குறளின் கதிர்களாய்…(308)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(308)

கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

– திருக்குறள் -925 (கள்ளுண்ணாமை)

புதுக் கவிதையில்...

தன் கைப்பொருளைக்
கொடுத்து வாங்கி மதுவைக்
குடித்துத்
தன்னுடலைத் தானறியா வகையில்
தள்ளாடி விழும்நிலை யடைதல்,
தன்னிலை மறந்து
செய்வதறியார் செய்யும்
அறிவற்ற செயலாம்…!

குறும்பாவில்...

கைப்பொருள் கொடுத்துவாங்கிக்
கள்குடித்துத் தன்னுடலைத் தானறியா நிலையடைதல்,
செய்வதறியாரின் அறிவிலாச் செயலே…!

மரபுக் கவிதையில்...

தன்கைப் பொருளைக் கொடுத்தேதான்
தடையே யிலாமல் வாங்கிவந்து
நன்மை தராத கள்குடித்தே
நகர முடியா வகையினிலே
தன்மெய் யறியா நிலையடைதல்,
தனது நிலையை மறந்தேதான்
என்செய் வதென்றே யறியாதே
ஏதும் செய்வோர் செயலாமே…!

லிமரைக்கூ..

வாங்கிக் குடிப்பர் மது,
தன்னுடலறியா நிலையறியார் செயலதுவே,
தனைமறந்த அறிவிலார்செய்வ தது…!

கிராமிய பாணியில்...

வேண்டாம் வேண்டாம்
கள்குடி வேண்டாம்,
கொணத்தக் கெடுத்துக்
குடியக்கெடுக்கும் கள்ளு
வேண்டவே வேண்டாம்..

கைக்காசக் குடுத்துக்
கள்ள வாங்கிக் குடிச்சி,
போதயில
ஓடம்புல துணி
போறது தெரியாம
உழுந்த கெடக்கிறத
ஒழுங்குள்ளவன் செய்யமாட்டான்..

தன்நெலம தெரியாத
தன்ன மறந்த
அறிவே இல்லாதவந்தான்
அப்புடிச் செய்வான்..

அதால
வேண்டாம் வேண்டாம்
கள்குடி வேண்டாம்,
கொணத்தக் கெடுத்துக்
குடியக்கெடுக்கும் கள்ளு
வேண்டவே வேண்டாம்…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *