Pazhamozhi Naanooru

நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல்—19

தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
அரிவாரைக் காட்டார் நரி‘.

பழமொழி அரிவாரைக் காட்டார் நரி

கவிதா எனும் பெயர்கொண்ட டீச்சருக்கு மனசு சரியில்லையென இந்த ஸ்டாப் ரூமே பேசிக்கொள்கிறதே. அப்டியென்ன பிரச்சினையாக இருக்கும். ஒன்றிரண்டாகக் காதில் விழுந்தவைகளை வைத்து யூகித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ஏதோ மாணவர்களால பிரச்சினைனு மட்டும் புரியுது.

என்னவோ இன்னிக்கு நோட்புக் திருத்த மனசே வர மாட்டேங்குது. முப்பது நாப்பது நோட்டுக்களைக் கொண்டுவந்து மேசைமேல் வைத்துவிட்டு என் முன் அமர்கிறாள். ஒரு ஆசிரியை.

ஆமாம் நீங்க இன்னிக்கு புதுசா சேர வந்திருக்கீங்க இல்ல. மிஸஸ் விமலா டிஜி.டி. ரைட்.

ஓ இவர்களும் என் டிபார்ட்மெண்ட் போல. மனதிற்குள் நினைத்துக்கொண்டே ஆமாம். இன்னும் தலைமை ஆசிரியரப் பாக்கல என ஆங்கிலத்தில் மொழிந்தேன். தொடர்ந்து பேசுவதற்குள். வாங்க மேடம். உங்கள தலைமை ஆசிரியர் கூப்பிடறார். பியூன் அழைக்க அவரைப் பின் தொடர்ந்தேன்.

என்ன பேச வேண்டும் என் மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டாலும் ஒரு சிறு உதறல். ஒருவேளை இந்தப் பசங்களால தலைமை ஆசிரியர் எரிச்சலா இருப்பாரோ. நாம ரொம்ப கவனமாப் பேசணும். ஆங்கில ஆசிரியையா சேரப்போரதால ஆங்கிலத்தில் சரளமா பேசி அவரோட நன்மதிப்பைப் பெற்றுடணும்.

யோசித்துக்கொண்டே பியூனைப் பின் தொடர்ந்ததில் சட்டென அவர் அறை அடைந்தது போல் தோன்றியது.

எதிர்பார்த்ததுக்கு மாறாக மிக அமைதியான முகம். லேசான திருநீற்றுப்பட்டை முகத்தில்.

ஓ அவரின் அறை வாசலில் நிற்கும் இந்த மூணு பேரும்தான் கவிதா டீச்சரை தொந்தரவு செஞ்சவங்களா. ஒருவேளை இந்தப் பசங்க இன்னும் இவர்கிட்ட பேசவேயில்லையோ.

யோசித்துக்கொண்டு இருக்கும்போதே. வாங்க மேடம் உக்காருங்க. இந்தப் பசங்கரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்காங்க. இவங்ககிட்ட பேசிட்டு உங்களக் கேக்கறேன்.

அவர் அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன். திருவள்ளுவர் ஓவியம் அவரின் நாற்காலிக்குப் பின்னால். தமிழ்ப் பற்று மிக்கவர் போல. நேர்த்தியாக அடுக்கப்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள் அவரின் இடப்புறமிருந்த மர அலமாரியின் கண்ணாடி வழியே தெரிந்தது.

வாங்கப்பா. மூன்று மாணவர்களையும் உள்ளே அழைக்கிறார். என்னப்பா இதுல ஷ்யாம் யாரு.

 சார்.. குனிந்த தலையுடன் கையை முன்னே உயர்த்துகிறான் ஒரு மாணவன்.

சரி. விமல் ….துஷ்யந்த்.

நல்லதுப்பா. இப்ப சொல்லுங்க. என்ன நடந்துதுன்னு.

சார் நாங்க வேணுமின்னே செய்யல. அந்த அண்ணன் சொன்னாரு. தெனமும் ஒரு சைக்கிள லவுட்டித் தந்தேன்னா நான் உங்க மூணு பேருக்கும் சினிமா டிக்கெட் எடுத்துக் குடுக்கறேன்னு. ஸ்கூல் அசெம்பிளி முடிஞ்சவொடனே சைக்கிள மெதுவா எடுத்துட்டு வந்து பின் பக்கத்துல ஒடஞ்சிருக்கிற மதில் சுவத்து வழியா வெளிய போட்டிரு மத்ததநான் பாத்துக்கறேன்னு. செய்யறதுக்கு ரொம்ப த்ரில்லிங்க இருந்ததால தப்புனு தோணல.

ரெண்டாவது நாள் அப்டி போடும்போது ரோந்து வந்த போலீஸ் எங்களப் புடிச்சிட்டாங்க. அந்த அண்ணன் ஓடிப்போயிட்டாரு. அவரு யாருனு கூட எங்களுக்குத் தெரியாது. இது உண்ம சார். துஷ்யந்த்முடித்தவுடன்

மூணு பசங்களூம் குமுறிக் குமுறி அழுகிறார்கள்.

என்ன ஆச்சரியம். அவர் ஏதோ பெரிசா பனிஷ்மண்ட் குடுக்கப்போறார்னு நெனச்ச எனக்கு.

எப்போ நீங்க கண்ணீர் உட்டு வருத்தப்படறீங்களோ அப்பவே தப்ப உணர்ந்துட்டீங்கனு அர்த்தம்.  கவிதா டீச்சரும் உங்களப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னாங்க. இனிமே நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கணும்னு இல்ல. இருந்தாலும்

நான் இப்ப சொல்லப்போற பழமொழிய அதோட அர்த்தத்தோட ஐந்து முறை எழுதிட்டு வாங்க. உங்க வகுப்புலஇருக்கற எல்லா மாணவர்களுக்கும் அதச் சொல்லிக்குடுங்க. பழமொழி இதுதான். ‘அரிவாரைக் காட்டார் நரி’

நல்லபடியா நெல்ல அறுவடை செய்யறவங்க முன்ன அவங்க வேல கெடறமாதிரி யாரும் கவனத்த திசைதிருப்ப மாட்டாங்க.  அதுமாதிரிதான் படிக்கிற பசங்க நீங்க நல்லவங்க கூட்டத்தோடதான் சேரணும். இந்த மாதிரி மனசக் கெடுக்கற கூட்டத்துக்கூட சேர நெனைக்கவே கூடாது. இந்த விசயத்த இத்தோட உட்ருங்க. படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க. புரிஞ்சுதா.

அதன்பிறகு என்னிடம் கேள்விகள் தொடர்கின்றன. ஒப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாலும் மனம் முழுக்க அவர் அந்தப் பசங்ககிட்ட காட்டின பரிவு நிறைந்து இருந்தது. கண்டிப்பா இந்தப் பள்ளியில பல வருசம் வேலை பார்க்கணும். தீர்மானித்தேன்.

பாடல்- 20

முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
அழகொடு கண்ணின் இழவு.

பழமொழி – அழகொடு கண்ணின் இழவு.

நான் இங்குமங்கும் பறந்துகொண்டிருக்கிறேன். வயிற்றுப்பசி காதை அடைக்கிறது. என்ன செய்ய. எங்கயும் சாப்பாடு கெடைக்கல. கொஞ்ச நேரம் பிரயாணம் பண்ணினதுல ஊர் வந்து சேந்தது கூடத் தெரியல. இனிமே எனக்கு நல்லா வழி தெரியும். வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிட்டுட்டு  வேப்பமரக் காத்துல ஒரு தூக்கம் போட்டா அசதி போயிடும்.

பர்க்கர் போடும் வேலு கடையைத் தாண்டறதுக்குள்ள வயிறு குய்யோ முறையோனு கத்துது. அவங்கிட்ட வாய்விட்டுக் கேக்க முடியாது. இல்லனு விரட்டிட்டா அவமானமாப் போயிடும். கொஞ்ச தூரம் தானே வீட்டுக்குப் போயிடலாம்.

பசிய அடக்கிப் பறந்து பறந்து ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு. பையன்கிட்ட சாப்பாடு கேக்கறதுல என்ன இருக்கு, இல்லன்னா சொல்லப்போறான். சத்தம் போட்டுக் கேட்டதுதான் மிச்சம். தொண்ட வறண்டு போச்சு.

மருமக யார்கிட்டயோ பேசிட்டிருக்கா. அவ தோழி வந்திருக்கா போல. மேசை மேல சமோசா, டீ யெல்லாம் வச்சிருக்கு. என் பசிக்கு ஒருவாய் தர மாட்டேங்குறா.

மயக்கமாய் அமர்ந்திருந்தேன். லேசான குரலில் அவளின் பேச்சுச் சத்தம்.

எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்ல. பாத்தையில்ல. வீட்ட வசதியா இடிச்சுக் கட்டிக்கிட்டோம். பையனையும் ஊட்டி போர்டிங் ஸ்கூல்ல போட்டாச்சு. வெளியில இறங்கினா கார்தான். இப்போ டிரைவர வரச்சொல்லியிருக்கேன். வந்தவொடனே கெளம்பலாம். ஐந்து மணி ஷோவுக்குதான் டிக்கெட் வாங்கியிருக்கேன்.

அப்பறம் நீ சொல்லு. உங்க வீட்ல எப்டி. உனக்கு நேரம் கெடைக்குமா. அவளின் தோழி தொடர்கிறாள்.

உனக்கென்னப்பா நீ புண்ணியம் செஞ்சவ. நல்ல மாமனார் சொத்து சுகத்த உட்டுட்டுப் போய்ச் சேந்துட்டார். அனுபவிக்கிற. என் மாமனார் என்கூடவே இருக்கறதால வயசான அவர உட்டுட்டு நெனச்ச நேரத்துக்கு என்னால வெளியில வர முடியாது. இப்ப நீ வற்புறுத்திக் கூப்பிட்டதால வந்தேன் அவ்வளவுதான்.

சரி. நீ டிரஸ் மாத்திட்டுவா. ரொம்ப நேரமா பால்கனியில காக்கா கத்திக்கிட்டே இருக்கே. தினமும் சாப்பாடு போட்டுப் பழக்கியிருக்கியா.

எங்க மாமனார் ஒரு பணக்காரக் கஞ்சன். கோடிகோடியா சொத்து இருந்தாலும் உசிர் இருக்கற வர எச்சிக்கையால காக்கா விரட்ட மாட்டாரு. சிரித்துவிட்டு டிரஸ் மாத்தச் சென்றுவிட்டாள் என் மருமகள்.

உங்க மாமனார் ‘அழகொடு கண்ணின் இழவு’.ங்கற பழமொழிக்கு எடுத்துக்காட்டாயில்ல வாழ்ந்திருக்கிறார். அம்சமா அழகா இருக்கற ஒரு பெண் பார்வையற்று இருந்தா அந்த அழகால பெருமையில்லங்கற மாதிரி அவரோட பணத்தால அவருக்கு ஒரு பிரயோசனமும் இருந்திருக்காது..

உண்மதான். இருந்தவர எதையும் அனுபவிக்கல. இப்ப எந்த உலகத்துல போய் சொத்து சேக்கறதப் பத்தி பேசிக்கிட்டிருக்காறோ சிரித்துக் கொண்டிருக்கிறாள் என் மருமகள்.

எனக்கு இப்டி ஒரு நிலைமை வரும்னு நான் நெனச்சிக்கூட பாக்கல சாப்பாடு கிடைக்கும் எனும் நம்பிக்கையிழந்த நான் என் வீட்டு வேப்பமரத்தை நோக்கி சிறகுவிரித்துப் பறக்கிறேன். வேப்பம்பழமாவது கிடைக்குமா எனும் ஏக்கத்தோடு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.