வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-29

0

தி. இரா. மீனா

மடிவாள மாச்சிதேவர சமயாச்சாரதா மல்லிகார்ச்சுனா

இவர் மடிவாள மாச்சிதேவரைப் பின்பற்றியவர். ’பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்த மல்லிகார்ஜுனா’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “கரலிங்கம் விட்டு
மண்மீதுள்ள  சிலை வணங்கும்
நரகின் நாய்களை என்னென்பேன் ஐயனே
பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே“

2. “இல்லாளைக் கண்டு மகிழ்ந்து
மக்களைப் பார்த்து மகிழ்ந்து
கூரறிவால் மெய்ம்மறந்து உறங்கி
சதிசுதனெனும் சம்சாரத்தில் அறிவிழந்து
மூடனானேன் என்னவென்பேன்
பரம பஞ்சாட்சர மூர்த்தி சாந்தமல்லிகார்ஜூனனே “

மதுவய்யா

’அர்க்கேசுவரலிங்க’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “சோறு பசித்து மகிழ்வுடன் உண்டதை யாருமறியார்
நீரன் தாகத்திற்கு பூமி பருகியதை யாருமறியார்
இறைவன் மனித உடலடுத்து பிறர் போல
துன்பப் படுவதை யாருமறியார்
மனித உடலடுத்து இறைவன்
எல்லோருக்குள்ளும் துன்பப்படுவதை யாருமறியார்
அரகேஸ்வரலிங்கன் அடையாளத்தின் வடிவமடுத்தது
இயற்கைக்கு அப்பாற்பட்டது“

2. “மரவுச்சியின் காக்கை போல
உயிர் எப்பக்கம் விரும்பினாலும்
ஆசையெனும் வீடு வந்தவர்கள் அனைவரும் முடிவறிவார்களா?
பிடிசோற்றின் துன்பத்திற்கு வேடம் போடும்
மனமும் ஆத்மாவும் தூய்மையற்றவரை ஏற்பதில்லை
அர்கேஸ்வரலிங்கன்“

3. “உடல் நிர்வாணம் – மனம் சம்சாரம்
பேச்சு பிரம்மம் – நீதி கீழ்மை
கொலைஞன் கைகத்தி போல எத்தகைய அறிவு?
அர்கேஸ்வரலிங்கமறிய பொருந்தாது இது.“

4. “முளை தோன்ற விதையழிவது போல
சுயம்பு தோன்ற கர்வமழிவது போல
இலிங்கமறிந்து அங்கமழிய வேண்டும்
அதுவே அர்கேஸ்வரலிங்கமறிந்த அன்பின் அடையாளம்“

மனசந்த மாரிதந்தே

’மனசந்தித்து மாரிதந்தே ’இவரது முத்திரையாகும்.இலிங்க-அங்க சமன்பாட்டைப் பற்றிப் பேசவதாக வசனங்கள் அமைகின்றன.

1. “இட்டலிங்கம் பிராணலங்கமென
வெவ்வேறு  நியமங்கள் வேண்டுமா?
விருட்சம் விதையிலடங்கி
விதையும் விருட்சத்தை விழுங்கியது போல
இட்டலிங்கம் பிராணலிங்கம் இரண்டறக் கலக்கவேண்டும்
மழைத்துளி முத்தாவது போல ,இரண்டின் அடையாளம்
மனசந்தித்து மாரேஸ்வரனே“

2. “புகழுக்கும் ஆதாயத்திற்கும் செய்கின்ற பூசை
செல்வமழியக் காரணமானது.
பாசாங்கின் விரக்தி மூன்றிற்கு இடமளித்தது.
பொறாமை,  இருநிலைவாதம்
வெற்றி தோல்விக்கு இதயத்தைக் கல்லாக்கியது
இதையறிந்து உண்டு இல்லை என்பதிலேயே
மனசந்தித்து மாரேஸ்வரனே“

3. “பசுவதை செய்தே பசுதானம் செய்தால்
கொன்றதற்கும் ,கொடைக்கும் இணையாகுமோ?
ஒழுக்கம் கேடு இரண்டிற்கும் பதிலுண்டோ?
நியமத்திற்குக் கேடு ஏற்பட்டால்
கேட்டிற்கு முன்பு மனசந்தித்து மாரேஸ்வரனே”

4. “வேதம் கற்றால் படிப்பாளியே தவிர ஞானியல்ல
சாத்திரம் புராணம் படித்தால் பண்டிதனன்றி ஞானியல்ல
விரதம் ஒழுக்கம் சடங்குகளில் பூசாரியாகியென்ன?
உயர் ஞானத்தின் தடமறிய வேண்டும்
இப்பேதங்களின் அறிவைத் தெளிந்தால்
மனசந்தித்து மாரேஸ்வரனே“

மதுமுனி கும்மட்டதேவா

இவர் முதலில் சமணராயிருந்து பின்பு சிவசரணரானவர். ’குடிய கும்மட்டனொடைய அகமேஸ்வரலிங்க’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “அமுதம் பருக மறந்து
கூழ் விரும்புவது போல
தன்னுள் சிவனிருக்க
சாதி ஆதரவில் செல்பவனுக்கு
குடிய கும்மட்ட நாத அகமீஸ்வர இலிங்கம்
இல்லை அவருக்கு என்றேன்.“

2. “வழிகாட்டிகள் அனைவரும்
பயத்திற்குப் பயப்படாதவராவாரோ?
வேதசாத்திரம் புராண ஆகமம் சொல்வோர் அனைவரும்
உணர்வரோ உண்மைத் தத்துவம்?
பேடியின் அழகு, வெய்யோனின் வெப்பம்
மூடனின் நட்பென விடு,
குடிய கும்மட்ட நாத அகமீஸ்வர இலிங்கத்துடன்
இடைவிடாமல் கலந்துறவாடு.”

மருளசங்கரதேவா

’சுத்த சித்த பிரசித்த பிரசாதி பிரசன்ன பிரபுவே சாந்த மல்லிகார்ச்சுனா ’என்பது இவரது முத்திரையாகும்.பக்தி தத்துவத்தற்கு அதிக முக்கியத்து வம்  கொடுத்துள்ளார்.சரணசதி இலிங்கபதி பாவனையாக்கி இலிங்கத்திற் கும் தனக்குமுள்ள தொடர்பை விளக்குகிறார்.

“சாமான்யப் பெண்ணிற்கு அரம்பையின் நிலையுண்டோ?
வறண்டுபோன மெருகிற்கு நவரச காந்தியுண்டோ?
சேவகனுக்குச் சம்பிரதாய மோகமுண்டோ?
பரிசமணியின் உறவால் கல்லின் குலமழிந்தது போல
தாங்கள் வந்தீரல்லவா?
சுத்தசித்த  பிரசித்த பிரசன்ன பிரபுவே
சாந்த மல்லிகார்ஜுன தேவரீர்
பிரபுதேவரின் கருணையால் வாழ்கிறேன்“

[தொடரும்]   

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *