டிருக்கிறேன். வயிற்றுப்பசி காதை அடைக்கிறது. என்ன செய்ய. எங்கயும் சாப்பாடு கெடைக்கல. கொஞ்ச நேரம் பிரயாணம் பண்ணினதுல ஊர் வந்து சேந்தது கூடத் தெரியல. இனிமே எனக்கு நல்லா வழி தெரியும். வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிட்டுட்டு  வேப்பமரக் காத்துல ஒரு தூக்கம் போட்டா அசதி போயிடும்.

    பர்க்கர் போடும் வேலு கடையைத் தாண்டறதுக்குள்ள வயிறு குய்யோ முறையோனு கத்துது. அவங்கிட்ட வாய்விட்டுக் கேக்க முடியாது. இல்லனு விரட்டிட்டா அவமானமாப் போயிடும். கொஞ்ச தூரம் தானே வீட்டுக்குப் போயிடலாம்.

    பசிய அடக்கிப் பறந்து பறந்து ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு. பையன்கிட்ட சாப்பாடு கேக்கறதுல என்ன இருக்கு, இல்லன்னா சொல்லப்போறான். சத்தம் போட்டுக் கேட்டதுதான் மிச்சம். தொண்ட வறண்டு போச்சு.

    மருமக யார்கிட்டயோ பேசிட்டிருக்கா. அவ தோழி வந்திருக்கா போல. மேசை மேல சமோசா, டீ யெல்லாம் வச்சிருக்கு. என் பசிக்கு ஒருவாய் தர மாட்டேங்குறா.

    மயக்கமாய் அமர்ந்திருந்தேன். லேசான குரலில் அவளின் பேச்சுச் சத்தம்.

    எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்ல. பாத்தையில்ல. வீட்ட வசதியா இடிச்சுக் கட்டிக்கிட்டோம். பையனையும் ஊட்டி போர்டிங் ஸ்கூல்ல போட்டாச்சு. வெளியில இறங்கினா கார்தான். இப்போ டிரைவர வரச்சொல்லியிருக்கேன். வந்தவொடனே கெளம்பலாம். ஐந்து மணி ஷோவுக்குதான் டிக்கெட் வாங்கியிருக்கேன்.

    அப்பறம் நீ சொல்லு. உங்க வீட்ல எப்டி. உனக்கு நேரம் கெடைக்குமா. அவளின் தோழி தொடர்கிறாள்.

    உனக்கென்னப்பா நீ புண்ணியம் செஞ்சவ. நல்ல மாமனார் சொத்து சுகத்த உட்டுட்டுப் போய்ச் சேந்துட்டார். அனுபவிக்கிற. என் மாமனார் என்கூடவே இருக்கறதால வயசான அவர உட்டுட்டு நெனச்ச நேரத்துக்கு என்னால வெளியில வர முடியாது. இப்ப நீ வற்புறுத்திக் கூப்பிட்டதால வந்தேன் அவ்வளவுதான்.

    சரி. நீ டிரஸ் மாத்திட்டுவா. ரொம்ப நேரமா பால்கனியில காக்கா கத்திக்கிட்டே இருக்கே. தினமும் சாப்பாடு போட்டுப் பழக்கியிருக்கியா.

    எங்க மாமனார் ஒரு பணக்காரக் கஞ்சன். கோடிகோடியா சொத்து இருந்தாலும் உசிர் இருக்கற வர எச்சிக்கையால காக்கா விரட்ட மாட்டாரு. சிரித்துவிட்டு டிரஸ் மாத்தச் சென்றுவிட்டாள் என் மருமகள்.

    உங்க மாமனார் ‘அழகொடு கண்ணின் இழவு’.ங்கற பழமொழிக்கு எடுத்துக்காட்டாயில்ல வாழ்ந்திருக்கிறார். அம்சமா அழகா இருக்கற ஒரு பெண் பார்வையற்று இருந்தா அந்த அழகால பெருமையில்லங்கற மாதிரி அவரோட பணத்தால அவருக்கு ஒரு பிரயோசனமும் இருந்திருக்காது..

    உண்மதான். இருந்தவர எதையும் அனுபவிக்கல. இப்ப எந்த உலகத்துல போய் சொத்து சேக்கறதப் பத்தி பேசிக்கிட்டிருக்காறோ சிரித்துக் கொண்டிருக்கிறாள் என் மருமகள்.

    எனக்கு இப்டி ஒரு நிலைமை வரும்னு நான் நெனச்சிக்கூட பாக்கல சாப்பாடு கிடைக்கும் எனும் நம்பிக்கையிழந்த நான் என் வீட்டு வேப்பமரத்தை நோக்கி சிறகுவிரித்துப் பறக்கிறேன். வேப்பம்பழமாவது கிடைக்குமா எனும் ஏக்கத்தோடு.

    Share
  • ஹிரோஷி யமவுச்சி

    ஹிரோஷி யமவுச்சி

    நியாண்டர் செல்வன்

    1949.. ஜப்பான்….. ஹிரோஷி யமவுச்சி (Hiroshi Yamauchi) எனும் இளைஞன்.. இளவயதில் அவன் அப்பா அவனைக் கைவிட்டுவிட்டு ஓடிப் போய்விட்டார். அம்மா மட்டுமே வளர்த்து வந்தார்.

    கல்லூரியில் படிக்கையில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது, “உன் தாத்தா மரணப் படுக்கையில் இருக்கிறார். வந்து பார்” என.

    போனால் தாத்தா அவன் கையைப் பிடித்தபடி “நான் ஒரு சீட்டுக்கட்டு உற்பத்தி செய்யும் கம்பனியை நடத்தி வருகிறேன். அதை எனக்குப் பின் நீ தான் பார்க்கவேண்டும்” என்றார்.

    கம்பனி அப்போது இழப்பில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் இவனுக்கு அது தெரியாது. இளவயது வேறு. உற்சாகமாகச் சவாலை ஏற்றுக்கொண்டான்.

    கம்பனிக்குப் போனால் சீட்டுக்கட்டுகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் இருந்தன. சீட்டுக்கட்டு விற்பனை குறைந்துகொண்டே வந்தது. இவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை.

    “இப்ப என்ன தொழிலுக்கு டிமாண்ட் இருக்கு” என நண்பர்களைக் கேட்டான்.

    “சீட்டு கம்பனி நடத்துகிறாய்,. கூடவே சூதாட்டம், விபச்சாரம் எல்லாம் செய்தால் நல்ல லாபம் வரும்” என அவர்கள் ஆலோசனை கூற, இவனும் ஓட்டல்களைக் குத்தகைக்கு எடுத்து ஒருமணி நேர வாடகைக்கு விட்டு நன்றாகச் சம்பாதித்தான். இளவயது… அவனுக்கு வாய்த்த நண்பர்கள் அந்த ரகம், இவனுக்கும் பெரிய அறிவு எல்லாம் கிடையாது.

    ஆனால் ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் கிடந்த தாத்தாவுக்கு விவரம் தெரிந்து, அவனை அழைத்துக் கண்டபடி திட்டித் தீர்க்க, “சரி வேறு ஏதாவது செய்யலாம்” எனச் சொல்லி “விஞ்ஞானிகள் தேவை” என விளம்பரம் கொடுத்தான்.

    இக்கம்பனி இருந்த நகரம், க்யோட்டோ. விஞ்ஞானிகள் எல்லாம் டோக்கியோவுக்கு வேலைக்குப் போகத் தான் ஆசைப்பட்டார்கள். வந்தவர்களை இண்டர்வியூ எடுத்ததில் குன்பேய் யோகோய் என்பவன் மட்டுமே தேறினான். அவனுக்கும் பெரியதாக எதுவும் தெரியாது. அவன் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மாணவன். மதிப்பெண்கள் மிகக் குறைவு. எந்த அனுபவமும் இல்லை. அவன் கொடுத்த சம்பளத்துக்கு இவன் மட்டுமே தேறினான்.

    முதலாளி, விஞ்ஞானி.. இருவரும் கல்லூரி மாணவர்கள், கம்பனி மூழ்கும் நிலையில் இருக்கிறது…… ஏதோ அதிசயம் நடக்கவேண்டும்.. நடந்தது.

    “நீ போய் உன் விருப்பப்படி ஆராய்ச்சி பண்ணு. நல்லதா ஒரு பொருளைக் கண்டுபிடி. விற்கலாம்” என முதலாளி சொன்னார்.

    குன்பே யோகோய், லேபுக்கு போனான். அங்கே போர் அடித்ததால் நீளமான குச்சியை எடுத்து, செயற்கைக் கை ஒன்றைப் பதித்து, அதை வைத்துத் தூரத்தில் இருக்கும் பொருட்களை எடுக்க முயற்சி செய்துகொண்டு இருந்தான்.

    ஜன்னல் வழியே பார்த்த முதலாளி, “வாடா என் ஆபிசுக்கு” என்றார்.

    “சரி வேலை காலி” என நினைத்து பயந்தபடி உள்ளே போக “இப்ப செஞ்சு விளையாடினாயே ஒரு கை? அதை விற்பனைக்கு விட்டால் என்ன?”

    “நல்ல ஆலோசனையா இருக்கே..”

    “சும்மா கை மட்டும் போதாது. அதுக்கு வாகா கலர் பந்தையும் தயார் பண்ணு. தூரத்தே இருக்கும் பொருட்களை எடுக்கலாம்னு சொல்லி… விற்கலாம்”

    அந்தப் பொம்மை, சந்தையில் சக்கைபோடு போட்டது. பெரிய கம்பனிகள் இக்கம்பனியை நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தன.

    அதன்பின் விஞ்ஞானி ஒரு நாள், முதலாளி ஆபிசுக்கு வந்தார்.

    “மெட்ரோ ரயிலில் வருகையில் பார்த்தேன். ஜப்பானில் எல்லாரும் தினம் 1- 2 மணிநேரம் பயணித்துத் தான் ஆபிசுக்கு வருகிறார்கள். ரயிலில் வருகையில் பயங்கரமாக போர் அடிக்கிறது. ஒருத்தன் கால்குலேட்டரை வைத்து அமுக்கிக்கொண்டே வந்தான். அப்போது எனக்கு அந்த ஆலோசனை தோன்றியது. கால்குலேட்டர் கம்பனி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம். கால்குலேட்டர் உருவில் கையில் வைத்து விளையாடுவது மாதிரியான கருவி ஒன்றைச் செய்து விற்றால் என்ன? ரயில் பயணிகள் ஏராளமாக வாங்குவார்கள்..”

    ஷார்ப் எனும் கால்குலேட்டர் கம்பனியைப் பிடித்தார்கள். ஐடியாவைச் சொன்னதும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். “ஏம்ப்பா ஆபிசுக்கு போகிறவன் எத்தனை டென்சன்ல போவான்? அவனுக்கு விளையாட்டுப் பொம்மையா? பெரியவங்க எல்லாம் பொம்மையை வெச்சு விளையாடுவாங்களா? சரி. அது உன் கவலை…. பணம் கொடு. நாங்க தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்…”

    கேம்பாய் எனும் அக்கருவி வெளிவந்து விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல் ஆண்டில் 4.3 கோடி பொம்மைகள் விற்றுத் தீர்ந்தன. ரயிலில் போகையில் அது இல்லாமல் போக முடியாது எனும் அளவுக்கு மக்கள் அதற்கு அடிமை ஆனார்கள். அதன் பல்வேறு வெர்சன்களைக் கொண்டு வந்து விற்க, ஒவ்வொன்றையும் மக்கள் பைத்தியம் பிடித்தது போல வாங்கினார்கள்.

    அதன்பின் சர்வதேச ஆர்டர்கள் குவிய, கம்பனி பன்னாட்டு நிறுவனம் ஆனது…

    அக்கம்பனி நின்டென்டோ (Nintendo)….

    எதுவும் தெரியாத இரு கல்லூரி மாணவர்கள் இணைந்து செய்த சாதனை இது.

    இருவருக்கும் இருந்தது எதாவது செய்து முன்னேற வேண்டும் எனும் துடிப்பும், அதற்கேற்ற உழைப்பும் மட்டுமே. அதில் பல முட்டாள்தனங்களைச் செய்தார்கள். விபச்சார விடுதி நடத்தியது மாதிரியான முட்டாள்தனம் தான், செயற்கைக் கையை விற்றதும், கேம்பாயை விற்றதும். ஆனால் நூறு முட்டாள்தனங்களைச் செய்தால் தான் ஒரு நல்ல விசயத்தை நமக்கே தெரியாமல் செய்வோம். அது ஜீனியஸ் ஸ்ட்ரோக் ஆக இருக்கும்… நம்மை அது எங்கோ கொண்டுபோய்விடும்.

    Share
  • வின்சன்ட் வான் கா

    வின்சன்ட் வான் கா

    நியாண்டர் செல்வன்
     
    வறுமையில் எந்தத் தொழிலும் கைவராமல் தவிக்கும் இளைஞன், கெரியரில் என்ன செய்ய முடியும்?
     
    ஆயுள் முழுக்க அண்ணன் சம்பாத்தியத்தில் வாழ்ந்த ஒருவனால் என்ன சாதிக்க முடியும்?
     
    15 வயதில் முயன்று கைவிட்டதை 30 வயதில் எடுத்துச் செய்து, தொடர்தோல்விகளுக்குப்  பின் உலகின் மிக உன்னதமான கலைஞனாக அத்துறையில் ஆக முடியுமா?
     
    முடியும் என நிரூபித்தார் வின்சன்ட் வான் கா…
     
    வின்சன்ட் வான் கா.. காலம் 19ஆம் நூற்றாண்டு
     
    ஓவியம் கற்றுக்கொள்ளலாம் என ஒவியப் பள்ளியில் 15 வயதில் சேர்ந்தார். ஓவியம் சுத்தமாக வரவில்லை. அதன்பின் விற்பனையாளர், ஆசிரியர் என என்னென்னவோ வேலை பார்த்தார். பாதிரியார் ஆக முயன்றார். தன் அத்தை மகளை மணக்க முயன்றார். அப்போது அவர் எந்த வருமானமும் இல்லாமல் இருந்தார். அவரது அண்ணன்தான் அவருக்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தார். இத்தகையவருக்கு எப்படிப் பெண் கொடுப்பார்கள்?
     
    அதன்பின் மனம் வெறுத்து, ஒரு விலைமகளைக் காதலிக்க ஆரம்பித்தார். அவள் பகலில் இவருடன் வாழ்வாள். மாலையில் தொழிலுக்குப் போய்விடுவாள். அவளைத் தொழிலுக்குப் போகாமல் தடுக்கவும் இவருக்கு வருமானமில்லை. வீட்டில் விவரம் தெரிந்து கண்டபடி திட்டி, அவளை அடித்து விரட்டிவிட்டார்கள். அதன்பின் அவள் நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.
     
    27 வயதில் அனைத்தையும் இழந்து நின்றவருக்கு வீட்டில் “இனி மேலாவது எதாவது உருப்படியாகச் செய்” என்றார்கள். இவருக்கு ஏனோ திடீர் என 15 வயதில் ஓவியம் வரைந்த நினைவு வந்தது… “நான் ஓவியன் ஆகப் போகிறேன்” என்றார். எல்லாரும் சிரித்தார்கள். அண்ணன் மட்டும் “அவன் விருப்பப்படி பண்ணட்டும். நான் தானே பணம் கொடுக்கிறேன். உங்களுக்கு என்ன” எனச் சொல்லி அவரை ஓவியப் பள்ளியில் சேர்த்தார்.
     
    வயது முதிர்ந்த மாணவர், அங்கே இவர் மட்டுமே.. இவர் வரைந்த ஓவியங்களைப் பார்த்து அனைவரும் உதட்டைப் பிதுக்கினார்கள். “10 வயது மாணவர்களுடன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து தான் நீ ஓவியம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனச் சொல்லி அவரைக் கீழ் வகுப்புக்கு அனுப்பினார்கள்
     
    27 வயது ஆண், 10 வயது சிறுவர்களுடன் உட்கார்ந்து ஓவியம் கற்றுக்கொண்டால் எப்படி இருக்கும்? ஆனால் வான் கா விடவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல… பல ஆண்டுகள். அத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஓவியப் பள்ளியில் அவரது திறமையை ஏற்றுக்கொள்ளவில்லை. “நீ வேறு தொழிலைக் கற்றுக்கொள். ஏன் இதில் வாழ்க்கையை வீணடிக்கிறாய்” எனக் கேட்டார்கள்.
     
    அதன்பின் கடற்கரையில் அமர்ந்து தானே ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார் வான் கா. தன்னந்தனியே பயிற்சி எடுக்கையில் ஓவியக் கலை பிடிபட்டது. அதன்பின் தன் 34ஆவது வயதில் பாரிசுக்குப் போனார். அங்கே தன் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தார்.
     
    அதை எந்தக் கண்காட்சியும் வாங்க முன்வரவில்லை என்பதால் காபிக் கடை, மளிகைக் கடை மாதிரி இடங்களுக்குக் கொடுத்துக் காட்சிப்படுத்தினார். அண்ணன் தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அவரிடம் பணம் சுத்தமாக இல்லை. ரொட்டி, கருங்காப்பி, சிகரெட்… இவற்றை மட்டுமே மாதக் கணக்கில் உண்டார். சூடான உணவை உண்டே பல மாதங்கள் ஆகியிருந்தது.
     
    பற்கள் உதிர்ந்து, மனநிலை குன்றி, ஓவியம் வரைய மாடல்களுக்குக் கொடுக்கக் கூட காசு இல்லாத நிலையில் தன்னைத் தானே வரைந்தார். விவசாயிகள், அன்றாட வாழ்க்கையில் காணும் எளிய மக்களை வரைந்தார். இறுதியில் தன் 36ஆவது வயதில் கொடிய வறுமையில், துப்பாக்கியை எடுத்துச் சுட்டு, தற்கொலை செய்துகொண்டார்.
     
    அதன்பின் அவரது ஓவியங்கள் பலரது கண்ணில் பட்டு, அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். டாக்டர் ஒருவருக்கு, காது வலி சிகிச்சைக்குக் கொடுக்கப் பணம் இன்றி, ஒரு ஓவியத்தைக் கொடுத்து வைத்திருந்தார். அது ஐந்து கோடி டாலருக்கு விலை போனது. அவரது ஒவ்வோர் ஓவியமும் சுமாராக 10 கோடி டாலருக்கு விற்றது.
     
    இன்னும் இரு ஆண்டுகள் தாக்குப் பிடித்து இருந்திருந்தால், மிகப்பெரும் செல்வந்தராக ஆகியிருப்பார்.
     
    ஆனால் அனைத்திலும் தோல்வியுற்று, வாழ்நாளின் கடைநி நிமிடம் வரை அண்ணன் சம்பாத்தியத்தில் வாழும் நிலையை அடைந்திருந்தாலும் உலகின் மிக உன்னதமான ஓவியக் கலைஞனாக ஆகித்தான் தன் உயிரை விட்டார். தான் பாடுபட்டு அடைந்த வெற்றியைச் சுவைக்க இறுதியில் அவர் உயிருடன் இருக்கவில்லை.
     
    Photo courtesy: Wikipedia
    Share