அமெரிக்க மனைவியின் துக்கம் அனுசரிக்கும் அழகு

0

நாகேஸ்வரி அண்ணாமலை

சில நாட்களுக்கு முன்னால் எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். எங்கள் திருமணத்திற்கு முன்பே அவர் என் கணவருக்குப் பரிச்சயமானவர். அமெரிக்கரான அவர் பீஸ்கோர் (peace corps) திட்டத்தில் இந்தியாவுக்கு வந்தபோது என் கணவரோடு பரிச்சயம் ஏற்பட்டது. பின் அவர் அமெரிக்கா திரும்பிய பிறகும் அவர்கள் நட்பு தொடர்ந்தது.  அதன் பிறகு நாங்கள் அமெரிக்காவில் வசிக்க ஆரம்பித்தோம்.  என் கணவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபோது அவரும் அங்கேயே முனைவர் பட்டதிற்குச் சேர்ந்தார்.  நாங்கள் இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்து அவர்கள் நட்பு நீடித்தது.  நாங்கள் இரண்டாவது முறையாக அமெரிக்காவில் செட்டில் ஆனதும் அவரும் பக்கத்திலேயே வசிக்க ஆரம்பித்தார்.  இதற்குள் இவருக்கும் இவருடைய முதல் மனைவிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டு இரண்டாவது முறையாக மணம் செய்து கொண்டிருந்தார். முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்திருந்தாலும் அடிக்கடி அவரைப் பற்றிப் பேசுவார். அந்த விவாகரத்திற்குக் காரணம் அவருடைய முதல் மனைவிதான். இவர் மனைவியோடு ஒத்துப்போகத் தயாராக இருந்தாலும் அவருடைய முதல் மனைவி என்ன காரணத்தாலோ இவரை விட்டுப் பிரியவே விரும்பினார்; அப்படியே பிரிந்தும்விட்டார்.

அப்படிப் பிரிந்துபோன மனைவியை இவர் கடைசிவரை தன் மனதில் வைத்திருந்தார் என்று நான் சொல்வேன். முதல் மனைவி திரும்பித் தன்னிடம் வர மாட்டார் என்று உறுதியானதும் இவரும் இன்னொரு துணையைத் தேடிக்கொண்டார். அப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் இருவருக்கும் இடையே ஒரு பந்தம் ஏற்படவில்லையென்று நான் சொல்வேன்.  வசதிக்காக இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

இரண்டாவது திருமணம் முடிந்து ஏழெட்டு வருடங்களிலேயே அவருக்கு ஒரு வகையான ரத்தப் புற்றுநோய் வந்தது.  அமெரிக்காவில்தான் யாரையும் எளிதில் இறக்கவிட மாட்டார்களே!  இருபது வருடங்கள் அந்த வியாதியோடு வாழ்க்கையை ஓட்டிவந்தார்.  கடைசியாக சென்ற வாரம் அவர் உயிர் பிரிந்தது.  நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அவர்கள் வசிக்கும் இடம் நாற்பது மைல் தூரம் என்றாலும் (அமெரிக்காவில் நாற்பது மைல் தூரத்தை எளிதாக நாற்பது நிமிடங்களில் கடந்துவிடலாம்.  அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை எத்தனை நேரத்தில் அந்த இடத்தை அடையலாம் என்று குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஒரு மணி நேர தூரம் என்றால் 60 மைல் தூரம் என்று அர்த்தம்.) முதல் சில வருடங்களில் அடிக்கடி வந்து எங்களைப் பார்ப்பார்.  அவருக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும். நானும் அவர் வரும்போதெல்லாம் அவருக்குப் பிடித்த இந்திய உணவுகளாகச் சமைப்பேன். வருடத்திற்கு ஒரு முறையாவது அவர் மனைவியும் உடன் வருவார்.  அதன் பிறகு வியாதியின் தாக்கம் அதிகமாகியதால் எங்கள் வீட்டிற்கு வருவதைக் குறைத்துக்கொண்டே போனார். வியாதியின் கொடூரத்தால் எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொள்வது, மின்னஞ்சல் அனுப்புவது போன்றவற்றைக்கூட அவரால் செய்ய முடியவில்லை.  இருவருக்கும் பொதுவான லேண்ட் லைனில்தான் நங்கள் அவரைத் தொடர்பு கொள்வோம், செய்திகளை விடுவோம்.  இவரால் எங்களுக்குப் பதில் அளிக்க முடியவில்லையென்றால் மனைவியாவது எங்களைத் தொடர்புகொள்ளக் கூடாதா என்று நான் நினைப்பேன்.  தனக்கும் தன் கணவருக்கும் தொடர்பு எதுவும் இல்லையென்பதுபோல் மனைவி நடந்துகொண்டார்.

ஒரு முறை அவருடைய மகள் (முதல் திருமணத்தில் பிறந்தவர்) இவரைப் பார்க்க வந்திருந்தபோது எங்கள் இருவரின் பெயர்களைச் சொல்லியிருக்கிறார்.  இவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்று தெரிந்துகொண்டு இவருடைய மகள் எங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டார். எங்கள் வீட்டிற்கு அவளுடைய தந்தை வர விரும்புவதாகத் தெரிவித்தார்.  நாங்கள் அப்போது இந்தியாவில் இருந்ததால் அமெரிக்கா திரும்பியதும் அவர் மகளை எங்கள் வீட்டிற்கு அவரை அழைத்துவரும்படிக் கூறினோம். 2019 நவம்பர் மாதம் மகளும் தந்தையும் வந்தனர். வழக்கம்போல் நான் இந்திய உணவு சமைத்திருந்தேன். ரசித்துச் சாப்பிட்டார்.  அதன் பிறகு மறுபடி அவரைப் பார்க்கவே முடியவில்லை.  ஒரு முறை zoom-இல் அவரையும் மனைவியையும் பார்த்துப் பேசினோம். மகள் சிகாகோவுக்கு வரும்போது மறுபடி எங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதாக ஏற்பாடு.  ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை.

தன் கணவரின் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய ஒரு முறைகூட எங்கள் வீட்டிற்குக் கணவனை அழைத்துவர வேண்டும் என்று அவர் மனைவி நினைக்கவில்லை; ‘அவருடைய நண்பர் வீடுகளுக்கெல்லாம் என்னால் அவரைக் கூட்டிக்கொண்டு போக முடியாது’ என்று அவர் மகளிடம் சொல்லியிருக்கிறார்.  எங்கள் வீட்டிற்குக் கணவரைக் கூட்டிவருவது அப்படியொன்றும் கடினமான காரியம் இல்லை அவருக்கு.  எங்களோடு உரையாடுவதையும் எப்போதும் ரசிப்பார்.  அப்புறம் ஏன் கூட்டிவரவில்லை என்பது அவருக்கே வெளிச்சம். எங்கள் வீட்டிற்கு அவரை மகள் கூட்டிவரவில்லையென்றால் எங்களால் அவரைப் பார்த்திருக்க முடியாது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவர் எங்கள் வீட்டிற்கு வந்ததோடு சரி.  அதன் பிறகு அவரால் தானாக வர முடியவில்லை.  இந்த அளவுகூட கணவனின் விருப்பத்தை நிறைவேற்றிவைக்கப் பிரியப்படாத பெண்கள் இந்த அமெரிக்க மனைவிமார்கள்.

அவர் இறந்த செய்தியைக்கூட அவர் எங்களுக்குச் சொல்லவில்லை. இன்னொருவர் மூலம்தான் எங்களுக்குத் தெரிந்தது. உடனே என் கணவர் தனக்கும் தன் நண்பருக்கும் பொதுவான நண்பர்கள், உடன் வேலைபார்த்தவர்கள் ஆகியோருக்குச் செய்தி அனுப்பினார்.  அப்படிச் செய்தி கிடைத்த எல்லோரும் என் கணவருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து என் கணவர் அவர் மனைவிக்கு அனுப்பினார். அதைப் பார்த்துத் தான் மிகவும் மனம் நெகிழ்ந்ததாகவும் ஆழ்மனதிலிருந்து நன்றி தெரிவிப்பதாகவும் மின்னஞ்சல் அனுப்பினார். கணவர் நண்பர் வீட்டிற்குப் போகப் பிரியப்பட்டபோது அவர் மனைவி அதை நிறைவேற்றிவைக்கவில்லை.  இப்போது அவர் நண்பர்கள் எழுதிய இரங்கல் செய்திகள் அவர் மனதை நெகிழவைத்ததாம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *