புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
தஞ்சை மாவட்டம் – 613006.                
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

புழுவைத் தேடுவதா வெயிலின் வேலை?  

முன்னுரை

உரைகாண்பதில் இரண்டு வகை உண்டு. செய்யுளில் உள்ள சொற்களுக்கு மட்டும் உரைசொல்லி முடிப்பது. சொன்னவனின் உள்ளத்தை அவன் சொற்களாலேயே அறிய முயல்வது. பரிமேலழகர் திருவள்ளுவரின் உள்ளம் அறிய முயன்றவர். திருக்குறள் முழுமையும் கற்றுணர ஒரு பிறவி போதாது என்பர் சான்றோர். அதற்கான பரிமேலழகர் உரையும் அத்தகையதே. திருக்குறள் காலங்கடந்து நிலைபெற்றிருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் பரிமேலழகர் உரை நிலைபெற்றிருப்பதற்கும். திருவள்ளுவர் வாழ்வியலுக்கு நூலெழுதியவர் என்றால் அந்த நூல் நிலைபெற தம் ஆழமான அகன்ற புலமையால் ‘உரைமாளிகை’ அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் எனலாம். அன்னாருடைய ஆழமான புலமை வெளிப்படும் பல இடங்களில் ஓரிடத்தை இவ்விரண்டாவது கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

திறனறியப்படும் குறளும் உரையும்

திருக்குறளில் எட்டாவது அதிகாரமாகிய அன்புடைமை என்னும் அதிகாரத்தின் ஏழாவது குறட்பாவாக இருப்பது இது.

“என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பி லதனை அறம்”  77

சொல்லுக்குச் சொல் பொருள் கூறி விளக்குவது சொற்பொருள் விளக்கம். வடமொழியில் பதசாரம் என்பர். பதம் என்றால் சொல். சாரம் என்றால் பொருள். பேச்சில் சாரமில்லையே என்பது உலக வழக்கு. “சாரமற்ற வார்த்தை நாம் சரிதை சொல்லுகின்றோம்” என்பார் பாரதியார். பரிமேலழகர் பதசாரம் சொல்லுவதை ஓர் உரைநெறியாகப் பின்பற்றவில்லை. கருத்திற்கு இசைய பொருளமைதியை முன்னர்க் கூறிப் பின் அதற்கான விளக்கத்தை விளக்கவுரையில் கூறுவார். இந்த விளக்கம் எதிர்வரும் கட்டுரைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறுவதற்குப் பொழிப்பு அல்லது பொழிப்புரை என்று பெயர்.

  • என்பு இலதனை வெயில் போலக் காயுமே –- என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்
  • அன்பிலதனை அறம் — அன்பில்லாத உயிரை அறக்கடவுள்

இது மேற்கண்ட பாடலுக்குப் பரிமேலழகர் தந்திருக்கும் பொழிப்புரை.

உரைநடைப் பாங்கில் (PROSE ORDER) பரிமேலழகர் பொழிப்புரை

மேற்கண்ட பொழிப்புரையை எல்லார்க்கும் புரிதல் வேண்டி எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னுமாறு உரைநடையில் இப்படி அமைக்கலாம்.

 வெயில் என்பு இல்லாத உடம்பை காய்ந்தாற்போல
அறக்கடவுள் அன்பில்லாத உயிரைக் காயும்

குறட்பாவில் சொல்லப்படாது பொழிப்புரையில் காணப்படும் சொற்கள் மூன்று. ‘என்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, பொழிப்பில் ‘உடம்பு’ என இருக்கிறது. ‘அன்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, ‘உயிரை’ என இருக்கிறது. ‘அறம்’ என இருக்க, ‘அறக்கடவுள்’ என இருக்கிறது. பின்னால் அவர் எழுதப்போகும் விளக்கவுரை பொழிப்புரையிலிருந்தே தொடங்கிவிடுவதைக் காணமுடிகிறது.

விளக்கவுரை

பரிமேலழகர் தரும் இத்தகைய விளக்கங்கள் குறிப்பிட்ட குறட்பாவிற்கு அவரே எழுதிய பொழிப்புரைகளுக்கானவை. அதனால்தான் அவருடைய விளக்கவுரை பொழிப்புரையிலேயே தொடங்கிவிடுகிறது எனக் குறிக்கப்பட்டது.

“என்பிலது’ என்றதனான் ‘உடம்பு’ என்பதூஉம், ‘அன்பிலது’ என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம், வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின் முன் என்பில்லது தன் இயல்பால் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின் முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் ‘காயும்’ என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார். அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு “அல்லவை செய்தாற்கு அறம் கூற்றம்” (நான்மணிக்கடிகை 83)  எனப் பிறரும் கூறினார்.

மேற்கண்ட பகுதி மேற்காணும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புக்கு அவரே தந்திருக்கும் விளக்கவுரை.

பரிமேலழகர் உரையாழம்

  • குறட்பாவில் ‘என்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உடம்பு’ என உரை கண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். எலும்பு உடலுக்குள்ளேதான் இருக்கும். தனியாக எலும்பு செயல்படாது. இருக்கவும் இயலாது. எனவே ‘எலும்பு இல்லாதது’ என்பதனான் உடம்பு என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.  ‘என்பு தோல் போர்த்த உடம்பு’ எனப் பின்னும் கூறுவார் வள்ளுவர்.
  • அதுபோலவே ‘அன்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உயிர்’ என உரைகண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். உயிருக்குத்தான் அன்பு. உடம்பு அன்பு காட்டாது. அன்பு உயிர்ப்பண்பு. எனவே உயிரது பண்பாகிய அன்பில்லாதது எனத் திருக்குறள் குறிப்பதால் வள்ளுவர் குறிக்க எண்ணியது ‘உயிர்’ என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.
  • எலும்பு உடம்போடு தொடர்புடையது. அன்பு உயிரோடு தொடர்புடையது. ஒருத்தி திலகம் இல்லாமல் வந்தாள் என்றால் ‘நெற்றியில்’ என்பது பெறப்படும் அல்லவா? ஒருவன் ‘செருப்பில்லாமல் வந்தான்’ என்றால் காலில் என்பது பெறப்படுமல்லவா?. அவைபோல!
  • இந்தப் பாட்டில் அமைந்துள்ள ‘வெயில் என்பிலதனைக் காயும்’ என்னும் தொடரில் ‘வெயில்’ எழுவாயாகவும் ‘என்பிலது’ செயப்படுபொருளாகவும் ‘காயும்’ என்பது வினைமுற்றாகவும் அமைகிறது. அப்படி அமைந்தால் என்ன பொருளாகும் என்றால் எலும்பில்லாத ‘உடம்பு இருக்கும் இடம் தேடிச் சென்று வெயில் அதனைக் காயும்’ என்பது போல என்றாகிவிடும். வெயில் தானாக நடந்து சென்று எலும்பில்லாத உடம்பினைத் (புழுவை) தேடுமா? வெயில் இருக்கும் இடம் தேடித்தான் புழுவந்து மடியும். அதுவும் தேடாது. சாவதற்கு அதற்கு விருப்பமா என்ன? தானாக வந்து வீழ்ந்து மடியும்.
  • அதுபோலவே அன்பில்லாத உயிர்களை அறக்கடவுள் தேடிச் சென்று அழிக்காது. அன்பில்லாத உயிர்கள் அறவலைப்பட்டு அழியும்.
  • இவ்வாறு இவர் உரைகாண்பதற்கான காரணத்தை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். வெயிலுக்கும் அறத்திற்குமான பொதுப்பண்பைச் சுட்டுகிறார். அது என்ன பொதுப்பண்பு? “வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயில்” என உவமத்தின் பண்பை விளக்கியவர் ‘அத்தன்மைத்தாய’ என்னும் சுட்டினால் அறத்தினை விளக்குவதைக் காணலாம். எனவே வெயிலோ அறமோ தானாகச் சென்று எதனையும் யாரையும் அழிக்காது. அவையிருக்கும் இடம் நாடிவந்து பிற அழியும். காரணம் அவ்வாறு வந்து வீழ்வது அவற்றுக்கு இயல்பு. அவை வீழ்வதற்குக் காரணம் வெப்பமும் அறக்கடவுளும். வெப்பத்திற்கு இரண்டு இயல்புகள். ஒன்று வெளிச்சம்! இரண்டு வெப்பம்!. வெப்பம் இல்லாத வெளிச்சம் உலகில் கிடையாது. வெளிச்சத்தை நாடி வரும் எலும்பில்லாத புழு வெப்பம் தாங்காது மடியும் என்பது கருத்து. (இக்கட்டுரையில் ‘என்பிலது’ என்பதற்குப் ‘புழு’ என உரைகண்டவர் கட்டுரையாளர் ‘என்பில்லாதது’ அதுவேயாதலின்)
  • வெப்பமும் அறமும் செயல்படவில்லை என்றால் எலும்பு இல்லாத உடம்பு மடிவதற்கும் அன்பில்லாத உயிர்கள் மடிவதற்கும் அவற்றை எப்படிக் காரணமாக்க முடியும் என்றால் பின்னிரண்டும் மடிவதாகிய உண்மையைக் கொண்டு அறியலாம். அவை மடிவதற்கு இவை காரணம். அதனால்தான் அதனைக் “காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார் என்று எழுதுகிறார்.
  • அறமாகிய பண்பினைக் ‘அறக்கடவுள்’ என்று எழுதுகிறார். அவ்வாறு தான் எழுதியமைக்குச் சான்று காட்டுகிறார். அறமாகிய பண்பைக் கூற்றுவனாக உருவகம் செய்வது இலக்கிய மரபு என்பதற்காகக்,

“கல்லா ஒருவற்குத் தம்வாயில் சொல் கூற்றம்!
மெல்லிலை வாழைக்குத்தான் ஈன்ற காய் கூற்றம்
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம், கூற்றமே
இல்லிருந்து தீதொழுகு வாள்”

என்னும் நாண்மணிக்கடிகைப் பாடலை எடுத்துக்காட்டித் தம் உரைக்கு வலு சேர்க்கிறார் பரிமேலழகர்.

பரிமேலழகரின் உரை அருமை

‘வலை வீசி மீன் பிடித்தல்’ என்பது ஒன்று. ‘விரித்த வலையில் மீன்கள் வந்து விழுவது’ என்பது மற்றொன்று. இது உலகியல். முன்னது சென்று பிடித்தல். பின்னது வந்து விழுதல். குறட்பா வெயில் அறத்தைக் காய்வதாகவும் அறக்கடவுள் உயிரைக் காய்வதாகவும் சொல்கிறது. இது சென்றுபிடிப்பதைப் போல் உள்ளது. பரிமேலழகர் தம் நுண்ணியத்தால் (இயல்பல்லாத) அதனை மாற்றுகிறார். வெயிலும் அறமும் விருப்பு வெறுப்பு அறியாதது. ஒரே தன்மையாய் இயங்கும். அவற்றின் அந்த நடுநிலை வலைப்பரப்பில் என்பிலதும் அன்பிலதும் வந்து வீழ்ந்து மடிவதுதான் உண்மை. இந்த உண்மையைக் கண்டறிந்து கூறியவர் பரிமேலழகர்.

சரி. வெயிலிருக்கும் இடந்தேடி வந்து வீழ்வது என்பிலதாகிய அஃறிணைக்கு வேண்டுமானால் சரியாயிருக்கலாம். மனிதனாகிய உயர்திணைக்குப் பொருந்துமா? பொருந்தும். எப்படி? தன் மனைவி கண்ணகியோடு உயிர்பிழைக்கச் சென்ற கோவலன் எந்தத் தவறும் செய்யாமல் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். சிலப்பதிகாரக் காப்பியத்தில் பரவலாக வலியுறுத்தப்படுகிற ஊழ் அல்லது விதியை இளங்கோவடிகள் இங்கேயும் காட்டுகிறார். ஆனால் எப்படிக் காட்டுகிறார் தெரியுமா? விதி புகாரில் பிறந்த கோவலனுக்கு மதுரையில் வலைவிரித்துக் காத்திருந்ததாம்! இவன் சென்று அதில் மாட்டிக் கொண்டானாம்! அடிகள் எழுதுகிறார்.

“தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
கோவலன் தன்னைக் குறுகினன்” (2705 -2706)

இந்தச் ‘சென்றுபடுதலைத்தான்’ திருவள்ளுவர் என்பிலதனுக்கும் அன்பிலதனுக்கும் வினையாக்கி அந்த வினையை வெயில் மேல் ஏற்றிக் கூறுகிறார்.

நிறைவுரை

திருவள்ளுவர் உவமத்திலும் பொருளிலும் வெயிலின் வினை, அறக்கடவுள் வினை எனக் கூறியவற்றைப் பரிமேலழகர் ஒட்டுமொத்தமாக ‘விதியின் வினை’ என மாற்றிக் காட்டுகிறார். இதுவே இந்தப் பாட்டுக்கான அவருடைய உரையில் காணப்படும் நுண்ணியமாகும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *