Blog

  • மகராசர் காமராசர்!

    மகராசர் காமராசர்!

    பாடல் எழுதியவர் : அண்ணாகண்ணன், சென்னை

    இசையமைத்து, மூன்று மெட்டுகளில் பாடியவர்: ஷைலஜா, பெங்களூரு.

    வாசிக்கக் கல்விச் சாலை
    வயிற்றுக்கு நல்ல சோறு!
    தேசத்தின் வளத்தைக் கூட்ட
    திக்கெட்டும் அணைகள்! ஆலை!
    யோசிக்கும் நொடியில் இந்த
    யுகம்வெல்லும் மனித நேயர்!
    மாசில்லை எனப்பார் போற்றும்
    மகராசர் காம ராசர்!

    வாய்ச்சொல்லில் வீரர் அல்லர்!
    வகுப்புகள் ஆறே கற்றார்!
    பாட்டாளி அவரின் பேரில்
    பல்கலைக் கழகம் இன்று!
    வீழ்ச்சியில் கிடந்த நாட்டை
    மீட்பராய் வந்து காத்தார்!
    நேயத்தின் எளிய செல்வர்
    நிகரில்லாக் காம ராசர்!

    இந்தப் பாடலை மூன்று மெட்டுகளில் கேட்க:

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 4

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 4

    -மேகலா இராமமூர்த்தி

    காட்டில் தவமியற்றும் முனிவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் தீங்கிழைக்கும் கொடியவளாகவும் இருந்துவந்தாள் தாடகை எனும் அரக்கி. அவளை அழித்துத் தாம் செய்யவிருக்கும் தவ வேள்வியைக் காத்தற்பொருட்டே தயரதனின் அனுமதியோடு இராம இலக்குவர்களைக் காட்டிற்கு அழைத்துவந்திருந்தார் விசுவாமித்திர முனிவர்.

    தாடகையின் வரலாற்றை விரிவாக அவர் இராமனுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தபோதே அவள் அப்பகுதியில் தோன்றினாள். கோபத்தால் நெறித்த புருவத்தோடும், தீ உகுக்கும் கண்களோடும் அவர்கள் மூவரையும் நோக்கிய அவள், தன் கையிலிருந்த சூலத்தால் அவர்களைக் குறிபார்த்தபடி உங்களை ஒழித்துக்கட்டி விடுகின்றேன் என்று கர்ஜித்தாள். அப்போது, பெண்ணான அவளோடு போர்புரிவது போர்நெறிக்குப் புறம்பானது என்றெண்ணிய இராமன் அவளைத் தாக்குவதற்குத் தயங்கிநின்றான்.  

    அவன் உளக்குறிப்பை உணர்ந்த விசுவாமித்திரர், ”இராமா! உலகிலுள்ள அத்தனை தீமைகளையும் ஒன்றுவிடாமல் செய்துவரும் இவள், முனிவர்களாகிய எங்களைச் சாரமற்ற சக்கை எனக்கருதியே உண்ணாமல் விட்டுவைத்திருக்கின்றாள். அஃது ஒன்றுதான் குறை! இக்கொடியவளை என்னவென்று எண்ணுவது? பெண்ணென்றா இவளை எண்ணுகிறாய்? இவள் பெண்ணே அல்லள்! என்று சொல்லித் தாடகையைக் கொல்லுமாறு இராமனை ஏவுகின்றார்.

    தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமைக்
    கோது என்று உண்டிலள்
     இத்தனையே குறை
    யாது என்று எண்ணுவது இக் கொடியாளையும்
    மாது என்று எண்ணுவதோ மணிப் பூணினாய்.
    (கம்ப: தாடகை வதைப் படலம் – 397)

    அதைக்கேட்ட இராமன், “ஆசானாகிய நீர் சொல்வதைச் செய்வது என் கடன்” என்றுரைத்துத் தாடகைமீது தாக்குதல் நடத்தத் தொடங்குகின்றான். தாடகைக்கும் இராமனுக்கும் கடும்போர் நடக்கின்றது. இறுதியில் தாடகை வீழ்ந்துபடுகின்றாள்.

    அதைத்தொடர்ந்து சித்தாஸ்ரமம் என்ற இடத்தில் விசுவாமித்திரர் தம் வேள்வியைத் தொடங்குகின்றார். மீண்டும் அரக்கர்களால் ஏற்பட்ட தொல்லைகளை இராமன் முறியடிக்க, தம்முடைய ஆறுநாள் வேள்வியை ஊறின்றி வெற்றிகரமாய் முடித்துவிட்டு இராம இலக்குவர்களோடு புறப்படுகின்றார் விசுவாமித்திரர். அவர்கள் விதேக நாட்டை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர் இப்போது.

    வழியில் ஒரு பெரிய கருங்கல்லைக் கண்டனர் மூவரும். காகுத்தனான இராமனின் கால் துகள் அக்கல்லின்மீது பட, தன் கணவரான கௌதம முனிவரின் சாபத்தால், ஆங்கே கல்லாய்க் கிடந்த அகலிகை மீண்டும் தன் முந்தைய நல்லுருவம் பெற்றுப் பெண்ணாய் எழுந்தாள். அவளின் வரலாற்றை இராமனுக்கு விளக்கிய விசுவாமித்திர முனிவர், இராமனின் கைத்திறத்தையும் கால்திறத்தையும் எண்ணிவியந்து,

    “மழைவண்ணத்து அண்ணலே! நீ இவ்வுலகிலே பிறந்து தீயவரை அழித்து நல்லவர்களைப் பாதுகாப்பது என்ற நிலை ஏற்பட்டபிறகு, இவ்வுலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் துன்பம்நீங்கிக் கடைத்தேறும் வழியே அல்லாது, துயர் வருமோ? வனத்தில், கருநிறத்தையுடைய தாடகை என்னும் அரக்கியோடு நீ செய்த போரில் உன் கையின் திறத்தினை (வில்லாற்றல்) கண்டேன்; இந்த இடத்தில் உன் திருவடியின் திறத்தினை (அகலிகையை உயிர்ப்பித்தது) கண்டேன்” என்கிறார்.  

    இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
       இனி இந்த உலகுக்கு எல்லாம்
    உய்வண்ணம் அன்றி மற்று ஓர்
       துயர் வண்ணம் உறுவது உண்டோ
    மை வண்ணத்து அரக்கி போரில்
       மழை வண்ணத்து அண்ணலே உன்
    கை வண்ணம் அங்குக் கண்டேன்
       கால் வண்ணம் இங்குக் கண்டேன். (கம்ப: அகலிகைப் படலம் – 559)

    இந்தப் பாடலின் சொன்னயத்தில் சொக்கிய கவியரசு கண்ணதாசன், ஓர் திரைப்படப் பாடலில் வண்ணம் வண்ணம் என்று வரிசையாக வரும் வண்ணம் சொற்களை அமைத்தார். அப்பாடல்தான்,

    ”பால்வண்ணம் பருவம்கண்டு
    வேல்வண்ணம் விழிகள்கண்டு
    மான்வண்ணம் நான்கண்டு வாடுகிறேன்!

    கண்வண்ணம் அங்கே கண்டேன்
    கைவண்ணம் இங்கே கண்டேன்
    பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்”
    என்று செல்லும் ’பாசம்’ தமிழ்த்திரைப்படப் பாடல்!

    விசுவாமித்திர முனிவரோடு இராம இலக்குவர்களின் நடைப்பயணம் தொடர்ந்தது. மிதிலை நகரத்துக்கு அருகில் அவர்கள் வந்துபோது, அங்கே மதிலில் தொங்கவிடப்பட்டிருந்த கொடிகள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அதைக்கண்ட கம்பநாடர் அதன்மீது ஓர் அழகிய கற்பனையைப் படரவிட்டார். அஃது ஓர் அருமையான பாடலாய் மலர்ந்தது!

    மையறு மலரின் நீங்கி
       யான்செய் மா தவத்தின் வந்து
    செய்யவள் இருந்தாள் என்று
       செழு மணிக் கொடிகள் என்னும்
    கைகளை நீட்டி அந்தக்
       கடிநகர் கமலச் செங் கண்
    ஐயனை ஒல்லை வா என்று
       அழைப்பது போன்றது அம்மா. (கம்ப: மிதிலைக் காட்சிப் படலம் –  564)

    ”காற்றில் மிதிலையின் கொடிகள் அசைவது, குற்றமற்ற தாமரை மலரைவிட்டு நான் புரிந்த மாதவத்தால் என்னிடம் பிறந்துள்ளாள் திருமகள்; அவளை மணந்துகொள்ள விரைந்துவா என்று அழகிய கொடிகளெனும் கைகளை அசைத்து மிதிலா நகரம் கமலச்செங்கண் ஐயனாகிய இராமனை அழைப்பது போலிருந்தது” என்கிறார் கம்பர்.

    இவ்வாறு கவிஞர்கள் தம் சொந்தக் கருத்தை இயற்கை நிகழ்வுகளின்மீது ஏற்றியுரைப்பதற்குத் ’தற்குறிப்பேற்ற அணி’ என்று பெயர்.

    ஈதொத்த சிந்தனையை நாம் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் நுழையுமுன் மதுரை மதிலின்மீதிருந்த கொடிகள், இங்கே வராதீர்கள் என்பதுபோல் கைகளை மறித்துக் காட்டி அவர்களைத் தடுத்தன என்பார் இளங்கோவடிகள்.

    போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
    வாரல்என் பனபோல் மறித்துக்கை காட்ட…
    (சிலப்: 13: 189-190) 

    இளங்கோவின் சிந்தனைத் தாக்கமாகக் கம்பரின் இந்தக் கற்பனையை நாம் கருதலாம்.

    நெடுங்காலம் கோசல நாட்டுமக்களுக்கு நல்லாட்சி நல்கிய தயரத மன்னன், தன் முதுமை காரணமாகத் தளர்வுறுகின்றான். ஆதலால் அரசாட்சியெனும் சுமையைத் தன் மூத்த மகன் இராமனின் தோளில் இறக்கிவைத்து இளைப்பாற எண்ணியவன், அதுகுறித்து ஆலோசிப்பதற்காகத் தன் அமைச்சர்களை வரவழைத்தான். அவர்களிடம் தன் உளக்கருத்தை வெளியிடுமுன் வாழ்க்கையின் இயல்புகுறித்த தன் எண்ணத்தைப் புலப்படுத்தும் வகையில்,

    “இப்பிறப்பிலே எவர்க்கும் சாவு உண்டு எனும் உண்மையை மறத்தலைவிடக் மனிதர்கட்குக் கெடுதல் தருவது வேறில்லை. (ஆசைகளை) துறத்தல் எனும் மிதவையே உதவிசெய்யாவிட்டால் பிறப்பு எனும் பெரிய கடலினின்று தப்புதல் இயலுமோ?” என்று அவர்களைப் பார்த்து வினவுகின்றான்.

    இறப்பு எனும் மெய்ம்மையை
        இம்மை யாவர்க்கும்
    மறப்பு எனும் அதனின்மேல் கேடு
        மற்று உண்டோ
    துறப்பு எனும் தெப்பமே
        துணை செய்யாவிடின்
    பிறப்பு எனும் பெருங் கடல்
         பிழைக்கல் ஆகுமோ.  (கம்ப: அரசியற் படலம் – 1419)

    ”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.”
    (10)

    என்று வள்ளுவர் விளம்பியதைப் போலவே பிறப்பு எனும் பெருங்கடல் என ஈண்டு கம்பரும் மொழிந்திருக்கக் காண்கின்றோம்.

    மனிதர்களின் யாக்கை, உயிர், இளமை, செல்வம் ஆகிய நான்கும் நிலையாத் தன்மை உடையன என்பது தமிழ் நூல்கள் நமக்குணர்த்தும் உண்மையாகும். இங்கே தயரதனும் மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவனாக, ”இறப்பதற்கு முன்பே பற்றறுப்பதே பிறப்பறுப்பதற்கான உற்றவழி; ஆதலால் அயோத்தி அரசாட்சியை இராமனுக்கு அளித்துவிட்டு அறியாமையால் வரும் இப்பிறவி நோயை நீக்குதற்பொருட்டுத் தவம் மேற்கொள்ளுதற்காக நான் கானகம் செல்ல விழைகின்றேன்; இதுகுறித்து நும் கருத்து யாது?” என்று அமைச்சர் பெருமக்களை வினவினான்.

    தயரதனின் கருத்துக்கு அமைச்சர்கள் இசைவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தயரதனின் ஆசானும் குலகுருவுமான வசிட்டர், இராமன் முடிபுனைதல் குறித்த, தம் எண்ணத்தை உரைக்கலானார்…

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

     

     

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 5 (ஊரார்)

    ச. கண்மணி கணேசன்,
    முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. 

    முன்னுரை

    பெயரிலேயே பன்மை விகுதி கொண்ட ‘ஊரார்’ என்னும் குழுப்பாத்திரம் பலவிடங்களில் ‘ஊர்’ என்னும் இடவாகு பெயரால் குறிக்கப்படுகிறது. கூற்று நிகழ்த்தும் உரிமை இல்லாத இப்பாத்திரத்தைப் பற்றித் தலைமைப்பாத்திரங்களும் துணைப்பாத்திரங்களும் சொல்வது என்ன? இக் குழுப்பாத்திரத்துள் யாரெல்லாம் அடங்குவர்? இப்பாத்திரத்தின் செயல் என்ன? பயன் என்ன? இப்பாத்திரம் என்னென்ன பேசியதாகச் சொல்லப் படுகிறது? அப்பேச்சின் நோக்கம், தன்மை, விளைவு, பெறுமதி முதலியன குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    ‘ஊரார்’ ஒரு பாற்பொதுச் சொல்

    ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது.

    புறத்தொழுக்கத்தில் நின்று பின் தலைவியிடம் மீண்டுவரும் தலைவனுக்கு வாயில் மறுக்கும் தோழி;

    “ஊர் முழுதும் நுவலு நிற்காணிய சென்மே” (அகம்.- 176)

    என்கிறாள். இங்கே ‘ஊர் முழுதும்’ என்று அழுத்தம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரும் காணும்படிச்   செல்வாயாக என்ற பொருளே ஏற்புடைத்தாகிறது.

    “அழிதக மாஅந்தளிர் கொண்ட போழ்தினான் இவ்வூரார்
    தாஅந் தளிர் சூடித் தந்நலம் பாடுப
    யாஅந் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்
    யாஅம் தளிர்க்குவேம் மன்” (கலித்.- 143)

    என்ற பாடலில் ‘இவ்வூரார்’ பெண்களை மட்டுமே குறிக்கிறது. ஏனெனில் யாமரம் தளிர்த்திருக்கும் காட்டுவழிச் சென்றவராகிய தலைவர் மீண்டு வரும்போது நான் பசலை நோய் நீங்கி உடல் நலம் பெறுவேன் என்ற தலைவி; தன் நிலையைப் பிரியாத ஊரார் நிலையுடன் ஒப்பிட்டு உரைக்கிறாள். இதனால் இங்கு ஊரார் பெண்களே ஆகின்றனர். இங்ஙனம்  பெண்டிரைத் தனித்துக் கூறும் பிற பாடல்களும் உள (அகம்.- 95; நற்.- 223)

    ஊரார் பற்றிய விமர்சனம்

    ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம் பேசுபவர்; இரக்கம் இல்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று அங்கதச் சுவையுடன்  போற்றப்படுவதும் உண்டு.   .

    தலைவனின் ஊரை ஏத்தித் தலைவி பாடினாளாக; ஊரார் குறை கூறுகின்றனர். அவர்கள் அறிவில்லாதவர்கள் என்னும் பொருள்பட;

    “அழிவது எவன்கொல் இப்பேதை ஊர்க்கே” (குறுந்.- 89)

    என்கிறாள் தோழி.

    “……………………………..யான் ஒழிந்து இருத்தல்
    நகுதற்கு ஒன்று இவ் அழுங்கல் ஊர்க்கே” (கலித்.- 23)

    என்ற பாடற்பகுதியில்; தலைவனைத் தான் பிரிந்து இருக்கும் போது ஊரார் அவளது ஆற்றாமையைக் கண்டு நகுவது மட்டுமின்றி; ஆரவாரத்துடன் கூடிக் கூடிப் பேசுவர் என்று கருத்துரைக்கிறாள் தலைவி. பிற பாத்திரங்கள் வாயிலாகவும் ‘அழுங்கல் ஊரே’ என்னும் தொடர் இடம் பெறும் பாடல்கள் ஏராளம் (நற்.- 63, 203, குறுந்.- 140, 214, 351, 372; ஐங்.- 181; அகம்.- 70, 180, 400)

    “…………………………..என் நெஞ்சநோய்
    கண்டும் கண்ணோடாது இவ்வூர்….
    ………………………………இக்காமம்
    உணர்ந்தும் உணராது இவ்வூர்” (கலித்.- 140)

    என்று தனக்கு இரங்காத ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான் தலைவன்.

    அவனது கூற்றில் காமஉணர்வைப் புரிந்து கொள்ளாதவராகவும் ஊரார்  விமர்சிக்கப் படுகின்றனர்.

    ஊரார் பேச்சு ‘எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்று புறந்தள்ளத் தக்கது என்ற போக்கில் உடன்போகத் துணியும் தலைவி;

    “அலர் சுமந்து ஒழிக இவ்வழுங்கல் ஊரே” (நற்.- 149)

    என ஊரை விட்டே ஒதுங்குகிறாள்.

    வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் மீண்டு வராத வழித்; ‘தன் துன்பத்தைப் பற்றிக் கவலும் ஊரார் தன் தலைவன் சென்ற காட்டுவழி பற்றிக் கவலை கொள்ளவில்லையே’ எனத் தலைவி  புலம்பும்  போது அவர் பிறழப் புரிந்து கொள்பவராக பேசப்படுகிறார்.

    “ஈங்கு யான் தாங்கிய எவ்வம்
    யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 140)

    என்பது தலைவியின் மனக்குறை.

    தலைமக்கள் களவொழுக்கம் என்ற ஒருசெய்தி பற்றிப் பேசும்போது; ஒன்றிற்கு மேற்பட்ட பல கோணங்களில் ஊராரின் அலர் கிளைத்துப் பெரிதாகப் பரவுவதால் அங்கதச் சுவையுடன் “மையல் ஊர்” என்று நையாண்டி செய்கிறாள் தோழி (குறுந்.- 374).

    ஊரார் பேசுவதைச் சுட்டும் பாத்திரங்கள்

    களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

    களவுக் காலம்

    தலைவன் கூற்றில் ஊரார்

    தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் தலைவன் காட்டு வழிநடை வருத்தம் குறித்துப் பேசும்போது; அவளது ஊரார் எழுப்பிய பேரலர் குறித்த தன் கருத்தைப் புலப்படுத்துகிறான். அவர்கள் செல்லும் வழியானது மேகம் இல்லாது வெளிறித் தோன்றும் ஆகாயத்தினின்று மழை பெய்யாது வறண்டிருப்பினும்; ஆலமர நிழல் குளுமையாய் அயர்ச்சியைப் போக்கும் பெருமை உடையது. ‘நீ இதுவரை காம்பு இற்ற புன்னை மலர்கள் மிகுதியாக உதிர்ந்து தேன்மணம் வீசும் கழிக்கரைச் சோலை மணலில் நடந்து பழகியவள் ஆனாலும்; மிகுந்த அச்சம் தரும்

     “இம்மென் பேரலர் நும்மூர்” (நற்.- 76)

    இக்காட்டில் இல்லை. எனவே கல்லில் நடந்து சிவந்த பாதங்கள் நோய் நீங்க ஓய்வெடுத்துச் செல்லலாம்’ என்கிறான். இப்பாடலில் ‘ஊர்’ இடவாகு பெயராய் ஊர்மக்களைக் குறிக்கிறது.

    காமமிகுதியால் மடலேற முடிவுசெய்த தலைவன் கண்டோரிடம்;

    “………………………………………இக்காமம்
    அறிந்தும் அறியாது இவ்வூர்” (கலித்.- 140)

    என்று ஊர்மக்கள் குறித்துப் பேசுகிறான்.

    தலைவி கூற்றில் ஊரார்

    திருமணத்திற்குரிய பொருள் தேடச்சென்ற தலைவன் என் நெஞ்சில் மட்டும் வருகிறானே அன்றி நேரில் வரவில்லை; அத்துன்பத்தினால்    இறப்பதற்கும் அச்சமாக உள்ளது. அதற்கும் மேலாக;

    “பிரியா நண்பினர் இருவரும் என்னும்
    அலர் அதற்கு அஞ்சினன் கொல்லோ பலருடன்
    துஞ்சு ஊர்” (குறுந்.- 302);

    என்று தோழியிடம் ஊர்மக்கள் எல்லாம் தூற்றிவிட்டுத் தூங்குவதால் ஏற்பட்ட அச்சமிகுதியைத் தலைவி  ஆற்றாமையோடு புலப்படுத்துகிறாள்.

    தோழி கூற்றில் ஊரார்

    சிறைப்புறமாக நின்ற தலைவன் கேட்கப் பேசும் தோழி தலைவியது உடற்கூறு மாற்றங்களைக் கூறி வரைவு கடாவுகிறாள்.

    “ஊரலர் தூற்றும் கௌவையும் நாணிட்டு
    உரையவர்க்கு உரையாம் ஆயினும்” (நற்.- 263);

    அடக்கமாட்டாமல் வழிகின்ற கண்ணீர் அவள் நிலைமையை அவனுக்குப் புரியவைத்து விடும் என்கிறாள். நாணத்தால் பேச இயலாதவற்றுள்  ஊரார் சுமத்தும் பழிச்சொல்லும் அடங்குகிறது. தோழி ஊரார் பேசுவதைச் சுட்டும் பிற பாடல்களும் உள (கலித்- 124; அகம்.- 132, 282)

    கற்புக்காலம் 

    தலைவி கூற்றில் ஊரார்

    வினைவயிற் பிரிந்த தலைவன் நீட்டித்த வழி மனமழிந்த தலைவி;

    “கன்மிசை மயிலாலக் கறங்கி ஊரலர் தூற்”றுவதைக் (கலி.- 27) குறித்த காலத்தில் அவன் திரும்பி வராமையின் விளைவு என்கிறாள்.

    தோழி கூற்றில் ஊரார்

    களவுக்காலத்தில் அலர் தூற்றியவரைப் பற்றித் தோழி; திருமணத்திற்குப் பின்னர் தலைவன் மலர் சூடி வருவதைக் கண்டு  முற்றிலும் மாறுபட்டவராய் நாம் வியக்கும்படிப்;

    “புதுவதாகின்று அம்ம…
    ………………..நம் அழுங்கல் ஊரே” (அகம்.- 400) என்கிறாள்.

    காமக்கிழத்தி கூற்றில் ஊரார்

    ஊர்மக்கள் எல்லாம் பேசும்படி உன்னோடு சேர்ந்து நீர் விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதைப்;

    “பேரூர் அலரெழ நீரலைக்கலங்கி
    நின்னொடு தண்புனல் ஆடுதும்” (ஐங்.- 77)

    எனத் தொடங்கி ‘உன் இல்லக்கிழத்தியிடம் செல்லாதே என்னுடன் மட்டுமே வா’ என்று தலைவனிடம் பிணை இடுகிறாள் காமக்கிழத்தி.

    ஊரார் செயல்கள் 

    ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர்.

    ஏறு தழுவி வெற்றி பெற்ற  தலைவனையும் தன்னையும் சேர்த்து ஊரார் முன்னரே அலர் தூற்றினர் என்பதை;

    “………………………….பொதுவனோடு எண்ணி
    அலர் செய்து விட்டது இவ்வூர்” (கலித்.- 105)

    எனவும்; இனி திருமணத்திற்குத் தடை இல்லை என்பதால் அது பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை எனவும் கூறுகிறாள். இங்ஙனமே தம் களவு வெளிப்பட்டதைத் தலைவி எடுத்துச் சொல்லும் பிற பாடல்களும் உள (ஐங்.- 113; குறுந்.- 262).

     பிரிவால் மெலிந்த தன் நிலை கண்டு ஆற்றாத தோழியிடம் தலைவி

    “………………………பன்னாள்
    இவ்வூர் அம்பல் எவனோ” (அகம்.- 249);

    எனத் தலைவனோடு தான் கொண்ட களவை ஊரார் கமுக்கமாகப் பேசியதைச் சுட்டித் தனது தற்போதைய இரங்கத்தக்க நிலையையும் கூறி வருந்துகிறாள்.

    வினைவயிற் பிரிந்த தலைவன் சென்ற நெறி எறும்பின் வளைகளைப் போன்ற குறிய பல சுனைகளை உடையது. கொல்லனது உலையில் உள்ள பட்டடைக்கல் போன்ற வெம்மையான பாறைகளை உடையது. வளைந்த வில்லை உடைய வேடர் அக்கல்லில் தம் அம்புகளைத் தீட்டிக் கூர்மை ஆக்குவர். கவர்த்த வழிகளை உடையது.

    “எறும்பி அளையில் குறும்பல் சுனைய
    உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
    கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
    கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே
    அதுமற்று அவலம் கொள்ளாது
    நொதுமற் கவலும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 12)

    அப்பாலை வழியின் ஏதத்தைப் பற்றிக் கவலையுறாமல் தனது தனிமைத் துன்பத்தை எண்ணிக் கவல்கின்றனரே என்பதைத் தலைவி இப்பாடலில் விளக்குகிறாள்.  தன் காமக்கிழத்தியிடம்  தனது பரத்தமையை ஒளித்துப் பேசிய தலைவனைப் பார்த்து அவள்; ஊர்மக்கள் சிரித்துச் சாடுவதை

    “ஊரவர் உடன்நகத் திரிதரும்
    தேர் ஏமுற்றன்று” (கலித்.- 74);

    என்கிறாள். அவனைப் பரத்தையரிடம் தேரில் கொண்டு சேர்க்கும் தேர்ப்பாகன் பித்தேறி இருக்கிறானோ எனக் கேட்பதற்குப் பதிலாக தேர்பித்தேறி இருக்கிறதோ எனக் கேட்டுச் சினத்தை வெளிப்படுத்துகிறாள்.

    தன் கணவனின் புறத்தொழுக்கத்தை அறிந்து ஊரார் பழி தூற்றுவதைத் தலைவி அவனிடமே;

    “ஊரவர் கௌவை உளைந்தீயாய்” (கலித்.- 95);

    எனக் கேட்கிறாள்.

    ஊரார் பேச்சின் விளைவுகள்

    ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகளைப் பாடல்களில் தெரிந்தெடுக்க இயல்கிறது.

    தமரும் சுற்றத்தாரும் சேர்ந்து செய்ய வேண்டிய வதுவையை ஊராரின் அலர் செய்து விட்டது எனத் தலைவி மகிழ்ந்து கூறுவதாக;

    “………….. நெடுந்தகை திறத்து இவ்வூர்
    இனையள் என்று எடுத்து ஓதற்கு….
    ….நம் வதுவையுள் தமர் செய்வது இன்று ஈங்கே
    தான் நயந்து இருந்தது இவ்வூராயின்” (கலித்.- 76)

    என்னும் பாடற்பகுதி அமைகிறது. அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த உறவு பற்றிய ஊராரின் பேச்சு தலைவி தலைவனைச் சேர உதவியது என்கிறாள். இது போல் அம்பலின்  விளைவு திருமணம் நடக்க ஏதுவாகும் மகிழ்ச்சி எனும் பொருள்பட அமையும் பாடல்களும் உள (குறுந். – 51).

    மடலேறத் துணியும் தலைவன் அச்செய்கை தலைவிக்குப் பழியேற்படுத்தும் என்பதை;

    “……………………………………………முன்னின்று
    அவள் பழி நுவலும் இவ்வூர்” (குறுந்.- 173)

    என ஊராரின் மேலேயே ஏற்றிக் கூறுகிறான். இங்கு ஊரார் பேச்சு தலைவி மேல் பழி சுமத்தும் என்று முன்மொழிகிறான் தலைவன்.

    ஏறு தழுவித் தன் வீரத்தையும், வலிமையையும் நிலைநாட்டிய தலைவனை எண்ணிப் பார்க்கும் தலைவிக்கு;

    “கொல்லேறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல்” (கலித்.- 106)

    அளவிலாப் பெருமையைத் தோற்றுவித்தது. இங்கு ஊரார் பேச்சின் விளைவு பெருமை ஆகும்.

    ஊரலரைத் தாங்கவியலாமல் உடன்போகத் துணியும் தலைவி;

    “சேணும் எம்மொடு வந்த
    நாணும் விட்டேம் அலர்க இவ்வூரே” (நற்.- 15)

    எனக் காலம்காலமாகத் தாங்கி வந்த நாணத்தை விட்டொழிக்கிறாள்.

    ஊரார் பேச்சின் தன்மை

    ஊரலரின் தன்மை காய்ந்த தட்டையில் தீப் பரவுவது போன்றது; தூக்கணாங்குருவியின் கூடு போன்றது; ஒரோவழி அறத்திற்கு முரண்பட்டு நின்றதையும் தோழி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

    பிரிந்து சென்ற கணவன் காலம் கடந்தும் மீண்டு வரவில்லை என்ற ஊராரின் அங்கலாய்ப்பு தட்டை தீப்பற்றி எரிவது போல் பரவியது.

    “விட்டுச் சென்றனர் காதலர்
    தட்டைத் தீயின் ஊரலர் எழவே” (ஐங்.- 340)

    என்கிறாள் தலைவி. இங்கு அலர் பரவும் வேகம் தீயின் வேகத்தோடு உவமிக்கப்படுகிறது.

    தூக்கணங்குருவியின் கூடு எவ்வளவு நுட்பத்துடனும் திறனுடனும் கட்டப்படுகிறதோ அதே நுட்பத்துடனும் திறனுடனும் ஊரார் அலர் அமைந்துள்ளது என்கிறாள் தோழி.

    “முடங்கல் இறைய தூக்கணங் குரீஇ….
    கூடினும் மயங்கிய மையல் ஊரே” (குறுந்.- 374)

    என்னுமிடத்து உயர்ந்த பனைமரத்தில் தொங்கும் பலதிறப்பட்ட வினைத்திறன் மிகுந்த வியப்புக்குரிய கூடு; ஒருவழிப்படாது பல உத்திகளின் விளைவாகப் பின்னப்பட்டு இருத்தலான்; பல்லாற்றானும் மயங்கி அலர் தூற்றும் ஊருக்கு உவமை ஆயிற்று எனலாம். அறத்தொடு நிற்கும் தோழி ஊரார் பேசுவதையே துணைக்கு அழைக்கிறாள். வேற்று வரைவின் போது;

    “பூக்கெழு துறைவனை என்னை என்னும் யாமே இவ்வூர்
    பிறிதொன்றாகக் கூறும்” (ஐங்.- 110)

    எனும் போது; ஊராரின் பேச்சு தலைவிக்கு உரிய தலைவன் யாரென்று சரியாகச் சொல்லவில்லை எனத் தாயிடம் கூறிச் சரியான தலைவன் யாரென்று புரியவைக்கிறாள். இங்கு ஊரார் பேச்சு அறத்தோடு முரண்பட்டிருக்கிறது.

    ஊரார் எனும் சிறுபாத்திரத்தின் பயன்கள்

    சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது.

    “கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே” (நற்.- 255)

    என விளக்கம் பெறும் இரவுக்குறிக்கு; ‘ஊரார் அனைவரும் தூங்க பேய் நடமாடும்பொழுது’ என்பது சிறப்பான காலப் பின்புலத்தைத் தோற்றுகிறது.

    “ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
    உலைவாங்கு மிதிதோல் போலத்
    தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே” (குறுந்.- 172)

    என்ற உவமையில் விளக்கம் பெறுவது தலைவியின் மனநிலை. ஏழு ஊர்களில் உள்ள மக்களின் தேவைகளையும் ஓரூரில் உள்ள கொல்லன் ஊதுலை நிறைவு செய்யுங்கால்; அந்த உலைக்குரிய தோலாலான காற்றுத் துருத்தி எவ்வளவு மிகுதியாக மிதிபடுமோ; அவ்வளவு மிகுதியாக என் மனம் துன்புறுகிறது என்கிறாள் தலைவி. இங்கு பொருத்தமான விளக்கத்திற்கு ஊரார் உவமையாகப்  பயன்பட்டுள்ளனர்.

    தலைவன்  தலைவியைச் சந்திக்க இரவுக்குறியே ஏற்றது என்பதை

    “கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே” (குறுந்.- 138)

    எனக்கூறும் தோழி ஊர் மக்களின் தூக்கத்தையே ஏற்ற சூழல் ஆக்குகிறாள்.

    இப்படி  ஊரார் தூங்கத் தாம் தூங்காமை பற்றிய கூற்றுகள் பாடல் புனைவுக்கு முரண் தொடையாய் அமைந்து அழகு சேர்க்கின்றன. புறத்தொழுக்கத்தில் தோய்ந்த தலைவன் மேல் ஊடல் கொண்ட காமக்கிழத்தி அவனை வசைபாடுங்கால் சுடுசொல் கூற; ‘பரத்தையரின் எயிறு அழுந்திய உன்  இதழை’

    “…………………………………………..ஊரவர்
    ஆடைகொண்டு ஒலிக்கு நின் புலைத்தி காட்டென்றாளோ”

    (கலித்.- 72); என இகழ்ந்து பேசுகிறாள். இங்கு வெறுப்பைக் காட்ட ஊரார் ஆடையைத் துவைக்கும் புலைத்தியை எடுத்தாள்கிறாள்.

    ஊரார் உறக்கமும் விழிப்புணர்வும் தன் காதல்நோய் மிகுதியால் தூங்காத தலைவி கூற்றில் தூங்கும் ஊர் சாடப்படுகிறது.

    “………………………………………………………என்
    உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந்.- 28);

    என்பது ஆற்றாத தலைவி கூற்று.

    “……………………………..ஊர்துஞ்சு யாமத்”தில்  (நற்.- 262);

    அவள் துன்புறுவாள் என்று எண்ணிப் பிரிவைத் தள்ளிப்போடும் தலைவன் கூற்றில் ஊரின் தூக்கம் தலைவியின் துன்பத்தைத் தெளிவாக உணரவைக்கும் பின்புலமாகிறது.

    இற்செறிப்பின் போது இரவில் கேட்கும் பறவை ஒலி கூடத் தன்  தலைவன் தேர் ஓசையோ என்று பயந்து புலம்பும் தலைவி

    “ஊர்மடி கங்குலும் துயில் மறந்ததுவே” (நற்.- 287);

    என ஊரார் தூங்கும் போதும் தான் விழித்திருந்த சோகத்தை நொந்து உரைக்கிறாள். ஆனால் இப்படித் துயில்வதாகச் சொல்லும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுவதையும் இதே பாத்திரங்கள் உரைக்கின்றன.

    இரவுக்குறியில் தலைவியைச் சந்தித்து விடியுமுன் சென்ற தலைவனின் கால் தடம் புலருமுன் ஊரார் அலர் தொடங்கி விட்டமையை;

    “புலர் பதம் கொள்ளா அளவை
    அலர் எழுந்தன்று இவ்அழுங்கல் ஊரே” (குறுந்.- 372) எனத் தோழி உரைக்கிறாள்.

    களவு  தொடங்கியவுடன் கௌவை, அம்பல், அலர் என்று மூன்று நிலைகளில் சொல்லாற்றிய ஊராரைப் பார்க்கிறோம்.

    “யாமத்து அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
    புரையில் தீமொழி பயிற்றிய உரை எடுத்து
    ஆனாக் கௌவைத்தாகத்
    தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

    தோழி தலைவன் இரவுக்குறியில் சிறைப்புறமாக நிற்க; அவனைத் திருமணத்திற்குத் தூண்டுவாளாய்ப் பேசும்போது; ஊராரால் தலைவிக்கு ஏற்படும் இன்னல்கள் இவை என்று வரிசைப்படுத்துகிறாள். எதை இழந்ததால் ஊரார் இப்படிப் பேசுகின்றனர் என்று வினவுகிறாள்.

    ஊரார் பேச்சின் நோக்கம்

    ஊராரின் பேச்சு எதை நோக்கி அமைகிறது என்று முடிபாக அறிவதே அப்பாத்திரத்தின் பெறுமதியைக் காட்டக்கூடியதாக அமையும். அது ஒரு பெண்ணின் களவொழுக்கம் அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது. களவொழ்க்கத்தில் ஈடுபடுபவரை ஊரார் வெறுக்கவும் இல்லை. இல்லறத்திற்கு ஊறு நேர்வதை ஊரார் விரும்பவும் இல்லை.

    களவை இனம்காணும் ஊராரைக் காட்டிப் பேசுகின்றாள் தலைவி.

    “எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி
    அலர் எழுந்தன்று இவ்வூரே” (நற்.- 191). அதிகாலையில் தேர் வந்த ஒரு காரணம் காட்டி ஊராரின் அலர் மிகுந்தது என்பது தோழியிடம்  தலைவியின் புலம்பலாகும்.

    களவு திருமணத்தில் முடிந்தவுடன் அமைதியுறும் ஊராரைப் பற்றித் தோழியும்;

    “இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே….
    ….ஆய்நுதற் கிழவனும் அவனே” (குறுந்.- 34);

    என்று தலைவியிடம் கூறுகிறாள். இனி தாயர் வசையும், தந்தை மறுப்பும், தனிமைத் துயரும் இல்லை  என்பதோடு; ஊராருக்குத் தலைவி அதே களவுக்காலத் தலைவனை மணக்கப் போகிறாள் என்பது மிகுந்த இன்பம் கலந்த நிறைவைக்கொடுத்தது என்பது நோக்கத்தக்கது. வினைமுடித்து மீளாத தலைவனை எண்ணிக்  காமமிகுதியால் ஒரு பெண் பெருந்திணைக் குரல் கொடுத்தால் ஊரார் அவளைப் பார்த்துச் சிரித்துத் தூற்றுகின்றனர். அதனால் தான் பாதிக்கப்பட்ட தலைவி;

    “நகான்மின்…………………நுமக்கு எவன் போலுமோ ஊரீர்”

    (கலித்.- 145) என்று சண்டை போடுபவள் போல் பேசுகிறாள். அந்தச் சண்டையில் இரு தரப்பினருக்கும் இருந்த புரிந்துணர்வே வெளிப்படுகிறது.

    உடன்போன தலைவியின் மேல் மிகுந்த அன்பு ஊராருக்கு உள்ளது. அதனால் தான்;

    “சுரநனி இனிய ஆகுகஎன்று
    நினைத்தொறும் கலிழும் என்னினும்
    மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே” (ஐங்.- 398);

    என உடன்போக்கிற்குப் பிறகு தலைவியைச் சந்திக்கும் தோழி ஊராரின் பாசம் பற்றிப் பேசுகிறாள். ‘நான் அழுததை விட ஊரார் மிகுதியாக அழுதனர்’ என்று தோழியே சான்றளிக்கிறாள்.

    வினைவயிற் பிரிந்தவன் வரத் தாமதமானாலும் தலைவி மேல் இரக்கம் கொண்டு தலைவனைப் பழிக்கின்றனர். அதனால் தான்;

    “அவர் திறத்து இரங்கும் நம்மினும்
    நம்திறத்து இரங்கும் இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 289);

    எனத் தலைவி அரற்றுகிறாள். இனிய இல்லறத்திற்கு ஊறு நிகழ்வதை எக்காரணத்தானும் ஊரார் சகிப்பதில்லை என்பதற்கு இக்கூற்று ஆதாரமாகிறது.

    ஊராரின் இந்நோக்கத்தை நன்கறிந்ததால் தான் தலைவன் தான் தலைவியைக் கூடியதை; அவளது மார்பில் தொய்யில் எழுதியதைத்  தயக்கமின்றி அரசவையில் சொல்லத் துணிகிறான்.

    “………………………………..எழுதிய
    தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்
    முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
    யான் தற்கடவின் யாங்காவது கொல்
    பெரிதும் பேதை மன்ற
    அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே” (குறுந்.- 276)

    எனப் பெற்றோரையும் ஊராரையும் பேதையர் என்கிறான்.

    முடிவுரை

    ஊரார் என்பது ஆண், பெண் இருபாலரையும் பொதுப்படக் குறிக்கும்  பலர்பாலுக்குரிய சொல் ஆகும். பெண்களை மட்டும் வேறுபிரித்துச் சுட்டும் இடங்களில் அது விதந்து கூறப்பட்டுள்ளது. ஊரார் பேதைமை உடையவர்; ஆரவாரத்துடன் புறம்பேசுபவர்; இரக்கமில்லாதவர்; புரியும் திறனற்றவர்; பிறழப் புரிந்து கொள்பவர் என்றெல்லாம் சாடப்படுகின்றனர். அன்பிற்குரிய ஊர் என்று நையாண்டி செய்யப்படுவதும் உண்டு. களவுக்காலத் தலைவன், தலைவி, தோழி, கற்புக்காலத் தலைவி,  தோழி, காமக்கிழத்தி எனப் பலரும்; தம்முள்ளும் கண்டோருடனும் ஊரார் பேசியதை எடுத்துச் சொல்கின்றனர்.

    ஊரார் களவொழுக்கத்தையும், புறத்தொழுக்கத்தையும் பழி கூறுபவராகவும்; அதை அம்பலாக்கித் தம்முள் கமுக்கமாகப் பேசுபவராகவும், வாய்விட்டு வெளிப்படையாக எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அலர் தூற்றுபவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.  வினைவயிற் பிரிந்த தலைவன் மீளாதவழி தலைவியை  எண்ணி வருந்துபவராகவும், அவளது காமம் மிகைப்படும் போது எள்ளி நகையாடுபவராகவும்; தலைவனின் புறத்தொழுக்கத்தைக் கண்டு சிரிப்பவராகவும், சாடுபவராகவும் புனைந்துரைக்கப்படுகின்றனர். ஊரார் பேச்சினால் மகிழ்ச்சி, பழி, பெருமை, நாணம் கைவிடல் எனப் பலதரப்பட்ட விளைவுகள் ஏற்படுகின்றன. ஊரார் பேச்சின் தன்மை காய்ந்த தட்டையில் தீப்பரவுவது போன்றது; தூக்கணங்குருவிக்கூடு போன்றது. சிறப்பான காலப்பின்புலத்தைத் தோற்றுவிக்கவும், பொருத்தமான முழுமையான விளக்கங்களுக்காக உவமைகளைப் படைக்கவும், முரண் அழகைச் சேர்த்துப் புனையவும், ஊடலை வெளிப்படுத்தி வெறுப்பைக் காட்டவும்  ஊரார் என்னும் சிறுபாத்திரம் பயன் கொள்ளப்படுகிறது. துயில்வதாகச் சொல்லப்படினும் ஊரார் களவொழுக்கத்தை முளையிலேயே அடையாளம் கண்டுவிடுகின்றனர். ஊராரின் பேச்சு ஒரு பெண்ணின் களவொழுக்கம்; அதே ஆணுடன் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடு அமைந்துள்ளது.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-32

    தி.இரா.மீனா

    மோளிகே  மாரய்யா

    காஷ்மீர நாட்டு மன்னன்.இயற்பெயர் மகாதேவ பூபாலன். மனைவி கங்காதேவி. பசவேசரின் பெருமைகளைக் கேட்டு அரசாட்சியைத் துறந்து இருவரும் கல்யாண் வருகின்றனர். இவர்கள் மாரய்யா–மகாதேவி  என்ற பெயரில் விறகுக் கட்டு விற்கும் காயகம் மேற் கொண்டு சரணர்களாக வாழ்கின்றனர். ’நிக்களங்க மல்லிகார்ஜூன’ எனபது இவரது முத்திரையாகும்.

    1.  “ நீரின்றேல் தாமரையை யாரறிவார்?
    நீரின்றேல் பாலினை யாரறிவார்?
    என்னையன்றி உன்னை யாரறிவார்?
    உனக்கு நான், எனக்கு நீ
    உனக்கும் எனக்கும் வேறொரு உறவுண்டோ?
    நிக்களங்க மல்லிகார்ஜுனனே”

    2. “ஈர விறகை நெருப்பில் வைத்தால்
    இயல்பாய்த் தீப்பற்றுமோ உலர்கட்டை போல
    இதுபோல காமுகர்க்குக் கிடைப்பானா
    சத்தியத்தின் சிவனும் நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    3. “ஞானம் அறியும் வரை அர்ச்சனை வேண்டும்
    புண்ணியம் அறியும்வரை பூசை வேண்டும்
    தன்னையறியும்வரை விரதம் வேண்டும்
    காலம் கடமை ஞானம் உணர்வென
    தானுள்ள வரையில் வழிபட வேண்டும்
    தன்னை மறந்து கடவுளை நினைத்த பின்னர்
    நிர்வாணம் அடைவோருக்கு எப்போதும் பயமில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    4. “ஆகமமறிய வரவு செலவறிய வேண்டும்
    சாத்திரமறிய மரணமறிய வேண்டும்
    புராணமறிய போக்கிரி நட்பு நீங்கவேண்டும்
    இதையறிந்து சித்தம் தெளிவில்லாமல் நன்மையில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே“

    5. “முன்னோர் வசனம் பார்த்துச் சொல்வதில் என்னபயன்
    தன்போல வசனமில்லை; வசனம்போல் தானில்லை
    சொல்லில் அத்வைதம் பேசிச் செயலில் இழிந்தால்
    சரணர் புகழ்வாரோ ?சொல்லும் செயலும் மாசுபடின்
    குரு.இலிங்கம், ஜங்கமம்,பாசோதகம் ,பிரசாத
    திருநீறுஉருத்திராட்சம்,உயர் ஐந்தெழுத்து அவருக்கில்லை
    வெற்றுப் பேச்சில் பிரம்மம் பேசுபவரைப் புகழ்வதில்லை
    நிக்களங்க மல்லிகார்ஜூனன்“

    6. “கல்மண் மரத்தில் கடவுள் உண்டென
    எவ்விடத்தும் பேசுகின்ற மனிதர்களே கேளுங்கள்
    அவற்றை அங்கங்கே வைத்த ஆற்றலின் அடையாளமன்றி
    புலன் கடந்தவன் அறியான்
    மனவடிவம் எங்குள்ளதோ அங்கிருப்பான்
    நிக்களங்க மல்லிகார்ஜூனன்“

    7. “நிலம் தலையாரியினுடையதெனில் கள்வன் நுழைவானோ?
    சர்வலிங்கமுடையவனுக்கு அர்ப்பணமற்றதுண்டோ?
    நிக்களங்க மல்லிகார்ஜூனனே.”

    இராயசதா மஞ்சண்ணனின் புண்ணியஸ்திரி ராயம்மா

    இவர் பசவேசருக்கு மிக நெருங்கியவரும், வசனகாரருமான ‘இராயசதா மஞ்சண்ணரின் மனைவி.’ அமுகேஸ்வரலிங்க’ என்பது இவரது முத்தி ரையாகும். அமுகே இராயம்மாவின் இயற்பெயராகவும் அது இருப்பது குறிப்பிடத்தக்கது.

    “பயிற்சிக் கூடத்திலின்றி போர்க்களத்தில் கோலிருக்குமா?
    விரதம்சடங்குகள் இல்லறத்தானுக்கன்றி பக்தனுக்குண்டோ?
    விரதம் தவறி உடலெடுத்த தீயோனுக்கு முக்தியில்லை
    அமுகேஸ்வர இலிங்கத்தில்“

    இராயசதா மஞ்சண்ணா

    இவர் பசவேசரின் கடிதப் போக்குவரத்தில் உதவியவர். இராயம்மா இவரது மனைவி. ’ஜாம்பேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆயுதமுனை தாக்குமுன்னால் தடுத்து விட்டால்
    ஆயுதமென்ன செய்யும்?
    நாகம் தீண்டுமுன்னர் பிடித்து விட்டால்
    நஞ்சென்ன செய்யும்?
    மனம் கெடுமுன்னர் பரதத்துவத்தில் திளைத்து விட்டால்
    ஐம்புலன்கள் என்ன செய்யும் ஜாம்பேஸ்வரனே“

    2. “எழுதி அழித்தால் அவ்வெழுத்து நன்றல்ல என்பேன்
    அறிந்து மறந்தால் அறிவு குறையுடையதென்பேன்
    செத்த பின்பு சமுத்திரமும் ஒன்றே, கையளவு நீரும் ஒன்றே
    ஜாம்பேஸ்வரனே“

    ரேவண சித்தய்யாவின் புண்ணிய ஸ்திரி ரேக்கம்மா

    இவர் ரேவண சித்தய்யாவின் மனைவி.பூமாலை கட்டிச் சிவனுக்குத் தரும் காயகம் இவருடையதாகும். ’ ஸ்ரீகுரு சித்தேஸ்வர’ இவரது முத்திரையாகும்.

    1. “இலிங்கத்துக்குப் புறம்பானவன் ஒழுக்கமற்றவன்
    பற்றுறுதியற்றவன் குருலிங்கம் ஜங்கமரைக் கொன்றவன்
    புனித நீர் பிரசாதம் பழிப்பவன்
    திருநீறு உருத்திராட்சம் இகழ்பவரைக் கண்டால்
    ஆற்றலிருப்பின் கொல்வது  இன்றேல்
    கண்ணும் காதும் மூடிச் சிவநாமம் செபிப்பது
    இயலாதெனில் இடம்விட்டு ஒதுங்குதல்
    இதுவும் ஆகாதெனில் கொடிய நரகில் வீழ்த்துவான்
    ஸ்ரீகுரு சித்தேஸ்வரன்“

     [தொடரும்]

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 3

    கதை வடிவில் பழமொழி நானூறு – 3

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 7

    வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
    தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
    மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க் கில்லை அரண்

    பழமொழி-  அஞ்சுவார்க்கு இல்லை அரண்

    காலைச் செய்தி பாத்தீங்களா. இன்னிக்கு தலைநகர்ல நம்ம தலைவருக்கு சிலை வைக்கறாங்களாம். பெரிய விழா ஏற்பாடு ஆகியிருக்காம். எல்லாரும் பேசிக்கிடறாங்க.

    பஞ்சாயத்துத் திண்ணையில உக்காந்து மாசாணம் சொல்றான். தலைவர் தலைவர்னு உசிர உட்டுட்டுத் திரிஞ்சீங்க. அவருடைய ஆத்மார்த்தமான தொண்டர்னு பெயர் வேற. உங்களுக்கு அழைப்பு வரலியா. நக்கலாகக் கேட்டுக்கொண்டே வந்தாள் என் மனைவி.

    தலைவர் செஞ்ச உயிர்த் தியாகத்துக்கு அவருக்குசிலை வைத்து மரியாதை பண்ணறாங்க. அதுக்கென்ன. நல்ல விசயம்தானே. வெளியில் சொன்னாலும் மனசு அசை போடத் தொடங்கியது.

    சில நேரங்களில் வெளியில் நிசம் போலப் பேசப்படும் பல செயல்களுக்கான உண்மை வேறாக இருக்கும். ஒருவிதத்தில் இதுவும் அப்படித்தான். நான் தலைவர் கூடவே இருந்ததால அவரப் பத்தி நல்லாத் தெரியும். என்ன நடந்தது என் மனம் பின்னோக்கிச் சென்றது.

    பத்து நாளா மக்கள் காய்ச்சல் பீதியில கலங்கியிருந்தாங்க. தலைவர் கண்டுக்கவே இல்ல.. அது என்னமோ காக்கா எச்சத்தால பரவற தொற்றுநோய் போல.. வேகமா பரவிட்டு வந்தது. ஒருநாள் போலத் தலைவருக்கு அந்த வேலை இந்த வேலைனு சொல்லி சமாளிச்சுப் பாத்தோம். கட்சிக்காரங்க நாங்க மட்டும் போய்ச் சமாதானம் பேசினா ஊர் சும்மா இருக்குமா. ஓட்டு வாங்கற சமயத்துல மட்டும் ஒரு இண்டுஇடுக்கு உடாம உங்க தலைவர் அத்தன இடத்துக்கும் வருவாரே இப்போ இந்தக் காய்ச்சலுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்னு குடைந்து தள்ளிட்டாங்க. சாலை மறியல் வேற பண்ண ஆரம்பிச்சாங்க. காய்ச்சல் வந்தவங்க உடல் வலியாலஅவதிப்பட்டாங்களே தவிர எந்தவித உயிர்ச்சேதமும் இல்ல. விவசாயிகள் நிறைஞ்ச இந்த ஊர்ல வயலுக்குப் போக முடியாம ஆனதால மக்களுக்குக் கோபம். கடைசியில ஒருவழியா தலைவர ஒத்துக்க வச்சி அரசு ஆஸ்பத்திரியில நேர்ல நோயாளிகளச் சந்திக்க வச்சோம்.

    அதுக்குமுன்ன அவர் பண்ணின ஆர்ப்பாட்டம் இருக்கே அப்பப்பா. டாக்டர வீட்டுக்கு வரச் சொல்லி முதல் முறையா அந்த தொற்றுவியாதி எப்படிப் பரவுதுனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த கையுறை எல்லாம் வாங்கி அணிச்சிக்கிட்டுதான் மருத்துவமனைக்கே வந்தார். அங்க அவரப் பாத்த சந்தோசத்துல ஒருத்தன் ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கிட்டான். அத எதிர்பாக்காத அவர் எங்க தனக்கும் அந்தவியாதி தொற்றிக்கிடுமோன்னு பயந்து அந்த பயத்துலயே நெஞ்சடைப்பு ஏற்பட்டு உயிர உட்டுட்டார்.

    அவர் மனைவி எங்களைக் கூப்பிட்டு பயத்துல அவர் உயிர விட்டதா சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டதால பரவுகிற வியாதி பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யப்போன இடத்தில் காய்ச்சல் தொற்றி தன் உயிரைத் தியாகம் செய்தார் எனப்பரப்பினோம். இவரக் கட்டிப்பிடிச்சுக்கிட்டவன் இன்னும் உயிரோடதான் இருக்கான். எல்லாருக்கும் காய்ச்சலும் குணமாகிட்டுவருது.  ஆனா இவர் மட்டும் தியாகிங்கற பெயரோட கொண்டாடப்படறாரு.

    யோசனையிலிருந்த மீண்ட நான் எல்லாம் தெரிஞ்ச என் மனைவிகிட்ட பேச ஆரம்பிச்சேன். உனக்குத்தான் தெரியுமே என்ன நடந்துச்சுன்னு. இவரப் போல கோழைகளுக்குத்தான் அஞ்சுவார்க்கு இல்லை அரண் ங்கற பழமொழியே இருக்குபோல. போருக்குப்பயந்தவனப் பாதுகாப்பா இரும்புக்கோட்டைக்குள்ள வச்சாலும் அவன் தன் பயத்துல செத்துருவாங்கறதுதான் அதோட அர்த்தம்.

    என்னமோ போங்க நீங்களாச்சு உங்க தலைவராச்சு. அவர் புண்ணியத்துல இன்னிக்குஒரு பழமொழி தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. சொல்லிவிட்டு வெளியேறினாள் என் மனைவி.

    பாடல் 8

    தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
    வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
    நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
    நாயைப் புலியாம் எனல்‘.

    பழமொழி- அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்

    என்ன குட்டியம்மா சோகமா இருக்கீங்க. புதுசா குடிவந்த அம்மாகிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தீங்க போல. என்ன சொன்னாங்க. கேட்டுக்கொண்டே அவளருகே சென்றேன்.

    ஆமாம். சரிதான். நல்லாப் பேசறாங்க. எனக்குக் கூட நெறைய பயனுள்ள அறிவுரைகள் சொன்னாங்க. உங்க பள்ளிக்கூடத்துலதான் வேல பாக்கறாங்களாமே. பெரிய பதவி போல. பள்ளி ஆசிரியையான நான் சுதாரித்துக்கொண்டேன். அப்படியா. எங்க அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்.

    நான் வேண்டாம்னு சொல்லச்சொல்ல தலைமை தாங்கற தகுதி உங்களுக்குத்தான் இருக்குன்னு  சாதாரண ஆசிரியரா அந்தப் பள்ளியில சேர்ந்த என் தலையில தலைமைப் பொறுப்பக் கட்டி விட்டுட்டாங்க. என் படிப்ப மதிச்சு ஒருத்தர் கொடுக்கும்போது வேண்டாம்னா சொல்லமுடியும். ஏத்துக்கிட்டேன். இப்போ வேலைச்சுமையால அவஸ்தப் படறேன்.

    உன் தோழி சுகன்யாகூட எங்க பள்ளியிலதான் வேல பாக்கறாங்க. அவுங்க சாதாரண ஆசிரியர்தான். நல்லா மரியாதயா இருப்பாங்க. இந்த மாதிரி நெறைய சொன்னாங்க.

    அடப்பாவி இப்படியா சொன்னா. மேல சொல்லு. உற்சாகப்படுத்தினேன்.

    அவங்களக் கேக்காம கீழ உள்ளவங்க வேலயே பண்ணமாட்டாங்களாம். அவங்களோட மாணவர்களும் அவங்கள உற்சாகப்படுத்த தினமும் ஏதாவது பரிசு குடுத்துக்கிட்டே இருப்பாங்களாம்.  பல விஷயங்களுக்குமுடிவு எடுத்து அவுங்களுக்கு தினமும் தலையே சுத்துமாம். பாவம். கஷ்டமான வேலையில்ல. பரிதாபப் பட்டாள் என் தோழி குட்டியம்மா.

    இவ்வளவுநாள் நீ கேக்காததால என் வேலையப்பத்தி சொல்லல. இப்போ சொல்றேன். எங்க பள்ளி பாலர் பள்ளி. அதுல மொத்தமே நாற்பத்தைந்து குழந்தைகள்தான் படிக்கறாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் பதினைந்து குழந்தைகளுக்கு இரண்டு ஆசிரியர்கள். இந்த அம்மா போனவருசம்தான் சேர்ந்தாங்க. குழந்தைங்க புது ஆசிரியரக் கண்டா பழகமாட்டாங்க இல்ல. அதனால போன வருசம் முழுசும் இந்த அம்மா அந்த வகுப்புல குழந்தைகளுக்கு உதவியா தாள்கள வெட்டறது, ஒட்டறது, வகுப்புக்கு மத்தியிலகொடி கட்டி அதில குழந்தைகளோட வேலைகள அலங்காரமாத் தொங்கவிடறது இப்டி பண்ணிட்டிருந்தாங்க.

    இந்த வருசம் குழந்தைகள் அவங்ககிட்ட பழகிட்டதால வகுப்பு எடுக்க உடறாங்க. அதத்தான் அந்தம்மா தலைமைப் பதவிங்குது. கூடவேலபாக்கற இன்னொரு ஆசிரியையும் இவுங்களும் கலந்தாலோசிச்சு அன்னிக்கு பலூன் வரையச் சொல்லணுமா, இல்ல ஆப்பிள் படம்வரைஞ்சு குடுத்து கலர் பண்ணச் சொல்லணுமா போன்ற முடிவுகள எடுப்பாங்க. இதத்தான் பொறுப்பான முடிவுகள் அப்டிங்குது.. எல்லா சின்னப் பிள்ளைகளும் எத வரைஞ்சாலும் உடனே டீச்சருக்கோ,அம்மாவுக்கோ குடுப்பாங்க. ஏன் உன் குட்டி தினமும் கார்ட் பண்றேன்னு குட்டி குட்டியாபேப்பரக் கிழிச்சு கலர் பண்ணுதுனு நீ சொல்லமாட்டியா. அதத்தான் அந்தம்மா மாணவர்கள் தரும் பரிசுங்குது.

    அடப்பாவி. இதுல வேற அந்தம்மா நீங்க படிச்சுட்டு இப்டி வீட்ல சும்மா இருக்கக் கூடாது. என்னய மாதிரி வீட்டயும் பொறுப்பா பாத்துக்கிட்டு வெளியிலயும் போய்ப் பழகுங்க. இல்லையின்னா கொஞ்ச நாள்ல உங்க வீட்டுக்காரரும், பொண்ணும் மதிக்க மாட்டாங்கன்னு சொன்னதாலதான் சோகமா வந்தேன். நல்ல வேள உங்களப்பாத்து உண்மயத் தெரிஞ்சுக்கிட்டேன்.

    அடப் போங்க குட்டியம்மா. இந்தம்மா மாதிரி தற்பெரும பேசிட்டுத்திரியறவங்க நெறையபேர் இருக்காங்க. ஆனா அவுங்க பேச்ச நம்பி புகழறாங்களே அது அடுப்பங்கரையில முடங்கி கெடக்கற நாயப் பாத்து புலின்னு சொல்ற பொய்ப் புகழ்ச்சிக்குச் சமானம். அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல் அப்டிங்கற பழமொழிய நீங்க பள்ளிக்கூடத்துல படிச்சதில்லையா என்ன எனக் கேட்டுவிட்டு குட்டியம்மாவுக்குப் புரிய வைத்த சந்தோஷத்தில் நான் கிளம்பினேன் அங்கிருந்து..

    Share
  • ஆயுள் தண்டனை

    ஆயுள் தண்டனை

    சி. ஜெயபாரதன், கனடா

    முதுமையின் வெகுமதி
    இதுதான்.
    ஊழ்விதித் தண்டனை
    இதுதான்.
    இளமை விடை பெற்றது
    எப்போது?
    முதுமை உடலுள் புகுந்தது
    எப்போது?
    முடி நரைத்து எச்சரிக்கை
    விடுகிறது!
    மூப்பு முதிருது
    மூச்சு திணருது.
    நாக்கு பிறழுது,
    வாய் தடுமாறுது,
    கால் தயங்குது, கை ஆடுது,
    கண்ணொளி மங்குது.
    காதொலி குன்றுது.
    குனிந்தால்
    நிமிர முடிய வில்லை.
    நிமிர்ந்தால்
    குனிய முடிய வில்லை.
    உடல் நிமிர்ப்பு குன்றிப் போய்
    புவியீர்ப்பு மிஞ்சிப் போய்
    முதுகு கூன் விழுகுது.

    ஓய்வகக் காப்பு மாளிகையில்
    தள்ள நேரிடும்
    தருணம் இதுதான்!
    முதியோருக்கு
    ஆயுள் தண்டனை இதுதான்!
    குடும்பத்தில்
    தம்பதியர் இருவரும்
    அனுதினம்
    பணம் சம்பா திக்கப் போகும்
    கட்டாய நிலை.

    காலை எழுந்தால்
    கண்ணொளி மங்கும்.
    சேவல் கூவல்
    செவிதனில் நழுவும்.
    கால்கள் தள்ளாடும்.
    இரவா, பகலா,
    சனியா, புதனா
    காலையா, மாலையா
    ஜூனா, ஜூலையா,
    நினைவில் வர
    சற்று நேரம் எடுக்குது!
    மங்குது கண்ணொளி
    விக்குது சொல்லொலி.
    திக்குது வாயிதழ்
    சுருங்குது நடை
    திரும்ப இயலாது உடனே.
    உடல் தளர்ச்சி,
    முடக்குது உடம்பை.
    பாரத விடுதலைப் போராட்டம்
    பற்றிக் கூற வீட்டில்
    பேரன் பேத்தி கட்குத்
    தாத்தா தேவை.
    பேரன்பு ஊட்ட வீட்டில்
    பாட்டி தேவை.
    ஓயும் முதியோர் தனிமையில்
    ஒதுக்கப் பட்டு
    ஆயுள் மட்டும் நீள்கிறது,
    அன்பூட்டும்
    வாய்ப்பில்லாது!

    Share
  • (Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்

    (Peer Reviewed) மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி:  egowrisss@gmail.com

    முன்னுரை

    பழந்தமிழிலக்கிய உலகம் கவிதைகளால் கட்டமைக்கப்பட்டது. அத்தனை கவிதைகளும் ஓலைச் சுவடியிலேயே வரையப்பட்டன. எழுதப்படுவதற்கான ஓலைத்தரம், எழுத்தாணியின் தன்மை, எழுதப்படும் முறை இவையெல்லாம் இற்றை நாள் பேரறிஞரேயாயினும் அத்துறை வல்லாரன்றிப் பிறரால் அவ்வளவு எளிதாக அறிந்துகொள்ள இயலாது. ‘சுவடிப் பதிப்பு’ என்பதே தனிக் கலை, தனித் துறை. இந்தப் பின்புலத்தில் இலக்கண நூலொன்றில் எடுத்துக்காட்டாக எடுத்தாளப்பட்டிருக்கும் ஒரு பாடலின் உண்மை வடிவத்தைக் கண்டு அதனை முழுமையாகச் சுவைக்க வேண்டும் என்பதையே தனது நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

    ஆய்வுப் பொருள் – கருதுகோள் – நோக்கம்  – பயன்

    பழந்தமிழ் இலக்கண நு}ல்களில் எடுத்துக்காட்டாகப் பயன்பட்டிருக்கும் ‘கரையாட கெண்டை’ எனத் தொடங்கும் ஒரு நேரிசை வெண்பாவே ஆய்வுப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. கவிதையைச் சுவைக்க வேண்டுமானால் அதன் முழுமையான வடிவம் இன்றியமையாத ஒன்று என்பதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை இங்கு வடிவமைக்கப்படுகிறது. ஓர் அசையையும் சரியாகப் பதிவிட வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தையே பதிப்புக் களமாகக் கண்ட அறிஞர்கள் சி.வை.தாமோதரம்பிள்ளை மற்றும் உ.வே.சா முதலியோரின் பங்களிப்புகள் நினைவுகூரப்படுவது பொருத்தமாக இருக்கும். ஆய்வின்றிச் சுவையுண்டு. ஆயின் சுவையின்றி ஆய்வில்லை. எனவே தமிழ்க் கவிதைகளைச் சுவைப்பதில் ரசிகமணி அவர்களின் நுட்பத்தை (சிற்சில நேர்வுகளில் ஏற்றுக்கொள்ள இயலாவிடினும்) நிகழ்காலச் சமுதாயமும் எதிர்வரும் சமுதாயமும் அறிந்துகொள்வதையே பயனாகக் கொண்டு அமைகிறது.

    வடிவமும்பொருள்கோளும்

    அமிதசாகரர் எழுதிய ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் நூலுக்கு உரையெழுதியவர் குணசாகரர் என்னும் சான்றோர். அவர்

    “சுரை யாழ அம்மி மிதப்ப

    யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

    கானக நாடன் சுனை”1

    என்னும் பாடலைச் சிந்தியல் வெண்பாவிற்கும் ‘மொழிமாற்று’ என்னும் பொருள்கோளுக்கும் எடுத்துக்காட்டாக்கி விளக்கியிருக்கிறார். மொழிமாற்றுப் பொருள்கோள் என்பது பாட்டின் ஓரடியில் மாறி நிற்கும் சொற்களைப் புலவனுடைய கருத்துக்கேற்ப நிரல்பட அமைத்துப் பொருள் காண்கிற உரைக் கொள்கையாகும். ‘மொழி’ என்றால் சொல் என்பது பொருள். ‘ஓரெழுத்து ஒருமொழி’ என்றவிடத்து மொழி என்பது சொல்லைக் குறித்தது காண்க. உரைநடையில் சொல்லாக வருவது கவிதையில் அல்லது செய்யுளில் சீராக வரும். எனவே ஒரடியில் ‘மாறிநிற்கும் சீர்களைப் புலவனுடைய கருத்துக்கேற்ப நிரல்பட அமைத்துப் பொருள் காணும் முறைக்கு மொழிமாற்றுப் பொருள்கோள் என்று பெயர். இந்தப் பாட்டில் ‘சுரை’ என்னும் எழுவாய் ‘மிதப்ப’ என்னும் வினையோடும் ‘அம்மி’ என்னும் எழுவாய் ‘ஆழ’ என்னும் வினையோடும் ‘யானை’ என்னும் எழுவாய் ‘நிலை’ என்னும் வினைக்கும் ‘முயல்’ என்னும் எழுவாய் ‘நீந்தும்’ என்னும் வினைக்கும் வரவேண்டும் என உரையாசிரியர் நினைத்து இந்தச் செய்யுளை இந்தப் பொருள்கோளுக்கு உரியதாக மாற்றியிருக்கிறார் எனத் தெரிகிறது.

    பொருள்கோளால் வந்த பொருள் மயக்கம்

    மேற்கண்டவாறு பொருள் கொண்டால் ‘பாடல் சொல்லவந்த கருத்து’ பாழ்படும் என்பதை உரையாசியர் கவனித்தாரா என்பது அறியக்கூடவில்லை. அக்கால உரையாசிரியர் இதனை ‘ஒரு பொருளாமாறில்லை’ என்பர். அதாவது  ‘ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன்மேல் ஆசை உண்டு’ என்று எழுதுவது கவிதையாகுமா?  ‘கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு’ என்பது என்ன கண்டுபிடிப்பு? எனவே ‘சுரை மிதக்கும்’, ‘அம்மி மூழ்கும்’, ‘யானை நிற்கும்’, ‘முயல் நீந்தும் என்றெல்லாம் சீர்களை மாற்றி உரைகாண்பதால் உரைநடைத் தொடராக அமையுமே தவிர கவிதையாகப் பரிணமிக்காது. பொருள்கோள் என்பது கவிதைக்குரியதேயன்றி, உரைநடைக்கு அன்று.

    இந்தப் பாடலின் வரலாறு

    இந்தப் பாடல் பற்றிய வரலாறு பெரும்பாலும் தமிழாய்வாளர் பலருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அன்பர் ஒருவர் தமது இணையத்தளப் பதிவில்2 இப்பாடலின் மூலப் பதிவுகளைத் தொகுத்தளித்திருப்பதை நான் காணும் வாய்ப்பு கிட்டியது. ஆய்வு நெறிப்படி மற்றொருவருடைய உழைப்பையும் கருத்தினையும் அவர் பெயராலேயே வெளியிடுவதுதான் பண்பாடு அந்த வகையில் அந்தப் பதிவினை அப்படியே தந்திருக்கிறேன். பொருள் புரிவதற்காகப் பத்திப் பிரித்துத் தந்துள்ளேன்.

    1. இவ்வெண்பா, சிந்தியல் வெண்பாவின் வடிவத்திலேயே, இளம்பூரணராலும், சேனாவரையராலும், நச்சினார்க்கினியராலும், தெய்வச்சிலையாராலும் (தொல். சொல். 400) யாப்பருங்கலவிருத்தி (சூ–95) யாப்பருங்கலக்காரிகை (சூ-43) உரையாசிரியர்களாலும், நன்னூலுக்கு உரைவரைந்த மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர் (நன்-413) போன்றோராலும் இதே வடிவில் எடுத்தாளப்படுகிறது.3

     

    1. நேமிநாதம், ( சொல் – சூ 68 ), இலக்கணக்கொத்து, (சூ.- 108 )முத்துவீரியம் (சூ- 1280) போன்ற இலக்கண நூல்களும் இந்த மூன்றடியைத்தான் காட்டுகின்றன.4

     

    1. பழைய இலக்கணங்கள் (நேமிநாதம் வரை) இப்பாடலைச் சுண்ணப் பொருள்கோள் என்றும் பின்வந்த இலக்கணங்கள் இதனை மொழிமாற்று என்றும் கொள்கின்றன.5

     

    1. இப்பாடல் “கரையாட கெண்டை“ எனத் தொடங்கும் நேரிசை வெண்பாவாக இருக்க முடியாது என்பதற்கு நேரடிச் சான்றுகள் உள.
      தொல்காப்பியச் செய்யுளியலின் 114ஆம் சூத்திரத்தில் நாலடியின் குறைந்த குறுவெண்பாட்டு, குறள் என்றும் சிந்தியல் என்றும் அழைக்கப்படும் என்று காட்டப்பட்டு, சிந்தியல் வெண்பாவிற்கு எடுத்துக்காட்டாகச், “சுரையாழ அம்மி மிதப்ப“ எனும் இப்பாட்டு கொடுக்கப்படுகிறது. எனவே இப்பாட்டு மூன்றடிதான் என்பது உறுதிப்படுகிறது.6

     

    1. விருத்தியும் (சூ.59) காரிகையும் (சூ. 25) இப்பாடலை இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் சான்று காட்டிச் செல்கின்றன.
      இக்காரணங்களால், “கரையாடக் கெண்டை“ என்னும் அடி, “சுரையாழ“ எனத்தொடங்கும் மூவடிகளை உடைய வெண்பா வடிவம் குறைவுபட்ட வடிவம் எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட, முன்சேர்த்த ஒட்டு எனக் கொள்வதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.7

     

    மேற்கண்ட பதிவு கட்டுரையாளருடையதன்று. இணையத்தில்8 கண்டவை. அவர்கள் ‘இந்த நூற்றாண்டிலும் ‘சூத்திரம்’ என்றுதான் எழுதுகிறார்கள்9 என்பதையும் ‘நூற்பா’ என்பதை மறந்தும் எழுத மறுக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுவது என் கடமை. பழந்தமிழ் உரைகளின் கண்டவாறு எடுத்தோதப்பட்ட இத்தரவுகளின் வன்மை மென்மைகளை அடுத்து ஆராயலாம்.

     

    ‘‘சுரையாழ’ பாடலின் பதிப்புக் காலம்

    மேற்கண்ட பத்தியில் காணப்படும் செய்திகளிலிருந்து ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட அந்தப் பாடல் மூல பாடமாக அமைந்த நூல் எதனையும் மேற்கண்ட அன்பர் காட்டவில்லை. அதாவது அந்தப் பாடலை ஒரே வடிவத்தில் உரையாசிரியர்கள் பலரும் பல உரைகளில்  எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதனையும் அச்சான்றுகளால் பெறுவதற்கில்லை.இதில் சிக்கல் என்னவென்றால் மேற்கண்ட உரைகளெல்லாம் ஒன்றிரண்டு நூற்றாண்டுகளின் இடைவெளியில் தோன்றியவையே. மற்றொன்று எல்லாமே சுவடி பார்த்து எழுதியவையே! தற்கால அச்சு வசதிகள் அன்றைக்கு இருக்கவில்லை. தமிழிலக்கிய வரலாறு கண்ட அறிஞர் கா.சு. பிள்ளை அவர்கள் தாம் எழுதிய இலக்கிய வரலாற்றில் ‘உரையாசிரியர் காலம்’ என்பதைத் தனித்த இயலில் ஆராய்ந்திருக்கிறார்10 என்பதையும் அக்காலம் பெரும்பாலும் 13ஆம் நூற்றாண்டே என்பதையும் கருத்திற் கொண்டால் மேற்கண்ட சான்றுகள் ஒன்றுக்கு மேற்பட்ட எந்த ஆய்வுக் கருத்துக்கும் துணை செய்வதாகத் தெரியவில்லை.

    இனி இச்சிந்தியல் வெண்பா, சிலர் கருதுவதுபோல் நேரிசை வெண்பாவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பார்தம் கருத்தும் இதனையொத்ததே. மூல பாடம் எது அல்லது எந்த நூலில் என்பதை அறியாத வரையிலும் உரையாசிரியர்களின் ஒருமித்த பயன்பாடுதான் சான்றாகக் கொள்ளப்படும். ஆனால் அதற்கு ஆய்வாளர் சொல்லும் கருத்தில் வலிமையிருப்பதாகத் தெரியவில்லை. நான்கடியினும் குறைந்த குறுவெண்பாட்டு என்பதனாலேயே இந்த மூன்றடிதான் முழுமையான வடிவம் என்பது ஏற்குமாறு இல்லை. அந்த உரையாசிரியர் அவருக்குக் கிட்டிய தரவுகளின்படி அதனை அவ்வாறு கருதியிருக்கிறார் எனக் கொள்வதுதான் ஆய்வு நெறி.

    இடைச்செருகல் என்பார்தம் கூற்றும் விளக்கமும்

    இந்த மூன்றடிச் சிந்தியல் வெண்பாவை யாப்பின் மீது பற்றுக் கொண்ட யாரோ ஒருவர் (“யாரோ ஒரு பண்டிதர் தம்புலமையைக் காட்ட’’ என்பது முன்பே சுட்டப்பெற்றது) ‘கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை’ என ஒரு வரியை எழுதி அதனை நேரிசை வெண்பாவாக்கிவிட்டார்11 என்பது ஒருவர் தம் ஆய்வுக் கருத்து. இருக்கலாம். இத்தனை உரைகளிலும் மூன்றடிகளாக இருந்த இந்தப் பாட்டு எப்போது மாற்றப்பட்டிருக்கலாம் என்ற வினாவிற்கு விடை தேடினால் அது தொன்னூல் என்ற வீிரமாமுனிவரின் பெயரில் வந்த நூல் என்பதை ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    “எனவே இவ்வெண்பா மூன்றடிகளை உடையது என்பது குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவும் கருத்து. இதை ஏன் உ.வே.சா நேரிசை வெண்பாவாகக் கருதினார் என்பதும் அதற்கு என்ன அவசியம் நேர்ந்தது என்பதும் தெரியவில்லை.”12

    என்று ஒருவர் எழுதுகிறார். ஐயர் அவர்கள் கொண்ட கருத்துத்தான் இந்தக் கட்டுரைக்கு வெளிச்சம் பாய்ச்சியது எனச் சொல்ல வேண்டும். அது பற்றிய விளக்கம் தொடர்கிறது.

    ஐயரின் ஐயமும் அகப்பொருள் அமைதியும்

    பேரறிஞர் உ.வே.சா.அவர்கள் இந்தப் பாட்டை நேரிசை வெண்பாகக் கொண்டதற்கு முக்கியமான காரணம் தனிச்சொல். இன்னிசை வெண்பா தனிச்சொல் பெற்று வராது.

    “ஒன்றும் பலவும் விகற்பொடு தனிச்சொல் இன்றி நடப்பின் இன்னிசை” 13

    என்பது காரிகை. எனவே இன்னிசை வெண்பா தனிச்சொல் பெறாது. (பல்வகை இன்னிசை வெண்பாக்களைப் பற்றிய இலக்கண அமைதிகளைக் குணசாகரர் தனது உரையில்தான் குறிப்பிடுகிறாரேயன்றிக் காரிகையில் அவற்றுக்கான இலக்கணம் இல்லை). அடுத்து,

    “நேரிசை இன்னிசை போல நடந்து அடி மூன்றின் வந்தால் நேரிசை இன்னிசைச் சிந்தியலாகும்”14

    என்பது மற்றொரு கருத்து. இதனால் தனிச்சொல் இல்லாமல் நடக்கும் இன்னிசை வெண்பா அடிகளால் மாறுபட்டு அதாவது நான்கடியின் குறைந்து மூன்றடியாக நடந்தால் அது இன்னிசைச் சிந்தியல் எனப்படும் என்பது பெறப்படும். இது அமிதசாகரர் கூறும் இலக்கணம்.

    குணசாகரர் உரையில் முரண்

    இந்தப் பாட்டிற்கு இலக்கணம் கூறவந்த உரையாசிரியர், குணசாகரர் பட்டுக் கொள்ளாமல் உரையெழுதியிருக்கிறார். அதாவது,

    “பலவிகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா”15

    என எதுகையோடு அமைதியடைகிறார். அவர் ‘வரையனைய’ என்னும் சொல்லை நோக்கினாரா என்பது தெரியவில்லை. மேலும் பதிப்புகளில் ‘வரையனைய’ என்பதைக் கோடிட்டுத் தனிச் சொல்லாகவே காட்டியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இன்னிசை வெண்பாவிற்கோ இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்கோ தனிச்சொல் வருதல் கூடாது என்பது யாப்பிலக்கண விதி. இதில் எந்த யாப்பிலக்கண நூலிலும் மாறுபாடில்லை. ஐயர் ஏன் நேரிசை வெண்பாவாக்க முனைந்தார் என்னும் வினாவை எழுப்பியவர் கூட ஓர் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவினைத் தனிச்சொல்லின்றி நேரிசை வெண்பாவாக்க முடியாது என்னும் இலக்கணத்தையும் மறந்தார் போலும்!

    தனிச்சொல் பற்றிய எண்ணம் எழாத நிலையில் அது நேரிசை வெண்பாவாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வர வாய்ப்பில்லை. எனில், அது நேரிசை வெண்பாவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என ஐயர் உள்ளிட்ட சிலர்தம் கருத்தியலுக்குக் காரணம் ‘வரையனைய’ என்னும் தனிச்சொல் ‘சுரையாழ’ என்னும் இரண்டாமடிக்குப் பொருத்தமான தனிச்சொல் எனக் கருதியதும் அதனைக் கோடிட்டுத் தனிச்சொல்போலக் குறித்ததுமே! இனி இவ்விரண்டு சொற்களுக்கும் பொருத்தமான பாட்டின் முதலடியின் முதற்சீரைக் கண்டறிந்ததன் விளைவுதான் ‘கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை’ என்னும் முதலடியாகும்.

    இந்த அடியின் வரலாறு நமக்குத் தேவையில்லை. ஐயரே எழுதியதாக இருக்கட்டும். ஔவை துரைசாமிப்பிள்ளை எழுதியதாகவும் இருக்கட்டும்!16 இல்லை அச்சுக் கோப்பவரே எழுதியதாயிருக்கட்டும்.! இங்கே பதியப்படும் அடிப்படை ஆய்வுண்மை மேற்கண்ட மூன்றடிப் பாடலைச் சிந்தியல் வெண்பா எனக் கருதியதுதான் அதன் வடிவம் பொருண்மை சிதைந்து போனதற்குக் காரணம் என்பதே. ‘சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய’ என்னும் தொடரைச் சொல்லிப் பார்த்தாலே ‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பது உணரப்படும்! கவிதை செவி நுகர் கனிகள்! கண்காட்சிப் பொருள் அன்று!

    ‘சிந்தியல் வெண்பாவால்’ வந்த சிதைவு

    ‘வரையனைய’ என்பதைப் பிரித்துத் தனிச்சொல்லாகக் காட்டியவர்கள் அதனை நேரிசைச் சிந்தியல் எனக் காட்டியிருந்தால் ஐயருக்கு வந்த சிந்தனை அப்போதே பலருக்கும் வந்திருக்கும். ஐயர் அவர்களின் ஆய்வுழைப்பை  அறிந்தவர்கள் அவருக்கு இந்த ஐயம் வந்ததைப் பற்றி வியக்கமாட்டார்கள். அவர் ஒரு மூட்டைப் பதரில் ஒரு ‘மணி’ காண்பதற்கு ஓராண்டு உழைக்கும் உத்தமதானபுரத்துக்காரர். இந்தப் பாடலில் பயின்று வந்துள்ள ‘வரையனைய’ என்னும் தனிச்சொல்லை நோக்காது மூன்றடியாகக் கொண்டதாலேயே உரையாசிரியப் பெருமக்கள் இதனைப் பொதுவான சிந்தியல் வெண்பாவுக்குச் சான்றாக்கினர். பாடலின் உயிர்ப்பினை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால் வேறு சிலர் மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு இலக்கியமாக்கினார்.குணசாகரர் வடிவத்தில் அதனைச் சிந்தியல் வெண்பா எனக்குறிப்பட்டவர் பொருள்கோளில் சுண்ண மொழிமாற்றுக்கு எடுத்துக்காட்டாக்கியிருக்கிறார்.(மொழிமாற்று, சுண்ண மொழி மாற்று, அடிமொழி மாற்று, கொண்டு கோட்டுப் பொருள்கோள் ஆகியன பற்றிய ஆய்வு இங்கு முன்னெடுக்கவில்லை).வடிவம், பொருண்மை ஆகிய இரண்டுமே கிட்டிய தரவுகளுக்கேற்பக் கொண்ட முடிவு என்பது இக்கட்டுரையாளர் கருத்து.இனிப் பாடலை ஐயர் அவர்கள் கருத்தின்படி பதிப்பித்தால் எப்படி அமையும்? இப்படி அமையும்!

    கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை

    “சுரை யாழ அம்மி மிதப்ப – வரையனைய

    யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

    கானக நாடன் சுனை”

    இப்படி அமைந்த இந்தப் பாடல் இப்பொழுது முழுமையான நேரிசை வெண்பாவாக உருப்பெற்றுள்ளது. இதனால் இது பழைய உரைநூல்களில் சிந்தியல் வெண்பா எனக் குறிக்கப்பட்டது தவறு என்பது பொருளன்று. இந்த ஆய்வுக்குக் கட்டுரையாளருக்குக் கிட்டிய சிந்தனை இன்னொருவருக்கு எதிர்காலத்தில் கிட்டினால் இந்த என்னுடைய ஆய்வு முடிவுக்கு வரும்.வேறோரு முடிவு தலையெடுக்கும்.எனவே ஆய்வில் முடிவு என்பது இல்லை.அது ஒரு தொடரோட்டம் என்பதை ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவ்வாறின்றி “முன்னோர்கள் எல்லாம் அறியாமையில் இவ்வாறு எழுதினார்கள் பதிப்பித்தார்கள்” என்பதெல்லாம் நம் பாட்டனார்களை நாமே தரங்குறைந்து பேசுவதுபோல என்றாகிவிடும்!. இந்த முழுமையான நேரிசை வெண்பாவின் உள்ளடக்கத்தைப் புரிந்து சுவைப்பதற்கு முன்னால் கவிதைச் சுவை பற்றிய சில கருத்துகளைக் காணலாம்

    கவிதையைச் சுவைப்பது எப்படி?

    அனுபவத்தின் மொழிபெயர்ப்பே கவிதை. இயற்கை, இறையருள், தத்துவம், நீதி நெறி என எதுவானாலும் படைப்பாளியின் உள்ளத்தில் கரைந்து போன நிலையில் அவன் உள்ளத்திலிருந்து பீரிட்டு வருவதுதான் கவிதை. சொற்கள் பக்குவமாக அமைந்தால் கவிதை செய்யுளாகும். சொற்கள் நெருப்பாக அமைந்தால் செய்யுள் கவிதையாகப் பரிணமிக்கும். இது அறிஞர் மு.வ. அவர்களின் ஆய்வுப் பார்வை.

    “தொடுக்கும் கடவுட் பழம் பாடல்

           தொடையின் பயனே! நறைபழுத்த

                 துறைதீந் தமிழின் ஒழுகுநறுஞ்

                       சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து

    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு

           ஏற்றும் விளக்கே! வளர் சிமய

                 இமயப் பொருப்பில் விளையாடும்

                       இளமென்பிடியே! எறிதரங்கம்

    உடுத்தும் புவனம் கடந்து நின்ற

           ஒருவன் திருவுளத்தில் அழகு

                 ஒழுக எழுதிப்பார்த்திருக்கும்

                       உயிரோ வியமே! மதுகரம் வாய்

    மடுக்கும் குழற்காடேந்தும் இள

           வஞ்சிக் கொடியே! வருகவே!

                 மலையத்துவசன் பெற்ற பெரு

                       வாழ்வே!வருக வருகவே!”17 

    அம்மையைப் பலவகையில் உருவகம் செய்யும் குமரகுருபரர் பாட்டின் இறுதியடியில் வருகவே என்னும் சொல்லை மும்முறை அடுக்குவதைக் காணலாம். கிடக்கை நிலையிலேயே இந்தப் பாட்டைச் சுவைப்பது சரியே! ஆனால் ஒவ்வொரு உருவகவிளிக்கும் ‘வருகவே!’ என்னும் வியங்கோளை அமைத்துப் பாடிப் பாருங்கள்! (தொடையின் பயனே வருகவே! நறுஞ்சுவையே வருகவே! விளக்கே வருகவே! இளமென் பிடியே வருகவே! உயிரோவியமே வருகவே! வஞ்சிக்கொடியே வருகவே! பெருவாழ்வே வருகவே! என்பதுபோல) உணர்ச்சியின் ஆழம் தெரியும்! குமரகுருபரரோடு அவருடைய இறையனுபவத்தோடு நம்மையும் அறியாமல் ஒன்றுவதை உணரமுடியும். ஐயமிருந்தால் இந்தப் பாடலை தருமபுரம் சுவாமிநாதன் பாடியிருக்கிறார் கேட்டுப் பாருங்கள்!. இன்னொரு சான்று!மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அதில் இந்த நெறியைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம்.

    “ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!

          உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! வா!

    …………………………………………………………………………………………………………………………………

    ஒரு பெருஞ்செயல் செய்வாய் வா! வா! வா!18

    பாரதியார் நினைத்திருந்தால் குமரகுருபரரைப் போல எல்லா விளிகளையும் தொகுத்துச் சொல்லி ‘வா’என்னும் ஏவலை அடுக்காக்கியிருக்கலாம் அல்லவா? 32 வரிகளில் 3 வரிகளைத் தவிர மற்ற எல்லா வரிகளிலும் உள்ள விளிகளுக்கான வினையை அந்தந்த வரிகளிலேயே அவர் பதிவு செய்திருப்பதைக் காணலாம். எழுச்சிமிக்க பாரதத்தை வரவேற்கின்ற நிலையில் அவர் வாய்குளிர மனங்குளிர “வா!வா!வா!” என்று வரவேற்கிறார் என்பதாம்.  பாரதி இயற்றமிழ்க் கவிஞர் மட்டுமல்லர். இசைத்தமிழ்ப் பாவலர். அதனால்தான் அவர் தான் எழுதிய பல பாடல்கள் ‘இன்ன மெட்டில்தான் பாடப்படல் வேண்டும்! இன்ன ராகத்தில்தான் இசைக்கப்படல் வேண்டும் என்று பாட்டின் தொடக்கத்திலேயே எச்சரிக்கை செய்துவிடுகிறார். தம் பாட்டை இவர்கள் பாடினால் நம்மவர்கள் என்ன செய்வார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

    தலைவன் வாக்குறுதியும் தலைவி ஏமாற்றமும்

    சங்க இலக்கியத்தின் அகப்பாடல்கள் உளவியல் அடிப்படையில் அமைந்தவை. இயற்கைக் கூறுகளை மறுதலிக்காதவை புறவாழ்க்கையில்   வினைமுற்றி மீளும் காலம்பற்றிய தன்னால்அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத தலைமகனைச் சங்க இலக்கியம் சித்திரித்து உள்ளது. அதனை உணராமல் அவன் கொடுத்த வாக்குறுதியை மட்டுமே நம்பிப் புலம்பும் நங்கையர்களையும் அது காட்டுகிறது.குறுந்தொகையில் ஒரு பாட்டு.கார் காலம் வந்தது.அதற்கு மறுக்க முடியாத சான்றாகக் கொன்றை மலர்கள் மகளிரின் கூந்தலைப் போலப் பூத்துக்குலுங்குகின்றன.இது இயற்கை. இயற்கை பெரும்பாலும் மாறாதது.ஆனால் தலைவன் வரவில்லை.தலைமகன் வரவில்லை எனத் தலைவி வருந்துவாளே என்று தோழி தயங்குகிறாள். அவள் தயக்கத்தைப் போக்க தலைவி சொல்வதாக அந்தப் பாட்டு அமைந்திருக்கிறது.

    “வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு

    பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்

    கதுப்பிற் தோன்றும் புதுப்பூங் கொன்றை

    கானம் காரெனக் கூறினும்

    யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே” 19

     

    “கொன்றை மரங்களில் புதிதாகப் பூத்துக் கார்காலம் வந்து விட்டது எனக்  கூறினாலும் நான் நம்பமாட்டேன்! ஏனென்றால் என் தலைவன் பொய் பேசமாட்டான்” இந்த அதீத நம்பிக்கை இன்றளவும் நடப்பியலிலும் இருப்பதனாலேயே நீதிமன்றங்களிலே இவ்வளவு வழக்குகள். சமுதாயத்தில் இவ்வளவு கொலைகள்! தற்கொலைகள்! இந்தப் பாட்டு குறுந்தொகையில் வருகிற ஒரு பாட்டென்றால் கலித்தொகையில் ஒருபடி மேலே போய் “என் தலைமகன் பொய் சொல்லவே மாட்டான்.அப்படிச் சொன்னால் அது ‘தண்ணீர் சுடும்’ என்பதுபோலாகும்” என்பதுபோல அமைந்த ஒரு பாட்டு இருக்கிறது.அந்தப் பாட்டைப் பாருங்கள்!

    பொய்த்தற்கு உரியனோ?பொய்த்தற்கு உரியனோ?

    ‘அஞ்சல் ஓம்பு” என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?

    “குன்றகல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்

    திங்களுள் தீத் தோன்றியற்று”

     

    “வாராது அமைவானோ? வாராது அமைவானோ?

    வாராது அமைகுவான் அல்லன் – மலைநாடன்

    ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்து

    நீருள் குவளை வெந்தற்று”

     

    “துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்

    தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்

    தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில்

    சுடருள் இருள் தோன்றி யற்று”20

     

    எவ்வளவு பெரிய நம்பிக்கை?

    இயற்கையை மறுதலித்து தன் இதயம் கவர்ந்தவனின் சொல்லுக்கு மதிப்பளிக்கும் ஒரு தலைவியை இங்கே காண முடிகிறது. இதுபோன்ற பதிவுகளை நேரடியாகப் பொருள் காண்பதிலும் கொஞ்சம் நுண்ணியத்தைச் செலவழித்தால் ஒரு சமுதாய உண்மையைப் புரிந்துகொள்ள இயலும். இப்படித் தன் தலைவி வருந்துவாளே என்று எண்ணித்தான் வினைமுடித்து மீளும் தலைவன்தன் தேர்ப்பாகனை விரைந்து செல்லுமாறு ஆணையிடும் பாடல்களும் அமைந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும். இலக்கியம் சமுதாயத்தின் படப்பிடிப்பு. தலைவன் வந்துவிடுவான் என்னும் தலைவி நம்பிக்கையும் அந்த நம்பிக்கையைப் பாழாக்காமல் மீண்ட தலைவனையும் தமிழ்க்கவிதை உலகம் அன்றைக்குப் பதிவு செய்திருப்பதைஅறியமுடிகிறது.

    ‘சுரையாழ’ பாட்டின் உண்மைப் பொருள்

    இப்படியொரு துணைத் தலைப்பு இடுவதனாலேயே இதுதான் உண்மைப் பொருள் என யாரும் கருதிவிட வேண்டாம். கட்டுரையாளரின் வரையறுக்கப்பட்ட புலமை, கிட்டியிருக்கும் தரவுகள், பிற ஆய்வாளர்களின் முடிவுகள், தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் காணப்படும் துறைப்பொருள் அமைதி முதலியனவற்றையெல்லாம் உள்வாங்கித் தற்காலிகமான முறையில் பதிவு செய்யப்படும் இலக்கிய நோக்கு என்றே கருத வேண்டும்.

    கரையாட கெண்டை கயத்தாட மஞ்ஞை

    “சுரை யாழ அம்மி மிதப்ப –  வரையனைய

    யானைக்கு நீந்து முயற்கு நிலையென்ப

    கானக நாடன் சுனை”

    ‘‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பது தெளிவாக மேலே விளக்கப்பட்டிருத்தலின் அதன் முன்னடிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அது ஒரு நேரிசை வெண்பா என முன்வைக்கப்படுகிறது.படினும் அது இன்னிசைச் சிந்தியல்வெண்பா என்னும் பழைய தகுதி அப்படியே இருக்கிறது.நம் ஆய்வு இவ்வாறு அமைகிறது. அவ்வளவுதான்! இனி பொருள்கோள் நெறியில் எந்த மாற்றுக்கும் இடமில்லை என்பது மேலே காட்டிய சங்க இலக்கிய அகத்திணை மரபுகளால் நன்கு புலப்படும். அதாவது தலைவன் பொய்சொல்லமாட்டான் எனத் தலைவி நம்புவதும் “இல்லை அவன் பொய் சொல்வான்’ எனத் தோழி கவல்வதும் பாடுபொருளாயிருக்கின்றன.வினைமேற் செல்லும் தலைவன் அல்லது வரைவு நீட்டிக்கும் தலைவன் காலத்தாழ்வாகிய செயல்களுக்கு ஆயிரம் காரணங்களைச் சொல்வது ஓர் இலக்கிய மரபு.அவனை நம்பிப் புலம்புவதும் ஓர் இலக்கிய மரபு.காலம் நீட்டித்த தலைவனைக் குறிப்பாக ஏசுவதுபோலப் பேசுவது தோழிக்கு இயல்பு.இவை அத்தனையும் அகத்திணை இலக்கிய மரபுகள்.அந்த மரபு பற்றியே இந்தப் பாடலும் அமைந்திருக்க வேண்டும். தோழி சொல்கிறாள்,

    “நீ என்னவோ தலைவன் தான் தந்த வாக்குறுதியை மீறமாட்டான் என நம்புகிறாய்.அவன் மீறுவது ஒரு புறம் இருக்கட்டும்.தான் சொல்கிறேன்.அவன் மட்டும் வாக்குறுதி மீறித் தலைகீழாக நடப்பான் என்பதன்று.உனக்குத் தெரியாது அவன் மட்டும் தலைகீழ் அல்லன்.அவன் நாட்டு மலைப்பகுதிகளில் உள்ள சுனைகளும் கூடத் தலைகீழானதுதான்.அந்தச் சுனை நீரில் நீந்த வேண்டிய மீன் கரையில் விளையாடும்.கரையில் விளையாடுதற்குரிய மயில் சுனையில் விளையாடும்.மிதக்க வேண்டிய சுரை அமிழ்ந்துவிடும்.அமிழ வேண்டிய அம்மி மிதக்கும்.உருவத்தில் பெரிய யானை நீச்சலடிக்கும்.சிறிய முயல் மூழ்கிவிடும்.அவன் நாட்டுச் சுனையில் அஃறிணைச் சுனையே இவ்வாறெனின் உயர்திணை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?”

    இந்தக் கண்ணழிப்பும் உரைப்போக்கும் துறைப்பகுப்பும் கட்டுரையாளர் முன் வைக்கும் கருத்தியல்.யாரும் கட்டுப்பட வேண்டும் என்பதில்லை.யார்மீதும் திணிப்பதற்காகவும் இல்லை.இனிக் கூடுதல் தகவலாகப் பதிவு செய்யப்படும் கருத்து.

    “உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய

    நிரை உள்ளர் அல்லர் நிமிர்ந்து – பெருகல்

    வரைதாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே

    சுரையாழ அம்மி மிதப்பு” 21

    என்னும் நேரிசை வெண்பா பழமொழி நானூற்றில் வருகிறது. இந்தப் பாட்டில் ‘சுரையாழ அம்மி மிதப்பு’ என்பதைப் பழமொழியாகப் பதிவு செய்திருக்கிறார்கள் இதனால் சுரையாழவும் அம்மி மிதக்கவுமான கருத்தியல் சமுதாயத்தில் நிலவியிருக்கிறது என்பது பெறப்படும். படவே, அது புலவனின் கற்பனையன்று என்பது உறுதி செய்யப்படும்.“சான்றோர் ஒடுக்கமும் அல்லவர் நிமிர்வும்” அம்மியின் மிதப்புக்கும் சுரையின் அமிழ்வுக்கும் ஒப்புமையாகக் கருதப்பட்டிருப்பது தமிழ்க்கவிதை உவமக் கொள்கையின் ஒரு தனி அடையாளம் என்றே கூறலாம். ஒரு செயல் என்பது ஒரு நாகரிகச் சமுதாயத்தின் சிந்தனை.

     

    நிறைவுரை

     

    ‘அணிசெய் கலைகள் ஆயிரம் கற்பினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் கற்கிலார்’ என்பார் மகாகவி. ஏதோ வேண்டுமென்றே முன்னோர்கள் இந்தப் பாட்டுக்குத் தவறான பொருள்கோளைக் கொடுத்துவிட்டார்கள் என்பது போல எண்ணுவதும் பிற சான்றோர்களின் புலமையை ஐயப்படுவதும் பக்குவான ஆய்வு நெறியன்று யாராயினும் தங்களுக்குக் கிட்டிய தரவுகளின் அடிப்படையில்தான் ஆய்வு மேற்கொள்ள இயலும். நூலகங்கள் இல்லாத சுவடிக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் உழைப்பு எண்ணிப்பார்க்க இயலாதது.‘சுரையாழ அம்மி மிதப்ப’ என்பது ஒரு நாகரிகச் சமுதாயத்தின் வழக்கில் பயன்படும் ஒரு தொடர்.அதனை இலக்கியப் பதிவில் கொண்டுவந்திருக்கும் புலவனின் சதுரப்பாடு பெரிதும் பாராட்டத்தக்கது.வழக்குப் பழமொழி ஒன்றினை அகப்பொருள் அமைதிக்குப் பயன்படுத்தியிருக்கும் புலமைத் திறன் சிந்திக்க வைக்கிறது.பதிப்புலகின் பிதாமகர் சான்றோர் உ.வே.சா.அவர்கள் ‘வரையனைய’ என்பதைத் தனிச்சொல்லாகக் கொண்டிருக்காவிட்டால் இந்தக் கட்டுரையே இல்லை.இன்றைக்கு இந்தப் பாட்டின் உரையமைதி இவ்வளவுதான். நாளை மற்றொருஆய்வாளருக்குக் கிட்டும் தரவுகளின் தன்மையைப் பொருத்து இன்னும் சிறந்த பொருள் கிட்டலாம் என்பதை நினைவூட்டிஇக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

    சான்றெண் விளக்கம்

    1. குணசாகரர் யாப்பருங்கலக்காரிகை உரை காரிகை எண் 28
    2. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    3. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    4. Uoomaikkanavugal.com கனவுத் ‘தொகுப்பு கானக நாடன் சுனை’
    5. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    6. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    7. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    8. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    9. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    10. பிள்ளை .கா.சு. இலக்கிய  வரலாறு தொகுப்பு 2    ப 370
    11. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு கானக நாடன் சுனை
    12. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு கானக நாடன் சுனை
    13. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை காரிகை எண் 26
    14. மேலது காரிகை எண் 28
    15. குணசாகரர் மேலது உரை    
    16. Uoomaikkanavugal.com கனவுத் தொகுப்பு ‘கானக நாடன் சுனை’
    17. குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பா.எண். 61
    18. சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் ப 43
    19. ஓதலாந்தையார் குறுந்தொகை பா.எண்.  21
    20. கபிலர் கலித்தொகை குறிஞ்சிக்கலி           பா.எண். 5
    21. முன்றுறையரையனார் பழமொழி நானூறு பா.எண். 125

     

    துணைநூற் பட்டியல்

    1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை                      

    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

    சென்னை – 600001.

    முதற்பதிப்பு – 1940

     

    1. ஔவை துரைசாமி பிள்ளை குறுந்தெகை உரை

    திருநெல்வேலி தென்னிந்திய சைவ

    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

    சென்னை – 600001.

    முதற்பதிப்பு – 1940

     

    1. குணசாகரர்                     யாப்பருங்கலக்காரிகை உரை

    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

    சென்னை – 600001.

    முதற்பதிப்பு – 1940

     

     

     

    1. குமரகுருபரர் மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ்

    முல்லை நிலையம்

    9, பாரதி முதல் தெரு

    தி.நகர். சென்னை – 60017

     

    1. சுப்பிரமணிய பாரதியார், பாரதியார் கவிதைகள்

    பூம்புகார் பிரசுரம்

    பிரகாசம் சாலை, பிராட்வே

    சென்னை – 600 108

     

    1. புலியூர்க் கேசிகன் கலித்தொகை உரை

    பாரி நிலையம்

    சென்னை – 600001.

    ஏழாம் பதிப்பு – 2003

     

    1. முன்றுறையரையனார் பழமொழி நானூறு

    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

    சென்னை – 600 098

    முதற்பதிப்பு– 1957

     

    1. இணையதள முழுமுகவரி ஊமைக்கனவுகள்

    கனவுத் தொகுப்பு

                                             UMAIKKANAVUKAL.COM      

                                             UOOMAIKKANAVUKAL.COM

    கவிதையின்கழுத்தைஇப்படியும்அறுக்கலாம் – பிப்ரவரி 2திங்கட்கிழமை 2015

    ‘கானக நாடன் சுனை’ – பிப்ரவரி 5 வியாழக்கிழமை 2015

    (கட்டுரையாளர் அறிந்த வகையில் இதுவே முகவரி என அறியப்படுகிறது. கூகுளில் ‘சுரையாழ அம்மி மிதப்ப’ எனத் தமிழில் பதிவிடின் தொடர்புடைய கட்டுரையைக் காணலாம். இந்தப் பதிவும் இதற்கான பின்னூட்டங்களுமே இந்தக் கட்டுரைக்கான காரணக் களமாகும். “கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்’ என்னும் ஒரு தொடரின் எதிர்மறை விளைவே இக்கட்டுரை)

    பின்குறிப்பு: இணையத்தளப் பதிவில் பதிவாளர் பெயரோ பின்னூட்டக்காரர்களின் இயற்பெயரோ பெரும்பான்மை காண இயலவில்லை.


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    “மூழ்கிய சுரையும் மிதந்த அம்மியும்” என்னுந் தலைப்பில் அமைந்த  இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

    • பழந்தமிழ் இலக்கண உரைகளில் காணப்படும் பாடல்கள் பல, இலக்கியச் சுவைக்கும் இலக்கண விளக்கத்திற்கும் பயன்படுமாறு அமைந்துள்ளன. அவற்றுள் ஒரு பாடலைப் பற்றிய வடிவம் மற்றும் பொருண்மை ஆகியவற்றின் உண்மைகாணும் முயற்சியாக இக்கடடுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • எடுத்துக்கொண்ட பாடல் அகத்துறைச் சார்ந்தது என்பதால், துறை விளக்கத்திற்காகப் பல நூல்களைக் கட்டுரையாளர் காட்டியிருப்பதும் புலனெறி வழக்கத்தை அன்றைய உலகியலோடு ஒப்பிட்டுத் தலைமகன் தலைமகள் இவர்களுடைய உணர்வொற்றுமையை நுட்பமாகப் பதிவு செய்திருப்பதும் சிந்தனைக்குரியன.
    • சங்க இலக்கியப் பாடல்களை  உளவியல் அடிப்படையில் நோக்கி இயற்கையையே மறுதலிக்கும் அளவுக்குத் தம் தலைவன் மீது பற்று வைத்திருக்கும் தலைவியர் பலர்தம் உள்ளங்களைக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
    • மூன்று வரிப் பாடலாகவே இருந்த இதன் மூலத்தைக் கண்டறியும் அறிஞர் உ.வே.சா. அவர்தம் முயற்சியில் கிட்டிய முதலடியே இக்கட்டுரைப் பொருளை முழுமையடையச் செய்கிறது. அவருடைய ஐயத்திற்கான அடிப்படை எது என்பதைக் கண்டறிவதிலும் முந்தைய ஆய்வுகளிலிருந்து கிட்டிய முதல் வரியைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டு உரைகாண்பதிலும் கட்டுரையாளரின் ஆய்வுப் பக்குவத்தையும் பண்பாட்டையும் காண முடிகிறது.
    • ‘வரையனைய’ என்பது தனிச்சொல் என்பதற்குக் கட்டுரையாளர் முன்வைக்கும் இலக்கண விளக்கங்கள் ஆழமானவை. அதனைத் தனிச்சொல்லாக ஐயர் கருதியதால்தான் அதன் உண்மையான முழுவடிவம் நேரிசை வெண்பாகத்தான் இருக்க முடியும் என்னும் முடிவுக்கு வருகிறார்.
    • கவிதைச் சுவையுணர் திறனை விளக்கக் குமரகுருபரரையும் பாரதியையும் முன் பின்னாக ஒப்பிட்டுக் காட்டியிருப்பது நிறைவு அளிக்கிறது.
    • இவ்வளவு ஆழமான கட்டுரையில் கட்டுரையாளர் ஒன்றினைக் கவனிக்கத் தவறிவிட்டாரோ எனக் கருத வேண்டியதிருக்கிறது.   ‘பொருள்கோள் நெறியில் எந்த மாற்றுக்கும் இடமில்லை’ என்பது அவசரப் பதிவோ?  பாட்டில் இரண்டு மற்றும் மூன்றாவது அடிகள் எழுவாய்த் தொடராக அமைய, முதலடி பெயரெச்சத் தொடராக அமைந்திருப்பதைக் கட்டுரையாளர் கவனித்திருக்க வேண்டும். கவனித்திருந்தால் மற்ற இரண்டு அடிகளைப் போலவே முதலடியையும் எழுவாய்த் தொடராகவே அமைப்பதுதான் மொழிமாற்றுப் பொருள்கோள் என்பதை உணர்ந்திருக்கக் கூடும். ‘கரையாட கெண்டை கயத்தாட  மஞ்ஞை’ என்பது மற்றவிரு அடிகளோடு பொருந்தாமை காண்க. எனவே  அவற்றைக் கெண்டை கரையாட, மஞ்ஞை கயத்தாட எனப் பிற அடிகள்போல எழுவாய்த் தொடராக மாற்றினால் பாட்டின் முதல் மூன்றடிகள் செவ்வையாக அமைந்துவிடுவதைக் காணலாம். காணவே பாட்டில் ஓரடிக்குள் உள்ள சீர்களை மாற்றிப் பொருள் காணும் கொள்கையாகிய மொழிமாற்றுப் பொருள்கோள் இவ்வடியில் அமைந்திருக்கிறது என உரைகாரர் கருதியது சரியே என்பது புலனாகும்.
    • தொடக்கக் காலத்தில் நான்கடியாக இருந்து முதலடியில் காணப்படும் மொழிமாற்றுப் பொருள்கோள் சுட்டப்பட்டுக் காலப்போக்கில் அந்த முதலடி மட்டும் மறைந்த நிலையிலும் எஞ்சிய மூன்றடிப் பாடலை மட்டும் பதிவு செய்து பொருள்கோளை வழக்கம் போல் பதிவு செய்திருக்கலாம். சங்க இலக்கியப் பதிவுகளில் பல பாடல்களில் இடையடிகள் மறைந்து போனதை ஒக்கும் இது.
    • ஆய்வுக் கட்டுரையில் சான்றெண் விளக்கமும் துணைநூற்பட்டியலைப் போலவே நெறிசார்ந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.

     

    Share
  • நார்மன் ராபர்ட் போக்சன்

    நார்மன் ராபர்ட் போக்சன்

    வெ. சுப்ரமணியன்

    நேற்று விண்மீன்களின் பொலிவு குறித்த ஒரு காணொலி தயாரித்துக் கொண்டிருந்தேன். அப்போது விண்மீன்களின் தோற்றப் பொலிவெண் (Apparent magnitude) குறித்த தற்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் எண் மதிப்பு அளவீட்டு முறையை (magnitude scale) உருவாக்கிய  நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) சென்னையில் வாழ்ந்து மறைந்த ஆங்கிலேயர் என்ற விபரம், அவரைப் பற்றி இன்னும் அதிகமான விவரங்களை அறிந்துகொள்ள என்னைத் தூண்டியது. அதனால் இணையத்தளத்தில் அவர் குறித்துத் தேடிய போது ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களைத் திரட்டித் தமிழில் தருகிறேன்.

    நார்மன் ராபர்ட் போக்சன் (Norman Robert Pogson) இங்கிலாந்தில் நாட்டிங்காம் (Nottingham) என்ற இடத்தில் 1829ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை ஜார்ஜ் ஓவன் போக்சன் (George Owen Pogson) உள்ளாடைகள், சரிகை விற்பனையாளராகவும் மற்றும் தரகு முகவராகவும் தொழில் செய்துகொண்டிருந்தார். தங்களது பெரிய குடும்பத்தின் வருமானத்திற்கு உதவியாக இருக்கவும், தந்தையின் தொழிலைக் கவனிக்கவும் வேண்டி போக்சன் வணிகவியல் கற்கவே அனுப்பப்பட்டார். ஆனால் போக்சனின் மனமோ அறிவியலையும் கணிதத்தையும் நாடியது. அவரது கணிதத்தின் மீதான ஆர்வத்திற்கு அவரது தாயார் மேரி ஆன் (Mary Ann) ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தினார்.

    படம்: நார்மன் ராபர்ட் போக்சன் (1829 – 1891) (Picture Courtesy : Indian Institute of Astrophysics – archives)

    போக்சனின் தொடக்க காலக் கல்வி ஒன்றும் முறையானதாக இல்லை. தனது பதினாறாவது வயதில் கணிதம் போதிக்கும் எண்ணத்தில் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டார். தனது பதினெட்டாம் வயதில் ராயல் வானியல் சங்கத்தின் (Royal Astronomical Society) ஜான் ரஸ்ஸல் ஹிண்ட் (John Russell Hind) உதவியுடன் வால்மீன்கள் (Comets) இரண்டின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டார். இதன் பின்னர் 1846ஆம் ஆண்டில் ஜார்ஜ் பிஷப் வானியல் ஆய்வுக் கூடம் (George Bishop Observatory) மூலம் வானியலுக்கு அறிமுகமானார். வால்மீன்கள் குறித்த ஆய்வுகளில் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஐசிஸ் (Isis) என்ற சிறு கோள் (Asteroid) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். இதற்கிடையில் அவரது இருபதாவது வயதில் 1849ஆம் ஆண்டில் லண்டனில் எலிசபெத் ஜேன் ஆம்ப்ரோஸைத் (Elizabeth Jane Ambrose) திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பதினொரு குழந்தைகள் பிறந்தன.

    1852ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டின்  ராட்கிளிஃப் வானியல் ஆய்வுக் கூடத்தில் (Radcliffe Observatory) உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். இங்கு அவருக்கு ஐஸிஸ் (Isis) என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தமைக்காக லாலாண்ட் பதக்கம் (Lalande medal) வழங்கப்பட்டது. ஆக்ஸ்போர்டில் பணியாற்றிய காலத்தில் வழக்கமான ஆய்வுப் பணிகளுடன் பொலிவுமாறு விண்மீன்கள் (variable stars) குறித்தும் ஆய்வுகள் செய்தார். 1854ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஏர்ரி (George Airy)யின் புவியின் அடர்த்தி காணும் சோதனைகளில் பங்கு கொண்டு உதவினார்.

    1859ஆம் ஆண்டில் ஜான் லீ (John Lee)க்குச் சொந்தமான ஹார்ட்வெல் வானியல் ஆய்வுக் கூடத்தின் (Hartwell observatory) இயக்குநராகப் பொறுப்பேற்றார். 1859 முதல் 1860 வரையில் பொலிவுமாறு விண்மீன்கள் (variable stars) மற்றும் சிறு கோள்கள் (asteroids) குறித்த 14 ஆய்வுக் கட்டுரைகளை ராயல் வானியல் ஆய்வுச் சங்கத்தின் மாதாந்திர அறிவிப்புகளில் (Monthly notices of Royal Astronomical Society) வெளியிட்டார். 1860ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் அரசாங்க வானியலாராகப் பணிபுரியும் பொருட்டு  சர் சார்லஸ் உட் (Sir. Charles wood) இவரை நியமனம் செய்தார்.

    1861ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த போக்சன், சென்னை வானியல் ஆய்வுக்கூடத்தில் (Madras Observatory) பணிபுரியும் போது 67 ஏசியா (67 Asia) உள்ளிட்ட ஐந்து சிறு கோள்களையும், ஏழு பொலிவுமாறு விண்மீன்களையும்  அடுத்த ஏழு ஆண்டுகளில் தன் இடைவிடா உழைப்பால் கண்டு பிடித்தார்.

    படம்: சென்னை வானியல் நிலையம்

    சென்னையில் அமைந்த முதல் வானியல் ஆய்வு நிலையத்தின் எச்சங்களாக இன்றைக்கு மீதம் இருப்பது மேலே படத்தில் உள்ள பதினைந்து அடி உயரத் தூண் மட்டுமே.

    https://www.thehindu.com/news/cities/chennai/the-origins-of-the-weatherman-in-madras/article5045891.ece
    (Photo credit : M. Vedhan)

    அடுத்து தொடர்ந்து வரும் பதிவுகளில் இது குறித்து விரிவாகக் காண்போம்.

    படம் : 1880 ஆம் ஆண்டில் சென்னை வானியல் ஆய்வு நிலையம்  (Madras observatory – 1880) 
    (நன்றி: ru:Погсон, Норман Роберт – http://prints.iiap.res.in/handle/2248/714)

    1831 முதல் 1842 வரை பணிபுரிந்த T.G. டெய்லர் (T.G.Taylor) 1831ஆம் ஆண்டில் துவங்கி 1835ஆம் ஆண்டில் வெளியிட்ட (Taylor’s Madras catalogue) டெய்லரின் மெட்ராஸ் அட்டவணை என்ற 11,015 விண்மீன்கள் குறித்த தகவல்களைக் கொண்ட அட்டவணையைக் கையில் எடுத்துக் கொண்ட போக்சன், 1887ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து 51,101 பதிவுகளை அதில் தன் பங்காகப் பதிவு செய்தார். 1891ஆம் ஆண்டில் போக்சனின் இறப்புக்குப் பின் இந்த அட்டவணையை  ஆர்தர் டவுனிங் (Arthur downing)  சீரமைத்து 1901ஆம் ஆண்டில் வெளியிட்டார். தாய்நாட்டை விட்டு இந்தியாவில் தனித்திருந்த போதிலும்,

    அவர் தன் வாழ்நாளில் 134 விண்மீன்கள், 106 பொலிவுமாறு விண்மீன்கள், 21 பொலிவுமாறு விண்மீனாக இருக்க வாய்ப்புள்ள விண்மீன்கள் மற்றும் 7 சூப்பர் நோவா சாத்தியங்களைக் கண்டறிந்துள்ளார்

    1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, சிறப்புப் பயணமாகப் போக்சன், மசூலிப்பட்டினத்திற்குச் சென்றார். அப்போது மேற்கொண்ட சூரிய நிறமாலை ஆய்வுகளின் போது புதிய நிறமாலை வரியைக் கண்டதைக் குறித்து  பதிவு செய்திருந்தார். இந்த வரி, ஹீலியம் தனிமத்தைச் சேர்ந்தது. அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜூல்ஸ் ஜான்சென் (Jules Janssen) குண்டூரில் மேற்கொண்ட நிறமாலை ஆய்வுகளின்  பின்னரே ஹீலியம் (Helium) தனிமம்  இருப்பது முதன் முதலாகத் தெரிய வந்தது . புதிய தனிமம் சூரியனில் இருப்பதால் சூரியன் (Helios) என்ற பொருள் படும் ஹீலியம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பின்  அடுத்த ஆண்டில் அதாவது 1869இல் அவரது மனைவி ஜேன் ஆம்ப்ரோஸ் காலமானார் .

    வானியலில் அவரது மிக முக்கியமான பங்களிப்பு என்பது “போக்சன் விகிதம்” (Pogson’s ratio) என்பதுதான்.  ஹிப்பார்கஸ் (Hipparchus) விண்மீன்களின் தோற்றப் பொலிவில் (Apparent magnitude) ஏற்படுத்திய ஆறு படிநிலை அளவுகளில் இவர் செய்த மாற்றம் தான் அது. அதாவது முதல் படிநிலை அளவில் (First magnitude) உள்ள விண்மீனின் தோற்றப் பொலிவு 1 என்றால் ஆறாவது படிநிலையில் (Sixth magnitude) உள்ள விண்மீனின் தோற்றப் பொலிவு 1/100  என்பதே. அதாவது 5√100 அல்லது (100)1/5 = 2.521 மடங்குகளாக முதல் படிநிலையிலிருந்து ஒவ்வொரு படியாக நேர்த் திசையில் செல்ல, பொலிவு குறையும்.  அதுவே எதிர்க்குறித் திசையில் செல்ல மதிப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த எந்த இரு படிநிலைகளுக்கும் உள்ள விகிதம் மாறாத மதிப்புடையது அது 5√100 = (100)1/5 = 2.521. இது எதிர் லாகிரிதத் தன்மை (reverse logarithmic) கொண்டது. அதாவது படிநிலை எண் (magnitude) கூட, பொலிவு (Brightness) மதிப்பு குறையும் .

    m1 : m6 = 1: 1/100.

    m1- m2 = 2.5 log(L1/L2)

    இதில் m என்பது விண்மீனின் படி நிலை அளவீடு (Apparent magnitude). L என்பது சார்பிலாப் பொலிவு.

    1868, 1871 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தியச் சூரிய கிரகணப் பயணங்களில் பங்கு கொண்டார். 1872ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று எர்ன்ஸ்ட் ப்ரீட்ரிக் வில்ஹெல்ம் கிளிங்கர்பியூஸ் (Ernst Friedrich Wilhelm Klinkerfues) என்னும் ஜெர்மானிய வானியலாளரிடமிருந்து போக்சனுக்கு ஒரு தந்தி கிடைத்தது. அதில், “பீலா (Biela) 27ஆம் தேதி பூமியைத் தொட்டது. தீட்டா செண்டூரிக்கு அருகில் தேடுங்கள்” என்று தகவல் இருந்தது.  குறிப்பிட்ட பீலா, ஒரு வால்மீன். துரதிர்ஷ்டவசமாக மெட்ராஸில் வானம் மேகமூட்டமாக இருந்தது வானம் தெளிவடையும் போது  டிசம்பர் 2ஆம் தேதி ஆகி விட்டது. அப்போது அவர் ஒரு பொருளைக் கண்டார் அதனை X/1872X1 எனப் பதிவுசெய்தார்.  இது பீலாவின் வால்மீனின் மறு வருகை என்று அவர் நம்பினார்.  ஆனால் பின்னர் அது வேறு ஒரு வான்பொருளாகக் கண்டறியப்பட்டது. அதுவே பின்னாளில் “போக்சனின் வால்மீன்” (Pogson’s Comet) என்று அழைக்கப்படுகிறது.

    மனைவி ஜேன் ஆம்ப்ரோஸ் 1869ஆம் ஆண்டில் இறந்த பின்னர் பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1883ஆம் ஆண்டு போக்சன் தனது ஐம்பத்து நான்காவது வயதில் மெட்ராஸில் அதாவது சென்னையில் பிரிட்டிஷ் படைப்பிரிவை சேர்ந்த சார்லஸ் டபிள்யூ. சிபிலியின் (Charles W. Sibley) மகளான எடித் லூயிசா ஸ்டாப்ஃபோர்டு சிபிலி (Edith Louisa Stopford Sibley) என்ற முப்பத்து மூன்று வயது விதவையைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஃபிரடெரிக் வேரி (Frederick Vere), எடித் வேரா (Edith Vera) மற்றும் எடித் கிளாடிஸ்(Edith Gladys).  இதில் எடித் வேரா குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டார். 1885ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி போக்சனால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வேரா (Vera) என்ற சிறுகோள், அவரது இரண்டாவது மனைவி எடித்தின் பரிந்துரையின் பேரில் பெயரிடப்பட்டது.

    நீண்ட காலமாக போக்சனின் உதவியாளராகப் பணியாற்றிய சிந்தாமணி ரகுநாதாச்சாரி பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், இங்கிலாந்தில் இருந்தவாறு அவருடன் கூட்டுப் பணியாற்றுபவர்களுடனும், இந்தியாவின் அப்போதைய ஆட்சியாளர்களிடமும் பிரச்சனைகள் அதிகரித்ததும், மற்றும்  ஒரு காலக்கட்டத்தில் அவருக்கு மிக ஆதரவாகச் செயல்பட்ட  ஜார்ஜ் ஏர்ரி (George Airy) ஆதரவளிக்காமல் செயல்பட்டதும் மன ரீதியாக அவரைப் பெரிதும் பாதித்தது. அரசாங்கத்திடம் உதவி கோரிய அவரது விண்ணப்பங்களை ஜார்ஜ் ஏர்ரி நிராகரித்தது மட்டுமல்லாமல் அவர் மீண்டும் இங்கிலாந்து திரும்ப வேண்டிச் செய்திருந்த விண்ணப்பத்தையும் நிராகரித்தார். மனமுடைந்து போன போக்சனின் உடல்நிலை மோசமானது. 1891ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் நாள் காலமானார். அவரது உடல், சென்னை, புனித ஜார்ஜின் கதீட்ரலில் (St. George’s Cathedral),  நல்லடக்கம் செய்யப்பட்டது. மெட்ராஸில் அதாவது சென்னையில் முப்பது ஆண்டுகள் பணிபுரிந்த போக்சன் பணிக்காலத்தில் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. போக்சனின் இறப்பிற்குப் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்று விம்பிள்டனில் வாழ்க்கையைக் கழித்த அவரது மனைவி எடித் 1946ஆம் ஆண்டு காலமானார்.

    இவரது நினைவைப் போற்றும் வகையில் சிறுகோள் 1830 போக்சன் (Asteroid 1830 Pogson), நிலாவின் போக்சன் குழிப்பள்ளம் (Pogson Crater in Moon), சிறுகோள் 42 ஐஸிஸ் (Asteroid 42 Isis) இவரது மகள் எலிசபத் ஐஸிஸ் போக்சன் நினைவாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

    42 ஐஸிஸ் (42 Isis) – 23 மே 1856

    43 அரியட்னே (43 Ariadne) – 15 ஏப்ரல் 1857

    46 ஹெஸ்தியா (46 Hestia) – 16 ஆகஸ்ட் 1857

    67 ஆசியா (67 Asia) – 17 ஏப்ரல் 1861

    89 சப்போ (80 Sappho) – 2 மே 1864

    87 சில்வியா (87 Sylvia) – 16  மே 1866

    107 கமீலா (107 Camilla) – 17 நவம்பர் 1868

    245 வேரா (245 Vera) – 6 பிப்ரவரி 1885  ஆகியன அவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.

    போக்சனின் மகள் எலிசபெத் ஐசிஸ் போக்சன் (Elizabeth  Isis Pogson) 1873 முதல் 1881 வரை மெட்ராஸ் வானியல் ஆய்வகத்தில் (Madras Observatory), தம் தந்தையின் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் மெட்ராஸின் வானிலை நிருபராக மாறினார். 1886ஆம் ஆண்டில் ராயல் வானியல் சங்கத்தில் (Royal Astronomical Society) அங்கத்தினராக அவரைச் சேர்த்துக்கொள்ள அவர் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் சங்கத்தின் சில சட்ட விதிமுறைகள் பெண்களை உறுப்பினர்களாகச் சேர்க்க அனுமதிக்கவில்லை. முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு சட்ட விதிகள் மாற்றம் செய்த பின்னர், எலிசபெத் ஐசிஸ் போக்சனை 1920ஆம் ஆண்டில் இணைத்துக்கொண்டு கௌரவப் படுத்தியது.

    Share
  • நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு!

    நாவலர் நூற்றாண்டு நற்றமிழுக்குப் பல்லாண்டு!

    முனைவர் ஔவை நடராசன்  

    கருந்தாடியும் செம்மேனியும் காவியம் பேசும் இதழ்களும் கொண்ட கட்டிளங்காளையாக பேரறிஞர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட நன்மணிதான் நாவலர்.

    ஏறுபோல் எழுந்து நின்று இலக்கிய உரைகளை ஆற்றியபோது கேட்டவர் நெஞ்சமெல்லாம் கிளுகிளுத்தது.  அண்ணாவால் அருமைத் தம்பி என்று அழைக்கப்பட்டதோடு தலைமை தாங்க வா உன் ஆணைக்கு அடங்கி நடக்கிறோம் என்று அவர் உரையாற்றியது கழக வரலாற்றின் கல்வெட்டு மொழியாகும்.

    நாவலர், பாவேந்தரின் பாட்டு வரிகளை மேடை தவறாமல் முடிப்புரையாகச் சொல்வார். பகையைக் கூடத் தன் நகையால் வென்றவர். கலைஞருடைய கலைத்திறமையால் அவர் உலகையே வெல்வார். கலை பெற்ற வெற்றிதான் கலைஞரின் வெற்றி. என் வெற்றி அவரைத் தொடர்ந்ததுதான் என்று பெருமிதத்தோடு பேசியதை நாம் நன்றாக அறிவோம்.

    நாவலர் நூற்றாண்டு நற்றமிழ் வளர்க்கும் நூற்றாண்டாக நாளுக்கு நாள் பொலிவு பெற வேண்டும் என்பதுதான் நம் விருப்பமாகும்.

    சங்கே முழங்கு என்ற எழுத்துகளைக் காணும்போதுகூட நாவலரின் இடிக்குரல், காதில் இனிப்பை ஊட்டும்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 2

    கதை வடிவில் பழமொழி நானூறு – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 4

    உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
    எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! – தள்ளாது
    அழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
    பழங்கன்று ஏறாதலும் உண்டு.

    பழமொழி:  அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு

    காலையிலேயிருந்து பக்கத்துவீட்டுல ஏதோ சலசலப்பு. அப்பா மகனோட குரல் உரத்துக் கேக்குது. ஏதோ விவாதம் போல. நான் இந்த வீட்டுக்குக் குடிவந்தப்போ பக்கத்துவீட்டு ஜெயந்துக்கு ஆறு வயசு. நாதன் என்ற என்னோட பெயரைச் சுருக்கி நாத் அங்கிள் அப்டின்னு கூப்பிட்டுக்கிட்டு எங்க வீட்லயே கெடையா கெடப்பான்.  சாக்லேட்லேந்து ஐஸ்கிரீம் வரைக்கும் எது வேணும்னாலும் சிபாரிசுக்கு என்கிட்டதான் வருவான். அப்பறம் வளந்து பெரிய பையன் ஆனவொடனே எப்பவாவது பேசறதோட சரி. இருந்தாலும் பாசம் உட்டுப்போகாதில்ல.

    இன்னிக்கு என்ன பிரச்சினையோ கத்திக்கிட்டு இருக்கான். பெரிய மனுசன் ஆயிட்டதால கண்டிப்பா என்னய சிபாரிசுக்குக் கூப்பிடமாட்டான். அதுக்காக அவனுக்கு ஒரு பிரச்சினைனா நான் போய் பாக்க வேண்டாமா. இருந்தாலும் அப்பா மகன் விவகாரம். கொஞ்சநேரம் வாசல்ல நின்னு ஒட்டு கேட்டுட்டு உள்ள போறேன். மனதுள் தீர்மானித்தேன்.

    நான் சாப்ட்வேர் என்ஜினியர் ஆயிட்டதால வெளிநாடு போய்தான் வேலபாக்கணும்னு என்னப்பா கட்டாயம். இவ்ளோ நேரம் சொல்லியும் உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே. அதான் உள்ளூர்லயே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி நல்லா சம்பாதிக்கறேன்னு சொல்றேனே. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான். இது ஜெயந்த்.

    ஓ இவ்வளவுதானா. வேறெதுவும் குடும்பப் பிரச்சினை இல்லை. நான் உள்ளே நுழைந்தேன். அங்கிள் நீங்களே எங்கப்பாவோட நியாயத்தக் கேளுங்க ஜெயந்த் ஆரம்பித்தான். அவன் அப்பா இடைமறித்து நீங்களே சொல்லுங்க சார். மொதமொதல்ல சின்னதா கடை போட்டு வியாபாரம் பண்ணி எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி இப்ப இவன நல்ல படிப்பு படிக்க வச்சிருக்கேன். இவனாவது வெளிநாடு போய் நாலு காசு சம்பாதிக்கட்டும்னு பாத்தா திரும்பவும் இங்கயே என்னய மாதிரி வியாபாரம்தான் பண்ணுவேங்கறான்.

    ஜெயந்த் தொடர்ந்தான். அங்கிள். எங்கப்பாவோட கடை பக்கத்துலயே கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிச்சு நடத்தறேன்னு நான் சொல்றேன். நான் படிச்சபடிப்பு கண்டிப்பா துணை நிக்கும். பக்கத்துலயே ரெண்டு காலேஜ் இருக்கு. அதனால பிராஜக்ட் பண்ண அவங்க எல்லாரும் வருவாங்க. மெதுமெதுவா முன்னேறி எங்கப்பாவோட வியாபாரத்தையும் பெரிசுபடுத்தி நானும் முன்னேற முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க கொஞ்சம் அப்பாவுக்கு எடுத்துச் சொல்லுங்க. அப்பாவத் தனியா உட்டுட்டுப் போயி பணம் சம்பாதிக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. அவர் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு என்றான்.

    என்ன சார் நீங்க. உங்க பையன் எவ்வளவு பொறுப்பா பேசறான். அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு ன்னு கேள்விப்பட்டதில்லையா. கடைத்தெருவுல மேய்ந்த பழைய கன்றுதானேன்னு நினைக்காம ஒருநாள் பெரிய எருதா வளந்தவொடனே சிறப்பு பெரும்னு நினைக்கணும்.  வருமானம் நிறைய வராதுனு நினைக்கறீங்களா இல்ல சின்னப்பையன் வியாபார நெளிவுசுளிவு தெரியாம வளத்துட்டேன்னு குறைச்சு எடைபோடறீங்களா தெரியல. உங்க பையன நம்பி அவன் போக்குலவிடுங்க. வெளிநாட்டுக்குப் போயி கைகட்டி மாசச் சம்பளம் வாங்கற சாதாரண ஆளா இல்லாம ஒருநாள் உங்க பெயர் நிலைக்குற அளவு வியாபாரத்துல பெரிய புள்ளியா வளந்து காட்டுவான். சொல்லிவிட்டுப் பெருமையுடன் நகர்ந்தேன் நான்.

    பாடல் 5

    கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
    பெரும்பழி யேறுவ பேணார் இரும்புன்னை
    புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று அஞ்சாதே
    தின்பது அழுவதன் கண்.

    பழமொழி: அஞ்சாதே! தின்பது அழுவதன் கண்

    இன்னிக்கு பொழுது விடிஞ்ச நேரமே சரியில்ல போல. நம்பிக்கையோட இருந்தேன். சற்குணம் ஐயாவுக்கு நல்ல தீர்ப்பு கொடுப்பாங்கன்னு. எல்லாம் தலைகீழா முடிஞ்சு போச்சு. டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருந்த நண்பன் முருகனிடம் என் ஆதங்கத்தைத் தொடர்ந்தேன்.

    கண்ணு முன்ன ஐயா தலைகுனிஞ்சு நடந்து போகறதப் பாக்க சகிக்கல. மாடசாமி பொல்லாதவன்தான். ஆனா இவ்ளோ பொல்லாதவன்னு இன்னிக்கு நீதிமன்றத்துல தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    என்ன சேதி. ஒண்ணும் பிடிபடல. சார்வாள் வருத்தமா இருக்கீங்கன்னு மட்டும் புரியுது. விஷயம் அறியும் ஆர்வத்தில் முருகன்.

    நான் தொடர்ந்தேன். அவசரத் தேவைக்காக மாடசாமிகிட்ட சற்குணம் ஐயா வட்டிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கியிருக்காரு. எழுதி வாங்காததனால அவன் இஷ்டத்துக்கு வட்டிய ஏத்தி எவ்வளவு பணம் அடைச்சாலும் அத வட்டிக்கணக்குலயே வரவு வச்சிருக்கான். இரண்டு லட்சம் வரை குடுத்த பிறகும் இன்னும் அசல் குடுக்கணும்னு சொன்னதால ஐயா நீதிமன்றத்துக்கு போக முடிவு எடுத்துட்டாரு. கெட்டவனுக்குத் தப்பு பண்ண கசக்கவா செய்யும். அவன் நீதிமன்றத்துல பொய்சாட்சி சொல்ல வச்சி, பொய்யான தாள்கள ஆதாரமாக் காட்டி ஜெயிச்சிட்டான். இருந்தாலும் ஐயா நேர்மை என்னைக்குமே தோற்காது. நான் மேல் முறையீடு செய்யப்போறேன்னு சொல்லிட்டு குனிஞ்சதலையோட வெளிய வந்தார். பாக்கவே பாவமா இருந்திச்சு தெரியுமா. .

    சார்வாள் காட்டுல விலங்குகள் வேட்டையாடும்போது தங்களால கொல்லப்படற மிருகங்கள் வேதனையால கத்தறதப் பாத்து மனசு மாத்திக்கிடுதா என்ன. அதப் பாத்து பயப்படாம கொன்னு சாப்பிடுது இல்ல. அது மாதிரி தான் மாடசாமி மாதிரி கெட்டவங்களும் எத்தன பழி பாவம் வந்தாலும் பயப்படாம மேல மேல கெடுதலத்தான் செய்வாங்க. முன்ன இதுக்கு அஞ்சாதே! தின்பது அழுவதன் கண் அப்டின்னு ஒரு பழமொழியே இருந்திச்சு. என் வருத்தத்துக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் முருகன்.

    பாடல் 6

    தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
    ஆற்றும் துணையும் அறஞ்செய்க! – மாற்றின்றி
    அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
    துஞ்ச வருமே துயக்கு‘.

    பழமொழி: அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு

    அந்தக் குளத்துல குளிக்கிறவளப் பாத்தியா. அவளப் பாத்தா பைத்தியம் மாதிரி தோணுதா உனக்கு.  சவீதா என்னிடம் கேட்கிறாள்.

    கோடை விடுமுறைக்கு அவளின் சொந்த ஊர் வந்திருக்கிறோம். எவ்வளவு அழகான ஊர். எங்கு பார்த்தாலும் பசுமை. பெரிய ஆலமரங்களைக் கரையெங்கும் கொண்ட கம்பீரமான குளம். சுற்றிப் பார்க்கலாம் என்று வந்தோம். பக்கதிலிருந்த அரசமரத்தடிப் பிள்ளையாரைச் சுற்றி வந்து ஈரப்புடவையுடன் ஒரு சில பெண்கள் கற்பூரம் ஏற்றி வைத்து கும்பிடுவதைப் பார்த்துக்கொண்டு நின்ற எனக்கு சவீதாவின் அந்தக் கேள்வி முதலில் புரியவில்லை.

    ஆமாம். அங்கு குளத்துப் படியில உக்காந்திருக்கற வயசான அம்மாவுக்கு என்ன ஆச்சு. கால நீட்டி உக்காந்து எதையோ மண்ணவச்சு தேச்சிக்கிட்டிருக்காங்க. கிட்ட போய்ப் பாக்கலாமா. அப்போதுதான் அவளைக் கவனித்த நான் சவீதாவிடம் கேட்டேன்.

    போச்சு போ. இவ்ளோ நேரம் அவ தன்னோட காசு மாலை, ஒட்டியாணம், வளையல், சங்கிலினு ஒண்ணோண்ணா தேச்சாளே அதப் பாக்கலியா. எல்லாத்தையும் கழுவி அங்க இருக்கு பாரு அந்த சொம்புக்குள்ள வச்சிட்டா. இப்போ அதோட மூடிய தேச்சிட்டிருக்கா. இது தினமும் நடக்கற விஷயம்.

    இந்தஅம்மா இந்த ஊரு பெரிய பண்ணையார் மனைவி. சின்ன வயசா இருக்கும்போது பண்ணையார் நிறைய தான தருமம் செய்வாராம். அது இந்த அம்மாவுக்குப் பிடிக்காது. அதனால புதுப் புது நகையா செஞ்சு மாட்டிக்குமாம். வயித்துப் பசின்னு வந்தவங்களுக்குக் கூட சோறு போட மனசில்லாம தனக்கு அளவுக்கு அதிகமா புடவைகள் வாங்கிக் குவிக்குமாம். ஏன் இப்படிச் செய்யற. உங்கிட்டதான் வேணுங்கிற அளவு நகைநட்டு இருக்கில்லனு பண்ணையார் கடிஞ்சு சொன்னா, அனுபவிக்கிற காலத்துல நல்லா அனுபவிச்சிட்டு வயசாகி மேல போறதுக்குமுன்ன இல்லாதவங்களுக்குக் குடுத்து புண்ணியத்தத் தேடிக்குவேன்னு சொல்லுமாம்.

    பண்ணையார் மேல போயி பத்து வருசம் ஆச்சு. அதிர்ச்சியில இந்த அம்மாவுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சு. பிள்ளகுட்டி எதுவும் இல்ல. சொத்து முழுக்க ஊர்ப் பஞ்சாயத்து எடுத்துக்கிச்சு. நகை மேல உள்ள பைத்தியத்துல இந்த அம்மா தர மாட்டேன்னு சொன்னதால உட்டு வச்சிருக்காங்க. மேல பாத்தியா ரெண்டு பேர் காவலுக்கு நிக்கறாங்க. இவுங்க காலத்துக்குப் பிறகு தன்னப்போல இந்த நகைகளெல்லாம் ஊர்ப் பஞ்சாயத்துக்குப் போயிடும்.

    சின்ன வயசுல நாம படிச்ச பழங்காலப் பழமொழி ‘அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு என்பதற்கு உதாரணம் தான் இந்த அம்மா. அருமையான இந்த மனிதப் பிறவியில முடிந்த போதெல்லாம் தருமம் செய்யணும். கடைசி காலத்துல தருமம் செஞ்சிக்கலாம்னு ஒதுக்கி வச்சா அந்த வேளையில தருமம் செய்யமுடியாதபடி புத்தி மழுங்கிப்போனாலும் போகும் அப்டிங்கறத இவுங்கள மாதிரி உள்ள மனுச சன்மங்க புரிஞ்சுக்கிறதேயில்ல.

    உண்மைதான் இவங்களத் திருத்த நம்மளால என்னசெய்யமுடியும்னு யோசிக்கலாம். யோசித்துக்கொண்டே வீடுநோக்கி நடந்தோம் இருவரும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(309)

    குறளின் கதிர்களாய்…(309)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(309)

    ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
    வேந்தனும் வெந்து கெடும்.

    – திருக்குறள் -899 (பெரியாரைப் பிழையாமை)

    புதுக் கவிதையில்...

    ஆற்றல் மிக்க
    சிறந்த கொள்கையுடன்
    ஒழுக்கமுடைய பெரியோர்
    சினந்திடும் நிலை வந்தால்,
    காரணமாயிருந்த நாடாளும்
    காவலனும் இடையில்
    தன் ஆட்சியை இழந்துத்
    தானும் அழிவான்…!

    குறும்பாவில்...

    கொள்கைப் பிடிப்புடைப் பெரியோர்
    கோபம்கொண்டால் காரணமான கொற்றவனும்
    அரசிழந்துத் தானும் அழிவான்…!

    மரபுக் கவிதையில்...

    அறிவோ டாற்றல் நல்லொழுக்கம்
    அனைத்து மொன்றாய்க் கொண்டேதான்
    நெறியோ டொழுகும் பெரியோரும்
    நெருப்பாய் கோபம் கொண்டாலே,
    பொறியா யதற்குக் காரணமாம்
    பொல்லா மன்ன னரசுடனே
    நெறியே யில்லாக் கோனவனும்
    நிலைக்கா தழிந்தே போவாரே…!

    லிமரைக்கூ..

    கொள்கையுட னொழுகும் பெரியோர்
    கோபம் கொள்ளும் நிலைவந்தா லழிவர்
    காரணமாம் அரசதற் குரியோர்…!

    கிராமிய பாணியில்...

    தப்புசெய்யாத தப்புசெய்யாத
    தன்னவிடப் பெரியவங்ககிட்ட
    தப்புசெய்யாத
    எப்பவுமே தப்புசெய்யாத..

    கொள்கயோட நல்லொழுக்கம்
    கொண்ட பெரியவுங்க
    கோவப்படாமப் பாத்துக்கணும்,
    கோவப்பட்டால் அதுக்குக்
    காரணமானவன் ராசாண்ணாலும்
    ராச்சியமும் நெலயில்லாம அழிஞ்சி
    அவனும் அழிஞ்சியே போவான்..

    அதால
    தப்புசெய்யாத தப்புசெய்யாத
    தன்னவிடப் பெரியவங்ககிட்ட
    தப்புசெய்யாத
    எப்பவுமே தப்புசெய்யாத…!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 1

    கதை வடிவில் பழமொழி நானூறு – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பழமொழி

    உண்பதற்குச் சுவையாகவும் உடல் வளத்திற்கு ஏற்றதாகவும் பழம் விளங்குவதுபோல கேட்பதற்கு இனிமையாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் உள்ள அரிய வாக்குகளே ‘பழமொழிகள்’ என்கிறார் புலியூர்க்கேசிகன் அவர்கள். தமிழினத்தின் செம்மையான நல்வாழ்விற்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன.

    பழமொழி நானூறு

    பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. இந்நூலை இயற்றியவர் தென்பாண்டி நாட்டின் சீர்மிகு பழம்புலவருள் ஒருவரான முன்றுறை  அரையனார். இதில் அக்காலத்தே வழக்கிலிருந்த நானூறு பழமொழிகளை அவர்தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியை விளக்க ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்கள் அமைத்து முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையையும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூலை அவர் இயற்றியுள்ளார்..

    கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பழமொழிக்கும் நவீனவிளக்கம் தர முயற்சித்து எழுதும் எனது ஒருபக்கப் புனைக்கதைகளை இனி தொடர்ந்து வாசியுங்கள்.

    பாடல் 1 (கடவுள் வணக்கம்)  
    பாடல் 2

    மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
    தக்கது அறியார், தலைசிறத்தல், – எக்கர்
    அடும்பு அலரும் சேரப்ப! அகலுள்நீ ராலே
    துடும்பல் எறிந்து விடல்‘.

    பழமொழி- அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்

    நாதன் அமெரிக்காவிலிருந்து வந்தாச்சு. எல்லாருக்கும் ஏதேதோ வாங்கிக் கொண்டுவந்தான். என்னைய அவன் கண்டுக்கக் கூட இல்ல. ஆச ஆசயா தாத்தா னு கூப்பிட்டு காலச்சுத்தி விளையாடின பையன் படிச்சு பெரிய மனுசனா அமெரிக்கா போயிட்டு வந்தவொடனே தாத்தாவ மறந்துட்டான் போல. சரி பரவாயில்ல. நான் போகவேண்டிய கட்டதானே. எதையும் எதிர்பாக்கக்கூடாது. மனதிற்குள் புலம்பிக்கொண்டே சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார் கோபி தாத்தா.

    என்ன தாத்ஸ் ரொம்ப வேல போல வந்து பாதி நாள் கழிஞ்சுபோச்சு. கண்டுக்கவே மாட்டேங்குற. கதை சொல்றத நிறுத்திட்டயா. ஆரம்பித்தான் பேரன்.

    அட போடா. எல்லாரும் பெரிய மனுசங்க ஆயிட்டீங்க. நான் சொல்லற கதையக் கேக்க யாரு இருக்கா. தாத்தா சலித்துக்கொண்டார்.

    தாத்தா இதக் கையில வச்சிக்கிட்டு கதை சொல்லுங்க. இது பேரு ரெபக்கா எனப்.பந்து போன்ற இயந்திரத்தைக் கையில் கொடுத்தான் பேரன். கதை முடிந்தவுடன் ரெபக்கா அதுக்கு ஏத்த பழமொழியச் சொல்லும் என்றவுடன் தாத்தா சந்தோஷமாகக் கதை சொல்லத் தொடங்கினார்.

    நான் சின்னவனா இருக்கும்போது இந்த ஊரில அரவிந்தன்னு ஒருத்தர் இருந்தார். அவர் மகன் என்னோட நண்பன். நானும் அவனும் தினமும் ஆத்தங்கரைக்குப் போய் விளையாடுவோம். பள்ளிக்கூடம் முடிஞ்சவொடனே வீட்டுக்கு நடந்து வர வழியில தினமும் மரத்து மேல ஏறி உக்காருவோம் ஆல மரக் கிளைகள் மேல ஏறி உக்காந்து பாத்தா ஊர் முழுக்க எங்க காலடியில இருக்குற மாதிரி தோணும். வெகுதொலைவில் தினமும் அவன் அப்பா ஒருசிலரோடு வயக்காட்டு மூலையில் ஏதோ செய்து கொண்டிருப்பது தெரியும். பாருடா எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு நாள் பூரா உழைக்கறார்னு சொல்லுவான். கொஞ்ச நாள்ல அரவிந்த் சைக்கிள் வாங்கிட்டான். அப்புறம் மெதுமெதுவா அவனோட உடைகளும் மாறிச்சு. டேய் நாங்க பணக்காரங்க ஆயிட்டோம்டா என அவன் எல்லாருக்கும் கம்மர்கட், தேன்மிட்டாய் எல்லாம் வாங்கிக்குடுக்க ஆரம்பிச்சான். அப்போதான் ஒருநாள் எங்க தமிழ் வாத்தியார் அவனக் கூப்பிட்டு

    தம்பி உங்கப்பா சாராயம் காய்ச்சி தப்பான வழியில பணம் சம்பாதிக்கிறார். நீ படிக்கிற பிள்ளதானே. மெதுவா உங்க அப்பாகிட்ட எடுத்து சொல்லுனு சொன்னார்.

    அவனும் அவன் அப்பா கிட்ட சொன்னான். அப்புறம்என்ன நடந்ததுதெரியுமா. அவன் அப்பா அவன்கிட்ட நாம நம்ம குலதெய்வம் கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்டிவிட்டுட்டா எல்லாக் குத்தத்தையும் சாமி மன்னிச்சிரும்னு சொல்லிட்டாரு. அவரும் கடைசி வர திருந்தல. கெட்ட வழியில சம்பாதிச்ச காசுல வியாபாரத்தத் தொடங்கின என் நண்பனும் உருப்படல. இதுதான் கதை.

    ரெபக்கா ஆரம்பித்தது. அரவிந்தனோட செய்கை குட்டி அகலுக்குள்ள குதிச்சு தண்ணி துளும்பி வெளிய வர மாதிரி குளிக்கப்போறேன்னு ஒருத்தன் சொல்லுகிற மாதிரி தான். எப்படி அது சாத்தியமில்லையோ அப்படித்தான் அவன் செய்த பெரும் பாவத்தைத் தொலைக்க கோவிலுக்கு மண்டபம் கட்டறதும். இதத்தான் முந்தைய காலத்துல அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் னு பழமொழியா சொல்லுவாங்க. ரெபக்காவின் பழமொழியைக் கேட்ட தாத்த உற்சாகமானார்.

    பாடல் 3

    தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
    தொக்க வகையும் முதலும் அதுவானால்
    மிக்க வகையால் அறஞ்செய்க!எனவெகுடல்
    அக்காரம் பால்செருக்கும் ஆறு.

    பழமொழி – அக்காரம் பால் செருக்கும் ஆறு

    பேருந்தின் சன்னலோர இருக்கை மனதுக்கு இதமாகத்தான் இருந்தது. முகத்தில் ஓங்கி அடிக்கும் காற்று, அதில் மிதந்து வரும் விதவிதமான ஒலிகள், நறுமணங்கள் எல்லாம் சுகம். ஆனால் பயணம் முழுசும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருக்கு. ஒருவேள உண்மையில நான் தப்பு செஞ்சிட்டேனோ.  தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கும் நான் கடந்த இரண்டு மாதத்துல ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காம கடினமா உழைச்சு சம்பாதிச்ச காச எடுத்துக்கிட்டு ஊருக்கு போறேன். அதுல அந்தப் பக்கத்து இருக்கை பெரியவருக்கு என்ன பிரச்சினையோ.

    மனம் முழுக்க சந்தோசமா நண்பர்களோட எப்படி மூணுநாள் ஊரச்சுத்தலாம்னு யோசிச்சிக்கிட்டே வரும்போது கடுப்பக் கிளப்பி விட்டுட்டாரு. எரிச்சலக் கெளப்பிட்டு எப்டி அசந்து தூங்குறாரு பாரு. பார்க்கப் பார்க்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஐந்து மணி நேரப் பிரயாணத்தில் நான்கு மணி நேரம் கழிந்துவிட்டது. இன்னும் ஒருமணி நேரம் தான். ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். அப்புறம் இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.

    வீட்டிற்கு போய்ச் சேர்ந்தவுடன் மனது பொறுக்காமல் அப்பாவிடம் அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். இதுக்கு எதுக்குப்பா இவ்வளவு வருத்தப்படற. இதத்தான் முந்தைய காலத்துல அக்காரம் பால் செருக்கும் ஆறு னு பழமொழியா சொல்லுவாங்க. நீ நேர்மையான முறையில  உழைச்சு பணம் சம்பாதிச்சிருக்க. அந்தப் பெரியவரு பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய் போட முடியாதா உன்னாலானு உன்னயத் திட்டி இருக்காரு. போதாதுக்கு தானதருமம் செஞ்சா நல்லதுனு உபதேசம் பண்ணிக்கிட்டே வந்திருக்காரு. அவரு உன்னயத்திட்டியிருக்க வேண்டியதில்ல. இருந்தாலும் அவர் பேச்சக் கேட்டு நீ தானம் பண்ணியிருந்தேன்னா அது சுவையான பால் கூட வெல்லம் கலந்துதுன்னா எப்படி அதோட சுவை அதிகரிக்குமோ அதுமாதிரி உன் பெருமையக் கூட்டுமே தவித்து குறைக்காது.

    Share
  • ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    ஹைட்ரஜனும் முட்டாள்தனமும்

    நிர்மலா ராகவன்

    பழகத் தெரிய வேணும் – 24

    “முட்டாள்தனமாக நடப்பவர்களுக்கு மரண தண்டனை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால், உலகத்தில் மக்கள்தொகை வெகுவாகக் குறைந்துவிடும்,” என்று அபிப்ராயப்படுகிறார் ஒரு புத்திசாலி.

    ஒரு துணுக்கு

    மாணவன்: நான் அரசியல்வாதியாகப் போகிறேன்.

    ஆசிரியர்: பின்னே ஏண்டா பள்ளிக்கூடத்துக்கு வருகிறாய்?

    ஓயாமல் பேசும் ஒரு பெண்ணைக் கேட்டேன், “ஏன் இப்படிப் பேசிண்டே இருக்கே?”

    “அப்போதான் மூளை வளரும்!”

    அறிவார்த்தமாகப் பேசுவதும், முப்பது வயதாகியும், தன் குரலைக் கேட்பதே ஆனந்தம் என்பதுபோல் அர்த்தமில்லாமல் பேசுவதும் ஒன்றாகிவிடுமா?

    பலர் கூடியிருக்கும் இடத்தில் நிறையபேர் இப்படித்தான் பேசுகிறார்கள். பிறர் சொல்வதைச் சரியாகக்கூடக் காதில் வாங்காவிட்டாலும், ஒன்று சேர்வதாலேயே பலம் கிடைக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட புத்திசாலிகள் இவர்கள்.

    “உலகில் அதிகமாகக் காணப்படுவது ஹைட்ரஜனும் முட்டாள்களும்தான்,” என்று சொல்லி வைத்திருப்பது இதற்காகத்தானோ?

    தம்மைப்போல் இல்லாதவர்கள் முட்டாள் என்று நம்புகிறவர்கள் ஆபத்தானவர்கள்.

    எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்த ஆசிரியை நோரய்னியின் கதையைக் கேட்போமா?

    தினம் தவறாது, ஏதோ ஒருவித மலாய் கேக் வாங்கிவந்து, பிற ஆசிரியைகளுக்கு விநியோகம் செய்வாள்.

    ‘இவளுக்கு எதற்காக நன்றிக்கடன் படவேண்டும்!’ என்று நான்மட்டும் வாங்க மறுத்துவிடுவேன்.

    தன் தாராள சிந்தனையையும், பிறரிடம் தனக்கு எவ்வளவு அன்பு என்றும் காட்டிக்கொள்ள வேண்டுமாம்!

    அவள் திட்டம் பலித்தது. மற்றவர்கள் எல்லாரும் அவளை உயர்ந்த இடத்தில் வைத்து, அவளுக்குக் கட்டுப்பட்டார்கள்.

    போகப் போக, அவள் குணம் புரிந்தது.

    யாராவது அவள் கூறிய கருத்தை ஏற்காவிட்டால் அவர்களுடன் பேச மறுத்து, முறுக்கிக்கொள்வாள். தான் சொல்வது தவறு என்று தெரிந்தும், அதை ஏற்க மறுப்பாள்.

    வீண்விவாதம் செய்வது இவளைப் போன்றவர்களுக்குப் பிடித்த வேலை. (உண்மையைவிட அதிகமாகத் தன்னை நேசிப்பதாலோ?)

    என்னிடம் முறையிட்டாள் ஒருத்தி.

    “நீங்கள்தான் அவளைப் புரிந்துகொள்ளாது, ஒரேயடியாகக் அவளைக் கொண்டாடினீர்கள்!” என்று சுட்டிக்காட்டினேன்.

    நோரய்னியின் பெயருக்குப்பின் தந்தையின் பெயர் ‘வெள்ளை’ என்று மலாயில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவளுடைய தந்தை ஜப்பானியர் என்று என்னிடம் கூறியிருந்தாள்.

    ஆச்சரியப்பட்டு, “இந்நாட்டில் மலாய்ப்பெண்கள் ஜப்பானியரை மணந்தார்களா?” என்று மூத்த சரித்திர ஆசிரியை ஒருத்தியிடம் ரகசியமாகக் கேட்டேன்.

    “இல்லை. ஆசைநாயகியாகத்தான் இருந்தார்கள்!” என்ற பதில் கிடைத்தது.

    முறை தவறிப் பிறந்திருக்கிறோமே என்ற வருத்தமோ என்னவோ நோரய்னிக்கு.

    ‘சக ஆசிரியைகளின் மகிழ்ச்சியை எப்படிக் குலைப்பது?’ என்று யோசனை போக, அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தாள்.

    பள்ளியில் அடிக்கடி மாறும் ஒவ்வொரு தலைமை ஆசிரியையும் வலியப்போய் நட்புகொள்வாள். அப்போதுதானே பிறரைப்பற்றிய வம்பு மேலதிகாரிக்குப் போகும்?

    ஒரு முறை, நான் ஏதோ பேசும்போது, அவள் பக்கம் கண்ணைக் காட்டினார்கள், ‘பத்திரம்!’ என்று எச்சரிக்கை செய்வதுபோல்.

    நான் உரக்கவே, “கிடக்கிறாள்! பயந்தாங்கொள்ளி!” என்று அலட்சியமாகக் கூற, பக்கத்தில் உட்கார்ந்திருந்த நோரய்னி குறுகிப்போனாள்.

    அவளுக்கு ஐம்பது வயதிருக்கும். வயதானால் அழகு குறையலாம், ஆனால் முட்டாள்தனம் என்னவோ மாறுவதில்லை.

    நோரய்னி முட்டாளா, தீயகுணம் படைத்தவளா, பரிதாபத்துக்கு உரியவளா?

    எல்லாரும், எப்போதும் தான் சொன்னபடியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், உண்மையான அன்பைத் தேடத் தெரியாத முட்டாள்.

    தன்னை ஏன் எல்லாரும் ஒதுக்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளும் அறிவற்றவள்.

    புறம் பேசி, பிறரைப் பிரச்னையில் மாட்டிவிட்டபோதோ..!

    முட்டாள்தனமும் மூடநம்பிக்கைகளும்

    ‘ராகு காலத்தில் விமானம் புறப்படுகிறது. கண்டிப்பாக, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்!’ என்று எண்ணிக் கலங்கியபடியே பயணிக்கிறார் ஒருவர்.

    அவர் போகுமிடத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடுகிறது விமானம். கெட்டது நடக்கும் என்று எதிர்பார்த்து, அவர் கொண்ட கலக்கம்தான் அவர் எதிர்பார்த்த விளைவு.

    கருமை நிறம்

    கருமை நிறம்கொண்டு பிறந்துவிட்ட மனிதர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதில்லை. கறுப்புப் பூனைகளும்தான்.

    கடந்த பதின்மூன்று வருடங்களில், ஆறு கறுப்புப் பூனைக்குட்டிகளை யார் யாரோ கொண்டு வந்து எங்கள் வீட்டருகே விட்டிருக்கிறார்கள். நாங்கள் அவைகளை அன்புடன் பராமரிக்க, எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக வளையவரும்.

    சின்னா என்ற பெண்பூனை என் மடியில் உட்காரும், நான் சொன்னதைக் கேட்கும். நான் பேசுவதிலிருந்து தானும் கொஞ்சம் பேசக் கற்றுவிட்டது.

    சற்றுப் பெரிதாகி, சறுக்கி விழுந்துவிட்டதால், “மடியில ஒக்கார்றியா?” என்று நான் கேட்டபோது, “ஏனாம் (வேண்டாம்)” என்று முனகியது.

    அன்பும் கட்டுப்பாடும்

    கதை

    ராகினி படிப்பில் சோடையில்லை. அது போதாதா? பதினாறு வயதான தன்னை ஏன் இன்னும் கட்டுப்படுத்துகிறாள் தாய் என்ற ஆத்திரம் எழுந்தது அவளுக்குள்.

    பள்ளித்தோழிகளுடன் சேர்ந்துகொண்டு, ‘சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடந்தாள்.

    இருபது வயதானபோது, டிஸ்கோவிற்குப் போவது, மது அருந்துவது, ஆண்களுடன் தகாத முறையில் பழகுவது என்று அவளுடைய சுதந்திரப்போக்கு விரிந்தது. இதையெல்லாம் விதவைத் தாய் கடுமையாகக் கண்டிக்க, வீட்டைவிட்டு வெளியேறினாள்.

    அவளுடைய பள்ளித்தோழி, ஈ லெங், வேலை நிமித்தம் தனியாக கோலாலம்பூரிலேயே தங்க நேரிட்டது. (அவளுடைய பெற்றோர் வேறு ஊரில் இருந்தார்கள்).

    இத்தோழியுடன் தங்கி, இருவருக்கும் சேர்த்துச் சமைக்கையில், சுதந்திரமாக உணர்ந்தாள் ராகினி.

    பல வருடங்களுக்குப்பின், அவளுடைய மகளுக்கும் பதின்ம வயதானபோதுதான் அவளுக்குத் தன் தாய் காட்டிய கண்டிப்பின் காரணம் தெளிவாகியது. தான் இப்போது மகளின் பாதுகாப்புக்காக கவலைப்படுவதுபோல்தானே அன்று அம்மாவும் கவலைப்பட்டிருப்பாள்!

    ‘முட்டாள்தனமாக, வயதான அம்மாவைத் தனியாகத் தவிக்க விட்டுவிட்டு, எங்கோ போய் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்துவிட்டேனே!’ என்று மிகவும் வருந்தினாள்.

    ஆனால், அவளது மன்னிப்பை ஏற்க அம்மா உயிருடன் இல்லை. கடைசிவரை, மகளுடன் வந்து தங்க விரும்பாது, தனியாகவே வாழ்ந்தாள்.

    பலருக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிவதில்லை.

    கதை

    படிப்பில் அக்கறையே காட்டாது இருந்த ஒரு மாணவனிடம், “நீ படிக்காவிட்டால் நல்ல வேலை கிடைக்காதே! பணத்துக்கு என்ன செய்வாய்?” என்று நான் கேட்டபோது, “அப்பா கொடுப்பார்!” என்றான்.

    “உனக்குக் கல்யாணமாகி, குடும்பம் பெருகிவிட்டால்?”

    “அப்போதும் அப்பா கொடுப்பார்”.

    இந்த இருவரில் யார் முட்டாள்? அப்பாவா, மகனா?

    மகன் எந்தக் காலத்திலாவது தன் சொந்தக்காலில் நின்றாகவேண்டும் என்று புரிந்துகொள்ள விரும்பாது, அவன் தன்னையே சார்ந்திருக்கும்படி செய்யும் அப்பாதான்.

    சுயநலமான சுதந்திரம்

    ஃப்ளூ காய்ச்சல் பரவாதிருக்க எல்லாரும் முகமூடி அணியவேண்டும் என்ற அதிகாரபூர்வமான ஆணை பிறந்தது. இன்றல்ல. 1918-ல்! ஸான் ஃபிரான்சிஸ்கோவில்.

    ‘எங்களுடைய தனிப்பட்ட உரிமையைப் பறிக்கிறீர்கள்!’ என்று 4,500 பேர் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.

    தங்களுடன் பிறரையும் ஆபத்துக்கு ஆளாக்குகிறோம் என்று புரிந்து நடக்காதவர்களை என்னவென்று சொல்ல!

    தற்போது, இப்படிப்பட்ட ரகளையெல்லாம் இல்லை. மனிதர்கள் புத்திசாலியாகிவிட்டார்களோ?

    Share
  • சிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்

    சிந்தனைகள் சீர்செய்து தற்கொலையைத் தவிர்ப்போம்

    முனைவர் என்.அருணாச்சலம்,
    கல்வி உளவியலாளர்,
    அழகப்பா பல்கலைக்கழகம்,
    காரைக்குடி

    “மரணம்… வாழ்வின் முக்கிய அம்சம்”. மரணம்​—வளர்ச்சியின் கடைசி கட்டம் என்ற ஆங்கில புத்தகம், மரணம் இயல்பானது, அனைத்து உயிரினங்களின் இயற்கையான முடிவே மரணம் என்கிறது. இறப்பு என்பது உயிரினங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் அனைத்தும் நிரந்தரமாக நின்று விடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இறப்பு என்பது அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும்.

    ஒரு உயிரி தானாகவே தன் மரணத்தைத் தேடிக்கொண்டால், அது மரணம் என்றாலும்  அது இயற்கையின் நியதிக்கு மாறாக இருப்பதால் அதைத்  தற்கொலை அல்லது சுயமரணம் என்று சொல்லப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO, 2020), உலகில் கிட்டத்தட்ட எட்டு லட்சம்  பேர் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலையால் இறப்பதாகக் குறிப்பிடுகின்றது. உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுவும் குறிப்பாக 45 வயதுக்குக் குறைவானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்

    தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் தற்கொலை நடைபெறுகிறது. உலக அளவில் பெண்கள் தற்கொலை செய்வதில் இந்தியா மூன்றாம் இடத்தில்  உள்ளது. சர்வதேச சுகாதார அமைப்பின் ஆய்வின்படி இந்தியாவில் ஒவ்வொரு  லட்சம் மக்களுக்கும், 16 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தமிழகத்திலும் மகாராஷ்டிர மாநிலத்திலும்தான் இந்தியாவிலேயே அதிகமாக தற்கொலைச் சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (2020) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தற்கொலை அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய நகரங்களைப் பொறுத்தவரையில் தற்கொலை மிக அதிகமாக  நடைபெறும் நகரம், டெல்லி. அதைத்  தொடர்ந்து  சென்னை, இரண்டாம் இடத்தில் உள்ளது.

    தற்கொலைக்குக்  குடும்பப் பிரச்சினைகளே முதன்மையான காரணமாகவும்,  உடல்நலக் குறைவு இரண்டாவதாகவும்,  திருமணம், போதைப் பழக்கம், மதுப் பழக்கம், காதல் மற்றும் இதர உறவு முறைகளும் தற்கொலைக்குப் பிரதானமான காரணமாகவும்,  வேலையின்மை, வறுமை எனப் பல காரணங்களாலும்  தற்கொலை நடப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தற்கொலை செய்துகொள்வோருள்    மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாவே உள்ளது.

    இந்தியாவிலேயே குடும்பமாகத் தற்கொலை செய்துகொள்வது தமிழ்நாட்டில்தான் அதிகம் நடக்கிறது என்றும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதும், மேலும் தினக்கூலிகளே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்வதும் (Suicidal Idiotic)  இந்த அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. தமிழக அளவில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரியில்  தற்கொலை மரணம் அதிகம் நடைபெறுகிறது. குமரியில் தற்கொலை செய்துகொள்பவர்களில் பெரும் பகுதியினர், நன்கு படித்தவர்களாக இருக்கிறார்கள் (2019).

    தற்கொலைக்கான காரணங்கள் உற்று நோக்கப்பட வேண்டியவை. ஆனால், பொதுவெளியில் விவாதிக்கப்படாத விஷயமாகவே இன்று வரை இது நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்கொலை ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போலத்  தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்குக் காரணமாகிறது. உலகளாவிய ரீதியில் மரணத்திற்குக் காரணமாக விளங்கும் 10ஆவது முக்கியக் காரணியாகத் தற்கொலை கருதப்படுகிறது.

    ஒரு மனிதன் தன் வாழ்க்கை நிகழ்வில் ஏற்படும் எதிர்மறை (negative) விளைவுகளால் உண்டாகும் பாரங்கள் கூடுதல் சுமைகளாய் மாறும்பொழுது அவன் அதை விட்டு வெளியேறத் தேர்ந்தெடுக்கும் வழி,  சுய உள்நோக்குடன் கூடிய மரணம்.  தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் அறிந்தே தன்னைத்தானே மரணம் அடையச் செய்துகொள்ளும் செயலாகும். தற்கொலை முயற்சியில் ஒரு முறை ஈடுபட்ட ஒருவர், எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கோள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.

    இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? ஏன் பாரம் உண்டாகிறது? பாரம் ஏன் கூடுதல் சுமையாகிறது?

    ஒரே விடை…. உணர்ச்சிவயப்படல் (Emotions)….. உங்களின் சிந்தனைகள் (Thoughts). இவையே தற்கொலைக்கு அடிப்படைக் காரணம். அப்படி என்றால் சிந்தனை தவறா? சிந்தனை தவறில்லை, சிந்திப்பதால் (Thinking) உண்டாகும் சுய உரையாடலின் (self talk) மூலம் வெளிப்படும் எதிர்மறை எண்ணங்கள் தூண்டும் காரணியாகச் செயல்பட்டு தற்கொலையை நிகழ்த்தி விடுகின்றன. சுய உரையாடல் எனபதே நமது நிஜம். இது நம்மைத் தவிர வேறு யாரும் அறிந்தோ, உணர்ந்தோ கொள்ள இயலாது. சுய உரையாடல் நம் உள் மனத்தில் நடைபெறுகிறது. நாம் நமக்குள் பேசிக்கொள்வதே சுய உரையாடல் ஆகும்.

    இந்தச் சுய உரையாடல் நிகழும் நம் ஆழ்மனச் (subconscious) சிந்தனைச்  செயல் முறையில் (thinking process) பல்வேறு காரணங்களால் குறிப்பாக, குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், பயம், தோல்வி,   கடுமையான நோய், போதைப் பழக்கம், ஏமாற்றம், விரக்தி, மன நோய், பொருளாதாரச் சிக்கல், தீராத பிரச்சனைகள் போன்றவை பல்வேறு எதிர்மறை  எண்ணங்களை  (negative thoughts)  உருவாக்கும்  போது, மன அழுத்தம் (stress), மனச் சோர்வு (depression) மனப்பித்து (schizophrenia),  இருமுனையப் பிறழ்வு (bipolar disorder), ஆளுமைச் சிதைவு (personality disorder) இன்னும் மன நோய் சார்ந்த விளைவுகள் உண்டாகின்றன. இவையே தற்கொலைக்கு மூல காரணிகளாகச் செயல்படுகின்றன.

    இதற்கு என்ன தீர்வு?

    1.நம் சுய சிந்தனைகள் அதிக நேராக்க உணர்வுடன (Positive) இருக்க பழக்கிக்கொள்ள வேண்டும்.

    2. நம் சுய சிந்தனைகள் நேராக்க உணர்வுடன் இருந்தாலும் அதில் எதிர்மறைச் சிந்தனைகளை முற்றிலும் தவிர்க்காமல் அவற்றைப் பிரதிபலிக்கவிட்டு பின் கட்டுப்படுத்திக்கொள்ளும் வலிமையைத் தர கூடிய சிந்தனைகளை எண்ண வேண்டும்

    3. நம் கனவுகளும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் யதர்த்தமானவையாக இருக்க வேண்டும்

    4.நமக்குள் நடக்கும் சுய உரையாடல்களில்   உணர்வுகளை விலக்கி வைத்துவிட்டு யதார்த்தம் சார்ந்தவையாய் இருக்க வேண்டும்.

    5. இலக்குகளை (target) நம் பலம் (strength) மற்றும் பலவீனம் (weakness) சார்ந்து நிர்ணயம் செய்ய வேண்டும்.

    6. ஆசை (desire) மற்றும் கனவுகளை நிஜங்களோடு ஒப்பிடும்படி மறுசீர் ஆய்வு செய்து, அதை மாற்றியோ அல்லது மறந்து விடவோ வேண்டும்.

    7. பழக்கங்கள் (Habits) எதுவும் நம்மை அடிமை கொள்ளவிடாமல் இருக்க வேண்டும்.

    8. மன பாரங்களைச் சேர விடாமல் அவற்றைக் கொட்டிவிட வேண்டும் (ventilate).

    9. விரக்தி, ஏமாற்றம், இயலாமை வரும் பொழுது அவை தற்காலிகம் என்கிற மாற்றுச் சிந்தனை (alternative thought) கொள்ள வேண்டும்

    10. முடிவெடுத்தலின் பொது ஒரே முடிவை மட்டும் நிர்ணயம் செய்துகொள்ளாமல் மாற்று வழிகளையும் ஆராய்ந்து, தேவைக்கு ஏற்ப மாற்றி வாழ்வியல் யாதார்த்தத்தில் கிடைக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    11. எதுவும் முடிவல்ல, இன்னும் மாற்று வழி உள்ளது அதன் மூலம் நம் இலக்கை அடையலாம் என்கிற கோட்பாடைத் தரும் எண்ணங்களைச் சிந்திக்கச் வேண்டும்.

    12. நம்பிக்கைகள் வேறுபட்டாலும், மகிழ்ச்சி, குடும்பம், சமூகம், உறவுகள் என்கிற அடிப்படைக் கட்டமைப்புகளில் சூழல் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாம் சிந்தனைகளைச் சற்றே மாற்றிக்கொள்ளச் சொல்லப்படும் தீர்வுகள் ஆகும்.

    ஆகவே, உங்களை மீறி உங்களின் சுய மரணம்  நிச்சயம் நடக்கப் போவதில்லை. உங்களின் சாதனைக்கும்  வேதனைக்கும் உங்கள் சிந்தனைகளே அடிப்படைக் காரணங்கள். உங்கள் குடும்பம், உறவுகள், நட்புகள், சமூகம் எல்லாம் உங்களைக் கைவிட்டு விலகிச் சென்றாலும் உங்களின் சிந்தனை உங்களைக் கைவிடாது. அதுவே உங்களைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி உயர்த்தும்.

    உங்கள் எண்ணங்களே நீங்கள்! தற்கொலை ஒரு தீர்வு அல்ல!!

    Share
  • செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்!

    செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்!

    ஔவை நடராசன்  

    தமிழியக்கமாகவே வாழ்ந்த தனிப்பெரும் கவியரசர் புரட்சிப் பாவேந்தரின் மரபுக் கொடியை உயர்த்திப் பிடித்த அண்ணல் கவியரசர் மன்னர் மன்னன் மறைந்தார் என்ற செய்தி, மனத்துயரை ஆறுதல் கொள்ள முடியாமல் எரிதணலாக நெஞ்சையும் உடலையும் எரித்துக் கொண்டிருக்கிறது.

    பாவேந்தருடைய படைப்புகளை நாட்டுடைமையாக்க கருதிய நாளில், நான் அரசு செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  முத்தமிழ் கலைஞர் மனம் பதற்றத்தோடு உடனே நாட்டுடைமை தொகையை மன்னர் மன்னனிடம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

    பாவேந்தர் குடும்பம் என்பது, தமிழினத்தின் தனிப்பெரும் செல்வமாகும்.  தமிழினம் பாவேந்தரின் பாட்டின் வரிகளுக்கு எப்போதும் கடன்பட்டது என்று இறுக்கமாகக் கூறினார்.

    மன்னர் மன்னன் தம் வாழ்நாள் முழுவதும் எந்தப் பணியில் இருந்தபோதும் கணம் தவறாமல் பாவேந்தர் பாட்டுக்கள் பிறந்த நிகழ்வுகளை எழுதிக்காட்டினார்.  பாவேந்தருடைய பெருமிதம், எவருக்கும் வணங்காத மாட்சி, இன்றும்கூட பாவேந்தர் தொகுதியை தான் நினைக்கும்படி பதிப்பிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் நெஞ்சத்தில் இருந்தது.

    உடல் முதுமைதான் அவர் உயிரைப் பறித்துவிட்டது. பாரதி கண்ணுங்கருத்துமாக அந்த வீரக்களிறு ஓய்ந்துவிடக்கூடாது என்று விழிப்பாக பார்த்து வந்தார்.  காலத்தின் கொடுமை அவர் கண்களை மூட வைத்துவிட்டன. ஆண்டு தவறாமல், பாவேந்தர் விழாவிற்கு என்னை அழைப்பதோடு, சென்னை வரும்போதெல்லாம் நான் யாருக்காக வருகிறேன், ஔவையைக் காண வருகிறேன் என்று சொன்னபோது நீங்கள் அதியமானுக்குப் பிறந்த பொகுத்தெழினி என்று ஒரு முறை குறிப்பிட்டேன்.

    மூன்றாண்டுகளுக்கு முன்னர், தளர்ந்துபோயிருந்த என்னைப் பார்த்து, புரட்சிக் கவிஞருடைய இரும்பு உடலை இன்று வரை திண்மை குறையாமல் வைத்திருக்கிறேன் என்று பெருமைபட பேசினார். கருப்புக் குயிலின் நெருப்புக் குரல் “மன்னர் மன்னன்” பாவேந்தரை முழுவதுமாக காட்டிய ஒப்பற்ற காப்பியமாகும்.

    மன்னர் மன்னனின் புகழ் என்றும் மறையாது.  அவர் கண்ட கனவுகளை பாரதியும், உறவினர்களும் நிறைவேற்றுவார்கள் என ஆறுதல் கொள்கிறேன்.  மன்னர் மன்னன் புகழ் வெல்க!

    ஆறாத மனத்துடன் ஔவை நடராசன்

    Share