கருப்பு வெள்ளை (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி
கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு பின்னர் அந்தப் புகைப்பட நிலையத்திற்குள் நுழைந்தேன். அன்று இருந்த அதே வாசனை. உள்ளே பெரியவரின் படம், கருப்பு வெள்ளையில். பார்த்துக்கொண்டே நின்ற போது அவர் மகன் “வாங்கோ” என்றார். பெரியவரே உள்ளே சென்று சின்னவராகத் திரும்பியது போல ஒரு தோற்றம்.
“ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறோம். இந்த ஊர்தானா?” எனக் கேட்டார்
“ஆமாம்” என்றேன்.
“அன்னிக்கு பார்த்த மாதிரியே இருக்கு ஸ்டுடியோ” என்றேன்.
“இது எங்க சொத்து. அவர் விட்டுச் சென்ற எதிலும் நாங்க கை வைக்கவில்லை. இந்த ஸ்டாப்ளர், போன் எல்லாம் அப்பிடியே இருக்கு. புது போன் ஐந்நூறு ரூபாய். ஆனா நான் பழசை ரிப்பேர் பண்ணி இன்னிக்கும் வச்சிருக்கேன். சில பேர் கிண்டல் பண்றாங்க. நான் அதைக் கண்டுக்கிறதில்ல. கிட்டத்தட்ட இந்த சின்ன ரூமுக்கு எங்க வயசு.”
“ஆமாம். டைம் மிஷின்ல பின்னாடி போற மாதிரி இருக்கு. இங்க தான் அப்பாகிட்ட பாஸ்போர்ட் எடுத்துண்டு கல்லூரியில் சேர்ந்தேன். ரெண்டு நாள் கழிச்சு பஸ் பாஸுக்கும் வந்தேன். அன்னிக்கு இருந்த அதே வாசனை. இன்னிக்கும் இருக்கு. எப்படி இதைப் பராமரிக்கிறீங்க?”
“நாங்க ஒன்னும் செய்யாம இருந்தால் அதுவே நல்ல விஷயம். எந்த ஒரு மாற்றமும் பழசைக் குலைச்சுப் போட்டுடும்.”
“நீங்க நவீனத்துவத்துக்கு எதிரானவரா?”
“இல்லை சார். ஆனா அது இங்க வேணாம்.”
“ஏன் சார்?”
“எங்க அப்பா. அவர் நினைவை போற்ற எங்களால் முடிந்த அளவு சேவை – எல்லாமே இங்க எங்க அப்பா தான்.”
“இங்க பாருங்க” என்றார் .
சின்ன கண்ணாடிப் பெட்டியில் அவர் போட்ட மூக்கு கண்ணாடி, கட்டிய வேஷ்டி, பொடி டப்பா, ரிஸ்ட் வாட்ச்.
“எப்படி சார் இந்த அர்ப்பணிப்பு. எனக்கு எங்க அப்பா திவச தேதியே நினைவில்லை.”
“ரொம்ப பெரிய விஷயமில்லை சார். எனக்குப் பணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இது எல்லாமே இயல்பாக வந்துவிட்டது.”
“ஆனாலும் இது பெரிய விஷயம்தான்” என்றேன் .
“இந்தப் பாராட்டு கூட எங்க அப்பாவுக்குத்தான் போய்ச் சேரணும். அவர் ரொம்ப எளிமை. கடைசி வரைக்கும் சைக்கிளிள்தான் போவார் – வருவார்.”
கை கொடுத்தேன். அப்பாவைப் போல இவருக்கும் அதே தொளதொள பேண்ட். ஒரு வேளை இது அவர் அப்பா உடுத்தியிருந்ததாகக் கூட இருக்கலாம்.
வெளியே வந்த பிறகும் அந்த பவுடர் வாசனை போகவில்லை.