வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-34

0

தி. இரா. மீனா

சிவலெங்க மஞ்சண்ணா 

பண்டிதர் பரம்பரையைச் சேர்ந்த இவர் கல்யாண் நகருக்கு வந்த பின்னர் சரணராகியவர். ’ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூனலிங்கம்’ இவரது முத்திரையாகும்.

1. “உடலைக் கட்டியணைத்து நிறை கண்களால் கண்டு
கைகள் மகிழும் வரை வணங்கி
மனப்பூர்வமாக அறிவது, இடைவெளியற்ற இன்பம்
ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு
கூடுகின்ற  கூட்டமாம்“

2. “உடல் சோர்ந்து உள்ளம் உருகி காயகம் செய்யாமல்
பிறரை வருத்தி, நயந்து இரந்து செய்வது தாசோகமா?
எத்தொழிலையும் மனத்தூய்மையுடன்
செய்கிற குருஜங்கமரைச் சமமாக எண்ணும்
இலிங்கதேகமுடையோருடன் ஒரே தன்மையில் உறவாடினால்
ஈசான்யமூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கத்துக்கு நிறைவாம்.”

3. “சுவையறிய நாவாகி வந்து
மணமறிய நாசியாகி வந்து
உருவமறிய கண்களாகி வந்து
ஒலியறிய செவியாகி வந்து
உணர்வறிய தோலாக வந்து
உடலில் நின்று ஐம்முகமாய் ஆனாய்
ஈசான்ய மூர்த்தி மல்லிகார்ஜூன இலிங்கமே“

சண்முகசுவாமி

’அகண்டேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

1. “கல்கல்லென ஒலியெழுப்பினால் காதலன் வருவானென
எல்லா வழியும் தேடிப் பார்க்கிறேன் அன்னையரே,
காதலனின் சொல்லை மனமொன்றிக் கேட்கிறேன்
அகண்டேஸ்வரன் என்னும் காதலனைக் கண்டால் மகிழ்ச்சி
காணாமல் போயின் கடுந்துன்பமாம் அன்னையரே“

2. “பால்குடத்தின் மீது மோர்குடம் வைத்தென்ன
உறையாகுமா ஐயனே சரியான கலவையின்றேல்?
அங்கம் மீது இலிங்கம் இருந்தென்ன,சிவஞானமில்லாமல்
பொருந்தி சமரசமாகுமா  ஐயனே அகண்டேஸ்வரனே.”

சகலேச மாதரசா

அரசராக இருந்து சரணரானவர். ’சகலேஸ்வர தேவ’ இவரது முத்திரையாகும்.

1. “ஆசையைவிடச் சிறியவரில்லை
ஆசையின்மையை விடப் பெரியவரில்லை
கருணையை விட தர்மமில்லை
ஆராய்ச்சியை விட  உதவியில்லை
அனைத்துயிருக்கும் சகலேஸ்வரனைத் தவிர தெய்வமில்லை”

2. “ஈசனிலும் பெரியவரில்லை
ஆசையினும் சிறியோரில்லை
எல்லைக்கப்பால் திசையில்லை
பிரார்த்தனைக்கப்பால் புண்ணியமில்லை
அனைத்தின் பதியே சகலேஸ்வரதேவனே
மெய்யுணர்வுக்கப்பால் உதவியில்லை“

3. “ஏரி கட்டலாமே தவிர நீர் நிரப்ப முடியுமா?
ஆயுதம் தரலாமன்றி கற்றுணர்த்த முடியுமா?
மணமுடிக்கலாமன்றி ஆண்மைக்கு உதவமுடியுமா?
மேன்மை காட்டலாமன்றி நினைவை நிறுத்த முடியுமா?
படிப்பு கால்,புத்தி முக்காலெனும் பழமொழிக்கேற்ப
குருவின் கருணையிருந்தும் சாதித்தவனல்லன்,
சகலேஸ்வர தேவனே“

சங்கமேஸ்வர அப்பண்ணா

’பசவப்பிரிய கூடல சென்ன சங்கமதேவ’ இவரது முத்திரையாகும்.

“அன்றன்று நிரம்பியது மிகுதியெனும் எண்ணம் வேண்டும்
முன்னோர்களை நினைக்க வேண்டும்
ஜங்கமன் வந்தால் வஞ்சனையின்றிச் செய்ய வேண்டும்
இதை எனக்கு வரமாக்கு
பசவப்பிரிய  கூடல சங்கமதேவனே“

சகரத பொம்மண்ணா

’சகரத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

“மலர் பறிப்பாரேயன்றி மணம் பறிப்பவருண்டோ?
பேசுவரேயல்லாமல் பேச்சின் உணர்வைக் கண்டவருண்டோ?
இது நீதியின் பாடம்
ஒழுங்குடன் செயல்படும் போது
உணர்வு தூய்மையோடிருக்க வேண்டும்.
பேச்சறிந்து பேசும் போது
ஒழுங்கும் புலமையும் இணைந்திருக்க வேண்டும்.
அதுவே ஆன்ம ஐக்கியம்
சரகத பொம்மனொடைய தனுமன சங்கமேஸ்வரனே.”

சத்திகேதாய மாரய்யா

குடை பிடிக்கும் காயகத்துடன் சேர்ந்து மரம் வெட்டுவது,தீப்பந்தம் பிடிப்பது ஆகியவற்றையும் செய்து வந்தவர். ’ஐக்கடேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

“உதயத்தில் உற்பத்தியாகி, பகலில் நிலையாகி
அந்தியில் அழிகின்ற உடல் சுமந்து மீண்டும்
அமைதியில் நின்று துன்பம் நீக்கும் இடம் காட்டுவாய்
பகலில் பசிதாகம், இரவில் புலன்களின் செயல்
என உடல் சுமந்து
ஐம்பொறிகளுக்கு உடலானாயன்றோ
ஐகடேஸ்வர இலிங்கமே“

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *