படக்கவிதைப் போட்டி – 266

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.07.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
எப்போது…
வேலை பார்க்கப்
பிள்ளைகள்
வெளிநாடு செல்லவில்லை,
சென்னையிலிருந்து இங்கே
அன்னையைப்
பார்க்க வர
பாஸ் கிடைக்கவில்லையாம்..
என்ன கொடுமையிது,
எல்லாம் அந்த
இறக்குமதி உயிர்க்கொல்லியால்
வந்த இடர்ப்பாடு..
உறவுச் சங்கிலிகள் அறுந்து
ஒட்டமுடியாமல்
தேங்கிக் கிடக்கின்றன
ஆங்காங்கே,
தாங்கிக்கொண்டே காத்திருக்கிறாள்
தாய் இவளும்..
எப்போது மாறுமிந்த
இயலா நிலை…!
செண்பக ஜெகதீசன்…
வயோதிகக் கனவு
வாரிசுகளின் வருகைக்காய்
வாசலில் அமர்ந்து
வழி மேல் விழி வைத்துக்
காத்திருக்கும் வயோதிகமே!
வாழ்ந்த காலத்தின்
வசந்தகால நினைவுகளை
எண்ணிப் பார்க்கின்றாயோ!
வருங்கால சந்ததிகள்
வந்திருக்கும் நோயால்
வாழ்வாதாரமின்றி
வீழ்ந்திடுவார்களோயென்று
வேதனைப்படுகின்றாயோ!
காலங்கள் மாறும் போது
காட்சிகளும் மாறும்!
நாட்டு நடப்புடன்
நாமும் இணைந்து
நல்லது நடக்கும்
நாளை என்னும்
நம்பிக்கை வனர்ப்போம்!
கோ சிவகுமார்
மண்ணிவாக்கம்
சென்னை.
போனவரைக் காணலியே
போனவரைக் காணலியே பொழுதுபட்டுப் போகிறதே!
ஆரைவிட்டுத் தேடுறது? அவர் பசங்க வீடுவர
நேரம் போய்விட்டதுண்ணா நெலமையது என்னாகும்?
வெத்தில பத்தாதெண்ணு வெரட்டிவிட்டேன் வாங்கிவர
சுத்திக்கிட்டுத் தெருவெல்லாம் சோர்ந்து எங்க நிக்காரோ?
காலணா வெத்திலைக்குக் காசுகொண்டு போனவரு
மூலக்கடைய விட்டு முச்சந்தி போனாரோ!
முச்சந்தி போயி முழிபிதுங்கி நின்னவரு
வந்ததெருமறந்து பஸ்ஸேறிப் போனாரோ!
தேசமெங்கும் போற பஸ்ஸில் தெசமறந்து போனவரை
காசில்லையென்று கண்டக்டர் எறக்கிவிட
கூசிக்குறுகிமனங் குழம்பிப்போய் நிக்காரோ?
எம்புள்ள வீடுவர இரவாகிப் போயிடுமே!
கொப்பனக் காணமடா கூட்டிவர வேணுமின்னா
எப்படி நீதொலச்சே ஏன்தொலச்சே எம்பானே?
வெத்தலை நீ போடாட்டி விடியாமப் போயிடுமோ!
எத்தனை நாள் சொல்லிருக்கேன் ஏன் நீ அனுப்பிவச்சே
கண்பஞ்சடைந்ததென்றும் காதுமந்தமானதென்றும்
எண்ணாமல் அக்கிழத்தை ஏனனப்பி வைத்தாய் நீ?
என்று குதிப்பானே எனை வைது தீர்ப்பானே!
என்ன அது ஏதோ இருட்டில் அசைகிறதே
பூனையல்ல காட்டுப் புலிபதுஙகும் வீரநடை.
ஆஹா அவர்தான் என் ஆண்டவனே காத்தாய் நீ.
போகாம எங்குமவர் பொழுதோட சேர்த்தாய் நீ.
படக்கவிதைப் போட்டி எண் 266
யாரை எதிர்ப்பார்த்து
இந்தக் கூரிய பார்வை?
பட்டாளத்து மகன் வருவானென்றா?
பள்ளிச் சென்றப் பேரக்குழந்தைகள் வருமென்றா?
பாசமிகு மகள் மருமகள் வருவாளென்றா?
மலர்மிகு பாசத்தோடே உன் சுற்றம் வருமென்றா?
வயல்வெளியில் வேலையில்லையா?
பொருள் வாங்கிவர கடைகளில்லையா?
தாக்கி வரும் நோய் எப்போ ஒயுமென்றா?
எதை எதிர்பார்த்து இந்தக் கூரிய பார்வை?
பழைய நினைவுகள் மனதில் பயணமா?
புதுக்கனவுகளை வரவேற்கும் எண்ணமா?
பொக்கை வாயின் சிரிப்பு
உன் உதட்டில் நிரந்தரம்
கறுப்பு வைரமாய்
காலம் கோடி வாழத்தான் போகிறாய்
கார் நிறத்தழகியே
அதே பார்வை கூரிய பார்வையோடே
சுதா மாதவன்
தேசியத் தாய்
இந்தியா விடுதலை பெற்ற நாள்
இந்திய மண்ணில் பிறந்த நாள்
சுதந்திரப் போராட்ட வீர்ர் தந்தை
சுதந்திரம் எனப் பெயரிட்டார்
அண்ணன் இருவர் சேர்த்தார்
இந்திய இராணுத்தில் பூரிப்பில்
அத்துடன் நிறுத்தினாரா பற்றை
இராணுவ மாப்பிள்ளையை நிறுத்தி
நீட்டு கழுத்தை என்றார்
தந்தை சொல்மிக்க மந்திரமுண்டோ
என் மகன்கள் இருவர் இராணுவத்தில்
பேரன் இருவர் விமானப் படையில்
சீனாக்காரனை
ஒரு கை பார்க்கும் வரையில்
என் ஏக்கம் குறையப் போவதில்லை
தேசத்திற்கான குடும்பம் என்பதில்
இருக்கிற பெருமை எதிலும் இல்லை
முதலில் இந்தியன்
அடுத்து நான் ஓர் தமிழச்சி
அதுவும் ஓர் வீர தமிழச்சி
வயதாகிப் போய் விட்டதாம் எனக்கு
இராணுவத்தில் எடுக்க மாட்டார்களாம்
ஏ,கே 47 என்ன அவ்வளவு எடையா
எனது லட்சிய வேட்கைமுன்
இந்திய எல்லை நமது எல்லை
எவனாவது தந்தால் தொல்லை
உடைப்போம் அவனது பல்லை
முறிப்போம் அவனது இராணுவ வில்லை
சீ.காந்திமதிநாதன்
கோவில்பட்டி
முதுமை
தட்டில் சோறு வைத்திட்டு – வீதியை
எட்டிப் பார்த்துச் சொந்தங்கள் தேடும்
வீட்டுப் படிகளே நாற்காலியென
வாட்டம் காட்டிடும் பருவம்…
வாழ்வின் சுவடுகள்
முகம் முழுதும் எழுதிய
கவிதை வரியால் நிறைந்த
அனுபவப் புத்தகம்…
காலமெல்லாம் கடந்தும்
பட்ட கட்ட நட்டங்கள்
அட்ச தீர்க்க ரேகைகளாய்
அலைமோதும் ஜீவகோளம்…
கடந்ததை எண்ணித் தேங்கிடாமல்
வருவதை எதிர்பார்த்துக் காத்திராமல்
இருப்பதை வைத்து இயல்பாய்
நாட்களைக் கடத்துவதே முதுமை…
தனிமை தனிமை மிக அழகானது ஏன் என்றால் யாரிடமும் பேச்சுவாங்காமல் இருப்பதால்… தனிமை சில நேரத்தில் கொடுமையானது….எனக்கு என்று யாரும் இல்லை என நான் உணரும் பொழுது…நான் இருப்பது தனிமையில்…என் பாசமும் தனியே சென்று விட்டது …இனி என் வாழ்நாள் முழுவதும் னிமையே என் சொந்தம்…இதை நான் தானே ஏற்கவில்லை …ஏற்படுத்தி தந்தவருக்கும் இந்நிலை வரும் என உணரவில்லை… ஏன் என்றால் இன்றும் என்னால் நேசிக்கபடுவதால்… கி.அனிதா